வெட்டுண்ட விரலில் குருதிப்பிளவு
தக்கது கிடையாமல் தவித்த விரலை
கவ்விச் சப்பும் வாயினுள் கண்டேன்
கனிவாய் நாக்கின் இத ஒத்தடம்.
வெகுநேரம் விரல் ஊறி
சுருங்கி சிறுத்த விரலை இழுத்தேன்
விடுபட்ட வாயினுள்
சுவைத்த நாக்கோ
சப்பு கொட்டி சப்தமிட்டது.
Author: பதாகை
கண்ணுறு கலை – நரோபாவின் ‘திருமிகு பரிசுத்தம்’
சென்ற மாதம் மறைந்த எழுத்தாளர் வில்லியம் ட்ரெவர் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறுவார் என்று பல ஆண்டுகளாகப் பேசப்பட்டு ஏமாற்றத்தில் முடிந்தது. சிறுகதை வடிவத்தை மிகச் சிறந்த வகையில் கையாண்ட ட்ரெவர் குறித்து இனி ஆர். அஜய் எதுவும் எழுதினால்தான் உண்டு. மற்றபடி அவர் பெயர் தமிழில் பேசப்படும் வாய்ப்புகள் குறைவு.
பாரிஸ் ரிவ்யூ தள நேர்முகம் ஒன்றில் அவரிடம் சிறுகதையின் வரையறை என்ன என்று கேட்கப்படுகிறது. அதற்கு பதிலளிக்கும் ட்ரெவர், அது ஒரு கண்ணுறு கலை என்று சொல்கிறார் (‘art of the glimpse‘). அதைத் தொடர்ந்து, சிறுகதையின் உண்மை வெடித்துத் தெறிக்க வேண்டும் என்று அவர் சொல்வதை, அதன் மிகச் சிறிய வடிவத்தில் மிகப் பெரிய ஆற்றல் பொதிந்திருக்க வேண்டுமென்பதாய் புரிந்து கொள்கிறேன். அது எதைச் சொல்லாமல் விடுகிறதோ, அதுதான் சிறுகதையின் பலம் என்கிறார் அவர். அர்த்தப்படுத்துதல்தான் அதன் நோக்கம் – வில்லியம் ட்ரெவரின் சொற்களில், ‘It is concerned with the total exclusion of meaninglessness‘. வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையில் நாவல் வடிவம் பெரும்பாலும் பொருளற்றதாகவும் அலைவுகள் கொண்டதாகவும் இருக்கலாம், ஆனால் சிறுகதை வடிவம் கலையின் சாரம் என்று அவர் வரையறை செய்கிறார் (‘It is essential art‘). நாவல்கள் ரத்தமும் சதையும் கொண்ட மனிதர்களைக் காட்டினால் சிறுகதை மனித வாழ்வின் ஆதார எலும்புகளை தொட்டுக் காட்டுகிறது.
oOo
466 சொற்களே கொண்ட நரோபாவின் ‘திருமிகு. பரிசுத்தம்‘ குறுங்கதையாய் வாசிக்கப்படும் என்று நினைக்கிறேன். குறுகிய வடிவம் கொண்டது என்பதால் சிறுகதை செய்யும் வேலையை குறுங்கதை இன்னும் வேகமாய்ச் செய்ய வேண்டும், அதன் சொற்கள் இன்னும் கனம் கொண்டிருக்க வேண்டும். ஆனால், ஒரு குறுங்கதை கண்ணுறும் காட்சி கணப்பொழுது என்பதால் அது விவரிக்கும் காலம் யுகங்களாய் இருக்க முடியாது என்றில்லை.
திருமிகு. பரிசுத்தம் கதை மிக எளிய, இலகுவான மொழியில் சொல்லப்படுகிறது. நரோபாவின் ஆரம்ப கால கதைகளைப் படித்தவர்களுக்கு இங்கு அவர் கடந்து வந்திருக்கும் தொலைவு ஆச்சரியப்படுத்துவது. பெருமூச்சுகளோடு சொல்லி வந்த கதைகளை அவர் இப்போது ஒரு புன்னகையுடன் சொல்கிறார். மிகச் சாதாரணமான தொனியில், “ஒவ்வொரு முறையும் இது இப்படிதான் நிகழ்கிறது,” என்று, காவியங்கள் மற்றும் காலமின்மைகளைப் பற்றிய கவலைகள் இல்லாமல் கதை துவங்குகிறது. அடுத்த வரியிலேயே, ‘எப்போது வரிசையில் நின்றாலும், எங்கிருந்தோ வரும் நபர் அவருக்கு முன் உரிமையுடன் வந்து நிற்பார்,‘ என்று கதைக்குரியவரின் பிரச்சனை சொல்லப்பட்டு விடுகிறது. அதற்கு அடுத்து,
“பதவி உயர்வு கிடைக்காததற்கும், கார் வாங்காததற்கும், மனைவியுடன் சேர்ந்து மாமனாரின் சொத்துக்கு மல்லுக்கு நிற்காததற்கும் என்ன காரணமிருக்க முடியும் என ஆராய்ந்து பார்த்ததில் அவருக்கு ‘வெல்லும் விசை’ இல்லை எனக் கண்டறிந்து சொன்னார் உளவியல் நிபுணர். ஆகவே ‘வெல்லும் விசை பெருக்கி ஆலோசகர்’ திருமிகு. பரிசுத்தத்தை அவரது அலுவலகத்தில் சந்திக்க வந்தார்கள்.”
என்று விஷயத்துக்கு வந்து விடுகிறார் நரோபா. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னிருந்த நரோபா இந்த இடத்துக்கு வர இரண்டு பக்கங்கள் எடுத்துக் கொண்டிருக்கலாம்.
அதன் பின்,
“திருமிகு. பரிசுத்தம் எழுதிய “வெறுப்பெனும் ஏணியில் ஏறி வெற்றிக்கனியை ருசி” எனும் புத்தகம் மாண்டரின், பைசாசிகம், ப்ராக்ருதம், பாலி, மைதிலி, சமஸ்க்ருதம், போஜ்புரி, உருது உட்பட 82 உலக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.”
என்ற அறிமுகத்தில் திருமிகு பரிசுத்தம் யார் என்பதும் இந்தக் கதையின் மிகைகளும் நிறுவப்பட்டு விடுகின்றன.
அதற்கு அடுத்த இரு பத்திகளில் கதைக்குரியவர் இங்கும் ஒரு மிதியடியாய் இருப்பதைக் காட்டியபின் கதை திருமிகு. பரிசுத்தத்தின் அறைக்குள் நுழைகிறது. அங்கு நாம் அவரது வெல்லும் விசையை நன்றாகவே அறிந்து கொள்கிறோம். ‘கார்ல் மார்க்ஸ், மாஜினி, முசோலினி…‘ முதலான கனவான்களோடு திருமிகு பரிசுத்தம் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் போதாதென்று, ‘பனிமலையில் வைகிங் உடையில் ஒரு மாமூத்தின் தலை மீது அவரும் அவருடைய சகாவும் கால் வைத்தபடி நின்றிருந்த புகைப்படம் அவருடைய நாற்காலிக்கு நேர் பின்னே‘ மாட்டப்பட்டிருக்கிறது. இதையடுத்து ஒரு அபத்த உரையாடல் நிகழ்கிறது. சமூகம் ஒரு டார்வினிய சோதனைக்கூடம், அதில் வெல்லும் விசை கோபத்தால் அருளப்படுவது என்பதுபோல் திருமிகு பரிசுத்தம் மேற்கொள்ளும் விசாரணை தொடர்கிறது, ஆனாலும் பயனில்லை.
““பேஸ்புக்ல உண்டோ?”
“இருக்கேன்”
முகம் பிரகாசமானது.
“என்ன செய்வீங்க?”
“தினமும் பூ படம், இல்லைன்னா அழகான குழந்தைங்க படம் போட்ட குட் மார்னிங், குட் நைட் மெசேஜ் போடுறதோட சரி”
திருமிகு. பரிசுத்தத்தின் முகத்தில் எரிச்சலின் ரேகை படர்ந்தது”,
என்று தொடரும் உரையாடலின் முடிவு கதைக்குரியவர் எதற்கும் கோபப்படாதவர் என்று உணரும் இடத்துக்கு வந்து சேர்ந்ததும், ஒரு தேர்ந்த சிறுகதைக்குரிய திருப்பம் நிகழ்கிறது.
