Author: பதாகை

ராஜ கோபுரம் -காஸ்மிக் தூசி கவிதை

காஸ்மிக் தூசி

மேலூர்சாலை குறுக்கே கடந்து
மேற்குச்சித்திரை வீதியில்
ரங்கநாயகித்தாயார் சன்னதி
தாண்டி நிமிர்ந்தால்

கோயில் வாசல் முன்
செங்குத்தாய்
ஒரு தனிக்கோயில்

அதற்குள் படிப்படியாய்
இன்னும் பலநூறு
சிறு கோயில்

இரு நூற்று
முப்பத்தொன்பது அடி
உயரத்தில்

புறா குருவி வவ்வால்கள்
சீரியல் விளக்குகள் இடையில்
தனக்கென தனிமாடம்
கிடைத்துவிட்ட பெருமையில்

வழக்கத்தைவிட
சற்று அதிகமாய்
வளைந்து நின்றாலும்
அளவாய் புன்னகைக்கும்
கடவுள்கள்

தண்டனைகள்
பிரார்த்தனைகள் போர்க்காட்சிகள்
மத்தியிலும்
தியானத்தை கைவிடாத
தேவர்கள்

நின்ற அமர்ந்த படுத்த
நிலைகளில்
நிமிர்ந்த பெரும் கொங்கை கொண்ட
தேவதைகள்

இன்னும் அதிகமாய்
ஆயுதம் ஏந்த வேண்டி
கூடுதலாய் கைகள் கொண்ட
கிங்கரர்கள்

முட்டைக்கண்
முறுக்கிய மீசையில்
அணிவகுத்து பயமுறுத்தும்
பச்சை நிறத்தசை திரண்ட
பூத கணங்கள்

சிங்கத்தலை கொண்ட
பூத முகங்கள்

கடவுளரின் சேவகர்கள்
சேவகரின் காவலர்கள்
காவலரின் ஏவலர்கள்

மற்றும் அவர்தம்
வளர்ப்பு பிராணிகள்
விருப்ப பல்லக்குகள்

ஆபரணங்கள்
ஆயுதங்கள்
குண்டலங்கள்
இசைக்கருவிகள்
விளக்குச் சரங்கள்

மாலை ஏந்தி
வரவேற்கும் யானைகள்
பல் மருத்துவர் முன்
பரிசோதிக்க
நிற்பது போல்
விரிவாய் வாய் திறந்த யாழிகள்
ஆடை நெகிழ்ந்த அழகிகள்
நெழிவுகள் சுழிவுகள்

நெஞ்சம் புடைத்த வீரர்கள்
வரிசையாய் வாத்துக்கள்
வளைவுகள் சரிவுகள்
மாலைகள் மனிதர்கள்
மாடங்கள் மேடைகள் திண்டுகள்
பூக்கள் கொடிகள் குடைகள்
பறவைகள் தேர்கள்,
இத்யாதிகள்.

அடுக்கடுக்காய்
நெருக்கமாய்
வரிசையாய்
நடுவிலும்
சுற்றிலும்
மேலும்
கீழும்.

இத்தனைக்கும் மேல்
சேட்டுக்கடை இனிப்பின்
சதுரங்கள் போர்த்தி
திரண்டெழுந்த மேடை

அதன்மேல்
வட்டக் கிரீடம் வைத்து
கூரிய முனைகொண்ட
கூம்பின் கீழ்

தலைகீழாய் மூடிக் கவிழ்த்து
ஆண்டுகள் பலநூறு
ஆன பின்பும்

பளபளப்பு மங்காத
பித்தளை கும்பாக்கள்
சுமார் பதிமூன்று

மற்றும்
அவற்றுள்
பயன்பாட்டில் இல்லாத
பழைய தானியம்,
கொஞ்சம் போல.

இதென்ன பிரமாதம் என
தொலை நோக்கியில்
அலட்சியமாய் பார்க்கையில்

ஏதோ ஒரு
வரிசையின் இடுக்கில்
மேளம் கொட்டும் சிற்பமாய்
முறைத்து நிற்கும்
ஒரு மீசை மனிதர்

அவர் மார்பில்
மாலைகள்,
நகைகள்
பூக்கள்
ஆ..ஆ…

!

பசியின் பிள்ளைகள் – அத்தியாயம் 4, 5 தமிழில்: சரவணன் அபி (Children of Hunger – ஆங்கில மூலம் Karl Iagnemma)

தமிழில்: சரவணன் அபி

(Children of Hunger – ஆங்கில மூலம் Karl Iagnemma)

அத்தியாயம் 4

பையனின் குரல் ஏறக்குறைய அவளுக்கு தெரிந்த ஒரு இளைஞனை நினைவுபடுத்தியது; தவிர்க்க முடியாத புன்னகை கொண்ட ஜான் வெல்ஸ், ஒரு வங்கி அதிகாரியின் மகன். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தேவாலயத்தில் அவளுக்கு நேர் எதிரே அமர்ந்துகொண்டு ஒரு மிருகத்தனமான தீவிரத்துடன் அவளையே பார்த்துக் கொண்டிருப்பான். ஒரு நாள் காலை, அவனை அவள் வீடு வரை உடன் நடந்துவர அனுமதித்தாள்; ஏதும் பேசாமல் வியர்வையில் நனைந்த கரத்தினால் அவள் கையைப் பற்றிக் கொண்டான். வீட்டின் முன்வாயிலில் பசி கொண்ட நாய் முனகுவது போல் முனகிக் கொண்டே அவள் கைவிரல்களில் முத்தமிட்டான். தன் நெஞ்சில் அவள் கரத்தை அழுத்தியவன், மெதுவே அவள் கையை தனது கால்சட்டை பொத்தான்களின் மேல் படும்படி கீழிறக்கினான். கைவிரல்களை இறுக்கி மூடிக்கொண்டாலும் ஜூலியா நகர்ந்து செல்லாமல் நின்றிருந்தாள்.

இப்போது நோயாளிகளின் அறையிலிருந்து ஒரு கூச்சல் எழுந்தது. எனக்குத் தெரியாது, பையன் கத்தினான். முடியாது. நீயென்ன செவிடா? எதைப்பற்றியும் எனக்கு கவலையில்லை.

வில்லியம் சமையலறைக்குள் வந்தான். இன்றிரவு உணவுக்கு இறைச்சி இருக்குமா?

கொதித்துக் கொண்டிருந்த பாத்திரத்தைப் சுட்டிக் காட்டி ஆமென்பதுபோல் தலையசைத்தாள்.

அவன் படுக்கையறைக்குள் விரைந்து சென்று அவனது பன்றித் தோல் பையைக் கொண்டு வந்தான். பாத்திரத்திலிருந்து ஒரு பெரிய இறைச்சித் துண்டை எடுத்து கத்தியால் பாதியாக வெட்டித் தனியாக ஒரு தட்டில் வைத்தான். பைக்குள்ளிருந்து நூல்கண்டையெடுத்து ஒரு நீள துண்டொன்று வெட்டி அதன் ஒரு முனையை தட்டிலிருந்த இறைச்சித் துண்டைச் சுற்றிக் கட்டினான். மீத நூல் காற்றடியின் வால் போல் தொங்குமாறு கட்டியிருந்தான்.

என்ன செய்கிறாய் வில்லியம்?

ஒரு பரிசோதனை. செய்யவிட பையனை சம்மதிக்கவைக்க முடிந்தால்.

அவனை துன்புறுத்திவிடாதே.

அவன் ஜூலியாவை ஒரு குழப்பமான, சிறிதே கவலை தொனிக்கும் உணர்வுடன் உற்றுப் பார்த்தான். இல்லை அன்பே. அப்படியெதுவும் ஆகாது.

சொல்லிவிட்டு தட்டுடன் இறைச்சியை எடுத்துக் கொண்டு பையனின் அறைக்கு விரைந்தான்.

பனிப்படிகங்கள் சில்லுகளாக உறைந்த சன்னல் கண்ணாடிகளின் மேல் வீசி அறைந்தன. மீத இறைச்சித் துண்டை ஜூலியா உருளைக்கிழங்குடன் எடுத்து தட்டில் வைத்துக் கொண்டாள். அதிலிருந்து கொழுப்பு உருகி வெண்ணிற தட்டில் பரவுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் சென்றதும் மூடியிருந்த நோயாளிகளின் அறைக்கதவை ஒட்டி தனது நாற்காலியைப் போட்டுக்கொண்டாள்.

அமைதி; படுக்கை விரிப்புகளின் சரசரப்பு; பிறகு பையனின் கிசுகிசுத்த குரல். வேண்டாம், டாக்டர். தயவுசெய்து நிறுத்துங்கள்.

oOo

அன்றிரவு தரைப்பலகைகளின் முனகலோசை கேட்டு விழித்துக் கொண்டாள். எழுந்து அமர்ந்தாள்; மூடியிருந்த அறைக்கதவின் கீழ் கோடாகத் தெரிந்த வெளிச்சக் கீற்றைத் தவிர படுக்கையறை இருட்டாகவிருந்தது. அருகில் வில்லியமின் தலையணை தொடப்படாமல் கிடந்தது. ஒரு குளிர் நடுக்கம் ஜூலியாவின் மேல் பரவியது.  காலணிகளை அணிந்துகொண்டு கதவைத் தள்ளித் திறந்தாள்.

மெழுகுவர்த்திச்சுடரின் ஒளியில் வில்லியம் திரும்பிப் பார்த்தான். கைகளிரண்டும் மேசையின்மேல் கண்ணுக்குத் தெரியாத யாரையோ அணைத்திருப்பதுபோல் கிடந்தன. கண்கள் பாதி மூடிக்கிடக்க, மெல்லிய புன்னகையொன்று இதழோரம் நெளிய, ஏதோவோர் இன்பநினைவில் மிதப்பவன் போலிருந்தான். அவனது குறிப்பேடு மேசையின்மேல், பேனா பக்கங்களின்மேல் கிடக்க, திறந்து கிடந்தது. அவன் திரும்பிய வேகத்தில் ஜூலியா மூச்சை உள்ளிழுத்து அடக்கிக் கொண்டாள்.

இங்கென்ன செய்கிறாய்?

ஜூலியா பலவீனமாக புன்னகைத்தாள். தூங்க முடியவில்லை. ஏதோ சத்தம் கேட்டது போலிருந்தது – தரைப்  பலகைகள் என்று நினைக்கிறேன்.

படுக்கப் போ. பேனாவை எடுத்து எழுதத் துவங்கியபடி சொன்னான். நீ தூங்குவதற்கு ஏதாவது தருகிறேன்.

கதவை இன்னும் அகலமாகத் திறந்தபடி கேட்டாள். என்னவாயிற்று?

ஒன்றுமில்லை. தயவுசெய்து என்னை எழுத விடு.

அவனை  நோக்கி நகர்ந்தாள். அவன் உதடுகள் இறுகின. நான் அதைப் படிக்க வேண்டும்.

கண்களின் கீழ் கருவளையங்கள். கீழுதட்டின் அருகே மசிக்கறை; பெருங்கடலைத் தனியாக படகோட்டிக் கடந்தவன் போல் சோர்வாக ஆனால் ஒரு உற்சாகத்துடன் அவன் இருப்பது தெரிந்தது. தான் எங்காவது அவன் நோக்கில் தென்படுகிறோமா என ஜூலியா தேடினாள். இந்த ஒரு தடவை. தயவுசெய்து படிக்க விடு என்று எண்ணிக் கொண்டாள்.

சரி, நீ படிக்கலாம். ஆனால் பிறகு என்னை நிம்மதியாக எழுதவிட வேண்டும்.

ஜூலியா தலையசைத்தாள்.

