Author: பதாகை

இருளில் புதையும் நிழல்கள்-  கார்த்திகைப் பாண்டியனின் ‘மர நிற பட்டாம்பூச்சிகள்’ தொகுப்பை முன்வைத்து – நரோபா

நரோபா

 

1981ஆம் ஆண்டு பிறந்த கார்த்திகைப் பாண்டியன் மதுரையில் வசித்து தற்போது கோவையில் தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருபவர். தற்கால உலக இலக்கியம் சார்ந்து தேர்ந்த வாசிப்புடையவர். 2015ஆம் ஆண்டு ‘எதிர்’ வெளியீடாக வெளிவந்த அவருடைய முதல் சிறுகதை தொகுப்பு ‘மரநிறப் பட்டாம்பூச்சிகள்’ பத்து கதைகளையும் லக்ஷ்மி சரவணகுமார் மற்றும் போகன் ஆகியோரின் இரு கட்டுரைகளையும் உள்ளடக்கியது. ‘வலசை’ இதழில் நேசமித்திரனோடு சேர்ந்து முக்கிய பங்காற்றியவர். எஸ்.ராவை தன் ஆதர்சமாக அறிவித்துக் கொண்டவர். தமிழ் சிறுபத்திரிக்கைச் சூழலில் தொடர்ந்து இயங்கி வருபவர். அண்மைய காலங்களில் அவருடைய மொழியாக்கங்கள் பெரிதும் கவனிக்கப்படுகின்றன. ‘நரகத்தில் ஒரு பருவகாலம்’ எனும் ஆர்தர் ரைம்போவின் கவிதைத் தொகுப்பை தமிழாக்கம் செய்திருக்கிறார். வெவ்வேறு மொழியாக்கங்களுடன் ஒப்பிட்டு மிகுந்த ஈடுபாட்டுடன் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதே நூலில் அவர் எழுதியிருக்கும் ரைம்போவின் வாழ்க்கைக் குறிப்பும் முக்கியமானது. இத்தொகுதிக்காக 2018ஆம் ஆண்டு ஆத்மாநாம் விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கதைகளை வாசித்து முடித்ததும் கார்ர்திகைப் பாண்டியனை என் அகத்திற்கு மிக நெருக்கமான படைப்பாளியாய் உணர்ந்தேன். கார்த்திகைப் பாண்டியனின் கதைமாந்தர்கள் மரணம் எனும் பிலத்தை நோக்கி இழுத்துச் செல்லப்படுபவர்கள், அதன் இருளைக் கண்டு திகைத்து நிற்பவர்கள், புலப்படும் இருட்பிலத்தின் வாயிலின் நின்றபடி வாழ்வின் பெறுமதியை எண்ணி மருள்பவர்கள், விசையறு பந்தினைப் போல் மரணம் நம் அண்மையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது, அது எந்நேரத்திலும் எவரையும் தீண்டக்கூடும் எனும் பிரக்ஞை உடையவர்கள்.

‘நிழலாட்டம்’ கதையில் கதைசொல்லியின் நான்கு நிழல்கள் பிரிந்து வெவ்வேறு அனுபவத்தை பேசுகின்றன. முதல் நிழல் மிகத் தீவிரமாக காமமும் மரணமும் தன்னை எப்படி அலைக்கழிக்கிறது என்று சொல்கிறது- ‘ஆக என்னுடைய மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது நான்தான்’ என்று முடித்த பின் எதிரில் அமர்ந்தவன் நிமிர்ந்து அமர்ந்து ‘ப்ளைன் நானா பட்டர் நானா என்ன சாப்புடுற?’ எனக் கேட்கிறான். இங்கே உன் துக்கங்களுக்கும், துயரங்களுக்கும் அலைக்கழிப்புகளுக்கும் யாதொரு மதிப்பும் இல்லை எனும் உண்மை குளிர்ந்து இறுக்குவதாக இருக்கிறது. கார்த்திகைப் பாண்டியன் புதிய காலத்தின் கதைசொல்லியாக தன்னை நிறுவிக்கொள்வது இத்தகைய தருணங்களின் வழியாகத்தான். போகன் கார்த்திகைப் பாண்டியனின் உள்ளம் ஐரோப்பியனுடையது எனச் சொல்கிறார். நவீன மனிதனின் பொருட்டின்மையை அப்பட்டமாக சூடிக்கொள்கிறார்கள் கார்த்திகைப் பாண்டியனின் மனிதர்கள்.

‘நிழலாட்டம்’ கதையில் சாலையோர காட்சிக்கு சாட்சியாய் நிற்கிறது இரண்டாம் நிழல். கார்த்திகை பாண்டியனின் கதைகளில் கையறு நிலையில் அல்லது செயலின்மையில் உறைந்து அல்லது தனது உறைநிலையை விட்டு மீண்டுவர விரும்பாத வெறும் சாட்சியாக இருப்பவனின் பார்வை பல்வேறு இடங்களில் மீள மீள வருகிறது. ‘நிழலாட்டம்’ மனிதனின் முரண்பட்ட சுயங்களின் பிரதிகளாகின்றன. நிழல்கள் இருளில் தம் இருப்பை கரைத்துக்கொள்பவை. அவ்விருள் அவற்றை காக்கவும் செய்யும். கண் முன் இரயிலில் தாவும் குழந்தையைக் காண்கிறான். ரயில் நிலையத்தில் கொப்புளங்களோடு கால் சூம்பிய பிச்சைக்காரனுக்கு காசு போட எண்ணுகிறான், ஆனால் சில்லறை இல்லை. அவனுடைய இரஞ்சுதலை பொருட்படுத்தாமல் காது கேளாதவனாக கடந்து செல்கிறான் (‘மரநிறப் பட்டாம்பூச்சி’). ரயிலில் இது என்ன இடம் எனக் கேட்கும் குருட்டு பிச்சைக்காரனுக்கு பதில் சொல்லலாமா என்று வாய் திறந்து பின் மவுனித்துவிடுகிறான் கதைசொல்லி. எவரும் பதில் சொல்லாதபோது பிச்சைக்காரன் வசைபாடுகிறான் அப்போதும் அதைக் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறான். சு.வேணுகோபாலின் ‘வேதாளம் ஒளிந்திருக்கும்’ கதையில் பேருந்து பயணத்தின்போது எழுந்து இடம் கொடுக்க கதைசொல்லிக்கு இருக்கும் தயக்கங்களை, பின்னர் கொடுக்காததன் குற்ற உணர்வை எழுதி இருப்பார்.

கார்ர்திகைப் பாண்டியனின் கதை மாந்தர்கள் சந்தர்ப்பவாதிகள். சத்தமில்லாமல் இன்னொரு வண்டியிலிருந்து வண்டி துடைக்கும் துணியை திணித்துக்கொண்டு வருகிறான் (‘கலைடாஸ்கோப் மனிதர்கள்’). மாலில் நின்று இப்படியான பெண்களை தன்னால் ஒருபோதும் புணர முடியாது எனும் உணர்வால் வதைக்கப்படுகிறான். ஆனால் இதே கதைசொல்லி முன்னிருக்கையில் பையை மேலே வைக்கத் தடுமாறும் பெண்ணுக்கு உதவச் செல்கிறான். அங்கே அவன் சன்னமான வாய்ப்பைக் காண்கிறான். குற்ற உணர்வையும் மீறி கீழ்மையில் உழல்கிறான். நோய்வாய்ப்பட்டுக் கிடக்கும் நண்பனின் தங்கையின் பெருத்த மார்பை அவன் கண்கள் தீண்டுகின்றன. பேருந்து பயணத்தில் சிறு பெண் பிள்ளையின் மார்புகள் சிற்றலையென ஏறித்’ தாழ்வதை காண்பதினால் குற்ற உணர்வு கொள்கிற அதேசமயம் காணாமலும் இருக்க முடியவில்லை. தன் செல்போனில் முழுமையாக சார்ஜ் இல்லாதபோதும்கூட பிறர் செவி சாய்க்காத அழகிய பெண்ணின் கோரிக்கைக்கு செவி சாய்த்து கண்ணியமான கனவான் போல விட்டுக்கொடுத்தபின் தத்தளிக்கிறான்.

‘கலைடாஸ்கோப் மனிதர்கள்’ கதையில் லிப்ட் கேட்கும் பெரியவரை வண்டியில் ஏற்றிக்கொண்டதும் கதைசொல்லி தனக்குள்ளாக சிந்திக்கிறான். “வண்டியை ஓட்டும்போதும் அவனுக்குள் அலையலையாக கேள்விகள் எழும்பிய வண்ணம் இருந்தன. நான் ஏன் இவருக்கு உதவுகிறேன், எத்தனை பேரிடம் இவர் கேட்டிருப்பார்.. அவர்கள் எல்லாம் மாட்டேன் எனச் சொல்லிவிட்டுப் போகையில் என்னால் ஏன் அது முடியவில்லை? ஏன் என்னைத் துரத்துகிறது? சரி, நான் இவருக்கு உதவுகிறேன், ஆனால் இவரைப் போலிருக்கும் அத்தனை பேருக்கும் உதவும் மனம் கொண்ட மனிதர்கள் இங்கே இருப்பார்களா?”

செயலுக்கு துணியாத அவன் உணர்வு நிலையில் பிணைந்து அவதி கொள்கிறான். ஒருவகையில் மத்திய வர்க்கத்து இருநிலையை பிரதிபலிக்கிறார், எனும் போகனின் பார்வை ஏற்புடையதாக இருக்கிறது. மனிதர்களுக்கு அனுசரணையாக இருக்க விழைவதும், சக மனிதர்களின் மீது முற்றிலும் நம்பிக்கையற்றுப் போனதும் இந்நூற்றாண்டின் மத்திய வர்க்கச் சிக்கல் மட்டுமல்ல. இவை நவீன தனிமனிதனின் மிக முக்கியமான இயல்புகளில் ஒன்று. அதுவும் வர்க்கங்களும், சாதிகளும் தெளிவாகப் புலப்படும் இந்தியா போன்ற தேசத்தில் தன் விழைவுகளை முழுவதுமாக பின்பற்றிச் செல்பவன் குற்றவுணர்வுக்கு உள்ளாகிறான். ஆனால், கார்த்திகைப் பாண்டியனின் கதைமாந்தர்கள் முழுக்க நவீன தனி மனிதர்களா என்றால் இல்லை. இன்னமும் ஒருகாலை மரபில் ஊன்றியவர்களாக இருக்கிறார்கள். ‘கன்னியாகுமரி’ கதையின் ராமநாதன் ஒரு உதாரணம். தயக்கத்தையும் குற்றவுணர்வையும் அவர்களால் முழுமையாக கைவிட இயலவில்லை.

பைத்தியக்காரி திரும்பத் திரும்ப துன்புறுத்தியும்கூட அவள் காலடிக்கே திரும்பத்திரும்ப வருகிறது நாய்க்குட்டி. நாய்க்குட்டியின் முடிவு பைத்தியக்காரிக்கும் பார்வையாளனுக்கும் ஒரேவித கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. நம் விருப்புக்கள் இட்டுச் செல்லும் அழிவை, முரட்டு பிரேமத்தின் பொருளின்மையை ஒரு குறியீடாக விரித்துகொள்ளத்தக்க பகுதி இது. கார்த்திகைப் பாண்டியனை அலைக்கழிக்கும் கேள்வியின் பிரதிநிதியாகவும் இதைக் கொள்ளலாம். இதெல்லாம் ஏன்? தன்னழிவை தேடி விரைவது ஏன்? இக்கேள்விகளுக்கு விடையில்லை. ஒருபோதும் அவை வசப்படப்போவதும் இல்லை. ஆனால் நம் வாழ்வைப் பற்றிய உறுதிப்பாடுகளை சற்றே அசைத்து காலுக்கு கீழே நிலம் நழுவுவதை உணர முடிகிறது. இலக்கியப் பிரதிகள் நமக்கு ஆசுவாசமளிக்கும் எந்த விடையையும் சொல்வதில்லை, அவை நெஞ்சுக் கரிப்பாக, இரவுகளில் உறங்கவிடாத நமைச்சலாக நம்மை தொந்தரவு செய்கின்றன.

‘அந்தர மீன்’ உளவியல் தளத்திலான காதல் கதை. சிறுகதையின் கனவுப் பகுதி ஃபிரான்சிஸ் கிருபாவின் கன்னியை நினைவுபடுத்தியது. எழுத்தாளர் வலுவாக வெளிப்படும் தருணங்கள் என கனவுப் பகுதிகளைச் சொல்வேன். கதையின் பேசுபொருள் வழமையானது, ஆனால் கார்த்திகைப் பாண்டியனின் மொழி மற்றும் கூறுமுறை இக்கதையை மனதிற்கு மிக நெருக்கமானதாக ஆக்குகிறது. தனக்கே தனக்கான நேசத்தைக் கண்டடைந்து அதில் திளைத்திட கனவு கண்டவள் நீரற்ற அந்தர வெளியில் துடித்துக் கொண்டிருக்கிறாள். அனோஜன், விஷால், சுரேஷ் பிரதீப் என கார்த்திகைப் பாண்டியனின் அடுத்த தலைமுறை எழுத்தாளர்களின் படைப்புகளில் விரவிக் கிடக்கும் ‘அன்பிற்கான ஏக்கம்’ என்பது நவீன வாழ்வின் வேகத்தின் மீதான மிரட்சியாக புத்தாயிரம் படைப்பாளிகள் பலரிடம் காணக் கிடைக்கிறது. இத்தொகுதியில் மிகுந்த பரிவுடன் எழுதப்பட்ட கதை என இதைச் சொல்வேன். கவுதம் தன்னுள் ஆழ்ந்தவனாக தன் மீது சொரியப்படும் அன்பை உணராதவனாக இருக்கிறான்.

‘மரநிறப் பட்டாம்பூச்சிகள்’ நான்கு பகுதிகள் கொண்டது. ‘எந்த முடுக்கிலும் வாழ்வின் அபத்தத்தை மனிதன் எதிர்கொள்ளக்கூடும்’ என பொருள்படும் காம்யுவின் இரு வரி ஆங்கில மேற்கோள் மட்டுமேயுள்ளது ஒரு பகுதி. அதற்கு அடுத்து வரும் மூன்று வெவ்வேறு துண்டு நிகழ்வுகளைக் கோர்த்து சிறுகதையாக்குவதும் இந்த மேற்கோளே. இரண்டாம் பகுதியில் அதுவரை நுழைந்திடாத உயர்தர மதுபான அரங்கிற்குள் நுழைபவன் தன்னை அந்நியனாக உணர்கிறான். சரியாகச் சொல்வதாக இருந்தால், வன ஓவியங்களில் இருந்து தப்பித்து இருக்கையின் நிறத்தில் தன்னைப் புதைத்து கொள்ளும் ‘மர நிறப் பட்டாம்பூச்சி’யாக தன்னை உணர்கிறான். போகன் தொகுப்பின் இறுதியில் எழுதியிருக்கும் கட்டுரையில் இந்த படிமத்தைக் கொண்டு அபத்தம் எப்படி ஒரு தரிசனமாக கார்த்திகைப் பாண்டியனின் கதைகளில் துலங்கி வருகிறது என்று சொல்கிறார். “பட்டாம்பூச்சிகள் பொதுவாக வண்ணம் மிகுந்தவை. கவனத்தை ஈர்க்கவே தங்கள் பொலியும் நிறங்களை அணிந்தவை. அவற்றின் வண்ணம் ஒரு விளம்பரம். ஆனால் மர நிறப் பட்டாம்பூச்சிகளின் பயன்மதிப்பு இங்கே என்ன? அவை வழக்கத்துக்கு மாறாக தங்கள் இருப்பை மறைக்கப் பார்க்கின்றன. இந்தக் கதைகளில் வரும் எல்லோருக்கும் அவர்களது இருப்பு ஒரு பிரச்சினையாக இருக்கிறது.” கலவிக்கு முன்பாகவே சோர்ந்து விடுகிறவனை தற்பால் உறவுக்கு அழைக்கும்போது தவிர்த்து விடுகிறான். பின்னர் அவன் சிக்கி அடிபடும்போது இவனை பழிதீர்க்கும் நோக்கில் சிரிக்கிறான். மரநிறப் பட்டாம்பூச்சியாக எதை மறைக்கிறான் என்றொரு கேள்வியை எழுப்பினால் கதை வேறு சில தளங்களை திறக்கக்கூடும்.

‘கன்னியாகுமரி’ இரு வேறு காலங்களில் நான்கு வெவ்வேறு நாட்களில் நிகழ்கிறது. நரேந்திரன் தன் தேடலைக் கண்டடைகிறான். கன்னி அன்னையென எழுகிறாள். அன்பைத் தவிர அவளிடம் கேட்பதற்கு வேறொன்றுமில்லை அவனுக்கு. அதே கன்னியாகுமரியில் நிகழ்காலத்தில் உயிருக்கு உயிராய் நேசித்த பதின்ம வயது மகளைத் தொலைத்த தந்தை விரக்தியில் தனியாக சுற்றி அலைகிறார். அனைவரும் இணையோடு வந்திருக்க தான் மட்டும் தனியனாக வந்திருந்தது அவரை அழுத்துகிறது. ஏறத்தாழ தொலைந்த மகளுடைய வயதையொத்த அல்லது அவளினும் இளமையான தனித்த கன்னிப் பெண்ணின் துணையை நாடுகிறார். கன்னிமையை போக்கும் கலவிக்கு பின் அவளுடைய பெயரை பகவதி என்று அறிகிறார். கடலுக்குள் குதித்த நரேந்திரன் கரையை அடைகிறான். கன்னியின் சுடர் தொலைவில் தெரிய அவன் தேவியின் மார்பென இருக்கும் பாறையில் கால்பதித்து முத்தமிட்டு மடியில் அமர்ந்து தன்னையிழக்கிறான், நடுத்தர வயதில் இருக்கும் ராமனாதனுக்கோ பகவதி அன்னையாகவில்லை. கடலில் குதித்தவன் ஏறிக் கால் பதிக்க அன்னையின் மார்பும் அவனுக்கில்லை. காமத்தின் இருநிலையை கதை சொல்வதாக புரிந்துகொள்கிறேன். காமம் உன்னதமாகும்போது கன்னி அன்னையாகிறாள். காமம் அப்பட்டமாகும்போது மகளும்கூட வெறும் கன்னியென நுகரப்படுகிறாள்.

‘சிலுவையின் ஏழு வார்த்தைகள்’ அதன் கட்டற்ற கற்பனை மற்றும் ஒழுங்கின்மை காரணமாக இத்தொகுதியில் எனக்கு பிடித்த கதையாகிறது. லத்தீன் அமெரிக்க சாயல் கொண்ட ஊகப் புனைவு. உன்னதமான சிலுவையின் சொற்கள் எல்லாம் தலைகீழாக்கப்படுகின்றன. மரித்தவர்கள் எல்லாம் எவனோ ஒரு மயிருக்காக நான் எதற்கு சாக வேண்டும் எனத் திருப்பிக்கேட்டு விழுமியங்களை கவிழ்க்கிறார்கள். தேவகுமாரன் தன்னைக் காட்டிக் கொடுத்தவனை பழி தீர்க்கிறான் அல்லது அதன் மூலம் மன்னிக்கிறான். கர்ணன் போரில் அர்ஜுனனைக் கொல்கிறான், தானும் மரித்து அவன் அன்னையை வதைக்கிறான். இக்கதை மையமற்ற காட்சிக் கோவை. அதன் இருட் சித்தரிப்புகள் காரணமாக வெகுவாக அலைகழிப்பவையும்கூட. இக்கதை அலெஹாந்த்ரோ ஹொடொரோவெஸ்கிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியின் மற்றொரு கதையான ‘Viva Le Muerte அல்லது இணைய மும்மூர்த்திகளும் இலக்கிய பஜனை மடங்களும்’ கதையில் அதன் இயக்குனர் அர்ரிபால் பற்றிய அடிக்குறிப்பு இருக்கிறது. இவர்கள் இருவரையும் இணைப்பது ‘பீதி இயக்கம்’ (Panic movement). இவ்வியக்கத்தைப் பற்றி அறிவது கார்த்திகைப் பாண்டியனின் கதைகளை மதிப்பிட மிக முக்கியமான சாதனமாகும். அதிர்ச்சியளிக்கும் பீதியை சித்தரிப்பதின் ஊடாக அமைதியை, அழகை, அடைய முனைவதை இவ்வியக்கம் லட்சியமாக கொண்டது. சர்ரியலிசத்தன்மை கொண்டது. அழகின், அமைதியின் பொது இலக்கணத்தை கேள்விக்குள்ளாக்கும் ஒருவிதமான அகோரித்தன்மை என்று புரிந்துகொண்டேன். கார்த்திகைப் பாண்டியனின் கதைகளில் வரும் சித்தரிப்புகள் அவசியத்தை மீறி அதிர்ச்சியளிப்பவை என்பதை ஓர் எதிர்மறை விமர்சனமாக முன்வைக்கும்போது இந்த பின்புலத்தை கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் இங்கு எழுத்தாளர் உத்தேசிப்பதே அதைத்தான். நவரசங்களில் ‘பீபத்சம்’, ‘பயம்’, ஆகியவையும் உள்ளதுதான்.

‘கலைடாஸ்கோப் மனிதர்கள்’ நொடிக்கு நொடி உருமாறும் மானுட நிலையை குறிக்கிறது, அல்லது எதன்மீதும் பெரும் பற்றற்ற ஆழமற்ற மிதவையாக மனிதன் இழுத்துச் செல்வதை உணர்த்துகிறது. ஏமாற்றப்பட்டதாக உணரும் மறுகணம் அவன் ஏமாற்றவும் செய்கிறான், ஒரு அழகிய பெண்ணைத் தொடர்கிறான், பின்னர் அப்படித் தன்னை ஈர்த்த பெண்ணின் நினைவுகளுக்குள் புதைகிறான். இயேசுவின் மீது ஈர்ப்பு என்ற காரணத்தினால் அவளை விட்டு விலகுகிறான். பசி மயக்கத்தில் இருக்கும் நபர் உதவி கேட்கும்போது முதலில் நம்ப மறுக்கிறான், பின்னர் ஏற்கிறான், அவரை வண்டியில் அழைத்துச் செல்லும்போதுகூட அவனுக்குள் எண்ணங்கள் நொடிக்குநொடி உருமாறிக்கொண்டே இருக்கின்றன. அவர் அவனை நீங்கிச் சென்றபின்னரும்கூட தனது பர்சைத் தொட்டுப் பார்க்கிறான். நவீன வாழ்வின் வழியாக மனிதன் வந்தடைந்திருக்கும் நம்பிக்கையின்மையை இக்கதை பேசுகிறது.

மனிதர்கள் சூழ ஒரு பெருநகரத்தில் இருந்தபோதும் செல்போன் அணைந்துவிட்டதும் யாருமில்லாத உணர்வை அடைவதை பேசத் துவங்குகிறது ‘தனி’. நவீன வாழ்வில் நாமுணரும் பதட்டத்தை இதுவரை நாம் ஏன் கதையாக்கவில்லை எனும் எண்ணம்தான் முதலில் தோன்றியது. ”அவனோடு வந்து கொண்டிருந்த நிழல்கள் இப்போது வெளிச்சத்தில் ஒவ்வொன்றாய் மறையத் தொடங்கியிருந்தன. இறுதி நிழலாய் அவளும் காணாமல் போனபோது பாதை முடிந்திருக்க மஞ்சள் ஒளி பொங்கிப் பிரவகித்த அத்துவான வெளியொன்றில் அவன் தனியாக நின்றிருந்தான்“ எனும் முடிவு ஏதோ ஒருவகையில் நிழலாட்டத்தின் நீட்சியாக அல்லது இதன் தொடர்ச்சி நிழலாட்டம் என்பதாக வாசிக்க இடமளிப்பதாக உள்ளது. யதார்த்த கதையாக துவங்கி மாயத்தன்மை கொண்ட முடிவை இக்கதை அடைகிறது.

