Author: பதாகை

ஆதி கதை – சரவணன் அபி கவிதை

சரவணன் அபி

கதை சொல்லத் தொடங்குகிறேன்

இன்று போலல்ல
அது தேவதைகளும் யக்ஷிகளும்
மிருகங்களும் மனிதர்களும்
தத்தமது உலகம் வாழ்ந்த காலம்

கூடியும் ஊடியும்
களியென யக்ஷிகள்
ஒருநாள் மனிதத்தடம் பதிந்திராத
கருமலைகளின் விண்பொதிந்த
உயரங்களினின்று
மண்வந்து சேர்ந்தன

சிகரங்களின் பனிமுகில்கள்
கொடுமுடிகள் விட்டிறங்கி
கானகத்தின் இலைப்படுகை
கால்நுனி தீண்டிப்பார்க்கும்
அந்நீர்தொடர்ந்து ஆடிவந்த
தேவதைகளும் யக்ஷிகளும்
பிறிதொரு கரைநின்ற
விலங்குகளும் மனிதமும்
கண்டுகொண்டன

அதன்பின் கடந்துமறைந்த
காலங்கள்தோறும்
யாருக்கு பூசனை யாரிடும் படையல்
யாருக்கு ப்ரீதி யார் செய்வதென
கனவுகளிலும் தீரா போர்களில்
கழிந்தன தலைமுறைகள்

ஒருபோது மனிதம் வேண்டி
யக்ஷிகள் தெண்டனிடும்
மறுபோதோ
படையலும் பலியும் கொள்ளுமவை

எழுந்தும் அமிழ்ந்தும்
அவை சன்னதம்
அடங்காதாடும்தோறும்
அவற்றிலொன்றென ஆயினும்
இதுவேதும் கலவா தேவதைகளோ
கூர்பார்வையும் அரிதென சிரியுமென
பனிமூடிச்சிகரங்கள் ஏறியவாறிருந்தன

போர்களில்
படைப்பும் காதலும் ஊக்கமும்
அழிந்துகிடந்த
யக்ஷிகள் மனிதர்கள்முன்
தோன்றின தேவதைகள் ஒருநாள்
யாரும் கேட்டிரா ஒலிகளில் உன்னதம்நிறைத்து
யாரும் கண்டிரா வினைகளில் மர்மம்புதைத்து
தேவதைகள் கூறும்
வேடம் மாற்றுக
முகமூடி களைக
யக்ஷியும் நீ மானுடமும் நீவிர்
விலங்கினமும் நாம்
அனைத்தும் நாமே
வீழ்ந்தன அனைத்தும்
பணிந்தன பாதம்

கதைமுடிந்தது
எனினும்
கனவுமுடியாதென
நாமும் அறிவோம்
அவையும் அறியும்

தூயனுடன் ஒரு நேர்முகம் – நரோபா

நரோபா

உங்கள் ஊர், படிப்பு மற்றும் பணி பற்றி?

தூயன்: நான் பிறந்தது அம்மாவின் ஊரான கோயம்புத்துாரில். பிறகு சிறுவயதிலேயே அப்பா வேலை காரணமாக தன் சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு வந்துவிட்டதால் இங்கேயே நிரந்தரமாகிவிட்டோம். அக்கா திருமணமாகி கோவையில் பணிபுரிகிறார். சென்னையில் ஆய்வுக்கூட பட்டயப் படிப்பும் இளங்கலை நுண்ணுயிரியியலும் முடித்துவிட்டு தற்போது புதுகை அரசு ஈஎஸ்ஐ மருந்தகத்தில் பணிபுரிந்து வருகிறேன்..

இலக்கிய அறிமுகம் எப்போது எப்படி நேர்ந்தது?

