Author: பதாகை

ஈழக்கவிஞர் கருணாகரனின் கவிதைகளில் நிலம் சார்ந்த பார்வை- இரட்ணேஸ்வரன் சுயாந்தன்

இரட்ணேஸ்வரன் சுயாந்தன்

fb_img_1482501772782
“மிளாசி எரிந்தது பனங்கூடல்.

காற்றில் எரிந்தன பறந்த பறவைகளும் அவற்றின் கூடுகளும்”
-‘நடனம்’- கருணாகரன் கவிதைகள்.

2007 ம் ஆண்டில் வவுனியாவில் நான் சாதாரண தரம் (தரம் 10) கற்றுக்கொண்டிருக்கும்போது கருணாகரன், சேரன், ஒளவை, சோலைக்கிளி, முல்லை முஸ்ரிபா, செழியன், அனார், ஊர்வசி, மைத்திரேயி, ஆழியாள் முதலான ஈழக்கவிஞர்களின் கவிதைகளுடன் சேர்த்து ஆப்பிரிக்கக் கவிஞர் கெப்ரியல் ஓகராவின் கவிதைகளும் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்தன. இன்றிலிருந்து பத்து வருடங்களுக்கு முன்பு நான் வாசித்த கவிதைகளில் ஒன்று கருணாகரனின் “ஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்புகள்” தொகுப்பிலிருக்கும், “யாருடைய வீடு” என்ற கவிதையாகும். மறுபடியும் அந்தக் கவிதையைப் படிக்க நேர்ந்தது. அவரது சொல்-பொருள் வீச்சு விமர்சன ரீதியில் ஒரு தாக்கத்தை என்னுள் உண்டாக்கிற்று. அதன் பின்னர் கருணாகரனின் தேர்ந்தெடுத்த சில கவிதைகளை வாசித்த நேர்த்தியில் இந்தக் கட்டுரையை எழுதவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இதனை இங்கு கூறக் காரணம், ஒரு கவிஞன் எங்களெதிரே இருக்கும்போதே அவரின் படைப்புக்களை எங்களது பாடப்புத்தகத்தில் படித்துள்ளோம் என்று அக்கவிஞனுக்கு அறிவித்துவிடத்தான்.

கருணாகரனின் கவிதைகளில் இடம்பெறும் வருணனைகள், உயிர்த்தெழுதல் பற்றிய ஓர்மைகள், வெறுமை பற்றியதான தோற்றப்பாடுகள், பாசிசம் என்ற உருவழிப்பு நிலை என்பன ஈழக்கவிதைகளின் இலக்கியவுணர்வுடனான தொடர்புமுறையை (Form of Communication) மேலும் அதிகரித்துவிடச் செய்யும். இவரின் அநேக கவிதைகளில் உள்ளார்ந்த (Endogenous) அனுபவங்கள் பெருமளவில் விகாசமாகி வளர்ந்தேயுள்ளது. இந்தக் கட்டுரைக்கான தலைப்பை “கருணாகரனின் கவிதைகளிலுள்ள மனித உந்துதல்களும், வேறுசில பண்புகளும்” என்றே தலைப்பிட்டிருந்தேன். பின்னர் அவர்தம் கவிதையின் லாகவத்தைக் கட்டுரைகளில் தருவிப்பதற்காக மாற்றிவிட்டேன். ஏறத்தாழ கட்டுரையின் பொருளும் அதேகதிதான். யுத்தகால, யுத்தத்தின் பின்னரான கவிதைகள் என்ற காண்நிலையை வைத்தும் இவர்தம் கவிதைகளை ஆராயலாம். ஆனால் அது ஒரு நீளமான பகுப்பாய்வாகவும், சவால் மிகுந்ததாகவும் மாறலாம். ஆதலால் பொதுவாக கருணாகரன் கவிதையிலுள்ள நிலம் பற்றி நோக்கலாம். கவிஞர் சேரனுக்குப் பிறகு “சேர்ந்த நிலம்” பற்றிய இடத்தில் இருந்து கவிதையை நகர்த்தும் வல்லமை கருணாகரனுக்குக் கிடைத்துள்ள சிறப்பு எனலாம்.

ஒவ்வொரு நிலத்துக்குமான பண்பாட்டியைபாக்கங்களை (Acculturation) கவிதைகள் பரந்து வெளிக்கொணர்ந்து விடுகின்றன. அந்த இடத்தில்தான் கவிஞனின் ஆளுகை நிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியும் விடுகின்றது.

‘பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது நிலம்.
பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது வாழ்க்கை.’

இக்கவிதை 2012 ல் எழுதப்பட்டிருந்தது. “வன்னி மரணவெளிக்குறிப்புகள்” என்ற கவிதையில் வன்னிப் பெருநிலப்பரப்புப் பற்றிய விவரணம் எவ்வளவு பிரக்ஞைபூர்வமானது. யுத்தம் முடிந்திருந்தாலும் அங்கு நடந்த மரண அவலங்கள் பற்றி எத்தனை முறை எழுதினாலும் துயரம் மீந்துவதுதான் உறுதி. பிணங்கள் என்ற ஜடத்தையும், சாவு என்ற உணர்வுநிலை விரக்தியையும் முன்வைத்தே இக்கவிதை நகர்ந்து விடுகின்றுது. ‘உயிரற்ற பிணம், உயிருள்ள சாவு‘ அதாவது எங்கு பார்த்தாலும் துயரத்தின், துன்பத்தின் ஞாபகங்கள் கூடவே ஒட்டிக்கொண்டது வாழ்க்கை என்ற துன்பியல் (Tragedy) உணர்வுடன் மண்ணை முன்னிறுத்திக் கவிதையாற்றுகிறார்.

தோமஸ் ஹார்டி (Thomas Hardy) எனும் இங்கிலாந்துக் கவிஞரின் கவிதைகளில் வருகின்ற பாத்திரங்களின் பிரயாசை, மற்றும் சமூகச் சூழ்நிலை முதலானவற்றை நிலம்சார்ந்து கூறும் வல்லமை மிக்கவராகக் கருணாகரன் உள்ளார்.

நாங்கள் கூரைகளற்ற
வெளியில் அலைந்தோம்.
போர்ப்பிரபுக்கள் வெற்றியென்ற போதையைத் தவிர வேறொன்றையும் கணக்கிற் கொள்வதில்லை
.”

அலைந்து திரியும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் வெற்றி என்பதே இலட்சியம். ஆனால் இங்கு பாத்திரங்களின் போராட்டம் மீது சமூக இலக்கற்ற வெற்றிகள் திணிக்கப்பட்டு எதுவும் நிரந்தரமின்றி வெறுமையாக்கப்பட்டுள்ளது.

தோமஸ் ஹார்டியின் “The man he killed” என்ற கவிதை மிகவும் பிரபலமானது. இதில் தனிமனிதப் போராட்டம்/ உணர்வுந்துகை காட்டப்பட்டிருக்கும். மனங்கவரும் பழமையும், ஆர்வமும் யுத்தத்தின் நிலைப்பாடுகள் “Quaint and curious war is” என்ற வரியில் வெளிக்கொணரப்படுகின்றன. இந்தத் தன்மையில் இருந்து தான் கருணாகரனின் கவிதைகளிலுள்ள வெளிப்பாட்டுத் தன்மையைக் காணவேண்டி வரும். ஹார்டி தனிமனித உணர்வினை அகநிலை விவாதங்களுக்குள் விட்டுச் சென்றார். ஆனால் கருணாகரன் அதனை நிலம் சார்ந்த கருப்பொருளுடன் சேர்த்து அதீதமான கற்பனைகளை வரிகளில் இணைத்து கவிதையை வெளிக்கொணர்ந்துள்ளார். தான் கூறமுனையும் விடயங்களை தெளிவாக முன்னிறுத்தியுமுள்ளார்.

