Author: பதாகை

பந்திபூர், மார்ச், 2014

– எஸ். சுரேஷ் –

“Or ask why notebooks (Simone Weil), diaries (Kafka), letters (Wallace Stevens) – fragments, ruins – the incomplete – are better (in)formed, and always tell us more.” –La pesanteur

காதுக்குள் ஒலி ஈர்க்கும் காந்தம் இருப்பதுபோல்
மெல்லிய சப்தம் கேட்டு கழுத்தைச்
சட்டெனத் திருப்பும் புள்ளிமான்கள் எல்லாம்
அமைதியாய் ​ ​நின்று கொண்டிருக்கும் இந்தக் கூட்டத்தில்
ஒரே ஒரு கன்னிமான்
அங்கும் இங்கும் தாவிக் குதிக்கிறது.

அசையாமல், அமைதியாய், மரங்களின் நடுவில்,
தீராத காமத்தைத் தன்னுள் அடக்கிக்கொண்டு
வெளியுலகுக்கு புத்தனைப் போல் காட்சியளித்து நிற்கிறது
பெரிய தந்தங்கள் கொண்ட ஒற்றை யானை.

சுண்ணாம்பு பூசிய உடல், கரி பூசிய முகம், வானுயரும் வால்.
பழங்களின் ருசி அலுத்துப்போன குரங்கு
மானிட வருகைக்காக சாலையோரம் வந்தமர்கிறது.

பள்ளிக்கு நேரமாகிவிட்டது போல் விரைகிறது
காட்டுப்பன்றி,
அதன் பின்னால் வரிசையாய் நான்கு
பன்றிக் குட்டிகள்.

மரங்களின் நடுவில் விழும் சூரிய ஒளியில்,
மஞ்சள் நிற இலைகளில், அசையும் புதர்களில்,
எங்கும் புலியைத் தேடுகின்றன என் கண்கள்;
காண முடியாத அந்தப் புலி
காடெங்கும் வியாபித்திருக்கிறது.

மழை வரும் தருணத்தை எதிர்பார்த்து நிற்கிறது
ஒரு மயில்,
அதன் தோகை விரியும் தருணத்தை எதிர்பார்த்து
நான்.

உண்பதற்கே உணவு, ருசிப்பதற்கன்று
என்ற பெரும் தத்துவமறிந்த ஞானி போல்
புல்லை மென்று கொண்டிருக்கிறது காட்டெருமை.

இலைகளின் சலசலப்பு, பறவைகளின் கூக்குரல்,
உஷ்ஷ் என்று மரங்களை வருடிச் செல்லும் காற்று,
குரங்குகளின் கூச்சல், பூச்சிகளின் இடைவிடாத சப்தம்
என்று அடங்காத பேச்சு ஓயாத சலனத்தில்
இருக்கிறது காடு –
என்னுள் பேரமைதி.

நெடுஞ்சாலை புத்தரும் ஒரு பாதசாரியும்

                                                                                                                            – நரோபா –

“ஏன் நீங்கள் உங்களைப் பற்றி எந்த வரலாற்றையும் வருங்கால சந்ததியினருக்காக விட்டுச் செல்வதில்லை ? “என்று கேட்டேன். அதற்கு அவர், “ நாங்கள் சகஜ முறையை ( எளிய வாழ்க்கையை ) கடைபிடிக்கிறோம் என்பதால் எங்களுக்குப் பின் எந்த சுவடுகளையும் விட்டுச்செல்வதில்லை” என்று சொன்னார். அலைகள் மெல்ல ஓய்ந்து, ஆற்றுப்படுகையில் சிறிய அளவில் நீர் இருந்தது. சேற்றில் சில ஓடங்களை ஒடக்காரர்கள் இழுத்துச் சென்றனர். சேற்றில் ஓடம் தன் தடத்தை விட்டுச் சென்றது. அவர் தொடர்ந்து பேசினார், “ஆற்றின் வெள்ளப் பெருக்கில் மிதக்கும் ஓடம் என்றேனும் தடத்தை விட்டுச் செல்கிறதா? சேற்றில் உழலும் ஒடக்காரர்கள் அவர்களுடைய சிறுமையின் வெளிப்பாடாக நீண்ட தடத்தை மண்ணில் விட்டுச் செல்கின்றனர். இது சகஜ வழியல்ல.”
க்ஷிதி மோகன் சென், இந்து ஞானம் ஒரு எளிய அறிமுகம், வங்காளத்து பால்கள்.

2012 ஆம் ஆண்டு கவிஞர் தேவதேவனை கவுரவிக்கும் விதமாக கோவையில் நடைபெற்ற விழாவிற்கு வந்திருந்த மலையாள கவிஞர் கல்பட்டா நாராயணன் அவர்களுடன் கவிதை குறித்து நண்பர்கள் அளவளாவுவதைக் கேட்டுக்கொண்டிருக்கும் வாய்ப்பு எனக்கும் கிட்டியது. அப்போது நெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள் தொகுப்பில் இடம்பெற்றுள்ள மலையாள கவிஞர் கல்பற்றாவின் கவிதைகளை நண்பர்கள் வாசித்து விவாதித்தனர். அந்த informal கூடுகையில் பங்குகொண்ட நண்பர்களுக்கு அது ஒரு மறக்க முடியாத அனுபவம். எனக்கும்கூட. கவிதை குறித்தான புதிய திறப்புகள் சாத்தியமாகின. கல்பட்டாவை எனக்கே எனக்கான கவி என என் அகம் கண்டு கொண்ட தருணம் அது. (more…)