தூயன்: என்னுடைய அப்பா ஒரு நல்ல வாசகா். அவா் மூலமாகத்தான் எனக்கு இலக்கியம் அறிமுகமானது. சிறுவயதிலேயே என்னையும் சகோதரியையும் நிறைய வாசிக்கப் பழக்கிவிட்டார். பிறகு நுாலக வாசிப்பு அமைந்ததும் எனக்கான புத்தகங்களைத் தேடிப் படிக்கத் துவங்கினேன். சென்னையிலிருக்கும்போது நண்பன் பரசுராம் என்னைத் தீவிர இலக்கியத்திற்குக் கொண்டுவந்தான்.

பாதித்த, பிடித்த தமிழ் மற்றும் வேற்று மொழி எழுத்தாளர்கள் யார் யார்?

தூயன்: பொதுவாக பிடித்த எழுத்தாளா் என்பது படைப்பாளியின் தேடலைப் பொருத்து நகா்ந்துகொண்டே செல்லும் என்பது எனது கருத்து. ஆனாலும் தனிப்பட்ட வகையில் சிலா் இருக்கவே செய்கிறார்கள். அது என்னுள் இருக்கும் வாசகனுக்கானவா்கள். ஒவ்வொருவரையுமே தங்களுடைய படைப்புலகில் உச்சத்தைத் தொடுபவா்களாகத்தான் நான் பார்க்கிறேன். அவ்வகையில் தமிழில் புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, அசோகமித்ரன், சோ. தா்மன், எஸ்.ரா போன்றவா்களைக் குறிப்பிடலாம். தமிழில் அதிகமாக என்னுள் பாதிப்பை ஏற்படுத்தியவா்கள் பிரேம் ரமேஷ், ஜெயமோகன், பா. வெங்கடேசன்… வேற்று மொழியில் தற்போது என்னை அதிகம் கவா்ந்திருப்பவா்கள் மிலன் குந்தேராவும் மரியோ வா்கஸ் லோசாவும். குந்தேராவின் கதைசொல்லும் பாணி என்னை வியக்க வைக்கிறது. அதே சமயம் லோசாவின் படைப்பில் நிகழும் அரசியல் எனக்கானப் பார்வையை அளிக்கிறது. இது போல நிறைய உள்ளது. தஸ்தயேவ்ஸகியின் ‘இடியட்’, சரமாகோவின் ‘பிலைன்ட்னஸ்’, நிகோஸ் கசஸ்ன்சாகிஸ், ‘நேம் ஆப் தி ரோஸ்’

முதல் சிறுகதை எப்போது பிரசுரமானது?

தூயன்: தினமணி கதிரில் 2012 என நினைக்கிறேன். ஆரம்பத்தில் எழுதிப் பார்த்தவைகள். தீவிர இலக்கிய வாசிப்புக்குப் பிறகு எழுதியவை கணையாழியில் பிரசுரமாகின. அதன் பின் உயிர் எழுத்து, மணல்வீடு.

சிறுகதையை எதனால் உங்கள் வெளிப்பாட்டு வடிவமாக தேர்ந்தீர்கள்? கவிதை எழுதியது உண்டா?

தூயன்: சிறுகதைக்கென்று இதுதான் வடிவம் என ஒன்றை வகைப்படுத்த முடியாதென்றே நம்புகிறேன். பல்வேறு மொழிகளில் எழுதப்படும் சிறுகதைகள் எல்லாமுமே முந்தைய வடிவங்களை உடைத்து புதியதொரு வடிவத்தை உருவாக்குகின்றன. இறுதியில் எல்லா வகைகளும் படைப்பாளிக்கும் வாசகனுக்குமான நுண்ணிய சீண்டலில்தான் முடிகிறது. இப்படிச் சொல்லலாம். “வாசகனும் படைப்பாளியும் ஒருவரையொருவா் நிரப்பிக் கொள்வதே“ சிறுகதை. இந்த நிரப்புதலில் ஏற்படும் இழப்பையும் தரிசனத்தையும் அடைவதில்தான் படைப்பாளிக்கு ஆா்வமும் சிரத்தையும் ஏற்படுகிறது.

கதை எழுத திட்டமிடுவது உண்டா? உங்கள் கதைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு களங்களை கொண்டதாக உள்ளன.