‘அந்நொடியில் அறையிலிருந்த செவ்வொளி மறைந்து எங்கும் நீல நிறம் சூழ்ந்தது. திருமிகு. பரிசுத்தம் சட்டென ஒரு அழகிய பெண்ணாக உருமாறினார். “ஆதிமூலமே பரம சோதியே, உலகிற்கெல்லாம் காரணப்பொருளாய் இருப்பவனே… தீர்ந்தது எமது சாபம்,” என்று கூறிவிட்டு சாளரத்தின் வழியே…’
பறந்து செல்கிறார். ஒரு காலத்தில் அவர் இந்திரனாக இருந்திருக்கக்கூடும்.
கதையின் முடிவு, இவ்வுலகம் சபிக்கப்பட்ட ஒன்றாகவும், இங்கு வெற்றி பெற்றவர்கள் சபிக்கப்பட்டவர்களாகவும் இதன் நோய்மையால் பீடிக்கப்பட்டவர்கள் குழப்பத்தில் தவிக்கும் புண்ணியாத்மாக்களாவும் இருப்பதாய் நினைக்க வைக்கும் வகையில் கதையைப் புரட்டிப் போடுகிறது. திருமிகு பரிசுத்தம் யார் என்ற கேள்வி எழாமலே நாம் அதற்கான விடையை உணர்கிறோம்.
ஆதவனின் ‘கார்த்திக்’
வயதடைதல் (coming of Age) என்பதும், மந்தை திரும்புதல் (Returning to the fold) என்பதும் மனித வாழ்வின் முக்கியமான கட்டங்கள். எப்போது இவை இரண்டும் நிகழ்கிறது என்று குறிப்பிட்டு சொல்லும்படியாக அல்லாமல் ஒரு தொடர் நிகழ்வாக பலரது வாழ்வில் அமைவதுண்டு. ஆனால், சிலர் வாழ்வில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சம்பவங்கள் இவைக்கு காரணமாக நிகழ்வதுமுண்டு. இவை இரண்டுமே இருபதாம் நூற்றாண்டு நவீன உலகுக்குரிய இளைஞர்களின் பிரச்சினைகளில் முக்கியமானவையாக இருந்தன என்றே சொல்ல வேண்டும்.
சுதந்திர போராட்டத்தின் லட்சியவாத அலை அடங்கி, சுடும் யதார்த்தம் 70களில் பரவியது. சுதந்திர அரசு மரபார்ந்த கல்வி மற்றும் தொழில்முறைகளில் கவனம் செலுத்துவதற்கு மாறாக, தொழில்மயமான ஒரு வலுவான தேசத்தை உருவாக்க முற்பட்டது. ஆனால் தொழில்மயப்பட்ட சமூகத்துக்கு தேவைப்படும் ப்ளூ காலர் பணிகளில் பொருந்தக்கூடிய தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்காமல், காலனிய ஆட்சியின் தொடர்ச்சியான ஒயிட் காலர் பணிகளுக்கு ஆயத்தப்படுத்தும் குமாஸ்தா கல்விமுறையே தொடர்ந்தது. கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்து அவற்றிலிருந்து வெளிவரும் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால் கணக்கு எழுதுவதையும் குறிப்புகள் எடுப்பதையும் தவிர பிற எந்த தொழிலுக்கும் தகுதியில்லாதவர்களாக இவர்கள் இருந்ததால் வேலையில்லாத் திண்டாட்டம் கடுமையானது. அரசே முதன்மையான வேலை வாய்ப்பு தரக்கூடிய அமைப்பாக இருந்த காலகட்டத்தில், அதுவும் நவீன கல்வி உருவாக்கிய அந்நியத்தன்மை வாய்ந்த, (அரசு) வேலைகளின் யந்திரத்தனத்திலும் சலிப்பு, அந்த வேலைகளும் கிடைக்காத இளைஞர்களின் கோபம் ஆகியவை தீவிரமாக வெளிப்படத் தொடங்கின. மேலும், இளைஞர்கள் தங்களது தனித்தன்மை (Individuality) என்பதை நிறுவவும் முனைந்த காலகட்டமாக அது அமைந்தது.
ஆதவனின் புனைவுலகம், எப்போதும் மேலே சொன்ன பிரச்சினைகளைத் தன்னகத்தே கொண்டது. மனிதர்களின் தனித்தன்மையை, அவர்கள் அதனை இழக்க நேரும் பின்னணியை, சோகத்தை, விரிவாகச் சொல்லக்கூடியது. மந்தையில் சேராதிருத்தல், தனித்து நின்று தன் அடையாளத்தை பேணுதல், மரபிலிருந்து விலகி நிற்றல் என்பவை அவரது நிறைய கதாபாத்திரங்களின் பொது அம்சங்கள். வயதடைதல் என்ற நிகழ்வின் போக்குக்கு உதாரண படைப்பாக அவரது “என் பெயர் ராமசேஷன்” நாவலைச் சொல்லலாம் என்றால், மந்தை திரும்புதலை மிகத் துல்லியமாக எழுத்தில் கொண்டுவந்த அவரது சிறுகதை (சற்றே நீளமான) “கார்த்திக்“.
இருபதாம் நூற்றாண்டின் கடைசி காற்பகுதியில் வாழும் நவீன இளைஞன் கார்த்திக், ஒரே சமயத்தில் மரபில் இருந்து விலகி அறிவார்ந்த நோக்கினால், மரபு தன் மீது சுமத்தும் மூடப்பழக்கங்களை களையவும், அதே சமயத்தில், காதல் வயப்பட்டாலும் தன் தனித்தன்மையை அதில் இழக்காமல் இருக்கவும் விழைபவன். ஒரே சமயத்தில், பெற்றோரின் மரபு அளிக்கும் சுமைகளிலிருந்தும் காதல் மனைவியின் நவீன நோக்கு அளிக்கும் தளையிலிருந்தும் விலகி வாழும் விழைவுடன் தன் தனித்துவத்தைப் பேணுவதில் உறுதியாக இருக்கவும் முனைபவன். தன்னைச் சுற்றியிருக்கும் மற்றவர்களைப் போலாகாமல் இருப்பதில் கவனமாக இருப்பவன். இந்த நிலைப்பாடுகளிலிருந்து மெல்ல நழுவி அவனும் மற்றவர்களை போல, யாரையெல்லாம் தவிர்க்க நினைக்கிறானோ அவர்களை போலவே, ஆவதை விவரிப்பதுதான் ‘கார்த்திக்‘.
என் போன்ற 70கள் 80களில் வளர்ந்த, மரபிலிருந்து துண்டித்துக் கொண்டு சாதி மத அடையாளமற்ற வாழ்க்கையை, அல்லது மிக மேலோட்டமாகவே சாதி மத அடையாளத்தைப் பேணும் வாழ்வை வாழ்பவர்களுக்கு, கார்த்திக் சிறுகதை அடிக்கடி நினைவுக்கு வரும். “கார்த்திக்” சிறுகதையை நினைவுபடுத்தும் சம்பவங்கள் நடந்து கொண்டேயிருக்கும். அண்மையில்கூட குடும்பத்தினரின் பிரார்த்தனையை நிறைவேற்ற ஒரு கோவிலுக்குச் சென்றபோது, ஒரு சாதாரண சடங்குகூட செய்யத் தெரியாமல் தவிக்கையில் கார்த்திக்கை நினைத்துக் கொண்டேன்.
இந்தக் கதையில், கார்த்திக் தன் மந்தைக்குத் திரும்பும் நிகழ்வு, பத்மாவுடனான காதல் திருமணத்துக்குப் பிறகே மெல்லத் தொடங்கிவிட்டாலும், அது தீர்மானகரமான திரும்புதலாக ஆவது அவனது தந்தையின் மரணத்துக்குப் பிறகுதான். அவர் இருந்தவரை கார்த்திக்கின் மகனுக்கு எல்லாமுமாக இருக்கிறார். பூஜை செய்வது, ரேடியோவில் கச்சேரி கேட்கும்போது தாளம் போடுவது என்று அவரைப் பார்த்தே அனைத்தையும் கற்றுக் கொள்கிறான் கார்த்திக்கின் பிள்ளை ரவி. திடீரென்று ஒரு நாள், கார்த்திக்கின் தந்தை இறந்து விடுகிறார். மிகப்பெரிய இழப்பு ரவிக்கு மட்டுமல்ல, கார்த்திக்குக்கும்தான். தன் வித்தியாசங்கள், தனித்தன்மைகள் என்று அவன் எண்ணியிருந்ததெல்லாம் அவர் கரும்பலகையாயிருந்து எடுத்துக் காட்டிய வெள்ளை எழுத்துக்கள்தான் என்று உணர்கிறான். அந்தக் கரும்பலகை இல்லையென்றானபின் அவனது தனித்தன்மைகள் என்னும் வெள்ளை எழுத்துக்கள், பின்னணி ஏதும் இல்லாமல் சோபை இழந்து விடுகின்றன.
