Author: பதாகை

மலைகள்

காஸ்மிக் தூசி

800px-Apache_head_in_rocks,_Ebihens,_France-615

 

 

மலைகள், பூதங்கள் –
மாக்கல் பட்டையில்
மணலடித்த தோள்கள்

பூதங்கள், மலைகள் –
பாறையின் விலாக்களில்
கிழித்தெழும்பும் கற்றாழை

மலைகள், பூதங்கள் –
கண்ணாடிக்கல் மூட்டு
சுண்ணாம்புக்கல் கவடு

மலைகள், பூதங்கள் –
வானத்தின் சதை கிழிக்கும்
கற்றாழையின்
கோரைப்பற்கள்

மலைகள், பூதங்கள் –
படியாலான
முதுகெலும்பு

மலைகள், பூதங்கள் –
வெயில் வருடிய
மணற்பாறையின்
தொடைகள்

மலைகள், பூதங்கள் –
கருங்கல் இடுப்பாய்
தளர்ந்த விதானம்

பூதங்கள்.

கொள்ளேன் எனில்

அரிஷ்டநேமி

யாரும் அற்ற ஒரு புனித கணத்தில்
அது அவன் ஆனது.
அவன் ஆன காலம் முதல்
பசி அவனைத் தின்னத் தொடங்கியது.
அன்று முதல் அவன் யாசிக்க
ஆரம்பித்தான்.
விளையாட்டு பொம்மைகளை,
நடை வண்டிகளை,
சப்பர வண்டிகளை,
கோலிக் குண்டு விளையாட்டுகளை
கிட்டிபுல் விளையாட்டுகளை
காவிரியின் ஓட்டங்களை,
தீப்பெட்டி அட்டைகளை,
கனவுகளை கொண்டாடும் கவிதைகளை,
உறவுகளை,
வாழ்த்துக்களை.
யாசித்தலில் பட்டியல் நிறைவற்று நீண்டது.
கனவுகளின் பட்டியலில் நீண்டதில்
தேக மாற்றம் கொண்டது.
மாற்றம் கொண்டபின்
தானம் வாங்க விரும்பி அவனிடம் பலர்
பிறிதொரு நாளில்
தடையங்கள் ஏதும் இன்றி
நெருப்பும் அவனிடம் தானம் பெற்றது.
அன்று முதல் அவன் அதுவானான்.

நேற்றிரவு

அனுகிரஹா

வேலை முடிந்திருக்கவில்லை. பக்கத்து ஸீட்டில் இருக்கும் டீம் மேட், அப்போதுதான் ஒரு கப் காபியும் கையுமாக வந்து உட்கார்ந்தாள். நாளை வந்து முடித்துக்கொள்ளலாம்தான். மாலை, 8 மணிக்கு மேல் அலுவலகத்தில் இருப்பது, நம் இரவை நீட்டித்துக்கொண்டே போகும். “அது நீங்க போன வாரமே முடிச்சிருக்கணும் ஆக்ச்சுவலி… என்ன பண்ணிட்டிருந்தது நீங்க?” என்று சிரித்துக்கொண்டே கேட்டுவிட்டு போயிருந்தார் டீம் லீட். அதனால் என்ன, 8 மணிக்கு ‘கேப்’ பதிவு செய்திருந்தேன். அவசரமாக ஓடி, கீழ் தளத்தை அடைந்த போது 8:45. நல்ல வேளையாக அந்த ஏரியா ‘கேப்’ கிளம்ப தயாராக நின்றுகொண்டிருந்தது. இரண்டு பெண்கள் அமர்ந்திருந்தனர்.

