Author: பதாகை

வண்ணதாசன் – உன்னதத்திற்கான தத்தளிப்பு

ஸ்ரீதர் நாராயணன்

தூரிகையின் மயிர்க்கால்களை
அடையாளப்படுத்தியபடி
சுழன்றோடும் வண்ணத்தீற்றல்கள்.
 
கோடுகள் தேய்ந்து மறைய மறைய
உதயமாகிறது வரையப்பெறாத ஓவியம்.

vannadasan

வண்ணதாசனை நேரில் ஒருமுறை சந்தித்திருக்கிறேன்.  சென்னையில் போஸ்டல் காலனியில் அவர் குடியிருந்தபோது, ஒரு புத்தகத்தை தரவேண்டி அவர் வீட்டுக்குப் போக வேண்டியிருந்தது. அப்போது மின்சாரத்தடையோ என்னவோ.  அவர் வீட்டு வாசலில்தான் நின்றிருந்தார். அந்தியிருள் சூழ்ந்த, மரங்களடர்ந்த வாசல்புறமும், அதை நிறைத்துக் கொண்டாற்போல் அவர் நின்றிருந்த தோரணையும் நினைவில் இருக்கிறது. ‘என்ன படிக்கிறீங்க’ என்பது போல் அவர் கேட்க, சிறிய உரையாடல்தான் நிகழ்ந்தது.

ஆனால் அவருடைய படைப்புலகில் அவருடன் நிகழ்ந்த உரையாடல்கள் அதிகம். கூரிய அவதானிப்புகளுடனான, பாசாங்கற்ற, ஆத்மார்த்தமான குரலுடன் அவர் உரையாடிக் கொண்டிருக்கிறார்.   ”கிளை அசைவதை, கிளையில் சாய்ந்த என் உடல் அமிழ்ந்து அமிழ்ந்து அசைவதில் உணர்ந்தேன்.  காற்றை இப்படியும் அறியலாம் போல‘ என்பதற்கேற்ப நம் புற உலகை அதன் நுண்ணிய கூறுகளுடன் உணர, அவர் எழுத்தில் அமிழ்ந்து அசைகிற வாய்ப்பை நமக்கு தருகிறார்.  வெற்றுக்கூச்சலற்ற, படாடோபமற்ற ஆழ்ந்த சொற்தீற்றல்களில் அவற்றின் தொனிப்பொருள்கள் நம்மை சூழ்ந்து கொள்கின்றன,

தருணங்களின் அழகியல்:

வண்ணதாசன் உணர்வு நிலையில் ஓர் ஓவியர்.  அதனால் அவருடைய படைப்புகளில் நிகழும் தருணங்களை சித்திரமாக நிறுத்த முடிகிறது.  ஆனால் அவர் ஓவியர் மட்டுமல்லாது அருமையான ஒரு கதைசொல்லி.  நம் கண்முன்னே நிகழும் எளிய, தொடர்பற்ற தருணங்களை, சித்திரங்களை இணைத்து மகத்தானதொரு கதையை உருவாக்கிவிட முடிகிறது.  அதற்கும் மேல் அவர் ஒரு கவிஞர். “இந்த வரியை விட, அழகாக இருக்கிறது எழுதாத வரியின் நிழல்,” என்று அளவாக எடுத்துரைக்கும் சொற்களால், வாசகனை பிறிதொரு சொற்களற்ற பெருவெளிக்கு இட்டுச்சென்று விடுகிறார்.

அதற்கும் மேல் அவர் நேசத்தை நாடும் மனிதர். அவருடைய சமூக வலைத்தள எழுத்துகளில் எப்போதும், இருகரம் நீட்டி உள்ளிழுக்கும் கவசங்களற்ற இயல்பான கனிவு தெரிகிறது. எந்த வடிவத்தில் எழுதினாலும், காந்த முள்ளெனச் சுற்றி சுற்றி சராசரித்தனத்திலிருந்து மீண்டுயர தத்தளிக்கும் ஒரு மனதை சுட்டிக் காட்டுகிறது.  அடர்ந்து பெருகும் இருள்வெளியை துழாவிச் செல்கிறபோதும் ஒரு கீற்று ஒளியை விட்டுச் செல்கிறது.   .

தாமிரபரணியின் பாசிபடர்ந்த படிக்கட்டுகளில் காயத்தைக் கழுவப் போனால் வெட்டியவரின் முகத்தில் இருந்த அனாதரவு நிலைமைதான் தெரிகிறது அவருக்கு.

“குறுவாள்களும் கழுவிக்கொள்ளும்படியாக
அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது
அந்நியமற்ற நதி”

என்கிறார்.

கொடுவாளை மறைத்து வைத்திருப்போரிடமும் கவசங்கள் கரைந்து போய் இயல்பான அன்பு வெளிப்படும் என்று கை நீட்டிக் காத்திருக்கும் மனது வண்ணதாசனுக்கு வாய்த்திருக்கிறது. “நீங்கள் என்னைத் தவிர்க்கும்போது, என்னிடம் இருக்கும்படி, நான் விடாமல் பாதுகாக்கும் குறைந்தபட்ச உண்மைகளையும் தவிர்க்கிறீர்கள் என்பதுதான் என் கவலை” என்று விசனப்படுகிறார்.

கிருகிரு மிட்டாய்க்காரனைப் போலவே தோற்றத்தில் இருக்கும் கோமுவின் அப்பா, வருமானமற்ற நாட்களில் சாப்பாட்டிற்காக, கோமு வீட்டு வேலை செய்யும் வீட்டிற்கு, அவளைத் தேடி வருகிறார். போகும்போது சொல்லிக்கொண்டு போவதும் கிடையாது.  ஆனாலும் கோமுவிற்கு தேரோட்டம் பார்க்கும் சாக்கிலாவது அப்பா வரமாட்டாரா என்றிருக்கிறது. தேரைப் பார்க்கக்கூட கூட்டிப் போக வேண்டாம். வந்து சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்தால் போதும். இந்த சில வரிகளில் நமக்கு கோமுவின் வாழ்வுச்சூழல் முற்றிலும் விவரிக்கப்பட்டுவிடுகிறது.   வீட்டு எஜமானியான, சீக்கில் கிடக்கும் பெரிய ஆச்சிகூட  ‘நீயும் சின்னப் பொண்ணுதான, போ.  போய் தேர்ப் பார்த்துட்டு வா’ என்றாலும், கோமு கிளம்புவதில்லை.  தொழுவில் நிற்கும் கன்றுக்குட்டியை இழுத்துக் கட்டிப்போட, அது அவள் புறங்கையை நக்கிக் கொடுப்பது போல, கோமுவும் ஆச்சியின் இளைத்த கால்களை அமுக்கிக் கொண்டு அங்கேயே இருக்கிறாள்.

முன்பு தொலைக்காட்சியில் வெளிவந்த சிறுகதைத் தொடர் ஒன்றில் ஆண்டன் செகாவின் கதையொன்றின் தழுவலைப் பார்த்திருக்கிறேன். தன்னுடைய தாத்தாவால், கிராமத்திலிருந்து நகரத்திற்கு, வீட்டு வேலைக்கென கொண்டு விடப்படுகிறான் சிறுவன் ஒருவன்.  ஊரே பண்டிகை கொண்டாடும்போது அவன் மட்டும் தனித்து உணர்கிறான்.  எப்படியும் தாத்தா வந்து தன்னை மீண்டும் அம்மாவிடம் அழைத்துக் கொண்டு போய்விடுவார் என நம்பிக்கையில், தாத்தாவிற்கு ஒரு கடிதம் எழுதுகிறான்.  அந்தக் கடிதத்தில் விலாசமாக ‘நதிக்கு அருகில் இருக்கிறது, எங்கள் கிராமம்’ என எழுதி தபால் பெட்டியில் போட்டுவிட்டு, உவகையுடன் நடந்து செல்வான்.  அங்கே தேரோட்டம் தொடங்குகிறது.  கோமுவிற்கோ தேர் நிலையில் வந்து நின்றுவிடுகிறது.

