Author: பதாகை

காதலைச் சொன்னது

என்ன செய்வேன்? என் மோகம் தீர்வது எப்படி?
அந்த முத்தழகியை யார் என்னிடம் அழைத்து வருவார்கள்?

தாமரை போன்ற முக அழகை வரைந்தேன்
அதன் நறுமணத்தை என்னால் வரைய முடியவில்லை
உன் கள்ளூரும் உதடுகளை, அழகியே, நான் வரைந்தேன்
அதன் தீஞ்சுவையை என்னால் வரைய முடியவில்லை

வசீகரிப்பவளே! சொக்கும் உன் கண்களை வரைந்தேனே தவிர,
அவை மிரளுவதை என்னால் வரைய முடியவில்லை
உன் கழுத்தின் மென்கோடுகள் தெரிய வரைந்தேனே தவிர
அதில் எழும் குயிலோசையை என்னால் வரைய முடியவில்லை

இள மங்கையே! நம் கூடலை நாகபந்தமாய் வரைந்தேன்-
ஆனால் பரவசத்துடன் முவ்வகோபாலா வாடா,
என்று ரதிகேளிக்கைக்கு மீண்டும் அழைக்கும்
உன்னை என்னால் வரைய முடியவில்லை.

– தெலுங்கிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது – க்ஷேத்ரையா, 126)

வீடு திரும்பும் வழிகள் – அலெஜாண்ட்ரோ ஜாம்ப்ரா, ஒரு மதிப்பீடு

(அலெஜாண்ட்ரோ ஜாம்ப்ராவின் Ways of Going Home என்ற நாவல் குறித்து கார்டியன் நாளிதழில் மினா ஹாலந்த் எழுதிய மதிப்பீடு)

பினோஷே ஆட்சி குறித்து இசபெல் ஆலண்டே எழுதியிருக்கிறார் என்பதைத் தவிர்த்து உலக அளவில் புகழ்பெற்ற சிலேவிய எழுத்து ஒப்பீட்டளவில் அரிதாகவே காணக் கிடைக்கிறது. ஒரு தேசமாகப் பார்க்கும்போது சிலேவியர்கள் தங்களை அதிகம் வெளிக்காட்டிக் கொள்வதில்லை என்பதை இது பிரதிபலிக்கிறதா? லத்தின் அமெரிக்கர்கள் இப்படிதான் எழுதுவார்கள் என்ற நம் எதிர்பார்ப்புக்கு மாறாக, கடந்தகால வன்முறையின் பின்விளைவாய் சிலேவியர்கள் அமைதியான வார்ப்பாகவே இருக்கின்றனர். 1990ல் அவர் பதவி விலகிய பின்னரும், அந்த முன்னாள் சர்வாதிகாரி பற்றி பல்லாண்டுகளாய் தனி உரையாடல்களில் மட்டுமே பேசப்பட்டு வந்திருக்கின்றது. அதே போல், சிலே வரலாற்றின் இந்த காலகட்டம் குறித்த நாவல்களும் அதிக அளவில் வெளிவரவில்லை. சிலேவின் புதிய தலைமுறை எழுத்தாளர்கள் வரும்வரை இந்த நிலைதான் இருந்திருக்கிறது. அலெஜாண்ட்ரோ ஜாம்ப்ரா இந்தப் புதிய தலைமுறை எழுத்தாளர். (more…)

தவளை இளவரசன்

எஸ். சுரேஷ்

தாமரை இலை மேல் அமைதியாய்
உட்கார்ந்துக் கொண்டிருந்த தவளை
அந்த வழியாக குதிரை மேல் செல்லும்
இளவரசியைப் பார்த்து கத்தியது
இளவரசி அருகில் வந்து தவளைக்கு முத்தமிட
ஓர் இளவரசனாய் மாறியது தவளை
அவனைக் கண்டு திடுக்கிட்ட இளவரசி
“ஐயோ, இவ்வளவு அசிங்கமான இளவரசனை
நான் பார்த்ததில்லை” என்று கூறிவிட்டு
குதிரை மேல் ஏறி அங்கிருந்து பறந்தாள்
இளவரசன் கண்ணில் நீர் மல்க
அவள் சென்ற திசையைப் பார்த்துக் கொண்டிருந்தான்
இதை மரத்தின் மேலிருந்து பார்த்த பாம்பு கூறியது
“நுணலும் தன் வாயால் கெடும்”

வீடு திரும்பும் வழிகள்

(Alejandro Zambra எழுதியுள்ள “Ways of Going Home” என்ற நாவலின் சில பகுதிகள்)

ஹாலில் இருக்கும் புத்தக அலமாரியைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. அது நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. “இங்கே லைப்ரரி இருப்பதால் உன் அம்மா படிக்கத் துவங்கி விட்டாள், நானும் படித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் உனக்கே தெரியும், எனக்கு சினிமா பார்க்கத்தான் பிடிக்கும்,” என்கிறார் அப்பா. அவர் கிளாடியாவைப் பார்ப்பதில்லை, மிகவும் கண்ணியமாக, கவனமாக நடந்து கொள்கிறார்.

