Author: பதாகை

பன்முகப்பட்ட வாசிப்பு சாத்தியங்கள் – Brooklyn novel / Colm Toibin

– அஜய் ஆர். –

Brooklyn-Cover

ஒரு இளம் பெண் அயர்லாந்திலிருந்து வேலைக்காக அமெரிக்கா அனுப்பப்படுகிறாள். அங்கு தனிமையில் வாடுகிறாள். ஒரு இளைஞனை அவள் சந்திக்க, அவர்களுக்குள் மெல்ல ஒரு உறவு உறவாகும்போது மீண்டும் தாய் நாடு செல்ல வேண்டிய சூழல் அப்பெண்ணிற்கு. அங்கு இன்னொரு (உயர்குடியைச் சேர்ந்த) இளைஞன் அவள்பால் ஈர்க்கப்படுகிறான். அப்பெண் மனத் தடுமாற்றம் கொள்கிறாளா, தன் வாழ்க்கை குறித்து என்ன முடிவெடுக்கிறாள் என்பது கலம் டுபீனின் (Colm Toibin) ‘Brooklyn’ நாவலின் இறுதிப் பகுதி. நாவலின் உள்ளடக்கத்திற்கு கிஞ்சித்தும் நியாயம் செய்யாத இந்தக் கதைச் சுருக்கம், வழக்கமான முக்கோணக் காதல் கதையைச் சுட்டுவதாகத் தோன்றினால், அது ‘கதைச்சுருக்கம்’ என்பதன் போதாமையே தவிர நாவலின் தரம் குறித்த சரியான மதிப்பீடாகாது. இந்தக் கட்டுரைக்கு ஒரு பின்புலமாக மட்டுமே அதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த நாவலைப் பற்றிய நேர்மறை விமர்சனங்கள் ஒரு புறமிருக்க, அது குறித்து வெளிவந்துள்ள/ வருகிற எதிர்மறை விமர்சனங்களில் இரண்டு கருத்துகள் முக்கியமாக மீண்டும் மீண்டும் சொல்லப்படுகின்றன. ஒன்று, அதன் முக்கிய பாத்திரமான எல்லிஸின் (Ellis) ‘செயலின்மை’. தன்னிச்சையான முடிவெடுக்கத் தெரியாதவராக, அலைபாயும் மனமுடையவராக உருவகித்து இறுதியில் நம்பிக்கை துரோகியாக, ஏமாற்றுக்காரியாக அவரை வாசகன் பார்க்கும் முடிவிற்கும் அது இட்டுச் செல்கிறது. நாவலில் ‘கதை’ என்பதே இல்லை (‘கதை’ என்பதன் வரையறை என்ன என்பதை தனிக் கட்டுரையாக பார்க்க வேண்டும்), இதன் மூன்று பகுதிகளில் முதல் இரண்டு பகுதிகளும் அவற்றின் சம்பவங்களும் எந்தத் தொடர்பும் இன்றி சிதறிக் கிடந்து வாசகனுக்கு எதையும் சொல்வதில்லை, அதன் இறுதிப் பகுதியில் வரும் நிகழ்வுகள் மட்டுமே நினைவில் தங்குகின்றன. நாவலே இறுதிப் பகுதியின் பலத்தில்தான் நிற்கிறது என்பது இரண்டாவது விமர்சனம். நேரடியான வாசிப்பில் நாவல் குறித்து இத்தகைய ஒரு பார்வை சாத்தியம்தான் என்றாலும், நாவலை மீள் பார்வை செய்து இத்தகைய மேலோட்டமான வாசிப்பைத் தாண்டிய இன்னொரு கோணத்தையும் வாசகன் காணக் கூடுமா என்பதை இக்கட்டுரையில் ஆராய்வதின் மூலம், எந்தத் தரப்பையும் முற்றிலுமாக மறுதலிக்காமல், அதே நேரம் இலக்கியத்தின் பன்முகப்பட்ட வாசிப்பின் சாத்தியத்தை நாம் அறியவரக்கூடும்.

சம்பவம் 1:

குடும்பத்தை விட்டு பிரிந்து அயர்லாந்திலிருந்து அமெரிக்கா வந்து ஒரு துணிக்கடையில் வேலை செய்யும் இளம் பெண்ணான எல்லிஸ் (Ellis), தன் விடுமுறை நாளை காதலனுடன் கடற்கரையில் செலவிட முடிவு செய்கிறார். அதற்குத் தகுந்த உடையை (bathing suit) தேர்வு செய்ய அவருடைய பெண் மேலதிகாரி உதவுகிறார். எல்லிஸின் உடலை அவர் தொடுவது, ஆடை அணிவிப்பது என அவருடைய சுவாதீனமான நடவடிக்கை எல்லிஸை அசௌகர்யப்படுத்துகிறது. (மேலதிகாரிக்கும் ஒரு காதலன் இருக்கிறான் என்பதால், அவர் நடத்தையில் பாலியல் விழைவு உள்ளது என்பது போன்ற வாசிப்பிற்கு இடமில்லை என்று உறுதியாகச் சொல்ல முடியும்) எனினும் எல்லிஸ் தன் கூச்சத்தை வெளியே சொல்வதில்லை

சம்பவம் 2:

குடும்பத்தைப் பிரிந்து தனிமையில் இருக்கும் எல்லிஸ், தன் மனத்துயர் குறித்து யாருடனும் பகிர முடியாத மனநிலையில் உள்ளார் என்பதை டூபின்

None of them could help her. She had lost all of them. They would not find out about this; she would not put it into a letter. And because of this she understood that they would never know her now. Maybe, she thought, they had never known her, any of them, because if they had, then they would have had to realize what this would be like for her.” 

என்று சுட்டுகிறார்.

இரண்டு சம்பவங்களும் நேரடியான தொடர்பு கொண்டவையல்ல என்றாலும், இரண்டாம் சம்பவம், மற்றவர்களிடம் தன் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள மிகவும் தயங்கும் எல்லிஸின் குணத்தை வெளிப்படுத்தி முதல் சம்பவத்தை புரிந்து கொள்ள உதவும் அதே நேரத்தில், மொத்த நாவலையும் தொகுத்துக் கொள்ளவும் உதவுகிறது. அவரின் ‘செயலின்மையாக’ சுட்டப்படுவது உண்மையில் தன்னுள்ளேயே சுருங்கிக் கொள்ளச் செய்யும் அவர் அகத்தின் தயக்கம்தான்.

அயர்லாந்தில் விதவைத் தாய் மற்றும் மூத்த சகோதரி ரோஸுடன்  வசிக்கும் எல்லிஸிற்கு, ஒரு பாதிரியின் உதவியால் அமெரிக்காவில் வேலை கிடைக்க, அவர் அங்கு அனுப்பப்படுகிறார். அயர்லாந்தைவிட அமெரிக்காவில் வேலைவாய்ப்புக்கள் அதிகம் என்பதால்  அங்கு இங்குள்ளதைவிட மேம்பட்ட வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும் என்று கருதி ரோஸ் இந்த முடிவெடுக்கிறார்.   மூத்த பெண் என்பதால்   குடும்பத்தை வழிநடத்தும் பொறுப்பை – முப்பது வயதான, யாரையும் திருமணம் செய்யாத, தங்கையின் படிப்புச் செலவை ஏற்கும், வேலையில் நேர்த்தியாக இருக்கும்,  இவை அனைத்தையும்   தனக்குள்ள சிக்கல்களை வெளிக்காட்டாமல்  திறம்பட செய்யும் – அழகி ரோஸின் பார்வையில் அவர் எடுக்கும் முடிவு மிகச் சரி என்றாலும் எல்லிஸிற்கு  நன்மை செய்வதாக எண்ணி அவர் இதைச் செய்யும்போது, சொந்த ஊர், குடும்பம், நண்பர்கள் அனைவரையும் பிரிந்து   அங்குச் செல்வது குறித்து   எல்லிஸிற்கு மாற்றுக் கருத்து இருக்கக் கூடும் என்பதை அவர் கருத்தில் கொள்வதில்லை.

எல்லிஸிற்கு முற்றிலும் நேர்மாறான  ரோஸின்  பாத்திரம், எல்லிஸை புரிந்து கொள்ள உதவக் கூடும். ஒருவேளை சிறு வயதிலியே எல்லிஸும்  ரோஸ் போல் மன ரீதியாக முதிர்ந்திருந்தால் பல அசந்தர்ப்பமான நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டிருக்கக் கூடும். தங்கை மீது பாசம் வைத்திருக்கும் ரோஸ் ஏன் அவரிடம் அமெரிக்கா செல்வது குறித்த அபிப்பிராயம் கேட்கவில்லை? எல்லிஸிற்கு கூட இது குறித்து நேர்மையாகவோ/ எதிர்மறையாகவோ அதிகம் சொல்ல எதுவும் இல்லை என்றோ அல்லது அதைச் சொல்ல அவர் விரும்பவில்லை என்றோ தோன்றுகிறது. இங்கும் அவர் அகத்தில் உறைந்திருக்கும் தயக்கத்தையே உணர முடிகிறது. இவற்றிக்கான  காரணங்களை அவர் அமெரிக்கா சென்றபின் நடக்கும் நிகழ்வுகளில் தேடிப்  பார்க்கலாம்.

