Author: பதாகை

ஈழத்து தமிழ் முஸ்லிம் பின்-நவீனக் கவிதைவெளி – ஜிஃப்ரி ஹாஸன்

ஜிஃப்ரி ஹாஸன்

பின்-நவீன அரசியல் கவிதை வெளி

பின்-நவீன அரசியலானது ‘வித்தியாசங்கள்“, “கேள்விக்குள்ளாக்குதல்” என்பவற்றை முதன்மைப்படுத்துகிறது. அடக்கும் அல்லது மற்றமையை விளிம்பு நோக்கித் தள்ளும் குழுவுடன் ஒன்றிப் போகாமல் முரண்படுதல் என்ற கோரிக்கையை முன்வைத்தது. ஈழத்து தமிழ் முஸ்லிம் கவிஞர்கள் தங்களை விளிம்பு நோக்கித் தள்ளும் தேசங்களுடன்/ குழுக்களுடன்  ஒன்றித்துப் போகாமல் அவற்றிலிருந்து தங்களை வித்தியாசப்படுத்தலை தம் கவிதைகளில் தீவிரமாக வலியுறுத்தத் தொடங்கினர். விளிம்பு நோக்கித் தள்ளப்பட்ட தமது மக்களுக்கான சிறுகதையாடல்களை உருவாக்குவதற்கும் அவற்றை மீள மீள வலியுறுத்துவதற்குமான கருவியாகவும் அவர்கள் கவிதையை பயன்படுத்தத் தொடங்கினர். எனவே, அவர்கள் தமிழ் மொழிச் சமூகங்கள் எனும் பொது அடையாளத்திலிருந்து விலகிச் செல்லும் நிலைப்பாட்டை எடுத்தனர்.

தமக்கான அடையாள அரசியலை தமது கவிதைப்புனைவுகளில் தாமே உருவாக்கிக் கொள்ளும் செயற்பாட்டில் ஆர்வம் கொள்ளத் தொடங்கினர். அடையாளம் என்பது ஒரு புனைவைப் போல கட்டமைக்கப்படுகிறது என்ற பின்-நவீனக் கருத்தியலை இந்த அடையாள உருவாக்கம் அனுசரித்துச் செல்வதாக இருந்தது. ஏனெனில் அவை பேசும் அரசியல் விளிம்பு நோக்கித் தள்ளப்பட்ட சிறுபான்மை மக்கள் பற்றியது. இதனால் ஈழத்து முஸ்லிம் பின்-நவீனக் கவிதை வெளியில் பின்-நவீன அரசியல் கவிதைகளே அதிகம்.

அந்தவகையில் பார்க்கும் போது முஸ்லிம் கவிஞர்களால் எழுதப்பட்ட அனைத்து எதிர்ப்புக் கவிதைகளும் பின்-நவீன அரசியல் கவிதைகளுக்குள் உள்ளடக்க முடியும். அதேபோன்று சிங்களப் பெருந்தேசியவாத அடக்குமுறைக்குள்ளான மற்றொரு சிறுபான்மை மக்களான தமிழ் மக்களின் எதிர்ப்புக் கவிதைக் குரல்களையும் பின்-நவீனக் கவிதைக் குரலாக பார்க்கப்பட முடியும். ஆனால் இந்தக் கட்டுரை ஈழத்தமிழ் முஸ்லிம் பின்-நவீனக் கவிதை வெளி பற்றி மட்டுமே பேசுகிறது. ஈழத்து தமிழ் முஸ்லிம் கவிதைகளில் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியிலிருந்து குறிப்பிட்ட சில கவிஞர்களால் சொல்லப்பட்ட கவிதைகள் பின்-நவீனக் கவிதைகள் என இங்கு அடையாளப்படுத்தப்படுகின்றன.

ஈழத்தமிழ் முஸ்லிம் பின்-நவீனக் கவிதை வெளி

ஈழத்து தமிழ் முஸ்லிம் பின்-நவீனக் கவிதைவெளி குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஒரு விரிபரப்பையுடையது. சிறுகதை, நாவல் வெளியை விட இது மிகவும் பரந்துபட்டது. இன்று அதிகமான இளைஞர்கள் முஸ்லிம் கவிதைவெளியில் வினைத்திறனுடன் இயங்கிக் கொண்டிருப்பதும் இதற்கு ஒரு காரணமாகும். விடுபடல்கள் ஏதுமின்றி இந்தத் தலைப்பில் ஒரு முழுமையான ஆய்வை செய்வதற்கு நீண்ட காலமும் ஒரு பாரிய உழைப்பும் அவசியமாகிறது. ஆனால், இந்தக் கட்டுரை குறிப்பிட்ட சில ஈழத்து நவீன முஸ்லிம் கவிஞர்களின் கவிதைகளை மட்டுமே அதுவும் மிக மிகச் சுருக்கமாக முன்னிறுத்தி மேற்கொள்ளப்படுகிறது.

பின்-நவீனக் கவிதைவெளியில் நாம் இலகுவில் பயணிப்பதற்காக முதலில் பின்-நவீனக் கதையாடல் பற்றிய ஒரு சிறு புரிதல் அவசியமாகும். பின்-நவீனத்துவம், அதிகாரமானது பெருந் தளங்களிலோ- நுண்தளங்களிலோ எந்த வடிவத்தில் தொழிற்பட்டாலும் அதை எதிர்த்துக் கேள்வி எழுப்பும் கலகத்தன்மை மிக்க ஒரு கோட்பாடகும். அதிகாரங்களால் புறக்கணிக்கப்பட்ட, விளிம்பு நிலைப்படுத்தப்பட்ட மக்கள்  மீதும் கவனஞ் செலுத்துவதுடன் விளிம்புநிலை மக்கள் மீதும் சிறு கதையாடல்கள் மீதும் கவனங்கொள்ளும் அதேநேரம் விளிம்புநிலை மக்களுக்கான சிறு கதையாடல்களை உருவாக்குவதையும் வலியுறுத்துகிறது.  சிறுபான்மை இனங்கள், பெண்கள், சிறுவர்கள் போன்ற விளிம்பு நோக்கித் தள்ளப்பட்டவர்களின் குரல்களைக் கவிதைகளில் பதிவு செய்வதையே இங்கு பின்-நவீனக் கவிதைவெளி குறித்து நிற்கிறது.

ஈழத் தமிழ் இலக்கிய சூழலில் பின்-நவீனத்துவத்தை ஒரு கோட்பாடாக விளங்கி, வரித்துக் கொண்டு அதன் மீது ஈடுபாடு கொண்டு எழுதுவதற்கு முன்னமே இலங்கையின் இனப்பெருந் தேசியவாதங்களாலும், அவர்களின் செயற்பாடுகளாலும் விளிம்பு நோக்கித் தள்ளப்பட்ட முஸ்லிம்களின் குரலை முஸ்லிம் கவிதைச் செயற்பாட்டாளர்கள், அவற்றின் அதிகாரங்களை நோக்கி உண்மையை உரத்துப் பேசும் கலகக் கவிதைப் பிரதிகளில் ஒலிக்க விட்டனர். இந்த எதிர்ப்புக் குரல் ஒரு தனிக் கவிதை இயக்கமாகவே எழுச்சியுறுமளவிற்கு 90-களில் முனைப்புப் பெற்றது. இந்த எதிர்ப்புக் கவிதை இயக்கத்தை சோலைக்கிளி, ஓட்டமாவடி அறபாத், என். ஆத்மா, ஏ.ஜீ.எம். ஸதக்கா, அஷ்ரஃப் சிஹாப்தீன், றஷ்மி, அனார், அலறி, இளைய அப்துல்லாஹ், முல்லை முஸ்ரிபா, நவாஸ் சௌபி, றியாஸ் குரானா, எஸ். நளீம், பஹீமா ஜஹான், ஜிஃப்ரி ஹாஸன், மருதமுனை விஜிலி, ஏ.எம். குர்ஷித், கிண்ணியா ஏ.நஸ்புள்ளாஹ், கிண்ணியா சபருள்ளாஹ் மற்றும் பலர் முன்னெடுத்தனர்.

எனினும் அந்த கவிதை இயக்கம் பின்நவீனக் கோட்பாடு பற்றிய அறிமுகத்தினாலோ, புரிதலினாலோ அல்லது அதன் மீதான ஈடுபாட்டினாலோ வந்ததல்ல. அது தனது சமூகத்துக்கெதிராக புறத்திலிருந்து பிரயோகிக்கப்பட்ட அதிகாரங்களை எதிர்த்து நிற்கும் ஒருவித இனப்பற்றுடன் கூடிய செயற்பாடாகவே மேற்கிளம்பியது. இவர்கள் பெருந் தேசியவாத அரசியல் அடக்குமுறைகளை எதிர்க்கும் கலகக் கவிதைகளை புனைந்ததோடு மிகவும் பிளவுபட்ட, பன்மைத்தன்மை வாய்ந்த, அடையாள அரசியலுக்கான பாதையையும் அமைத்தனர். மேலாதிக்கச் சொல்லாடலுக்கெதிராக விளிம்பு நிலைப்படுத்தப்பட்ட அடையாளத்தின் சுயபிரக்ஞையை வலியுறுத்துவதையே இந்த முஸ்லிம் கவிதைச் செயற்பாட்டாளர்கள் இக்காலப்பகுதியில் முன்னெடுத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் இந்த கட்டுரை அளவுப் பொருத்தம் கருதி இவர்களில் ஒரு சில கவிஞர்களின் கவிதைகளைப் பற்றி மட்டுமே அதுவும் மிகச் சுருக்கமாக கவனத்திற்கொள்கிறது.

ஒரு காலத்தில் போருக்குள் சிக்கிக் கிடந்த ஈழத்து தமிழ் முஸ்லிம் கவிதை இன்று அதன் பரப்பை குறுகிய கால எல்லைக்குள் மிக வேகமாக விரிவுபடுத்திக்கொண்டு விட்டது. ஈழத்து தமிழ் முஸ்லிம் கவிதைகள் இந்த வளர்ச்சித் தன்மையை வெளிப்படுத்துவதற்கு ஒரு சில கவிஞர்கள் முக்கிய பங்களிப்பை வழங்கினர். இவர்களில் அனார், மஜீத், றியாஸ் குரானா, ஜமீல், றஸ்மி போன்ற கவிஞர்கள் இந்தப் புதிய மாற்றங்களின் முன்னோடிகளாக விளங்குகின்றனர்.

இந்த மாற்றம் கவிதையின் எடுத்துரைப்பு முறையிலும் உள்ளடக்கத்திலும் நிகழ்ந்து ஈழத்து தமிழ் முஸ்லிம் கவிதைவெளியை ஒரு புதிய தளத்துக்கு கொண்டு சென்றுள்ளது.

ஈழத்து தமிழ் முஸ்லிம் பின்-நவீனக் கவிதைவெளியை பின்-நவீனக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு பின்வரும் வகைப்பாட்டினை நாம் செய்து கொள்ள முடியும்.

  1. பின்-நவீன அரசியல் கவிதைகள்
  2. பின்-நவீன அழகியல் கவிதைகள்
  3. பின்-நவீனப் பெண் மற்றும் சிறுவர் வெளி

.