தூயன்: ஆம், உண்டு. ஏற்கனவே எழுதிய சாயல் எதிலும் இருக்கக்கூடாது என்றும் எழுதப்பட்டதில் என்னுடைய பார்வை எதுவாக இருக்கிறதென்றும் திட்டமிடுவேன். கதைகளோ களங்களோ ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டன என்று சொல்வதை முற்றிலும் மறுக்கிறேன். ஒரு கதையை படைப்பாளியினுடையப் பார்வையும் சிந்தனையும்தான் புதியதாகக் காட்டப் போகிறது. ஒரு சம்பவத்தை அப்படியே பதிவு செய்வது அல்ல சிறுகதை. மாறாக அச்சம்பவத்துடன் படைப்பாளியின் அகம் கொள்ளும் குறுக்கீடுதான் அதை கதையாக மாற்றுகிறது. இது பயிற்சியால் வருவதல்ல. ஒவ்வொருவரின் பார்வையின் நீட்சி, ஐடியாலஜி அது. படைப்பாளி தன்னுடைய சிந்தனையையோ அல்லது அனுபவத்தையோ சம்பவத்துடன் குறுக்கீடு செய்கிறான். கிட்டத்தட்ட நிகழ்தகவு போல என்று சொல்லலாம். அப்படி பார்த்தால் இன்னும் கதைகள் எழுதப்பட இருக்கின்றனதானே? அதாவது கலையில் அடங்கும் அத்துனையும் அப்படி புதிதாக உருவாகிக் கொண்டுதானிருக்கும்.

தொகுப்புக்கு முந்தைய கதைகளில் இருந்து தொகுப்புக்கு உரிய கதைகளை அடைவதில் மொழியிலும் வெளிப்பாட்டிலும் என்ன மாதிரியான மாற்றங்கள் நேர்ந்திருப்பதாக எண்ணுகிறீர்கள்?

தூயன்: நிறையவே மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. கவிதைகள் நிறைய வாசிப்பேன். எனக்கான மொழி கவிதைகளிலிருந்து கண்டடைந்ததுதான். கதைசொல்லும் பாணி என ஒவ்வொன்றும் நம்முடைய வாசிப்பின் வழியிலும் எடுத்துக் கொள்ளும் கருவின் மூலமாகவும் அம்மாற்றம் ஏற்படுவதாகச் சொல்லலாம்.

முதல் தொகுப்பிற்கு என்னவிதமான விமர்சனங்கள், கவனங்கள் கிடைத்தன?

தூயன்: தொகுப்பு வெளியாகி ஒரு வருடத்திற்குள் இலக்கியக் கூட்டத்திலும் தனிப்பட்ட வகையிலும் நிறைய விமா்சனங்கள் கிடைத்திருக்கின்றன. தமிழில் அறிமுக படைப்பாளி இப்படி வாசிக்கப்படுவதே மகிழ்ச்சிதான். பாவண்ணன் தீராநதியில் விமா்சனம் எழுதியிருந்தார். மேலும் கோணங்கி, பா.வெ, தேவிபாரதி, போன்றவா்கள் வாசித்துவிட்டு பேசியது மிக்க நம்பிக்கையை அளிக்கிறது.

ஆனால் விமா்சனம் என நான் நினைப்பது வேறு. பொதுவாக தமிழில் விமா்சன மரபு வெ.சா, சு.ரா, பிரமிள், போன்றவா்கள் ஏற்படுத்திய வீச்சில் இப்போது இல்லைதான். காரணம் இன்று கறாரான விமா்சனத்தை எழுத வருபவா்கள் ஏற்றுக் கொள்வதில்லை. நெருங்கிய நண்பனொருவனின் கவிதை தொகுப்பை முன்வைத்து விமா்சனம் எழுதினால்கூட அவருக்கு அது சங்கடத்தைத் தருவதாகத்தான் உணா்கிறார். இதனால் பெரும்பாலான தீவிர வாசிப்பாளா்கள்கூட விமா்சனத்தைக் கூற தயங்குகிறார்கள். உண்மையில் ஒரு கறாரான விமா்சனம்தான் அப்படைப்பாளிக்குத் தேவை. தனிப்பட்ட வகையில் ரியாஸ், கிருஷ்ணமூர்த்தி, மதி, ராஜன், போன்றவா்களிடமிருந்து கறாரான விமா்சனத்தைப் பெற்றிருக்கிறேன். இதொரு மரபாக உருவாக வேண்டும் என்பதுதான் என் கருத்து.