நாவல் குறித்த இரண்டாவது முக்கிய எதிர்மறை விமர்சனமான  – சம்பவங்கள் தொடர்பற்று இருக்கின்றன என்பதை  கலம் டுபீனின் இன்னொரு நாவலான  ‘The Blackwater Lightship‘ நாவலுடனேயே ஒப்பிடலாம்.  அதிலும்  சம்பவங்கள் நேரடி தொடர்புள்ளவையாக டுபீனால் சொல்லப்படாவிட்டாலும்  அவை தன்னியல்பாக ஒன்றுடன் ஒன்று பொருந்தி விடுகின்றன. இந்த அம்சம் ‘Brooklyn’ நாவலில் இல்லை என்பதால், இவற்றைத் தொகுப்பதில் வாசகனின் பங்கு அதிகம் உள்ளது. இது பலரை நாவலிலிருந்து அந்நியப்படுத்தும் என்றாலும், வாசகனின் அதிக உழைப்பைக் கோரும் இத்தகைய வாசிப்பும் இலக்கியத்தின் ஒரு பகுதிதான் அல்லவா?  இங்கு நாவலின் இன்னொரு சம்பவத்தைப் பார்க்கலாம்.

அமெரிக்காவில் டோனி (Tony) எனும் இத்தாலிய இளைஞனை எல்லிஸ் சந்திக்கிறாள்.  டோனி அவள்பால் ஈர்க்கப்படுகிறான், அவளும் தடை சொல்வதில்லை (இவர்களுக்கிடையே உள்ள உறவு குறித்து விரிவாக பின்னர் பார்ப்போம்). ஒரு முறை  தாய்/ தந்தை, மூன்று சகோதரர்களுடன் வசிக்கும் (கூட்டுக் குடும்ப)  வீட்டிற்கு அவளை அழைத்துச் செல்கிறான். அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது/ சீண்டிக் கொள்வது இவற்றை சற்றே அன்னியத்தன்மையோடு எல்லிஸ் கவனிக்கிறாள். இந்தச் சம்பவம்  குறித்து ஒரு பேட்டியில் டூபின் “They’re all just so good with each other. And one watches this in life with fascination and envy. I would love to have been brought up like that. But Ireland’s not like that.” என்று குறிப்பிடுகிறார். இதில் எல்லிஸின் செயல்/ செயலின்மைக்கான ஒரு விளக்கம் உட்போதிந்துள்ளது.  பாசமும் நேசமும் குடும்பத்தில் இருந்தாலும், அதைத் தளர்வான (informal) முறையில் வெளிப்படுத்தும்  சூழலில் எல்லிஸ் வளராததால்,அவளால் தன் உணர்வுகளைத் தெளிவாக சொல்ல முடிவதில்லை என்று   புரிந்து கொள்ளலாம். இந்த நிகழ்வும் கதையின் மையத்திற்கு நேரடியான தொடர்பு கொண்டதல்ல என்பதால், இதை வாசகன் எளிதில் கடந்து சென்றுவிடக் கூடும். ஆனால் சற்றே கூர்ந்து கவனித்தால்

இப்படி தொடர்பற்றவையாகத் தோன்றும் பல நிகழ்வுகள் எல்லிஸின் மனச் சங்கிலியின் கண்ணிகள் தான் என்று வாசகன் அவதானிக்கலாம். அது எல்லிஸ் குறித்த அவன் பார்வையை விரிவடையச் செய்யக் கூடும்.

எல்லிஸின் மனவுலகை நுட்பமாக உருவாக்கும் அதே நேரத்தில் டூபின்  50களின்  Brooklyn நகரில், கனவுலகைப் போல் தோற்றமளிக்கும் அமைதியான – “… quietness of these few leafy, streets that had shops only on the corners, streets where people lived”  -காட்சிகளோடு, நிஜ உலகில் தள்ளும் பரந்த வீதிகளையும், அவற்றை முற்றிலும் நிரப்பும் மனிதர்களையும்/  வாகனங்களையும் பார்க்கும்போது நாளுக்கு நாள் உருமாறிக்கொன்டிருக்கும், பல நாடுகளிருந்தும் எண்ணற்றோர்  புலம்பெயர்ந்து கொண்டிருக்கும்  ஒரு நகரின்  சித்திரத்தையும் உருவாக்குகிறார். ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தவருக்கு துணிகள் விற்பதற்கு எல்லிஸ் வேலை செய்யும் கடை முடிவு செய்வது நாவலில் வரும் ஒரு நிகழ்வு மட்டுமல்ல.

அம்முடிவு குறித்த எல்லிஸின் எதிர்வினைக்கும் , மற்ற பெண்  விற்பனையாளர்களின்   எதிர்வினைக்கும் உள்ள வித்தியாசம் குறிப்பிடத்தக்கது. அயர்லாந்தில் தன் சொந்த ஊரில் கறுப்பினத்தவரை கண்டிராத/ அறிந்திராத எல்லிஸிற்கு கடையில் அவர்களை அனுமதிப்பது என்ற  முடிவு எந்த பெரிய சலனத்தையும்  ஏற்படுத்துவதில்லை, ஆனால் கடையின் மற்ற பெண் விற்பனையாளர்கள் இதை எதிர்கொள்ளும் விதம் – ஆப்பிரிக்க அமெரிக்க இனப் பெண்கள் கடைக்குள் வந்தால் இடமே அமைதியாவது,  ஓரக்கண்ணால் வந்தவர்களைக் கவனிப்பது, தங்கள் வீட்டில் இது குறித்து தெரியவந்தால் அவர்கள் எப்படி அதை எதிர்கொள்வார்கள் என்று தங்களுக்குள்ளேயே   கேள்வி எழுப்புவது – ஆகியவை ஒரு காலகட்ட சமூகச் சூழலின் பிரதிபலிப்பும் கூட. இது குறித்து அதிகம் கவலைப்படாத எல்லிஸ், மற்றொரு பெண் முன் உடைமாற்றுவது குறித்து வெட்குவதை கலாசார வேறுபாடு என்று சொல்லலாமா? உடை தேர்வு செய்யும்போது, இத்தாலிய ஆண் தன் இணை கடற்கரையில் எப்படி தோற்றமளிக்கிறாள் என்பதற்கு மிகவும் முக்கியத்துவம் தருபவன் என எல்லிஸின் மேலதிகாரி கூற,

‘In Ireland no one looks, Ellis said. It would be bad manners.’

‘In Italy it would be bad manners not to look’.

என்று நடக்கும் உரையாடலில் கலாசார வேறுபாடு மட்டும் தெரிவதில்லை. எல்லிஸும் சரி அவள் மேலதிகாரியும் சரி அமெரிக்கா என்று குறிப்பிடாமல்  Ireland/ Italy என்று சொல்வது, தங்களை அவர்கள் இன்னும்  முழுதாக அமெரிக்காவினுள் ஐக்கியப்படுத்திக்கொள்ளவில்லை என்பதுடன் புலம்பெயர்ந்தவர்களின் ஆழ்மன எண்ணங்களின் வெளிப்பாடாகவும் உள்ளது. (இவர்கள் இருவரின் பிள்ளைகள்/ பேரப்பிள்ளைகள் தங்களை அமெரிக்கர்களாக மட்டுமே கருதக்கூடும் என்பதையும் நினைவில் கொள்வோம்)

எந்த ஆப்பிரிக்க- அமெரிக்க  பெண்ணும் தனியாக கடைக்கு வராமல் இரண்டு-மூன்று பேராக வருவது, நேர்த்தியாக உடையணிந்திருக்கும் அப்பெண்கள்,  விற்பனையாளர்களுடன் அதிகம் பேசாதது (கர்வத்தால் அல்ல, இனம் சார்ந்து இருக்கும் இடைவெளி என்று வாசகன் புரிந்து கொள்ள முடியும்)  என அவர்கள் நடந்து கொள்வதையும்  ஒரு விதத்தில் புலம் பெயர்ந்தவர்களின் கலாசார வேறுபாட்டால் புரிந்து கொள்ளலாம். எல்லிஸ் நாடு விட்டு நாடு வந்திருந்தால், இப்பெண்கள் தங்கள் நாட்டிற்குள்ளேயே வெளியாட்களாக இருந்து,  இப்போது தான் தங்கள் தேசத்தின் சில காட்சிகளை காண்கிறார்கள்.

இப்படி தொடர்பற்றவையாக தோன்றும்  நிகழ்வுகளும் எல்லிஸின் மனவுலகோடு அவரின் புற உலகையும் நாவலினுள் உருவாக்குகின்றன எனபதால் அவை நாவலின் கட்டமைப்பிற்கு தேவையானவைதான் என்று சொல்லலாம்.

டோனியின் துணையும், பகுதி நேரப் படிப்பும் எல்லிஸின் மனதை ஆற்ற ஆரம்பிக்கும் வேளையில் அவர் குடும்பத்தில் நிகழும் எதிர்பாராத துயர நிகழ்வால், தாயை கவனித்துக்கொள்ள  எல்லிஸ் மீண்டும் அயர்லாந்து திரும்ப வேண்டியுள்ளது. தன்னைப் பிரிய மனமே இல்லாமல் டோனி துயருற, மீண்டும் சொந்த ஊர் வரும் எல்லிஸ் வீட்டை கவனித்துக் கொள்கிறாள். ஜிம் (Jim) என்ற சற்றே மேட்டுக்குடி இளைஞனுடன்  அவளுக்கு அறிமுகம் ஏற்படுகிறது. ஜிம் அவள்பால் ஈர்க்கப்படுகிறான்,  அவளை மணம் முடிக்க வேண்டும் என்ற முடிவுக்கும் அவன் வந்து விட்டது போல்   தெரிகிறது. எல்லிஸ்   என்ன செய்கிறாள்? தன் தோழியின்  கணவனின் நண்பனான அவனுடன், குழு சுற்றுலா செல்கிறாள், அவனுடன் கனிவாக நடந்து கொள்கிறாள் ஆனால் டோனி பற்றி ஒன்றும் சொல்வதில்லை, அதே நேரம் ஜிம்மை அதிகம் ஊக்குவிப்பதும் இல்லை, அவன் தன் மீது செலுத்தும் கவனத்தை அப்படியே ஏற்றுக்கொள்கிறாள் அவ்வளவே. டோனி அனுப்பும் கடிதங்களை படிப்பதையும் அவள் நிறுத்தி விடுகிறாள். இங்கு எல்லிஸின் நடவடிக்கை/ நடவடிக்கையின்மையை   நம்பிக்கை துரோகமாக பார்க்கும் சாத்தியம் உள்ளதுதான்.