  1. பின்-நவீன அரசியல் கவிதைகள்

புற அதிகாரத்தினால் விளிம்பு நோக்கித் தள்ளப்பட்ட முஸ்லிம் சிறுபான்மையினர் குறித்த சிறுபான்மைக் கதையாடலுக்கான தேவையை கோரும் வகையில் சோலைக்கிளியின் கவிதைக் குரல் ஒலித்தது. இவர் அதிகாரத்துக்கெதிரான தன் எதிர்ப்புக் குரலை குறியீடுகளாலும், படிமங்களாலும் வெளிப்படுத்தினார்.

“அந்தக் கிராமத்தின் குழந்தைகளை
பேய்கள் சப்பியதாக நட்சத்திரங்கள் சொல்லிச் சொல்லி விழுந்தன”

சோலைக்கிளியின் இந்த எதிர்ப்புக் குரலுடன் மேலும் பல எதிர்ப்புக் குரல்கள் முஸ்லிம் கவிஞர்களிடமிருந்து ஒலிக்கத் தொடங்கின.

தொழிலுக்காக சென்று காடுகளில் வைத்துக் கொல்லப்பட்ட தந்தைமாரின் மக்கள், சமூகத்தில் மேலும் மேலும் எவ்வாறு விளிம்புக்குச் செலுத்தப்பட்டார்கள் என்பதை ஓட்டமாவடி அறபாத்

‘மையிருட்டில் நீ புத்தகத்தில் மயிலிறகைப் பத்திரப்படுத்துகிறாய்
உன் வாப்பாவைக் கேட்டுச் சவுத்து’

என பதிவு செய்தார்.

எஸ்.நளீம் முஸ்லிம்களின் விளிம்புநிலைக் குரலை இப்படிப் பதிவு செய்தார்-

‘நண்பர்களே! நீங்கள் நாடு கேட்கிறீர்கள் அதனால்
நீங்கள் நாடு காக்கிறீர்கள் ஆனால் நான் என்ன கேட்டேன்
இறக்கவும் இழக்கவும்..’

ஈழத்து தமிழ் முஸ்லிம் பின்-நவீன அரசியல் கவிதைவெளியில் புலிகள் இயக்கத்தில் அப்போது இணைந்து செயற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் கவனங் கொள்ளப்படும் ஒரு சாராராக விளங்குகின்றனர். முல்லை முஸ்ரிபாவின் ‘மயூரா என்றாகிவிட்ட நிஸ்மியாவுக்கு’ என்ற கவிதையிலும், தீரன் ஆர்.எம். நௌசாத்தின் ‘மாவீரர் மேஜர் அன்பு என்கிற முஹம்மது அன்வர் ஞாபகமாக’ என்ற கவிதையிலும் மேலும் சில கவிதைகளிலும் அவர்கள் கவனங் கொள்ளப்படுகின்றனர்.

ஈழத்து தமிழ் முஸ்லிம் பின் நவீனக் கவிதைவெளியின்  அரசியல் குரல் 90-களில் ஒலிக்கத் தொடங்கியபோதும் அவை ஈழத் தமிழ் பொதுக் கவிதைப் போக்கிலிருந்து வித்தியாசங்களைக் காண்பிக்கவில்லை. இதில் 80-களில் சோலைக்கிளியைப் போன்று 90-களில்  வித்தியாசங்களைப் பதிவு செய்தவர் றஷ்மி. ஈழத் தமிழ்க் கவிதையின் வடிவ அமைப்பில் ஒரு தளமாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு அவர் ஈழத் தமிழ்க் கவிதையின் பொதுப்போக்கிலிருந்து விலகிச் செல்லலானார். அவரது வித்தியாசம் கவிதைத் தலைப்பிடலிலிருந்து தொடங்கியது. ‘காவு கொள்ளப்பட்ட வாழ்வு‘ முதலாய கவிதைகளில் இந்த வடிவ மாற்றம் தென்பட்டது. கவிதைகளில் சொற்களை இடம் மாற்றிக் கையாளும் முறையை முதன் முதலில் றஷ்மியின் கவிதைகளில் தான் காண முடிந்தது.

நிகழ்த்திக் காட்டியது” என்பதை ‘காட்டிற்று நிகழ்த்திக்” என கருத்துச் சிதைவின்றி சொற்களை இடமாற்றிக் கையாளும் முறை நமது ஈழத் தமிழ்க் கவிதைகளில் தொடர்ச்சியான ஒன்றா அல்லது புதுமையானதா என்பது ஆய்வுக்குரியது. றஷ்மியின் கவிதைப் புனைவானது பெரும்பாலும் அரசியலைப் பேசுபவையாகவே இருந்தது. அது 2004-ல் சுனாமி ஏற்படும்வரை தனது பரப்பெல்லையை விரிவுபடுத்த தவறியிருந்தது.

ஆயினும் இந்த முஸ்லிம் கவிஞர்களின் பின்-நவீன அரசியல் கவிதைகள் முஸ்லிம்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் பற்றிப் பேசியனவே ஒழிய ஒடுக்கும் குழுக்களிலிருந்து தங்களை வித்தியாசப்படுத்தும் சிறுபான்மைக் கதையாடலை வலுவாகப் பதிவு செய்யத் தவறியிருந்தன. அதற்குக் காரணம் அப்போது இந்தக் கவிஞர்களுக்கு பின்-நவீனத்துவம் பற்றிய கோட்பாட்டுப் புரிதல் அல்லது ஈடுபாடு இல்லாமல் இருந்ததுதான்.

ஈழத்து தமிழ் முஸ்லிம் பின்-நவீனக் கவிதைவெளியின் அரசியல் குரலை பின்-நவீனக் கோட்பாட்டோடு கொண்ட ஈடுபாட்டினூடாக வெளிப்படுத்தியவர் கவிஞர் மஜீத். கவிதையின் வடிவ அமைப்பில் றஷ்மி ஏற்படுத்திய தளமாற்றத்ததை மஜீத் இன்னொரு வடிவில் அல்லது இன்னொரு தளத்தில் நிகழ்த்திக் காட்டினார் ஈழத்து பின்-நவீன அரசியல்வெளியைப் பதிவு செய்த கவிதைகளில் கவித்துவம் மிக்கதும், பின்-நவீன அழகியல் உள்ளதுமான கவிதைச் செயற்பாட்டாளன் என்ற வகையில் மஜீத் முன்னோடியாக நிற்கிறார். அவரைத் தொடர்ந்த பங்களிப்பாளராக நவாஸ் சௌபி, ஜிஃப்ரி ஹாஸன் போன்றவர்கள் வருகின்றனர். மஜீதின்  ‘புலிகள் பாய்ந்த போது இரவுகள் கோடையில் அலைந்தன’ எனும் கவிதைப் பிரதி இரு பெரும்பான்மைத் தேசியங்களாலும் விளிம்பு நோக்கித் தள்ளப்பட்ட முஸ்லிம் சிறுபான்மையினரின் அரசியல் தன்னிலையை நுட்பமாகப் பதிவு செய்தது. இங்கு மஜீதின் கவிதைக் குரல் சொல்வதைப் போன்று,

“கோடையை எதிர்ப்பின் அடையாளமாகக் கருதுகிறாள்”

வெளியற்று அலையும் ஒரு மக்கள் திரளின் துயரச் சித்திரத்தை மஜீத் இப்படி வரைந்தார்;-

“எனது வெளியை பங்கு போட்டு
சிங்கங்களும், புலிகளும் பகிர்ந்து கொண்டன”

இங்கு தமது அடையாளங்களை, சுதந்திர இருப்பை, தீர்மானிக்கும் அதிகாரத்தை மையங்களுக்கு கொடுக்காமல் தனக்கான அடையாளத்தை தாங்களே உருவாக்கிக் கொள்ளக் கோரும் விளிம்புகளின் கதையாடலை மஜீத் இப்படிப் பதிவு செய்கிறார்-

“உங்கள் கற்பனையை வரைவதற்கு எங்கள் சுவர்கள்
பொருத்தமற்றது எமது நிறங்களையும் எமது சித்திரங்களையும் எமது குழந்தைகள்
வரைவர்”

அதேநேரம் தங்களை ஒடுக்கும் குழுவிலிருந்து தங்களை வித்தியாசப்படுத்திக் கொள்வதன் மூலம் தனி அடையாளங்களை வலியுறுத்துவதன் மூலம் தமது வித்தியாசங்களை இவர்கள் வெளிக்குக் கொண்டு வந்தனர். இந்த அடையாளத்தை வலியுறுத்துவதில் தயவு தாட்சண்யமற்ற ஒரு கடும் தொனி நவாஸ் சௌபியிடமிருந்து வெளிப்பட்டது. விளிம்பு நோக்கித் தள்ளப்பட்ட முஸ்லிம் சிறுபான்மையினருக்கான அரசியல் கதையாடல்களை உருவாக்குவதில் முனைப்பு காட்டுவதில் மஜீதைப் போன்ற தீவிரம் நவாஸ் சௌபியிடமும் இருந்தது. நவாஸ் சௌபியின் கவிதைக் குரலில் மிகத் தீவிரமானதொரு கலகத்தன்மை எப்போதும் இருந்தது.

ஆயினும் நவாஸ் சௌபியின் கவிதைக் குரலின் சீற்றம் அவரது இரண்டாவது தொகுதியான ‘எனது நிலத்தின் பயங்கரம்’ என்ற தொகுதிக்குள் சற்றுத் தணிந்திருந்தது. அதற்குள் ஓர் அழகியல் தன்மையும் சேர்ந்து கொண்டது.

ஆக ஒட்டுமொத்தமாக நோக்கும்போது ஈழத்து தமிழ் முஸ்லிம் பின்-நவீன அரசியல் கவிதைவெளியானது பின்-நவீனக் கூறுகளை முழுமையாக உள்வாங்கி எழுதப்பட்டவையாக அன்றி தங்கள் இனத்தின் மீதான அடக்குமுறையை எதிர்க்கும் ஒருவித எதிர்ப்பரசியலின் கவிதை வடிவமாக மட்டுமே முக்கியத்துவம் பெறுகின்றன.

பின்-நவீன பெண் வெளி

பெண்ணின் தனித்தன்மையையும், சிறப்புத் தன்மையையும் உடைய கதையாடலை உருவாக்குவதன் மூலம் பெண்ணின் சுய அடையாளத்தை பின்-நவீனக் கவிதைச் செயற்பாட்டாளர்கள் பேசினர். இவர்களில் அனார், பஹீமா ஜஹான், பெண்ணியா போன்றவர்கள் முக்கியமானவர்களாக விளங்குகின்றனர். ஈழத்து தமிழ் முஸ்லிம் பின்-நவீனப் பெண்வெளியின் முன்னோடியாகவும், அதிக பங்களிப்பாளராகவும் அனார் விளங்குகிறார். ஆனால் இங்கு அளவுப் பொருத்தம் கருதி அனாரின் கவிதைகள் பற்றி மட்டுமே மிகச் சுருக்கமாக பேசப்படுகிறது.

ஈழத்து தமிழ் முஸ்லிம் பின்-நவீனக் கவிதைவெளியில் விளிம்பு நோக்கித் தள்ளப்பட்ட பெண்களின் பிரச்சினைகள் பற்றிய கவிதைகளும் காணப்படுகின்றன. பெண்களில் சிலர் விளிம்புகளை உருவாக்குகின்ற மையங்களாக மேற்கிளம்பி வரும் இன்றைய சூழலில் விளிம்புகளாக வாழும் பெண்கள்தான் இன்று சமூகத்தில் அதிகமாகவுள்ளனர்.