நாவல் எழுதும் எண்ணம் உண்டா? களம் என்ன?அடுத்த திட்டமென்ன?

தூயன்: ஒரு வருடமாக ஒரு நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். வெவ்வேறு களங்களில் பயணிப்பதால் அதற்கான தேவை அதிகமாக உள்ளது. பொதுவாக ஒரு படைப்பை உடனடியாக முடித்து வெளியிட வேண்டுமென்கிற அவசரத்தை நான் வைத்துக் கொள்வதில்லை. முழு திருப்தி தரும் வரை அதனோடுதான் இருப்பேன். எழுதுவதே ஒரு தீராத மயக்கம்தான் இல்லையா?

புதுக்கோட்டையின் இலக்கியச் சூழல் உங்களுடைய படைப்புலகின் மீது என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியது? சித்தன்னவாசல் இலக்கிய அமைப்பைப் பற்றி குறிப்பாக, என்னவிதமான முன்னெடுப்புகளை செய்கிறீர்கள்.

தூயன்: சிற்பம் ஓவியம், தொன்மங்கள் என் படைப்பை அதிகமாகவே பாதிக்கக்கூடியவைகள்தான். அந்த வகையில் புதுக்கோட்டை தற்போதைக்கு சற்று அதிகமாக அதை எடுததுக்கொள்வதாக நினைக்கிறேன். நான் மேலே சொன்ன கறாரான விமா்சனம் வேண்டுமென்பதற்காகத்தான் சித்தன்னவாசல் விமா்சன அமைப்பை நண்பா்கள் சோ்ந்து தொடங்கினோம். முதலில் ஜீவ கரிகாலனின் சிறுகதைத் தொகுப்பு, சபரியின் வால் மற்றும் மனுஷ்யபுத்திரனின் படைப்புலகம் என துவங்கி மெதுவாகப் பயணிக்கிறது. தொடா்ந்து புதிய படைப்புகளை வாசித்தும் அதுகுறித்தும் பேசிக்கொண்டுமிருக்கிறோம்.

மரபிலக்கிய பயிற்சி உண்டா? பயணங்கள், சினிமா பரிச்சயம் உண்டா?

தூயன்: மரபிலக்கியம் முழுமையாக நான் வாசித்தவனல்ல. ஆனால் என் அப்பா அதை முழுமையாக வாசித்திருப்பதால் அவருடனான உரையாடல்களில் அவ்வழியில் திரும்புவதுண்டு. பயணம் எனக்கு மிக விருப்பமானது. யாருக்கும் சொல்லாமல் (ஒவ்வொருவரிடமும் வேறுவேறாக) எங்காவது கிளம்பிச் சென்று படுத்துறங்கி வருவது என்னுடையப் பழக்கம். எனக்கான அடையாளத்தை தொலைத்துக் கொள்வது எனக்கு பிடிக்கிறது. கா்நாடகம் முழுவதும் பயணித்திருக்கிறேன். சிலசமயம் கோயமுத்துாரிலிருந்து கிளம்பி பாலாக்காடு , கோழிக்கோடு, காசா்கோட் என மங்களுா் சென்று பின் மீண்டும் ஹாசன் வரை தொட்டு திரும்புவதுண்டு. அதாவது ஒரு சுழற்சி போல இதைத் திட்டமிடுவேன். வெவ்வேறு நிலங்கள் என் கற்பனையுலகிற்கு புதியத் தளத்தை அமைத்துக்கொடுக்கின்றன.