அவன் குறிப்பேட்டை அவளை நோக்கித் திருப்பினான். ஓசையில்லா கனவென ஜூலியா அதை நோக்கி நகர்ந்தாள்.

அக்டோபர் 13, 1822

முன்கூறிய நான்கு பரிசோதனைகளும் ஒன்றையே புலப்படுத்துகின்றன: பசி என்கிற உணர்வை உணவு ஈஸோபாகுஸுக்குள் செல்லாமலே கட்டுப்படுத்த முடியும். நொதித்தல் இல்லாமலும்.

சத்துகள் தேவை போல் தோன்றினாலும்…

பசியின் அடிப்படைக் கோட்பாடு: பசி என்கிற உணர்வு இரைப்பை நாளங்கள் விரிவடைவதாலேயே ஏற்படுகிறது; இரைப்பை சுரப்புகள் மீண்டும் சுரந்தவுடன் பசி தீர்ந்து அல்லது இல்லாமல் போகிறது.

(ஏற்கனவே உள்ள மகெண்டியின் கோட்பாட்டை இது மறுதலிப்பதால் மேலும் பல சோதனைகள் அவசியமாகிறது).

தூங்க முடியவில்லை.

தூங்க முடியவில்லை…

மனிதன் என்பவன் யார், அவனைப் பற்றி நாம் அறிந்துகொள்ள?

நீங்கள் அவனை தேவதைகளின்கீழ் பிறப்பித்தீர்கள்; பெருமையும் மகிமையும் கொண்டு அவன் கிரீடத்தை அலங்கரித்தீர்கள்.

oOo

குதிரைவண்டி வீதியிலிருந்து பக்கச் சாலைக்கு வளைந்து திரும்பியது. மருத்துவக் கழகத்தின் அத்தனை சன்னல்களும் ஒளி கொண்டிருந்தன. வெளியே சிந்தி கட்டிடத்தின் சுவர்களிலும் தூண்களிலும் பிரதிபலித்த ஒளியில் உள்ளே சிரிப்பொலிகளுடன் உருவங்கள் அங்குமிங்கும் நடமாடுவது தெரிந்தது. ஏற்கனவே நின்றிருந்த வண்டிகளினருகே ஜூலியாவின் குதிரைவண்டி சென்று நிற்கும்போதே உள்ளே தன் மகனின் உருவம் தென்படுகிறதா என்று அவள் தேடினாள்.

“இன்று ஓர் அற்புதமான மாலையாக இருக்கப் போகிறது.” தன் கோட்டினால் கண்ணாடியின் பனிப்படர்வை துடைத்துக்கொண்டே டாக்டர் பெயர்ஸ் கூறிக்கொண்டார். “டாக்டர் ஹேவுட்-டும் டாக்டர் போஸ்டாக்கும் வந்திருப்பார்கள். நியூ ஹாவெனில் சொற்பொழிவுகள் ஆற்றிக்கொண்டிருக்கும் டாக்டர் கெநாட் கூட இந்த இரவின் விருந்துக்காக பிரத்தியேகமாக வந்திருக்கிறார்.”

அந்தப் பெயர்கள் ஞாபகக் கிளர்ச்சியை ஜூலியாவிற்கு ஏற்படுத்தின. டாக்டர் ஹேவுட் தெரியும். போஸ்டாக், கெநாட்? கடந்து சென்ற வருடங்களில் எத்தனையோ பெயர்கள், எத்தனையோ டாக்டர்கள். அவள் அவர்களைப்  பற்றி வில்லியமிடம் கேட்டுக் கொண்டதில்லை. எங்கோ ஒரு கப்பலின் மணி எதிரொலிக்கிறது; மீன் வாடை மிதக்கும் குளிர்காற்று நதியிலிருந்து அவர்களைக் கடந்து வீசிச் செல்லும் அந்தத் தருணம் அவளுக்கு பாரிஸில் இதே போன்றதொரு மாலையில், பல அடுக்குகள் தொங்கும் சரவிளக்குகளும், இளஞ்சிவப்புநிற பளிங்குக்கற்கள் பாவிய அந்த பெரிய வீட்டில் அவர்கள் கூடியிருந்ததும் நினைவில் எழுந்தது. வில்லியமின் புத்தகம் ஐரோப்பாவில் வெளியானதற்காக ஒரு விருந்து. டாக்டர் கெநாட் தன் மிக ஒல்லியான உருவம் மேசையின் சாய அவளிடம் கேட்டார் – மேடம், உங்கள் குடிலில் அந்த நாட்கள் அற்புதமான ஒரு விஷயம் நடந்து கொண்டிருந்தது உங்களுக்குத் தெரிந்திருந்ததா?

பெண்களை அனுப்பிவிட்டு ஆண்கள் முக்கியமான விஷயங்களை பேச ஆரம்பிக்குமுன், ஜூலியாவை மகிழ்ச்சிப்படுத்த கேட்கப்பட்ட கேள்வியது. ஜூலியா  மரியாதையாகப் புன்னகைத்தாள்.

நிச்சயமாக. நான் கவலைப்பட்டிருக்கிறேன் – வில்லியமின் நடவடிக்கைகள் சீரற்று இருந்தன.

பேச்சு மெதுவே தேய்ந்து நின்றது. வில்லியம் அவளை வெறித்துப் பார்ப்பதாக உணர்ந்தாள். கன்னங்கள் கிழடுதட்டி சதைகழன்ற வில்லியம். எப்போதும்போல் ஒரு வைன் கோப்பை உதட்டுக்குச் செல்லாமல் பாதியிலேயே நிற்கும் வில்லியம். அவர்கள் நீண்ட நாட்களாகவே ஒரு சமனமான இருத்தலுக்கு பழகிவிட்டிருந்தார்கள். வில்லியம் அவ்வப்போது ஜூலியாவையும் அவளது மகனையும் வந்து பார்த்துவிட்டுச் செல்லும் ஒரு நிழலுலக விருந்தாளிபோல். அதுவொரு விசித்திரமான ஏற்பாடு; எப்படியோ, ஒருவர் தேவையை இன்னொருவர் முழுதாக புரிந்து கொண்டது போல்தானிருந்தது என ஜூலியா எண்ணிக்கொண்டாள்.

அவள் சொன்னாள், வில்லியமிற்கு வேறெதுவும் எண்ணத்திலில்லை, அந்த ரோலுவைத் தவிர. அவர் வேறொரு மனிதனாகவே மாறிவிட்டார்.

திருவாளர் கெனாட் ஆமோதிப்பதுபோல் முணுமுணுத்துக்கொண்டார். வில்லியமின் பார்வை ஜூலியாவின் உணவுத்தட்டின் மேலும் பின் சாளரக்கதவுகளின் மேலும் விழுந்தது. அவன் தன் வைன் கோப்பையை மேசைமேல் வைத்துவிட்டு எழுந்து எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அறையைவிட்டு வெளியேறினான். பளிங்குத்தரையில் அவனது ஷூவின் ஒலி நடந்து தேய்வதை ஜூலியா அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். மேசைக்கடியில் அவளது பாதத்தை யாரோ தட்டுவதை உணர்ந்தாள். திருவாளர் கெனாட் அவளது முகத்தையே ஒரு பொறுமையான புன்னகையோடு நோக்கிக் கொண்டிருந்தார்.

அன்றிரவு அந்த விடுதியின் இருட்டு அறையின் படுக்கையில் அவள் விழித்தவாறே கிடந்தாள். நா மதுவின் சுவையாலும் கண்கள் உறக்கமின்மையாலும் கனக்க, மூடிய சன்னல் கண்ணாடிகளின்மேல் பூச்சிகள் ரீங்காரமிட்டபடி வந்து வந்து மோதித் தெறிப்பதைப் பார்த்தபடியே கிடந்தாள். வில்லியம் புரண்டு அவள் பக்கம் திரும்பியபடி அவள் கரத்தைப் பற்றியபடி சொன்னான், நடந்த எல்லாவற்றுக்கும் என்னை மன்னித்துவிடு ஜூலியா. எல்லாவற்றுக்காகவும்.

அவள் அரைத்தூக்கத்தில் ஏதோ முனகினாள்.

தயவுசெய்து அன்பே. அவன் அவள் மணிக்கட்டைப்பற்றி மீண்டும் உலுக்கினான். ஜூலியா?

அவன் குரலின் சலனத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் அவள் நினைவுகூர்ந்தாள். அவன்மேல் அவளுக்கு வருத்தங்களேதும் இல்லை என அடிக்கடி தானே கூறிக்கொள்வாள். ஆனால் ஏன் அவள் தன் கண்களைத் திறக்கவில்லை? ஏன் அவன் அவளது விரல்நுனிகளில் முத்தமிட அனுமதிக்கவில்லை? ஏன் அவனது தலையை தன் மார்பில் புதைக்க விடவில்லை? அவளுக்குள்ளே எரிந்த கடும் உணர்ச்சித் தீயை அவளால் நினைவுகூர முடிந்தது . அருகே வில்லியம் மூச்சிரைப்பதையும் ஆனால் தன் சுவாசம் தெளிவாகவும் ஆழமாகவும் இருப்பதை உணர்ந்தாள்.

“உங்களுக்கு பிரச்னையில்லையென்றால் என்னை அறிமுகப்படுத்தி வைப்பீர்கள் என்று நம்புகிறேன்”, டாக்டர் பெயர்ஸ் கோச் வண்டியின் கதவின்மேல் கைகளைவைத்தவாறே கேட்டார்.

“யாருக்கு?”

“டாக்டர் கெனாட். அவரை அறிமுகப்படுத்திக்கொண்டால் பெருமைப்படுவேன்.”

ஐயோ பாவமே என்று எண்ணிக்கொண்டாள் ஜூலியா. “அதெற்கென்ன, கட்டாயம்,” என்றபடியே மழையீரம் பாவிக் கிடந்த தரையில் கால்களை பதித்து இறங்கினாள். உயர்ந்த வளைவான வாசலுக்கு வழிவிட்டுத் திறந்த கதவுகள்; மாபெரும் ஓக் மர கடிகாரம்; அவளது மேலங்கியை பணிவாக அகற்றி வாங்கும், அலங்காரமாக உடையணிந்த கறுப்பின சேவகன். கொடுமை, என எண்ணிக்கொண்டாள் ஜூலியா, இத்தனை வருடங்களுக்குப் பிறகும் ஒரு பதைபதைப்பு; வயிற்றில் அவிழ மறுக்கும் முடிச்சு.

“கழகம் இன்றிரவு அந்த நாடோடி ரோலுவை மோண்ட்ரீயலிலிருந்து இந்த விருந்தில் கலந்து கொள்ள வரவழைத்திருப்பது உங்களுக்குத் தெரியுமா? இன்னும் அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறாராம். அந்தப் புத்தகத்தின் முக்கியத்துவம் பற்றியெல்லாம் ஒன்றும் தெரிந்திருக்காது என்று நினைக்கிறேன்.”

“ஆமாம், தெரியும்.”

“முதலில் வரமுடியாதென்று சொன்னாராம்.” பொருமினார் டாக்டர் பெயர்ஸ்.  “கழகம் வழங்குவதாகச் சொன்ன  வருகைத்தொகையைப் போல இரண்டு மடங்கு கேட்டாராம்.”

குமிழ்போல் வெடித்த சிரிப்பு ஜூலியாவை லேசாக்கிற்று. நல்லதுதானே, என்று எண்ணிக்கொண்டாள். அவ்வளவு தூரம் அறுத்தும், உட்புறம் நோக்கியும் நடந்த சோதனைகளுக்கு உடன்பட்டதற்கு இன்னும் அதிகமாகவே கேட்டிருக்க வேண்டும். அப்போதே. அவன் எதைக்  கேட்டாலும் வில்லியம் கொடுத்திருப்பான்.

