Author: பதாகை

ஒழுகுநீர் ஆரல் பார்க்கும் –

சோ.சுப்புராஜ்

நம்பிராஜனுக்கு சென்னையில் உள்ள CLC என்ற பிரபலமான கட்டுமான நிறுவனத்திலிருந்து நேர்முகத் தேர்விற்கு அழைப்பு வந்திருந்தது. அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவன் சமீபத்தில் அந்தக் கம்பெனிக்கு வேலைக்கான விண்ணப்பம் எதையும் அனுப்பயிருக்கவில்லை.

நம்பிராஜன் கடந்த மூன்று வருஷங்களுக்கும் மேலாக வேலை இல்லாமல் தான் இருந்தான். அவனுடைய மனைவி சுமித்ரா தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்ததால் அந்த வருமானத்தில் தான் அவர்களின் வீட்டில் உலை கொதித்துக் கொண்டிருந்தது.

இப்போது அதிலும் ஒரு சிக்கல் முளைத்திருக்கிறது. சிக்கல் முளைத்திருக்கும் இடம் சுமித்ராவின் கர்ப்பப் பை. ஆம் அவள் அவர்களின் இரண்டாவது குழந்தையை உண்டாகி இருந்தாள். மருத்துவர் கர்ப்பத்தை உறுதி செய்த நாளில் “இந்தக் குழந்தையைக் கலைச்சுடலாம்ப்பா….” என்றாள் ரகசியக் குரலில் கண் கலங்கியபடி.

”ஏம்மா, நரேனுக்குத் தான் அஞ்சு வயசுக்கும் மேல ஆயிடுச்சுல்ல….”

”நான் கன்சீவ் ஆயிருக்குறது தெரிஞ்சா எங்க ஸ்கூலுல வர்ற ஏப்ரல் மாசத்தோட வேலையிலருந்து நின்னுக்கச் சொல்லீடுவாங்க…..”

”ஏன் அப்படி? உங்க ஸ்கூலுல வேலை பார்த்தா குழந்தை பெத்துக்கக் கூடாதா?”

”ஆமா, வருமானம் வேணுமின்னா குழந்தை பெத்துக்கத்தான் கூடாது….”சொல்லிக் கொண்டிருக்கும் போதே உடைந்து அழத்தொடங்கி விட்டாள் சுமித்ரா. கொஞ்ச நேரத்தில் சுமித்ராவே தெளிந்து சேலைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டு பேசத் தொடங்கினாள். ”நான் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூக்குப் பாடம் நடத்துறேன். பாதி வழியில குழந்தை பெத்துக்கப் போயிட்டன்னா புள்ளைங்கள யாரு அரசாங்க பரீட்சைக்குத் தயார் படுத்துறது….?”

”நீ குழந்தை பெத்துட்டு திரும்பவும் ஸ்கூலுல போயி ஜாயின் பண்றது வரைக்கும் இன்னொரு டீச்சர் போட்டு பாடம் நடத்திக்க மாட்டாங்களா உங்க ஸ்கூலுல….”

”அப்படியெல்லாம் செய்றதுக்கு அவங்க என்ன கல்வி சேவை பண்றதுக்கா ஸ்கூல் நடத்துறாங்க? ஏப்ரலோட என்னை வெளிய அனுப்பிட்டு ஜூன் மாசம் புதுசா டீச்சர் அப்பாயிண்ட் பண்ணீடுவாங்க. அவங்களுக்கு மே மாசச் சம்பளம் மிச்சம். அப்படித்தான் யோசிப்பாங்க….!”

”பெண்களுக்கு ஒன்பது மாசங்களுக்கு சம்பளத்தோட மகப்பேறு விடுப்பு குடுக்கனுமின்னு சட்டம் இருக்கேம்மா….!”என்றான் நம்பிராஜன் அப்பாவியாய்.

”கடுப்பக் கிளப்பாதப்பா. அதெல்லாம் அரசாங்கத்துல வேலை பார்க்குறவங்களுக்கு. எங்கள மாதிரி அத்தக் கூலிகளுக்கு இல்ல….!”

சுமித்ரா சொன்னதிலிருந்து நம்பிராஜனுக்கு தெளிவாய்ப் புரிந்தது. ஒன்று மூன்று மாதங்களுக்குள் அவன் ஏதாவது வேலையில் சேர்ந்தாக வேண்டும். அல்லது சுமித்ராவின் கர்ப்பத்தைக் கலைக்க வேண்டும். நினைக்கும் போதே நெஞ்சிற்குள் வேதனையாக இருந்தது.

நம்பிராஜன் படித்து முடித்ததிலிருந்தே சின்னச் சின்னக் கம்பெனிகளில் பிராஜெக்ட் அடிப்படையில் தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். பிராஜெக்ட் முடிந்ததும் வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள். அப்புறம் வேலை தேடும் படலத்தில் இறங்குவான். இரண்டு மூன்று மாதங்களில் வேலை கிடைக்கும். ஆனால் அதுவும் ஒன்றரை அல்லது இரண்டு வருடங்களுக்குத் தான். மறுபடியும் வேலை இழப்பான்.

ஆனால் அதிகபட்சம் மூன்று நான்கு மாதங்களுக்குள் அடுத்த வேலை கிடைத்துவிடும். ரியல் எஸ்டேட் துறையின் கடுமையான வீழ்ச்சியினாலும் பொருளாதாரத்தின் கன்ணுக்குத் தெரியாத சில பாதக அம்சங்களாலும் இந்த முறைதான் மூன்று வருஷங்களைக் கடந்தும் அவனுக்குத் தோதான வேலை எதுவும் அமையவில்லை.

நம்பிராஜனுக்கு கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே எழுதுகிற கிறுக்கு கொஞ்சம் இருந்தது. வேலை கிடைப்பது இழுத்துக் கொண்டே போகவும் அவன் முழுநேர எழுத்தாளனாக முடிவு செய்து தொடர்ந்து எழுதத் தொடங்கினான். பிரசுரமான கதைகளை எல்லாம் தொகுத்து மூன்று புத்தகங்களாகக் கொண்டு வந்தான்.
மிகச் சரியாக அவன் வேலைக்குப் போயே ஆக வேண்டும் என்கிற சூழலில் CLC கம்பெனியிலிருந்து நேர்முகத் தேர்விற்கு அழைப்பு வந்திருக்கிறது. வேலை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை; தனக்கு எப்படி இண்டர்வியூக்கு அழைப்பு வந்தது என்பதைத் தெரிந்து கொள்வதற்கேனும் நேர்முகத் தேர்வில் போய்க் கலந்து கொள்வது என்று முடிவு செய்து சென்னைக்குக் கிளம்பினான் நம்பிராஜன்.

நேர்முகத் தேர்விற்கு போய்விட்டு மதுரைக்குத் திரும்புகிற வழியில் செங்கல்பட்டில் இறங்கி கலியமூர்த்தி ஸாரைப் பார்த்துப் பேசிவிட்டு அவருடன் ஒருநாள் இருந்து விட்டு அடுத்தநாள் ஊருக்குப் போய்க் கொள்ளலாம் என்று முடிவு செய்து கொண்டு தான் கிளம்பினான்.

கலியமூர்த்தி என்பவர் அவனுடைய வாசகர். அவன் இதுவரை அவரை நேரில் பார்த்தது கூட இல்லை. போனில் தான் பேசி இருக்கிறான். அதுவும் பெரும்பாலும் அவர்தான் தொடர்பு கொள்வார். மணிக்கணக்காக சலிக்காமல் பேசிக் கொண்டே இருப்பார். இவன் ’கிழம் அறுக்கத் தொடங்கி விட்டது….’ என்று மனதுக்குள் நினைத்தபடி எரிச்சலுடன் கேட்டுக் கொண்டிருப்பான்.

சில மாதங்களுக்கு முன்பு தினப்பத்திரிக்கை ஒன்றின் ஞாயிறு இணைப்பு மலரில் நம்பிராஜனின் சிறுகதை ஒன்று பிரசுரமாகி இருந்தது. அந்த சிறுகதையை கொஞ்சம் வித்தியாசமாக கபிலர் எழுதிய ஒழுகுநீர் ஆரல் பார்க்கும் என்னும் குறுந்தொகைப் பாடல் ஒன்றை அடிப்படையாக வைத்து எழுதி இருந்தான்.

வனத்துறையில் அதிகாரியாக இருக்கும் ஒருவர் அவருடைய பொறுப்பில் இருக்கும் வனப்பகுதிக்கு சுள்ளி பொறுக்குவதற்காகவும் தேனெடுப்பதற்காகவும் அவ்வப்போது மூலிகைகளைப் பறிப்பதற்காகவும் வரும் மலைஜாதிப் பெண்ணொருத்தியைக் காதலித்து வனத்தின் இயற்கையான சூழலில் அவளுடன் உடலுறவும் வைத்துக் கொள்கிறார்.
தனக்கு வன அதிகாரியுடன் இருக்கும் காதல் உறவுபற்றி மலை ஜாதிப்பெண் தன்னுடைய தோழியிடம் பிரஸ்தாபிக்கிறாள். அதைக்கேட்ட தோழியோ அவளிடம் மோசம் போயிட்டியேடி. அவர் பெரிய அதிகாரியாக உயர்ந்த இடத்தில் இருப்பவர். அவர் உன்னை ஏமாற்றிப் போய்விட்டால் என்ன செய்வாய்? உன்னுடைய உறவை எதைச்சொல்லி நிரூபிப்பாய்? என்று ஆற்றாமையில் புலம்புகிறாள். ஆனால் மலைஜாதிப் பெண்ணோ அவர் என்னுடன் காதல் உறவில் இருந்ததை பார்த்த சாட்சிகள் யாருமில்லை தான். அவர் என்னை ஏமாற்றிப் போய் விட்டால் நான் ஏதும் செய்ய முடியாது தான். ஆனால் வனத்தில் இருந்த ஒவ்வொரு மரமும் பசுமையான செடிகொடிகளும் ஓடையில் சலசலத்து ஓடும் நீரும் அதனுள் துள்ளி விளையாடிய மீனும் ஓடைக்கரையில் இருந்த நாணலும் பசிய புல் தாவரங்கள் பலவும் நாங்கள் காதல் உறவில் களித்திருந்த காட்சிகளைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தன என்று பத்தாம்பசலியாகப் பதில் சொல்கிறாள். தோழியோ இப்படியா ஒருத்தி அசடா இருப்பாள் என்று வேதனைப்படுகிறாள். அவள் பயந்தபடியே சில மாதங்களுக்கு அப்புறம் வனத்துறை அலுவலருக்கு இடம் மாறுதல் உத்தரவு வருகிறது. அதைப்பற்றி மலைஜாதிப் பெண்ணிடம் ஏதும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பிப் போய்விடுகிறார். மலைஜாதிப் பெண்ணோ வனத்தில் அவர்களின் உறவிற்கு சாட்சியாக நின்றிருந்த மரம் செடி கொடிகளிடமும் ஓடைத் தண்ணீரில் துள்ளி விளையாடும் மீன்களிடமும் பேசியபடி பைத்தியமாக அலைவதாய்க் கதை முடிகிறது.

எப்போதுமே சிறுகதையோ கவிதையோ பிரசுரமானால் படைப்பை விமர்சித்து பத்திரிக்கை அலுவலகத்திற்கு வரும் வாசகர் கடிதங்களை எல்லாம் ஒளிநகல் எடுத்து அனுப்பி வைப்பார்க்கள். சமீபத்தில் பிரசுரமான சிறுகதைக்கு வந்த வாசகர் கடிதங்களில் ஒரு கடிதம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. செங்கல்பட்டிலிருந்து கலியமூர்த்தி என்பவர் எழுதி இருந்தார்.

நம்பிராஜன் எழுதியிருந்த சிறுகதை தன்னுடைய பால்யத்தைக் கிளறி விட்டுவிட்டதாகவும் கதை எழுதிய எழுத்தாளரை சந்தித்தே ஆக வேண்டுமென்றும் எழுதி இருந்தார். அவர் எழுதி இருந்ததை பொருட்படுத்தாத நம்பிராஜன் வழக்கம் போல் தனக்கு வந்திருக்கும் வாசகர் கடிதங்கள் ஒவ்வொன்றிற்கும் போஸ்ட் கார்டில் நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதினான்.

கடிதம் எழுதிய மூன்றாவது நாள் கலியமூர்த்தி நம்பிராஜனை அலைபேசியில் அழைத்தார். ”நீங்கள் எழுதி இருக்கும் கதையை உங்களுக்கு யார் சொன்னது?” என்று எடுத்த எடுப்பிலேயே கேட்டார்.

நம்பிராஜன் அது தன்னுடைய கற்பனையில் உருவான கதைதான் என்று எவ்வளவோ சொல்லியும் அவர் நம்பவில்லை. திரும்பத் திரும்ப அந்தக் கதையை உங்களுக்கு யார் சொன்னது என்றே கேட்டுக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அது தன்னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த கதை என்றும் கதையில் வரும் வனத்துறை அதிகாரி தான் தான் என்றும் சொல்லி அழுது விட்டார்.

பால்யத்தில் தான் மலைஜாதிப் பெண் ஒருத்தியிடம் அவளின் ஏழ்மையைப் பயன்படுத்திக் கொண்டு, அவளைக் காதலிப்பதாய் பாவணை பண்ணி அவளை சீரழித்துவிட்டு அதைப்பற்றி எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லாமல் அங்கிருந்து மாற்றல் வாங்கிக் கொண்டு போய் விட்டதாகவும் இந்தக் கதையை வாசித்தபின்பு தான் எவ்வளவு பெரிய பாபத்தை செய்து விட்டோம் என்றே உறுத்தியதாகவும், அதற்கு பிராயச்சித்தம் செய்ய வேண்டுமென்றும் அழுதார்.

உங்களுக்கு நீங்கள் எழுதியிருக்கும் கதையைச் சொன்னவர் யார் என்று தயவு செய்து சொல்லுங்கள் என்றார் மறுபடியும் . நம்பிராஜனும் யோசித்துப் பார்த்தான். இந்தக் கதைக்கான கரு தன்னுடைய மனதில் எப்பொழுது விழுந்தது?துல்லியமாய் ஞாபகமில்லை. காலத்தின் புகைபடிந்த சித்திரம் போல் இலேசாய்த் துலங்கியது.

அப்போது அவனுக்கு பதினைந்து அல்லது பதினாறு வயதிருக்கும். அவன் கதைகள் வாசிக்கத் தொடங்கி இருந்தான். ஆனால் எழுதுகிற ஆசைகூட முளைவிடவில்லை அப்போதெல்லாம். அம்மாவுடன் மலைகளிலும் காடுகளிலும் அலைந்து விளையாடிக் கொண்டிருந்த ஏதோ ஒரு நாளில் அம்மாவின் மனதில் சந்தோஷமோ அல்லது அதீத வருத்தமோ கவிந்த ஒரு தருணத்தில் அம்மா தான் அவனுக்கு இந்தக் கதையைச் சொன்னது போல் ஞாபகம் இருந்தது.

ஆனால் இப்போது யோசிக்கும் போது அது அவ்வளவு நிச்சயமாகவும் தெரியவில்லை. அவன் எழுதியிருக்கும் கதையில் அம்மா சொன்னது எந்த அளவிற்கு பதிவாகி இருக்கிறது என்பதிலும் குழப்பமே மிஞ்சியது. பலவாறு யோசித்து நம்பிராஜனும் அந்த நேரத்தில் மனதில் தோன்றியவாறு என்னுடைய அம்மாதான் அவளின் தோழியின் வாழ்க்கையில் நடந்ததாக சொன்ன கதையைத் தான் கற்பனை கலந்து எழுதியதாகச் சொன்னான்.

“உங்களின் அம்மாவின் தோழி இப்பொழுது எங்கிருக்கிறார்கள்?” என்றார் படபடப்புடன்.

அம்மாவின் தோழி பற்றி தனக்கு தகவல் ஏதும் தெரியாது என்றும் கதையைச் சொன்ன அம்மா இப்போது உயிரோடு இல்லை என்றும் சொல்லவும் நல்ல ஆத்மாக்களை ஆண்டவன் சீக்கிரம் தன்னிடம் அழைத்துக் கொள்கிறார்; என்னை மாதிரியான பாப ஆத்மாக்களை வாழ்ந்து துன்பப்பட வைத்து விடுகிறார் என்றார் கனிந்த குரலில்.

அதற்கப்புறம் அடிக்கடி போனில் பேசத் தொடங்கினார். இலக்கியம், தத்துவம், வரலாறு என்று கலந்து கட்டிப் பேசிக் கொண்டிருப்பார். பெரிய அறிவாளி என்பதும், நிறைய வாசிக்கிறவர் என்பதும் அவருடைய பேச்சில் வெளிப்படும். பல சமயங்களில் அவர் என்ன பேசுகிறார் என்பது நம்பிராஜனுக்கே புரியாமல் வெறுமனே காது கொடுத்துக் கொண்டிருப்பான்.

கலியமூர்த்தி எழுபத்தைந்து வயது கடந்த முதியவர். அவருடைய மனைவி ஐந்து வருடங்களுக்கு முன்பு தவறி விட்டார். அவர்களுக்கு ஒரே பையன். அமெரிக்காவில் மனைவி, குழந்தைகளுடன் வசிக்கிறான். அம்மாவின் மரணத்திற்கு அவசர அவசரமாக வந்து போனவன் அதற்கப்புறம் எட்டியும் பார்க்கவில்லை.

செங்கல்பட்டில் இருப்பது சொந்தவீடு. இவரே சமையல் செய்து கொள்கிறார். வீட்டு வேலைகளுக்கும் தேவையான சாமான்கள் வாங்கி வருவதற்கும் ஒரு வயதான பெண்ணை வேலைக்கும் வைத்திருக்கிறார்.