இங்கு இடைவெட்டாக நாவலின் முதல் பகுதியிலிருந்து  ஓர் சம்பவம். அமெரிக்கா வந்த முதல் சில நாட்களில், மிகவும் மனச் சோர்வுற்றிருக்கும் எல்லிஸ், காலையில் வேலைக்குச் செல்லும் வழியில் உணவருந்த ஓர் விடுதிக்கு செல்கிறாள். அவள் முகத்தைப் பார்த்து அவளின் சோகத்தை யூகிக்கும் விடுதி பணியாள் அவளுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லையே என்று கேட்கிறான். இல்லை என்று அவள் சொன்ன பிறகும், மீண்டும் அதையே கேட்கும் அவன் உரத்தக் குரலில் “Cheer up…..Give us a smile,” என்று சொல்ல அந்தக் கரிசனத்தைக் தாங்க முடியாமல் அழுது விடுவோம் என்று அஞ்சி அங்கிருந்து ஓடி விடுகிறாள். பணியாளனின் செய்கை வெளிப்படையாகப் பேசும் அமெரிக்க குணம் அது, அவன் கரிசனம் தவறில்லை என்றாலும் அதைத் தாங்கும் வலு அவளுக்கு இல்லை. கரிசனத்தை அல்ல அவள் எதிர்பார்ப்பது,  தன்னுடன் கை கோர்த்து நடக்கும் ஒரு சக ஜீவியை. டோனி அத்தகையவனாக உள்ளான்.  அவனின் வேகத்திற்கு தன்னால் செல்ல முடியாது என்ற உணர்வும்   எல்லிஸிற்கு இருந்தாலும், சக பயணியை அவள் இழக்க விரும்பவில்லை. டோனி எல்லிஸை காதலியாகப் பார்க்கிறான் என்றால் எல்லிஸ் அவனை தோழனாக மட்டுமே அதிகம் பார்க்கிறாள். தன் குடும்பத்தில் நிகழ்ந்த பேரவலச் சம்பவத்தின் தாக்கத்தில் அவள்  வாழ்வில்  முதல் முறையாக  அவனுடன் உடலுறவு கொண்டாலும் அதைக் காதல் என்றோ காமம் என்றோ அறிதியிட்டு கூற முடியாது. அப்போது அவள் அவனை உபயோகிக்கிறாள் என்று சொல்லலாமா? அப்படி சொன்னால் டோனியும் தன் மனதின் விழைவுக்காகவே அவளுடன் பழகுகிறான் என்றும் சொல்லலாம், இதை இன்னும் விரிவாக்கி அனைத்து உறவுகளையுமே கொடுக்கல் வாங்கல் என்ற இரட்டை நிலைக்குள் அடக்கிவிடலாம். ஆனால் அப்படி எளிமையாக வகைபடுத்தக் கூடிய  ஒன்றா மனித உறவுகள்? இவர்கள் உறவின் dynamic தெளிவான இடத்தை அடையும் முன், எல்லிஸ் மீண்டும் தன் தாய் நாடு திரும்ப வேண்டியுள்ளது. குடும்பத் துயரம் வேறு அவளை வாட்ட, அவள் திக்கு தெரியாதவள் போல் நடந்து கொள்வதில்  – அது மூன்று பேரின் வாழ்வை குலைத்துப் போடக்கூடும் என்றாலும் –  ஆச்சரியம்  ஒன்றுமில்லை.

இறுதியில் எல்லிஸ் எடுக்க வேண்டிய முடிவிற்கும் கெல்லி (Kelly) என்ற பாத்திரமே   காரணமாக உள்ளார்.  இந்தப் பாத்திரத்தை நாவலோடு பொருந்தாத ஒன்றாக பார்க்க முடியும். மேட்டிமைத்தன்மை கொண்ட, அனைவரையும் எள்ளல்   செய்யும் இந்தப் பாத்திரம் நம்ப முடியாத ஒன்றோ / ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றோ அல்ல. ஆனால் டூபின் முதலிலிருந்தே நாவலின் போக்கில் உருவாக்கும் சலனமின்மையை இந்தப் பாத்திரம், அமைதியான இடத்தில்  ஒருவர் உரத்தக் குரலெழுப்பி அந்தச் சூழலைக்   குலைப்பது போல் கலைத்து விடுகிறது. அந்த விதத்தில் இப்பாத்திரம் நாவலின் உலகோடு பொருந்தாமல், அதன்  பலவீனமாக உள்ளது.   மேலும் எல்லிஸை முடிவெடுக்கத் தூண்டும் நிகழ்வும் நாவலை அதன் இறுதி நிகழ்விற்கு திருப்ப வலிந்து செய்யப்பட்ட உத்தியாக உள்ளது.

இப்போது எல்லிஸ் காதலா அல்லது கடமையா என்று முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளார். எல்லிஸின் முடிவு தெரிந்தவுடன் அவர் இதைத்தான் தேர்வு செய்திருக்கிறார் என்று  பெரும்பாலான வாசகர்கள்  புரிந்து கொள்வது எதுவாக இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. அந்தப்  புரிதல் நியாயமானதும்  கூட. இருப்பினும் எல்லிஸின் தேர்வு இது தான்  என்று வாசகன் எதை முடிவு செய்தாலும் அதற்கு  நேர்மாறாக வாதிட  சாத்தியம் நாவலின் பக்கங்களின் உள்ளது.  அதாவது ஒரு வாசகன் அவர் காதலை தேர்வு செய்தார் என்று சொன்னால், இல்லை அவர் தேர்வு செய்தது கடமையை என்றும், எல்லிஸின் தேர்வு ‘கடமை’ என்று சொன்னால், இல்லை அது ‘காதல்’ என்றும்  இன்னொரு வாசகன்  வாதிடலாம். எனவே வாசகன் எந்தப் புரிதலுக்கு வந்தாலும் அதைச்  சற்றே மறுபரிசீலனை செய்தால், எந்த முடிவிலும்  அவர் பெறப்போவதற்கு ஈடாக அல்லது அதற்கும் மேலாகவே இழப்பையும் துயரையும்  அடையக்  கூடும் ‘Catch-22’ சூழலில் அவர் இருக்கிறார் என்பதையும்  உணர முடியும்.  இந்த இரண்டு தேர்வையும் தவிர, சுய பாதுகாப்புக்காக மட்டுமே அவர் அந்த முடிவு எடுத்தார் என்றும் வேறொரு வாசகன் சொல்லலாம். அப்படி எண்ணும் வாசகன்

Eilis imagined the years ahead, when these words would come to mean less and less to the man who heard them and would come to mean more and more to herself. She almost smiled at the thought of it, then closed her eyes and tried to imagine nothing more.

என்ற இறுதி பகுதியை மீண்டும் வாசிக்க வேண்டும். அசோகமித்திரன் கதை ஒன்றில் கதைசொல்லி இரவு நடையின்போது ஒரு ஆணும்- பெண்ணும் (தம்பதியர் என்று புரிந்து கொள்ளலாம்) சண்டையிடுவதைப் பார்ப்பான். அப்பெண்ணின் துயர் அவனை பாதித்தாலும், தலையிடாமல் வந்து விடுவான். இரவு முழுதும் அவனை அது வாட்டும். அடுத்த நாள் அனைத்தும் சரியாகி விட்டது என்பதாக கதை முடிந்தாலும்,  அதில் அ.மி சொல்லாமல் எழுப்பும் கேள்வி  அவ்வளவு சீக்கிரம் அந்நிகழ்வை அவன் மறந்து விட முடியுமா என்பதுதான். அக்கேள்வியை இங்கும் மேலே உள்ள பத்தியோடு பொருத்திப் பார்க்கலாம். பல வருடங்கள் சென்றேனும் அவள் அமைதியடையக்கூடுமா, அப்படி அடைந்தாலும் அதுவரை அவள் அனுபவித்த  வாதை?