ஒரு நீண்ட பெருமூச்சுடன் தனது முழங்கையை டாக்டர் பெயர்ஸ் பற்றிக்கொள்ளவிட்டு ஜூலியா ஒளிவெள்ளத்தில் மூழ்கிய அந்த அறைக்குள் நுழைந்தாள்.

oOo

அத்தியாயம் 5

நவம்பரில் அவர்களது குடிலை ஒரு கனத்த அமைதி சூழ்ந்திருந்தது. பாத்திரங்களை தடதடவென்று நகர்த்தியும் அலமாரியை அறைந்து சார்த்தியும் ஜூலியா ஏதோவொரு துணை இருப்பதுபோல் தோற்றம் ஏற்படுத்திக் கொண்டிருக்கக் கண்டாள். மதிய உணவுகளுக்குப் பிறகு கம்பிளியை இழுத்துப் போர்த்திக்கொண்டு, கல்போல் உறைந்து கிடந்த பனியில் நதிக்கரையோரம் வரை நடப்பதும், தொலைவில் கரிய உருவங்கள் படைவீட்டை நோக்கி நகர்வதை பார்ப்பதும், நகரும் உருவம் வில்லியமா, ஏதோவொரு சிப்பாயா அல்லது அந்தப் பையனா என்று கணிப்பதுமாக நாட்கள் நகர்ந்தன.

அந்த மாதத்தின் முதல் சனிக்கிழமையன்று பையன் வீட்டை விட்டு காணாமல் போனான். ஜூலியாவும் வில்லியமும் ராணுவ மேஜரின் வீட்டில் இரவு விருந்து அருந்திவிட்டு திரும்பினார்கள். பையனின் அறை காலியாகக் கிடந்தது; அவனது தொப்பியைக் காணவில்லை; தரையில் ஒரு தேநீர்க் கோப்பை உடைபட்டுக் கிடந்தது. அவனது கலப்பின நண்பர்களுடன் குடிக்கப் போயிருப்பான் என்று எண்ணிக் கொண்டு ஜூலியா அவனது படுக்கை விரிப்பை சரிசெய்து விட்டு  உடைந்த கோப்பைத் துண்டுகளை பனியில் கூட்டித் தள்ளினாள்.

மறுநாள் காலை விழிக்கும் போது வில்லியம் அவனது மேசையில் கைகளை மடிமீது வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கக் கண்டாள். அந்தக் குடிலின் அமைதி முழுதும் அவனது திறந்து கிடந்த குறிப்பேட்டிலிருந்து எழுவது போல் தோன்றியது.

அவன் இன்னும் வரவில்லை?

வில்லியம் எதுவும் பேசாமல் உறுமினான்.

அவனது அறைக்குள் பார்த்துக் கொண்டே கேட்டாள், இந்த ஊரிலிருப்பான் என்று நினைக்கிறாயா?

நீண்ட மௌனத்திற்குப் பிறகு அவன் சொன்னான், இருக்கலாம், இல்லை பனிப்படகு ஒன்றை பிடித்து பிக்போர்ட் போயிருக்கலாம்.

அவன் பிக்போர்டில் இருக்கிறான், ஒரு ஆசுவாசத்துடன் ஜூலியா நினைத்துக் கொண்டாள். தனது கைகளை வில்லியமின் தோள்களில் வைத்தவாறு சொன்னாள், விரைவில் வந்துவிடுவான். அல்லது, உனது சோதனைகளை நடத்தி முடிக்க வேறு வழியேதாவது உனக்கு கிடைக்கும்.

முட்டாள் மலட்டுப் பெண்ணே. வேறு வழியேதும் கிடையாது.

அவள் தனது கைகளை அவன் தோள்களிலிருந்து விலக்கிக் கொண்டாள்.

எப்படி என் சோதனைகளை நான் முடிப்பேன்? இன்னொரு நாடோடியை பிடித்து வயிற்றில் சுடவா?

அவள் இல்லையென்று தலையசைத்தாள்.

இல்லை, என் மீதே சோதித்துப் பார்க்கவா?

வேண்டாம் அன்பே, என்னால்…

வில்லியம் குறிப்பேட்டை அறைந்து மூடிவிட்டு, தனது கோட்டை எடுத்துக்கொண்டு உறைபனிக்குள் வெளியேறினான்.

நாட்கள் இருளுக்குள் மூழ்கி நகர்ந்தன. கிடைக்கும் சொற்ப ஒளியும் ஜூலியாவின் காலைச் சோம்பல் கலைவதற்குள்  கடந்து போனது. துவைக்காத துணிகள்  அறையின் மூலையில் குவிந்து கிடக்க, மேப்பிள் மரத்துண்டுகள்  சடசடத்து எரிவதை வேடிக்கை பார்த்தவாறு கணப்பினருகே சுருண்டபடி நாட்கள் கடந்தன. வெப்பம் இல்லாத நெருப்பு. வில்லியமின் மைக்கூடு உறைந்திருக்கக் காண்பதோடு ஒவ்வொரு நாளும் விடிந்தது.

அந்த வெள்ளிக்கிழமை சூசனுக்கு அவள் கடிதம் எழுதிக் கொண்டிருந்தபோது, குடிலின் பின்புறக்கதவு அறைந்து சார்த்தும் சத்தம் கேட்டது. அவள் கைகள் ஒரு கணம் ஸ்தம்பித்தன. அவள் எழுதினாள், அவன் திரும்ப வந்துவிட்டான்.  மெதுவே அவனது அறைக்கதவைத் திறந்து பார்த்தாள்: சுவரில் சாய்ந்தபடி பையன் தரையில் அமர்ந்திருந்தான். தலை முன்கவிழ்ந்திருக்க, அவன் கால்களுக்கிடையே கலங்கின மஞ்சள் நிறத்திரவம் கோடாக வழிந்து கிடந்தது.

தலையை உயர்த்தி அவளை பார்த்தான். சிரித்தபடி எழுந்து அவளை நோக்கி நடக்க முயற்சித்து, தடுமாறி ஒரு காலில் முழந்தாளிட்டு விழுந்தான். வலியில் முனகியபடி சட்டையை நெஞ்சும்வரைக்கும் மேலிழுத்துவிட்டுக்கொண்டு தரையில் புரண்டான்.

காயம் வாய்பிளந்து தெரிந்தது. சிவந்த அதன் ஓரங்கள் இன்னும் கூடாமல், உள்ளிருந்து அந்தத் திரவம் அவன் நெஞ்சின் மேலாக மரப்பலகை மேல் வழிந்தது. பையன் ஒரு கையை காயத்தின்மேல் வைத்து வெளிவந்த திரவம் உட்செல்ல செய்வதைப்போல அழுத்திப்பிடித்துக் கொண்டான். இன்னொரு கையால் தரையில் வழிந்துகிடந்த திரவத்தில் கிடந்த உருளைக்கிழங்கு துண்டொன்றை எடுத்து வலியில் விகாரமாக சிரித்தபடி வாய்க்குள் போட்டுக் கொண்டான். படுக்கையினருகே இருந்த மணியை எடுத்து அவளை பார்த்தபடியே அடித்தான்.

அசையாதே. தயவுசெய்து அப்படியே இரு. நான் உதவி செய்கிறேன், என்றாள்.

அவன் கஷ்டப்பட்டு தனது தோள்களை படுக்கையின்மேல் இழுத்துக் கொள்ள, அவள் அவனது கால்களை தூக்கி மேலே படுக்க வைத்தாள். தலைமுடி சேறும் சகதியுமாக, சிறு மணற்துகள்களோடு சிக்குப் பிடித்துக் கிடந்தது. மதுவும், பைப் புகையும், வாந்தியும் கலந்த நாற்றம் வீசியது.

உனக்கொரு குவளை தேநீர் கொண்டு வருகிறேன்.

வேண்டாம், இரு ஜூலியா. அவள் பெயரை மூன்று தனித்தனியான அசைகளாக உச்சரித்தான்.

நீ நகரக் கூடாது. நான் என் கணவனை வரச்சொல்கிறேன்.

அவர் என்னை கொல்லப் பார்க்கிறார்.

அவன் இதை சொல்லிவிட்டு சிரிப்பான் என்று நினைத்தாள். ஆனால், அவன் தீர்க்கமாக சொல்வது போலிருந்தது. உளறாதே, அவர் உன்னை காப்பாற்றியிருக்கிறார், என்றாள்.

அவன் சிரமப்பட்டு ஒருபுறம் ஒருக்களித்தபடி சொன்னான், இல்லை ஜூலியா அவர் என்னை மோசமாக நடத்துகிறார். பட்டினி போடுகிறார். எதையெதையோ என் வயிற்றுக்குள் திணிக்கிறார்.

அவன் கண்களின் ஓரம் சிவந்திருந்தது. அழப்போகிறான் என்று நினைத்தாள்; மறுகணம் கைகொட்டி சிரித்தான். தயவு செய் ஜூலியா. நீதான் என் தாய்.  உண்மையில் நீதான் என்னைக்  காப்பாற்றினாய்.

நீ குடித்திருக்கிறாய். அவமானம்.

சிரித்தான்.

வில்லியம் உன்னை கஷ்டப்படுத்துகிறார் என்றால் ஏன் திரும்ப வந்தாய்?

அவன் சிரிப்பு நின்றது. வெற்றுப்பார்வையுடன் அவளை வெறித்துப்பார்த்தபடி அவளது தொடையில் தனது குளிர்ந்த கையை வைத்தான்.

நான் போய் தேநீர் கொண்டு வருகிறேன்.

தயவு செய்து ஜூலியா, அவன் கிசுகிசுத்தான்.

அவள் கால்களை நகர்த்திக் கொண்டாள். குளிரூசிகள் செருகியதுபோல் தொடை கூசியது.

அவன் படுக்கையில் அப்படியே சரிந்தான். எனக்கு எதுவும் கொண்டு வராதே. நான் இன்னும் பத்து நிமிடத்தில் போய்விடுவேன்.

அவள் தேநீர் கொண்டுவந்தபோது அவன் தூங்கிவிட்டிருந்தான். வில்லியம் மருத்துவமனையிலிருந்து பனியில் நனைந்தபடி வந்து, காலணிகளைக் கழற்றிவிட்டு கால்களை கணப்பினருகே நீட்டியபடி அமர்ந்திருக்கையில் ஜூலியா சென்று சொன்னாள், பையன் வந்துவிட்டான்.

அவளை உற்றுப் பார்த்தவன் பையனின் அறைக்கதவை பார்த்தபடி கேட்டான், இப்போது உள்ளேயா இருக்கிறான்?

தூங்குகிறான். வரும்போது குடித்திருந்தான்.

வில்லியம் கதவை மிக மெதுவாகத் திறந்து உள்ளே பார்த்துவிட்டு மீண்டும் மூடியவாறு சன்னமான குரலில் கேட்டான், என்ன சொன்னான்? எங்கிருந்தானாம்?

தெரியவில்லை. வந்தவுடன் தூங்கிவிட்டான்.

வில்லியம் அவளை நோக்கி நகர்ந்தவன், சட்டென்று ஒரு அரைவட்டமாகத் திரும்பினான். முஷ்டி இறுகியிருந்தது . கடவுளே, நன்றி. மிக்க நன்றி கடவுளே. ஜூலியாவை இறுக அணைத்தான். மோவாய், மூக்கு, கன்னங்கள் என மாறி மாறி முத்தமிட்டான். அன்பே, இறைவனுக்கு நன்றி சொல். சத்தமில்லாமல் சிரித்தான். ஆயிரம் முறை நன்றி என் தேவனுக்கு.

