Author: பதாகை

குற்றப் புனைவுகளில் அவல நகைச்சுவை – ஸ்டூவர்ட் மெக்ப்ரைட் நாவல்கள்

அஜய்

ஸ்டூவர்ட் மெக்ப்ரைட்டின் ‘Flesh House’ நாவலில், மாமிசம் பதனிடும் ஆலையில் யாரோ மனித மாமிசத்தைக் கலந்து விட, ‘Aberdeen’ நகர மக்கள் தங்களை அறியாமல் நரமாமிசம் உண்பவர்களாக மாறி விடுகிறார்கள். இதைச் செய்தது யார் என்று விசாரிக்கும் காவல்துறையினருக்கு தாங்களும் நர மாமிசம் உண்டிருப்போமோ என்ற சந்தேகம் வருகிறது. அப்போது அவர்களில் ஒருவர் “Must’ve been OK though: I’m no’ feeling all Hannibal Lectery “. என்கிறார். மிக மோசமான ஒரு நிகழ்வை, அதன் பாதிப்புகளை நினைத்துப் பார்க்காமல், அதை கேளிக்கையாக மாற்றி வாசகனை அதிர்ச்சியடைய வைக்க ஸ்டூவர்ட் முயல்கிறாரா?

தினம் தினம், பல்வேறு வடிவங்களில் மரணத்தை/ காயங்களைச் சந்திக்கும் காவல்துறையினர் தங்களின் மனநிலை பேதலிக்காமல் இருக்க உபயோகிக்கும் பாதுகாப்பு அரண்தான் இத்தகைய அவல நகைச்சுவை. இப்படி வாழ்வில் நிகழும்/ சந்திக்கும் விரும்பத்தகாத நிகழ்வுகளை/ பேரிடர்களை நகைச்சுவையோடு எதிர்கொள்வது ‘gallows humor’ என்று அழைக்கப்படுகிறது. எனவே இதை குற்றப்புனைவுகளில் அதிகம் காண்பதை இயல்பான ஒன்றாகவே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. எனினும், இத்தகைய நகைச்சுவையை (இதை நகைச்சுவை என்று முதலில் ஏற்றுக்கொண்டால்) வாசகன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதைப் பொறுத்தே, இத்தகைய படைப்புக்கள், குறிப்பாக ஸ்டூவர்ட்டின் நாவல்கள் அவனுக்கு உவப்பானவையாக இருக்கும், அல்லது இருக்காது.

ரான்கினின் ‘Edinburgh’ போல, இந்த நாவல்களின் களமான ‘Aberdeen’க்கும் ஒரு தனித்துவ (தொடரின் அங்கமாக ஆகக்கூடிய அளவிற்கு) அடையாளம் கிடைக்காவிட்டாலும், எப்போதும் பெய்து கொண்டே இருக்கும் மழை, அதனால் எங்கும் உருவாகும் ஈரப்பதம், பாழடைந்த குடியிருப்புக்கள், மூதாட்டியால் (சிறுதொழிலாக) வழிநடத்தப்படும் போதை மருந்து வியாபாரம் ஒரு புறம் என்றால், பாலியல் தொழிலில் தள்ளப்படும் 13 வயது சிறுமிகள் இன்னொரு புறம், குற்றக் கும்பல்களுக்கு இடையே நடக்கும் சண்டைகள், லஞ்சத்தில் திளைக்கும் அரசியல்வாதிகள், இனவெறித் தாக்குதல்கள் என அந்நகரத்தின் சித்திரத்தை உருவாக்குவதில் ஸ்டூவர்ட் ஓரளவுக்கு வெற்றி பெறுகிறார்.

மிக கவனத்துடன் பின்னப்பட்ட கதை முடிச்சுகள், போலி துப்புக்கள் இவையெல்லாம் இந்தத் தொடரின் வலுவான அம்சங்கள் கிடையாது. 400-500 பக்கங்களுக்கு குறையாமல் நீளும் இந்த நாவல்களில் ஒரே ஒரு குற்றத்தைப் பற்றி மட்டும் சொல்லிக் கொண்டிருக்காமல், ஒரே நேரத்தில் 3-4 வழக்குகளை ஸ்டூவர்ட் பின்தொடர்வதை வாசகன் உன்னிப்பாக கவனிக்காவிட்டால், பாத்திரங்களின் பெயர்/ சம்பவக் குறிப்புக்கள் இவற்றில் குழப்பமடைவான்.

இணைகோடுகளாக நடக்கும் இந்த விசாரணைகளை, இறுதிப் பகுதியில் ஸ்டூவர்ட் சடுதியில் முடித்து விடுகிறார். மூளையில் சட்டென்று ஒரு விளக்கெரிய லோகன் (இந்தத் தொடரின் முக்கிய பாத்திரம்), குற்றத்தின் ஆரம்பத்தை புரிந்து கொள்ளும் “deus ex machina” பாணி இடங்கள் இந்தத் தொடரில் நிறைய உண்டு. மூளையில் இத்தகைய மின்னல்கள் மின்னுவது, இன்ஸ்பெக்டர் மோர்ஸிடம் நிகழ்வதுண்டு- அவரின் மேதமை குறித்த நிறைய குறிப்புகள் நாவலில் உள்ளதால் – வாசகனால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது. ஆனால் லோகன் ஒன்றும் மேதை அல்ல (இவரை பற்றி பின்னர் விரிவாக பார்ப்போம்) என்பதால், இந்த தொடர் நாவல்களின் முடிவுகள் சற்று அதிருப்தியை அளிக்கின்றன.

