சிறுகதை

ஐன்ஸ்டீன் வாழ்ந்த வீடு

ஸ்ரீதர் நாராயணன்

‘ஐன்ஸ்டீன் இருந்த வீடுன்னு ப்ரின்ஸ்டன்ல இருக்காமே, நீங்க பாத்திருக்கீங்களா’
என்று பையன் கேட்டதும் முதலில் வியப்பும் பிறகு உற்சாகமும் தொற்றிக்கொண்டது எனக்கு. வியப்பு பையன் அவனாகவே வந்து இதையெல்லாம் பேசுகிறானே என்று. அவன் வயது அப்படி. டீனேஜின் வாசலில் பன்னிரெண்டு வயதில் பெற்றோருக்கு தன்னைவிட என்ன பெரிதாக தெரிந்துவிடப் போகிறது என்ற மிதப்பு தானாக வந்துவிடுகிறது. இவன் அவ்வளவு மோசம் இல்லையென்றாலும் அப்படியானதொரு பாவ்லா உண்டு. கேள்விக் கேட்டதோடு போய்விடாமல் பதில் வருகிறதா என்று நிதானமாக பார்த்துக் கொண்டிருந்ததால் உபரியாக உற்சாகமும் தொற்றிக் கொண்டது.

‘என்ன திடீர்னு ஐன்ஸ்டீன் பத்தி ஆராய்ச்ச்சி?’

கேட்ட கேள்விக்கு டக்கென பதில் சொல்லிவிட்டால் ஆச்சு என்று போய்விடுவார்கள். அப்புறம் அப்பா என்று பீற்றிக்கொள்ள என்ன இருக்கிறது சொல்லுங்கள்.

‘சும்மாத்தான். இங்கதானே இருக்கு.. இதுவரை நாம போனதில்லயேன்னு கேட்டேன்’ என்றான்.

உண்மைதான். அவன் பிறந்தபோது நான் ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருந்தேன். வேலை அமைந்த ஊரில் தண்டு இறக்கி விடுவது என்று நாடோடித்தனமான வாழ்க்கை. இந்த ஈஸ்டன் நகரத்திற்கு வந்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆகப்போகிறது. இங்கிருந்து ஒருமணி நேர பயணம்தான் ப்ரின்ஸ்டனுக்கு. ஆனால் ஏனோ போகும் வாய்ப்பு சித்திக்கவில்லை. இத்தனைக்கும் அமெரிக்கா வந்திறங்கிய பேச்சிலர் காலகட்டத்தில், நண்பர்களோடு குழுவாக சுற்றிப் பார்த்த இடங்கள் என்றுப் பார்த்தால் நியூயார்க் நகரத்திற்கு அடுத்தபடியாக ஐன்ஸ்டீன் வாழ்ந்த வீடு முக்கியமானதொன்றாக இருந்தது.

“அதொண்ணும் அவ்வளவு பிரமாதமான இடமாக இருக்காது. ஐன்ஸ்டீன் வாழ்ந்த வீடுங்கிறதுக்கு எந்தவித பிரத்யேக அடையாளமும் இல்லாம சாதாரணமாகத்தான் இருக்கும். நான் போய்ப்பார்த்தபோது யாரோ அந்த வீட்டில் குடியிருந்தார்கள். உள்ளேக் கூட போகமுடியாமல் தெருவோடு பார்த்துவிட்டு திரும்பிவிட்டோம்” என்றேன்.

‘நீங்க எப்போ பார்த்தீங்க? 2011க்கு அப்புறம் இப்போ யாரும் குடியில்லியாம்.’ என்றான். இதுதான் இந்த தலைமுறையினரிடம் உஷாராக இருக்க வேண்டிய விஷயம். கூகிளில் தட்டினால் மொத்த தகவல்களும் விரல்நுனியில் வந்து குவிந்து விடுகிறது இவர்களுக்கு. கொஞ்சம் அசந்தால் நம்மையே போட்டுப் பார்த்துவிடுவார்கள். ‘ஐன்ஸ்டீனுக்கு ஸ்பெல்லிங் சொல்லு பாப்பம்’ என்றெல்லாம் ஜம்பம் அடித்து நமது மேதாவிலாசத்தை காட்டிக்கொள்ள முடியாது.

‘வாசலில் பெரிதாக private propertyன்னு ஒரு போர்டு வச்சிருக்கும். எங்களுக்கு அது ஐன்ஸ்டீன் வீடுதான்னு நம்பிக்கையே வரல. ஒருவேள அதுதான் அவங்க நோக்கமா இருக்கலாம். அப்போ கூகிள் மேப் வசதில்லாம் வேற கிடையாது. தட்டுத்தடுமாறி விசாரிச்சுகிட்டுத்தான் போனோம். ஏதோ தவறான வீட்டுக்கு முன்னாடி நின்னு போட்டோ எடுத்துக்கிட்டோம்கிற சம்சயம் இப்பவும் உண்டு’ என்று சிரித்தேன்.
இரண்டாயிரத்து ஒன்றாம் (2001) வருடம் உழைப்பாளர் தினத்தை (labor day) ஒட்டி நியூயார்க்கை சுற்றிப்பார்க்க கிளம்பிய குழுவில் அபய் பாலேகர்தான் முதன்முதலாக டிஜிட்டல் கேமரா வாங்கியிருந்தான். கிட்டத்தட்ட ஆறேழு கடைகளில் ஏறி இறங்கி, ஏகப்பட்ட கணக்குகள் போட்டு ஸ்வஸ்தே மே மில்கயா என்று பீற்றிக்கொள்ளும்படியான கேமரா வாங்கிய பின்புதான் சுற்றுலாவிற்க்கேப் புறப்பட்டான். பேட்டரி தீரும்வரை அவன் மாய்ந்து மாய்ந்து எடுத்த போட்டோக்களை எல்லாம் தவறாமல் நானும் ஒரு காப்பி சேகரித்து வைத்திருந்தேன். இவ்வளவு வருடங்களாக சேமித்து குமித்த போட்டோக்களில் பாலேகரின் போட்டோக்களை எந்த ஹார்ட்டிஸ்க்கில் போட்டு வைத்திருக்கிறேன் என்று தெரியவில்லை.

என்னுடைய சிரிப்பில் பையனும் சேர்ந்து கொண்டு சிரித்தான்.

‘ஒருவேள நீங்கப் போனது ஐன்ஸ்டீனோட ஸீப்ரா பஸில்ல வரும் இமாஜினரி வீடுகள்ல ஒண்ணா இருக்கலாம்’

பரவாயில்லை. இந்த இணைய குப்பைகளில் பையன் ஏதோ நல்ல குப்பைகளைத்தான் நோண்டிக் கொண்டிருக்கிறான் என்று நினைத்துக் கொண்டேன். ஒரு சாதாரண செய்தியை பிரபலங்கள் மேல் ஏற்றி பரப்பிவிடுவது எப்போதும் நடப்பதுதான். ஐன்ஸ்டீன் பெயரில் ஏகத்துக்கு கற்பனை செய்திகளும், வேடிக்கை துணுக்குகளும் வழக்கில் உண்டு. ஒருவகையில் இதெல்லாம் செலிப்ரிட்டி சுரண்டல் எனலாம். உண்மையில் இவர்களுக்கு தீனி போடும்வகையில் அவரும் கொஞ்சம் எக்ஸென்ட்ரிக் வகை மனிதராகத்தானே இருந்தார்.

‘ஆமாம். அவர் பெயரில் ஏகத்துக்கு hoax செய்திகள் உண்டு. ஐன்ஸ்டீனுக்கும் அவருடைய கார் டிரைவருக்கும் பந்தயம் நடந்ததுன்னு ஒரு ஜோக் உண்டு. டிரைவரை இவர் போல அனுப்பி ஏதோவொரு யூனிவர்சிட்டியில் ரிலேட்டிவிட்டி பற்றி பேசச் சொன்னாராம். யாருமே கண்டுபிடிக்கவில்லையாம்.’

‘ஏன்?’

