Author: பதாகை

பிற்பகல் நேரச் சலனம் – சரவணன் அபி கவிதை

சரவணன் அபி

நண்பகல்
அரவமின்றி உதிர்ந்துகொண்டிருக்கிறது

கிழக்குவானின் கவிந்துவரும் இருளும்
ஈரம் பொதிந்துவரும் காற்றும்
அசாதாரண தூய்மை உறுத்தும்
இந்த பாண்டுங் நகரின் சாலையில்
இலைக் குப்பைகளையும் என்னையும்
தலைமுக்காடில்லா இளம்பெண்ணொருத்தி
உணவு பரிமாறும்
சாலையோர கடைக்குள் தள்ளுகின்றன
வரவேற்று அமரச்செய்து
குப்பையை காலால் வெளித்தள்ளி
நாஸி படாங் தட்டுகளை
மேசைமீது பரப்புகிறாள்
புளியுடன் மசித்தரைத்த
பச்சைமிளகாய்த் துவையலை
கீரையுடன் கலந்துகொண்டே
ஆப்பிரிக்க ஆசிய அருங்காட்சியகம்
போகும் வழி வினவுகிறேன்

இலக்கேதுமின்றி
இடம்மட்டும் கேட்குமென்னை
எப்போதும் எல்லாரும்
பார்ப்பது போலல்லாமல்
இருவீதிகள் தள்ளியிருக்கும்
வழி சொல்லித்தருகிறாள்

தேனும் சிறுஎலுமிச்சைச்சாறும் கலந்ததொரு
மிக அற்புதமான தேநீரைப் பருகியபின்
அவள் புன்னகையை
என் முகத்திலணிந்துகொண்டு
சுத்தத்தைசீண்டும்
சூறைக்காற்றில் நுழைகிறேன்

மென்குளிருறைக்கும்
நெதர்லாந்திய கட்டிடம்
பதறிப் படபடக்கும் என்மனம்போல்
துடிக்கும் கொடிகள்
மங்கிய மஞ்சள் விளக்கொளியில்
பதிவுகளாக மிதக்கும்
கடந்துசென்ற காலங்கள்
நாடுகள் நேசங்கள் துரோகங்கள்

யாருமற்ற பிற்பகல்
எரிந்தடங்கிய தங்குபான் பராஹு
எரிமலையின் ஓரம்
இயற்கை வெந்நீரூற்று
கந்தக மணம் மேவும் காற்றில்
நீரிலிறங்க மனமின்றி
அசையாது நிற்கும்
மரத்தின்நிழல்
மேல்விழும்
சலனமற்ற உக்கிரம்

இன்னும் இந்த நாள் முடியவில்லை
இன்னும் பார்ப்பதற்கு
இன்னும் செல்வதற்கு
காத்திருக்கின்றன
இடங்களும் பயணங்களும்
புகைகசிந்து பேசும் அந்த
எரிமலைமட்டும்
எரிந்தடங்கி விட்டால் போதும்

 முப்பது பணம் – ந. பானுமதி சிறுகதை

பானுமதி. ந

கல் பதித்து சிமெண்ட் பூச்சால் இணைக்கப்பட்ட தரை அங்கங்கே வெடித்திருந்தது. அது குளக்கரை மேடை. பனியின் குளிர்ச்சி பிளவுகளின் இடையே பரந்திருந்த மண்ணிலும், பல்லிளித்த கற்களிலும் இன்னமும் இருந்தது. ஆனாலும் மேலே சூரியன் ஒளிப்பிரகாசனாய் இருந்தான். அடர்த்தியான அரச மர நிழலில் நானும் பிள்ளையாருமாக உட்கார்ந்திருந்தோம். இளம் பிள்ளையார். அனுபவங்களின் கசடுகள், கசப்புக்கள் இல்லாமல் தொந்தியின் மேலெழும் தும்பிக்கையுடன் அசையாமல் அமர்ந்திருந்தார். இலைகளின் ஊடே தண்ணீர்த் தகட்டில் நிழலாடும் ஆடியென வானம் கண்ணாமூச்சி காட்டியது. நான் கணேசனைப் பார்த்து நட்புடன் சிரித்தேன். எனக்கே வியப்பாக இருந்தது. சிரிப்பு… நட்பு.. இந்த உணர்வுகள் மரத்துவிட்டதென்றே நினைத்திருந்தேனே, இன்னமும் வாழும் முனைப்பு என்னிடம் இருக்கிறதோ?என் குறுஞ்சிரிப்பு இப்பொழுது முரண் நகையாகி ஏளனச் சிரிப்பாக வழிந்தது. ’என்னை ஏன் கலவரப்படுத்துகிறாய்?’ என்று அசையாப் பிள்ளையார் கேட்பது போல் தோன்றவும் வாய் விட்டுச் சிரித்தேன். என்னைப் பார்த்து எத்தனை பேர் சிரித்திருக்கிறார்கள்- இப்பொழுது என் முறை, பிள்ளையே!

