Author: பதாகை

இதயத்தில் கசிவது – ‘தண்ணீர்’ மற்றும் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நாவல்களை முன்வைத்து வெங்கடேஷ் சீனிவாசகம்

 – வெங்கடேஷ் சீனிவாசகம் – 

ஜெயமோகனின் “அறம்” வரிசை கதைகளில் எல்லா கதைகளும் பிடிக்கும் என்றாலும், ‘யானை டாக்டர்’, ‘சோற்றுக் கணக்கு’, ‘உலகம் யாவையும்’, மிகவும் பிடிக்கும். ஆனால் அதிகம் உலுக்கியவை ‘தாயார் பாதமு’ம், ‘நூறு நாற்காலிகளு’ம். ‘தாயார் பாதத்’தில், ராமனின் பாட்டியின் செய்கைகளுக்கான காரணத்தை, “அந்த பெட்பானை அப்டியே தூக்கி அவ தலைமேலே கொட்டிட்டார்” – வரியில் அறிந்தபோது உண்டான அதிர்வும், மன உளைச்சலும் இரண்டு நாட்கள் நீடித்தன. ‘நூறு நாற்காலிகளி’ல் அம்மாவின் பாத்திர வார்ப்பும், ஜெயமோகனின் எழுத்தின் அடர்த்தியால் விவரிக்கப்பட்ட அம்மாவின் வாழ்வும் மனதைக் கலங்கடித்தன.

‘தன்ணீரி’ல், ஜமுனாவின் அம்மாவைப் பார்க்க அவளும், தங்கை சாயாவும் செல்லும் அந்த அத்தியாயம், மனதை நிதானமிழக்கச் செய்வது. ஜமுனாவின் அம்மா, ‘தாயார் பாதத்’தின் ராமனின் பாட்டியை நினைவுபடுத்தினார். ஜமுனாவின் அம்மா படுத்த படுக்கையாயிருக்கிறாள். எல்லாமே படுக்கையிலேயேதான். நினைவுகள் காலத்தின் பின் உறைந்தும் இளகி ஊசலாடியும் எதையெதையோ பேசிக்கொண்டிருக்கிறாள். ஆட்களை அடையாளம் காண்பதும் கடினமாகிவிட்டிருக்கிறது. ஹாலை அடுத்த தாழ்வாரத்தில் கட்டில் போடப்பட்டிருக்கிறது.

அம்மா வாயைத் திறந்தபடி தூங்கிக்கொண்டிருக்கிறாள். அவள் முகம் உப்பியிருக்கிறது. ஜமுனா எழுப்ப, கண் திறந்து பார்த்து “யாரு சாயாவா?” என்கிறாள்.

“ஜமுனா போர்வையை விலக்கினாள். அம்மாவின் பெரும் உடலுக்கடியில் இருந்த சாக்கு விரிப்பு ஈரமடைந்து நாற்றமடித்துக் கொண்டிருந்தது. ஜமுனா மெதுவாக அம்மாவைப் பிடித்து உட்கார வைத்தாள். அம்மா உட்கார்ந்தபடி பெரிதாக மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள்.

“அம்மா, “முரளிக்கு ஒரு பஜ்ஜி கொடுக்கச் சொல்லுடி” என்றாள்.

“ஜமுனா, “சரிம்மா” என்றாள்.

““பஜ்ஜிக்குப் போய் யாராவது பயறு நனைப்பாளோடி? இரண்டு படி உங்க பாட்டி நனைச்சு வைச்சு உக்காந்து அரைடின்னா. இரண்டு படி பயறு. நான் சின்னப் பொண்ணு. புக்காம் வந்து நாலு மாசம் ஆகல்லே. அந்தக் கிழவி இரண்டு படி நனைச்சு என்னை அரைடின்னா. உங்கப்பாவும் வாயைத் திறக்கல்லே. இரண்டு படி பயறு. உரலும், ஆட்டுக் கல்லும் பாதி ஆள் உசரம் இருக்கு. அரைடீன்னா. இரண்டு படி பயறு. உக்காந்துண்டுகூட சுத்த முடியல. நின்னுண்டே அரச்சிண்டிருந்தேன். உங்கப்பாவும் வாயைத் திறக்கல்லே. உங்க அத்தைகள், தாத்தா யாரும் வாயைத் திறக்கல்லே. இரண்டு படி. நின்னுண்டே அரைச்சேன். ஒத்தர் கிட்டே வரலை. கையெல்லாம் வீங்கிப் போயிடுத்து. இரண்டுபடி பயறை நின்னுண்டே அரைச்சுட்டு ஒரு வாய் பஜ்ஜிகூட திங்காம தவிச்சேன். இரண்டு படி பயறு”

“சாயா அழ ஆரம்பிக்க, அம்மா “அழறியா? அழறதே பிரயோசனமில்லேடி. அழுதுண்டிருந்தா காரியம் ஆயிடுமா? இரண்டு படி பயறை ஊறப்போட்டு அரைன்னு சொன்னா அந்த மகராஜி. நின்னுண்டே அரைச்சேன்.””

மேலே படிக்க முடியாமல் மனது எதிர்மறை உணர்வுகளின் மொத்த உருவாகி நொய்ந்து சுழன்றது. அதன் கசப்பு, நாக்கு வரை வந்துவிடுமோ என்று பயந்து புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, கொஞ்ச நேரம் சும்மா இருந்தேன்.

இது முன்னரே, டீச்சரம்மா வீட்டுக்கு ஜமுனா போகும்போதும் தோன்றியது. டீச்சரம்மாவின் வயதான கணவரும், மாமியாரும்… அவ்வாழ்க்கைச் சூழலின் காட்சிகள் என் மனதில் அறைந்தது. டீச்சரம்மாவின் குடும்பச் சூழல் அந்த ஒரு அத்தியாயத்திலேயே அசோகமித்திரனால் மனதிற்குள் ஆணியடித்து இறக்கப்பட்டது.

வாழ்வின் விரக்தியின் எல்லைக்குச் செல்லும் ஜமுனா, தற்கொலைக்கு முயன்று முடியாமல் போக, டீச்சரம்மாவிடம் சொல்லி அழ அவள் வீட்டிற்குப் போகிறாள். அப்போதுதான் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வரும் டீச்சரம்மா ஜமுனாவைப் பார்த்து, “தண்ணி பிடிக்கக் கூப்பிட வந்தயா?” என்று கேட்கிறாள். “இல்லேக்கா, உங்ககிட்ட பேசணும்” என்கிறாள் ஜமுனா. “சித்தே இரு” என்று சொல்லிவிட்டு வீட்டினுள் சென்று புத்தகங்களை வைத்துவிட்டு பால் வாங்கி வைக்கவில்லை என்று தெரிந்ததும், ஒரு டபராவை எடுத்துக்கொண்டு ஜமுனாவிடம் வந்து “வா, முதலிலே பால் வாங்கிண்டு வந்துடலாம்” என்கிறாள். “ஒரு நிமிஷம் பேசிட்டுப் போகக்கூடாதா?” என்று ஜமுனா கேட்கிறாள். “வா, போயிண்டே பேசிக்கலாம், பால்காரன் கடையைச் சாத்திண்டு சினிமாக்குப் போயிடுவான்” என்கிறாள் டீச்சரம்மா.

ஜமுனா டீச்சரம்மாவுடன் நடந்து போகும்போது “அக்கா” என்றழைத்து, மேலே சொல்லமுடியாமல் தோளில் சாய்ந்து அழுகிறாள். டீச்சரம்மா ஜமுனாவின் முதுகைத் தடவிக் கொடுத்துவிட்டு “முதல்ல பாலை வாங்கி வந்துடலாம்” என்கிறாள்.

’என்னைவிட உனக்கு என்ன பெரிய துக்கம் வந்துவிடப் போகிறது’ என்ற டீச்சரம்மாவின் மனோபாவம் அவளது செய்கையில், நடவடிக்கைகளில் தெரிகிறது. திரும்ப வந்து ஜமுனாவின் வீட்டில், ஜமுனாவிடம் டீச்சரம்மா சொல்லும் அவளின் வாழ்வு…

”எனக்குக் கல்யாணம் ஆறப்போ என்ன வயசு தெரியுமா? பதினஞ்சுதான் இருக்கும். அப்பவே என் வீட்டுக்காரருக்கு நாப்பத்தஞ்சு முடிஞ்சுடுத்து. அப்பவே இந்த இருமல்தான். ஒரு நாள் போடி அந்த ரூம்லேன்னு சொல்லித் தள்ளினா. இவர் இருமிண்டிருந்தார். எனக்கு உங்கிட்ட சொல்றதுல தயக்கம் இல்லை. பத்து நிமிஷம் பல்லைக் கடிச்சிண்டு வெறி பிடிச்சவன் மாதிரி, ஆனா இருமாம இருந்தார். வெறி திடீர்னு ஜாஸ்தியாச்சு. தொப்புன்னு அம்மான்னு கீழே குதிச்சார். இருமல் வந்துடுத்து. நான் அந்த மாதிரி அதான் முதல் தடவை பார்க்கறேன். அவர் கண் விழியெல்லாம் வெளியிலே பிதுங்கி வரது. மூக்கிலிருந்தும், வாயிலிருந்தும் தண்ணியாச் சொட்டறது. அந்தப் பயங்கரத்தைப் பார்க்க முடியாது… இப்போ சொல்லப் போனா, அன்னியைவிட இன்னும் பயங்கரமான நாளெல்லாம் அப்புறம் வந்திருக்கு. எனக்கு அதெல்லாம் யார்கிட்டேயும் சொல்லணும்னுகூடத் தோணிணது கிடையாது. தெய்வத்துக்கிட்டே கூடச் சொல்லி அழுதது கிடையாது…”

நான் இங்கு மேற்கோளிட்டிருப்பது கொஞ்சம்; அசோகமித்திரனின் வார்த்தைகளில் கிட்டத்தட்ட மூன்று பக்கம். டீச்சரம்மா பேசி முடிக்கும்போது ஜமுனா வாயடைத்துப் போகிறாள். வெளியே மழைத் தூறல் ஆரம்பிக்கிறது. ஜமுனா டீச்சரம்மாவை டீ சாப்பிட்டுவிட்டு போகச் சொல்கிறாள்.

பொதுவாக ஜமுனாவை, நவீன தமிழிலக்கியத்தில் புனையப்பட்ட வலுவான பெண் கதாபாத்திரங்களில் ஒருவர் என்பார்கள். அப்படியென்றால் அந்த டீச்சரம்மா?…

oOo

நகரின் ஒரு தெருவின் தண்ணீர்ப் பற்றாக்குறை அவலத்தைப் பேசுகிறது ‘தண்ணீர்’; கூடவே அத்தெருவின் மனிதர்களையும், உறவுகளின் இடையிலான உலர்ந்துபோன ஈரத்தையும் காட்சிப்படுத்துகிறது. சின்னச் சின்ன அத்தியாயங்கள்; ஆனால் காட்சிகளின் செரிவும், கனமும் மனதில் சலனமுண்டாக்குபவை. ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ படித்துவிட்டு, ‘தண்ணீர்’ படித்தது ஒரு முரண் அனுபவம். ‘ஒரு மனிதன்….’ படித்து முடித்தபோது, மனது ஒரு நேர்மறை விகாசத்தால் நிரம்பி வழிந்தது; அதுவும் இயல்புவாதத் தன்மை கொண்டிருந்தாலும் (கிருஷ்ணராஜபுரம் கிராமம்), நேர்மறையான ஒரு இலக்கு நோக்கிய கனவு மிகுந்த பரவசம் அளித்தது. இயல்பின் சிற்சில எதிர்மறைகள்கூட (கிளியாம்பாளின் கணவன்) வித்தியாசமாய் துருத்திக்கொண்டு தெரியவில்லை. நேரையும், எதிரையும் ஒன்றுபோல் ஆகர்ஷிக்கும் பேரன்பின் சாரல் போல் மனது நனைந்து கொண்டே இருந்தது.