ஆனால் உடனடியாக அவன் சமாளித்தாக வேண்டியது தன் மகனின் தனிமையை. தாத்தாவின் மறைவுக்குப் பின் அவர் அவனுடன் ஆடிய விளையாட்டுக்கள், பூஜை, கச்சேரி, புராணக் கதை சொல்லுதல் போன்றவைகளுக்கு அவனுக்கு ஆள் இல்லை. கார்த்திக் வேறு வழியில்லாமல் தன் தந்தையின் பாத்திரத்தை ஏற்று நடிக்க வேண்டியதாகிறது. பூஜை செய்கிறான், புராணக்கதைகளைத் தேடிப் படித்து மகனுக்குச் சொல்கிறான், கச்சேரி கேட்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக தான் யாராக இல்லாமல் இருக்க விழைந்தானோ அவராகவே மாறுகிறான்.
சிலகாலம் கழித்து, சுற்றியிருக்கும் பகுதிகளில் இருக்கும் ரவியின் நண்பர்களான சிறுவர்கள், கார்த்திக்கை கார்த்திக் மாமா என்று அழைக்கின்றனர். ஒருநாள், ரவிக்காக பூஜை அறையில் உட்கார்ந்து ரவியை அழைக்கும்போது தெரிகிறது, ரவி அவனையொத்த பையன்களுடன் வெளியே விளையாடப் போயிருப்பது. மனைவி பத்மா அவனை அழைத்து வரட்டுமா என்கிறாள். வெளியே வந்து எட்டிப்பார்க்கும் கார்த்திக், ரவியில் கார்த்திக்கைப் பார்க்கிறான். திரும்பி வந்து பத்மாவிடம், அவனைக் கூப்பிட வேண்டாம், அவன் விளையாடட்டும், நாம் செய்வோம் பூஜையை என்கிறான் கார்த்திக்- இல்லை, கார்த்திக் மாமா. பக்கத்தில் பாந்தமான பத்மா மாமி. இப்போது ரவிதான் கார்த்திக். கார்த்திக்கின் மந்தை திரும்புதல் முழுமையடைகிறது.
ஒரு பார்வையில், பெற்றோரின் மரபான வாழ்க்கையுடன் முரண்பட்டு பின் அத்தகைய ஒரு வாழ்க்கைக்கே திரும்புவதே கதையின் முக்கிய பேசுபொருள் என்றாலும், கார்த்திக்கின் தனித்தன்மை சார்ந்த தன்னுணர்வு அவனது யுகம் சார்ந்த நவீனப் பெண்ணான அவன் மனைவியுடனும்கூட முழுவதுமாக ஒத்துப்போக முடியாத சூழலை உருவாக்குகிறது. அவளுடைய முற்போக்கு அவனை சங்கடத்துக்குள்ளாக்குகிறது. மனைவி, இவனது பெற்றோருடன் மரபார்ந்த விஷயங்களில் கொள்ளும் நெருக்கம் கார்த்திக்கை அந்நியப்படுத்துகிறது. அதே சமயம் அவள் கார்த்திக்குடன் நெருங்கிக் கொள்ள உதவும நவீன உலகு சார்ந்த கருத்துக்களும் அவனது தனித்தன்மையை குலைத்து பத்திரமற்ற மனநிலையை உருவாக்குவதையும் ஆதவன் வெகு அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். இப்படி இரண்டு தளங்களில் பிரயாணிக்கிறது கதை.
நவீன வாழ்க்கை உருவாக்கும் அடையாளச் சிக்கல் மிகுந்த, முன்னே போவதா, பின்னே போவதா, இருந்த நிலையில் இருப்பதா என்ற குழப்பமான ஆண்-மனநிலைக்கு ஒரு மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்வது ஆதவனின் “கார்த்திக்‘ – கார்த்திக் மாமா என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும்.
நேசக்கரங்கள்
மொபைலை எடுத்து செல்பி எடுத்துக்கொண்டேன். என் வாழ்க்கையின் கடைசி செல்பி அது, பொய்யான சிரிப்பு பொங்கி வழிந்தது. அவசரமாக பேஸ்புக்கில் அப்டேட் செய்தேன். அநேகமாக ஐம்பது லைக்குகள் விழக்கூடும். நாளைக்கு என் இறப்பை பகிரப் போகும் நண்பர்களுக்கு என்னால் கொடுக்க முடிந்த நினைவுப்பரிசு இது. “நேத்துதான் பிக்சர் அப்டேட் பண்ணிருந்தான். அழகா சிரிச்சபடி போஸ் கொடுத்திருக்கான் பாரு. ச்ச, இப்டி முடிவெடுத்திட்டானே” என பொருமிக்கொண்டு ஒரு “ஆர்.ஐ.பி” ஸ்டேட்டஸ் போடக்கூடும்.
பர்ஸ்க்குள் புதைந்திருந்த ஆதார் அட்டையை எடுத்து சட்டைப்பைக்குள் திணித்துக்கொண்டேன். ஒருவேளை மாடியிலிருந்து கீழே குதித்து, முகம் சிதைந்து அடையாளம் தெரியாமல் போய்விட்டால் இந்த ஆதார் அட்டை ஒரு அடையாளமாக இருந்துவிட்டுப் போகட்டும். “அடையாளம் தெரியாத வாலிபர் தற்கொலை” என ஏதோ ஒரு டீக்கடை வாசலில் செய்தியாக மனம் ஒப்பவில்லை.
வாழ்வதில்தான் முறையான திட்டமிடல் இல்லாமல் தோற்றுவிட்டேன், இந்த இறப்பிலாவது எல்லாம் முறையாக நடக்கட்டும்.
இனி இருக்கும் பொழுது எனக்கான விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள. மெல்ல நடந்து அருகிலுள்ள செட்டிநாடு ஹோட்டலை அடைந்தேன்.
வாயிலில் அடுக்கப்பட்டிருக்கும் மெனு புகைப்படங்களை பார்த்தே பலநாட்கள், நாவினில் எச்சில் ஊறியதுண்டு. உள்ளே சென்று அமர்ந்து, விலைப்பட்டியலை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், இதுநாள் வரை கண்களால் ரசித்த அத்தனை பதார்த்தங்களையும் ஆர்டர் செய்தேன். உணவுப்பட்டியலை எழுதிக்கொண்ட வெய்ட்டர், சற்று விசித்திரமாக பார்த்துவிட்டு நகர்ந்து சென்றார்.
பறவை, நடப்பன, ஊர்வன, நீர் வாழ்வன என ஒரு உயிருக்கும் ஈவு இரக்கம் பார்க்கவில்லை. பிரியாணியின் வாசனை, நாசிக்குள் நுழைந்து சிறுகுடலை ஊடுருவிக்கொண்டிருந்தது. ஆசையோடு அள்ளி ஒரு வாய் வைத்தேன். நாவின் சுவை மொட்டுகளில் பட்டபோது, அப்படியொரு சிலிர்ப்பை உணரமுடிந்தது. ரசித்து ருசித்து மென்று விழுங்கியபோது, “இதுதான் உன் கடைசி சாப்பாடு!” என்று மனம் நினைவூட்டியது. சட்டென உடலுக்குள் ஒரு மாற்றம், இரைப்பைக்குள் எக்கச்சக்கமாய்ச் சுரந்த அமிலங்கள். உடல் முழுக்க வியர்த்து, தொண்டைக்குழியை அடைந்த முதல் வாய் அதற்கு கீழே செல்ல மறுத்து ஸ்தம்பித்து இடைநின்றது. பதற்றம் உச்சந்தலைக்குள் ஊசியாய் குத்த, வாயிலிருக்கும் உணவை சிரமப்பட்டு விழுங்கினேன். மூச்சு இறைத்தது. இதற்குமேல் சாப்பிட மனம் ஒப்பவில்லை. மேசையில் அடுக்கப்பட்டிருந்த உணவுகளை ஏக்கத்தோடு ஏறிட்டபடியே, கைகழுவ சென்றுவிட்டேன்.