அரசிலைகள் சலசலத்து நீரின் மேல் நில்லாக் கோலங்களை வரைந்தன. தெளிவில்லா உருவங்கள். பிம்பங்கள் கலைந்து கலைந்து ஒன்று மற்றொன்றாய் உருவெடுத்து அழிந்தன. சாரையும் சர்ப்பமுமாய் ஆட்டம் காட்டின. வளைந்து வழுக்கி ஓடும் அது சாரையா அல்லது காமினியா, கவிதாவா,  புவனாவா?ஆவலுடன் நீந்திச் செல்லும் அந்த சர்ப்பம் நானோ? அவை ஒரு மாலையைப் போல் ஏன் காட்சி தருகின்றன? இல்லை, மாலையில்லை ஒரு வட்டம், நீள் வட்டம், அடியும் நுனியும் காணாத வட்டம். தொடக்கப் புள்ளியையும் முடிக்கும் புள்ளியையும் விழுங்கிவிட்ட முழு வட்டம்.

வட்டம் எப்போது அரசிலை ஆனது?அல்லது அரசிலைதான் வட்டமாகக் காட்டியதா? பிள்ளையாரைக் கேட்கலாம் என்றால் அவ்வளவு பெரிய செவிகள் இருந்தும் காதுகளை அவர் மூடிக் கொண்டுவிட்டார். துண்டை உதறி என் எதிர்ப்பைக் காட்டிவிட்டு அவரின் பின்புறம் சென்று படுத்துக் கொண்டேன். நினைவுகளை இப்படி உதற முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

என்னுடைய பதினாறாம் வயதிலே நாங்கள் அந்த ஊருக்கு வந்தோம். பேரையும், ஊரையும் சொல்லி நான் யாரையும் சங்கடப்படுத்தப் போவதில்லை. மொத்தமே பதினாறு வீதிகள் தான். ஒவ்வொரு வீதியிலும் இருவது, முப்பது குடும்பங்கள். இரு நாட்களில் ஊரின் முகங்கள் முழுதும் பரிச்சயமாயிற்று.

சைக்கிள் ஓட்டிக் கொண்டு ஒரு பெண் எங்கள் வீட்டிற்கு பால் ஊற்ற வந்தாள். ’பொன்னுத்தாயி ஊருக்குப் போயிடிச்சு. நாந்தான் வருவேன் இனி. என்னா, முழிக்கிறே? பால் சொம்பு கொண்டா’ என்றாள்.’அம்மா, பால்’ என்று குரல் கொடுத்துவிட்டு நான் வாசலில் அவள் சைக்கிளைப் பார்க்க விரைந்தேன். ரொம்பப் பழைய மாடல் ‘ஹெர்குலஸ்’. ஆண்களுக்கே உயரம் அதிகம். பால் கேனை மாட்டிவிட்டு அதில் அவள் ஏறிய லாகவம். பிரமிப்பதற்குள் விரைந்து விட்டாள்.

இலேசான மினுமினுப்போடும் உறுதியோடும் தெரிந்த அந்த கணுக்கால்களையும், ஆடுசதையினையும் நான் அடிக்கடி பார்க்க நேரிட்டது. குறுக்கும் நெடுக்கும் பறந்து கொண்டேயிருப்பாள். புல்லுக்கட்டு, புண்ணாக்கு, தவிடு என அவள் கேரியரில் ஏதாவது பயணித்துக் கொண்டிருக்கும். ஒரு நாள் அசந்தே போய்விட்டேன், நோயுற்ற  பெரிய கன்றுக்குட்டியை சைக்கிளில் கட்டி ஓட்டிப் போனாள். அசாத்யமான பெண். அவளைப் பற்றி என் மதிப்பு உயர்ந்து கொண்டே போயிற்று. என் அக்காவும் இருக்கிறாளே.. தேங்காயை உரித்துத் தந்தால் மட்டும் போதாது, உடைத்தும் தர வேண்டும். அவளிடத்தில் எனக்கு என்ன ஈர்ப்பு என்றே புரியவில்லை. அவளைப் பற்றி யாரோடாவது பேசி கிண்டலுக்குள்ளாவேன்.