‘பரமபதம்’ ஒருவகையில் பரமனின் பதம் எனும் மரணத்தை அடைவது, அல்லது வாய்ப்புக்களால் நிர்ணயிக்கப்படக்கூடிய, எப்போது வேண்டுமானாலும் எந்த உச்சியிலிருந்தும் பாதாளத்திற்கு இழுத்துவரும் ஆற்றல் மிக்க ஒரு விளையாட்டு. தற்செயல்களே தீர்ப்பெழுதுகின்றன. இத்தொகுதியில் தன்னிலையில் சொல்லப்படும் ஒரே கதை இதுதான். மரணத்தின் அணுக்கத்தை அனுபவமாக்க முயல்கிறது. இடையில் வரும் கனவுப் பகுதி ஜோம்பிக்கள் உள்ள வீடியோ கேம் போல சித்தரிக்கப்படுகிறது. மூத்த இலக்கியவாதி ஒருவர் தன் அன்னையின் மரணத்தை அண்மையில் தான் எதிர்கொண்ட விதத்தைக் கூறி காம்யுவை, மரணத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை நிராகரிக்கிறார். அப்போது கதைசொல்லி ஆவேசமாக எழுந்து “உங்களுடைய அம்மாவுக்குப் பதிலாக, ஒரு பேச்சுக்கு உங்களுடைய இரண்டு வயது பேரக்குழந்தை இறந்திருந்தாலும் நீங்கள் கொண்டாட்டமாகத்தான் இருப்பீர்களா?” எனக் கேட்கிறான். இந்தக் கேள்வியைத்தான் வெவ்வேறு வகைகளில் பல சிறுகதைகளில் கார்த்திகைப் பாண்டியனின் கதை மாந்தர்கள் எழுப்புகிறார்கள்.

‘இலக்கிய மும்மூர்த்திகள்’ கதை தமிழின் முக்கிய எழுத்தாளர்கள் மொழியில் உள்ள தேய்வழக்கை பகடி செய்கிறது என்கிற அளவில் ஒரு சோதனை முயற்சி என்பதற்கு அப்பால் பெரிதாக ஈர்க்கவில்லை. ஏனெனில் இலக்கிய வெளிக்குள் இத்தகைய மும்மூர்த்திகள் எனும் பீடங்கள் செல்லுபடியாவதும் இல்லை, அவை மெய்யும் இல்லை. சமூக ஊடகப் பார்வை என்றே நம்புகிறேன். ஆனால் இக்கதையில் ஒருவித ‘ஆட்டோஃபிக்ஷன்’ தன்மை உள்ளது. தன்னெழுச்சியாக தோன்றும் சொற்களை பின்தொடர்ந்து செல்லும் தன்மை இக்கதைக்கொரு கவனத்தை அளிக்கிறது.

எழுத்தாளர் எஸ்.ரா. ஒரு மேடையுரையில் இளம் எழுத்தாளர்கள் தங்கள் கதைகளில் செய்யும் பிழைகளைப் பற்றி சொன்னார். பெரும்பாலும் அனைவரும் பரத்தையர்களைப் பற்றியும், மரணத்தைப் பற்றியும் கதைகள் எழுதுவார்கள். அண்மைய காலங்களில் நான் வாசித்த பெரும்பாலான முதல் தொகுப்பு நூல்களில் ஒரு கதையேனும் ‘பரத்தையரை’ பாத்திரமாக கொண்டதாக இருக்கிறது. இக்கதைகளின் பொதுத்தன்மை என்பது, அவமானங்களை இறக்கி வைக்குமிடமாக பரத்தையருடனான உறவு வருகிறது. இத்தனை கதைகளுக்கு அப்பாலும் பரத்தையர் அகம் பன்முகம் கொண்டதாக, அறிய முடியா ஆழம் கொண்டதாக இருப்பதாலேயே மீண்டும் மீண்டும் கதைகளின் ஊடாக வரையறை செய்ய முயன்று கொண்டிருக்கிறோம் எனத் தோன்றுகிறது. கார்த்திகைப் பாண்டியனின் இந்தத் தொகுப்பிலும் ஒரு பரத்தையர் கதையுண்டு “பெருத்த மார்புகளுடைய ஆணின் கதை”. எறும்பு தானியத்தைச் சேமிப்பது போல் சிறுவயதிலிருந்து வரப்போகின்ற காதலிக்காக அன்பை சேமித்து வைத்திருந்தான். ஆனால் அவனுடைய பருத்த உடல் காரணமாக சேமித்து வைத்த அன்பு நஞ்சாகிறது. பெருத்த மார்புடையவனுக்கும் பால் சுரக்கும் மார்புடைய பரத்தைக்கும் மார்தான் சிக்கல். லதா ரஞ்சனி தொழிலுக்கு வருவதற்கு முன் குளிக்கும்போது மார்பில் கட்டியிருந்த பாலை வலியோடு வெளியேற்றிவிட்டு வருகிறாள். பெரும் வன்மத்தோடு அவளுடைய வருகைக்காக காத்திருக்கிறான். பிள்ளையை இழந்த அவள் அவனையே தன் குழந்தையாக கண்டுகொள்கிறாள். மார்போடு அணைத்து உயிரனைத்தையும் அளிக்கச் சித்தமாய் இருக்கிறாள். அவளுடைய பரவசம் அவனை மூர்க்கம் கொள்ளச் செய்கிறது. அவன் தன்னை மீறி தன் வெறுப்பை அவள் மீது கடத்துகிறான். தேவிபாரதியின் ‘பலி’ கதையோடு சேர்த்து வாசிக்கத்தக்கது. ஆனால் ‘பலி’ அளிக்கும் உணர்வு நிலை மற்றும் நம்பகத்தன்மை இக்கதையில் இல்லை. ‘பலி’ கதையில் சாதி அடக்குமுறையை பழிதீர்க்க முயல்கிறான். புறக்கணிப்பின் காரணமாக எழுந்த பெண்களின் மீதான வன்மத்தை பழிதீர்க்க இக்கதை நாயகன் திருக்குமரன் முயல்கிறான். ‘பலி’ கதையில் தனிப்பட்ட வஞ்சமும் தொடர்பும் ஒரு சரடை அளிக்கிறது. இக்கதையில் வாடிக்கையாளருக்கு முன் அன்னையென எழுவது போதிய வலுவுடன் உருவாகவில்லை எனும் எண்ணமே ஏற்பட்டது.

கார்த்திகைப் பாண்டியனின் மொழி வெகுவாக வசீகரிக்கிறது. சாதாரண பேசுபொருள் கொண்ட கதைகளும்கூட அதன் மொழியால் மிக நல்ல வாசிப்பின்பத்தை அளிக்கிறது. “இவர்களைக் காட்டிலும் பெரிதாய் வளர்ந்திட்ட நிழல்கள் இவர்களுக்கும் முன்பாக நடந்து போயின” (‘அந்தர மீன்’). “சீரற்ற வகையில் பொருட்களை இட்டு நிரப்பிய சாக்குப்பையினைப் போல அங்கங்கே பிதுங்கி நிற்கும் பருத்த உடல்.” (‘பெருத்த மார்பு…’) “சிதறிய பாதரசத் துளிகளென வண்டியிலிருந்து உதிர்ந்த மனிதர்களோடு தானும் இறங்கியவன்” (‘மரநிறப்..’) “சிவனின் சடையிலிருந்து சீறிப் புறப்படும் பாம்புகளென அவ்வறையின் கூரை முழுதும் வியாபித்திருந்த சாண்டிலியர் விளக்கின் விழுதுகள் இவனை மிரளச் செய்தன.” (‘மரநிறப்..’). மொழியில் சில சிக்கல்கள் இல்லாமலும் இல்லை. தேவதை, குட்டி தேவதை போன்ற தேய்வழக்கான பயன்பாடுகளைத் தவிர்க்கலாம். ஓரிடத்தில் தவளையின் உட்பாதமென பச்சை நிறத்தில் என்று எழுதும்போது நெருடலாக இருக்கிறது. கார்ட்டூன் தவளைகள் என்று வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம்.

கார்த்திகைப் பாண்டியனின் கதைகள் ரயில் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும் அதிகமும் நிகழ்கின்றன. இதையும்கூட ‘இருளில் மறையும் நிழல்கள்’, ‘மர நிறப் பட்டாம்பூச்சி’ ஆகிய அவருடைய படிமங்களோடு சேர்த்து புரிந்து கொள்ளலாம். அவருடைய கதைமனிதர்கள் கும்பலுக்குள் ஒளியும் தனி மனிதர்களாகவே இருக்கிறார்கள்.

கார்த்திகைப் பாண்டியன் தன் கதைகளில் வலிந்து குரூரங்களை, மரணங்களை சித்தரிக்கிறாரா? பைத்தியக்காரி நாயை எத்தி விடுகிறாள், பைத்தியக்காரன் நண்பனின் தந்தையின் மீது கல்லைப் போட்டு கொல்கிறான். வாழ்வின் நிச்சயமின்மையை இவைச் சித்தரிக்கின்றன. ‘சிலுவையின் ஏழு வார்த்தைகள்’ கதையில் குழந்தை பிராயிலர் கோழியாக வெந்நீரில் கொதிக்கிறது. பெருத்த மார்புடையவனின் கதையில் தன் குழந்தை ஒரு பருந்தாக மாறுவதைக் கனவு காண்கிறாள். ”உடல் முழுதாய் மண்ணில் புதைந்திருக்க எண்ணற்ற கேள்விகளைத் தன்னுள் தேக்கியவாறு இறந்து போயிருந்த குழந்தையின் பிதுங்கிய பழுப்பு நிறக் கண்கள் வானத்தை வெறித்தன.” (‘சிலுவையின்…’). ‘பரமபதம்’ கதையில் ரயிலில் அறுபட்டு இறுதி மூச்சில் இருப்பவளின் துண்டிக்கப்பட்ட கையைத் தூக்கிக்கொண்டு வருகிறது ஒரு நாய்.

போகன் சங்கரின் ‘கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்’ தொகுப்பு வாசித்தபோது ஒரு கேள்வி எழுந்தது. குழந்தைகளின் மரணத்தை மீள மீள பல்வேறு கதைகளில் அவரும் எழுதியிருந்தார். பெரும் தொந்தரவாக மனதை அலைக்கழித்தது. மனித மனத்தின் மிக பலவீனமான பகுதிகளில் ஒன்றின் மீதான தொடர் மோதல் வழியாக தன் புனைவை நிறுவிக்கொள்ளும் உத்தியோ எனும் ஐயம் ஏற்பட்டது. ஒரு மனப் பதட்டம் கலையாக முடியுமா? எதையும் தீவிரமாக, நேர்மையாக, முனைப்போடு உருவாக்கும்போது அதை கலையாக்க முடியும். ஏதோ ஒருவகையில் நவீனத்துவ படைப்புகள் மனச் சமநிலைக் குலைவின் வெளிப்பாடாகவும் இருக்கின்றன. போகன் பதட்டத்தை இழுத்து ஆன்மீக நிலைக்கு கொண்டு செல்ல முயல்கிறார். கார்த்திகைப் பாண்டியன் கதைகளுக்கும் போகனின் கதைகளுக்கும் உள்ள நுட்பமான வேறுபாடு என்பது கார்த்திகைப் பாண்டியன் வாழ்வின் அபத்தத்தை ஆன்மீகத் தளத்திற்குள் கொணராமல், அதை அப்பட்டமாக எதிர்கொள்ள முயல்கிறார். நெஞ்சில் வேல் குத்திக் கிழித்ததன் அரற்றுதலை கேட்க முடிகிறது.

அபத்தம் ஒரு தரிசனமாக உருவானதன் பின்னணியில் இரண்டாம் உலகப் போர் உள்ளது. இத்தனை அறிவியலும், தொழில்நுட்பமும் மானுட மீட்சிக்கு என நம்பிக்கொண்டிருந்தபோது நிகழ்ந்த பேரழிவு வாழ்வின் பொருள் குறித்த கற்பிதங்களை பொசுக்கியது. வாழ்வின் பொருளின்மையை இலக்கியம் போர் வழியாகவும் குழந்தைகளின் மரணங்கள் வழியாகவும் தான் மீண்டும் மீண்டும் சித்தரித்திருக்கிறது. கரம்சேவ் சகோதரர்களின் இல்யுஷா சட்டென நினைவுக்கு வருகிறான். இந்தப் பின்புலங்களில் கார்த்திகைப் பாண்டியனின் கதைகளில் நிகழும் மரணங்களை,வாழ்வின் பொருளின்மையின் மீதான கேள்விகளாக காண முடியும். ‘நிழலாட்டம்’  கதையில் சொல்வது போல் ‘காமமும் மரணமும்’ தான் கதைகளின் தலையாய பேசு பொருள்கள். புனத்தில் இக்காவின் ‘கன்யா வனங்கள்’ நாவலுக்கான முன்னுரையில் ‘காமமும் காலமும்தான் மனிதர்களை அலைக்கழிக்கும் இரு பெரு விசைகள்’ என்பதாக ஒரு வரி வரும். இத்துடன் சேர்த்து ‘பீதி இயக்கம்’ மீதான அவருடைய ஆர்வம் மற்றும் காட்சி ஊடகத்தின் தாக்கம் ஆகியவற்றைச் சேர்த்து மதிப்பிட வேண்டும்.

நல்ல இலக்கியத்திற்கு எனது பிரத்தியேக இலக்கணம் என்பது ஏதோ ஒருவகையில் படைப்பு நிலையைத் தூண்டுவதாகவும் இருக்க வேண்டும் என்பதே. என் வாசிப்பின் எல்லையில், அண்மைய கால எழுத்துக்களில், பாலசுப்பிரமணியம் பொன்ராஜுக்குப் பிறகு கார்த்திகைப் பாண்டியனிடம் அத்தகையத் தன்மையை கண்டுகொள்கிறேன். ‘மரநிறப் பட்டாம்பூச்சி’ வழியாக தமிழுக்கு ஒரு முக்கியமான படைப்பாளி அறிமுகம் ஆகியுள்ளார்.

 

 

இங்குப் பேனா – பிரவின் குமார் சிறுகதை

பிரவின் குமார்

அந்த கடையை நெருங்கும் நேரம் மட்டும் படபடப்பும், அவசரமும் எப்படியோ உடலுக்குள் ஒட்டிக்கொள்கிறது. அத்திசை மட்டும் வேண்டாம்… கிடைக்காத ஏதோ ஒன்றை ரோட்டில் தேடிக்கொண்டு நடந்து போ…. இன்னும் கொஞ்ச தொலைவு நடந்தால் வீட்டிற்கு திரும்பும் சந்து… அதுவரை நிமிராதே… இப்பொழுது மட்டுமல்ல பனிரெண்டு வருடங்களாக மனதின் சொல்படி இணங்க மறுத்து காந்தலின் விசை ஈர்ப்பு போல் அந்த கடையின் பக்கம் திரும்புவதில் தான் ஒரு லயிப்பு உண்டாகிறது.

எனக்கு தெரியும் நான் வரும் நேரங்களில் சட்டையின் கை மடிப்பை உயர்த்திக்கொண்டும், எப்பொழுதும் அலங்கரிக்கப்பட்ட தலையை விறுவிறுப்பாக அலங்கரித்துக்கொண்டும் கடையின் வாசலில் வந்து நிற்கும் ஐசக் இப்போது இல்லை என்று. அன்னை மரியா சலூன் கடை கொஞ்ச வருடங்களாக காயத்ரி மளிகை கடையாக மாறிவிட்டிருந்தது. பல பொழுது அந்த மளிகை கடையில் பொருட்கள் வாங்கவேண்டிய தேவை இருந்தும் கூட அந்த கடைக்கு இதுவரை நான் சென்றதில்லை. நெற்றியை சொரிந்துகொண்டு நிற்கும் ஐசக்கின் முகத்தை அந்த கடையில் ஏதோ ஒரு மூலையில் தேடவேண்டி இருக்குமோ என்னும் பயம்.

வீட்டிற்கு திரும்பும் தெருவை வந்தடைந்ததும் அருகில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் என் மகளுக்காக ஹக்கீசும் எனக்காக நாப்கினும் வாங்கிக்கொண்டேன் நாப்கினுக்கு மட்டும் ஸ்பெஷலாக செய்தி தாள்களை அணிவித்து கொடுத்தார்கள். பள்ளி முடிந்து வீட்டிற்கு விரையும் மாணவர்களின் நடமாட்டம் அத்தெருவை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது. நானும் என் ஆசிரியர் பணியை முடித்து தான் வீட்டிற்கு விரைந்துகொண்டிருக்கிறேன்.

ஐசக்கின் தங்கை எதிரில் வந்துகொண்டிருந்தாள் அவன் நிலை குறித்து அவளிடம் விசாரிக்க நினைக்கும் நேரத்தில் பாலத்தீன் கவரில் ஊசலாடிக்கொண்டிருந்த ஹக்கீஸ் கவரும், என் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த தாலியும் எனக்கு நினைவூட்டியது நான் தாயும், மனைவியும் ஆனவள். பாதங்களை முன்வைத்தும் மனதை பின்வைத்தும் நடந்து சென்றேன். எதிரில் வந்தவளின் முகத்தை பார்க்காமல் மீண்டும் தரையில் ஏதோ ஒன்றை தேட நேர்ந்தது.

வீட்டு வாசலை நெருங்கும் முன்பே குழந்தையின் விசும்பல். என் அம்மாவின் இடுப்பில் இருந்து என் இடுப்பிற்கு தாவியவளின் கால்கள் பட்டாம்பூச்சி சிறகாய் அடித்துகொண்டது. “அம்மா வந்துட்டேன்டா செல்லம் வீட்டுக்கு லேட்ஹா வரேன்னு கோவமா அம்மா மேல” தினசரி நான் உபயோகிக்கும் சொற்கள் ஐஸ்வர்யா மெர்லினுக்கு மட்டும் எப்படி சிரிப்பை கொடுக்கின்றதோ… புடவையில் இருந்து நைடிக்கு மாறியதும் ஐஸ்வர்யாவை தூக்கிக்கொண்டு மாடிக்கு சென்றேன். மாடியில் நின்றுகொன்று ஐசக்கின் வீட்டை சுட்டிக்காட்டி அவளோடு உரையாடிகொண்டிருந்தேன்.

விடைத்தாள்களை திருத்த வேண்டிய வேலை அதிகம் இருந்தது மாணவர்களின் தெளிவான கையெழுத்தின் உதவியோடு சில விடைத்தாள்களை வேகமாவும் பொறுமையாகவும் திருத்திக்கொண்டிருந்தேன். திடிரென்று ஐஸ்வர்யா மெர்லின் சிணுங்கிக்கொண்டு அழ ஆரம்பித்தாள் அவளை தட்டிகொடுத்துக்கொண்டே மடியில் வைத்து பாலூட்டினேன். நெஞ்சில் இருந்த பாரம் இறங்கியது போல் இருந்தது ஆனால் அவன் நினைவுகளின் பாரத்தை எப்படி இறக்குவது…? அவன் நினைவுகளை சிதைக்க நினைக்கும் பல வருட போராட்டத்தில் அவனே தான் கடைசியில் வெற்றி காண்கிறான். இப்பொழுதும் கூட மடியில் குழந்தையை வைத்துக்கொண்டும் நெஞ்சில் அவனை வைத்துக்கொண்டும் தவித்துகொண்டிருக்கிறேன். அன்று ஐசக் சொல்லிய வார்த்தை “அவ்ளோ சீக்கிரம் என்னைய மறந்துட முடியாது செலஸ்டினா” அந்த வார்த்தைகள் தான் ஒவ்வொரு இரவும் அவன் காதலை நிரூபித்துக்கொண்டிருக்கிறது. எவ்வளவு சுலபமாக சொல்லிவிட்டான்.

ஐஸ்வர்யா மெர்லின் இப்பொழுது தூங்கிவிட்டாள் அவளை மார்பின் மேல் கிடத்திக்கொண்டு படுக்கையின் மீது மெல்ல சாய்ந்தேன். எப்பொழுதும் போல் அவளிடம் என் கதையை சொல்லும் வழக்கத்தை மீண்டும் கையில் எடுத்தேன். “ஐஸு இன்னைக்கு என்ன நாள்னு தெரியுமா…? அந்த ஐசக் பய இந்த நாள்ல தான் அவனோட காதல என்கிட்ட சொன்னான்”
ப்ளஸ் டூ தேர்வுகள் நெருங்கிக்கொண்டிருந்த சமயம் அது சிறப்பு வகுப்பை முடித்துக்கொண்டு நான் பள்ளியிலிருந்து வந்துகொண்டிருந்தேன். எப்பொழுதும் போல் சலூன் கடை வாசலிலே எனக்காக காத்திருக்கும் அவன் நான் வரும் நேரங்களில் மட்டும் கடைக்கு எந்த ஒரு கஸ்டமரும் வந்துவிட கூடாது என்பதை மனதுக்குள் ஜெபித்துகொண்டிருப்பான்.. தன் காதலை சொல்ல நினைத்து தவறவிட்டு போன நாட்கள் எத்தனை என்பது அவன் ஒருவனுக்கே தெரியும். அன்று அவனுடைய நாளாக அமைந்துவிட்டது. ஐசக் என்னை பின்தொடரும் நேரங்களில் சிறு நடுக்கங்கள் ஏற்பட்டாலும் உதட்டிலிருந்து வெட்கச்சிரிப்பு எப்படியோ முளைத்துவிடுகிறது.

“செலஸ்டினா நில்லு” பலபொழுது என் பின்னே தொடர்ந்துகொண்டிருப்பானே ஒழிய என் பெயரை சொல்லி இதுவரை உறக்க கூப்பிட்டது கிடையாது. மெதுவாக திரும்பினேன் ரிப்பன் கட்டிய சிறிய பெட்டியை பேண்ட் பாக்கெட்டிற்குள் இருந்து எடுத்து என்னிடம் நீட்டினான். “என் தங்கச்சியும் உன்கிட்ட பல தடவ சொல்லிட்டா ஆனா நீ தான் இன்னும் எதுவுமே சொல்ல மாட்டேங்குற” அதை வாங்க மறுத்து அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். “சரி இத புடி செலஸ்டினா” “எதுக்கு ஐசக்” அவன் கை விரல்கள் அவன் சிகையையே கோதிக்கொண்டிருந்தது. தரையை பார்த்துக்கொண்டே தொடர்ந்தான் “இல்ல எனக்கு பயமா இருக்கு இப்போ பிளஸ் டூ முடிச்சதுக்கு அப்புறம் நீ காலேஜ்க்கு போய்டுவ, நானும் உன்ன லவ் பண்ணுறேன்னு நிறைய பேரு உன் பின்னாடி சுத்துவான்க நான் இப்போவே சொல்லிடுறேனே… எனக்கு உன்ன புடிச்சு இருக்கு செலஸ்டினா” ஒரு ஆணின் தயக்கத்தையும், வெட்கத்தையும் ஐசக்கின் உடல் நெளிவுகளில் முதல் தடவையாக ரசிக்க நேர்ந்தது. அப்பொழுது ஐசக் அழகாக இருந்தான். தாடியை சொறிந்துகொண்டு என் பதிலுக்காக காத்திருந்தான். அவன் கொடுத்த பரிசை வாங்கிக்கொண்டு லேசாக சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்தேன்.

சீருடையை கூட கழற்றாமல் ஐசக் கொடுத்த பரிசை பிரித்துப் பார்த்தேன். சிவப்பு நிறத்திலான பேப்பரில் சுற்றப்பட்டு இருந்த சிறிய பெட்டியில் கருப்பு நிற இங்குப் பேனா ஒன்றை வைத்திருந்தான். உடனே எழுதி பார்க்க வேண்டும்போல் தோன்றியது எனது குறிப்பேட்டின் கடைசி பக்கத்தில் எழுதுவதற்கு தயாராய் அப்பேனா என் விரல்களின் பிடியில் நின்றுகொண்டிருந்தது. என்ன எழுதுவது…? ஐசக்கின் பெயரை எழுதி பார்க்கவே எத்தனித்தேன் ஐசக்… உடலின் ரோமங்களின் மேல் ஊர்ந்து செல்கிறானோ… ஒவ்வொன்றும் தலை தூக்கியது. அவன் பெயருக்கு கீழ் என்னுடைய பெயரையும் எழுதினேன் செலஸ்டினா… இருவரின் பெயரையும் ஒரு ஆர்ட்டின் வடிவத்திற்குள் அடைத்தேன்.