கலியமூர்த்தியின் குற்ற உணர்ச்சியும் தனிமையும் தான் அவரை நம்பிராஜனிடம் அதிகமாகப் பேச வைக்கிறது என்று அவன் புரிந்து கொண்டதால், அவர் பேசுவதை மனசுக்குள் எழும் எரிச்சலையும் மீறி சகித்துக் கொள்ளத் தொடங்கினான்.

அலைபேசி உரையாடல்களில் நம்பிராஜனைப் பற்றியும் அவன் குடும்பம் பற்றியும் அக்கறையாக விசாரிப்பார். ஒருசமயம் அவன் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக வேலைக்குப் போகாமல் முழுநேர எழுத்தாளனாக இயங்கிக் கொண்டிருப்பதை அறிந்ததும் , ”உங்களுக்கு உட்கார்ந்து அழிக்கிறதுக்கு பூர்வீக சொத்து நிறைய இருக்கோ….?” என்று சிரித்துக் கொண்டே விசாரித்தார்.

”அதெல்லாம் ஒன்னும் இல்லை ஸார்…,”என்று நம்பிராஜன் சொல்லவும், “முதல்ல வயித்துப் பாட்டுக்கு வழிபண்ணிக்கிட்டு ஒழிஞ்ச நேரத்துல இலக்கியம் பண்ணுங்க ஸார் போதும்….” என்றார் கோபமாய்.

“எழுத்தை நம்பி வாழ்றதுங்குறது தற்கொலைக்குச் சமமானது ஸார். பாரதியவே பட்டினி போட்டுக் கொன்ன சமூகம் நம்மளோடது ஸார்….” என்றும் அலுத்துக் கொண்டார்.

”சுஜாதா எவ்வளவு எழுதுனார். ஒரு கட்டத்துல ஒரே சமயத்துல எல்லா வார இதழ்கள்லயும் அவரோட தொடர்கதைகள் வந்துச்சு. அப்படி எழுதித் தள்ளியும் கடைசி காலத்துல அவரோட மருத்துவ செலவுகள சினிமாக்காரர்கள் தான் பார்க்க வேண்டி இருந்துச்சு. அவரோட மனைவி கூட ஒரு பேட்டியில நாங்க அவ்வளவு வசதியா வாழலைன்னு சொல்லி இருந்தாங்களே….! இத்தனைக்கும் அவர் வேலைய விடாமலே தான் எழுதிக் குவிச்சார்….”

”சமீபத்துல இறந்து போன எழுத்தாளர் பிரபஞ்சன் கூட ஒரு பேட்டியில சொல்லி இருந்தத வாசிச்சீங்களா? ’தினசரி ரெண்டுவேளை உணவுக்கு வருமானம் வந்திருந்தால் இன்னும் நெறைய நல்ல படைப்புகளத் தந்திருப்பேன்னு….’ சொல்லி நம்ம சமூகத்தோட நடுமண்டையில நச்சுன்னு போட்டுட்டுப் போய்ச் சேர்ந்துட்டார். அதனால கொஞ்சமும் தாமதிக்காமல் உடனேயே ஏதாச்சும் வேலையில போய்ச் சேருங்கஸார்….”என்று அக்கறையாகக் கடிந்து கொண்டார் கலியமூர்த்தி.

”வேலை தேடிக்கிட்டுத் தான் ஸார் இருக்கேன். ஒன்னும் சரியா அமைய மாட்டேங்குது….”

”சிவில் இஞ்சினியரிங் படிச்சு பத்துப் பதினைஞ்சு வருஷத்துக்கு மேல அனுபவமிருக்கிற உங்களுக்கே வேலை கிடைக்கலையா? ஆச்சர்யமாத்தான் இருக்கு ஸார்…” என்றவர், “மனசைத் தளர விடாமத் தொடர்ந்து முயற்சி பண்ணுங்க ஸார்; கண்டிப்பா வேலை கிடைக்கும்….” என்று நம்பிக்கை ஊட்டினார்.

ஒருநாள் நம்பிராஜன் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த போது கலியமூர்த்தியிடமிருந்து அழைப்பு வந்தது. நேரம் பார்த்தான். அதிகாலை மூன்று மணியாகி சில நிமிடங்களே கடந்திருந்தது. பதறிப்போய் பச்சையை அழுத்திப் பேசினான். “சொல்லுங்க ஸார்…..”

”அகால வேளையில உங்களத் தொந்தரவு பண்ணீட்டேன். மன்னிச்சுக்குங்க. மனசு ரொம்பவும் பாரமாவும் ஏதோ இனந்தெரியாத பயமாவும் இருக்கிறதாலோ என்னவோ தூக்கமே வரல. உங்ககிட்டப் பேசிக்கிட்டு இருந்தால் மனசு கொஞ்சம் லேசாகும். அதான் சட்டுன்னு யோசிக்காமக் கூப்பிட்டுட்டேன்….”

”அதெல்லாம் பரவாயில்ல ஸார். எதுவும் பிரச்னையா ஸார்….?”

”என்னோட முதுமையும் குற்ற உணர்வும் தான் பிரச்னை. இப்பல்லாம் நீரோடையையும் அதில் விளையாடும் மீன்களையும் பச்சைத் தாவரங்களையும் சாதாரணமாக் கடந்து போக முடியவில்லை என்னால். நீங்க உங்க கதையில எழுதி இருக்கிற சம்பவங்களும் நான் ஏமாற்றி ஓடிவந்த மலைஜாதிப் பொண்ணும் ஞாபகத்தில் வந்து என்னை வதைக்கின்றன.….” என்றவர் அதிகாலை நான்கு மணிவரைப் பேசிக் கொண்டிருந்தார். மேலும் கடவுள், மரணம், மானிட வாழ்வு என்று என்னன்னவோ தத்துவங்கள் எல்லாம் பேசிக் கொண்டிருந்தார். நம்பிராஜனும் அலைபேசியைக் காதில் வைத்துக் கொண்டு புரிந்தும் புரியாமலும் அரைத் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தான்.

அடுத்த நாள் பகலில் ”நான் கும்பகோணத்துல இருக்கிற ஒரு முதியோர் இல்லத்துல போய்ச் சேர்ந்துடலாம்னு இருக்கேன்…”என்று ஆரம்பித்தார்.

”ஏன் ஸார் திடீர்னு இந்த முடிவு…..”

”எனக்கு வீட்டுவேலைகள் செய்றதுக்கு ஒரு அம்மாவை உதவிக்கு வச்சிருந்தேன்னு சொல்லி இருந்தேன் இல்லியா, ரெண்டு நாளைக்கு முன்னால அவங்க இறந்து போயிட்டாங்க….”

”ஓ… வருத்தமாத் தான் இருக்கு. உங்க உதவிக்கு வேற யாரையாச்சும் வச்சுக்கலாமே ஸார். இல்லைன்னா உங்க பையன் தான் அமெரிக்காவுக்குக் கூப்டுறார் இல்ல. அவர்கூடப் போயி இருங்களேன்…”

”அவன் கூப்புடுறதெல்லாம் சும்மா ஒப்புக்குச் சப்பாணி. என்னை அவனோ அவனை நானோ ரெண்டு மூனு நாளைக்கு மேலகூட சகிச்சுக்க முடியாது. அப்பன் பையன்ங்குறதாலேயே ஒட்டுதல் வரனும்னு அவசியம் இல்லை ஸார். உங்களுக்குப் புரியும்னு நெனைக்கிறேன்….”

”வேணுமின்னா மதுரைக்கு வந்து என்கூடக் கொஞ்சநாள் இருங்களேன் ஸார்…..”

”உங்க அழைப்புக்கு நன்றி ஸார். ஆனால் நான் யாருக்கும் பாரமா இருக்கிறத விரும்பல. அதனால முதியோர் இல்லத்துல போய் சேருறதுன்னு முடிவு பண்ணீட்டேன் ஸார். ஆனால் என்கிட்ட தமிழ், ஆங்கிலம், தெலுங்குன்னு ஐயாயிரத்துக்கும் மேல புத்தகங்கள் இருக்கு. என்னை புத்தகங்களின் காதலன்னே சொல்ல்லாம். கொஞ்சம் கொஞ்சமா வாங்கிச் சேர்த்த புத்தகங்கள். எல்லாமே அரிதான பொக்கிஷங்கள்.

என்னோட தனிமைக்கும் குற்ற உணர்ச்சிகளுக்கும் புத்தகங்கள் தான் மிகப்பெரிய அவுட்லெட். ஆனால் என் பையனுக்கு புத்தக வாசணையே ஆகாது. அவன் இதையெல்லாம் பாதுகாப்பான்ங்குறதுல எனக்குக் கொஞ்சமும் நம்பிக்கை இல்ல. நான் செத்துப் போனதும் அவன் இதையெல்லாம் என்னோட சிதையிலேயே போட்டு விறகுச் செலவு மிச்சமின்னு எரிச்சிட்டுப் போயிடுவான்னு பயமாவும் இருக்கு. ஆனாலும் என்ன பண்றதுன்னே தெரியல..”

”ஏதாவது லைப்ரேரிக்குக் குடுத்துடுங்களேன் ஸார்…..”

”இல்லை. புத்தகங்களோட அருமை தெரிஞ்ச உங்கள மாதிரியான எழுத்தாளர்களால தான் இதையெல்லாம் காப்பாத்த முடியும். நீங்க எடுத்துக்கிறீங்களா?”

”புத்தகங்கள வீட்டுக்குள்ள அடுக்கீட்டு நாங்க வீதியில போய்த்தான் குடும்பம் நடத்தனும். நாங்க இருக்கிறது ஒண்டுக் குடித்தன வாடகை வீடு. வீடு மாத்துறப்பல்லாம் புத்தகங்கள் பெரிய சுமையா இருக்கும் ஸார்….”

”அப்ப சரி. நான் வேற ஏற்பாடு பண்ணிக்கிறேன். நான் முதியோர் இல்லத்துக்குப் போறதுக்கு முன்னால உங்கள ஒருமுறை சந்திக்க முடிஞ்சா சந்தோஷப்படுவேன். நான் வேணா மதுரைக்கு வரட்டுமா ஸார்…..?”

”வயசான காலத்துல நீங்க வந்து சிரமப்பட வேணாம் சார். நானே வர்றேன்….?

நம்பிராஜன் அவனை நேர்முகத் தேர்விற்கு அழைத்திருந்த கம்பெனிக்குப் போனபோது தான் தெரிந்தது. அவன் மட்டுமே நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டிருந்தான் என்பது. அவனுக்கு இன்னும் குழப்பம் அதிகரித்தது.

ஒரு மணி நேரத்திற்கு தேர்வெழுத வைத்துத் திருத்தி, மூன்று நபர்கள் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டு, கடைசியாக கம்பெனி சேர்மனின் அறைக்குள் அனுப்பி வைத்தார்கள்.

அவர் நம்பிராஜனின் குடும்பப் பின்னணி பற்றி சம்பிரதாயமாக ஒன்றிரண்டு கேள்விகள் கேட்டுவிட்டு, “சரி, ஹெச்.ஆர். டிபார்ட்மெண்ட்ல போய் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வாங்கிக்குங்க. அடுத்தவாரம் ஆபிஸ் வந்து வேலையில சேர்ந்துக்குங்க….” என்றார். நம்பிராஜனுக்கே நம்ப முடியாமல் இருந்தது.

ஆர்டரை வாங்கிக் கொண்டு அவருக்கு நன்றி சொல்வதற்காக மறுபடியும் சேர்மனின் அறைக்குப் போனபோது “உங்களுக்கு கலியமூர்த்தி ஸாரை எப்படித் தெரியும்?”என்றார்.

“அவர் என்னோட வாசகர் ஸார்….”இவர் ஏன் கலியமூர்த்தியைப் பற்றி விசாரிக்கிறார் என்று அவனுக்கு ஆச்சர்யமாக இருந்த்து.

”ஓ…. நீங்கள் எழுத்தாளரா! அவர்தான் நீங்க வேலை இல்லாமக் கஷ்டப்படுறதாகவும், உங்களுக்கு ஏதாச்சும் வேலை போட்டுக் கொடுக்கும் படியும் சொன்னார். அவர் அவ்வளவு சுலபமா யாரையும் பரிந்துரைக்க மாட்டார். நீங்களும் சோடை போகலை; ரொம்ப திறமைசாலியாவே இருக்கீங்க….” என்று பாராட்டினார்.

”அவருக்கும் இந்தக் கம்பெனிக்கும் என்ன ஸார் சம்பந்தம்?” என்றான் நம்பிராஜன் தயங்கியபடி.

”ஒரு சம்பந்தமும் இல்ல; ஒரு காலத்துல எங்க தாத்தாவும் அவரோட நண்பரும் சேர்ந்து பார்ட்னர்ஷிப்ல கன்ஸ்ட்ரக்ஷன் பிஸினஸ் தொடங்குனாங்க. எங்க தாத்தா கடுமையான உழைப்பாளி. ஆனால் கம்பெனியோட கணக்கு வழக்குகளோ நெளிவு சுளிவுகளோ பார்க்கத் தெரியாது. ஒரு கட்டத்துல ஆடிட்டரும் பார்ட்னரும் சேர்ந்துக்கிட்டு கம்பெனி நஷ்டத்துல இருக்குன்னு சொல்லி தாத்தாவைக் கழட்டி உட்டுட்டாங்க. அப்பத் தாத்தா பிழைக்குறதுக்கு வழி இல்லாம நடுதெருவுல நின்னுருக்கார். தாத்தாவுக்கும் சொந்த ஊர் செங்கல்பட்டு தான். அவர் திசை தெரியாமத் தடுமாறிக்கிட்டு இருந்தப்ப கலியமூர்த்தி சார்தான் அவரோட வீட்ட அடமானம் வச்சு பணம் வாங்கிக் குடுத்து இந்தக் கம்பெனியத் தொடங்க உதவினார்….”

நம்பிராஜனுக்கும் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது

நம்பிராஜன் நேர்முகத்தேர்வு முடிந்து கலியமூர்த்தியைத் தேடிப்போனபோது வீடு திறந்திருந்தது. அழைப்பு மணிக்கும் குரலுக்கும் யாரும் வராததால் உள்ளே போனான். வரவேற்பரையில் ஈஸிச்சேரில் சாய்ந்தபடி ஒரு முதியவர் தூங்கிக் கொண்டிருந்தார். அவர் மார்பில் விரிக்கப்பட்டிருந்த புத்தகம் ஒன்று கவிழ்ந்து கிடந்தது.

அவர் கலியமூர்த்தியாகத் தான் இருக்க வேண்டும் என்று நம்பிராஜனுக்குத் தோன்றியது. இலேசாய் அவருடைய கையைத் தொடவும் விழித்துக் கொண்டார். நம்பிராஜன் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டதும் மிகவும் சந்தோஷப்பட்டார். அவரின் மூலம் தான் தனக்கு வேலை கிடைத்திருக்கிறது என்பதைக் குறிப்பிட்டு நன்றி சொன்னபோது, “நான் ஒண்ணுமே பண்ணல; அவங்களோட கம்பெனிக்கு உங்களை மாதிரியான நல்ல இன்ஜினியர அடையாளம் காண்பித்துக் கொடுத்தேன் அவ்வளவு தான்…” என்றார்.

அவருடைய வீட்டின் மூன்று அறைகளில் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களைக் காண்பித்தார். சலிக்காமல் பேசிக் கொண்டிருந்தார்.

தூங்கப் போகும்போது, பேண்ட் மற்றும் சட்டைப் பைகளில் இருந்தவற்றை எல்லாம் எடுத்து டேபிளில் வைக்கப் போனபோது நம்பிராஜனின் பர்ஸ் தவறி கீழே விழுந்ததில் அது திறந்து கொண்டது. அதில் இருந்த போட்டோவை பார்த்ததும், கலியமூர்த்தி பர்ஸை வாங்கி, “இது யாரு ஸார்…?” என்றார்.

”எங்க அம்மா ஸார்…..” என்றான் நம்பிராஜன். போட்டோவைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த கலியமூர்த்தியின் கண்களிலிருந்து தாரைதாரையாக கண்ணீர் பொங்கி வழியத் தொடங்கியது. அதற்கப்புறம் அவர் எதுவும் பேசவில்லை. தூங்கப் போய் விட்டார்.

அடுத்தநாள் அதிகாலையில் நம்பிராஜன் ஊருக்குப் போவதற்கு முன்பு கலியமூர்த்தி ஸாரிடம் சொல்லிக் கொண்டு போகலாம் என்று அவருடைய அறைக்குப் போய் அவரை எழுப்புவதற்காக தொட்டபோது உடம்பு சில்லிட்டுக் கிடந்தது. மனசுக்குள் அலறி ஆம்புலன்ஸிற்குப் போன் பண்ணி அவர்கள் வந்து பார்த்துவிட்டு கலியமூர்த்தி இறந்து நீண்டநேரமாகி விட்டது என்றார்கள். இரவு ஏதோ மன அழுத்தத்தில் இதயவலி வந்து சர்க்கரை நோய் இருந்ததால் வலியே தெரியாமல் தூக்கத்திலேயே உயிர் பிரிந்திருக்கிறது என்றும் சொல்லப்பட்டது.

கலியமூர்த்தியின் மகன் அப்பாவின் இறுதிச் சடங்குகள் செய்ய அமெரிக்காவிலிருந்து குடும்பத்தோடு வந்திருந்தான். “அப்பாவுக்குப் புத்தகங்கள்னா உயிர் ஸார். அவர் வாங்கி சேர்த்து வச்சிருக்கிற புத்தகங்களத்தான் என்ன பண்றதுன்னே தெரியல…” என்று வருத்தத்தோடு சொன்னான்.

”இதே வீட்ல கலியமூர்த்தி நினைவு நூலகம்னு தொடங்கி பொதுமக்கள் நூல்களப் படிக்க வசதி பண்ணீடுங்க. நானும் அப்பப்ப வந்து பார்த்துக்கிறேன்….” என்றான் நம்பிராஜன்.