‘மேலோட்டமாக தெரிந்து கொண்டு யாராவது அடித்துவிட்டாலும் கேட்டுக் கொள்ள ஒரு குரூப் இருக்கத்தானே செய்கிறது. ஜோக்கே அப்புறம்தான் வருது. டிரைவரோட பிரசண்டேஷன் முடிஞ்சதும் ஒரு புரஃபஸர் ரிலேட்டிவிட்டி தியரி பத்தி சந்தேகம் கேட்டாராம். ‘இதுக்கெல்லாம் நான் பதில் சொல்றதுக்கு பதிலா என் டிரைவரே பதில் சொல்வானே’ன்னு ஐன்ஸ்டீனை கைகாட்டிட்டு தப்பிச்சிட்டானாம் அந்த டிரைவர்’ என்றேன்.

ஓஹ்ஹ்ஹ்…ஓஹ்ஹ்ஹ்… என்று சிரித்ததில் பையனுக்கு புரையேறிக்கொண்டு விட்டது.
நான் படித்த காலத்தில் ரிலேட்டிவிட்டி பற்றியெல்லாம் அதிகம் அலட்டிக் கொண்டதில்லை. அறிவியல் எல்லாம் பரீட்சைக்கு தேறும் அளவுக்கு மட்டும் படித்தால் போதும். அப்பொழுதெல்லாம் பொது அறிவுப் போட்டிகள் அடிக்கடி நடக்கும். இப்போது மாதிரி பொதுஅறிவு என்பது கூகிள் வசம் சீப்பட்டு கிடக்கவில்லை. ஒரு என்சிசி கேம்ப்பில் லெட். கர்னல் கோஹ்லி என்னும் மகானுபவன், ‘ஐன்ஸ்டீன் எந்த இனத்தை சேர்ந்தவர்’ என்றொரு கேள்வியை கேட்க எல்லாரும் தடுமாறிக் கொண்டிருந்தார்கள். பத்திரிகைகளில் நரைத்த தலையுடன்,, நறுக்கு மீசையுடன் நாக்கை தொங்கவிட்டபடி வரும் ஐன்ஸ்டீன் படம்தான் எனக்கு பரிச்சயம். ஏதோ ஒரு துணுக்கில் அவர் யூதர் என்று படித்திருந்தேன். ஆனால் யூதர் என்பதை எப்படி ஆங்கிலத்தில் சொல்வது என்று தெரியாமல் தயங்கிக் கொண்டிருந்ததால் பதில் சொல்லும் வாய்ப்பு போய்விட்டது. அடுத்த ரவுண்டு தொடங்கும் முன்னர், சட்டென மின்னலாக பதில் மனதில் பளிச்சிட உடனே உரக்க ‘Jew’ என்று கத்தினேன். கோஹ்லி சாப் போனால் போகிறதென்று போனஸாக இரண்டு மதிப்பெண்கள் கொடுத்தார். இப்போது என் பையனைக் கேட்டால் ஐன்ஸ்டீன் ஆண்டி செமிட்டிக்காக இருந்து எப்படி ஜியோனிச ஆதரிப்பாளராக மாறினார் என்று ஒரு கட்டுரையே எழுதுவானா இருக்கும்.

‘ஐன்ஸ்டீன் வீட்டை விட, ஐன்ஸ்டீன் வீட்டுக்கு பெயின்ட் அடிச்சவன்னு ஒருத்தர மீட் பண்ணதுதான் சுவாரசியமா நினைவிலிருக்கு’ என்றேன். எதிர்பார்த்தது போல மகன் புதியதாக ஏதோ கேட்கிறோம் என்ற ஆர்வத்தோடு முன்னே நகர்ந்து உட்கார்ந்தான்.

‘சுத்திப் பாக்க போன எல்லாரும் சேர்ந்து ஐன்ஸ்டீன் வீட்டுக்கு முன்னாடி பாலேகர் காமிராவில் படம் எடுத்துக்கலாம்ன்னு போட்டோ எடுக்க ஆள் தேடினோம். அப்போ அகப்பட்டவர்தான் அவர். பெயர் சரியாக நினைப்பிலில்லை. ஆனால் அறிமுகத்தின் போது தான்தான் அந்த வீட்டை பெயிண்ட் அடித்ததாக சொல்லி அறிமுகப்படுத்திக்கிட்டார். பாலேகருக்குன்னு இப்படித்தான் ஆள் மாட்டுவங்க’ என்றேன். அப்புறம் நினைவு வந்தது போல,

‘பாலேகர் பத்தி உனக்கு சொல்லியிருக்கேனா? ‘ என்று தொடர்ந்தேன். ‘அவன் பேரே ஒருமாதிரி தமிழுக்கு நெருக்கமானதாக இருக்கும். நம்மூர் முருகன் கையிலிருக்கும் வேல் பாத்திருக்கியா? குன்றெறிந்த பிள்ளையார்ன்னு சொல்வாங்க அவர. வேலெறிந்து குன்றையே பிளந்துட்டாராம். பாலேகர்னா மராத்தியில் வேலெறிபவன்னு அர்த்தம். அவன் பேரைக் கேக்கும்போதெல்லாம் எனக்கு முருகன் வேலெறிந்து ஜெயித்ததுதான் மனசில ஓடும். அவனும் அப்படித்தான் எந்த சிச்சுவேஷனையும் எளிசா சமாளிக்கிற ஆட்டிடியூடோட பிரமாதமா வேலை செய்வான். அருமையா சமையலும் செய்வான். ஆறு மாசம்தான் அவங்கூட தங்கியிருந்து வேலை பாத்தேன்னாலும் மறக்க முடியாத சாகச பர்சனாலிட்டி அவன். யாருக்கும் பயப்படாதவன்னாலும் அப்போ ஒரு பொண்ணு மேல மட்டும் பயங்கர பயம் இருந்ததுன்னுவான். எவ்ளோ பயம்னா, அவ கண்லயே பட்டுட்டக்கூடாதுன்னு நாக்பூரை விட்டு பொறப்பட்டு வந்துட்டேன்னுவான். இத்தனைக்கும அவனுக்கு அப்ப என்ஃபோர்ஸ்மென்ட்ல அப்பாயின்மெண்ட் கூட ஆகியிருந்தது.’

‘பொண்ணப் பாத்து பயந்திட்டாரா? ஏன்?’ வெகுளித்தனமாக கேட்டவனைப் பார்த்து புன்னகைத்தேன். பையன்கள் பெண்களைப் பார்த்து பயப்படாமல் வேறு எதைப் பார்த்து அதிகம் பயப்படப்போகிறார்கள்.

‘அவன் அவள் மேல் காதல் கொண்டிருந்தான். ரொம்ப ஆழமான காதலாம். அவள் இல்லாமல் வாழ்க்கையே இல்லைம்பான் ஒருதரம். அடுத்த நிமிஷமே, அவள் இல்லைன்னாக் கூட பரவால்ல அவ நிராகரிச்சிட்டா இன்னும் கொடுமைன்னு புலம்புவான். அதொரு ஆங்க்‌ஷியஸ் மனநிலை. ஐன்ஸ்டீன் பாரடாக்ஸ் கேள்விபட்டிருக்கியா?’

‘EPR பாரடாக்ஸ்தானே?’

தெரியுமா என்று கேட்கவே கூடாது இவர்களிடமெல்லாம்.

‘அதேதான். தன் காதலை அவள் ஏத்துப்பாளா மாட்டாளான்னு அவ்ளோ குழப்பம் அவனுக்கு. அவன் படிச்ச படிப்பு, கிடச்ச வேலை எதுக்குமே சம்பந்தமில்லாம கம்ப்யூட்டர் லேங்குவேஜ்னு தனியா ஏதோ கோர்ஸ் படிச்சு, அமெரிக்காவுக்கு வந்திட்டான். டெய்லி அவளுக்கு ஃபோன் போட்டு பேசப்போறேன்னு ஆரம்பிப்பான். ஆனா பேச தைரியம் வராது. அவ இப்படி செஞ்சா, அப்படி செஞ்சா அதனால அவளுக்கும் எம்மேல லவ் இருக்குன்னு ஆரம்பிப்பான். அப்புறம் அவள் லவ் இருந்தாலும் சொல்லமாட்டா. அவ எதிர்பாக்கிற ஆள் நானில்லைன்னு உள்ளேயே சுருண்டுக்குவான். ஐன்ஸ்டீன் பாரடாக்ஸில் வர்ற மாதிரி, வெள்ளி பூசின கண்ணாடி வழியா ஒளி ஊடுருவவும் செய்யும் பிரதிபலிக்கவும் செய்யும் இல்லையா. எது நிச்சயம்னு தெரியாத பெரும் சோகம் அவனுக்கு. காதல்ங்கிறது உண்மையில் ஒரு நோய்தானே. அப்படித்தான் போட்டு படுத்தி எடுக்கும் ஆளை’

‘யாரோ பெயின்டரப் பத்தி சொல்லிட்டிருந்தீங்க’ என்று நினைவுறுத்துகிறான் பையன். பன்னெண்டு வயசுப் பையன்களுக்கு இது போரடிக்கிற விஷயம்தான்.

