Author: பதாகை

The Puntastic Mews – Nakul Vac

“Kow dow r2 bull retoinis
wus de woids uf lil Oinis”

With Bells pounding, பாப்பா crooning, two ஈs coming, one எலி going & joys abounding….

From the stage Directions for அmuse, A Tanglish Mewmiambus.

In the beginning was the beginning?
Pounds of flesh tons of words make?
Yes, yes, yes and yes.
Did you unwittingly stumble on those sibilant
Ssss’s, you sneaky snake.

Had a man caned ably
(அடி உதவற மாதிரி) Would
அண்ணன் தம்பி have spilt the old bubbly?
Kinch the knife blade strook
blood and ouns?
That’s some hairy stuff in the Good Book.

Mulling an Irish stew
for a buck and twenty
For our jejune jesuit here?

Perhaps no fears of
us all dead here
if Adam and Eve
did daughters leave?

But crazy shrine maiden
Kannagi இடமுலை கையால் திருகி
burnt Mad annotations?
Titless Kannagi cooling off
lopping hot headed silver hair
with his Hayagami.

Lately and plump
Who’ll hump this frump?
Pater said to Mater.
They fuck you up
Your mum and dad.

So, Tommy you rhyming Kat
When you rubbed your muzzle on window panes
Did you dare to part your hair behind?
Or eat an effinineffable peach?

Catch Possum Rhymes last night?
That sad dark pussy was wider than the sea.
Cat show’s Murugan TAM scores are sick
தமிழ்?
Cunt!

Jesus! Don’t be so cross and
get off your high arse.

No exercise only sexercise!
said the Mallu to the newly wed Tamilian.

The moving hand writes vey unmoving lines.

If I need to ride to my rude red health
Must I keep the bottoms of my trousers rolled?
Just grow a pair Donald
Prude in a frock!

Breeder of brinners
Get thee to a punnery!

Every force evolves a form.
To cum by the sea only to get conquered
on a bicycle?

Relax or if you prefer ReJoyce!
Lounge tea in the Chamber and
Sound of Music!
Do! Re and…
Oh no! that was wild
Your picture went grey on you.

Heart twist eh?
Will Irich folk Dubbu
lining their pockets
admire your portrait
at your wake.

Did old Rum and Jam
rise in the sap of trees
weave of Weaver birds
in his hair?

Bracelet of bright hair about the bone
gave him orgasms of sensibility.
Hey Tom just leave the
old Don alone.

மைத்தகு மாமலர்க் குழலாய்
இருண்ட நீலச் சுருளோடும் வந்து
Shaking, air alight with the goddess
fanning their hair in the dark.

Hugh Selwyn Mauberly
For your image of accelerated grimace
Perhaps a soupçon of Indic spice
sprinkled on your attic grace?

Sita’s tresses enmeshed with Circe’s hair
Or is that hair-splitting too unfair?

What movie was that
You and Bob laughed about?
Something about Mary
got old Jo to marry.

Also (Cum) banns read by Pound?

Stately and plump
Did Bhima say that to Hidimbi
at that Bald pot’s birth?

Grow or shrink at will
No crummy exercise.
As you rise to the skies
still no hair I espy.

Bookish puns
don’t a poem make.

Will this be published by Slade(?)
Ayyo! These பண்s!
That hair-raising eh!
Do I at least get a mulligan?

போடா மயிரு!
And you Sir, can take a hike.

Ending with a male wimp’s hair?
Ah men!

  • Nakul Vāc, August 2018

நிழல் – மு. வெங்கடேஷ் சிறுகதை

மு வெங்கடேஷ்

 

அன்று வழக்கத்திற்கு மாறாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. சூரியன் மறைந்த பின்னும் சூடு தணியாமல் இருந்தது. உடல் முழுவதும் வியர்வை ஊற்றெடுத்து வழிந்து கொண்டிருந்தது. எத்தனை முறை குளித்தாலும் அதே நிலைதான். வெளியே புழுக்கம் அதிகமாக இருந்தது. அதைவிட வீட்டிற்குள்.

கட்டியிருந்த லுங்கியுடன் மேலே ஒரு அரைக்கை சட்டையை மட்டும் எடுத்துப் போட்டுக் கொண்டு வெளியே நடக்கத் தொடங்கினேன். வீட்டைச் சுற்றியிருந்த மரங்கள் அனைத்தும் வரைந்து வைத்த ஓவியம் போல் காட்சியளித்தன. நெற்றியில் இருந்த வியர்வைத் துளி வடிந்து வாய் அருகே வர, தட்டி விட்டேன். நடக்க நடக்கத் தொடைகள் இரண்டும் உரசி உள்ளே அணிந்திருந்த ஜட்டியும் நனைந்து ஒருவித எரிச்சலை உண்டு பண்ணியது. அந்த ஒன்பது மணி இருட்டிலும் விளக்கை ஏறிய விட்டு வீடு கட்டும் பணி நடந்து கொண்டிருந்தது. தூரத்தில் ஒருவர் சுத்தியலை வைத்து ஏதோ கம்பியை அடித்துக் கொண்டிருந்தார். அவர் அடிப்பது என் தலையில் அடிப்பது போல் இருந்தது. கால்கள் வேகம் எடுத்தன.

நாள் முழுவதும் சிறுவர்கள் விளையாடிவிட்டுச் சென்ற பூங்கா தற்போதுதான் உறங்குவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தது. அங்கு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. பெரும்பாலான விளக்குகள் அணைக்கப்பட்டு இரண்டு விளக்குகள் மட்டும் எரியவிடப் பட்டிருந்தன. பின் வாசல் அருகே இருந்த விளக்கு மின்னிக் கொண்டிருந்தது. அதன் கீழே நின்று கொண்டிருந்த கருப்பு நிற நாய் ஊளையிட, அது ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியது. பூங்காவின் தென்கிழக்கில் காலையிலிருந்து ஓயாது ஆடிக் கொண்டிருந்த இரண்டு ஊஞ்சல்கள் தற்போது அசையாமல் தொங்கிக் கொண்டிருந்தன. அதன் அருகில் கிடந்த சிமெண்ட் இருக்கையில் போய் அமர்ந்தேன். வலதுபுற பக்கவாட்டில் தலைக்கு மேல் எரிந்து கொண்டிருந்த விளக்கு என் உருவத்தை நிழலாகக் கீழே தரையில் காண்பித்துக் கொண்டிருந்தது. அங்கு என்னையும் என் நிழலையும் தவிர வேறு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.