கிருஷ்ணன் வைத்த வீடு சிறுகதையிலோ, ‘ஒண்ணு போலப் போயீரலாம். ஒண்ணு போல வர முடியுமா’ என்றுக் கேட்கும் ஐஸ் விற்கிற முருகனின் அப்பா மூச்சுமுட்டக் குடித்திருக்கிறார்.  அத்தனை குடித்தனங்களுக்கு மத்தியில் ஒரு குடும்பத்தின் மொத்த தற்கொலையை அவரவர் எதிர்கொள்ளும் விதம்.  ஆங்காங்கே செருகி வைத்திருப்பது போன்ற  இழவு வீட்டு வர்ணனைகள் ஒன்றின் பின் ஒன்றாக நம்மை அந்த சூழலில் இழுத்துக் கொண்டு போகிறது.

எழுத்தாளன் யத்தனிப்பதும், வாசகனைச் சென்று சேரும் சித்திரமும் இயைந்து போகும்போது அதன் அழகியல் துலக்கம் பெறுகிறது.

கலையின் முழுமை:

ஒரு வகைமையை பிடித்திருக்கிறது என வரித்துக் கொண்டுவிட்டால், மற்றவையெல்லம் பிடிக்காமல் போய்விடுகிறது.  ரேஸ் குதிரைகளென அபிமானங்களை விகசித்துப் போற்றுவதற்கு இலக்கிய வாசிப்பு எதற்கு? ஒரு கலையின் முழுமை அதை அங்கீகரிக்கும் நிலைகளைக் காட்டிலும், அது தன்னகத்தே கொண்டிருக்கும் மதிப்பில் அல்லவா இருக்கிறது.

வண்ணதாசனின் சிறுகதைகள் ஒரு செறிந்த பூஞ்சோலை போலிருக்கின்றன.  கதையின் மையம் ஒரு பூச்செடி என்றால் அதைச் சுற்றிலும் பல பூச்செடிகளை அவர் நட்டுக் கொண்டே போகிறார்.  சுற்றிவளைத்து போவதால் மையப்புலன் அமுங்கி விடுகிறது என்கிறார்கள்.  அவ்வளவு துரிதமாக எங்குதான் போவார்களோ.  ஒரு கரண்டி இனிப்பு பாயசமும், அதற்கு நிகராக ஒரு கரண்டி துவர்ப்பு பச்சடியும், ஒரு வரிசை வெஞ்சனமும் வைத்து பிறகு சாதத்தை விளம்புவதுதானே விருந்து.

பள்ளிக்கூடத்தில் மேஜிக் நிகழ்ச்சி நடத்த வாய்ப்புக் கோரும் முழுக்கைச் சட்டையணிந்தவரை பெயர் சொல்லிக் கூட அறிமுகப்படுத்துவதில்லை.  அவருடைய உதவியாளரை ‘மிஸ்டர். கதிரேசன்’ என விளிப்பதன் மூலமே அவரைப் பற்றி சொல்லியாகி விடுகிறது. காமராஜருடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை எல்லாம் சங்கரநாராயணனிடம் காட்டி, அவர் வேலை செய்யும் கல்லூரியில் நிகழ்ச்சி நடத்த வாய்ப்பு கேட்டு, சன்மானம் பெறுவது பற்றியெல்லாம் பேசுகிறார்.  சங்கரநாராயணனுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை என்கிறபோது ‘இந்தக் காலனி சிறுவர்களைக் கூட்டிட்டு வாங்க. ஒரு நிகழ்ச்சி நடத்திக் காட்டுகிறேன்’ என்கிறார். அதுவும் நிகழாது என்கிறபோது, கிடைக்கும் சாப்பாட்டையும் துறந்து கிளம்பிப் போகிறார்.  உன்னதமான கலையின் முழுமை அடைவது, அதை நிகழ்த்தக் கிடைக்கும் வாய்ப்புகள்தோறும் நிகழ்த்தும் விழைவு கொள்வது.

பெயர் குறிப்பிடாத முழுக்கை சட்டைக்காரர் நமக்கு அந்நியமானவரில்லை. அசோகமித்திரனின் புலிக்கலைஞனில் வரும் காதரின் நீட்சி எனலாம்.  சத்யஜித் ரே-யின் சிறந்த சிறுகதையான ‘படோல் பாபு‘வில் வரும் நாடகக் கலைஞனும் அவர்தான்.  ‘டாயர் ஃபைட்’ காதர், படோல் பாபு, முழுக்கை சட்டையணிந்தவர் எல்லோரும் தங்கள் கலையை நிகழ்த்தும் தருணத்தை தவற விடுவதேயில்லை. அதில் அவர்களுக்கு அந்தரங்கமானதொரு பெருமை இருந்து கொண்டேயிருக்கிறது. சந்திரசேகர ராவ் மற்றும் சங்கரநாராயணன் போன்றோர் தங்களுடைய லௌகீக அளவுகோல்களுடன் அவர்களை அங்கீகரிக்கவியலாத போதாமையைப் பற்றி அவர்களுக்கு கவலையிருப்பதில்லை.  நிரம்பியும் நிரம்பாமலும் ஆனால் நிரம்பியபடிக்கு நிகழ்கிறது எல்லாம் வண்ணதாசனின் படைப்புலகில்

“ஆனாலும் காற்று
அப்பால் செல்லும்
மூடிய கதவுகளுக்கு
அப்பாலும்”

தொடரும் கண்ணிகள்:

வண்ணதாசன் நீண்ட நாவலோ புதினமோ எழுதியதில்லை.  ‘சின்னு முதல் சின்னு வரை’, ஒரு நெடுங்கதை.  ஆனால் அவர் படைப்புலகம் தொடர்ச்சியான கண்ணிகளால் கட்டப்பட்டு இருக்கிறது.  கவிதையுலகில் இருந்து கதைகளுக்கும், மீண்டும் கதைகளில் இருந்து கவிதைகளுக்கும் மாறி மாறி நம்மை இட்டுச் செல்கிறார்.  ஒரு கவிதையில், சுற்றியிருக்கும் அத்தனை பேருக்கு மத்தியில்,  தனிமையில், அரங்கில் தொடங்கும் ஒளிக்காக காத்திருக்கும் அனுபவத்தைப் பற்றி எழுதியிருப்பார். அக்கவிதையிலிருந்து வெளியே வந்தால், தனுஷ்கோடி அழகர் ‘கிருஷ்ணன் வைத்த வீடு‘ எப்படியிருக்கிறது என்று கேட்டுக் கொண்டு வந்துவிடுகிறான். அந்த அரங்கில் அவர் காத்திருந்தது இந்தக் கதையின் விரிவுக்காக எனத் தோன்றும்.  அடுத்து அழகரின் பார்வையில் புத்தகக் கடைக்காரர், சலூன் கடைகள், ஜூஸ் கடைக்காரர் என விவரிப்பு தொடர்கிறது.  இப்போது அழகர் கதைசொல்லிக்கு நெருக்கமானவனாகி விட்டான்.  இன்னும் சற்று யோசித்துப் பார்த்தால், அந்த வீட்டைப் பற்றிய Rhetorical கேள்விகளை எடுத்துக் கொடுக்கவே தனுஷ்கோடி அழகர் கதைக்குள் வந்திருக்கிறான் எனப் புரியும்.

சரசுவின் உலகம் அதன் அத்தனை தனித்துவங்களோடும், அவளுடைய கணவனின் உலகோடு பின்னிப் பிணைந்திருக்கிறது.  அவனுடைய உத்தியோகக் கவலைகள், லௌகீக பிரச்னைகள், அவனுடைய உறக்க போதாமை என அனைத்திலும், அவள் ஆதுரத்துடன் கைகொடுக்க காத்திருக்கிறாள்.  ஒரு புதிய போர்வையால் தன் அன்புலகிற்குள் அவனை பிணைத்துவிடக் காத்திருக்கிறாள்.  அவன் அகாலத்தில் அழைத்து வரும் விருந்தாடிக்கு உபசரணை செய்யும்போது, சிறிய இடறல். அவன் திரும்பிப் பார்க்கிற பார்வையோ, அடித்தால்கூட அவ்வளவு வலித்திருக்காது.  தானே தலையை வாரிக் கொள்கிறேன் என கலைத்துக் கொள்ளும் சிறுவனும், அவனைப் பிடித்து இழுத்து தலையை சரிசெய்ய முயலும் அம்மாவும் போலொரு இணை.  சரசுவின் நுண்ணியல்புகளை, அவள் கணவன் உணர்ந்தேத்தான் அப்படியொரு பாராமுகமாக இருக்கிறானோ எனத் தோன்றுகிறது. அவளுடைய அன்புக்கான மறுமொழியை அவனுக்கு சொல்லத் தெரிந்தது அப்படித்தான்.  ஒதுக்கியபடி ஓடுகிறவன், தனது வாக்குமூலமாக பிறிதொரு இடத்தில்  ‘பலிச்சோறு‘ எனக் கவிதையாக எழுதி வைக்கிறான்.