‘ஆமாம். எங்களயெல்லாம் குரூப் போட்டோ எடுத்தவர் அவர்தான். முதல்ல சீனர்னு நினச்சோம். மங்கோலிய முகச்சாயலை சட்னு நம்மால அடையாளப்படுத்த முடியறதில்லயே. அப்புறம்தான் தெரிஞ்சது. அவர் தென்கொரியாவைச் சேர்ந்தவர்னு. நல்ல சுவாரசியமான மனுஷர். அவர் வீடு அதே தெருவில் இன்னொரு முனையில் இருந்தது. எல்லாரையும் அழைச்சிட்டுப் போய் காப்பியெல்லாம் கொடுத்து உபசரித்தார். ஐன்ஸ்டீன் வீட்டை விட அவர் வீட்டில் ஐன்ஸ்டீன் பற்றி அதிகமாக அடையாளங்கள் இருந்தது. வீட்டுக்குப் பெயரே ‘Einstein’s Bridge’ன்னுதான் வச்சிருந்தார். அவரோட தொழிலுக்கு அது உதவியாக இருக்குமோ என்னவோ. அதையும் தாண்டி அவருக்கு ஐன்ஸ்டீன் மேல் பெரும் பக்தி இருந்தது. தனிப்பட்ட ஆர்வத்தில் அவரா சயின்ஸ் கத்துக்கிட்டாராம்’

‘ஓ, அதான் இன்ட்ரெஸ்டிங்னு சொல்லிட்டிருந்தீங்களா’

‘இல்ல. ஐன்ஸ்டீன் ப்ரிட்ஜ் வச்சு ஒரு காதல் கதை சொன்னார். அதுதான் சுவாரசியம். இரு… கொஞ்சம் யோசிச்சுக்கிறேன்’ என்று அந்த பழைய சம்பவத்தை அசைபோட ஆரம்பித்தேன். அதற்குள் பையன் பழைய ஹார்டிஸ்க்குகளை எல்லாம் தேடி எடுத்து ஐன்ஸ்டீன் வீட்டின் போட்டோக்களை தேடும் வேலையை ஆரம்பித்திருந்தான். சில நிமிடங்களில் பொறுமையிழந்தவனாக,

‘அதென்ன ஐன்ஸ்டீன் ப்ரிட்ஜ் ஸ்டோரி?’ என்று மீண்டும் ஆரம்பித்துவிட்டான்.

‘அதுவா, அவரவர் சொந்த ஊர் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். இந்த வருடம் தென்கொரியாவில் ஏஷியன் கேம்ஸ் நடக்கப்போறதே… இன்ச்சான் சிட்டி, அதுக்கு பக்கத்திலே ஹான் நதிக்கரையோரமா ஒரு கிராமம்தான் அவரோட சொந்த ஊராம். அந்த ஊரப்பத்தி பேசும்போது ரொம்ப பெருமை அவருக்கு. எப்படியும் கொஞ்சகாலத்தில் அங்க திரும்பிப் போயிடப்போறேன்னு சொல்லிட்டிருந்தார். நாங்க சும்மாயில்லாம பாலேகர் ஊருக்கு போகவே போறதில்லயாம்னு கிண்டல் அடிச்சிட்டிருந்தோம். அவனோட love anxiety பத்தி கேட்டுத் தெரிஞ்சிகிட்டவர், அப்பதான் ‘காதலைத் தேடிப் போன மூன்று சகோதரர்கள்’ கதையைச் சொன்னார். ஏதோ fable மாதிரி ஆரம்பிச்சு கடைசியில ஐன்ஸ்டீன் ப்ரிட்ஜ்ல வந்து முடிஞ்சது’ என்றேன்.

இப்போது பார்த்தால் மகனுக்கு அருகில் மனைவியும் வந்து கதைகேட்க அமர்ந்திருந்தார். எவ்வளவு வயதானாலும் பெண்களுக்கு காதல் கதைகள் சலிப்பதேயில்லை..

“அந்த நாட்டு அரசன் தன் மகளுக்கு திருமண வயது வந்ததும் ஒரு விநோதமான போட்டி ஒன்றை வைத்தானாம். ‘காதலைக் கண்டுபிடித்து கொண்டு வாருங்கள். இளவரசியை கைப்பிடித்து கொண்டு செல்லுங்கள்’ என்று நாடு முழுக்க அறிவிப்பு வெளியிட்டானாம். அதைக் கேட்டதும் அந்த மூன்று சகோதரர்களும் எப்படியும் போட்டியில் ஜெயித்துவிட வேண்டும் என்று புறப்பட்டார்களாம்.

முதலாமவன் போகும் வழியெங்கும் கண்ணுக்குப் புலப்பட்டவர்களிடம் எல்லாம் காதலை தேடினான். தெருக்கள், சத்திரங்கள், சாவடிகள், கோவில்கள், கொத்தளங்கள், காடுகள், மலைகள் என்று எங்கும் சுற்றிப் பார்த்தவனுக்கு, காதல் மட்டும் கண்ணில் அகப்படவேயில்லையாம். உலகெல்லாம் சுற்றி ஏமாந்தவன், துக்கத்தோடு திரும்பிவந்து கண்ணாடியில் தன்னைப் பார்த்தபோதுதான் புரிந்தது. அவனுடைய காதல் அந்தக் கண்ணாடிக்குள் இருந்தது. அவனால் தன்னைத் தவிர வேறு யாரையும் காதலிக்க முடியாது என்றுணர்ந்தபோது அவன் காதல் ஜனிக்காமலேயே மாண்டுபோனது. அவன் நார்சிஸ்ட்டாக புராணத்தில் புதைந்துபோனான்.

three-brothers

இரண்டாமவன் காதலைத்தேடி புறப்பட்டுப் போனான். அவன் உலகைச் சுற்றிவரும்போது பார்த்த பெண்கள் எல்லாரின் கண்களிலும் காதல் இருந்ததைக் கண்டுபிடித்தான். அவர்களை அப்படியே தன் கனவிற்குள் கொண்டு போய் அவர்களோடு காதல் புரியத் தொடங்கினான். கனவெங்கும் காதலால் நிரம்பி வழிய, மெய்யுலகை துறந்து, கனவுகளோடு கலந்து காதலைக் கண்டுபிடிக்க முடியாமல் காதலிலே கரைந்து போனான்.