இப்படி இந்தத் தொடரில் பல இல்லைகள் இருந்தாலும், தலை தெறிக்கும் வேகத்தில் செல்லும் கதைசொல்லல், பட்டாசாக வெடிக்கும் உரையாடல்கள், தனித்துவம் கொண்ட பாத்திரங்கள், தொடர் முழுதும் விரவிக் கிடக்கும் இருண்மை நகைச்சுவை ஆகியவை இந்த ‘இல்லைகளை’ சமன் செய்கின்றன.

23 முறை கத்தியால் குத்தப்பட்டு பிழைத்ததால் Lazarus/Laz என்ற பட்டப்பெயரால் அழைக்கப்படும் ‘லோகன்’ இந்தத் தொடரின் நாயகன். உலக பாரத்தைச் சுமக்கும், உறவுகளில் நாட்டமில்லாத, தன் மேலதிகாரிகளை மதிக்காத காவல்துறை அதிகாரிகளிடமிருந்து இவர் வேறுபட்டவர். விடுமுறை நாட்களிலும் மேலதிகாரிகளால் வேலைக்கு வர வற்பறுத்தப்படுபவராக, அவர்களின் வேலையும் தன் மீது திணிக்கப்பட்டு அதைச் செய்து முடிக்க வேண்டியவராக இருந்தாலும் (ஒரு இடத்தை உளவு பார்க்கும் வேலையின்போது மேலதிகாரிகள் குறட்டை விட, இவர்தான் முழித்திருந்து கண்காணிக்க வேண்டியுள்ளது), அதற்காக இன்னொரு புறம் தன் காதலிகளின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டியவராக உள்ள லோகன், கொஞ்சம் பிசகினாலும் ‘wimp’ என்ற முத்திரை குத்தப்படக்கூடியவர். அதே நேரம், தன் கீழ் வேலை பார்ப்பவர்களிடம் வேலைகளைத் திணிக்கவும் (“perks of rank” என்ற அவர் உயரதிகாரிகள் சொல்லும் தாரக மந்திரத்தை உபயோகித்து ) செய்கிறார். இவருடைய ஒரே இருத்தலியல் சிக்கல், தூங்குவதற்கும், தன் காதலியுடன் செலவிடுவதற்கும் நேரம் கிடைக்க வேண்டும் என்பதுதான்.

எப்போதும் இனிப்பை உண்ணும், பருமனான, மிகக் கோபக்காரரான ‘Insch’, எப்போதும் கலைந்த முடியோடு இருக்கும், அனைவரின் முன்பும் அக்குளைச் சொரிந்து கொள்ளும், பாலியல் இச்சை மிகுந்த, தன் மேலதிகாரியின் மனைவியைக் கவரும் தற்பால் விழைவு கொண்ட ‘ஸ்டீல்’ என மற்றப் பாத்திரங்களும் சுவாரஸ்யமானவர்கள்தான் (40 வயதில் ‘பாலியல் வேட்கையின்’ உச்சத்தில் இருக்கும் தன்னை, தன் துணை திருமணம் என்ற கூட்டிற்குள் அடைக்க முயல்கிறார் என்று வழக்கை விட அதைக் குறித்து அதிகம் கவலை கொள்கிறார் ஸ்டீல்).

இதைப் படிக்கும் போது “Police Academy” போன்ற காவல்துறை வேலைக்கு லாயக்கு இல்லாத கோமாளிகளின் கூடாரம் என்று இந்தக் குழுவைப் பற்றி நினைக்கத் தோன்றும் (“Fuck up squad” என்று இவர்கள் தொடர் முழுதும் மற்றவர்களால் குறிப்பிடப்படுகிறார்கள்). ஆம், இவர்கள் வழக்கமான காவல்துறை அதிகாரிகள் அல்லதான், ஆனால் எப்படியோ தாங்கள் செய்ய வேண்டியதை செய்து முடித்து விடுகிறார்கள். பல கவன சிதறல்கள் இருந்தாலும், ஸ்டீல் ஒரு திறமையான குழுத் தலைவர், அவரே களத்தில் இறங்கவும் செய்வார். மற்றவர்கள் மீது (அதாவது பெரும்பாலும் லோகன் மீது) தன் வேலையைத் திணித்தாலும், அவர்களுக்கான அங்கீகாரத்தைத் தரவும் செய்வார். கொஞ்சம் மென்மை, அதைவிட கொஞ்சம் அதிக சோம்பல், வேலைப் பளு பற்றிய முணுமுணுப்பு என்று இருந்தாலும், ஒரு விஷயத்தைப் பற்றிக் கொண்டால், பல்லைக் கடித்துக் கொண்டு அதன் இறுதி வரை செல்லும் பிடிவாதம் என தன் கலவையான குணத்தால் நம்மை வசீகரிக்கிறார் லோகன். இந்த இரு பாத்திரங்களுக்காக மட்டுமேகூடஇந்தத் தொடரை வாசிக்கலாம்.