இங்கு பின்நவீன பெண்வெளி எனும்போது ஆணாதிக்க தந்தைவழி அமைப்பிலிருந்து அல்லது மேலாதிக்கம் கொண்ட ஆண் சொல்லாடலிலிருந்து பெண்கள் விலக்கப்பட்டிருக்கிறார்கள், அத்துடன் அவர்கள் கீழ்நிலைப்படுத்தப்பட்டவர்களாக வரையறுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது அதன் வாதமாக இருந்தாலும் அதன் கருத்துநிலைக்குள் முழுiமையாக அள்ளுண்டு போய் அதற்கான கவிதைப் பிரதிகளை அனாரோ, பஹீமா ஜஹானோ செய்யவில்லை.

உண்மையைச் சொல்லப் போனால், இந்த விடயங்களை பின்-நவீனக் கோட்பாடாகப் புரிவதற்கு முன்னரே அனார் இந்த நிலமைக்கெதிரான கலகக் கவிதைப் பிரதிகளைப் படைக்கலானார். முஸ்லிம் சமூகவெளியில் இஸ்லாமியக் கருத்துநிலைகள் வலுவாகக் கடைபிடிக்கப்படும் சூழலில் அனாரோ, பஹிமா ஜஹானோ தங்களது கவிதைப் பிரதிகளில், சமய சமூக வரையறைகளைத் தாண்டாது, ஏற்றுக்கொள்ளத்தக்க எல்லைகளுக்குள் நின்று கொண்டனர். இப்படி ஒரு வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் நின்று கொண்டு அனார் அதில் உச்சத்தையும் தொட்டார். வரம்பு மீறும் பிரதிகளை அவர்கள் படைக்கவில்லை என்பதை அவர்களது கவிதைகளைப் பற்றி செவிவழியாக கேள்விப்பட்டவர்களன்றி உண்மையில் வாசித்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

முஸ்லிம் பண்பாட்டின் பெண் குறித்த பொதுக்கூறுகளை மீறாமல் அனார் உருவாக்கும் பெண்வெளி ஒரே சமயத்தில் பெண் படைப்பாளியாகவும், அதன் பாத்திரமாகவும் இருப்பதன் சிக்கல்களையும் பேசுகிறது. அனார் உருவாக்கும் பெண்கள் தீவிர மேலைத்தேயப் பெண்ணிலைவாதிகளின் குரலிலன்றி தமக்குச் சொந்தமான குரலில் பேசுபவர்கள்.

கனவுகள் காண ஏங்கும் கனவு’ (சுலைஹா கவிதை) என தனக்குள்ளும் தனக்கு வெளியேயுமிருக்கும் பெண்ணை அறிமுகப்படுத்திக் கொள்கிறார் அனார். இன்னுமொரு கவிதையில், ‘தம் கனத்த வாழ்நாளின் நெடுங்கதையை’ ஆண் குரலின் முன்னால் மௌனித்துக்கிடந்த பெண்வெளியில் சீற்றத்துடன் பேசத் தொடங்குகிறார். பெண்ணின் உலகத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்துவதற்கான கிட்டத்தட்ட எல்லா வகையான சாத்தியப்பாடுகளையும் அனார் தனது கவிதைகளில் செய்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

பெண் என்றால் யார் என்பதை அறிமுகப்படுத்தும் அனாரின் கவிதை ஒரு அறிவிப்பு போல் வெளியாகிறது. பெண்ணின் வாழ்வைச் சுற்றியுள்ள மாயக் கட்டுகளை அவிழ்த்து விடும் மர்மச் சொற்கள் சுதந்திரமாய் தெறித்து வருகின்றன.

“நீளமான நூலாய்த் தெரிகின்றது இரவு
நான் தனித்த மண்புழு சிறுகச்சிறுக நீளுகின்றேன்
தொடர்ந்து நீளமான வௌ்ளை நூல் தெரியும் வரை”
– (‘மண்புழுவின் இரவு‘)

இந்தக் கவிதை ஒரே நேரத்தில் மண்புழு பற்றியதாகவும் மண்புழுவான பெண் பற்றியதாகவுமிருக்கிறது. இந்தக் குரல் ஒரு எதிர்பார்ப்பை, ஒரு மாற்றத்தை எதிரொலிக்கிறது. இருள் என்ற விளிம்புக்குள் தள்ளப்பட்ட பெண்களுக்கான வெளிச்சத்தைக் கோரும் கவிதை அது.

உன்னுடைய சொற்கள் அறுவடைக் காலத்தின்
நெற்கதிர்கள்

என இன்னொரு கவிதையில் குரல் தாழ்த்தப்பட்ட பெண்களின் சொற்களுக்கு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறார்.

பொதுவான பார்வையில் கவிதைகளில் விபரிக்கப்படுவது போன்ற நெருக்கடிகளை பெண்கள் உண்மையில் அனுபவிப்பதில்லை என்ற பார்வை நமக்குள் இருக்கலாம். அது ஒருவகையில் உண்மையாக இருந்தாலும், பிரச்சினை என்பதை வெறுமனே உடல் சார்ந்த வன்முறையாக மட்டும் பார்க்காமல் பெண்ணின் அக உலகம் சார்ந்ததாகவும் பார்க்கப்பட வேண்டும் என்ற பார்வையையும் அனார் ஏற்படுத்துகிறார்.

அனாரை ஈழத்து தமிழ் முஸ்லிம் பின்நவீனக் கவிதைவெளியின் பெண் குரலாக மட்டுமே பார்ப்பதும் அவரது பங்களிப்பை குறைத்து மதிப்பிடுவதாக அமைந்துவிடும். ஈழத்து தமிழ் முஸ்லிம் பெண்வெளியானது அவரது முதன்மையான பங்களிப்பும் முன்னோடி நிகழ்ச்சியுமாகும் என்றளவில் மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்தது. மற்றபடி அவரது கவிதைகள் பன்முகப் பார்வை கொண்டவையாகவும் தமிழின் விரிந்த பரப்புக்குரியனவாகவும் விளங்குகின்றன.

உலகக் கவிதைகளோடு எனக்குள்ள பரிச்சயத்தின்படி அனாரின் கவிதைகள் அந்தத் தரத்தில்தான் இருக்கின்றன என்பதை உறுதியாக கூற முடியும்.

விளிம்புக்குள்ளான பெண்கள் பற்றிய ஒரு ஆண் கவிதைக் குரல் ஏ.எம். குர்ஷிதினுடையது. பின்-நவீனத்துவம் கூறும் ‘மற்றமை’ மீது கவனங்கொள்ளுதல் என்ற வகையில் சமூகத்தில் அவஸ்த்தையுறும் பெண்கள் பற்றிய அவரது கவனங்கொள்ளலைக் குறிப்பிடலாம்.

‘முப்பது வயதில் கணவனை இழப்பதும்
தீக்கங்குகளில் உழல்வதும் ஒரே வேதனைதான்’

என விதவைப் பெண்களின் அவஸ்த்தையை சொல்லத் தொடங்கும் குர்ஷித் அந்தக் கவிதைக்குள் விபரிக்கும் விதவைகளின் உலகம் நம்மை சுட்டெரிக்கிறது.

ஈழத்து தமிழ் முஸ்லிம் பின்-நவீனக் கவிதைவெளியில் சிறுவர் வெளியை அதிகம் கவனத்திற்குட்படுத்தியவர் கவிஞர் ஜமீல். சமூக தளத்தில் விளிம்புக்குள்ளான சிறுவர்களின் வெளியை அதன் எல்லா பரிமாணங்களோடும் சித்திரித்தவர் ஜமீல். இதற்கு எடுத்துக்காட்டாக நிறைய கவிதைகளைச் சொல்லலாம். விளிம்பு நிலையிலிருக்கும் சிறுவர்களின் உலகம் ஜமீலின் கவிதைகளில்  கதைகளைப் போல் மையங்கொள்கிறது.

பெரியவர்களால் புறக்கணிக்கப்பட்ட சிறுவர்களின் அகவுலகம் பற்றிய ஜமீலின் கவிதைப் புனைவானது, சிறுவர் வெளி பற்றி நாம் கண்டுகொள்ளத் தவறிய பக்கங்களுக்குள் நம்மை ஒரு குழந்தையைப் போல் அழைத்துச் செல்கின்றன.

காற்றைப் போல் தலைதெறித்து விளையாடும்
தங்களது பிரமாண்டமான கனவுகளை
மனம் விட்டுச் சொல்ல முடியாமல்
தினமும் போர்வைக்குள் மடித்து வைக்கிறது

புறக்கணிக்கப்பட்ட சிறுவர் வெளியை, அந்த விளிம்புகளின் கனவை ஜமீலின் இந்த வரிகள் மிக நுட்பான கவிதைப் புனைவாக ஆக்கியுள்ளன.

ஜமீல் தனது கவிதைப் புனைவுக்கான சொற்களை சிறுவர்களின் உலகத்துக்கு மிக நெருக்கமாக அமைத்திருப்பதும், கவிதைகளில் கடுமையான பாசாங்குத் தன்மையற்றிருப்பதும் அவரின் தனித்துவமான போக்குகளாக உள்ளன. அவரது கவிதைகளில் பின்-நவீன மொழியின் அதீத அழகியலை விடவும்,  விளிம்புகளான சிறுவர்வெளியை பற்றிய ஒரு எளிமையான கதை சொல்லும்  முறைமைக்காகவே ஜமீல் இந்த வெளியில் பேசப்படுபவராகிறார்.

பின்-நவீன அழகியல் கவிதைகள்

பின்-நவீன அழகியல் வெளியில் றியாஸ் குரானா, அனார், நபீல், நவாஸ் சௌபி, ஜிஃப்ரி ஹாஸன், ஏ.நஸ்புள்ளா, ஜெம்சித் ஸமான், றபியுஸ், ஜே.பெறோஸ்கான், சாஜித் அஹமட், ஏ.கே. முஜாரத் போன்றவர்களின் கவிதைகள் மிதந்து கொண்டிருக்கின்றன.

ஈழத்து தமிழ் முஸ்லிம் பின்-நவீனக் கவிதைவெளியின் மற்றுமொரு முக்கிய குரல் றியாஸ் குரானாவினுடையது. பின்-நவீனக் கோட்பாட்டு ரீதியான புரிதலோடும் அதன் மீதான ஈடுபாட்டோடும் தனது கவிதைகளில் புதிய பரிசோதனைகளோடு களமிறங்கியவர் றியாஸ் குரானா. பிரதியை கற்பனையின் சுதந்திரமான விளையாட்டாகக் கண்ட அவர் பின்-நவீன அரசியல் வெளியிலிருந்து தன்னை முற்றாக விடுவித்துக் கொண்டு பின்-நவீன அழகியலின் கவிதைக் குரலாய் ஒலிக்கலானார். கவிதையை வெறும் கவிதைச் செயற்பாடு எனும் தளத்திலிருந்து அதனை ஒரு புனைவுச் செயற்பாடாகவும் ஈழத்துப் பின்-நவீனக் கவிதைவெளியில் தொடர்ச்சியாக நிகழ்த்திக்கொண்டு வருகிறார் றியாஸ் குரானா.