வில்லியமின் முழு உடலும் நடுங்கியது. ஜூலியா அவனை அணைக்கும்போது அவளையறியாமல் ஒரு விம்மல் எழுந்தது. அவளால் அவனை மகிழ்ச்சியில் நடுங்கவைக்க முடிந்ததில்லை; இறைவனுக்கு நன்றி கூற வைக்க இயன்றதில்லை; ஆனந்தத்தில் கூத்தாட செய்ய முடிந்ததில்லை. அவன் கழுத்து திடீரென்று வியர்த்திருந்தது.

அவள் மெதுவாக, அவன் என்னைத் தொட்டான், என்றாள்.

வில்லியமின் கண்கள் மூடியிருந்தன. என்ன சொல்கிறாய்? எப்போது?

இங்கே. அவள் அவனது கையைப் பற்றி அவள் தொடை மேல் வைத்தாள். அவன் இங்கே தனது கையை வைத்தான். இப்படி.

வில்லியம் கண்களைத் திறந்தான். அவன் உன் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்திருப்பான்.

ஜூலியா தலையை அசைத்தாள். இல்லை, நான் நகர்ந்து விட்டேன். நீ சீக்கிரம் வந்து விடுவாய் என்று சொன்னேன். அதற்கு அவள் இன்னும் பத்து நிமிடத்தில் போய்விடுவேன் என்றான். நான் அவனுக்கு தேநீர் –

இரு இரு. ஏன் அவன் போய்விடுவேன் என்று சொன்னான்?

ஜூலியா அவனை கூர்ந்து பார்த்தாள். நான் என் காலை விலக்கிக் கொண்டதும்…

வில்லியமின் முகம் சோர்ந்தது. ஒன்றும் பேசாமல் மேசையைச் சுற்றி இரண்டு முறை நடந்தான்.  தனக்குள் ஏதோ பேசிக்கொண்டான். நெருப்பின் முன் வந்து அமர்ந்து கொண்டான். மெதுவாக சிரித்துக்கொண்டான். ஜூலியா, அன்பே ஜூலியா. அந்தப் பையன் ஒரு அற்புதம். மேலே பேசமுடியாமல் முகத்தைத் துடைத்துக் கொண்டான். ஜூலியா அவன் அழுகிறான் என்று புரிந்துகொண்டாள். அவனை இங்கே வைத்திருக்க வேண்டும் ஜூலியா. இன்னும் ஒருசில மாதங்களாவது அவன் இங்கே இருந்தாக வேண்டும். புரிகிறதா? இருந்தே ஆக வேண்டும்.

அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

அவன் ஒருகணம் அமைதியாக இருந்தான். பின் ஒரு குற்றப் பிரார்த்தனை போல அவள் பெயரை மெதுவாக உச்சரித்தான்.

அவளுக்குள் ஒரு குளிர் பரவியது. உதடுகளும் விரல்களும் பனிக்கட்டியில் செதுக்கியது போல் குளிர்ந்தன.  மேசைக்குமேல் சாய்ந்த தலையுடன் நின்றிருக்கும் அந்த நீலக்குருவி, அந்த மரச்செதுக்கு – அவற்றின் பெயர்கள் அவள் நினைவுக்கு வர மறுத்தன. கீழே மண்டியிட்டிருக்கும் அவள் கணவனுக்கு மேல் குனிந்து நின்றிருக்கும் அவள் உருவம் கண்ணாடியில் தெரிந்தது. வெளியே, இருளும், காற்றும் சூழ்ந்த கானகம்; கொடுங்குளிரில் நனைந்த இரவு. அவள் தனக்குள்ளே வினவிக் கொண்டாள், பறவைகள் ஏன் வலசை போகின்றன? ஏனென்றால் அவற்றுக்கு வெப்பம் வேண்டும். ஏன் மரங்கள் உயரே வளர்கின்றன? ஏனென்றால் அவை சூரியனை விரும்புகின்றன.

வில்லியம் வேண்டினான். தயவு செய்து ஜூலியா.

அவனது ஈர கேசத்தை நீவிக் கொடுத்தாள். பையனின் இருப்பு அந்த அறைக்குள்ளிருந்து ஒரு தொலைதூர நெருப்பு போல அந்தக் குடில்முழுதும் பரவுவதுபோல் இருந்தது. அவளது குளிர்ச்சிக்குள்ளும் ஒரு சுடரின் தகிப்பை ஜூலியா உணர்ந்தாள்.

இன்றிரவு அவனிடம் நான் பேசுகிறேன் என்றாள்.

oOo

கழகத்தின் கூட்ட அரங்கு அவள் உள்ளே நுழையும்போது நெரிசலாகவும் மெல்லிய பேச்சொலிகளால் நிரம்பியதாகவும் இருந்தது. டாக்டர் ஹேவூட், அவர் மனைவி, டாக்டர் செகி, டாக்டர் மோஞ்சஸ் அவள் கண்ணில் பட்டனர். பின்னர் அவள் மகன், ஜேக்கப் அவள் கண்களில் பட்டான். ஆரஞ்சு நிற தலைமுடி மழையீரத்தில் படிந்திருக்க, வயலின் வாத்தியங்களருகே நின்றிருந்தான். ஜூலியாவைப் பார்த்ததும் ஒரு விரிந்த புன்னகையுடன் கையைத் தூக்கி ஆட்டினான். இப்போது அவன் அந்த அறையைக் கடந்து, புன்னகை மாறாமல் அவளருகே வந்து நின்று அவள் முகத்தில் ஏதேனும் கவலை தென்படுகிறதா என்று உற்றுப் பார்ப்பான். கையிலிருக்கும் ஷாம்பெய்ன் கோப்பையை அவளிடம் நீட்டுவான். அவள் மறுக்கும்போது, ஓரிரு மிடறு குடிப்பான் – அது அருமையான சுவை என்பதைக் காட்டுவது போல, ஊக்கம் தேவைப்படும் ஒரு குழந்தைக்கு செய்து காட்டுவது போல. இந்த எண்ணமே ஜூலியாவிற்கு நிறைவைத் தந்தது.

அவள் மெதுவாக அறையைச் சுற்றி நோட்டமிட்டாள். இப்போது ரோலு, அந்தப் பையன் எப்படி இருப்பான் என்று அவளால் யூகிக்க முடியவில்லை.  மிகப் பலகாலங்களுக்கு அவனை வெளுத்த, சிக்கு விழுந்த தலைமுடியுடன், காய்த்துப்போன விரல்களுடன், எப்போதும் புன்னகைக்கும் ஒரு நாடோடி பையனைத்தான் மனதில் நிலைநிறுத்தி வைத்திருந்தாள். இப்போது அவன் சிறுவனல்ல; எப்படி அவள் இளம்பெண்ணல்லவோ அதுபோல். அவனைப் பார்க்கும்போது என்ன சொல்வேன், அவள் சிந்தித்தாள். அவன் இன்னும் படகோட்டும் பாடல்கள் பாடுகிறானா என்று கேட்க வேண்டும். யாரை மணந்துகொண்டான் என்று கேட்க வேண்டும். அவன் மனைவியை நேசிக்கிறானா என்று கேட்கவேண்டும்; எப்போதும் அவளை நேசித்திருக்கிறானா என்று கேட்கவேண்டும். அவன் பிள்ளைகள் அவன் வருகைக்காக அவன் வீட்டில் காத்திருக்கிறார்களா என்று கேட்கவேண்டும். அல்லது அவர்கள் நீண்ட நாட்களுக்கு முன்பே அவர்களது மனம்போனபடி தத்தம் வழியைத்தேடி சென்றுவிட்டார்களா என்று கேட்கவேண்டும். அவளுக்கு நேர்ந்ததெல்லாம், அவள் வாழ்வின் கசப்புகள், இன்பங்கள், துன்பங்கள், நம்பிக்கைகள் – எல்லாவற்றிற்கும் அவன்தான் காரணம் என்பதை அவனிடம் சொல்ல வேண்டும். ஆனால் இதையெல்லாம் எப்படி விளக்குவாள்? அவனது காயம் ஆறிவிட்டதா என்றும் கேட்கவேண்டும்.

நன்றி சொல்ல வேண்டும், என்று இறுதியாக எண்ணினாள். அந்த குளிர்மாதங்களில் அவனது வெம்மைக்கு நன்றி சொல்ல வேண்டும்.

அரங்கின் கூட்டம் விலகி வழிவிட்டது. சன்னலருகே செந்நிறமுடியுடன் குறுகிய சிறிய உருவத்துடன் அந்த மனிதனை அவள் கண்டாள். ஒரு நடுக்கம் உடலெங்கும் படர அவரை நோக்கி நகர்ந்தாள். அவள் அவரிடம் என்ன சொல்வாள் என்று நிச்சயமாக அவளுக்கு இப்போது தெரிந்திருந்தது, ஏற்கனவே பதிந்துவிட்ட நினைவைப் போல: வணக்கம் சொல்வாள், குனிந்து சுருக்கம்படர்ந்த அந்த மோவாயில் ஒரு முத்தம் பதிப்பாள். பின் அவரை ஜேக்கப்பிற்கு அறிமுகப்படுத்துவாள் , ஏதோ அவர்களிருவரும் அந்நியர்கள் என.

“திரு ரோலு அவர்களே,” அவள் சொல்வாள், “இதோ என் மகன்.”

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

oOo

19 அக்டோபர் 1972-ல் பிறந்த கார்ல் இயாக்னெம்மா அமெரிக்க விஞ்ஞானி, எழுத்தாளர். புகழ் பெற்ற MIT-ல் இயந்திர பொறியியல் துறையில் Ph. D பட்டம் பெற்ற கார்ல், இயந்திரவியல், ரோபாடிக்ஸ் துறைகளில் பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருக்கிறார்.

பல பரிசுகள் பெற்ற நாவல்கள், சிறுகதைகள் எழுதிய இவரது பெரும்பாலான கதைகளின் கருப்பொருள் அறிவியல், கணிதம், மனித-இயந்திர உறவுகள் மற்றும் இத்துறை சார்ந்த உளச்சிக்கல்கள்.

ஒளிப்பட உதவி – PBS

நினைவு – ஏ. நஸ்புள்ளாஹ் கவிதை

ஏ. நஸ்புள்ளாஹ்

நினைவு நகர்ந்து நகர்ந்து
கடலில் இறங்குகிறது

எனது படுக்கையறையிலிருந்து
நழுவிய நினைவு அது

பால்யம் தாழ்ப்பாள் இட்டுக் கொள்ள
பிரிந்து
ஒதுங்கிய நினைவு அது

இரவைக் கடப்பதைப் போல
அல்லது
ஒரு கடலைக் கடப்பதைப் போல
நினைவைக் கடக்க முடியவில்லை

நினைவோடு சேர்ந்து
நானும் கடலில் இறங்குகிறேன்

இச்சம்பவத்தை மேசைமீது
வைத்திருக்கிறேன்
முடியுமானவர்கள் கவிதை எழுதிக் கொள்ளுங்கள்.

எழுத்தாளர் சி.எஸ்.கே. உடன் ஒரு நேர்முகம் – நரோபா

நரோபா

பிறப்பு / குடும்பம் / படிப்பு / பணி பற்றி? 

கோவை சிங்காநல்லூரில் 1984ல் பிறந்தேன். ஆபரேஷன் ப்ளூஸ்டாருக்கு இரண்டு மாதங்கள் பின்; இந்திரா காந்தி படுகொலைக்கு இரண்டு மாதங்கள் முன். நடுத்தர வர்க்கக் குடும்பம். தாத்தா சுதந்திரப் போராட்டத் தியாகி. 1942 ஆகஸ்ட் புரட்சியின் போது சிங்காநல்லூர் ரயில் கவிழ்ப்பு வழக்கில் பெல்லாரி சிறை சென்றவர். சுகாதார ஆய்வாளராகப் பணியாற்றிய‌ என் தந்தைக்குப் பணிமாற்றல் வர, பள்ளிப்படிப்பு முழுக்க ஈரோட்டில். பின் சென்னை அண்ணா பல்கலை.யில் (கிண்டி பொறியியல் கல்லூரி) கணிப்பொறி இயல் படிப்பு. கடந்த பத்தாண்டுகளாக பெங்களூரில் மென்பொருள் தர உத்தரவாதப் பொறியாளர் பணி. காதல் திருமணம். இரண்டு ஆண் பிள்ளைகள்.