”நல்ல யோசணை தான் ஸார். ரெண்டு நூலகர்கள வேணுமின்னாலும் வேலைக்குப் போட்டுடறேன். உங்களப் பத்தி அப்பா போன்ல சொல்லி இருக்கிறார். நீங்க பத்துப் பதினைஞ்சு நாளைக்கு ஒரு தடவை வந்து பார்த்து தேவைகள எனக்குத் தெரியப்படுத்துனா அங்கருந்தே செஞ்சு குடுத்துடுவேன். நீங்க நிச்சயமாப் பார்த்துக்குவீங்களா?”

”கலியமூர்த்தி ஸார் எனக்கும் அப்பா மாதிரித்தான். நூலகத்தைக் கண்டிப்பாகக் கவனித்துக் கொள்கிறேன் நண்பரே….” என்று உறுதி சொன்ன நம்பிராஜனின் கைகளைப் பிரியமாய்ப் பற்றிக் கொண்டான் அவன்.

 

 

கரையும் நிழல்

வைரவன் லெ ரா

‘கன்னியாரில என்ன கூட்டம், சவத்து பயக்களுக்கு பொறுமையே கிடையாது, குண்டிய ஆட்டிட்டு திரியானுவ. செத்தவனுக்கு காரியம் பண்ணவந்தா, கடைசி அவனுகளுக்கு தான் காரியம் பண்ணனும். வரிசையா நூறு இருநூறு பூசாரி சப்பணங்கால் போட்டு உக்காந்து, என்ன எழவு மந்திரத்தையோ சொல்லி.. கையிலே நாலு அரிசி. தாயோளி எண்ணித்தான் கொடுப்பான் போல, எண்ணிப்பாத்தா நாலு அரிசி. நாம உறக்க சிக்குல போய், உள்ளத செஞ்சு. சவத்துமூதி சின்ன குளிரா அடிக்கி, கடல்ல அல அன்னைக்குனு பாத்து நான்தான் ஆளுன்னு எழும்பி வரும். இதுல எங்க! அப்பன, அம்மையை நினைச்சி முங்கி எழும்ப. ஒரு கை தர்பணத்துலயும் இன்னொன்னு அவ அவன் செயினு, வெள்ளி அருணாகைருல இருக்கும். கூதிமவனுகள நினச்சா, சிரிச்சிட்டே இருக்கலாம். நமக்கு பஸ்ஸுக்கு கைல கொஞ்சம், அப்புறம் ஒரு டீ வட, நாலு செய்து பீடி அவ்வளவுதான் கணக்கு. முருகா, எட்டி பூஜை முடிஞ்சா. இவ பூஜைய முடிச்சாதான் நான் பூஜைய ஆரம்பிக்க முடியும். ஒரு குட்டிப்பையன இடுப்புல சொருவி வச்சுருக்கேன். பய குய்யா முய்யானு கத்துகான். எட்டி சீமைராணி அடுப்பங்கரைலியே கிட. என்னாச்சிட்டி, நா போகாண்டாம’.

‘அவியலு அடுப்புல கிடக்கு, ஒரு அடுப்புதானே இருக்கு, பொட்டச்சி என்ன பண்ணுவா. ஒருநாள் லேட்டாய் குடிச்சா. மண்னென்ன மணக்காதோ. கிடையும் பொடைய மூடிட்டு’.

‘இதுகாத்தாண்டி சொன்னனான் எம் பயக்க அப்பவே, நாரோயில் காரி வேண்டாம்னு. நான் கேக்கல.’

அப்பாவின், அம்மாவின் குரல் இரயிலின் சத்தத்தோடு கேட்டுக்கொண்டிருந்தது. எங்கள் வீட்டில் அம்மைவழி, அப்பாவழி அவர்களின் அய்யா , பாட்டா என வீட்டின் மங்களா முழுக்க சுவரையொட்டி நீட்டமாக வாழையிலை போட்டு, பின் பூஜை கழியும், அம்மையின் கையில் முதலில் சாம்பிராணித்தட்டு, அடுத்து சூடத்தட்டு என வரிசையாக இலைகளின் மேலே காட்டி, கடைசியில் தண்ணீர் தெளித்துவிடுவாள். நாங்கள் விருப்பப்பட்ட ஆச்சி தாத்தா இலையில் அமர்ந்துண்போம். நாட்களை நினைத்துக்கொண்டே, மணியைப்பார்த்தேன், ஐந்தரை ஆகிவிட்டது. திருநெல்வேலி தாண்டி கன்னியாகுமரி விரைவுவண்டி சென்றுகொண்டிருக்கிறது. நாளை ஆடி அமாவாசை, இந்த வருடம் அப்பாவுக்கு முதல் வருடம். கண்டிப்பாக வரவேண்டும் என்ற நிர்பந்தம் ஏதுமில்லை, ஆனால் கிளம்பிவிட்டேன். இதில் அவ்வளவு நம்பிக்கை இல்லை.

‘எட்டி லெட்சுமி, ஒ வீட்டுக்காரரு குமார் தியேட்டர் முன்னாடி கிடந்து அவயம் போடுகாரு. உம்பயல எங்க. மக்கா அப்பாவ போய் கூட்டிட்டு வா ல.’,

‘நல்ல நாளு அன்னைக்குமா நிம்மதியா திங்க முடியா, யம்மா குடிகாரனுக்கு கட்டி வச்சு வாழ்க்கைய நாசமா ஆக்கிட்டியே. நீ கட்டி வச்சுட்டு செத்துட்ட, லேய் விஷத்த குடிச்சு செத்துருவோம். நாம யாம்ல சாவணும், அவனை நடைல ஏத்த மாட்டேன் ‘.

‘மக்கா ராத்திரி நேரமாச்சு, அப்பா எங்கயாச்சும் இருக்கானு பாத்துட்டு வால, ரூவாய மட்டும் முருகன்ட்ட கொடுத்து அமிச்சிருக்காரு. மீன் குழம்பு அவருக்கு ரொம்ப பிடித்தம். இங்கன எங்கயாச்சும் குமார் தியேட்டர் கிட்டயோ, சாத்தாங்கோயில் முன்னாடியே நிப்பாரு. டிவிய அணைச்சுட்டு போய்ட்டு வா என் ராசா’.

‘தெருவுல ஆம்பள இருந்தா வெளிய வால. நெஞ்சுல கை வையுங்களா தாயோளிகளா. அம்மைக்க அண்டைல கிடங்க. கோயில் நடைல கண்ட பயக்க ஒக்காந்தா உனக்கு ஏம்ல மூலம் கடுக்கு. உங்க கோயில் நடைல ஒக்காந்தா, திண்டுல வெண்ணிய ஊத்துவீளோ, இப்போ நா இந்த நடைல ஒண்ணுக்கு அடிக்கேன், இன்னா ஓடத்தண்ணிய நடைல தெளிக்கேன். பன்னீர் அபிஷேகம். எந்த மாடன் வாரான் பாப்போம்.’.

சாராய வாசனை எங்கிருந்தாலும் சட்டென அங்கே நின்றுவிடுவது பழக்கமாகிவிட்டது. அது அப்பாவின் வாசனை. சபரிமலைக்கு மாலை அணியும் மாதம் தவிர மற்றநாள் அப்பா குடிக்காமல் இருந்ததில்லை. உண்மையிலே அப்போதெல்லாம் அப்பாவை அவ்வளவாக பிடிக்காது. நெற்றியில் திருநீர் சாத்தி, கையில் செய்யது பீடியுடன், சட்டை அணியாமல் வெள்ளியில் கோர்த்த சந்தனமாலையை அணிந்த அப்பா வேறொருவராக தெரிவார். தெருவின் முனையில் அவர் நுழையும் போதே வீட்டிற்குள் குரல் கேட்கும். சட்டையில் ரூபாயை சுருட்டி வைத்துக்கொள்வார். போதை தெளியவும், மடக்கில் ருபாய் இருக்காது. அம்மையோ பாலை உண்டு எதுவும் அறியாத பூனைபோல அங்குமிங்கும் நடப்பாள். முறைத்தபடி வெளியே சென்றுவிடுவார்.

கல்லூரி நாட்களில் அப்பாவின் சட்டைப்பாக்கெட்டில் கைவிட்டு பணம் திருடியதெல்லாம் இல்லை. மாறாக பழைய புத்தகப்பையை எதற்காகவோ தேடியதில் கையில் கிடைத்தது ஓல்ட் மங்க் கால்குப்பி. அதற்கு முன்பாகவே ரம் பழக்கப்பட்டாலும் இது அப்பாவின் குப்பி, இருந்ததையோ எடுக்க மனமில்லை. ஒரு வாரம் விட்டு வைத்தேன். வைத்தது அவருக்கு நியாபகமில்லை போலும், பின் வீணாகாமல் நானே குடிக்க வேண்டியதாயிச்சு.

ரயிலில் காற்றின் வேகம் அதிகரிக்க ஆரல்வாய்மொழி வந்ததை அறிந்துகொண்டேன். வெள்ளிக்கோடாய் வேளிமலை வரைந்து வைத்த ஓவியத்தின் சாயலில் இருந்தது. ரயிலிறங்கி வீடு செல்லும் போது வாசற்படி தெளிக்கும் பெண்கள் தெருவில் ஆங்காங்கே நின்றனர். அம்மை கதவை திறந்துபோட்டபடி அடுக்காளையில் நின்றாள். உள்ளே போனதும், வந்தது தெரிய தோளில் இருந்த பையை பட்டென வெளிக்கட்டிலில் போட்டேன். “வந்துட்டியா மக்கா. நைட் தூங்கினியா, கண்ணுலாம் கிடங்குல கிடக்கு, கண்ணம்லாம் ஒட்டி, நேரத்துக்கு திம்பியா” என்றாள் வந்தவள். “எல்லாம் நேரத்துக்கு திங்கேன், வந்ததும் ஏதாச்சும் சொல்லணும், டீய கொண்டா முத” சலிப்புடன் அமர்ந்தேன். அப்பா சிரித்தபடி புகைப்படத்தின் உள்ளிருந்து இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருப்பார்.

அடுத்தநாள் அதிகாலை, கன்னியாகுமரிக்கு அம்மையும் உடன்வந்தாள். நண்பனின் இருசக்கர வாகனத்தை முந்திய இரவே வாங்கிக்கொண்டேன். கோட்டார் கடைவீதியை நெருங்கவும் வண்டிகளின் எண்ணிக்கையும் கூடியது. கன்னியாகுமரியில் வண்டி நிறுத்த ஐம்பது ருபாய் கொடுத்து, சங்கிலித்துறையை நெருங்கவே இருபது நிமிடம் ஆகிவிட்டது. அவ்வளவு கூட்டம், அம்மை வழக்கம் போல கையை இழுத்து, கூட்டத்தில் நுழைந்து எனக்கேற்றார் போல ஒல்லியான பூசாரி முன் நிறுத்த, அவரும் முன்னால் உள்ளவர்களின் எண்ணிக்கையை பார்த்து, “எல்லாரும் சப்பணக்கால் போட்டு உக்காருங்கோ, இன்னா பிடி, இத இதுல போடுங்கோ, யாருக்கு கொடுக்கீலோ அவாளை நினச்சுண்டு, நா சொல்ல சொல்ல போடுங்கோ” அவர் பேசிக்கொண்டே போக, எனக்கு உட்காரவே இடமில்லை, ஒருவழியாய் அமர, கையில் அவர் கொடுத்த அரிசியை எண்ணினேன். அப்பா சொன்னது போல நான்கு அரிசி. எதையெல்லாம் சொல்லி, கையில் கொடுத்து, தும்பு இலையில் போட்டு முடிக்கவும், “கடல்ல போய், திருப்பி போட்டுட்டு ஸ்னானம் பண்ணிட்டு வாங்கோ” என்றார். நானும் கடலை நெருங்க, கூட்டம் என்னை தள்ள, கடலலை காலில் பட “சவம் சின்ன குளிரா குளிருது” என்றபடி முங்கி எழுந்தேன். உடல் முழுக்க பனிக்கட்டியால் தேய்த்துவிட்டது போல குளிர, கூடவே வாடைக்காற்றும் அதன்பங்கிற்கு வீசியது. வெளியே வரவும் அம்மை “அப்பாவை நினைச்சியா மக்கா, தெய்வமா நின்னு உனக்கு எல்லாம் கொடுப்பாரு” கண்களை துடைத்தாள். நானோ குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தேன். “எழவு என்னா குளிரு, முத ஒரு டீய குடிப்போம்” என்று எண்ணியபடியே ஒல்லி பூசாரியை நோக்கி போனேன். அவர் கையில் நூறை கொடுக்க, அவரும் திருநீறை கையில் கொஞ்சமாய் கொடுத்தார், சரியாய் ஒரு ஆள் பூசிக்கொள்ளும் அளவுக்கு.

வீட்டை அடைந்து ஈர உள்ளாடையை மாற்றியதும் தான் நிம்மதி வந்தது. அம்மையோ வழக்கம் போல அடுக்காளைக்குள் போனாள். காலை உணவை உண்டு, வெளியே செல்லவும், அம்மை கூறினாள் “மத்தியானம் வேண்டாம் மக்கா, சாயந்தரமா போல. இன்னைக்கு அவருக்கு முத அம்மாசி. அடிச்சாலும் பிடிச்சாலும் கூட கிடந்தாரு. துணைக்கு இருந்தாரு.” என்றபடியே மறுபடியும் கண்களை துடைத்தாள். ஊருக்கு வந்தாலே மது ஒரு வழக்காமாகிவிட்டது. அதைத்தான் ஜாடையாக சொல்கிறாள் “சரி, இப்போ எதுக்கு. இருக்க வர, அந்த மனுசன ஏசிட்டு, எதுக்கு அழுக”, “அவரத்தான நான் ஏச முடியும். உன்னைய முடியுமா. ராத்திரி ஆச்சுன்னா பட்டி போல வீட்டுக்கு வந்திருவாரு” என்றபடியே அமைதியானாள். மாட்டிய புகைப்படத்தில் இருந்தபடி அப்பா இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தார். வெளியே செல்ல மனமில்லாமல் அமர்ந்தேன்.

அப்பாவை எனக்கு பிடிக்குமா? உண்மையிலே அம்மையை விட, அவரைத்தான் அதிகம் பிடிக்கும். இருக்கும் காலம் வரை, ஊரில் யாருக்கும் பயப்படாமல் மனதில் பட்டதை பேசிய ஒருவர். இன்னார் இவர் என்றெல்லாம் கணக்கில் கொள்வதில்லை, எல்லாருக்கும் ஒரே அளவு மரியாதை. ஆனால் இவரைத்தான் அதிகம் வெறுத்தேன். மதுவின் சுவை அறிந்த நாள் முதல், அவ்வாசனையை நுகரும் பொழுதெல்லாம் மனதில் தோன்றும் இது அப்பாவின் வாசனை. அவருக்கும் ஆடி அமாவாசை மீதெல்லாம் நம்பிக்கை உண்டா? அப்படியெல்லாம் தெரியாது, பின் ஏன் சென்றிருப்பார். ஒருவேளை என்னுடைய இன்றைய மனநிலையில் அவரும் இருந்திருப்பார்.

ஒருவழியாய் பூஜை முடிந்து, அம்மை கையில் இலையோடு வெளியே கா கா என கத்திக்கொண்டிருந்தாள். “இப்போ காக்காவ வந்துதான் அவர் திங்க போறாரு, வாம்மா உள்ள, பசிக்கு”, “அப்பனுக்கு தப்பாம பொறந்திருக்க டே” திட்டியபடியே வந்தாள். அப்பாவுக்கு படைத்த இலையில் அமர்ந்து உண்டேன். பின் நேரமாய் எழுந்த காரணம் மதியம் தூங்கவேண்டியதாகிவிட்டது. மாலை எழுந்து, நண்பர்களோடு மதுவிருந்து. எல்லை இல்லாமல் போக, அப்பாவின் நினைவில் “அப்பாக்கு என்ன பிடிக்கும், ஓல்ட் மங்க். அப்பா, இன்னா வாரேன். ” தள்ளாடியபடியே நடந்தேன். கையில் ஒரு கோப்பையும், கொஞ்சம் தண்ணீருமாய் நடந்தேன். அப்பா இறந்தது ஒருவகையில் விபத்து. ரயில் பாலத்தின் தடுப்புசுவரில் முழுபோதையில் அமர்ந்திருப்பது, சிலநேரம் தூங்குவது அவரது பழக்கம். விதி, அன்றைக்கு பத்தடி கீழே பள்ளத்தில் விழுந்து விட்டார். நேரம் எல்லாம் தெரியாது. அடுத்தநாள் யாரோ பார்க்க விஷயம் தெரியும். அது வேறுகதை.

நடக்க, நடக்க பாதைகள் கீழே இறங்கிக்கொண்டிருந்தது. முன்னாலே ஒரு நிழல், சுற்றியும் பார்த்தேன். யாருமில்லை, “அய்யோ, அப்பா காக்கவா வந்துலா குடிக்கணும். நைட் காக்கா வருமா” என்றெல்லாம் யோசிக்க, நிழல் மட்டும் என் முன்னாலே சென்றது. “அப்பா, நீதானா அது. வாரேன், அம்மைக்கு மண்டைக்கு வழியில்லை. உமக்கு என்ன பிடிக்கும்னு எனக்கு தானே தெரியும். அங்கேயே வாரேன்”, யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறேன், என்னிடம் தான். அதேவிடத்திற்கு வரவும் நிழலும் நின்றது. அவர் விழுந்ததாய் சொன்ன இடத்திலே அமர்ந்தேன், நிழலும் அருகில் வந்தது. குப்பியை திறந்து, கோப்பையில் பாதி ஊற்றி, மீதி தண்ணீரால் நிரப்பினேன். சுற்றியும் யாருமில்லை “அப்பா, செய் இல்ல இல்ல, கா கா கா கா” ஆம் கத்தினேன். எங்கிருந்தோ காகத்தின் கரையும் குரல் கேட்டது, “அப்பா, சீக்கிரம் வா. இல்ல நா குடிச்ருவேன். பாக்கியா. வாப்பா”, ‘வாப்பா, நீ என்ன சாய்ப்பால. அப்பான்னு கூப்டு’ அப்பாவின் குரல் கேட்டது. சட்டென படபடக்கும் ஓசையோடு காகம் ஒன்று முன்னால் அமர்ந்தது. நிழலை தேடினேன். எங்குமேயில்லை. “கா கா கா” என்றபடி, கோப்பையை அதன் முன்னே நகர்த்தினேன்.