தன்னை மறந்து செயலில் முனைப்போடு இருக்கும் அவளை முடிந்தபோதெல்லாம் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

“டேய், மோகினி உன்ன புடிச்சிருக்கு.விட்டுடு, இல்ல தவிப்ப” என்று சீனி சொன்னபொழுது ‘போடா, டேய்’ என்றுதான் சொன்னேன்.

அவள் என்னைவிட ஆறேழு வயது பெரியவள். ’இந்தப் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணாம வச்சிருக்கா அவ அத்தை வீட்ல. பாவம், அம்மா, அப்பா இல்லயாம்.  ஓடா உழச்சி மாடாத் தேயறது, என்னிக்கு விடியுமோ?’ அம்மா பேச்சுவாக்கில் சொன்ன செய்தியில் நான் அவளுக்கு காமினி எனப் பெயரிட்டேன்.’நா இருக்கேன் உனக்கு’ என மனதில் சொல்லிக்கொண்டேயிருந்தேன்.

கோடை விடுமுறை வந்தது. அவள் சைக்கிளில் ராஜா குளத்திற்குப் போவதைப் பார்த்தேன். கானல் அலை அடிக்கும் அக்னி நக்‌ஷத்ரம். தெருவில் ஈ காக்கை இல்லை. ஒரு மரத்தின் இலை கூட அசையவில்லை. வீடுகள் ஆழ்ந்த மதிய உறக்கத்தில் இருந்தன. பனியனுடனும், அரைக்காற்சட்டையுடனும் நான் அவளைப் பின் தொடர்ந்தேன்.

‘என்ன தம்பி, என்ன வேணும்?’ அவள் என்னை எப்பொழுது பார்த்தாள் எனத் தெரியவில்லை, இத்தனைக்கும் நான் மரத்தின் பின்னிருந்துதான் அவள் குளத்திலிருந்து மேடேறி கரைக்கு வருவதைப் பார்த்து க்கொண்டிருந்தேன்.தண்ணீர் குடிக்க வந்த ஆடுகள் கவனமாக அடி வைத்து இறங்கிக் கொண்டிருந்தன.

‘இந்தா, பேச்சி, பாத்து இறங்கு, சீமான பாத்து பயந்துடாதே,’ என்று குட்டியாட்டைப் பார்த்து சிரித்தாள். ஈரத்தில் உதடுகள் நனைந்து ஒளியுடன் மின்னின. நெற்றியில் படிந்த கூந்தல் இழைகள் தனி அழகைக் கொடுத்தன.தோள்பட்டை எலும்புகளும், சரிந்து இறங்கும் கழுத்தும் கொள்ளை கொண்டன. உயர்த்திய கைகள் காட்டிய மறைந்த அழகுகள் இம்சித்தன. உரமேறிய உடலும், இளமையும் என்னைப் பித்தாக்கின.

‘அம்மா சொன்னாங்க’ என்றேன்

“விருந்தாளி வந்திருக்கா? பால் கூட வோணுமா?’’

‘அதில்ல, நான் வந்து..’

‘‘நீ வந்து..? ’’

‘நாம..’

‘’நாம?’’

‘இல்ல.உனக்கு கல்யாணம் ஆவலயாமே?’

‘‘ப்பூ.. இதானா? அதைக் கேக்கவா இங்க வந்த?’’

‘அதில்ல, எனக்கு உன்ன புடிச்சிருக்கு’

‘’சரி’’

‘என்ன சரிங்கற’

‘’வேற என்ன சொல்லணும்?’’

‘நாம… நாம’

‘‘கண்ணாலம் கட்டிக்கலாம்க்றியா?’’

பொட்டில் அடித்தாற் போல் அவள் அப்படிக் கேட்பாள் என நினைக்கவில்லை. தடுமாறினேன்.

’’கண்ணாலமெல்லாம் வேணாம். எனக்கு ஒரு முத்தம் மட்டும் கொடு அது போதும்’’

அவள் விளையாடுகிறாள் என நினைத்தேன்.அவள் மூச்சுக்காற்று பட என்னை நெருங்கி அணைக்கையில் வெலவெலத்துப் போய்விட்டேன்.

‘‘ராசா, என் கண்ணில்ல, முத்தம் மட்டும்தான்யா நீ கொடுக்க முடியும், எனக்கு கிடைக்காதது அதான்யா.’’

எனக்குப் புரியாமல் ஓடி வீட்டிற்கு வந்து விட்டேன். பிச்சியைப் போல் அவள் சிரித்தது என்னை ஓயாமல் துரத்தியது. அன்று கனவில் வெள்ளை ரோஜாக்களாக வந்தன. அதன் நடுவில் அவள் கரும் முள்ளென ஓங்கி நின்றாள். செடிகளிலிருந்து பறித்துப் போட்ட பூக்கள் முட்கள் நெருட குருதி வாசம் வீசியது. தலையை உலுக்கிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தால் தள்ளாடியது.