பூங்காவிற்குள் வந்து அரை மணி நேரம் கடந்திருந்தும் புழுக்கம் தணியவில்லை. சட்டையின் மேல் பட்டன் இரண்டையும் கழட்டிவிட்டு, அரித்துக் கொண்டிருந்த ஜட்டியை கையை உள்ளே விட்டு சரி செய்தேன். இடது புறமாகத் தரையில் தெரிந்து கொண்டிருந்த நிழல் ஏதோ விசித்திரமாகத் தெரிய கீழே உற்றுப் பார்த்தேன். தலையில் இரண்டு கொம்புகள். அது ஒரு மிருகம் போன்று காட்சியளித்தது. கோபத்தில் மேலும் கண்களை விரித்துப் பார்க்க, தலையின் இரு புறமும் இருந்த முடி எழும்பி நின்று கொண்டிருந்தன. கைகளைக் கொண்டு தடவிப் பார்த்தேன். குளித்து எண்ணெய் தேய்க்காத முடி மொரமொரப்பாக இருந்தது. முடியைப் பல முறை சரி செய்ய முயன்றும் தோல்வி அடைந்தேன். அருகில் தண்ணீர் குழாய் ஏதும் இருக்கிறதா என்று பார்த்தேன். ஒன்றும் கண்ணில் படவில்லை. கையில் எச்சிலைத் துப்பி தலையை ஈரப்படுத்தி, முடியைப் பணிய வைக்க முயன்றேன். இரண்டு கொம்புகளும் கீழே பணிவதாகத் தெரியவில்லை. அவ்வாறு செய்வது என்னை மேலும் மேலும் எரிச்சலூட்டி கோபமடையச் செய்தது. ஒரு கட்டத்தில் மொத்த முடியையும் பிய்த்து எரிந்து விடலாம் என்று முயற்சிக்கையில் முடிகள் அனைத்தும் மேல் எழும்பி மிருகம் போய் அரக்கன் ஆனது நிழல்.

சற்று நேரம் அமைதியாக இருந்து என்னை நானே ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். பின் சட்டைப் பையில் இருந்த சிகரட் பாக்கெட்டை எடுத்தேன். காலை வாங்கிய பாக்கெட்டில் மீதம் இருந்தது இரண்டு சிகரெட்டுகள்தான். அது என்னை மேலும் எரிச்சலடையச் செய்தது. அதில் ஒன்றை எடுத்து வாயில் வைத்து பற்ற வைத்தேன். “ஷ்ஷ்ஷ்ஷ்” என்ற சத்தத்துடன் உள்ளே இழுக்க, அது என் தொண்டை வழியாக வயிறு வரை உள்ளே செல்வதை என்னால் உணர முடிந்தது. இரண்டு நொடி உள்ளே சுழன்ற புகை வாய் வழியாக வெளியே வர, தலையை சற்று மேலே உயர்த்தி  வானத்தை நோக்கி ஊதினேன்.

வெளியே வந்த புகை வானத்தில் பெண் ஒருத்தி உள்ளாடை ஏதும் அணியாமல் வெள்ளை நிற சேலை போன்ற துணியை மட்டும் போர்த்திக் கொண்டு நளினமாக பாலே நடனம் ஆடுவது போன்று காட்சியளித்தது. அதைப் பார்த்த நான் பரவசம் அடைந்தேன். உடல் சிலிர்க்கத் தொடங்கியது.  அடுத்த இழுப்பிற்காக சிகரெட்டை வாயில் வைத்து, ஒரு இழுப்பு இழுத்து,வயிற்றுக்குள் புகையை அனுப்பி ஒரு சுழட்டு சுழற்றி வெளியே விட்டேன். மேலும் ஒரு பெண் அதே போன்று நடனம்  ஆடத் துவங்கினாள். அது என்னுள் உற்சாகத்தை ஏற்படுத்தியது. முதல் சிகரட் முடியும்பொழுது ஆறு பெண்கள் நடனமாடிக் காற்றில் கரைந்திருந்தார்கள்.

யாரும் இல்லாத அந்த இருட்டில் பெண்கள் அவ்வாறு நடனமாடியது எனக்குப் பிடித்திருந்தது. அரித்துக் கொண்டிருந்த ஜட்டியைக் கையை உள்ளே விட்டு மீண்டும் சரி செய்து கொண்டேன். இரண்டாவது சிகரெட்டையும் எடுத்து பற்றவைத்து, இழுத்து, ஊதி அதே பெண்களை மீண்டும் நடனமாட விட்டு ரசித்தேன். அது என்னுள் இருந்த மது போதையை விட அதிக போதையைத்  தருவதாக உணர்ந்தேன். நாக்கை வெளியே நீட்டி உதட்டை நனைக்க, உதட்டில் படிந்திருந்த சிகரெட்டின் கசப்பு ருசித்தது.

சிகரட் முடிந்திருந்த நிலையில் சற்று நேரம் கண் அசந்திருந்தது. ஏதோ ஒரு சிந்தனை மட்டும் என்னை ஆட்கொண்டிருந்தது. ஆழ்ந்த சிந்தனையில் இருந்த என்னை அருகில் கேட்கும் சலசலப்பு நிதானத்திற்கு இழுத்து வந்தது. சுதாரித்துக் கொண்ட நான் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன்.

ஒரு ஆண், ஒரு பெண். கணவன் மனைவியாக இருக்க வேண்டும். அவள் காலில் மெட்டி இருக்கிறதா என்பதை உற்றுப் பார்த்து உறுதி செய்து கொண்டேன். அவன் சாயலில் என்னைப் போலவே இருப்பதாகத் தோன்றியது. பெண் மாநிறம், நல்ல அழகு. அவள் தலை முடிக்குக் கீழ் அணிந்திருந்த சட்டை நனைத்திருந்தது. அப்போது தான் குளித்துவிட்டு வந்திருக்க வேண்டும்.

அவர்கள் என்னைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை .ஒருவரை ஒருவர் கடிந்து கொண்டிருந்தார்கள். ஆணின் குரலே மேலோங்கி இருந்தது. அவ்வப்போது கண்களை துடைத்தவாறே அவள் அவனுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தாள். அடுத்தவர்கள் பேசுவதை ஒட்டு கேட்பது தவறுதான், ஆனால் எனக்கு அப்போது வேறு வழி இல்லை. அமர்வதற்கு அந்த இடத்தை விட்டால் வேறு இடம் கிடையாது.