மெஹருன்னிசா

– எஸ். சுரேஷ் –

அந்தப் பெண் அவனை இறுக்கமாக கட்டிக்கொண்டிருந்தாள். அந்த பையனோ சிரித்துக்கொண்டே ஸ்கூட்டரை வேகமாக ஓட்டிக் கொண்டு போனான். இதைப் பார்த்த பஷீர் பாய், “எப்படி இன்டீசென்ட்டா இருக்காங்க பாரு. இவங்க ஒத்தர ஒத்துரு சீக்கிரமா கைவிட்டுடுவாங்க. ஒத்தர ஒர்த்தரு கைவிடாத ஒரு காதல் கத சொல்றேன். உட்காருங்க,” என்றார்.

“காதல் கதையா?” என்று நான் இழுத்தேன்.

“ஆமாம்டா. உனக்கு எப்போவும் பேய் கததான் வேணும். உட்கார்ந்து இந்தக் கதைய கேளுங்க” என்று உத்தரவிட்டார் பஷீர் பாய். நாங்கள் எல்லோரும் திண்ணையில் அவர் அருகில் உட்கார்ந்தோம்.

“மெஹருன்னிசா எங்க உறவுக்கார பெண். அவ ராகவன்னு ஒரு பையன காதலிச்சா. ராகவன் ஒரு பம்மன். அதிலும் அவன் ஒரு நாமம்தார்,” என்றார் பஷீர்.

“ஐயங்கார்,” என்றான் மோகன். அவன் ஒரு ஐயங்கார். அவனுக்கு ஐயங்கார்களை நாமம்தார் என்று கூப்பிட்டால் கோபம் வரும்.

“உன்னப் போலதான்டா” என்றார் பஷீர் பாய் மோகனைப் பார்த்து. (more…)

கரும்புனல் குறித்த சிறிய குறிப்பு

பாஸ்கர் லக்ஷ்மன்

இந்தப் புனைவைப் படிக்கத் தொடங்கியவுடன் 1980 களில் மேற்கொண்ட பீகார் மற்றும் உத்திரப்பிரதேச பயணம் தான் நினைவில் வந்தது. துப்பாக்கியை தோளில் மாட்டிக் கொண்டு சாதாரணமாக திரிந்து கொண்டிருந்த குண்டர்களை பாட்னா இரயில் நிலையத்தில் காண நேர்ந்ததை இன்று நினைத்தாலும் மனம் பதறுகிறது. ஆனால் அதெல்லாம் சகஜம் போல அங்கிருந்தவர்களின் நடவடிக்கைகள் இருந்தன. வாரணாசி கடைத்தெருவில் ஒரு குண்டா ஐந்தாறு பேர்களுடன் வருவதைப் பார்த்து எல்லாக் கடைகளும் மூடப்பட்டன, அவர்கள் கடந்து சென்றவுடன் மீண்டும் திறந்தார்கள். அப்போது தான் தமிழ்நாட்டில் எவ்வளவு பாதுகாப்பாக வாழ்கிறோம் என உணர முடிந்தது.

தன் பீகார் அனுபவத்தை மையமாகக் கொண்டு நாவலாசிரியர் ராம்சுரேஷ் தன் புனைவை கனகச்சிதமாக எழுதியுள்ளார். மிக எளிமையான, சரளமான நடை. சிக்கலில்லாத, திட்டமிட்டு அமைக்கப்பட்ட கதைக்களம். இந்தியாவில் ஊழல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஜாதியம் மூன்றும் தான் அரசாங்கம், அதிகாரவர்க்கம் மற்றும் மக்கள் எனும் முக்கோணப் புள்ளிகளை இணைக்கும் கண்ணிகளாக இருக்கின்றன. அதிலும் பீகாரில் கேட்கவே வேண்டாம். இதனுடைய ஓர் அனுபவப் புனைவு தான் கரும்புனல் எனலாம். (more…)

அதிகாரத்தின் ஆடுகளமாகும் உறவுகள்

– அஜய் ஆர். – 

அதிகாரம் என்பது நாட்டின் தலைவராகவோ, அல்லது வேறு உயர் பதவியில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்கையை மாற்றும் சக்தியோடு இருப்பதோ, ஒரு இனக் குழு மற்றொன்றின் மீது ஆதிக்கம் செலுத்துவதோ மட்டும்தான் என்றில்லை. ‘சாதாரண மனிதர்களான’ நாம், நம் அன்றாட வாழ்க்கையில், நம்மையறியாமலேயே சக மனிதர் மீது அதிகாரம் செலுத்துபவராக இருக்கிறோம். பிள்ளைகளின் நன்மைக்காக என்று சொல்லி, படிப்பு முதல் திருமணம் வரை தங்களின் ஆசைகளை தங்கள் குழந்தைகள் மீது திணிக்கும் பெற்றோர், மனைவியின் உடை, பேச்சு, வேலைக்கு செல்லும் அவள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கும் கணவன், தன் உயரதிகாரியின் அதிகாரத்திற்கு கூழை கும்பிடு போட்டு, அந்தக் கோபத்தை தனக்கு கீழ் வேலை செய்பவர்கள் மீது காட்டுபவர் என அதிகாரம் எல்லா உறவுகளிலும் பரவி உள்ளது. (more…)