Author: பதாகை

கணவாய்ப் பாதை

எஸ். சுரேஷ் 

பின்-பார்வதி கணவாய்ப் பாதை தன்னை அழைப்பது போல் அவளுக்கு தோன்றியது. பௌர்ணமி இரவில் வானெங்கும் நட்சத்திரங்கள் அமைதியான நதி போல் நகர்ந்து கொண்டிருந்தன. பாறை மேல் மோதி மேலெழும் பார்வதி நதியின் நீர்த்திவலைகள் நிலவொளியில் பளபளத்தன. வைர விண்மீன்களுக்கு மத்தியில் முத்துபோல் பௌர்ணமி நிலவு ஜொலித்துக் கொண்டிருந்தது. குளிர்க்காற்று அவளைத் தழுவி, ஊடுருவிச் சென்றது. இரு பனிச்சிகரங்களுக்கு இடையில் வெண்பனிக் கம்பளம் விரித்தது போல் நீளும் பின்-பார்வதி பாஸ் தெளிவாக புலப்பட்டது. தான் ஒரு மாய உலகத்துக்குள் நுழைந்துவிட்டோம் என்று அவளுக்கு தோன்றியது.

கணவாய் வழியை உற்று நோக்கிக் கொண்டிருந்த அவளைப் பார்த்து அவன் சிரித்தான். நாளை காலை நாம் பாஸை தாண்டியிருப்போம். அவன் பேசும்போது முகத்தையே அபரிதமான அன்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் மேல் இருந்த காதல் சூழலின் காரணத்தினால் பன்மடங்கு அதிகரித்திருந்தது.

ஜாக்கெட்- யெஸ், ஷூஸ்- யெஸ், வாக்கிங் ஸ்டிக்- யெஸ், காகில்ஸ்- யெஸ், சாக்ஸ்- யெஸ், டார்ச்- யெஸ், பேட்டரி- யெஸ், போஞ்சோ- யெஸ், வாட்டர் பாட்டில்- யெஸ், காப்- யெஸ். அவன் ஒவ்வொன்றாகச் சொல்ல, அவை எல்லாம் வாங்கியாயிற்றா என்று அவள் சரிபார்த்தாள். அதன் பின், மைசூர் ரோட்டில் டெய்கத்தலன் கடையிலிருந்து கிளம்பி ஜயநகர் தர்ட்வேவ் காஃபி ஷாப்பில், மங்கிய ஒளியில் அவளுக்கு அவன் ப்ரபோஸ் செய்தபோது அந்தக் கடையில் யாரும் இல்லை. சந்திப்பொழுது இரவாக மாறும் தருணம். வீடு திரும்பும் பறவைகளில் ஓசை. அதற்கு தோதாக வாகனங்களின் ஒலிக்கு நடுவே மெல்லிய குரலில், “உன்னை எனக்கு பிடித்திருக்கிறது. நீ சரி என்றால் நாம் திருமணம் செய்து கொள்ளலாம்.”