1. ஆற்றலுள்ளோரை அழைத்துச் சென்றன பாதைகள்.
அவர்களுக்குக் கடல் வழி திறந்தது.

2. புதைகுழிகள் எழுந்த சனங்களையும் இருந்த சனங்களையும் மூடின.

3. பிணங்களாலும் புதைகுழிகளாலும் நிறைந்தது மாத்தளன் மணற்பரப்பு.

4. தென்னாசியாவின் மிகப்பெரிய கொலைக்களம் நானிருக்கும் இந்த மலக்கரை என்று மணலில் எழுதிக்கொண்டிருந்தாள் ஒரு சிறுமி.

கடல், மணல், புதைகுழி, மலக்கரை போன்ற தொடர் சொற்கள் கவிதைகளில் இடையிட்டு வந்தாலும் தனது கவிதைகளின் ஆழ்மன ஓட்டங்களைக் கூற நெய்தல் நிலம் பற்றிய கோர்வையாக்கம் சிறப்பான வெளிப்பாடு என்றே கூறவேண்டும். வெளியிலிருந்து காணும்போது இந்தச் சொல்லாடல்கள் மிகச் சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் தொடர்புபட்ட நிலத்திலிருந்து மேற்சொன்ன விடயங்களை அனுபவித்தால் அசாதாரணமானது என்ற எண்ணமே மேலோங்கும். இதே போன்ற கருத்தினாலான கவிதைகளைக் கவிஞர் சேரனும் எழுதியிருந்தார்.

“கடவுளரும் பிசாசுகளும் இணைந்து புரிந்த இனப்படுகொலையின் ஒரு குருதித்துளி பாலைப்பட்டினத்தின் ஒதுக்குப் புறத்தில் தெறித்து வீழ்ந்தது”
(‘மீண்டும் கடலுக்கு‘ தொகுப்பு- சேரன்)

சேரனின் அநேக கவிதைகளில் பாலைநிலத்தின் அழுகை காட்டப்பட்டிருக்கும். ஆனால் அவர் நெய்தல் நில மனவோட்டத்தில் இருந்து என்றும் நீங்கியதில்லை.

கருணாகரனும் தனது கவிதைகளின் வெளியை வெவ்வேறு தளத்தினின்று விபரித்திருந்தார். இதனை எடுத்துரைப்புக் கவிதைகள் (Narrative Poems) என்றும் கூறலாம். அதாவது சம்பவத்தை நேர்முக வருணனை போல துயர வெளிகளில் இருந்து அதற்குள் மூழ்கிவிடாமல் இடம், பொருள் என்பவற்றைப் பட்டை தீட்டிக் கவிதைகளை நகர்த்துவதாகும்.

ஒரு நிலத்தின் வளங்கள் என்பவை பரந்துபட்டவை. அதில் மனிதனை விலக்காக எடுத்தால், அவனுடன் பயணிக்கும் உணர்வுகள், காதல், சம்பிரதாயம் அனைத்தையும் தவிர்த்துவிடலாம். நிலம் எனும் கவிதைப் பொருளில் மனிதன் தவிர்ந்தால் அங்கிருக்கும் ஏனைய பொருட்கள் மனிதனுக்கான பாடுபொருளாகவும், உதாரண சமிக்ஞையாகவும் இருக்கலாம் அல்லவா? (காடு, மலை, மணல், நீரூற்று முதலானவை)

“எரியும் காட்டில் பழங்களையும் விதைகளையும் சேகரித்துக் கொண்டிருக்கும் குருவியிடம் காட்டின் ஆனந்தத்தைப் பற்றி யாரோ கேட்டுக் கொண்டிருந்தனர்”
(“கருணாகரன் கவிதைகள்”)

ஆரம்பத்தில் ‘நடனம்’ என்ற கவிதையில் கருணாகரன் கூறியது போலவே தனது கவிதைகளால் தானே மிளாசி எரிகிறார்- அதில் நிறைய நிலத்தையும், கொஞ்சம் காட்டையும், வானத்தையும், இன்னும் கொஞ்சம் மனிதர்களையும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சேர்த்து பற்றி எரிய வைக்கிறார்.

கருணாகரனின் கவிதைகள் எப்போதும் அழுத்தம் திருத்தமாக ஒரு வெளியை நிறுவி வைத்திருக்கும். அதுதான் நிலம் பற்றிய பற்றுகை. அதில் அழகியலுணர்வுகளை உள்நுழைக்கும் வல்லமை கிடைக்கின்றபோது கவிஞனுக்கான அங்கீகாரம் ஏனைய மொழிக் கவிதாவாதிகளால் விரைவில் கிடைத்துவிடுகிறது. இது கருணாகரனுக்கு வாய்த்துவிட்டது. இவர்தம் கவிதைகள் மலையாளம், ஆங்கிலம், கன்னடம் ஆகிய மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன.

ஆதவனின் ‘இன்டர்வியூ’ – வெ. சுரேஷ்

வெ. சுரேஷ்

80களில் தங்கள் கல்லூரிப் பருவத்தினை கடந்தவர்களுக்கு, வேலை இல்லாத் திண்டாட்டம் ஒரு அச்சுறுத்தும் அன்றாடச் சொல். இன்று உள்ளது போல் தொழில்நுட்ப கல்லூரிகள் அன்று இல்லை. உயர்கல்வி என்றால் அது பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்தான். இவை எதுவும் தொழிற்பயிற்சி அளிக்கும் கல்வி அல்ல. அரசு வேலை வாய்ப்பும் குறைவு, தனியார் துறை வளர்ச்சியிலும் தேக்கம் என்றிருந்த அந்த நாட்களில் படித்து முடித்ததும் வேலை கிடைக்க, பரிந்துரை அவசியப்பட்டது. அப்படிப்பட்டவர்களின் அறிமுகம் இல்லாதவர்களுக்கு வேலைக்கான நேர்முகம் என்பது ஒரு சிம்மசொப்பனமாக இருந்தது. பணியிடம் சார்ந்த கல்வியும் அளிக்கப்படவில்லை, நேர்முகத்தை எதிர்கொள்வதற்கான பயிற்சியும் இல்லை, தெரிந்தவர்கள் இருந்தால்தான் வேலை கிடைக்கும் என்ற அவநம்பிக்கை- கல்விக்குப்பின் எங்கே வேலை செய்வது என்பதல்ல, என்ன வேலை கிடைக்கும் என்ற கேள்விதான் அன்று ஒவ்வொரு பட்டதாரி வாலிபன் தூக்கத்தையும் கெடுக்கும் கவலையாக இருந்தது. இந்த நாளைய “காம்பஸ்“ அல்ல, அது ஒரு வாழ்வா சாவா பிரச்னை.

80களின் ஏராளமான திரைப்படங்களில்  நேர்முக காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அந்நேர்முகங்களில் இடம்பெறும் அபத்தமான, நடைமுறை வாழ்க்கைக்குப் பொருந்தாத கேள்விகள், அவற்றைத் தொடுக்கும், அந்த அகலமான மேஜைகளுக்குப் பின் அமர்ந்திருக்கும் இறுக்கமான முகங்கள்- கோபக்கார கதாநாயகன் இந்த நாடகத்தைப் பழித்தபடி ஆத்திரத்துடன் வெளியேறும் காட்சிகளும் நிறைய உண்டு. ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘பாலைவனச் சோலை’ போன்ற பல படங்களை இங்கு நினைவு கூரலாம்.