காகம் எங்குமே பறக்கவில்லை, “நைட் காக்கா வருமா. அப்பா நீதானா. எப்பப்பா நீ விழுந்த, உனக்கு ஓர்மை இருக்கா. இல்ல எவனோ தள்ளிட்டானா. உனக்கு வலிச்சா. சீக்கிரம் போய்ட்டியேப்பா. அப்பா” நானா அழுவது, நானேதான். காகம் இப்போதும் அங்கேயே நின்றது. இருட்டில் அதன் கண்கள் மின்னியது, ஈரத்தோடு இருப்பது போல தெரிந்தது. என் முன்னே தலையை ஆட்டியபடி வந்தது. கரைய ஆரம்பித்தது. அப்பாவின் வாசனை வீசியது. நான் கோப்பையை இன்னும் அதன் பக்கம் நகர்த்தினேன், என்னை உற்றுநோக்கியபடியே நின்றது, சிலநிமிடம் கோப்பையை வெறித்த காகம், பறந்தபடி கால்களால் கோப்பையை தட்டியபடி அங்கிருந்து பறந்தது. என்ன நடக்கிறது என் முன்னே, பின் மீண்டும் அதே நிழல் வந்தது. அது மெதுவாக நகர்ந்தது. காகத்தை தேடினேன், தென்படவே இல்லை. நிழல் நகரும் திசையிலே சென்றேன். அது என் வீட்டிற்கு சென்றது.

கனம் கூடிய தலை, உடலெல்லாம் வலிக்க, தாகம் வேறு உயிரை எடுத்தது. எழுந்து ஒரு லோட்டா தண்ணீரை குடித்தேன். “நைட் ஆகாரம் வேண்டாமால. வெறும் வயித்துல, சரி நீ எப்போ மெட்ராஸ் போற. உனக்கு இங்க சரிப்படாது. ” அர்ச்சனை கூடிக்கொண்டே இருந்தது. நேற்று நடந்தது நினைவில் வர, இல்லை கனவாக இருக்கும். ஒருவேளை நிஜமாக இருந்தால், அம்மை கொடுத்த டீயை குடித்து வெளியே சென்றேன். அதேவிடம், இப்போதும் யாருமில்லை, கவிழ்ந்தபடி கோப்பையும், ஓல்ட் மங்க் மீதி குப்பியும் அங்கேயே கிடந்தது. அங்கும் இங்கும் பார்த்தேன், எல்லாம் கனவாய் இருக்காதா என யோசிக்க. கரைந்தபடி காகம் ஒன்று பறந்து வந்தது. நான் அமர்ந்தேன், என்னருகில் வந்தது. நேற்று வந்த அதே காகமோ, அதன் கண்களை கண்டேன், அது ஈரமாய் இருந்தது.

நாயிற்கடையேன்

விஜயகுமார்

1

இதோ இப்போது நான் ஒரு கொலை செய்தாக வேண்டும். கொலை என்றவுடன் மனிதக் கொலை என்று எண்ணிவிட வேண்டாம். இது நாய்க் கொலை. ஒரு நாயை போட்டுத்தள்ள வேண்டும்.

இந்த எண்ணம் முதலில் எழும் போது வெறும் சாத்தியமாக மட்டுமே இருந்தது. இப்போது அது உருண்டு திரண்டு ஒரு முடிவாக மாறியுள்ளது. எப்படி கொல்லலாம்? அதிக வன்முறை எனக்கு ஆகாது. அளவான வன்முறை ஆனால் காரியம் ஆகியிருக்க வேண்டும். அதனால் கல், கத்தி, கடப்பாரை லிஸ்டில் இல்லை. விஷம் வைக்கலாம் அல்லது சுருக்கு விடலாம். அந்த நாய்க்கு இருக்கும் வெறியை கணக்கில் கொண்டால் அதுவாக வந்து சுருக்கு மாட்டிக்கொள்ளும் என்ற நம்பிக்கையில்லை. நாயை மட்டை செய்ய எவ்வளவு கேட்பார்கள்? முதலில் என்னிடம் எவ்வளவு இருக்கிறது? பேசாமல் ஒரு வளர்ந்து வரும் ரவுடியை அணுகலாமா? ஹ்ம்ம்.. எல்லை மீறி யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

அப்படியே கொலை செய்துவிட்டால் என்றாலும்கூட சடலத்தை எப்படி மறைப்பது. கார்ப்பரேஷன்க்காரன் கணக்கு வைத்து இருப்பானோ? சடலத்தைப் பல துண்டுகளாக்கி திசைக்கு ஒன்றாக கொண்டு வீசி விட்டால்? அல்லது கொன்றார் பாவம் தின்றால் போச்சு என்பார்கள், நாய்க்கறி எப்படி இருக்கும்? ஒருமுறை சிறுமுகை காட்டிலிருந்து பிடித்துக் கொண்டு வந்த மான் கறியை சாப்பிட்டிருக்கிறேன். நல்ல மொறு மொறுவென்று இருக்கும். ஆட்டுக்கறி அத்துப்படி. அதன் மார்க்கண்டன் சாப்பிட்டால் மார்க்கண்டேயன்.

நாய் க் கொலையை பற்றி மட்டுமே சுற்றி சுற்றி யோசித்துக்கொண்டு இருந்தால் ஏதாவது வழி பிறக்கும். இக்கொலைக்கான காரணங்களே இனி தேவையில்லை. இதைப் பற்றி சிந்திப்பதில் இவ்வளவு சக்தியை வீனடித்துள்ளேன் இனி காரணம் ஒரு கேடா?

தெளிவாய் பார்த்தால் ஒன்று புலப்படும். அதிகம் சிந்திப்பவன் செயல் புரிவதில்லை. செயல்படும்போதே சிந்திப்பவன் மட்டும்தான் செயலைக் கடக்கிறான். சும்மா சிந்திப்பவன் கற்பனையின் மூலமாகவே அந்நிகழ்வை ஆயிரம் முறை நடத்தி பார்த்திருப்பான். அந்தக் கற்பனையே அச்செயலுக்கு நிகரான அகநிறைவு தந்துவிடுகிறது.

இனி சிந்திப்பது வீன். ஆகவே அர்ஜுனா கொலை புரிவாயாக.

2

சமீபமாகத் தான் இந்த வீட்டை சம்பாதித்தேன். சொந்த வீடு. ஓன் ஹவுஸ். வாழ்வில் முதல் முறையாக எனக்கே எனக்கான இடம். எனக்கு மட்டுமே பாத்தியப்பட்டது. நான் ஆட்சி செய்யும் ஸ்தலம். அனைத்து பிரத்தியங்கமும் உணர்ந்த பிரத்தியட்ச உண்மை. இந்த வீட்டுக்காக காதல், உத்தியோகம் என்று பலவற்றை இழந்து உள்ளேன்; பல நாட்கள் பசியில் திரிந்துள்ளேன் என்றாலும் அதன் துயர் இப்போது இல்லை. மொத்தமும் மூன்று அறைகள் மட்டுமே உள்ள இந்த வீடு ஒண்டிக் குடித்தனம் வகைமையில் வரும். என்றாலும் எனக்கு இது மாளிகை. இது வந்த பின்பு தான் நடையில் மிடுக்கு உடலில் நிமிர்வு பேச்சில் தீர்க்கம் வந்து சேர்ந்தது. தீர்க்கம் என்றால் நான் இங்கே இருக்கிறேன் என்னை பொருட்படுத்துங்கள் என்பதுபோல. குத்துவிளக்கு வாங்கியதிலிருந்து சாமி கும்பிடுகிறேன். சாமி கும்பிடுவதால் என்னவோ வீட்டுக்கு வெளியே திருஷ்டி பொம்மை வைத்துள்ளேன். புதிதாக பல வெள்ளை நிற சட்டை வாங்கியுள்ளேன். வெள்ளை நிறத்தில் இவ்வளவு வகைகள் உள்ளது என்பது எனக்கு இப்போதுதான் தெரியும். என்னை அடையாளப்படுத்தும் அனைத்து ஆவணங்களையும் வம்பாடு பட்டாவது வாங்கிவிடவெண்டும். ஒரே விலாசத்தில். இந்த விலாசத்தில். ஏனென்றால் நான் இப்போது ஒரு புள்ளி. சமூகத்தின் ஆள். இங்கே பெரும்புள்ளிகள் பல இருந்தாலும் நானும் ஒரு புள்ளி. இப்போது நான் ஏதாவது ஒரு அசோசியேஷனில் சேரலாம். சேர்ந்த இடத்தில் கருத்து தெரிவிக்கலாம். யாரிடமாவது தைரியமாக கடன் வாங்கலாம். முக்கியமாக எவ்விடத்திலும் அமர்ந்து பேசலாம். இது அனைத்தையும் நான் வீட்டோடு சேர்த்து சம்பாதித்தது. இவ்வுணர்வு எனக்கு பிடித்துள்ளது ஆகையால் இது எதையும் நான் இழந்துவிடக்கூடாது. இழந்துவிடக்கூடாது என்ற எண்ணம் வந்ததிலிருந்து பயம் ஒட்டிக்கொண்டது. யாராவது பிடுங்கிக் கொண்டால்; ஆக்கிரமித்துக் கொண்டால்; உனது கிடையாது போடா என்று விட்டால்? விடப்போவதில்லை விடவே போவதில்லை. எனது அனைத்து சக்தியையும் திரட்டி போராடுவேன் அந்த கொடூரனை அந்த அரக்கனை எதிர்த்து போராடுவேன். இது நான் உருவாக்கியது என்னுடையது. அவனை சும்மா விட மாட்டேன். அவனை முற்றொழித்து என் வீட்டை மீட்டெடுப்பேன். கோர்ட்டுக்கு செல்வேன்; அரசியல் தலைவர்களை நாடுவேன்; ஊடகத்திற்கு செல்வேன்; வீதிக்கு வருவேன்; மக்களைத் திரட்டுவேன். அறம் உள்ளோர் அனைவரும் எனக்காக போராடுவார்கள்.

அன்று அலுவலகம் விட்டு வீடு திரும்பும் போது தான் கவனித்தேன் அந்த நாயை முன் வாசலில் கட்டிப் போட்டு வைத்திருந்தான் அந்த முதல் வீட்டுக்காரன். அதை பார்த்த மாத்திரத்திலேயே திடுக்கிட்டு நின்றேன். எனக்கு மூச்சடைத்து. ஆங்காங்கே வெண்புள்ளிகளுடன் கன்னங்கரேல் என்ற நாய். அந்த வெண்புள்ளிகள் ஏதோ ஒரு தேமல் போல் இருந்தது. எனக்கு பயத்தால் நெஞ்சம் படபடக்க உடல் அதை ஏற்று லேசாக கிடுகிடுவென்று ஆடியது. காம்பவுண்ட் சுவரை ஒட்டியவாறு மெல்லிய நடை எடுத்து வைத்தேன். என் பயத்தை மோப்பம் பிடித்த நாய் சட்டென்று எழும்பி வல்வல் என்று ஆரவாரத்துடன் என் மேல் பாய முற்பட்டது. அதை கட்டி வைத்த சங்கிலி என்னை காப்பாற்றியது. நான் விழுந்தடித்து எகிறி என் வாசல் அருகே வந்து நின்றேன். அது என்னை பார்த்து குரைத்துக் கொண்டே இருந்தது. மடமடவென்று கதவைத்திறந்து உள்ளே பாய்ந்து ஓடினேன். உள்ளே வந்து நெஞ்சு படபடப்பு நின்றபாடில்லை. வெகுநேரம் அன்று அது குரைத்துக் கொண்டே இருந்தது. சத்தம் ஒருவாராக அமுங்கிய போது என் நெஞ்சு சத்தமும் நின்றது. தைரியலட்சுமி வேண்டிக் கொண்டு கதவை ஓசையில்லாமல் திறந்து லேசாக எட்டிப் பார்த்தேன். அது முழு விறைப்புடன் வாசலையே பார்த்துக் கொண்டு நின்றது. என் தலை தட்டுப்பட்டதும் மீண்டும் குரைக்க ஆரம்பித்தது. நான் மீண்டும் பொந்து பதுங்கினேன்.

சற்றும் எதிர்பார்க்காத எதிரி. இதற்கான உருப்படியான மறுமொழி என்று என்னிடம் ஏதுமில்லை. என் உள்ளத்தில் அனைத்து விதமான எதிரிகளுக்கும் அவர்களுக்கு உண்டான மறுமொழியையும் செயல் திட்டத்தையும் நான் ஏற்கனவே வகுத்து வைத்திருந்தேன். இப்படிப்பட்டவர்களுக்கு இவ்வாறு அப்படிப்பட்டவர்களுக்கு அவ்வாறு என்று. ஆனால் இதுவோ நான் சற்றும் எதிர்பார்க்காதது. நான் வாயடைத்து மனமடைத்துப் போயிருந்தேன். உள்ளத்தில் இறுதியில் குழப்பமே மிஞ்சியது. சரி அதன் எஜமானனை கூப்பிட்டு பேசியே ஆகவேண்டும். அதுதான் ஒரே தீர்வு. ஆனால் அவனை முன்பின் நான் பார்த்ததே இல்லை.

நினைக்கையில் பதற்றமாகவும் மலைப்பாகவும் உள்ளது. கொஞ்சம் நெளிவு சுளிவுடன் நடந்துகொண்டால் இவையனைத்தையும் தவிர்க்கலாம். இழப்பதற்கு ஒன்றுமில்லாத போது கருத்து பேசினேன் கை ஓங்கின்னேன். இப்போது வீடு உள்ளது. பையில் கணம் உள்ளது. சூதானமாகத்தான் இருக்கவேண்டும். நான் வரித்துவைத்திருந்த எதிரி வெளுத்த உடல்க்காரன். பணம் படை அதிகாரம் உள்ளவன். அதாவது நான் எதிர்த்து புரட்சி செய்யும் லட்சிய எதிரி.

இரண்டே வீடுள்ள அந்த குறுகிய காம்பவுண்டில் இரண்டாவது வீடு என்னுடையது. முதல் வீட்டு வாசற்படியில் என்னை மறிக்கும் இந்த நாயைக் கட்டிப்பொட்டுள்ளான் உள்ளே உள்ள அந்த நாய். நான் இந்த வீட்டை வாங்கி குடி புகுந்து ஒரு மாதமாகிறது. ஆனால் இந்த ஒரு வாரமாகத்தான் இந்த பிரச்சனை. இதற்கு முன் அந்த நாய் கொல்லைப்புறமாக கட்டியிருந்தது என்பதை நான் அறிவேன். ஒரு சைக்கிளைத் தள்ளிக்கொண்டு மட்டுமே செல்லும் அளவிற்கு உள்ள காம்பவுண்டை முழுதும் மறித்து நிற்கும். சைக்கிளை கேடயம் போல் தடுத்து உள்ளே சென்று விடுவேன் என்றாலும் பெடல் மற்றும் ஹேண்டில் பாரை மென்று சக்கை செய்துவிடும். அன்று என் நல்ல கால் சட்டையை அரை நிஜாராக்கியது. இதற்கு பயந்தே சைக்கிளை வெளியே நிறுத்தி பூட்டிவிட்டு அடுத்த தெருவை சுற்றி வந்து காம்பவுண்டை ஏறி குதித்து உள்ளே வரவேண்டும். சைக்கிளையும் கால் சட்டயையும் இந்த நாய்க்கு காவு கொடுக்க என்னால் முடியாது.

அடுத்து வந்த அநேக நாட்களில் அந்த நாய் முன் வாசலிலேயே நின்றது. அதனால் நான் காம்பவுண்ட் சுவரை குதிப்பது லாவக தேர்ச்சி அடைந்திருந்தேன். ஒரு அதிசய அதிகாலையில் அந்த நாய் முன் வாசலில் காணவில்லை. உடனே சென்று அந்த முதல் வீட்டின் கதவை தட்டினேன். அந்த வீட்டின் கொல்லைப்புறத்தில் இருந்து நாயின் சத்தம் கேட்டது. யாரும் கதவை திறக்காதது மேலும் எரிச்சலூட்டியது. கதவை ஓங்கி ஓங்கி உடைப்பது போல் தட்டினேன். எங்கிருந்தோ என் எண்ணத்திரையில் எனது லட்சிய எதிரியின் உருவம் நிழலாடியது. என் நெஞ்சம் சட்டென்று துணுக்குற்ற போது அந்த கதவு மெலிதாக திறந்தது. உள்ளிருந்து ஒரு நோஞ்சான் ஆசாமி வந்து எட்டிப் பார்த்தான். அவனைப் பார்த்ததும் எனக்கு வீர லட்சுமியின் அருள் இருப்பது தெரிந்தது.

அவன் தூக்கம் தடைபட்டு மயக்கத்தில் இருப்பது போல் இருந்தான். நான் எடுத்த எடுப்பிலேயே, “ஏன்பா உனக்கு அறிவு மயிரே இல்லையா?” என்றேன்.

அவன் இன்னும் குழப்பமாக வெளியே வந்து நின்று கண்களை இடுக்கிக்கொண்டு கதவின் விளிம்பை தாங்கலாக பிடித்து “யாரு” என்று கேட்டான். பல நாட்களாக சவரம் செய்யாத முகத்தில் மூக்கு மட்டுமே இருப்பதுபோல் இருந்தது.