முதன் முதலாக எழுதிய கதை / கவிதை?

பள்ளி நாட்களில் பதின்மத்தின் தொடக்கத்தில் எழுத ஆரம்பித்தேன். வாரமலர் பாணி கவிதைகள். 1998 வாக்கில் ‘ப்ரியமுடன் கொலைகாரன்’ என்ற தலைப்பில் ராஜேஷ் குமார் பாதிப்பில் ஒரு நாவல் எழுதினேன். பின் 2001ல் குமுதம் நடத்திய சிறுகதைப் போட்டிக்கு ‘நியூட்டனின் மூன்றாம் விதி’ என்ற முதல் சிறுகதையை எழுதினேன். இவை இரண்டையுமே இன்னும் பிரசுரிக்கவில்லை. கல்லூரிக் காலங்களில் நிறையக் கவிதைகள் – பெரும்பாலும் வைரமுத்து பாணி புதுக்கவிதைகள். ‘பரத்தை கூற்று’, ‘தேவதை புராணம்’, ‘காதல் அணுக்கள்’ என இதுவரை நான் எழுதியுள்ள கவிதைத் தொகுப்புகளின் ஆதி வடிவம் அந்நாட்களில் எழுதப்பெற்றவை தாம். 2007ல் குங்குமம் வாசகர் கவிதைத் திருவிழாவில் என் ‘ஒருத்தி நினைக்கையிலே…’ வைரமுத்துவால் முத்திரைக்கவிதையாக தேர்ந்தெடுக்கப்பட்டது. அச்சுக்கண்ட என் முதல் எழுத்து அது.

சிறு வயதில் வாசித்தவை? வாசிப்பு படிக்கட்டு?

உத்தேசமாய் இரண்டாம் வகுப்பு படித்த நேரம். என் வீட்டில் குமுதம் வாங்குவார்கள். அதில் வந்த ‘ப்ளாண்டி’ மற்றும் ‘ஃப்ளாஷ் கார்டன்’ காமிக்ஸ் பக்கங்களில் தான் என் வாசிப்பு தொடங்கியது. ஈரோட்டில் நாங்கள் குடியிருந்த வீட்டு உரிமையாளர் ‘தின மலர்’ வாங்குவார். வெள்ளியன்று இணைப்பாக வரும் சிறுவர் மலரை வாசிப்பதில் எனக்கும், எனக்குப் பல்லாண்டு மூத்த உரிமையாளர் மகனுக்கும் தகராறு வர, அதன் பொருட்டே என் வீட்டில் ‘தின மலர்’ வாங்கத் தொடங்கினர். அதுவும் வெள்ளியன்று மட்டும். தொடர்ந்து பிற நாளிதழ்களின் சிறுவர் இணைப்புகள் (‘தங்க மலர்’, லேசாய் ‘சிறுவர் மணி’) மற்றும் சிறுவர் இதழ்கள் (‘பூந்தளிர்’, ‘அம்புலி மாமா’) அறிமுகமாகின‌. அப்புறம் காமிக்ஸ் இதழ்கள் (‘ராணி காமிக்ஸ்’ அப்புறம் சில‌ ‘லயன் காமிக்ஸ்’, ‘முத்து காமிக்ஸ்’) வாசித்தேன். பள்ளிக்கு காமிக்ஸ் எடுத்துப் போய் பிரச்சனையாகி உள்ளது.

இதற்கு அடுத்த கட்டமாய் நாளிதழ்களின் பிற‌ இணைப்புகள் (‘வார மலர்’, ‘கதை மலர்’, ‘குடும்ப மலர்’, கொஞ்சம் ‘தினமணிக் கதிர்’), மாத நாவல்கள் (‘மாலைமதி’, ‘கண்மணி’, ‘ராணி முத்து’), ராஜேஷ் குமாரின் க்ரைம் நாவல்கள் (உடன் சுபா, பிகேபி) வாசித்தேன். பிறகு பக்கத்து வீட்டுக்காரர் பைண்ட் பண்ணி வைத்திருந்த‌ ‘பொன்னியின் செல்வன்’. கோடை விடுமுறையில் என் அத்தை கிருஷ்ணவேணி அலுவலக நூலகத்திலிருந்து லக்ஷ்மி, ரமணிச் சந்திரன், சாண்டில்யன் நாவல்களை எடுத்து வந்தார். ஒன்பதாம் வகுப்பில் என் தமிழாசிரியை தனலெட்சுமி பாலகுமாரனை அறிமுகம் செய்தார். அதே காலகட்டத்தில் சுஜாதாவும் அறிமுகமானார். இன்றளவும் சுஜாதா என் பேராதர்சம்.

பிறகு குமுதம் வெளியிட்ட தீபாவளிச் சிறப்பிதழ்களின் வழி தான் முதன் முதலாக‌ நவீன இலக்கியப் பரிச்சயம். பதினொன்றாம் வகுப்பில் பள்ளி (ஈரோடு இந்து கல்வி நிலையம்) நூலகத்தில் வைரமுத்து உள்ளிட்ட நிறைய நூல்கள். அது முக்கியமான திறப்பு. பிறகு கல்லூரிக்காக‌ சென்னை வந்ததும் கன்னிமரா நூலகமும், தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலகமும் என்னைத் தத்தெடுத்துக் கொண்டன. கணிசமான நவீனப் படைப்பாளிகளை அங்கேதான் வாசித்தேன். ‘ஹிக்கின்பாதம்ஸ்’, ‘லேண்ட்மார்க்’, ‘நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்’, ‘எனி இந்தியன் புக்ஸ்’, சென்னை புத்தகக் காட்சிக‌ள் என் புத்தக வேட்டைக்களங்களாயின. சுந்தர ராமசாமியும், ஜெயமோகனும் மிகப் பிடித்த எழுத்தாளர்கள் ஆகினர். வேலைக்குச் சேந்த கடந்த பத்தாண்டுகளில் என் வாசிப்பு கணிசமாய்க் குறைந்து விட்டது. எழுதவே நேரமிருப்பதில்லை என்பது முக்கியக் காரணம். இதைச் சொல்கையில் வருத்தமும் அவமானமும் ஒருசேர எழுகிறது.

எப்போது எழுத்தாளாராக உணர்ந்தீர்கள்?

பதின்மங்களின் தொடக்கத்தில் என நினைக்கிறேன். எனக்கு எழுத வேண்டும் என்ற ஆசையே ராஜேஷ் குமாரின் ‘எவரெஸ்ட் தொட்டு விடும் உயரம்தான்’ நாவலை வாசித்துத் தான் உண்டானது. அது அவரது சுயசரிதை நூல். தான் எழுதிய முதல் கதைகள், பிரசுரத்திற்குச் செய்த முயற்சிகள், பத்திரிக்கை ஆசிரியர்களுடனான அனுபவங்கள், குடும்பத்தாரின் எதிர்வினை என்பதை எல்லாம் ஒரு சுயமுன்னேற்றப் பாணியில் அதில் சொல்லி இருப்பார். பதினொன்றாம் வகுப்பில் ‘My Role Model’ எனக் கட்டுரை எழுதச் சொன்ன போது சுஜாதாவைத் தான் முன்மாதிரியாகக் குறிப்பிட்டு எழுதினேன். அவரைப் போல் சிறந்த பொறியாளனாகவும், தேர்ந்த‌ எழுத்தாளனாகவும் வர வேண்டும் எனச் சொல்லி இருந்தேன். அப்போது யாஹூவில் என் முதல் மின்னஞ்சல் முகவரியை உருவாக்கிய போது writercsk என்றே கொடுத்தேன். அதுவும் சுஜாதாவின் பாதிப்பில் தான். பின் Geocities-ல் ஒரு வலைப்பக்கத்தை உருவாக்கிய போதும், எனக்கான‌ வலைதளத்தை உருவாக்கிய போதும், ட்விட்டர் கணக்குத் துவங்கிய போதும் அப்பெயரையே தொடர்ந்தேன். அந்தக் காலகட்டத்தில் நான் எழுத்தாளன் என்பதற்கான எந்த நிரூபணத்தையும் செய்யாத சமயத்தில் ‘ரைட்டர்’ என்ற அந்த முன்னொட்டு கடும் கேலிகளை உருவாக்கியது. இன்று ஓரளவுக்கு அதற்கான படைப்புகளை எழுதி விட்ட போதிலும் கூட அது தொடரவே செய்கிறது.

கவிதை, சிறுகதை, நாவல் என மூன்று வடிவங்களிலும் இயங்கி இருக்கிறீர்கள். எது தங்களுக்கான வடிவம் என எண்ணுகிறீர்கள்? எது சவாலான வடிவம்?

 இவை போக அபுனைவு என்பதையும் நான்காவதாய் இதில் சேர்த்துக் கொள்ளலாம். எனக்கான வடிவம் எது என அறுதியிட்டுச் சொல்லும் காலம் இன்னும் வரவில்லை என நினைக்கிறேன். தொடர்ந்து எழுதினால் அடுத்த பத்தாண்டுகளில் தெரிய வரலாம். இதுவரையிலான எழுத்து அனுபவத்தில் சிறுகதையே எனக்குப் பிடித்த வடிவமாக இருக்கிறது. கவிதை, நாவல், அபுனைவை விடவும். ஒரே ஒரு நாவல் எழுதியுள்ள குறுகிய அனுபவத்தில் நாவல் வடிவம் என்பது சிறுகதை போல் சவாலாக எனக்குத் தோன்றவில்லை. நாவலுக்கு உழைப்பும் அர்ப்பணிப்பும் அவசியம். அவ்வளவு தான்.

காந்தியை மையமாக கொண்டு ஒரு புனைவை எழுத வேண்டும் என்றொரு எண்ணம் உதித்தது எப்போது? 

காந்தி பற்றிய முதல் சித்திரம் என் தாத்தாவின் வழியாகவே என்னை வந்தடைந்தது. எந்தவொரு இந்தியப் பள்ளி மாணவனையும் போல் பால்யத்தில் காந்தி என்பவர் மஹாத்மா என்பதில் தொடங்கி, பின் காந்தி போலியானவர், நேதாஜியே அசலான சுதந்திரப் போராளி என்று எண்ணும் பதின்மங்களைக் கடந்து தான் நானும் வந்தேன்.

பின் கமல் ஹாசனின் ‘ஹே ராம்’ திரைப்படம் ஒரு முக்கியமான திறப்பு. அதைத் தொடர்ந்து தான் காந்தியின் சுயசரிதையான ‘சத்திய சோதனை’ நூலை வாசித்தேன். 2009ல் என் முதல் நூல் ‘சந்திரயான்’ வெளியான பின் நான் எழுத விரும்பிய நூல் காந்தி கொலை வழக்கு பற்றியது. அதற்காக நிறைய நூல்களை வாசித்திருந்தேன். ஆனால் அம்முயற்சி கைகூடவில்லை. (பிற்பாடு என். சொக்கன் அதை எழுதினார்.)