எஞ்சிய என் கருத்த கசடுகளின்
ரகசிய அம்பு எய்யப்படக்
காத்திருக்கிற உன் உந்திச்சுழி.

 அப்பழுக்கற்று இருப்பதாகச்
சொல்கிறார்கள்
வீட்டுக்கு வெளியில்
நான் விடுகின்ற மூச்சு.

எளிய காட்சிகளின் அற்புதத்தை எடுத்துரைக்கும் கவிதைகளிடையே ‘நீலத்தடாகம்‘ இரு வேறு தீவிர முனைகளிடையே எட்டிப் பாய்கிறது.  ‘ஒட்டுதல்‘ கதையில் வரும் மஹேஸ்வரி, தன் நெற்றியில் பொட்டு வைக்கும் செஞ்சுலட்சுமியின் மீது சாய்ந்து கொள்ளும் ஆறுதலை நினைவுப்படுத்துகிறது. உலகின் எல்லா கசப்புகளையும் செஞ்சுலட்சுமியின் கணவரின் சிரிப்புப் போல இலகுப்படுத்திவிட்டால் நல்லதுதானே.  உறிஞ்சப்படும் கசடுகளை எல்லாம் கழுவிப் போக கண்ணீருக்கா பஞ்சம்.

அலையலையெனப் பெருகும் நுணுக்கம்:

எங்கள் வீட்டருகே ஒரு கார்னிவெல் ஒன்றுக்கு சென்றிருந்தேன்.  மரமறுக்கும் மின்சார ரம்பம் கொண்டு ஒரு கலைஞர், நின்று கொண்டிருந்த மரத்தை சிற்பமாக செதுக்கிக் கொண்டிருந்தார்.  கழுகு இறகுகள் சூடிக் கொண்டிருக்கும், போர்த்தழும்புகள் கொண்ட, தூரப் பார்வை பார்த்துக் கொண்டிருக்கும், மரபான செவ்விந்திய தலைவரின் முகம்.  அத்தனை பெரிய கருவியைக் கொண்டு செய்ததா என கற்பனைகூட செய்து பார்க்க முடியாத நுணுக்கங்களுடன் செதுக்கியிருந்தார்.  இயற்கையின் ஒரு பகுதியை மரபின் ஒரு பகுதியாக அவர் மாற்ற முயற்சி செய்கிறார் எனப் புரிந்தது.  வண்ணதாசன் இயற்கையை வாசகனின் வாழ்க்கையின் ஒளிகொண்ட பகுதியாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.  குதூகலங்களும், ஏமாற்றங்களூம், கசப்புகளும், அற்புதங்களும், துயர்களும், போதனைகளும் நுணுக்கமாக பதிவு செய்யப்படுகின்றன.  அந்த நுணுக்கங்களின் விகசிப்பைத் தாண்டி நமக்கு ஒரு முழுமையான தரிசனத்தையும் கொடுக்க வல்லது அவருடைய படைப்புலகம்.

வண்ணதாசன் ஓவியக்கலை அறிந்தவர். நெல்லையப்பர் மாகாளையையும், வாள் ஓங்கும் மதுரை வீரனையும், குழுமூர் ஓடைக்கார ஆயியையும் வரைய ஆசைப்படுகிறார். சிறுகதைகளில் அப்படியான சித்திரங்களைத்தான் திரும்பத் திரும்ப செய்து கொண்டேயிருக்கிறார்.  பாக்குமரங்களும் தென்னை மரங்களும், புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் சிலையும், அதன் மேல் ஒளி உமிழும் நீல ரசகுண்டு விளக்கும் என ‘கிருஷ்ணன் வைத்த வீடு‘ நம் கண் முன்னே நிற்கிறது.  பிற பாத்திரங்களான அந்த வீட்டுக்காரர், சசியின் அம்மா, கதைசொல்லியின் அம்மா, போலீஸ்காரர், ஐஸ்வண்டிக்காரரின் அப்பா எனப் பலருக்கும் பெயர்களில்லை.  பெயர்களற்ற அடையாளங்கள் இன்னமும் அழுத்தமாக பதிகின்றன.  நீர் முகர்ந்து எடுத்த குவளையின் வெளிப்புறத்தை துடைத்துவிட்டுக் கொடுக்கும் அம்மா. அரிவாளைக் கையில் கொடுக்கக் கூடாதென தரையில் வைத்துக் கொடுக்கும் சசி. மின்சார கம்பியை உரசியபடி சலாரென விழும் தென்னை ஓலை என ஒவ்வொரு விவரிப்பும் மெருகேற்றி வைக்கப்படுகின்றன.  அவை வெற்று நுணுக்கங்களாக நின்று விடுவதில்லை. சொல்லிச் செல்லாமல் சுட்டும் கலையின் ஒரு பகுதியாக இருக்கிறது.  ஆதியில் எந்தப் பெயரும் இடப்படாத சிறு பூச்சியை வளையல் பூச்சி என்றோ கம்பளிப் பூச்சியென்றோ அவரவர் வசதிக்கேற்ப அழைத்தாலும், உயிர்த்தலின் நகர்தலாக அதைப் பார்க்கும் பார்வை அவருடைய படைப்புகளில் இருந்து கொண்டேயிருக்கிறது.

தூரக் காதுகள்:

பென்சில் சீவும்போது எங்கோ சரிகிற மரங்களும், அரவமற்ற இரவுப்பொழுதில் எங்கோ ஒருவர் பாடுவதும் கேட்கும் தூரக்காதுகள். தொலைபேசியில் அழைக்கும் உறவினரிடம் ‘சாரல் மழை பெய்திருக்கிறது என்கிறார். உடன் எதிர்முனையிலிருப்பவர் செடிகள் எல்லாம் உச்சிக் குளிர்ந்திருக்கும் என்கிறார்.  உலகின் எத்தொலைவிற்கும் அவர் காதுகள் நீண்டு, ஒரு சிறு விகசிப்பை, அற்புதத்தின் நிழலை தேடியவண்ணம் இருக்கின்றன.  வண்ணத்துபூச்சியின் சிறகசைவும், எரிமலையின் உள்ளுறுமலும் கவிஞனின் காதுகளில் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது.  பெரும் அருவியில் பொழியும் நீரின் அளவுப் பற்றிய பிரமிப்பை விட, அந்த அருவியின் உயரத்தைத் தாண்டி பறக்கும் சிறிய பறவைகள் பிரமிப்பைத் தருகின்றன.  இன்னும் சில ஆயிர வருடங்களில் பெரிய அருவிகளும், அவற்றைத் தாண்டி பறக்கும் சிறிய பறவைகளும் அழிந்து போகலாம்.  ஆனால் மானுடத்தின் இந்த நுண்ணுணர்ச்சி மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.  கவிதைப் படிமங்களாகவோ, தானியங்கி இயந்திரங்களின் சேமிப்பு பெட்டகத்திலோ.

மனிதம் கிடக்கும் மிதிபடத் தெருவினில்
உன்னதம் அழைக்கும்
எங்கோ தொலைவில்.  

