Author: பதாகை

முரளிக்காக ஒரு பாடல்

 காஸ்மிக் தூசி

பாருங்கள்,
மலை முகட்டில்
மேய்வதற்கென
வந்து விட்டது
நிலவு

குதிரை திருடரே
சவாரி செய்யலாம்
என்று மட்டும் நினைக்காதீர்

கந்தோபாவின்
முத்திரை
அதன் பக்கவாட்டில்
தெரிகிறதல்லவா
இடது
காறை எலும்புக்கு கீழே
பச்சை குத்தப்பட்டிருக்கிறதே
அதுதான்
கந்தோபாவின் பெயர்
பாருங்கள்

கிழட்டு பெண்பித்தரே
கந்தோபாவின் பெண்மீது
வைக்காதீர்
கையை

பார்ப்போம்
அதற்குமுன்
உங்கள் பணத்தின்
நிறத்தை

000

அருண் கொலாட்கரின் A Song for Murli என்ற கவிதை மொழிபெயர்ப்பு

அமேஸான் காடுகளிலிருந்து- 4: தேவதை வந்தாள்

 மித்யா

அன்று இரவு கிறிஸ்டோவிற்கு தூக்கம் வரவில்லை. ஜெப்ரியின் கண்கள் இல்லாத சடலம் அவன் கண்களில் அடிக்கடி தோன்றி மறைந்தது. டேவிட் என்ன ஆனார் என்று யாருக்கும் தெரியவில்லை. ஜெப்ரிக்கு இந்த கதி என்றால் அவருடைய கதி என்னவோ? அவர் உயிருடன் இல்லை என்பது சர்வ நிச்சயம். ஆனால் அவர் எப்படி மாண்டிருப்பார்? ஜெப்ரி போல் அவரும் துடிதுடித்திருப்பாரா? அவரை எந்த மிருகம் கொன்றிருக்கும்? ஜெப்ரியின் மரணத்துக்கும் எந்த மிருகத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பதை எல்லோரும் ஒப்புக் கொண்டார்கள். மிருகத்தினால் சாவு வந்தால் ஒரு கை காணாமல் போயிருக்கலாம், அல்லது ஒரு கால் காணாமல் போயிருக்கலாம். ஏன், தலையே காணாமல் போயிருக்கலாம். இப்படி கண் மட்டும் காணாமல் போயிற்றென்றால் அது ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தியின் வேலைதான் என்று இந்த குழுத் தலைவன் நேற்றுதான் எல்லோரிடமும் கூறிக்கொண்டிருந்தான். சற்று நேரம் முன் எல்லோரும் வானைப் பார்த்து ஏதோ கத்தினார்கள். பல முறை காட்டை வணங்கினார்கள். அதற்கு பிறகு தூங்கச் சென்று விட்டார்கள்.

கிறிஸ்டோவின் குடிசைக்குள் அந்தப் பெண் நுழைந்தாள். கிறிஸ்டோவை தங்களுடைய குழுவில் உள்ள ஒருவனைப் போல் காட்டுவாசிகள் நடத்தினார்கள். தினமும் ஏதோ ஒரு பெண் கிறிஸ்டோவின் குடிசைக்குள் வந்து அவனுடன் படுத்துக் கொள்வாள். முதலில் கிறிஸ்டோவிற்கு இது குழப்பமாக இருந்தது. அவன் ஒரு பெண் மேல் மோகித்திருந்தான். அவளை அவனுக்கு ரொம்ப பிடித்தது. அவள் தன்னுடனேயே இருக்க வேண்டும் என்று எண்ணினான். ஆனால் அந்தப் பெண்ணோ பல ஆண்களுடன் கூடினாள். இதைக் கண்டு கிறிஸ்டோ வெகு கோபமாக இருந்தான். அவள் அவனுடைய குடிசைக்குள் இரவில் வந்தபொழுது தனக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லிவிட்டு அவளைத் தொடாமல் இருந்தான். இப்படி பல முறை நடந்தபின் கிறிஸ்டோ இவர்களுடைய விழுமியங்கள் தன்னுடைய விழுமியங்களுக்கு நேர் எதிராக இருப்பதை உணர்ந்தான்.