காதலைத்தேடிப் போன தன்னுடைய மூத்த சகோதரர்களின் கதியை தெரிந்துகொண்டாலும், மனம் தளர்ந்துவிடாமல், நம்பிக்கையோடு மூன்றாமவன் கிளம்பினான். வேறெங்கும் செல்லாமல், நேராக இளவரசியிடம் சென்று, தான் காதலை கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்தான். தன்னுடன் வந்தால் காதலைக் காட்டுவதாக கூட்டிச்சென்றான். அவர்கள் சென்றது ஐன்ஸ்டீன் பாலம் என்றழைக்கப்படும் வார்ம்ஹோல். அதன் வழியாக அவர்கள் பலவருடங்களை பயனித்து, எதிர்காலத்தை சென்றடைந்தார்கள். அந்த உலகம் முற்றிலும் வேறாக இருந்தது. அங்கே முதுமையில் கனிந்து, வலுவிழந்த உடலும், சூடு தணிந்த இரத்தமுமாய் தள்ளாடியபடி தனிமையில் அமர்ந்திருக்கும் அவர்களையே அவன் அவளுக்குக் காட்டினான். அதுவரையிலான அவர்கள் வாழ்க்கைத் துளிகள் எல்லாம் ஒன்றுதிரண்டு, பொங்கி எழுந்து, பேருருக்கொண்டு அவர்கள் இடையே நின்றுகொண்டிருந்தது. ‘இதுதான் நான் கண்டுபிடித்த காதல்’ என்று காட்டினானாம். இளவரசிக்கு அந்தக் காதலில் அப்பொழுதே கட்டுண்டு விட்டாளாம். காதலைக் கண்டுபிடித்து கொண்டாடுபவர்களாக காலத்தில் நிலைபெற்றார்கள் அவர்கள்.”

wormhole

‘எ வார்ம்ஹோல்? டைம் ட்ராவல் புரியுது. அதுக்கு மேல ஒண்ணுமே புரியல. பட் ஐ லைக் தட் ஸ்டோரி’ என்றான் பையன். பரவாயில்லை. புரியவேண்டிய காலத்தில் புரிந்தால் போதும் மகனே என்று நினைத்துக் கொண்டேன்.

‘நாங்க நியூயார்க் போயிட்டு வந்த அடுத்த வாரமே பின் லேடன் புண்ணியத்தில் வேர்ல்ட் ட்ரேட் சென்டர் இடிச்சு சரிஞ்சுப் போச்சு. கூடவே எங்களுடைய வேலைகளும், அமெரிக்க எதிர்காலமும் சரிந்து போய் எல்லோரும் ஊர் திரும்பிட்டோம். ஐன்ஸ்டீன் ப்ரிட்ஜ் மூலமாக காதலை கண்டுபிடித்த மூன்றாவது சகோதரன் போல அப்போ பாலேகரும் உற்சாகமாகவே ஊர் திரும்பினான்.’ என்று சொல்லிவிட்டு கதை முடிந்ததற்கு அடையாளமாக தண்ணீரை குடிக்க ஆரம்பித்தேன்.

‘ஹ… கண்டுபிடித்துவிட்டேன்’ போட்டோக்களை தேடிக் கொண்டிருந்தவன் உற்சாகமாக சொன்னான்.

‘Einsteen என்று தப்பான ஸ்பெல்லிங்கில் டேக் செய்திருக்கிறீர்கள். அதுதான் கண்டுபிடிக்க லேட் ஆகிவிட்டது’

என்று பதினான்கு வருட பழைய புகைப்படங்களை மீட்டு எடுத்த பூரிப்போடு சொன்னான். எல்லாரும் கதையை மறந்துவிட்டு படங்களைப் பார்க்க ஆரம்பித்தோம். ஆளாளுக்கு தனியாகவோ, குழுவாகவோ ஐன்ஸ்டீன் வீட்டின் முன்னே நின்றுகொண்டிருக்கும் படங்கள் வரிசையாக இருந்தன். ஃபைல் பெயர்களிலே படங்களில் இருப்பவரின் பெயர்களும் இருந்தது.

‘ராகுல் பிஸ்ஸால், அனுஷா ஃபோங்கே, ராஜா சாந்தேக்கர், ஷ்ரத்தா கோயல்….’ என்று வரிசையாக பெயர்களை சொல்லிக் கொண்டே வந்த பையன், ‘இதில பாலேகரோ, அந்த கொரியன் பெயின்டரோ இல்லையேப்பா’

ஆமாம். அன்று ஐன்ஸ்டீன் வீட்டுக்கு முன்னே நின்று எடுத்துக் கொண்ட முழு குரூப் படங்கள் எதுவும் காணோம்.

இப்போது பார்த்த பையன் கண்ணில் குறும்பு மின்ன…

‘ஓ! டாட், இந்த பெயிண்டர் கதையெல்லாம் உண்மையா நடந்ததா, ஐண்ஸ்டீன் வீடுங்கிற பேர்ல நீங்களா அடிச்சுவிடறீங்களா?’

இவையெல்லாம் உண்மைகளிலிருந்து பெறப்பட்ட உண்மைதான் என்பதை அவனுக்கு எப்படி விளக்குவது என்று புரியவில்லை. ஆனால், பக்கத்தில் இருந்த மனைவியின் புன்னகையில் அவருக்கு புரிந்துவிட்டது என்பது மட்டும் எனக்கு புரிந்தது.

நீராம்பல்

ஸ்ரீதர் நாராயணன்

‘ங்க வாடா வெளக்கெண்ண கருப்பா… வெண்ணெவெட்டி சாம்பிராணி… கதயா எளுதற… &*#$(#$% மவனே’ என்று பாலமுருகனின் முடியைப் பிடித்து உலுக்க ஆரம்பித்தார் கோவிந்தன். கடைசி வார்த்தை பாலமுருகனின் தந்தையின் ஒழுக்கத்தை சாடும் ஒரு கொச்சை வசவு. அதைக் கேட்டதும் வகுப்பில் விடலை பையன்கள் கிளுகிளுத்து சிரித்தார்கள். அவர்கள் தனித்திருக்கும்போதே சொல்லத் தயங்கும் வசவுச் சொல்லை வாத்தியார் ஒருவர் சரளமாக பயன்படுத்துகிறார் என்றால் கேட்க வேண்டுமா. இன்னும் என்னவெல்லாம் வருமோ என்று பேராவலோடு காத்திருந்தனர்.

கோவிந்தனுக்கு காலையில் எழுந்ததில் இருந்து எரிச்சலாகத்தான் இருந்தது. எரிச்சலென்றால் செண்டு முளை கன்றிப்போய் வெளிக்கிளம்பிய எரிச்சல். உட்காரவும் முடியாமல் நடக்கவும் முடியாமல் கால்களை அகட்டி அகட்டி வைத்து பள்ளிக்கூடத்திற்கு நடந்து வந்துகொண்டிருக்கும்போது எவனோ ஒரு கபோதி சைக்கிளில் கைகளை தொங்கவிட்டபடி சிகரெட்டை புகைய விட்டுக்கொண்டே பறந்தடித்துக் கொண்டு போனான். ரோட்டில் தேங்கியிருந்த மழைநீரை வாரியடித்ததில், வலப்பக்க சட்டை முழுவதும் கறையாகிப் போய்விட்டது. கால்மணி நேரம் தாமதமாக பள்ளிக்கூடத்திற்குள் வந்தவரைப் பார்த்ததும் வாசலிலேயே நின்றுகொண்டிருந்த ஹெச் எம், கேட்டார். (more…)

பாம்புப் படலம்

– எஸ். சுரேஷ் –

“மாமி இங்க வாங்கோ. சீக்கிரம் வாங்கோ” என்று மீனா மாமியின் குரல் கேட்டது.

“என்ன ஆச்சோ. மாமி இப்படி கத்தறா” என்று கூறிக்கொண்டே அம்மா முன் பக்கம் சென்றாள். நானும் அம்மாவுடன் சென்றேன். நாங்கள் அப்போது சிகந்திராபாத் நியூ போயிகுடாவில் ஒரு பெரிய வீட்டின் பின்பக்கத்தில் குடியிருந்தோம் பத்மநாபா மாமாவும் முன் பக்கத்தில் இருந்தார்கள். அவர்கள் இந்த வீட்டிற்கு சொந்தக்காரர்கள்.

“என்ன ஆச்சு மாமி?” என்று அம்மா மீனா மாமியைக் கேட்டாள்.

“பாம்பு வந்திருக்கு மாமி”

“பாம்பா? எங்க?”