பின்-நவீன அரசியல் கவிதைகளின் குரலாய் ஒலித்துக் கொண்டிருந்த றியாஸ் குரானா அரசியலைத் தவிர்த்து வேறொரு தளத்துக்கு நகர்ந்தபோது இலக்கிய வெளியில் அவர் மீது விழுந்த கவனம் பற்றி அவரது கவிதை வரிகளில் சொல்வதானால்,

‘முன் பின் அறியாத ஒருவனைப் போல் பரபரப்பாக
கவனிக்கப்படுகிறேன்’

என்கிறார். பின்-நவீனத்துவத்தின் அதிகமான கூறுகளை தனது கவிதைகளில் பரிசோதனையாக செய்து பார்த்தவரும் றியாஸ் குரானாதான். அதற்கு காரணம் பின்-நவீனத்துவக் கோட்பாடு மீது அவருக்கிருந்த பரிச்சயமும், ஈடுபாடும்தான்.

பொதுவாக றி. குரானாவின் கவிதை மொழி அதீத புனைவுத் தன்மை கொண்டதாகவும், அதீத கற்பனையுடனும் பயணிப்பவை. அவரது கவிதைகளில் எதுவும் மையமாக அமைவதில்லை. பின்-நவீனத்துவம் கூறும் சிதைவாக்கம் என்பதை இவரது கவிதைகளில் முழு அர்த்தத்தோடு காண முடிகிறது. கவிதையை fiction ஆகச் செய்யும் பணியை வேறு சில கவிஞர்களும் முயற்சித்திருக்கிற போதிலும் அந்தச் செயற்பாட்டில் குரானாவின் கவிதைகள் தனித்துவமிக்கதாய்த் தெரிகின்றன.

அதேநேரம் றியாஸ் குரானாவின் கவிதைகளில் மனிதர்களின் உடல்களைவிடவும், உணர்வுகள்தான் அதிகமும் கொண்டாடப்படுகின்றன. குரானாவின் கவிதைகளிலுள்ள சொற்களை நாம் வேறு வேறு இடங்களுக்கு இடம் மாற்றிப் போட்டாலும் அது இன்னுமொரு கவிதையாய் மாறி விடும் அதிசயம் அவரது கவிதைக்குள் திரும்பத் திரும்ப நிகழ்ந்த படியே இருக்கிறது.

கவிதை வாசகர்களுக்கு முன்வைக்கப்படும் முறைமையில் சில குறிப்பிட்டுச் சொல்லத்தக்க உடைப்புகளை பின்-நவீனக் கவிதைவெளியில் தொடர்ச்சியாக பதிவு செய்தபடி இருக்கிறார். அவரது ‘மாற்றுப் பிரதி’ தொகுப்பிலுள்ள ‘காதலின் தோல்வியுற்ற குறுக்கெழுத்துப் புதிர்”  கவிதை சொல்லும் முறையில் மிக அண்மையில் நிகழ்த்தப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் என்பது என் அபிப்ராயம்.

உலகத் தமிழ்க் கவிதைவெளியைப் பொறுத்தவரை றி. குரானா இந்த வெளியில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க தொலைவுக்குச் சென்றிருப்பதாகவே எனக்குப்படுகிறது. ஆங்கிலக் கவிதை உலகிலும் அவருக்கென ஒரு கவனயீர்ப்பு நிகழ்வது மிக அண்மையத் தோற்றப்பாடாகும். அவரைப் பின்தொடர்ந்து ஒரு இளைஞர் கூட்டம் பயணிப்பது போன்ற ஒரு தோற்றப்பாடும் இன்று தென்படத் தொடங்கியுள்ளது.

அதே நேரம் தற்போதைய குரானாவின் கவிதைகள் முழுமையாக அரசியல் நீக்கம் செய்யப்பட்டதாகவும், அதீத புனைவுத்தன்மை கொண்டதாகவும் மாறி வருகிறது. தொடர்பறு எழுத்து நிலையின் அதீதப் பயன்பாடும் றியாஸ் குரானாவின் கவிதைகளின் இன்றைய சில போக்குகளாக உள்ளன.

பின்-நவீனக் கவிதைவெளியில் மற்றுமொரு குறிப்பிடத்தக்க கவிதைக் குரல் அலறியினுடையது. அலறி பின்-நவீன அரசியல், அழகியல் மற்றும் விளிம்புகள் மீதான கவனம் எனப்பல பின்-நவீனக் கூறுகளை உள்வாங்கிப் புனையும் கவிஞன். அவரது ‘மழையைப் பொழிதல்’ தொகுப்பின் கவிதைகளுக்குள் பின்-நவீனத்துவத்தின் இத்தகைய பன்முகக்கூறுகளை காண முடிகிறது.

அதிகாரத் தரப்புகளால் கொல்லப்படும் அப்பாவிகள் விளிம்புகளாக அலறியின் சில கவிதைகளில் வருகின்றனர். அவரது ‘ஒருவன் கொல்லப்படும் போது’ கவிதையில் விளிம்புகளின் வாழ்வு எப்படி கணக்கெடுக்கப்படாததாக மரணத்தை நோக்கித் தள்ளப்படுகிறது எனும் நிகழ்காலத் துயரை அலறி அந்தக் கவிதையில் பேசுகிறார். அவரது இந்தக் கவிதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு ‘In our Translated World’ எனும் தொகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.

அலறியின் கவிதைகளை வாசிக்கும் போது எளிமையான சொற்களால் வாசக இன்பத்தை பெருக்கெடுக்கச் செய்யும் கவிதைப் பிரதிகளை புனையும் நுட்பத்தை காண முடிகிறது. அதுவே அவரை பின்-நவீனக் கவிதைவெளிக்குள் இழுத்து வருகிறது.

பின்-நவீன அழகியலை மொழியின் கூடுதல் இறுக்கங்களோடும் சூட்சுமங்களோடும் வெளிப்படுத்திய கவிஞர் நவாஸ் சௌபி. அவரது பின்-நவீன அரசியல் கவிதைகளைத் தாண்டி இவை வேறொரு தளத்தில் பயணிக்கின்றன. பெருவெளியில் வெளிவந்த அவரது ‘திருமணத்தின் பின்னரான முதல் கவிதை’ அவரது கவிதை புனைவில் ஒரு அதிரடி மாற்றத்தை அறிவிப்பது போல் இருந்தது. அது நமது பண்பாட்டுப் புனிதங்களிலும் ஒரு சிறு சலசலப்பை ஏற்படுத்தக் கூடிய உக்கிரத்தைக் கொண்டிருந்தது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்து புறப்பட்ட வேகத்துடன்
எனது ஆண்மை அவளது வெட்கம் நிறைந்த அந்தரங்கங்களை
சரி செய்து வியர்த்துப் போகிறது

என்ற வரிகளை வாசிக்கும்போது ஒரு வாசகனின் நெஞ்சு படபட என்று அடித்துக் கொள்வதோடு, வியர்த்தும் கொட்டுகிறது. இப்படி வெடித்துச் சிதறுவதுதான் அவரது கவிதைக் குணம். அது ஒரு மூர்க்கக் குணம்தான். இருந்தாலும் அதுதான் பின்-நவீனக் கவிதைகளின் குணம்.

பின்-நவீன அரசியல் வெளியிலிருந்து முழுமையாக விடுபட்டுள்ள கவிதைகளை எழுதும் கவிஞர் நபீலிடமும் பின்-நவீன அழகியல் கூறுகள் வெளிப்படுகின்றன. நபீலின் கவிதைகளில் தொன்மமும், மரபும் பின்-நவீன அழகியலோடு சில கவிதைகளில் பேசப்படுகின்றன. அவரது கவிதைகள் காலவோட்டத்தில் ஒரு கவிஞன் அடையும் மாறுதல்கள் எதுவுமின்றி ஒரு நேர்க்கோட்டிலேயே இன்னும் பயணித்துக் கொண்டிருக்கின்றன.

கிண்ணியா சபருள்ளாஹ்வின் கவிதைகளும் அகவுணர்வைப் பேசும் கவிதைகளாகவும், பின்நவீன அரசியல், அழகியல் உள்ளவையாகவும் விளங்குகின்றன.

கிண்ணியா ஏ. நஸ்புள்ளாஹ்வின் அண்மைக்காலக் கவிதைகள் ஒரு புனைவின் பண்புகளுடனும் பின்-நவீன அழகியலோடும் பயணிக்கின்றன. அவரது ‘விண்மீன்கள் குறித்த உரையாடல்” என்ற கவிதையில் பின்-நவீனப் புனைவும் அழகியலும் கலந்திருக்கிறது. அவரது ‘இங்கே சைத்தான் இல்லை” தொகுதியின் கவிதைகளும் அண்மைய முகநூல் கவிதைகளும், பின்-நவீன அழகியலுடனும் புனைவின் அதீதத்தன்மையுடனும் பயணிக்கின்றன.

ஆனால் இங்கு முன்வைக்கப்பட்ட கவிஞர்களுக்கப்பாலும் இன்று பலர் பின்-நவீன முஸ்லிம் கவிதைவெளியில் வினைபுரிந்தபடி இருக்கின்றனர். அவர்களையும் உள்வாங்கும்போது இக்கட்டுரை இன்னும் விரிவானதாக அமையும்.

(கடந்த நவம்பர் மாதம் 26, 27 ஆகிய தினங்களில் இலங்கையின் மருதமுனையில் இடம்பெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பொன் விழாவில்  வாசிக்கப்பட்ட கட்டுரையின் சுருக்கித் திருத்தப்பட்ட வடிவம்).

ஒளி வெள்ளத்தின் மறைவில்: ஆதவனின் ‘லைட்ஸ் ஆன், ரெடி ஃபார் தி டேக்!’ – வெ. சுரேஷ்

வெ. சுரேஷ்

Alvin Toffler அவரது ‘Future Shock’ புத்தகத்தில் இருபதாம் நூற்றாண்டின் மனிதனைக் குறித்து Modular Man என்று ஒரு கருத்தை முன்வைப்பார். தொழிற்புரட்சிக்குப் பின் உருவாகி வந்த, நவீன நகர்ப்புற உலகில் வாழும் ஒரு தனி மனிதன் எப்படி பல்வேறு வேஷங்களில் தன்னைப் பொருத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது என்பதையும் சமூக உறவுகளில் ஒருவன் யாருடனும் தன்னுடைய முழுமையான ‘நான்’ ஐ வெளிப்படுத்திக் கொள்ளும் தேவை இல்லாத, அல்லது முடியாத, ஒரு சூழல் உருவாகி இருப்பதையும் விவரித்திருப்பார்.

நவீனத்துவத்துக்கு முன் இருந்த சமூகங்களில் இது மாதிரியான ஒரு அவசியம் தனி மனிதனுக்கு ஏற்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். குடும்ப உறவுகளில் பல்வேறு பாத்திரங்களை ஒரு ஆண் ஏற்றிருக்கலாம். மகன், கணவன், அப்பா,  தாத்தா என்று. ஆனால் தன்னைச் சுற்றியிருந்த எளிய பொருளாதார அமைப்பு கொண்ட ஒரு கிராமிய சமூகத்தில் அவன் என்ன தொழில் செயது வாழ்கிறானோ, அதுவே அவன். தான் யாரோ அதிலிருந்து பிறிதொருவனாக அவன் மற்ற சமூக மனிதர்களிடம் அவன் காட்டிக்கொள்ள வேண்டிய அவசியமோ போட வேண்டிய வேஷங்களோ இருந்திருக்காது என்றே தோன்றுகிறது. அதற்கான சாத்தியங்களும் குறைவு.