காலையில் வேலைக்கு கிளம்ப இருக்கையில் ஐசுவின் அப்பாவிடம் இருந்து போன் வந்தது. அடுத்த வாரம் ஈஸ்டர் தினத்தன்று கிளம்பி வர இருப்பதாக சொன்னார். ஐஸ்வர்யா மெர்லின் பிறந்தபோது அவள் நெற்றியில் இதழ் பதித்து அன்றிரவே வெளிநாட்டிற்கு விமானம் ஏறியவர் அவளின் முதல் பிறந்தநாள் அன்று கூட வீடு திரும்பவில்லை. தோன்றும் நேரங்களில் தொடு திரையில் ஐஸ்வர்யா மெர்லின் முகத்தை பார்த்துக்கொண்டு இருந்தாலும் இருவருக்கான ஸ்பரிசம் பல மைல்களுக்கு இடையில் நின்று கையசைத்துக்கொண்டிருந்தது. வங்கிக்கு கட்டவேண்டிய வீட்டு கடன் பணத்தை என் கணக்கிற்கு பரிமாற்றம் செய்திருப்பதாக சொல்லி அழைப்பை துண்டித்தார்.

வாழையடி வாழையாக கடன் சுமையும் துரத்திக்கொண்டு தான் இருக்கிறது. ஐசக்கின் அம்மாவை விட்டால் கடன் வாங்குவதற்கு சுற்று வட்டாரத்தில் வேறு ஆட்களும் இல்லை. அன்றிரவு ஐசக் என் வீட்டிற்கு வந்திருந்தான். எப்பொழுதும் வட்டி பணத்தை வசூலிக்க அவன் வருவது தான் வாடிக்கை. அவன் அம்மாவின் வசை சொற்கள் எங்கள் வீட்டு வீதியில் தாண்டவமாடுவதை அவன் விரும்புவதில்லை. என் பெற்றோர்கள் வேண்டுவதும் கூட அது தான். அவன் ஒருவனே என் குடும்பத்தின் நிலை அறிந்தவன். எப்போதும் போல் அப்பா வாஞ்சையாகவே அவனிடம் “ரெண்டு வாரமா வேல இல்லாம வீட்ல தான் இருக்கேன் தம்பி இன்னும் எந்த ஒரு காண்டிராக்டும் வரல அடுத்த வாரம் கொடுத்திடுறேனு அம்மா கிட்ட சொல்லிடுறியா…?” அவன் எதிர்பார்க்கும் பதிலை கொடுக்க என் அப்பா எப்போதும் தவறியது இல்லை. “சரிங்கனா பொறுமையாவே கொடுங்க நான் அம்மா கிட்ட சொல்லிடுறேன்” சிரித்த முகத்துடன் அங்கிருந்து நகர்ந்தான். அந்த முகத்தை நினைத்துக்கொண்டே வேலைக்கு சென்றேன்.

பள்ளியில் சந்திப்பதற்கு முன்பே தெருவில் பார்க்கும் மாணவர்கள் “குட்மார்னிங் மிஸ்” என்று என் மீதான மதிப்பை வெளிபடுத்தினார்கள். அன்னை மரியாள் தேவாலயத்து ஊழியர்கள் சென்ற வருடம் குருத்தோலை ஞாயிறில் வைத்து வழிபட்ட ஓலையை சாம்பல் புதன் தினத்தில் வைத்து எரிப்பதற்காக ஒவ்வொரு வீடாக சென்று சேகரித்துக்கொண்டிருந்தனர். அதில் நன்கு பரிட்சயமான ஒரு ஊழியர் என்னை பார்த்ததும் நெருங்கினார்.

“செலஸ்டினா டீச்சர் உங்க வீட்லியும் போன வருஷம் குருத்தோலை இருக்குல”

“இல்லீங்க பிரதர் நான் கொஞ்ச வருஷமா எதிலும் கலந்துகுறது இல்ல”

“ஓ.. சரி ஈஸ்டர் அப்போவாவது சர்ச்சுக்கு வந்துட்டு போங்க…”

பள்ளியை நோக்கி விரைய துடங்குகையில் மீண்டும் ஐசக் மனதிற்குள் தடம் பதித்து உலாவினான். சாம்பல் புதன், புனித வெள்ளி, ஈஸ்டர் தினம், சிலுவை பாதை என்று பாதரிகளின் கட்டளைப்படி அனைத்து வேலைகளையும் முன்னமே செய்துமுடிப்பான். அன்றைய குருத்தோலை ஞாயிறிலும் கூட அதற்கான வேளையில் இயங்கிக்கொண்டிருந்தான் ஐசக்.

ஓலையில் சிலுவையை வடிமைத்து கொடுப்பதில் ஐசக் கைதேர்ந்தவன் அவனை சுற்றி சிறுசுகள் ஓலையை கையில் வைத்துக்கொண்டு “எனக்கு அண்ணா.. எனக்கு அண்ணா…” என்று அவனிடம் மன்றாடிகொண்டிருந்தார்கள். சிலுவையை வடிவமைக்க தெரியாமல் வெற்று ஓலையை வைத்துக்கொண்டு நான் அதனுடன் போராடிகொண்டிருந்ததை ஐசக் கவனித்தும்விட்டான். ஐசக்கின் மனம் என் கையில் இருக்கும் ஓலை அவன் கரங்களில் தஞ்சம் அடையவே காத்துக்கொண்டிருந்தது. சட்டென்று ஐசக்கின் தங்கை என்னிடம் இருந்த ஓலையை பிடுங்கிக்கொண்டு அவனிடம் விரைந்தாள் “இந்தானா இது செலஸ்டினா அக்காது அவங்களுக்கும் சிலுவ செஞ்சு கொடு” அவனிடம் கொடுத்துவிட்டு வரிசையில் நிற்க சென்றுவிட்டாள். உதடுகள் விரிய ஐசக் அந்த ஓலையை சிலுவையின் வடிவில் அவன் இதயத்தை உருமாற்றிகொண்டிருந்தான்.

ஓசான்னா பாடல் ஒலிக்க மரியாள் தேவாலயத்தை நோக்கி பாதிரிகள் எங்களை வழிநடத்தி சென்றார்கள். என் பின்னே ஐசக்கும் அவனது நண்பர்களும் சலசலத்தபடி இருந்தனர். நீண்ட நேரமாக மெல்லிய குரலில் ஐசக் என்னை அழைத்துகொண்டிருந்தான் என்னவென்று திரும்பி பார்க்கவோ, அவனுக்கு மருமொழியவோ அப்போதைய சூழலில் என் மனம் தைரியம் கொள்ளவில்லை. தேவாலயத்தை நெருங்கும் வரையிலும் அவனது முயற்சிகள் தோற்றுக்கொண்டிருந்தது. குருத்தோலை பவனி முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் தேவயாலத்தின் பின்புறம் அமைந்த சூசையப்பர் சிலை அருகே ஐசக் எனக்காக காத்திருப்பதை அவன் தங்கை என்னிடம் வந்து சொல்லிவிட்டு சென்றாள். அவன் மீதான கோபமே என்னை அவனிடம் கொண்டு சேர்த்தது.

“ஏன் ஐசக் ஊர்வலம் அப்போ அப்படி நடந்துக்குற… என்ன அவசரம் உனக்கு…?”

தன் சிகையை கோதிக்கொண்டே “ஸாரி செலஸ்டினா… இன்னைக்கு நான் தான் வட்டி காசு வாங்க போவேன்னு அம்மா அடம் புடிக்குது இன்னைக்கு நைட் நான் வர மாட்டேன். அதான் முன்னாடியே சொல்லிடலாம்னு உன்ன கூப்டேன்”. அவனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தேன். தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால் அரசியல் உருவங்களை சுவற்றில் வரைந்து காட்சியளிக்க அப்பா ஊரெங்கும் சுற்றிக்கொண்டிருந்தார். அப்படி கிடைக்கும் பணத்தில் அவரின் குடிக்கு போக துளியாய் விழும் சில்லறைகளில் தான் எனக்கும் அம்மாவுக்குமான வாழ்கை நகர்ந்துகொண்டிருந்தது.

சற்றும் எதிர் பார்க்காத நேரத்தில் அப்பா கொடுக்க வேண்டிய வட்டி பணத்தை ஐசக் என் கையில் திணித்தான். “அம்மா வந்து நைட்டு கேட்டா இந்த பணத்த கொடுத்துடு செலஸ்டினா” நான் வேண்டாம் என்று எவ்வளவு தடுத்தும் அவன் விடுவதாக இல்லை இம்முறை மட்டும் வாங்கிகொள்ளும்படி கட்டாயப்படுத்தினான். அதற்க்கு பிறகான வட்டி பணம் முழுவதும் அவன் மூலமாக தான் கட்ட நேர்ந்தது. கடைசியாக நான் ஊர்வலத்தில் வைத்து வழிபட்ட குருத்தோலையை என் ஞாபகமாக வைத்து கொள்வதாக சொல்லி என்னிடம் இருந்து வாங்கி சென்றான். நிச்சயம் அந்த குருத்தோலை உயிர்ப்புடன் இப்பொழுதும் அவனிடம் இருக்கும்.

மதியஉணவு இடைவேளையின் போது என்னுடன் பணிபுரியும் சக ஆசிரியை ஒருவர் பிறந்தநாள் என்று அனைவருக்கும் இனிப்பை பகிர்ந்துகொண்டிருந்தார். கலகலப்பான பேச்சுகளோடும் சிரிப்புகளோடும் ஆசிரியர்கள் அவரை வாழ்த்தி கொண்டிருந்தார்கள். என் ஒருத்தியால் மட்டும் ஆர்வமின்றி அதிலிருந்து விலகி செல்ல மனது முனைந்தது. வெளியே வந்து பால்கனி வழியாக செம்மண் போர்த்திய மைதானத்தை வெறித்து பார்த்தேன். இதே மைதானத்தில், இதே பள்ளியில் என் பிறந்தநாளையும், நான் தேர்ச்சி பெற்றதையும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இனிப்பு கொடுத்து ஐசக் என்னை கொண்டாடி இருக்கிறான். வேலைக்காக எக்ஸ்போர்ட் கம்பெனி வாசலை மிதிக்க இருந்த என்னை படிப்பிற்காக கல்லூரி வாசலை மிதிக்க வைத்தான். என் பெயருக்கு பின்னால் இருக்கும் B.A. B.Ed., என்னும் பட்டம் அவன் உழைப்பினால் ஆனது, கை நீட்டி வாங்கும் சம்பளங்களில் கூட அவனது முகம் தான் பிரதிபலிக்கிறது. எத்தனையோ முறை என் கைசெலவிற்க்கும் வீட்டு செலவிற்கும் பணம் கொடுத்து உதவி இருக்கிறான் என் சம்பள பணத்தை அவனது சட்டை பாக்கெட்டில் திணித்து உரிமை கொண்டாட நினைத்த சந்தர்ப்பம் இதுவரை நிறைவேறாமலே போய்விட்டது.

ஐஸ்வர்யா மெர்லின் பிறந்தநாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது ஐஸ்வர்யா அப்பாவும் இன்று இரவு வந்துவிடுவதாக செய்தி அனுப்பினார் முதல் வருட பிறந்தநாளை விட இந்த வருட பிறந்தநாளை விமர்சையாக கொண்டாட ஐஸ்வர்யாவின் அப்பா எண்ணி இருக்கிறார். வேலைகள் பல வரிசையில் காத்துக்கொண்டிருந்தது தலைமை ஆசிரியரிடம் இரண்டு நாட்களுக்கு விடுமுறை சொல்லிவிட்டு பள்ளியை விட்டு வெளியே வந்துகொண்டிருந்தேன்.

ரோட்டோரத்தில் அமைந்த ஒயின் ஷாப்பிற்குள் இருந்து ஒரு சிலரை மிரட்டல் தொனியுடன் போலீஸ்காரர்கள் ஜீப்பில் ஏற்றிக்கொண்டிருந்தனர். ஒயின் ஷாப்பிற்கு வருகை தந்தவர்கள் போலிஸ் வண்டியை சுற்றி சலசலத்தபடி குழுமி இருந்தார்கள். நிச்சயம் ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்க வேண்டும் சைரின் சத்தத்தை கிளம்பிக்கொண்டு போலிஸ் ஜீப்பிற்கு முன் சென்ற ஆம்புலன்ஸ் வண்டி அதை தான் உணர்த்தியது.

அங்கே நின்றிருக்க பிடிக்காமல் நடையில் வேகத்தை கூட்டினேன். ஐசக்கை முதுகில் அடித்து தரதரவென ஜீப்பில் ஏற்றிய சம்பவம் மீண்டும் மனத்திரையில் ஓடத் துடங்கியது. அப்போது நான் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்துகொண்டிருந்த சமயம். எங்கள் காதல் விவகாரம் வீட்டிற்க்கு மட்டுமல்ல எங்கள் குடியிருப்பு பகுதியிலும் கூட அனைவருக்கும் தெரிந்திருந்தது. பெரிதாக எந்த ஒரு தடையும் இல்லை ஐசக் தனக்கு மருமகனாக அமைய நேர்ந்தால் தோன்றும் நேரங்களில் பணம் வாங்கிக்கொள்ளலாம் என்பது அப்பாவின் எண்ணம். ஐசக்கின் வீட்டிற்கு நான் மருமகளாக செல்ல நேர்ந்தால் தன் மகன் படித்த பெண்ணை திருமணம் செய்துகொண்டிருக்கிறான் என்று கௌரவமாக தம்பட்டம் அடித்துக்கொள்ளலாம் என்பது ஐசக் அம்மாவின் எண்ணம். இதில் என் அம்மா மட்டும் தான் எந்த ஒரு முக சாயலையும் வெளிபடுத்தாமல் முழித்துக்கொண்டிருந்தாள்.

நான் கல்லூரி முடித்து தினமும் வீட்டிற்கு திரும்பும் பேருந்தில் என்னை காதலிப்பதாக சொல்லி ஓயாது நச்சரித்து பின்தொடர்ந்துகொண்டிருந்தவனை பற்றி ஐசக்கிடம் நான் பேசியதே இல்லை. ஆனாலும் அந்த விஷயம் ஐசக்கின் நண்பர்கள் மூலம் எப்படியோ அவன் காதிற்கு எட்டி விட்டது. அன்றிரவே ஐசக் எங்கெங்கோ அலைந்து அவனை பற்றி விசாரித்து நேரில் சென்று அவனை எச்சரித்திருக்கிறான். பேச்சுவார்த்தையில் துடங்கிய சம்பவம் கடைசியில் அடிதடியில் போய் முடிந்திருக்கிறது. ஐசக் அவசரத்தில் கையில் கிடைத்த கம்பியை கொண்டு வெறியோடு அவனை அடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி இருக்கிறான். மறுநாள் காலையில் ஐசக்கை போலிஸ்காரகள் கைது செய்யும் பொழுது தான் தெரிந்தது அவன் இறந்துபோன விஷயம். மாரில் அடித்துக்கொண்டு ஐசக்கின் அம்மா ஜீப்பின் பின்னால் ஓடியதும், கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த என்னை கண்டடைந்து கண்களாலே ஐசக் எனக்கு சமாதானம் சொல்லியதும் இப்பொழுதும் நெஞ்சில் நீங்கா தழும்புகளாய் பதிந்திருக்கிறது.

அதற்கு பிறகான நாட்களில் விசாரணைக்காக நீதி மன்றத்திற்கும் காவல் நிலையத்திற்கும் அலைந்துகொண்டிருந்தேன். தான் கைது செய்யப்பட்டதை விட தன் காதலி அடிக்கடி வீட்டிற்க்கும், நீதி மன்றத்திற்கும் அலைந்துகொண்டிருந்தது தான் ஐசக்கிற்கு வருத்தத்தை கொடுத்தது. எவ்வளவு பணம் செலவழித்தும் ஐசக்கிற்கு சாதகமாக எதுவும் அமையவில்லை என்னை சந்திப்பதையும் ஐசக் தவிர்த்து வந்தான். கடைசி சந்திப்பில் தான் ஐசக் முதல் முறையாக அழுததை என்னால் பார்க்க நேர்ந்தது. அழுதுகொண்டே என்னிடம் அவன் கேட்டுக்கொண்ட விஷயம் “என்னைய அவ்ளோ சீக்கிரம் மறக்க முடியாது செலஸ்டினா ஆனா கண்டிப்பா பார்க்காம இருக்க முடியும், இனி என்ன பார்க்க வரதா” என் பதிலுக்காக காத்திருக்காமல் கண்களை துடைத்துக்கொண்டு வேகமாக சென்றான். வருடங்கள் ஓடி விட்டது அவனுடன் கழித்த நாட்களின் ஏதோ ஒரு நினைவில் தினமும் என்னை சந்தித்து கொண்டு தான் இருக்கிறான் சிரித்துக்கொண்டும்… அழுதுகொண்டும்…

ஆயிரம் புன்னகை உதட்டில் தவழ ஐஸ்வர்யாவின் அப்பா இரவு வீட்டிற்குள் நுழைந்தார். முத்தங்களாலே ஐசுவின் உறக்கத்தை கலைத்தார். நீண்ட நாட்களுக்கு பிறகான அரவணைப்புகளும் தழுவல்களும் அவ்விரவு நீண்டுக்கொண்டே இருந்தது. பல வடிவங்களில் பரிசு பொருட்களும் துணிமணிகளும் என்னையும் ஐசுவையும் சூழ்ந்துகொண்டிருந்தது. ஐசுவின் அப்பா எனக்கென்று பிரத்தியேகமா வாங்கி வந்திருந்த பரிசை என்னிடம் கொடுத்தார் வெளிநாட்டில் தங்கத்தால் செய்யப்பட்ட பேனா ஒன்று இருந்தது மீண்டும் பழைய காதலனின் நினைவுகளை என் கணவன் வாங்கிக்கொடுத்த பேனாவே தோண்டிக்கொண்டிருந்தது. எழுதி பார்க்க மனமின்றி அப்பேனாவை பீரோவில் வைத்து பூட்டினேன்.

மறுநாள் ஐஸ்வர்யாவின் அப்பா ஐசுவின் பிறந்தநாள் ஒட்டியும் ஈஸ்டர் தினத்தை ஒட்டியும் துணிமணிகள் வாங்க எங்கள் இருவரையும் கடைக்கு அழைத்துச்சென்றார். ஐஸ்வர்யாவிற்கு துணியை எடுத்தபின் எனக்கு புடவை எடுத்து கொடுக்க இரண்டாம் மாடிற்கு அழைத்து சென்றார். ஈஸ்ட்டர் தினம் நெருங்கிக்கொண்டிருப்பதால் கூட்டம் அலைமோதியது எப்படியோ கூட்டத்தை சமாளித்துக்கொண்டு கடைசியாக ஒருவரை அணுகினோம்.

வார்த்தைகளின்றி கேட்க்கும் நிறங்களில் புடவைகளை சரசரவென விரித்துக்கொண்டிருந்தான் அவன். பார்த்த மாத்திரத்தில் அவனால் என்னை அடையாளம்கொள்ள முடிந்தது என்னால் தான் சட்டென்று அடையாளம்கொள்ள முடியவில்லை மொட்டை அடித்து பாதி முளைத்திருந்த மயிர், உடல் மெலிந்து கூனி குறுகி நேருக்கு நேர் சந்திக்க வலுவற்று கீழே குனிந்தபடி சுழன்று கொண்டிருந்தது அவன் பார்வை. அவனே தான் ஐசக்…! வெளிவர துடித்துக்கொண்டிருந்த கண்ணீரை மனதின் பலம் கொண்டு முடிந்தவரை தடுத்தேன். ஐஸ்வர்யாவின் அப்பா சுட்டிகாட்டிக்கொண்டிருந்த புடவைகளை சலிப்பின்றி கான்பித்துக்கொண்டிருந்தான். அவனது கண்கள் சிவந்துகொண்டிருந்தது அவனும் கண்ணீரோடு போராடுகிறான். எங்கள் இருவருக்குமான சந்திப்பு இப்படியா அமைய வேண்டும்..? செலஸ்டினா… செலஸ்டினா… என்று தன் வாழ்நாளை கொண்டாடிகொண்டிருந்தவன் அதே செஸ்டினாவை பார்க்க விருப்பமில்லாமல் நாதியற்று நிற்கும் நிலைமை. என் மீதும், ஐஸ்வர்யா மீதும், ஐஸ்வர்யாவின் அப்பா மீதும் அவனது பார்வை வீசிக்கொண்டே இருந்தது. அவன் படும் அவஸ்த்தையை என்னால் பார்த்துகொண்டிருக்கமுடியவில்லை. உடல் எரிந்து சாம்பலாகிகொண்டிருப்பதை உணர்ந்தேன். அங்கிருந்து உடனே நகர வேண்டும் போல் இருந்தது கையில் சிக்கிய ஏதோ ஒரு புடவையை எடுத்துக்கொண்டு காரணங்கள் தேடி சமரசம் செய்து ஐஸ்வர்யாவையும், ஐஸ்வர்யா அப்பாவையும் அழைத்துக்கொண்டு வெளியே வந்தேன். படி இறங்கும் நேரத்தில் திரும்பி பார்க்கும் பொழுது இதழ்கள் விரிய ஐசக் லேசாக சிரித்துக்கொண்டிருந்தான். அனைத்தையும் இழந்து வெறுமையின் அரவணைப்பில் வாழ்ந்துகொண்டிருப்பதை உணர்த்தியது அந்த சிரிப்பு.

மேற்கொண்டு வேறு எந்த கடைக்கும் செல்லாமல் அர்த்தமற்ற காரணங்களை சொல்லி விடாப்படியாக இருவரையும் வீட்டிற்கு அழைத்து வந்தேன். சுதந்திரமாக கத்தி அழுவதற்கு ஒரு சுவர் கிடைத்தால் போதும் என்றிருந்தது. வீட்டிற்கும் வந்ததும் தாழ்பாளின் துணைகொண்டு கதவை அடைத்தேன். தரையில் சரிந்து கால்களை மடக்கி கழுத்தை தொங்கவைத்து அழுது தீர்த்தேன்.. ஒரு புறம் ஐசக்கின் குரல் என்னை சமாதானப்படுத்த முயற்சி செய்துகொண்டிருந்தது…

பீரோவின் மேல் இருந்த பெட்டியை கீழே இறக்கினேன் ஐசக் கொடுத்த இங்குப் பேனா பொலிவிழந்து உறங்கிக்கொண்டிருந்தது. ஆசையா… தோல்வியா… ஏமாற்றமா… எதுவென்று தெரியவில்லை ஐசக்கின் பெயரை எழுதி பார்க்க முனைந்தது. கட்டில் மேல் இருந்த என் டைரியை எடுத்து கடைசி பக்கத்தில் ஐசக்கின் பெயரை எழுதினேன்.. காற்றில் வரைய முயற்சிக்கும் எழுத்தக்களை போல் உருபெறாமலே இருந்தது ஐசக்கின் பெயர்… அந்த இங்குப் பேனா எழுதவில்லை. பேனாவை தரையில் உதறினேன் அந்த மை திட்டு திட்டுகளாக ஐசக்கின் ரத்தத் துளிகளை போல் காட்சியளிதுக்கொண்டிருந்தது. எவ்வளவு முயற்சித்தும் அந்த இங்குப் பேனா எழுதவில்லை… இனி எழுதப்போவதும் இல்லை. இந்நேரம் ஐசக் நான் கொடுத்த குருத்தோலையை வைத்து அழுதுகொண்டிருப்பான் என்று மட்டும் தோன்றியது.

வேனிற்காலம் – காலத்துகள் சிறுகதை

காலத்துகள்

விடைத்தாள்களை வாங்கி மேஜையின் மீது அடுக்கி வைத்த ஸார், அறையின் வாசலுக்கு செல்வதும் திரும்புவதுமாக இருந்தார். முதல் மணிச் சத்தத்துடன் அனைத்து வகுப்பறைகளிலிருந்தும் எழுந்த கூச்சலினூடே வெளியே வந்தோம். கடைசி பரீட்சை முடிந்தபின் நடக்கும் சட்டையின்மீது இங்க் அடிக்கும் சடங்கில் என் நண்பர்கள் அடைந்துள்ள நிபுணத்துவம் என்னிடம் இல்லாததால், ‘டேய் டேய் போதும்டா’ என்று எப்போதும் போல் கூச்சலிட்டேன். வழக்கம் போல் என் வான் நீல பள்ளிச் சீருடை சட்டையின் மீது பல்வேறு வடிவங்களிலும், அளவுகளிலும் இங்க் துளிகள் பதிந்தன. இந்த விளையாட்டையும் அதனூடே நாங்கள் எழுப்பிக் கொண்டிருந்த ஊளைச் சத்தத்தையும் கண்டு கொள்ளாமல் விடைத்தாள் கட்டை ஆபிஸ் ரூமில் சேர்ப்பித்து கிளம்பும் அவசரத்தில் ஆசிரியர்கள் எங்களைக் கடந்து சென்றார்கள். ஆரம்ப அதீத உற்சாகம் சற்று அடங்கிய பின் ‘பாக்கலாம்டா’, ‘ஹாப்பி ஹாலிடேஸ்டா’களை பகிர்ந்து கொண்டவர்களில் விடுமுறைக்கு வேறு ஊருக்குப் போகாத நானும் சந்துருவைப் போன்றவர்களும் இருந்தோம்.