“அதுக்குள்ள இருக்கு,” என்று மீனா மாமி வாட்டர் மீட்டர் இருக்கும் குழி பக்கம் கை காட்டினாள். வாட்டர் மீட்டர் இரண்டடிக்கு இரண்டடி சதுர, பக்கவாட்டில் சிமெண்ட் பூசப்பட்ட குழிக்குள் இருக்கும். அந்தக் குழியின் மேல் சதுரமான தகர மூடி இருக்கும். அது சரியாக\ குழியின் மேல் உட்காராததால் குழிக்கும் மூடிக்கும் நடுவிலிருந்த இடைவெளி வழியாக பாம்பு உள்ளே சென்றுவிட்டது, (more…)

உடைநீர் ஓசை

ஸ்ரீதர் நாராயணன்

 

‘மாலி வந்திருக்குடா… வெரசா வெளில வா’ வெளியிலிருந்து அம்மா கத்தியது கீழே மெடிக்கல்ஷாப்வரை கேட்டிருக்கும். காசி கையில் புரட்டிக் கொண்டிருந்த புத்தகத்தை வேகமாக சுருட்டி சோப்புத்தூள் டப்பாவின் பின்னால் செருகி வைத்துவிட்டு எழுந்து நின்று கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டான். ராஜமாணிக்கம் கொடுத்த புத்தகம் அது. வழவழ பேப்பர்களில் விதவிதமான போஸ்களில் படங்களை என்னமாய் ப்ரிண்ட் செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு தினுசு. பொன்னிறக்கூந்தல் பெண்கள். செந்நிற கிராப்புத் தலைப் பெண்கள். ஒல்லி இடுப்பு பெண்கள். பெருத்த உடலைக் கொண்ட பெண்கள்.

‘ஒருநாளப் போல இப்படித்தாம்மா. பாத்ரூமுக்குள்ள போன ரெண்டவர் ஆக்கறான். என்னடா பிரச்னைன்னு சள்ளு புள்ளுன்னு எரிஞ்சு விழறான். எதாச்சும் சொல்பேச்ச கேட்டாத்தான. உடம்பு கிடம்பு சுகமில்லன்னா வைத்தியம் பாக்கதாவல’ அம்மாவின் பிலாக்கணம் காசியை அவசரப்படுத்த, கண்ணாடியில் தெரிந்த பிம்பம் குளித்தமாதிரிதான் இருக்கிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டு வேகமாக வெளியில் வந்தான். (more…)

மைதானத்தின் மத்தியில் ஒரு கொலை

ஸ்ரீதர் நாராயணன்

கொலையா? இங்கேயா?’ சற்று அதிர்ச்சியோடு கேட்டான் வாசுதேவன். இன்றைக்கான இரண்டாவது அதிர்ச்சி அவனுக்கு.

முதல் அதிர்ச்சியை, அவன் மைதானத்திற்கு வந்ததுமே டேரல் அளித்துவிட்டார். அவனை ஆரவாரமாக வரவேற்றுக் கொண்டே ‘ஆஹ், நீங்கள்தானே வசு…. வசுதேவா… ‘ அதையும் ஒருமாதிரியாக வேசு என்றுதான் உச்சரித்தார். ‘வாருங்கள், வாருங்கள், தோ… இவர் கோச் ரோஜர், இவர்கள் கைல் மற்றும் எர்ல். கன்மாஸ் கவுண்ட்டியில் கோச்சாக இருக்கிறார்கள். இவர் கோச் ஜஸ்டின், இவர் கோச் ஹாரியட்’ என்று முறையாக அறிமுகப்படுத்திவிட்டு,

‘இவர்தான் கோச் வசு’. என்று அவனையும் அறிமுகப்படுத்தினார். வாசு-வைத்தான் அப்படி சுருக்கி சொன்னார் டேரல்.

வாசுதேவன் எவ்வளவு யோசித்தும் டேரல் எப்படி அவனை கால்பந்தாட்ட கோச்சாக நினைத்திருக்கக் கூடும் என்று புரியவில்லை. அவன் புதியதாக வேலைக்கு சேர்ந்திருந்த மாக்ஸோ நிறுவனத்தில் உடன் பணிபுரியும் சகா. ‘சிறுவர்களுக்கான சாக்கர் (Soccer) பயிற்சி முகாம் நடத்துகிறோம். தன்னார்வலர்கள் தேவை’ என்று அலுவலகத்தில் எல்லாருக்கும் மெயில் அனுப்பியிருந்தார். புதிய இடத்தைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வமும், செலவழிக்க நிறைய நேரமும் இருந்ததால் வாசுதேவன் தானும் வருகிறேன் என்று பதில் அனுப்பியிருந்தான். டிஷர்ட்டுகளை விநியோகிப்பது, இலக்கமிட்ட பட்டிகளை மாட்டிவிடுவது, தண்ணீர் பாட்டில்கள் கொண்டு கொடுப்பது, பெயர்களை பதிவு செய்வது போன்ற வேலைகளை செய்யச் சொல்வார்கள் என்றுதான் எதிர்பார்த்திருந்தான். ‘குழந்தைகளுக்கு என்ன சொல்லித் தரமுடியும் உங்களால்’ என்று டேரல் அடுத்த மெயிலை அனுப்ப, ஆர்வமேலீட்டால் சில பொதுப்படையான யோசனைகளை முன்வைத்து பதிலனுப்பியிருந்தான். அதற்கு பிரதிபலனாகத்தான் இன்று வந்ததும் ‘கோச்’ பட்டம் அளித்துவிட்டார்.

அடுத்த சில மணி நேரங்களிலே இதோ இந்தப் பெரியவர் ஏதோ இந்த மைதானத்தில் நடந்த கொலையைப் பற்றி சொல்லி வாசுதேவனுக்கு மற்றொரு அதிர்சசியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்..

வாசுதேவனின் குரலில் இருந்த திகைப்பை உணர்ந்தவர் போல அந்தப் பெரியவர் ‘உன்னைப் பார்த்தால் ஊருக்கு புதியவன் போலிருக்கிறாயே’ என்றுக் கேட்டார்.
அவன் நின்றுகொண்டிருந்த மரத்தடிக்கு தெற்கே, உள்ளடங்கிய நிழற்பகுதியில், அமர்ந்திருந்தார் அவர். உற்றுப் பார்த்தாலொழிய தெரியாத புராதனமும், ஏழ்மையை மறைக்கும் அளவுக்கு ஐரோப்பிய கனவான் போன்ற உடைத்தோற்றம். தலையிலிருந்த தொப்பியின் நுனியை தூக்கியபடி அவர் வாசுதேவனை நிமிர்ந்து பார்த்தபோது முகம் இன்னமும் தெளிவாகத் தெரிந்தது. எழுபது வயதாவது இருக்கலாம் என்று தோன்றியது. வாசுதேவனின் அலுவலகத்தில் பல முழுக்கிழங்கள் வழுக்கைத்தலை, பொக்கைவாய் என்று எந்த அடையாளமும் தெரியாதபடிக்கு மொட்டைத்தலையும், வற்றல் உடம்புமாய் அரைக்கிழமாக உருமாறி வலம் வருவார்கள். நேர்மாறாக, கல்லூரி முடித்து வரும் மாணவர்களோ ஆஜானுபாகுவாக பெரியமனுஷ தோரணையில் இருப்பார்கள். அமெரிக்கர்களின் வயதை அனுமானிப்பது வாசுதேவனுக்கு பெரும் சிக்கலாகவே இருந்தது. அவனை மேலும் யோசிக்கவிடாமல் பெரியவரின் குரல் எழுந்தது.

‘நீ அதிகம் கால்பந்து ஆடியதில்லையோ?’ என்றார்.

‘அஹ்… நான் பேஸ்கெட்பால்தான் அதிகம் விளையாடியிருக்கிறேன். சும்மா சின்னக் குழந்தைகளுக்கு கோச்சிங் காம்ப் என்று வாலண்டியராக வந்தேன்’
‘தெரிந்தது. நீ சொல்லிக் கொடுத்தது போல் அவர்கள் உதைத்தால் ட்ரிப்ளிங் கண்ட்ரோல் சுத்தமாக வராது’ என்றார். முகத்தின் வறண்ட புன்னகையில் இப்பொழுது இகழ்ச்சியும் கூடியிருந்தது.