வண்ணதாசனை சாகித்ய அகதெமி கௌரவித்திருப்பது, இலக்கியத்தில் அழகியலை கௌரவப்படுத்துவது போல. பல்வேறு மொழிகளிலும் அவருடைய படைப்புகள், இன்னமும் அதிகமாக சென்று சேர வழிவகுக்கும். இதே நேரத்தில் விஷ்ணுபுர இலக்கிய வட்டத்தினரும் விருது வழங்கி விழா நடத்துவது போற்றுதற்குரியது.

வண்ணதாசனின் படைப்புலகம் வாசகனை கைநீட்டி அழைப்பதில்லை. அது இயல்பாக வந்து நம்மை சூழ்ந்து கொள்கிறது.  நீரென வந்து நம்மை நிரப்பிவிட்டுச் செல்கிறது. கொள்கலனின் வடிவத்துக்கு ஏற்ப, தகவமைத்துக் கொண்டாலும், தன்னைக் காணும் உலகைத் தன்னில் பிரதிபலித்துக் கொண்டே இருக்கிறது நீர்- துப்பாய்ந்த துலக்கமானதொரு வண்ண சித்திரமாக.

அமைதி

ஆங்கிலம்: லாங்கஸ்டன் ஹ்யூஸ்
தமிழில் : தி. இரா. மீனா

அவர்கள் கல்லறைகளைக் கடந்தோம்;
இறந்து கிடந்த மனிதர்கள்,
வெற்றியாளர்களோ தோல்வியாளர்களோ,
கவலைப்படவில்லை.
இருளில்,
வென்றவர்கள் யாரென்று
பார்க்க இயலாதவர்கள் அவர்கள்.

(சுதந்திர மொழிபெயர்ப்பு)

கனல்

                                    பானுமதி. ந

வளர் பிறையின் பன்னிரண்டாவது நாள். முழுமை அடையும் வேகத்தில் சந்திரன் பொலிந்து கொண்டிருந்தான். முன் ஜாமம். ஒளியைப் பாதி ஆடையெனப் புனைந்து கங்கை ஒயிலாக நடந்து கொண்டிருந்தாள்.

அடி ஆழத்து மீன்கள் எல்லாம் மனித வாடை இல்லாததால், துள்ளி மேலே குதிப்பதும், கடல் கன்னி என நீந்துவதும், நீருக்குள் ஒரு வானவில்லென பல வண்ணங்களில் பேருவகை கொள்வதுமாக விளையாடின.

காட்டில் பெருக்கெடுப்பது கங்கையின் விருப்பம். மலையரசி. எப்படி காட்டை விடுவாள்? அவிழ்த்த சடையிலிருந்து அவள் கொண்ட மோகம்தான் வேகம்! அவன் கருணைப் பெரும் துளியில் அவள்  மானிடரின் முதல் உயிர்த்துளி. உலகின் காமக் களியாட்டங்களை அவள் அறிவாள். அவர்களின் ஆறாப் பெருந்துயர் அவள் உணர்வாள். அவள் காலத்தின் பெரும் சாட்சி. பனிச் சிகரத்தின் நிலா நடைத்துளி.

அன்று மாலை. கௌரவர்களும்  கர்ணனுமாக  அவள் மீது விளையாடினார்கள். எத்தனை உல்லாசம். எத்தனை உற்சாகம். அவளும் அவர்களுடன் ஓடினாள். போக்கு காட்டினாள். சிறு சுழல் காட்டி பயம் ஊட்டினாள். தணிந்து தணிந்து குளிர்வித்தாள். நேரம் ஆனதென்று கடைப் பயல் கூவியவுடன் அவர்கள் மனமில்லாமல் கரை சேர்ந்தனர். ஆனால், கர்ணன் காட்டில் இருளில் பயிற்சி செய்துவிட்டு  வருவதாகத் தங்கிவிட்டான். ஒளியின் மானுட குழவி. இருளில் என்ன வேண்டும் அவனுக்கு? கங்கை ஓடிக்கொண்டிருந்தாள்.

குதிரையைத் தளரவிட்டு கர்ணன் மெதுவாகச் சென்றான். ஓங்கி வளர்ந்த காடு. அதில் இரவு உயிர்களின் ஓசை எழுந்து கொண்டிருந்தது. சந்திரனின் கிரணங்கள் பட்ட மரங்களின் மேல் கிளைகள், தாம் வேறு மரம் வேறாகக் காட்சி அளித்தன. காற்றின் தழுவலுக்கேற்ப அவை வளைந்து உரசும் ஒலி கேட்டது. அருகே அருகே நெருங்கி விலகி விலகிச் செல்வதாக மரங்களும், செடிகளும், புதர்களும் காணக் கிடைத்தன. காட்டிற்கே உண்டான வாசம் நாசியை நிறைத்தது.

ஆழ மூச்சினை இழுத்து கர்ணன் தன் வேதனையை வெளிப்படுத்தினான் .”நான் செய்வது சரியா? ஏன் எனக்கு குழப்பங்களே எஞ்சுகின்றன? நான் எதைத்தான் வேண்டுகிறேன்? பதவியா, அதனால் வரும்  மதிப்பா, மதிப்பு தரும் தன்னிறைவா, அது கொண்டு வரும் மலர்ச்சியா, கொடுப்பதால் முழங்கப்படும் பெயரா, வரலாற்றில் நிற்கும் ஆசையா, அரசு கட்டில் தரும் போதையா, அதையும் தானே நடத்த இடம் கொடுக்காமல் பின்னின்று இயக்கும் அனைவரின் மேல் உள்ள காட்ட இயலா கோபத்தின் உள் ஊனமா, வீட்டில் காட்டப்படும் அலட்சியமா, போராடிப் போராடி முழுதாக வெற்றி பெற இயலாத சூழலா, தன் முதுகின் பின்னே கேட்கும் சிரிப்பொலிகள் காதில் விழாதது போல் தான் நடிக்கும் நாடகத்தின் வேதனையா, எது என் அமைதியைக் குலைக்கிறது?”

கர்ணன்  குதிரை கனைப்பதைக் கேட்டு  தன் அம்பினை கையில் எடுத்தான். ”அங்க தேசத்து அரசரே, வில்லிற்கு இப்பொழுது தேவையில்லை” என்றது ஒரு பெண் குரல். காட்டில், இந்த நேரத்தில், ஒரு பெண் என்பதே அவனை  வியப்பூட்டியது. அவள் கையில் எரிதழல். இவன் முகத்திற்கு எதிராகப் பிடித்திருந்தாள். அவளது உருவம் ஒரு கோடாகத் தெரிந்ததே தவிர முகம் தெளிவாகத் தெரியவில்லை.

“யார் நீ?’ என்றான் அதட்டும் குரலில்.

“துரியன் தந்த அரசை ஆள்பவனுக்கு இத்தனை ஆணவமா?” என்று அவள் சிரித்தாள்.

முதலில் அங்க தேசம் என்றாள், இப்பொழுது அந்த அரசு வந்த வழியையும் சொல்கிறாள். இவள் நம்மைப் பற்றி அறிந்து கொண்டே சீண்டுகிறாள்.

“சொல், இந்தக் காட்டில் உனக்கு இந்த நேரத்தில் என்ன வேலை? உன் தீப்பந்தத்தை சற்றுக் கரம் மாற்றி உன் முகத்தைக் காட்டு.” என்றான் அவன் கடும் குரலில்.

அவள் அப்படியே நின்றிருந்தாள். ”பெண்ணே, உன்னைக் கொல்வது எனக்கு எளிது. உன்னைக் கொல்லாமல் சிறை பிடிப்பதும் எனக்கு முடியும். “

“அப்படிச் சொல், அஸ்தினாபுரியின் உணவல்லவா உள்ளே செல்கிறது உனக்கு. பெண்ணைக் கொல்வது உனக்கு வழி முறை சொத்தல்லவா? உங்கள் பிதாமஹரின் கொடை”, கசப்புடன் சிரித்தாள் அவள்.

“என்னைப் பழித்தாய்; இப்பொழுது எங்கள் அரசை என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் நீ?  எந்தப் பெண்ணை எங்கள் பீஷ்மர் கொன்றார்?”

அவள் சிரித்தாள். ”உயிரைக் கொன்றால்தான் கொலையா? மனதைக் கொன்றாலும், காதலை அழித்தாலும் அதுவும் கொலைதான். என்னைப் பார், இப்பொழுதும் நான் யாரென்று தெரியவில்லை அல்லவா?” என்றாள் அவள்.