ஏன் அசோகமித்திரனைப் படிக்கும்போது ஜெயகாந்தன் ஞாபகம் வருகிறார்?; மனதில் மெல்லிய புன்னகை வந்தது. ஞாபகம் வராவிட்டால்தானே ஆச்சர்யப்பட வேண்டும். அசோகமித்திரனின் உலகம், அசோகமித்திரனின் அவதானிப்புகள் என்னை ஆச்சர்யம் கொள்ள வைக்கின்றன. ‘தண்ணீர்’ கலவையான ஓர் வாசிப்பனுபவத்தை அளித்தது. வண்ணநிலவன் ‘தண்ணீர்’ அசோகமித்திரனின் சிறந்த படைப்பு என்கிறார். நூறு பக்கங்கள்தான்; ஆனால் சுண்டக் காய்ச்சிய பால் போல முன்னூறு பக்கங்களின் அடர்த்தி. இக்கதைக்கு இக்குறுநாவல் வடிவம்தான் சரியென்று தோன்றுகிறது. விரிந்து நாவலாகியிருந்தால், இப்பாலையின் வெப்பத்தை தாங்கியிருக்க முடியுமா என்று தெரியவில்லை. தண்ணீர், எதிரைக் காட்டி, நேரை நோக்கி பார்வையைத் திருப்புகிறதோ?

கார்த்திக் சுப்புராஜின் ‘இறைவி’ மழையோடு துவங்கும்; மழையோடு முடியும். ‘இறைவி’ எடுக்கப்பட்ட விதம், காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால், அக்கதை… (மூன்று ஆண்கள், அவர்களின் அப்பா கொண்ட ஒரு குடும்பம்; அக்குடும்பத்தில் வாழ வரும் பெண்கள் சந்திக்கும் வாழ்க்கை நிகழ்வுகள்…) படம் பார்த்து முடித்தபோது, மனம் இனம்புரியாத தவிப்பில் இருந்தது. ‘தண்ணீர்’ முடித்தபோதும்.

​”ஏதோ ஒரு வகையில் வாழ்க்கை ஈரமாகத்தான் இருக்கிறது. இன்று ஈரம் அற்றது எனத் தெரிவது எல்லாம் எப்போதோ ஈரத்துடன் இருந்தவை, இடையில் ஈரம் உலர்ந்தவை, இனியொரு நாள் மீண்டும் ஈரமாக இருக்கச் சித்தமானவைதான் இல்லையா. இந்த ஈரம் மழையினுடையதா, நதியினுடையதா, வியர்வையினுடயதா, கண்ணீரினுடையதா, ரத்தத்தினுடையதா?​” (வண்ணதாசன்)

எஃகு தகடு அல்லது மெல்லிய இதழ் – காலத்துகள் சிறுகதை

காலத்துகள்

“இலை நுனியில் விழக் காத்திருக்கும் மழையின் கடைசி துளி
குறி முனையில் தொக்கி நிற்கும் மூத்திரத்தின் கடைசி சொட்டு ”

கணினியின் திரையை பார்த்துக் கொண்டிருக்கும் முற்றுப்புள்ளி அவருக்கு இரண்டு மூன்று மணி நேரங்களுக்கு முன்பு நான் அனுப்பிய மேலே உள்ள வரிகளைதான் படித்துக் கொண்டிருப்பார். சிறு வயதில், நாளின் முதல் சிறுநீரின் அடர் மஞ்சள் நிறத்தை, கார நெடியை கவனித்ததுண்டு. வளர்ந்த பின்புதான் காப்பியின் எஞ்சியிருக்கும் மணமும் அதைக் குடித்த பின்னரான சிறுநீர் கழித்தலில் எழும், என்பதைக் கண்டு கொண்டேன். இன்று கழிவறையில் ப்ளஷ்ஷை அழுத்திவிட்டு, அந்த மணத்தை நுகர்ந்து கொண்டே வெளியே வரும்போதுதான் இந்த வரிகள் மனதில் தோன்றின. நாள் முழுதும் அதை விரிவாக்க முனைந்து, மிகையாக எழுந்த வரிகளை நீக்கி, மாலை ஆறரை மணி அளவில் பெரியவர் முற்றுப்புள்ளிக்கு மின்னஞ்சல் அனுப்பினேன்.

ஒன்றரை வருடங்களுக்கு முன் அவருடைய சிறுகதைகளைப் படிக்க நேர்ந்து அவற்றை என் கதைகளாக இணைய இலக்கிய இதழொன்றுக்கு என் புனைப்பெயரில் அனுப்பி, அவை
பிரசுரமாகி, அதன்பின் செய்த குற்றத்திற்கு பெரியவரிடம் மன்னிப்பு கேட்டது போக, உண்மையை இணைய இதழின் எடிட்டருக்கு எழுதி அனுப்பி, அதையே அவர் ஒரு கதையாக எண்ணிப் பதிப்பித்த கூத்து நடந்த பிறகுதான் முற்றுப்புள்ளியிடம் நட்பு ஏற்பட்டது. வாழ்க்கை புனைவைவிட மிக விசித்திரமானதுதான் (இது போன்ற சொற்றொடர்களை நிஜ வாழ்வில் பொருத்துவதற்கான வாய்ப்புக்களை நான் எப்போதும் எதிர்நோக்கியே இருப்பேன், நான் மேலே சொல்லிய நிகழ்வுகளையேகூட பின்நவீனத்துவ கதையாக எண்ணிப் பார்ப்பதுண்டு என்பதை நான் வாசகர்களுக்கு சொல்லத் தேவையில்லை).

‘முற்றுப்புள்ளி’ என்ற அவருடைய புனைப்பெயர்தான் அவருடைய நூலை வாங்கச் செய்தது, இன்றுவரை அவருடைய உண்மைப் பெயர் – நிஜ, உண்மைப் பெயர் என்ற சொற்றொடருக்கான அர்த்தம், இங்கு அதை உபயோகிப்பதற்கான பொருத்தம் எல்லாம் சரியாக புரியவில்லை என்றாலும், பொது வழக்காக இருப்பதால் அப்படியே குறிப்பிட்டு விடுகிறேன் – என்னவென்று எனக்குத் தெரியாது, அவரும் இதுவரை என்னுடைய பெயரைக் கேட்டதில்லை, புனைப்பெயராகவே என்னை அறிகிறார். ‘இரு நிழல்களின்’ நட்பு என்று இந்த இடத்தில் குறிப்பிட்டால் கதைக்கு இலக்கிய தொனி கிடைக்கும் என்று நினைக்கிறேன். மேலும், மௌனியின் வரிகளை மாற்றி – நகல் செய்து என்றும் எடுத்துக் கொள்ளலாம் – யார் நிழல், யார் நிஜம் என்ற தத்துவ விசாரத்திலும் ஓரிரு பத்திகளுக்கு ஈடுபடலாம் என்று தோன்றுகிறது (நான் குறிப்பிடும் வரிகளை மௌனிதான் எழுதினார் இல்லையா, அல்லது நகுலனா? இருவருமே அப்படி எழுதி இருக்கும் சாத்தியம் உண்டு).

பார்வையை என்னை நோக்கி திருப்பியவர், ‘என்னப்பா இது அனுப்பி இருக்க’ என்றார்.

‘கவிதை சார்’

‘என்னது….’

‘அதாவது எதிர்-கவிதை சார், இதை அ-கவிதைன்னு கூட எடுத்துக்கலாம் இல்லையா’

‘எதிரு.. ஆ.. என்ன சொல்ல வர’

‘அதாவது சார், கவிதையின் அழகியல், லிமிடேஷன்ஸ், வரையறை எல்லாத்தையும்  கலைச்சுப் போட்டு..’ என்றவனை இடைமறித்து, ‘கவிதைக்கு என்ன வரையறை நீ வெச்சிருக்க மொதல்ல, இதுவரைக்கு கவிதை பத்தி, இல்ல கவிதை என்ன எழுதி இருக்க, ஏதோ கதன்னு தான எழுதிட்டிருந்த’

‘மொதல்ல நாம சந்திச்சப்போ ரெண்டு மூணு கவிதை ஒங்ககிட்ட காட்டிருக்கேனே சார்,’ என்று நான் சொல்ல, சில நொடிகளுக்குப் பின் ‘ஏதோ எழுதினத காட்டின..ம்ம், சரி இப்ப என்ன திருப்பி…’

‘நீங்க வேற நா எப்பவுமே செங்கல்பட்டு கதை மட்டுமே எழுதறேன்னு சொன்னீங்க, வேற முயற்சி செய்யலாமேன்னு’

‘நான் வெறும் அனுபவப் பகிர்வு மட்டுமே கதை, இலக்கியம் ஆகாதுங்கற அர்த்தத்துல சொன்னேன்பா, அதுக்கு இப்படியா’

‘இது மொதல் ரெண்டு வர தான் சார், இன்னும் ஏழெட்டு வரி வரும், ரெயின் எங்க போய் சேர்றது, யூரின் எங்க போய் சேர்றது ரெண்டையும் ஜாயின் பண்ற மாதிரி.’

‘அப்போ இதை கண்டின்யு பண்ணத்தான் போறியா’

‘ஆமா ஸார், இப்போ இதை பாத்தா ஹைக்கூ மாதிரி இருக்குலியா, அதுன்னு நெனச்சுக்கப் போறாங்க’

‘ஹைக்கூவா…’

‘காபி குடிச்சுட்டு யூரின் பாஸ் பண்ணும்போது வர வாசனை, இப்படி நுணுக்கமான விஷயங்க. முன்னாடி நாம ஒரு நாள் பேசும் போது தி.ஜா ஏதோ அவர் கதைங்க பத்தின பேட்டியிலோ, நேர் உரையாடலிலோ வீட்ல கிச்சன், டிராயிங் ரூம் இருக்கற மாதிரி பாத்ரூமும் இருக்கே, அதைப் பத்தியும் எழுதணுமேன்னு சொன்னதா நீங்க கூட சொன்னீங்களே’

‘பாத்ரூம் பத்தி எழுதலாம்பா, ஆனா ப்ராடு வாஸ்த்து ஆளுகிட்ட மாட்டிக்கிட்ட மாதிரி, டிராயிங் ரூம பாத்ரூமா மாத்தறது மாதிரி ஆகக் கூடாதுல்ல’

‘இந்த மாதிரி எழுத்துக்களை பிரசுரிப்பாங்களான்னு தெரியல சார், எழுதி முடிச்சிட்டு அனுப்பறதான்னு முடிவு செய்யல, மோஸ்ட்லி அனுப்ப மாட்டேன்னு நினைக்கறேன்’

‘நல்லதுதான்’

பெரியவருடன் தொடர்பு ஏற்பட்டதும், சனி, ஞாயிறன்று அவர் வீட்டிற்குச் சென்று இலக்கிய உரையாடல்களில் ஈடுபடும் பழக்கமும் உண்டானது. அதாவது பெரியவர் என் எழுத்துக்களை கிழித்தெடுப்பார், நான் கேட்டுக் கொண்டிருப்பேன். நாற்பத்தைந்து ஆண்டுகளாக, தான் எழுதி, எங்கும் பிரசுரத்துக்கு அனுப்பாத அவர் கதைகளைப் படித்து (எழுபத்திரெண்டில் எழுத ஆரம்பித்த சிறுகதையின் இருபத்தி நான்காம் வரைவைக்கூட படித்திருக்கிறேன்) நாலைந்து நற்சொல் என் தரப்பாக வரும், குற்றம் செய்தவன் நான்தான் இல்லையா. மேலும் பெரியவரை ஒரு விதத்தில் என் ‘ஆல்டர் -ஈகோவாக’ பார்க்க ஆரம்பித்திருந்தேன். யுவனின் கதைகளில் வரும் இஸ்மாயில்கூட இப்படித்தான் ஈவிரக்கமில்லாமல் கதைசொல்லியின் கதைகளை கட்டுடைக்கிறார், இல்லையா, எனக்கு நிஜத்தில் நடக்கிறது அவ்வளவு தான்.