லண்டனில் ஒரு பெண் பலருடன் செல்வதுண்டு. ஆனால் ஒருவனுடைய காதலி ஆனபின் அவள் அவனுடன்தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். இங்கு அது போல் எதுவும் இல்லை. யார் வேண்டுமானாலும் யாருடனும் கூடி இருக்கலாம். யாரும் யாருக்கும் சொந்தமில்லை. கிறிஸ்டோ முதலில் இதை ஒரு காட்டுமிராண்டி சமூகமாகப் பார்த்தான். ஐரோப்பியா இவர்களுக்கு நாகரிகம் கற்றுக் கொடுக்க கடமைப்பட்டிருக்கிறது என்று பல ஐரோப்பியர்கள் போல் அவனும் நினைத்தான். ஆனால் மெதுவாக அவன் கருத்து மாறியது. இந்த குழுவிற்குள் கற்பழிப்பு என்பது யாரும் கேட்டதில்லை. இரு குழுக்கள் சண்டையிட்டுக் கொண்டாலும் ஜெயித்தவர்கள் பெண்களை வன்கொடுமைக்கு உட்படுத்துவதில்லை. இந்த குழுக்களின் தலைவன் ஆணாக இருந்தாலும் எல்லோரும் சமமாகதான் கருதப்படுகிறார்கள். கிறிஸ்டோவிற்கு இதையெல்லாம் யோசிக்கும்பொழுது மிகவும் குழப்பமாக இருந்தது. அப்பொழுதுதான் குடிசைக்குள் வந்த பெண் அவனை முத்தமிட்டாள்.

கூடல் முடிந்தபின் அவள் ஆழ்ந்த உறக்கத்தில். கிறிஸ்டோ ஆழ்ந்த சிந்தனையில். ஜெப்ரி போன்ற மாவீரர்களை தின்று துப்பிய காடு என்னை ஏன் ஒன்றும் செய்யவில்லை? அப்படி எனக்குள் என்ன இருக்கிறது? இவர்கள் நம்புவது போல் நான் ஒரு தெய்வப் பிறவியா? அப்படியானால் அதை என்னால் ஏன் உணர முடியவில்லை? நான் இவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறேனா? தன்னுள் எழுந்து கொண்டிருந்த பல கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் குடிசையை விட்டு வெளியே வந்தான் கிறிஸ்டோ.

தரை ஈரமாக இருந்தது. மழை பேய்ந்து ஓய்ந்திருந்து. இங்கே எப்பொழுது மழை பெய்யும் என்றே சொல்ல முடியாது. இங்கு எப்பொழுதும் ஒரே போன்ற சீதோஷ்ண நிலைதான். இரவில் குளிர்ச்சி இல்லை. காற்றில் மிதமான வெப்பம் கலந்திருந்தது. மழை விட்டபின் வானம் சுத்தம் செய்யப்பட்டது போல் இருந்தது. பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருந்தன.

கிறிஸ்டோ தன் கால்கள் தானாக காட்டை நோக்கிச் செல்வதை உணர்ந்தான். தனக்கு தன் சொந்த கால்களின் மேல் எந்த அதிகாரமும் இல்லை என்பதை உணர்ந்தான். அவனை பயம் கவ்விக் கொண்டது. அவனுக்கு மறுபடியும் குடிசைக்குள் சென்றுவிடவேண்டும் என்று இருந்தது. ஆனால் அவன் கால்களோ அவனை காட்டுக்குள் அழைத்து சென்றன.

காட்டுக்குள் நுழைந்த கிறிஸ்டோவிற்கு ஒரு ஆச்சரியம் காத்துக் கொண்டிருந்தது. இரவு நேரத்தில் காடு இருட்டாக இருக்கும் என்றும், தன்னால் அந்த இருளில் ஒன்று பார்க்கமுடியாது என்றும் கிறிஸ்டோ எண்ணியிருந்தான். வானில் நிலவொளியும் இல்லை. ஆனால் காட்டுக்குள் அவனுக்கு எல்லாம் தெள்ளத் தெளிவாக தெரிந்தன. எல்லா பக்கமும் மரங்களும், மரத்தில் பொந்துகளும், பொந்துக்குள் குடியிருக்கும் ஆந்தைகளும், மரத்தின் கிளை மேல் படுத்திருக்கும் சிறுத்தையும், ஊர்ந்து செல்லும் பாம்பும் அவனுக்கு தெரிந்தன. ஆனால் காட்டை யாரோ ஒரு சன்ன பச்சை நிற போர்வையால் போர்த்துவிட்டதுபோல் இருந்தது. எங்கும் எதிலும் பச்சை நிறம் குடிகொண்டிருந்தது.