‘கேப்’ வெளியே செல்ல செல்ல, டிரைவர், “மேடம் டீஸல் மட்டும் போட்டுக்கிட்டு போயிரலாம்.” அந்த ஜன்னலோரமாக உட்கார்ந்திருந்தவர் முணுமுணுத்துக் கொண்டே இருந்தார். நடு வகிடு எடுத்து எண்ணைப் போட்டு அழுந்த வாரியிருந்தார். கண்ணாடியும் சற்றே பெரிய பொட்டும் மேலே குங்குமம் மஞ்சள் என்று வரிசையாக. கையில் மூன்று பைகள், லேப்டாப் பை, கைபை மற்றும் சாப்பாட்டு பை. “இதெல்லாம் ரூல்ஸ் படி இல்லங்க..நானும் பார்த்துட்டேன்..தினமும் இப்படிதான் பண்றீங்க..டீஸல் போட்டுட்டுதான் வண்டிய உள்ளயே கொண்டு வரணும். “.எங்களைப் பார்த்து, “இவங்களுக்கும் உள்ளையும் ஏதோ அண்டர்ஸ்டாண்டிங்க்..” அதற்குள் நங்கள் பிரதான சாலைக்கு வந்திருந்தோம். நடுவில் உட்கார்ந்திருந்த பெண், “அண்ணா..டீஸல் போடணும்-நீங்களே.. பங்க்கு தாண்டிடுச்சு”

“இல்ல மேடம்..வேண்டாம்..அவங்க ரொம்ப வருத்தப்படறாங்க.. நான் உள்ள 8 மணிக்கே வர வேண்டியவன்..லேட்டாயிடுச்சு..நான் ஊருக்கு புதுசு..அதுதான் கொஞ்சம் லேட்டாயிடுச்சு..நான் அப்பறம்மா போட்டுக்கறேன்.. யாருக்கும் யாருக்கூடயும் அண்டர்ஸ்டாண்டிங்க் எல்லாம் இல்ல..”

கொஞ்சம் அழுகையை அடக்கிக்கொண்டு பேசியதுபோல இருந்தது. இல்லை, கோபமா? எதுவாக இருந்தாலும், என் கவலை எனக்கு. எப்படி, வழி தெரியாதவர்களையே தினமும் டிரைவர்களாக போடுகிறார்கள்? “நீ அங்க ரூம்-ல தனியா இருந்துண்டு என்ன பண்ண போற..வந்துடேன் இங்க..இவாளும் வந்திருக்கா.. எல்லாரும் கொஞ்ச நேரம் சந்தோஷமா சேந்திருங்கோ..” மாமா, காலையில் சொன்னது. மாமா வீட்டுக்கு எனக்கு இன்னும் வழி மனப்பாடம் இல்லை. ஒவ்வொரு முறையும் தடுமாறும். ஊர் தெரிந்தவர்கள், எளிமையாக கண்டுபிடித்துவிடக்கூடிய லாண்ட் மார்க் தான்.

கூகிள் மேப்-ஐ திறந்துவைத்துக்கொண்டுதான் உட்கார்ந்திருந்தேன். சரியாக பிரதான சாலைக்கு திரும்ப சொல்லியாச்சு. அதில் சரியான திருப்பத்தில் மீண்டும் நுழைய வேண்டும். அவ்வளவே தான். நான் அப்போதும் கூகிள் மேப்-ஐயே பார்த்துக்கொண்டிருந்திருக்க வேண்டாம். அந்த கார்ப்பரேஷன் பள்ளி..அதை தாண்டிய திருப்பம்தான். எனக்கு தெரியும். ஆனால், தவறவிட்டுவிட்டேன். பிரதான சாலையில் அடுத்த முனைக்கு சென்றுவிட்டோம். கூட இருந்த பாதுகாப்பு எஸ்கார்ட்டும் வட நாட்டுக்காரர். அவரும் எச்சரிக்கவில்லை. அந்த முனையில், நான் எங்கிருக்கிறேன் என்றே தெரியவில்லை. என அருகில் இருந்த பெண், “இங்கிருந்து உங்களுக்கு போக தெரியுமா?”

“இல்ல, தாண்டிட்டோம்-நு நினைக்கறேன்”

“தினமும் எப்படி போவீங்க?”

“இல்ல..தினமும் இப்படி வரதில்ல..இன்னிக்கு சொந்தகாரங்க வீட்டுக்கு போறேன்..”

“சொந்தகாரங்க வீடாஆ!”. “இங்கிருந்து இறங்கி, ஆட்டோ பிடிச்சு போயிருவீங்களா?”