பொதுவாக நான் டிவி அதிகம் பார்ப்பவனல்ல. ஆனால் உலக சினிமாக்கள் விரும்பிப் பார்ப்பேன். உலகத்தின் மிகச் சிறந்து ஐநுாறு படங்களின் கலெக்சன் என்னிடம் உள்ளது. அதிலிருந்து சிலவற்றை பார்த்துக்கொண்டிருப்பேன். நோலன், இனாரிட்டோ மிகவும் பிடித்தமானவா்கள். தற்போது ‘breaking bad’, ‘narcos’, ‘house of cards’, போன்ற சீரியஸ் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ‘breaking bad’ ஒரு பெரும் நாவலை வாசித்த அனுபவத்தைத் தருகிறது.

காமம் உங்கள் பெரும்பாலான கதைகளில் மறைபொருளாகவும் பேசுபொருளாகவும் வருகிறது. காமத்தை எழுதுவதின் சவால் அல்லது சிக்கல் என்ன?

தூயன்: மனிதனின் பிரக்ஞைக்கு அதன் அகவுலகை அறிவதுவரை எந்த சிக்கலுமில்லை. ஒருதடவை அது தன் ஆழ்பிரக்ஞையை தொடும்போதுதான் அங்கு அகம் சலனமடைகிறது. அதாவது அகத்தை, புறமானது மோதிக்கொண்டேயிருக்கும்போது சமன்குழைவு நிகழ்கிறது. மனிதனின் இருப்பு குறித்த கேள்வியை அவனுடைய அகச்சலனத்திலிருந்துதான் முதலில் தொடங்க வேண்டும் (பௌதிக இருப்பு என்பது இங்கு கேள்விக்கே இல்லை.) இச்சலனத்திலிருந்துதான் கருத்து முதல் வாதம், பொருள் முதல் வாதம், என தத்துவங்கள் உருவாகுகின்றன. இச்சலனம்தான் பிரபஞ்சத்தை வடிவமைக்கிறது. இந்தச் சமன்குழைவில்தான் தா்க்கம் பிறக்கிறது. தா்க்கம், உள்முரண்கள் இவற்றைத்தாம் நாம் அகச்சிக்கல் என்கிறோம். நான் எழுதுவது காமத்தை அல்ல, மனிதனின் அகம் சார்ந்த முரண்களை மட்டுமே. காமம் அகமுரண்களில் ஒரு கூறு, அவ்வளவுதான்.

இணையமும் சமூக ஊடகமும் படைப்பாற்றலை பாதிப்பதாக எண்ணுகிறீர்களா?

தூயன்: இன்றைய வாசிப்புலகில் இணையம் இரு வகையான பணியைச் செய்கிறது. இதை முழுவதுமாக ஏற்றுக்கொள்வதோ கைவிடுவதோ நடக்காதாவொன்று. நிறைய புத்தகங்களும் கட்டுரைகளும் உரையாடல்களும் இணையம் வந்தபின்புதான் சாத்தியமாகியிருக்கிறது. கிண்டில், இ-ரீடா் மூலம் நிறைய ஆங்கில நுால்கள் கிடைக்கின்றன. அடுத்த ஐந்தாண்டுக்குள் கிண்டிலில் மட்டுமே படைப்புகள் வெளியிடப்படலாம். ஏன், இன்றைக்கு ஜெயமோகன் இணைய தளத்தில்தானே கட்டுரைகளும் விவாதங்களும் வாசிப்பதற்கு குவிந்திருக்கிறது. அதே வேளையில் இணையமும் சமூக ஊடகமும் அளவுக்கதிகமாக படைப்பாற்றலை செயழிலக்கச் செய்துவிடக்கூடியது என்பதில் மாற்று கருத்து இல்லை. எல்லாவற்றுக்கும் மேல் படைப்பாளியின் பிரக்ஞை உலகம் ஒன்று இருக்கிறது, அதை அவன்தான் நிர்வகிக்கிறான்.