எது வாசகனை எளிதில் வசப்படுத்த/ தக்கவைக்க வசதியாக இருக்குமோ, அவன் எதை எதிர்பார்ப்பானோ அதையே எப்போதும் ஸ்டூவர்ட் செய்வதில்லை. இந்தத் தொடரின் போக்கை மாற்றி, அதன் சமநிலையைக் குலைத்து, அதனால் வாசகனை விலகச் செய்யக்கூடிய பல ரிஸ்க்கான முடிவுகளை எடுப்பதற்கு அவர் அஞ்சுவதில்லை. எனவே, இவர் இந்தத் தொடரின் முக்கிய பாத்திரம் அல்லது இவர் இந்த குறிப்பிட்ட நாவலில் முக்கிய பாத்திரம், எனவே இவர்களுக்கு இறுதியில் ஒன்றும் ஆகாது என்று வாசகன் நிம்மதியாக இருக்க முடியாது. யாரை எப்போது எந்த பேரிடர் தாக்கும் என்று சொல்ல முடியாது என்பதால் அவன் கற்பனை செய்திராத கொடூர நிகழ்வுகளை வாசகன்/ பாத்திரங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.

ஸ்டூவர்ட்டின் உரைநடையில்/ உரையாடல்களில் உள்ள அவல நகைச்சுவையில் மற்றொரு குற்றப்புனைவு எழுத்தாளர் ‘R. D. Wingfield’ன் பாதிப்பைக் காண முடிகிறது. ஆனால் இந்த நகைச்சுவை, அதற்கு காரணமான வன்முறை எதுவும் ‘gratuitous’ஆக இல்லை என்பதோடு குற்றத்தின் மூர்க்கத்தையோ/ பாதிக்கப்பட்டவர்களின் துயரையோ மலினப்படுதுவதில்லை. ‘Broken Skin’, என்ற நாவலில் லோகன் ஒரு சிறுவனிடம் தர்ம அடி வாங்குகிறார். (ரீபஸ் இப்படி ஒரு சிறுவனிடம் அடி வாங்குவதை கற்பனை செய்ய முடிகிறதா?). ஒரு ஆண் சிறுவனிடம் எதிர்பாராமல் தோற்பது முதலில் சிரிப்பை வரவழைத்தாலும், அவ்வளவு மூர்க்கம் அந்தச் சிறுவனிடம் எப்படி உருவானது என்ற கேள்வி சிரிப்பை மட்டுப்படுத்தும். சில மாதங்கள் முன்பு வரை, மற்றவர்களைப் போல இருந்த அந்த சிறுவன் ஏன் இப்படி வன்முறையாளனாக மாறினான்
என்று தெரிய வரும்போது, அந்தச் சிரிப்பு முற்றிலும் உறைந்து விடும்.

ரான்கின் போன்ற மற்ற ஸ்காட்லாந்து நாட்டு குற்றப்புனைவு முன்னோடிகள் வளர்த்தெடுத்த “Tartan Noir”ஐ அப்படியே பின் தொடராமல், அதன் சில கூறுகளை மட்டும் எடுத்து – ஆக்ரோஷம் X இருண்மை X அவற்றின் களிப்பு – என்ற விசித்திர நடனமாடும் தனித்துவ பாணியை உருவாக்கியுள்ள ஸ்டூவர்ட் அதன் காரணமாக, அவரது குற்றப் புனைவுகளின் போதாமைகளைத் தாண்டி குறிப்பிடத்தகுந்த எழுத்தாளராகிறார்.

இதுவரை 12 நாவல்கள் உள்ள இந்தத் தொடரின் சமீபத்திய நாவல்களில் கொஞ்சம் “contemplative”ஆக உள்ள ஸ்டூவர்ட்டை/ லோகனை பார்க்க முடிகிறது. இந்த மாற்றம் வரவேற்புக்குரியது. அதே நேரம், அவருடைய பிரத்யேகப் பாணி சற்று நீர்த்துப் போக ஆரம்பித்துள்ளது என்ற உணர்வு தோன்றுவதையும் மறுப்பதற்கில்லை. எனவே, இவரைப் புதிதாக படிக்க நினைப்பவர்கள் இந்தத் தொடரின் முதல் 6-7 நாவல்களை தேர்வு செய்யலாம். ஆனால் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல் அவர் உங்களுக்கான எழுத்தாளரா எனபதை கட்டுரையின் முதல் பத்திக்கான உங்கள் எதிர்வினைதான் முடிவு செய்ய வேண்டும்

அம்மாக்கள், அப்பாக்கள், அனாதைகள்- ஹென்றி ஜேம்ஸ் கதைகளில் குடும்ப அமைப்பு

கல்ம் டோபீன் (Colm Toibin)

 