எப்படி அப்படி ஒரு முடிவுக்கு வந்தோம். அவர்கள் இருவருமே, அந்த ஏரியா இல்லை, அதை தாண்டி போக வேண்டும். மணி ஒன்பது கடந்துவிட்டது. இன்னும், ஜன்னலோரம் இருந்த பெண்ணும் ஏதாவது பேசுவதற்குள் இறங்கிவிட வேண்டும். நான் இறங்கிவிட்டேன். டிரைவர் தனக்கு சம்பந்தமே இல்லாமல் எதுவோ நடப்பதுபோல பார்த்துக்கொண்டிருந்தார்.

“இல்ல..நான் பார்த்துக்கறேன்.. உங்களுக்கு லேட் ஆயிடப்போகுது.. இங்கதான் இருக்கு..நான் போயிடுவேன்.”

நான் இறங்கி, சில அடிகள் சென்றேன். நாடக மேடைப் போல எல்லாம், மஞ்சள் ஒளியில் நடமாட்டமும், அதை தாண்டிய விளிம்புகளில் கண்ணிற்கு தெரியாத இருளும் கவ்வியிருந்தது. நான் திரும்பி பார்க்கையில், கார் அதே இடத்தில் நின்று சிமிட்டிக் கொண்டிருந்தது. கிளம்புகிறார்களா, இல்லையா என்று நான் பார்த்திருக்க, செக்யூரிட்டி எஸ்கார்ட்ட் ஓடி வந்து,

“மேடம்..ஆப் ஜா சக்கேங்கே?”

“ஹான், சக்கேங்கே சக்கேங்கே”

அந்த சிறிய மனிதருக்கு,கொஞ்சமாக வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு, என்ன செய்வதென்று அறியாமல் மீண்டும் வண்டியை நோக்கி ஓடிப்போனார். நான் திரும்பி பார்க்காமல், நடக்க துவங்கினேன். அவர்கள் என்னைப் பற்றி பேசிக்கொண்டிருக்க வேண்டும். என் அறியாமையை, நான் என் வீட்டிற்கு செல்லாமல், சொந்தகாரர் வீட்டிற்கு செல்ல கேப் எடுத்ததைப் பற்றி.

நான் மீண்டும் கூகிள் மேப்-ஐ திறந்துகொண்டேன். அது சத்தமாக கத்தியது, “நூறு அடியில் வலப்பக்கம் திரும்பவும்”. எதற்கும், அங்கு ஒரு போட்டோ கடையிலிருந்து வேளியே வந்துகொண்டிருந்தவர்களை கேட்டேன். “கார்பரேஷன் ஸ்கூல், எப்படி போகணும்?” “சரியா, பதினஞ்சு பில்டிங்க் தாண்டி ரைட் சைடுல வரும். நேரா போங்க”

அங்கு கட்டடங்களை அப்படி எண்ணுவது? அடுக்ககங்கள், சின்ன கடைகள், வெறும் ஓலைக்கூரையிலான கடைகள். போனையே பார்த்துக்கொண்டு தெருவில் நடக்கக்கூடாது. சாதாரணமாக அவர் நடந்துவந்திருக்கலாம். அந்த மஞ்சள் வெளிச்சத்தில் அவர் தள்ளாடுவது போல தெரிந்ததோ? இருந்தாலும் கைலியை தூக்கி கட்டிக்கொண்டு அருகில் வந்தபோது, நான் திடீரென நகர்ந்துகொண்டேன். அங்கு சைக்கிள் இருந்திருக்கிறது. நின்றிருந்த சைக்கிள் கீழே விழுந்தபோதுதான், அதனடியில் நாய் தூங்கிக் கொண்டிருந்தது தெரிந்தது. அதற்குள் நான் வேகமாக நடந்துகொண்டிருந்தேன். நாயின் சத்தம் கேட்கிறதா என்ற பதற்றத்தில், சுற்றி இருந்த மொத்த சத்தங்களும் மழுங்கிவிட்டன. கண்களின் ஓரத்தில் படுத்திருந்த நாய் பதறிக்கொண்டிருந்தது. நான் கண்களை இறுக்க மூடிக்கொண்டு நடந்தேன். வேகமாக.