‘இலக்கிய இதழ்களே இப்படின்னா லிட்டரேச்சர் பத்திலாம் நெறைய பேருக்கு தெரியாது அவங்க கிட்டலாம் என்ன பேச, அதான் நான் எழுதறத பத்திலாம் யார்க்கிட்டயும் சொல்றது இல்ல’

‘அதான் நல்லது, கண்டிப்பா இது எழுதியே ஆகணும்னா கண்டின்யு பண்ணு பாப்போம் எங்க போய் நிக்குதுன்னு’

பெரியவரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு ஹாலுக்கு வந்த, அவர் மனைவியைப் பார்த்து, உதடுகளை வலிந்து, எழுத்து உருவாக்கும் அசௌகரிய புன்சிரிப்பை எப்போதும் போல் உதிர்த்து விட்டு, ( சிரிப்பை எல்லாம் எப்படி உதிர்க்க என்று எனக்கு தோன்றினாலும், இந்த நேரத்தில் வேறு எந்த உவமை, உருவகம் எதுவும் தோன்றவில்லை என்பதால் வேறு வழியின்றி அதையே எழுதி விடுகிறேன், கதையை திருத்தம் செய்யும்போது நல்லதாக ஏதேனும் தோன்றினால் மாற்றி எழுதக்கூடும். ஆனால் அதற்கான தேவை இருப்பதாகத் தெரியவில்லை, என்ன இருந்தாலும் இது எழுத்து உருவாக்கும் அசௌகரிய புன்சிரிப்புதானே, அது மலர்வதைவிட உதிர்வதுதான் பொருத்தமாக இருக்கும், இல்லையா) வெளியே வந்தேன். முற்றுப்புள்ளியின் மனைவிக்கு கணவர் மீதும், அவர் எழுத்தின் மீதும் மிகப் பெரிய பற்று, என்னை தன் கணவனின் (முதல்) சீடனாக ( இறுதிச்’ சீடனும் நானாகத்தான் இருப்பேன், ஆனால் அந்தக் கட்டத்தை அவரது மனைவி இன்னும் அடையவில்லை) அவர் எண்ணுவதால் என் மீதும் கொஞ்சம் கரிசனம் உண்டு.ஆனால் நான் அவர் கணவரின் கதைகளை திருடிய கதை அவருக்குத் தெரிந்தால், என் கதை பெரியவரின் புனைப்பெயராகிவிடும் என்பதில் எனக்குச்’ சந்தேகமில்லை.

வீட்டிற்கு வந்து சாப்பிட்டு முடித்து அறையில் விளக்கை அணைத்துவிட்டு மற்றனைவரும் (மற்றனைவரும் என்பதில் மற்ற அனைவரும் என்பதற்கில்லாத ஒரு கவிநயமிருக்கிறதில்லையா) தூங்க மடிக்கணினியை திறந்து (எதிர்)கவிதையை செப்பனிட்டுக் கொண்டிருந்தேன். பத்தேமுக்காலாகி விட்டது. ஹெட்போனை அலைபேசியில் பொருத்தி, அதில் நிறுவியிருந்த ‘ஆல் இந்தியா ரேடியோவின்’ செயலியை இயக்கி ‘ஏ.ஐ.ஆர். தமிழ்’ நிலையத்தை தேர்வு செய்தேன்.(போன ஞாயிறன்று நேயர் விருப்ப நிகழ்ச்சியில் ‘ஐனாவரம் அபர்ணா நகரிலிருந்து இந்தப் பாடலை விரும்பிக் கேட்கும் நேயர்கள்’ என்று நாலைந்து பெயர்களை சொல்லி பாடலொன்றை ஒலிபரப்பினார்கள். சிறுவயதிலிருந்தே இந்த இடங்களும், அங்கிருந்து பாடல்களைக் கோரும் நேயர்களும் நிஜமானவர்கள்தானா என்ற சந்தேகம் எனக்குண்டு). யாரோ ஒருவர் கர்நாடக இசைப் பாடலொன்றைப் பாடிக் கொண்டிருந்தார் (நிலைய வித்வான்?). நான் கர்நாடக இசை கற்றுக் கொண்டதைப் பற்றி முன்பே தனிக் கதையாக எழுதிவிட்டதால், அதைப் பற்றி சொல்லப் பெரிதாக ஒன்றுமில்லை (அந்தக் கதையில்கூட ஒரு விஷயமும் இல்லை என்பது முற்றுப்புள்ளியின் கருத்து. இந்தக் கதை பிரசுரமாக தேர்ந்தெடுக்கப்பட்டால் முந்தைய கதைக்கான லிங்க்கை இந்த இடத்தில் தருமாறு இதழின் ஆசிரியரிடம் கேட்கவேண்டும்). என்னையும், கர்நாடக இசையையும் சேர்த்துச் சொல்வது என்பது ‘ஆக்ஸ்சிமோறான்’ என்று மட்டும் இங்கே குறிப்பிட்டால் போதும் என்று நினைக்கிறேன். (ஆங்கில வார்த்தைகளை புனைவுகளில் உபயோகிப்பதை பெரிய குற்றமாக – அவை கதையின் போக்கில் வேறு வழியின்றி உபயோகப்படுத்தப்பட்டிருந்தால் – பெரியவர் பார்ப்பதில்லை. பல பத்தாண்டுகளாக தன்னை புதுப்பித்துக் கொண்டே எழுதி வருகிறார் அவர். ஆனால் பிற மொழிச் சொற்களின் உச்சரிப்பு மிகச் சரியாக இருக்க வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருப்பார். அவர் சொல்லித்தான் உச்சரிப்புகளுக்கான ‘ஃபோர்வோ’ இணையதளம் குறித்து தெரிய வந்தது, அதிலிருந்து தான் ‘ஆக்ஸ்சிமோறான்’ என்பதற்கான உச்சரிப்பையும் பெற்றேன். இங்கு, நாலு பேர் ஒரே சொல்லை நாலு விதமாக உச்சரிப்பது போதாதென்று ஒரே சொல் நாலு பேர் காதில் நாலு விதமாக ஒலிப்பது நுண்புல ஆய்வுக்குரியது).

பதினோரு மணிக்கு ஒளிபரப்பாகும் இசை நிகழ்ச்சியை பாடுபவரின் குடும்பமே கூட கேட்டுக்கொண்டிருப்பது கடினம்தான், வித்வானேகூட தூங்கி இருக்கலாம் அல்லது இருளான அறையில் காதருகில் ரேடியோவை வைத்துக் கொண்டோ அல்லது என்னைப் போல் அலைபேசியிலோ கேட்டுக் கொண்டிருக்கலாம். பாடலின் புரியாத வரிகளும், பாடுபவரின் குரலும், பக்க வாத்தியக் கலைஞர்களின் கருவிகளின் ஒலியும் (அவர்களோ, அவர்கள் குடும்பத்தினரோகூட இந்த நிகழ்ச்சியை கேட்டுக் கொண்டிருப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவுதான் இல்லையா) ஒலித்துக் கொண்டிருக்க, மடிக்கணியின் திரையில் தெரிந்த என் கவிதையின் வரிகளை பார்த்துக் கொண்டிருந்தேன். (எழுதுபவரே அவ்வப்போது நேரடியாக வாசகரிடம் பேசுவது, எழுதிக் கொண்டிருப்பதை பற்றி பேசுவது/ ஸெல்ப் ரிப்லெக்ஸ்சிவ் பிக்ஷன் – என்றெல்லாம் இந்தக் கதையை சொல்லலாமா என்று தெரியாவிட்டாலும் எனக்கு அந்த சொற்றொடர் புரிந்த அளவில் அதை இங்கே உபயோகப்படுத்தி இருக்கிறேன் – போல் இந்தக் கதை இருந்தாலும் நெகிழ்ச்சியாக (யாரும் கேட்காத பாட்டைப் பாடும் வித்வான், யாரும் வாசிக்கப் போகாத கவிதையின் வரிகளை எழுதிக் கொண்டிருப்பவன் இருவரும் இணையும் இருளின் ஒரு கணம்) – நவீனத்துவ புனைவு போல் முடிவது – நான் குறிப்பிட்டுள்ள இரு தனியுற்ற மனங்கள் இணையும் இருளின் ஒரு கணம் வாசகருக்கு நெகிழ்ச்சியை தரும் என்ற நம்பிக்கையில்தான் இப்படி குறிப்பிடுகிறேன் – எனக்கேகூட வியப்பாகத்தான் இருக்கிறது. (இந்த முடிவுக்கு மட்டும் தனியாக ஒரு பின்குறிப்பு தேவைப்படுகிறது. முடிவை தலைப்போடும் இணைக்கும் என்பதால் அதை தவிர்க்க முடியாது. மனதைத் தொடும் வாக்கியங்கள் அவை. மிகத் தேர்ந்த ஸ்டைலிஸ்ட்டான வில்லியம் காஸ் என்பவர் தன் தொகுப்பொன்றின் முன்னுரையில் எழுதியது. அதன் அழகு கெடாத வகையில் அதை ஆங்கிலத்திலேயே தந்திருக்கிறேன்)

oOo

முடிவின் பின்குறிப்பு (தலைப்புக்கும் ஒளிர்வூட்டுவது):

Unlike this preface, then, which pretends to the presence of your eye, these stories emerged from my blank insides to die in another darkness. I willed their existence, but I don’t know why. Except that in some dim way I wanted, myself, to have a soul, a special speech, a style. I wanted to feel responsible where I could bear to be responsible, and to make a sheet of steel from a flimsy page—something that would not soon weary itself out of shape as everything else I had known (I thought) always had,” என்று வில்லியம் காஸ் எழுதுவதை வாசிக்கும் எவருமே எழுத்தின் துயரனுபவத்துக்கு ஒரு கணமேனும் வருந்தாமல் இருக்க முடியாது. இதைத் தொடர்ந்து, “Because I wrote these stories without imagining there would be readers to sustain them, they exist now as if readerless (strange species indeed, like the flat, pigmentless fish of deep seas, or the blind, transparent shrimp of coastal caves), although a reader now and then lets light fall on them from that other, less real world of common life and pleasant ordinary things,” என்று அவரே எழுதும்போது நமக்கெல்லாம் நிழல்களின் நிழல்களின் நிழல்களாய் இருக்கவே கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

பிற பின்குறிப்புகள்:

பின்குறிப்பு 1:

கதையில் அடைப்புக்குறிகளுக்குள் எழுதப்பட்டுள்ளதை அடிக்குறிப்புக்களாகதான் முதலில் நான் எழுத எண்ணி இருந்தேன். நான் பெரிதும் வியக்கும் இலக்கிய ஆளுமைகள் பலர் (குறிப்பாக டேவிட் பாஸ்டர் வாலஸ்) இந்த உத்தியை மிகச் சிறப்பாக கையாண்டுள்ளார்கள். எனக்கு அடிக்குறிப்புகள் நிறைந்த கதையொன்றை எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும், வாசிப்பை கலைத்துப் போடும் இத்தகைய உத்திகள் மலிந்து விட்டனவோ என்ற சந்தேகம் எழ அதைக் கைவிட்டேன். மேலும் அடைப்புக்குறிகள் மீதும் எனக்கு கொஞ்சம் மோகம் உண்டு. நீண்ட வாக்கியங்கள், ‘-‘ போட்டு எழுதுவது மீதும். பின்குறிப்புக்கள் குறித்த என் அபிப்ராயத்தையும் கதை முடியும்முன் வாசகன் தெரிந்து கொண்டு விடுவான்.