சமகால தமிழ் இலக்கியச் சூழலை பற்றி…

தூயன்: பொதுவாக நம் முந்தைய காலகட்டத்தை கவனித்தால் தலித்தியம், பெண்ணியம், நவீனத்துவம், யதார்த்தவாதம், பின்நவீனத்துவம் என ஒவ்வொரு இசங்களால் பிணைக்கப்பட்டிருந்ததன. அந்தந்தக் காலத்தில் அவை அதற்குரிய செயல்பாடுகளையும் விமா்சனங்களையும் உண்டாக்கிவந்தன. ஆனால் இப்போதுள்ள காலகட்டம் ஒருவித கேளிக்கை மனோபாவம் கொண்டது. எல்லாவற்றையும் பகடி செய்யக்கூடியது. இரண்டாயிரத்திலிருந்தே இந்த மனநிலை இங்கு மட்டுமல்ல எல்லா மொழி நாடுகளிலும் எல்லா கலைகள் மீதும் கவிந்திருக்கின்றன. இந்தக் கலவையான இசம் ஒரு வகையில் இலக்கியத்தில் மறைமுகமாக தாக்கத்தையும் ஏற்படுத்தவே செய்கிறது.

ஆனால் முன்பைவிட இப்போது நிறையவே வாசிப்பதும் விமா்சிப்பதும் நடந்துகொண்டிருக்கிறது. நிறைய படைப்புகள் வரத் துவங்கியுள்ளன. ஒருவகையில் இணையத்தின் வருகை இதை மாற்றியிருக்கிறது எனச் சொல்லலாம். சமகால படைப்புகள் குறித்து நிறைய உரையாடல்கள் நடக்கின்றன. ஆனால் நான் முன்பே சொன்னது போல கறாரான விமா்சனம் இன்னும் வீச்சாக எழவில்லை.

இரு குறுங்கதைகள் – பித்தன் பாரதி

பித்தன் பாரதி

1

அற்ப உலகம் 

 இரவு நேரங்களில் உலகம் சுழல்வது எனக்கு விநோதத்திலும் விநோதம். காற்று இழைந்துக் கொண்டிருக்கிறது வெளியே. கன்னி வயதை காற்று எட்டிவிட்டதா! இடையைச் சுழற்ற வைக்கும் தசை தரும் வலி! உள்ளபடியே பச்சையாக சொல்லி விட முடியுமா?

நான்கு திசைகளிலும் விதவிதமான மனிதர்களின் ஒலிகள். அவர்களின் கண் எது, காலெது? ஒலிகள் மட்டும் செவிகளுக்குள் ஓயாமல் விழுந்துக்  கொண்டிருக்கின்றன. கூடவே நாய்களும் கூடிக்கொண்டன. நாய்களும் மனிதர்களும் கலந்த காற்றின் ஒலி.

அறையில் விளக்கை  எரியவிட்டுக்கொண்டு இந்த ஜீவராசி. அருகே அரைலிட்டர் தண்ணீர். சம்மணமிட்டு மடித்து உட்கார்ந்துகொண்டு கூரையை தாண்டி எண்ணங்களை உலவவிட்ட படி தனக்குள்ளே பிதற்றிக்கொண்டிருக்கிறது.

வாழ்வது எப்படி? தனக்கு ஒரு நியதி, இயற்கைக்கு ஒரு நியதியா? பூனை  அல்ல, குழந்தை வீரிட்டழும் ஒலி!  நாயும் சேர்ந்து கொண்டது. இயற்கையின் அற்புத சக்தி மனிதர்களை வாழவைத்துக் கொண்டிருக்கிறதா! வருகிறோம் மடிகிறோம்.

நட்சத்திரங்களை சிமெண்ட் தளக்கூரையின் ஊடாக பார்த்துவிட முடியுமா? எந்த ஐந்து பூதங்கள் வாழவைத்து பார்க்கின்றனவோ! அவையே கட்டுப்படுத்துகின்றன. ஏன்? இரவு  என்னை மட்டும்  விட்டுவைத்துவிடுமா? நகரம் மட்டும் இருட்டாகி விட்டதா! உலகத்தின் ஒரு பாதியே இருட்டாகியிருக்கும். இரவின் நியதியா இயற்கையின் நியதியா என குழம்பிக் கொண்டிருக்கிறது.