வாஷிங்க்டன் ஸ்கொயர் என்ற நாவலில் ஹென்றி ஜேம்ஸ் மிகக் கொடுமையாய் மிரட்டும் ஒரு அப்பாவைப் படைத்தார். இந்த அப்பா தன் மகளின் திருமண தேர்வு முட்டாள்தனமானது என்று நினைக்கிறார், அதைத் தடுத்து நிறுத்தி அவளது விதியைக் கட்டுப்படுத்த முயற்சி செய்கிறார். மந்தமானவள் என்று தன் மகளைக் குறித்து நினைத்திருந்த டாக்டர் ஸ்டோபர் கவனிக்கத் தவறியதை நாவலின் வாசகர்கள் காணத் துவங்குகின்றனர்- காதரின் ஸ்டோபர் நுண்ணுணர்வுகள் கொண்டவள் மட்டுமல்ல, ஆழமானவள், உணர்ச்சிகரமானவள் என்றும்கூட சொல்லலாம். ஜேம்ஸ் வாழ்விலும் கலையிலும் மிக முக்கியமாகக் கருதிய ஒரு விஷயத்தை இவ்வாறாகவே அந்த நாவல் நாடகீயத்தன்மையுடன் முன்வைக்கிறது- தன் குடும்பத்தினுள் நிகழும் கட்டுப்பாடும் ஆதிக்கமும் அவரைக் கடுமையாய் பாதித்திருந்தன, பின்னர் ஒரு நாவலாசிரியராக நீண்ட காலம் இயங்கிய அவர் கற்பனை செய்யத் துவங்கிய குடும்பங்களுக்கும் அவை முக்கியமாக இருக்கின்றன.

ஹென்றி ஜேம்ஸின் சகோதரர் வில்லியம் இந்த நாவலாசிரியர் குறித்து இப்படி எழுதினார், “அவர் ஜேம்ஸ் குடும்பத்தின் குடிமகன், பிறிதொரு தேசம் இல்லாதவர்”. தம் குழந்தைப்பருவத்திலும் பதின்பருவத்திலும், ஜேம்ஸ் குழந்தைகள் இருப்பு கொள்ளாத பணக்கார தந்தையால் அட்லாண்டிக்குக்கு இருபுறமும் முன்னும் பின்னும் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் பிரான்சையும் இங்கிலாந்தையும் அறிந்து கொண்டனர், ஆனால் அமெரிக்காவில் வீடு திரும்பிய உணர்வு பெற முடிந்ததில்லை. அவர்களது தந்தைக்கு தொழில் எதுவும் இல்லாததால் அவர் ஐந்து குழந்தைகளையும் கவனித்துக் கொள்வதிலேயே தன் நேரத்தைச் செலவிட்டார். ஹென்றிக்கு இருபது வயதானபோது எப்படியாவது ஐரோப்பா போனால் போதும் என்ற எண்ணம் வந்துவிட்டது. அவரது துவக்ககால கடிதங்கள் பணமும் வழிகாட்டுதலும் பெற அவர் தன் பெற்றோரை நம்பியிருந்தார் என்பதை உணர்த்துகின்றன. தான் தொலைவில் இருப்பதற்கு தன் உடல்நலமின்மையைப் பயன்படுத்திக்கொண்டார் என்பதையும் அதைக் கொண்டு அவர் இரக்கமும் கவனமும் பெற்றார் என்பதையும் அறிய முடிகிறது. அவர் வாழ்நாளெல்லாம் தன் குடும்ப விவகாரங்களில் மிகுந்த அக்கறை காட்டினார், ஆனால் அவரது புனைவுகள் பலவற்றில் உள்ள உறவுகளைப் போலவே அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இருந்த உறவும் இருவகைப்பட்டதாய் இருந்தது. ஜேம்ஸ் தன் தனிமையையும், தனித்துவத்தையும், சுதந்திரத்தையும் மிகவும் கவனமாகப் பாதுகாத்துக் கொள்பவராய் இருந்தார்.

அவர் அநாதைகளைப் பற்றி அருமையாக எழுதினார்; தி போர்ட்ரெய்ட் ஆப் தி லேடி நாவலில் வரும் இசபெல் ஆர்ச்சர் பாத்திரம் மிக அருமையானது- அவளது அத்தை அவளை அல்பேனியில் கண்டெடுத்து ஐரோப்பா கொண்டு சென்று வளர்க்கிறாள்; தி விங்க்ஸ் ஆப் தி டவ் நாவலில் வரும் மில்லி தீலின் குடும்பத்தினர் அனைவரும் இறந்து விடுகின்றனர், அவளைச் செல்வம் நிறைந்தவளாய், ஆனால் நிராதரவாய் விட்டுச் செல்கின்றனர். இந்த இருவருமே வாழ்வில் செறிவான ஏதோ ஒன்றைத் தேடுகின்றனர்; இருவரும் புதிய அனுபவங்களை வரவேற்கின்றனர், இவர்களின் வாழ்வில் குறுக்கிட அம்மாவோ அப்பாவோ இல்லாததும் இதற்கொரு காரணமாகிறது. பெற்றோர் இல்லாததால் தம்மைத் தம் விருப்பத்திற்கேற்ப படைத்துக் கொள்கின்றனர். தனிமை மிகுந்த இவர்களின் வாழ்வு செழிக்கலாம், சிறகடித்துப் பறக்கலாம், அல்லது பிறரால் கட்டுப்படுத்தப்பட்டு தரைதட்டக்கூடும் – இவர்களது குடும்பத்தினரே இதைச் செய்பவர்களாய் இருக்கலாம்; இந்த இரு போக்குகளுக்கும் இடையிலான முரண்பாடு இவரது நாவல்களின் அலங்காரமற்ற, உச்சம் தொடும் நாடகீயத் தருணங்களை அளிக்கிறது.