இத்தன வருஷம் ஆகியும் நீங்க என்னப் புரிஞ்சிக்கலேல்ல?

என்ன புரிஞ்சிக்க?

………

அதான் நீ நடக்குற விதமே தெரியுதே.

கோவத்துல என்னனாலும் பேசாதீங்க.

அப்டி என்னத்த பேசிட்டேன்?

நா என்ன வேணும்னேவா வர மாட்டேங்குறேன்?

பெறகு?

இன்னைக்கு முடியாது.

அதான் ஏன்னு கேக்குறேன்?

ஐயோ இன்னைக்கு முடியாது…. புரிஞ்சிக்கோங்களேன்.

சாயந்திரம் கோவிலுக்கு போயிட்டு வந்த?

இப்போ மணி பத்து ஆவுது.

எனக்கு என்னைக்குத் தேவைப்படுதோ அன்னைக்குத்தான் வேணும்… உனக்கு தோண்ற நேரத்துல எல்லாம் முடியாது.

நா என்ன வேணும்னா செய்றேன்? என் வலி எனக்குத்தான தெரியும்,  என்று சொல்ல அழத் தொடங்கினாள். அவன் எதிர்த் திசையில் திரும்பி நின்று சிகரெட்டைப் பற்ற வைத்து இழுத்துக் கொண்டிருந்தான். அவனைப் புகை சூழ்ந்திருந்தது.

கண்ணை மூடி ஒரு நிமிடம் யோசித்து விட்டு வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினேன். கதவு சாத்தியிருந்தது. ஜன்னல் வழியாகக் கையை உள்ளே விட்டு தொங்கிக் கொண்டிருந்த மஞ்சள் பையில் இருந்த சாவியை எடுத்து கதவைத் திறந்து உள்ளே சென்றேன். விளக்குகள் அணைக்கப்பட்டு இருட்டாக இருந்தது. சுவரில் கை வைத்துத் தடவியவாறே சுட்ச்சை அழுத்தினேன். விளக்கு எரிந்தது.

தரையில் கிடந்த பாயில் காலை மடக்கி கேள்விக்குறி போன்று வளைந்து வயிற்றில் கை வைத்து மனைவி படுத்திருந்தாள். அடுக்களை சென்று தண்ணீர் குடித்துவிட்டு வந்து விளக்கை அணைத்து விட்டுப் படுத்தேன். பூசை அறையில் மாலை ஏற்றப்பட்ட குத்து விளக்கு குளிர வைக்கப்படாமல் எரிந்து கொண்டிருந்தது.

 

விளையாட்டுக் கனவுகள் – ஹூஸ்டன் சிவா கவிதை

ஹூஸ்டன் சிவா

குழந்தைகள் தங்கள் கனவுகளைப் பரப்பி வைத்து
விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்
ஒரு குழந்தையின் கனவு இன்னொரு
குழந்தையினுடையதைப் போல் இல்லை
தன்னிடம் இல்லாத கனவு இன்னொரு குழந்தையிடம்
இருப்பதைக் கண்டு பரவசம் அடைகிறார்கள்
அக்கனவைத் திருடும் எண்ணமில்லை குழந்தைகளிடம்
அக்கனவை பலவேறாக மாற்றி விஸ்தீரித்து
அதன் உரிமையாளரிடமே கொடுத்து விடுகிறார்கள்
தன் கனவு பிரம்மாண்டமாகி பெருகி நிற்பதை
பெரும் பரவசத்துடன் பார்க்கிறது அக்குழந்தை
வளர்ந்தவர்களே அக்கனவுகளைத் திருடுகிறார்கள்
திருடிய கனவுக்கு மாற்றாக எதையுமே வைப்பதில்லை
சில சமயம் குழந்தைகளின் கனவுகளை
எடுத்து நுகர்ந்து பின் அதே இடத்தில்
வைத்து விடுகிறார்கள் வளர்ந்தவர்கள்
நுகரப்பட்ட கனவுகளை புறந்தள்ளி விடுகின்றன குழந்தைகள்
மேஜைக்கு கீழே கிடக்கின்றன அக்கனவுகள்
[மேஜைக்கு கீழே கிடக்கும் அக்கனவுகள்
குழந்தைகள் வளர்வதற்காக காத்திருக்கின்றன]
அவற்றுக்கு இணையாக வேறு கனவுகளை
குழந்தைகளால் தோற்றுவிக்க முடியவில்லை
கனவில்லா வெற்றிடங்களைச் சுற்றி
புதிய கனவுகளைப் பரப்புகிறார்கள்

அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: யாமம் – மகேந்திரன்

அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018

இரவின் கதை

கரீமின் குடும்பத்திற்கு பக்கீர் கனவில் வந்து யாமம் தயாரிக்கும் கலையை கற்றுத் தருகிறார். கனவு கூட ஒருவகையில் இருளோடு தொடர்புகொள்ளும் ஒரு கருவி. அதன் வழியே சில சமயம் முன்னோர்கள் நம்மோடு பேசுவார்கள். இருளென்பதைக் கடந்த காலம் என்று சுருக்கிவிட முடியாது. எல்லோர் மனதிலும் அது நிறைந்திருக்கிறது. யாமம் என்னும் அத்தர் பகலிலேயே அந்த இரவினைத் தோற்றுவிக்க வல்லது. அந்தச் சுகந்தம், இரவின் தூதுவன். “கங்குள் வெள்ளம் கடலினும் பெரிதே” குறுந்தொகை பாடல். எப்படி ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அந்த வெள்ளம் விளையாடுகிறது என்பதைப் பற்றிய கதை, அதனால் இது இரவின் கதை.

யாமம் என்னும் அத்தர் தயாரிக்கும் கரீமின் குடும்பத்திலிருந்து ஆரம்பிக்கிறது கதை. ஆங்கிலேயர்கள் வாசனைக்காக ஏங்கும் போது கிழக்கிந்திய கம்பெனியை ஆரம்பித்து, குறுமிளகிற்காக இந்தியா வருகிறார்கள். மதரா பட்டிணத்தையும் தோற்றுவிக்கிறார்கள்.  ஒருவகையில் பார்த்தால் வாசனைக்காக வந்தவர்களால் தோற்றுவிக்கப்பட்ட நகரமது. ஒரு காலகட்டத்தில் நாறும் அந்த நகரை வாசனையானதாய் மாற்ற, பக்கீர் கனவில்  வந்து கரீமின் குடும்பத்திடம் பட்டிணத்திற்குப் போகச்சொல்கிறார். அவர்களும் அவ்வாறே செய்கிறார்கள்.