கரம் மாற்றி அவள் பிடித்த பந்தத்தால் இப்பொழுது பார்க்க முடிந்தது. மரவுரி தரித்திருந்தாள் முகத்தில் கடும் தவத்தின், பழியின், செஞ்சுடர் கூத்தாடியது. தீயின் சுடரில் அவள் முகம் மனதின் எரிதழலைக் காட்டியது. பெண்ணின் நளினமற்று, இறுகக் காய்ந்த தவ உடல்.தசைகளின் முறுக்கும், தினவும் அவளின் போர்ப்பயிற்சியைக் காட்டின. சடை விழாத அவள் செம்பட்டைக் குழலும், அவள் குரலும், கண்களும்தான் அவளைப் பெண் எனக் காட்டின. அவளைப் பணிய தன் உள்ளம் ஏங்குவதை கர்ணன் அதிசயித்தான்.

“நான் தனித்து உன்னிடம் பேச நினைத்தேன். நீங்கள் அனைவரும்  நீர் விளையாடுகையில் உன்னை  எப்படி தனித்து அழைப்பது என்று தவித்தேன்.”

“சொல்லுங்கள். என்னிடம் என்ன பேச வேண்டும்? நீங்கள் யார் என்று அறிந்தால் அல்லவோ நான் ஏதும் செய்யக் கூடும்?” என்றான் கர்ணன்.

“கர்ணா, உன் குருவிடம் நான் ஒரு நீதி கேட்டேன். அதன் பயனாக ஒரு உயிரும் கேட்டேன். ஆனால் அவரால் அது இயலவில்லை. உன்னால் முடியும். உன் பேர் சொல்லும் நிகழ்வாக அது இருக்கும். உன் வீரத்தைப் போற்றிக் கொண்டே இருக்கும், நீதிக்காக பாட்டனை வதைத்தவன் என்று”

“அம்மா, நீங்கள் சொல்வது பரசுராமரையும், இருங்கள், இருங்கள் பீஷ்மரையுமா? பீஷ்மர் எனக்கு தாத்தாவா? அது எப்படி? குலம் அற்று மனம் நொந்து வாழுகிறேன்- என் பிறப்பை நீங்கள் அறிவீர்களா? என் தாய் யார் அம்மா?”

“பார்த்தாயா, என்னைப் பற்றி விட்டுவிட்டாய். உன் பிறப்பின் நிழலை நீ வெட்டி எறியப் பார்க்கிறாய். நான் சிகண்டி. அந்த பீஷ்மன் உலகிற்கே பிதாமஹன் அல்லவா?”

“அப்படியென்றால் நீங்கள் அரசி அம்பையா? என்ன தவம் செய்தேன் உங்களைப் பார்ப்பதற்கு? அம்மா, சொல்லுங்கள் என் தாய் யாரென்று?” கர்ணன் அவள் காலடியில் பணிந்தான்

அவன் தோள் தொட்டு ஆசி வழங்கிய அம்பை,” கர்ணா நான் இப்பொழுது சிகண்டி. அம்பையின் பழி தீர்க்க வந்த சிகண்டி. என் அவிசை அளிப்பவன் யார்? என் மனதைக் குளிர்விப்பவன் யார்? காட்டிலும் ,மேட்டிலும் திரியும் ஒரு அனாதை நான்”

“அம்மா, இப்பொழுதே என்னுடன் வாருங்கள். என் அரண்மனையின் இராஜ மாதா நீங்கள். உங்கள் ஒரு சொல்லிற்கு அனைவரும் கட்டுப்படுவோம்.”

“கர்ணா, எனக்கு வேண்டுவது ஒன்று தான்—அந்த பீஷ்மனின் அவமானம்— அவன் உயிர்.”

“தாயே, நான் அஸ்தினாபுரிக்கு கட்டுப்பட்டவன்.

அவர் அதன் அரியணை தாங்கும் சிம்மம். என் அன்பிற்குரிய துரியனின் பிதாமகர். அவர் நினைத்தால் மட்டுமே அவர் உயிர் பிரிய இயலும்.”

“அப்படியென்றால் அவரின் எந்த அநீதியையும் யாரும் கேட்க மாட்டீர்களா? பெண்ணின் அழிந்த வாழ்வு உங்களுக்கு ஒரு பொருட்டில்லை அல்லவா?”

“தாயே, உங்கள் நிலை கண்டு என் மனம் அழுகிறது. ஆனால்,உங்களுடைய இந்த நிலைமைக்கு தாங்களும் ஒரு காரணமில்லையா?” என்றான் அவன்

“என்ன சொன்னாய்? நான் காரணமா? அந்த பீஷ்மன் தருவதாகச் சொன்ன பிச்சை சோற்றை உண்டு வாழ்ந்திருக்க வேண்டுமா?”

“அம்மா, சினம் கொள்ளாதீர்கள். பிதாமகர் தெரிந்தே தவறு செய்யவில்லையே?’ என்றான் கர்ணன்.

“என்ன சொன்னாய்? உன் உயிர் மீது ஆசையில்லையா?”

“கோபித்துக் கொண்டாலும் உண்மை பொய்யாகி விடுமா? நீங்கள் சுயம்வரத்திற்கு ஏன் வந்தீர்கள்?”

“என் காதலனுக்கு மாலையிட”

“மணாளனைத் தேர்ந்தெடுத்த பின் சுயம்வர மண்டபம் வரலாமா?”

“என்ன சொல்கிறாய் நீ?”

“அம்மா, நீங்கள் உங்கள் தந்தையிடம் சொல்லி திருமணத்தை முடித்திருக்க வேண்டும். மாறாக, சுயம்வரத்தை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு உங்கள் திருமணத்தை செய்யப் பார்த்தீர்கள்.”

“கர்ணா, சால்வன் பேரரசன் இல்லை. என் தந்தையிடம் சொல்வதை விட சுயம்வர மண்டபம் வந்து அவருக்கு மாலையிட நினைத்தேன்.”

“அதை அறியாமல் பீஷ்மர் தவறாக உங்களையும் கவர்ந்து வந்து விட்டார்.”

“நல்ல கதை. இதை அந்தக் கிழவன் சொன்னானா? ப்ரும்மச்சாரி என்று சபதம் செய்துவிட்டு அவன் சுயம்வரத்திற்கு வருவான். கன்னிகைகளைக் களவாடுவான். செய்த தப்பிற்கு பிராயச்சித்தமும் செய்ய மாட்டான். நான் அந்த  மண்டபத்திற்கு வந்ததுதான் தவறோ?”

“அம்மா, யாரும் எதிர்பாராமல் ஏதேதோ நடந்துவிடுகிறது. நான் சொல்ல வந்தது ஒரு சிறு விதி மீறலின் விளைவுகள் பற்றி. இன்றுவரை அது உங்களை பாடுபடுத்துகிறது, பீஷ்மரும் மனதளவில் மகிழ்வோடில்லை.”

சிகண்டி பெருமூச்சுடன் ”விதி” என்றாள்.

“அம்மா,போனது போகட்டும். இனியாவது அமைதி கொள்ளுங்கள். என்னுடன் வாருங்கள்.”