“இப்படி வாசலிலேயே நாய கட்டிப் போட்டா நாங்க எல்லாம் எப்படி அத தாண்டி போறதுங்குற அறிவு இல்லையா?”

“ஓ! நீங்கதான் அந்த பக்கத்து வீட்டுக்கு வந்தவரா”

நான் மல்லுக்கு நிற்பதையே அவன் இன்னும் உள்வாங்கவில்லை, “இங்க பாருடா அடுத்த தடவ உன் நாய இங்க வெளியே பாத்தன்னா அப்புறம் நடக்குறதே வேற”

“கொஞ்சம் மரியாதையா பேசு” அவனும் தயாராகிவிட்டான்.

“முதலில் நான் கேட்டதுக்கு பதில் சொல்லுடா”

“அடா புடான்னா, நான் நாய அவுத்து விட்டுருவேன் பாத்துக்கோ”

“அடிச்சேன்னா மீசை பிச்சிக்கிட்டு போயிடும் ஆமா” அவன் நோஞ்சான் என்பதால் நான் வீரனாய் இருந்தேன்.

“இங்க பாரு எனக்கு யாரோடும் சண்டை போடுற சக்தி இல்லை. நீ பெரிய பலசாலின்னா அதோடவே சண்டை போட்டுக்கோ.” என்றுவிட்டு என் மறுமொழியை கேட்காமலேயே உள்ளே செல்ல எத்தனித்தான்.

நான்,”உன்னையும் அதையும் கார்ப்பரேஷன்க்காரன் அள்ளிட்டு போற மாதிரி செய்யறேன்னா இல்லையான்னு பாருடா”

அவன் கதவை சாத்தியம் சாத்தாமலும் இடுப்பை பிடித்தவாறு கூன் முதுகுடன் உள்ளே சென்றான்.

நான் மேல்மூச்சும் கீழ்மூச்சும் வாங்கியவாறு வெளியே நடையைக் கட்டினேன்.

வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இஸ்திரிக்காரன். “சார், அவன்கிட்ட வெச்சுக்காதீங்க. அவன் மெண்டலு. நாள்பூரா வருசம்பூரா வஞ்சிக்கிட்டே கிடப்பான். நிம்மதியாவே விடமாட்டான். நாங்க யாரும் அவன்கிட்ட வச்சிக்கிறது இல்ல. நிம்மதியாவே விடமாட்டான். இவனமாரி ஆள கம்ளைண்டும் பண்ண முடியாது. எடுத்துக்க மாட்டானுங்க.” என்றான்.

“ஏன்?”

“அதான் சொன்னேனே மெண்டலு”

3
“என்ன பண்ணட்டும்ன்னு நீயே சொல்லு.” சுரேஷிடம் கேட்டேன். அவன் ஆம்புலன்ஸ் டிரைவராக இருக்கிறான். நானும் அவனும் சோற்றுக்கு கஷ்டப்பட்ட காலத்திலிருந்தே நண்பர்கள். பசியுடன் சாலையில் ஒன்றாக அலைந்திருக்கிறோம். என் பசி அறிந்தவன். எனக்கும் அவனுக்கும் பொதுவில் இருப்பது பசி ஒன்றுதான். எந்தக் கருத்தும் ஒத்துப் போகாது. என்றாலும் நண்பர்கள். சந்தித்தால் சாப்பிடுவோம். பசித்தால் சந்திப்போம். பசி பொதுக்காரணம், சாப்பாடு பொதுக்காரியம். இப்போதெல்லாம் காரணமே இல்லையென்றாலும் காரியம் நிகழ்த்த செல்வோம்.

அவன்,”இதுவரைக்கும் என்ன ஒரு நாய் தொறத்துன நியாபகமே இல்லை” என்றான்.

“அந்த நாய்க்கு அப்படி ஒரு ஆக்ரோஷம். நான் அதுகிட்ட புடிங்கிக்கவோ அது என்கிட்டே இருந்து காப்பாத்திக்கவோ அதுகிட்ட அப்படி என்ன இருக்கு.”

“பக்கத்து தெருவுல நெறய பணக்காரனுங்க நாயா வெளிக்கு கூட்டி வருவானுங்க. அதுவெல்லாம் நல்ல கொளுக்குமுள்ளுக்குன்னு அமைதியா இருக்கும்” என்றான்.
நான், “அத சும்மா விட்டு வைக்கக்கூடாது. என் சொந்த வீட்டுக்கு பயந்து பயந்து போக முடியாது. அந்த நாயா கொல்றனோ இல்லையோ அந்த வீட்டுக்காரன போட்டுத்தள்ளனும்.”

நான் சொல்வதை அவன் உள்வாங்கினானா இல்லையா என்று உறுதியாக தெரியவில்லை. அவன் வேறெங்கோ பார்த்துக்கொண்டும் சொல்லிக்கொண்டும் இருந்தான்.

“டேய், நான் சொல்றத கேக்குறியா இல்லையா?” என்று கேட்டேன்.

“சொல்லப்போனா ஆர்டிபிசியல் செலெக்ஷன்ல நாய் மனுசனோட சேர்ந்துதான் பரிணாமம் அடைஞ்சது. மனுஷனும் கொஞ்சம் மாறித்தான் இருக்கான்.”

“என்ன!!!, நான் என்ன சொல்றேன் நீ என்ன சொல்ற”

“அது இல்லடா. நான் கேட்டுக்கிட்டு தான் இருக்கேன்”

“நான், இன்னும் ஒரு வாரம் பாப்பேன். அப்புறம் சத்தமில்லாம சோலிய முடிக்கவேண்டியதுதான்.” நான் எனக்கே சொல்லி தீர்மானித்துக்கொண்டேன்.

“சினவுக் கொள் ஞமலி” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.

நான் “என்ன!!” என்று எரிச்சலுடன் கேட்டேன்

“அது இல்லடா, சும்மா யோசிச்சேன். சங்க இலக்கியத்துல நாய ஞமலி, ஞாளி அப்படின்னு சொல்றாங்க. பக்தி இலக்கியத்துல ஆஊன்னா ‘நான் ஒரு நாயிற்கடையன்’ அப்படின்னு சொல்லிக்கிறானுங்க. உண்மைதான் போல” என்றான்.

நான் கோபமாக எழுந்து கிளம்பினேன்.

“டேய் சாரிடா. நில்லு… நில்லுகிறேன்னுல்ல..”

“பின்ன என்னடா. அவனவன் பிரச்சனை அவனவனுக்கு.”

“சரி அத கொல்றதுதான் ஒரே வழிய?”

“பின்ன என்ன செய்ய சொல்ற?”

நான் உணர்ச்சி வேகத்தில் கத்தும் போதெல்லாம் சுரேஷ் அமைதிக்கு செல்வான். நானும் அடங்கினேன். இருவருமே கொஞ்ச நேரம் பேசிக்கொள்ளவில்லை.

“அதுக்கு இல்லடா.. எதையுமே முதல்ல பகையா பார்க்கக் கூடாது” என்றான்.

“அதுக்காக கடிக்க வர்ற நாய புடிசிச்சு முத்தங்கொஞ்ச முடியாது” மீண்டும் கத்தினேன்.

“சரி நாளைக்கு நான் வர்றேன். வந்து பாக்குறேன்”

“இரு, அந்த நாய்ட்ட உன்ன புடிச்சு தர்றேன். நீ அப்ப பேசு.”

அவன் சிரிக்க நானும் சிரித்தேன். என்னை ஆறுதல் படுத்த கலப்புக்கடைக்கு கூட்டி சென்றான். முதலில் ஆளுக்கு ஆறு இட்டிலி அடுக்கினோம். அப்புறம் இன்னுமொரு ஆறு. அடுத்த ஆறு அவன் தனியாக சென்றான். அவனே காசு கொடுத்தான். சந்தோசமாக இருந்தது. சந்தோஷமோ துக்கமோ சாப்பிடுவோம்.

4

அடுத்தநாள் சுரேஷை வீட்டிற்கு கூட்டிப் போனேன். தூரத்திலிருந்து பார்த்தான். அது அமைதியாக படுத்திருந்தது.

“போட்டாட்ட படுத்து கெடக்கு..”

“என்ன?”

“பசு மாதிரி படுத்து கெடக்குதுன்னு சொன்னேன்”

“பூரா.. நடிப்புடா.. எங்க பக்கத்துல போ பாப்போம்”

“டேய், நான் புஸ்தகம் படிக்கிறவன் கருத்து மட்டும்தான் சொல்வேன். நீ தான் மீதி எல்லாம் பண்ணிக்கோணும்”

நான் ஒரு சிறிய கல்லை எடுத்து அதன் மீது போட்டேன். அது அசைவேதும் இல்லாமல் இருந்தது. “உஸ்… உஸ்…” சோகையாக நிமிர்ந்து பார்த்துவிட்டு தலை கவிழ்ந்து கொண்டது. சுரேஷ் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் என்ன சொல்லுவான் என்று எனக்கு தெரியும்.

அவன்,”இங்க பாரு.. யாரு கிட்டயும்னாலும் எதுனாலும் ஒரு நட்பு வேணும். அதுக்கு ரெண்டு பேர்கிட்ட இருக்க பொது விஷயத்திலிருந்து ஆரம்பிக்கணும். உன் எதிரிக்கும் உனக்கும் ஒரு பொது காரணம் பொது ஆர்வம் இருக்கும். அந்த பொது ஆர்வத்திலிருந்து ஆரம்பிக்கணும். எடுத்த எடுப்பிலேயே சண்டைக்கு நிக்கக் கூடாது.”

“உன்கிட்ட இருக்குற ஒரே ஃபிலாசபி இது தான்.”

“வேலை செய்யுதான்னு பாருடா” என்றான்.

ஒன்றும் சொல்லாமல் இருந்தேன். “

“சரி வா பீஃப் பிரியாணி சாப்பிடலாம். பக்கத்துல இருக்குற ரோட்டு கடை நல்லா இருக்கும்” அவனே கூட்டி சென்றான். பிளேட்டு முப்பது ரூபாய். தொன்னூறு ரூபாய்க்கு ஆர்டர் செய்தோம். இருவரும் சேர்ந்து எழுவது ரூபாய்க்கு போஜனம் செய்தோம். மீதமான இருவது ரூபாயை பார்சல் கட்டி வாங்கிக்கொண்டான் சுரேஷ்.

போகும் வழியில். “இந்தா இத அந்த நாய்க்கு போட்டிரு” என்றான்.

நான் முறைத்துவிட்டு சொன்னேன், “நீ எப்படி என்னை ஃபிரெண்டு புடிச்சியோ அதே மாதிரி நான் அந்த நாய ஃபிரெண்டு புடிக்கணும். அதுதான? ஏன்டா இந்த ரேஞ்சுக்கு என்ன கொண்டு வந்துட்ட.”

“சொல்றதைக் கேளு..இத நாய்க்கு போட்டிரு..”

அதை வாங்கிக்கொண்டு,”சரி இதுல கலக்குறதுக்கு விஷம்?” என்றேன்.

நான் சிரிக்க அவனும் சிரித்தான்.

“பொதுவான விசயத்துல இருந்து ஆரம்பி டா. உனக்கும் பிரியாணி புடிக்கும். எந்த நாயா இருந்தாலும் அதுக்கும் பிரியாணி புடிக்கும்.” என்றான்.

“ஃபிலாசபி ஓகே தான். ஆனா அந்த நாயோட ஓனர் கிட்ட சண்டை போட்டுட்டேன். அவன் பாத்துட்டான்னா?”

“சேம் ஃபிலாசபி தான்.”

“எது இந்த பொதுவா- ன்னு ஆரம்பிக்குமுங்களே அதுவா? நீ ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர் டா.. பிலாசபர் இல்ல.. ” என்றேன். இருவரும் சிரித்துக் கொண்டோம்.

அவனை விட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தேன். தயங்கித் தயங்கி காம்பவுண்டை எட்டிப் பார்த்தேன். வாசம் பிடித்து டக்கென்று எழுந்து நின்றது. அதன் கண்கள் எனக்கு வந்து படையல் இடு என்பது போல் அதிகாரம் இருந்தது. பொட்டலத்தை பிரித்தேன். அதனிடமிருந்து ஏதோ வினோதமான கரகரப்பான உறுமல். என்னை இறைஞ்சுகிறதா அல்லது அதட்டுகிறதா என்று தெரியவில்லை. நாய் பாஷை தெரியாது. பிரித்த பொட்டலத்தை தரையில் வைத்து தள்ளி விட்டேன். அது பாதி சிதறி நாயிடம் போய் நின்றது. நாய் உடனேயே முழுதாக ஈடுபட்டது. நாய்க்காரனது வீடு சாத்தியே தான் இருந்தது. நான் அதை தாண்டி செல்ல வேண்டும். இந்த ஒருமுறை காம்பவுண்டை சுற்றி வந்து பல்டி அடிக்க எனக்கு விருப்பமில்லை. அதுதான் சுங்கம் கட்டியாகிவிட்டதே. மெல்ல சுவர் ஓராமகா அடி எடுத்து வைத்தேன். நாய் லக்லக் என்று விழுங்கிக்கொண்டிருந்தது. அதன் சங்கிலி வளையத்திற்குள் சென்றபொது விழுங்குவதை நிறுத்திவிட்டு தலையை எடுக்காமலே பற்கள் அத்தனையு காண்பித்து உர்ர்ர் என்றது. நான் அசையாமல் நின்றேன். ஏதோ சுமூகம் கண்டவுடன் மீண்டும் போஜனம் செய்ய எத்தனித்தது. நான் மடக்கென்று ஒரே தாவலில் என் கதவை அடைந்தேன். உடல் முழுவதும் நீர் வழிந்திருந்தது. மூச்சு இறுகி மேலும் கீழும் நடனமாடியது. ஆனாலும் ஒரு திருப்தி. நறுவிசாக முடித்துவிட்டு பக்கத்திலிருந்த சிறிய தொட்டியில் சளக் சளக் என்று நீர் குடித்தது. பேய்ப்பசியில் இருந்திருக்கும் போல. முடித்துவிட்டு அங்குமிங்கும் பார்த்தது. திரும்பி என்னை பார்த்தது. அதன் உடல் மொழியில் ஒரு மாற்றம் இருந்தது. ஆனால் என்னவென்று புடிபடவில்லை. அதன் கண்களை சந்திக்காமல் உள்ளே சென்றேன்.

காலையில் தயிர் சாதம் சுங்கம் கட்டிவிட்டு அலுவலகம் சென்றேன். வரும்போது புரோட்டா. மெண்டல் வெளியே நின்றிருந்தான். “இது வெஜிடேரியன். இதுக்கு நான்வெஜ் நீங்கதான் போடறதா” என்றான். “நீ மொதல்ல அதுக்கு எதாச்சியும் வெய்யு. போறவன் வாறவனா வெச்சிக்கிட்டு இருப்பான். இந்த நாபீய எடுத்து வீசு. குடலைப் புரட்டுது.” என்றுவிட்டு மறுமொழிக்கு நிக்காமல் உள்ளே சென்றேன்.

நாய் பாஷை புரிய ஆரம்பித்தது. நாய் என்னை தேர்ந்தெடுத்துக் கொண்டது. பிஸ்கட், காபிபைட், வடை, பண் என்று என் சம்பளத்தில் ஒரு பங்கை கரைத்துக் கொண்டிருந்தேன். என்றாலும் சந்தோஷம்தான். தினமும் காலையில் அதுக்கு ஒரு குட் மார்னிங். நான் இரவு வரும் வரை அது காத்து நிற்கும். இத்தனை தூரம் வந்த பின்னரும் அதை தொடவோ தடவிக்கொடுக்கவோ நான் முனைந்தது இல்லை. என்ன இருந்தாலும் இது மெண்டலுடைய நாய். நான் சோறு வைப்பதால் மெண்டலும் கண்டுகொள்வதில்லை போலும். எப்போதாவது வெளியே வருவான். நான் உள்ளே சென்று விடுவேன்.

உலகத்தார் அனைவரும் நண்பர்கள் ஆகியதுபோல் இருந்தது. எல்லோரையும் புதுசாகப் பார்த்தேன். நேற்றைய என்னை நேற்றோடு விட்டுவிட்டேன். நேற்றைய யாரையும் இன்று இழுத்து வருவதில்லை. ஓரிருமுறை மெண்டலைக் கூட பார்த்து சிரித்தேன். இதெல்லாம் நாயிடம் இருந்து வந்த பழக்கம். அதற்கு பெயர் வைக்க விரும்பினேன். சுவீகாரம் செய்ய வேண்டும். என்னுடைய நாயாக்க வேண்டும். நினைத்துப் பார்த்தேன். நானும் நாயைக் கூட்டிக்கொண்டு நடை செல்வேன். சமூகத்தில் பெரிய ஆள்தான். நாய் கண்காட்சி என்று யோசித்தவுடன் சிரிப்பு வந்தது.