நாவலில் எல்லிஸின் வயது குறிப்பிடப்படவில்லை என்றாலும், ‘பெதும்பை’  பருவத்தில் அவள் இருப்பதாக யூகிக்கலாம். பேதைக்கும் மங்கைக்கும் இடையே உள்ள, தன்னைக் குறித்தும் வாழ்வு குறித்தும் தெளிவின்மையும் சலனங்களும் தோன்றும் இந்தப் பருவத்தில், குடும்பத்தைப் பிரிதல், குடும்பத்தில் இழப்பு போன்ற தொடர்  பாரத்தை சுமக்கும் முதிர்ச்சியோ, அனுபவமோ இல்லாத அப்பருவப் பெண், அது சார்ந்து தன் வாழ்வு குறித்த  மிக முக்கிய முடிவுகளை  எடுக்க வேண்டிய நிலையிலும்  இருக்கிறாள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதன்   பிறகும்,   அவளை .ஏமாற்றுக்காரியாகவோ, கோழையாகவோ, குறைந்தபட்சம் செயலின்மை கொண்டவளாகவோ சுட்ட முடியும் என்றாலும், இறுதிப் பத்தியின் மீள்வாசிப்பு தன் துயரை வெளிக்காட்டாமல், எந்தச்  சூழலிலும்   முடிந்தளவு அனைவருடனும்  நேர்மையுடன் இருக்க முயன்று, அதில் தன்னை மீறி தோல்வியுற்று அதன் காரணமாக மனதில் பல ஆண்டுகள் ஒலிக்கப் போகும், மற்ற யாருக்கும் கேட்காத, வலியின் ஓலத்தை  தான் மட்டும் தனித்து கேட்டுக்கொண்டிருக்கப்  போகும்  ஒரு பெதும்பைப் பெண்ணின் உயிர்ப்புள்ள நெகிழ்வான சித்திரம் மனதில் தோன்றி மற்ற அனைத்தையும் விலக்குகிறது.

தண்டவாளம் ஒன்று தடம் புரண்டது

மு வெங்கடேஷ்

தற்போது பெய்து வரும் கனமழை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றை ஞாபகப்படுத்துகின்றது, எனக்கும்தான். இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்தது இப்போது ஞாபகத்துக்கு வருகிறது.

சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள எனது வீட்டின் ஒரு அறையில் மனைவியும் மகளும், மற்றொரு அறையில் மாமனாரும் மாமியாரும் தூங்கிக் கொண்டிருக்க, இன்னொரு அறையில் நான் இரண்டு நாளில் இன்னொரு குழந்தைக்கு அப்பாவாகப் போகும் மகிழ்ச்சியை பேஸ்புக் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டிருந்தேன்.

ஜன்னல் வழியாகக் காற்று சிலுசிலுவென வீசியது. சிறிது நேரத்தில் இடியும், மின்னலுமாய் மழை சோவென பெய்யத் தொடங்கியது. எழுந்து வீட்டிலுள்ள அனைத்து ஜன்னல்களையும் மூடிவிட்டுப் பார்க்கையில் மணி இரவு 11ஐத் தாண்டியிருந்தது. தூங்கலாம் என்று எண்ணத்தில் மடிக்கணினியை எடுத்து வைத்துவிட்டு, சிறுநீர் கழிக்கச் சென்றேன்.

மொபைல் ஒலிக்கும் சத்தம் கேட்கவே, ஓடி வந்து பார்த்தால், “மது” என்று ஆங்கிலத்தில் என் மாப்பிள்ளையின் பெயர். மது – என் அக்காவின் கொழுந்தன். என் உயிர் நண்பன். சொந்தத்தையும் தாண்டி நாங்கள் நண்பர்களாகவே பழகினோம், பழகிக் கொண்டிருக்கிறோம்.

“இவன் எதுக்குடா இந்த நேரங்கெட்ட நேரத்துல போன் பண்றான்? ஒருவேளை போதையில் இருப்பானோ?”

அழைப்பை எடுத்தேன். சற்று மௌனம்….

“மாப்ள மாமா நம்மள விட்டுப் போய்ட்டாங்கடா”.

ஒன்றும் புரியாத நான், “லேய் என்ன சொல்ற???” என்று கேட்டேன்.

“மாப்ள மாமா நம்மள விட்டுட்டுப் போய்டாங்கடா” என்று மறுபடியும் கத்தினான். அப்போதும் எனக்கு ஒன்றும் புரியவில்லை.

மாமா – என் மாமாவா (அவன் அப்பா) இல்லை அவன் மாமாவா (என் அப்பா) என்று ஒன்றும் புரியாமல் நின்று கொண்டிருந்தேன். மீண்டும் மௌனம். உடனே அவனிடம் “மொபைலை அக்காவிடம் கொடு,” என்றேன். கொடுத்தான்.

“தம்பி அப்பா நம்மள விட்டுப் போயிட்டுப்பா” என்று அழ ஆரம்பித்தாள்.

அப்பாவை – அப்பா வந்துட்டு, அப்பா போய்ட்டு, அப்பா சாப்டுட்டு என்று அக்றிணையில்தான் எப்போதுமே கூப்பிடுவோம். அப்பாவை மட்டும் அல்ல, மாமா வந்துட்டு, மாமா சாப்டுட்டு என்று அனைவரையும் அவ்வாறேதான் கூப்பிடுவோம். இன்று வரை ஏன் என்று தெரியவில்லை.

அதைக் கேட்டவுடன் என் இதயத் துடிப்பு ஒரு நிமிடத்திற்கு அப்படியே நின்றது. பின் என்னையும் அறியாமல் “ஓ”வென்று கத்தினேன். அந்த இரவு நேரத்தில் ஊரே தூங்கிக் கொண்டிருக்கையில் என் ஓலம் என் மனைவியையும், மாமனார், மாமியாரையும் தூங்கவா விடும்? எழுந்து ஓடி வந்தார்கள், ஒன்றும் புரியாதவர்களாய்.

கத்தி அழுது கொண்டிருந்தேன். நான் அப்படி அழுது அவர்கள் இதுவரைப் பார்த்திருக்க மாட்டார்கள். யாருமே பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கோ ஒன்றும் புரியவில்லை. என் மனைவி என்னிடம் “என்னாச்சு, என்னாச்சு?” என்றாள். பதில் கூறக்கூட முடியாதவனாய் “அப்பா…அப்பா…” என்று மட்டும் சொல்லி அழுது கொண்டிருந்தேன். அவர்களுக்குப் புரிந்து விட்டது. மனைவியும் அழத் தொடங்கினாள்.

என் வாழ்நாளில் அப்படி ஒரு அழுகை அதுவரை நான் அழுததில்லை. ”ஓ” என்றும் “அப்பா” என்றும் கத்திக் கத்தி அழுததால் வாந்தியே வந்து விட்டது. அழுது கொண்டும், கத்திக் கொண்டும், வாந்தி எடுத்துக் கொண்டும் இருந்தேன். இதற்கிடையில் மொபைலில் வேறு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. மூத்த சகோதரி, இளைய சகோதரி, சகோதரர்கள், மாப்பிள்ளை, அத்தான், மாமா, நண்பர்கள் இப்படி ஒவ்வொருவராக அழைத்துக் கொண்டே இருந்தார்கள். எப்போதெல்லாம் அழைப்பை எடுக்கிறேனோ அப்போதெல்லாம் அனைவரும் “அப்பா…அப்பா….” என்பதைத் தவிர வேறு எதையும் கூறவில்லை. அந்த இடத்தில் “அப்பா…அப்பா…” என்று கூறுவதிலேயே எனக்கு புரிந்திருக்கும் என்று அவர்கள் நினைத்தார்கள்.

மணி 12 கடந்திருந்தது.

அடுத்து எப்படி இப்போது சென்னையில் இருந்து நெல்லை செல்வது என்ற ஏக்கம் என்னைத் தொற்றிக்கொண்டது. காரிலா, பஸ்சிலா, விமானத்திலா என்று மண்டையை உடைத்துக் கொண்டிருந்தேன். மனைவியை இன்டர்நெட்டில் பார்க்கச் சொன்னேன். விமானம் ஏதும் அப்போது இல்லை என்றாள். சரி தனியார் பேருந்தாவது இருக்கா என்றால் அதுவும் இல்லை. ஒரே வழி காரில் செல்வதுதான் என்று முடிவெடுத்தேன். அதில் என்ன ஒரு சிக்கல் என்றால் நான் மட்டும்தான் ஓட்டிச் செல்ல வேண்டும், சென்னையில் இருந்து நெல்லை வரை. இதுவரை அவ்வளவு தொலைவு ஒட்டியதில்லை. அப்பாவை உடனே பார்க்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்ததால் நான் அதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

என் முடிவை மதுவிடம் சொல்லிவிட்டு காரை எடுக்கச் சென்றேன். மீண்டும் என்னை அழைத்த அவன், “மாப்ள இந்த நிலமையில காரைத் தனியாக ஒட்டிக் கொண்டு வர வேண்டாம்”, என்றான். மனைவியும் சேர்ந்து கொண்டாள். வேறு என்ன செய்வது? யோசிக்கக்கூட நேரமில்லை, பொறுமையும் இல்லை. கால் டிரைவர் யாரையாவது அழைத்துப் பார்க்கலாம் என்று கூறினாள் மனைவி.

நான் எதையும் கண்டு கொள்வதாக இல்லை. என்னமோ பண்ணுங்க ஆனா நான் இப்போ உடனே என் அப்பாவைப் பார்க்கப் போக வேண்டும், என்றேன்.

மணி 12ஐ கடந்திருந்ததால் ஒரு கால் டிரைவரும் வரவில்லை. யாரைக் கேட்டாலும் காலை 5 மணிக்கு மேல் வருகிறேன் என்றார்கள். எனக்கோ 5 மணி வரை காத்திருக்கும் எண்ணம் சுத்தமாக இல்லை. மனைவி வேண்டாம் என்கிறாள், மாப்பிள்ளை வேண்டாம் என்கிறான், மாமனார் வேண்டாம் என்கிறார், அக்கா வேண்டாம் என்கிறாள். இது எதையுமே காதில் கேட்கத் தயாராக இல்லாத நான், காரை நானே ஓட்டி செல்கிறேன், என்று சொல்லிவிட்டு வேகமாக கீழே வந்து காரை எடுத்தேன். நிறைமாத கர்ப்பிணி என்பதால் மனைவியும் என்னுடன் வர இயலாது. எனக்கோ அந்த நேரத்தில் யார் வருகிறார்கள் யார் வரவில்லை என்றெல்லாம் யோசிக்கக்கூடத் தோணவில்லை.