ஒரு சமயம் மாமா வீட்டிற்குப் போயிருக்கையில் அந்த ஊரில் ஒரு கடற்கரையை நான் பார்த்தேன். பெரிதாக எழும்பி வரும் அலை என்னை மூழ்கடிக்கப் போவதாக எண்ணி அதற்கு பாய்ச்சல் காட்ட நான் தயாராக நின்றிருந்தேன். இதோ…இதோ ஓடப் போகிறேன். அது என் காலைக் கூட நனைக்காமல் ஏமாற்றி விட்டது. ஏனென்று புரியாமல் அழுதேன்.

‘முப்பது பணம் கொடுத்து மூணு குளம் வெட்டினேன் < em>ரண்டு குளம் பாழு ஒண்ணு தண்ணியேயில்ல’

வழிப்போக்கன் பாடிக்கொண்டு செல்வதை படுத்துக்கொண்டே கேட்டேன்.

தண்ணியில்லா குளத்துக்கு காவல்மார் மூணு பேர்
ரண்டு பேர் முடம் ஒண்ணு காலேயில்ல’

 ‘ஓய், புள்ளையாரே, ஏதோ உம்ம இடத்ல படுத்திருக்கேன்னு எதிர்ப்பாட்டெல்லாம் வேணாம். நல்லாருக்காது, சொல்லிப்புட்டேன் ஆமா’

‘‘இது நீ பாடும் பாட்டு அப்பா. சொல்லப்போனா கவிதா பாட வச்ச பாட்டு’’

ஆம், உண்மைதான். ஓரளவு படித்து, ஒரு சுமார் வேலையில் இருந்தேன். வயது இருபத்தியாறு.வேறு ஊர், வேறு மனிதர்கள். பஞ்சுப் பொதிக்குள் விழுந்த குண்டென காமினி எங்கோ வலிக்காமல் ஆழ்ந்து போனாள். கவிதா, அழகான பெயர். சுமாரான அழகு. எல்லாவற்றையும்விட ஜாதகங்கள் பொருந்தியது முக்கியமாகப் போய்விட்டது. ’ரஜ்ஜு தட்டல. அமோகமா இருப்பா’ அந்த ஜோதிடரைப் பார்த்தால் … அடித்துக் கொன்றுவிட்டால் என்ன என்று செய்ய இயலாத ஆத்திரம் இன்று வரை இருக்கிறது. கவிதாவிடம் தோற்றேன். காதல் இருந்தது அவளிடம். ஆனால் கனன்று எரியவில்லை. ஏனெனக் கேட்க முடியவில்லை, யாரிடமும் பகிரவும் முடியவில்லை; எங்கள் தனிமையில் அவள் மிரளும் கண்களும், நடுங்கும் உடலும், திரளும் கண்ணீரும்… என்னால் புரிய வைக்க முடியவில்லை.

“உனக்கெல்லாம் ஆரு வேலை கொடுத்தான்? இஷ்டமில்லேன்னா கால் கடிதாசி கொடுய்யா? கம்பெனி பொழைக்கும்.’’

முப்பத்தைந்து வயதில் நாலு பேர் கேட்க  என்னை நோக்கி சொல்லப்பட்ட வார்த்தைகள் சூட்டுக்கோல்கள். ஆனால், நான் தாங்கிக்கொண்டேன். அதிக சேமிப்புமில்லை, வயதான பெற்றோர்,வேறு வேலை கிடைக்கும் வாய்ப்பு என் படிப்பிற்கு கிடைப்பது கடினம்.

காலில்லா காவல் மாருக்கு மூணு பணம் மாதப் பணம்
ரண்டு பணம்செல்லாக்காசு ஒண்ணு காசே இல்ல’

கவிதா என் வறட்சியை வேறு விதத்தில் சமாளிக்கப் பார்த்தாள். நாங்கள் பொருத்தமான ஜோடி என்றே அறியப்பட்டோம். நான் நினைப்பதை அதற்கும் முன்பாகவே செய்தாள், வேலைக்கும் போய் சம்பாதித்தாள், அம்மா,அப்பாவுடன் பாசமாக இருந்தாள். ஆனால், என்னைக் கனவினிலேயே இருக்க வைத்தாள்.