80களின் தமிழ் இலக்கியத்திலும் வேலையில்லாத் திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டு தனக்குள் சுருங்கி வெதும்பி துயருறும் வாலிபர்கள் நிறையவே உண்டு. அவற்றில் பல கதைகளும் அந்தப் பிரச்னையால் உருவாகக்கூடிய லௌகிக விளைவுகளை பேசின. வண்ணநிலவனின், ‘கரையும் உருவங்கள்’ போன்ற சில கதைகள், அக்கால இளைஞர்களின் எதிர்வினைகளை உளவியல் ரீதியாகவும் வெளிப்படுத்தின. ஆனால் அந்த வகை  கதைகளில் தனித்து நிற்கும் ஒன்று.. ஆதவனின் “இன்டர்வியூ” என்றே பெயர்  கொண்ட ஒரு சிறுகதை

ஆதவனின் பெரும்பாலான கதைகளைப் போலவே இதுவும் ஒரே நாளில் நடக்கும் சம்பவங்களை, சொல்லப்போனால், இன்டர்வியூ என்ற ஒரே ஒரு சம்பவத்தைத்தான் விவரிக்கிறது. சுவாமிநாதன், சிறுவனாக தன் தந்தையுடன் கடைத்தெருவில் நடக்கும்போது, அவர் அவனுக்கு ஐஸ்க்ரீம் வேண்டுமா என்று கேட்கிறார். நான் என்ன குழந்தையா என்கிறான். அவர் சிரிக்கிறார். அப்போது அடிக்கிறது அலாரம். ஆம், அது ஒரு கனவு. அவனுக்கு இப்போது அந்தத் தந்தை இல்லை. மேலும், அன்றைய தினம் ஒரு இன்டர்வியூவும் இருக்கிறது. ஒரு வேலையில்லா இளைஞன் தன் வீட்டில் செய்யக்கூடிய அன்றாட வேலைகள் அனைத்தையும் செய்து முடித்துவிட்டு அப்பாவின் நண்பர் ஒருவரிடம் நன்னடத்தைச் சான்றிதழ் ஒன்றையும் வாங்கிக் கொண்டு அவரது காரிலேயே இன்டர்வியூ நடக்கும் கம்பெனிக்குச் சென்று நேர்முகத்தில் பங்கேற்றபின் திரும்ப வரும் வழியில் ஒரு சினிமாவை பாதி பார்த்துவிட்டு வீட்டுக்கு வருவதற்காக பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருப்பதில் முடிகிறது கதை.

கதை இரண்டு தளங்களில் பயணிக்கிறது. ஒன்று சுவாமிநாதனின் நேர்முகம், அங்கே அவன் காணும் மற்ற  இளைஞர்கள், நேர்முக அறைக்குள் நுழையும் முன்பு நடைபெறும் கலாட்டா பேச்சுக்கள், நேர்முகத் தேர்வு ஏற்படுத்தும் இறுக்கமான உணர்வு, அது முடிந்த பின்னர் ஏற்படும் ஒரு விடுதலை உணர்வு என்று ஒரு தளம். கூடவே சுவாமிநாதனின் எண்ணவோட்டங்களின் மூலமாக அவனது நிலையையும், வீட்டில் அவன்,  அவன் அம்மா மற்றும் அக்காவுடனான உறவின் தன்மையையும், அண்மையில் மறைந்த அவன் தந்தையைப் பற்றியும் வரும் சித்திரங்கள் இந்தக் கதையை தனித்த சிறப்பு உடையதாக ஆக்குகின்றன. உண்மையில், கதையில் ஒரு பாத்திரமாக சுவாமிநாதனின் தந்தை வருவதில்லை. ஆனால், சுவாமிநாதனது எண்ணங்களின் மூலமாக அவரது இருப்பு அல்லது இழப்பு அவர் இல்லாமலும் இருப்பதை நாம் உணரும் வகையில் மிக நுணுக்கமாகச் சொல்லப்படுகிறது.

வீட்டில் இரண்டு பெண்களுக்கிடையே இருக்கும் சுவாமிநாதன் இன்னொரு ஆணான தன் தந்தையின் இன்மையை உணருதல், அவர் அவனது பாதுகாப்பான உலகாக இருத்தல் ஆகியவை கதையின் துவக்கத்தில் வரும் அந்தக் கனவின் மூலமாக காட்டப்படுகிறது. பின் அவன் தந்தையின் நண்பர், அவர் தலையில் அவன் காணும் வழுக்கையின் துவக்கம், பேச்சுக்கிடையே ஏதோ ஒரு ராகத்தை முணுமுணுப்பது ஆகியவற்றிலெல்லாம், அவரில் தன் தந்தையை சுவாமிநாதன் அடையாளம் காண்பது அதிகம் சொல்லாமலேயே குறிப்பாக உணர்த்தப்படுகிறது. அதோடு, இரு பெண்களுக்கிடையே வாழும் இளம் சுவாமிநாதன் மேல்  அவர்களின் உடல் ஏற்படுத்தும் இனம்புரியாத ஈர்ப்பும் கவர்ச்சியும், அதற்காக அவன் கொள்ளும் குற்ற உணர்வும் கூட, கோடிட்டுக் காட்டப்படுகிறது.

பின் சுவாமிநாதனின் இன்டர்வியூ அவன் தாய் மற்றும் தமக்கையால் எதிர்கொள்ளப்படும் விதம், இருவருக்குமே சுவாமிநாதன் இந்த இன்டர்வியூவில் தேறி வேலைக்குப் போய்விட வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. ஆனால் கூடவே,  அது தங்கள் உலகை, அவனுடனான உறவின் தன்மையை, பாதிக்கும் விதத்தை பற்றிய கவலையும் இருக்கிறது. சுவாமிநாதனுக்கே கூட, அவனது அக்காவின் உழைப்பில்  வாழ்வதிலிருந்தும் அம்மாவின் சங்கடப்படுத்தும் பரிவிலிருந்தும்  விடுபட ஆவல். ஆனால், தன்னுடைய பகல் பொழுதுகள் வேற்று மனிதர்களுக்குச் சொந்தமாகி தன்னுடைய விடுதலையை இழப்பது குறித்தும் அச்சம்.

அவன் அக்காவிற்கு, சாமிநாதனின் இன்டர்வியூவின்  மூலம் அவனுக்கு அமையும் வேலை, அவளை இவர்களின் இந்த உலகத்திலிருந்து விடுவித்து அவளுக்கான உலகத்தை (அவளை  ஒரு கறுப்புக் கண்ணாடி இளைஞனோடு சுவாமிநாதன் சாலையில் பார்க்கிறான்) அடைய ஆவல். அதே சமயம், அவளது சம்பாத்தியத்தில் வாழும் அவளது அம்மா மற்றும் சுவாமிநாதன் மீதான ஒரு மேலாதிக்கத்தை இழப்பதிலும் உள்ள இழப்புணர்வு இருப்பதும் குறிப்பாக உணர்த்தப்படுகிறது.

சுவாமிநாதனது அம்மாவுக்கும் அவன் அந்த இன்டர்வியூவில் வெற்றி பெற வேண்டுமென்ற தவிப்பு  இருக்கிறது. அதன் மூலம் அவனில் அவன் அப்பாவைக் காணவும், கர்வத்துடன் மீண்டும் வெளியே செல்லவும் ஆசை. ஆனால், கூடவே அவனுடைய அக்காவைப் போலவே அவனும் அவளுடைய உலகத்தை விட்டு நழுவி வெளியே சென்று விடுவானோ என்ற அச்சமும் இருக்கிறது.

இதையெல்லாம் யோசித்துக் கொண்டு சுவாமிநாதன் பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருக்கிறான். சினிமாவுக்கும் நிஜ வாழ்க்கைக்குமுள்ள வேறுபாட்டையும் நினைத்து மருகுகிறான். இதே சினிமாவென்றால், அவனது அப்பா எப்படியோ இடைவேளைக்குப் பின் வந்துவிடுவார். இந்த இன்டர்வியூ அலுவலகத்தின் ரிசப்ஷன் அழகி ஒரு காரில் வந்து அவனை ஏற்றிக் கொள்வாள். அந்த கம்பெனியே அவளது அப்பாவுடையதாக இருக்கும். சினிமாவைப் போல வாழ்க்கை இருந்தால் கஷ்டமே இல்லை. ஆனால், இது வாழ்க்கை. அதனால் சுவாமிநாதன் பேருந்துக்காகக் காத்துக் கொண்டேயிருக்கிறான்.