“இந்த வலது திருப்பத்தில் திரும்பவும்” போன், நடந்தது தெரியாமல் சகஜமாக பேசுகிறது. கொஞ்சம்கூட பதற்றமற்ற குரலில், அது அப்படி பேசுவதை நினைத்து நான் அதிர்ந்துபோகிறேன். அதை கையில் இறுக்கமாக பிடித்துக்கோண்டு மேலும் நடக்கிறேன். பகலில் இருப்பது போல, இரவில் இருப்பதில்லை. ஒரு ஊரை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், அதன் பகல் உருவத்தையும் இரவு உருவத்தையும், இரண்டையுமேதான் தெரிந்துகொள்ள வேண்டும். தெருவிலிருந்த எல்லோருக்குமே இரவு பழக்கப்பட்டிருந்தது. ஒருவர், நைட்டியின் மீது துண்டை போர்த்தியபடி மளிக்கைக்கடைக்கு சென்றுகொண்டிருந்தார். பசங்க கூட்டமொன்று, சைக்கிள்களில் உட்கார்ந்தபடி பேசிக்கொண்டிருந்தது. எல்லோருக்குமே அந்த மஞ்சள் வெளிச்சம் சிதறிய இருண்ட சாலை, ஆடியன்ஸ் அறியாத மேடையாக தோன்றவில்லை. எனக்குதான், யாரோ போட்டுக்கொண்டிருக்கும் நாடகத்தினுள் தவறி தொலைந்துவிட்ட பதற்றம். தெரிந்த ஒரு கட்டடமும் தட்டுபடவில்லை. தேடி சென்ற ஸ்கூல், கடைசி வரை தென்படவில்லை. ஆனால், நான் எப்படியோ சேர வேண்டிய தெருவிற்குள் வந்து சேர்ந்திருந்தேன். அது நாடகம் முடிந்து வீடு செல்லும் பாதை போல, இருளென்றிருந்தது.

அங்கு மரத்தடியின் சின்ன அறையில், இரும்பு கம்பி கதவுக்குள் அம்மன் முழு அலங்காரத்தில் தனியாக அமர்ந்திருந்தாள். வாசலில் ஒரு நாய் படுத்திருந்தது. நிழல்கள் அடர்ந்திருந்த தெருமுனையில், வீடு டிவி சத்தத்தில் சலித்துப்போயிருந்தது. ஒரே வீட்டிற்குள் நான்கு மனிதர்கள், நாலு அறைகளில் இருந்தார்கள். சாப்பாட்டு நேரம் கடந்துவிட்டிருந்தது. குழாய் தண்ணீர் சத்தங்களும், பாத்திரங்கள் தம் இடங்களுக்கு செல்லும் கணகணப்புகளும், கதவுகள் பூட்டப்படும் சத்தங்களும், வீடு சொக்கிக்கொண்டிருந்தது. வரிசையாக எல்லோருக்கும் விரிக்கப்பட்டிருந்த படுக்கைகளில், கடைசியாக படுத்துக்கொண்டேன்.

காலை, அலாரத்தின் சத்தம். நாயின் ஊளையென விழித்துக்கொண்டேன்.

குடும்ப ஃபோட்டோ

சிக்கந்தர்வாசி

அப்பாவுக்கு அப்பொழுது இளவயதாக இருந்தாலும்
கசங்கிய புகைப்படத்தினால் நெற்றியில் சுருக்கங்கள்
எதிர்காலத்தை பிரதிபலிப்பதுபோல்

பாவாடை தாவணியில் இருக்கும் அக்கா
எதிரியைப் பார்ப்பது போல் காமெராவை முறைக்கிறாள்
இரட்டை ஜடையில் ஒன்று முன்னும் ஒன்று பின்னுமாக இருக்கிறது

நாற்காலியில் சாய்ந்தபடி அரை நிஜாரில்
படியப்படிய வாரிய தலையுடன் நான்
கடைக்கண்ணால் காமெராவைப் பார்க்கிறேன்

எங்களுக்கு பின்னால் ஆணி அடித்து மாட்டிய
டெய்லி காலண்டரில் இருக்கும் கடவுள் யார் என்று
சரியாகத் தெரியவில்லை
(முருகராக இருக்கலாம்)

சீராக ஓடிக்கொண்டிருக்கும் காலத்தை
உறைய வைக்கப் பார்க்கும் காமெராவைப் பார்த்து
நாங்கள் எல்லோரும் உறைந்து நிற்கிறோம்

ஒளிரும் அம்மாவின் கண்கள் மட்டும்
இந்தக் கருப்பு வெள்ளை புகைப்படத்துக்கு
வண்ணம் சேர்க்கின்றன

..