இரவு ஆழமானது, அறியமுடியாதது மேலும் மர்மமானது. பகலில் ஒருவன் தன் மனதிடமிருந்து தப்பித்துக்கொள்ள முடியும். பல்லேறு விஷயங்கள் நம்மை தற்க்காத்துவிடும். ஆனால் இரவு மிக உக்கிரமானது. தலைவிரித்தாடும் மரங்களை இரவில் நேருக்கு நேர் பார்ப்பது போல. ஓடியொழிய முடியாது. அதன் கரங்கள் நம்மை அள்ளி தன் வாயினில் திணித்துவிடும். பிறகு இருள் மெல்ல தன் ஆட்சியைச் செலுத்த ஆரம்பிக்கும். சில நேரங்களில் சந்தேகம் வருவதுண்டு. உண்மையில் இருளென்பது, பகலின் எதிரிடா? வெளிச்சம் இல்லாததா? இருள் வெளியே இருப்பதா?  இல்லை மனதின் உள்ளே பதுங்கி கிடந்து சமயம் வாய்த்ததும் பீரிட்டுக்கொண்டு வெளியே வருவதா? இரவிற்கு பல்வேறு உவமைகள் தருகிறார், சிலசமயம் காலில்லாத பூனை, அடையாளம் அழிந்து போன நதி என.

மேல் மனமென்பது பகலுக்கு ஒப்பானது. ஒப்பனைத் தரித்தது, ஆழமற்றது. உண்மையில் பகலில் இருப்பவன் அல்ல அவன். மற்றோருவன் உள்ளே கிடக்கிறான், அதனை அவனவன் “வாசனா” தட்டி எழுப்புகிறது. ஒருவனின் விருப்பு மற்றும் வெறுப்புக்கு அவனின் “வாசனா” காரணமென வேதாந்தம் கூறுகிறது. அதுதான் அவனை ஆசைகள் மூலம் வழிநடத்துகிறது. அந்த “வாசனா” தான் அடி மனதின் முகம். அடி மனமென்பது ஒருவகையில் இருளுக்கு ஒப்பானது. எப்படி இருளை அளவிடமுடியாதோ அதைப் போலவேதான் அடிமனதையும் கண்டுகொள்ள இயலாது. சிலசமயம் தனக்கே தன் அகத்தைக் கண்டு அச்சப்பட வேண்டியிருக்கும்.

பண்டாரத்தை எப்படி நாய் வழி நடத்துகிறதோ அதே போல வாசனா மனிதனை ஆசைகள் மூலம் இழுத்துக்கொண்டு போகிறது. பத்ரகிரி இளம் வயதில் தாயை இழந்து, சித்தி வீட்டில் தன் தம்பியுடன் வாழ்ந்தான். தனது தம்பி மீது பெரும் அன்பு வைத்து, தானே முன் நின்று கல்யாணம் பண்ணி, கடன் வாங்கி லண்டன் படிக்க அனுப்புகிறான். தன் மனைவியை அண்ணனின் வீட்டில் விட்டுவிட்டு அவன் லண்டன் கிளம்புகிறான்.

எப்படியோ தம்பி மனைவி தையல் மீது அவனுக்குக் காமம் வந்துவிடுகிறது. இந்த “எப்படியோ” கிட்டத்தட்டக் கதையில் இருப்பவர்கள் எல்லோர் வாழ்விலும் வந்துவிடுகிறது. பண்டாரம் சம்சாரியாகிவிடுகிறது, கிருஷ்ணப்ப கரையாளர் தன் சொத்துக்காக போராடி திடுமென அனைத்தையும் தன் தம்பி பெயருக்கும், எலிசபெத்தின் பெயருக்கும் மாற்றிவிட்டு, கிட்டத்தட்டப் பண்டாரமாய் மாறிவிடுகிறார். சூதாட்டத்தில் பணத்தை இழந்து காணாமல் போகும் கரீம். பிரபு வாழ்க்கை வாழ லண்டன் வந்த சற்குணம், சுரண்டப்படும் மக்களுக்காகப் போராடுபவனாக மாறுகிறான்.

அப்படியானால் இருளேன்பது வெறும் வெளிச்சமின்மை மட்டுமில்லை, அகத்தின் ஆழமது. அகத்தினுள் கோடான கோடி ஆண்டு நினைவுகள் கொட்டிக்கிடக்கிறது. ஆழம் செல்லச் செல்ல அவை வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். இந்த அகமன இருள் ஒரு புதையல். சில சமயம் பாம்பும் வரும், மறுசமயம் பொன்னும் வரும். ஆனால் இந்தப் புதையல் எல்லோருக்கும் பொதுவானது. அவரவர் வாசனாவுக்கெற்ப்ப பாம்பும், பொன்னையும் எடுத்துக்கொள்கிறார்கள்.

காட்டை வைத்து பத்து தலைமுறைக்குக் காலாட்டிக்கிட்டு வாழ்ந்துவிட்டுப் போகலாம் எனப் பூதி கிருஷ்ணப்பாவிடம் சொல்லும் போது, எதற்காக லண்டன் வரை சென்று சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம்? மலையை மட்டும் தன் வசமாகிக் கொண்டால் போதுமென்று அவருக்குத் தோன்றிற்று. இதுவரை காட்டின் இயல்பை அறிந்துகொள்ளாமல் இருந்ததற்காக வருத்தப்பட்டார்.  தன்னுடைய அகத்தை அவர் கண்டுகொள்ளும் தருணமிது. தையல் கர்ப்பமான பின் பத்ரகிரியும், மீண்டும் கிடைத்துவிட்ட நாயைப் பார்த்த பண்டாரமும், நடுவீதியில் தூக்கிட்ட ஒரு பெண்ணைப் பார்த்த சற்குணமும் தன் அகத்தினுளுள்ள யாமத்தைக் கண்டு திகைக்கிறார்கள். தானா இப்படி இருந்தேனேன நினைக்கிறார்கள். ஏதோ வகையில் இருளோடு தனக்குமுள்ள உறவை அறிந்து கொள்ளும் தருணமிது. முழுமையாகத் தன்னை கண்டு கொண்ட தருணம்.