நவீன காலத்தில் நகர்ப்புறத்தில் வாழக்கூடிய, நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த ஒரு ஆண் பல்வேறு வேஷங்களை ஏற்று நடிக்க வேண்டியிருப்பதன் சிக்கல்களை ஆதவன் அவரது கதைகளில் பேசிய வண்ணமே இருந்தார். அம்மாதிரியான கதைகளில் மிகச் சிறந்த ஒன்றுதான் ‘லைட்ஸ் ஆன், ரெடி ஃபார் தி டேக்!’ என்ற  சிறுகதை.

அலுவலகம் முடிந்து, ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோர் சென்று பொருட்கள் வாங்கிக் கொண்டு வீடு திரும்ப பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் நேரம்தான் இந்தக் கதை நிகழும்  நேரம். தன்னுணர்வு கொண்ட  ஒரு மனிதன் அதற்குள் எத்தனை முகமூடிகளை அணிகிறான் என்பதை மிக அழகாகவும் நகைச்சுவை கொப்பளிக்கவும் சொல்லியிருக்கிறார் ஆதவன்.

முதலில் அங்கே சந்திக்க நேரும் தன் கல்லூரி காலத் தோழியிடம் தன் நிகழ்கால, நடுத்தர வர்க்க, சீரியஸ் வாழ்க்கையை மறைத்துக்கொண்டு, ஆவலுடன் பழகிய கல்லூரிக் காலத்தின் விடலை வேடம், அதன்கூடவே அவளது உயர்வர்க்க, குழந்தைத்தனமான வேடமும் அந்த வேடத்தை ரசித்து, பின் அதில்  சலிப்புற்று வெளியே வந்து  அங்கே மழைக்கு ஒதுங்கி நிற்கும், கல்லூரிப் பெண்களை ரசிக்கும்போது அவர்களால் கண்ணும் களவுமாகப் பிடிபட்டு, அவர்களைப் பெருந்தன்மையுடன் மன்னிக்கும் விட்டேத்தியான கல்லூரிப் பேராசிரியர் போன்ற வேடம், பேருந்து நிலையத்தில் எதிர்ப்படும் அலுவலக நண்பன் தன்னை ஒற்றைப்படையானவனாக, வெறும் அரசு ஊழியராக மட்டுமே பார்ப்பதால் ஏற்படும் சங்கடத்தில் தன்னை நிர்வாணமாக உணரும் தருணம்- அதிலிருந்து அவனைக் காப்பாற்றுவது, அங்கு வரும், அவனது வீட்டருகே வசிக்கும் இருவர். அதில் ஒருவர் வயதானவர், அவரிடம் இவன் என்றோ ஒரு முறை தன்னை இந்தக்கால பொறுப்பற்ற, மரபுகளை மதிக்காத வாலிபனாக காட்டிக் கொள்ளாமல், புதிய இளைய தலைமுறையின் (அவர்களில் ஒருவன் என்றாலும்), போக்கினை விரும்பாதவனாகக் காட்டிக் கொண்டதால், தொடர்ந்து அந்த வேடத்திலேயே அவர் முன் நிற்க வேண்டிய அவசியம்.

கையில் டாம் மொரேசின் கவிதைத் தொகுப்புடன் வரும் அவன் பேட்டையில் உள்ள கல்லூரி மாணவன்தான் மற்றொருவர். அவன் முன், ஆபீஸ் விஷயங்களைத் தவிர இதர விஷயங்களிலும் நாட்டமுள்ள ஒரு அறிவுஜீவி வேடத்தை, முகமூடியை அணிய வேண்டிய நிர்ப்பந்தம். நம் நாயகனை இப்படி மாறி மாறி வேடங்களை அணிந்து நடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்து காப்பாற்றுவது அப்போது அங்கு வரும், அவனது இருப்பிடம் போகும் பேருந்துதான். பேருந்தின் முன் அனைவரும் தங்கள் வேஷங்கள் அனைத்தையும் களைந்து வெறும் மனிதர்களாகி ஓடுவதுடன் கதையை முடிக்கிறார் ஆதவன்.

இது போன்ற ஒரு சூழ்நிலையில், நகர வாழ்வில் இயல்பாகவே ஒருவர் இப்படி இருக்க முடியாதா என்றும் ஏன் அவற்றை வேஷங்கள் என்றும் நினைக்க வேண்டும் என்றும் ஒரு கேள்வி எழலாம். அவை இந்த நாயகனின் வேஷங்கள்தாம் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுவது,  இந்த நடவடிக்கைகளிலிருந்து தனித்து நிற்கும் அவனது தன்னுணர்வும் இத்தகைய நடவடிக்கைகளின்மேல் அவனுக்கு உருவாகும் சலிப்பும்தான். அவற்றின் கூடவே மிக முக்கியமாக, இந்த நிகழ்கவுளின் ஊடாக, அவன் மனம் அந்நேரம் வீட்டில் தன் மனைவி எந்தவித வேஷங்களும் அணிய வேண்டிய நிர்ப்பந்தங்கள் இன்றி இயல்பாக சமைத்துக் கொண்டோ, ரேடியோவில் பாட்டு கேட்டுக்கொண்டோ, குழந்தையிடம் சண்டை பிடித்துக் கொண்டோ இருப்பாள் என்பதை பொறாமையுடன் அவன் நினைத்துக் கொள்வதை ஆதவன் சித்தரிப்பதுதான்.

தன்மை ஒருமையில்  விவரிக்கப்படும் இந்தக் கதையில் எந்த ஒரு பாத்திரத்துக்கும் பெயரே கிடையாது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒரு கோணத்தில், வேஷங்கள் அணிவதில் உள்ள பொய்ம்மையைச் சித்தரிப்பது என்று தோன்றினாலும் இன்னொரு கோணத்தில், சலிக்கும் உண்மையிலிருந்து விடுபட வேஷங்கள் அணிவதில் உள்ள சவாலும் கற்பனைகள் தரும் சந்தோஷத்தையும் ரசிக்கத்தக்கதாகவே கூடத் தோன்றுகிறது. நம்மை நாமே அடையாளம் காண்பதிலும், பிறருக்கு நம்மை வெளிப்படுத்துவதில், நாம் அணியும் வேஷங்களுக்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கத்தான் செய்கிறது.மேலும், நம்மை பிறர் எளிதில் வகுத்துவிட முடியாதபடிக்கு நம்மை நாம் வேறு வேறு அடையாளங்களில் வெளிப்படுத்திக் கொண்டே இருப்பதிலும் ஒரு இயல்பான ஆர்வம் இருப்பதையும் இது வெளிக்கொணர்கிறது.

இரவுக்கு முன் வருவது மாலை” தொகுப்பின் முன்னுரையில் ஆதவன், தான் எழுதுவது குறித்து, “நானென்ன என்னிடமிருந்து தப்ப முயன்று கொண்டிருக்கிறேனா, அல்லது என்னை கண்டுபிடிக்கவா?” என்று கேட்டுக் கொள்கிறார். எழுதுவதற்கு மட்டுமல்ல, நிஜ வாழ்வில் நாம் நடந்து கொள்ளும் முறைக்கும், அணிந்து கொள்ளும் முகமூடிகளுக்குமேகூட இது பொருந்தும். நாம் என்னவாக இருந்தோம் என்பதைக் கடந்தே நாம் எப்படி இருக்க முடியும் என்பதைக் கண்டுபிடிக்க முடிகிறது. அதே சமயம், நாம் எப்படி இருக்க முடியும் என்பதைக் கண்டு கொள்வதால் நாம் என்னவாக இருந்தோம் என்பதும் இல்லாமல் போவதில்லை. தன்னுணர்வின் திரைக்குப்பின் களைவதும் புனைவதும் வேடங்களாகவே எப்போதும் இருக்கின்றன, அவை உறவுகளில் ஒரு சுவையான நாடகத்தன்மை சேர்ப்பதையும் இந்தக் கதையைப் படிக்கும்போது உணரலாம்.

அன்றாடத்தின் வினோதங்கள் – மாயக்கூத்தனின் ‘பாராமுகம்’

பீட்டர் பொங்கல்

செகாவ் தன் சகோதரருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் ஒரு நல்ல சிறுகதையின் ஆறு இயல்புககளாய் இவற்றைச் சொல்கிறார்:

1. அரசியல், சமூகம், பொருளாதாரம் குறித்து நீண்ட விவரணைகள் இல்லாமை

2. முழுமையான புறவயப்பட்ட பார்வை

3. மனிதர்கள் மற்றும் பொருட்களின் மெய்ம்மைச் சித்தரிப்பு

4. மிகக் கச்சிதமான வடிவம்

5. துணிச்சலும் புதுமையும்: ஸ்டீரியோடைப்புகளைத் தவிர்ப்பது

6. கருணை

செகாவ் கதைகள் குறித்த நீண்ட ஒரு விவாதம் இங்கிருக்கிறது. இதில் மேற்கண்டவிஷயங்கள் குறிப்பிடப்படுகின்றன. தன் கதைகளில் அன்றாட வாழ்வை விவரிப்பதில் தீர்மானமாயிருந்தார் செகாவ் என்று எழுதும் கட்டுரையாளர் கிறிஸ்டினா வார்ட்-நிவென், செகாவ் உண்மையாகவும் புதுமையாகவும் எழுத விரும்பியதால் அவரது புனைவில் உள்ள அன்றாடக் காட்சிகள் வினோதத்தன்மை கொண்டிருக்கின்றன என்கிறார்- “நமக்குப் பழக்கப்பட்டசூழ்நிலத்தில் வினோதத்தன்மையை அனுமதிப்பதால், நாம் வாசகர்களை ஆச்சரியப்படுத்தி, அவர்கள் சற்று தாமதித்து, கவனம் செலுத்தச் செய்யலாம் – அப்போது ஒருவேளை அவர்கள் தமக்குப் பழக்கப்பட்ட ஒரு மானுட உண்மையை புதிய வெளிச்சத்தில் கண்டு கொள்ளக்கூடும்“.

oOo
மாயக்கூத்தனின் ‘பாராமுகம்‘ நானூற்றுக்கும் குறைவான சொற்கள் கொண்ட குறுங்கதை. அதன் மையம், கதையின் மத்தியில் வருகிறது – “போன வாரம், தெருவில் கசிந்த நீரை உறிஞ்ச, அப்பனும் மகனும் மண்ணைப் போட்டுக் கொண்டிருந்தார்கள். மகாதேவன் இவர்களை ஒரு சிரிப்போடு கடந்து சென்றார். கொஞ்சமும் இளப்பம் இல்லாத சிரிப்பு. கருணையும் அன்பும் நிறைந்த புன்னகை. சீனு ஆச்சரியப்பட்டான்; இவன் உதட்டை விரிப்பதற்குள் அவர் போய்விட்டார்.

சீனிவாசன் கட்டிய வீட்டிலிருந்து கழிவு நீர் வெளியேற வழியில்லை- இவர்கள் இருந்த குறுக்குத் தெரு அரசு வரைபடத்தில் விட்டுப் போயிருந்ததால் இவர்களுக்குச் சாக்கடை இணைப்பு கிடைக்கவில்லை. கழிவு நீர் வெளியேறினால் மகாதேவன்கள் சண்டைக்கு வருகிறார்கள் – “ஊரில் இதுவரை கொசுவே இல்லாதது போலவும், இனி கொசு வந்து தன்னைக் கொத்திக் கொண்டு போய்விடும் என்பது போலவும் கத்தினார்“. அக்கம் பக்கத்தில் எல்லாரும் பகை. மகாதேவன் வீட்டு அம்மா சொன்னது போல் வீட்டுக்குள்ளேயே கழிவு நீர் சுற்றி வந்து ஒரு குழிக்குள் வடியும் வகையில் ஏற்பாடு செய்கிறார்கள், ஆனாலும் அவ்வப்போது குழி நிறைந்து நீர் தெருவில் கசிகிறது.