ஒளிப்பட உதவி- imgkid.com

இந்தோனேஷிய இலக்கியத்தை மொழிபெயர்த்தல்

திர்கந்தரா ரெக்சா (Dirgantara Reksa)

“… இலக்கியம் மீதான நேசமில்லையேல், நீங்கள் புத்திசாலி மிருகங்கள் பலர் என்ற நிலையில்தான் இருப்பீர்கள்”
– பிரமோதய ஆனந்த தோயர், பூமி மனுஷியா

ஏப்ரல் 2014ல் இந்தோனேஷியாவின் கல்வி மற்றும் கலாசாரத்துறை துணை அமைச்சர் வியந்து நூர்யந்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட 150 இந்தோனேஷிய இலக்கியப் படைப்புகளை பஹாசா இந்தோனேஷியா மொழியிலிருந்து ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழிகளில் மொழிபெயர்த்து அக்டோபர் 2015ல் நடைபெறவிருக்கும் பிராங்க்பர்ட் புத்தகச் சந்தையில் அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் 1100 கோடி ரூபியாக்களை இந்தோனேஷிய அரசு ஒதுக்கீடு செய்கிறது என்று செய்தார். இது இந்தோனேஷிய மக்களுக்கும் உலக மக்களுக்கும் ஒரு நற்செய்தியாய் அமையும் சாத்தியம் கொண்டிருக்கிறது- ஏனெனில், உலக இலக்கிய சமூகத்தில் இந்தோனேஷிய இலக்கியத்துக்கு என்று ஒரு இடத்தை பெற்றுத் தரும் முன்னெடுப்பு இது, இதன் பயனாக உலக மக்களுக்கு இந்தோனேசிய இலக்கியத்தை ரசித்து வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கவிருக்கிறது.