அன்று ஃபீப் பிரியாணி வாங்கிக்கொண்டு சுரேஷயும் அழைத்துக்கொண்டு உற்சாகமாக வந்தேன். வெறும் காம்பவுண்டு எங்களை வரவேற்றது. சங்கிலியையும் காணவில்லை. நெஞ்சு கனத்தது. உலகம் மீண்டும் தன் சுயரூபம் காண்பிக்கிறது. எனக்கு பாத்தியப்பட்டதை எடுத்துக்கொள்ளப் பார்க்கிறது. அவன் கதவைத் தட்டினேன். திறக்கவில்லை. விடாமல் தட்டினேன். இஸ்த்திரிக்காரன் வழக்கம் போல் எட்டிப் பார்த்தான். கொஞ்ச நேரம் விட்டு “என்னடா வேணும் உனக்கு?” என்று கதவைத் திறந்தான். சொல்லின்றி நாக்கு தடுமாறியது. “நாய்…” என்று சுரேஷ் இழுத்தான். “நாயா? எந்த நாய்? அதுவா? அத அவுத்து விட்டுட்டேன். இல்ல வித்துட்டேன். இல்ல அதுவே ஓடிடுச்சு.” என்று சொல்லிவிட்டு மெண்டல் திரும்பினான். நான் “டேய்…” என்று கத்தினேன். அவன் திரும்பியவாறு முதுகை காண்பித்து அப்படியே நின்றான். எனக்கு பேச்சு தடுமாறியது. கொஞ்சம் இறைஞ்சுவது போல “உண்மைய சொல்லு… நான் அதுக்கு மட்டுமா சோறு வாங்கியாந்தேன். உனக்கும் செத்துத் தாண்டா. சத்தியம் பண்ணி சொல்லு. நான் வெச்சுட்டு போன பார்சலை நீ எடுக்கலேன்னு. அந்த நாய் எங்க?” அவன் அப்படியே நின்றான்; பிறகு ஒன்றும் சொல்லாமல் உள்ளே சென்றுவிட்டான். நான் சுரேஷைப் பாத்தேன். எனக்கு அழுகை வந்தது. சுரேஷ் கூடவே இருந்தான்.

புது வீடு வாங்கிய சந்தோசமோ அந்தஸ்து சம்பாதித்த பெருமையோ இல்லாமல் போனது. நான் பழையபடி பதட்டமான ஜீவன் என ஆனேன். “வீட்ல வளர்ந்த நாய் ரோட்டுக்கு போச்சுன்னா பொழைக்காதுடா.” சுரேஷிடம் சொன்னேன். “ரோட்ல இருந்து வந்தவன் நான் சொல்றேன். நாய விட கேவலமான பொழப்பு பொழச்சவன்டா. நாய்க்கும் அது வேண்டாம். நான் கொஞ்சம் முந்தி இருக்கணும். அத நான் வாங்கியிருப்பேன். கைல கால்ல விழுந்தாவது வாங்கி இருப்பேன்.” புலம்பிக் கொண்டே இருந்தேன். அலுவலகம் செல்லாமல் விடுப்பு எடுத்து ஊரையே அலசினேன். மீண்டும் மெண்டலிடம் கேட்க வந்தேன். எவ்வளவு தட்டியும் அவன் திறக்கவில்லை.

மனம் புதுப்புது எதிரிகளை மீண்டும் உருவாக்கியது. வேலை போய்விடுமோ? வீடு கைவிட்டு போகுமோ? மீண்டும் தெருவுக்கு வருவேனா? என்ன வந்தாலும் பிச்சை எடுக்கக் கூடாது. மீண்டும் முடியாது. ச்சே… என்ன நினைப்பு இது. என் ராசியே இது தான். அப்படி அந்த நாயின் மீது பாசம் வைக்க இன்னும் அதன் நிபந்தனை அற்ற அன்பைக் கூட நான் அனுபவிக்கவில்லை. இல்லாத, கைவிட்டுப் போன அனைத்தும் என்னை எப்போதும் ஆட்டிப் படைக்கும். பதட்டம் என் இயல்பு. இயல்புக்கு மீண்டதால் எப்போதும் போல் முரடனாக இருந்தேன். வெள்ளை சட்டை போடுவதில்லை. சாமி அறவே கும்பிடுவதில்லை.

5

நாட்கள் செல்ல செல்ல நாய் இல்லாத வாழ்க்கையும் பழகி இருந்தது. சுரேஷ் அன்று வேறொரு சின்ன நாய் வாங்கி வந்தான். மொசு மொசுவென்று இருந்தது.

“எதுக்குடா இதெல்லாம். இதுவும் ஓடிப் போகும்”

“நம்ம ரெண்டு பேருக்கும் பொதுவா இதை வச்சுக்கலாம். நீ ஒரு வாரம் நான் ஒரு வாரம்”

என்னால் சிரிக்க முடியவில்லை.

சுரேஷ், “இந்த வாரம் நான் வச்சுக்கிறேன். அடுத்த வாரம் உனக்கு. சும்மா காமிக்கலாமுன்னு வந்தேன்” என்றுவிட்டு எடுத்து சென்று விட்டான்.

அந்த ஒரு வாரத்தில் இல்லாத புது நாய் என்னை பீடித்துக் கொண்டது. நானே சென்று அதை தூக்கிக் கொண்டு வந்தேன். பால் பிஸ்கட் தயிர் சாதம். நானும் அதுவே சாப்பிட்டேன். வீடு முழுதும் சென்று அலசியது. சமயல் அறையை நாசம் செய்தது. கால் கையை நக்கும் போது நான் அனுமதித்தேன். என் மூக்கை வாயை நக்க அது உரிமை எடுத்துக்கொண்டது. புது வாழ்க்கை ஆரம்பித்தேன்.மீண்டும் சமுதாயத்தில் ஒரு புள்ளி ஆனேன்.

அன்று ஞாயிற்று கிழமை. தூங்கிக்கொண்டு இருந்தேன். சுரேஷ் போனில் அழைத்தான். “எங்க இருக்க? வெளில என்ன நடக்குதுன்னு பாக்க மாட்டியா? வெளியே வாடா”. ராக்கி கதவைப் பிராண்டிக் கொண்டிருந்தது. கதவைத் திறந்தேன். சுரேஷ் ஆம்புலன்சுடன் நின்றிருந்தான். சொற்பமானவர்கள் தான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். மெண்டலின் உடலை தூக்கிக் கொண்டு சென்றார்கள்.

இஸ்திரிக் காரன் வந்தான்.”யார் துப்புக் கொடுத்தாங்கன்னு தெரில. நீங்களா?” என்றான்.

“இல்லை. நான் இப்போதான் எந்திரிச்சேன். என்னாச்சு.”

“கேசு தாங்காதுன்னு சொல்றாங்க. மெண்டலு அடிக்கடி இப்படி ஆகும். யாரோ ஊர்ல இருந்து வந்து பாத்துட்டு போவாங்க. என்ன ஆச்சுன்னு தெரில. இந்த ஏரியால மெண்டல் இல்லேன்னா சந்தோசப் படறதுக்கு நிறைய ஆள் இருக்காங்க.”

இஸ்த்திரிக்காரன் பேசிக்கொண்டிருக்கும் போதே பாதியில் விட்டுவிட்டு சுரேஷிடம் சென்றேன். அவன் ஆம்புலன்ஸ் எடுக்கும் அவசரத்தில். “என்ன நியூஸ்ன்னு கேட்டு சொல்றேன்” என்றுவிட்டு விறுவிறுவென்று பணியில் இறங்கினான். ஆம்புலன்ஸ் புறப்பட்டு சென்றது.

நான் அந்த பழைய நாயை நினைத்துக் கொண்டேன். மெண்டல் மீண்டும் வருவதற்குள். அலுவலக நண்பர்கள் அனைவரையுமே அல்லது ஒவ்வொருவராக வீட்டுக்கு அழைத்து வர வேண்டும். தரகரையும் வரச் சொல்ல வேண்டும்.

வந்தவர்கள் அனைவருக்கும் என் ராக்கியை பிடித்து போய்விட்டது. அவர்கள் வளர்த்திருந்த வளர்த்துக் கொண்டிருக்கிற நாயைப் பற்றி சொன்னார்கள். நாய் ஆஸ்பத்திரி, விளையாட்டு ஜாமானம், கொடுக்க வேண்டியது கொடுக்கக்கூடாதது என்று பல யோசனைகள். ரோட்டில் போனால் குழந்தைகள் பயம் இல்லாமல் என்னுடன் பேசினார்கள். கல்லூரிப் பெண்கள் திரும்பிப் பார்த்தார்கள். பணக்கார புள்ளிகள் கை காண்பித்து விட்டு சென்றனர். பழைய பதட்டம் இப்போது சுத்தமாக இல்லை.

பத்து நாட்கள் கழிந்திருக்கும். சுரேஷிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. போனும் எடுக்கவில்லை. நான் அவனைத் தேடி வீட்டுக்கு சென்றேன். அவன் கைலியுடன் வெளியே நின்றிருந்தான்.

“என்னடா போன் பண்ணா எடுக்க மாட்டியா?”

“புது போன் வாங்கணும்டா.. உள்ள வாடா.. ராக்கி எப்படி இருக்கு?”

“டேய், அத விடு. மெண்டலுக்கு என்ன ஆச்சு. அத பத்தி வாயே தொறக்க மாடீங்கற..”

என் பார்வையை தவிர்த்தான். “அத விடு டா. அது யாருக்கு தெரியும். நாம நம்மோட பொழப்ப பாக்கவே நேரம் சிக்க மாட்டேங்குது.”

என்னவோ அந்நியத்தனமாக பேசினான். நான் உணர்ந்து கொண்டேன். “என்னடா ஆள் செத்துட்டானா?”

“ஆமா..”

“அதுதான் நீ என்கிட்டே சொல்ல முடியாம இருக்கியா?”

“ஆமா…”

“எப்படி செத்தான். போஸ்ட் மாட்டம் ரிப்போர்ட் பாத்தியா? என்ன காரணமாக்கும்?”

…….

“என்னடா… என்ன காரணம்?”

“எல்லாம் பொதுவான காரணம்தான் …” என்றுவிட்டு வேறுபக்கம் திரும்பிக் கொண்டான்.

6

நாங்கள் அதற்கு பிறகு ஒன்று சேர்ந்து சாப்பிடுவதே இல்லை.

பிறகு அங்கு நிலவிய நிசப்தம் – மனோஜ் குமார் கோஸ்வாமி அசாமிய மொழி சிறுகதை

மூலம் : மனோஜ் குமார் கோஸ்வாமி
ஆங்கிலம் : ஜோதி மகந்தா
தமிழில் : தி.இரா.மீனா

 

சில மனிதர்களின் முகபாவங்கள் அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்களா அல்லது இல்லையா என்று புரிந்து கொள்ளமுடியாத அளவுக்குப் புதிரானதாக இருக்கும். மேகமற்ற வானம் போல வெறுமையான பாவனை முகத்தில் பதிந்திருக்கும். என் முன்னால் உட்கார்ந்திருக்கும் ஹிரு தத்தா, அந்த வகையான ஒருவர். ஐம்பது வயது, மிக உயரம், தயக்கமானவர், முகத்தில் சிறிது சுருக்கங்கள், சக்தி வாய்ந்த கண்ணாடியின் பின்னால் வெளுத்த இமைகள், வழுக்கைத் தலையில் இங்குமங்குமாக நின்று கொண்டிருக்கும் முடி, குனிந்த தோற்றம் என்று வயதுக்குரிய தள்ளாமை.

“குறுக்கீட்டிற்கு மன்னியுங்கள்.” மரியாதையாகச் சொன்னார்.

“பரவாயில்லை, நான் இந்தப் புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். தேநீர் குடிக்கிறீர்களா?” அவருடைய சங்கடத்தைத் தளர்த்தும் வகையில் கேட்டேன்.

“இல்லை, இல்லை..” குறைந்தது ஆறு முறை இல்லை, இல்லை என்று சொல்லிவிட்டு, ”நான் வேறு ஏதோ கேட்பதற்காக வந்தேன்,” என்றார்.

எதிர்பாராமல் வந்திருந்த அந்த விருந்தாளியைப் பார்த்தேன். ஆமாம், ஹிரு தத்தா என் வீட்டிற்கு வந்த எதிர்பாராத விருந்தாளி. தெருவில் இந்த மனிதர் நடப்பதைப் பல முறை பார்த்திருக்கிறேன். காலையில் வானொலியில் வட்டாரச் செய்திகள் முடியும் நேரத்தில் அவர் அலுவலகம் செல்வார். வேகமில்லாத இயல்பான நடை, எளிமையான, ஆனால் சுத்தமான உடைகள், கையில் தினசரி சாமான்களுக்கான பை, பிற்பகலில் அலுவலகத்திலிருந்து திரும்பும்போது நிறைந்திருக்கும். பஸ் பயணத்தினால் சட்டை கசங்கியிருக்கும், முகம் களைத்திருக்கும், ஆனால் நடை மட்டும் சீராகவும், ஒரே மாதிரியாகவுமிருக்கும். அந்தக் குறுக்குச் சந்தின் கோடியில், ஒரு வாடகை வீட்டில் அவர் வசித்து வந்தார்.

மற்றவர்களுடன் அதிகம் பேசுகிறவர் மாதிரி தெரியவில்லை. எளிய முறையில் மிகச் சாதாரணமான வாழ்க்கை வாழ்கிறவர். இரண்டு வருடங்களுக்கு முன்னால் இந்தப் பகுதிக்கு வந்தவர்.

கணேஷ் குரியருகே உள்ள அலுவலகத்தில் பணி புரிபவர்- அது தவிர வேறு விவரம் தெரியாது. சொல்லப் போனால் இங்கு யாரும்அவர் மீது அவ்வளவு அக்கறை காட்டவில்லை; அவருடைய ஒரே மகள் சில வருடங்களுக்கு முன்னால் தற்கொலை செய்து கொண்டு விட்டாள்- இவ்வளவுதான் அவரைப் பற்றி நான் கேள்விப்பட்டவை.

“உம், சொல்லுங்கள்?” என்றேன்.

வருத்தமாகச் சுற்றிலும் பார்த்துவிட்டு, “நான் ஒரு ஸ்கூட்டர் வாங்க விரும்புகிறேன். ஏறக்குறைய பேசி முடித்து விட்டேன்,” என்று சொல்லிவிட்டு என் பதிலென்ன என்பது போலப் பார்த்தார். பிறகு “பழைய வண்டிதான், என் நண்பரின் தோழருடையது. நாளைக்குத் தருவதாக அவர் சொல்லியிருக்கிறார். நம்பகமானவராகத் தெரிகிறார். நான் ஆவணங்களில் கையெழுத்து போட்டு விட்டேன். இப்போது சிக்கல் என்னவென்றால்…” தத்தா சங்கடமான ஓர் அரை புன்னகையைக் கசியவிட்டார். “எனக்கு ஸ்கூட்டர் ஓட்டத் தெரியாது.”

“இந்த மனிதர் இரு சக்கர வாகனத்தில்,“ நான் சிரிப்பை அடக்கிக் கொண்டேன். “நீங்கள் ஒரு நல்ல முடிவை எடுத்திருக்கிறீர்கள். நகரப் பேருந்துகளில் கட்டுக்கடங்காத கூட்டம், ரிக்ஷாக்கள் செலவை அதிகரிப்பவை; நீங்கள் நேரத்தையும் சேமிக்கலாம்,” அவருக்கு ஆதரவாகப் பேசினேன்.

“நான் அதைக் கற்றுக் கொள்ள நீங்கள் உதவி செய்வீர்கள் அல்லவா? அதாவது உங்களுக்கு ஓய்வு நேரம் கிடைக்கும்போது..” தன் வேண்டுகோளைச் சொல்லிவிட்ட நிம்மதி தத்தாவிடம் தெரிந்தது.

என் நண்பர்களின் பைக்குகளை நான் அடிக்கடி ஓட்டுவதை அவர் பார்த்திருக்க வேண்டும். வெள்ளம் காரணமாக என் கல்கத்தா பயணம் தாமதப்பட்டு இருக்கிறது. அதனால் இந்த நாட்களில் எனக்கு ஓய்வு நேரம் அதிகம். தத்தாவிற்காக நேரம் ஒதுக்குவதில் எனக்கு மகிழ்ச்சியே.

அடுத்த நாள் நான் அந்த ஸ்கூட்டரைப் பார்த்தேன். பலவீனமான ஒரு பழைய இயந்திரம். உண்மையாகவே அது நீண்ட தூரம் பயணித்தி்ருக்கிறது. முன்பக்கக் கண்ணாடி உடைந்திருந்தது. சைலென்ஸ் பைப்பட்டை இல்லாமலிருந்தது. இருக்கைகளும் அதிகம் கிழிந்திருந்தன.மொத்தத்தில் தத்தா அதற்கு கொடுத்திருந்த விலை மிக அதிகம். பல முறை உதைத்த பிறகு அதன் பிடிமானம் தளர்ந்து போயிருந்ததை உணர்ந்தேன், தவிர பிளக்கில் மின்சாரம் சரியாகப் பாயவில்லை, ஒரு வழியாக அது புறப்பட்டபோது அதிலிருந்து எழுந்த இரைச்சல் குறுக்குச் சந்து முழுக்க எதிரொலித்தது; என்ஜினின் அளவற்ற குறைகளை அறிவிப்பது போல.

என்னுடைய தந்திரமான செயல்பாடுகளை தத்தா ஆர்வமாக கவனித்துக் கொண்டிருந்தார். இடையிடையே தன் மனைவியையும் பார்த்துக் கொண்டிருந்தார். வராந்தாவிலிருந்த ஒரு தூணின் மேல் சாய்ந்து கொண்டு அந்தப் பெண்மணி என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“சரியாக இருக்கிறதா?” தத்தா அந்த உறுமலுக்கிடையே சத்தமாகக் கேட்டார்.

“பரவாயில்லை. சிறிது சர்வீஸ் தேவைப்படுகிறது.”

நான்கு நாட்களின் கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு, வண்டியின் இருக்கையில் தத்தாவால் தனியாக உட்கார முடிந்தது. தலையில் நிறம் மங்கிப் போன ஹெல்மெட், உதட்டில் வரண்ட சிரிப்பு, இறுக்கமாக கைப்பிடிகளைப் பிடித்துக் கொண்டு பார்ப்பதற்கு தொலைவிலுள்ள நட்சத்திரங்களுக்குள்ளே பறக்கும் விண்வெளி வீரர் போல அவர் இருந்தார்.

“கிளட்சை திடீரென தளர்வு செய்யாதீர்கள். ஆக்சிலேட்டரை மெதுவாக இழுங்கள்,” நான் அவரை எச்சரித்தேன்.