காரை ஸ்டார்ட் செய்தேன். என் மாமனாருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, “நானும் உடன் வருகிறேன்” என்றார். தனியாக என்னை அந்த நிலமையில் அனுப்ப மனமில்லை போலும். சரி ஏறுங்க, என்றேன். ஏறிக் கொண்டார். “பார்த்து மெதுவா போங்க” என்றாள் மனைவி. கார் வீட்டின் வெளியே வர, மீண்டும் மதுவிடம் இருந்து அழைப்பு. “ஏல சொல்லச் சொல்ல கேட்காம எதுக்கு கார்ல தனியா வார?”என்று ஏசினான்.

“மாமனாரும் வராங்க” என்றேன். அவன் அதற்கு சம்மதித்தபாடில்லை. கடைசியாக, எனக்குத் தெரிந்த நண்பன் ஒருவன், டிரைவர், சென்னையில் இருக்கிறான், அவனிடம் கேட்டுச் சொல்கிறேன், அதுவரை வீட்டிலேயே இரு, என்றான் மது. மறுக்கவும் முடியாமல் போகவும் முடியாமல் என்ன செய்வதென்றே தெரியாமல் நின்று கொண்டிருந்தேன். 5 நிமிடம் கழித்து மீண்டும் மதுவிடம் இருந்து அழைப்பு. “மாப்ள அவன் இப்போ சென்னையில் இல்லையாம் நீ தயவு செய்து காரில் வராதே ப்ளீஸ் பஸ்ல வா”என்றான். இதைக் கேட்ட உடன் அவன் மேல் எனக்கு கோபம் வந்ததே தவிர, என் மேல் உள்ள அக்கறையில்தான் கூறுகிறான் என்று தோனவே இல்லை. ஒருபக்கம் அவன் வேண்டாம் என்கிறான் மறுபக்கம் மனைவி வேண்டாம் என்கிறாள். எதையும் பொருட்படுத்தாத நான் காரை எடுத்துப் புறப்பட்டேன்.

மழை வேறு அடித்து ஊத்திக் கொண்டிருந்ததால் கார் மடிப்பாக்கம் ரோட்டில் மிதந்து சென்றது. இடை இடையே மனைவி, மது, அக்கா இப்படி பலரும் காரில் வர வேண்டாம் என்று கூறிக் கொண்டிருந்தார்கள். போகிற வழியில் தாம்பரத்தில் சித்தப்பா மகன் சரவணனையும் காரில் ஏற்றிக் கொண்டேன். கார் பெருங்களத்தூரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. மழை அதிகமாக இருப்பதாலும், இந்த நிலைமையில் காரில் வர வேண்டாம் என்று எல்லோரும் கூறுவதாலும், சரி பஸ்சிலேயேப் போய் விடலாம், என்று முடிவு செய்தேன். சரவணனின் நண்பனையும் காரில் ஏற்றிக் கொண்டு பெருங்களத்தூர் சென்றோம். அங்கு என் அக்கா மகன் ரத்னகுமார் எங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தான்.

பெருங்களத்தூர் பேருந்து நிலையம் ஏதோ ஹார்பர் போல் காட்சி அளித்தது. எங்கு பார்த்தாலும் வெள்ளம் சூழ்ந்து கொண்டிருந்தது. ஒருவழியாக மதுரை செல்லும் அரசு பேருந்து ஒன்று வர, காரை சரவணனுடைய நண்பனிடம் கொடுத்தனுப்பிவிட்டுப் பஸ்ஸில் ஏறினோம். பஸ் மெல்ல மெல்ல மிதந்து சென்றது. எனக்கோ பொறுமையே இல்லை. காரில் சென்றிருந்தால் இந்நேரம் மேல்மருவத்தூரைத் தாண்டி இருக்கலாமே என்ற எண்ணம். தூக்கம் சிறிதளவும் வரவில்லை. அழுது அழுது கண்ணீரும் வற்றி விட்டது. பேசாமல் இருக்கையில் அமர்ந்திருந்தேன்.

அப்பாவின் எண்ணங்கள் ஒவ்வொன்றாக வரத்தொடங்கின. குழந்தையாக இருக்கும்போது கிளாசில் ஸ்பூனைப் போட்டு கிலுக்கு ஆட்டியதும், நீச்சல் கற்றுக் கொடுத்ததும், மடியில் படுக்க வைத்து காதில் அழுக்கு எடுத்து விட்டதும், நடக்க முடியாதபோது தோளில் தூக்கிச் சென்றதும், தேனி நாடார் பள்ளி விடுதியில் தங்கிப் படித்தபோது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் என்னை வந்து பார்த்ததும், அவருடன் சேர்ந்து குடித்த டொரினோ, சேர்ந்து சென்ற எவரெஸ்ட் ஹோட்டல், இப்படி எண்ணற்ற நினைவுகள் ஒவ்வொன்றாக வர என்னை அறியாமல் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது, விடிய விடிய.

பக்கத்து இருக்கையில் ஒரு சிறுவன் சொகுசுப் பேருந்தில் வந்த சந்தோஷத்தில் சீட்டை சாய்த்துச் சாய்த்து விளையாடிக் கொண்டிருந்தான். அரசு சொகுசுப் பேருந்து முன்பு திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம். மற்ற பேருந்துகளைவிட இதில் டிக்கெட் விலை அதிகம். சிறு வயதில் திருவள்ளுவர் பஸ்ஸில் செல்வதென்றால் அவ்வளவு சந்தோசம். அம்மா என்ன ஏசினாலும் அப்பா எனக்காக அதில் ஏறுவார். நான் ஆசைப்பட்டேன் என்ற ஒரே காரணத்துக்காக.

பொழுது விடியவும் மதுரை வரவும் சரியாக இருந்தது. மதுரை, மறக்க முடியாத மதுரை. மதுரைக்கும் எனக்கும் என் அப்பாவுக்கும் நிறைய தொடர்பு உண்டு. குடும்பத்தோடு எங்கு சென்றாலும் மதுரைதான் எங்களுடைய பொது இடம். அங்குதான் அனைவரும் சந்திப்போம். அப்பாவுடன் வந்து அடிக்கடி தங்கும் ஜுபிட்டர் லாட்ஜ், காளவாசல், நகைக் கடை பஜார், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், மீனாட்சி அம்மன் கோவில், ஜெயராம் பேக்கரி, முனியாண்டி விலாஸ், சினிப்பிரியா-மினிப்பிரியா- சுகப்பிரியா தியேட்டர்கள், ராஜ் மகால் சில்க்ஸ், பால் பாண்டி மாமா வீடு, அப்பா கைபிடித்துச் சென்ற மதுரை வீதிகள்.
முதன்முதலாக வேலை தேடிச் சென்னை வரும்போது அப்பாதான் மதுரையில் இருந்து சென்னைக்கு வழியனுப்பி வைத்து செலவுக்கு 5000 ருபாய் கொடுத்தார். பின் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தைவிட்டுப் பேருந்து வெளியே வரும்போது, ஜன்னல் வழியாக ஒரு கை வந்து 1000 ரூபாவை என் சட்டைப் பையில் திணித்தது. சென்னை போயிட்டு செலவுக்குப் பணம் வேணும்னா அப்பாக்குப் போன் பண்ணுடா, என்று சொல்லிவிட்டு சென்றார் அப்பா. இப்படி ஒவ்வொன்றாக மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

அப்பா மிகவும் கண்டிப்பானவர்.ஆனால் இதுவரை யாரையும் ஒருமுறை கூட அடித்ததில்லை. அவரைப் பார்த்தால் எங்களுக்கு ஒரு பயம், மரியாதை தானாக வந்து விடும். பாசமிக்கவர் ஆனால் வெளிக்காட்ட மாட்டார். என்னவென்றே தெரியவில்லை, சிறுவயதிலிருந்தே பிள்ளைகளுடன் அவ்வளவு நெருக்கமாகப் பழக மாட்டார். வேண்டியதை எல்லாம் வாங்கித் தருவார், பணம் தேவைக்கு அதிகமாகவே தருவார். ஆனால் அவ்வளவாகப் பேச மாட்டார். வளர்ந்தபின், அவருடன் அதிகமாக பேசியது, “நா ராஜேஸ் பேசுறேன், போன அம்மாட்ட குடுங்க” வாகத்தான் இருக்கும். பல நேரங்களில் “நல்லா இருக்கீங்களா?” என்று கேட்கத் தோன்றியும் கேட்காமல் விட்டு விடுவேன். ஒரு மகனுக்கும் அப்பாவுக்குமான உறவும், உரையாடலும் அவ்வளவுதானா என்று பல நேரம் யோசித்ததுண்டு. எங்களுக்குள் எப்போதுமே ஒரு இடைவெளி இருந்து கொண்டே இருந்தது.

வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் கற்றுக் கொடுத்தார். கல்வியைத் தவிர. ஏனென்றால் அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அன்யோன்யமாகப் பேசிப் பழகும் அப்பாவையும் மகனையும் பார்த்தால் பொறாமையாக இருக்கும், எனக்கு இந்த பாக்கியம் கிடைக்கவில்லையே என்று.

அடுத்து நெல்லை செல்ல வேண்டும். எனக்கோ பஸ் பிடித்து ஊர் செல்லும் பொறுமை இல்லை. உடனடியாக ஒரு டாக்ஸி எடுத்துக் கொண்டு நெல்லை புறப்பட்டோம்.

ஓட்டுனரிடம், அண்ணா கொஞ்சம் வேகமாப் போங்க, வேகமாப் போங்க, என்று கூறிக்கொண்டே வந்தேன். கோவில்பட்டி வந்தது. என் வாழ்நாளில் நான்கு வருடங்களைக் கழித்த இடம். நான் கல்லூரி பயின்ற இடம். நான் செய்த ஒவ்வொரு தவறுக்கும் ஒவ்வொரு முறையும் எனக்காக வந்து கைகட்டி மன்னிப்பு கேட்டுச் செல்வார் அப்பா. இரண்டாமாண்டு படிக்கும்போது அப்பாவை அழைத்த கல்லூரி முதல்வர், நான் செய்யாத தவறை நான் செய்தததாகக் கூறவே அப்பாவோ ‘என் பையனப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும், அவன் இதைப் பண்ணிருக்க மாட்டான் நீங்க என்ன செய்யணுமோ அத செஞ்சிக்கோங்க’ என்றார். கல்லூரி வாசலில் இருக்கும் புளியமரத்தடி. அப்பா என்னை வந்து பார்த்துவிட்டுச் செல்லும்போதெல்லாம் பஸ் ஏற்றிவிடும் இடம். அந்த புளியமரத்துக்கு நன்றாகத் தெரியும் எனக்கும் என் அப்பாவுக்குமான பாசம்.

இத்தனை நாள் எங்களை வழி நடத்திய அப்பா இனி இல்லை, ஒவ்வொரு முறை நாங்கள் சறுக்கியபோதும் தூணாக இருந்துத் தாங்கிய அப்பா இனி இல்லை, பொருளாதார நெருக்கடியில் எங்களைத் தூக்கிச் சுமந்த அப்பா இனி இல்லை, வாழ்க்கையில் அடிபட்டுக் கீழே விழும்போதெல்லாம் கை கொடுத்துத் தூக்கி விட அப்பா இனி இல்லை, எத்தனை இடையூறுகள் வந்தாலும் ‘நான் இருக்கேன்டா’ என்று தைரியம் ஊட்ட அப்பா இனி இல்லை. துடுப்பை இழந்த கட்டுமரம் கடலில் தனியே தவிப்பதுபோல் தவிக்கிறோம்.

வண்டி கயத்தாரை நெருங்கிக் கொண்டிருக்கும்போது என் மொபைல் ஒலிக்கும் சத்தம் கேட்டது. இம்முறை என் மாமியார். “சுதாவுக்கு வயிறு வலி வந்துட்டு, டாக்ஸிய வரச் சொல்லிருக்கேன், இப்போ ஆஸ்பத்திரிக்கு கிளம்புறோம்” என்றார். இதைக் கேட்ட எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. சில தினங்களுக்கு முன் மனைவி கூறியதுதான் நினைவுக்கு வந்தது. “ஏங்க மூத்த பொண்ணு பிறக்கும்போதுதான் நீங்க கூட இல்ல, இப்போ ரெண்டாவது குழந்தைக்காது நீங்க கூடவே இருங்க”.

சரியாக 3 மணி நேரத்தில் நெல்லை வந்தடைந்தோம்.வீடு நெருங்க நெருங்க என் இதயத் துடிப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது.கை கால் எல்லாம் நடுங்கத் தொடங்கியது.

எங்கள் தெருவிற்குள் டாக்ஸி நுழையவும் ஊரே எங்கள் வீட்டில் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன். மனம் சோகத்தின் உச்சத்தில் இருந்தது. எங்கு பார்த்தாலும் அப்பா, தாத்தா என்ற அழுகுரல்கள். பல வருடங்களுக்கு முன் பார்த்த சொந்த பந்தங்கள். அழுகையை அடக்கிக் கொண்டு வீட்டினுள் நுழைந்தேன்.

எப்போதும் போல் அப்பா வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி சகிதமாகத் தூங்கிக் கொண்டிருந்தார். என் முதல் சம்பளத்தில் நான் வாங்கிக் கொடுத்த அதே விலை உயர்ந்த வெள்ளைச் சட்டை. “இவ்வளவு பணம் கொடுத்து எனக்கெதுக்குடா வாங்குன” என்று சொல்லி போடாமல் பத்திரமாக வைத்திருந்த அதே வெள்ளைச் சட்டை. அவர் எப்போதும் சட்டையுடன் தூங்கும் பழக்கம் உடையவர். ஆனால் இம்முறை ஒரு சின்ன மாற்றம். அவர் தூங்கிக் கொண்டிருந்தது குளிரூட்டப்பட்ட அறையில் அல்ல, மாறாக குளிரூட்டப்பட்ட கண்ணாடிப் பெட்டிக்குள்.

அதற்குப் பின் அங்கு சொல்ல முடியாத சோகம் சூழ்ந்திருந்தது.

அவ்வப்போது மாமியாரிடம் மனைவிக்கு எப்படி இருக்கிறதென்று கேட்டுக் கொண்டிருந்தேன்.

செய்ய வேண்டிய அனைத்து காரியங்களையும் செய்து விட்டு அன்று இரவு அப்பாவின் அறையில் தனியாக அமர்ந்து அழுது கொண்டிருந்தேன். சரியாக இரவு 8.25 க்கு மாமியாரிடம் இருந்து அழைப்பு ‘மகன் பிறந்திருக்கான்’ என்று. பதில் ஒன்றும் கூறாமல் கேட்டுக் கொண்டிருந்தேன், கண்ணீர் தலையணையை நனைத்துக் கொண்டிருந்தது.

இதைக் கண்ட என் அம்மா தன் சோகத்தையும் மறைத்துக் கொண்டு நான் அழக் கூடாது என்பதற்காக என்னிடம் வந்து ஆறுதல் சொல்லத் தொடங்கினாள்.

மகன் பிறந்திருக்கிறான் என்றேன். என்னைக் கட்டியணைத்து ஓவென்று கதறி அழுதாள். பின் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். சந்தோசமும் பட முடியாமல், சோகத்தையும் அடக்க முடியாமல் ஒருவித குழப்ப நிலை வீடு முழுவதும் நிறைந்திருந்தது.

சற்று நேரம் கழித்து, வா வெளியே வா, இந்த ரூம விட்டு முதல்ல வெளியே வா, என்று கூறி முற்றத்திற்கு அழைத்துச் சென்றாள் அம்மா.

“நீ முதல்ல சென்னைக்குக் கிளம்பிப் போ. போய்ப் பையனப் பாரு.அங்க அவங்க தனியா இருப்பாங்க.”

“இந்த நிலைமையில நா எப்படிப் போறது?”

“சொல்றதக் கேளு, அழாதப்பா. நம்ம அப்பா நம்மள விட்டு எங்கயும் போகல. நம்மளோட தான் இருக்கார்.அப்பா செய்த புண்ணியத்திற்கு அவருக்கு நல்ல சாவு கிடைச்சிருக்கு.அலுந்தாம சந்தோசமாக் கடைசி வரைக்கும் யார்டயும் கை ஏந்தாம ராசா மாதிரிதானே போயிருக்கார்.அத நினைச்சு நாம சந்தோசப்படனும் அழக்கூடாது,” என்று கூறி அழுதாள்.

ஒன்றும் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்.

“பாரு நம்ம அப்பாவ இந்த ஊரே எப்படி வழி அனுப்புது பாரு.”

நான் தலை நிமிர்ந்து மேலே பார்த்தேன். ஊரே பிரகாசமாய் இருந்தது. வான வேடிக்கைகளாலும், விளக்குகளாலும் பிரகாசப்படுத்தி இருந்தனர்.

அன்று கார்த்திகைத் திருநாள். ஊரே விளக்குகளாலும், வானவேடிகைகளாலும் மின்னிக் கொண்டிருந்தது எங்கள் வீட்டைத் தவிர…..

இருள் சூழ்ந்திருந்த வீட்டில் மாலையுடன் சிரித்துக்கொண்டிருந்த அப்பா கேட்டார், “இங்க என்னடா பண்ணிட்டு இருக்க அங்க போய் உம்புள்ளையப் பாக்காம?” என்று.

மறையும் கதிரவன்

காஸ்மிக் தூசி

image

தீர்க்க தரிசனத்தைப்போல
நீளும் தண்டவாளங்கள்
சந்திப்பதுபோல தோன்றும்
அடிவானத்தின் இடத்தை
தொட்டுவிட்டான்
மறையும் கதிரவன்.

சக்கரத்தைப் போன்ற
பெரிய கதிரவன்.

00

அருண் கொலாட்கர் எழுதிய The Setting Sun என்ற கவிதையின் தமிழாக்கம்

ஒளிப்பட உதவி- bbc.co.uk

இரவு

– கலைச்செல்வி

பால் ஆடைக் கட்டிப் போயிருந்தது. ஒரு செயலை செய்வதற்கான எண்ணம் எழாமல் அதனைச் செய்யவே முடியாது போலிருக்கிறது என்று தோன்றியது அவளுக்கு. பால் குடிக்கத் எண்ணமில்லை என்பதை இத்தனை பெரிய வார்த்தைகளுக்குள் மனம் அடைத்ததை வெளியிலிருந்து பார்ப்பது போல கவனித்தாள். iகையிலெடுத்த டம்ளரை டீப்பாயில் வைத்து விட்டு கட்டிலில் சாய்ந்துக் கொண்டாள்.