அவளுக்கும் அவனை பிடித்திருந்தது. இரண்டு வருடங்களாக அவனுடன் பழகுகிறாள். உத்தரகண்ட்டில் வேலி ஒஃப் ஃபிளவர்ஸ் டிரெக் சென்றபோது அவனை முதல் முறையாக சந்தித்தாள். அந்தச் சந்திப்பு பெங்களூரில் நட்பாக மாறியது. இருவரும் ஒன்றாக காலை வேளையில்   எக்ஸ்சர்சைஸ்  செய்ய ஆரம்பித்தனர். ஜயநகர் பஸ் நிலயத்தில் சந்தித்து, கிருஷ்ணா ராவ் பார்க் வழியாக லால் பாக் வெளிச்சுவரைச் சுற்றி ஓடினர். வார தினங்களில் ஐந்து கிலோமீட்டரும், வார இறுதியில் இருபது கிலோமீட்டரும் ஓடினர். தினமும் ஜெயநகரில் ஒரு ஜிம்மில் ஒரு மணி நேரம் கழித்தனர். இருவருக்கும் ஒரே வகையான உடல்வாகு. ஒல்லியான தேகம், முறுக்கேறிய கால்கள், நீள முகம், மாநிறம், உடம்பில் கொழுப்புக்கு இடமில்லை. டிராக் பாண்ட், டீ ஷர்ட்-  அவன் கை வைத்தது, அவள் கை வைக்காதது- நைக்கி ஷூஸ், கையில் ஃபிட் பிட், காதில் ஹெட்போன் என்று சீருடை உடுத்தியது போல் இருவரும் ஓடினர். சில நாட்களில் இரவு சந்தித்து டின்னர் செய்தனர். அவளுக்கு அவன் கேட்ட உடனே, யெஸ் உன்னை நானும் காதலிக்கிறேன், என்று சொல்லிவிட வேண்டும் போல் இருந்தது. ஆனால் ஏதோ ஒன்று அவளைத் தடுத்தது. அவள் மனம் மகிழ்ச்சியில் குதித்துக் கொண்டிருந்தது, உடம்பெல்லாம் விவரிக்க முடியாத உணர்வு. அவனை உடனே கட்டிக்கொள்ள வேண்டும் என்று மனம் பரபரத்தது. தன்னை வெளியே விடப் போகிறார்கள் என்று கதவை திறந்ததும் அறிந்து கொண்ட நாய் குதிப்பது போல் அவள் மனம் குதித்தது. ஒரு சிறு புன்னகையுடன், “எஸ்” என்று சொன்னாள். நாம் வீட்டில் எப்பொழுது சொல்வது. டிரெக்கிலிருந்து திரும்பி வந்தவுடன் சொல்லிவிடலாம்.

அன்று இரவு முழுவதும் அவள் தூங்கவில்லை. இப்பொழுது அவளுக்கு ஒரு துணைவன் கிடைத்துவிட்டான். இதுவரையில் இருந்த பயம் இனி தேவையில்லை. இந்த முறை அவள் உச்சத்தை நிச்சயம் தொடுவாள். அவன் என்னுடன் கைகோர்த்து உச்சியில் நிற்பான். உன்னை அலுவலகத்தில் ஃபின்லேண்ட் போகச் சொன்னார்கள். சென்றிருந்தால் இன்று நீயும் பெரிய பதவியில் இருந்திருப்பாய். பிறகு சென்னை சென்று ப்ராஜக்ட் தலைமை பதவி ஏற்கச் சொன்னார்கள். அதையும் உன் பயத்தால் மறுத்தாய். எவ்வளவு நாள்தான் உயரங்களைக் கண்டு அஞ்சுவாய்? நாம் பார்வதி பள்ளத்தாக்கில் இருக்கிறோம். பின்-பார்வதி கணவாய் வழி தாண்டிவிட்டால் நாம் ஸ்பிதியில் உள்ள பின் பள்ளத்தாக்கை அடைவோம். இந்த பக்கம் பார்வதி நதி ஓடுகிறது, அந்த பக்கம் பின் நதி. குலு மாவட்டத்திலிருந்து ஸ்பிதி மாவட்டம் செல்லப் போகிறோம். நாம் நாளைக்கு டிரெக் ஆரம்பிப்போம். எட்டாவது நாள் பின்-பார்வதி பாஸ் கடப்போம். ஒன்பதாவது நாள் முத் என்ற கிராமத்தை அடைந்து அங்கிருந்து காஜா செல்வோம். பிறகு நீங்கள் பஸ் பிடித்து குஞ்சும் பாஸ் வழியாக மணாலி செல்வீர்கள். பின்-பார்வதி பாஸ் 17500 அடி உயரத்தில் உள்ளது. அந்த உயரத்தில் ஆக்ஸிஜென் கம்மியாக இருப்பதால் உங்களுக்கு மூச்சிரைக்கும். இது கடினமான டிரெக். இதை மேற்கொள்ள உடம்பில் தெம்பு வேண்டும்.

கைடு டிரெக் பற்றி விவரித்துக் கொண்டிருந்தான். அவனும் அவளும் முதுகில் இருபத்தைந்து கிலோ கனக்கும் பையை சுமந்துக்கொண்டு இருபது கிலோமீட்டர் ஓட்டப்பயிற்சி எடுத்தது ஞாபகம் வந்தது.

நீங்கள் இருவரும் ஃபிட்டாக இருக்கிறீர்கள். உங்களால் இந்த டிரெக்கை சுலபமாக முடிக்க முடியும்.

அவள் முகத்தில் பெருமிதம் பரவியது.