“இல்லை கர்ணா ஊழ் என்னைச் செலுத்துகிறது. என் பகையை அழிக்காமல் எனக்கு அமைதியில்லை. நீ என்னைப் புரிந்து கொள்வாய் என நினைத்தேன்; எனக்காக அந்தக் கிழவனை வதைப்பாய் என மனப்பால் குடித்தேன். பாண்டவர்கள் அவனை எதிர்க்கும் மனம் இல்லாதவர்கள். துரியனின் தந்தை எனக்காக பீஷ்மரை கொல்லத் துணியமாட்டான். நீ உனக்குப் பொருந்தாத இடத்தில் அமைதியற்று இருக்கிறாய். உனக்கு என்ன வேண்டும் என நான் அறிவேன். உன் திறமைக்காக மட்டுமே  உலகம்  உன்னை மதிக்க வேண்டும் என விழைகிறாய். அரசின் மூலம் பெற்ற அங்கீகாரம் உன் இதயத்தை வாள் கொண்டு அறுக்கிறது. “வில்லுக்கு விஜயன்” என்ற புகழ் உன்னை ஏங்கச் செய்கிறது- ஏன் என் திறமை இவர்கள் கண்ணில் படவில்லை என கொதிக்கிறாய். எல்லாமிருந்தும் ஏதும் இல்லையென தவிக்கிறாய்”

“அம்மா, உண்மைதான் நீங்கள் சொல்வது”

“அதனால்தான் சொல்கிறேன். நீ அந்த பீஷ்மனுக்கு அறைகூவல் விடுத்தாயானால், அர்ச்சுனன் உன்னோடு மோதுவான். உன் கரம் வெல்லும். உன் பெயர் நிலைக்கும். உன் பிறப்பைப் பற்றி நான் அறிந்த ஒன்றையும் உனக்குரைப்பேன்”

“அம்மா, நான் இந்த வகையில் உங்களுக்கு உதவமுடியாது. துரியனுக்கு நான் கடமைப்பட்டவன். அவன் என்னைத் தோழனாக நடத்துகிறான், உயிரினும் மேலாக நினைக்கிறான். ஆனால் நான் அவனிடம் அந்த அளவு நட்பு கொள்ளாமல் ஒரு படி கீழே என்னை வைத்துள்ளேன். அவனுக்கு நான் செய்யும் நல்லதெல்லாம் அவன் சொற்படி கேட்பது என்றுதான் நினைக்கிறேன். இதிலும் எனக்கு மனப் போராட்டமே எஞ்சுகிறது. இந்த நிலையில் அவன் பிதாமகரை என்னால் எப்படி எதிர்க்க முடியும்?அம்மா, என் பிறப்பைப் பற்றிச் சொல்லுங்கள். உங்கள் பெயர் வெளிப்படாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்.”

“நீ புரிந்து கொள்வாய் என நினைத்தேன். இல்லை, உன்னால் அது இயலவில்லை நான் வருகிறேன்’

“அம்மா, பீஷ்மர் எனக்கு தாத்தாவா? உங்களுக்குத் தெரியுமா? என் குணமும், பிறப்பும் என்னை இரு திசைகளுக்கு இழுக்கின்றன.”

“கர்ணா, இந்த கங்கை அறிவாள் அதை. அதைப் போல் நானும் அறிவேன். யாரிடம் அவள் சொல்லியிருக்கிறாள், நான் சொல்வதற்கு?அந்த பீஷ்மன் யூகத்தால் அறிவான். துவாரகை அரசன் முற்றும் அறிவான். யார் அதைச் சொல்ல வேண்டுமோ அதை அவர்கள் உன்னிடம் சொல்வார்கள், காலம் கனிகையில். உன் கானல் கனல் அப்பொழுதுதான் அடங்குமோ என்னமோ?” சொல்லிக் கொண்டே அவள் காட்டில் மறைந்தாள். கர்ணன் சிலையென அமர்ந்திருந்தான்.

 

அந்தக்கால ஒர்க்மன்ஷிப் : ‘தில்லி அண்ணா’- ஆதவனின் சிறுகதை குறித்து வெ. சுரேஷ்

வெ. சுரேஷ்

வீடு, வாசல், பணம், நகைகள் போன்றவற்றை எல்லாம் வாரிசுகளுக்கு மாற்றிக் கொடுக்கலாம். ஆனால் ஞானம், கலை ஆர்வம், வித்வத் ஆகியவற்றை? மகத்தான கலைஞர்களின் வாரிசுகள் பெரும்பாலும் இன்னொரு நல்ல கலைஞர்களாக ஆவதில்லை. வாரிசுகள் அதிகம் உருவாகும் கலை, என்று குரலிசையைச் சொல்லலாம். ஏனெனென்றால் குரல் வளம் என்பது அடிப்படையிலேயே உடற்கூறு மரபு சம்பந்தப்பட்ட ஒன்றாக இருக்கிறது. மகத்தான பாடகர்கள்/ வாத்திய இசைக்காரர்களின் வாரிசுகள், ஓரளவாவது பாடவோ, இசைக்கவோ செய்கிறார்கள். அடுத்த சந்ததிகளிடம் அந்தக் கலை இறங்கி வராமற் போவது அரிதாகவே நிகழ்கிறது. ஆனால் அனைவரும் தம் தந்தை அல்லது தாய் தொட்ட உயரங்களை தொடுவதில்லை.

ஆனால், வாசிப்பு ஆர்வம், இலக்கிய நுண்ணுணர்வு, படைப்பு, போன்றவை மிக மிக அரிதாகத்தான் அடுத்த சந்ததியினருக்கு வந்து சேர்கிறது. நல்ல இசைக்கலைஞர்களாக தந்தை/ தாய் – மகன்/ மகள் ஜோடியைப் பார்க்க முடிகிற அளவுக்கு எழுத்தாள தாய்/ தந்தை– மகன்/ மகள் இருக்கிறார்களா? மிக அரிதாகவே இப்படி ஒரு ஜோடியை சொல்ல முடியும் என்று தோன்றுகிறது. ஏனெனில் இலக்கிய ரசனை ஒரு மனப் பயிற்சி, மரபணு ரீதியாக மாற்றப்பட வழியில்லை.

லௌகீக விஷயங்களைத் தாண்டிய அல்லது அதில் அதிகம்  பற்றில்லாமல், இலக்கியம், ஆன்மிகம், இசை போன்ற விஷயங்களைக் குறித்த தேடலும் அதில் திறனும் உள்ள மனிதர்களின் குடும்பத்தினர் அவர்கள் மீது கொண்டிருக்கும் உணர்வுகள்தான் உண்மையில் என்ன? இம்மாதிரியான மனிதர்கள் மீது அவர்களின் திறனை புரிந்துகொண்ட உண்மையான மரியாதையா? அல்லது அது அவர்களுக்கு தங்கள் பொருளியல் ரீதியான பலவீனங்களையும் தோல்விகளையும் மறைத்துக் கொள்ள பயன்படும் முகமூடியாக உதவும் மௌடீக பக்தியா?  அவ்விதமான பக்தி ஞானஸ்தர்களுக்கு திருப்தியை தருமா?

இந்தக் கேள்விகளே ஆதவனின் ‘தில்லி அண்ணா’ சிறுகதைக்கு அடிப்படை. வாசுதேவன் தில்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். பதவியில் இருக்கும்போது  அதிகம் “சம்பாதிக்காமல்” ஞானஸ்தர் என்ற மரியாதையுடன் வாழ்க்கை நடத்துபவர். இப்போது அவர் இருப்பது தன் குமாஸ்தா மகனான அம்பியின் குவார்ட்டர்ஸில். அவரது மனைவிக்கும் மகனுக்கும் மகளுக்கும் தங்கள் தந்தையின் ஆளுமை குறித்த பெருமை உண்டு. ஆனால் அதற்கான அடிப்படைகள் மீது ஆர்வம் கிடையாது. இவர்களின் இந்தக் குணத்தை வாசுதேவன் கேள்விக்கு உள்ளாக்கும் தருணத்தை அவரது தம்பி குடும்பத்தினர் அவரது வீட்டிற்கு வரும் ஒரு சம்பவம் மூலம் கதையாக்கியுள்ளார் ஆதவன்.

வாசுதேவனின் தம்பி ராமச்சந்திரன் தன் அண்ணனைப் போலவே குமாஸ்தாவாக வாழ்க்கையைத் தொடங்கினாலும், ஒரு கட்டத்தில் தன் மனைவியின் சகோதரர்களின் உதவியால், நல்லதொரு தனியார் கம்பனியில் உயர் பதவி வகிப்பவர். பொருளியல் ரீதியாக தன் அண்ணனை விட பல மடங்குகள் முன்னேறியவர். அவருக்கு தன் அண்ணன் மீது கல்விமான், ஞானஸ்தர் என்ற மரியாதை உண்டு. ஆனால் ஆர்வம் கிடையாது. அவரது மனைவிக்கு, அண்ணா ஒரு ‘அரைக் கிறுக்கு’, பொருளியல் ரீதியாக வெற்றி பெற்று வாழ்க்கை நடத்தும் தன் சகோதரர்கள் மீதே உண்மையான மதிப்பு. அவர்கள் சென்னையிலிருந்து தில்லி வந்து நான்கு நாட்களாகியும் வாசுதேவனின் வீட்டுக்கு வராமல், வந்தபோதும் மிகக் குறைந்த நேரமே அங்கு இருப்பதன் மூலம் இதை அவள் காட்டிக் கொள்கிறாள்.