“என்ன சார் சாப்பாடு ஏதும் சரியில்லையா?” குற்ற உணர்வோடு குரல் தணித்து வினவினான் ஊழியன்.
“இல்லப்பா. கொஞ்சம் உடம்பு சரியில்ல.”
“வேணும்னா பார்சல் பண்ணிடவா?”
“இல்ல. பரவால்ல. பில் கொடுங்க, போதும்!” சற்று ஆசுவாசமாக அமர்ந்துகொண்டேன். குவளையில் ஊற்றப்பட்டிருந்த தண்ணீரை எடுத்து குடித்துக்கொண்டேன். ஏனோ அழவேண்டும் போல இருக்கிறது. அக்கம்பக்கம் திரும்பிப் பார்த்தேன். குடும்பத்தோடு மகிழ்ச்சியாக சாப்பிட்டுக்கொண்டிருக்கும் சக மனிதர்கள். என் அழுகை அந்த இடத்துச் சூழலின் ரம்மியத்தை கெடுத்துவிடக்கூடும். எச்சிலோடு என் அழுகையையும் சேர்த்தே விழுங்கிக்கொண்டு அங்கிருந்து எழுந்துவிட்டேன்.
பில்லை கையில் கொடுத்துவிட்டு, ஒருவித கழிவிரக்கத்தோடு என்னை பார்த்துக்கொண்டிருந்தான் அந்த ஊழியன். முகம் அறியாத, முன்பின் தெரியாத சக மனிதர்கள் மீது ஒரு இனம்புரியாத இரக்கத்தினை இப்படி அதிசயமான சிலரிடம் மட்டும்தான் பார்க்க முடிகிறது.
எண்ணூற்று நாற்பது ரூபாய் மொத்தம். ஆயிரம் ரூபாய் தாளினை எடுத்து வைத்தேன். “சேஞ்ச் வேணாம்!” என அங்கிருந்து கடந்து சென்றேன்.
அந்திவெயில் நெற்றியை சுளீறிட்டது. உணவகத்திலிருந்து வெளியே வந்ததும், கால் போன போக்கில் நடக்கத்தொடங்கினேன். எங்கே போவது? ஒரு யோசனையும் இல்லை. நினைவு முழுக்க நெருங்கிக்கொண்டிருக்கும் பத்து மணியை ஒட்டியே ஓடிக்கொண்டிருந்தது.
“பீச் போறியா சார்?” ஷேர் ஆட்டோ ஒன்று நகர்ந்தபடியே வினவிக்கொண்டு வந்தது.
கடற்கரை. அதுவும் தோதான இடம்தான். பலதரப்பட்ட மனிதர்களை, பரபரப்பற்ற சூழலில் எதிர்கொள்வது அத்துனை அலாதியான அனுபவம்தான். ஏறிக்கொண்டேன்.
கண்ணகி சிலையருகே இறங்கிக்கொண்டேன். யாருக்காகவோ நீதி கேட்க இன்னமும் கையில் சிலம்போடு காத்துக்கொண்டிருக்கிறாள் அந்த கற்புக்கரசி. ஆற்றாமையோடு அவளை கடந்து கடற்கரை மணலில் கால் பதித்து நடக்கத்தொடங்கினேன். உப்புக்காற்று முகத்தில் படிந்து பிசுபிசுப்பாகியது. இன்னும் எவ்வளவு தூரம் நடக்கப்போகிறேன்? இருக்கப்போகும் ஒருசில மணிகளையும் இப்படி நடந்தே கடப்பதாய் உத்தேசமா? அதிகமாய் ஆட்கள் நடமாட்டமில்லாத ஒரு மையத்தில் அமர்ந்தேன். மணலில் பந்து எறிந்து விளையாடும் குழந்தைகள், அதிதீவிரமாக விரல்களை வருடிக்கொண்டே கதைத்துக்கொண்டிருக்கும் காதலர்கள், ‘இருட்டத்தொடங்கிவிட்டதே, இன்னும் போனியாகவில்லையே,” என ஏக்கத்தோடு ‘கடலை, கடலை’ என கதறிக்கொண்டிருக்கும் பதின்வயது இளைஞன். இந்த உலகத்தில் வேடிக்கை பார்த்திடத்தான் எத்தனை எத்தனை ரசனை நிரம்பிய விஷயங்கள். அதோ அங்கு கையில் ஏதோ குச்சியோடு என்னை நோக்கிவரும் மஞ்சள் அப்பிய பெண்மணி கூட ரசிக்கத்தக்கவள்தான்.
என் எதிரே சம்மணமிட்டு அமர்ந்தபோதுதான், அந்த ரசனையையும் தாண்டி அவளுக்குள் ஒரு செயற்கையான தெய்வீக ஒப்பனை அப்பிக்கொண்டிருப்பதை கவனித்தேன். ஒரு ரூபாய் நாணயத்தின் அளவிலான குங்குமப்பொட்டும், “ரேகை ஜோசியம் பாக்குறியா சார்?” என்ற கொச்சைத்தமிழும் முரண்கள் நிறைந்த அழகாகத்தான் தெரிகிறது.
வழக்கம்போல ‘’வேண்டாம்!’ என மறுக்க மனமில்லை. நம்பிக்கைக்காக இல்லையென்றாலும், ஓரிரு நிமிடங்கள் மரண பயத்திலிருந்து சற்று விலகி பொழுதுபோக்கலாம் என்கிற நப்பாசை.
“சூரிய ரேகை, சுக்கிரன் ரேகை, புதன் ரேகையல்லாம் பின்னிபினைஞ்சு திக்குக்கு ஒண்ணா கெடக்கு சாமி. இன்னதுதான் கஷ்டமுன்னு இல்லாம, இருக்குறதெல்லாம் சிக்கலா நெறஞ்சிருக்கு. ஆயுள் ரேகை அந்தரத்துல தொங்கிகிட்டு இருக்கு சாமி”
படாரென கையை இழுத்துக்கொண்டேன். இதென்ன மாயாஜாலம்? அப்படியே நேரில் பார்த்ததைப்போல பட்டவர்த்தனமாக சொல்கிறாளே!.
“ஒன்னும் பயப்பட வேணாம் சாமி. கெரகம்னு ஒன்னு இருந்தா, பரிகாரம்னு ஒன்னும் இருக்கும். நெறைஞ்ச பவுர்ணமி நாளுல, காளி கோயில்ல வெளக்கேத்தி, நாலு சுமங்கலி பொண்ணுகளுக்கு தானம் பண்ணு சாமி. உன்னப்புடிச்ச கெரகமெல்லாம் விலகும்!” கண்களை மூடிக்கொண்டு ஒருவித மந்திரக்குரலில் சொல்கிறாள்.
மனதிற்குள் படாரென ஒரு ‘ப்ளாஷ்’. ஒருவேளை இவள் சொல்வதைப்போல செய்து பார்க்கலாமா? மனது காளி கோவிலை நோக்கி பயணிக்கத்தொடங்கியது. இதென்ன முட்டாள்த்தனம்? சாவின் விளிம்பில் நின்றுகொண்டு, மூடத்தனத்துக்கு முட்டுக்கொடுப்பதேன்? அவசரமாக அப்பெண்ணின் கையில் ஒரு நூறு ரூபாய் தாளினை திணித்துவிட்டு, அங்கிருந்து நகர்ந்தேன். வாழும்போதுதான் எடுத்த முடிவுகள் அத்தனையும் குழப்பங்களின் உச்சம் என்றால், இறப்பிலும் அந்த தெளிவை இழக்க விரும்பவில்லை.