பின்குறிப்பு 2:

எழுத்தாளர்களின் பெயர் உதிர்த்தல், கதையில் உள்ள இலக்கிய உத்திகள் (அவற்றை நான் புரிந்து கொண்ட அளவில்) பற்றிய விவரிப்பு எல்லாம் தேவையற்ற சுயமுன்னிருத்தலாக, ‘உயிரற்ற’ வார்த்தை ஜாலங்களாக (கதையின் உயிர் அல்லது ஆன்மா, இலக்கிய படைப்பில் கிடைக்க வேண்டிய ‘தரிசனம்’, ‘திறப்பு’, ‘ஆன்மீக சாரம்’ போன்ற கருத்தாக்கங்கள் எனக்கு சரியாக பிடிபடுவதில்லை. கருத்தாக்கம் என்ற சொல்லை நான் இங்கு உபயோகிப்பதுகூட பொருத்தமான ஒன்றா என்பதும் தெரியவில்லை. இந்தக் கதையில் எந்த ‘அறமும்’ இல்லை (நான் நினைக்கிற அறமும் நீங்கள் நினைக்கும் அறமும் ஒன்றெனில், இல்லாவிட்டால் ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிப்பதைத் தவிர என்னால் வேறு ஒன்றும் செய்ய முடியாது இல்லையா) என்பதை மட்டும் என்னால் உறுதியாக கூற முடியும்), காலாவதியாகிவிட்ட உத்திகளாக வாசகருக்கு (அதாவது இந்தக் கதை பிரசுரிக்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்டால்) தோன்றலாம். அது நியாயமே, மேலும் கதை பொதுவெளிக்கு வந்தபின் ஆசிரியனுக்கு அதன் மேல் எந்த உரிமையும் இல்லை அல்லவா. என்னளவில் ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன் (எழுத்தாளன் தன் எழுத்து பற்றி பேசக் கூடாது, வாசகன் அதலிருந்து என்ன பெற்றுக் கொள்கிறானோ அதுதான் அவனுக்கான கதை -அவரவர் கைமணல்- என்பதெல்லாம் சரிதான் என்றாலும்கூட இந்த ஒரு முறை மட்டும் தன்னிலை விளக்கமொன்று தரலாம் என்று நினைக்கிறேன்).

என்னுடைய முந்தைய இரண்டு கதைகளுக்கு இந்தக் கதையில் இணைப்பு கொடுத்திருப்பதால் இதை ‘ஹைப்பர்-டெக்ஸ்ட்’ கதையென்று சொல்ல மாட்டேன், அவற்றை மீண்டும் வாசகர்கள் முன் வைக்க கிடைத்த வாய்ப்பை உபயோகித்துக் கொண்டேன் அவ்வளவே.

இந்தக் கதையில் எனக்கு தோன்றிய (எதிர்)கவிதை வரிகள், அவை குறித்து பெரியவருடன் நான் உரையாடியது, அந்தப் பேச்சு தொடர்பான என் எண்ணங்கள் அனைத்தையும் அவை நிகழ்ந்தபடியே எந்த கூடுதலோ, குறையோ இல்லாமல் அப்படியே பதிவு செய்திருக்கிறேன். அந்த விதத்தில் இது எந்த மிகையும் இல்லாத நேரடியான யதார்த்தக் கதைதான், படிக்கும்போது வாசகனுக்கு வேறு மாதிரி தோன்றக்கூடும் அவ்வளவே (இங்கு, புனைவு வாழ்க்கையை விட விசித்திரமானது என்று மாற்றிச் சொல்லலாமா என்று தோன்றுகிறது)

பின்குறிப்பு 3:

கதை எழுதியதைப் பற்றி விளக்க ஆரம்பித்தபின், கதை குறித்த (சுய) விமரிசனத்தையும் பின்குறிப்பாக சேர்த்து விடலாம் என்றுதான் முதலில் நினைத்தேன். பிரசுரம் ஆகுமா ஆகாதா என்றே சொல்ல முடியாத கதைக்கு இதெல்லாம் தேவையா என்று கேள்வி எழ அந்த எண்ணத்தை விலக்கினேன். பிரசுரம் ஆகாவிட்டாலும்கூட ஒன்றும் பிரச்சனையில்லை. இதை முற்றுப்புள்ளியிடம் தந்தால் ‘ஆகச் சிறந்த’ விமரிசனத்தை அவர் தருவார். ‘பிரசுரமாகாத கதையொன்றின் விமர்சனம்’ என்று அதை இன்னொரு (யதார்த்த) கதையாகக்கூட எழுதி விடலாம். மற்றொரு பாத்திரத்தை சேர்த்தால் கதையை ‘பிரசுரமாகாத கதையொன்றின் விமர்சனக் கூட்டமாக்கி’ விடலாம்.

பின்குறிப்பு 4:

இரு சொற்றொடர்களை நடுவில் ‘அல்லது’ வைத்து இணைத்து கதையின் தலைப்பாக வருமாறு வைக்க வேண்டும் என்பது என் விருப்பம். அதாவது ‘மரணபுரத்தின் மர்மம் அல்லது லீலாவதியின் மூடுமந்திரம்’, ‘கும்பகோணம் வக்கீல் அல்லது திகம்பர சாமியார் இரண்டு பாகங்கள்’ போன்ற தலைப்புக்கள். ‘X அல்லது Y’ என்று வைத்துக் கொண்டால் வாசகன் இரண்டில் தனக்கேற்ற ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த பாணி கதைகளுக்கான இப்படி தலைப்பு வைப்பது வழக்கமாகவும் (தமிழில்) உள்ளது. ஆனால் ‘X மற்றும் ‘Y’ஆக என்ன வார்த்தைகளைப் போடுவது என்பது குறித்து எனக்குத் தெளிவில்லை. ‘ஒரு பின் மாலை நேர இலக்கிய உரையாடல் அல்லது விழித்திருப்பவனின் இரவு நேர இலக்கிய விசாரம்’ என்று ஒரு எண்ணம். யதார்த்தக் கதை என்பதால் முதல் பகுதி பொருத்தமாக இருக்கும் (என் முந்தைய கதையொன்றின் தலைப்பைதான் இப்படி மாற்றி இருக்கிறேன்), இரண்டாவது பகுதி இலக்கியத் தன்மையுடன் கவித்துவமாக உள்ளதாக எண்ணுகிறேன். இருப்பினும் இதுவும் எனக்கு முழு உவப்பாக இல்லை என்பதால் இதழ் ஆசிரியரிடமே விட்டு விடுகிறேன். பிரசுரமாகும்போது/ பிரசுரமானால் வாசகன் படிக்கும் தலைப்பு அவர் வைத்ததுதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டுகிறேன். (கதையின் தலைப்பு மட்டுமல்ல, பாத்திரங்களுக்கான பெயரை வைப்பதிலும்கூட எனக்கு குழப்பமே ஏற்படுகிறது, எனவே ‘நான்’, ‘இவன்’ ‘அவள்’ என்றுதான் பெரும்பாலும் எழுதி வந்திருக்கிறேன். கதைக்கான கருவையும், நிகழ்வுகளையும், அவற்றை விவரிக்கும் வார்த்தைகளை, வாக்கியங்களைத் தொகுப்பதே கடினமாக இருக்கும் போது பெயர்களுக்கு நேரம் செலவிடுவது எனக்கு விரயமாகவே தோன்றுகிறது. மேலும் நாளை என்னை யாரேனும் நேர்காணல் காணும் அல்லது என் புனைவுலகை உருவாக்கும் முறை பற்றி நானே விவரிக்கும் சூழலோ உருவானால், பாத்திரங்களை ‘அவன்’, ‘நான்’ என்று அழைப்பது வாசகன் தன்னை எளிதாக, உடனடியாக அவர்களுடன் உணர்வுரீதியாக பொருத்திக் கொள்ள உதவக்கூடும், ‘அவன்’ என்பது நவீன மனிதனின் பிரதிநிதி, அவனுடைய தனிமையின் குறியீடு என்ற ரீதியில் நான் ஏதேனும் சொன்னால் அது எடுபடவும் கூடும்)

பின்குறிப்பு 5:

கதையில், நிறைய இடங்களில் ‘இல்லையா’, ‘அல்லவா’, ‘தோன்றுகிறது’ போன்ற வார்த்தைகள் திரும்பத் திரும்ப வருகின்றன, இதை தவிர்த்து அதே அர்த்தத்தில் பிற வார்த்தைகளையும் உபயோகித்திருக்கலாம். ‘அங்கிள்’ என்று அழைக்கப்படும் வயதாகிவிட்டாலும், எழுத்துப் பயணத்தைப் பொறுத்தவரை நான் இன்னும் பாலகன்தான் என்பதால், காலப்போக்கில் என் எழுத்தில் முதிர்ச்சி ஏற்படும் என்று நம்புகிறேன்.

பொதுவாக கலைச்சொற்களை அவற்றின் அர்த்தத்தை சரியாக புரிந்து கொண்டு பொருத்தமாக உபயோகிக்க வேண்டும் என்றுதான் முயல்கிறேன், ஆனால் என் புரிதலின் எல்லைகளை விரிவாக்குவது போராட்டமாகவே உள்ளது.

பின்குறிப்பு 6:

இதுவே கதையின் இறுதி வரைவாக இருக்கும் என்று நம்புகிறேன். ‘வாசகன்’ என்றே எல்லா இடத்திலும் குறிப்பிட்டிருப்பதையும் இப்போதுதான் கவனிக்கிறேன் என்பதால் இனி மாற்ற நேரமில்லை. ‘ரீடர்’ என்று ஆங்கிலத்தில் பொதுவாக உள்ள சொல்லின் அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன், யாரையும் அவமதிக்கும், விலக்கும் எண்ணம் கிஞ்சித்தும் இல்லை எனக்கு. இருப்பினும் என்னையறியாமல் இப்படி நிகழ்ந்ததற்கு மன்னிப்பும் கோருகிறேன். (உண்மையில் எனக்கு பெண் வாசகியர் மீது ஒரு தனி பரிவுண்டு, அவர்களே என் கதையின் மீதான சிறந்த விமரிசனம் நிகழ்த்துவதாக நண்பர் ஒருவர் கூறுகிறார்).