அப்படியான ஒரு சமயம்தான் மகாதேவன் இவர்களைப் பார்த்து நட்பாக புன்னகைக்கிறார்- நடக்காத ஒன்று நடக்கும்போது பேச்சு வழக்கில் சொல்வது போல், மழை பெய்வது மட்டுமல்லமட்டுமல்ல, உலகமே அழிந்து விடுகிறது. அப்போது பிடித்துக் கொள்ளும் மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது, வீட்டுக்குள் வெள்ளம் வந்து விடும் போலிருக்கிறது. சீனிவாசன்,

மெதுவாக ஒரு படியிறங்கி, கால் கட்டை விரலைத் தண்ணீரில் ஆழ்த்தினான். குளிர்ந்தது.

“காலை எடுத்துவிட்டான். நீர் பட்ட இடம் என்னவோ போல் இருந்தது. குனிந்து பார்த்தான்; கட்டைவிரலைக் காணவில்லை. தண்ணீரில் கரைந்துவிட்டது. வலியே இல்லை.”

இதற்கப்புறம் சீனிவாசன் செய்வது இந்த உலக வாழ்க்கையின் உக்கிரத்தை மிக எளிமையாக, ஒரு சொல் இல்லாமல் உணர்த்துகிறது. கதை கச்சிதமான முடிவுக்கு வருகிறது.

ஆனால் அதற்கப்புறம் ‘யுகசந்தி‘ என்று ஒரு வார்த்தை, அதன் உறுத்தலுடன் நெருடுகிறது. அது இல்லாமல் கதையின் உலகம் முடிவுக்கு வருவதில்லை என்பதால் தவிர்க்க முடியாத வார்த்தைதான். ஆனால், அது நம்மைக் கதையிலிருந்து வெளியே கொண்டு வந்துவிடுகிறது. இது சரியா தவறா என்று எப்படிச் சொல்ல முடியும்?

பாராமுகம், மாயக்கூத்தன்.

பற்றுகை

காலத்துகள்

அந்த வருட சுதந்திர தின  விழாவிற்கான நிகழ்ச்சிகளையும் அதில்  பங்கேற்பவர்களையும் க்ளாஸ் டீச்சர் ராவ்  தேர்வு செய்து கொண்டிருந்தார்.  எல்லா நிகழ்ச்சிகளிலும் பாடும் முருகவேல், பரத நாட்டியம் ஆடும் உமா, நாடகத்தில் நடிப்பவர்கள் என எப்போதும் போல் சிலர் இந்த வருடமும் பெயர் கொடுக்க, விருப்பமில்லாத  வேறு சிலர் வழக்கம் போல் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த மாதிரியான நேரங்களில் பங்கு பெறுபவர்களின் இறுதி பட்டியல் தயாராகும்வரை  மாட்டிக்கொள்ளக் கூடாது என்ற பதட்டத்தோடு தன் மீது கவனம் விழாதவாறு அமர்ந்திருந்தவன் வகுப்பு முடிந்ததற்கான மணி அடிக்க, இம்முறையும் பிழைத்து விட்டோம் என்று தன் மன இறுக்கத்தைத் தளர்த்திக் கொண்டிருக்கும்போது  ”இன்ட்ரவெல்ல ஸ்டாப்  ரூமுக்கு வாடா” என்று சொல்லிவிட்டுச் சென்றார் ராவ்.

ஆசிரியர் அறைக்குள்  நுழைந்தவனிடம் ‘கண்ணன் ஒங்க தாத்தா பத்தி சொன்னான்டா’ என்று ஆரம்பித்தார். இவன் ஒன்றும் புரியாமல் பார்க்க, ‘ஆர்மில இருந்தார்ல?’ என்று கேட்டார். ‘எஸ் ஸார்’, என்றவனிடம், ‘ப்ரீடம் ஸ்ட்ரகுள்லகூட பார்டிசிபேட் பண்ணிருக்கார்ல’, என்று மீண்டும் கேட்டதற்கு எதுவும் பதில் சொல்லாமல் நின்றான். ‘என்னடா, கண்ணன் அப்படித்தானே சொன்னான்’, என்றார் ராவ்.  .’இல்ல ஸார்…’ என்று முனகியவனிடம்  ‘என்னடா இல்ல ஸார், அப்போ  அவர் ப்ரீடம் பைட்டர் இல்லையா, கண்ணன் சும்மா சொன்னான்னா?’என்று கருணாகரன் ஸார் கேட்க, ‘அப்டி இல்ல ஸார்’ என்று இழுத்தான். ‘இந்த வருஷம் இன்டிபென்டென்ஸ் டே பங்க்ஷல யாராவது ப்ரீடம் பைட்டர சீப் கெஸ்ட்டா போடலாம்னு ஐடியா இருக்கு’ என்ற ராவிடம்,  ‘தாத்தா பேசுவாரான்னு தெரியாது ஸார்,’ என்று முனகினான். ‘என்னடா அலட்ற?’ என்று கருணாகரன் ஸார் அடிப்பதுபோல் போலியாக கையோங்கியபடி வந்தார்.  ‘ஸார், அப்டிலாம் இல்ல ஸார்…” என்று அவன் மீண்டும் முனகவும், ‘சரி போடா’, என்று சலித்த குரலில்  ராவ் சொன்னார்.

சென்ற மாதம் நடந்த  சாதாரண நிகழ்வுதான்.  தேசிய அளவில் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருந்த அந்த பதினைந்து பதினாறு வயது சிறுவன் சில மாதங்களுக்கு முன் நடந்த வெஸ்ட் இண்டீஸுடனான தொடரில் சேர்க்கப்படாதது குறித்தும், அடுத்த வரவிருந்த பாகிஸ்தானுடனான தொடரிலாவது சேர்க்கப்படுவானா என்பது குறித்தும் மாலை வீட்டிற்கு வெளியே சந்துருவுடனும் கண்ணனுடனும் பேசிக்கொண்டிருந்தான். இரானி ட்ரோபியில் அவன் அடித்திருந்த சதத்தை முன்வைத்து  இவனும் சந்துருவும் அவன் சேர்க்கப்பட வேண்டுமென்ற கட்சியில் இருந்தார்கள். பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்களை அந்தச் சிறுவனால் எதிர்கொள்ள முடியாதென்பது கண்ணனின் வாதம். ‘அவன் இண்டர்வ்யு வந்துதே, சண்டே  அமர்நாத் கிரிக்கெட் டிவி ப்ரோக்ராம் பாத்திருக்கியா, வெஸ்ட் இண்டீஸ் பௌலர்ஸ பேஸ் பண்ண ரெடின்னு தைரியமா சொன்னான், பௌனஸ்னால பால் ஈஸியா பாட்க்கு வரும்னான்’.

‘பாக்கலாம்டா, பர்ஸ்ட் செலக்ட் ஆகட்டும்,  அவன பத்தி எழுதிருக்கறத படிச்சுட்டு எங்கப்பா ஒன்னோட மூணு நாலு வயசுதான் பெரியவன், எவ்வளவு அச்சீவ் பண்றான் பாருங்கறார்’, என்றான் கண்ணன். அவனுடைய தந்தை மூவருடைய க்ளாஸ் டீச்சராகவும் இருப்பதால், அவன் முன்  அவர் குறித்த விமர்சனங்கள் குறித்து  ஜாக்கிரதையாக, அவருடைய பட்டப் பெயரை கூட உச்சரிப்பதை தவிர்த்துதான், இருப்பார்கள். எனவே பொத்தாம்பொதுவாக கண்ணனுக்கு ஆசுவாசம் அளிக்குமாறு பேசிக்கொண்டிருக்கும்போது கோவிலுக்கு செல்வதற்காக வெளியே வந்த இவன்  தாத்தா,  ‘கோந்தே உள்ள போய் பேசு, பனியாருக்கு பாரு, இல்லன்னா மப்ளர் கட்டிக்கோ,’ என்று  சொல்லியபடி  இவன் தோளைத் தொட்டு அணைக்கவும், அவன்  விலகி உள்ளூர நெளிந்தான். இவனுடைய அசௌகர்யத்தை கவனித்த கண்ணன், ‘என்னடா கோந்தேங்கராறு, நைட் சாப்பாடு தாத்தாதான் வூட்டி உடுவராடா ‘ என்று கிண்டலாகக்  கேட்கவும், ‘இவங்க பாட்டி இவன கூப்டறது உனக்கு தெரியாதுல்ல, அது இத விட சூப்பராருக்கும், என்னடா சொல்லட்டுமாடா,’ என்று ராகத்துடன் ‘கிக்.. கி… கி ..’ என்று  அப்பெயரைச் சொல்ல ஆரம்பித்த  சந்துருவை, ‘சும்மாருங்கடா, உள்ள போலாம்’ என்று இடைமறித்து  அழைத்துச் சென்றான்.

‘இந்த தாத்தாதான ஆர்மில இருந்தார்னு சொன்ன?’ என்று கண்ணன்  இவனிடம் கேட்டான். முழங்கை வரை நீளும் வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி, இன்னும் ஆக்கிரமிக்க மிகக் குறைவான இடத்தை மட்டும் விட்டு வைத்திருந்த வழுக்கை, மழிக்கப்பட்ட மீசை, அகன்ற நெற்றியில் விபூதிப் பட்டை, முகத்தை நிறைத்திருக்கும் மென்மை எல்லாமே இவனுக்கேகூட அவ்வப்போது அந்த சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ‘ஆமாண்டா தோ வரேன் இரு,’ என்றவன், உள்ளறைக்குச் சென்று தாத்தா ஊரில் தன் வீட்டில் வைத்திருக்காமல் இவர்கள் வீட்டில் ப்ரேம் செய்து மாட்டி வைத்திருந்த பதக்கங்களை எடுத்து வந்தான். அவற்றை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்த கண்ணன், ‘என்னடா இந்த மெடல் வித்தியாசமா இருக்கு,’ என்று சிவப்பு வெள்ளை நீல நிறக் கலவையில்  சிலுவை வடிவில் நெய்யப்பட்ட  துணி பதிக்கப்பட்டிருந்த பதக்கத்தைப் பற்றி கேட்க, இவன்  அவசரமாக, ‘தாத்தா ஆர்மில சேர்றதுக்கு முன்னாடி ப்ரீடம் ஸ்ட்ரகிள்ல பார்டிசிபேட் பண்ணிருக்கார்டா’ என்று பொய் சொல்லி விட்டான்.