சில நாட்களுக்குப் பின்னர் ஒரு சம்பவம். இடக்கரத்தால் பிரமன் என் தலையில் எழுதிய எழுத்து .. என்ன பிள்ளையே.. நீ கேளு இல்ல கேக்காம இரு.. நா மாட்டுக்கும் சொல்லுவேன். எங்கள் அலுவலக நண்பர் புவனாவின் குழந்தைக்கு காது குத்தியற்கான பார்ட்டி அவர்கள் வீட்டில். என் மனது  தடுத்தும் நான் போனேன். ’’அவசரமா? கொஞ்சம் இரேன், பேசணும்’’ என்றாள்.

என்ன பேசப் போகிறாள்? என்ன இருக்கிறது பேசுவதற்கு?நான்அவ்வளவு பொருட்டா என்ன? எங்கள் குடும்பத்தைப் பற்றி ஊகித்துவிட்டாளோ? தாள் கைக்குட்டையில் முகத்தை ஒற்றி ஒற்றி நான் அவசரமாகக் கசக்கி குப்பைக்கூடையில் போட்ட தாள்கூட அரசிலை போலத்தான் இருந்தது.

காசில்லா காசைக்கொண்டு கடப்பொருள் வாங்கப் போனேன்
ரண்டு பொருள் ஊசிப்போச்சு ஒண்ணுபொருளேயில்ல

‘சபாஷ், உன் விதிய யாரோ முன்னமே பாடி வச்சிருக்கான் போலிருக்கு’ என்றார் பிள்ளையார்.

நான் சிரித்தேன், நெருப்புப் பொறி பரக்கச் சிரித்தேன், பின்னர் சிரிப்பாய்ச் சிரித்தேன். சுடுசொல் தொலைக்காத வேலையை அவச்சொல் போக்கிவிட்ட விந்தையை நினைத்து இன்றும் சிரிக்கிறேன்.

பொருளில்லா சாமான் கொண்டு மூவிருந்து செஞ்சு பாத்தேன்
மொத்த சட்டி காலி இந்த வயிறும் காலி’

அம்மாவின் தவிப்பு, அப்பாவின் பாராமுகம், கவிதா கொண்டு வரும் வருமானம். நாற்பது வயதிற்குள் அலுத்துவிட்டேன்.

‘நான், புள்ளையாரே, நல்லவன்யா. நீ எப்படி?’

‘‘எப்படின்னா?’’’

‘உனக்கு ஒரு கஷ்டமுமில்ல. நீ நல்லவனாத்தான் இருக்கமுடியும். அல்லல் பட்டவன்தாய்யா அனுபவசாலி.’‘

‘‘சரி’’

‘என்ன சரி?’

‘‘நீ எது சொன்னாலும் சரி’’

‘அப்படின்னா?’

‘‘உங்கிட்ட துணிவில்ல, நேர்மையுமில்ல, நம்பிக்கையுமில்ல. வெத்து அனுபவம் சொல்ற. கடமையையாவது செஞ்சியான்னா அதுவுமில்ல’’

‘என்னக் குத்தம் சொல்றதுக்கா சரி,சரின்ன புள்ளையே’

‘‘அதில்லடா, மனிதா. நடந்ததிலேயே இருக்கியே.’’

‘அடுத்தவ தேவைக்கு பசியேலில்லாம ஒப்புக் கொடுத்தேன் பாரு, அங்கதான்யா என்னையே வெறுத்தேன்.’

அகாலத்தில் குயில் ஒன்று புலனாகாத இடத்திலிருந்து கூவியது.

 

நினைவின் நிழல் – ப. மதியழகன் கவிதை

ப. மதியழகன்

1

நில்லுங்கள்
தவறான வழிகாட்டுதலின்படி இங்கே வந்துள்ளீர்கள்
பொறுத்திருங்கள்
வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால்
சற்று பொறுத்திருங்கள்
ஓய்வெடுங்கள்
இந்த இடத்தினை அடைவதற்கு எவ்வளவு தடைகளை எதிர்கொண்டீர்கள்
கவனியுங்கள்
எதிர்ப்படுபவர்களில் யாரேனும் கடவுளாக இருக்கலாம்
இறக்கி வையுங்கள்
சுமைகளை இன்னும் சுமந்து கொண்டு இருக்காதீர்கள்
விழித்துக் கொள்ளுங்கள்
வாழ்க்கைக் கனவு உண்மையென நம்பிவிடாதீர்கள்
உணர்ந்து கொள்ளுங்கள்
இந்த உலகம் மனத்திரையில் விரியும் சித்திரம்தான் என
ஏமாந்துவிடாதீர்கள்
உடலெடுத்ததன் நோக்கமே சுகம் அனுபவிக்கத்தான் என்றெண்ணி
ஓடாதீர்கள்
உங்களைப் பின்தொடர்ந்து வருவது கடவுள்தான்
கலங்காதீர்கள்
பாவக் கணக்கைத் தீர்க்க பலமுறை பிறந்துதான் ஆகவேண்டும்
விலக்கி வையுங்கள்
வெற்றி மகுடத்தைக் கைப்பற்ற தவறான வழிகாட்டும் மனிதர்களை
ஓய்வெடுங்கள்
வாழ்க்கையில்பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் மரணம் இளைப்பாறுதல் தரும்
துறந்துவிடுங்கள்
பெண்ணாசையால் கடவுளைத் தேடும் பாதையிலிருந்து விலகிவிடுவீர்கள்
நம்பிக்கை வையுங்கள்
பிதாவானவர் ஒருபோதும் மனுஷகுமாரனைக் கைவிடமாட்டார்
புரிந்துகொள்ளுங்கள்
நரக இருள் கவிந்த பூமியை சுவர்க்கமாக்குவது
உங்கள் கைகளில்தான் உள்ளது.