வாஷிங்டன் ஸ்கொயருக்கு அடுத்து அவர் எழுதிய தி போர்ட்ரெய்ட் ஆப் எ லேடி நாவலில் ஜேம்ஸ் இரக்கமற்ற, கட்டுப்படுத்தும் தந்தை மற்றும் எளிதில் வசப்படுவது போலிருக்கும் மகள் என்ற கருப்பொருளுக்கு மீண்டும் திரும்புகிறார். பிளாரன்சுக்கு வெளியே தனிமையில் வாழ்கிறான் கில்பர்ட் ஆஸ்மண்ட். இசபெல் ஆர்ச்சரை மணமுடித்துக் கொண்டதும் தன் மகள் பான்சியை மகத்தான இடத்தில் மணமுடிக்க வேண்டும் என்று கனவு காணத் துவங்குகிறான். காதரீன் ஸ்லோபர் போலவே பான்சியும் வெளிப்பார்வைக்கு மந்தமானவளாய்த் தெரிந்தாலும் ஆழமான உணர்ச்சிகள் கொண்டவள் என்பதை நாம் மெல்ல உணர வருகிறோம். வாஷிங்டன் ஸ்கொயரில் டாக்டர் ஸ்லோபர் தன மகளைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு இருண்மையாகவும் கொடூரமாகவும் பான்சியின் தந்தை அவளைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதில்லை என்றாலும், அவரது பிரயத்தனங்களிலும் அதே இரக்கமின்மை இருக்கிறது, அதே பிடிவாதம் இருக்கிறது. குடும்பத்தினுள் அதிகாரம் பிரயோகிக்கப்படுவதை அதே தீவிரத்தோடு சித்தரிக்கிறார் ஜேம்ஸ்.

ஹென்றி ஜேம்ஸ் தன் அமமாவுக்கு நெருக்கமானவராக இருந்தாலும், அவரைப் பற்றி மென்மையான உணர்வுகளுடன் கடிதங்களில் எழுதினாலும், தன் புனைவுகளில் அவர் அன்னையர் குறித்து அவ்வளவாக எழுதவில்லை. சொல்லப்போனால், அவரது சிறந்த நாவல்களில் பலவற்றில் அம்மாக்களே கிடையாது. அவர்கள் அனாதைகளுக்கு, அல்லது அரை-அனாதைகளுக்கு உகந்த பாதுகாப்பான இடங்கள். வாஷிங்டன் ஸ்கொயரில் அம்மா இறந்திருக்கிறாள், பேசப்படுவதே இல்லை; தி கோல்டன் பௌலில் ஆடம் வெர்ஜரின் மனைவி, மாகியின் அம்மா, இறந்து நெடுங்காலமாகிறது; தி விங்க்ஸ் ஆப் தி லவ் நாவலில் கேட் க்ரோய் மற்றும் மில்லி தீல் இருவரும் தாயற்றவர்கள். தி டர்ன் ஆப் தி ஸ்க்ரூ நாவலில் இரு குழந்தைகளும் அனாதைகள்.

ஜேம்ஸ் அம்மாக்களின் மிகச் சிறந்தவள் தி அம்பாசடர்ஸ் நாவலின் உத்தம அன்னை திருமதி நியூசம். அவள் மகன், சாட், குடும்பச் செல்வத்தின் வாரிசு, அமெரிக்காவைவிட்டு பாரிசுக்குப் போய் விட்டான். அங்கு களியாட்டங்களில் காலம் கழிக்கிறான். திருமதி நியூசம் தன் மகன் சாட்டுக்கு நல்ல புத்தி சொல்ல லாம்பேர்ட் ஸ்ட்ரத்தரை பாரிசுக்கு அனுப்புகிறார். அவருக்கு லாம்பேர்ட்டைத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இருக்கிறது. ஆனால் ஸ்ட்ரத்தர், ஜேம்ஸ் பாத்திரங்களில் நுண்மையான ஒருவர், அவரும் பாரிசின் வசீகரங்களுக்கு பலியாகிறார். ஜேம்ஸின் தந்தை தன் குழந்தைகளை ஐரோப்பாவுக்கு அழைத்துச் செல்லும்போது கூறிய காரணங்களில் ஒன்று, அமெரிக்காவில் அவர்களுக்கு, “புலனறிவு” கற்பிக்கப்படுவதில்லை என்ற எண்ணம்தான். இப்போது சாட், ஸ்ட்ரத்தர் இருவருமே அப்படிப்பட்ட ஒரு கல்வியில் திளைக்கின்றனர், பாவப்பட்ட திருமதி நியூசம் மட்டும் ஊரில் தங்கியிருக்கிறாள்.