சைக்கிள் எடுப்பதற்காக சென்றிருந்த சந்துருவிற்காக காத்துக் கொண்டிருந்தபோது பெண்கள் ஸ்டேண்டினில் இருந்து வெளியே வந்த உமா சைக்கிள் மீதேற, ஒரு கணம் மேலெழும்பி அடங்கிய ஸ்கர்டினுள் அவள் முழங்கால் தெரிந்தது. இன்னும் இரு மாதத்திற்கு அவளை எங்கேனும் தெருவில் செல்லும்போது பார்த்தால்தான் உண்டு. என்னைத் கடந்து செல்பவளின், சாக்ஸினால் பாதி வரை மூடப்பட்ட ஆடுசதையின் திரட்சியில், மென் மயிர்கள் துல்லியமாக தெரிகின்றன. ஆறாவதில் இருந்து சைக்கிளில்தான் வருகிறாள், வீட்டில் கார்கூட உள்ளது. பார்வையை அவளிடமிருந்து விலக்கிக் கொண்டேன். சந்துரு வீட்டில் தண்ணீர் குடித்துவிட்டு செட்டித் தெருவை தாண்டியவுடன் ஓட ஆரம்பித்து மிச்சமிருந்த ஐந்து நிமிட நடையை ஒரு நிமிடத்திற்குள் கடந்து வீடு வந்தேன். உள்ளறையில் தூங்கிக் கொண்டிருந்த அப்பாவை எழுப்பாமல் உடை மாற்றிக் கொண்டு சாப்பிட்டவுடன், என்னுடைய மூன்று நூலக அட்டைகளை எடுத்து பார்த்தேன். மார்ச் மாதம் முழுதும் லைப்பரரிக்குச் செல்லவில்லை. நாளையிலிருந்து மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்.

ஹிந்துவில் நான் மிகவும் விரும்பும் விளையாட்டுப் பக்கத்தை சில நிமிடங்களுக்கு மேல் படிக்க இயலவில்லை. அடுத்து விளையாட்டு செய்திகளைத் தவிர, நான் தினமும் படிக்கும் ஒரே பகுதியான ‘திஸ் டே தட் இயரில்’ ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இதே தேதியில் ஹிட்லரின் வெற்றிகள் தொடர்ந்து கொண்டிருந்தன என்று தெரிந்து கொண்டேன். மீண்டும் முதலிலிருந்து இறுதி பக்கம் வரை புரட்டியவன் தினசரியை மடித்து வைத்தபின் வானொலியை இயக்கி ‘ஆப் கி பார்ச்மயிஷ்ஷில்’ இரண்டு பாடல்கள் கேட்டு முடிப்பதற்குள் அணைத்தேன். ஐந்து வயது வரை மெட்ராஸில் குடியிருந்தபோது அருகிலிருந்த தனியார் நூலகத்திலிருந்து எடுத்து வந்து திருப்பிக் கொடுக்காத மூன்று ஆஸ்ட்ரிக்ஸ் காமிக்ஸ்களின் பக்கங்களைப் புரட்டியபின், மீண்டும் வானொலியை இயக்கி அணைக்கும்போது மணி இரண்டாகி விட்டிருந்தது. என்ன பாடல்கள் ஒளிபரப்பப்பட்டன என்பதை நினைவுகூர முயன்று அது முடியாமல், வெளியே கிளம்பி தரையில் கிடந்த கல்லை மரடோனாவைப் போல் எட்டி உதைத்து நடக்க ஆரம்பித்தேன்.

ஐந்தாறு பேர் கொண்ட குழுவாக என்னைச் சூழ ஆரம்பித்த இங்கிலாந்து கால்பந்தாட்ட வீரர்களை, அவர்களின் கணுக்கால் சுளுக்கும்படி இடமும் வலமும் சுழன்று தாண்டிச் சென்று எண்ணற்ற கோல்களை அடித்து உலக கோப்பையை வென்றபின், மைக் டைசனாக உருவெடுத்து முதல் சுற்றில் முப்பது நொடிகளுக்குள்ளேயே எதிராளியை நாக்கவுட் செய்து முடிக்கும்போது நாடார் கடையருகே வந்திருந்தேன். ‘என்ன மேன் எக்ஸாம் முடிஞ்சாச்சா’ என்று நாடார் வரவேற்றார். ‘எல்லாம் ஓவர் நாடார், சோடா குடுங்க, பன்னீர்’ என்று ஐம்பது பைசாவை அவரிடம் தந்து, அவரிடமிருந்து சோடா பாட்டிலை வாங்கியவன் அதை உலகப் கோப்பை போல முகத்தின் நேரே தூக்கி பார்த்து குடிக்க ஆரம்பித்தேன். ‘என்னடா இன்னிக்கே வெளில சுத்திட்டு வரியா, வேர்த்து ஊத்துது பாரு’ என்று கேட்ட அடுத்த போர்ஷன் சுந்தரி அக்காவிடம் ‘சும்மாதான்கா’ என்று சொல்லிக் கொண்டே என் போர்ஷனுள் நுழைந்தேன். ஒரு மணி நேரத்திற்கு மேல் செங்கல்பட்டு வீதிகளில் கால்பந்தாட்ட சாகசத்தை நிகழ்த்தியிருக்கிறேன்.

வேலை முடித்து வரும்போது, மூன்று மற்றும் இரு பாகங்கள் கொண்ட இரண்டு சரித்திர நாவல்களை தன் பள்ளி நூலகத்திலிருந்து எடுத்து வந்தார் அம்மா. அவற்றை புரட்டிக் கொண்டிருந்தபோது வீட்டிற்கு வந்த சந்துருவுடன் வெளியே சென்று எந்த தெருக்களில் என்ன பேசிக்கொண்டே நடந்தோம் என்ற பிரக்ஞையில்லாமல் வீடு திரும்பியவன் அன்றிரவு மிகக் குறைவாகவே உண்டபின், மீண்டும் அன்றையை தினசரியை படிக்க முயன்று தோற்று, அம்மா எடுத்து வந்திருந்த புத்தகங்களை புரட்டி மூடினேன்.

oOo

அடுத்த நாள் காலையில் எட்டேகாலுக்கு நூலகத்தினுள் நுழைந்தேன். எட்டு மணிக்கு திறக்கும் செங்கல்பட்டு அரசு நூலகத்திற்கு தினமும் இதே நேரத்திற்கு வந்துவிடுவேன். பெரும்பாலான நாட்களைப் போல அன்றும் நூலக வருகைப் பதிவில் கையெழுத்திட்ட முதல் ஆள் நான் என்பது பெருமிதமாக இருந்தது. நேற்று எடுத்துச் சென்றிருந்த மூன்று புத்தகங்களை தந்துவிட்டு, அன்றைய புத்தகங்களை தேர்வு செய்தவன், அடுத்த நாள் எடுத்துச் செல்ல முடிவு செய்த ஒரு நூலை அறையில் இறுதியில் இருந்த அடுக்கில் வைத்தபின் புத்தக வரிசைகளை இன்னும் சில முறை சுற்றிப் பார்த்துவிட்டு கிளம்பும் போது மணி பத்துக்கு மேல் ஆகிவிட்டிருக்கும் என்பதை, நூலக விடுமுறை நாளான வெள்ளிக்கிழமைகளையும் இரண்டாம் சனிக்கிழமையையும் தவிர தினசரி காலை யாத்திரையாக அங்கு சென்று வந்து கொண்டிருந்ததால், நூலகத்தில் உள்ள கடிகாரத்தை பார்க்காமலேயே நான் அறிவேன்.

என் அப்பன் வேலைக்குச் செல்வதை நிறுத்தி இரண்டு மூன்று வருடங்கள் ஆகிவிட்டதால் அவனும் வீட்டில்தான் இருந்தான். உள்ளறையில் அவன் அன்றைய தினசரியை படித்துக் கொண்டிருக்க நான் ஹாலில் அமர்ந்து எடுத்து வந்திருந்த நூல்களை படிக்க ஆரம்பித்தேன். மாலைக்குள் இரண்டு புத்தகங்களையாவது படித்து முடித்தால்தான் மறுநாள் காலை வழக்கம் போல் நூலகத்திற்கு செல்ல ஏதுவாக இருக்கும். பன்னிரண்டு மணியளவில் வரி விடாமல் பேப்பரை படித்து முடித்த அப்பா ஹாலில் அமர்ந்து சாப்பிட ஆரம்பிக்க நான் உள்ளறைக்குச் சென்றேன். உண்டு முடித்தவன் ‘சாப்டுடா’ என்றபடி அறைக்குள் வர நான் வெளியேறினேன். அடுத்து ‘டீ போட்டு வெச்சிருக்கேன்’ என்று நான்கு மணி வாக்கில் அவன் என்னிடம் சொல்வதுடன் எங்களுக்கிடையே அன்றைய நாளுக்கான உரையாடல் முடிவடையும், அவன் தரப்பில் அந்த நான்கு வார்த்தைகளும் என் தரப்பில் தலையாட்டுதலும்.

மதியம் அவன் உள்ளறையில் தூங்கிக் கொண்டிருக்க, எங்கள் போர்ஷனின் பின்புறம் இருந்த எலுமிச்சை மரத்தடியில் அமர்ந்து வானொலியில் பாடல்கள் கேட்டுக் கொண்டிருந்தேன். மூன்று மணிக்கு ஒலிபரப்பு நிறைவடைய மரத்தையொட்டி இருந்த சுவற்றில் அமர்ந்து மறுபுறம் இருக்கும் காலி மனையை பார்த்தபடி, அந்த வெற்றிடத்தில் போர்க்களங்களை, மர்ம குகைகளை, நாசகாரர்களின் ரகசிய இடத்தைக் கட்டெழுப்பி, பல சாகசங்களை என் மனதினுள் நிகழ்த்த ஆரம்பித்தேன். உமாவையும், மீராவையும் ஏன் உலகையேகூட இத்தனையாவது தடவை என்று சொல்ல முடியாதபடி, மீண்டுமொருமுறை கொடியவர்களிடமிருந்து காப்பாற்றி முடிக்கும்போது வெய்யில் என்னுள் முழுமையாக இறங்கி வியர்வை கண்களில் வழிந்து எரிச்சலுறச் செய்ய ஆரம்பித்திருந்தது. உதடுகளில் சிந்தியிருக்கும் உப்புப் கரிப்பை நாவால் வருடியபடியே விழிகளை கசக்கிக் கொண்டு எழுந்து உள்ளே சென்றேன்.

நாலரை மணி வாக்கில் வீட்டிற்கு வந்த சந்துருவுடன் கிளம்பினேன். டப்பா ஸ்கூலின் அருகே சரவணன், பிரபு, ஜர்தா பீடா போட்டுக் கொண்டிருந்தபோது தகப்பனிடம் மாட்டி அடிவாங்கிய நாள் முதல் கஞ்சாவென்று அழைக்கப்படும் ரகுராமன், காத்துக்கொண்டிருந்தார்கள்.

‘முரளி வியாழக்கிழமை பெட்ரோல் பங்க் அனுமார் கோவிலுக்கு போறான்டா’ என்ற பரபரப்புச் செய்தியை சரவணன் தெரிவிக்க, அனுமார் கோவிலுக்கு ஏன் பெண்கள் வருகிறார்கள், அதுவும் குறிப்பாக வியாழனன்று, என்பது போன்ற விசாரங்களுளோடு நீண்ட உரையாடலை, ‘போதும்டா டேய்’ என்று முடிவுக்கு கொண்டு வந்த கஞ்சா, ‘ஒத்தா கபில்லாம் ரிடயர் ஆகணும்டா, ஸ்ரீநாத் நல்லா போடறான்’ என்று அடுத்ததையும் ஆரம்பித்து வைத்தான்.

‘என்னத்த போடறான்’

‘ஒத்தா நீ மூடு, கபில் என்னத்த போட்டான் லாஸ்ட் ரெண்டு வருஷமா’

‘ஸ்ரீநாத் போடறத நீ வெளக்கு புடிச்சு பாத்தியா’

‘அப்ப கபில் போடும் போது நீ வெளக்கு புடிச்சியா’

‘ஸ்ரீநாத்துக்கு கல்யாணம் ஆகலைல’

‘ஒத்தா கல்யாணத்துக்கும், போடறதுக்கும் என்னடா சம்பந்தம்’

இந்திய கிரிக்கெட் அணியையும், கலவி விதிமுறைகளையும் சீரமைத்து முடிக்கும்போது ‘மெட்ராஸ் டு பாண்டிச்சேரி’ படத்தில் ஒரு காட்சியில் சில நொடிகள் தலைகாட்டிய கலெக்டர் ஆபிஸ் பிள்ளையார் கோவிலை அடைந்திருந்தவர்கள், அதன் மறுபுறம் இருந்த சாலை வழியாக, தீயணைப்பு படை குவார்டர்ஸ், அரசுப் பள்ளி எல்லாம் கடந்து, செங்கல்பட்டில் புதுப் படங்கள் உடனே வெளியாகாமல் இரண்டு மூன்று மாதங்கள் கழித்தே வருவது குறித்து அங்கலாய்த்த படி ராமர் கோவிலை நெருங்கும்போது ‘இப்படி போய்டலாம்டா’ என்று ராமகிருஷ்ணா ஸ்கூல் மேட்டில் இறங்கினேன். அங்கு திரும்பாமல் நேரே கொஞ்ச தூரம் சென்றால் கோவில் குளத்தினருகே உமாவின் வீடு. அவள் மீது எனக்குள்ள ஈர்ப்பு இந்தப் பயல்களுக்கு தெரிந்து விடக் கூடாது.

oOo

என் வீட்டின் ஹாலில் அமர்ந்திருந்தவன், தான் ரமேஷ் என்றும், செங்கல்பட்டு அரசு கலைக் கல்லூரியில் படிப்பதாகவும் கூறியதற்கு நான் பதிலேதும் சொல்லவில்லை. சமையலறையில் இருந்து காபி எடுத்துக் கொண்டு வந்து அவனிடம் தந்துவிட்டு என்னிடம் மீண்டும் அதே அறிமுகத்தை என் அப்பன் கூறியதற்கும் நான் மௌனமாகவே இருந்தேன். அம்மாவிடம் சொல்லிக் கொண்டபின் கிளம்பிய ரமேஷுடன் என் அப்பனும் சென்றான். ‘இவன் எங்கேந்து புதுசா வந்திருக்கான்’ என்று நான் கேட்டதற்கு ‘நாலஞ்சு வருஷத்துக்கு ஒரு தரம் கிறுக்கு பிடிக்கும் போலிருக்கு. எங்கேந்து தான் ஆப்படறாங்களோ’ என்று தனக்குள் பேசிக் கொண்டிருந்த அம்மா என் அப்பன் திரும்பி வந்தவுடன் எதுவும் சொல்லவில்லை.

ஒரு வாரமாக ரமேஷ் வீட்டில்தான் காலைப் பொழுதைக் கழிக்கிறான். வழக்கமான அசௌகர்ய மௌனத்தினூடே அவர்களிருவரும் மெல்லிய குரலில் பேசிக் கொள்கிறார்கள். கிளம்புவதாகச் சொல்பவனிடம் ‘சாப்டுட்டு போ’ என்கிறான் என் அப்பன். தட்டுக்கள், பாத்திரங்கள் தரையில் வைக்கப்படும் ஒலி. பெரும்பாலும் நான் நூலகம் சென்றிருக்கும்போது தான் வீட்டிற்கு வருபவன், நான் திரும்பிய பத்து பதினைந்து நிமிடங்களில் சென்று விடுவான். தண்ணீர் குடிக்க நான் ஹாலுக்கு வந்த போது ரமேஷ் கிளம்பி க்கொண்டிருந்தான். ஒன்றிரண்டு முறை என்னிடம் பேச முயன்று அதன் பின் நிறுத்தியிருந்தான் ரமேஷ்.

‘சொல்லிட்டே இருக்கேன் பதில் பேசாம இருக்க, ஒனக்கு எதுலையும் இன்ட்ரஸ்ட் இல்ல’, ‘மூஞ்சியக் காட்டாத, பேசறது புடிக்கலைனா நேரடியா சொல்லு’, ‘என்ன பெரிய மயிறு சமையல்’. சமைத்துக் கொண்டிருக்கும் அம்மாவிடம் ஒருவர் மட்டுமே நிற்கக் கூடிய சமையலறையின் வாசலில் நின்று கொண்டு என் அப்பன் மாலை நேரத்தில் பேசிக் கொண்டிருந்தான். எப்போதும் போல் சந்துருவுடன் வெளியே சென்று விட்டு திரும்பியிருந்தேன்.அன்று காலை ரமேஷ் வீட்டிற்கு வந்திருக்கவில்லை. மதியம் இரண்டு மணி அளவில் வெளியே சென்ற என் அப்பன் எப்போது திரும்பினானோ. சமைத்து முடித்தபின் சாப்பிடுமாறு அவனிடம் கெஞ்ச ஆரம்பித்த அம்மாவிடம், ‘எனக்கு எந்த மயிறு சாப்பாடும் வேண்டாம், நீயே தின்னு’ என்று அவன் கத்திக் கொண்டிருக்க, ரமேஷ் வந்தான். ‘எங்கடா போயிருந்த, அவ்ளோ திமிர் புடிச்சிடுச்சா, ராஸ்கல்’ என்று அவனிடம் அவனை நோக்கி கத்த ஆரம்பித்தான். ‘வெளில கேக்கப் போகுது’ என்று அவனிடமும் ‘உள்ள வாப்பா’ என்று போர்ஷன் வாசலில் தயங்கியபடி நின்றுகொண்டிருந்த ரமேஷிடமும் அம்மா சொன்னாள். உள்ளே வந்தவன் யாரையும் பார்க்காமல் தரையையும், கூரையையும் பார்த்தபடி இருக்க, நானும் அம்மாவும் உள்ளறைக்குச் சென்றோம். சில நிமிடங்களில் சத்தம் அடங்கி மென் குரலில் பேச்சுக்கள். ‘ரமேஷுக்கு சாப்பாடு இங்கதான்’ என்று என் அப்பன் வந்து சொல்ல, அம்மா சமையலறைக்குச் சென்றாள். உள்ளறையிலிருந்து நான் பார்த்தபோது என் அப்பன் தொடர்ந்து பேசியபடியே இருக்க, தலை நிமிராமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் ரமேஷ், அருகே அம்மா நின்றுக்கொண்டிருந்தாள்.

அன்றிரவு சாப்பிடாமல் பேப்பர் திருத்திக் கொண்டிருந்த அம்மாவுடன் ‘இவனுக்கு என்ன பிரண்ட்ஷிப் இந்த பொறுக்கி ரமேஷோட’ என்று கேட்டேன்.

‘மொதல்ல மோரே இருந்தான், அப்பறம் வசந்தி, ராணி, இப்ப ரமேஷ், ஒங்கப்பன் பொறுக்கிதான் எல்லாத்துக்கும் காரணம்’ என்று அம்மா சொன்னதை அப்போதே புரிந்து கொண்டேன் என்பதை நான் என்னிடம் ஒப்புக்கொள்ள இன்னும் இரண்டு மூன்று வாரங்கள் தேவைப்பட்டது.

oOo

அன்றைக்கு வீட்டிற்கு வந்தவனிடம் “ஆபரேஷன் பண்ணனும் சொல்லிட்டாரு” என்றாள் அம்மா. மார்ச் மாதத்திலிருந்தே அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லாமல் ‘கைனக்’ ராஜராஜனிடம் சென்று கொண்டிருந்தாள். அது குறித்து நான் மேலே கேட்பதற்குள், “திமிரு புடிச்சவன்” என்றபடி ஹாலிலிருந்து உள்ளறைக்குச் சென்றான் என் அப்பன். “என்னாச்சு?” என்று அம்மாவிடம் கேட்டேன்.

“ப்ரைவேட் க்ளினிக்ல வெச்சுக்கலாம்னு சொன்னா, டாக்டர் மாட்டேனுட்டார், கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல் நல்லாத்தான் இருக்குன்னு அவர் சொல்லிட்டார். திருப்பித் திருப்பி ப்ரைவேட்ல வெச்சுக்கலாம்னு அப்பா சொல்லவும் அவருக்கு கோவம் வந்துடுச்சு, அப்ப நீங்க வேற டாக்டர பாத்துக்குங்கனுட்டார், அதான்’ என்று அம்மா சொல்லும்போது அவள் சிரிப்பை அடக்கி கொள்வது தெரிந்தது. “டாக்டர் ஒத்துண்டா மட்டும் நம்மால ப்ரைவேட்ல முடியுமான்ன.”

“டேஞ்சரஸ்ஸாமா ஆப்பரேஷன்?”

“அதெல்லாம் இல்ல, நாலஞ்சு மணி நேரம் ஆகலாம், வலிக்கும். ஸ்டிச்சஸ் போடுவாங்க. ரெண்டு வாரமாவது ஆஸ்பிடல்லயே இருக்கணும்’ என்றாள்.

“என்னிக்கு ஆப்பரேஷன்?”.

“ஏப்ரல் எண்ட்லன்னு சொன்னார்”

“உங்க வீட்லேந்தோ என் வீட்லேந்தோ யாரும் வர வேண்டாம், ஒத்தனோட ஹெல்ப்புமில்லாம நாமளே பாத்துக்கலாம்” என்று சொல்லிய என் அப்பன், தேவைப்படும்போது அம்மாவை மெட்ராஸில் வசிக்கும் அவள் அத்தை வீட்டிற்கு அனுப்பத் தவறியதில்லை. மிலிட்டரி ரேஷனில் சில மளிகைப் பொருட்கள் மலிவாக கிடைக்கும் என்பதால் அவனே சில மாதங்களுக்கு ஒரு முறை திருவண்ணாமலைக்குச் சென்று தன் அம்மாவிடம் பேசி பொருட்கள் வாங்கிக் கொண்டும் வருவான். ஒன்றரை வருடங்களுக்கு முன் நடந்த சண்டையொன்றில் அவன் தள்ளி விட்டதில் தாத்தியின் கை உடைய, என் வீட்டிற்கு வரும் ஒரே உறவினரான அவளும் வருவதை நிறுத்தியிருந்தாள். ‘வேணாம் சுந்தரி, பெரிய ஆப்பரேஷன் இல்ல, அவர் இருக்காரு, இவனும் இருக்கான் போதும்’ என்று சுந்தரி அக்கா ஆஸ்பத்திரியில் ஒன்றிரண்டு நாள் இருப்பதாக கூறியதையும் தடுத்து விட்டாள்.

ஆபரேஷன் நடந்த காலையன்று நாங்களிருவர் மட்டும் அறுவை சிகிச்சை அறைக்கு வெளியே காத்துக் கொண்டிருந்தோம். ஏழெட்டு மணி நேரத்திற்குப் பிறகு விசாலமான பொது வார்டில் அனுமதிக்கப்பட்ட அம்மாவிற்கு முழுதாக நினைவு திரும்ப மாலையாகி விட்டது. பக்கத்து போர்ஷன் சுந்தரி அக்கா அன்றே அம்மாவைப் பார்த்துச் சென்றார். “நீ நைட் இங்கயே இருந்து அம்மாவ பாத்துக்கோ, காத்தால வீட்டுக்கு வந்து குளிச்சிட்டு திரும்ப ஹாஸ்பிடல் வந்துடு” என்று என்னிடம் சொல்லிவிட்டுச் என் அப்பனும் வீட்டிற்கு கிளம்பினான்.