திதி

 நித்ய சைதன்யா

குளிர்ந்தசைந்த
நதியின் நீரள்ளி
ஓம குண்டத்தின் முன்
கண்கள் கலங்கி
மாப்பிண்டங்களில்
மலர்களிட்டு
கால்கள் சகதியில் கூச
இடுப்பளவு நீரில்
காசி காசி என புலம்பி
மார்புநுால் களைந்து
முங்கி எழ
கரைந்தமிழ்கின்றன
முன்னோர்களின்
பசித்துக்களைத்த முகங்கள்

 

 

 

வலி

 மேகனா சுரேஷ்

“ம்மா… முடியலையே அம்மா…’’  தன் இரு தொடைகளையும் கரங்களால் இழுத்துப் பிடித்திருந்த தேவி வலியில் கதறிக் கொண்டிருந்தாள்.

“தோ… சும்மா கத்திகிட்டே இருக்காம முக்குமா… தலை முன்னாடி தெரியுது. கத்திக்கிட்டே இருந்தா மட்டும் உனக்கு பதிலா உன் புருசனா உன் குழந்தைய முக்கி பெக்க முடியும்?’’

இடுப்பை இரண்டு துண்டாய்ப் போடும் வலியை அனுபவித்துக் கொண்டிருந்த தேவி, கீழ் உதட்டை பற்களால் கவ்விப் பிடித்துக் கொண்டு, “ஐயோ முடியலையே…’’ என அதற்கும் அலறினாள்.

“நீ எல்லாம் சரிப்பட மாட்ட. இரு இரு இப்பவே பெரிய நர்ஸ் அம்மாகிட்ட சொல்லி 108 க்கு போன் போட சொல்றேன். உங்களுக்கு எல்லாம் பெரிய ஆஸ்பத்திரிதான் லாயக்கு. நாங்க எல்லாம் பொறுமையா சொன்னா நீங்க கேக்க மாட்டீங்க… அங்க போயி பட்டாதான் உனக்கு புத்தி வரும்.’’

தன் கையுறையை அந்த வெள்ளைச் சீலைப் பெண்மணி அகற்றப் போக, “அக்கா… நீங்க சொல்றது எல்லாம் கேக்குறேன்க்கா… தயவு செஞ்சி பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பிடாதீங்க அக்கா…’’

அந்தப் பெண்ணிடம் கெஞ்சிக் கொண்டிருந்த தேவிக்கு, போன பிரசவத்தின்போது பெரிய ஆஸ்பத்திரியில் அனுபவித்த வேதனைகள் கண் முன் வந்து போனது.

அந்த நினைவுகள் தந்த வேகத்தில், மூச்சை இழுத்துப் பிடித்து, தன் வயிற்றை அழுத்திக் கொண்டிருந்த பாரத்தை ஒரே தள்ளாக வெளியே தள்ளினாள். ஒரு நிமிடம்தான். ஒரே நிமிடம்தான்.

பத்து மாத பாரத்தை வெளியே இழுத்து எடுத்திருந்தாள் அந்த வெள்ளைச் சீலைக்காரி. அத்துணை நேரம் இடுப்பைப் பிளந்த வலி இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிருந்தது.

இடுப்பின் கீழே விரிக்கப்பட்டிருந்த துணி முழுவதும் நனைந்து போய் உடலுக்குள் குளிரைப் பரப்பிக் கொண்டிருக்க, தேவகானமாய் குழந்தையின் அழுகுரல்.

தடுப்புக்குப் பின்பக்கத்தில் இருந்து அம்மாவின் மெல்லிய குரல், “என்ன புள்ள அக்கா..’’ எனக் கேட்பது, பிரசவ கட்டிலில் படுத்திருந்த தேவிக்கு தெளிவாக கேட்டது.

“இந்தாமா மொதோ போயி பெத்து பிளச்சவளுக்கு காபி தண்ணி வாங்கி ஆத்திக் கொண்டாமா… இன்னும் சத்தை எடுக்கணும். அதுக்குள்ள வந்துடுவீங்க என்ன புள்ள யாரு புள்ளன்னு கேட்டுகிட்டு…’’

அடுத்த பத்து நிமிடத்தில் வெதுவெதுப்பாய் தொண்டைக் குழியில் காபி இறங்க, ஒட்ட வைத்த நெற்றிப் பொட்டை உரித்து எடுப்பதைப் போல, அந்த வெள்ளைச் சீலைக்காரி தேவியின் உடலில் இருந்து சத்தையை பிரித்து எடுத்து இருந்தாள்.

வெள்ளை நிற கவுன் அணிந்திருந்த செவிலி அவள் இருந்த அறைக்குள் எட்டிப் பார்த்து, “ என்ன குழந்தை சிந்தாமணி…. குழந்தை பிறந்த நேரம், வெயிட் எல்லாம் சொல்லு… நான் ரெகார்ட் எழுதணும். அப்படியே அந்தப் பொண்ணோட புருஷனை ஒரு ஐ.டி ப்ரூப் எடுத்துட்டு நம்ம ரூமுக்கு வர சொல்லு… நாளைக்கு பர்த் சர்டிபிகேட் கொடுக்கும்போது இது என் இனிசியல் இல்ல, இது எங்க வீட்டு நம்பர் இல்லைன்னு ஆயிரத்தெட்டு கரக்சன் சொல்லுவாங்க.’’

பேசி முடித்த செவிலி மீண்டும் அங்கிருந்து விலகிச் செல்ல, தேவி தன் அருகில் இருந்த வெள்ளைச் சீலைக்காரியிடம், “அக்கா… என்ன பிள்ளக்கா?’’ என ஆவலாய்க் கேட்டாள்.

குழந்தையின் உடலைச் சுற்றி வெள்ளை துணி வைத்து துடைத்துக் கொண்டிருந்த அவள், “மொதோ குழந்தை என்ன..?’’ என தேவியிடமே கேள்வியை திருப்பினாள்.

“பொட்டப் பிள்ளைக்கா…’’ தேவி சற்றே அயர்ச்சியாய் பதில் அளித்தாள். குழந்தையைத் துடைத்து முடித்தவள், பதில் ஒன்றும் பேசாமல் குழந்தையை தேவியின் அருகே வைத்து விட்டு, “பாலைக் கொடு… அப்போதான் தீட்டு போறது குறையும்..’’ என்றுவிட்டு அந்த அறையில் இருந்து விலகி நடந்தாள். சற்றே ஒருக்களித்துப் படுத்த தேவி, குழந்தையை மூடி இருந்த துணியை சற்றே விளக்கி பார்த்தாள்.

அவளையும் அறியாமல் அவள் விழிகள் நீரால் நிரம்பின.

பொது அறைக்கு மாற்றிய பிறகும், சொந்த பந்தம் என்று யாரும் பெரிதாய் பார்க்க வரவில்லை. “முதல்ல குழந்தைக்கு துணி வாங்கிப் போடுங்க..’’ என செவிலிப் பெண் பத்து முறை கத்தி விட்டு போன பின் முதல் குழந்தை நித்தியாவின் பழைய சிறிய உடை ஒன்றை, அம்மா அணிவித்திருந்தாள்.