இவன்  தாத்தா சுதந்திரத்திற்கு முன்பு  இளம் வயதில் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில்  சிப்பாயாக சேர்ந்ததும்,  உலகப் போரின்போது  அவர் மத்திய கிழக்கின் போர் முனைகளுக்கு அனுப்பப்பட்டதும், பின் சுதந்திர இந்திய ராணுவத்தில் பணியாற்றி கேப்டனாக ஓய்வு பெற்றதும் அவனுக்குத் தவறாகத் தெரியவில்லை என்றாலும், விடுதலைப் போராட்ட வீரர் ஒருவர் பற்றிய சிறு குறிப்புடன் அவர் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமீபத்திய பூந்தளிர் இதழில் பார்த்ததிலிருந்து அது குறித்த ஒரு சிறிய ஏக்கம் மட்டும் உருவாகி இருந்தது.  அதனால்தான் இவன் அப்படியொரு பொய் சொல்லியிருக்க வேண்டும், ஆனால் கண்ணன் தொடர்ந்து கேட்ட கேள்விகளை சமாளிப்பது பெரும் பாடாகி விட்டது. அவன்தான் தன் தந்தையிடம்  உளறி வைத்திருக்க வேண்டும்.

தப்பித்த  உணர்வோடு வெளியே வந்து  தண்ணீர் குடிக்கும்போது இடைவேளை முடிவிற்கான  மணி அடித்தது.  இந்த வகுப்பு  அடிக்க அஞ்சாத  மார்கரெட் மிஸ்ஸுடையது என்பதால் வேகமாக நடக்க ஆரம்பித்தவன்,  வழியில் பெண் ஆசிரியர்களின் அறையில் இருந்து திருத்தப்பட்ட ரெகார்ட் நோட்டுக்களுடன் வந்து கொண்டிருந்த உமாவை  எப்போதும் போல்  கள்ளப் பார்வை பார்த்தவன் அவள் பார்த்ததும் தலையை திருப்பி கடந்து செல்ல முயன்றான்.

‘ஒங்க தாத்தா ப்ரீடம் பைட்டரா?’ இவனுடைய திருத்தப்பட்ட விடைத்தாள்களை மற்றவர்கள் மூலமாக பெற்று பார்வையிடும், ஆனால்  இதுவரை நேரில் ஒரு வார்த்தைகூட இவனிடம் பேசியிராத உமா இப்போது இவனிடம் வலிய வந்து பேசுகிறாள். மையமாக தலையை ஆட்டி வைத்தான்.

 ‘அவர் பங்க்ஷனுக்கு வருவாரா’

‘தெரியல, சாருக்கு இப்போ வேற ஐடியா இருக்குன்னு நெனக்கறேன்’

தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஏதாவது பேசலாம் என்று திரும்பியவன் கண்ணில் பள்ளி மேடையின் முன் இருந்த கொடிக்கம்பம் கண்ணில்பட, எதுவும் சொல்லாமல்  மௌனமாக நடந்த வகுப்பை  நெருங்கவும் சற்று பின்தங்கினான். உமா வகுப்பறைக்குள் போனபின் கொஞ்சம் பிந்திச் சென்று, “ஸார் பாக்கச் சொல்லிருந்தார்”, என்று சொல்லியதை  சற்று சந்தேகத்தோடுதான் மிஸ் ஏற்றுக்கொண்டார். தன் இடத்திற்குச் சென்று அமர்ந்தான்.  ‘என்ன தம்பி  பின்னாடியே  வர’, ‘ப்ராடு ஒண்ணாத்தான் வந்த்ருப்பான், ஓட்டுவோம்னு தனியா வந்தமாறி வரான்,’ போன்ற சீண்டல்களை  எப்போதும் போல்  உள்ளூர  ரசிக்க முடியவில்லை.

ராவ் இவன்  தெருவுக்கு அடுத்த தெருவில் வசிப்பதையும் அவருக்கு இவன்  வீடு தெரியுமென்பதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தப்பி விட்டதாக எண்ணியது  தவறு. அடுத்த நாளான சனிக்கிழமை காலை பத்து மணி அளவில், ‘கோந்தே, உன் க்ளாஸ்  ஸார் வந்திருக்கார்டா,’ என தாத்தாவின் குரல் கேட்டவுடனேயே எந்த ஸார் என்று அவர் சொல்லாமலேயே புரிந்தது. தயங்கியபடி வெளியே வந்து எதுவும் சொல்லாமல் நின்றான். அதற்குள் உள்ளே வந்தமர்ந்திருந்த ராவ் ‘உங்களத்தான் பாக்க வந்தேன் ஸார்,’ என்று  தாத்தாவிடம் சொல்லிவிட்டு, ‘இவன் எதாவது சொன்னானா’ என்று இவனைச் சுட்டி கேட்டார். தாத்தா எதுவும் புரியாமல் இவனைப் பார்க்க, ‘ பிரச்சனைலாம் ஒண்ணுல ஸார், நெக்ஸ்ட்  சாடர்டே ஈவனிங் இண்டிபென்டென்ஸ் டே ப்ரோக்ராம்ஸ் வச்சிருக்கோம், அதுக்கு உங்கள மாதிரி  ஒருத்தர் சீப் கெஸ்ட்டா இருக்கணும்னு ஆசைப்படறோம்,  இவன் பிரெண்ட் கண்ணன்தான் உங்களைப் பத்தி சொன்னான்’ என்று சிரித்தபடி சொன்னார். ‘என்ன கோந்தே’ என்று இவனிடம் கேட்டவருக்கு, ‘அதான், ஆர்மில இருந்திருக்கீங்க, நம்ம ப்ரீடம் ஸ்ட்ரக்குள்ல வேற கலந்துட்ட்ரிக்கீங்க, இதபத்திலாம் கண்ணன்ட்ட சொல்லிருக்கான்’ என்று ராவே பதிலளித்தார். இவன் இருவரிடமிருந்தும்  இருந்து பார்வையை விலக்கி தலையை குனிந்து கொண்டான்.

‘இவன்ட்ட சொல்லி வுடுங்க ஸார், இன்னிக்குள்ள சொன்னீங்கன்னா நாங்க ப்ளான் பண்ண வசதியா இருக்கும்’ என்று ராவ் கிளம்பியதும் இவனும் வெளியே ஓடி மதிய உணவிற்குதான் வந்தான். வீட்டுப்பாடம் செய்வதாக மாலை வரை யாருடனும் பேசாமல் ஓட்டினான். மாலை நடைக்கு இவனும் வருகிறானா என்று கேட்ட தாத்தா, வீட்டுப்பாடம் இன்னும் பாக்கி உள்ளது என்று கூறியவனிடம், ‘ஸார்ட்ட நான் வரேன்னு சொல்லிட்றையா கோந்தே’ சென்று சொல்லிச் சென்றார். இரவுணவின்போது ‘என்னடா  தாத்தா பத்தி ஸ்கூல்ல பெரிசா சொல்லி வெச்சுருக்க’ என்ற அம்மாவிடம்,  ‘தாத்தாதானே அவனுக்கு ரொம்ப  இஷ்டம்,’ என்றார் தாத்தி. ‘தாத்தா ஆர்மில இருந்தத பத்திதாம்மா பேசிட்டிருந்தேன், கண்ணன் அவங்கப்பாட்ட ஏதோ  சொல்லிட்டான் போலிருக்கு,’ என்று சொல்லிவிட்டு தாத்தாவை ஓரக்கண்ணால் பார்த்தான். அவர்   இவனையே பார்த்துக் கொண்டிருந்ததை அப்போதுதான் கவனித்தான். ‘இட்ஸ் ஆக்ட்சுயலி எ குட் ஐடியா, பசங்களுக்கு ஆர்மி பத்தி தெரியணும். நீ பிரிட்டிஷ்  ஆர்மி எக்ஸ்பீரியென்ஸ் பத்திகூட சொல்லலாம்லபா’ என்று தாத்தாவிடம் அப்பா சொல்ல, இருவரும் பார்வையை விலக்கிக் கொண்டார்கள்.

ஊருக்குச் செல்லும்போது கோவிலுக்கு அழைத்துச் சென்று இவன் அடம் பிடித்ததால் கோவில் யானைக்கு ஒரு சீப்பு பழம் வாங்கிக் கொடுத்த, கணபதி ஹோட்டலில் இட்லியும் வடையும் வாங்கிக் கொடுத்த, இவனுக்குப் மிகவும்  பிடித்தமான ‘ஆக்‌ஷன்’  நடிகர் மூன்று வேடங்களில் -அதிலும் காவல்துறை அதிகாரியாக மிக ஆக்ரோஷமாக- நடித்து வெளிவந்த  அதிரடி   திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்று இவனுடைய பிடிவாதத்தால் அந்த வயதிலும் அவ்வளவு கூட்டத்தில் சென்று சிக்கி, போலீஸ்காரரின் தடியடியையும் தாண்டி , ‘ டிக்கெட் கெடச்சாச்சு கோந்தே’ என்று சிரித்தபடி வெளியில் வந்த தாத்தா இவன் சொல்லிய பொய்யை வெளிப்படுத்தாதது இவனுக்கு ஆச்சரியமளிக்கவில்லை என்றாலும் விழாவிற்கு வர ஒப்புக் கொண்டது ஏன் என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. வீட்டில் யாரும் இல்லாத மாலை வேளையொன்றில் ‘என்ன பேசப் போற தாத்தா,’ என்று கேட்டவனிடம் ‘பாத்துக்கலாம் கோந்தே ‘என்றவர் பின்,  ‘கோந்தே… உங்க ஸார் நல்லா பீடா போடுவாரா’ என்று கேட்டார். ‘ஆமா தாத்தா, வெத்தல பாக் பான் பராக்க்னு அவர பசங்க கூப்டுவாங்க,’ என்று இவன் சொல்லவும் சிரித்தவர், மற்ற ஆசிரியர்களுக்கு இவர்கள் வைத்திருந்த பட்டப் பெயர்கள் குறித்து கேட்டுக்கொண்டார்.

விழா நாள் வரை இடைப்பட்ட பத்து பதினைந்து நாட்களை தாத்தா ஸ்கூலுக்கு வருவது பற்றி எதுவும் பேசாமலே ஒருவாறு கழித்தான்.   இப்போதெல்லாம் மாலை நடைக்கு இவனும் வருகிறானா என தாத்தா கேட்பதில்லை. இவனுக்கு  ‘புக் கிரிக்கெட்டில்’, ‘முதுகு பங்க்சரில்’ ஆர்வம் குறைந்தது. வகுப்பில் உமாவைக் கள்ளத்தனமாக பார்க்கத் தோன்றவில்லை.  தமிழ் ஐயாவிடம் தொடர்ந்து நாலைந்து நாட்கள் அடி வாங்காமல் இருந்தவனை ‘என்னடா திருந்திட்டியா’என்று சந்துரு கிண்டல் செய்தான்.

பதின்மூன்றாம் தேதி காலை உணவை முழுதும் சாப்பிடாமலேயே எழுந்தவனைப் பார்த்து ‘என்னமோ இவன் சீப் கெஸ்ட்டா போற மாதிரி டென்ஷனா இருக்கான்,’ என்று சொன்னார் அம்மா.  இந்த மாதிரியான விழா நாட்களில் ஒன்றிரண்டு வகுப்புக்கள் நடக்காது என்பதால்  மதியத்திலிருந்து வகுப்பில் பரவசமான சூழல்.  ‘டேய் கொஞ்சதான் சந்தோஷமா இரேன், என்னமோ நீ ஸ்டேஜ்ல பேசப்போற மாதரி இருக்க, என்னாச்சு ஒனக்கு’ என்று கேட்டான் சந்துரு.  மதியம் இரண்டாவது  பீரியட்  நடந்து கொண்டிருக்கும்போது, மாணவர்களை அமர வைப்பதற்கான அழைப்பு வர, எங்கும் ஒரே கூச்சல்.  மாணவர்கள் மேடையரங்கின் முன்னே இருந்த மைதானத்தில் குழுமி அமர  வைக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இந்தச் சந்தடியில் வெளியேறி விடலாம் என்றால் கேட் பூட்டப்பட்டிருந்தது. தாத்தா வந்திருப்பாரா என்ற யோசனையுடன் அமர்ந்திருந்தவனை  ராவ் தேடுகிறார் என்று இவன் வகுப்பு மாணவனொருவன் சொல்ல, மேடையின் பின்புறத்திற்கு சென்றான் . ‘தாத்தாவா பாத்துக்காம என்னடா அங்க ஒக்காந்திருக்க’ என்றார் ராவ்.