கதையில் வருவோர் அனைவரும் காணாமல் போய், கரைந்துவிடுகிறார்கள். கனவில் வந்த பக்கீர் திரும்பவும் வரவில்லையே என ஏங்குகிறான் கரீம். வலி தாளாமல் எங்கோ தொலைந்து போகிறான். அதைப் போலவே பண்டாரமும் கரைந்து சுகந்தமாக மாறிவிடுகிறார். மற்றவர்கள் எல்லோரும் தன்னைத் தொலைத்த இன்னோருவார்களாய் மாறிவிடுகிறார்கள். இருளின் அலைகழிப்பை கண்டவர்களாக அவரவர் பாதையில் பயணிக்கிறார்கள். தொலைந்து போன அவர்கள் யாமமாக மாறிவிடுகிறார்கள். அந்த யாமம் அகத்திற்குள் புதைந்து அடுத்த அடுக்கை உருவாக்குகிறது. அடுத்த தலைமுறைக்கான புதையல்.

ஐந்து கதைகளுக்கும் இடையேயான சரடு இந்த யாமம்தான். அதை எப்படி தங்கள் போக்கில் கோர்த்துக்கொள்கிறார்கள் என்பது வாசகனுக்கு விடப்பட்ட இடைவெளி. அதனை நான் இப்படி நிரப்பிக்கொண்டேன். அதேபோல் மற்றவர்களுக்கும் வாய்ப்பளிக்கிரதேன்றே தோன்றுகிறது.

White டவுன், black டவுன் என நகரம்கூட இரண்டாகப் பிரிந்திருக்கிறது. Black டவுனிலிருக்கும் கஷ்டப்படும் மக்கள்தான், white டவுனை புதுப்பிக்கிறார்கள். நீங்கள் போய் அங்கு வேலை செய்யவில்லையென்றால் நாறிப்போய்விடும், அதனால் போகாதீர்கள் என்று சற்குணம் வலியுறுத்துகிறான். இருள் எல்லாவற்றையும் புதுப்பிக்கிறது. மீண்டும் பக்கீர் கனவில் வந்து புதுப்பிப்பார். யாவரின் சுக துக்கங்களும் அறிந்த இரவு ஒரு ரகசிய நதியைப் போல முடிவற்று எல்லாப் பக்கங்களிலும் ஓடிக்கொண்டிருந்தது. அதன் சுகந்தம் எப்போதும் போல உலகமெங்கும் நிரம்பியிருக்கும்.

ராமகிருஷ்ணனின் கதை கூறுமுறை நாவலுக்கு வலு சேர்க்கிறது. நுண்ணிய தகவல்கள் கொண்டு வாழ்வை முன் நிறுத்த முயலுகிறது. இரவை எழுதி அதைப் படிமமாக மாற்றிவிட்டிருக்கிறார்.

அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: கொற்றவை – கமல தேவி

அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018

பெருங்கனவின் வெளி

நாவல்  :கொற்றவை

எழுத்தாளர் :ஜெயமோகன்

கதைகேட்கத் துவங்கிய கணத்தில் விழித்தலில் கனவு கைகூடும் மாயம் நிகழ்கிறது.இல்லை அதற்கு முன்பே பார்க்காததிருடனை,வராத பூனையை நாம் விரட்டியதைப் பற்றி நாமாக கதைகளை அய்யா,அம்மா விடம் சொல்கிறோம்.சொல்பவருக்கும், கேட்பவருக்கும் ஆனந்தம் தரும் கதைகள்.அது நம் சுயநலத்திற்காக,பிறர் கெடுதலுக்காக மாறுகையிலேயே கதை என்ற பெயர் பொய்யன்றாகிறது.கவிதையில் அதுவே மீண்டும் பேரழகாகிறது.என்றபோதும் மிகஆழத்தில் உண்மையை ஒருசிறு வைரத்துளியென அனைத்துக்கதைகளும் கனிக்குள் சிறுவிதையென பொத்தி வைத்திருக்கின்றன.அந்த விதை விருட்சமாகி காடாவது போல முன்னோர்களின் ஆளுள்ளத்து பேருண்மைகள், அச்சங்கள், நம்பிக்கைகள், மனநிறைவுகள், அவர்கள் மட்டும் உணர்ந்ததென ஒவ்வொருவரும் நினைக்கும் சில கண்டடைதல்கள் இணைந்து பொதுவாகும் ஒரு மனதின் தருணத்தில் காவியங்கள்,காப்பியங்கள் எழுதப்பட்டிருக்கலாம். யாரோ அறிய முற்படக்கூடும் என்ற நினைப்பே அதை சுவையுள்ளதாக மாற்றச்செய்கிறது.

கடல் அனைவருக்கும் அலையாக தெரிகையில் அதை மனதின் புறவடிவாக காணும் மனம் அந்தகணத்தை கடத்த விழைகிறது.அப்படியாக ஒருசமூகப்பண்பாட்டின் சிந்திக்கும் மனம் அல்லது மனங்கள் அல்லது மூளைகள் மேலதிகமாக அழகியல் உணர்வும், காருண்யமும், மொழித்திறனும்,தொடர்ந்த முயற்சியும் மேற்கொள்கையில், அறியும் ஒன்றை கடத்த பெருங்கதையை சொல்கிறது அல்லது எழுதுகிறது.

பயன்பாட்டில் உள்ள மொழியின் தன்மை,முன்னவர்கள் அதுவரைக் கொண்டுவந்து சேர்த்த வெளிப்படுத்தும் தோரணைகள்,முக்கியமாக வெளிப்பாட்டு சாதனங்கள் கதைசொல்லல் முறையை, வடிவத்தை தீர்மானிக் கின்றன.என்றாலும் அதைமீறிய சாதனைகள் இருந்துகொண்டேயிருக்கின்றன.எல்லைகளை மீறி,மீறியே இதுவரை வந்திருக் கிறோம்.ஆனால் இலக்கியம் போன்ற காலாதீதமான ஒன்றில் எல்லைமீறல் என்பதை விரிவாக்கம் என்றே கொள்ளப்படுகிறது.அது எப்போதும் கண்காணிக்கப்பட்டும் வருகிறது என்றே நினைக்கிறேன்.இது நாவலின் ஆசிரியரால் நாவல் கோட்பாட்டு என்ற அவரின் நூலில் குறிப்படப்பட்டுள்ளது.