பொங்கிவரும் கடல் அலைகளில் கால் பதித்தவாறே நடக்கத்தொடங்கினேன். குதூகலமாக தண்ணீரினில் விளையாடிக்கொண்டிருக்கும் சிறார்களை பார்த்தபோது பால்ய நினைவுகள் அரும்பத்தொடங்கின. பசும்பொன் போன்ற பொய்மை கலக்காத சிரிப்புகள் அவை. முந்தையநாள் அப்பாவிடம் வாங்கிய அடியின் சுவடும் இல்லாது, மறுநாள் எழுதப்போகும் தேர்வு பற்றிய பதற்றமும் இல்லாது, அந்த நிமிடங்களை ரசித்து வாழ்ந்த காலங்கள் அவை. அத்தகைய ஜென் நிலையை இப்போதெல்லாம் யோசித்துப்பார்த்திடவே முடியவில்லை. சுற்றிலும் பாம்புகள் சீறிக்கொண்டிருக்க, பறந்துவரும் பட்டாம்பூச்சியை ரசிப்பதற்கு பெயர்தான் ஜென் நிலையா? ஒருபுறம் அது முட்டாள்த்தனமாக தெரிந்தாலும், மறுபுறம் வாழ்க்கையை வாழ்வதற்கு அத்தகைய வித்தையை கற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.
“சார். உங்களைத்தான்.” யாரோ பின்னாலிருந்து அழைக்கிறார்கள். திரும்பிப்பார்த்தேன், இளம்பெண் ஒருத்தி. வெகுநேரமாக என்னை அழைத்திருக்கக்கூடும், நான் ஒருவழியாய் திரும்பிப்பார்த்துவிட்டதன் மனநிறைவு அவள் கண்களுக்குள்.
“சொல்லுங்க.” திரும்பினேன்.
“டைம் என்ன சார்?”
“எட்டு ஆகப்போகுது.”
“தாங்க்ஸ்” சிரித்துக்கொண்டே சொன்னாள். அப்போதுதான் அவளை கொஞ்சம் உற்று நோக்கினேன். சிவப்பு ஜிகினா சேலை, தலை நிரம்பிய மல்லிகை, உதட்டை மீறிய லிப்ஸ்டிக் ஒப்பனை. எதையும் கவனிக்காததை போல அவசரமாக கடலை நோக்கி திரும்பிவிட்டேன். அவள் இன்னும் என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறாள், மெல்ல என்னருகே நகர்ந்து வருகிறாள். இந்தச் சூழலை எப்படி எதிர்கொள்வது என்று புரியாமல் தடுமாறியபடிதான் நின்றேன்.
“பக்கத்துல ரூம் இருக்கு, ஆயிரம் ரூபாய்தான் சார்.” காதருகே கிசுகிசுத்தாள். பதற்றத்தில் வியர்த்து வழியத்தொடங்கியது. சட்டைப்பைக்குள் இருக்கும் ரூபாய்களை தேற்றி எப்படியும் ஆயிரம் ரூபாய் கொடுத்துவிடமுடியும்தான்.
அந்த தருணத்தில் மனதிற்கு இதமான ஒரு அனுசரணை தேவைப்படுகிறதுதான். பற்றி எரிந்துகொண்டிருக்கும் வைக்கோல்போரில் அள்ளி வீசவேண்டிய தண்ணீரைப்போல.
அவள் பின்னே நடக்கத் தொடங்கினேன். நான்கைந்து சந்துபொந்துகளை கடந்து, நாய்களின் ஊளைச்சத்தம் மங்கியிருந்த அந்த அழுக்கு படிந்த மாடிப்படிகளில் ஏறினோம். சற்றே சிதிலமடைந்துபோன ஒரு அறைக்குள் நுழைந்தபோது, மரண பயத்தையும் மீறிய ஒருவித பதற்றம் தொற்றிக்கொண்டது.
விளக்கை போட்டுவிட்டு, கதவில் உள்தாழ்ப்பாளையும் போட்டுவிட்டாள். அருகிலிருந்த தொலைக்காட்சிப்பெட்டியை ‘ஆன்’ செய்துவிட்டு, அதன் சத்தத்தை அதிகப்படுத்தினாள். கட்டிலில் சிதறிக்கிடந்த துணிகளை ஓரமாக அள்ளிவைத்துவிட்டு, என்னெதிரே செயற்கை சிரிப்புடன் வந்து நிற்கிறாள்.
‘நான் ரெடி, இனிமே நீதான் தொடங்கணும்!’ வார்த்தைகளில் அல்லாது, மெளனமாக உணரவைத்தாள். ஆனால் நான் எப்படி தொடங்குவது? முன்பின் அனுபவம் இருந்திருந்தால்கூட யோசிக்காமல் தொடங்கியிருப்பேன். நான் யோசித்துக்கொண்டிருப்பதன் உள்ளர்த்தம் உணர்ந்தவள் போல, என் சட்டை பொத்தான்களை அவளே கழற்றத் தொடங்கினாள். தன் சேலையையும் விலக்கிவிட்டு, என் வலதுகையை எடுத்து அவள் தோள் மீது வைத்தாள். கிளிப்பிள்ளைக்கு பாடம் சொல்லிக்கொடுப்பதை போல செய்துகொண்டிருக்கிறாள். இதற்குமேலும் மௌனசாமியாராய் நின்றிருந்தால், என் ஆண்மையின் மீதல்லவா சந்தேகம் கொண்டுவிடுவாள்.
அவளை வாரி அணைத்து உடைகளை களையத்தொடங்கினேன். அரை மயக்கத்தில் உச்சந்தலைக்குள் உணர்வுகள் கொப்பளிப்பதை உணர்ந்தேன். இப்படியும்கூட ஒருவித இன்பம் உடலுக்குள் ஏற்படுமா என்று எண்ணம் தோன்றிய மறுநொடியே எங்கிருந்தோ ஒருவித கவலை என்னையும் மீறி பீறிட்டு வழிந்தது. இன்னும் சில நிமிடங்களில் எழுதப்போகும் எனக்கான மரண சாசனம் பற்றியதான கவலை அது.
சாகப்போகும் தருணத்திலும் பாவக்கணக்கினை அதிகமாக்கிக்கொள்ள மனம் ஒப்பவில்லை. சட்டென விலகிக்கொண்டேன். வேகமாய் சட்டையை அணிந்துகொண்டு உடையினை சரிசெய்துகொண்டேன். விசித்திரமாக என்னை ஏறிட்டுப்பார்த்தவள், என்னை மேற்கொண்டு “என்ன? ஏன்?” என கேட்பதற்குள், அங்கிருந்து அவசரமாக வெளியேறினேன். நான் படிகளில் கீழே இறங்கியபோது, அவள் வாசல் வரை வந்து என்னை அதிசயமாக வெறித்துக் கொண்டிருப்பதை கண்டும் காணாமல் வேகமாய் அவள் கண்களை விட்டு மறைந்தேன்.
ஆள் அரவமற்ற அந்த அரைகுறை கட்டிடத்தை அடைந்தபோது நேரம் ஒன்பதரை மணிகடந்திருந்தது. எதிர்பார்த்ததை போலவே மனித நடமாட்டம் எதுவுமில்லாது, என் இறப்பை ஏற்றுக்கொள்ளும்விதமாய் தயாராக நிற்கிறது அந்த கட்டிடம். லிப்ட் எதுவும் இல்லை, அத்தனை மாடிகளையும் ஏறித்தான் கடக்கவேண்டும். கிடுகிடுவென படிகளில் தாவியேறினேன்.
மூச்சிரைக்க பதினான்காவது மாடியை அடைந்தபோது, இதயம் இடியென இடித்துக்கொண்டிருந்தது. வியர்வை உடலை குளிப்பாட்டியிருந்தது. கண்கள் இருட்டிக்கொண்டு வந்ததால், படிகளில் சாய்ந்து அமர்ந்துகொண்டேன். நேரம் பத்தை தொட இன்னும் ஐந்து நிமிடங்கள் மீதமிருந்தது. அலைபேசியை எடுத்து அனிச்சையாகவே அம்மாவின் எண்ணுக்கு அழைத்தது எனது விரல்கள்.
“என்னப்பா?. நல்லாருக்கியா?”
“இருக்கேன்மா..”
“சாப்டியா?..”
“ஹ்ம்ம் சாப்ட்டேன்.” வழக்கமாக இந்த பேச்சோடு அழைப்பினை துண்டித்துவிடும் நான், இன்று ஏனோ அமைதியாக காத்திருப்பது அம்மாவுக்கு சற்று விசித்திரமாக தெரிந்திருக்கக்கூடும்.