இந்தக் குறைந்தபட்ச நேரமேகூட சகோதரர்களுக்கிடையேயான நெருக்கத்தை, அல்லது முன்பிருந்த நெருக்கம் இப்போது இல்லாமல் போயிருப்பதை காண்பிக்க போதுமானதாக உள்ளது. பேசுவதற்கு அதிகம் பொதுவான விஷயங்கள் இல்லாத வேறு வேறு உலகங்களில் வாழும் இருவருக்கும் தத்தம் உடல் உபாதைகளை பகிர்ந்து கொள்வதே பொதுவான விஷயங்களாகின்றன. அப்போது மணியடிக்கும் பழைய கடிகாரச் சத்தமே அவர்கள் தாம் இருந்த நாட்களின் நெருக்கத்தை மீட்டுத் தருகிறது. “அந்தக் கால ஒர்க்மன்ஷிப்பே தனி இல்லை அண்ணா” என்கிறார் தம்பி. கூடவே ‘அந்தக் கால மனிதரான’ தம் அண்ணாவின் பெருமையை, அவர் தன் வீட்டுக்கு வந்திருந்தபோது பாடிய பாடல்களை, விளக்கிச் சொன்ன ஸ்லோகங்களை, நினைவு கூர்கிறார். இப்போது தான் ஒரு டேப் ரெக்கார்டர் வாங்கியிருப்பதையும், இவரது பாடல்களையெல்லாம் அதில் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆசையையும் சொல்கிறார். ஆனால் அண்ணாவின் மனதில் தன் தம்பியின் மனைவி தன்னை ஒரு ‘அரைக் கிறுக்காகப்’ பார்த்ததே நினைவில் எழுகிறது. உண்மையில் இப்போதுகூட, தம்பியின் பெருமை என்பது உண்மையில் மதிப்பறிந்து உணரப்பட்டது அல்ல என்றும் ஒரு மௌடீக பக்தி மட்டுமே என்பதையும் ஒரு போதும் தன் வாழ்க்கை முறையை அவர் மேற்கொள்ள விரும்ப மாட்டார் என்பதையும் புரிந்துகொள்கிறார்.

அவர்கள் கிளம்பிப்போனதும்,  வாழ்க்கையின் உன்னதமான விஷ்யங்களை ரசிக்க தெரியாதவர்கள் என்றும் அவர்களது பாவனைகளை கேலி செய்தும் வாசுதேவனின் மகளும் மனைவியும் பேசிச் சிரிக்கத் துவங்க, அவரது மகனும் அதில் சேர்ந்து கொள்கிறான். ஆனால் சட்டென்று வாசுதேவனுக்கு இதில் ஒரு அலுப்பும் எரிச்சலும் எழுகிறது. அவர் தன் மகனை நோக்கி, “உங்களுக்கு வெறும் கேலி பேசத்தான் தெரியும். நீ முடிஞ்சா ஒரு டேப் ரெக்கார்டர் வாங்கேன்,  பாக்கலாம்’, என்கிறார். அவர்கள் பேச்சை நிறுத்திவிட்டு, வியப்புடன் அவரைப் பார்க்கின்றனர். “நிஜம்மாத்தான் சொல்றேன்,” என்றபடி கையலம்பச் செல்கிறார் வாசுதேவன். இப்படி முடிகிறது கதை.

அங்கே வாசுதேவனின் மனம் ஒரு உண்மையைக் கண்டு கொள்கிறது. தன் தம்பிக்கு எப்படி தன் வாழ்க்கை முறையை, தம் குணநலன்களை அடிப்படையாகக் கொண்ட உண்மையான மதிப்புக்கு பதில் ஒரு மௌடீகமான பக்தி இருக்கிறதோ, அதே போல குடும்பத்தினருக்கும் தன் மேல் இருக்கும் பெருமை, அவரைப் புரிந்து கொண்டு வந்ததல்ல என்றே அவர் புரிந்து கொள்கிறார். தன் பொருளியல் ரீதியான போதாமைகளை, திறமையின்மையை  மறைத்துக் கொள்ள தன் தந்தையின் /கணவரின் திறன்களை, ஞானத்தை தனதாக வரித்துக் கொள்ளும் அறியாமையே அவருக்கு எரிச்சலூட்டுகிறது.

தம்பியின் சொத்துக்களுக்கு இணையான செல்வத்தை அவரது வாரிசுகள் அசாதாரண முயற்சி ஏதும் மேற்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் இவரது சொத்துக்களான, ஞானம், கலை, இலக்கிய ஆர்வம் ஆகிவை தாமாக வராது என்பதை அவரது மகளோ மகனோ உணரவில்லை என்பதை அவர் உணர்கிறார். மேலும், அவரது தம்பியாவது லௌகீக வெற்றியை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை முறையில் முழு மனதுடன் இறங்கி வெற்றியை அடைந்திருக்கிறார். ஆனால் இவர்கள் அந்தத் தேடலும் இல்லாமல் தங்கள் தந்தையின் அலௌகீக போக்குக்கு உண்மையில் எரிச்சலும் பட்டுக்கொண்டு, அதே சமயம், மற்றவர்களின் லௌகிகப் போக்கினை பரிகாசம் செய்யும் உரிமையும் தமக்கு இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள்.

விழுந்தது என்ன?- ஹரன் பிரசன்னாவின் ‘சோழி’

பீட்டர் பொங்கல்

பதாகை இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளைப் பதிப்பித்திருந்தாலும், முதல் முறையாக எழுத்தாளர் திரு எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் வாயிலாய் பதாகையில் வெளிவரும் சிறுகதைகளுக்கு முழுமையான முதல் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. ‘தமிழ் சிறுகதையின் பத்து முகங்கள்‘ என்ற கட்டுரையில்  எஸ். ராமகிருஷ்ணன், இணைய இதழ்களில் வரும் சிறுகதைகளை தான் வாசிப்பதாய் எந்தச் சலிப்பும் இல்லாமல் சொல்லிக் கொள்வதோடல்லாமல், பதாகையில் எழுதும் காலத்துகள் சிறுகதைகள் குறித்து, “பதாகை இதழில் இவரது சிறுகதைகளை வாசித்திருக்கிறேன். இவர் யார் என்று தெரியவில்லை. அசோகமித்ரன் பாணியில் சிறப்பாகக் கதைகளை எழுதுகிறார். வேதாளத்தின் மோதிரம் என்ற சிறுகதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது“, என்று எழுதியிருக்கிறார்.

யார் எவரென்றே தெரியாத ஒருவரை முன்னணி எழுத்தாளர் ஒருவர் வாசிப்பதில் தமிழ் இலக்கியத்தின் இனிய முகமொன்று வெளிப்படுகிறது- பாராட்டுகள் யாருக்குமே மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் என்றாலும், மூத்த எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எந்த கோரிக்கையும் இல்லாமல் தன் கதைகளை வாசிப்பதாய்க் குறிப்பிடுவதற்கு மேல் புதிதாய் எழுத வருபவனுக்கு வேறென்ன அங்கீகாரம் வேண்டும்? எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு பதாகை மற்றும் காலத்துகளின் மனமார்ந்த நன்றிகள்.

எஸ். ராமகிருஷ்ணன் குறிப்பிட்டிருக்கும் பத்து முகங்களில் இன்னொரு முகமான ஹரன் பிரசன்னாவும் பதாகையில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார்- ஹரன் பிரசன்னா குறித்து, “… வித்தியாசமான கதைகளை எழுதுகிறார். மெல்லிய பகடியுடன் கூடிய சரளமான எழுத்து. சில கதைகள் ஆதவனை நினைவூட்டுகின்றன. குரலை உயர்த்தாமல் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது இக்கதைகளின் சிறப்பு,” என்று குறிப்பிடுகிறார் எஸ். ராமகிருஷ்ணன்.