சர்வதேசச் சந்தையில் இந்தோனேஷிய இலக்கியத்தை எளிதில் அறிமுகப்படுத்திக் கொள்ள முடியாது எனினும் நீண்ட காலமாகவே அது உலக அரங்கில் அங்கீகாரத்தையும் பரிசீலனையையும் பெற்று வந்திருக்கிறது. உதாரணங்களைச் சுட்டுவதானால், 1979ஆம் ஆண்டுக்குப்பின் இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட இந்தோனேஷிய எழுத்தாளர்கள் வருடாந்தர தென்கிழக்கு ஆசிய எழுத்தாளர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்; 1967க்கு பின்னர் இதுவரை முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட இந்தோனேஷிய எழுத்தாளர்கள் ஐயோவாவின் சர்வதேச எழுத்தரங்கில் பங்கேற்றுள்ளனர்; 2011ஆம் ஆண்டு கிராணி பரோக்கா வேர்மொன்ட் ஸ்டூடியோ சென்டரின் அமர்வு எழுத்தாளராக நியமிக்கப்பட்ட முதல் இந்தோனேஷிய எழுத்தாளரானார்; இவை தவிர, இந்தோனேஷியாவின் பிரமோதய ஆனந்த தோயர் இலக்கியத்துக்கான நோபல் விருதுக்கு பலமுறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியில் உள்ளதை வேறொரு மொழிக்கு மாற்றுவது மட்டுமல்ல- அது சிந்தனைகளையும் பண்பாடுகளையும் வரலாற்றையும் புரிதலையும் மானுடம் அனைத்தின் மேன்மைக்காகவும் பகிர்ந்து கொள்ளும் செயல். ஊழல், மனித உரிமை மீறல்கள், சுற்றுச்சூழல் சீரழிவு முதலான்வற்றுக்காக இழிபெயர் கொண்ட தேசமாக இந்தோனேஷிய கருதப்படக்கூடாது. மாறாய், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அது தன் எழுத்தாளர்களுக்கும், இலக்கியத்துக்கும், பண்பாட்டுக்கும் மதிக்கப்பட்டு புரிந்து கொள்ளப்பட வேண்டும். உலகளாவிய உத்வேகமொன்று தற்போது தொடர்ந்து அழுத்தம் தந்து கொண்டிருக்கிறது என்ற சூழலில் இந்தோனேஷிய இலக்கியத்தை மொழிபெயர்ப்பதற்கான தேவை உருவாகியுள்ளது. ஆசியன் பொருளாதார அமைப்பு 2015ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது- அது போட்டியோடு வாய்ப்புகளையும் கொணரவிருக்கிறது, ஒருமைப்பாட்டுடன் பரவலாக்கத்தையும் ஏற்படுத்தவிருக்கிறது- இந்தோனேஷிய படைப்புகளை மொழிபெயர்க்கும் முயற்சிகளுக்கு புதிய ஒரு பொருளாதார கட்டளையை இது பிறப்பிக்கிறது. இவை அனைத்தையும் கருத்தில் கொள்கையில், இந்தோனேஷிய இலக்கியத்துக்கு மொழிபெயர்க்கும் உரிமை உள்ளது என்பது மட்டுமல்ல, அது மொழிபெயர்க்கப்படுவதும் அவசியமாகிறது- ஆசியன் சந்தையில் இந்தோனேஷிய இலக்கியம் தனக்கென்று ஒரு இடத்தை நிலைநிறுத்திக்கொள்ள முடியும் என்பது மட்டுமல்ல, அது பிற தேசங்களின் இலக்கியங்களுக்கு இணையாகவும், ஏன், அவற்றைக் காட்டிலும் சிறப்பாகவும் உணரப்பட்டு, மானுடத்துக்கு தன் பங்களிப்பை அளிக்க இயலும்.

இன்று உலகளாவிய இலக்கியத்தின் வரைபடத்தைப் பார்க்கும்போது அது இனியும் ஐரோப்பிய மையம் கொண்டதாகவும் மேலைப் பண்பாட்டை உயர்வென்று கருத்தும் உள்ளுணர்வால் கட்டமைக்கப்பட்டதாகவும் இல்லை என்பதை அறிகிறோம். கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் பல படைப்புகள் புலம் பெயர்ந்து குடியேறியவர்களால் எழுதப்படுகின்றன, ஆசியா ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்கா முதலான கண்டங்களில் காலனியத்துக்கு உட்பட பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இந்த எழுத்தாளர்கள்.

இலக்கியமும் வரலாற்று அனுபவமும்

இலக்கியம் என்பது அழகியலோ குறியீட்டு மதிப்போ மட்டுமல்ல. எந்த கணத்திலும் எந்த இடத்திலும் அது கூட்டு வரலாற்றுக் கதையாடலின் பகுதியாகவே விளங்குகிறது- மானுடத்தின் பல்வேறு சமூக, அரசியல் அனுபவங்களின் சாட்சியாக இருந்து, ஒரு சின்னமாக காணப்பட்டும் வாசிக்கப்பட்டும் இருப்பதோடல்லாமல், எதிர்காலத்தின் பிரதிபிம்பமாக்வும் இருக்கிறது. இந்தோனேஷிய இலக்கியத்தின் தனித்தன்மை அதன் கலாசார பிரக்ஞையே என்றார் அஜிப் ரோசிடி. உண்மையில் இந்த கலாசார பிரக்ஞை என்பது அரசால் சார்பு கொண்டது; இந்தோனேசிய இலக்கியம் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளும் உலகெங்கும் உள்ள மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு அரசியல் பிரச்சினைகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாதது.