வாசுதேவன் பதில் எதுவும் சொல்லாமல் மையமாக புன்னைகைத்து வைத்தான்.
‘பார்… பாதத்தை நேராக வைத்துக் கொண்டு உதைக்கக் கூடாது. இந்தக் கட்டைவிரல் கணு இருக்கிறது பார்… இங்கே… இப்படி அணைப்பாக உருட்ட வேண்டும். லெஃப்ட் விங் என்றால் இடது காலை திருப்பி கொஞ்சம் அதிக அழுத்தம். ரைட் விங்கில் இருப்பவருக்கு வலது பாதத்தை சாய்வாக வைத்து ஸ்டீரிங் செய்து கொண்டு போக வேண்டும்’

அவ்வளவு டெக்னிகலான அறிவுரையெல்லாம் அவனுக்கு அதிகம் புரியவில்லை. ஆனால் அவர் வெகுநேரமாக அவனை கண்காணித்துக் கொண்டிருந்தார் என்று மட்டும் புரிந்தது. சிரித்துக் கொண்டே ‘என் பெயர் வாசு. நீங்கள்?’ என்று அவர் அமர்ந்திருந்த பாறைக்கு அருகே சென்று கையை நீட்டினான்.

“ஸ்டான்லி” என்றவாறே பதிலுக்கு கையை நீட்டினார். அந்த மதிய வெம்மையிலும் அவர் கை குளிர்ச்சியாக இருந்தது.

‘அந்த டேரல்தானே இந்த கேம்ப்பை நடத்துகிறான். அவனும், அவனுக்கு பணம் தரும் க்ளிங்கர் கூட்டமும் வெறும் கண்துடைப்பு கூட்டம்’ என்றார். குரலில் இகழ்ச்சி பெருக்கெடுத்து ஓடியது.

‘ஓ…. அப்படியா சொல்கிறீர்கள்…. உள்ளூர்காரர்களின் ஒத்துழைப்பு அவ்வளவு இல்லை போலவே. அவர் மிகவும் பிரயத்தனப்பட்டுத்தான் செய்துகொண்டிருக்கிறார் என நினைக்கிறேன்”.

‘இவர்களின் பம்மாத்து விஷயம் இங்கிருக்கும் எல்லோருக்கும் தெரியும். நீ எந்த ஊரிலிருந்து வருகிறாய்? ‘ என்றார்.

‘நான் மூன்று மாதங்கள் முன்னாடிதான் கலிஃபோர்னியாவிலிருந்து வந்தேன். டேரலுடன்தான் வேலை செய்கிறேன். சிறுவர்களுக்கான கேம்ப். வாலண்டியராக வாயேன் என்றார்’

‘வேறு எவன் வருவான்? இப்படியாகவா அநாமததாக இருந்தது இந்த இடம்? எவ்வளவு கொண்டாட்டமான இடம் தெரியுமா? பெரும் களியாட்டங்கள் போல மேட்சுகள் நடந்து கொண்டிருந்தது. ஸ்டேடியத்தையும் இடித்து தள்ளிவிட்டு, இந்த துண்டு இடத்தில் குழந்தைகளுக்கு சாக்கர் கேம்ப் நடத்துக்கிறேன் என்று ஏமாற்றுகிறார்கள்’ சற்று நிறுத்திவிட்டு சொன்னார். ‘இதே மைதானத்தில் ஆளை மட்டுமா கொலை செய்தார்கள்? மொத்த கால்பந்தையும் கொலை செய்துவிட்டார்கள்’
‘ஸ்டேடியமா? இங்கேயா… ‘ வாசுதேவன் நம்பமுடியாமல் சுற்றி சுற்றிப் பார்த்தான். கிழக்குப்பக்கம் சற்று ஏற்றமான மலைப்பகுதியில் ஏதோ குடியிருப்புகள் இருப்பது போல் தெரிந்தது. அப்படியே அரைவட்டமாக சுற்றி வந்தால் பெரிய ஷாப்பிங் மால் ஒன்றின் வாயில் வரும். அதனுள்ளே அங்காடிகளும், பெரும் கடைகளுமாய் தனி நகரமே இருந்தது. இந்தப்புறம் ஏழடுக்கு பார்க்கிங் கட்டிடத்தின் பின்புறமாய் அரைமைல் தொலைவில் சிறிய மைதானத்தின் நடுவே நண்டும் சிண்டுமாய் பல குழந்தைகள் கூடியிருக்க டேரல் மளமளவென கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டிருந்தார். மைதானத்தின் மறுகோடியில் மரநிழலில் கார்களை நிறுத்தி வைத்துவிட்டு குழந்தைகளின் பெற்றோர் கூடிநின்று குளிர்கண்ணாடிகளும், அரைநிஜார்களுமாய் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

‘ஆமாம். 83 லீக்வரை, ஃபிலடெல்ஃபியா ஸ்டோனர்ஸ் அணிக்கு, ஜேஸ்டன்வில்தான் ஹோம் கிரவுண்ட். என்ன ஒரு திருவிழாக்கோலம் தெரியுமா… கால்பந்திற்கான பொற்காலம் அல்லவா. அது..’

அவனை நிமிர்ந்து பார்த்தவர் வெறுப்பு தோய்ந்த குரலில் ‘நீயும் அந்த க்ளிங்க்ர்கள் கம்பெனியில்தானே வேலை பார்க்கிறாய்… அவர்கள் இருக்கும்வரை இங்கே கால்பந்து டீம் என்று ஒன்று உருவாகவே உருவாகாது. ஊரை ஏய்க்க இப்படி கணக்கு காட்டி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்’

‘ஹ! அப்படியா சொல்கிறீர்கள்… இப்போதுதான் பெரிய ஐஸ் ஹாக்கி ஸ்டேடியம் ஒன்றை கன்மாஸ்ஸில் கட்டிக் கொண்டிருக்கிறார்களே… ஃபுட்பால் மேல் என்ன பாரபட்சம் இருக்கப் போகிறது?’

‘ஐஸ் ஹாக்கி ஸ்டேடியமா… அதுவும் இதுவும் ஒன்று என்கிறாயா நீ?’
பெரியவர் மிகவும் கோபமாகிவிட்டார் எனத் தெரிந்தது. வேகமாக எழுந்திருக்க முடியாமல் எழுந்து நின்று அவனை உறுத்துப் பார்த்தார்.

‘ஒன்று என சொல்லவில்லை. அதற்கெல்லாம் எங்கள் கம்பெனிதானே பிரதானமான பங்களிக்கின்றனர்.’

‘ஏன் சொல்லமாட்டாய்… கால்பந்து என்னும் கலாச்சாரம் பற்றி உங்களுக்கு என்ன தெரியப் போகிறது. எங்களைக் கொன்றுவிட்டு புதியதாக எதையாவது கொண்டு வந்து நட்டுவிடப் பார்க்கிறீர்களா? நானும், இந்த மைதானமும், இந்த மரங்களும், இதில் உள்ள ஒவ்வொரு புற்களும் இருக்கும்வரை அனுமதிக்க மாட்டோம். இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த ஏமாற்று வேலை நடக்கும் எனப் பார்த்துவிடலாம்.’ தடுமாறியபடி நடந்தவர், இடுப்பு பெல்ட்டை இறுக்கிக் கொண்டு விலகி செல்ல ஆரம்பித்தார்.

‘ஏதும் உதவி தேவையா? உங்களை வீட்டுக்கு கொண்டு விடவா? எங்கே செல்ல வேண்டும் நீங்கள்’ என்றான் வாசு.

‘கவலைப்படாதே. இங்கே பக்கம்தான். நடந்தே போய்விடுவேன். நான் வேறெங்கே போகமுடியும் சொல்லு… இனி நேராக சுடுகாடுதான்’ என்று சொல்லிவிட்டு மைதானத்தின் எல்லையில் இருந்த சரிவில் இறங்கி, மரங்களடர்ந்த, அதிகம் பராமரிக்கப்படாத தெருவில் நடக்கத் தொடங்கினார்.