கையூன்றி எழுந்து தாளிட்டுக் கிடக்கும் கதவினை திறக்கச் செல்லுகிறது இந்த ரெண்டு கால் விலங்கு. கண்களுக்கே புலப்படாத சிறு துாசு மாதிரி  பூமி கவலையற்று என்னைத் தாங்கி சுழன்றுக் கொண்டிருக்கிறது.

மீண்டும் அந்த பழையவொலிகள்.

கோபம் கொண்டு கட்டிவைத்து அடித்து விட வேண்டும், முடியுமா? செல்போனின் அலறல் ஒலி… அத்தனை கடலையும் சுழற்றி ஒரு நீர்த்துளியாக ஆள்காட்டி விரலின் மீது வைத்து சுழற்றி விட முடியுமா? அவ்வளவு  தோள் வலிமை கொண்ட ஜீவனும் உள்ளதா? ஆசைக் கனவு, மனதின் லட்சியம், எல்லாம் ”உரு”வாக வந்த காதலி.

நட்சத்திரங்கள் மட்டுமா! அறையின் மூலையில் குப்பையும் சுழன்று கொண்டிருக்கிறது. அறை சூழ்ந்த அமைதி. வெளியும் அப்படி இருந்து விடுமா? காலை மடித்துக்கொண்டு அமர்ந்து கொண்டது.

உயிருக்கு உயிரான காதலியே. உலக பந்த வலையில் சிக்குண்டு என்னை விட்டோர் நக்ர்வு உனக்கு ஏனோ! நாய் குரைக்கிறது. வீரிட்ட குழந்தை இப்பொழுது கும்மாளமடிக்கிறது. இரயில் நிலையத்தில் இந்நேரம் காத்துக் கொண்டிருப்பாள். பறக்க முடியாத மனித தேகம், அலைந்து திரியும் எண்ணங்கள். எனக்கொரு நியதி, உனக்கொரு நியதியா? சொல்லடி ராவெனும் முண்டையே! எனக்கொன்று உனக்கொன்றா? கூத்தியா சண்டை மாதிரி இந்த மனித ஜீவனும் அந்த ஐந்து  பூதங்களும் மல்லுக்கட்டிக்கொண்டால் என்ன நடந்து விடும்.

காலம் கடந்து கொண்டிருக்க இரயிலின் சக்கரம் எங்கு உருண்டு கொண்டிருக்கும் இந்நேரம்? எத்தனை மனிதர்களோ எத்தனை வாழ்வோ!  வெந்நீர் போட்டு வைக்காம போய்ட்டா, இந்த இரவில் அவசியம் வரணுமா, காலைல வந்தா என்ன?

இரயில் கூவும் சத்தம் நாய் குரைத்தலில் தனித்தறிய முடியவில்லை. அலறிக்கொண்டு ஒரு பெண் தண்டவாளத்திற்கு தலையை கொடுக்கிறாள். ஓலத்தோடு தலை நசுங்குகிறது.

இரயில் சத்தமிட்டு சக்கரத்தை சுழற்றுகிறது.

oOo

2

மாடிப்படிகள்

மழையோ, குளிரோ, வானிலையின் முடிவு எங்கே, தொடர்ச்சி எங்கே? ஒரு இருபது படிகள்தான் என் வாழ்வில் நான் கடக்க நிச்சயமாக விரும்புவது. கேவலம் இருபது படிகளா!. எத்தனை கால நேரங்கள்! துல்லியமாக இவ்வளவு நேரத்தில் நான் வருவேன் என்று கூறிவிட்டால் இந்தப் படிகள்தான் சுணக்கம் கொண்டுவிடுமா! கதிரவன் வருகிறது, தட்டி எழுப்பப்படுகிறேன். எட்டா துாரத்தில் கதிரவன். நேரம் ஆகிவிட்டது, அடடா, வெகுநேரம் ஆகிவிட்டது.