நியோமன் குத்தரத்னா, இந்தோனேசியாவின் காலனிய அனுபவத்தைப் பதிவு செய்யும் பதின்மூன்று நாவல்களை விவாதிக்கிறார். இந்தோனேஷிய மக்கள் மீதான காலனிய தாக்கத்தை இந்த நூல்கள் விரிவாக விவரிக்கின்றன, என்பது மட்டுமல்லாமல் அக்காலத்துக்குரிய சமூக, அரசியல் கூட்டுமனத்தின் இயக்கத்தையும் பதிவு செய்கின்றன: தம் ‘தேசிய அடையாளத்தை’ வரையறுத்து புரிந்து கொள்வதற்கான போராட்டம், சுதந்திரத்துக்குப் பிற்பாடு தேசத்தின் எதிர்காலம் எப்படிப்பட்டதாகை இருக்க வேண்டும் என்ற கேள்விக்கான விடை நோக்கிய தேடல்.

இன்றைய இந்தோனேசிய இலக்கியம் தன் வரலாற்று மூதாதையர்களுக்கு இணையானதாகவே இருக்கிறது; இயற்கைக்கும் மக்களுக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கடி, போராட்டம் மற்றும் மோதல்களின் உச்சங்களும் வீழ்ச்சிகளும், முன்னெப்போதையும் போலவே இப்போதும் மிக முக்கியமாக இருக்கின்றன. சீர்திருத்தம் நோக்கிச் செல்லும் இந்தோனேஷியாவின் சமூகச் சூழலை விளக்கும் நூல்களையும், இன்றைய இந்தோனேஷியாவின் நகர்புற வாழ்வை விவரிக்கும் நூல்களையும் காண முடிகிறது.

நடைமுறைச் சவால்கள்.

இந்தோனேஷிய இலக்கியத்தை மொழிபெயர்ப்பதில் உள்ள மிகப்பெரும் சவாலாகவும் தடையாகவும் உள்ளது எதுவென்று நோக்கிடில், அதன் மக்களின் கலாசார பழக்க வழக்கங்கள்தான் என்று கூற வேண்டும். இலக்கிய படைப்பு ஒன்று அந்நிய மொழியில் மொழிபெயர்க்கப்படுவதற்கு முன், ஆதர்ச உலகில், அது தான் பிறந்த மண்ணில் வாசிக்கப்பட்டு பெருமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் துரதிருஷ்டவசமாக, இந்தோனேஷியாவில் அந்த நிலை இல்லை- இந்தோனேஷிய மக்கள் பலருக்கும் தங்கள் இலக்கியத்தின் கொடை என்னவென்ற உணர்வே இல்லை. இலக்கியம் பெரிய அளவில் ரசிக்கப்படுவதில்லை என்பதற்கான காரணங்களில் ஒன்று இந்தோனேஷிய சமூகங்கள் எழுத்துச் சமூகங்களாக உள்ளதைக் காட்டிலும் வாய்மொழிச் சமூகங்களின் கூறுகள் மேலோங்கிய சமூகங்களாய் இருக்கின்றன என்பதுதான். தலைமுறைகளுக்கு இடையே பண்பாட்டு பரிமாற்றம் வாய்மொழியாகவே நடைபெற்று வருகிறது.

இந்தோனேஷியாவெங்கும் உள்ள பெரும்பாலான புத்தகக்கடைகளில் இந்தோனேஷிய இலக்கியப் படைப்புகளை விற்பதோ வாங்குவதோ கடினமாக இருக்கிறது என்பது மற்றொரு சவால். இந்தோனேஷிய இலக்கிய நூல்களை அதன் வாசகர்கள் பழைய புத்தகக் கடைகளைப் புரட்டிப் போட்டு தேட வேண்டியிருக்கிறது. அதற்குக் காரணம், குறிப்பிட்ட ஒரு எண்ணிக்கையில் விற்கக்கூடிய வாய்ப்பு இருந்தால் மட்டுமே இந்தோனேஷிய புத்தகக் கடைகள் தம் சந்தையில் இலக்கியப் படைப்புகளுக்கு இடம் கொடுக்கின்றன. நல்ல வேளையாக\, இளைய தலைமுறையினர் இதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கின்றனர்- மாற்று புத்தகக் கடைகளைத் திறக்கின்றனர், கலாசார, இலக்கிய நூல்கள் வாசிப்பதற்கு ஏற்ற, சுமூகமானச் சூழல் கொண்ட வாசிப்பிடங்கள் அமைத்து வருகின்றனர்.