பின்குறிப்பு 7:

இந்த வரைவை முற்றுப்புள்ளிக்கு அனுப்பப் போவதில்லை, ‘லெட் ஸ்லீபிங் டாக்ஸ் லை’ (சொற்றொடர்களை என் வாழ்க்கையில் பொருத்தும் வாய்ப்புக்களை எதிர்நோக்கி இருப்பது பற்றி முன்பே சொல்லி இருக்கிறேன் அல்லவா). என் புனைப்பெயரில் அனுப்புவதற்கு பதில், முற்றுப்புள்ளி என்ற பெயரில் அனுப்பலாம். அவர் கதைகளைத் திருடி குற்றம் செய்தவன் நான்தான், ‘ஆதி குற்றம்’ (சொற்றொடர்களை பொருத்துவதற்கு இது ‘ஆகச்சிறந்த’ கதையாக உள்ளது). ஆனால் தண்டனையை நான் மட்டுமே அனுபவிக்க வேண்டுமா என்ன, குற்றத்தையும் தண்டனையையும் ஒற்றைப்படையாக ஏன் அணுக வேண்டும், நாம் இப்போது வாழ்வது ‘போஸ்ட்-ட்ரூத்’ உலகில். (‘போஸ்ட்-ட்ரூத்’ என்ற சொல் பெரும்பாலான கட்டுரைகளில் – அது எந்த துறையை பற்றியதாக இருந்தாலும் – இடம் பெற்று வரும் சூழலில் அவ்வார்த்தையை புனைவொன்றில், அதுவும் அதன் முடிவில் முத்தாய்ப்பாக உபயோகித்திருப்பது உற்சாகமளிக்கிறது).

இரு மராத்திமொழி கவிதைகள் – தி. இரா. மீனா தமிழாக்கத்தில்

மராத்திமொழி கவிதைகள்
மூலம் : கிஷோர் கதம் – சௌமித்ரா
ஆங்கிலம் : சந்தோஷ் பூம்கர்
தமிழில் : தி. இரா. மீனா

1.

வரவிருக்கும் நாட்கள் எவ்வளவு கடினமானவையாக இருக்கப் போகின்றன
நீ திரும்பிப் பார்க்கும்போது
உன்னால் ஒரு வெறுமையான வாழ்க்கையையாவது பார்க்கமுடியும்,
ஆனால் வரப்போகும் நாட்களை நினைத்துப் பார்க்கும்போது
நீ ஒரு பார்வையற்றவன் என்பதை உணர்கிறாய்.
பாதங்கள் சாலையில் தயங்கிப் போகின்றன .
எனவே சாலைகளின் திசைகள் நம்முடையவை
இப்போது உன் காலடிக்கான இடத்தை நீ பார்க்கக் கூடமுடியாது
இப்போது சுவாசிக்குமளவே காற்றை நினைக்கமுடியும்
காலையில் உன் கண்கள் திறக்குமேயானால்
நீ தூங்கினாய் என்று நினைத்துக்கொள்
நிழல் உன்மீது விழுந்தால்
கடைசியாக அந்த மரத்தைப் பார்த்துக்கொள்.
தலைக்கு மேல்பறக்கும்
பறவையிடம் திரும்பிவருவதற்கான உறுதிமொழியையை எதிர்பார்க்காதே.
இவற்றையெல்லாம் தீர்மானிக்கும் போது
என் கண்கள் பனிக்கின்றன.

நேற்று நடந்த அல்லது அதற்கு முன்தினம் நடந்த
அல்லது சில வருடங்களுக்கு முன் நடந்த துயரங்களுக்காக அல்ல என் கண்ணீர்
வரப்போகும் நாட்களுடன் வரவிருக்கும் துன்பங்களுக்கானவை அவை .

உண்மைதான் !
வரவிருக்கும் நாட்கள் எவ்வளவு
கொடுமையானவையாக இருக்க வேண்டும்….

2.

ஓ, கடவுளே !
நீ எங்கேயாவது இருக்கிறாயா?
நீ உண்மையாகவே இருக்கிறாயா?
தனிமையான தவிர்க்கமுடியாத
இந்த நீண்ட நீண்ட சாலை எனக்கு வேண்டாம்
உன் இருப்புடனும் இருப்பின்மையுடனுமான
பரபரப்பு எனக்கு வேண்டும்.

நீ விரும்பினால் வந்து விட்டுப் போகலாம்
ஆமாம்,நீ எங்கேயிருக்கிறாய்?
எனக்கு உன்மீது நம்பிக்கை வரவேண்டும்.

நீ இருக்கிறாயா அல்லது இல்லையா
என்று தெரியாமல்
நீ இருப்பதாகவே நினைத்து நான் வாழ்கிறேன்.
நமக்குள்ளே நடக்காமலே இருக்கின்ற
எல்லாமும் எனக்கு நினைவிலிருக்கிறது.

உன் இருப்பு இருப்பின்மை எனும் நாடகத்தில்
என் இருப்பு உன்னுடையதாகிறது,
ஆனால் நான் மனிதன்
என்னை அப்படியே இருக்கவிடு,
நீயும் என்முன் மனிதனாய் வா.

நான் தனியாக இருக்கிறேன்.
நீ எங்கிருந்தாலும் வா

உண்மையில் நீ எங்கேயாவது இருந்தாக வேண்டும்.
இருக்கிறாய் அல்லவா?

oOo

நன்றி : Marathi Poetry 1975—2000 Sahitya Akademi 2013

 

சித்ராவுக்கு ஆங்கிலம் தெரியாது – கலைச்செல்வி சிறுகதை

கலைச்செல்வி

வனப்பாதை சுழன்று சுழன்று வாகனத்தை மேலேற்றியது. வாகனம் என்றால் முன்புறம் மகிழுந்து போலவும் பின்புறம் சிறு விலங்குகளுக்கான விசாலக்கூண்டுமாய் வடிவமைக்கப்பட்ட சொகுசு வேன். இருபுறமும் வனம் சரிவான அடுக்குகளாய் இறங்கியிருந்தது. கவிகையால் மூடப்பட்ட வனத்தின் மேற்பகுதி அடர்பச்சையாய் காட்சியளித்தது. இங்கேயே இருந்திருந்தால் சித்ராவின் விதி நிர்ணயிக்கப்பட்டிருக்காதோ.. நழுவிய மனதை நிலைப்படுத்திக் கொண்டு வாகனத்தை இயக்குவதில் கவனத்தைக் குவித்தேன். பொதுவாக நான் ஓட்டுநர் இன்றி தனியே கிளம்புவதில்லை. ஆனால் என் விருப்பத்தின்படியா எதுவும் நடக்கிறது..? குளிரூட்டியை அணைத்து விட்டு பக்கவாட்டு சன்னலை மையமாக கீழிறக்கினேன். குபுகுபுவென்று உள்ளே நுழைந்த காடு சிலிர்ப்பாக என்னை அணைத்துக் கொண்டது. சமீபத்தில் மழை பெய்திருக்க வேண்டும். ஆங்காங்கே நீர் தட்டுப்பட்டது. பசுநிலங்கள் இன்னும்.. இன்னும்.. என முளைப்புக்கு காத்துக் கொண்டிருந்தன.

வனம் என்னை இத்தனை மயக்கிப் போடும் என சமீபமாகதான் உணர்கிறேன். அதற்கு என் பணிச்சூழல் காரணமாக இருக்கலாம். தனியார் உயிரியல் பூங்காவில் புலிகளுக்கான சிறப்புப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறேன். அங்கு வைத்துதான் சித்ரா அறிமுகம். மீண்டும் சித்ராவுக்குள் புகுந்துக் கொள்வது வண்டியோட்ட உகந்ததல்ல. பார்வைக்குள் மனதை செலுத்தினேன். சூழ்ந்திருந்த பசுமை அகமெங்கும் ஒட்டிக் கொள்ள, காணுமிடமெங்கும் அன்பாக ததும்பி மலையிலிருந்து அருவியாக கொட்டிக் கொண்டிருந்தது. வெறும் மாயையான எண்ணமிது என்பதை மனம் நிர்தாட்சண்யமாக மறுத்து அன்பை வரைந்துக் கொண்டே செல்ல வாகனம் முன்னேறி நகர்ந்தது..

தொழில்நுட்பத்தின் துணையோடு, சிக்கலின்றி விடுதியை அடையாளம் கண்டேன். உள்ளே நுழைந்தபோதுதான் அது விடுதி போன்ற தோற்றத்திலிருக்கும் வனமாளிகை என புரிந்தது. எல்லாம் கம்பெனி ஏற்பாடு. வரவேற்பில் என் விசிட்டிங் கார்டை நீட்ட உட்புறமிருந்த குடிலுக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். காட்டேஜ் என்பதை குடில் என்று தமிழ்ப்படுத்தியாக வேண்டும் என்பதால் சொன்னேனே தவிர நவீன வசதிகளைக் கொண்ட அதி நவீன அடுக்ககம் போலிருந்தது அந்தக் குடில். சித்ரா.. பன்னீர்.. காந்தி.. வேதா.. எல்லாருக்குமே தனித்தனிக் குடில்கள்தான். ஆனால் சித்ரா அதை சிறிதும் விரும்புவதில்லை. மூர்க்கமான பிடிவாதம்.. உயிரை காவுக் கொடுக்கும் பிடிவாதம்.

பயணக்களைப்பு இருந்தாலும் குளியல் தேவைப்படவில்லை. அரைமணி நேர ஓய்வு போதுமானதாக இருந்தது. அறையை பூட்டி சாவியை வரவேற்பில் கொடுத்தேன். புருவத்தை உயர்த்திய அவர்களிடம் “நாளைக்குதான் செக் அவுட்.. கொஞ்சம் வெளில நடமாடீட்டு வர்றேன்..” என்றேன். வாகன நிறுத்தத்தில் பொருந்தினாற்போல நின்றிருந்த வேனை திறந்து உள்ளே அமர்ந்துக் கொண்டேன். தரைப்பரப்பெங்கும் செயற்கையான புல்வெளி. நடக்கத் துாண்டியது. வெளிக்காற்று உடலை நடுங்க வைத்தது. புற்கள் கால்களில் மசிந்தன. வனமாளிகையை சுற்றிலும் தடித்த சில்வர் குழாய்களால் அமைக்கப்பட்ட சுற்றுச்சுவர் பாதுகாப்பு கருதி குறுக்கு கம்பிகளால் நிறைந்திருந்தது. அதையடுத்து கோட்டையின் மதிலைப் போல அகலமான சுற்றுச்சுவர்.

சித்ராவின் கோபத்துக்கு பின்னிருக்கும் நியாயம் காடாக அடர்ந்து பரந்திருந்தது. அதன் பெரிய உடலுக்கு.. அதன் பழக்கவழக்கங்களுக்கு.. அதன் சுதந்திரப் போக்குக்கு.. அதன் தனிமை விருப்பத்துக்கு.. ஏற்ற தாரளமான பரப்பு. உயிரியல் பூங்காவின் மொத்த பரப்பும் சித்ராவுக்கே போதாது. மலையடுக்குகள் பனித்திரைக்குள் வரையப்பட்ட கோட்டோவியங்களாய் தெரிந்தன. தெளிந்த வானில் வெண்ணிற மேகம் துணுக்குகளால் விரவியிருந்தன. நான் நிற்கும் இந்த இடம் கூட அவை போன்றதொரு சிகரமாகதான் இருக்க வேண்டும். அங்கு பொசிய பொசிய அண்டிக் கிடக்கும் பசுமை இங்கேயும் இருந்திருக்கும். பின்புறமாக திரும்பிக் குடிலைப் பார்த்தேன். ஐந்து நட்சத்திர விடுதி போல அத்தனை பெரியது.. அத்தனை நவீனமானது.. இத்தனை நவீனங்களையும் இங்கு சேர்க்க எத்தனை இயற்கை செலவாகியிருக்கும்..? நான் பணியில் சேர்ந்த போதுதான் சித்ராவும் வந்து சேர்ந்திருந்தாள். பார்த்தபார்வைக்கே அவளை பிடித்திருந்தது. ஒருவேளை பிறந்த ஊரை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற வேண்டிய என்னுடைய சூழல் சித்ராவின் சூழலை ஒத்திருந்தது கூட காரணமாக இருக்கலாம்.