அப்புறம் ‘காலச்சுவடு’, ‘தீராநதி’, ‘உயிர்மை’ முதலான இலக்கியச் சிற்றிதழ்களில் வந்த காந்தி குறித்த சில கட்டுரைகளும் விசாலமான பார்வையைப் பெற உதவின. இவை எல்லாவற்றுக்கும் மேல் ஜெயமோகன் காந்தி குறித்து தன் தளத்தில் செய்த தொடர் விவாதங்கள் (பிற்பாடு இவை ‘இன்றைய காந்தி’ என்ற நூலாகத் தொகுக்கப்பட்டன). காந்தியை நான் முழுக்க மறுஅறிமுகம் செய்து கொண்டது அவற்றின் வழியாகவே.

காந்தியின் பிரம்மச்சரியப் பரிசோதனைகள் பற்றி ஏற்கனவே நான் அரசல் புரசலாகக் கேள்வியுற்றிருந்தாலும் மேற்சொன்ன விவாதத்தில் இடம்பெற்ற ‘காந்தியும் காமமும்’ என்ற தலைப்பிலான நான்கு கட்டுரைகள் தாம் அது பற்றிய விரிந்த தகவல்களையும் கருத்துக்களையும் அளித்தன. அங்கே இந்நாவலுக்கான விதை முதலில் விழுந்தது. ஆனால் முளைத்துக் கிளைத்து விருட்சமாக சுமார் எட்டாண்டுகள் பிடித்திருக்கிறது.

 ஒரு ஆராய்ச்சி அபுனைவு நூலாக இல்லாமல் புனைவாக எழுதியதற்கு ஏதேனும் தனித்த காரணங்கள் உண்டா ?

காந்தியின் பிரம்மச்சரியப் பரிசோதனைகள் பற்றி ஓர் அபுனைவு நூல் எழுத முடியும். சிலர் ஆங்கிலத்தில் எழுதியும் இருக்கிறார்கள். ஆனால் வரலாற்றில் இவ்விஷயம் தொடர்பான‌ விடுபடல்கள் ஒரு புனைவுக்குரிய சாத்தியத்தை அளிப்பதாக‌ப்பட்டது. அதாவது இதில் ஒரு Drama இருந்தது. குறிப்பாக நாவலுக்குரிய கேன்வாஸ் இது எனத் தோன்றியது. புனைவு வடிவில் இதை எழுதக் கூடுதல் சுதந்திரமும் உண்டு என்பதை உணர்ந்தேன். கேத்ரின் க்ளமெண்ட் எழுதிய Edwina and Nehru ஓர் உதாரணம்.

என் முதல் நாவலை எழுத ஐந்தாறு ஆண்டுகளுக்கு மேலாக யோசித்து வந்தேன். இதை என் முதல் நாவலாகக் கொண்டால் நல்லது என்றும் எண்ணம் வந்தது. ஒரு கட்டத்தில் புத்தகக் காட்சிக்குள் நாவலை எழுத அவகாசம் இல்லை எனும் போது அபுனைவு நூலாக எழுதி விடலாமா என்று கூடத் தோன்றியிருக்கிறது. எழுத்தாளர் என். சொக்கன் தனிப்பேச்சில் இதை அபுனைவாக எழுதியிருக்க வேண்டும் என்று அங்கலாய்த்தார். நாவலாக வரவில்லை என்றால் அபுனைவாய் எழுதியிருப்பேன்.

இன்னும் சொல்லப் போனால் இஃது நாவல் என்றாலும் உள்ளடக்கத்தை வைத்துப் பார்க்கும் போது அபுனைவுக்கும் புனைவுக்கும் இடைப்பட்ட படைப்புதான் என்பேன்.

காந்தியின் பிரம்மச்சரிய பரிசோதனைகள் குறித்து தற்காலத்தில் எழுதுவதற்கான தேவை என்ன? காந்தியை மையமாக கொண்ட களம் என்றாலும், குறிப்பாக பிரம்மச்சரிய பரிசோதனைகளை நாவலின் பின்புலமாக கொண்டு எழுதியதற்கு என்ன தூண்டுதல்?

லட்சக்கணக்கான பக்கங்கள் காந்தியைப் பற்றி எழுதப்பட்டு விட்டாலும் அவர்களில் பெரும்பாலானோர் காந்தியின் பிரம்மச்சரியப் பரிசோதனைகளை மழுப்பலாகவே கடந்து விடுகிறார்கள். எனில் அவர் மஹாத்மா என நம்புவோர் கூட இவ்விஷயத்தில் மட்டும் பிழை செய்திருக்கிறார் என நினைக்கிறார்கள் என்று தானே அர்த்தம்! இதன் இன்னொரு முனையில் அவர் பெண்களைப் பரிசோதனைப்பண்டமாகப் பயன்படுத்திய ஆணாதிக்கவாதி என்ற ரீதியில் அவர் மீது வெறுப்பை உமிழ்ந்தவர்களும் உண்டு. அதனால் தான் பழுப்பாய் நின்ற அந்த பகுதியை நெருங்கிப் பார்க்க ஆசைப்பட்டேன்.

இன்னொரு விஷயம்: ஆரம்பம் முதல் என் எழுத்துக்களில் காமம் என்ற அம்சம் தொடர்ந்து மையச் சரடாக அல்லது பிரதான இழைகளில் ஒன்றாக இருக்கிற‌து. தணிக்கைச் சிக்கல்கள் குறைந்த என் சமூக வலைதள எழுத்துக்களில் இது வெளிப்படையாகத் துலங்கும். ரமேஷ் வைத்யா கூட இது பற்றி, விடலைத்தனம் இன்னும் விடவில்லை, எனக் குறிப்பிட்டார். அதுவும் காரணம் என நினைக்கிறேன். மஹாத்மாவைப் பற்றி எழுத‌ எடுத்தால் கூட காமம்தான் முன்னே வந்து நிற்கிறது!

இந்த நாவலை எழுதுவதற்கு உங்களுக்கு ஒன்றரை மாதம் தான் ஆனது என்பது எனக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. எனினும் பின்புல தயாரிப்புக்கு எத்தனை காலம் ஆனது? என்னவிதமான நூல்களை வாசித்தீர்கள்? நாவலின் இறுதியில் நூற்பட்டியல் இருக்கிறது. அந்நூல்கள் உங்கள் புரிதலை எப்படி செம்மையாக்கியது?

பின்புலத் தயாரிப்புக்குக் கூடுதலாய் ஒரு மாதம் ஆகி இருக்கும். தொடர்ச்சியாக அல்லாமல் ஆறேழு மாதங்களாக‌ அவ்வப்போது வாசித்துக் கொண்டிருந்தேன் – திட்டமிட்டு என்றில்லாமல் தொடர்புடைய நூல்கள் அறிமுகம் ஆகும் போதெல்லாம் அல்லது கிடைக்கும் போதெல்லாம். காந்தியின் பிரம்மச்சரியப் பரிசோதனைகள் பற்றிய கிர்ஜா குமாரின் இரண்டு நூல்கள், ஜாட் ஆடம்ஸின் ‘Gandhi: Naked Ambition’, மநுவின் டைரிகள் குறித்த ‘இந்தியா டுடே’ சிறப்பிதழ், காந்தியின் உதவியாளர் நிர்மல் போஸ் எழுதிய‌ ‘My Days with Gandhi’ என்ற‌ நூல் ஆகியன முக்கியமாய்ப் பயன்பட்டன. இன்னொரு விஷயம் இந்நூல்களில் என்னுடைய‌ நாவலுக்கு அவசியப்படும் எனத் தோன்றிய பகுதிகளை மட்டுமே வாசித்தேன். அதனால் படிக்கும் நேரம் குறைந்தது.

சம்பவங்களின் கால வரிசை, இடம் மற்றும் பிற விவரங்களை இந்நூல்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. நாவல் அசல் வரலாற்றுக்கு அருகிலானது என்பதால் இது தேவைப்பட்டது. தவிர, பிரம்மச்சரியப் பரிசோதனைகள் பற்றிய வெவ்வேறு கோணங்களை இவை எனக்கு அளித்தன. அவற்றின் அடிப்படையிலும், பொதுவான மானுட உளவியல் சார்ந்தும் காந்தி, மநு, மற்றும் பிறர் தரப்பு என்னவாயிருக்கும் என்பது பற்றிய புரிதலை வந்தடைந்தேன். அதுவே நூல்களின் முக்கியப் பங்களிப்பு.

நாவலுக்கு என்னவிதமான கவனம் கிட்டியது? விமர்சனங்கள் எத்தகையவை? 

நாவலுக்குப் போதிய கவனம் கிட்டவில்லை என்ற மனக்குறை இருக்கிறது. ரமேஷ் வைத்யா புத்தக வெளியீட்டு நிகழ்வில் ஆற்றிய உரை ஒரு பரபரப்பான அறிமுகம். பா.ராகவன், சித்துராஜ் பொன்ராஜ் மற்றும் நீங்கள் ஃபேஸ்புக்கில் நாவல் பற்றிய சிறு குறிப்புகள் எழுதினீர்கள். சென்னை காந்தி கல்வி நிலைய சேர்மன் மோகன் நாவலைப் பாராட்டி மின்னஞ்சல் செய்திருந்தார். அபிலாஷ் ஒரு நல்ல‌ விமர்சனக் கட்டுரை எழுதினார். இந்த‌ 9 மாதங்களில் வந்த‌ முதலும் கடைசியுமான கட்டுரை அதுவே. தமிழ்ச் சூழலில் இதுவே அதிகபட்சம் என்று திருப்திப்பட முகாந்திரமுண்டு என்றாலும் இந்நாவல் இன்னும் கொஞ்சம் கூடுதல் வாசக உரையாடலுக்குத் தகுதி பெற்றது என நம்புகிறேன். அதனால் அதைச் சந்தைப்படுத்தும் நோக்கில் சமீபத்தில் விமர்சனக் கட்டுரைப் போட்டி ஒன்றை நானே அறிவித்திருக்கிறேன். பார்க்கலாம்.

காந்தியை புரிந்து கொள்ள இந்நாவல் உதவுகிறது. ஆனால் அதைத் தாண்டி நாவலுக்கு என்றிருக்கும் எக்காலத்திற்கும் உரிய அறக் கேள்வியை நாவல் அடையவில்லை எனும் விமர்சனத்தைப் பற்றி? மேலும் காந்தியை இன்று ஒருவர் புரிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறதா? குறிப்பாக பிரம்மச்சரிய தலம் சார்ந்து?

‘ஆப்பிளுக்கு முன்’ நாவலை நீண்ட சிறுகதையாகப் பார்ப்போரும் உண்டு. அதாவது நாவல் என்பதற்கான பல கோண தரிசனம் போதுமான அளவு திரளவில்லை என்ற பொருளில். இருக்கலாம். அதன் அபுனைவுத்தன்மை பற்றிக் கவலை வெளியிட்டோர் உண்டு. படைப்பின் தரம் பற்றிய விமர்சனங்களுக்கு – அது பாராட்டு என்றாலும் கூட – எழுத்தாளன் பதிலளிக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன். அது ஒரு சங்கடம். ஆனால் நான் விமர்சனங்கள் எவற்றையும் உதாசீனம் செய்வதில்லை. அவற்றைப் பொருட்படுத்திப் பரிசீலித்து எனக்குச் சரி எனத் தோன்றுவனவற்றை என் எதிர்காலப் படைப்புகளுக்கான உள்ளீடாகக் கொள்கிறேன். இதற்கும் அதைச் செய்ய வேண்டும்.