2

நாளைய பொழுதை எதிர்கொள்ள தயக்கமாக உள்ளது
ஒவ்வொரு விடியலும் வேதனையைத் தருகிறது
மனதின் லகான் இப்போது என் கையில் இல்லை
பெண் போதையிலிருந்து என்னால் மீள முடியவில்லை
அழகான பெண்களின் உள்ளிலிருந்து
ஆண்டவன் என்னைப் பார்த்துச் சிரிக்கிறான்
நான்கு பேருக்கு மத்தியில்
கேலிப் பொருளாகிவிடுவேனோ என பயமாக உள்ளது
வருமானத்திற்கு வழி ஏதுமில்லை
குடும்ப பாரம் மலையென கனக்கிறது.
பிறப்புக்கு மனிதனின் விருப்பம் கேட்கப்படுவதில்லை
சாவை அவன் கூவி அழைத்தாலும் வருவதாய்த் தெரியவில்லை
வாழ்க்கை மனிதனை நூல்கொண்டு ஆடும் பொம்மையாகத்தான்
ஆக்கி வைத்திருக்கிறது
வேதாளம் போடும் விடுகதைக்கு அவனுக்கு விடை தெரியவில்லை
இல்லறம் துறந்து துறவறம் பூணலாம் இருந்தும்
மயக்கும் கன்னிகள் அவனைக் கனவில் துரத்தத்தான் செய்வார்கள்
உலகைவிட்டு வெளியேற வழி தெரியவில்லை
தீர்ப்பு எழுதியவனுக்கே தண்டனைக் காலம்
எப்போது முடியுமென்று தெரியும்
என் பாவக்கணக்கைத் தீர்க்க
குருடனாய் ஒருநாளும்
செவிடனாய் ஒருநாளும்
முடவனாய் ஒருநாளும் காலத்தைக் கழிக்கிறேன்
கைவிடப்பட்ட எனக்கு வேறு கதியில்லை
இறைவனைக் கூவி அழைத்தாலும் வருவதாய்த் தெரியவில்லை.

3

இந்த மாலையில் என் மன பாரத்தை
இறக்கி வைக்க தகுந்த இடம் தேடுகிறேன்
துரத்தி வரும் மரணத்தை மறந்து
மக்கள் கேளிக்கைகளிலும், களியாட்டங்களிலும்
தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர்
இந்த மண்ணில்தான் காலணிகளைக் கூட
அணியாமல் உச்சிவெயிலில் புத்தர்
நடந்து சென்றிருப்பார் அல்லவா
இதோ இந்த புத்தவிஹாரம்தானே
இயேசுவை கிறிஸ்து ஆக்கியது
காந்தி அகிம்சையை ஆயுதமாகப்
பயன்படுத்தியதால்தானே நமக்கு சுதந்திரம் கிடைத்தது
குருட்ஷேத்திர பூமிதானே திராவிடம் அழிவதற்கு வித்திட்டது
சமாதானத்தைப் போதித்தவருக்கு இந்த
சமூகம்தானே சிலுவையை பரிசளித்தது
சத்தியத்தை உயிராக மதித்தவருக்கு கடைசியில்
துப்பாக்கித் தோட்டாக்கள் தான் பரிசாகக் கிடைத்தது
எல்லையற்ற வானவெளியில் சிறுதூசுதானே இந்தப் பூமிப்பந்து
எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும்
ஆயுளை ஒரு நொடியாவது நீட்டிக்க முடியுமா?
கடவுளின் படைப்புகள் பூரணமடையாததற்கு
என்ன காரணம் என்று நாம் யோசித்துப் பார்த்தோமா?
நீர்க்குமிழிகள் திரும்பவும் கடலில்தானே கலக்க வேண்டும்
பரிசுத்தமான ஆத்மாவைக் கண்கள் காட்டிக் கொடுப்பதில்லையா
சடங்குகள் மூலம் கடவுளைத் திருப்திப்படுத்திவிட முடியுமா?
கடவுளின் கைப்பாவைதான் நிழல்
அதனால்தானோ எட்டப்பன் வேலை செய்கிறது
இயேசு யூதாசுக்கு நன்றிக் கடன்பட்டவர்
அவனால்தான் இயேசுவால் மரணத்தை வெல்ல முடிந்தது.