செங்கல்பட்டின் ஒரு முனையில் இருந்த மருத்துவனையிலிருந்து காலை ஏழு மணிக்கு கிளம்பி இருபது நிமிடத்திற்கு மேலாகும் நடைக்குப்பின் வீட்டிற்கு வந்து சேருவேன். குளித்தபின், ஊரின் மறு முனையில் இருக்கும், அதே இருபது நிமிடத்திற்கு மேலாகும் நடை தூரத்தில் உள்ள, நூலகத்திற்குச் சென்று திரும்பி தண்ணீர் குடித்த பின் அம்மாவிற்கான மாற்று துணிகளுடன் உடனேயே மருத்துவமனைக்கு கிளம்புவேன். தனியாக வீட்டில் என் அப்பன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதைவிட மருத்துவமனையில் இருப்பதையே நானும் விரும்பினேன். அன்றைய தினம் எடுத்து வந்திருந்த நூல்களை படித்து முடிந்த பின் வெவ்வேறு வார்டுகள், புற நோயாளிகள் வருமிடம் என மாலை நேரத்தில் அலைந்து கொண்டிருப்பேன். அத்தகைய ஒரு இரவில் தான், அம்மா அனுமதிக்கப்பட்டிருந்த வார்டில் நைட் ஷிப்டில் இருந்த சுருட்டை முடியுடன், கண்ணாடி அணிந்த இளம் பெண் மருத்துவர் என்னுடன் பேச்சுக் கொடுத்தார். ‘ஒனக்கு எதுல இன்டிரெஸ்ட்?’ என்ற என்ற வழக்கமான கேள்வி எழ, ‘போயம்ஸ் படிக்கணும், எழுதணும்’ என்று நான் சொன்னதும் ‘இன்ட்ரஸ்ட்டிங், வித்தியாசமா இருக்கு’ என்று கூறியவர் முகத்திலிருந்த வியப்பை – கவிதைகளை விட புனைவையே நான் அதிகம் விரும்பினாலும் கவிதை தான் இந்த கேள்வியை கேட்பவர்களில் பெரும்பாலோனரை கூடுதலாக ஆச்சரியமடைய செய்யும் என்பதை கவனித்திருந்தேன் – பார்க்கும் போதுதான் அவர் அணிந்திருந்த மெல்லிய மூக்குத்தி முதல் முறையாக கண்ணில் பட அன்றிரவு வெகு நேரம் அந்த உரையாடலை என்னுள் நிகழ்த்தி, மீண்டும் மீண்டும் மூக்குத்தி ஒளிரும் அந்த வியப்பை உருவாக்கிக் கொண்டிருந்தேன். அன்றை இரவுப் பேச்சில் ‘கவிதை’ -நல்ல வேளையாக- ஆரம்பப் புள்ளியாக முடிந்து விட அதன் பின் அவருடன் பொதுவாக பேசிக் கொண்டிருப்பது தினசரி பழக்கமாகிப் போனது. உரையாடல் நடந்து கொண்டிருக்க நான் சில வருடங்கள் முன் சென்று அதே வார்டில் மூக்குத்தியுடன் வேலை பார்த்துக் கொண்டிருப்பேன். நான் மருத்துவம் படிப்பேன் என்பதில் எனக்கு அப்போது எந்த சந்தேகமும் இருக்கவில்லை.

இரண்டு நாட்கள் கழித்து காலை வழக்கத்தைவிட முன்பாக வீட்டிற்குச் சென்றேன். மடித்து வைக்கப்படாமல் இருந்த படுக்கைக்கு அருகே சில விஸ்கி பாட்டில்கள். விசிஆர் டெக் இருந்தது, வாடகைக்கு எடுத்திருப்பான். மேலுடம்பில் எதுவுமில்லாமல் பெர்முடா மட்டும் அணிந்திருந்த ரமேஷ் இரண்டு வீடியோ கேசட்களை ஷெல்பில் வைத்துக் கொண்டிருந்தான். தரையில் இருந்த புத்தகத்தை எடுத்துப் புரட்டி, ‘இரண்டு முயல் குட்டிகள் திமிறின’, ‘அவளைப் போட்டேன்’ போன்ற வார்த்தைகள் இருந்த பத்திகளைப் படித்துக் கொண்டிருக்கும்போது ‘என்னடா சீக்கிரம் வந்துட்ட’ என்று என் அப்பனின் குரல் கேட்டது. ‘என்ன படிக்கற, அது சும்மா’ என்று என் கையிலிருந்து என் அப்பன் பிடுங்கிய புத்தகத்தின் அட்டையில் ‘லைப் ஜுஸ்’ என்று எழுதப்பட்டிருந்தது. கிளம்பும் போது அம்மா பற்றி விசாரித்த சுந்தரி அக்கா “அந்த பையன் இப்பலாம் இங்கதான் படுத்துக்கறான்” என்றார்.

“வீட்டுலயே தூங்கறான் போலிருக்குமா அந்த ரமேஷு” என்று நான் சொன்னதற்கு ‘எப்படியோ ஒழிஞ்சு போட்டும் போ’ என்றாள் அம்மா. ‘மோரே’, ‘வசந்தி’ அனைவர் பற்றியும் அன்றிரவு அசைப்போட்டுக் கொண்டிருந்தேன். யாரையும் நான் பார்த்ததில்லை என்றாலும் வசந்தி குறித்து மட்டும் ஒரு முடிவுக்கு வந்திருந்தேன். பாலியல் ஈர்ப்புகள் குறித்து படித்து தெரிந்து கொண்டிருந்ததை வைத்து, மோரே குறித்தும் நான் சந்தேகித்திருந்தாலும், அன்றிரவு ‘மோரே பின்னாடியே சுத்தினான் ஒன் அப்பன்’ என்று அம்மா அவ்வப்போது புலம்புவதும், என் அப்பனுக்கு ரமேஷுடன் என்ன உறவு இருக்க முடியும் என்பதும் எனக்கு முன்பே புரிந்து விட்டன என்பதை ஒப்புக் கொண்டேன். என் அப்பன் ஏன் திருமணம் செய்து கொண்டான் என்பது குறித்து மட்டும் எனக்கு அப்போது பிடிபடவில்லை.

மே இரண்டாம் வாரம் அம்மா டிஸ்சார்ஜ் ஆனாள். எங்களுக்கு முன் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் அனைவரும், வார்டில் அதிகாரபூர்வமற்ற வழக்கமாக, அவர்கள் கிளம்பும் அன்று நர்ஸ்களுக்கு கூல் ட்ரிங்க் வாங்கித் வந்திருந்தார்கள். “ப்ளீஸ்மா, ரொம்ப கேவலமா நெனப்பாங்கமா” என்று அம்மா வார்டிலேயே கெஞ்சியதற்கு, “அதெல்லாம் காசு இல்ல, அவங்க ட்யூட்டிய செய்யறதுக்கு நாம எதுக்கு எக்ஸ்ட்ரா தரணும், டீன் கிட்ட கம்ப்ளைன் பண்ணுவேன்” என்று என் அப்பன் கத்தியதை வார்டிலுள்ளவர்கள் கவனித்தார்கள். கூட வந்திருந்த ரமேஷ் ஏதோ சொல்ல முயன்றதற்கு அவனுக்கும் வசவு விழுந்தது, விலகி நின்றவன் வேறு பக்கம் பார்க்க ஆரம்பித்தான். ‘ லூசுக் கூ’ என்று முணுமுணுத்துக் கொண்டேன். நான் என் பெற்றோருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல் போல் இருக்க முயன்று கொண்டிருந்தேன். அன்று ட்யூட்டியில் இருந்த மூக்குத்தி டாக்டர் என்னையே கவனிக்கிறார் என்று தோன்றிக் கொண்டே இருந்தது. அதன் பின் கிளம்பும் வரை எந்த நர்ஸும் எங்களிடம் எப்போதும் போல் சகஜமாகப் பேசவில்லை. மூக்குத்தி டாக்டரை தவிர்க்க எண்ணி, அவர் ஏதோ எழுதிக் கொண்டிருக்கும் போது விரைவாக கடக்க முயல, நிமிர்ந்தவர் “கிளம்பியாச்சா. குட் லக் ந்யூராலஜிஸ்ட்” என்று சிரித்தபடி சொன்னார். “தேங்கஸ் டாக்டர்” என்று மட்டும் சொல்லிவிட்டு தலையை குனிந்தபடி நகர்ந்தேன்.

oOo

“டெக் போட்டு பாத்திருக்கீங்க, கூல் ட்ரிங்க் வாங்கித் தர காசு இல்ல”

வீட்டிற்கு வந்தவுடன் சண்டை ஆரம்பித்தது. ‘மோரே, வசந்தி’, ‘ஒங்களுக்கு கொஞ்சம் கூட இரக்கமில்லையா’, ‘இவ்ளோ வருஷம் ஒங்களுக்காக ஒழச்சு கொட்டிருக்கேனே’ என்று அம்மாவிடமிருந்தும் ‘நான் அப்படித்தான்’, ‘எனக்கு யாரும் தேவையில்ல’, ‘எவங்கூட வேணா போவேன், என்னிஷ்டம்’ என்று என் அப்பன் தரப்பிலிருந்தும் நான் முன்பே பலமுறை கேள்விப்பட்டிருந்த வார்த்தைகள் வந்து கொண்டிருக்க, நான் என் அப்பனை கவனித்தபடியே இருந்தேன். சண்டையின்போது, அவன் அம்மாவை அடிப்பது சில வருடங்களுக்கு முன்பு வரைகூட சாதாரணமான நிகழ்வுதான், இந்த முறை கொஞ்சம் எல்லை மீறிப் போய் விட்டது. நான் வளர்ந்து விட்டதும் அதற்கு காரணமாக இருக்கலாம். “வேலைக்குப் போறதுனாலதான பேசற” என்றபடி அம்மாவின் பி.எட் சான்றிதழை கிழிக்க முயன்றது அவன் தப்பு. அவனிடமிருந்து அதை பிடுங்கும் போது அவன் தோளை நான் உந்தினேன். “என்னடா சப்போர்ட்டா, நீ என்னத்த படிச்சு புடுங்கறன்னு பாக்கறேன்”, என்று என அப்பன் சொல்ல, “என்னத்த வேணா பண்ணு, ” என்றேன். “நீ வெளில போடா”, என்று என்னை பிரித்துத் தள்ளிய அம்மா, ‘நீங்க செர்டிபிகேட் கிழிப்பேன்னு சொன்னதுனாலதான் அவன் அப்படி செஞ்சான். ஒண்ணும் பண்ணிடாதீங்க, ஒங்க மேலையும் அவனுக்கு அப்பெக்க்ஷன் இல்லையான்ன’ என்று அவனிடம் கெஞ்ச ஆரம்பித்தாள். “எப்படியோ ஒழி” என்றபடி சான்றிதழை அவள் மீது நான் வீச “நீ எதுக்குடா வீட்லயே இருக்கணும், ப்ரண்ட்ஸோட பேசிட்டு வா போ ” என்றாள். போர்ஷனின் வாசலில் நின்றிருந்த ரமேஷைப் பார்த்து ‘ஒத்தா லவடாக் கூ, ஒன்னால தாண்டா இவ்ளோ பிரச்சனை’ என்று கூறிவிட்டு சென்றேன். சந்துரு ஆறு மணிக்கு வருவதாக சொல்லியிருந்தான், யாரையும் பார்க்கபிடிக்காமல், எந்த இலக்குமின்றி செங்கல்பட்டின்வீதிகளில் அலைந்து கொண்டிருந்தேன். ரமேஷை அறைந்திருக்க வேண்டும், இவ்வளவு கடுமையாக பேசியிருக்க வேண்டாம், அப்பனிடம் சொல்லக்கூடும், சொன்னாலும் ஒன்றுமில்லை அந்தப் பொறுக்கி ஏதாவது கேட்டால் மண்டையைப் பிளந்து விடலாம், அம்மா தடுத்திரா விட்டால் இன்றே அதை செய்திருப்பேன். சண்டைகளின் போது அவள் தான் என்னை தடுத்து விடுகிறாள் என்பதில் உள்ள இயலாமையையும், கோழைத்தனத்தையும் நான் உணர்ந்தாலும் அந்தச் சமாதானம் எனக்குத் தேவைப்பட்டது. வீடு திரும்பியபோது என் அப்பன் படுத்துக் கொண்டிருந்தான். சாப்பிடும் போது ‘என்னாச்சு’ என்று அம்மாவிடம் கேட்டேன். தலையசைத்தாள். ‘ரமேஷ் போயிட்டானா’

‘அவன் நீ வெளில கெளம்பினவுடனே போயிட்டான்’

‘இவன்ட்ட ஏதாவது சொன்னானா’

‘இல்லையே’

அடுத்த நாள் என் அப்பன் என்ன செய்யப் போகிறான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். என்னிடம் அவன் எதையும் கேட்காதது ஏமாற்றமாகவும் அதே நேரம் நிம்மதியளிப்பதாகவும் இருந்தது.

ரமேஷ் வராமல் ஒன்றிரண்டு நாட்கள் கழிந்த பின் காலையில் வீட்டை விட்டுச் சென்ற என் அப்பன் மாலையில் வந்த அன்று எதுவும் பேசாமல் சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றான். ரமேஷைத் தேடி அவன் வீட்டிற்கு சென்று வந்திருக்கிறான், அவன் வர முடியாதென்று கூறியிருப்பான் என்று நான் யூகித்தது அதன் பின்பும் ரமேஷ் வீட்டிற்கு வராததால் உறுதியானது. என் அப்பன் அடுத்துச் உருவாக்கக்கூடிய பிரச்சனைகளை எதிர்பார்க்க ஆரம்பித்தேன். நான் நினைத்ததைப் போலவே, நேரடியாகச் சண்டையிடுவது, அடிப்பதை தவிர என் அப்பனிடமிருந்த மற்றுமொரு யுத்தியையும் இப்போதும் செயல்படுத்தினான். காலையில் பதினொன்று மணிக்கு மேல் எழுந்திருப்பவன், பல் தேய்க்காமல், குளிக்காமல் சாப்பிட்டு விட்டு மீண்டும் படுத்து, மூன்று நான்கு மணிக்கு எழுந்து காப்பி குடித்து விட்டு தூங்குவான். ஏழு மணிக்கு மீண்டும் துயில் நீக்கம், இரவுணவு, தூக்கம். உண்மையில் அவன் தூங்குகிறானா அல்லது வெறுமனே படுத்துக் கொண்டிருக்கிறானா என்று எனக்கு சந்தேகம் உண்டு. ‘அவன் என்ன வேணா பண்ணுவான், மெடிசன் படிப்ப ஒரு வருஷத்துல விட்டவன்தான, ஸ்கூல் படிக்கும்போதே லீவ் போட்டுட்டு ரெயில்வே ஸ்டேஷன்ல படுத்து தூங்க வேண்டியது, அங்கேயே அக்கவுண்ட்ல சாப்பிட்டு, மேகசின் வாங்க வேண்டியது,’ என்று முன்பொரு சண்டையின்போது இதே போல் நடந்து கொண்டது குறித்து நான் கேட்டதற்கு அம்மா சொன்னாள். உள்ளறையில்தான் அவன் படுத்துக் கொண்டிருப்பான் என்பதால் மற்றவர்கள் அவனை பார்க்க இயலாது என்பதில் எனக்கு நிம்மதி. ‘ஒங்கப்பனுக்கு ரமேஷ பாக்கணும், அப்பறம் எல்லாம் சரியாயிடுவான்,’ என்று அம்மா சொன்னாள். ‘அவன் வீடு எங்க இருக்குனே தெரியல’ என்றவனிடம், ‘பயர் சர்விஸ்மென் குவார்டர்ஸ்ல, அவங்கப்பாக்கு அங்கதான் வேலை,’ என்றாள். தூங்கிக்கொண்டிருந்த அப்பனைச் சுட்டி ‘அவன்கிட்ட கேட்டியா’ என்று கேட்டதற்கு பதில் எதுவும் வரவில்லை. ‘பின்ன எப்படி அவன் வீடு உனக்குத் தெரியும்’

‘…’

‘அவன போய் கூட்டிட்டு வான்னு ஒன்கிட்ட சொல்றானா’ என்று நான் கேட்டதற்கு ‘ரமேஷுக்கே இங்க வரதுக்கு இஷ்டம் இல்ல. இவன் தான் போய் அலையறான்’ என்றாள்

‘அதெப்படி சொல்ற’

‘இந்த ரமேஷ் ஒங்கப்பன் ஏதோ நல்லா பேசறான்னு அவங்ககூட இருந்திருப்பான், அவன பத்தி தெரிஞ்சவுடன கட் பண்ணிட்டான்..’

எதுவும் பேசாமல் இருந்தேன். அம்மாவே தொடர்ந்து ‘மோரே மட்டும் என்ன பிடிச்சா இருந்தான், நல்லா சுருட்டினான். நல்ல காலம் இவன் சீக்கிரத்திலேயே போயிட்டான். நீ வேணா பாரு, ஒங்கப்பன் என்னிக்காவது எவன் கிட்டயாவது அடி வாங்கி சாகப் போறான்’

‘சீக்கிரம் கழட்டிக்கிட்டா ரமேஷ் பொறுக்கி இல்லையான்ன’

‘இல்லடா’

‘ஒனக்கெப்படி தெரியும்’

‘எனக்கு தெரியும்டா ஒங்கப்பன’

எதுவும் சொல்லாமல் எழுந்து சென்றேன். அன்று ரமேஷிடம் நான் சொன்னதை அவன் என் அப்பனிடம் கூறியிருக்கலாம். அல்லது அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து வீட்டிற்கு வந்திருக்கலாம். நான் அவனை அடித்து விரட்டியிருக்க முடியாது. அவனிடம் பேச வேண்டும், ஏன் என் அப்பனிடம் நட்பு கொண்டான், அவன் வயதையொத்த நண்பர்கள் யாரும் அவனுக்கு இல்லையா, அவன் வீட்டில் யாரும் எதையும் கண்டு கொள்வதில்லையா?

oOo

அம்மா வீட்டிற்கு வந்து பத்து பதினைந்து நாட்கள் கழித்து காலை ஆறரை மணி வாக்கில் நாடார் கடைக்குச் சென்றபோது இன்னும் திறக்கப்படாத கடை முன் நாலைந்து பேர் நின்றிருந்தார்கள். ‘நாடாரு லேட்டா தெறக்க மாட்டாரே, நான் நேத்து சாங்காலம் பாத்தபோது கூட நல்லாத்தானே இருந்தாரு’ என்று ஒரு பெண் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அங்கு நின்று கொண்டிருந்த இன்னொரு பெண், பெரிய மணிக்காரத் தெருவைச் செட்டித் தெருவுடன் இணைக்கும் சாலையின் திசையில் கைகாட்டி கத்த, அந்தப் பக்கம் திரும்பினோம். சேஷன் திருமண மண்டபத்தின் வாயிலுக்கு முன் குழுமியிருந்த கும்பல் அதை உடைக்க ஆரம்பித்திருந்தது. நாடார் கடைக்கு அடுத்திருந்த வீட்டிலிருந்து வெளியே வந்தவர் ‘கட இன்னிக்கு தொறக்கறது கஷ்டம், ஸ்ரீபெரம்பத்தூர்ல பாம்ப் வெடிச்சு ராஜீவ் இறந்துட்டாரு,’ என்று சொன்னார். வீட்டிற்கு வந்தபோது, அம்மாவிற்கும் வானொலி வழியே செய்தி தெரிந்து, ‘இத பாருங்கமா, என்ன ஆயிருக்கு பாருங்க,’ என்று அப்பனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

எழுந்தபின் தலையிலடித்துக் கொண்டும், ‘ப்ளட், ப்ளட்’ என்று குழறிப் பேசிக் கொண்டும் என் அப்பன். வியப்பளிக்கும் வகையில் அம்மா ரமேஷ் வீட்டிற்கு செல்ல மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்ததால் மனப் பிழற்வு ஏற்பட்டவன் போல் சில நாட்களாக என் அப்பன் நடந்து கொள்ள ஆரம்பித்திருந்தான். அதைக் கண்டு ரமேஷை அழைத்து வர சென்று விடப் போகிறாள் என்று ‘சும்மா நடிக்கறான்மா’ என்று அம்மாவிடம் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தேன். உண்மையிலேயே அவனுக்கு மனச் சிதைவு ஏற்பட்டால் ஏதேனும் மருத்துவனையில் சேர்த்து தொலைத்துக் கட்டி விடலாம் என்று நான் ஆசைப்பட்டாலும் அது நடக்கக் கூடியது அல்ல என்பதை அறிந்திருந்தேன். ‘நம்ம எல்லாரையும் பைத்தியமாக்கிட்டு அவன் நல்லா இருப்பான்மா’. சிறிது நேரம் புலம்பியவன் ஏழெட்டு நாட்கள் கழித்து அன்று தான் குளித்தவன், வெளியே கிளம்ப ‘வெளில பிரச்சனையா இருக்கும்மா, அப்பறம் போங்க’ என்று அம்மா சொன்னதைக் கேட்காமல் போனான். ‘ரமேஷ் வீட்டுக்குத்தான போறான். ரோட்ல எந்த கும்பல் கிட்டயாவது நல்லா அடி வாங்கி சாகட்டும்’ என்று நான் சொன்னாலும் நிலைமை கட்டுக்குள் வந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்தது.

சில நிமிடங்களுக்குப் பின் என்னுள் தோன்றிய எண்ணத்தைத் தொடர்ந்தபடி நானும் வீட்டை விட்டு வெளியேறினேன். பயர் சர்விஸ்மென் குவார்டர்ஸ் செல்லும் வழி எனக்குத் தெரிந்ததுதான். ராமகிருஷ்ணா ஸ்கூலையொட்டி உள்ள மேட்டின் மீது நடந்து சென்று கொண்டிருந்தான் அப்பன். நானும் மேடேறினேன். அரசு பள்ளியைத் தாண்டி சாலை இரண்டாகப் பிரியும் இடத்தில் வலது புறத்தில் சென்றுகொண்டிருந்தான். இந்த வழி சாதாரண நாட்களிலேயே ஆளரவமற்றதாக இருக்கும், இன்று கேட்கவே வேண்டாம். அந்த இடத்தில் அப்பனை அடித்துக் கொன்று விட்டால், கலவரத்தில் அடிபட்டு செத்தான் என்றுதான் தோன்றும் என்ற எண்ணத்தில்தான் அவன் பின்னால் வந்திருந்தேன். என் கையில் இரும்பு முட்கள் பதிக்கப்பட்டிருந்த நீண்ட கட்டை. அதைக் கொண்டு அவனை பின்னந்தலையில் அடித்து தரையில் சாய்த்து, சாலையில் உருண்டவனின் உடலெங்கும் கட்டையால் அடித்தேன். உயிருடன் விட்டு விடுமாறு என்னிடம் கெஞ்சுபவனின் முகத்தில் என் செருப்பை வைத்து தேய்த்து கூழாக்கி விட்டு நிமிரும் போது அவன் தொலைவில் சென்று கொண்டிருந்தான். இறுக மூடியிருந்த முஷ்டி எதையும் பிடித்துக் கொண்டிருக்கவில்லை. சுற்று முற்றும் பார்த்தேன், கத்தியோ, உருட்டுக் கட்டையோ எங்கு கிடைக்கும்? பெட்ரோல் இருந்தால் கொளுத்தி விடலாம். பாதையில் பெரிய கல்கூட எதுவும் இல்லை. நிற்க முடியவில்லை, சாலையில் குத்திட்டு அமர்ந்தேன்.

சிறிது நேரம் கழித்து எழுந்து வீட்டுக்கு திரும்பும்போது, கஞ்சாவைப் பார்க்கப் போனேன். ‘என்னடா திடீர்னு’ என்றவனிடம் ‘ந்யூஸ் பாத்தேல’ என்றேன். ‘யாருடா பண்ணிருப்பாங்க?’ கஞ்சா தனக்கு அடுத்த போர்ஷனில் இருப்பவர்கள் அடிதடியில் ஈடுபடுபவர்கள் என்று முன்பொருமுறை என்னிடம் சொல்லியிருந்தான். அவர்களிடம் உதவி கேட்கலாம் என்ற புது எண்ணம். என் அப்பனைப் பொறுத்தவரை கை, கால்களை உடைப்பதோடு அவர்கள் நிறுத்திக் கொள்ளத் தேவையில்லை, துண்டு துண்டாக வெட்டிப் போட்டாலும் எனக்கு அது உவப்பானதே. ஆனால் அது குறித்து கஞ்சாவிடம் எதுவும் சொல்லாமல் பொதுவாக பேசிக்கொண்டிருந்து விட்டு கிளம்பினேன். இன்னும் சில அடிகள் எடுத்து அடுத்த போர்ஷனுக்கு சென்றிருந்தால்கூட பெரிதாக எதுவும் நடந்திருக்கப் போவதில்லை. என்னை விட தைரியசாலிகள் என்றாலும், சிறுவனான நான் சொல்வதற்காக அவர்கள் அதை செய்திருக்கப் போவதில்லை, அப்படியே அவர்கள் தயாராக இருந்திருந்தாலும், அவர்களுக்குத் தர என என்னிடம் கூலியென்று எதுவும் அப்போது இல்லை.