காட்டைப் போல சித்ராவின் மூர்க்கமும் சமாளிக்க இயலாத பெருவெளிதான்.. பார்வையாளர்கள் சிலரை ரத்தக்காயப்படுத்தியிருக்கிறாள். இவள் மரணத்துக்கு சிபாரிசு செய்த கடிதத்தில் நானும் கையெழுத்திட்டிருந்தேன்.. செய்தாக வேண்டிய நெருக்கடி. நான் திரும்பவதற்குள் சித்ரா இல்லாமல் போகலாம். குடிலுக்குள் வர மறுத்து திறந்தவெளியில் தலையை திருப்பிக் கொண்டு பிடிவாதமாக நின்றிருந்த அந்த கம்பீரமான தோற்றம்தான் இறுதியானதாக இருக்கலாம். இனி பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. மரண தண்டனைக்கு நாள் குறித்தாகி விட்டது. தேவைப்பட்டால் ஆட்களை வரவழைத்துக் கொள்வதாக சொல்லி விட்டு அவசரமாக கிளம்பி விட்டேன்.

அதேசமயம் இங்கு வர வேண்டிய தேவையும் இருந்தது. இல்லையெனில் அத்தனை சுலபமாக அனுமதி கிடைத்து விடாது. நாளை காலையிலிருந்து வேலை துவங்க வேண்டும். வேலை என்ன வேலை.. புலியை கண்டுப்பிடிக்கும் வேலைதான். இந்த காட்டில் புலியின் தடம் தென்படுகிறதாம்.. நாட்டில் மனிதத்தடம் தென்படுகிறாம் என்று புலிகளெல்லாம் இப்படி ரூம் போட்டு யோசிக்குமோ..? அது கிடக்கட்டும்.. செயற்கைக் கோள் காமிராவைக் கூட ஏமாற்ற முடியுமா..? ஏமாற்றியிருக்கிறது ஒரு ஒற்றைப் புலி.. அப்படிதான் சொல்கிறார்கள்.. புலியின் தடத்தை கண்டதாக சொன்னவர்கள். அவர்கள் சுரங்கக்கூலிகள். வெறும் கூலிகள் மட்டுமல்ல.. இங்கிருந்து விரட்டப்பட்ட பழங்குடிகள் என்பதால் நிச்சயம் நம்பிதான் ஆக வேண்டும். நம்பியதால்தான் என்னை அனுப்பியிருக்கிறார்கள்.

”சார்.. சாப்பாடு எடுத்து வச்சிறவா…?” பின்னால் திரும்பினேன். குடிலின் பணியாள். உயர்த்தி பொருத்திய தொப்பி.. நேர்த்தியான உடைகள்.. கையுறை.. ஷு அணிந்த கால்கள் என சுத்தபத்தமான மனிதராக தெரிந்தார்.

”பத்து நிமிஷம் கழிச்சு வர்றேனே..” என்றேன்.

சித்ராவுக்கு பிறந்த மூன்று குட்டிகளில் சீத்தாவும் பன்னீரும் துறுதுறுப்பானவை. மாயா பிறந்த ஒரு மாதத்தில் இறந்துப் போனாள். வளர வளர பன்னீரை விட சீத்தாவிடம் துறுதுறுப்பும் துடிப்பும் அதிகம் தெரிந்தது.என் மடியிலும் தொடையிலும் நிமிண்டி விளையாடும்போது அவற்றின் உடல்பலத்தை என்னால் உணர முடிந்தது. சீத்தாவும் பன்னீரும் உணவுரீதியாக தாயை அண்டவிடாமல் பழக்கப்படுத்தப்பட்டது கூட இந்த மரண தண்டனையின் தொடக்கமாக இருக்கலாம்.

இரவு உணவிற்கு பின் அங்கிருந்த சோபாவில் அமர்ந்துக் கொண்டேன். டீப்பாயில் வைக்கப்பட்டிருந்த சிகரெட்டை அங்கிருந்த ஒருவர் சிநேகமாக நீட்ட.. தயக்கமாக வாங்கிக் கொண்டேன். அறிமுகத்தொனியில் சிரித்தார். மேற்கொண்டு நகரவியலாத என் மௌனம் அவருக்கு கனமாக தோன்றியிருக்கலாம். மேலும் அவரை சங்கடப்படுத்தாமல் என்னை விடுவித்துக் கொண்டு அறைக்குத் திரும்பினேன். தனிமைதான்.. படுக்கையறை உட்பட எல்லா இடங்களுமே தனிமைதான். விரும்பி அமைத்துக் கொண்டேனா.. அல்லது அதுவாக அமைந்து விட்டதா.. ஏதோ ஒன்று.. தனிமையும் மௌனமும் எனக்கு பிடித்துப் போனது.. மலையடுக்குகளில் உறைந்திருக்கும் மௌனத்தை மேகங்களால் புரிந்துக் கொள்ள இயலும். சித்ராவால் என்னை உணர முடிவது போல. அவள் உணர்வதை என்னாலும் உணர முடியும். அவளுக்கு என் அன்பு தெரியும்… சித்ரா.. என்ற அழைப்புக்கு ஸ்ஸ்ஸ்.. என ஒலிக் கொடுப்பாள். என் அதட்டல் தெரியும்.. என் கடிந்துக் கொள்ளல் தெரியும்.. அடைப்பட்டிருக்கும் கம்பியில் முட்டி என் கவனத்தை கலைக்கும் அவள் கோபம் எனக்கும் புரியும். மெல்ல மெல்ல தணிந்து தெளியும்போது நான் செல்லக் கோபத்தில் நகர்ந்துக் கொள்ள மூச்சுக்காற்றின் சீறலை எச்சிலாக தெறித்து என்னை சமாதானப்படுத்துவாள். எனக்குதான் தெரியவில்லை.. இனி சித்ரா இல்லாத நாட்களை எப்படி கடத்துவது என.

”என்ன சார்.. மனுஷன்ட்ட பேசற மாதிரி புலிக்கிட்ட பேசுறீங்க.. அதுக்கென்ன தமிழா தெரியப் போவுது..?” என்றார் உயிரியல் பூங்கா ஊழியர்.

”ஏன் தெரியாது.. நல்லா தெரியும்..” என்றேன்.

இன்டர்காம் ஒலியில் கலைந்து எழுந்தேன். ”லிக்கர் எதும் வேணுமா சார்..”

”ம்ம்..” யோசித்தேன்.. “இல்ல.. வேணாம்..“

நிச்சயம் உறக்கம் வரப் போவதில்லை. எழுந்து வெளியே வந்தேன். செயற்கை குளிரூட்டியை விட இயற்கை அதிகமாக குளிர்ந்து கிடந்தது. கம்பளியை போர்த்திக் கொண்டேன். இந்த இடத்தில் முன்பு யானைகள் கூட்டமாக வலசை வந்திருக்கலாம். காட்டுப்பன்றிகளும்.. கரடிகளும் மான்களும்.. அவற்றோடு இணக்கமாக பழங்குடிகளும் வாழ்ந்திருக்கலாம். ஏன்.. சித்ராவும் அவள் குடும்பமும் கூட இங்கு உலவியிருக்கலாம். காட்டின் வேட்கை தணியாத நேரங்களில் அறைக்குள் நுழைய பிடிவாதம் காட்டுவாள். அப்போதெல்லாம் அவள் கண்களில் மூர்க்கத்தை விட குழப்பமே மிகுந்து தெரியும். ஏதிலி வாழ்க்கை ஏற்படுத்தியக் குழப்பம். அந்தக் குழப்பத்தில்தான் இரண்டு மனித உயிரை காவு வாங்கியிருந்தாள். அதற்காக விதிக்கப்பட்டதுதான் இந்த மரண தண்டனை.

காட்டையும் விலங்குகளையும் தவிர்த்து மனிதர்கள் உறங்கத்தில் கிறங்கியிருந்தனர். லான், சிறு விளக்கு ஒளியில் வெகு சுத்தமாக தெரிந்தது. தடித்த கண்ணாடி சன்னல்களின் வேலைப்பாடுகள் வெளிப்புறக்காட்சியை முற்றிலும் மறைத்திருந்தன. கதவை திறக்க முயல, காவலாளி விழித்துக் கொண்ட பிறகு திடுக்கிட்டுப் போனார். அவரிடம் சமாதானமாக சிரித்தேன்.

”சார்.. நைட்ல வெளிய போறது பாதுகாப்பில்லைங்க..” என்றார் நன்றாக விழித்துக் கொண்டு.

”இத்தன தடுப்ப மீறி என்ன நொழஞ்சுடும்..? ஸ்வெட்டரை வேன்ல வச்சிட்டு வந்துட்டேன்.. எடுத்துட்டு வந்துடுறேன்..” என்றபடி நடந்தேன்.

வேனிலிருந்து கீழே இறங்கியபோது தான் காவலாளி எனக்கு காவலாக நிற்பதை கவனித்தேன்.

”ஸ்வெட்டருங்க..” என்றார் ஞாபகம் படுத்தும்தொனியில்.

அதை சட்டை செய்யாதவனாக ”அய்யோ.. சாரி.. நீங்க நிக்கறத கவனிக்கல..” என்றேன்.

என் எண்ணத்தை புரிந்தவர் போல ”சில பேரு இப்டிதான் ராத்திரி நேரத்து காட்டை பாக்க விரும்புவாங்க.. வியூ பாயிண்ட்க்கு போலாமா சார்..” என்றார்.

உடனே சம்மதித்தேன். அருகிலிருந்த கூம்ப வடிவ சிறு குடிலுக்கு அழைத்துச் சென்றார். உட்புறமாக அமைக்கப்பட்ட சுழலும் படிகளின் வழியே மேலேறினோம். உயரம் கூட கூட அகலம் குறுகிக் கொண்டே வந்து வட்டவடிவ கான்கிரீட் கட்டுமானத்திற்குள் எங்களை சேர்த்தது. இரண்டு ஆள் நிற்பதற்கேற்ப அகலத்தில் கட்டுமானம் வெளிப்பகுதியில் விரிந்து, சற்றே நெருக்கமான இரும்புக் கம்பிக்குள் அடைப்பட்டிருந்தது.. ஒட்டு மொத்தமாக எல்லாவற்றக்குமான கண்ணாடிக் கதவு. காலடியில் சிறுஒளியை எழுப்பிய மின் விளக்கு என நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட குடில்.

மலைக்காற்று கடும் குளிராக தோன்றியது. பகலில் தெரிந்த காட்சிகள் இரவில் புதிது போலிருந்தன. வானில் நட்சத்திரங்கள் மினுங்கலாய் நடுங்கின. காணுமிடங்கெங்கும் பரவியிருந்த இருள் கண்களுக்கு பழகத் தொடங்க, வனம் புலப்படத் தொடங்கியது. நகரத்து இருளைப் போல வனத்தின் இருள் அமைதியானதல்ல. அது குகையின் அந்தகாரத்தை போல ஆழமானது. மனிதனின் ஆசையை போல முடிவற்றது. சித்ராக்களை கீழிறக்கும் ஆசை.. சட்.. சித்ராவை மறக்க வேண்டும். சீவிடுகளின் ஒலி மனதை இழுத்துப் பிடித்து நிறுத்தியது.. காற்றின் வீச்சுக்கும் நீரோடையின் சலசலப்புக்கும் பக்கவாத்தியம் போல அது ஒலித்தது சீவிடுகளின் ஒலி.. அது மௌனத்தின் ஒலி. காணுமிடங்கெங்கும் ஆர்ப்பரிப்பான வனத்தின் இருள்.. விளக்குகளை வெற்றிக் கொள்ளும் இருளின் ஒளி.. அகத்தின் அடுக்குகளில் ஊடுருவி பரவ.. கண்களை நிறைந்துக் கொண்டே வந்த ஒரு தருணத்தில்.. ஒரு சரிவில்.. ஒளி வெள்ளமென வீச.. திடுக்கிட்டுப் போனோன்.