இறுதியாகச் சொன்னாலும், மிக முக்கியமான காரணமாக, இந்தோனேஷிய இலக்கியப் படைப்புகள் சர்வதேசச் சந்தையில் எதிர்கொள்ளும் போட்டியைச் சொல்ல வேண்டும். புதிதாய் களமிறங்கியுள்ள காரணத்தால் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தேசங்களின்தம்மை நிறுவிக் கொண்ட தொன்மையான, பெரும்பதிப்பகங்களை இவை எதிர்கொண்டாக வேண்டும். ஆனால் இந்தோனேஷியாவுக்கு சாதகமாக அதன் பறந்து விரிந்த மாபெரும் பண்பாட்டு, சமூகக் கேணி இருக்கிறது. அதன் வரலாறு பல்லாயிரம் ஆண்டு தொன்மை கொண்டது, அதன் களம் பதினேழாயிரத்துக்கும் மேற்பட்ட தீவுகளில் விரிவது- கலாசாரத்தையும் சமூக அமைப்பையும் தொடர்ந்து மறுபுரிதலுக்கு உட்படுத்தி வளர்ச்சி கண்ட சமூகம் இது. கல்வெட்டில் பதிக்கப்பட்ட மாற்றமுடியாத வரலாற்று விசைகளால் மட்டுமல்ல, வாயாங் முதல் தொலைகாட்சி வரையும், மாஜாபாஹித் முதல் நவீன குடியரசு வரையிலும் அரசமைப்பின் பல்வேறு கருவிகளைக் கொண்டு ஆட்சி செய்யப்பட்ட மக்களை வழிநடத்திய, மாறிக் கொண்டேயிருக்கும் அதிகார இயங்குவிசைகளாலும் கட்டமைக்கப்பட்ட சமூகம் இது. இவையனைத்தும் சந்தேகத்துக்கிடமின்றி இலக்கியத்துக்கான உயர்ரக பேசுபொருட்கள்.

நம்பிக்கைச் சாசனம்

இந்தோனேஷிய இலக்கியத்தை மொழிபெயர்ப்பது என்பது வசதிக்கேற்ப செய்துகொள்ளக்கூடிய தேர்வல்ல, அது ஒரு தார்மீக கடமை. எத்தனை இலக்கியப் படைப்புகள் மொழிபெயர்க்கப்படுகின்றனவோ, அந்த அளவுக்கு இந்தப் படைப்புகள் இன்னும் அதிக வாசகர்களைச் சென்று சேரும் வாய்ப்பைப் பெறுகின்றன. இதனால் இந்தோனேஷிய இலக்கியமும் அதன் எழுத்தாளர்களும் மேலும் வளர்ச்சியடையும் வாய்ப்பைப் பெறுகின்றனர். இந்த முயற்சியின் வெற்றியும் தோல்வியும் அரசாங்கம், எழுத்தாளர்கள், வாசகர்கள் மற்றும் பதிப்பாளர்கள் எந்த அளவுக்குச் சிறப்பாக ஒத்துழைக்கின்றனர் என்பதையொட்டி அமையும். எதிர்காலம் குறித்த ஒரு பொதுப் பார்வை இவர்கள் முன்னிற்க வேண்டும், அதில் இவர்கள் உறுதியாய் நிலைத்து இயங்க வேண்டும்: இவர்கள் இந்தோனேஷியாவின் இலக்கியத்தைப் பாதுகாத்து அதற்கு செறிவூட்ட வேண்டும், அப்போதுதான் அது தன்கடந்த காலத்தின் வளமையைக் கையகப்படுத்திக் கொள்ள முடியும், அப்போதுதான் அதன் எதிர்காலம் பிரகாசமாய் இருக்க முடியும்; எல்லாம் முடிந்தபின் பார்க்கும்போது எந்த ஒரு மாபெரும் தேசமும் தன் இலக்கியத்தையும் அதன் படைப்பாளிகளையும் மதித்து பெருமைப்படுத்தியதாகவே இருந்திருக்கிறது என்பதை அறிகிறோம்.

நன்றி- Whiteboard Journal