என் அப்பன் திரும்பியபோது, வறுத்த கடலை பொட்டலம் விஸ்கி பாட்டிலுடன் வந்தான். அன்றிருந்த சூழ்நிலையில் எங்கிருந்து வாங்கினானோ. கடலையை தட்டில் பரப்பி குடிக்க ஆரம்பித்தான். யாரிடமும் எதுவும் பேசவில்லை. உள்ளறையில் அவன் குடிக்கும் வாசம் ஹாலுக்கும் வர நான் பின்புறச் சுவற்றில் சென்றமர்ந்தேன், காலி மனையில் அன்று எண்ணற்ற முறை கோரமாக, துடிதுடித்து இறந்தான் என் அப்பன். சிரிஞ்ச் இருந்தால், விஷத்தை அதில் ஏற்றி என் அப்பன் தூங்கும் போது ஊசிபோட்டு, பாம்பு கடித்து இறந்து விட்டான் என்று சொல்லிவிடலாம். சிரிஞ்ச் வீட்டில் இல்லாததோடு, ‘பாய்ஸன்’ என்று ஆங்கிலத்தில் எழுதி ஒட்டியிருக்கும் பாட்டிலோ, எலி மருந்தோகூட வீட்டில் இல்லை. பினாயில் நெடி காட்டிக் கொடுத்து விடும் என்பதால் அதை உபயோகிக்க முடியாது.

oOo

மே மாத இறுதி வந்திருந்தது. நூலகம் சென்று திரும்பியவனிடம் ‘ஒங்கம்மா பயந்து போய் பாத்ரூம்ல இருக்காங்க, யார் கூப்டாலும் வர மாட்டேங்கறாங்க,’ என்று சுந்தரி அக்கா சொன்னார். குளியறையின் சுவற்றில் சாய்ந்து, காலை நீட்டியபடி வெறித்த பார்வையுடன் அமர்ந்திருக்கும் அம்மாவின் நைட்டி காற்பகுதி சற்று மேலேறி இருக்க, பாதங்கள் வீங்கியிருந்தன, அழுத்தினால் சதையில் குழி உருவாகி மறையும். ‘உள்ள போ மாட்டேன், போ மாட்டேன்’ என்று அனத்திக் கொண்டிருந்த அம்மாவை எழுப்பி என் போர்ஷனின் வாசலருகே நடத்திக் கூட்டிக் கொண்டு வர, ‘இப்பத் தான் ஆப்பரேஷன் ஆகியிருக்கு, இப்படி ஓடலாமா, தையல் பிரிஞ்சிருமேக்கா’ என்றார் சுந்தரி அக்கா.

ஹாலில் என் அப்பன் நாற்காலியில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தான். அம்மாவின் முழங்கையை பிடித்து உள்ளே செல்ல முயன்றவனிடம், ‘என்ன கொன்னுடுவான், கொன்னுடுவான்’ என்று முனகினாள். பேப்பரை மடித்து வைத்து விட்டு கூரையைப் பார்த்தபடி நாற்காலியில் சாய்ந்த அப்பனின் மீது, என் செருப்பை எறிந்தேன். ‘ராஸ்கல்’ என்று கத்திக் கொண்டு அவன் வெளியே வர, கிணற்றடியில் இருந்த பிளாஸ்டிக் பக்கெட்டை அவன் மீது வீசி, ‘தேவிடியாப் பையா, பாஸ்டர்ட்’ என்று நானும் கத்தினேன். ‘இந்த அசிங்கம்லாம் வெளில தெரியக் கூடாதுன்னுதான இவ்ளோ நாள் கஷ்டப்பட்டேன். நியே இப்படி பண்ணறியேடா, எல்லாரும் பாக்கறாங்கடா’என்று கத்திக் கொண்டே பின்னாலிருந்து தடுத்த அம்மா, அப்பாவுக்கும் எனக்கும் இடையில் புகுந்து, ‘சின்னப் பையன் தெரியாம பண்ணிட்டான், எனக்காக விட்டுடுங்க, விட்டுடுங்க ப்ளீஸ்’ என்றபடி அப்பாவை உள்ளறைக்கு அழைத்துச் சென்றாள். ‘ஒத்தா, லவட புண்ட, மயிராண்டி, கூதி நாயே’ என்று கத்திக் கொண்டிருந்தவனின் கைகளைப் பற்றி மடக்கி ‘அழாதடா, அழாதடா’ என்றபடி சுந்தரி அக்கா, என்னை தன் போர்ஷனுக்கு அழைத்துச் சென்றாள்.

அந்த கோடையில் எந்த கொலையும் நடக்கவில்லை. ஆனால், ஏற்கனவே மிக மெல்லிதாக இருந்த, என் அப்பனுக்கும்எனக்குமான உறவு அன்று மரணித்தது.

மெட்ரோ- ராம்குமார் சிறுகதை

ராம்குமார் 

அப்பாவும் மகனுமாக ரயிலில் சைதாப்பேட்டை வந்திறங்கி, கொத்தால்சாவடித் தெருவில் சென்று நாலாவது சந்தில் திரும்பி அந்த  ப்ளாட் வாசலை அடைந்ததும் வாட்ச்மேன் இவர்கள் இருவரையும் வரவேற்கும் தொனியில், “வாப்பா, இன்னாபா அன்னிக்கு உன்ன புடிக்கவே முடியாம போயிடுச்சு .ரெண்டு நாளு முன்னாடி ரொம்ப சீக்காயிடுச்சுப்பா, ஆஸ்பத்திரிக்கு கூப்ட்டாலும் வர்றல, உனக்கு போன் பண்ணலாம் பாத்தாலும் உன்கிட்ட போன் இல்லையாமே, அந்த கோயிலே கதின்னு கடந்துட்டு இந்த மாரியாத்தா என்ன விட்டுட மாட்டானு சொல்லிக்கிட்டு இருந்துச்சி, நேத்து தான் தேறி வந்துச்சு, பின்னாடிதான் இருக்குது போங்க,” என்று அனுப்பி வைத்தார்.

வேலு தன் பத்து வயது மகனுடன் ப்ளாட்டின் பின்புறம் சென்றான். கூட்டிக்கிட்டு இருந்த ஜானகியம்மா எதெச்சையா இவர்கள் பக்கம் பார்த்து, ‘’அட வாங்க வாங்க,” என்று துடப்பத்தை கீழே போட்டுவிட்டு பேரனை அணைத்து கன்னத்தில் முத்தமிட, பேரன் ஆயாவைப் பார்த்து ரொம்பநாள் ஆனதால் என்ன செய்வது என்று தெரியாமல் புன்னகைத்தான். ”இருங்க,” போய் குழாயில் கை கழுவிவிட்டு ‘’வாங்க போகலாம்,’’ என இவர்களை அழைத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

தன் அறையில் இருந்த வாட்ச்மேனிடம் போய் ஜானகியம்மாள், ‘’ரவி ஒரு ஐநூறு இருந்தா கொடென் அடுத்த மாசம் சம்பளம் வந்த்தும் தந்திடுறேன்’’

“புள்ள பேரன பார்த்ததும் பரபரனு இருக்கா,’’ எனச் சிரித்தபடியே தன் சட்டைப்பையில் இருந்து ஐநூறு ரூபாய் தாளை எடுத்து இவளிடம் தந்தார்.

“வாங்க போலாம்,”  என அவர்களை அழைத்து டீக்கடைக்கு வந்தார்கள்.

”இன்னா கஜா எப்படியிருக்க கல்லால பாக்கவே முடியல”

”டி.நகர் கடைக்கு போயிடுறேன்மா”

தன் பால்ய நண்பன் வேலுவைப்பார்த்து, ”இன்னா வேலு எப்படி இருக்க, வேலைக்குலாம் ஒழுங்கா போறியா? இல்ல பழையபடி சீட்டு , குடினு தான் இருக்கீயா ?”

வேலு பேருக்கு பதில் சொல்லிவிட்டு வெளிய வர, ஆயா பேரனுக்கு பிஸ்கட் எடுத்துக் கொடுக்க, கஜா அத பார்த்துகிட்டே வெளிய வந்து வேலு தோளில் கையைப்போட்டு,  “இன்னா மச்சி ஏதாச்சும் நினைச்சிக்கிடியா? நான் சும்மாதான் கேட்டேன்டா. எப்படி அங்க ஏரியாலாம் செட் ஆகிடுச்சா?”

“என்னத்த செட் ஆகிச்சு, இங்கதான் நமக்கு வேலை இருக்கு. அங்க வாரத்துல நாலு நாள் தான் கிடைக்குது..”

கஜா அதை காதில் வாங்காமல்,  “நம்ம முத்தம்மா  ஆயா செத்துடுச்சு தெரியுமா?”

‘’எப்படி?” என  இவன் துக்கத்தை அவன் காது கொடுக்காததால்  சுரத்தை இல்லாமல் கேட்டான்.

“ஆக்சிடெண்ட்டா ரோடு கிராஸ் பண்ணப்போ…”

”உங்கம்மாவ அங்கேயே கூட்டிட்டு போயிடலாம்ல… இங்கேயே கடந்து லோல்படுது பாவம்… ”

‘’ நான் வா அங்கனு தான் சொல்றேன்… இதான் இங்கதான் பொறந்தேன் இங்கதான் கல்யாணம் கட்டிக்கிட்டேன் இங்க தான் என் உயிர் போகணும்னு பெனாத்திக்கிட்டு இருக்கு’’

‘’ஆமா அதுக்கும் அம்பது, அறுபது வருசமா இருந்த இடத்தவிட்டு போனா பேஜாராதான் இருக்கும் …”

“இன்னாதான் குடிசைய காலி பண்ணி கல்லு வீடு கொடுத்தாலும் நான் இங்கதான் பிழைப்பேன்னு இருக்கு”

மாரியம்மன் கோவிலை தாண்டும்போது பேரனிடம், “இப்போ ஆயா வூடு இதான் கண்ணு,”  என சொல்லி வாசலில் இருந்தே, “ஆத்தா என் புள்ளையும் பேரனையும் காப்பாத்தும்மா,” என சற்று உரக்க சொல்லி வெளியில் எரிந்துக் கொண்டிருந்த சூடத்தை ஒத்தி பேரன் கண்ணில் ஒத்தினார்..

அடுத்த தெருவுக்கு சென்று இன்னொரு ப்ளாட்டினுள் நுழைந்து கீழ்தளத்து காலிங் பெல்லை அழுத்திவிட்டு, “இந்தம்மா வீட்ல நேத்துதான் வேலைக்கு சேர்ந்தேன், உன் புள்ளையும் பேரனும் வந்தா கூட்டிட்டு வாம்மானு சொல்லிச்சு, நல்லவங்க, ரீஜண்டானவங்க,” என சொல்லி இன்னொரு முறை காலிங் பெல்லை அழுத்த முற்படும்போதே கதவு திறக்கப்பட்டது.

அந்தம்மா, ஜானகியம்மாவைப் பார்த்துவிட்டு அவர்களையும் பார்த்தார்.

“புள்ள, பேரன் மா”

”உள்ள வாங்க”

சோபாவில் இருவரும் குறுகியபடி உட்கார்ந்திருந்தனர். அந்தம்மா ஜூஸ் எடுத்து வந்து கொடுக்க, இருவரும் கண்ணால் வீட்டை மனதுக்குள் கிரகித்துக் கொண்டிருந்தனர்..

“குடிங்க, அப்பறம் உங்க வைஃப் எப்படி இருக்காங்க ..”

வேலு சற்று தயங்கி, “அதுக்குன்னாங்க நல்லாருக்கு ”

காலிங் பெல் அடிக்கப்பட்டு கதவு திறக்கப்பட்டு ஒரு வாட்டசாட்டமான ஆள் வியர்வை வழிய உள்ளே வந்து இவர்களை கண்டும் காணாமல் போக, அந்தம்மா அவரிடம், “ஏங்க இவங்க ஜானகியம்மா பையன் , பேரன்,” என அறிமுகப்படுத்த அவர் செயற்கையாய் ஒரு புன்னகையை அவர்கள் மேல் வீசிவிட்டுச் சென்றார்.

“அவர் இப்போ கொஞ்சம் பிசிங்க, இந்த மெட்ரோ ப்ராஜக்ட் ஆரம்பிச்சதுல இருந்து நேரங்காலம் இல்லாம வேலை செய்ய வேண்டியதா இருக்கு… உங்க அம்மாக்கு இங்க எந்த பிரச்சினையும் இல்லே… என் அம்மாவப்போலதான் பாத்துக்குறேன்….”

வேல் சற்று கலக்கத்தோடு, சரி, என்பது போல மௌனமாக தலையசைத்தான்..

“சரி, நான் சமைக்கணும், அம்மாவ அனுப்புறேன்”

அந்த ஆள் ஒரு அரை நிஜாருடன் புத்துணர்ச்சி பொங்க வந்து மற்றொரு சோபாவில் குதித்தமர்ந்தார். அவர் இவர்களை பார்த்து ஏதும் கேட்பார் அல்லது புன்னகைப்பார் என்ற ஆவலில் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர். அவர் டி.வி ரிமொட்டை எடுத்து சேனல்களை மாற்றிக்கொண்டே, இவர்கள் பார்ப்பதை உனர்ந்தவராய் திரும்பி, ஒரு சிறு புன்னகையை வீசி, மீண்டும் டி.வியில் மூழ்கினார்.

பின் இவர்களைப் பார்த்து ”எங்க இருக்கீங்க இப்போ?”

“பெரும்பாக்கம்”

“அது எங்க இருக்கு”

“மேடவாக்கம் தாண்டி போகணும்”

“ஓ சாரி எனக்கு மேடவாக்கமே தெரியாது.. பையன் என்ன படிக்கிறான்.?”

“ஐஞ்சாவது படிக்கணும். ஆறு மாசமா ஸ்கூலுக்கு போகல சார்..அங்கிருந்து இவ்ளோ தூரம் அனுப்ப வேணாம்னு வீட்ல சொல்லிடுச்சு, ஒரு வருசம் படிப்பு போச்சு,” சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஜானகியம்மா சமையல் கட்டிலிருந்து வேலையை முடித்து வெளிவந்து இவர்களை அழைத்து,“வாங்க போகலாம், அவங்ககிட்ட சொல்லிட்டு வாங்க,” என்று சொல்லி, “அம்மா அம்மா கிளம்புறாங்களாம்” என்றதும் உள்ளிருந்து கைகளில் பத்து ரூபாய் தாள்களை எண்ணியபடி வந்த வீட்டுக்காரம்மா பையனிடம் கொடுத்து, “வைச்சுக்க” என்றதும் அவன் கூச்சப்பட, ஜானகியம்மா, “வாங்கிக்கோடா செல்லம், ஆண்ட்டிதானே கொடுக்குறாங்க,” என்றதும் தலையை கழுத்தோடு ஒட்டியபடி வாங்கினான்.

தெருவில் வந்ததும் பையன் அப்பாவின் கையை விடுத்து ஆயாவின் கையை பற்றிக் கொண்டான். ஆயாவும் பேரனை வழியெல்லாம் கொஞ்சிக்கொண்டே வந்தாள்.

ரயில்வே பாலத்தை தாண்டும்போது மதிய வெயில் அவர்களை பின் தொடர்ந்தே வந்த்து. வழியில் வந்த ஜூஸ் கடையில் நின்று, பேரனை பார்த்து ”இன்னா கண்ணு குடிக்கிற”

பையன் சற்று யோசித்தபடி ”ரோஸ்மில்க் ஆயா”என்றான்.

மூவரும் குடித்துவிட்டு போகும்போது பையன் உதட்டோரம் நாவினால் துடைத்துக் கொண்டே சென்றான்.

மீன் மார்க்கெட்டையே கடக்கும்போது, “இப்போலாம் நம்ம ரஜினிய பார்க்கிறியா?” என்றான்

“இல்லியே. அவன் ஏதோ பெயிண்ட் வேலைக்கு போயிட்டானாம்”

பின் ஆம்பூர் பிரியாணி என்று எழுதப்பட்டிருந்த கடையினுள் நுழையும்போதே இருந்த சிக்கன் லெக் பீஸ் படங்களை பார்த்து உள்நுழைந்த பையன் நாக்கில் எச்சில் சுரந்தது. மூன்று பேருக்கும் பிரியாணி தனித்தனி தட்டில் வந்ததும் பையன் ஆர்வமாக சாப்பிட ஆரம்பித்தான். ஜானகியம்மா தன் தட்டில் இருக்கும் கறித்துண்டுகளை களைந்து எடுத்து பேரனுக்கு ரெண்டு துண்டும் பையனுக்கு ஒரு துண்டும் என தட்டில் வைத்ததும் வேலப்பன், “எல்லாத்தையும் எங்களுக்கு வெச்சிட்டு நீ இன்னா துன்னுவ இந்தா,” என மறுபடியும் அவள் வைத்ததை அவளுக்கே வைக்கப் போக, அவள் கத்தி கொண்டு வருபவனை தடுப்பவள் போல தன் தட்டை வெடுக்கென பின் இழுத்து, ”அய்யோயோ எனக்கு வேணாம்பா சூடு அதிகமாயிடுச்சு அதான்” என்று சமாளிக்க அம்மாவை அறிந்தவனாக வேலப்பன் விட்டுவிட்டான்.

வெளியே வந்ததும் வள்ளியக்கா இவர்களைக் கடந்து சென்று யாரு என யூகித்து பின்வந்து, “என்ன ஜானகியக்கா எப்படி இருக்க, என்னப்பா வேலு கண்டுக்கவே மாட்றியேப்பா. அக்கா அங்க இருந்தவரை யக்கா யக்கானு இருந்த…”

“இப்போ எங்க கா இருக்க?”

“இதோ இங்கதான் அந்த மசூதி சந்து இருக்குல அதுல ராமர் கலரு வீட்ல..”

“வீட்ட வித்துட்டு இங்க வந்தப்புறம்தான் நாலுவீட்ல பத்து பாத்திரம் தேய்ச்சாவது காலத்த ஓட்டலாம், அங்கிருந்து நம்ம மனுசாளுங்க வாசனை இல்லனா செத்துடுவோம் போல இருந்துச்சு, அதான்”

“செல்வி எப்படியிருக்கு? கேட்டனு சொல்லுப்பா ”

ரயில்வே நிலையம் வந்ததும் காத்திருக்கும் நேரம் வேலு அம்மாவை, “நீ போ…அந்தம்மா ஏதோ வாங்கி வர சொன்னாங்கள,” என்றான்

“அது பரவால்ல,இப்போ போயிட்ட்டா அப்புறம் எப்போ என் பேரன் கூட இருக்கிறது?”

வேலப்பன், ” நீ வேணா அங்கேய வந்துடேன் .பக்கத்துல கூட எங்காயச்சும் வேலைக்கு போ,” என்றான்.

ஜானகியம்மா புன்னகைத்து, “வீடு வேணாம்பா இந்தக் கட்டை இங்கதான் கிடக்கணும்னு இருக்கு. என்னிக்காவது எதும் வேலை செய்ய முடியாத நெலம வரும்போது வேணா பாக்கலாம், அப்பக்கூட காசி, ராமேச்வரம்னு போயிடுலாம் இருக்கேன்..”

“ஆமா அங்கதான் எங்கப்பன் எடம் வாங்கி மாளிகை கட்டி வைச்சிருக்கான் உனக்கு. அந்த குவட்டர்ச வித்திட்டு இங்க வர்லானாலும் அந்த சனியன் இப்போதான் என் புள்ளைங்க பேருக்கு ஒரு வீடு இருக்க போவுதுனு அலையுது. எதோ அரண்மனைய இவளுக்கு எழுதி கொடுத்துட்ட மாதிரி. மூணு பேரு கைய கால விரிச்சு படுத்து தூங்க முடியுதா..”

“அப்புறம் ஏன் என்ன கூப்பிடுற?”

மௌனமாக இருந்தான்.

“என்னத்த பண்ண”

பையன் இருவரையும் பார்த்துக் கொண்டிருக்க, ரயில் சத்தம் கேட்கவும் பேரனின் கன்னத்தை இழுத்து எச்சில் படிய முத்தமிட்டாள்.பேரன் ஆயாவின் வாயின் துர்நாற்றத்தை வெளிக்காட்டாமல் அவனும்  பதிலுக்கு முத்தமிட்டான்..

வேலு தன் மகனுடன் ரயிலெறி படியில் நின்றபடி டாட்டா காட்ட, ஜானகியும் கண்களை முந்தானையால் துடைக்க, வேலு அதை காணாததுபோல வேறெங்கோ பார்த்தான். பேரனுக்கு அடிவயிற்றில் இருந்து ஏதோ உருண்டு பொங்கி வந்து தொண்டையை அடைத்து கண்கள் கலங்கின.

 

அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: When the River sleeps – ரமேஷ் கல்யாண்

அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018

When the River sleeps – “நதி உறங்கும்போது” என்ற ஈஸ்டரின் கிரெ எழுதிய தி ஹிந்து இலக்கிய பரிசு (2015) பெற்ற ஆங்கில நாவல்.

இவர் நாகாலாந்து பகுதியை சேர்ந்த எழுத்தாளர். (தற்போது நார்வேயில்) இந்தியாவில் இன்னும் பழங்குடி மக்களும், கலாச்சாரமும் கொஞ்சம் நஞ்சம் உயிர்த்திருக்கும் வடகிழக்கு மாநிலங்கள். பூகோள ரீதியாக எளிதில் அடைந்து விட முடியாத பகுதியாக இருப்பதால் இந்த ஏழு சகோதரிகள் மாநிலங்கள் பின்தங்கியே இருக்கின்றன. அங்கே மழையும், மலையும் அதிகம். ஆனால் விளைச்சல்கள் குறைவு. இயற்கையோடு ஒன்றி வாழும் வாழ்க்கையை அந்த மக்கள் இன்றும் விரும்பி வாழ்கிறார்கள். கால மாற்றத்தால் அங்கே ஆங்கிலமும் (கிறித்தவ மதமாற்றங்கள் கூட ஒரு காரணம்) மேற்கத்தைய நாகரிகமும் வேகமாக விரவி வருகிறது. அங்கிருந்து மக்கள் பிற மாநிலங்களுக்கு சென்று சம்பாதித்து ஊருக்கு பணத்தை அனுப்பி வாழ்கிறார்கள்.

ஆனாலும் இந்த மக்கள் தமது கலாச்சார வேர்களை எளிதில் துறந்து விடாதவர்கள்.

சமீபமாக சிக்கிம் மாநிலத்தில் “மைத்” எனும் பாரம்பரிய வழக்கமான மரங்களை காப்பதை அரசாங்கமே சட்டபூர்வமாக செய்திருக்கிறார்கள். அதாவது ஒருவர் ஒரு மரத்தை தனது ரத்த உறவாக – அப்பா அம்மா சகோதரன் சகோதரி யாக பாவித்து அதனை வளர்ப்பதும். மரத்தை தத்தெடுப்பதும் அதனை ஒருபோதும் வெட்டாமல் இருப்பதையும் அரசு சட்டபூர்வமாகிக்கி இருக்கிறது.

இந்த புவியியல் மற்றும் கலாச்சார பின்னணியுடன் இந்த நாவலை அணுகும்போது நாம் அதற்குள் நுழைவது எளிதாகிறது.

=====

எளிமையான சொற்றொடர்களில் கச்சிதமான வார்த்தைகளை கோர்வையாக்கிய ஆற்றொழுக்கு நடை.