4

எல்லைமீறும் போதெல்லாம் மனதின்
உள்ளிருந்து மணியோசை கேட்கிறது
வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம்
அளிக்கவேண்டும் எனத் தெரியவில்லை
வாழ்க்கையில் சிகரத்தை அடைய
வேண்டுமென்றால் யாரையும் துணை சேர்க்கக் கூடாது
நம்முடைய காரியங்களை விரைந்து முடித்துவிட வேண்டும்
எப்போது வேண்டுமானாலும் மரணம் வரலாம்
விதியின் கைகளில் மனிதன் மைதானத்துப் பந்தாய் உதைபடுகிறான்
இந்தக் கனவுச்சிறையிலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் எண்ணம்
யாருக்கும் இல்லை
வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடாமல்
வயிற்றை நிரப்பிக் கொண்டு இருக்கிறான்
மனிதனுக்கு சுதந்திரம் தேவையில்லை
மஞ்சத்தில் கன்னியரோடு வீழ்ந்து கிடந்தாலே அவனுக்கு போதும்
அமிர்தத்துக்கும், மலத்துக்கும் வித்தியாசம் தெரியாத ஈக்களைப்
போன்றவன்தான் மனிதன்
செய்த தவறுக்கு குற்றவுணர்ச்சி கொள்பவர்களை இதுவரை நான்
சந்தித்ததே இல்லை
கடவுள் தனக்கு மட்டும் விதிவிலக்கு அளிப்பார் என நம்புகிறான்
மனிதன் கர்வப்படும்போதெல்லாம் மாரன் தனக்குத்தானே
சிரித்துக் கொள்கிறான்
சுகபோகத்துடன் வாழ்பவர்கள் மரணத்தை எதிர்கொள்ளும்போது
தவித்துத்தான் போவார்கள்
மரணம் உன் கோப்புகளைப் படிக்காது
நீ பிச்சைக்காரனா, பேரரசனா என அதற்குத் தெரியாது
பேரழகிகளாக உன் கண்ணுக்குத் தெரிபவர்களெல்லாம்
மரண தேவதைகளாகத்தான் பூமியில் அலைகிறார்கள்.

5

கடிகார முட்கள் நத்தை போல் நகர்ந்து கொண்டிருக்கின்றன
விட்டத்தில் மின்விசிறி சுற்றிக் கொண்டிருக்கிறது
முள் படுக்கையில் படுத்திருப்பதைப் போன்ற உணர்வு
என்னை நானே அமைதிப்படுத்திக் கொள்ள முயல்கிறேன்
மனம் கடந்தகாலக் குப்பைகளை கிளறிக் கொண்டிருந்தது
யாராவது தன்னை மடியில் வைத்து
தாலாட்டமாட்டார்களா என மனம் ஏங்குகிறது
உறக்கமில்லாத இந்த இரவு நரகத்தைவிடக் கொடியதாகப்படுகிறது
சபிக்கப்பட்டவனாக நான் இருப்பதினாலேயே
இப்போது பரிதவித்துக் கொண்டிருக்கிறேன்
வாழ்வு என்பது கடவுள் எனக்குத் தந்த கொடூரத்தண்டனையாகப்படுகிறது
மரணம் ஒன்றே எனக்குத் தரும் பரிசாக அமையும்
இறப்பிற்குப் பிறகான வாழ்க்கையிலாவது எனக்கு இளைப்பாறுதல் கிடைக்கட்டும்
கடவுளிடம் நான் பிரார்த்திக்கிறேன்
எனக்கு இப்போது தேவை உறக்கம் மட்டுமே
துயிலலைகளில் மனிதர்கள் மூழ்கி இருக்கும்போது
நான் மட்டும் மிதந்து கொண்டிருக்கிறேன்
வாழ்க்கைப் பயணத்தில் இறங்குமிடத்தை நிர்ணயம் செய்வது
என் கையில் இல்லை
என்னைத் தவிர எல்லோரும் பேட்டரி மூலம் இயங்கும்
இய்ந்திரமாகத்தான் தெரிகிறார்கள்
என் அகந்தையைக் கொல்வதற்காகவே
இறைவன் என்னை இங்கே அனுப்பியிருக்கக்கூடும்
சரணடைந்துவிட்டேன்
இனி என் பெயரைச் சொல்லிக்கொண்டு
இங்கு இறைவன் வாழ்ந்து கொள்ளட்டும்.