பசி வயிற்றைக் கிள்ளியது. “பொட்டப்பிள்ள தானா…. எதை தின்னா என்ன? வீட்ல இருந்து பழைய சோறு நீரை வடிச்சி எடுத்தாந்து இருக்கேன். குடி. உம் புருஷன் பொண்ணுன்னு சொன்னதுதான், மூஞ்ச திருப்பிட்டு போயிட்டான். ஆட்டோ ஓட்ற துரைக்கு அம்பானின்னு நினைப்பு. இங்க வேற பிரசவம் பாத்தவங்களுக்கு காசு தரணுமாம். நான் வூட்டு வேலை செய்யிற தாவுல போயி அட்வான்ஸ் வாங்கிட்டு வந்துடுறேன். அப்படியே பழைய துணி கிடச்சாக்கூட நல்லா இருக்கும். நித்திய ஒரு கண்ணு பாத்துக்கோ.’’

அம்மா கிளம்பிச் சென்றுவிட்டாள். குழந்தை பாலுக்காய் சிணுங்கியது. அதற்கு பாலைத் தூக்கி தர எழும்போதே, நித்தியா மூக்கை உறிஞ்சிக் கொண்டு வாசலுக்கு ஓடினாள்.

“ஏய் நித்யா…. இங்க வா….’’

“வரலை போ’’

“தங்கச்சி பாப்பா பாரு வாடி…’’

“எனக்கு தங்கச்சி பாப்பா வேண்டாம். தம்பி பாப்பா தான் வேணும்..’’

“ஏய் நித்யா உள்ள வா..’’

‘மாட்டேன் போ. தம்பி பொறந்தாதான் எனக்கு எல்லாம் வாங்கி தருவானாம். தங்கச்சி எனக்கு உள்ளதையும் பிடுங்கிக்குமாம்…. எனக்கு தங்கச்சி பாப்பா வேண்டாம். அதை நீ யாருக்காச்சும் வித்துடு போ’’

“நித்யா..’’ தேவி ஒரே நிமிடத்தில் உடைத்து அழுதாள். உயிரே இற்று வெளியே விழுந்து விடும் போல ஏங்கி ஏங்கி அழுதாள்.

“இந்தாமா இப்படி அழுதினா ரத்தப்போக்கு அதிகமாயிடும்… வாயை மூடுமா..’’ அதட்டிய வெள்ளைச் சீலைக்காரியின் வார்த்தைகள் தேவியின் செவிகளை தீண்டவே இல்லை.

சதைகளைக் கிழித்துப் போடும் வலியை விட, உணர்வுகளை கிழித்துப் போடும் வார்த்தைகள் தரும் வலிக்கு திடம் அதிகம் போல, தேவி தேம்பி தேம்பி அழுதுக் கொண்டே இருந்தாள்.

அம்மாவின் அழுகை நித்தியாவை தாக்க, அருகில் ஓடி வந்து தானும் அழத் தொடங்கினாள்.

 

 

 

கோபித்துக் கொண்டவர்கள்

கலைச்செல்வி

உணவகம் ஒன்று தங்கள் தெருவில் ஆரம்பிக்கப்படவிருப்பது அந்த தெருவாசிகளுக்கு தாமதமாகதான் தெரிந்தது. அந்த இடத்தின் உரிமையாளர் அதற்கு காரணமாக இருக்கலாம். பொதுத்துறை நிறுவனமொன்றின் கொழுத்த சம்பளத்தில் பணியிலிருந்து ஓய்வுப் பெற்றிருந்தார் அவர். பிரதான தெருவிலிருந்து விலகும் இந்த சிறியத் தெருவின் இரண்டாவது மனை அவருடையது. பதினைந்து அடியில் சந்துப் போன்ற தெருவென்றாலும் பேருந்து நிறுத்தத்திற்கு வெகு அருகாமை சந்து என்பதால் மாத சம்பளக்காரர்கள்.. நடுத்தர வர்க்கத்தை தாண்டிக் கொண்டிருப்பவர்கள்.. தம்பதி சமேதரமாக வேலைக்கு செல்பவர்கள் சற்று பெரிய வீடுகளாகவே கட்டி குடியேறியிருந்தனர்.

சமுதாயம் கூறும் நல்லுலகின் அத்தனைக் கூறுகளும் அந்த மனையின் உரிமையாளரிடம் இருந்தது. அரசாங்க ஓய்வூதியம்.. இரண்டே வாரிசுகள் என்றாலும் ஆண் வாரிசுகள்.. ஆண் வாரிசுகள் என்றாலும் நல்ல வேலையில் வெளி மாநிலங்களில் செட்டிலானவர்கள்.. வாரிசுகள் இரண்டே என்றாலும் ஆண்மகவுகளை மட்டுமே பெற்றவர்கள்.. தவிர வேறொரு விசாலமானத் தெருவில் சொந்தமாக இரண்டு வீடுகள்.. அடங்கி நடக்கும் மனைவி என சிடுக்குகளற்ற வாழ்க்கை அவருக்கிருந்தது. ஆனாலும் சிடுசிடுத்த சுபாவி.. பணத்தின் மீது தீராப்பற்று கொண்டிருந்தார். கிட்டத்தட்ட தெருவாசிகள் எல்லோரிடமுமே அவருக்கு தனிப்பட்ட வகையில் ஏதோ பிணக்கிருந்ததில் “முசுடு“ என பொது குறியீட்டுப் பெயருக்குள் அடையாளப்படுத்தப்பட்டார்.

“முசுடு ப்ளாட்டுல ஹோட்டல் வரப்போவுதாமே..“ கிட்டங்கியின் கட்டுமானத்திற்குள் உணவகத்தை பொருத்த முடியாமல் தெரு ஆச்சர்யம் கொண்டது. இதற்கு முன் இங்கு தனியார் அரிசி கிட்டங்கி இருந்தது. தடுப்புகளற்ற பெரிய அறையும் சிறியதொரு அலுவலக அறையுமாக தானே கட்டமைத்துக் கொண்டிருந்தார் அந்த கிட்டங்கி உரிமையாளர். முசுடுக்கும் அவருக்கும் ஏற்பட்ட தகராறில் காலி செய்யும் நாளன்று “புல்டோசர் கொண்டாந்து கட்டடத்த இடிக்காம வுட மாட்டேன்.. பாத்துக்க..” சத்தமாக அவர் கறுவியதை தெருவே பார்த்தது.

இரண்டே நாட்கள் இடைவெளியில் அட்வான்ஸ் கை மாறி விட்டதாக கேள்விப்பட்டதில் தெருவே ஆற்றாமைக் கொண்டது. “அவவன் எழைச்சு எழைச்சு வீட்ட கட்டிட்டு ஆள் வராம திண்டாடுறான்.. முசுடுக்கு நல்ல யோகம்தான்..“ முசுடு அதே ஏரியாவிலேயே ஸ்கூட்டிசகிதம் சுற்றிக் கொண்டிருக்கும். முதல் தேதியன்றே வாடகை வசூலிக்க கடைக்குள் புகுந்து விடும். அலுவலக அறையோ கிட்டங்கி அறையோ வாடகைக்காரர் எங்கேயிருந்தால் சொந்த வீடு போல கைகளை பின்னால் கட்டிக் கொண்டு நுழைந்து விடும் தயக்கமேயின்றி.

”ஹோட்டல் வருதுன்னு கேள்விப்பட்டேன் தம்பி..” வலிய பேசினார் எதிர் வீட்டுக்காரர். அந்த இளைஞன்தான் அங்கு வருவதும் போவதுமாக இருந்தான். கோதுமை வண்ணமும் களையான முகமுமாக இயல்பானப் பொருத்தம். பெர்முடாசும் கையில்லா பனியனும் அவனை நவீனமாக்கியது. தனது பைக்கில் சாய்ந்தவாறே அலைபேசியில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தவன் அவரின் குரல் கேட்டதும் அலைபேசியை துண்டித்து விட்டு விரைசலாக வந்தான். ”ஆமாங்க சார்.. கார்டன் ரெஸ்டாரெண்ட் ஆரம்பிக்கலாமின்னு இருக்கோம்..” என்றான் பவ்யமும் பணிவுமாக.