உறங்கி கொண்டிருக்கும் அந்த நதியில் மூழ்கி அதிலிருந்து ஒரு கல்லை எடுத்து வந்து வைத்துக்கொண்டால் எல்லா ஐஸ்வர்யங்களும் வந்து சேரும் எனும் பழங்குடி நம்பிக்கையின் பேரில் விலி என்பவன் மேற்கொள்ளும் மலை மற்றும் காட்டுவழிப் பயணம்தான் இந்த நாவல். நாவலெங்கும் பசுமையும், இலைகளின் பச்சை வாசனையும், மழை மண்ணின் ஈரமும், சருகுகள் சப்தமும், புதர்களின் கீறலும், கற்களின் கரடுகளும், வெயிலும் நிழலும் இரவும் அச்சமும் பேய்களும், உருவிலிகளும் விலங்குகளுமாக தளும்பி இருக்கிறது.

குடும்ப நம்பிக்கைகளும், பழங்குடி கலாச்சாரங்களும் இருக்க அதில் மாயத்தன்மை கலந்து இருக்கும் இந்த நாவல் வித்தியாசமானது. மேலும் மார்க்வேஸுடன் ஒப்பிடப்பட்டும் இவர் குறிப்பிடப் படுகிறார். இயல்பிலேயே அமைந்திருக்கும் இந்திய பழங்குடி நம்பிக்கைகளின் ஊடாக சொல்லப்படும் இவருடைய மாயத்தன்மைக்கு மேலதிக இந்தியத் தன்மை இருப்பதால் நமக்கு சற்று நெருக்கமாகவே இது அமைகிறது.

உதாரணத்திற்கு ஒரு பருக்கை –

இந்த மலை வாழ் பகுதியில், ஒருவர் விலங்காக மாற மனதார விரும்பினால், அவரது உள்ளார்ந்த விழைவின் உண்மைத்தன்மைக்கு ஏற்ப, அவர் ஊரிலிருந்து ஒருநாள் திடீரென காணாமல் போய் விலங்கின் ஆன்மாவாக மாறி விலங்காக உதவுவார். ஆகவே காட்டுக்குள்ளே நாம் காணும் விலங்கு அசலான விலங்கா அல்லது உருமாறி திரியும் ஊர் மக்களா என்று பிரித்தறிய முடியாது. அதை அறிய இயல்பிலேயே ஒரு ஆற்றல் தேவை.

ஒரு முறை இவன் காட்டில் தங்குகையில் திடீரென புலியின் சலசலப்பை அறிகிறான். அதை தாக்குவதற்கு தயாராக இருக்கையில் ஏனோ அவனுக்கு இது விலங்கு அல்ல என்று தோன்றுகிறது. உடனே பெருங்குரலெடுத்து காணாமல் போன நண்பர்களின் பெயர்களை உரத்து சொல்லி கூவி, நான் உன் நண்பன். இந்த வனாந்திரத்தில் பிள்ளை. என்னை தொந்தரவு செய்யாதே என்று கூவுகிறான். புலி திரும்பி போய்விடுகிறது. (ராஜன் மகள் கதையில் கண்ணடித்தன்மையுடன் மரத்திலிருந்து ஜன்னல் வழியாக நுழைந்து சுவர்களை ஊடுருவிக்கொண்டு செல்லும் பா.வெங்கடேசனின் புலி நினைவுக்கு வருகிறது )

மாய யதார்த்தவகை என்று இதை அடையாளப்படுத்திக் கொண்டாலும், நமது இந்திய பழங்குடி மற்றும் கிராம பண்பாட்டுப் பின்புலத்தில், இதில் வரும் மாயங்கள் ஆச்சரியமூட்டும் படியானவை அல்ல. இத்தகைய புராணீக அல்லது தொன்ம கதை சொல்லல் முறைகள் நாம் கேள்விப்பட்ட சமூக வாழ்வுக்கு மிக நெருக்கமானதே . அந்த இயல்பின் சுதந்திரத்தில் இந்த நாவல் பயணிப்பது நமக்கு நெருக்கமாக உணர வைக்கிறது.

இந்த நாவலை ஏற்கெனவே படித்தவர்கள் தாண்டிப் போகலாம். பின்னால் ” உரு வெளி நலுங்கும் மாயச்சித்திரம்” என்ற பத்தியில் சந்திக்கலாம்.

இன்னும் வாசித்திராதவர்களுக்கு நாவலைப் பற்றிய சிறு தொகுப்பு. (தோராயமாக 250 வரிகளில்)

நதி உறங்கும்போது. உறங்கும் நதி என்பதே கவித்துவமான ஒன்றாக இருக்கிறது.

பெயர்களை தமிழில் எழுதும்போது உச்சரிப்பு குறைகள் இருக்கலாம். ஆகவே –

Vilie விலி
Ate அதெ
Zote சொதெ
Kani கனி
subala – சுபலா
weretiger – மாயப்புலி
Tragapon – காட்டுக்கோழி

விலி என்ற இளைஞன்தான் கதை நாயகன். உறங்கும் நதி ஒன்றுக்குள் மூழ்கி அதிலிருந்து ஒரு கல்லைக் கொண்டுவந்து வைத்துக்கொண்டால் வளங்கள் பெருகும் என்ற பழங்குடி ஐதீகத்தின்படி அவன் கிளம்பி சென்று திரும்புவதுதான் நாவல்.

“விலி தனது கையை ஆற்றுக்குள் விடுகையில் அதன் குளிர்ச்சி முட்டுகிறது. மூழ்கி சென்று கல்லை தொடுவதற்குள் அலை அவன் மேல் கவிந்து மூச்சு முட்டி பிராணவாயுவுக்கு தடுமாறும்போது பதறி எழுகிறான். அது ஒரு கனவு.”

இப்படித்தான் ஆரம்பமாகிறது 51 குறு அத்தியாயங்கள் கொண்ட நாவல்.

அடர்வனத்தின் பிள்ளையாக, உறங்கும் நதியில் மூழ்கி கல்லெடுப்பது என்பது அவனது சாகசம். கனவு. அவ்வளவே. பிறகு கல்லுக்கு பெரிய அதீத மதிப்பு ஒன்றையும் அவன் தருவதில்லை. அந்த ராட்சசி அதை பறித்துப் போகும்போது அவன் அவளை துரத்திப் பிடிக்காமல் அடிபட்டு விழுந்து கிடைக்கும் அதெ வுக்கு சிகிச்சை செய்கிறான். கிராமத்துக்கு வந்த பின்னும் அதை அவளுக்கு கொடுத்துவிட்டு காட்டுக்கு திரும்புகிறான். ஒரு வன மைந்தனால்தான் இந்த மனோலயலத்தை பெறமுடியுமோ என்ற ஆச்சரியம் உண்டாகிறது.

காட்டிலேயே வாழும் விலி தன் அம்மாவுக்கு ஒரே மகன். அவனை திருமணம் செய்த்துக்கொள்ள எவ்வளவு வற்புறுத்தினாலும் அவனுக்கு விருப்பில்லை. காடுதான் தன் மனைவி என்கிறான். ஆனாலும் ஒரு பெண் மீது அவனுக்கு ஒரு வித ஈர்ப்பு பனித்திரை போல இருக்கிறது. ஆனால் அதைப்பற்றி நாவல் பேசுவதே இல்லை.

அந்த கிராமத்தில் ஒரு பெண்ணுக்கு பேய் பிடித்து விடுகிறது. அவளுக்கு ஒரு காதலன். கடைசியில் இறந்தும் போகிறாள். ஆனால் இப்படியான துர்மரணம் அடைந்தவர்களை ஊருக்குள் புதைக்க கூடாது என்பதால் காட்டில் புதைக்கிறார்கள்.

அவளது சமாதிக்கு தினமும் யாரோ வந்து மலர்களை தூவுகிறார்கள். யாரென்று தெரிவதில்லை. அது அந்த காதலர்கள் என்று ஊர் நம்புகிறது. ஆனால் வ லி காட்டுக்காவலுக்கு சென்றபின் அவை நின்றுபோகிறது.

காட்டில் வாழும் டிராகப்பான் எனும் காட்டுக்கோழி வகை அழிந்துவிடாமல் காப்பதற்கு காட்டிலாகா இவனை காவலுக்கு நியமித்திருக்கிறது. ஆகவே காடே இவன் வீடு. அம்மாவின் மறைவுக்குப் பின் இவன் பயணத்துக்கு தேவையான உணவு வகை, துப்பாக்கி, மூலிகைகளை எடுத்துக்கொண்டு கிளம்புகிறான்.

காட்டிடை குடிலில் கிருஷ்ணா என்பவனை காண்கிறான். அவனுக்கு மனைவி ஒரு குழந்தை. அவர்கள் உபசரிப்பில் தங்குகிறான். நள்ளிரவில் ஒரு ஒநாய்க்கூட்டம் வருகிறது. இவன் அவற்றை துப்பாக்கியால் சுட்டு விரட்டுகிறான். கைக்குழந்தை உயிர் தப்பியது என்று அவர்கள் நன்றி சொல்கிறார்கள். இந்த காட்டுக்கோழி காவலை பார்த்துக்கொள். காட்டிலாக சம்பளம் தரும் என்று சொல்லி ஏற்பாடு செய்துவிட்டு கிளம்புகிறான்.

பயணம் முழுதும் மலைகளை ஏறி இறங்கி காடுகளை தாண்டி செல்லவேண்டும். இடையிடையே ஓரிரு குக்கிராமங்கள் . வழியில் காடுகளில் அங்குள்ள மரத்தின் கிளைகளை வெட்டி தழைகளை வைத்து குடில் கட்டி இரவு தங்குவதுதான் ஒரே வழி. அப்படி தங்கும்போது மாயப்புலி உரு ஒன்று தாக்க வரும்போது அவன் அது நிஜப்புலி அல்ல அது ஆவி உரு என்று அறிந்து நண்பர்களின் பேரை கூவி அழைத்து தப்பிக்கிறான்.

பயணம் தொடர்கிறது. வழியில் நாயுருவிக்காடு ஒன்றை கிடக்கிறான். படுக்கை விரிப்புகள் நெய்வதற்காக அதை பெண்கள் அறுவடை செய்கிறார்கள். இவன் தானும் முயலும்போது அதன் நெளிவுசுளிவு தெரியாமல் கை அறுபடுகிறது. இடெல்லி என்ற ஒரு பெண் மருந்திட்டு இரவு வீட்டுக்கு அழைத்துச் சென்று கஞ்சி தருகிறாள். வெற்றியுடன் பயணம் முடித்து அதிர்ஷ்ட்டக் கல்லுடன் திரும்பி வருவதற்குள் தானே ஒரு பாயை பின்னி முடித்து அன்பளிப்பாக தருவதாக சொல்கிறாள்.

பயணம் தொடர ஒரு காட்டினை கடக்கும்போது மூன்று பேர் உள்ள ஒரு வீட்டில் தங்குகிறான். அவர்களிடம் தேநீர் பருகி இரவைக் கழிக்க. பின்னிரவில் யாரோ வரும் சப்தம் கேட்டு விழிக்க வெளியே மூவரும் சண்டைபோட்டு பேசுகிறார்கள். துப்பாக்கி சுடும் சப்தம் கேட்கிறது. அவர்கள் யாரோ ஒரு அனாமதேய ஆளை சுட்டிருக்கிறார்கள். விலி பயந்து தன் உயிரும் போகுமோ என பயந்து, இந்த கொலைக்காட்சியை கண்ட நாம் வம்பில் சிக்குவோமோ என்று எண்ணி தப்பித்து ஓடுகிறான்.

யாரும் காணாமல் பதுங்கி காடுகளை கிடக்கிறான். காய்ச்சல் வந்து விட, மூலிகை சாறு உண்டு இரண்டு நாட்கள் கிடக்கிறான். புகையிலையை வைத்திருந்தும் மோப்பம் அறியும் காட்டு விலங்குகளுக்கு அஞ்சி புகைக்காமல் வருகிறான்.

ஆனால் யாரோ சில தேடிக்கொண்டு வருவதை அறிந்து புதரில் மறைகிறான். பிறகு தானே சென்று அந்த கொலைக்கு நான் காரணம் அல்ல என்று சொன்னாலும் அவர்கள் அவனை கையை பின்னால் கட்டி ஒரு கிடை குச்சியில் கட்டி தூக்கிப் போகிறார்கள். கிராம பெரியவர் இவன் குற்றவாளி அல்ல என்பதை உணர்ந்து விடுவிக்கிறார்.

மறுபடி பயணம். போகும் வழியில் மோகினிகள் இருப்பார்கள் என்று முதியவர் எச்சரித்து அனுப்புகிறார். வழியில் சற்று தள்ளி ஒரு காடு தெரிகிறது. அது அபாயகரமான மாசுற்ற காடு. அதில் துர்தேவதைகள் இருப்பதால் கிராமம் அதை தவிர்க்கிறது. இவன் அதன் வழியாக கடந்து விடலாம் என்று முனைகிறான். ஒரு சுனை அருகே தடாகத்தில் நீர் அருந்த குனிகிறான். அவனது முக நிழல் தெரிகிறது. ஆனால் பின்னால் மற்றொரு முகம் அவன் மேல் குனிகிறது. பதறி திரும்புகிறான். யாருமில்லை. இது பேய்களின் ஆட்டம் என்று உணர்ந்து வேகமாக கடந்து ஓடிப்போகிறான்.

ஆனாலும் அவன் உணர்வற்று விழுந்து பேய்களின் அலைக்கழிப்பில் பிடிபடுகிறான். கோரமான ஒரு உருவம் அவனை தள்ளி மேலே அமர்ந்து அமுக்குகிறது. இவன் “என் ஆன்மா உன்னை விட சிறந்தது” என்று சொல்லி சொல்லி (பேயிடம் இருந்து தப்பிக்க அப்படி ஒரு பழக்கம் உண்டு) தப்பிக்கிறான். பரட்டை தலையுடன் கூன் முதுகுடன் உருவம் புலப்படாத ஒரு புகை உருவம் அவனை விட்டு சென்று மறைகிறது.

மீண்டும் பயணம். காடுகள் தாண்டி மலை ஏறி இறங்கி ஒரு சிறு எல்லையோர ஊரில் தங்குகிறான். சுபலா என்ற பெண் அவனை அழைத்துப் போய் உபசரிக்கிறாள். அவளது கணவன் மீனவன். இரவு தங்கி கிளம்பும்போது அவர்கள் சொல்லி அனுப்புகிறார்கள் இந்த கடினமான பயணத்தில் ‘மனம்தான் உனது கேடயம்’.

அப்போது கனி எனும் முதியவர் இவனது பயண நோக்கம் அறிந்து கொண்டு உடன் உதவிக்கு வருகிறார். இவனுக்கு சந்தேகம் இருந்தாலும் உஷாராகவே அவருடன் கிளம்புகிறான்.

முதியவர் உள்ளன்புடன் இவனுக்கு வழிகாட்டி உடன் பயணித்து உதவுகிறார். இரவுக்காக காத்திருந்து சப்தம் செய்யாமல் தவழ்ந்தும் ஊர்ந்தும் செல்கிறார்கள். மலைப்பாறைகள் இடையே காணும்போது நதியின் சப்தம் கேட்கிறது. அதுதான் உறங்கும் நதி. ஆனால் அங்கே மனிதனை பிய்த்து உண்ணும் விதவையான துர்தேவதைகள் காவல் காக்கிறார்கள். அவர்கள் விலகி போகும் வரை காத்திருந்து, மிக மெதுவாக அதை அடைந்து நீரில் இறங்குகிறன். அலைகள் எழும்பி அவனை அழுத்த போராடி நதியின் அடியில் சென்று ஒரு கல்லை பற்றிக்கொண்டு வருகிறான்.

அவனை உடனடியாக ஓடி வருமாறு அழைக்கிறார் முதியவர் கனி. ஏனென்றால் விதவைப் பேய்கள் அவனை தின்றுவிடும். ஆனால் அவை அவனை பார்த்துவிட்டு துரத்திக்கொண்டு ஓடி வருகின்றன. இவர்கள் இருவரும் கல்லிலும் முள்ளிலும் விழுந்து எழுந்து ஓடி புரண்டு அந்த எல்லை தாண்டி தப்பித்து வந்து விடுகிறார்கள். அவை எல்லையில் நின்று சபித்தபடி திரும்பி போகின்றன.அவை ரத்தக்காட்டேரிகள்.

அதிர்ஷ்ட்டக்கல்லுடன் முதியவர் கனியுடன் திரும்பி வர சுபலே என்று அந்த பெண் இரவு உணவு தருகிறாள். அந்த கல் இரவில் வண்ண வண்ணமாக ஒளிர்கிறது.இந்த கல்லை பத்திரமாக கொண்டு போ. இது ஐஸ்வர்யங்கள் தருவது மட்டும் அல்ல. இது நல்ல உயர்ந்த ஆன்மாவை அளிக்க வல்லது. அதுதான் இதன் சிறப்பு. இப்படியான கல்லை கொண்டு வீணாகிப் போனவர்கள்தான் அதிகம் என்கிறார் கனி. அவரும் இப்படி கல்லை எடுக்க முனைந்து அந்த காட்டேரிகளிடம் பிடிபட்டு கையை அவை பிய்த்து விடுகின்றன. தப்பித்து வருகிறார். அந்த வடு அவருடலில் இருக்கிறது.

அந்த கல்லை அபகரிக்க பல ஆவிகள் நல்லவர்கள் போல வரும். பேய்போல மிரட்டும். எதற்கும் ஏமாறாதே என்று அறிவுரை சொல்கிறார்கள். அறிவுரைகள் ஏற்று கவனமாக கல்லுடன் கிளம்புகிறான். நீண்ட தூரம் பயணிக்கிறான். மறுபடி அந்த அசுத்தக் காட்டை காண்கிறான். அந்த வெட்ட வெளியில் அந்த காட்டுமட்டும் தனியாக அசைந்து ஆடுகிறது. உஷாராகி தவிர்த்து வேறு வழியே போகிறான்.

அங்கே சிற்றூர் எல்லைக்கு போகும்போது மாலை நேரம். சந்தையில் பலரும் பொருட்களை வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.. ஒரு பெண் அழகாக இருக்கிறாள். இவனை அடிக்கடி பார்க்கிறாள். இவன் பொதுவாகவே பெண்களை விரும்பும் நபர் அல்ல என்பதால் பொருட்படுத்துவதில்லை. சந்தை கலையும்போது ஒரு முதியவர் வந்து நீ புதிய ஆள் போல இருக்கிறாய். இங்கே இருந்தால் மோகினிகள் உன்னை இழுத்துப்போகும் என்று எச்சரித்து அழைத்து போகிறார். உன்னை சந்தையில் அடிக்கடி ஒரு பெண் பார்த்தாளே அவள் ஒரு மோகினி வகை என்று சொல்கிறார்.

திரும்பிக்கொண்டிருக்கும்போது வழியில் ஒரு கோரமான பெண் வந்து அவனிடம் எங்கே வந்தாய் என சண்டைக்கு போகிறாள். ‘அதெ’ என்ற மற்றொரு பெண் வந்த குறுக்கிட்டு அவனை காத்து நீ என்னுடன் வா என அழைத்து போகிறாள். இவன் குழம்பி தவிக்கிறான்.

அதெ நல்லவள். சண்டைக்கு வந்த கோரமுகத்தால் பெயர் சொதெ. அதெ சொல்கிறாள். சண்டைக்கு வந்தவள் என் சகோதரிதான். ஆனால் மோசமானவன். உன்னிடம் இருக்கும் கல்லை பிடுங்கிப் போகவே வந்தாள். இவனுக்கு திடுக்கிடுகிறது. அப்போது அதெ சொல்கிறாள். கவலைப்படாதே. நான் உனக்கு உதவி செய்பவள். உன்னிடம் உள்ள அதிர்ஷ்ட்ட கல் பற்றி மட்டும் அல்ல உன்னுடைய கடந்த காலம் எல்லாமே என்னால் அறிய முடியம். உன் மனதுக்குள் ஒரு பெண் இருந்தாள். அவள் இறந்து போனால். அதற்கு காரணம் ஒரு பிசாசு அவளை கொன்றது என்கிறாள்.

மேலும் இந்த கல் எந்தவிதமான குற்றமோ பாவமோ செய்யாமல் இருப்பதாக அவனது மனசாட்சியே ஒத்துக்கொண்டால்தான் கிடைக்கும். நீ ஒரு கொலை சம்மந்தமான விஷயத்தில் சிக்கி இருக்கிறாய் என்கிறாள். அப்போது அவன் நான் கொலையைப் பார்த்த சாட்சி மட்டுமே என்கிறான்.

இந்த அதெ – சொதெ சகோதரிகள் தனி தனியாக ஒதுங்கி இங்கு வாழ்கிறார்கள். அதெ சொல்கிறாள். ஒரு மோசமான ஆன்மா உள்ளவள் எங்களை பார்த்து எப்போதும் காரி துப்பி கொண்டே போனாள். ஒரு நாள் அவளை சொதெ அவளை ஏதோ செய்துவிட நாங்கள் ஊரை விட்டு விரட்டப்பட்டோம். எங்களிருவரிடமும் துர்சக்திகள் உள்ளன. ஆனால் சொதெ. அதை உபயோகித்து தீங்கு செய்வாள். ஒரு நாள் என்னை ஒரு செடியைக் காட்டி கண்களால் பார்க்க சொன்னாள். பார்த்தேன். மறுநாள் அந்த செடி கருகிப் போனது. அதிலிருந்து நான் ஒரு முறைகூட தீங்கு நினைத்து எதையும் பார்க்கமாட்டேன். ஆனால் சொதெ.மோசமானவள் என்கிறாள்.

ஆனாலும் நாங்கள் ஒதுக்கப்ப் பட்டவர்கள். கிராமத்திலிருந்து எங்களை யாரும் பார்க்க மாட்டார்கள். ஏதாவது அவர்களுக்கு தீய சக்தி அலைக்கழிப்பு இருந்தால் எப்படி நிவர்த்தி செய்வது என்று கேட்க வருவார்கள். பரிகாரம் சொல்வோம். காணிக்கையாக எதையாவது தூரமாக வைத்து விட்டு போவார்கள். எங்களுக்கு குடும்பம், மணவாழ்வு, குழந்தைகள் என்பது கிடையாது என்று வருந்துகிறாள்.

அன்று இரவு இடி போல கதவு தட்டப்பட்டு அடித்து திறக்கப்படுகிறது. திடீரென சொதெ வந்து கூச்சலிட்டு வீட்டுக்குள் புகுந்து கோரமாக கூவி தங்கையை அடித்து நொறுக்கி விலி அதிஷ்ட்டக் கல்லை பையோடு தூக்கிப் போய்விடுகிறாள். அதெ அடிபட்டு கிடக்கிறாள். ஆனால் விலி அது போகட்டும் என விலி அதெயின் காயத்துக்கு மருந்திடுகிறான்.

அந்த கல்லை வைத்து மோசமான விளைவுகளை அவள் செய்வாள் என ஆச்சரித்தாலும் இவன் போகட்டும் என்று கவனிக்கிறான்.

சொதெ இரவு முழுதும் காத்திருந்து மறுநாள் விடியலில் ஒரு மூட்டையுடன் கிளம்பி தன்னை ஊரை விட்டு துரத்திய ஊருக்கு சென்று ஊரையே இருக்கிறாள். வீடுகள் வெடித்து சிதறி எரிகின்றன. பின்தொடர்ந்து சென்ற அதெ யும் விலி யும் அதை பார்க்கிறார்கள். இடையே மூதாதை ஆவிகள் வந்து சொதெ யை கொன்றுவிட இறந்து கிடந்த சொதெ கையில் இருந்த உறைந்து போன அதிர்ஷ்ட கல்லை மீட்டு கொண்டு வருகிறார்கள்.

இப்போது விலி தான் கிளம்புவதாகவும் தன்னுடன் வருமாறு அதெ யை அழைக்க அவள் தனது சகோதரி சொதெ ஆவியாக வந்து தன்னை தேடுவாள். அவள் மோசமானவள் என்றாலும் எனது அக்கா என்கிறாள். வி லி எப்போதுமே அதெ யை நீ நல்லவள். உன்னிடம் தீய சக்தி இருக்கிறது என்று அவள் சொல்வதெல்லாம் பொய் என்கிறான். அவள் உன்னை தீயவளாக நீயே நம்பவேண்டும் என சொல்லிய உத்தி ஏங்கினார். ஆனால் இவள் மறுக்கிறாள். விலி அவளுக்காக தங்கிவிடுகிறான். ஒரு நாள் இரவு சொதெ ஆவி வருகிறது. வீட்டுக்குள் வந்து அலைந்து அழுகிறது.பிறகு திரும்பி போகிறது. அதனை பின் தொடர்ந்து செல்லும் இவர்களை கவனிக்காமல் போக ஊர் எல்லையை தாண்டும்போது அதெ அவளை கூவி அழைக்கிறாள். அந்த உருவம் திரும்பி பார்க்காமலே போய் விடுகிறது. இவள் அழுகிறாள்.