சிலப்பதிகாரம் என்ற தமிழ்காப்பியமானது தமிழ்நிலத்தின் முக்கியமானக்கூறுகளை ஒட்டுமொத்தமாக சொல்ல எழுதப்பட்ட காப்பியம். அன்றிருந்த செய்யுள் வடிவில் எழுதப்பட்டாலும் கூட மிகவிரிவாக எழுதப்பட்டது.பள்ளியில் எழுத்திற்குப்பிறகு அறிவது திருக்குறள்.அதன்பின் ஒருசொல்லாக அறிமுகமாகும் சிலப்பதிகாரம் கண்ணகியை, மாதவியை, கோவலனை நம் வாழ்வில் இணைத்துவிடுகிறது.இம்மூவரையும் இவ்வளவு தீவிரத்தன்மை கொண்டவர்களாக இல்லையெனினும் இந்தசாயலில் கண்முன்னே கண்டுக்கொள்கிறோம்.

நம் சிறுவயதிலிருந்து ஒவ்வொரு வகுப்பையும்,வயதையும் கடந்து வருகையில் அவர்கள் நிறம்,திடம் கொள்கிறார்கள்.முதலில் கண்ணகி எளிதில் பதிந்துவிடுகிறாள்.மாதவி வரை வருவதற்கு ஒருநீண்ட காலகட்டம் தேவைப்படுகிறது.நம் அமைப்பு ஒரு காரணம். பெண்குழந்தைகள் கடிவாளம்கட்டியவர்களாக இருப்பதும் ஒருகாரணம். இதுக்கூட பிழையாக இருக்கலாம்.இன்றைய பள்ளிக்குழந்தைகள் நேற்றையப் பள்ளிக்குழந்தைகளை விட தெளிவானவர்கள்.மீண்டும் கோவலன் வரை வருவதற்கு வீட்டில்,உறவுகளில், அக்கம்பக்கத்தில் சிலவாழ்க்கைகள்,சங்கஇலக்கியத்தின் அகம் என்று நிறைய தேவைப்படுகிறது.இவ்வாறு நான் சொல்வது என் புரிதலை சார்ந்து மட்டும் .

வாயிலோயே…., என்று நீளும் மதுரைக்காண்டத்தின் வரிகளோடு கல்லூரித்தேர்வு முடிந்தப்பின் சிலப்பதிகாரம் தன் பயணத்தை  நிறுத்திவிடுகிறது.உண்மையில் அந்தவயதிற்கு பிறகுதான் படித்து புரிந்து கொள்ள முடியக்கூடிய நூலாக சிலம்பை  நான் கருதுகிறேன்.

அதன்பின் நான் முயற்சி செய்து உரைநூலை வைத்துக்கொண்டும்,தமிழ் அகராதியை வைத்துக் கொண்டும் போதிய வாசிப்பை அளிக்காமல் முடித்த சிலப்பதிகாரம் மனதில் குற்றஉணர்வை தந்து கொண்டேயிருந்தது.செய்யுள் வாசிப்பை பள்ளியில் எளிமையாக்கியிருந்தால் அல்லது கற்கும் ஆர்வம் இருந்திருந்தால் இந்தவாசிப்பு  நன்றாக இருந்திருக்கும்.ஏறக்குறைய ஆங்கிலமும்,செய்யுளும் தெரியும் ஆனா தெரியாது நிலைதான்.

கொற்றவையை தபாலில் வாங்கிய அன்று அதைப்பற்றி தெரிந்த ஒன்று நாவல் வடிவில் சிலப்பதிகாரம் என்பது மட்டுமே.நாவல் வடிவில் சிலப்பதிகாரம் என்பதே மிக வசீகரமாக இருந்தது.உடனே வாங்கத்தூண்டியது.இதையாவது ‘வாசித்து’ விட வேண்டும் என்ற ஆற்றாமை.முதல் பக்கத்திலேயே நானும் குறைச்சலில்லை என்று புத்தகம் சவால் விட்டது.அப்படியே மூடி வைத்துவிட்டு காடுநாவலை எடுத்துவிட்டேன்.கண்முன் தலைமாட்டிலேயே உறங்கி சலித்தாள் கொற்றவை.

வேறுவழியில்லை தினமும் முடிந்தவரை என்று பாடப்புத்தகமாய் நினைத்து ஒருகருக்கலில் எடுத்தேன்.சாணித்தெளிக்கும் ஓசை,பட்சிகளின் கிச்கிச்,காகங்களின் அட்டகாசங்ளோடு சேவலின் குரல் அறைகூவலாய் ஒலிக்க கொற்றவை எழுந்தாள்.நீரென, நெருப்பன, நிலமென உருகொண்டாள்.மீண்டும் அந்தப் பழைய பள்ளி செல்லும் பெண்ணானேன்.பொன்னியின் செல்வனை விடுமுறை நாட்களில் எழுந்ததும் துவங்கி வீட்டில் லைட்டை அணைக்கச்சொல்லித் திட்டுவது வரை வாசித்து திளைத்த அவள்.மீண்டும் முழுவதுமாக என்னை புத்தகத்திற்கு அளிக்கமுடிந்தது குறித்து எனக்கு வியப்பு.கல்லூரியின் இறுதிநாட்களில் வாசிப்பில் ஒருசலிப்பு விழுந்திருந்தது.நம்மால் வாசிக்க முடியவில்லையா என்ற கோபமும்,பயமும் குழப்பத்தை ஏற்படுத்தியது.புத்தகங்கள் எல்லாம் கண்முன்பு ஆற்றில் அடித்துச்சல்லப்படுவது போன்ற கனவுகள் வரும் அளவிற்கு.

யாரோ ஒரு முகம் பெயர் தெரியாதவர், தோழியின் அண்ணனின் நண்பன் தோழிக்கு கொடுத்த எஸ்.ராவின் புத்தகத்திலிருந்து தொடங்கியது இதுவரையான இந்தப்பயணம்.

கொற்றவையின் மொழி கல்கோணா மாதிரி.கல் தான்…கல்அல்ல இனிப்பானது.ஊறவத்து உண்ண வேண்டியது.ஆனால் சப்பிக்கொண்டிருந்தால் சப்பென்று ஆகிவிடும்.கவிதை கவிதை என்று சொல்லிக்  கொண்டிருப்பது வேறு.கவிதையை உணர்வது வேறு.