அவர் நாவலில் வருவதேயில்லை என்பதில்தான் அவரது ஆற்றல் இருக்கிறது. அவர் கடிதங்கள் அனுப்புகிறார், தன் கருத்துகளை வெளிப்படுத்துகிறார், தன் ராட்சசி மகளையும் மருமகனையும்கூட பாரிஸ் அனுப்புகிறாள். ஆனால் அவள் மட்டும், பிடிவாத உறுதியோடு நிழலில் தங்கிவிடுகிறாள். திருமதி நியூசம் போன்ற ஒரு காத்திரமான பெண்ணோடு மோத விருமப் மாட்டீர்கள். ஜேம்ஸ் எழுதிய புனைவுகளில் பலவும் நேரடியாய் சுயசரிதையின் தன்மை கொண்டவையல்ல, ஆனால் அவற்றில் பல அவரது உணர்வுகளின் வடிவமும் அச்சங்களின் சாயலும் பெற்றிருக்கின்றன. அவர் ஐரோப்பாவில் நீண்ட காலம் தங்கியிருந்த காலத்தில் தான் திரும்ப அழைக்கப்படக்கூடும் என்று அஞ்சியிருக்கலாம், அல்லது, “ஜேம்ஸ் குடும்ப குடிமகன்” என்ற நிலைக்குத் திரும்புவது குறித்து நினைத்துப் பார்த்திருக்கலாம். அவரது தாயார் அவருக்கு எழுதிய கடிதங்களில் வீடு திரும்பச் சொல்லும் அழைப்பின் பல வடிவங்களை நம்மால் எளிதில் காண முடிகிறது.

ஜேம்ஸ் தன் தாயை நேசித்தார். அவரை விட்டு விலகிச் செல்லவும் விரும்பினார். ஒரு நாணயத்தின் இரு முகங்களைப் போலவும், ஒன்றையொன்று மெல்ல முட்டி நிற்பது போலவும் இந்த இரு விருப்பங்களும் ஏதோ ஒரு வகையில் ஒன்றுக்கொன்று நெருக்கமாய் இருப்பது போலிருக்கிறது. தி அம்பாசடர்ஸ் நாவலில் தன் தாயைப் போன்ற ஒரு பாத்திரத்தைப் படைத்த ஜேம்ஸ், அவரைத் தோன்ற அனுமதிக்காமல் சிறிதாமாவது சந்தோஷப்பட்டிருக்க வேண்டும். அதே போல், அவர் தன் மகனைக் கட்டுப்படுத்த விரும்பியதில் ஹென்றி ஜேம்ஸ் சிறிதாவது வலியும் உணர்ந்திருக்க வேண்டும், பிடிவாதமாய்த் தொடர்ந்த அந்த விருப்பம் எப்படியும் நிறைவு கண்டிருக்கக்கூடியதுதான்.

நன்றி – புக்பாரம்

ஒளிப்பட உதவி – Robert Fay.com

வண்ணக்கழுத்து 16அ: வெறுப்பும் பயமும்

இப்போது கோண்ட் கதை சொல்லத் துவங்கினார். “அந்த நாய் தன்னுடைய பிரெஞ்சு எஜமானனை போரின் துவக்கித்திலேயே இழந்திருக்கக்கூடும். ஜெர்மானியர்கள் அவரைச் சுட்டுக் கொன்றிருக்கலாம். தன் எஜமானருடைய வீடு சூரையாடப்பட்டு அவருடைய கொட்டகை தீயிடப்பட்டதைக் கண்ட அந்த நாய், பயத்தில் காட்டுக்குள் ஓடி வந்திருக்க வேண்டும். அங்கே ஒரு குடிசையைப் போன்ற இடம் கொண்ட, கல்லறையைப் போல இருட்டான அடர்த்தியான முட்புதருக்கு அடியில் மனிதர்களின் பார்வைக்குச் சிக்காமல் ஒளிந்து கொண்டது. அந்த நாய் இரவில் மட்டுமே உணவைத் தேடி வெளியில் வந்திருக்க வேண்டும். இயல்பிலேயே அதுவொரு வேட்டை நாய் என்பதால், நாட்கள் செல்லச் செல்ல இரவுகள் கடக்க அது தன்னுடைய மிருகப் பண்புகளைத் திரும்பப் பெற்றது.

“என்னை எதிர் கொண்ட போது, நான் அதைக் கண்டு பயப்படாததை அறிந்து அது ஆச்சரியப்பட்டது. பயத்தின் வாடையை நான் வெளிப்படுத்தவில்லை. அதை பயமுறுத்தி தாக்கச் செய்யும் அளவிற்கு பயத்தை வெளிப்படுத்தாத ஒரு மனிதனை அது பல மாதங்கள் கழித்துச் சந்திக்கிறது.

“அதனைப் போலவே நானும் பசியில் இருப்பதாக அது நினைத்துக் கொண்ட்து. அதனால் ஒரு ஜெர்மானிய உணவுக் கிடங்குக்கு என்னைக் இட்டுச் சென்றது. மேலும் ஒரு ரகசிய பாதை வெளியே சென்று ஒரு பெரிய உணவுக் கிடங்கை அடைந்து எனக்காக கொஞ்சம் இறைச்சியைக் கொண்டு வந்தது. அங்கே உணவு மட்டுமல்ல, வரிசையாக பல ரகசியக் கிடங்குகளில் எண்ணெயும் வெடிபொருட்களையும் ஜெர்மானியர்கள் வைத்திருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வந்தேன். அதற்கேற்றபடி வேலை செய்தேன். கடவுளின் கிருபையால் என்னுடைய கணிப்பு சரியாக இருந்தது. அதை விட்டுவிட்டு இப்போது வேறு விஷயம் பேசுவோம்.