விலி யும் அதெ யும் விலி யின் சொந்த கிராமம் திரும்புகிறார்கள். போகும் வழியில் துப்பாக்கி சுடலில் கொலை நடந்த இடத்தை பார்க்கிறார்கள். அங்கே எதையோ உண்டதால் விலி உடலில் விஷம் ஏறிவிட அதெ ஒரு மூலிகை தந்து காப்பாற்றி விடுகிறாள்.

மீண்டும் பயணம் தொடர நாயுருவி காட்டுக்கு வரும்போது அங்கே தனக்கு கஞ்சி தந்து உதவி, பாய் விரிப்பு பின்னி தருவதாக சொன்ன அந்த பெண் இருந்து விட்டதை அறிகிறான்.

காட்டில் இரவு தங்கும்போது பேயுருவ புலி வருகிறது. அவளை தாக்குகிறது. அவன் அதை அறிந்து பெயர் சொல்லி போகச்சொல்ல அது கந்தகப் புகையாக காற்றில் கரைந்து போகிறது.

அவள் கடந்து போக அதெ புலி கீறிய காயத்தால் மயங்கி விழுகிறாள். இறந்து போகிறாள். அசைவற்று கிடக்கிறாள். அதிர்ஷ்ட கல்லினை வைத்துக்கொண்டு கடவுளர்களை அழைக்க பெரிய புயற்காற்று கிளம்பி அடங்க, அதெ கண் திறக்கிறாள்.

மீண்டும் பயணம் தொடர கிருஷ்ணா அவன் மனைவி குழந்தையுடன் இருந்த குடிலுக்கு வந்து பார்க்கிறார்கள். யாரும் இல்லை. தேடும்போது இருவரும் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்கள். குழந்தை குற்றுயிராய் கிடக்கிறது. விலி அதை அதெ இடம் தருகிறான். அவள் புது தாய் ஆகிறாள்.

கிராமத்தை ஒருவழியாக திரும்பி அடைகிறார்கள். ஊர் வரவேற்கிறது. அதெ தனக்கு இப்படி ஒரு மரியாதை கிடைப்பதை கண்டு கண்ணீர் மல்கி அவனை பார்க்கிறாள். அவன் கிருஷ்ணா மனைவியோடு கொல்லப்பட்டதை சொல்லி கொலையாளியை பிடிக்க ஊர்ப்படை கிளம்புகிறது.

உறங்கும் நதியில் இருந்து கொண்டுவந்த இந்த அதிர்ஷ்டக்கல் பற்றி ஊரே பேசுகிறது. அவனது இனி வரும் வளமான வாழ்வை எண்ணி வியக்கிறது. 28 வயது மூத்த அவன் அவளுக்கு ஒரு தந்தை போலவே அன்பு காட்டி பேசுகிறான்.

விலி அந்த கல்லை ‘அதெ’ விடம் தருகிறான். அது அழகாக மிளிர்கிறது. இது உனக்குத்தான். உனது பூரண வாழ்க்கைக்கு. நான் காட்டுக்கு போகிறேன். அதுதான் என் வாழ்விடம் என்று சொல்லி போகிறான்.

காட்டுக்குள் புகும்போது அவனிடம் கல் இருக்கிறது என்று எண்ணி ஒருவன் பணம் தருகிறேன் அந்த கல்லைக் கொடு என்கிறான். கல் அதெ விடம் இருப்பதை சொல்லாமல், இவன் “அந்த கல் உன்னைப் போன்ற தீயவர்களுக்கானது அல்ல” என்கிறான். கொள்ளையன் இவனைத் தாக்குகிறான். நீண்ட கத்தியால் இவனது வயிற்றில் மாறி மாறி செருகுகிறான். ரத்தம் தோய இவன் போராடும்போது ஒரு மாயப்புலி வந்து அந்த கொள்ளையனைத் தாக்குகிறது. இருவருமே ரத்தவெள்ளத்தில் இருக்க கொள்ளையன் செத்து விழுகிறான். மாயப்புலி காட்டுக்குள் மறைகிறது.

நான்கைந்து நாளுக்கு பிறகு தனியாக விலி சென்றிருப்பதை அறிந்த ஊர் ஆட்கள் சிலர் கவலையுடன் துணைக்கு போகலாம் என்று வரும்போது குடிசை அருகே காட்டு விலங்குகளால் தின்னப்பட்டு உரு இல்லாமல் கிடைக்கும் உருவத்தை கண்டு விலி இறந்து போனான் என்று துக்கம் மேலிட, ஊருக்குள் புதைக்க கூடாது என்பதால் காட்டிலேயே புதைக்கிறார்கள். ஆனால் குடிசைக்குள் ரத்த சுவடுகள் இருப்பதை பார்க்கிறார்கள். தன்னை காத்துக்கொள்ள வீட்டுக்குள் வந்து பிறகு வெளியே கொல்லப்பட்டிருப்பான் என்று எண்ணி வீட்டை மூடிவிட்டு போகிறார்கள். இறந்து போயிருக்க வேண்டிய சாத்தியக் குறிப்புகளுடன் விலி பற்றி பூடகமாகவே முடிகிறது இந்த அத்தியாயம். அத்தியாயத் தலைப்பு “இறந்துபோகாதவனைப் புதைத்தல் ”

சில மாதங்களுக்குப்பின் ஊரின் காட்சியை சொல்கிறார் ஆசிரியர். விலி பற்றிய நெகிழ்வான நினைவுகளோடு, ஒரு குடிலில் திருமணமான அதெ கர்பமாக இருக்கிறாள். வளர்ப்பு பிள்ளையான கிருஷ்ணாவின் பிள்ளைக்கு துணை கருதி மற்றொரு ஆண்மகன் தனக்கு பிறப்பான். இருவரும் சேர்ந்து மற்றொரு கல்லை கொண்டுவர உறங்கும் ஆற்றுக்கு வேட்டைக்கு செல்லவேண்டாமா! என்று அவள் ஆசைப்படுகிறாள் – என்று நாவல் முடிகிறது.

உரு வெளி நலுங்கும் மாயச்சித்திரம்

தொன்மையான வாழ்வு முறைகளின் வழியாக தொடர்ந்து உலவிக்கொண்டு வரும் நம்பிக்கைகள் மூலம் பழைமையை ஒரு வாசனையைப்போல காப்பாற்றிக்கொண்டு வரும் பழங்குடி மக்களின் வாழ்வும் பயணமும் ஊடாக பின்னப்பட்டிருக்கும் இந்த நாவல் முக்கியமான ஒன்று.

இதில் புனைவு எது பழங்குடி நம்பிக்கைகள் எது என பிரித்தறிய முடியாதபடி பின்னப்பட்டிருக்கிறது. இந்த எண்ணமே ஒரு மாய யதார்த்த வெளிக்குள் நம்மை இழுத்துப்போய்விடுகிறது.

நாவல் வெளியில் குக்கிராமங்களில் உள்ள வீடுகளில் தனி அறை ஒன்று இருக்கிறது. பயணப்பட்டு நிற்கும் முகமறியாத புதியவர்கள் தங்குவதற்கு அது. அவர்களுக்கு தாம் உண்ணும் உணவை அளித்து அனுப்பி வைப்பது ஒரு வாழ்க்கை முறையாகவே இருக்கிறது. மனிதம் பேதமற்று தத்தம் வழிகளில் வாழ்கிறது. தீயவர்கள் தட்டுப்படும்போது மக்கள் ஒன்றுகூடி எதிர்த்து துரத்துகிறார்கள்.

மனிதனும் காடும் விலங்குகளும் ஒரே வானத்தின் கீழ் வாழும் உயிரிகளாகவே இருக்கின்றனர். உணவைத்தாண்டி வேறெதற்கும் அவர்கள் காட்டை காட்டுயிர்களை இம்சிப்பதில்லை.

காட்டு செடிகளை மருந்துக்காக வெட்டும்போது அல்லது எடுக்கும்போது பூமியிடம் வணங்கி அனுமதியும் பெற்று நன்றியும் கொள்கிறார்கள். காட்டு செடிகளும் தம்மை உவந்து மனிதர்களுக்கு வழங்குகின்றன.

மீனை மூங்கில் குழாய்களுக்குள் அடைத்து மூங்கிலை நெருப்பில் வாட்டி சமைத்தல், கஞ்சிகளுக்கு மூலிகைகளை போடுதல், உடல் வலி மற்றும் நோய்க்கு ஜின்செங் கஷாயம் அருந்துதல், காய்ச்சலுக்கு திரவ உணவு கொள்ளுதல், காய்ச்சலுக்கு பின் இரண்டு நாட்களுக்கு மிக மெதுவாக உணவை வாயில் மென்று நிதானமாக சாப்பிடுதல் போன்ற பல வழக்கங்களை காண முடிகிறது.

இயற்கை கொள்ளையர்கள் அரிதான வகை டிராகப்பான் எனும் காட்டுக்கோழிகளை வேட்டையாட முயல, காட்டிலாகா சார்பாய் ஊழியர்களாக கதாநாயகனும் அவனது நண்பனாக கிருஷ்ணனும் பாதுகாவலர்களாக இருக்கிறார்கள். டிராகப்பான் என்பது மேகலாயாவின் மாநிலப் பறவை. இதை தங்களது அடையாளத்தைக் காத்துக்கொள்வதற்கான பழங்குடிகளின் விழைவு மற்றும் போராட்டமாகவே வைத்துப் பார்க்கலாம்.

அதைப்போலவே உறங்குகின்ற நதியில் மூழ்கி கிடைக்கும் கல் என்பது இயற்கை மனிதர்களுக்கும் சேர்ந்தது தனக்குள் வைத்திருக்கும் பொக்கிஷம் என்று பொருள் கொள்ளும்போது நாவல் வேறு ஒரு வித எழுச்சி கொள்கிறது. அந்த பொக்கிஷம் இயற்கைக்கானது அல்ல. மனிதர்களுக்கானதே. ஆனால் அதை கையாளும் விதம் குறித்தே இயற்கைக்கு ஒரு அச்சம் இருக்கிறது.

காடும் ஒருவகையில் மனித சமுதாயம் போலவே சித்தரிக்கப் படுகிறது. நல்ல காடு இருப்பது போலவே போலவே அசுத்த ஆன்மா உள்ள காடு சொல்லப்படுகிறது. மூலிகைகள் உள்ள காட்டின் இடையேதான் விஷப் புற்களும் வளர்கின்றன.

ஆனால் நன்மனம் பெற்ற மனிதர்களே வாழ்க்கைக்கான நம்பிக்கையை தருகிறார்கள். காட்டு வழியில் தங்குவதற்காக இடம் கொடுத்த கிருஷ்ணா வீட்டில் இரவில் ஓநாய்கள் வரும்போது, கிருஷ்ணாவின் மனைவி வைத்திருக்கிறாள். கைக்குழந்தை வாசனைக்கு ஒரு நிமிடத்தில் அது பலியாகிவிடும். விலி அவற்றை சுட்டு இவர்களை காப்பாற்றி விடுகிறான். ஒரு துப்பாக்கி கூட இல்லாமல் வாழும் அவனிடம் உனது மகன் வளர்ந்து படித்து முன்னேற வேண்டாமா என்று கேட்டு, எனது வீட்டை விற்று உனக்கு ஒரு துப்பாக்கி வாங்கி தருகிறேன் என்கிறான். நாவலில் மென்மையான நெகிழ்ச்சி தருணங்களில் இது ஒன்று.

உறங்கும் நதி என்பதை ஒருவன் கண்ணால் காண்பதே அரிது. பலவித இடையூறுகளை தாண்டி செல்பவனுக்கே அது காணக் கிடைக்கிறது. மேலும் அந்தர சுத்தி உள்ளவர்களுக்கே அது தன்னை அடையாளம் காட்டுகிறது என்று முதியவர் தனது அனுபவத்தில் சொல்கிறார்.

அதை அடைவது ஒரு சவால். மூழ்கி கல்லை கண்டெடுப்பது சவால். மீண்டு வருவது இன்னொரு சவால். அது மட்டும் அல்லாது அதை தீய கைகளிடம் இருந்து காப்பாற்றி கொண்டுபோவது மாபெரும் சவால்.

இத்தனை இடங்களுக்கும் இடையே, உயிரை பணயம் வைத்தது கொண்டு வந்த அதிருஷ்ட்டக் கல்லை , பயணத்தின் போது அறிமுகம் ஆனா ஒரு துரதிருஷ்ட்டம் பீடித்த பெண்ணிடம் வீட்டுக்கு அழைத்து வந்து தருகிறான். மனித மனத்தின் மிகப் பெரும் விசாலத்தை ஒரு பழங்குடி மனதின் வழியாக ஈஸ்டரின் கிரெ விரித்தெடுக்கும்போது நாம் சிலிர்ப்படைகிறோம்.

அதுவும் ஒரு தீய சக்தி என்று தன்னைத்தானே நம்பிக்கொண்டிருந்தவளை நீ மிக நல்ல சக்தி என்று ஏற்றம் பெற வைத்து அவளது கையில் ஐஸ்வர்யாக் கல்லைக் கொடுக்கும் விலி விடுக்கும் நாவல் செய்தி அற்புதமான ஒன்று.

தனக்கு இப்பிறவியில் திருமணம் குழந்தை என்பது பொய்க்கனவு என்று இருக்கும் தீய சக்தி என்று நம்பிக்கொண்டிருக்கும் அதெ என்ற பெண்ணிடம் , கொலையுண்ட கிருஷ்ணா தம்பதியின் ஒரு அனாதைக் குழந்தையை தருவது, இரு அனாதைகளை ஒருவருக்கு ஒருவர் சார்பாக்கி பொருள் கொள்ளும் வாழ்வை தூண்டிவிடுவது, விலியா ? ஈஸ்டர்ன் கைரா? என்று யோசிக்கலாம்.
மேலும் விலியும் அதெவும் சந்திக்கும் இடம் சற்றும் எதிர்பாராத ஒன்று. சந்தையில் இருந்து முதியவர் இவனை அழைத்துச் செல்லும்போது ராட்சச தமக்கையுடன் போராடி இவனை தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறாள். அவன் அவளுக்கு ஆறுதல் சொல்லி அவளை மாற்றி சகஜ வாழ்விற்கு தயார் படுத்துகிறான். ஏறக்குறைய இறந்து போனவளை கடவுளை அழைத்து மீண்டும் விலி உயிர்ப்பிக்கிறான். நாவல் முழுதும் ஒருவருக்கு ஒருவர் சக மனிதர்கள் எனும் உணர்வே இருக்கிறது. இறுதியில்தான் தந்தை மகள் எனும் சமுதாய அடையாள உறவு சொல்லப்படுகிறது.

இந்த நாவலில் மெய்சிலிர்க்க வைக்கும் வரி ஒன்று வருகிறது.

அதெ வை இறந்து போகும்படி மோசமாக தாக்கிய புலியை விலி அகன்று போகச்சொல்லி கேட்டுக்கொள்ள அது போய்விடுகிறது. மயங்கி கிடந்ததால் அதை பற்றி அறியாத அதெ என்ன பேசினாய் என்று கேட்கிறாள். விலி நடந்ததை சொல்கிறான்.

அப்போது அவள் “ மறுபடி அது வந்தால் நான் எனது விரலை நீட்டி சபிப்பேன்”- என்கிறாள். விலி சிரிக்கிறான். “ தேவையில்லை. மறுபடி நானே பேசி போகச்சொல்வேன். நீ மறந்து விட்டாயா. உன் அக்கா சொன்ன தீய சக்தி என்று எதுவும் உன்னிடம் இல்லை. அது பொய். உன்னை நீயே தீயவள் என்று நம்பவைக்க அவள் சொன்ன பொய். அன்பும் கொடூரமும் ஒரே இடத்தில் இருக்காது என்பதை நினைவில் கொள். ஒன்று மற்றொன்றுக்கு வழி விட்டே ஆகவேண்டும்” .

அப்போது எனக்கு ஆற்றல் கிடையாதா? என்று கேட்கிறாள் அதெ.

அதற்கு அவன் – “இல்லை இல்லை. இப்போதுதான் நீ மிகப் பெரும் ஆற்றல் உள்ளவளாக இருக்கிறாய். நீ யார் என்பதை நீயே உணர்ந்து கொண்டவளாக புது மனுஷியாக இருக்கிறாய். அப்படியான ஆற்றல் எதையும் அழிக்காது. புத்துருவாக்கம்மட்டுமே செய்யும்.” என்று சொல்கிறான்.

தன்னைத் தான் அறிவது எனும் மிகப் பெரிய விஷயத்தை ஒரு பழங்குடி மனிதனின் வாழ்வியல் நிதரிசனம் மூலமாக சாதாரண வார்த்தைகளால் சொல்லியிருப்பது அபாரம். அது ஞான மார்க்க கனத்துடன் இல்லாமல் அடிப்படையில் மனிதன் நல்லவன்தான் எனும் எளிமையான நம்பிக்கை. நல்மனம் ஒன்றே பேராற்றல் பெற்றது. அதற்கு வீழ்ச்சி இல்லை.

நாவலில் ஒரு முதியவர் சொல்கிறார். “ இந்த அதிஷ்ட கல் பெரும் வளங்களை, வளர்ப்பு பிராணிகளை, உணவை தருவதாக மட்டும் நினைக்காதே. இது உயர்ந்த ஆன்மத்தை தர வல்லது. அதுதான் உயர்ந்த வஸ்து என்று சொல்கிறார். இப்படியான கல்லை பெற்ற சிலர் ஊதாரித்தனத்தால் வளங்களை பெற்ற வேகத்தில் நழுவி அழித்திருக்கின்றனர். “ பேராற்றல் கொண்டது செல்வம் அல்ல. அதை கொண்டிருக்கும் மனம்.

இந்த நாவலில் கதாநாயகன் இலட்சிய புருஷனாக எதையும் பேசவோ செய்யவோ இல்லை. மிக சாதாரணமாக செய்துவிட்டு போகிறான்.

கனவு காணும்போதும் சரி, திட்டமிட்டு பயணப்படும் போதும் சரி, வழியில் பிற பழங்குடிகளை சந்திக்கும்போதும் சரி, பெரும்போதும் சரி, தரும்போதும் சரி ஒரு சாதாரண மனிதனாகவே இருக்கிறான்.

கல்லை திருடிவிடக்கூடிய மோகினிகள் நடமாட்டம் உள்ள அந்த ஊரில் மாலை நேரத்தில் எங்கிருந்தோ சண்டையில் இருந்து தன்னை மீட்டு வீட்டுக்கு என்னோடு வா என்று அழைத்து போகும் அதெ யின் கையில் அந்த கல்லை அவன் சாதாரணமாக தரும்போது, வாசகர்களாக நமக்கு இருக்கும் படபடப்பு கூட அவனுக்கு இல்லை.

மேலும் இத்தனை போராட்டம் மற்றும் திட்டமிடல் மூலம் தனது வாழ்நாள் கனவான அந்த அதிர்ஷ்ட கல்லை எடுத்து வருபவ ன் அதை காப்பாற்றிக் கொள்ள விசேஷ முயற்சிகள் எதையும் எடுத்துக் கொள்வதில்லை. அது அவனது பையில் கிடக்கிறது. மூர்க்கமான சொதேவிடம் பறிபோன பிறகும் கவலைப் படுவதில்லை. பிறகு இறந்துபோன அவளது கையில் இருந்து மீட்கும்போதும் கிளர்ச்சியுறுவதில்லை. இறுதியில் அதை எங்கு சேர்க்கவேண்டுமோ அங்கு சேர்த்துவிட்டு காட்டை நோக்கி திரும்புகிறான். இந்த பண்பே நாவலை மேலுயர்த்திவிடுகிறது.
இத்தகைய பாமர மனம் ஒரு துறவு மனநிலைக்கு சற்றும் குறைந்ததல்ல என்பதை நாம் நாவலில் கொஞ்சம் கொஞ்சமாக பனிமூட்டம் விலகும் காலைப் பொழுதைப்போல கண்டுணர முடிகிறது.
காட்டுச்செறிவுகள் மற்றும் காட்டுயிர்கள் பற்றி சொல்ல கிடைத்த நாவல் சூழலில் காட்டு மரங்களின் பெயர்கள், பறவைகளை பற்றிய குறிப்புகள் எதுவும் அதிகம் இல்லை என்பது சுட்டிக்காட்டப் படவேண்டிய ஒன்று. நாவலில் ஒரு பட்டாம் பூச்சி கூட பறக்கவில்லை.
விலி அந்த சண்டையில் இறக்கவில்லை. அது அவன் உடல் அல்ல என்று அதெ நம்புகிறாள். எப்படி என்று கேட்கும்போது பதில் சொல்லாமல் காட்டை பார்வையால் அளக்கிறாள். “சொல்ல தெரியவில்லை” என்கிறாள். காடே அவனாக நமக்கு தெரிகிறது அப்போது.
தனது வயிற்றில் இருப்பது ஒரு ஆண் குழந்தை என நம்புகிறாள். அவன் பிறந்து வளர்ப்புப் பிள்ளையாக இருக்கும் முதல் பிள்ளையோடு சேர்ந்து இருவருமாக வேட்டைக்கும், நீண்ட பயணத்துக்கும் செல்லவேண்டும். ஒருவராக தனியாக அனுப்பமாட்டேன் என்கிறாள்.

விலங்குகள் தின்று அடையாளம் காண முடியாமல் மீந்திருந்த கொள்ளையன் உடலை கதாநாயகன் விலியின் உடல் என்று எண்ணி ஊர்மக்கள் அந்த உடலைப் புதைத்துவிட்டு அவனது குடிசையை பூட்டிவிட்டு போகிறார்கள். துர்மரணம் அடைந்தவர்களை ஊருக்குள் புதைப்பது கிடையாது. (இப்படியான வழக்கம் ஆப்பிரிக்க இனத்திலும் இருப்பதை “சினுவ அச்சிபி” யின் நாவலில் காணலாம்). ஆனால் அவனது குடிசைக்குள் ரத்தக்கறைகள் இருக்கின்றன. இரண்டு உடல்கள் அங்கே இல்லை. ஒன்றுதான் கிடக்கிறது. விலி இறந்துபோனான் என்று நாவலில் வெளிப்படையாக சொல்லாமல் “இறந்து போகாதவனை புதைத்தல்” என்ற அத்தியாய தலைப்போடு மறைபொருளாக விட்டுப்போதல் நாவலுக்குள் வாசகன் நுழையும் திறப்பு.
காடுதான் தன் மனைவி என்று காட்டை நேசித்து, சாகசத்தில் அதிர்ஷ்ட கல்லை வென்று, தன்னைத்தானே தீயவள் என்று நம்பிக்கொண்டிருந்தவளை, மனதளவில் உயர்த்தி மகளாக பாவித்து அந்த கல்லையும் அவளிடமே தந்து, தனது பெரு விருப்பமான காட்டுக்கு திரும்பும் ஒரு நல்லவன் விலி. மலினமான மனதுடைய கொள்ளையனால் கொல்லப்படும் அவலத்தில் முடியும் இந்நாவலில், குற்றுயிராக இருக்கும் அவன் என்ன ஆகி இருப்பான் ?

காட்டை நேசிக்கும் அவன் ஆத்மார்த்தமாக தான் ஒரு காட்டு விலங்காக மாற விரும்பி ஒரு மாயப்புலியாக மாறி இருக்கலாம். அல்லது குடிசையில் வயிற்றுப்பிள்ளையோடு இவனது நினைவோடு பிரசவத்துக்கு காத்திருக்கும் அதெ யின் உதிரத்திலிருந்து குழந்தை உருவில் வெளிப்படலாம்.

உங்களுக்கு என்ன தோன்றுகிறது!

ஏனென்றால் உங்களுக்குத் தோன்றுவதையும் நீங்கள் இந்த நாவலுடன் இணைத்துக்கொள்ளும்போது, இந்த நாவல் தன்னை முழுமையாக ஒரு வாசகரான உங்களிடம் ஒப்படைத்துக்கொள்ளும் சந்தோஷத்தை பெறக்கூடும்.

When the River sleeps
Eastern Kire
Published by Zubaan Books Aug 2015