”அந்த பக்கம் பூரா மைன்ஸ்தான் சார்..” என்றார் காவலாளி என் பார்வையை உணர்ந்து.

அந்த ஒளியில் காடு நகர்ந்து விட, அதன் வழியே செயற்கை வழித்தடங்கள் புலப்பட.. இருளை ஒளி வென்று விட்டது. இந்த ஒளியின் சுவடுகள் தனிமையின் சுகத்தை கலைத்துப் போட்டு விடும். அங்கிருந்த விலங்குகள்.. தாவரங்கள்.. பூச்சிகளின் வாழ்வை குலைத்துப் போட்டு விடும். கனிமவளம் மனிதவளத்தை மேம்படுத்தியதில் வெளிச்சத்தில் இருளை தொலைத்த அவலம்.

சித்ராவை மயக்க ஊசி செலுத்தி வலியில்லாமல் சுட்டுக் கொல்வார்களாம். எதிர்க்கவோ.. பேசவோ எங்களுக்கே உரிமையில்லாத போது காட்டின் குரலை ஓயாமல் கர்ஜித்துக் காட்டும் சித்ராவுக்கு வாழும் தகுதியற்றுப் போவதொன்றும் ஆச்சர்யமல்ல.. அவள் தலைப்புச் செய்தியான நாளுக்கு பிறகு கூட்டம் வெகுவாக குறைந்திருந்தது. இதே காரணம்தான் முன்பு பழங்குடிகளுக்கும் சொல்லப்பட்டதாக ஞாபகம். பழங்குடிகளால் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று. பிறகு புலிகளும் பூங்காக்களுக்கு இறக்கி விடப்பட்டன. கேட்பதற்கு ஆட்கள் இருக்கும்போது சொல்வதற்கு காரணங்கள் நிறையவே இருந்தன. புலிகள் அடிக்கடி சமவெளிக்கு வந்து விடுகின்றன என்றார்கள். மொட்டைத்தலையிலிருந்து வழிந்தோடுதல் இயல்புதானே.. சரி.. ஏதோ ஒன்று.. புலி-மனித மோதலால் புலிகள் கொல்லப்பட்டு விடுகின்றன என்றார்கள். பழங்குடிகள் இறக்கிவிடப்பட்ட பிறகு தனித்திருந்த புலிகளுக்கு காட்டின் நடப்பைச் சொல்ல ஆங்கிலம் தெரியாமல் போனது சுரங்க அதிபர்களுக்கு வசதிதான்.

அறைக்கு வந்ததோ உறங்கியதோ அனிச்சையாக நடந்திருக்கலாம். துாங்கியது எப்போதென்றே தெரியவில்லை.. விழிப்பு வரும்போதுதான் துாங்கியிருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். திரைசீலைக்கப்பால் வெளிப்புறக்காட்சிகள் பளிச்சென்றிருந்தன. தேநீரை ஏந்திக் கொண்டு வந்தவரிடம் கட்டஞ்சாயா கிடைக்குமா என்றேன். உடனே கொண்டு வந்தார். சுடுநீர் குடிப்பது போல ஃப்ளாஸ்க்கிலிருந்து இரண்டு முறை ஊற்றிக் குடித்தேன். மனம் சற்றே நிதானப்பட, அறையை காலி செய்து சாவியை ஒப்படைத்து விட்டு கிளம்பினேன்.

இளங்காலை பயணம் உள்ளப்படியே உவகையை ஏற்படுத்த, வாயைக் குவித்து ஒலியுண்டாக்கினேன். கூடவே ஒலித்தது பறவையின் குரலொன்று. வண்டியின் வேகத்தை நிதானப்படுத்தினேன். அடர்வற்ற காடு மனித சஞ்சாரத்தை வெளிப்படுத்தியது. இடையே குறுக்கிட்ட சுரங்கத்திற்கான பாதை இயந்திரங்களை ஏற்றிச் செல்ல தோதாக அகலமாகவும் அதிகாரிகளை அழைத்துச் செல்ல வசதியாக நேர்த்தியாகவும் அமைக்கப்பட்டிருந்தது. பாதையின் இருபுறமும் இடுப்பளவு கான்கிரீட் தடுப்பு. அதுவுமே அகலம் கூடியதாக இருந்தது.

முன்பெல்லாம் வனத்துறைக்கு செல்வாக்கு அதிகம்.. பழங்குடி மக்களிடம் அவர்களுக்கு அதிகாரமும் அதிகமாகதான் இருந்தது. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கிறானோ இல்லையோ மயிலையும் மானையும் பாதுகாக்கிறேன் பேர்வழி என்று வனத்துறை ஆட்களுக்கு பஞ்சமிருக்காது.. வனத்துறை நண்பரொருவர் மயில் கறியை பிரியமாக உண்பதை பார்த்திருக்கிறேன். நமக்கென்ன..? வனத்துறையினர் பாடு.. அறநிலையத்துறையினர் பாடு.. என்று நினைத்துக் கொள்வேன். இப்போது வனத்துறை ப்ளுகிராஸ் போல ஆகி விட்டது. சினிமாவில் எந்த விலங்குகளையும் வதைக்கவில்லை என்ற கிளியரன்ஸ் சான்றிதழுக்கு நிறைய தொகை வாங்குவதாக கேள்வி. மேல் வரும்படி குறைந்து விட்டதால் இப்படியெல்லாம் இட்டு நிரப்பிக் கொள்கிறார்கள் போல.

வனம் ஏறி இறங்கி அடர்வுக்குள் செல்ல பாதை ஒழுங்கற்று.. நேர்த்தியற்று நெளிந்துக் கிடந்தது. தொடப்படாத காடுகள் தாவரங்களால் வழிந்துக் கிடந்தன. கனிம வேலை தொடங்கும் வரை அதற்கு அனுமதியுண்டு. ஆங்காங்கே ரெட் அலர்ட் போடப்பட்டிருந்த பாதையில் திரும்பினேன். இவை முன்னாள் பதிகளாக இருக்கலாம். நகரில் வாழ்ந்துக் கெட்ட வீடுகள் கான்கிரீட் பாழ்களாக கிடப்பது போல பதிகளின் குடியிருப்புகள் வீடாக உருவம் தாங்கி நிற்கவில்லை என்றாலும் மறைந்து போன வாழ்விடத்தின் வாசம் முற்றிலுமாக அகலவில்லை.

”ஏன் சார்.. சாவுதான் தீர்வா..? கூண்டுக்குள்ளயே அடச்சு போட்டுடுலாம்ல..” கையெழுத்து இடும் முன் ஈனஸ்வரத்தில் கேட்டேன். எனக்கு தெரியும்.. அவர்களின் பயம் சித்ராவின் மீதல்ல.. சித்ராவுக்குள் பொதிந்திருந்த காட்டின் மீதான பயம்.. சித்ராவை நீடிக்க விட்டாலோ.. குட்டிகளுடன் நெருங்கி பழக அனுமதித்தாலோ உள்ளிருக்கும் காட்டை வெளியே எடுத்து விடலாம் என்ற பயம். அதிலும் சீத்தாவுக்கு தாயைப் போன்று மூர்க்கமும் பிடிவாதமும் அதிகம். இத்தனை பெரிய வனத்தில் ஒற்றைப் புலிக் கூட இருக்கக் கூடாது என்ற முடிவின் பின்னிருப்பதும் பயம்தான். பூண்டோடு அழிக்க சொல்லும் வன்மம். புலியை பூனையாக்க வேண்டும். கோவில் யானை போல பூங்காப் புலி.

கானகம் அடர்ந்து நகர்ந்துக் கொண்டிருந்தது. பாதை அருகிக் கொண்டே வந்தது. அவர்கள் குறிப்பிட்ட பகுதி இதுதான் என உறுதி செய்துக் கொண்டேன். தோதான இடம் பார்த்து வண்டியை நிறுத்தி இன்ஜினை அணைத்தேன். பைனாக்குலரை கண்களில் பொருத்திக் கொண்டேன். இன்னும் சிதையாத காடு. மலைச்சரிவுக்கும் பள்ளத்தாக்குக்குமிடையே நீரோடை ஒன்று வளைந்து நெளிந்து ஓடியது. உயரமில்லாத மரங்கள் சரிவுகளில் செறிந்திருந்தன. சரிகையை அவிழ்த்து விட்டது போல் காட்டாறு நுரைத்துக் கொண்டோடியது. பசும் பரப்பின் மீது மேகங்கள் குவியல் குவியலாக பரவியிருந்தன. ஏற ஏற மலையின் உயரம் குறைந்துக் கொண்டே வருவதை போல மேகங்களும் கரைந்து உருமாறிக் கொண்டே இருந்தன. பாதையின் ஓரமாக பெரிய மரமொன்று வேரோடு விழுந்து கிடந்தது. நீர்வீழ்ச்சி நுரைத்து வழிந்தது. மரங்களில் ஆங்காங்கே பைகளை கட்டித் தொங்க விட்டது போல தேன்கூடுகள் தொங்கிக் கொண்டிருந்தன.

கீழே இறங்குவது என்பது முட்டாள்தனமான துணிச்சல் என்பது எனக்கும் தெரியும். ஒற்றைப்புலி மிகுந்த ஆக்ரோஷம் கொண்டிருக்கலாம். தனக்கான உணவு உறுதியான பின்.. நட்பைத் தேடிக் களைத்திருக்கும். பகை கூட அகப்படாத தனிமை குழப்பத்தை உண்டுப் பண்ணியிருக்கும். அதுவே மூர்க்கத்தை முட்டிக் கிளப்பி விடும். புகைப்படத்தில் காட்டப்பட்ட அதன் தடத்திலிருந்த ஆவேசம் அதைதான் சொன்னது. நவீனங்களின் துணையோடு அதை பிடித்து விடுவது சுலபம்தான். பிறகு.. பிறகென்ன பிறகு.. உயிரியில் பூங்காவில் புலியின் நீள அகலங்களில் மற்றுமொரு பூனை உலாவித் திரியும். ஒற்றைப்புலியின் உடனடித் தேவை துணை.. துணை மட்டுமே. உணவோ.. இணையோ.. அடுத்தக் கட்டம்தான். இனத்தோடு இனம் துணையாகும்போதுதான் தன்னுள்ளிருந்து தான் மீள இயலும்.

வாகனத்தின் பின்கதவை திறந்தேன். பாதிக்குமேல் தெளிந்திருந்த மயக்கத்தின் ஊடே என்னை விழித்துப் பார்த்தது அது. விரிந்த அதன் கண்களின் ஒளி ஒரு கணம் சித்ராவை ஞாபகப்படுத்த சிலிர்த்து அடங்கினேன். அதன் வலது பாதத்தில் லேசாக தட்டினேன். தட்டினால் எழுந்து கொள்ள வேண்டும் என்ற பழக்கத்தில் முடிந்தவரை விசும்பி எழுந்தது. என் மேலுடலை முன் தள்ளி கைகளை காற்றில் அசைத்தேன். புரிந்துக் கொண்டது. திறந்திருந்த கதவின் வழியே வெளியே பாய்ந்தது.