கொற்றவையின் வரிகள்  கவித்துவமானவை.கொற்றவையின் மொழியே என்னை மிகவும் கவர்ந்தது.சும் மாவே எந்தப்பக்கத்தையாவது எடுத்து வாசித்துக் கொண்டிருக்கலாம்.மழையைப் பார்ப்பதைப் போல.புரிய வேண்டும் என்பது அடுத்தநிலை. ‘எல்லாப் பெயர்களும் பெயரற்றவனின் பெயர்களே’ என்ற வரிக்கும் கொற்றவைக்கும் தொடர்பு இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை தானே.

மலையுச்சியேறிய முக்கண்ணனும்,கடலுல் இறங்கிய ஆழிவண்ணனும் தமிழ்சூழலில் எழுந்துவருகிறார்கள்.நம் முன்னோன் பிரபஞ்சத்தை,இயற்கையை எதிர்கொள்ளும் ஆதிமனதின் ஆளுள்ளத்து அச்சங்கள் அதைமீறி எழுந்து அச்சமென்னும் இருளின் மத்தகத்தின் எதிரே நிமிர்ந்து நின்று எதிர்கொள்ளும், அறிதல் போரில் தன்னை இழந்து அறியும் உண்மை.

மனிதமனத்தின் முதல் தத்துவ விதை.மனிதகாலகட்டத்தின் குழந்தைப்பருவம்.அந்தப் பருவத்திற்குரிய மனிதனின் அச்சம்,வியப்பு,விதையென உறங்கும் தனிமை,இட் எனப்படும் விலங்குமனநிலை அதை எதிர்கொள்ளும் ஒருதனித்த உள்ளத்தை கொற்றவை தன்மொழியால் அந்தஆதி உணர்வுகளை உணரச்செய்கிறது.உடன் வரும் தமிழ் அமுதென தெளிந்து எழுகிறது.தன்உணர்வுகளுக்கு ஒலிக்கொடுக்கிறான் அல்லது தன்னைசுற்றியுள்ள ஒலியிலிருந்து தனக்கான ஒலியை தேர்ந்தெடுக்கிறான்.

தமிழ் எறமுடியாத சிகரங்களைக் கடக்கும் ஒற்றைக்கொம்பு கலைமான் என உடன் வந்துகொண்டிருக்கிறது.அனைத்திலிருந்தும் அறிய முற்பட்ட அறிவன் அவன் மனிதன் என்பதை கொற்றவை பழம்பாடல் சொன்னதாக சொல்கிறது.குலக்கதை சொன்னதாக சிறுகுடிகள் இணைந்து குலங்கள் உருவாகியதை, நீரால்,  எரிமலையால் அழிந்ததை சொல்கிறது.மெல்ல மெல்ல நீர் குமரிக்கண்டத்தை உட்கொள்வதன் சித்திரம் வளர்வதன் மூலம் தமிழின் இந்நிலத்தின் மக்களின் பழமையை சொல்கிறது.அன்றிலிருந்து இந்நிலம்  இன்றுவரை குமரியை வடகோட்டை எல்லையாகக் கொண்டு மாறாதிருப்பதன் மாயத்தை சொல்கிறது.

தமிழின், அதன்மக்களின் புனைவுவரலாறாக நாவல் விரிகிறது.விரிந்த நிலத்தின் பின்ணனியில் மொழியையும் மக்களையும் வைக்கிறது.அந்த நிலப்பரப்பு சிதறி மக்கள் தோணியேறி பலதீவுகளில் நிலங்களில் மீண்டும் எழுவதைக் காட்டுகிறது.ஒரு மாயசுழி போலவா, சுழலும் புதிர்க்கட்டம் போலவோ நம்மை உள்ளே இழுத்துக் கொள்கிறது.

மீண்டும் கடல்முனையில் அதே நகரம் அதேமக்கள், அதே செழிப்பு ,வாணிகம், ஏழடுக்கு மாளிகையில் கண்ணகி எழுந்துவருகிறாள்.பூம்புகார் எனும் பெரும்வணிகநகர் அதன் அனைத்து வண்ணங்களுடனும்,ஒலிகளுடனும்,அலைகளின் ஓதத்துடனும் நம்முன்னே தன்னைக் காட்டுகிறது.மீண்டும் வெயில் காயும் நிலத்தில் மதுரை.அதுஉருவாகி எழுந்தப்பின் உருவாகும் அரசியல் சிக்கல்களுடன் மீண்டும் வருகிறது.

வறுமுலைகள் முழங்கால் வரை தொங்க வரையாட்டி மீது  வழிகாட்டும் அந்நிலத்தின் வழிவந்த பெண், மண்மகள் அறியா பொற்பாதங்களுடன் மணவாழ்வில் நுழைகிறாள்.

அனைவரும் அறிந்த கண்ணகி, மாதவி, கோவலன் கதை நாவலுக்குரிய விரிவில்  பலவண்ணங்களில் எழுந்து வரும் சித்திரம் நம்மையும் அந்நிலத்தில் வாழச்செய்கிறது.இதில் மாதவியை கோவலன் பிரியும் தருணம் கோபத்தை ஏற்படுத்துகிறது.சிலப்பதிகாரமாக இருக்கும்போது கோவலன் கண்ணகியிடம் மீளும் தருணம் என்றிருந்தது இந்தவாசிப்பில் கோவலனின் முகம் தெரியும் தருணமாக இருக்கிறது.இது நாவல், காப்பியத்திலிருந்து வேறுபடும் இடங்களில் ஒன்று.ஆளற்ற தெருவில், இரவில் தன்இல்லம் நோக்கி நடந்துவரும் கோவலனின் சித்திரம் மனதில் நிற்கிறது.

இந்நாவல் உருவாக்கும் நீலி என்ற வழித்துணை பாத்திரம் குறிப்பிடத்தக்கது.அது கண்ணகியின் பிறிதொரு வடிவம்.புதுவாழ்வு தேடிச் செல்லும் வலுவான தெளிந்தமனதின் புறவடிவம்.அதிகார மோதல்கள் நிகழும் மதுரையின் சித்திரம், புறநகர்பகுதியின் சித்திரம் என நாவலில் பழைய தமிழ்நகரத்தின் பலசித்திரங்கள் நம்மை அழகிய கனவுக்குள் ஆழ்த்துபவை.சங்கமக்களின் நிகழ்த்துக் கலைகள் நாவல் முழுக்க அழகாக எழுகின்றன.