கணவன் இல்லையேயொழிய புகுந்த வீட்டில் ஆட்களுக்கு குறைவில்லை. மாமியார்.. மாமனார்.. திருமணமாகாத நாத்தி ஒருத்தி.. கணவனிடம் கோபித்துக் கொண்டு வீட்டோடு வந்திருக்கும் நாத்தி ஒருத்தி பூஜை.. புனஸ்காரம் என்ற ஆன்மீக தேடலோடு சம்பாதிக்கும் நாட்டமில்லாத கொழுந்தன் ஒருவன் இவர்களோடு தானும் மகளுமாக வாழ்ந்த வாழ்க்கையில் இத்தனை பொறுமையாக படுக்க வாய்த்ததில்லை அவளுக்கு. தலையை உயர்த்தி கடிகாரத்தைப் பார்த்தாள். மணி பத்தாகி பத்து நிமிடங்களாகி இருந்தது. கோயில் கோயிலாக சுற்றி விட்டு இந்நேரம்தான் கொழுந்தன் வீடு திரும்புவான். இரவு விளக்கின் ஒளியில் கடிகாரத்தின் தங்க கரங்கள் மின்னின. மகளுக்கு சீராக அளித்த கடிகாரம்தான் இது.

சீர்வரிசை சாமான்கள் வாங்க மொத்த குடும்பத்தோடு இவளும் சென்றிருந்தாள். கடை முழுக்க கடிகாரங்கள் பெரிதும்.. சிறிதுமாக.. ஆளுயரத்திலிருந்து கைக்கு அடக்கமானது வரை. எல்லாமே இதே நேரத்தையே காட்டிக் கொண்டிருந்தன. வாங்கிய கடிகாரத்திற்கான பில் தொகையை செலுத்திய பின் பேட்டரி போட்டு சரியான நேரத்திற்கு மாற்றிக் கொடுத்தார் கடைக்காரர். இத்தனை கடிகாரங்களை ஒரே தடவையில் பார்ப்பது முதலில் அவளுக்கு பிரமிப்பாக இருந்தது. பிறகுதான் நேரத்தைக் கவனித்தாள். பத்து பத்து என்றது எல்லாமே. ஏசி குளிரை வெளியே விடாத இறுக்கமான கதவை அழுத்தித் தள்ளி கடைக்குள் நுழைந்த போது சாயங்காலம் மணி நான்கிருக்கும். இதென்ன இந்த மணி காண்பிக்கிறது..? அதிகாலையோ.. அந்திமாலையோ.. நான்கு சுவரைத் தாண்டி எதற்கும் உள்ளே வர அனுமதி கிடையாது போல. அதனால்தான் அலங்காரமாக தொங்கிக் கிடந்த அத்தனை கடிகாரங்களும் நகர வழியின்றி உறைந்து போய் கிடக்கிறது. “கடியாரக் கடைக்குள்ளயே மலச்சுப் போயி நின்னுட்டா மத்தக் கடைங்களுக்கு எப்பப் போறது..? கல்யாண வேலக் தலைக்கு மேல கெடக்கு..“ வெறித்துப் பார்த்தவளை மாமியாரின் குரல்தான் கலைத்துப் போட்டது.

படுக்கையறை கதவை திறக்கும் ஓசைக் கேட்டதும் கண்களை இறுக்க மூடிக் கொண்டாள். இரவு விளக்குதான் என்றாலும் சிறிய அறை என்பதால் வெளிச்சம் நிறையவே இருந்தது. கணவன் இறந்து போன பிறகு அவளும் கைக்குழந்தையான மகளும் கணவனுடன் இருந்த அதே அறையைதான் உபயோகித்துக் கொண்டனர். நாத்தனாருக்கு திருமணமான பிறகு மாப்பிள்ளை வரும்போதெல்லாம் அறையை ஒழித்துக் கொடுக்க வேண்டி வரும். இடம் மாறினாலும் வேலை களைப்போ என்னவோ துாக்கம் பாதிப்பதில்லை அவளுக்கு. மகனின் நினைப்பை பேத்தியின் அருகாமையில் மறக்க முயன்றதில் துாங்குவது கூட பாட்டி தாத்தாவுடன் என்றாகிப் போனது மகளுக்கு. “நாங்க எத்தன நாளைக்கு காவந்து பண்றது..? இனிம எல்லாம் ஒன் மாமனாரு.. மாமியாருதான்.. அணுசரணையா போய்க்கோ.. கைல ஒரு பொட்டப்புள்ள இருக்கு.. பாத்து நடந்துக்கம்மா..“ கண்ணீரோடு கழித்து கட்டி விட்ட பிறந்த வீட்டுக்கு எப்போதோ ஒருமுறை மாமியார் அனுமதிப்பார். இவளுக்கு அங்கு அதிகமாக ஒட்டவில்லை.

இருவரில் யாருக்கோ கழிவறைக்குப் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கும் போல. அவள் படுத்திருக்கும் அறையை கடந்து குறுகலான சிறிய வராண்டா இருக்கும். அதை தாண்டி இருந்தது குளியலறையும் கழிப்பறையும். கதவை திறந்துக் கொண்டு வருவது மகள்தான். கால் கொலுசின் ஒலி அம்மாவுக்கு கேட்டு விடாதப்படி அடி மேல் அடி வைத்துச் செல்கிறாள். பெண்களுக்கு திருமணம் அத்தனை ரகசியங்களையும் கொண்டு வந்து சேர்த்து விடுகிறது. சென்ற மாதம் வரையிலும் கூட குழந்தையாகதான் இருந்தாள்.. பதினேழு வயது குழந்தையாக. பனிரெண்டாம் வகுப்பை முடித்திருந்த நேரம் இந்த வரன் வந்திருந்தது. மழையடித்து ஓய்ந்ததுப் போல ஒரு மாத காலத்தில் எல்லாமே மாறிப் போனது. “கல்யாண நேரம் வந்துட்டா கட்டி வச்சாலும் நிக்காது..“ என்றாள் மாமியார். “எம்மவன் இருந்து செய்ய வேண்டிய தேவை.. குடுப்பின இல்லாமப் போச்சு.. நான் நடஒடயா இருக்கும்போதே முடிச்சு வுட்டுட்டா நிம்மதியா போய் சேந்துடுவன்..“ என்றார் மாமனார். அவர்தான் பேத்திக்கு வீட்டு வேலைகள் கற்று தந்து விட்டு வருமாறு மருமகளை இங்கு அனுப்பியிருந்தார்.

மகள் திரும்பிச் சென்று கதவை தாழிடும் சத்தம் கேட்டது. கைகளை ஆட்டி ஆட்டி தாழிட்டதில் கண்ணாடி வளையல்கள் சன்னமாக சத்தமிட்டன. இவள் கூட தனது திருமணத்தின்போது கை நிறைய கண்ணாடி வளையல்கள் அணிந்திருந்தாள். ஒரு வருடத்திற்குள் டைஃபாயிடு காய்ச்சல் அவனை பிரித்து அழைத்து போகும்போது கண்ணாடி வளையல்கள் உடையாமல் மிச்சமிருந்தன. முற்றத்தில் காற்றாட படுத்து உறங்கும் பெருசுகளுக்கு வளையல்களின் ஓசை கேட்காது என்று திட்டவட்டமாக தெரிந்தும் கணவன் வளையல்களை அவிழ்த்து வைக்கச் சொல்வான். “அவுத்து அவுத்து போட்டா வளவி ஒடைஞ்சுடும்..“ என்பாள் சிறுமியாய். அவள் காலத்தில் பதினேழு வயதில் சிறுமியாகதான் இருக்க முடிந்தது. பிறகும் கூட அதிகமாக வளர்ந்து விடவில்லை.

குடும்பச்சுமையை கை மாற்றி விடாத மாமியாரிடம் ஏவலாக பணியாற்றுவதில் இதுவரை அவளுக்கு விமர்சனம் ஏதும் இல்லை. மகளை போல நோகாமல் நடப்பதும் தாழிடுவதும் அவளுக்கு வராது. அதனால்தான் கணவன் வளையல்களை அவிழ்த்து வைக்க சொல்கிறான்.

“கண்ணாடி வளவின்னா ஒடஞ்சுதான் போவும்..” என்பான். சொல்வானே தவிர வளையல்களை அவிழ்த்து வைக்கும் நேரம் வரை கூட அவனுக்கு பொறுமை இருப்பதில்லை. அவன் கைகள் அதீதமான சுதந்திரத்தோடு அவள் உடலில் எதையோ தேடுவதைப் போல அங்குமிங்கும் நகர்ந்து அலையும். பின்புறமிருந்துக் கட்டிக் கொள்வான். புறங்காதில் படு ஆவேசமாக முத்தமிடுவான். அவனின் ஆவேசம் பிடித்திருந்தாலும் சில சமயங்களில் உடல் தாக்கு பிடிக்க முடியாமல் சோர்ந்துப் போகும். இதை அவனிடம் வெளிப்படுத்துவது தவறு என்று வீட்டு பெண்கள் அவளுக்கு ஏற்கனவே தெரியப்படுத்தியிருந்தார்கள். அவளின் சிறு எதிர்ப்பு கூட அவனை கிளர்ந்தெழுப்பும். அழுத்தமாக இறுக்கிக் கொள்வான். கழுத்தடியில் குறுகுறுத்து நெளிவது போலிருக்கும் அவளுக்கு இரண்டொரு வளையல்கள் அப்படி உடைந்ததுதான்.. பகல் நேரங்களில் யாருமில்லா தருணங்களில் பாய்ந்து வந்து அவள் கைகளை பிடித்து முகத்தை திருப்பி முத்தமிடுவான். அப்போதும் இரண்டொரு வளையல்கள் உடைந்திருக்கின்றன.