“உண்மையைச் சொல்வதென்றால் எனக்குப் போரைப் பற்றிப் பேசவே விருப்பமில்லை. சூரிய அஸ்தமனம் ஹிமாலய சிகரங்களை ஒளியூட்டுவதைப் பாருங்கள். எவரஸ்ட் ஒரு தங்க உலையைப் போலக் கொதிக்கிறது. வாருங்கள் பிரார்த்தனை செய்வோம்,

“போலியிலிருந்து மெய்மை நோக்கி என்னை வழிநடத்துங்கள்

இருளிலிருந்து வெளிச்சம் நோக்கி வழிநடத்துங்கள்

இரைச்சலில் இருந்து நிசப்தம் நோக்கி வழிநடத்துங்கள்”

தியானம் முடிந்த பிறகு, கோண்ட் எங்கள் வீட்டிலிருந்து அமைதியாக நடந்து, கல்கத்தாவிலிருந்து சிங்காலியாவின் மடாலயத்தை நோக்கிப் பயணம் புறப்பட்டார். அங்கே அவர் செய்த சாகசத்தைச் சொல்வதற்கு முன், பிரான்சின் போர்க்களங்களிலிருந்து அவர் எப்படி எங்கள் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டார் என்பதையும் சொல்லிவிட வேண்டும்.

1915ம் வருடம் பிப்ரவரி மாதக் கடைசியில், வண்ணக்கழுத்தால் இனிமேல் பறக்க முடியாது என்பது பெங்கால் ரெஜிமெண்டுக்கு தெளிவாகியது. வண்ணக்கழுத்தை அழைத்து வந்த கோண்ட் ஒரு போர்வீரன் இல்லை. ஒரு புலியையோ ஒரு சிறுத்தையையோ தவிர அவர் தன் வாழ்வில் வேறெதையும் கொன்றதில்லை. இப்போது அவரும் நோய்வாய்ப் பட்டிருப்பதால், அவர்கள் இருவரும் பிரயோஜனமில்லை என்று இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டார்கள். அவர்கள் மார்ச் மாதம் கல்கத்தாவை அடைந்தார்கள். அவர்களைப் பார்த்த போது என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. வண்ணக்கழுத்தைப் போலவே கோண்டும் பயந்து போயிருந்தார். இரண்டு பேரும் மிகவும் நோய்வாய்ப்பட்டு இருந்தார்கள்.

என்னிடம் என் புறாவை ஒப்படைத்த பின், சில விஷயங்களை விளக்கிவிட்டு கோண்ட் இமாலயத்திற்குச் சென்றார். “பயத்திலிருந்தும் வெறுப்பிலிருந்தும் என்னை குணப்படுத்திக் கொள்ள வேண்டும். மனிதர்கள் ஒருவரை ஒருவர் கொன்று கொள்வதை அளவிற்கு அதிகமாக நான் பார்த்துவிட்டேன். நான் பயமென்னும் நோயில் விழுந்து, வீட்டில் இருப்பதற்கு லாயக்கற்றவனாகிவிட்டேன். நான் தனியே சென்று இயற்கையோடு இயைந்து என்னுடைய நோயைப் போக்கிக் கொள்ள வேண்டும்.”

இப்படிச் சொல்லிவிட்டு, அவர் சிங்காலியாவில் உள்ள மடாலயத்திற்கு தியானத்தாலும் பிரார்த்தனையாலும் தன்னைக் குணப்படுத்திக் கொள்ளச் சென்றுவிட்டார். அதே சமயத்தில் என்னால் முடிந்த அளவிற்கு வண்ணக்கழுத்தைக் குணப்படுத்த முயற்சி செய்தேன். அவனுடைய மனைவியாலும் நன்கு வளர்ந்த பிள்ளைகளாலும் கூட அவனைக் குணப்படுத்த முடியவில்லை. அவன் தன் பிள்ளைகளிடம் எந்த அக்கறையும் காண்பிக்கவில்லை. அவர்கள் அவனை வேற்று ஆள் போலவே பார்த்தார்கள். அவனுடைய பெடை அவனிடம் ஆர்வம் காட்டியது. ஆனால், அதனாலும் அவனைப் பறக்க வைக்க முடியவில்லை. பையக் குதிப்பதைத் தவிர அவன் வேறு எதையும் செய்ய மறுத்தான். என்ன செய்தும் அவனை காற்றில் இறங்க வைக்க முடியவில்லை. நல்ல புறா வைத்தியர்களைக் கொண்டு அவனுடைய கால்களையும் இறக்கைகளையும் சோதித்தேன். அவர்கள் அவனுக்கு ஒரு குறையும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அவனுடைய எலும்புகளும் இறக்கைகளும் நன்றாக இருந்த போதும் அவன் பறக்க அடம்பிடிக்கிறான். தன் வலது இறக்கையை திறக்க மறுக்கிறான். ஓடாத போதும் குதிக்காத போதும் ஒற்றைக் காலில் நிற்கும் புதிய பழக்கம் வேறு.