கோவலனின் கொலைக்குப் பின் மனம்தடுமாறிய கண்ணகியின் எழுகை நாவலில் மூலம் போலவே வேறுவகையில் உணர்வு பூர்வமாக எழுந்துவந்து நம்மை ஆட்கொள்கிறது.மீண்டும் மதுரை நெருப்பால் அழிகிறது.மதுரை ஏதோ ஒருவகையில் அழிந்து பின் எழுவதை ஒட்டுமொத்த மேலோட்டமான சித்திரமாக என் மனம் எடுத்துக்கொண்டது.

நாவலில் வாழ்வியல்,மெய்யியல் உண்மைகள் பேசப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன.ஐவகை நிலங்களில் நாமும் பயணம் செய்கிறோம்.நாவல்முழுவதும் பெண்தெய்வங்கள் வந்துகொண்டேயிருக்கின்றார்கள்.இதன் மூலம் இன்றைய சமூகமனம் தூண்டப்படுவது நாவல் வாசிப்பவர்கள் எண்ணிக்கையைப் பொருத்தது.

செங்குட்டுவன் அடர்கானகத்தில், நதியில், மலையருவிகளின் பயணம் செய்யும் பகுதி அழகிய ஆர்வமூட்டும் சித்திரம்.இளங்கோவடிகள்,மணிமேகலை கதைகள் நாம் அறிந்தவைகளை மீறி முற்றிலும் வேறுதளத்திற்கு செல்கின்றன.

மீண்டும் கடற்கரையின் கருமையில் அலைகளின் முன்னே,இந்தநூற்றாண்டு மனிதனின் தாயின் நினைவோடு முடிகிறது நாவல்.புத்தகத்தை வாசித்து வைக்கையில நாவல் முழுவதுமே அன்னையைப்பற்றிய பெருங்கனவு தானா? என்று பெருமூச்செழுகிறது.நிலம்,நீர்,காற்று,நெருப்பு என அனைத்திலும் உறைவதும் தாய்மையா என்று மனம் நினைக்கிறது.ஆதன் மலையேறி அறிவது ஆதி என்னும் அன்னையையா? கடலினுள் நுழைந்தவன் ஆழத்தில் அறிந்ததும் அதையேவா? தென்திசையில் ஒற்றைக்காலில் நிற்கும் கன்னி பேரன்னை எனில் பெருந்தாய்மை என்பது கன்னிமையா? என்று மனம் அலைகழிகிறது.எங்கோ ஆழத்தில்,ஏன் என்ற காரணங்களில்லாது,எப்படி என்ற தெளிவில்லாது,வெறும் உணர்தலாக மட்டும் என்னில் தென்முனையில் நிற்பவளை உணர்ந்து கொண்டேன்.வாசிக்கும் பெண்கள் அனைவருக்கும் இப்படித் தோன்றும் என்று உள்ளுணர்வு சொல்கிறது.

இந்தநாவலால் தாய்மை என்பது தத்துவமாகும் ரசவாதம் நிகழ்கிறது.இது உணர்த்துகிறது…தாய்மை என்பது நிச்சயம் பெண் சார்ந்தது மட்டுமல்ல.அது ஒரு பிரபஞ்சம் போலொரு பேருண்மை என.கன்னிமனம் என்பது பெருந்தாய்மை.அவள் ஒருமகவுக்கு தாயாகுகையில், தாயாகமட்டுமாகிறாளா என்று நினைக்கையில் கி.ராஜநாராயணின் கன்னிமை என்ற கதை மனதில் எழுகிறது.அதை உணர்ந்த நம் முன்னவர்கள் கன்னியை தென்முனையில் நிற்க வைத்திருக்கிறார்கள்.கன்னி நிலம் தன்னில் விழும்  விதைகளுக்கும் உடல் தரகாத்திருப்பது. அறுவடைக்குப் பின் முற்றிலும் தன்நிலைக்கு மீள்வது எனில் கன்னிமை உலகு உய்வதன் பெரும்சக்தியா? என்று மனம் கேள்விகளை அடுக்குகிறது.

கருமை ஔிகொண்டு நீலமாவதைப் போல இந்தநாவல் வாசிப்பிற்கு பிறகு நம் அறியாமைக்குள் ஒருஔி விரிகிறது.காலாதீதத்தை உணரும் ஒரு தருணம்.இயற்கையின் முன் நாம் கட்டியெழுப்பியவைகள் மீது வியப்பும்,ஆர்த்தமின்மையும் ஒரே நேரத்தில் எழுகிறது. இந்தவயதில் பற்று குறைவது குறித்து சிந்திக்கையில், தமிழ் என்னும் பேருண்மை வந்து அணைத்து இயற்கையை,வாழும் கணம் என்ன என்பதன் பொருளை சொல்லித்தர தொடங்குகிறது.மொழி அன்னையாகும் தருணம்.அவள் தருவது வாழ்வென்னும் அமுதம்.

நாவலை வைத்தப்பின் அதன் மொழி நம்மை முற்றிலும் சூழ்ந்து கொள்கிறது.அதிலிருந்து விடுபட நாட்களாகும்.எழுத்தாளர் என்னும் தந்தையின் கையைப்படித்துக் கொண்டு இறந்தகாலத்திற்குள் அல்லது காலமென்னும் சுழற்சிக்குள் முன்னோர்களின் வெளிக்கு இந்நாவல் மூலம் செல்கிறோம்.அதற்காக அவருக்கு என்னுடைய ப்ரியங்கள்.

இதை எழுதி முடித்தப்பின் நான் உணர்ந்தது இது தராசு பிடிக்க தகுதியான கையல்ல என்பதைத்தான்.தட்டு நாவல் பக்கம் சாய்ந்திருக்கிறது.இந்நாவல் எழுதியவரை வணங்குவதன் மூலம் தென்திசை முன்னவர்களை வணங்கி இந்தநிலத்தின் ஆதிவாழ்வை உணர்ந்து சிலைக்கிறேன்.கண்சிமிட்டி  அன்றாடவாழ்விற்காக எழுகிறேன் என்றாலும் நாவல் வாசிப்புக்கு முன்பு இருந்த நான் அல்ல இந்தநான்.இரண்டாவது வாசிப்பில் இதை எழுதுகிறேன்.அடுத்தவாசிப்பில் புதியவாசல்கள் திறக்கக்கூடும்.மீண்டும் எடுப்பதற்காக வைக்கும் போது  பெருஞ்செல்வத்தை கையில் வைத்திருக்கும் தலைமுறை நாம் என்ற பெருமிதத்தோடு அச்சுஊடகத்தை நன்றியோடு நினைக்கிறேன்.