ஷூஸ்- யெஸ், வாக்கிங் ஸ்டிக்- யெஸ், போஞ்சோ- யெஸ். இந்த முறை கசொல் என்னும் இடத்தில் கைடு இந்த கேள்விகளை கேட்க இருவரும் யெஸ் என்று பதில் சொன்னார்கள். இவர்கள் இருவருடன், ஒரு கைடு மற்றும் இரு போர்டர்கள் நடந்தார்கள். போர்ட்டர்கள் இவர்கள் சாமானையும், வழியில் சமைக்க வேண்டிய அடுப்பு மற்றும் பண்டங்களையும் சுமந்து கொண்டு வந்தார்கள். இவர்கள் கிளம்பும்பொழுது இன்னொரு குழுவும் கிளம்பியது. அதில் இரு ஆண்கள் மற்றும் ஒரு பெண். அந்த பெண் சற்று பருமனாக இருப்பது போல் இவளுக்கு தோன்றியது. தினமும் உடற்பயிற்சி செய்பவள் போல் தோன்றவில்லை. அவளைப் பார்த்த கைடு இந்த உடம்பை வைத்துக்கொண்டு இவளால் பின்-பார்வதி பாஸ் கடக்க முடியாது என்றான். அந்த மூவரும் உற்சாகமாக இருந்தார்கள்.

முதல் நாள் பயணம் அதிகம் சிரமமில்லாமல் நிகழ்ந்தது. மாலை பார்வதி நதிக்கரையில் எல்லோரும் சேர்ந்து டெண்ட் போட்டார்கள். இவள் ஒரு டெண்டிலும் அவன் ஒரு டெண்டிலும், இன்னொரு பெரிய டெண்டில் கைடு மற்றும் போர்டர்கள் தங்கினர். முதலில் அந்த பெரிய டெண்டில் டீ போட்டு எல்லோரும் குடித்தார்கள். நாம் சட்டென்று உறங்கப் போகக்கூடாது. சற்று நேரம் உடற் பயிற்சி செய்வோம் என்று கைடு சொன்னான். புளூடூத் ஸ்பீக்கரில் பாடவிட்டு இருவரும் கைடுடன் சேர்ந்து பாட்டின் தாளகதியில் உடற்பயிற்சி செய்தனர். வேறொரு குழுவில் வந்த மூவரும் ஏதோ ஹிந்தி பாட்டுக்கு நடனம் ஆடினர். இரவு சப்பாத்தியும் உருளைக்கிழங்கு பொரியலும் சாப்பிட்டுவிட்டு இருவரும் பாறை மேல் உட்கார்ந்து சூழ்ந்திருந்த மலைகளை பார்த்துக் கொண்டிருந்தார்கள். சில்லென்று குளிர்க்காற்று வீசியது. நதி நிலவொளியில் பளபளத்தது. பூச்சிகளின் குரலோசை, நதியின் சலசலப்பு என்று சப்தங்கள் நிறைந்த இடமாக இருந்தது. வானை நோக்கியபொழுது இந்த சப்தங்களை மீறிய ஏதோ ஒரு அமைதி அவள் மனதில் குடிகொண்டது. யாரும் இல்லாத இந்த பிரதேசத்தில் உலகமே எனக்கு சொந்தம் என்று அவள் நினைத்துக் கொண்டாள். அடுத்த நாள் வெளிச்சம் வரும் முன்னே எழுந்து காலைக்கடன்களை முடித்தாள். டிரெக் செல்லும்பொழுது நம் இயற்கை உபாதைகளையெல்லாம் திறந்தவெளியில்தான் போக்க வேண்டும். மூன்றாவது டிரெக் என்பதால் அவளுக்கு இது பழகிவிட்டிருந்தது. காலை பிரட் டோஸ்ட் மற்றும் ஜாம் சாப்பிட்டு, டீ குடித்துவிட்டு நடக்க ஆரம்பித்தார்கள். ஒரு மணி நேரம் நடந்த பின், முதல் தடையைச் சந்தித்தனர். இருபது அடி உயர பாறை அவர்கள் பாதையை மறித்தது. பாறையின் பக்கவாட்டில் ஏறி, இன்னும் மேலே ஏற வேண்டும். பின்பு மெதுவாக கீழே இறங்க வேண்டும். சாகசம் நிறைந்த செயல் இது. கீழே பார்வதி நதி ஓடிக்கொண்டிருந்தது. கால் தவறி கீழே விழுந்தால், தலை பாறை மேல் மோதும், உடல் உருண்டு சென்று பார்வதி நதியில் விழும். பாறையைக் கடக்க வேண்டாம் என்றால் வேறொரு பாதையில் ஒரு மணி நேரம் அதிகம் நடக்க வேண்டும். இரண்டாவது குழுவில் இருந்தவர்கள் பாறையைக் கடக்க தயாரானார்கள். அந்த குழுவில் இருந்த பெண்ணின் முகத்தில் பயம் தெளிவாக தெரிந்தது. இப்படித்தான் செல்ல வேண்டுமா. ஆம். நாம் இப்படி தான் செல்லப் போகிறோம், நமக்கு ஒன்றும் ஆகாது என்றான், அவளுடன் இருந்த ஆண். அவர்களின் கைடு முன்னே செல்ல, ஒருவரின் கையை மற்றவர் பிடித்துக்கொண்டு வெகு ஜாக்கிரதையாக பாறை மேல் நடக்க ஆரம்பித்தனர். ஓரிடத்தில் அந்த பெண்ணின் கால் சற்று சறுக்கியது. ஐய்யோ. கைடு அவள் கையை இறுகப் பற்றியிருந்தான். ஓ மை காட் என்று உரக்க கத்தினாள். அவளுடன் இருந்த ஆண், கூல் டவுன், என்றான். நாங்கள்  உன்னைக் கைவிட மாட்டோம். தைரியமாக வா. மறுபடியும் மெதுவாக நடக்க ஆரம்பித்து பாறையின் பின்னால் மறைந்தனர். அவளுக்கு அந்தப்  பெண்ணின் குரலை கேட்டதும் உடம்பெல்லாம் சில்லிட்டது. முதுகில் வேர்வை துளிகள் உறைவது போல் உணர்ந்தாள். பாறையைப் பார்த்தாள், பிறகு வெகு தூரம் கீழே ஓடும் பார்வதி நதியை பார்த்தாள். பாறையின் மேல் உருண்டால் அதோ கதிதான். அவள் முகத்தை பார்த்துக் கொண்டிருந்த அவன் நாம் மேல் வழியாகச் செல்லலாம். நேரம் அதிகம் ஆனாலும் பரவாயில்லை என்றான். கைடு முகத்தில் ஏமாற்றம். பாறையைத் தவிர்த்து இன்னொரு பாதையில் நடக்க தொடங்கினர். போர்டர்கள் மட்டும் பாறையைக் கடக்க முடிவெடுத்தனர்.