அதன் கால்களை பஞ்சுப்பொதிகள் போல வனம் தாங்கிக் கொள்ள இடுப்பை அசைத்து அசைத்து நகர்ந்து நகர்ந்து.. என்னை விட்டு விலகி விலகி..

“சீத்தா..“ கதவை மூடிக் கொண்டு வெடித்து அழுதேன்.

அன்றாடங்களின் ஆன்ம தரிசனம் – வண்ணதாசனின் ‘ஞாபகம்’ சிறுகதையை முன்வைத்து வெங்கடேஷ் சீனிவாசகம்

 – வெங்கடேஷ் சீனிவாசகம் – 

ஏதேனும் ஒரு ஞாபகம், இயந்திரகதியாகிப் போன அன்றாடங்களுக்கிடையில் மறைந்திருக்கும் பசுமையைத் துலக்கி நம் கண்கள் முன் கொண்டுவந்து பரவசப்படுத்தத்தான் செய்கிறது. பழகிப்போன தினசரி அனுபவங்களிலிருந்து நம்மை விலக்கி, சாதாரணங்களுக்குள் ஒளிந்திருக்கும் பரவசத்தைக் கண்டுகொள்ளும் வேறு கண்களை நமக்களித்துச் செல்கிறது.

அவ்வாறான ஞாபகங்கள், தானாக தோன்றாதபோதும், வலிந்து நானே அத்தருணங்களை உருவாக்கிக் கொண்டு அது தரும் பரவசங்களை அனுபவிப்பதுண்டு. பாலகுமாரனின் “தாயுமானவன்”-ல் பரமுவின் பகல் பொழுதுகள்; சமீபத்தில் ஜெயமோகனின் ‘இல்லக் கணவன்’ கட்டுரையில் வரும் பகல் பொழுது.

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில் படிக்கும்போது, ஒவ்வொரு விடுமுறை முடிந்து மதுரையிலிருந்து விடுதி திரும்ப விடிகாலை நான்கு அல்லது ஐந்து மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையம் இறங்கும்போதெல்லாம், அவ்வைகறையில் பேருந்து நிலையத்தின் சூழல் பரவசம் தரும். இதற்காகவே விடுமுறை இல்லாத கல்லூரி நாட்களிலும், விடிகாலை நான்கு மணிக்கு எழுந்து குளித்து கிளம்பி சைக்கிளில் பின்கேட்டில் வெளியில் வந்து பால் கம்பெனி, ஆர்.எஸ்.புரம், அர்ச்சனா தியேட்டர் வழியாக காந்திபுரம் வந்துவிடுவது. பேருந்து நிலையத்தில் பெட்டிக்கடையில் டீ குடித்துக்கொண்டே, வந்து சேரும் தொலைதூரப் பேருந்துகளிலிருந்து வந்திறங்கும் பயணிகளையும், பேருந்து வரிசைகளையும், விளக்கொளியில் கடைகளையும், அச்சூழலையும் பார்த்துக்கொண்டிருப்பது ஓர் இனிய அனுபவம்; பகலில் பார்ப்பதற்கும், வைகறையில் பார்ப்பதற்கும்தான் எத்தனை வித்தியாசம்! ஒருமுறை நண்பர் பாலா, சென்னை வந்த ஜெயமோகனை அழைத்துச் செல்ல விடிகாலை நாலு மணிக்கு எக்மோர் ஸ்டேஷன் வந்தபோது கண்ட, வைகறையின் எக்மோர் ஸ்டேஷன் அழகை பின்னர் பேசும்போது சொல்லியிருக்கிறார்.

இதேபோல் நள்ளிரவில் கேஜியில் இரண்டாம் காட்சி பார்த்துவிட்டு சைக்கிளில் விடுதி திரும்பும்போது, மரக்கடை மேம்பாலத்தில் சோடியம் விளக்கொளியில் ஆளரவமற்ற, வெற்றுத் தார்ச்சாலையில் கொஞ்சநேரம் அமர்ந்துவிட்டு, லாலி ரோட்டில் வந்து தர்சனா பேக்கரியில் டீ சாப்பிட்டு வந்த நாட்கள் அநேகம். பகல் பொழுதுகளின் பரபரப்புகள், விரைவுகள், ஒலிகளில்லாத தார்ச்சாலைகளின் அமைதிதான் எத்தனை வசீகரிக்கிறது.

வேலை செய்யும் நிறுவனங்களிலும், பண்ணை வேலை என்பதால், ஞாயிறும் வேலை இருக்கும். கூடிய மட்டில் ஞாயிறு வேலை செய்துவிட்டு, ஏதேனும் ஒரு வார நாளில் விடுமுறை எடுத்துக்கொள்வது. ஞாயிறு வேலை செய்யுமிடம் வேறு முகம் காட்டும். அது அற்புதமான முகம். அதேபோல்தான் வாரநாட்களில் ஒரு விடுமுறை தினம் வீட்டில்.

***

வண்ணதாசனின் “ஞாபகம்” சிறுகதை பல வருடங்களுக்கு முன்பு எப்போதோ, எங்கேயோ படித்தது; சரியாய் ஞாபகமில்லை; ஆனால் அந்தக் கதையும், வண்ணதாசனும் மனதில் பதிந்து போனார்கள். வண்ணதாசனுக்கு 2016-ல் விஷ்ணுபுரம் விருது கிடைத்தபோது “ஞாபகம்” பல வருடங்களுக்குப் பின் நினைவடுக்கிலிருந்து மேலெழுந்து வந்தது. சாகித்ய அகாடமி விருதும் தொடர, மிகுந்த மகிழ்ச்சியாயிருந்தது. விஷ்ணுபுரம் விருது கிடைத்ததிலிருந்தே, வண்ணதாசனின் மொத்த சிறுகதைத் தொகுப்பை தேடிக்கொண்டிருந்தேன். நண்பர் சக்தி இம்முறை இந்தியாவிலிருந்து வரும்போது, முழுத் தொகுப்பு கிடைக்கவில்லையென்றும், கிடைத்த இரண்டு சிறு தொகுப்புகள் கொண்டுவந்த்தாகவும் சொன்னார். அதிலொன்று “தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்”. ஆம், “ஞாபகம்” அதிலிருந்த சிறுகதைகள் பதினொன்றுக்குள் ஒன்று.

அலுவலகத்திலிருந்து கிளம்பி வீடு செல்லும்போது டிபன்பாக்ஸை எடுக்க மறந்து, அதை எடுத்துச் செல்ல மறுபடி பஸ் பிடித்து அலுவலகம் வருகிறாள். அந்த முன்னிரவு நேரம் காட்டும் அலுவலகம், ஆட்களில்லாத, பரபரப்பில்லாத, இரைச்சல்களில்லாத, வெறும் மேசை, நாற்காலிகளுடன் கூடிய அந்த அறை அவள் மனதை நெகிழ்த்துகிறது. வேலை நேரம் தாண்டி, வீட்டிற்குச் செல்லாமல் அலுவலகத்தில் தனது அறையில் வேலை செய்துகொண்டிருக்கும் கிளார்க்கைப் பார்த்து அவளுக்குப் பாவமாய் இருக்கிறது (“இவளுக்கு அந்த விரல்களின்மீது இரக்கமாக இருந்தது”). ”அவர் அப்படித்தாம்மா; வழக்கம்போல ஓவர் டைம் பாக்குறார். நேரங்காலம் தெரியாம வீட்ட மறந்து இங்கேயே உட்கார்ந்துருவார்,” சொல்லிவிட்டு வாட்ச்மேன் சிரிக்கிறான். அவளுக்கு சிரிப்பு வரவில்லை; ’தனக்கு டிபன்பாக்ஸ் ஞாபகம் வந்ததுபோல், அவருக்கு வீட்டின் ஞாபகம் வரவேண்டும்’ என்றுமட்டும் உடனடியாகத் தோன்றுகிறது.

***

ஒருமுறை வார இதழ் ஒன்றில் வெளியான டைரக்டர் மகேந்திரன் பேட்டியில், “உங்கள் சினிமாக்களின்/ படைப்புகளின் வழியாக நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?” என்ற கேள்விக்கு, “அன்புதான்… அன்பைத் தவிர என்னிடம் சொல்வதற்கு வேறொன்றுமில்லை…” என்று பதில் சொல்லியிருந்தார். வண்ணதாசன் கதைகளும், மனதின் அப்பாகத்தை தூண்டி நெகிழ்த்திவிட்டுத்தான் செல்கின்றன. அன்றாடங்களைக்கூட நின்று நிதானித்து இதுவரை கவனிக்காத ஒன்றை கவனிக்கச் செய்து மனதின் உட்பயணத்திற்கு உதவி செய்கின்றன. எல்லோரையும், எல்லாவற்றையும் அன்பெனும் போர்வையால் போர்த்துகின்றன.

2007-ம் வருடம், நான் புனே அருகில் “சம்பாலி” எனும் மலர்ப்பண்ணையில் வேலை செய்துகொண்டிருந்தேன். மார்ச் மாதத்தின் அமைதியான ஒரு ஞாயிற்றுக் கிழமை. மலர்ப் பண்ணையில் ஞாயிற்றுக்கிழமையும் வேலையாட்கள் பணிக்கு வருவார்கள். அலுவலர்களில் நான் ஒருவன் மட்டும்தான் ட்யூட்டி. உச்சி நண்பகல் 12 மணி தாண்டியிருந்தது. அலுவலகத்தின் இரண்டு மாடிகள் முழுதும் மிகுந்த அமைதியாயிருந்தது. கீழ்த்தளத்தின் இடதுகோடியில் இருந்த கேண்டீனில் மட்டும் மதிய உணவு சமைக்கும் இரு பெண்களின் சிறு பேச்சுக் குரல்கள். முதல் மாடியின் வெளிக்கதவு தாண்டி, நான் திறந்தவெளி பால்கனிக்கு வந்தேன். முன்கோடையின் சுட்டெரிக்கும் வெயில். பண்ணையின் வேலிக்கு அப்பால் பக்கத்து கிராம பெரியவர் மாடு மேயவிட்டிருந்தார். அலுவலகத்திலிருந்து ஸ்டோருக்கு செல்லும் பாதையின் இருபக்கமும் இருந்த நெட்டிலிங்க மரங்கள் இலைகள் அசையாமல் உயர்ந்து நின்றிருந்தன. ஸ்டோருக்கருகிலிருந்த ஜெனரேட்டர் ரூமிலிருந்து ஜெனரேட்டர் ஓடும் சத்தம் தாளம் மாறாமல் கேட்டுக் கொண்டிருந்தது. எதிர்சாரியில் தூரத்தில் குன்றின்மேல் பச்சைப் போர்வைக்கு நடுவில் வினோபா கிராமத்தின் வீடுகள் சிறியதாய் தெரிந்தன. அப்போதுதான் என் மனம் கொஞ்சம் கொஞ்சமாய் நழுவ ஆரம்பித்தது. கண்களில் நீர் நிரம்பி காட்சிகள் மசமசப்பாயின. சுற்றிலும் எல்லாமே, ஏதோ ஊமைப்படத்தின் காட்சிகள் போல துல்லிய அமைதியில் நிகழ்ந்தன. பின்னால், கேண்டீனில் வேலை செய்யும் மீனாள் கெய்க்வாட்டின் “சார், லன்ச் ரெடியாயிருச்சு” என்ற குரல்தான் தரையிறக்கியது. உடலில் மெல்லிய நடுக்கமிருந்தது.

“எங்கெங்கு காணிணும் சக்தியடா…” என்ற வரி மட்டும் உள்ளுக்குள் அன்று முழுதும் திரும்பத்திரும்ப ஓடிக்கொண்டிருந்தது.