“நிச்சயமாக.” தத்தாவின் அசௌகரியமான பதில். நான் ஸ்டார்ட் செய்து கொடுத்தேன். கண்ணுக்குத் தெரிந்த அங்கிருந்த ஒவ்வொரு சுவரிலும் அந்தச் சத்தம் எதிரொலித்தது. “பிரேக்கை திடீரென இழுக்காதீர்கள்,” நான் மீண்டும் எச்சரித்தேன்.

அவருடைய ஸ்கூட்டர் மெதுவாக நகர ஆரம்பித்தது. காற்று அவருடைய சட்டைக் காலரை, மீதமுள்ள முடியை சிலிர்க்கச் செய்தது. மெதுவாகக் குறைந்த இரண்டு சக்கர வாகனத்தின் ஒலி அவர் வீட்டின் முன்னால் நின்று கொண்டிருந்த எனக்குக் கேட்டது. இப்போது அந்த இடம் அமைதியாகிவிட்டது. வட்டாரச் செய்திகள் ஒரு வீட்டிலிருந்து கேட்க, சின்னப் பையன்ஒருவன் தொடர்ந்து மணி அடித்தபடி தன் மூன்று சக்கர சைக்கிளை ஓட்டிக் கொண்டிருக்க, ஒரு காய்கறி வியாபாரி தன் வழக்கமான குரலில் கத்திக் கொண்டிருந்தான்- இருந்தபோதிலும் தத்தாவின் வேதனையான ஸ்கூட்டரின் சப்தமின்றி தெரு அமைதியாக இருந்தது.

“உள்ளே வந்து உட்காருங்கள்,” திருமதி தத்தா கேட் அருகே வந்து என்னை அழைத்தார். மெல்லிய தோற்றம், இங்குமங்குமாக நரைமுடி, நீண்டகால நோய் காரணமாக முகம் தன் பொலிவை இழந்திருந்தது; இவையெல்லாம் இருந்தபோதிலும், அந்தக் கணத்தில் அவர் உற்சாகமாக இருந்தார்.

“மன்னியுங்கள். இப்போது முடியாது, மாலை வரமுடியுமா என்று பார்க்கிறேன்,”என்றேன்.மாலை அங்கு போனேன். விரைவில் அது ஒரு பழக்கமாகி விட்டது. நாங்கள் மூவரும் மாலை நேரங்களில் மணிக்கணக்கில் பேசுவோம். பெரும்பாலான நேரங்களில் வராந்தா விளக்கு அணைக்கப்பட்டு விடும். நிலா வெளிச்சம், தெருவிலுள்ள விளக்கின் ஒளியோடு வேலியினூடே புகுந்து வராந்தா தரையில் பலவித வண்ணங்களை உருவாக்கும். விளையாட்டு, அரசியல், சமூகம் என்று உலகியல் சம்பந்தமான விஷயங்களைப் பேசுவோம். ஒரு பக்கத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் ஸ்கூட்டர் நிலவொளியில் பிரகாசமாகத் தெரியும்.

முன்பெல்லாம் தத்தாவை பார்க்கவே முடியாது. இப்போது அந்தக் குறுக்குத் தெருவில் அவர் ஓட்டுவது சத்தமாகவும், நிச்சயமாகவும் இருந்தது. குறுகிய அந்தச் சாலையில் ஸ்கூட்டர் ஏற்படுத்தும் இடியொலி, அக்கம் பக்கத்தவரால் அவ்வளவு சுலபமாகக் கடந்து விட முடியாததாக இருந்தது.

தினமும் ஜன்னலின் வழியாக அவருடைய வருகை, புறப்பாடு இரண்டையும் பார்ப்பேன். பெரும்பாலும் மனைவி பின் இருக்கையில் இருக்க,ஒரு நன்றி உணர்வோடு என்னைப் பார்த்துக் கையசைப்பார். என்ஜின் அந்தக் கொடூர ஒலியை மறக்காமல் ஏற்படுத்த, கைகள் உறுதியாக இருக்க ,தலை லேசாக வளைந்திருக்க, நேராகப் பார்த்தபடி, அவர் ஓட்டுவார்.

ஒரு நாள் மாலை அவர் ஸ்கூட்டர் என்னருகே க்ரீச் என்ற ஒலியோடு நின்றது. “வாருங்கள் ஆற்றின் கரையையொட்டி ஒரு சவாரி போய் வரலாம்,” என்றார். எனக்கு எந்த வேலையும் இல்லாததால் நான் மகிழ்ச்சியாகப் புறப்பட்டேன். நகரத்தின் சுறுசுறுப்பான மாலைப் பொழுது அது என்பதால் தத்தாவின் ஸ்கூட்டர் கூட்டத்தினிடையே புகுந்து போனது. காற்று அவருடைய முடியையும், சட்டைக் காலரையும் குலையச் செய்தது.

“ஆமாம், இந்த வேகம், இதுதான் நான் விரும்பியது. மனிதன் ஒரு போதும்…” கடந்து சென்ற ஒரு லாரியின் ஓசையில் அவர் குரல் கரைந்து போனது.

“என்ன?” என்று சப்தமாக கேட்டேன்.

“ஒருவர் எந்த நாளிலும் நின்றுவிடக் கூடாது. செயலிழப்பு என்பது சாவைப் போன்றது.”

வெறுமே நான் புறநகர்ப் பகுதிகளை சுற்றிப் பார்த்துக் கொண்டே வந்தேன். வெளிச்சமான கடைகள், சுறுசுறுப்பான கூட்டம், மற்ற கார்களின் பின்புறசிவப்பு விளக்குகள், வெவ்வேறு ஒலிகளில் வெளிப்படும் ஹார்ன் ஒலிகள் ஆகியவற்றை வேகமாகக் கடந்து கொண்டிருந்தோம். சிறிது தொலைவில், ஒரு சிறிய ஊர்வலம் சமீபத்திய பாலிவுட் இசையுடன் நகர்ந்தது. தத்தா ஓர் இளைஞன் போல சவாரியை சந்தோஷமாகச் செய்தது பற்றி் நான் யோசித்துக் கொண்டிருந்தேன். அவர் மிக தைரியமாக, கஷ்டமின்றி கியரை மாற்றிக் கொண்டும், பிரேக்குகளை இழுத்தும் ஓட்டினார்.

நாங்கள் ஆற்றுப் பகுதியை அடைந்தோம். நகரம் இந்த இடத்திலும் தன் குப்பைகளைப் பரப்பியிருந்தது. ஆனால் இங்கு சிறிது சுத்தமான காற்று கிடைக்கிறது.

“உண்மையில் எனக்கு இந்த மாற்றம் தேவைப்பட்டது,” சந்தோஷமான சிரிப்புடன் தத்தா சொன்னார். வண்டியை மிகக் கவனமாக நிறுத்தினார்.

“வாருங்கள், இந்த பெஞ்சில் உட்காரலாம்.”

அஸ்தமிக்கும் சூரியனைப் பார்த்துக் கொண்டிருந்தோம். ஆறு இரத்தச் சிவப்பிலிருந்தது. சிறிது தொலைவில் உள்ளே மங்கிய வெளிச்சத்துடன் இரண்டு இயந்திரப்படகுகள் நின்று கொண்டிருந்தன. மற்றொரு பக்கத்தில் குன்றுகள் கருமையைப் பரப்பி இன்னொரு இரவிற்குத் தயாராகிக் கொண்டிருந்தன.

“எனக்காக நீங்கள் நிறைய உதவி செய்திருக்கிறீர்கள்…” திடீரெனச் சொன்னார்.

“ஓ, இல்லை, அதில் எனக்கு மகிழ்ச்சிதான்.”

அது எனக்கு நல்ல பலன் தந்திருக்கிறது. நீங்கள் எனக்கு ஒரு மாற்றத்தை, செயல்பாட்டை ஏற்படுத்தித் தந்திருக்கிறீர்கள். நான் உண்மையாகவே உங்களுக்குக் கடன்பட்டிருக்கிறேன்.” அவர்குரல் மிக மெல்லியதாக இருந்தது.

நான் மௌனமாக இருந்தேன். மங்கும் சூரியனின் லேசான இழைகளைப் பார்த்தபடி பெஞ்சில் உட்கார்ந்திருந்தேன். நகரின் எந்தச் சாயலும் இங்கு இல்லை,தெருவிலிருந்து அபூர்வமாகக் கேட்கும் ஹாரன் ஒலி தவிர.

“சில அந்தரங்கமான விஷயங்களை உங்களிடம் சொல்ல வேண்டும் என்று சில நாட்களாகவே நினைத்துக் கொண்டிருக்கிறேன்.” தத்தாவின் குரல் வேறொரு கோளிலிருந்து கேட்பது போல மிக மெல்லியதாகக் கேட்டது.“பல வருடங்களுக்கு முன்னால் இது நடந்தது. எங்களுக்கு நீரா என்றொரு மகள் இருந்தாள். அவள் பிறந்த பிறகு கருவுறும் இயல்பை என் மனைவி இழந்து விட்டாள். அதனால் அந்தக் குழந்தையின் மீது நாங்கள் கண்மூடித்தனமான அன்பு வைத்திருந்தோம். நான் சாதாரணமான ஒரு கிளார்க்தான் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனாலும் எப்படியோ வாழ்க்கை எங்கள் மூவருக்கும் அமைதியானதாக இருந்தது. நான் மிக அப்பாவியான ஆத்மா; சிறிது கோழை என்று கூட நீங்கள் சொல்லலாம். ஆனாலும் நான் என்னளவில் உண்மையானவனாக இருக்க முயற்சிக்கிறேன். மனமறிந்து நான் யாரையும் காயப்படுத்தியது இல்லை என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். என்னால் இயன்றவரை எங்கள் மகளை மிக நல்லவளாக வளர்க்க முயன்றேன். அவள் யாரையோ காதலிப்பது எனக்குத் தெரிந்தது. அவளுக்கு அப்போது பதினாறு வயதுதான்.அந்தப் பையன் எனது உயர் அதிகாரியின் மகன்தான். ஆரம்பத்தில் எனக்கு வருத்தம், சொல்லப்போனால் கையற்றவனாக உணர்ந்தேன். “உன் எதிர்காலம் தீர்மானிக்கப்பட்டு விட்டது. நம் அதிகாரியின் மகன்தான் உன் மருமகன்,” என்று உடன் வேலை செய்தவர்கள் என்னைக் கேலி செய்தார்கள். நான் முட்டாளைப் போலச் சிரிப்பேன். இந்த உலகம் எத்தனை கொடூரமானது என்பதைப் புரிந்து கொள்ள எனக்குச் சில காலம் தேவைப்பட்டது. ஒரு நாள் அதிகாரியின் மகன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு அசாமை விட்டுப் போய்விட்டான். சில நாட்களுக்குப் பிறகு, ஒரு குளிர் காலைப் பொழுதில் எங்கள் அருமை மகள் தற்கொலை செய்து கொண்டாள். அந்தச் சமயத்தில் அவள் கருவுற்றிருந்தாள்.”

ஒரு கார் பெரிய சைரன் ஒலியோடு திடீரென்று அந்த இடத்தைக் கடந்தது. ஆச்சர்யத்தோடு தத்தாவின் முகத்தைப் பார்த்தேன். பூங்காவின் ஒரு பக்கம் விளக்கு வெளிச்சத்தால் மின்ன, மற்றொரு பக்கம் இருட்டாகத் தெரிந்தது.

“அந்தச் சம்பவத்திற்குப் பிறகு ஏழு வருடங்களாகி விட்டன. ஏழு வருடங்களாக நாங்கள் அந்தக் கொடுமையை ஒவ்வொரு நிகழ்வுகளிலும், மௌன கணங்களிலும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இது மாதிரியே இருந்து எப்படியோ சமாளித்து விடலாம் என்று நான் நினைத்தேன். ஆனால் என் மனைவி?நான் ஏன் ஏதேனும் அவளுக்கு செய்யக் கூடாது? ஒரு ஸ்கூட்டர் வாங்கினாலென்ன? சில சந்தோஷப் பயணங்களாவது எங்களுக்குக் கிடைக்கும்! வீட்டிற்கு வெளியே ஓர் உலகம் இருக்கிறது என்பதை அவள் பார்ப்பாள். புதிய வண்டியொன்றை என்னால் வாங்க முடியாது, அதனால் இதை வாங்கினேன். நகரப் பேருந்து நெரிசல், நேர மிச்சம் இவைகள் எல்லாம் பிரச்னைகளில்லை. நான் விரும்புவது செயல்பாட்டைத்தான். ஏறக்குறைய நாங்களிருவரும் படிம நிலைக்குத் தயார் ஆகிக் கொண்டிருந்தோம், ஏதாவது ஒரு செயல்பாடு எங்களுக்கு மிக அவசியமானதாக இருந்தது, ஒரு வேகம்,ஒரு நடமாட்டம் இல்லையெனில் எங்களால் உயிருடன் இருக்க முடியாது.”

“ஒரு நகரப் பேருந்து, பிறகு ஒரு பைக், அம்பாசிடர் கார் ஆகியவற்றை நான் இன்று ஓவர்டேக் செய்ததை கவனித்தீர்களா,அது மூர்க்கத்தனமான போட்டி ,அது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைத் தந்தது. காலையிலிருந்து இரவு வரை இந்தப் பழைய ஸ்கூட்டரினால் என் மனைவி சுறுசுறுப்பாக இருக்கிறாள், நான் அலுவலகத்திற்கு கிளம்புவதற்கு முன்னால், தினமும் காலையில் கவனமாக சுத்தம் செய்கிறாள்; அவள் அன்று என்ன சொன்னாள் தெரியுமா? ஆயிரம் வண்டிகள் இருக்குமிடத்தில்கூட சத்தத்தை வைத்துக் கொண்டே அவள் இதைக் கண்டு பிடித்து விடுவாளாம்.” அவர் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே சொன்னார். அவருடைய முகத்தில் வெளிச்சமும், நிழலும் விளையாடிக் கொண்டிருந்தன. ஏதோ ஆவி பிடித்தவர் போலத் தெரிந்தார்.

ஆற்றிலிருந்து எழும் காற்றிலிருந்து ஓர் ஈரப்பதம் வெளிப்பட்டது. அந்த இயந்திரப் படகுகள் இன்னமும் வெளுத்த நீலநிறப் படுக்கையில் நின்றிருந்தன. பல்புகளின் வெளிச்சம் பட்டதால் நீர் ஒருவித அசைவிலிருப்பது போலத் தெரிந்தது. அது படகுகள் அசைவது போன்ற தோற்றத்தை பார்ப்பவர்களிடம் ஏற்படுத்தும்.

தொலைவில் ஒரு மணி எட்டு முறை ஒலித்தது. “நாம் போகலாம், மிகத் தாமதமாகிவிட்டது.” நான் அவரைப் பின் தொடர்ந்தேன்.

தெருவில் கூட்டத்தின் அளவு குறைந்திருந்தது. நியான் விளக்குகளின் வெளிச்சம் காவலர் போல எங்களுக்கு வழி காட்டியது. ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்ய அவர் பதினோரு தடவை அழுத்த வேண்டியிருந்தது. மின்சாரம் சரியாகப் பாயாமல் இருக்கலாம், கண்டன்சர் பைப்பின் குறையாகவும் இருக்கலாம்.

சில நாட்களுக்குப் பிறகு ஒருநாள் பின்னிரவில் தத்தா கதவைத் தட்டினார். முகம் முழுக்க வியர்த்திருக்க. மிகச் சோர்வாகத் தெரிந்தார். ஸ்கூட்டர் தெருவில் நிற்க, திருமதி தத்தா அவர் பின்னால் நின்றிருந்தார். எந்த வழக்கமான ஒலியுமில்லாமல் வண்டி அமைதியாக இருந்தது எனக்கு வியப்பைத் தந்தது.

“ஏது இந்த நேரத்தில்?”

“எப்போது நான் கியரை இழுத்தாலும் இந்த ஸ்கூட்டர் ஸ்டார்ட் செய்வது நின்று போகிறது. இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் ஒர்க்ஷாப்கள் மூடியிருக்கின்றன, வண்டியைத் தள்ளிக்கொண்டே நான் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்.”

ஏதோ மோசமாகப் பழுதாகியிருக்க வேண்டும். காலையில் நான் மெக்கானிக்கை அழைத்துக் கொண்டு வருவதாகச் சொன்னதும் அவர்கள் போய் விட்டனர்.

ஆனால் அடுத்த நாளே நான் வேலை விஷயமாக இரண்டு மாதங்களுக்கு கல்கத்தா போக வேண்டியதாயிற்று. நான் ஊர் திரும்பிய பிறகும் தத்தாவின் உறுமும் ஸ்கூட்டரின் ஞாபகம் எனக்கு வராமல் போய்விட்டது. அடுத்த நாள் காலையின் வானொலி வட்டாரச் செய்தி எனக்கு உறுமலை நினைவூட்டியது. அது அங்கேயில்லை. அந்த குறுகிய சாலையில் அமைதி மட்டுமே.

மாலையில் நான் அவர்களின் வீட்டிற்குப் போனேன். மங்கிய விளக்கு வெளிச்சத்தில் திருமதி தத்தா ஒரு சிலையைப் போல நின்றிருந்தார்.

“உள்ளே வாருங்கள்.”

“தத்துடா எங்கே?”

“இன்னமும் வரவில்லை, மார்க்கெட்டிற்குப் போயிருக்கலாம்.”

“ஸ்கூட்டர்?”

“ஓ, ஸ்கூட்டர் உடைந்து விட்டது. அதற்குள் ஏராளமான கோளாறுகள் இருந்தன. அது இனிமேல் ஓடாது என்று சொல்லி விட்டார்,” அவர் குரல் நடுங்கியது.