‘கோச் வசு, கொஞ்சம் இப்படி வந்து இந்த கோல் போஸ்ட்டை மாற்றி வைக்க முடியுமா’, டேரல் கூப்பிட மீண்டும் மைதானத்திற்குள் ஓடினான்.
ஆறிலிருந்து எட்டு வயதுவரை இருக்கும் ஒரு டஜன் குழந்தைகளுடன் டேரல் மைதானத்தின் கிழக்கு மூலையில் இருந்தார். எதிரும்புதிருமாக இரு வரிசைகளில் குழந்தைகளை நிறுத்தி வைத்துவிட்டு, பந்தை எப்படி எதிரிலிருப்பவருக்கு பாஸ் செய்வது என்று பாடம் எடுத்துக் கொண்டிருந்தவர், அடுத்ததாக ஃப்ரீ கிக் சொல்லிக் கொடுப்பதற்காக சிறிய வலையுடன் கூடிய கோல் போஸ்ட்களை நடுவில் நட்டு வைத்துக் கொண்டிருந்தார். பிக்டெய்ல் பின்னலுடன் வந்திருந்த எமிலி, மூக்குறிஞ்சிக்கொண்டு துள்ளித்துள்ளி ஓடும் ரெனால்டு, குண்டு கன்னங்களுடனான லூபின் என்று குழந்தைகளின் உற்சாகம் அவனையும் தொற்றிக் கொண்டது. கைலும் எர்லும் அண்ணன் தம்பிகளோ, மாமன் மச்சான்களாகவோ இருப்பார்கள் போலிருந்தது. மாற்றி மாற்றி விடாமல் பேசிக்கொண்டே பெரிய பையன்களுக்கு, ட்ரிப்ளிங், பிளாக்கிங், டிஃபென்ஸ் என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அவ்வளவு அடர்த்தியான ஆப்பிர்க்கன் அக்செண்ட் மத்தியிலும் அவர்களின் பலவருட பயிற்சி அளிக்கும் அனுபவம் பளிச்சென தெரிந்தது. ரோஜரும் அவனுமாக சின்னக் குழந்தைகளை வரிசையில் நிறுத்தி வைத்துக் கொண்டிருக்கும்போது அவன் கேட்டான்,

‘ரோஜர், இங்கே பெரிய ஸ்டேடியம் இருந்ததா முன்பு? அதை இடித்து விட்டுத்தான் இந்த ஷாப்பிங் மால்கள் எல்லாம் வந்தனவா?’

‘ஓ! கென்னடி ஸ்டேடியம் இங்குதான் இருந்தது. அதொரு பழைய கதை. 83லோ 85லோ பெரிய மியூசிக் ஃபெஸ்டிவெல் ஒன்று…. அதுதான் கடைசி நிகழ்ச்சி என்று நினைக்கிறேன். அதற்கப்புறம், பொதுமக்கள் உபயோகத்திற்கு ஆபத்தானது என்று முடிவு செய்து மொத்தமாக இடித்து தள்ளிவிட்டார்கள்’

அதற்குள் அங்கு வந்த டேரல் இடைமறித்து ‘நீங்கள் அந்த நிகழ்ச்சிக்கு போயிருந்தீர்களா ரோஜர்? எனக்கு அப்போது பத்து வயது என்று நினைக்கிறேன். என் அம்மா எங்கள் யாரையும் போகக்கூடாது என்று சொல்லிவிட்டார். அதுவும் அந்த சபிக்கப்பட்ட மேட்ச்சிற்கு அப்புறம் பலரும் பயந்துகொண்டு இந்த ஸ்டேடியம் பக்கமே வந்ததில்லை’

‘நான் அப்போது பத்தாவது கிரேடு படித்துக் கொண்டிருந்தேன். 83ம் வருடம்தான் அது. நன்றாக நினைவிலிருக்கிறது.. நான் அந்த மேட்ச்சை ஹாமில்டன் ஸ்டேண்டிலிருந்து பார்த்தேன். என்னவொரு மேட்ச் அது. துரதிர்ஷ்டவசமாக முடியும்போது….’ சுற்றிலும் இருக்கும் குழந்தைகளின் காதில் விழாதவாறு ‘…. அந்தக் கொலை நிகழ்ந்துவிட்டது. இதோ இந்த இடத்தில்தான்’ என்றார்.

‘ஹ! ஆஸ்பிடலுக்கு கொண்டு போய் டிவியில் பேட்டியெல்லாம் எடுத்ததை காட்டினார்களே ரோஜர். அப்புறம்தானே இறந்து போனார். எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது’

‘சேச்சே… ஆஸ்பிடலில் பேட்டி கொடுத்தது அவருடைய மனைவி. இல்லை இல்லை… அம்மா என்று நினைக்கிறேன். இங்கேயிருந்து ஸ்ட்ரெச்சரில் தூக்கும்போதே உயிர்பிரிந்து விட்டதே. என் சித்தப்பா அப்பொழுதே சொன்னார்’
இப்பொழுது வரிசையிலிருந்த குழந்தைகள் பந்தை அவர்களாகவே உதைத்து விளையாட ஆரம்பிக்க, டேரலும் ரோஜரும் பழைய மேட்ச்சை வாசுதேவன் பொருட்டு மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியிருந்தனர்.

‘அநியாயமான முடிவு அது. நாங்கள் மேற்கில் மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்தோம். பந்து தெளிவாக கோட்டிற்கு வெளியேதான் பவுன்ஸ் ஆகியது’ டேரல் ஏதோ சொல்லிக் கொண்டிருக்க, ரோஜர் தீவிரமாக மறுத்தார்.

‘அப்படி சொல்லித்தான், கட்டுக்கதையெல்லாம் கிளப்பி விட்டார்கள். அது சரியான கோல்தான். க்ளிங்கர் பையன் கோணலாக ஆடி மானத்தை வாங்கி விட்டான். அவனால்தான் கவைக்குதவாத அந்த ரெவ்ஸ் அணி ஃபைனல்ஸ் வரை போனது’
டேரல் மிகவும் எமோஷனலாகிவிட்டார். ‘தெரியும்யா.. தெரியும். சுற்றி சுற்றி க்ளிங்கர் மேலேதான் குற்றம் சொல்வீர்கள் என்று…. இன்னும் க்ளிங்கர்கள்தான் ஃபுட்பாலை வளரவிடாமல் செய்கிறார்கள் என்றெல்லாம் கதை கிளப்பி விடுகிறீர்கள். எவ்வளவு செலவழித்தும் இந்த அவப்பெயர் போகவே போகாது அவர்களுக்கு. என்ன மக்களோ… என்ன லாஜிக்கோ’

டேரலை தவிர்த்து வாசுதேவனிடம் திரும்பிய ரோஜர் ‘நீயே சொல்லு, லெஃப்ட் விங்கில் வேகமாக பந்தை கொண்டு வருபவனை எப்படி ப்ளாக் செய்வாய்? பந்தை திருப்பி கோலியிடம் தட்டிவிட்டாலேப் போதுமல்லவா. இவன் என்ன செய்தான் தெரியுமா…’ இவன் என்பது அந்த இடத்தில் டேரல் வக்காலத்து வாங்கும் ஒருவனைப் பற்றியது என்ற அளவிற்கு வாசுதேவனுக்குப் புரிந்தது.

‘பந்தை ஓங்கி வெளியில் உதைக்கிறான். எப்படிப் போனாலும் அது கார்னர் போய்விட்டிருக்கும். அன்றைக்கு என்று துரதிர்ஷ்டம் பார், அந்த ரெவ்ஸ் டீம் பையன் வேகமாக பந்தின் பின்னாடியே வந்துவிட்டான். க்ளிங்கர் வெளியில் உதைத்த பந்து அந்த ரெவ்ஸ் டீம் பையைன் காலில் பட்டு அப்படியே பலூன் போல உயரேப் போய் மூன்றடி முன்னால் வந்துவிட்டிருந்த கோலியைத் தாண்டி ஒரே பவுண்ஸில் கோலுக்கு போய்விட்டது. அதுவும் எப்படி… நேரே கோல் போஸ்ட்டின் மேல் கம்பில் பட்டு உள்ளே விழுந்து ஸ்பின் ஆகி வெளியே வந்துவிட்டது. இன்றுவரை அது ரெஃப்ரியின் தவறு என்று இவர்கள் அழுகுணி ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட அதொரு செல்ஃப் கோல். மடத்தனமாக விளையாடி மொத்த டீமிற்கும் சமாதி கட்டிவிட்டான்.’