இரண்டு நாள் கழித்து அடுத்த தடை வந்தது. அவர்கள் பார்வதி நதியைக் கடக்க வேண்டும். நதி பாறைகளின் மேல் மோதிச் சுழன்று வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. தெளிவான நீரோட்டம். ஓரிடத்தில் நதியைக் கடக்க மரக்கிளையை குறுக்காக வைத்திருந்தார்கள். அதன் மேல் வெகு பத்திரமாக நடக்க வேண்டும்.அகலம் மிகவும் குறைவாக இருக்கும் கிளை. சரியாக நடக்கவில்லை என்றால் ஓடும் நதியில் விழ வேண்டும். ஆழம் அதிகம் இல்லை என்றாலும், தண்ணீர் சில்லென்று ஐஸ் கட்டி போல் இருக்கும். துணியெல்லாம் ஈரமாகிவிடும். இன்னும் ஒரு கிலோமீட்டர் முன்னால் சென்றால் தண்ணீருக்குள் இறங்கி நதியைக் கடக்க முடியும். அங்கு கணுக்கால் அளவு தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும். இன்னொரு குழுவினர் மரக்கிளை மேல் ஏறி நதியைக் கடக்க ஆரம்பித்தனர். அந்தப் பெண் ஆணின் கையை பிடித்துக்கொண்டு ஏதோ அடிப்பிரதக்ஷிணம் செய்வது போல் அடிமேல் அடி வைத்தாள். நதிக்கு நடுவில் இருக்கும் பொழுது அவர்களுடன் இருந்த இன்னொரு ஆண் கால் வழுக்கி நதியில் தொபீர் என்று விழுந்தான். அந்தப் பெண்ணும் ஆணும் சிரிக்க ஆரம்பித்தனர். விழுந்தவன் எழுந்து அவர்களுடன் சிரித்தான். இந்த குளிர் என்னை கொல்கிறது என்று கூறிக்கொண்டே இடுப்பு அளவு தண்ணீரில் நடந்தே நதியைக் கடந்து, கரையில் துணி மாற்ற ஆரம்பித்தான். அவர்களை உற்று நோக்கிக் கொண்டிருந்தவளை பார்த்து, நாம் இன்னும் முன்னே சென்று நதியை கடப்போம். ஆம். எனக்கு இப்படி நதியில் விழுவது பிடிக்காது என்று சொல்லிவிட்டு சிரித்தாள். இருவரும் நடக்க தொடங்கினர்.