மேலும் ஆச்சர்யமாக போனது எதிர் வீட்டுக்காரருக்கு. தெருவே கையகலம்தான். வீதிதான் வீட்டு வாசல். கோலங்கள் கூட வீதியைதான் நிறைத்திருக்கும். கார்டனுக்கு எங்கேப் போவது…?

”கார்டன்னா.. செடிக்கொடி மரமெல்லாம் வேணுமே தம்பி..” என்றார் அவர்.

”பின்னால எடம் இருக்கு சார்..” என்றான் அதே பணிவுடன். அவன் சொல்லிதான் பெரியச் செடிகளைக் கூட அப்படியே ரெடிமேடாக விலைக்கு வாங்கி வைக்கலாம் என்று தெரிய வந்தது அவருக்கு. ஆச்சர்யமான அவரின் கண்களைப் பார்த்தான் ”பெரிய மரமெல்லாம் கூட ரெடிமேடா வைக்கலாம் சார்..” பவ்யம் குறையவில்லை. கட்டுமானத்தை இரண்டாக தடுத்து முன்பகுதியை நாற்பது பேர் சாப்பிடத் தகுந்தளவில் மாற்றப் போவதாகச் சொன்னான். அலுவலக அறையை குழந்தைகளுக்கான விளையாட்டு அறைக்கு ஓதுக்கப் போவதாகவும் சொன்னான். பின்பக்கம் கிச்சனும் கார்டனும் கொண்ட மல்ட்டி குசைன் ரெஸ்டாரெண்ட் என்ற அவனின் திட்டம் தெரு முழுக்கப் பரவியது.

முசுடு இந்த மனையை நாலைந்து வருடங்களுக்கு முன்புதான் வாங்கியிருந்தது. வாங்கிய சுருக்கில் சுற்றிலும் கம்பி வேலியிட்டு தடுத்தது. முதல் மனைக்காரர் பிரதானச் சாலையை நோக்கி தனது கட்டுமானத்தை திருப்பி விட்டதில் பல கடைகளுக்கு உரிமையாளரானது முசுடை உசுப்பி விட, கட்டுமானத்தில் காசைக் கொட்டாமல் சம்பாதிக்கும் ஆசை வந்தது அதற்கு. முதலில் வாடகைக்கு வந்தது குப்பை ஏஜெண்ட் ஒருவர். குப்பைகள் மூட்டையாய் வந்து இறங்குவதும் இரண்டொரு நாளில் டாடா ஏசில் காணாமல் போவதுமாக துரிதகதி வியாபாரம். இது முசுடின் கண்களில் உறுத்தலாய் விழ ஒரேயடியாய் வாடகையை உயர்த்திக் கேட்டதில் முசுடை அடிக்காதக் குறையாக காலி செய்து விட்டுப் போனார் அவர். அவருக்கு பிறகு வந்த மரக்கடைக்காரரும் “சாமர்த்தியம் இருக்கறவன் சம்பாதிக்கிறான்னா இவனுக்கு ஏன் வேவுது..?” என்ற கத்தலோடு நகர்ந்து விட அதற்கு பிறகுதான் அரிசி கிட்டங்கி வந்தது.

உணவகம் குறித்தப் பேச்சுகள் மலைபாம்பாய் மொத்தத் தெருவுக்கும் நீண்டுக் கிடந்தன. தொடர்பில்லாத ஏதேதோ கடைகள் வருவதை விட டீசண்டான ஹோட்டல் ஒன்று தெருவிற்குள் வருவதும் தெரு வளர்ச்சிப் பெறுவது குறித்தும் எல்லோருக்குமே நிறைவுதான். அதை விட மிக அருகில் ஒரு உணவகத்தை காண்பது எல்லோருக்குமே புதிய அனுபவமாக இருந்தது.

”நான்வெஜ் ஹோட்டலாம்.. தெருவுக்குள்ள கொண்டாந்து போடுறாங்க.. தெருவே நாறப்போவுது..” சைவர்களிடம் செல்ல எதிர்ப்பு இருந்தது.

”அட்ரஸ் கண்டுப்பிடிக்கறதுக்கு ஒரு நல்ல லேண்ட் மார்க்குதான்..” வயசாளிகளுக்கு பெருமையாக இருந்தது.

உணவக வேலைகள் தெருவாசிகளின் கவனத்தை ஒன்றுக் கூட்டியிருந்தன. அகன்று நீண்டிருந்த பெரிய அறை குறுக்கே சுவர் எழுப்பப்பட்டு சமையலறையாக பிரிக்கப்பட்டது. உயர்ந்திருந்த மேற்கூரைகள் குளிரூட்டுவதற்கு வசதியாக பொய்கூரைகளாக இறக்கப்பட்டன. அலுவலக அறை சிறுவர்களுக்கான விளையாட்டு அறையாக மாற்றப்பட்டது. முன்பக்க சுவர்.. இரும்பாலான கேட் என பழையவைகள் தகர்க்கப்பட ரோலிங் ஷட்டர்.. கண்ணாடிக் கதவு..என புதியவைகள் உருவாயின. பெர்முடாஸ்.. டீ ஷர்ட் சசிதம் காலையிலேயே வந்து விடுவான் அந்த இளைஞன். அங்குமிங்குமான நடமாட்டத்திலிருக்கும் தெருவாசிகளை அவன் ஏறெடுப்பதுமில்லை. பேச்சுக் கொடுப்பவர் யாராகயிருந்தாலும் யார்.. எவர்.. என்ற விசாரிப்புகளின்றி பணிவோடு பதில் சொல்லி விட்டு நகர்ந்து விடுவான். “நாகரீகம் தெரிஞ்சப் பையன்..“ என்றார் எதிர்வீட்டுக்காரர். மீதமுள்ளோருக்கும் ஆமோதிப்பாகதான் இருந்தது.

மூன்றாவது மனையும் ஆறாவது மனையும் தவிர்த்து தெரு நெடுக வீடுகள் கட்டப்பட்டு விட்டன. ஆறாவது மனை சற்றே உள்ளடக்கமாக இருந்தது. போகிறபோக்கில் குப்பைகளை துாக்கி வீச மூன்றாவது மனையே வசதியாக இருந்ததில் அது தெருவாசிகளின் குப்பைத் தொட்டியாகியிருந்தது. வாடகைக்காரருக்கு இடைஞ்சலாகி விடக் கூடாது என்பதால் முசுடுக்கு இதில் பிடித்தமிருப்பதில்லை சிறுவர்கள் என்றால் குப்பையோடு திருப்பியனுப்பி விடும். ஆண்களெனில் தனது எதிர்ப்பை கத்தி வெளிப்படுத்தும். பெண்கள் என்றால் செய்வதறியாது விழித்து விட்டு கைகள் நடுங்க நியாயம் கேட்க அங்குமிங்கும் ஓடும். “நீ யாருய்யா கேக்கறது..,? ஒன் எடமாய்யா இது..?” கூச்சல்கள் முசுடைக் கட்டுப்படுத்துவதில்லை. குப்பையோடு வரும் தெருவாசிகளுக்கு முசுடின் நடமாட்டம் தார்மீகமான தயக்கத்தை உண்டாக்குவதில் முசுடின் மீதான அவர்களின் கோபம் தீவிரப்பட்டுப் போனது.

உணவக வேலைகள் வேகமெடுக்கத் தொடங்கின.

“மல்ட்டி குசைன் ரெஸ்ட்டாரெண்டாம்.. சென்ரலைஸ்டு ஏசியாம்..” தகவல்கள் எதிர் வீட்டுக்காரர் மூலமாக கசிந்தது.