‘சான்ஸே இல்லை. அந்த ரிக்கார்டிங்கை இப்போது கூட என் அப்பா வீடியோ கேசட்டில் வைத்திருக்கிறார். அது கோல் போஸ்டிற்கு வெளியேதான் விழுந்தது. ‘
‘அடப் போங்கப்பா. அந்த லீகோடு ஈஸ்டன் நகரத்து ஃபுட்பால் சரித்திரமே முடிஞ்சு போச்சு’

‘இது ஆகாத பேச்சு ரோஜர். மேயர் தெளிவாகச் சொல்லியிருந்தார். ஸ்டேடியம் ஏகப்பட்ட உடைசல்களுடன் தள்ளாடிக் கொண்டிருந்தது அப்பொழுது. ரெனொவேட் செய்ய ஆகும் செலவுக்கு புதிய ஸ்டேடியமே கட்டிவிடலாம். மேலும் மைதானத்தின் மத்தியிலே கொலை வேறு நிகழ்ந்து எக்கசக்கமாக மக்கள் பயந்து போயிருந்தார்கள்’
‘ஆமாம். இதாண்டா சமயம் என்று மொத்தமாக வளைத்துப் போட்டு மால் கட்டிவிட்டு இலாபம் பார்த்துவிட்டீர்கள். ஒட்டுமொத்த டவுன்டவுன் கடைத்தெரு வியாபாரத்தையே காலி செய்துவிட்டீர்களே. அப்போதைய ஈஸ்டன் எவ்வளவு ரம்மியமாக இருந்தது தெரியுமா’ ரோஜர் விடாமல் பொருமிக் கொண்டிருந்தார்.

வாசுதேவனுக்கு லேசாக புரியத் தொடங்கியது. க்ளிங்கர்கள் குடும்பத்திற்கு ஈஸ்டன் நகரத்தில் எக்குதப்பான சொத்து உண்டு எனத் தெரியும். ஆனால் இவர்கள் சொல்வதைப் பார்த்தால் ஏகப்பட்ட செல்வாக்கு இருக்கும் போல. இடிந்து போன ஸ்டேடியம் ஒன்றை அப்படியே கபளீகரம் செய்து ஊருக்கு ஒதுக்குபுறமாய் பெரிய ஷாப்பிங் மால், பார்க்கிங் கட்டிடம் என்றெல்லாம் கட்டி, ஈஸ்டன் நகரத்தின் முகத்தையே மாற்றி விட்டிருக்கிறார்கள். பெரிய தொழில்போட்டியின் ஓரங்கமாக கால்பந்து விளையாட்டும் ஆகி விட்டது.

இதற்கு மத்தியில் ஏதோ ஒரு க்ளிங்கர் பையன் ஃபுட்பால் ஆடி ஒரு மேட்ச் தோற்க காரணமாகவும் ஆகிவிட்டிருக்கிறான். அதுதான் ரோஜர் போன்ற கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு பயங்கர கடுப்பாக இருக்கிறது. அதனால்தான் க்ளிங்கர் நிறுவனம் முன்வந்து ஃபுட்பால் கேம்ப் நடத்தினால் கூட அது வெறும் கண்துடைப்பாகவே அவர்களுக்கு தெரிகிறது.

‘ஹ! இதெல்லாம் அந்த ஈஸ்ட்வுட் ஷூ கம்பெனிக்காரர்கள் கிளப்பிவிட்ட புரளி. அவர்கள் பிஸினெஸ் பிளானிங் செய்யாமல் அகலக்கால் வைத்து வரிசையாக கடைகளாக கட்டிக் கொண்டே போனார்கள். புதிய வாய்ப்புகள் எல்லாமே புறநகரங்களில்தானே பெருக்கெடுத்து ஓடியது… டவுன்டவுன் தெருக்களின் வியாபாரம் படுத்துவிட்டதற்கு நாங்கள் என்ன செய்வது’

அதற்கு மேல் ரோஜர் ஒன்றும் பேசவில்லை. ஏதோ டேரல் மூலமாக வரும் கொஞ்சநஞ்ச வாய்ப்புகளையும் கெடுத்துக் கொளவதா என்பது போல பதிலேதும் சொல்லாமல் நிறுத்திவிட்டார்.

‘இந்த ஊருக்கு மீண்டும் ஒரு கால்பந்து மறுமலர்ச்சி ஏற்படும் என்று எனக்கு நம்பிக்கையில்லை. என் அப்பா காலத்தவர் சிலர் இன்னமும் அதிசயம் ஏதும் நிகழாதா என்று நப்பாசையோடு இருக்கிறார்கள். அதெல்லாம் ஒன்றும் நடக்காது பாருங்கள்’ என்பதோடு முடித்துக் கொண்டு விட்டார். வாசுதேவனுக்கு சற்று முன்பு உத்வேகத்தோடு வாதிட்ட பெரியவர் நினைவு வந்தது.

‘ஆமாம் யாரோ மைதானத்தின் நடுவில் கொலையானதாக சொல்கிறீர்களே… யார் அது? அந்த க்ளிங்கர் பையனா?’

டேரல் மறுதலிப்பாக தலையாட்டிக் கொண்டே ‘இல்லை… இல்லை… அதை கோல் என்று தீர்ப்பளித்த ரெஃப்ரியைத்தான் போட்டுத் தள்ளிவிட்டார்கள். மேட்ச் முடிந்து ஃபைனல் விசில் ஊதியதும், யாரோ குரூப்பாக ஸ்டேடியத்திலிருந்து தாவி ஓடிப் போய் ரெஃப்ரி மீது பாய்ந்து விட, சுற்றிலும் ஒரே குழப்பமாகி விட்டது. நாங்கள் தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தபோது, ஏதோ தள்ளுமுள்ளு சண்டை என்றுதான் நினைத்தோம். ஆனால் பாரா மெடிக்கலெல்லாம் வந்து ஸ்ட்ரெச்சரில் அள்ளிப் போட்டுக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடின போதுதான் விஷயமே தெரிந்தது. அந்த ரெஃப்ரி பெயர் கூட…..’ டேரல் யோசிக்க, ரோஜர் சொன்னார் ‘ஏதோ ஒரு ஸ்டேன்லி என்று வரும். பாவம். இவர்களின் அராஜகத்துக்கு அவர் பலியாகிவிட்டார்’
‘கோர்ட்டு தீர்ப்பில் என்ன வந்தது தெரியுமா’, ‘அந்த வெறியாட்கள் கூட்டத்தில் க்ளிங்கர் ஃபேக்டரி ஆட்கள் இருந்தார்களே’ என்று அடுத்த ரவுண்டு விவாதத்திற்கு டேரலும் ரோஜரும் தயாராக, வாசுதேவனுக்கு ரோஜர் சொன்ன பெயர் நடு முதுகில் பனிக்கட்டியை வைத்து தேய்த்தது போல சிலீரென இருந்தது.

அடுத்த நாள் ஞாயிறு காலை, எழுந்திருக்கும்போதே வாசுதேவனுக்கு காய்ச்சல். நூற்றியிரெண்டு டிகிரிக்கு அனலடித்தது. அவனுக்கு நன்றாகத் தெரியும். அன்று பயிற்சி முகாமிற்கு போனால், அந்தப் பெரியவர் மைதானத்தின் மூலையில் அமர்ந்து கொண்டு குழந்தைகள் ஆடும் கால்பந்தாட்டத்தை பார்த்துக் கொண்டிருப்பார் என்று. அந்த மைதானத்தில் கால்பந்தாட்டத்தை நேரில் காண அவருக்கு வாய்த்த வெகு சில சந்தர்ப்பங்களில் அதுவும் ஒன்று. அந்த சபிக்கப்பட்ட கடைசி மேட்ச்சைப் பற்றி இன்னமும் நிறைய தகவல்கள் அவருக்கு தெரிந்திருக்கும். ரோஜர் மற்றும் டேரலின் கதைகளைப் போல் மூன்றாவது கதை ஒன்றை அவரும் சொல்லலாம். க்ளிங்கர் பையன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் அது கோல்தானா இல்லையா என்ற தீர்ப்பை விளக்கலாம்.

ஆனால் வாசுதேவன் போகவில்லை. மூன்று வாரங்களில் வேலையை மாற்றிக் கொண்டு கலிபோர்னியாவுக்கு போய்விட்டான்.

Picture courtesy:- http://i1.ytimg.com/vi/NeKATPh1Nrs/hqdefault.jpg