இவற்றையெல்லாம் ஆச்சரியமாக பார்த்தக்கொண்டே நடந்தான் கிறிஸ்டோ, எவ்வளவு நேரம் நடந்தான் என்பது அவனுக்குத் தெரியவில்லை. அவன் ஒரு நதிக்கரையை அடைந்திருந்தான். கால்கள் வலித்தன. ஓடும் நதியிலிருந்து தண்ணீரை கைகளால் மொண்டு குடித்தான். மிகவும் சோர்வாக இருந்தவன் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்தான். அந்த இடத்தின் அமைதியை ரசித்துக்கொண்டு கண்களை மூடினான். மூடியவுடன் அவனுக்கு உறக்கம் வந்தது. அப்படியே தூங்கிவிட்டான். காட்டின் அந்தப் பகுதியில் ஒலிகள் எதுவும் இல்லாததால்தான் அமைதி குடிக்கொண்டிருந்தது என்பதை அவன் கவனிக்கவில்லை. அவனுக்கு பத்தடி தூரத்தில் ஒரு ரைஃபில் இருந்ததையும் அவன் கவனிக்கவில்லை. அதன் அருகில் துண்டிக்கப்பட்டு கிடந்த காதும் அவன் பார்க்கவில்லை.

காலையில் சூரிய வெப்பம் முகத்தில் அடித்து அவனை எழுப்பியது. கண்ணைத் திறந்து பார்த்தான். அவனுக்கு முன் வெள்ளை நிற உடையில் ஒரு தேவதை நின்று கொண்டிருந்தாள்.

அம்மணமாய் நிற்கும் பெண்- கரோல் ஆன் டஃபி

நகுல்வசன்

கேவலம் துட்டுக்காக இந்த இழவை ஆறு மணிநேரம் செய்ய வேண்டியிருக்கிறது.
தொப்புள் முலை குண்டியெல்லாம் ஜன்னல் வெளிச்சத்தில் காட்ட வைத்து
என் நிறங்களைப் பிழிந்தெடுத்துக் கொள்கிறான். இதில் வலது பக்கம்
தள்ளி நின்று அசையாமல் வேறு இருக்க வேண்டுமாம்.
என் உடம்பை கட்டம் கட்டமாக வரைந்து பிரேம் போட்டு
பெரிய மியூசியத்தில் எல்லாம் தொங்கவிடுவார்கள். பணக்கார்ர்கள்
என் தேவடியாப் படத்தைப் பார்த்து உச்சுக் கொட்டுவார்கள்.
இதறகுப் பேர்தான் கலையாம்.

யார் கண்டது? அவன் தலைவலி அவனுக்கு.
எனக்கோ வயிற்றுப் பிழைப்பு. நான் ஒல்லியாகிக்
கொண்டிருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லையாம். என் முலைகள்
சற்றே சரிந்து தொங்கத் தொடங்கிவிட்டன,
இந்த ஸ்டூடியோவோ குளிர்ந்து விறைக்கிறது. எலிசபெத் ராணி
என் உடம்பை உற்றுப் பார்ப்பது போல் ஒரு கனவு.
அற்புதம் என்று முணுமுணுத்தபடி அவள் கடந்து செல்கிறாள்.
சிரிப்பு வருகிறது. அவன் பெயர்

ஜார்ஜெ. அவன் ஒரு மேதையாம்.
ஓவியம் சரிவராத வேளைகளில் தன் இயலாமையை
என்னுடம்பின் கதகதப்பில் கரைத்துவிட ஏங்குகிறான்.
சாயத்தில் தூரிகையைத் தோய்த்துத் தோய்த்துக் கிட்டாண்
சட்டத்திற்குள் என்னை புணர்ந்து கொள்கிறான். பாவம்!
அதற்கெல்லாம் அவனுக்கேது காசு. நாங்கள் இருவருமே
ஏழைகள். எதையெதையோ செய்து எப்படியோ
பிழைத்துக் கொள்கிறோம். ஏன் இதைச் செய்கிறாய்,
என்று கேட்டதற்கு, அப்படித்தான் வேறு வழியில்லை,
வாயை மூடு என்று அடக்கிவிட்டான். என் சிரிப்பு
அவனைக் குழப்புகிறது. இந்த கலைஞர்களுக்கு
எப்போதுமே தாங்கள் ஏதோ பிஸதாக்கள்
என்ற பாவனை. மதுவால் வயிற்றை நிரப்பிக்கொண்டு
நான் இரவில் மதுக்கூடங்களில் ஆட வேண்டும்.
ஓவியத்தை முடிந்தபின் ஜம்பமாய் என்னிடம் காட்டுகிறான்,
சிகரெட்டை பற்றவைத்தபடியே.
சரி, மொத்தம் பன்னிரெண்டு ஃபிராங்க்,
என்று அவனிடம் கணக்களித்துவிட்டு என் மேலாடையை
எடுத்துக் கொள்கிறேன், ஓவியமோ என்போலவே இல்லை.​

௦௦

ஒளிப்பட உதவி – Wikiart

மீன் வியாபாரி 

ஆதவன் கிருஷ்ணா

இரண்டு பெண்கள்
இரண்டு மொழிகளில் பேசியபடி
நூறு நூறு
ரூபாய்களைக் கொடுக்கிறார்கள்
(அவர்களின் நிழல் அசைவுகள்
முத்தமிட்டுப் புணர்வது போல
தரையில் நெளிவதை அவன் கவனித்தான்)