அவனும் அவனுடைய பெடையும் கூடு கட்டத் துவங்காமலிருந்தால் நான் இதைப் பொருட்படுத்தியிருக்க மாட்டேன். ஏப்ரல் மாத மத்தியில், கோடைக்கால ஓய்வு நாட்கள் தொடங்கிய போது கோண்டிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. ”உன்னுடைய வண்ணக்கழுத்து, இப்போது தன் பெடையோடு கூடக் கூடாது. முட்டைகள் ஏதேனும் இருந்தால், அவற்றை அழித்து விடு. எந்தச் சூழ்நிலையிலும் அவற்றைக் குஞ்சு பொறிக்க வைத்துவிடாதே. வண்ணக்கழுத்தைப் போல பறக்கவே பயப்படும் ஒரு தந்தையால் மோசமான பயம் கொண்ட குஞ்சுகளையே உருவாக்க முடியும். அவனை இங்கே கொண்டு வா. நான் இப்போது கொஞ்சம் நன்றாக உணர்கிறேன். சீக்கிரம் வண்ணக்கழுத்தைக் கொண்டு வா. இங்குள்ள லாமா உன்னையும் அவனையும் காண விரும்புகிறார். மேலும், அந்த ஐந்து உழவாரக் குருவிகளும் தெற்கிலிருந்து இந்த வாரம் இங்கே வந்துவிட்டன. உன்னுடைய பறவையை பயத்திலிருந்து திசை திருப்ப அவை கண்டிப்பாக உதவும்” என்று எழுதியிருந்தார்.

(தொடரும்)

கந்தோபாவின் சூதன் (அல்லது) வாக்கியாவின் பாடல்

காஸ்மிக் தூசி

இந்த மஞ்சள் நிற துப்பட்டா
சூரியனிடமிருந்து
நான் எடுத்து போது
இரண்டாக கிழிந்தது
இதுபாதிதான் என்பது தெரியும்
நல்ல ஒன்று கிடைத்ததும்
எறிந்து விடுவேன்
இதை

என் தாயை கொன்றேன்
அவளின் தோலுக்காக
எனக்கு
மஞ்சள் வைக்கவென
இப்பையை செய்ய
தேவைப்பட்டதோ
அதில் கொஞ்சம்தான்

இந்த எண்ணெய்க் குப்பியை
பார்த்துக்கொள்வது
என் வேலை
எப்போதும் நிறைந்திருக்கும்படி
பார்த்துக்கொள்வது
உங்களுடையது

பிச்சை எடுக்கவில்லை
ஆனால்
தேவைப்பட்டால் திருடுவேன்
சரியா?

கந்தோபாவின் ஆலயம்
விடியலில் எழுகிறது
அது இருளக்கூடாது இரவில்
என்றைக்கும்.

ஒரு சுடர் கொண்டு
கோயிலைக் காக்கின்றேன்
அப்படிசொல்லாதீர்
எனக்கு வேண்டுவதெல்லாம்
ஒரு பிடி
எண்ணை மட்டுமே
முடியவில்லை என்றால்
கொடுங்கள்
ஒரு துளியாவது

இந்த வீணையில் இருப்பது
ஒற்றைத்தந்தி மட்டுமே
தெய்வீக நமைச்சலுடன்
நான் அதை வருடும்போது
ஒலிப்பதெல்லாம்
ஒரு ஸ்தாயி மட்டுமே
என் குரலில் ஒலிப்பதெல்லாம்
ஒரு ஸ்வரம் மட்டுமே
குரலில் இருப்பதும்
ஒற்றைச்சொல் மட்டும்
குறைகூற
நான் யார்?

கடவுளே உலகம்
அட்சரம் பிசகாமல்
தெரியும் எனக்கு
என் விலாவில்
விஷப்பல் போல
இருப்பதும் அதுவே

என் பற்களிடையே
அகப்பட்ட நாவில்
இரத்தச்சுவை கொண்ட
ஆட்டுக்குட்டியும் அதுவே
என்பதும்
அறிவேன் நான்

நான் பாடும் பாடல்
எப்போதும்
இது மட்டுமே

௦௦

அருண் கொலாட்கரின் A Song for Vaghya என்ற கவிதை மொழிபெயர்ப்பு

ஒளிப்பட உதவி – விக்கிமீடியா

அடிக்கட்டை

செந்தில் நாதன்

yellow-wagtail-317598_1280

 

அது இப்போது வெறும் அடிக்கட்டைதான்.
அதன் அழகு குலைந்து
ஆபரணங்கள் தொலைந்தன.

அது வசந்தத்தில் உயிர்ப்பதில்லை,
பசுமையில் வில்லாய் வளைவதில்லை,
அதன் மலர்களில் இருந்து காமன் கணைகள் தொடுப்பதில்லை,
அதன் நிழலில் பயணிகளின் பெருமூச்சு கேட்பதில்லை,
காதலர்களின் கண்ணீர் காண முடிவதில்லை.

ஒரேயொரு கிழப்பறவை மட்டும்
ஏதோ நினைவில் அமர்ந்திருக்கிறது.

௦௦௦

ஹிந்தி கவிஞர் சூர்யகாந்த் திரிபாதி, ‘நிராலா’ வின் கவிதை.
ஆங்கில மொழிபெயர்ப்பு விக்ரம் சேத், அதன் தமிழாக்கம் செந்தில் நாதன்.