படிகள் மௌனமாக மடிந்து கிடக்கின்றன. இதோ நான் சென்று கொண்டிருக்கிறேன். காலை சென்றேன் மாலை சென்றேன். சற்று முன்பு இரவு உணவு வாங்கி வந்து இப்பொழுதுதான் அமர்ந்திருக்கிறேன்.

மாடிப்படி இருளுக்குள் ஐக்கியமாகி விட்டது. வெளியே குளிர். அதற்கான  போர்வை இருந்தால் நிச்சயமாக இந்த நாற்காலியை விட்டு எழுந்தோடி போர்த்து விடுவேன்.

என்னடா இது மடத்தனம் எவனாவது மாடிப்படியை போர்த்தி விடுவானா? ஒரு குரல். யாரா? இப்படிச் சொல்வது நான்தான், நானேதான்.

என்னைக் காலையில் அவை தாங்கும் என்பதால் இப்பொழுது அதனுடன் உறவாடுகின்றேனா! அல்லது இருபது படிகளைக் கெஞ்சுகிறேனா?

அது எப்படி கிடந்தால் என்ன?

எட்டிப் பார்க்கிறேன். படுக்கை விரிப்பு கசங்கி, எறும்புகள் ஊர்ந்தோடி, சுருண்டுக் கிடக்கிறது. இந்தப் படி, மாடிப்படி.

அது என்னவாக இருக்கிறது? மாடிப்படியாகவே இருக்கிறது.

உறங்கி எழுந்து நாளைக் காலை அதனை மிதித்துச் சென்றுவிடுவேனா! சந்தேகம்தான். இப்படி தோன்றினால் எப்படி? அய்யோ, மாடிப்படி, அய்யோ! அவள் துாங்கியிருப்பாள்.

நான் என்ன செய்வது? மாடிப்படியா குரைக்கிறது? தொலைதுார நாய், அந்த நாய்க்கு என்னவோ! வானம் இரவாகிப் போய் வெகு நேரமாக.

முதுகு மெத்தையோடு உறவாடச் செல்கிறது. நினைவில் மாடிப்படி உறங்கி விட்டது. மேல் மூச்சு, கீழ் மூச்சு, வானம் வெளுத்துவிட்டது. வெகு நேரம் ஆகிவிட்டது! கதிரவன் வானில் கரகோசத்தோடு வெறிபிடித்து வெப்பத்தைக் கக்குகிறது.

இலவச பிண ஊர்தியின் அலறல்? சாலையில் விரைந்து ஓடிக்கொண்டிருக்கிறது.  காய்ந்து போன தேக்கு இலைகளோடு மாடிப்படியினை  மிதித்துக் கொண்டு காலை உணவிற்கு சாலையோர கடைத்தெருவிற்கு விரைகிறான், தொண்டைமான்.

 

 

 

Colossal Death (of a tree)- A Poem by Ramesh Prem – Nakul Vāc Translation

The fallen tree on the road
the village gathers and tows-
Who knows its age?

Written with a quill
fashioned from the sharpened shaft
Of a molted feather of
A bird, that sat and fluffed
on its branch in a day of time,
That poem-
Will it know the bird’s age?

To fall as seed, shake off mud
and wake as a bud with green eyelids
between which
fell and shattered
That first drop-
Would it have known the tree’s age?

Wonder of the seed burgeoning into a forest
That dense tree-
The town gathers and tows
on the tar road.

From its long line of descendants
who have nested there for ages,
Tomorrow
If it were to come and see the vacant space
and be disappointed,
That present day heir-
With what shall it find its bearings
and make sense of its history?

Wandering all over through the bird’s memory,
Pouring its inner being into space
through its wings,
Growing self sufficient unto itself-
This tree, now a self-decorated bier
the village gathers and tows.