நேரெதிரே
முதியவரின்
கிழட்டு கைத்தடி
மெல்ல அசைந்து மீன் வண்டியை
விட்டு நகர்கிறது

வெறுமையான மதியத்தின்
தெருவில்
நூறு ரூபாய் தாள்களோடு நிற்கும்
மீன் வியாபாரி
விருப்பமற்று வளர்த்த தாடிக்குள்
சில்லரையைத் தேடுகிறான்

சடலங்களைப் போல
வாய் பிளந்து கிடக்கும் மீன்களின்
மீதிருந்த
ஈக்களை விரட்டுகிறான்

சுவாசமற்ற
அதன்
வெறித்த கண்களில்
மழை மேகங்கள்
எவ்வொரு சலனமுமின்றி
நுழைந்து செல்கின்றன

நிற்கும் நிர்வாணப் பெண் – கரோல் ஆன் டஃபி

செந்தில் நாதன்

அற்ப ஃபிராங்க்குகளுக்காக ஆறு மணி நேரம் இது போல.
வயிறு மார்க்காம்பு புட்டம் சன்னல் வெளிச்சத்தில்,
என் வண்ணங்களை உறிஞ்சுகிறான் இவன். சற்றே வலப்பக்கம்,
பெண்ணே. அசையாமலிருக்க முயற்சி செய்.
நான் பகுப்புமுறை ஓவிய மாதிரியாய்ப் புகழ் பெற்ற
அருங்காட்சியகங்களில் தொங்கவிடப்படுவேன். இப்படியொரு நதியோரத் தாசி
ஓவியமா என்று நடுத்தர வர்க்கம் பாராட்டும். இதைக் கலை என்கிறார்கள்.

ஒருவேளை இதுதானோ. இவன் கனபரிமாணங்களைப் பற்றிச் சிந்திக்கிறான்.
நான் அடுத்தவேளை உணவைப் பற்றி. நீ இளைத்துக் கொண்டே போகிறாய்
பெண்ணே, இது நல்லதில்லை. என் மார்புகள் சற்றே கீழ்நோக்கித்
தொங்குகின்றன, ஓவியக்கூடம் குளிர்கிறது. இங்கிலாந்து மகாராணி
என் உருவத்தைப் பார்வையிடுவதைத் தேநீர் இலைகளில்
ஆரூடம் காண்கிறேன். அற்புதம், அவள் முணுமுணுக்கிறாள்,
நகர்ந்தபடியே. இது எனக்குச் சிரிப்பூட்டுகிறது. இவன் பெயர்

ஜார்ஜெ. இவன் ஒரு மேதை என்கிறார்கள்.
ஒவ்வொரு நேரம் காரியத்தைக் கவனிக்காமல்
என் கதகதப்புக்காக விரைத்து ஏங்குகிறான்.
வண்ணங்களில் தூரிகையை தோய்த்துத் தோய்த்துச்
சட்டகத்துக்குள் என்னைச் சிறை பிடிக்கிறான். சின்னப் பையா,
நான் விற்பதை உன்னால் வாங்க இயலாது.
நாம் இருவரும் ஏழைகள், அவரவர் வழியில் பிழைக்கிறோம்.
ஏன் இதைச் செய்கிறாய் என்று அவனைக் கேட்கிறேன்.
ஏனென்றால் நான் செய்தாக வேண்டும். வேறு வழியில்லை.
பேசாதே.என் சிரிப்பு அவனைக் குழப்புகிறது.
இந்தக் கலைஞர்கள் தங்களைத் தீவிரமாகப் பாவித்துக் கொள்கிறார்கள்.
நான் இரவில் மதுவருந்திவிட்டு மதுக்கூடங்களில் நடனமாடுவேன்.
ஓவியம் முடிந்தபிறகு பெருமையுடன் என்னிடம் காட்டுகிறான்,
ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தபடி. நான் சொல்கிறேன்-
பன்னிரெண்டு ஃபிராங்க், அப்படியே என் மேலாடையை எடு.
இது என்னைப் போல் இல்லை.

————————

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு- கவிதையைப் பற்றி: இரா.முருகன் FB ல் பதியும் வரை இந்தக் கவிதையைப் பற்றித் தெரியாது. படித்தவுடன் அப்படியே மொழிபெயர்த்தேன்.

இரா முருகன் பகிர்வு- மூன்று கவிஞர்கள்

இங்கும் சில தகவல்கள்- https://writingonwomenwriters.wordpress.com/2013/05/10/standing-female-nude-carol-ann-duffy/

ஒளிப்பட உதவி – Wikiart