மதியப்பொழுது, நிதானமான உரையாடலில் கழிகிறது- சில குறிப்பிட்ட கணங்களில், அது நாங்கள் குடித்துக் கொண்டிருக்கும் pisco sourகளின் ரிதத்திற்கு ஏற்ற வடிவம் எடுத்துக் கொள்கிறது. நாங்கள் கிளம்பவிருக்கும்போது என் அம்மா இறைச்சித் துண்டங்களையும் உருளைக்கிழங்குகளையும் எடுத்து வந்து டின்னர் செய்ய ஆரம்பிக்கிறாள் – மாற்று உணவாக வெஜிடேரியனும் சமைக்கிறாள்.

அம்மாவின் கேள்விக்கு, “நான் வெஜிடேரியன் அல்ல,” என்று கிளாடியா பதில் சொல்கிறாள்.

“இது வித்தியாசமாக இருக்கிறது, என் பிள்ளை எப்போதும் வெஜிடேரியன்களைதான் விரும்பியிருக்கிறான்,” என்கிறாள் அம்மா. எனக்கு கோபம் வருகிறது, ஆனால் கிளாடியா இயல்பாய், நெருக்கமாய்ச் சிரிக்கிறாள். (more…)

கலைக்கப்படும் அமைதி

 நந்தா குமாரன்

சித்தப்பா
பின்னால் எரிந்து கொண்டிருக்கிறார்
Tata Sumo-விற்குள் நான்
தம்பியின் கைகளைப் பற்றியபடி
முன் இருக்கையில் அமர்ந்திருக்கிறேன்
பின் பக்கமிருந்து பாட்டியின்
அழுகுரல் கேட்கிறது
“எம் புள்ளைகள தகப்பனில்லாத
அனாதைகளாக்கிட்டு போயிட்டீங்களே”
Driver கூடப் புலம்புகிறார்
“நீங்க அழுதுட்டீங்க
என்னால உள்ளயும் சொல்ல முடியல
வெளியவும் சொல்ல முடியல சார்”
முந்தின தினம் மருத்துவமனையில்
நிகழ்ந்தவை நினைவிற்கு வருகின்றன
தங்கை Car-இல் இருந்து இறங்குகிறாள்
என்னை நோக்கித் திரும்புகிறாள்
“அண்ணா … அண்ணா …
அப்பாவுக்கு என்ன ஆச்சு அண்ணா …
அண்ணா அப்பா எங்கே அண்ணா …”
ஆறுதலுமில்லாமல் மாறுதலுமில்லாமல் நான்
“இனிமேல அப்பாவுக்கு ஒண்ணும் ஆகாது”
“அண்ணா … அண்ணா … Please … Please …
இப்படியெல்லாம் சொல்லாதீங்க அண்ணா …
ஆண்டவா அப்பாவுக்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாது”
“Office-லையே நேர்மையானவர்னு பேரெடுத்தவருங்க”
“எங்கே போனாலும் நடந்தே சலிப்பாரு”
சித்தியின் தேம்பல் நெஞ்சை அறுக்கிறது
“என் தம்பி கல்யாணத்துல இப்படி ஆகியிருச்சே … ஐயோ …”

‘அமைதியைக் கலைக்காமல் தத்துவத்தை போதிப்பது எப்படி என்பது எனக்குத் தெரியவில்லை’
– ஸ்பினோஸா

உயிரோசை
06.10.2008
Issue No. – 6​

ooOoo

இதுவரை நீங்கள் எழுதிய கவிதைகளை எப்படி பார்க்கிறீர்கள்? இனி எப்படிப்பட்ட சவால்களை எதிர்கொள்ள விரும்புகிறீர்கள்?

இந்தக் கவிதையை விளக்கத் தேவையில்லை. இதன் சோகம் உடனடியாகப் புரிந்துவிடுகிறது. இப்படிப்பட்ட கவிதைகளே விரிந்த வாசகர் பரப்பை உருவாக்குகின்றன.

“-[மைனஸ் ஒன்]1” கவிதைத் தொகுதியில், பகடி, தத்துவம், ஹைக்கூ, விஞ்ஞானப் புனைவு, அதீதக் கற்பனை, படிமம், குறியீடு, முரண் நகை, இருண்மை என பலதரப்பட்ட வடிவங்களை முயற்சித்திருக்கிறேன். லிமரிக் மற்றும் வெண்பாக்கள் தான் அதில் இல்லை. புதிர் தன்மை கொண்ட அரூப வடிவிலான இருண்மைக் கவிதைகளின் வசீகரம் என்னை எப்போதும் கவர்ந்ததாகவே இருக்கிறது. ஆனாலும் எளிமையாக, உடனடிப் புரிதலுடன், நேரடி உரையாடல் வகையிலான கவிதைகளையே இப்போது அதிகம் எழுத விரும்புகிறேன். கவிதையின் அடுத்த கட்டம் என்பது ஒரு நீண்ட கட்டுரைக்கான விஷயம். சுயகழிவிரக்க வார்த்தைகளைத் தவிர்க்க இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.