கதவருகிலேயே நான் உறைந்து நின்றேன். காலம் அப்படியே நின்று போய்விட்ட ஓர் உலகத்தில் நான் நுழைந்தது போல உணர்ந்தேன். அங்கு ஓட்டமோ, இயக்கமோ இல்லை. சுற்றியிருந்த இருட்டு மனிதனின் கடைசி உந்து சக்தியை உறிஞ்சிக் கொண்டது போல இருந்தது.

“இல்லை, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, அதைச் சரி செய்து விட முடியும்.”அந்த மரத்த உணர்வை உடைக்க முயன்றேன். அவர் அறை விளக்கைப் போட்டார். ஆடம்பரம் இல்லாத ஒரு சிறிய அறை, எளிமையாகவும் நன்கு பராமரிக்கப்பட்டும் இருந்தது. ஒரு சில நாற்காலிகள், பக்க மேசை, மைய மேசை, அதன் மேல் சில பத்திரிக்கைகள், சில காலண்டர்கள், மற்றும் பிரேம் செய்யப்பட்ட ஒரு புகைப்படம். மூலையில் வரலாற்றுக் காலத்துக்கு முந்தையதான அந்த ஸ்கூட்டர்.

திருமதி தத்தா உள்ளே போனார், தேநீர் தயாரிக்க இருக்கலாம். நான் ஸ்கூட்டரின் அருகில் போனேன்.வெறும் எலும்புக்கூடுதான், ஸ்டார்ட்டர் உடைந்திருந்தது, அப்சார்பர் இரண்டு துண்டுகளாக இருந்தது, ஹெட்லைட்கீழே தொங்கிக் கொண்டிருந்தது, என்ஜினின் கவர் அதனிடத்தில் இல்லை, உள்ளே ஏராளமான வெல்டிங் அடையாளங்கள், சில பகுதிகள் ஒரு சிறிய குவியலாக வைக்கப்பட்டிருந்தன; இல்லை, இந்த இயந்திரம் செத்துப் போய்விட்டது. அது ஓர் இறந்த உடலின் காட்சியாகத் தெரிந்தது.

அந்தக் கணத்தில் சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த அந்த புகைப்படத்தை நான் பார்க்க நேர்ந்தது; தூசியைத் தட்டிய பிறகு அது அப்பாவியான, உற்சாகமான இளம் பெண்ணின் படம் என்று என்னால் யூகிக்க முடிந்தது. நிச்சயமாக அவள் நிராதான்; ஏழு வருடங்களுக்கு முன்னால்,ஒரு குளிர்ச்சியான காலையில் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்.

“அந்தச் சமயத்தில் அவள் கருவுற்று இருந்தாள்.”

“என்ன பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?” நான் என்னை உணர்ந்தேன்.

ஹிரு தத்தா பை நிறைய மளிகை சாமான்களுடன் கதவருகே நின்றிருந்தார். முகம் பலவீனத்தில் சோர்வுற்றிருக்க, நகரப் பேருந்தின் நெரிசலில் உடைகள் கசங்கியிருந்தன. பூமியின் நகர்வற்ற கணம் அந்த அறையில் தொங்கிக் கொண்டிருந்தது.
———————————-
நன்றி : Indian Literature ,Sahitya Akademi’s Bi—Lingual Journal NOV/Dec 2015

 

கெய்சீரோ ஹிரானோ நேர்முகம் – ஜப்பானிய மொழியில் விவியன் எங், ஆங்கில மொழியாக்கம் ஏலி கே. பி. வில்லியம்

(பென் தளத்தில் வாரம் ஒரு எழுத்தாளரிடம் பத்து கேள்விகள் கேட்டு நேர்முகம் பதிப்பிக்கிறார்கள். இந்த வாரம் வந்த நேர்முகத்தில் ஐந்து கேள்விகள் இங்கு)

1. “புனைவு சில ரகசியங்கள் வெளிப்படுவதைக் கட்டுப்படுத்திக் கொள்ள உதவுகிறது என்றாலும் வேறு ரகசியங்களை வெளிப்படுத்த அது ஒன்றே வழி,” என்று ‘அட் தி எண்ட் ஆப் தி மேட்டினி’ நாவலின் முன்னுரையில் எழுதுகிறீர்கள். உண்மையின் தடத்தை உங்கள் எழுத்து எவ்வாறு கண்டு கொள்கிறது? உண்மைக்கும் புனைவுக்கும் உள்ள உறவு பற்றி இன்னும் கொஞ்சம் சொல்ல முடியுமா?

‘உண்மை,’ என்ற சொல்லைக் காட்டிலும் ‘மெய்ம்மை’ என்ற சொல்லே புனைவின் பின்புலத்தில் பொருந்தும் என்று எனக்கு தோன்றுகிறது. புனைவின் தேவையை எதார்த்தம் வலியுறுத்துவதால்தான் அது தேவைப்படுகிறது. வேறு சொற்களில் சொன்னால், இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறதோ அதை இன்னும் சுத்திகரிக்கப்பட்ட வடிவில் பகிர்ந்து கொள்ள மெய்ம்மை என்னை நோக்கி அழைப்பு விடுக்கிறது.

வேறு வழியில் சொல்ல முடியாத தனிப்பட்ட அனுபவங்களையும் புனைவின் பாதுகாப்புக் கூத்தின் உள்ளிருந்து பிறருக்கு தெரியப்படுத்த முடியும். சில சமயம் மெய்ம்மை குறித்து நமக்குள்ள அதிருப்தியும்கூட புனைவில் நிறைவு காண விரட்டுகின்றன என்றும் நினைக்கிறேன். மெய்யுலகில் வாழ்ந்து களைத்துப் போவது புனைவு அளிக்கும் விடுதலையை உணரச் செய்வதை நமக்குச் சாத்தியப்படுத்துகிறது என்று நினைக்கிறேன்.

2. இடத்துக்கும் கதைக்கும் உள்ள உறவு என்ன? உங்கள் எழுத்தில் குறிப்பிட்ட சில இடங்களுக்கு நீங்கள் எப்போதும் திரும்பிச் செல்வது உண்டா?

தென் பிரான்ஸ் முதல் மத்திய காலகட்டம் வரையும் 19ஆம் நூற்றாண்டு பாரிஸ்சிலிருந்து மெய்ஜி சகாப்தத்தின் நாரா கோட்டம் வரையும் டோக்கியோ முதல் எதிர்கால ஹூஸ்டன் வரையும்- மார்ஸ், நிகர் மெய்ம்மையைச் சொல்லவே வேண்டாம்- கதைக்கருவையொட்டி என் படைப்பின் களம் தொடர்ந்து மாறிக் கொண்டிருப்பது. கதைக்கு எந்த இடங்கள் பொருத்தமாக இருக்கும் என்பதை நான் கவனமாக பரிசீலிக்கிறேன். எழுதுவதற்கு முன் நேரடியாக அங்கு போய் அந்த இடத்தை அறிந்து கொள்கிறேன். நான் உண்மையாகவே வாழ்ந்த, அல்லது சென்று கண்ட இடங்கள்தாம் என் கதைக்களங்கள். எனவே இயல்பாகவே நான் இப்போது வசிக்கும் டோக்கியோ நான் அடிக்கடி பயன்படுத்தும் கதைக்களமாகிறது.

3. பாத்திரங்களையும் கதையோட்டத்தையும் வளர்த்தெடுக்க மெய்ம்மையை பல எழுத்தாளர்களும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் அதை புத்தகத்தில் எங்கும் குறிப்பிடுவது வழக்கமில்லை. மகினோ யோகோ கதை நீங்கள் அறிந்த மனிதர்களின் “உண்மை” கதையின் அடிப்படையில் எழுதப்பட்டது என்பதை வாசகர்கள் அறிய வேண்டும் என்பது ஒரு முக்கியமான விஷயமாக உங்களுக்கு ஏன் தோன்றியது?

18ஆம் நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதி வரை எழுதப்பட்ட முக்கியமான கதைகள் சிலவற்றில் முன்னுரை எப்பணி இயற்றுகிறது என்பதில் எனக்கு ஆர்வமிருந்தது. கதாநாயகன் ஏன் குறிப்பிடத்தக்க கவனம் செலுத்தும் தகுதி கொண்டவனாய் இருக்கிறான் என்பதை ராபின்சன் குரூசோ, கரமசோவ் சகோதரர்கள், தி மாஜிக் மவுண்டெய்ன், நாசியா ஆகிவற்றின் முன்னுரைகள் வசீகரமான வகையில் விளக்குகின்றன. வெகு சீக்கிரம் சலிப்படையும் வாசகர்களின் ஆர்வத்தைக் கைப்பற்ற கதையின் பரபரப்பான இடத்துக்குள் விரைய வேண்டிய தேவையில்லாமல் கதை அதன் வாசகர்களை மெல்ல மெல்ல தன்னுள் இழுத்துக் கொள்ள இந்த உத்தி அனுமதிக்கிறது.

கூடுதலாக, கதாநாயகன் உண்மையாக வாழ்ந்தவன் என்று இப்பின்புலத்தில் விவரிக்கப்படும்போது, எழுத்தாளருக்கும் வாசகருக்கும் இடையில் உள்ள உறவில் மாற்றம் ஏற்படுகிறது. வாசகர்கள் எதிர்வினையாற்றும் வகையில் ஆசிரியன் ஒரு நாயகனை அளிப்பதற்கு பதில் – நாயகனை நடுவில் வைத்துக் கொண்டு எழுத்தாளரும் வாசகரும் ஒருவரையொருவர் எதிர்கொள்வதற்கு பதில்- அருகருகே நின்று, ஒரே கோணத்தில் நாயகனை இருவரும் காண முடிகிறது.

வெறும் புனைவாக இருக்கக்கூடிய படைப்பில், “அழகு,”, “திறமை,” போன்ற விவரணைகளை வாசிக்கும்போது வாசகர்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள். இது போல நல்ல வகையில் நாயகனைச் சித்தரிக்கும்போது அது வலிய திணிக்கப்பட்டது போலிருக்கும். ஆனால், நாயகன் ஒரு நிஜ மனிதரின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருந்தால், இது போன்ற விவரணைகள் புறவயப்பட்டவை என்று வாசகன் ஏற்றுக் கொண்டு விடுவான். அப்படி ஒரு மனிதர் உண்மையில் இருந்தாரா என்பதே சந்தேகமாக இருந்தாலும்கூட இதுவே உண்மை. குறிப்பாக மார்க்கரீட் யூர்செனாரின் ‘கூ டி கிரேஸ்,’ என்ற நாவல் ‘அட் தி எண்ட் ஆஃப் தி மேட்டினி’ எழுதும்போது எனக்கு ஒரு முன்னோடியாக இருந்தது.

அக்காலத்தில் தன் காலத்துக்கும் முற்பட்ட காலங்களைப் பற்றிய நாவல்கள் எழுதப்பட்டபோது பிற்காலத்தில் மீபுனைவு கொண்டு படைப்பின் புனைவுத்தன்மை உணர்த்தப்பட்டது போல் உணர்த்தப்படும் வழக்கமில்லை என்றாலும் புனைவென்பது தன்னவில் புனைவு என்பது வெளிபபடையாக இருந்தது. இன்றுள்ள நிலைக்கு இது நெருக்கமான ஒன்று என்று நினைக்கிறேன். எழுத்தாளர்களின் அன்றாட வாழ்வு நம்முன் சமூக ஊடகங்களில் வந்து சேர்ந்து விடுகிறது. ஆனால் இது பற்றி நான் பேச ஆரம்பித்தால் நிறுத்த மாட்டேன், எனவே வேறொரு சமயம் இதைப் பார்த்துக் கொள்ளலாம்.

4. நீங்கள் எப்போதும், “வாசகர்களின் கரங்கள் கட்டுப்படுத்த முடியாமல் மறு பக்கம் திருப்பச் செய்யும் நாவல்கள் எழுதுவதை விட, அவர்களை உள்ளிழுத்துக் கொண்டு மறு பக்கம் திருப்பவும் திருப்பாமல் இருக்கவும் விரும்பும் வகையில் அதன் கதகதப்பில் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்க நினைக்கும் நாவல்களை எழுதவே விரும்பியதாக,” சொல்லியிருக்கிறீர்கள். இந்த இரு வகை நாவல்களையும் ஒன்றிலிருந்து மற்றொன்றை வேறுபடுத்திக் காட்டும் குறிப்பிடத்தக்க தனித்தன்மைகள் எவை என்று நினைக்கிறீர்கள்? அண்மைக் காலத்தில் நீங்கள் வாசித்த புத்தகங்களில் ஏதேனும் அதன் பக்கங்களுக்குள் விரியும் உலகினில் நிலைகொண்டு தங்கி விட வேண்டும் என்று உங்களை விரும்பச் செய்திருக்கிறதா?

ஒரு நாவல் தொடர்ந்து வாசிக்கச் செய்யும் உரைநடை, ஆன்மாவை அசைக்கும் சொற்கட்டுமானம், நிஜ மனிதர்களைவிட அவர்களைப் புரிந்து கொள்ளும் விழைவை ஏற்படுத்தும் பாத்திரங்கள் கொண்டதாய், மெய்ம்மையைக் காட்டிலும் ஆன்மீக உச்சம் தொட்ட பரவச உணர்வு அளிக்கும் உலகைச் சித்தரிப்பதாய் இருக்கும்போது, அதை வாசித்து முடிக்கையில் எனக்கு வருத்தம் வருகிறது. குற்றமும் தண்டனையும், பட்டன்புரூக்ஸ் போன்ற படைப்புகள் மிகவும் நீளமாக இருக்கின்றன, ஆனால் அவற்றை முதல் முறை படித்து முடித்ததும் மூடி வைக்கும்போது உண்மையாகவே ஒரு துயரத்தை உணர்ந்தேன். கலைப் படைப்புகள் ஒரு வகை உக்கிரமான, புலன்களால் உணர்ந்து கொள்ளக்கூடிய அனுபவம் அளிப்பதுதான் இதன் காரணம் என்று நினைக்கிறேன். இன்னும் சமீப காலத்தைய உதாரணம் கொடுப்பதானால், ஹான் காங்கின் கதைகள் நான் இப்போது விவரித்த அனுபவத்தை எனக்கு அளித்திருக்கின்றன.

ஆனால் மறுபக்கம், நம்மை உள்ளிழுத்துக் கொண்டு பக்கங்களைத் திருப்பிக் கொண்டே இருக்கச் செய்யும் புத்தகங்களையும் நாம் விரும்பி வாசிக்கிறோம், ஒரு சில தொழில்நுட்ப உத்திகளைப் பயன்படுத்தி இதையே முக்கிய நோக்கமாகக் கொள்ளும் புத்தகங்கள் ஒரு வகை வெறுமை கொண்டவை.

5. யோகோவுக்கும் மகினோவுக்கும் இடையில் உள்ள ரசாயனத்தின் கூறுகளில் ஒன்று அவர்களது உரையாடல் பொதுவான விஷயங்கள் பற்றி இருப்பது. குறிப்பாய், துவக்க உரையாடலில் இவ்வுலகில் உள்ள அழகு பற்றி அவர்கள் பேசிக் கொள்வது என் கவனத்தை ஈர்த்தது. வன்முறை நிறைந்த திரைப்படங்களை ரசிக்கும் வகையில், “கொடூரத்தை ஏற்றுக் கொள்ளச் செய்வது,” போன்ற “கனமான பணிகளை எப்போதும் சுமந்து களைத்துப் போவதிலிருந்து,” அழகுக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்று மகினோ சொல்கிறான். யோகோ வேறொரு கோணத்தை முன்வைக்கிறாள். “இவ்வுலகின் கொடூரங்களில் இருந்து கணப்பொழுது கண்களை விலக்கிக் கொள்ளச் செய்யும் அதே ஆற்றல் அழகுக்கு உண்டு” (78-79) என்கிறாள் அவள். காதல் போன்ற உக்கிரமான, நிலையற்ற உணர்ச்சியைப் பற்றி எழுதும்போது அழகிய கணங்களை விவரிப்பதையும் கனமான கணங்களை விவரிப்பதையும் எப்படி சமநிலைப்படுத்திக் கொல்கிறீர்கள்? உரையாடல் கொண்டு இந்த சமநிலையை எப்படி வலுப்படுத்துகிறீர்கள்?

இந்த விஷயத்தில் இசையும் ஓவியமும் எனக்கு நிறைய கற்றுத் தந்திருக்கின்றன. ஒரு கதையின் ஒட்டுமொத்த ஓட்டத்தை இசைப் பதங்கள் கொண்டு தொகுத்துக் கொள்கிறேன். இதற்கு காரணம், இசை என்பது காலம் சார்ந்த கலை. மூவ்மெண்ட், டிரான்ஸ்சிஷன், ஹார்மனி, மெலடி போன்ற பதங்கள் சமநிலையையும் கதையோட்டத்தில் மாற்றங்களையும் கற்பனை செய்து பார்க்கவும் உதவுகின்றன.

ஆனால் ஒரு தனிக் காட்சியை அதன் நுண்தகவல்களோடு எழுதிக் கொண்டிருக்கும்போது எதை முன்னிலைப்படுத்துவது எதைப் பின்னணியில் வைப்பது என்பதற்கு இடையிலுள்ள சமநிலையை ஓவியப் பதங்கள் வழியே உணர்ந்து கொள்கிறேன். ஒவ்வொரு காட்சியிலும் எதை முழுமையாகவும் தெளிவாகவும் முன்னிலைப்படுத்த வேண்டும், எதைப் பின்னணியில் இருத்த வேண்டும், அதற்கென்று ஒரு தொலைவும் விரிவும் அளிக்க வேண்டும்.என்று நான் என்னிடமே கேட்டுக் கொள்கிறேன்.

THE PEN TEN: AN INTERVIEW WITH KEIICHIRO HIRANO, TRANSLATED BY ELI K.P. WILLIAM By: Viviane Eng