“எதுவும் பிரச்சினையாப்பா?. பணம் காசு எதுவும் வேணுமா?”
“அதல்லாம் ஒண்ணுமில்லம்மா. நீ நல்லா இருக்கியா?. உடம்ப பார்த்துக்கோ, நேரா நேரத்துக்கு சாப்பிடு.”
ஓரிரு வினாடிகள் மௌனத்துக்கு பிறகு, “என்னய்யா உடம்பு கிடம்பு சரியில்லையா?” கேள்விக்குறியோடு சந்தேகக்கணையும் சேர்ந்தே வந்தது.
அவசரமாக அழைப்பை துண்டித்தேன்.
யோசிக்கவெல்லாம் மனதிற்கு அவகாசம் கொடுத்திடாமல் சட்டென எழுந்து, மாடியின் விளிம்பில் நின்று கீழே எட்டிப்பார்த்தேன்.. வெகு அரிதாகவே வாகன போக்குவரத்து தென்படுகிறது. குறைவுயிராய் கிடக்கையில், அனுதாபத்தோடு ஆம்புலன்ஸ்’ஐ அணுகும் நிதானம் அங்கு தென்படவில்லை என்பது சற்று ஆறுதல் அளித்தது.
சரி குதித்துவிடலாம் என்கிற தீர்மானத்தோடு இன்னும் விளிம்பினை நோக்கி நகர்ந்து வந்தேன். கால் கிடுகிடுத்தது, உடல் முழுவதும் ரத்த ஓட்டம் அமிலமாய் எரியத்தொடங்கியது. அழுகை என்னையும் மீறி. ததும்பி வழிந்தது.
எவன் சொன்னது தற்கொலை என்பது கோழைத்தனம் என்று? இதோ. இந்த நிமிடத்தில் இங்கிருந்து நான் குதிப்பதற்கு ஒரு அனாயச துணிச்சல் வேண்டும். வாழ்வதற்கான துணிச்சலை காட்டிலும், சிலபல கிலோக்கள் கூடுதல் துணிச்சல் அவசியம்.
ஆறு முறை எத்தனித்தும் இன்னும் குதித்திட முடியாமல் தடுமாறி நிற்கிறேன். கடவுளே, என்ன இது சோதனை? இவ்வளவு நேரமாய் மனதை சாவிற்கு ஆயத்தப்படுத்தியிருந்தும், கடைசி புள்ளியில் இப்படி தடுமாறுகிறதே. கண்களை மூடி, மூச்சினை உள்வாங்கி, இதுவரை பட்ட கஷ்டங்களிலேயே உச்சபட்ச கவலையை மனதில் நிலை நிறுத்தினேன். கால் இடறுகிறது. ஐயோ.
தடுமாறிவிட்டேன். காற்றில் மிதக்கிறேன், உடல் முழுவதும் மின்சாரம் பாய்வதை போல உணர்கிறேன். இன்னும் சில கணப்பொழுதில் தரையில் மோதி சிதறப்போகிறேன். இடையில் ஏதோ கேபிள் ஒயரில் சிக்கிக் கொள்கிறேன். அதுவும் அறுந்து விழுகிறேன்.
“ஐயோ.. யாரோ கீழ விழுந்துட்டாங்க” குரல் எங்கிருந்தோ ஒலிக்க, நினைவு மெல்ல அஸ்தமித்தது.
கண்களை திறக்க முடியவில்லை. ஏதோ பீப் சத்தங்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. நினைவு தத்தித்தடுமாறி மெல்ல சிதறியபடியே மீண்டது.
மூக்கிலும், வாயிலும் ஏதோ குழாய்கள் சொருகப்பட்டு, பலவண்ண ஒயர்கள் உடல் முழுக்க இணைக்கப்பட்டு படுக்கையில் கிடக்கிறேன். ஐசியூ’வில்தான் இருக்கிறேன் போலும், மருந்து நெடி சுவாசத்தோடு கலந்துவிட்டது. எப்படி பிழைத்தேன்? அந்த பாழாய்ப்போன கேபிள் ஒயரில் சிக்கியிருக்கக்கூடாது, இப்படி குற்றுயிராய் கிடக்கவைத்துவிட்டது.
கண் பார்வை அரைகுறை தெளிவோடுதான் தெரிகிறது. இப்போதுதான் உணர்வுகளும் மெல்ல மேலெழுகிறது. உடல் முழுக்க வலி தெறிக்கிறது அழக்கூட திராணியற்றுக் கிடக்கிறேன். வாயில் சொருகியிருக்கும் குழாய், குமட்டிக்கொண்டு வருகிறது. எல்லாவற்றையும் பிய்த்து எறிந்துவிட்டு எழுந்து ஓடவேண்டும் போல தோன்றுகிறது.
மங்கலான பார்வையில் என் கட்டிலருகே வெகுநேரமாக நின்றுகொண்டிருக்கும் ஒரு உருவத்தை அப்போதுதான் கவனிக்கிறேன் அம்மா.. அம்மாவேதான்.. சேலையின் முனையில் வாய்பொத்தி அழுதுகொண்டு நிற்கிறாள். உணர்வற்ற என் கால்களை ஒரு கையால் பிடித்தபடி நிற்கிறாள்.
செவிலிப்பெண் ஒருத்திவந்து, அழுதுகொண்டிருக்கும் அம்மாவை கண்டிக்கிறாள். அங்கிருந்து வெளியேற்ற முற்படுகிறாள். விடாப்பிடியாக அங்கு நின்றபடி நகர மறுக்கிறாள் அம்மா ஐயோ.. நான் இறந்துபோனால், என் கஷ்டங்களையும் சேர்த்து அம்மாவின் தலையிலல்லவா சுமைகளாக ஏற்றிவிடுவேன். துடித்துப்போய்விடுவாளே. பெற்ற பிள்ளையின் இறப்பை, எதிர்கொண்டு வாழும் கொடும் சூழலை நினைத்தாலே குலைநடுங்குகிறது. எழுந்துசென்று அவள் கண்களை துடைத்துவிட்டு அழவேண்டும் போல இருக்கிறது. உயிர் வாழும் வரையில் வாழ்வது மட்டும்தான் சுமையாக தெரிந்தது, மரணத்தின் விளிம்பில் நிற்கும்போதுதான் வாழ்விற்கு பின்னால் நடப்பவற்றை யோசிக்க மனம் தூண்டுகிறது.
ஐயோ நான் சாகக்கூடாது. எப்படியாவது உயிர்பிழைத்து, வாழவேண்டும் ஏதோ ஒரு அதிசயம் நிகழ்ந்து குணமாகிவிடவேண்டும். ஐயோ.. என்ன இது? கண் பார்வை மெல்ல மங்கிக்கொண்டு வருகிறது.
மூச்சுவிட அதிகம் சிரமமாக இருக்கிறது.. நினைவுகள் முன்னும் பின்னுமாய் தடுமாறுகிறது.
ஏதோ அவசர பீப் சத்தம் ஒன்று விடாமல் ஒலிக்க, என்னை நோக்கி வேகமாய் ஓடிவருகிறார்கள் செவிலிப்பெண்கள்யாரோ ஒரு மருத்துவர் என் நெஞ்சின்மீது கைகளை வைத்து அழுத்துகிறார், என்னைச் சுற்றி எத்தனை பேர், என்னைப் பற்றும் கரங்கள் எத்தனை. அவசரமாக பல ஊசிகள் ஏற்றப்படுகின்றன.
