ஹைட்டியின் பூகம்பத்தில் பிழைத்தவன்

சரவணன் அபி

 

அவன்
வண்டியோட்டிக் கொண்டிருந்தான்

கனத்த குரல்
இடையறாத
உற்சாகக் குரலோசையிடையே
பரபரவென
காற்றில் அலையும்
கரங்கள்
முழுதும் பாதியுமாய்
வெண்சுண்ணம் பூசி
உயராது நிற்கும்
போர்ட் ஆ பிரின்ஸின் கட்டிடங்கள்
காட்டி
போக்குவரத்தின் நெரிசல் கண்டு
பதறி நான் அலறும்போது
சிரித்து காரை
நெறிப்படுத்தும்

இது எங்கள் தேவாலயம்
இதுதான் நாடாளுமன்றம்
இது என் தந்தை சிக்கிக் கிடந்த
சிறைச்சாலை
இது தான் என் தாய்
நிலம்விளை பொருள் விற்கும்
வாரச்சந்தை
நானும் என் தங்கையரும்
ஆடி மகிழ்ந்த பூங்கா
பாதியில் நின்ற பள்ளி
புன்சிரிப்பு வழியும்
கனத்த குரலில்
சொல்லிச்சென்றவனின்
கரம்தொடர்ந்து
பார்வை தொடர
எதுவும் இல்லை
எங்கும்

இடையில் விழுந்த
அமைதி உணராது
கூடைச்சுமை தாங்கித்திரியும்
ஆடவர் பெண்டிர்
கூட்டம் தவிர்த்து
நிலைச்சின்னம் இருமருங்கும்
தேடி
திரும்பிப் பார்த்தேன்
அவனை

கண்ணாடியின் முன்னால்
பதிந்திருந்த
அவன் பார்வையில்
இன்றுமில்லை
நாளையுமில்லை

விழித்து எழுந்தால்
ஆடியிருந்த
எந்தச்சின்னமும் இல்லை
கூடிமகிழ்ந்த
பள்ளி இல்லை பூங்கா இல்லை
சந்தை இல்லை வீடு இல்லை
ஆலயம் இல்லை சாலையும் இல்லை

பின்னிக் கிடந்த
எந்த
நினைவுகளும் இல்லை

திரும்பிக் கேட்டான்
கண்ணீர் வழிய
என் புன்னகை உறைய

துடைத்தெறியப்பட்டுவிட்ட
எங்கள் நினைவுச்சின்னங்கள்
சுவடின்றி மறைந்த  பாலியங்கள்
புரியுமோ என்னவோ
உங்களுக்கு
புரியுமோ என்னவோ

ஒளிப்பட உதவி – Radio Tginen

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.