காந்தியம் இன்னும் காலாவதியாகவில்லை என நான் நம்புகிறேன். அதன் அவசியம் நிச்சயம் இருக்கிறது. குறிப்பாக அவரது அஹிம்சை என்ற போதனை. இன்றைய சகிப்பின்மை நிறைந்த சூழலில் காந்தி நம் நாட்டிற்கு தேவைப்படும் சிந்தாந்தவாதி. அதனால் அவரை மறுவாசிப்பு செய்ய வேண்டியது அவசியமானது. பிரம்மச்சரியப் பரிசோதனைகள் பற்றி ஏன் பேச வேண்டி இருக்கிறது எனில் காந்தியின் பிழையான கருத்தாக்கங்களையும் நாம் நேர்மையாக எதிர்கொள்ள வேண்டும் என்ற உந்துதல் தான் (அவரே போதித்த‌ சத்தியம்). அதை மட்டும் கள்ளத்தனமாய்ப் பேசாது கடக்கும் ஒவ்வொரு முறையும் காந்தியை அவமதிக்கிறோம். முக்கால் நூற்றாண்டு முன் அவரே முற்போக்காக அது பற்றிப் பொதுவெளியில் பேச விரும்பினார். இன்று இத்தனை முன்னேறிய சமூகத்தில் வாழ்ந்து கொண்டு நாம் ஏன் தயங்க வேண்டும்?

 ‘மின் தமிழ்’ மின்னிதழ் பற்றி, அதன் நோக்கம் செயல்பாடுகள், செயல்திட்டங்கள்.

தமிழ் மின்னிதழ் தொடங்கிய போது இருந்த உத்வேகம் இப்போது இல்லை என்றே சொல்வேன். நான் மிக விரும்பும் எழுத்தாளர்களை விரிவான நேர்காணல்கள் செய்ய வேண்டும் என்பதுதான் இதழின் பிரதான நோக்கமாக இருந்தது. ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், பெருமாள் முருகன் என அது திருப்திகரமாகச் சாத்தியமானது. அடுத்து இணையத்தில் புதிய எழுத்துக்களுக்கான ஒரு களமாக அது இருக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் இன்றைய‌ சமூக வலைதள யுகத்தில் அதற்கான தேவை இருக்கிறதா எனத் தெரியவில்லை. இந்த இதழில் கிடைத்த அனுபவம் கொண்டு அப்படியான தளமேதும் இன்று தேவையில்லை என்பதாகப் புரிந்து கொள்கிறேன்.

தவிர, சொந்த வாழ்வியல் அழுத்தங்கள், என் எழுத்து வேலைகள் தாண்டி இதழுக்கு நேரம் ஒதுக்குவது சிரமமானதாக இருக்கிறது. அது முழுமையாய் என் இதழாகவே இருக்க வேண்டும் என்ற பிடிவாதம் இருப்பதால் ஆசிரியர் குழு ஒன்று வைத்துக் கொள்வதில் விருப்பமில்லை. அதனால் தான் காலாண்டிதழாகத் தொடங்கப்பட்ட தமிழ் இப்போது தேவைப்படும் நேரத்தில் மட்டும் வருகிறது. உதாரணமாய் அடுத்து வரப்போவது கலைஞர் சிறப்பிதழ். இந்த மாதத்தின் பிற்பகுதியில் வெளியாகக்கூடும்.

ஆதர்ச எழுத்தாளர்தமிழ்/ பிற மொழி யார்?

ஏற்கனவே இந்நேர்காணலில் பிடித்த எழுத்தாளர்கள் என்பதாக‌ ஆங்காங்கே சிலரைக் குறிப்பிட்டிருந்தேன். ஒரே ஒருவர் மட்டுமே சொல்ல வேண்டுமெனில் ஜெயமோகன். புனைவு மட்டுமின்றி மற்ற விஷயங்களிலும், தனி வாழ்விலும் கூட‌ அவர் எனக்கு வழிகாட்டி. ஆங்கிலத்தில் நான் பெரும்பாலும் அபுனைவு தான் வாசித்திருக்கிறேன். அதுவும் குறைவான அளவில். அதனால் பிடித்த எழுத்தாளர் எனக் குறிப்பிட்டுச் சொல்லுதல் சரி வராது. ஆனாலும் அப்படி ஒருவரைச் சொல்ல விரும்புகிறேன். அவர் எழுத்தாளர் அல்ல; திரைப்பட இயக்குநர். கிறிஸ்டோஃபர் நோலன். அவரது திரைக்கதைகள் போலத்தான் என் புனைகதைகள் உள்ள‌ன என எண்ணுவதுண்டு.

சமூக ஊடக பயன்பாடு படைப்பூக்கத்தை பாதிக்கிறதா? உங்கள் படைப்பிற்கு ஏதேனும் ஒரு வகையில் சமூக ஊடக செயல்பாடு பங்காற்றுகிறதா?

சமூக ஊடகங்களில் நான் இருக்க இரண்டு காரணங்கள்: சமகால விஷயங்களில் என் கருத்துக்களைப் பதிவு செய்தல், என் மற்ற எழுத்துக்களுக்களைச் சந்தைப்படுத்துதல். இதில் இரண்டாவது எவ்வளவு தூரம் சாத்தியப்படுகிறது என்பதில் குழப்பங்களுண்டு. இது போக தொடர்ச்சியாய் எழுதிப் பயிற்சியெடுக்கும் வாய்ப்பை சமூக வலைதளங்கள் வழங்குகின்றன. அதனால் மொழிக்கிடங்கு வனப்புறும் என நினைக்கிறேன். ஆனால் சரவணன் சந்திரன் சமீபத்தில் பேசிய போது சமூக வலைதளச் செயல்பாடுகளினால் என் பிரதானப் படைப்புகளில் மொழி சில இடங்களில் தொய்வுறுகிறது என்றார். நான் இன்னும் அதைத் தீவிரமாக‌ ஆராயப் புகவில்லை. கவனிக்க வேண்டும். பொதுவாகவே சமூக வலைதளங்களில் நேர விரயம் அதிகம். அதன் பொருட்டு அதைக் குறைத்துக் கொள்வதே படைப்பாளிகளுக்கு நல்லது. அவற்றை விட்டுப் பூரணமாக‌ வெளியேற வேண்டும் என்றில்லை; ஆனால் எதற்குப் பயன்படுத்துகிறோம், எவ்வளவு நேரம் இருக்கிறோம், பக்கவிளைவு என்ன என்பதில் ப்ரக்ஞைப்பூர்வமாக இருக்க வேண்டும்.

அடுத்து என்ன எழுத இருக்கிறீர்கள்?

எண்ணத்தில் உருவாகி இன்னும் எழுதப்படாமல் குறைந்தது பத்து சிறுகதைகள் உண்டு. பிற்காலச்சோழர் வரலாற்றை ஒட்டிய ஒரு த்ரில்லர் நாவலும், இன்றைய தேதியில் ஆக முக்கியமானதென நான் கருதும் ஒரு சமூகப் பிரச்சனை குறித்த ஒரு நாவலும் மனதில் இருக்கின்றன. நாத்திகத்தின் வரலாற்றை விரித்தெழுதும் திட்ட‌மிருக்கிறது. இளையராஜாவின் வாழ்க்கையை வசன கவிதை நடையில் எழுத விரும்புகிறேன். கலைஞரின் ‘நெஞ்சுக்கு நீதி’யைச் சுருக்கி எழுதி வருகிறேன் – மூன்றாண்டுகளில் முடிக்கத் திட்டம். ஆசைகள் ஆயிரம் இருந்தும் செயலாக்க நேரம் போதவில்லை.

இப்போது ஒரு நாவல் வேலையைத் தொடங்கி இருக்கிறேன். தலைப்பு ‘ஜெய் பீம்’. எல்லாம் சரியாக நடந்தால் வரும் சென்னைப் புத்தகக் காட்சிக்கு வெளியாகும்.

எதற்காக எழுதுகிறேன்? என்றொரு வினா எழுப்பினால் உங்கள் பதில்?

கலவி எதற்கு எனக் கேட்போமா? குழந்தைப்பேறு தான் காரணமா என்ன? அதைப் போல் எழுதுவது மகிழ்ச்சி தருகிறது என்பது தான் பிரதான காரணம். ஒவ்வொரு படைப்பை நிறைவு செய்கையிலும் ஒரு கணம் கடவுளைப் போல் உணர்கிறேன். சொற்களில் விவரிக்க இயலா ஒரு மனோஉச்சம் அது. அது போக எழுத்தானது வாழ்வதற்கான உந்து சக்தியாக இருக்கிறது. எப்படி எனச் சொல்கிறேன். ஒவ்வொரு மனிதனுமே மானுட குல முன்னேற்றத்துக்கு ஏதோ விதத்தில் உதவி செய்கிறான். ஒன்று மனித இனத்தின் நேரடி முன்னேற்றத்துக்கான பங்களிப்பு. மற்றது சமகாலச் சமூகத்துக்கு உதவி செய்வதன் மூலம் பங்களிப்பது. விவசாயம் செய்தல், அரசுப் பணி, மருத்துவர்கள், பொறியாளர்கள் எனப் பெரும்பாலான வேலைகள் இரண்டாம் வகையில் வரும். விஞ்ஞானிகள், சில கலைஞர்கள், தத்துவ ஞானிகள், குறிப்பிட்ட‌ அரசியல் தலைவர்கள் போன்றவர்கள் முதல் வகை. எழுத்தாளர்களும் அதே வகை தான். அதனால் அது ஒரு மதிப்புமிக்க வேலை என நம்புகிறேன். வாழ்க்கை குறித்த சலிப்பு ஏற்படும் போதெல்லாம் இன்னும் மானுட குலத்துக்கு நான் செய்ய வேண்டிய பங்களிப்பு பாக்கி இருக்கிறது என்ற எண்ணம் எழுந்து வர எழுத்து காரணமாகிறது. எழுத்தால் வரும் பாராட்டு, புகழ், விருது, மரியாதை என்பதெல்லாம் பிற்பாடு தான்.

 

***

 

ஆள்மாறாட்டம் – அரிசங்கர் சிறுகதை

அரிசங்கர்

 எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். எதுக்கு இவனுங்க தெனிக்கும் என் முன்னாடி வந்து நிக்கறானுங்க. இவனுகளுக்கு வேற வேலையே இல்லியா… ஒரு வேலை நம்பள மாதிரியா… அதுலயும் அதோ நிக்கறானே ஒருத்தன். அவன பாத்தாதான் எனக்கு செம காண்டா ஆவுது.

நான் சொல்றத அப்படியே நல்லா கற்பனை பண்ணிக்கங்க. நல்லா தூங்கினு இருப்பேன். அதுவும் குளுர்காலம். காலங்காத்தால வந்து டக்குனு லைட்ட போடுவான். கஷ்டப்பட்டு கண்ண தொறப்பேன். பாத்தா இவன்தான் நிப்பான். நைட் லேட்டாத்தான் போவான். ஆனா வரும் போது பிரஷ்ஷா வருவான். சரி ஒழிஞ்சி போவட்டும் லைட் இருந்தா இன்னானு கண்ண மூடுனா, டபால்னு இருக்கற ஒரு துண்டையும் உருவி டப்புனு தண்ணிய வாரி தலையில் ஊத்தி வுட்ருவான். அதுவும் அந்த குளுருக்கு அந்த தண்ணி அவ்ளோ ஜில்லுனு இருக்கும். எழுந்து போய் அவன் கழுத்தாப் பட்டையிலயே வக்கலாமானு தோணும். ஒருவேளை நான் எழுந்து வரமாட்டன்னு அவனுக்கு தெரிஞ்சிதான் இதெல்லாம் பண்ணாறானானு தெரில எனக்கு. அப்பறம் இன்னாத்தையோ மேல வாரிக்கொட்டி தெச்சி இருக்கற கொஞ்ச நஞ்ச தூக்கத்தையும் ஓட்டி விட்ருவான். இதுல இவுரு பாட்டு பாடாம வேலை செய்ய மாட்டாரு. நடுவுல இன்ஸ்ட்ருமெண்ட் மியூஸிக் வேற.

