பூவன்னா சந்திரசேகர்
மறைந்து கொண்டிருக்கும்
இன்றைய தினத்தின் சூரியனிலிருந்து தான்
அடுப்புக்கு நெருப்பெடுத்து வருவார் அப்பா
சுள்ளிகளைக் கூட்டி
அம்மா வேகவைத்த மரவள்ளிக்கிழங்குகள்
தோலுஞ்சதையுமாய் அப்பாவின்
கட்டைவிரலைப் போலவே இருந்தது
வெந்தும் வேகாமலுமிருந்த அப்பாவின்
கட்டைவிரலை
நான்காய் பகுந்து தங்கைக்கொன்றும்
எனக்கொன்றும் தனக்கொன்றுமாய்
தின்னக்கொடுத்த அம்மா
அப்பாவுக்கான பங்கை மட்டும்
அவரின் புதைமேட்டில்
ஆழத்தோண்டிப் புதைத்துவிட்டாள்
முளைவிட்டச் செடியில் விளைந்திருந்தன
ஆயிரமாயிரம் அப்பாக்களின் கட்டைவிரல்கள்