எஸ். சுரேஷ்

முயலும் ஆமையும்

எஸ். சுரேஷ்

மாலையுடன் பினிஷ் லைனில்
சீப் கெஸ்ட் காத்திருக்க
துப்பாக்கி சப்தம் கேட்டு
புல்லெட் வேகத்தில் புறப்பட்டது முயல்

தகிக்கும் வெயிலில், வறண்ட காட்டுக்குள்
ஓடிக்கொண்டிருந்தது

தாகம் எடுக்க, சிறு குட்டையில் தேங்கியிருந்த
நீரைக் குடித்து, மரநிழலில் படுத்து தூங்கிவிட்டது

அடிமேல் அடிவைத்து வந்த ஆமை
தூங்கிக்கொண்டிருந்த முயலின் வாலைக் கடித்தது

“அம்மா” என்று அலறி எழுந்த முயல் வேகமாக ஓட
தண்ணீரை குடித்துவிட்டு மரநிழலில் தூங்கியது ஆமை

கவியின் கண்- மேலாண்மைப் பண்புகள்

ஆன்மாக்களைக் காத்தல்
                          — டெனிஸ் லேவர்டாவ்
 
துக்கங்களுக்கும் கனவுகளுக்கும்
பொறுப்பேற்றுக் கொண்டவன்
 
அடுத்த வயல் நோக்கி
மிகக் கவனமாக.
 
தன் மந்தையைச் செலுத்துகிறான்.
கோவில் மணியோசை
 
கேட்டு விட்டான்.
ஆனால் ஆடுகள்
 
புல்லுக்குப் பசித்திருக்கின்றன,
இன்றும் ஒவ்வொரு நாளும்.
 
அவனது பொறுமை, அழகியது. 
நீண்ட அவன் நிழலும், 
 
சமவெளியூடே. மந்தைகள் 
அலையலையாய்ச் செல்லும் 
 
ஓசையும்.
 
௦௦௦
 
‘தலைமைத் திறன்கள்’: நிர்வாகத்துறையில் இருப்பவர்கள் இந்தச் சொற்களைப் பல முறை கேட்டிருப்பார்கள்.  அதிலும் குறிப்பாக, உங்களுக்கு ஐடீ துறையில் அனுபவமிருந்தால் இவை மிகவும் பழக்கப்பட்டுப்போன சொற்களாய் இருக்கும். முன்னெல்லாம், தலைமைப் பதவியில் மிகக் குறைவானவர்கள்தான் இருப்பார்கள்- ஆனால் இப்போது, அதிலும் குறிப்பாக தகவல்தொழில்நுட்பத் துறை, அனைவரும் தலைமைப் பதவிக்குத் தயாராக வேண்டும் என்று எதிர்பார்க்கிறது, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தலைமைக்குரிய பண்புகளை உருவாக்கிக் கொண்டாக வேண்டியிருக்கிறது. முன்னெல்லாம், ஒரு பணியில் பத்தாண்டுகள் நிலைத்திருந்தால், குமாஸ்தாவாக வேலைக்கு வந்தவன் படிப்படியாக முன்னேறி தலைமை குமாஸ்தா இருக்கையில் அமர்வான். ஓய்வு பெறுவதற்கு முன் ஜெனரல் மானேஜராகவோ அடிஷனல் ஜெனரல் மானேஜராகவோ இருந்தால் அது ஒரு மகத்தான சாதனையாக இருக்கும். வைஸ் பிரசிடண்ட் ஆவதெல்லாம் நினைத்தே பார்க்க முடியாது. சீப் மானேஜிங் டைரக்டர்கள் வேற்று உலகத்திலிருந்து வந்தவர்கள்.

(more…)

காத்திருக்கும் கவிதை

எஸ். சுரேஷ்

cat
எதுகையும் மோனையும் கச்சிதமாய் அமர
தங்குதடையின்றி வார்த்தைகள் பிரள
அகத்தின் ஆழத்தை வாக்கியங்கள் தொட
மனிதனுக்கு புதுவழி காட்ட
ஒரு கவிதை என்னுள் தோன்றியது

மனதில் இருந்த கவிதை மறைவதற்கு முன்
கணினியில் பதித்துவிட விரைந்தேன்

என் லெனோவோ திங்க்பாட் மேல் தூங்கிக்கொண்டிருந்த
பூனை எழுந்து என்னைப் பார்த்து முறைத்தது

பூனைக்கு பால் எடுக்க நான் சமையலறை சென்றேன்

 

image credit – Literary Cats

காமாகுரா

 எஸ். சுரேஷ்

இன்றைக்கும் ஜப்பான் என்றால் எனக்கு முதலில் ஞாபகம் வருவது காமாகுராதான். நரூசே சானின் அன்பும், அமைதியான புத்தரும், கூடவே அந்த தலைவலியும்.

அன்று திடீரென்று, “இந்த சனிக்கிழமை நான் உங்களை காமாகுரா அழைத்து செல்கிறேன். நீங்கள் வருவீர்களா?” என்று நரூசே சான் கேட்டிருந்தார். எனக்கு ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.

தன்பாத், சிந்த்ரி, ராஜ்கன்க்பூர், ஜகதீஷ்ர், நாக்தா என்று யாரும் பார்க்காத ஊர்களாக சுற்றிக் கொண்டிருந்த எனக்கு அதுதான் முதல் வெளிநாட்டு பயணம். இரண்டு நாட்களுக்கு முன் நரீதாவில் இறங்கி, வேக ரயில் பிடித்து டோக்கியோ வந்து சேர்ந்திருந்தேன். அடுத்த நாள் விடுமுறை நாள். முதல் முறையாக ‘வெண்டிங் மெஷின்’ பார்த்து, அதில் பணம் போட்டு ஒரு குளிர்பானம் கையில் எடுத்து, தெருவில் நடக்கும் எல்லோருக்கும் ஜப்பானிய விதிப்படி தலை குனிந்து வணக்கம் சொல்லிக்கொண்டே நடந்தேன். அன்று தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த எல்லோரையும் வணங்கியிருப்பேன். இந்தியாவிலிருந்து வந்தவனுக்கு ஜப்பான் சம்பிரதாயம் தெரியாது என்று யாரும் நினைக்கக் கூடாதல்லவா? வெளிநாட்டிற்குச் செல்லும்பொழுது எப்படியெல்லாம் நம் நாட்டின் பெயரை காப்பாற்ற வேண்டியிருக்கிறது! (more…)

கற்பூர வாசனை

எஸ். சுரேஷ்

 

என்ன கவிதை எழுதலாம் என்று
மேஜை முன் உட்கார்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தபொழுது
‘படார்’ என்ற ஓசையுடன் வாசற்கதவு திறக்க
கழுதை ஒன்று உள்ளே நுழைந்து,
“நீதான் கவிஞனா?” என்று என்னைப் பார்த்து கேட்டது
திகைத்திருந்த நான் தலையாட்டினேன்
“உன் புத்தகம் சுவையாய் இல்லை. சுத்த வேஸ்ட்” என்றது

“கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை” என்றேன்,
கவிஞனின் ஆணவத்துடன்.

“தெரிந்து என்ன ஆகப்போகிறது?
சாமி கும்பிடப் போகிறோமா என்ன?”
என்று கூறி பின்னங்கால்களால் மேஜையை உதைத்துச் சென்றது.

போகிறபோக்கில்,
“அடுத்த புத்தகமாவது ருசியாக இருக்கட்டும்”,
என்று சொன்னதைக் கேட்டு என் மனைவியும் மகளும்
இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்

 

image credit: Directors Notes