கடவுளே.. எவ்வளவுபெரிய பிழையை செய்துவிட்டேன், எப்படியாவது இதிலிருந்து மீளவேண்டும் நான் சாகக்கூடாது… நான் சாகக்கூடாது…
ஜேகே.வின் ‘பொண்டிங்’- கதை சொல்லும் விளையாட்டு
குழந்தைகள் கையில் ஒரு புதுப்பொருள் கிடைத்தால் அதை எல்லா இடங்களிலும் பொருத்தி விளையாடுகின்றன- ஸ்க்ரூ டிரைவர் இருந்தால் எல்லாவற்றையும் கழற்றிப் போடப் பார்த்தல், பசை இருந்தால் எதையெல்லாம் ஒட்டி வைக்கலாம் என்று தேடுதல், தீப்பெட்டி இருந்தால் எதற்கெல்லாம் தீ வைக்கலாம் என்று யோசித்தல் – நாம் வளர்ந்து, நமக்கு பொறுப்பு வந்து விட்டால் மட்டும் இது பெரிய அளவில் மாறுவதில்லை. எப்போதும் நாம் கைவசம் உள்ள கருவிகளைக் கொண்டே இவ்வுலகைப் புரிந்து கொள்கிறோம், அவ்வாறு புரிந்து கொள்ளும்போதே உலகின் இயல்பை நம் மனதில் திருத்தி வடிவமைக்கவும் செய்கிறோம். இதில், பொறுப்புடன் கூடவே வெற்றியும் அதனால் ஏற்படும் தன்னம்பிக்கையும் வாய்த்து விட்டால், நாழியே நம் கருவி என்றாலும் அதைக் கொண்டு உலகளந்து விடலாம் என்ற உறுதியான நம்பிக்கை வந்து விடுகிறது. ஆற்றலும் வெற்றியும் நாம் சரியாக இருப்பதற்கான அத்தாட்சிகள் என்பதால் அதை வேறு பலரும் ஏற்கப் போய் நம் நாழி ஒரு அலகும் ஆகிறது. ஆனால், யானையைப் போல் உலகும் தடவிப் பார்க்கும் கரங்களுக்கும் புறத்தகவல்களைத் தொகுத்து அதற்கொரு உருவம் அளிக்க உதவும் கருவிகளாகிய கருத்துச் சட்டகங்களுக்கும் அப்பால் தன் போக்கில் போகிறது.
ஆங்கிலத்தில் லிடரேச்சர் என்பதை நாம் இலக்கியம் என்கிறோம். ஹை-லிட், லோ-லிட் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்த காலம்கூட இப்போது போய் விட்டது. எழுதப்படும் எல்லாவற்றையும் லிடரேச்சர் என்று சொல்ல ஆரம்பித்து, திரைப்படங்கள் உட்பட நம் விசாரணைக்குரிய பிரதி நிலையை அடையக்கூடியவை எல்லாம் லிடரேச்சர் என்ற இடத்தில் வந்து நிற்கிறோம். அதற்காக எல்லாம் ஒரே அளவில் சம மதிப்பு கொண்ட இலக்கியம் ஆவதில்லை – புனைவுத்தன்மை, வடிவத்துக்கு ஏற்ற மொழி கொண்டிருத்தல், பயன்பாட்டு நோக்கமின்மை, கற்பனையைத் தூண்டுதல் போன்ற விஷயங்கள் ஒரு படைப்பை இலக்கியம் என்று பாராட்டத்தக்க இடத்துக்கு அருகில் கொண்டு செல்கின்றன.
மொழி பல திசைகளில் விரியக்கூடியது, பல்பொருள் அளிக்கக்கூடியது. குறிப்பிட்ட ஒரு தொடர் வரிசையில் முன்னும் பின்னும் வரக்கூடிய வாக்கியங்களைக் கொண்டே எந்த ஒரு வாக்கியமும் அதன் பொருள் இன்னது என்று வரையறை செய்யப்படக்கூடியது. அப்படியும் அதன் பொருள் பல கற்பனைகளுக்கு இடம் தரலாம். மொழியின் இத்தன்மையை அழகியலாய்க் கொள்வதாலேயே இலக்கியம் என்பது சுட்டுதல் என்று பொருள் கொண்டு, ஒரு படைப்பு எதைச் சுட்டுகிறது, தான் சுட்டும் பொருளைத் தன்னுள் எவ்வளவு கொண்டிருக்கிறது, எவ்வகையில் இச்சுட்டல் நிகழ்கிறது என்று பலவாறு பேசுகிறோம். ஒரு படைப்பு தான் நேரடியாய்ச் சொல்வதற்கு முற்றிலும் முரணான பொருள் தரலாம், அல்லது நேரடியான பொருள் ஒன்று மறைபொருள் ஒன்று என்று இருவேறு வகைகளில் பொருள்படலாம், படைப்பில் உள்ளதன் ஒரு பகுதியை மறைத்து அது சுட்டுவதாய் நாம் கொள்ளும் பொருளை, சொன்னது பாதி சொல்லாதது பாதி என்று அதிலுள்ள இடைவெளியில் நிரப்பும் சாத்தியம் கொண்டிருக்கலாம்.
இது எதுவும் நாம் அறியாதது அல்ல. ஒரு படைப்பு கற்பனைக்கு இடம் கொடுக்காதபோது, அதன் வாசிப்பனுபவத்தில் அகத்தூண்டுதல் நிகழாதபோது, தட்டையான மொழி, தட்டையான வடிவம் என்று அது நிராகரிக்கப்படுகிறது. புனைவென்றால், திரைக்குப்பின் உள்ள நிழலாட்டத்தின் சாயல் அதில் வெளிப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நிழல், சொல்லப்படும் விஷயத்துக்குப் பின்னுள்ள சொல்லப்படாத விஷயத்தின் சுட்டல், புனைவுக்கு, ஏன் மொழிக்கே, ஒரு கூடுதல் பரிமாணம் அளிக்கிறது. இது தொடர்பாகவே இலக்கியம் குறித்த விவாதங்கள் நிகழ்கின்றன.
இந்த அழகியலோடு அறம் சேரும்போது ஒரு சிறிய நுண்மையாக்கம் நிகழ்ந்து தீவிர நிலைப்பாடுகள் தோன்றுகின்றன. எதை எழுதலாம், எதை எழுதக்கூடாது, எது மதிப்பு கொண்டது, எது மதிப்பற்றது என்ற விவாதங்களில் கதைசொல்லலின் விளையாட்டுத்தனம் அடிபட்டுப் போகிறது. எத்தனை பேசினாலும் கதை சொல்லல் ஒரு மொழி விளையாட்டும்தான் என்பதை மறுக்கவே முடியாது, ஆனால் விளையாட்டுத்தனமான கதைகளில் இலக்கியத்தின் ஒளி பெரும்பாலும் பாய்வதே இல்லை. விளையாட்டுத்தனம் குறையும்போது இலக்கியத்தின் ஒரு முக்கிய இயல்பான பயன்பாட்டு நோக்கமின்மைக்கு இடமில்லாமல் போகிறது – இலக்கியம் ஒரு இயக்கம் என்ற இடத்தை அடையும்போது அதன் இலட்சியங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன, விளையாட்டுத்தனம் அர்த்தமற்றுப் போகிறது. குழந்தைகள் விஷயத்தில் பார்ப்பது போல், விளையாட்டுத்தனம்தான் கற்பனையைத் தூண்டுகிறது, நம் கருவிகளின் புதுப் பயன்பாட்டைக் கண்டறிய உதவுகிறது.
oOo
‘பொண்டிங் இன்னமும் வந்து சேரவில்லை‘, என்று துவங்கும் ஜேகேவின் கதையில் பிரிந்து வாழும் அருணும் மயூரியும் உரிமை கொண்டாடும் அதிர்ஷ்டம் வாய்க்கப் பெற்றவன் பொண்டிங். பெரும்பாலும் அருனின் பார்வையில் சொல்லப்படுகிறது- மயூரி நிறைய பொய் சொல்பவள் என்பதையும் அவள் சூடானியன் ஒருவனோடு சேர்ந்து வாழ்கிறாள் என்பதையும் அது குறித்த அருணின் கவலைகளையும் நாம் துவக்கத்திலேயே அறிகிறோம்- “பாவம். பிள்ளைக்கு வாய் திறந்து சொல்லவுந் தெரியாது. அந்த சூடானியன் பொண்டிங் முன்னாலேயே மயூரியை… Stop it Arun, அப்படி எல்லாம் நடக்காது.” அவன் கவலையெல்லாம் பொண்டிங் மீதே என்று சொல்லிக் கொண்டாலும் மயூரி மீது அருண் கொண்டுள்ள உரிமையை மணமுறிவுக்குப் பின்னும் அவன் மனம் விலக்கிக்கொள்ள மறுக்கிறது.