மார்போனைட் தரை ஒட்டப்பட்டது. துாண்கள் அலங்காரப்படுத்தப்பட்டன. ஷட்டர்களுக்கான பெயிண்ட்டுகள் தெருவின் வாசத்தை மாற்றிக் கொண்டிருந்தன. தானும் தனது அக்காவும் கூட்டு உரிமையாளர்கள் என்று அந்த இளைஞன் கூறியிருந்தான். இப்போது அக்காவும் அவளது கணவரும் காரில் வரத் தொடங்கியிருந்தனர். பணியாட்களின் எண்ணிக்கைக் கூடிப் போயிருந்தது. அலங்கார விளக்குகள், வித விதமான ஓவியங்கள்.. நீரூற்று புத்தர்.. நீண்ட நெடிய சுழற்நாற்காலிகள்.. உயிர் பூங்கொத்துக்களுக்கான இட ஏற்பாடுகள் என உள்ளலங்காரத்தினை வெளிச்சமிட்டுக் கொண்டிருந்த கண்ணாடிக் கதவை பார்த்துக் கொண்டே கடந்தனர் தெருவாசிகள். கார்பெண்டிங்.. பெயிண்டிங்.. எலக்டிரிகல் என வேகப்படுத்தப்பட்ட வேலைகள் குப்பைகளாக காலி மனையை நிரப்பத் தொடங்கியதில் முசுடின் மீது அவர்களுக்கு கோபம் கூடிப் போனது. தருணம் பார்த்து காத்திருந்தனர்.

”என்ன சார்.. எதிர்ல ஜரூரா வேல ஆயிட்டுருக்கு போலருக்கு..” குடிக்கும் தண்ணீருக்கு கூட அவர்கள் அக்கம்பக்கத்தாரை அணுகாமலிருப்பது பேசுவதற்கு தயக்கத்தை உண்டாக்க எதிர் வீட்டுக்காரரே தகவல் கடத்தியானார். “பொம்பளைக்கு பொம்பளை பேசினாதான் என்ன..? ஆம்பளைங்களுக்குதான் புத்தியில்ல.. ஊர அனுசரிக்கணும்னு பொம்பள எடுத்துச் சொல்லுமா.. அத வுட்டுட்டு இதும் பிர்ர்ன்னு திரியுது..“  வீட்டுப் பெண்கள் அந்த இளைஞனின் அக்காவை குறி்த்து முணுமுணுக்க ஆரம்பித்தனர். துடைப்பத்திற்கு கூட யாரையும் எதிர்பார்க்காதது  குறையாகத் தோன்றியது தெருவாசிகளுக்கு “வௌக்குமாத்த கூட ஒரு மனுசி வீட்லேர்ந்து மூட்ட கட்டி கொண்டாருது பாரேன்..“ பொருமலாக விழுந்தது வார்த்தைகள்.

இரவு நேரத்தில் பிரைமர் அடித்து தெருவோரங்களில் காய வைக்கப்பட்டிருந்த மரங்களை நடைப்பயிற்சிக்கு கிளம்பிய தெருவாசியொருவர் பூட்ஸ் காலால் எத்தினார். ”என்னாத்த லேண்ட் மார்க்கு..  தெருவ நாஸ்தி பண்றானுங்க..”

எல்லோருக்குமே இந்த எண்ணம் வந்தது..

தெருவோரம் கிடந்த ஒயர் ஒன்றில் தெருவாசியொருவரின் வெற்றுக்கால் பட்டதில் சுறுசுறுவென மின்சாரம் ஏறியதாக சொல்லி காலை உதறி விட்டு கத்தி தள்ளி விட்டார் அவர். ”பணங்காசு இருந்தா அவுனுங்களோட.. உசுரு போச்சுன்னா தருவானுங்களாமா..?”” அவரின் கூச்சலில் எதிர்வீட்டுக்காரர் வெளியே ஓடி வந்தார். இரவு மணி ஒன்பதிருக்கும். “இன்னும் கனெக்ஷனே குடுக்கல சார்..“ மாறி மாறி சொல்லிக் கொண்டே மன்னிப்பும் கேட்டுக் கொண்டிருந்தார் எலக்டீரிஷியன். ”எங்க ஒங்க ஓனரு.. அவரு வந்து சொல்ல மாட்டாராமா..?” எகத்தாளமாகக் கேட்டது தெரு.

”அந்த தம்பி இப்பதான் சாப்ட போயிருக்குது.. அதான் நடந்தது தப்புன்னுட்டாங்களே.. வுடுங்க சார்..” என்றார் கதவை இழைத்துக் கொண்டிருந்த ஒருவர்.

”அவர் போன் நம்பர வாங்குங்க சார்.. நான் பேசறன்..” தெருவாசிகள் கூடினர்.

எதிர் வீட்டுக்காரர் அந்த இளைஞனின் அலைபேசி எண்ணை வாங்கிப் பேசினார். தெருவே அவர் முகத்தை ஏறிட்டது. “விஷயத்தைக் கேள்விப்பட்டு அந்தப் பையன் அய்யய்யோன்னு பதறீடுச்சு… இப்ப வந்துடும்..” என்றார் பொது தகவலாக. அரை மணி நேரம் காத்திருந்து விட்டு நகரத் தொடங்கியது கூட்டம். மறுநாள் அந்த இளைஞன் வழக்கம்போல ஆறு மணிக்கு ஆஜராகியிருந்தான். தானே அணுகுவான் என காத்திருந்து விட்டு பிறகு நேராக அவனிடம் சென்றார் எதிர் வீட்டுக்காரர். “அய்யய்யோ..“ என்றான் மறுபடியும் புதிதாக கேட்பதுப் போல.

“சப்போஸ் ஷாக் அடிச்சு எதாவது பெருசா ஆயிருந்துச்சான்னா என்னாவறது தம்பி..?”

”ஆமா சார்.. ஆமா சார்..” என்றான்.

“ரெசிடென்ஷியல் ஏரியாவுல ஹோட்டல் நடத்துறீங்க.. கொஞ்சம் பாத்துக்கோங்கப்பா.. எல்லாரும் சொந்த வீட்டு ஆளுங்க.. வியாபாரத்துக்கு வியாபாரம்.. கார்டியாலிட்டுக்கு கார்டியாலிட்டி..” .

“ஆமா சார்..” என்றான் ஆமோதிப்பாக. பிறகு “அட்வைஸ்க்கு தேங்க்ஸ் சார்..” என்றான். சட்டென்று அவன் மீதான நெருடல் மறைந்து நெகிழ்வாக இருந்தது எதிர் வீட்டுக்காரருக்கு. “என் தம்பிக்கின்னா சொல்ல மாட்டனா.. இதுக்குப் போயீ என்னாத்துக்குப்பா தேங்க்ஸ் அதுஇதுங்கிற..” என்றார். உரையாடல் தொடர்ந்ததில் வரும் ஞாயிறன்று உணவகம் திறக்க இருப்பதாக சொன்னான்.

வியாழனன்று அதிகாலையிலேயே ஹோமம் நடந்ததற்கான அடையாளங்கள் இருந்ததை தெரு கவனிக்கத் தவறவில்லை. எதிர்வீட்டுக்காரர் ஹோமத்துக்கு தமக்கும் அழைப்பில்லை என சத்தியம் பண்ண வேண்டியிருந்தது.

“திமுரு புடிச்சவங்க போலருக்கு..” மெதுவாக மூட்டம் தெரு முழுக்கப் பரவியது..

”ஏயப்பா.. ஏசி மிஷினே ஏழெட்டு வந்து எறங்கியிருக்கு..”

”கிச்சன் சாமான் மட்டும் மூணு குட்டியானைல்ல வந்துச்சு..”

”ஆட்டமெல்லாம் பிரமாதந்தான்.. பிசினஸ் பிக்கப் ஆவுணுமில்ல..”