ஹரன் பிரசன்னா பதாகையில் எழுதிய, ‘சோழி’ என்ற சிறுகதை இப்படி துவங்குகிறது

“முரளிதர ராவ் தனது எண்ணத்தின் கனம் தாங்காமல் எப்போது வேண்டுமானால் விழுந்துவிடுவார் போல அலைந்து அலைந்து நடந்தார். அவரது மெல்லிய உடலில் அதைவிட மெல்லிய பூணூல் காற்றில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தது. பூணூலையும் அதோடு சேர்த்து தன்னைப் போர்த்தியிருந்த மேல் துண்டையும் இழுத்து, சூம்பி தொங்கிப் போயிருந்த தன் மார்பின் இரு கருநிறக் காம்புகளையும் அவர் மூடிக்கொண்டார். வழுக்கைத் தலையில் வெளிப்பட்டிருந்த ஒன்றிரண்டு வெண்மயிர்கள் மிக நீண்டிருந்தன. வழுக்கையைச் சுற்றி மயிர்கள் சீவாமல் சீரில்லாமல் படிந்து கிடந்தன. முன்நெற்றியில் அவரது நாமத்தைக் கரைத்துக்கொண்டு வியர்வை வழிந்தது. தன் தோள்துண்டால் முகத்தை அழுந்தத் துடைத்தார். நாமத்துக்கிடையே அவர் இட்டிருந்த கரிக்கோடுபட்டு துண்டு கருப்பாகியது. கண்ணாடி மாட்டிக் கொண்டு வெளுத்த உளுத்த மரக்கொம்பு ஒன்று நடந்து வருவதுபோல் அவர் நடை இருந்தது. தள்ளாத வயதிலும் மனதில் இருந்த குழப்பம் காரணமாக வேகமாக நடக்க முயன்று தோற்றுப் போனார். மீண்டும் வேகமாக நடந்தார்.”

குரலை உயர்த்தாமல் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது இக்கதைகளின் சிறப்பு,’ என்று எஸ். ராமகிருஷ்ணன் மிகச் சரியாகவே சொல்கிறார். இந்த முதல் பத்தியில் நமக்குக் கிடைக்கும் சித்திரம் சிறிது புன்னகைக்க வைக்கிறது, கூடவே இக்கதையின் மிக முக்கிய இயல்பான நிலையின்மை, கதையின் துவக்கத்திலேயே வந்து விடுகிறது. முதல் வாக்கியத்தில் அலைந்து அலைந்து என்று அலைதல் இரு முறை வருகின்றன- இந்தத் தடுமாற்றம் எண்ணத்தின் கனம் தாங்காமல் ஏற்பட்ட ஒன்று, எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடுவார் போல் அலைந்து அலைந்து நடந்தார் என்று வாசிக்கும்போது தடுமாறிச் செல்லும் அவரது நடையின் கூடவே எண்ணங்களின் சுமையால் அழுந்திய அவரது முகமும் நம் கண் முன் தோன்றுகிறது- இந்த வாக்கியத்தில் மட்டுமல்ல, இந்தப் பத்தியில் அவரது முக பாவனை சொல்லப்படவே இல்லை. ஆனால், முரளிதர ராவின் முகத்தில் ஆடும் உணர்ச்சிகளைக் காண புற விவரணைகளே போதுமானதாய் இருக்கின்றன.

அவர் அலைவது போதாதென்று, அவரது மெல்லிய உடலில் தரித்த பூணூலும் காற்றில் அலைகிறது- கதை நெடுக ஒரு தீர்மானமான முடிவுக்கு அலையும் முரளிதர ராவ், இங்கு அலையும் பூணூலை மட்டுமல்ல, சூம்பித் தொங்கிக் கொண்டிருக்கும் மார்க்காம்புகளையும் மேல் துண்டு கொண்டு மூடிக் கொள்கிறார் (தொங்குவதால், அவையும் ஆடுகின்றன என்று நினைக்கிறேன்). இது போதாதென்று வழுக்கைத் தலையில் ஒன்றிரண்டு வெண்மயிர்கள் மிக நீண்டிருந்தன என்ற குறிப்பு வேறு – அவையும் காற்றில் அலைகின்றன என்று தோன்றுகிறது. வழுக்கைத் தலையில் இருக்கும் பிற மயிர்களோ சீவாமல் சீரில்லாமல் படிந்து கிடக்கின்றன – அவை ஓய்ந்து விட்டன போலிருக்கிறது. கதையின் சீரற்ற தன்மையை மேலும் உணர்த்தும் வகையில் வியர்வை வழிந்து அவரது நாமத்தைக் கரைக்கிறது, அதைத் துடைக்கும் துண்டோ நாமத்துக்கிடையே உள்ள கரிக்கோட்டை அழித்து கறுப்பாகிறது. தள்ளாத வயது, மனக்குழப்பம் அவரை வேகமாய்ச் செலுத்துகிறது, அவர் தோற்றுத் துவண்டு விரைகிறார் என்று துவங்குகிறது கதை.

ஹரன் பிரசன்னா இது போலவே எழுதிக் கொண்டு சென்றால் அவர் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். பாத்திர விவரணைகள், உரையாடல்கள் என்று இருக்க வேண்டியது எல்லாம் மிகச் சரியாக இருக்கின்றன. ஆனால், அவரிடம் உள்ள ஒரு குறை, அதிபுத்திசாலித்தனம்தான் (இதைத்தான் எஸ். ராமகிருஷ்ணன், “சில கதைகள் ஆதவனை நினைவூட்டுகின்றன” என்று எழுதுகிறார் என்று நினைக்கிறேன்). ஒரு நல்ல கதை என்பது எலிப்பொறி போலிருக்க வேண்டும். மசால் வடை வாசனைக்கு ஓடி வரும் எலி, தன் மீது பொறியின் கதவுகள் விழுவதை மிகத் தாமதமாகத்தான் தெரிந்து கொள்கிறது. இங்கு மசால் வடை மறைத்து வைக்கப்பட்டிருந்தாலும் அது மணக்கிறது என்பதால் அதுவல்ல, அதைச் சுற்றியுள்ள பொறிதான் பூடகம். கண் முன் முழுசாக இருந்தாலும், புலன்களின் மயக்கத்தில் பொறி காணப்படுவதில்லை- வேலையைக் காட்டும்போதுதான் அது புலனாகிறது.

எது முழுமையாய் விவரிக்கப்படுகிறதோ, அதன் இயல்பு இறுதி வரை மறைந்திருப்பதில் ஒரு கலை இருக்கிறது. வாசகன் மனதில் தெறிக்கும் ஸ்ப்ரிங்தான் பூடகமே தவிர, கதை வெளிப்படை. ஹரன் பிரசன்னா இதை மிகச் சிறப்பாய்ச் செய்யக்கூடியவர். ஆனால் அவர் வைக்கும் பொறிகளோ அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் வரும் மூத்த சகோதரனின் பொறிகள் போல் சிக்கலானவை, கண்கள் நிலைகுத்தி நிற்கச் செய்பவை- எலிப்பொறி போல் எளிமையானவையாய் இல்லாத அவரது பொறிகள் ஒரு தேர்ந்த தோட்டக்காரனின் maze போன்றவை: பொறி விழுந்து விட்டது என்று தெரிந்தாலும் நாம் எங்கேயிருக்கிறோம், நம் மீது விழுந்த பொறி எப்படிப்பட்டது என்பதில் ஒரு குழப்பம் இருக்கிறது: “கதை நல்லா இருக்கு ஸார், ஆனா என்ன ஆச்சு?” என்று கேட்கிறோம்.

சோழி கதை சிறப்பான கதையாக இருந்தாலும் அப்படிப்பட்ட கதைதான். படித்துப் பாருங்கள் – சோழி, ஹரன் பிரசன்னா.