பொண்டிங் என்ற பெயரைத் தேர்வு செய்வது மயூரிதான். கதைக்களம் ஆஸ்திரேலியாவில் உள்ள ப்ரெஸ்டன் என்பதால் பொண்டிங்கைத் தேர்ந்தெடுக்கும் மயூரி ஆஸ்திரேலிய அடையாளத்தை ஏற்றுக் கொண்டு விட்டாள் என்றும் ‘ராம், சிவாஸ், கண்பத்’ என்ற சாமி பெயர்கள், அல்லது, ‘சச்சின், சனத்’ என்ற ஆசிய கிரிக்கெட்டர்களின் பெயர்களை அருண் விரும்புவதில் அவனது அடையாளச் சிக்கல் தொடர்கிறது என்றும் கொள்ளலாம். ஆனால் குடியேறியவர்களின் இந்தச் சிக்கல்கள் கதையில் இன்னும் விரித்தெடுக்கப்படவில்லை. போகிற போக்கில் இது இடம் பெறுகிறது, எப்படி மயூரி சூடானியனுடனும் அருண் அலெக்சாந்திராவுடனும் மணமுறிவுக்குப்பின் வாழ்கிறார்களோ அது போல் இதுவும் கதைக்கு பின்னணி சேர்க்கிறது.
பொண்டிங் குறித்த சண்டை எண்ணற்ற பல சண்டைகளில் ஒன்று, இறுதிச் சண்டை, ‘அது பத்தாயிரத்து முந்நூற்று நாற்பதாவது சண்டையாக இருக்கலாம். நகரத்தின் இத்தாலிய உணவுவிடுதி ஒன்றில் அவன் அலெக்சாந்திராவோடு உணவருந்திக்கொண்டிருந்தவேளையில் தற்செயலாக மயூரி அவர்களைக் கண்டதிலிருந்து முளைவிட்ட சண்டை‘. இது ஏன் இறுதிச் சண்டையாக ஆகிறது, ஏன் அவ்வளவு பலமான அடிதடி என்பது கதையின் கடைசி வரியில்தான் புலப்படுகிறது. இதற்கு வேண்டிய அழுத்தம் கொடுக்கப்படவில்லை என்பதால் அருணுக்கும் மயூரிக்கும் நடுவில் என்ன நடந்திருக்கும், அவர்களின் சண்டை எது குறித்து இருந்திருக்கும் என்பதை வாசகனே ஊகிக்க வேண்டியதாகிறது. பொண்டிங்கைவிட கதைக்கு இதுதான் முக்கியம், இதில் இல்லாத கவனம் பொண்டிங் மீது விழுவதில் உண்மையை எதிர்கொள்ள மறுக்கும் அருணின் பலவீனம் இருக்கிறது.
இன்னும் சொல்வதானால், அருண் சில உண்மைகளை நம்மிடமிருந்தும் மறைக்கிறான்- “மயூரி தனக்குத் தீர்க்கப்பட்ட பொருட்கள் எல்லாவற்றையும் நான்காயிரம் டொலர்களுக்கு அருணுக்கே திரும்பவும் விற்றாள். சாமியறைப் படங்களை இலவசமாகக் கொடுப்பதாகச் சொல்லிவிட்டாள். ஒரு பென்சும், டொயோட்டாவும் வீட்டில் நின்றது. மயூரி பென்ஸ் தராவிட்டால் விவாகரத்தை இழுத்தடிப்பேன் என்று அடம்பிடித்தாள். நம்பர் பிளேட்டில்கூட “MAYURI3” என்று இருந்தது. அருணுக்கு அவள் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வைத்தாலே போதும் என்ற நிலை. பென்ஸ் மயூரிக்குப்போனது,” என்று பல தகவல்களுக்கு இடையே அருண் விவாகரத்து பெற அவசரப்படுகிறான் என்ற தகவலும் இருக்கிறது, ஆனால் அது ஏன் எதனால் என்ற கேள்வி கதையில் இல்லை. அருண் அதைச் சொல்வதில்லை, அருண் பார்வையில் கதைசொல்லும் ஜேகேவும் சொல்வதில்லை. ஆனால் சிறிது ஊகித்தால் நாம் கண்டு கொள்ளலாம். அதற்கும் கதையின் இறுதிக்கு வர வேண்டியிருக்கிறது.
ஆங்கில துப்பறியும் கதைகளில் red herring என்று ஒன்று சொல்வார்கள், வாசகனின் கவனத்தைத் திசை திருப்ப வேறு திசையில் சந்தேகம் கொள்ள வைக்கும் உத்தி. அதற்கு இணையான ஒன்றாக, அருண் மீது சந்தேகம் எழாத வகையில் இங்கு பொண்டிங் யார் என்ற கேள்வி கதை முழுக்க, தலைப்பு துவங்கி இறுதி வரை நீடிக்கிறது – “இருவரும் பொண்டிங்கை அழைத்துக்கொண்டு பூங்காவுக்கு நடையெல்லாம் போயிருக்கிறார்கள். குழந்தை என்றாலும் பெயருக்குத் தகுந்தமாதிரி பொண்டிங் நன்றாக பந்து விளையாடுவான். “கட்ச் இட்” என்று சொல்லி பந்தை வீசுகையில் குழந்தை ஆர்வத்தோடு பந்தை நோக்கிப் பாய்கையில் நிஜ ரிக்கி பொண்டிங் போய்ண்டில் கட்ச் பிடிப்பதுபோலவே இருக்கும்,” என்ற ஒரு புதிர்த்தனமான இடத்தைத் தவிர கதை முழுவதும் பொண்டிங்கை அருண் ‘பிள்ளை’ என்றே சொல்லிக் கொண்டிருக்கிறான்- “சாதாரண குடும்பப்படம் அது. அருண், மயூரி, நடுவில் பொண்டிங். பொண்டிங் சிரிக்காமல் உர்ர்ரெண்டு முறைத்துக் கொண்டிருக்க இருவரும் அவனைத் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். படம் கன்வாஸ் செய்யப்பட்டு வீட்டுக்கு வந்தது. மயூரியின் படத்துக்குக் கீழே “மயூரி ரட்ணம்”, அருணுக்குக் கீழே “அருண் இளையதம்பி”, பொண்டிங்குக் கீழே “பொண்டிங் மயூரி” என்று எழுதிக்கிடந்தது. அருணுக்குக் கோபமோ கோபம். “பொண்டிங் அருண்” என்று எழுதியிருக்கவேண்டும் என்றான்,” என்றெல்லாம் வேறு எழுதுகிறார். பொண்டிங் மீது யாருக்கு கூடுதல் உரிமை இருக்கிறது என்பதைத் தீர்மானிக்கும் முக்கியமான ஆதாரங்களில் இதுவும் ஒன்று.
கதையின் இறுதியில் அலெக்சாந்தரா வெளிப்படும்போதுதான் பொண்டிங் யார் என்ற நம் சந்தேகமும் உறுதிப்படுகிறது. ஆனால் காலத்தில் முன்னும் பின்னும் சென்று மிகத் தேர்ந்த வகையில் கதை சொல்லும் ஜேகே, பாண்டிங் குறித்த மர்மத்தை அவிழ்க்கும் அதே வரியில் இதனுள் உள்ள இன்னொரு கதையின் மர்மத்துக்கும் விடையளிக்கிறார். ஆனால், இப்படியொரு மர்மம் இருப்பதே கதையை இரண்டாம் முறை படிக்கும்போதுதான் தெரிகிறது.
இந்தக் கதை நமக்கு அளிப்பது முழுக்க முழுக்க ஒரு அறிவு நிலை திருப்தியைதான். ஒரு குறுக்கெழுத்துப் புதிரை நிறைவு செய்த திருப்தி போன்றது இது. அருண், மயூரி, பொண்டிங் என்று எவரது உணர்வுகளையும் நாம் அறிந்து கொள்வதில்லை. புறத்தகவல்கள் என்ற அளவிலேயே கதை சொல்லப்படுகிறது, முரண்கள் குறித்த அகவுணர்வுகள் பெரிதுபடுத்தப்படுவதில்லை. அருணின் உணர்வுகள் விவரிக்கப்படுவதும் ஒரு விளையாட்டுப் போக்கில்தான் என்பதை யோசித்துப் பார்த்தால் நாம் அறிய முடியும். விளையாட்டாகக் கதை சொல்வது என்று பார்த்தால் ஜேகே மிகச் சுவாரசியமாக, படித்து முடித்த பின்னரும் அசை போடக்கூடிய கதையைச் சொல்லியிருக்கிறார், அதில் சந்தேகமில்லை.