தனிமை, குளிர் – ஏ. நஸ்புள்ளாஹ் கவிதைகள்

ஏ. நஸ்புள்ளாஹ்

தனிமை


நேற்றும் தனிமையை வரைய வேண்டியிருந்து
தனிமையை ஒரு இரவாக வரைந்தேன்
இரவிற்கு
சில நட்சத்திரங்கள் வந்தமர்ந்தன
இன்னும் சில பறவைகளும்
வந்து சேர்ந்தன
நிலா ராஜகுமாரி மேகத்திற்குள்
மறைந்து மறைந்து
புதிது புதிதாய் காட்சி தந்தாள்
பேச்சுக்கு துணை கிடைத்தது
ஒரு யுகத்தைக் கடந்தது போல் இருந்தது
தனிமை கறுப்பு நிறத்தையொத்தது
அது ஒரு பெரும் வனத்தின்
இருளை என் மீது சுமத்தியிருக்கிறது
இருள் என்பதும்
ஒரு வகை வலிதான்
அதனைத்தான்
பல நேரங்களில் தலையணைக்கடியில்
மறைத்து வைக்க வேண்டியிருக்கிறது
எப்படி மறைத்து வைத்த போதும்
அறை முழுக்க அது பரவிடுகிறது
இப்போது
மூன்றாம் சாமம் தாண்டியிருந்தது
தனிமையை ஒரு பகலாக வரையத் தொடங்குகிறேன்
பகலுக்குள் சில மனிதர்கள் நடமாறலாம்.

குளிர்


இது மூன்றாம் ஜாமம்
நான் தற்செயலாக எழுந்திருக்கவில்லை
அப்படி எழுந்திருப்பவனுமல்ல
என்னை யாரோ
எழுப்பி இருக்க வேண்டுமென
நீங்கள் நினைக்கலாம்
என்னை நான் எழுப்பி இருக்க வேண்டுமென
நீங்கள் யூகிக்க முடியாது
நான் நன்றாக தூக்கத்திலிருந்ததை
நீங்கள் இப்போது வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இப்படி முடிவிற்கு வரலாம்
மழை நாட்கள் என்பதால்
ஒரு குளிர் என்னை
எழுப்பி இருக்கலாம்
அல்லது நுளம்புகள் சில
எழுப்பி இருக்கலாம்
நுளம்பு எழுப்புவதற்கு வாய்ப்பில்லை
வலையை கட்டிலில் மனைவி
சென்ற வாரந்தான்
ஒரு கூடாரம் போல் அமைத்திருந்தாள்
அப்படியெனில்
குளிர்தான் இந்த வேலையைச் செய்திருக்க வேண்டும்
குளிரை இனி அருகி்ல் வைத்திருக்க முடியாது
அதனை குளிர்ச் சாதனப் பெட்டிக்குள் வைக்க வேண்டும்
குளிர் என்னிடம் இருக்கிறது
மன்னிக்கவும், பெட்டி உங்களிடம் இருக்கிறதா.

Two Poems by Karikalan – Translated into English by Nakul Vāc

That lizard dishing out omens
in the northeast corner of Selli Amman Temple
won’t know.

That Brahmin who kindled the fire
and recited the Vedas
won’t know either.

Ditto
the friends and relatives who gathered around
to bless and wish us well.

None of them know of
our Love.

Preempting idle gossip in our town,
you left me, your lifeless body
a mere shell

whose hymen your husband must have torn
to end his wedding night
in consummate peace.

Did memories of me get washed away with soap-water?
I did wonder despairingly.

Pretty much the same turn of events
at my end as well.

Meeting unexpectedly, our lips
that once used to kiss
now introduce us to our kids as
Aunt and Uncle.

Shorn of intimacy-
my wife and your husband,
might be a bit problematic for them-
this Brother Sister relation of ours?

2

 

Self

Aroused by the caresses on ample bosoms
dark eyes bristle and drowse with pleasure
spread out on the black stone wall the body loosens
yanking its feet the statue follows.
The last ritualistic midnight tolls
awaken, tighten and petrify
in that moment when
the statuesque presence bestows on the house
an antique feel
yearning for the scent of stone
I turn into a bat and
hang upside down
from the rafters of the temple’s interior.

oOo

தமிழில் – கரிகாலன்