ஒரு வழியா அவன் வேலையெல்லாம் முடிச்சிகினு ஒழிவான்னு கம்முனு இருப்பேன். நம்ம முன்னாடி வகைவகையா பலகாரமா இருக்கும். சரி இவன் போவட்டும் துன்னலாம்னு ஆசையா இருப்பன். எல்லாம் முடிச்சி டபால்னு கதவ தொறந்தா மறுபடியும் நான் மொதல்ல சொன்னல அவனுங்க வந்து என் மூஞ்சியயே உத்து உத்து பாப்பானுங்க. அப்படி இன்னாதான் நம்ம மூஞ்சில இருக்கு தெரில. வரீசையா வந்து வந்து பாத்துட்டு பாத்துட்டு போவானுங்க. அப்பப்ப ஒன்னு ரெண்டு லூசுங்க என் காதுல உழற மாதிரி எதுனா பேசுங்க. அதுங்க மட்டும் தான் நமக்கு இருக்கற ஒரே டைம்பாஸ். இவனுங்கல பாக்க வெச்சிட்டு எப்படி திண்றதுனு ஒரு டீசண்ட்டுக்காக கம்முனு இருப்பன். ஆனா அவனுகளுக்கு அந்த டீசண்ட் சுத்தமா இருக்காது. எல்லாத்தயும் தூக்கினு போய் பங்கு போட்டு திம்பானுங்க. நானும் இப்ப வரைக்கும் கடைசியா மிஞ்சற வாழப்பழத்த தின்னுட்டு காலத்த ஓட்டறன்.

மழை வந்தாதான்பா இந்த இம்சைங்க கிட்டருந்து கொஞ்சம் நிம்மதி. ஃப்ரியா இருக்கலாம். அப்பகூட தனியாலாம் இருக்க முடியாது. எதுனா ஒன்னு வந்து முன்னாடி உக்காந்துகினு நம்ம மூஞ்சியயே பாத்துகினு இருக்கும். திடீர்னு அழுவும். நமக்கும் ரொம்ப பாவமா இருக்கும். அதுக்கு நான் இன்னா பண்ண முடியும் சொல்லுங்க. இப்படியேதான்பா நம்ம லைப் போகும். என்ன மாதிரி ரொம்ப பேர் இருக்காங்கபா. அதுலயும் பணக்கார பசங்களும் இருக்காங்க. அவனுங்க அலும்பலு தாங்க முடியாதுபா.

இன்னாடா இது லைப் ஒரே போரா இருக்குனு படிக்கற உங்களுக்கே இவ்ளோ காண்டா இருக்குதே. எனக்கு எவ்ளோ காண்டா இருக்கும். ஆனா லைப் எப்பவுமே இப்படியே இருக்காதுபா. ஒருநாள் நம்பளுக்கும் த்திரில்லிங்கா’ எதுனா நடக்கும். நாம அதுக்குலாம் பயந்துக்கக் கூடாது. அதல்லாம் அப்படி அப்படியே எஞ்ஜாய் பண்ணனும். எனக்குகூட இப்டி ஒண்ணு நடந்ததுப்பா. அத்த சொல்லத்தான் வாயெடுத்தன். ஆனா இன்னான்னாவே ஒளரிகினு இருக்கன். சொல்லறன் கேளேன்.

இப்படி ஒருநாள் ராத்திரி அவன் வந்தான். அவந்தான் காலங்காத்தால தலைல தண்ணிய வாரி ஊத்துவானே, அவனேதான். எப்பவுமே தனியாத்தான் வருவான். அன்னிக்கினு பாத்து ஒரு கேங்கோட வந்தான். வந்த எவனும் புது ஆளுங்கலாம் இல்ல. அடிக்கடி வரவனுங்கதான். அதுவும் அதோ நிக்கறானுகளே இரண்டு பேரு. மனசுல பெரிய இதுனு நெனப்பு. எப்ப வந்தாலும் வந்து பக்கத்துலயே நின்னுப்பானுங்க. மத்தவனுங்க மாதிரி தூரமாலாம் நிக்க மாட்டானுங்க. ஆனா வெளியே நிக்கறவனுங்க இவனுங்கள அசிங்க அசிங்கமா திட்டுவானுக. நமக்கு அதுல ஒரு ஆனந்தம். ஆ…………. என்னய டைவர்ட் பண்ணாதிங்க. அப்பறம் கதை ஷார்ப்பா இல்லனு எவனாது கமெண்ட் பன்னுவான். கவனமா கேளுங்க இதுதான் முக்கியமான கட்டம்.
__________________________________________________________________________________________________

மேல இருக்கற கோடு சைலன்ஸ். உங்களுக்கு ஒரு மூட் கிரியேட் பண்ண. இப்போ கதை சரியா?

எங்க உட்டேன். ஆங், கேங்கோட வந்தானா, வரும்போதே ஒரு கோணிப்பைய தூங்கினு வந்தானுங்க. நல்லா கவனிங்க, எந்த லைட்டையும் போட்ல. கைல டார்ச் எடுத்துகினு மெதுவா வரானுங்க. தூரத்துல வேற ரூம்ல இருக்கற நம்ப கூட்டாளி ஒருத்தரு இதப் பாத்துட்டு நமக்கு சிக்னலு கொடுக்கறாரு. கம்முனு இருனு நான் பதில் சிக்னல் கொடுக்கறன். வந்தவனுங்க கையில இருந்த மூட்டைய அப்படியே கீழ வைக்கறானுங்க. மூட்டைய மெதுவா பிரிக்கறான் ஒருத்தன். எனக்கா சஸ்பன்ஸ் தாங்கல. வேகமா பிரிடா கொய்யாலனு கூவலாமானு பாத்தன். மூட்டைய மெதுவா தொறக்கறான். அந்த வெண்ண சும்மா நாள்ளாம் லைட்ட போடுவான். இன்னிக்கு பனை மரம் மாதிரி அசையாம நிக்கறான். மூட்டைய தொறந்ததும் எல்லாரும் ஒரே நேரத்துல அது மேல டார்ச் அடிக்கறானுங்க.

ஆ………………………………………………………………………………………………………………………………………………….

நான் தான் அதிர்ச்சில கத்திட்டன். ஆனா அவனுங்களுக்கு கேக்கல. இப்ப அதுவா முக்கியம். மேட்டருக்கு வருவோம். மூட்டைய தொறந்தா… மூட்டைய தொறந்தா… தொறந்தா… அப்படியே என்ன மாதிரியே ஒருத்தன் நிக்கறான். நான் அவன பாக்க அவன் என்ன பாக்க. மாத்தவனுங்கல்லாம் சிரிச்சிகினு இருக்கானுங்க.

அப்படியே ‘தொடரும்…’ போடலாமானு யோசிக்கற அளவுக்கு எனக்கு படபடப்பா போச்சி. உங்க டைம வேஸ்ட் பண்ன வேணாம்னு கண்டின்யூ பண்றன். நான் அவனப் பாத்து கேக்கறன்,

“டேய் யாருடா நீ”

………………………………….

“சொல்லுடா, எப்புடிடா நீ என்ன மாதிரியே இருக்க…..”

…………………………………………………………………………………………………..

கேக்கறதுக்கு எதுனா பதில் சொல்றானா பாரு. சொவுடன் மாதிரியே நிக்கறான். “டேய் நீ செவுடனா, ஊமையாடா” இந்த நேரத்துல இந்த நெலமையில நீங்களா இருந்தா கண்டிப்பா உங்க அப்பா மேல உங்களுக்கு ஒரு டவுட் வரும். ஆனா என்னால அப்படிலாம் நினைக்க முடியாது. ஏன்னா… அதெல்லாம் வேணா வுடுங்க. இவன பாப்போம்.

அவன் இன்னா கேட்டாலும் அப்படியேதான் நிக்கறான். இந்த வெண்ண இப்பதான் ஆராய்ச்சி பண்ணுது. அவனப் பாக்குது, என்னப் பாக்குது, மறுபடியும் அவனப் பாக்குது, என்னப் பாக்குது. இப்படியே ஒரு நாலு வாட்டி பாத்துட்டு மத்த தடிமாடுங்க (மாடுங்கனு திட்டலாமானு தெரிலயே) கிட்ட மண்டைய ஆட்டுது. அவனுங்க அலேக்கா என்ன தூக்கிட்டானுங்க. எனக்கு வந்துச்சி பாரு ஒரு கோவம். உடனே அவனுங்களுக்கு ஒரு சாபம் உட்டேன், “எல்லாரும் சொர்க்கத்துக்கு போங்கடானு”. என் சொர்க்கம்னு கேக்காதீங்க. அத அப்பறம் சொல்றன். த்திரிலிங் போய்டும்.

என்னைய தூக்கி கீழ வெச்சிட்டு அவனத் தூங்கி என் எடுத்துல வச்சிட்டானுங்க. எனக்கு இன்னா பண்றதுனே தெரில. தூரத்துல இருக்கற என் கூட்டாளிய பாக்கறன். அவன் இப்பதான் நல்ல தூங்கற மாதிரி நடிச்சிகினு இருக்கான். எனக்கு இன்னா பன்றதுனே தெரில. ஆமா நம்பலால என்ன பண்ண முடியும் இவனுங்கள. நான் எப்படி ஸ்டைலா உக்காந்துனு இருந்தனோ அப்படியே இப்ப அவன் உங்காந்துனு இருந்தான்.

டேய் டேய் இது உனக்கே அடுக்குமாடா டேய், நாளைக்கு உன்னயும் எவனா வந்து இப்டி தூக்கினு போவல என் பேர மாத்திக்கிறண்டா டேய், சைட் ஆணில கேலண்டர் இருக்குது குறிச்சிக்கடா அங்க பாருடா, அதோ பேசிகினு நிக்கறானே அந்த வெண்ண அவன் உன்ன தூங்கக்கூட உடமாட்டான்டா.

நான் பொலம்பிகினே தான் இருந்தன் எவன் காதுலயும் விழல. எடுத்துகினு வந்த கோணில என்னைய கட்டி தூங்கினு போயிட்டானுங்க. எங்க எடுத்துகினு போறானுங்க. இன்னா பண்ண போறானுங்க ஒன்னும் தெரில நான் இன்னும் கோணிப்பைல தான் இருக்கன். புரியாத பாஷைலாம் கேக்குது. கொஞ்ச நேரம் பறக்கற மாதிரி இருக்குது. கொஞ்ச நேரம் மெதக்கற மாதிரி இருக்குது. மொத்ததுல என் சோலி முடிஞ்சிது.

அப்படியே எங்கயே ஒரு ரூம்ல ஒரு ஓரத்துல என்னய உக்கார வெச்சானுங்க. அதுக்கப்பறம் என்னாவோ பேசனானுங்க. போய் லைட்ட நிறுத்திட்டு போய்ட்டானுங்க. அப்பாடானு இருந்தது. கோணில இருந்து வந்ததுக்கப்பறம் தான் கொஞ்சம் மூச்சே வுட முடிது. டையட்ல நல்ல தூக்கம் வந்ததுனு தூங்கிட்டன். எப்பவுமே நல்ல தூக்கத்துல அந்த வெண்ண லைட்ட போடுமா. நானா எழுந்திருக்கற வரைக்கும் இங்க எவனும் லைட்டே போடல. சரி இங்க டியூட்டி டைம் வேற மாதிரினு வெய்ட் பண்ணேன். எவ்ளோ நேரம்னு கேக்கறீங்களா, சுமார் ஒரு ஆறு மாசம். எவனும் லைட்ட போட வரவேயில்ல. அடேய் பயமா இருக்குதுடா, ஒரு குண்டு பல்ப்பாவது போடுங்கடான்னு கத்தறேன், கேக்க எவன் இருக்கான்?