ஒரு மரணச் செய்தி
காதுகளைத் தட்டும் போது
எந்த அசூசையுமின்றி
வானத்தை வெறித்திருப்பேன்
துயர் தரும் சூழலின் இயக்கத்திலிருந்து
என் இதயத்தை நான்
அப்படித்தான் துண்டிக்கிறேன்
ஒரு மரணச் செய்தியால்
நான் கலவரமடையும் போது
என் இதயம் இறந்துவிடக்கூடும்
ஒரு மரணச் செய்தியால்
நான் அச்சமடையும் போது
எனது புத்தகமொன்று
தாமதமாக வெளிவரக்கூடும்
நான் சூழலினால்
கைதுசெய்யப்படுவதை விரும்புவதில்லை
ஒரு திருமண அழைப்பிதழ்
வரும்போது
அழைப்பிதழை புத்தகமொன்றுக்குள்
மறைத்து வைத்து விட்டு மறந்துவிடுகிறேன்
திருமணத்துக்கு முன்னர்
அது என் கண்களில் பட்டுவிடக்கூடாது
என்று மௌனமாகப் பிரார்த்திக்கிறேன்
சிறிய நிகழ்வொன்று
என் பயணத்தை திசை திருப்புவதை
நான் தவிர்ந்து கொள்வது அப்படித்தான்
கடைசியில் என் கனவுப் பயணம்
எதற்கும் உபயோகமற்றது
என உங்களுக்குத் தெரிய வரும்போது
சோவியத்யூனியன் போல்
துண்டுகளாய்ச் சிதறிப் போகிறேன்
பின் கனவுச் சிறையிலிருந்து வெளியேறி
சூழலின் கைதியாகிறேன்-
“மனிதனின் விதியை கற்பனையால்
மாற்றிட முடிவதில்லை”
என விதிக்கப்பட்ட வாழ்வை
நோக்கிச் செல்கிறேன்