மேடையின்  பின்புறம்தான் தலைமையாசிரியர் அறை. தாத்தா வந்தவுடன் அங்கு அழைத்துச் செல்லப்பட்டு ப்ரதருடன் பேசிக்கொண்டிருந்தது தெரிந்தது. அருகில் இருந்த வகுப்பறைகளில் வழக்கம் போல் நேருவும், பாரதியும் காணக் கிடைத்தார்கள். சாதாரண பள்ளிச் சீருடையில் மிக அழகாக தெரியும் உமா,  மலையாள பாணி சிவப்பு வெள்ளை  உடை மற்றும் கொண்டையுடன்  -பல மாநில உடைகளை அணிந்த பெண்கள் நடனத்தின் அங்கமாக-  பார்ப்பதற்குச் சகிக்காமல் வெளியே  நின்றிருந்தாள்.  இவனைக் கண்டதும், ‘தாத்தா வந்துட்டாரா?’ என்று அருகில் வந்து கேட்டாள்.

‘வெள்ளாவி ரூம்ல,’ என்றதும் எழுந்த சிரிப்பை மறைத்தபடி  அறையினுள்ளே எட்டி  பார்த்தவள், ‘ஒன்ன மாதிரியே இருக்கார்’. என்றாள்

‘இல்ல நான்ல அவர மாதரி இருக்கேன்’ என்ற இவன் சொன்னதற்கு ‘அப்போ உனக்கும்  அவ்ளோ வயசாயிடுச்சுங்கறியா’ என்று  மீண்டும் சிரித்தபடி பதிலளித்தவள்,  ‘பங்க்ஷன் முடிஞ்சதும்  தாத்தாட்ட  பேசப்போறேன்’  என்று கேட்டு இவனுடைய சந்தோஷத்தை வடியச் செய்தாள். உரையாடலை நீட்டிக்கும்  மனநிலை போனது.  அவள் மீண்டும் உள்ளே செல்வதை ஆற்றாமையுடன் பார்த்தவன்  தலைமையாசிரியர் அறை அருகே கொஞ்ச நேரம் நின்றிருந்தான்.  தாத்தாவும் வெள்ளாவியும்  சிரித்தபடி  பேசிக்கொண்டிருப்பதை அதற்கு மேல்  பார்க்க முடியாது  திரும்பி வந்து  நண்பர்களுடன் உட்கார்ந்து கொண்டான்.

 விழா நிகழ்வுகளின்போது அவை குறித்து பார்வையாளர்கள் தரப்பிலிருந்து வெளியிடப்படும் வழக்கமான  விமர்சனங்களில் இவனுடைய பங்களிப்பு வழக்கத்தை விட குறைவாக இருந்தது.  நிகழ்ச்சிகள் முடிந்து,  பரிசுகள் வழங்கியபின் தன்னுடைய அனுபவங்கள் என்பதாக இல்லாமல் நாட்டிற்கு நாம் செய்ய வேண்டிய கடமை என்ற  வழமையான, ஆனால்  சுருக்கமான உரையை நிகழ்த்தினார் தாத்தா.

எல்லாம் முடிந்து  அனைவரும் கலைய ஆரம்பிக்க, இவன் காருக்காக தாத்தாவுடன் காத்திருந்தான். ‘ஒங்கள மாதரி ஒர்த்தர் வந்தது பசங்களுக்கு ப்ளெஸ்ஸிங் மாதிரி’ என்று உபசாரமாய் ராவ் சொன்னது அசூயையாக இருந்தது. வேறெங்கோ பார்வையை திருப்பியவன்  தாத்தா எதுவும் பதில்  சொல்லாததால் அவரை நோக்கினான். அவர் கொடிக்கம்பத்தை பார்த்துக்கொண்டிருந்தார். இவன் வகுப்பு மாணவர்கள்  சிலர் அவருடன்  பேசும் ஆவலில் அருகில் வந்தார்கள்.  உமா இல்லை, உடை மாற்றிக் கொண்டிருப்பாளாக இருக்கும், அதுவும் நல்லதுதான் என்று நினைத்தான்.  வழக்கமான அறிமுகங்களுக்குப் பிறகு, பொதுப்படையான சில பேச்சுக்கள். சுதந்திர போராட்டம் பற்றிய கேள்விகளை லாகவமாக தவிர்த்த  தாத்தா பசங்களின் மத்தியில் சற்றே உற்சாகமாகிவிட்டது போலிருந்தது. ‘தாத்தா, உங்க சொந்த ஊர் எது?’ என்று யாரோ கேட்க, ‘பழுவூர்’ என்றவரிடம்  ‘ஒங்க வீட்ல நீங்க சுதந்திரப் போராட்டத்துல கலந்துக்கறதுக்கு ஒண்ணும் சொல்லலையா’ என்று இன்னொரு கேள்வி. சில நொடிகள் எதுவும் பேசாமல்  இருந்த தாத்தா ஏதோ சொல்ல ஆரம்பிக்க கார் தயாராக இருப்பதாக ராவ் வந்து சொன்னதும் தப்பித்தால் போதும் என்று தாத்தாவுடன் கிளம்பினான்.

வீட்டிற்கு வந்த பின்பும் படபடப்பு அடங்கவில்லை. விழா பற்றி தாத்திக்கு தாத்தா சொல்லிக்கொண்டிருப்பதை கேட்டுக்கொண்டிருந்தான். பின்  தன் வழக்கமான  மாலை நேர நடைக்கு தாத்தா கிளம்பினார். அன்றைய நிகழ்வுகளை  மனதினுள் ஓட்டிப்பார்த்துக் கொண்டிருந்தவன் உள்ளே சென்று  தாத்தியிடம், ‘தாத்தாவும் பழுவூர், ஓன் ஊர்தானா தாத்தி’ என்று கேட்க, ‘ஆமா, அடுத்த தெருதான் ‘ என்று மட்டும்  சொல்லிவிட்டு நிறுத்தி விட்டார்.  வேலை முடிந்து முதலில் வந்த அம்மாவிற்கும்  பின் அப்பாவிற்கும்  மீண்டும் விழா பற்றி  விவரிக்கச் செய்து, ‘அத வுட்டுட்டியே’ என  இவன் பேச்சுவாக்கில் தவற விடும் விஷயங்களை  நினைவூட்டியபடி தாத்தியும்  இவன் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தார். ஒருவாறு அவர்களிடமிருந்து தப்பித்து  போர்ஷனின் பின்புற சுவற்றின்  மீது அமர்ந்து  காலிமனையை பார்த்தபடி அமர்ந்திருந்தான். இருள் சூழ ஆரம்பிப்பதை கவனித்தபடி இருந்தவன் வெளியே செல்ல எழுந்தான். வீட்டின் இறுதியில் உள்ள அவர்களின் போர்ஷனில் இருந்து வெளியே வர  இருள் நிறைந்த சந்தைத் தாண்டிச் செல்ல வேண்டியிருப்பதை இப்போது பொருட்படுத்தாமல் ஓடிக் கடந்து தெருவிற்கு வந்தான்.

முதலில் நாடார் கடைக்குச் சென்று, ‘தாத்தா வந்தாரா நாடார்?’ என்று  கேட்க, ‘பழம் வாங்கிட்டு  இப்பதான் மேன் கெளம்பினாரு, என்ன மேன் தாத்தாவோட இப்பெல்லாம் வர்ரதுல்ல, ரொம்ப பிஸியோ?’ என்று சொன்ன நாடாரிடம், ‘அதெல்லாம்ல, வரேன் நாடார்,’ என்று கிளம்பினான். தாத்தா கோவில் வழியாக சுற்றுப் பாதையில் சென்றிருக்கக்கூடும் என்று யூகித்து  ராமர் கோவில் மேட்டின் மீது ஏறி வலதுபுறம் திரும்பி கோவில் குளத்தெரு முனையில் நின்று கவனித்தான். விளக்குகள் இல்லாத, மரங்கள் அடர்ந்திருந்த இடம். இவன் நின்றிருந்த தெருமுனையில் இருந்த வெளிச்சத்தில் குளக்கரை தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மங்கலாகத் தெரிந்தார்கள். சற்றே கூன் போட்டிருந்த, கையில் சிறு பை வைத்திருந்தது போலிருந்த உருவத்தை கண்டு கொண்டவன், இருளினுள் நுழைந்து அதன் அருகே சென்றான்.

சிதிலமடைந்திருந்த அந்த வீட்டின் திண்ணையில் படுத்திருந்த சேட்டின் அருகில் வழக்கம் போல் வாழைப்பழங்களை  வைத்துக் கொண்டிருந்தவர்  யாரோ அருகில் வருவதை உணர்ந்து திரும்பிப் பார்த்தார்.  எதுவும் சொல்லவில்லை. இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள்.  இருளுக்கு இவன் கண்கள் பழக, தாத்தாவை இன்னும் தெளிவாகப் பார்க்க முடிந்தது. சிறிது நேர அமைதிக்குப் பின் ‘தாங்க்ஸ், ஸாரி தாத்தா,’ என்று இவன் சொல்லவும் தோளில் கைவைத்து அழுத்தினார்.  ஒரு பக்கம் சலனமில்லாத குளம், மறு புறம் நீண்ட விழுதுகள் தொங்கிக் கொண்டிருக்கும் மிகப் பெரிய ஆலமரம் என  வழக்கமாக மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தும் இடத்தை இயல்பாக கடந்தான். சின்ன மேடு ஏறி இறங்கி தெருவுக்குள் நுழைந்தார்கள். விளக்குகளின் ஒளியில் அவர்களின் நிழல்கள் நீண்டும் குறுகியும் ஒன்றியும் பிரிந்தும் பின்தொடர்வதைப் பார்த்துக் கொண்டே நடந்தவன் தாத்தாவின் கையை தன்னிச்சையாக  பற்றிக் கொண்டிருந்திருக்க வேண்டும்.  வீடு வந்து சேரும்வரை இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

தளைச்சுமை

– நித்ய சைதன்யா-

மீட்பென பறவையைச் சுட்டியது ஒருவிரல்
விலாவிலிருந்து கிளைத்து வந்தன
பறப்பதன் நுட்பங்கள்
கூரலகு காற்றைக் கிழிக்க
பஞ்சைப் போலானது எனதுடல்
தரையை வீடுகளை
பசுமை தளும்பிய மரங்களை
மலைகளைக் கடந்தேன்
வெண்மை போர்த்திய வெளியன்றி
இலக்கற்ற பாழ்வெளி
தங்கி இளைப்பாற ஓரிடம் ஏங்கி
நிலம் திரும்புகின்றன
அன்றாடத்தின் வேர்கள்