”பிளாக்க வொயிட் ஆக்கறதுக்கு பண்றாங்களோ..?”

”பின்ன.. சின்ன தெருவுக்குள்ள இவ்ளோ மொதலீடு பண்றதுக்கு முட்டாப்பசங்களாக்கும்..” வேடிக்கை பார்ப்பதற்கென்றே நடமாடிய தெருவாசிகளும் உண்டு. சன்னலை ஏற்றி காருக்குள்ளிருந்து கள்ளப்பார்வை பார்ப்போரும் உண்டு.

”பெரிய சுத்த சீலன் மாதிரி நம்ப குப்பக் கொட்டும்போது சண்டைக்கு நிக்குமில்ல அந்த முசுடு.. இப்ப என்ன பண்ணும்னு பாக்கலாம்.. சாப்பாடு..போக்குவரத்துன்னு இவனுங்க காலி ப்ளாட்டுல கொட்டுட்டும்.. பேசிக்கலாம்..” கருவினார்கள். முசுடு எங்கோ மகன் வீட்டுக்கு சென்றிருப்பதாகக் கேள்விப்பட்டதில் கத்தவியலாத வன்மம் கூடிப் போனது எல்லோருக்கும்.

கிட்டத்தட்ட ஹோட்டல் முழுமையடைந்திருந்ததில் உறவோ.. நட்போ பார்க்க வரத் தொடங்கினர். அவர்களின் கார்கள் பெரியதாக இருந்தது. தெருவாசிகள் நீண்ட நெடிய ஹாரன்களை வேண்டுமென்றே மிக அதிகமாக அடித்தனர். மறுப்பேச்சின்றி அவர்கள் கார்களை நகர்த்திக் கொண்டாலும் ஆக்சிலேட்டரை உசுப்பிக் கொண்டு சீறினர். கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்ய வந்த பெண்கள் இருவர் தெருவாசியொருவரின் வீட்டு வாசலில் அமரப் போக அவர் கத்தித் தீர்த்து விட்டார். வேண்டுமென்றே அதிக டெசிபலில் ஒலித்த அவரின் கத்தல் உணவகத்தின் வாசலில் நின்றபடியே ஏதோ பேசிக் கொண்டிருந்த அந்த இளைஞனையும் அவன் தமக்கையையும் அணுகவில்லை.

உணவகமும் அதன் வேலைகளும் தெருவோரின் கூர்ந்த அவதானிப்புக்குள் வந்ததில் எதிர் வீட்டுக்காரர் பிரதிநிதியானார். ”இன்னிய நியூஸ் பேப்பர்ல உங்க ஹோட்டல் விளம்பர நோட்டிஸ் வச்சு அனுப்பியிருந்தீங்க போல.. தென்றல்நகர்ல என் .ஃபிரண்ட் ஒத்தன் இருக்கான்.. என்னடா.. உங்க ஏரியாவுல புதுசா ஹோட்டல் வரப்போவுதாமேன்னு போன் பண்ணுனான் தம்பி..”

”ஆமா சார்.. ஆமா சார்.. உங்களுக்கும் வந்துச்சில்ல சார்..” என்றான் அந்த இளைஞன்.

”ம்ம்.. அதோடதா நம்ம தெரு ஆளுங்களுக்கு ஒரு வாய் வார்த்த தகவல் சொல்லீட்டீங்கன்னா திருப்தியா போயிடும் தம்பி..”

”ஆமா சார்.. ஆமா சார்..” அதற்குள் யாரோ வந்து விட ”மிரர் ஃபிக்ஸ் பண்ண ஆள் வந்துருக்காரு சார்..” விடைப்பெற்றுக் கொண்டான். அன்று மட்டுமல்ல அடுத்த நாள் கூட அவன் யார் வீட்டுக்கும் செல்லவில்லை. இரவு பத்து மணிக்கு மேல் செம்மண் லோடு வந்திறங்கியது. இறக்கி வைக்கப்பட்ட ஆளுயுரச் செடிகள் தெருவை அடைத்திருந்தன.  ”தெருன்னு நெனச்சீங்களா.. ஒங்க வீடுன்னு நெனச்சீங்களா..? செரி.. போனா போவுதுன்னு பெரும்போக்கா இருந்தோம்னா ரொம்பதான் பண்றீங்க..” ஒருவர் ஆரம்பித்ததில் கதவுகள் மளமளவென திறந்து மற்றவர்களும் சேர்ந்துக் கொண்டனர்.

”நாலு பேர நம்பி செய்ற தொழிலா.. இல்ல நாலு செவத்துக்குள்ள கமுக்கமா நடக்கற வியாபாரமா.. வாடகைக்கு வாரவங்களுக்கே இவ்ளோ இருந்தா சொந்த வீட்டு ஆளுங்களுக்கு எவ்ளோ இருக்கும்…?”

இரவு வேலைக்கு வந்திருப்பவர்கள் ஒன்றும் புரியாமல் விழித்து பிறகு மளமளவென்று செடிகளையும் மண்ணையும் பின்புறத்திற்கு கடத்தினர்.

“அழுத்தக்கார ஆளுங்க.. ஹோட்டலுக்கு வர்றவங்க வண்டி.வாசின்னு தெருவுல கொண்டாந்து நிறுத்தட்டும்.. அப்றமில்ல இருக்கு அவனுங்களுக்கு..”

”குப்பைய கொட்டி நாறடிக்கிறான்னு பெட்டிசன் தட்டிட மாட்டேன்..?” என்றார் ஒருவர்.

”வீம்பு பண்ணுன ஆட்டோக்காரன் ஒருத்தன் துண்டக்காணாம்.. துணியக் காணாம்னு ஓடுல..?” வீரமாகப் பேசினார் ஒருவர்.

மளமளத்த வேலைகள் சனிக்கிழமைக்கு கொண்டு வந்து நிறுத்தின. அலங்கார பலுான்கள் வாயிலில் வரவேற்பு வளையமாக கட்டப்பட்டன. குலைத் தள்ளிய வாழை மரங்கள் வந்திறங்கின. தோரணங்கள் கட்டப்பட்டன. ஷார்ட்லீ ஓபன்ஸ் என்ற வாக்கியம் கவனமாக நீக்கப்பட்டு “ஓபன்“ என்ற வார்த்தை நேர்த்தியாக தொங்க விடப்பட்டது. அன்றிரவே காலிமனை வாகனங்களால் நிரம்பியிருந்தது.  “நடக்கட்டும்.. நடக்கட்டும்..“ கவனித்தப்படியே இருந்தனர் தெருவாசிகள்.

ஞாயிற்றுக்கிழமை பொழுது விடியும்போதே எல்லோரும் மங்கல இசைக் கேட்டனர். அல்லது மங்கல இசைக் கேட்டதால் விடிவதற்குள் விழித்துக் கொண்டனர். எதிர்பார்த்தப்படி ஆட்களுக்கு குறைவில்லை. காலிமனையில் நிரம்பியிருந்த கார்களில் ஆறேழு காவல் துறைக்கு சொந்தமானவையாக இருந்தன. வண்டிவாசிகளின் நடமாட்டத்தால் தெருவாசிகள் ஓரமாக நடந்துச் சென்று ஆறாவது மனையில் குப்பைகளை வீசினர். உண்டு முடித்த காலி இலைகள் மூன்றாவது மனையில் விழுவதும் நாய்கள் அதை குறி வைத்து ஓடுவதுமாக தெரு அந்த ஞாயிறை உள் வாங்கியிருந்தது. காய்கறி.. மட்டன் கறி என பையும் கையுமாக சென்ற தெருவாசிகள் வண்டியை நெளித்தும் ஒடித்துமாக ஓட்டிச் சென்று அமைதியாக வீடு திரும்பினர்.