“தகப்பனில்லாத புள்ள.. ஏதோ இந்த தாத்தன் எனக்கு தெரிஞ்சமுட்டும் வளத்திருக்கேன்.. கம்னாட்டி வளத்தப் புள்ளன்னு நாக்கு மேல பல்ல வச்சு பேசிப்பிட கூடாதேன்னுதான் இத சொன்னேன்..“ என்றார் மாமனார் அவள் மகளை பெண் பார்க்க வந்த அன்றே.

”ஆளும் பேருமா இம்புட்டு பேரு இருக்கீங்க.. தப்பாவா வளத்திருப்பீங்க..” என்றார் இவளின் சம்பந்தி. ஆண் சம்பந்தி மட்டும்தான். பெண் சம்மந்தி இறந்துப் போயிருந்தாள். பெண்ணில் ஒன்று.. ஆணில் ஒன்றுமாக இரு வாரிசுகள். பெண்ணுக்கு திருமணம் முடிந்து விட மகனுக்குதான் இவளின் மகளை பெண் கேட்டு வந்திருந்தனர். சம்பந்தி நல்லமாதிரிதான் என்று எண்ணிக் கொண்டாள். “பொம்பளங்க இல்லாத வீடு.. ஒங்க மருமகளை கொஞ்ச நாள் அனுப்பி வச்சீங்கன்னா எம்மருமகளுக்கு வீட்டு வேலயெல்லாம் கத்துக் குடுத்துடுவாங்க..“ என்று இவளின் மாமனாரிடம் அனுமதி வாங்கியதே சம்பந்திதான். இவள் வந்ததும் அவர் தன் மகள் வீட்டுக்கு கிளம்பி விட்டார்.

கட்டிலிலிருந்து எழுந்து அமர்ந்துக் கொண்டாள். சுத்தமாக துாக்கம் கண்களிலிருந்து நகர்ந்திருந்தது. கழுத்து குறுகுறுத்துக் கிடந்தது. கடிகாரத்தை நிமிர்ந்துப் பார்த்தாள். மணி பனிரெண்டைக் கடந்திருந்தது. மீ்ண்டும் படுக்கையறை கதவை திறக்கும் ஒலி. சட்டென்று படுத்து கண்களை இறுக்க மூடிக் கொண்டாள். இம்முறை மாப்பிள்ளை. திருமணமாகி ஒரு மாதம்தான் ஆகியிருக்கும். அதற்குள் “ஒங்கள அத்தைன்னு சொல்றதா.. அக்கான்னு சொல்றதான்னுதான் கொழப்பமாயிருக்கு..“ என்று கிண்டலடிக்கும் அளவுக்கு பழகி விட்டிருந்தார். கண்களை மூடியிருந்தாலும் மருமகன் சங்கோஜமாக நகர்வதை அவளால் உணர முடிந்தது.

இவளின் கணவன் கூட முற்றத்தை கடப்பதற்கு இப்படிதான் சங்கோஜப்படுவான். ஒரு முறை என்பது சற்று இயல்பாக இருக்கும். இரண்டாவது முறையாக முற்றத்தைக் கடந்து கொல்லைக் கதவைத் திறக்கும் போது அந்த ஒலியே அவனின் தயக்கத்தை வெளிப்படுத்தும். அவனாவது பரவாயில்லை. அவள் அறையிலிருந்து நகரவே சங்கடப்படுவாள். உள்ளாடைகளை கிணற்றடியின் பின்புறத்திற்கு கொண்டு சென்று துவைப்பாள். இல்லையெனில் நீர் போகும் பாதையிலிருக்கும் துளசிச் செடி அதனை உள்வாங்க வேண்டியிருக்கும். யாரும் பார்ப்பதற்குள் விறுவிறுவென்று துவைப்பாள். அப்போதெல்லாம் கணவன் மீது செல்ல கோபம் வரும். அதை அவனிடம் ஒருநாள் வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொள்வாள்.

ஆனால் இவளை போலின்றி மகள் ஒரு மாத காலத்திற்குள் கணவனிடம் நன்றாக பழகி விட்டாள். அடித்துப் பேசுவதும், தொட்டு விளையாடுவதுமாக இருவரும் இயல்பாக இருப்பதைப் பார்ப்பதில் இவளுக்கு திருப்தியாக இருந்தது. சாப்பாட்டை எடுத்து வைத்து விட்டு பின்பக்கம் ஏதோ வேலையிருப்பதுப் போல சென்று விடுவாள். அப்படிதான் பக்கத்து வீடுகளில் சிறு பழக்கம் ஏற்பட்டதும். ஒருமுறை பேச்சுவாக்கில் பக்கத்து வீட்டுப் பெண் உறைமோர் கேட்க போக, அவசரமாக உள்ளே நுழைந்தவள் இருவரும் முத்தமிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் சட்டென்று நகர்ந்து பின்பக்கம் வந்து விட்டாள். ஆடி மாதம் பிறக்கப் போகிறது. எப்படி பிரிந்திருப்பார்களோ.. என்று எண்ணிக் கொண்டாள்.
அவளுக்கும் தலை ஆடி வந்தது. மாப்பிள்ளைக்கும் மகளுக்கும் புது துணிமணிகள் எடுத்து வந்திருந்தனர் அவளின் பெற்றோர்கள். பிறந்த வீட்டுக்கு செல்லவே அவளுக்கு விருப்பம் இல்லை. அவள் கணவனுக்கும் மனைவியை அனுப்ப எண்ணமில்லை. முதல் நாளிரவு இரண்டு பேருமே பிரியப் போகும் ஒரு மாத காலத்தை எண்ணிக் கொண்டே அருகருகே படுத்து இரவை கழித்திருந்தனர். “மாசம் முழுக்கன்னா எங்கம்மா ஒண்டியாளா சோறாக்க செரமப்படும்.. பதினெட்டு முடிஞ்சதும் அவள அனுப்பி வுட்டுடுங்கத்தே..“ என்றான் கிளம்பும்போது மாமியாரிடம். ஆனால் அதற்கு தேவையேயின்றி பதினைந்தாவது நாளே இறந்து போனான். மகள் அப்போதுதான் உருவாகியிந்தாள். அவனின் இறப்புக்குப் பிறகு அவளை யாரும் தொட்டுப் பேசியதேயில்லை. காய்ச்சல்.. தலைவலி.. என்று படுத்தாலும் மாத்திரை தலைமாட்டில் தயாராக இருக்கும். யாருடைய தனிப்பட்ட விருப்பமும் சாப்பாட்டில் பிரதிபலிப்பதில்லை. ஆனாலும் வெளியூருக்கு போகும் தருணங்கள்தோறும் மாமியாருக்கு பிடிக்கும் என்று மாமனார் சர்க்கரைப்பாகு பூத்த பாதுஷா வாங்கி வரத் தவறியதேயில்லை.

எப்போது உறக்கம் வந்தது என்று தெரியவில்லை. “அசந்து துாங்கீட்டிருந்தியா.. அதான் ஒன்ன எழுப்பாம நானே காபி போட்டுக் கொண்டாந்தேன்..” என்றாள் மகள் கட்டிலருகே வந்து நின்று.

நேரம் தாழ்த்தி எழுந்ததில் சற்றே குற்றவுணர்வுத் தோன்ற வேகமாக கழிவறையை நோக்கி நடந்தாள் அவள்.

“அப்டியே பல் வௌக்கீட்டு வந்துடும்மா.. காபி ஆறிடும்..” முதுகுபுறமாக மகளின் குரல் கேட்டது.

“சரி..” முகத்தில் வழிந்த எரிச்சலை சில்லென்ற நீரால் கழுவித் தள்ள முயற்சித்தாள் அவள்.

திணை மயக்கம்

சரவணன் அபி

நாட்காட்டியில் தாள்கள் கிழியும் சத்தம்
நொடிகள் கழியும் சத்தம்

யன்னலின் வெளியே
நிறம் மாறி மாறித் தோன்றும்
இரவின் வெக்கையும்
பகலின் மழைஈரமும்

வாழ்வு என்பதும்
நகர்தல் என்பதும்
அர்த்தமற்ற ஒலிக்குறிப்புகள்

சருகாகவும் தளிராகவும்
மிக மென்மையாக
மிக மிக அமைதியாக
உதிர்த்துக் கொண்டிருக்கிறது
காலம்

திறந்தே கிடந்தும்
யாரும் நுழையா
இக்கதவுகள்

திங்களொரு முறை
தோன்றும் மகனோ மகளோ
வருவது கூட
அசையா கதவுகளின்
மன்றாடலின் பேரில்

அசையா நாற்காலி அஃறிணை
அசையா கட்டில் அஃறிணை
அவற்றினூடே
உயிர்ப்புடனொரு
நாட்காட்டியும் கடிகாரமும்