நாளை நாம் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும். காலை நான்கு மணிக்காவது கிளம்ப வேண்டும். சூரியோதயம் ஆகிவிட்டால் பனி உருக ஆரம்பிக்கும். பிறகு ஏறுவது மிக கடினம். நன்றாக தூங்குங்கள். நாளை நாம் 17500 அடியில் இருப்போம். மூச்சுவிட கஷ்டப்படுவீர்கள். அதனால் நன்றாக உறங்கி தெம்பாக கிளம்புங்கள்.

மாலை ஏழு மணிக்கு எல்லோரும் சாப்பிட்டு முடித்துவிட்டார்கள். எட்டு மணிக்கு பௌர்ணமி சந்திரன் வானில் பிரகாசித்தான். இரண்டு பனிமலைகளுக்கு நடுவே பின்-பார்வதி பாஸ் தெளிவாக தெரிந்தது. நாளை உச்சியை அடைந்துவிடுவோம். ஆம். நான் முதல் முறையாக இது போன்ற ஒரு உயரமான கணவாய் வழியை தாண்டுகிறேன்..

அவர்கள் கணவாய் வழியை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். இன்னும் பதினைந்து அல்லது இருபது நிமிடங்களுக்குள் அவர்கள் அதை அடைந்து விடுவார்கள். மகிழ்ச்சி அவள் மனதில் பார்வதி நதி போல் துள்ளியோடியது. என்னாலும் சிகரங்களை தொடமுடியும் என்று எனக்கும்  இந்த உலகத்திற்கும் உரக்க சொல்லும் நேரம் அதிக தொலைவில் இல்லை. அவள் அவனை பார்த்து சிரித்தாள். அவனும் புன்னகை புரிந்தான். இருவர் முகத்திலும் சாதனையின் ஒளி பரவியிருந்தது. அப்பொழுது தான் அந்த அசம்பாவிதம்  நிகழ்ந்தது. முதலில் ஒரு சிறு கல் உருண்டு வருவது போல் இருந்தது. அவள் அதைப் பார்த்து சிரித்தாள். கைடைப் பார்த்தப்போது அவன் முகம் வெளிறி இருந்தது. ருக்கோ. எல்லோரும் நின்றார்கள். இந்த முறை பெரிய கல் ஒன்று உருண்டு கொண்டு அவர்களை கடந்து சென்றது. மேடம். இஸ் சைட் ஆவோ. அவள் கைடு இருக்கும் பக்கம் செல்ல நினைத்தபொழுது மலையே கீழிறங்குவது போல் பெரிய பனித் திரள் இவர்களை நோக்கி உருள ஆரம்பித்தது. நஹீஂ. ஓ நோ. பாகோ. லெட் அஸ் ரன். அவளால் நகர முடியவில்லை. பனி தன் கைகளைக் கொண்டு அவள் காலை பிடித்துக் கொண்டது போல் அவள் அங்கேயே சிலை போல் நின்று தன்னை நோக்கி வரும் பனித்திரளை பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த திரள் பிரம்மாண்டமாக வளர்ந்து கொண்டிருந்தது. விஷ்ணுவின் விஸ்வரூபத்தை அர்ஜுனன் தரிசித்தது போல் அவள் அதை பார்த்துக்கொண்டு நின்றாள். அவன் அவள் கையைப் பற்றி இழுத்தபொழுதுதான் அவளுக்குள் திகில் திடீரென்று புகுந்தது. ஐயோ என்று கூக்குரலிட்டாள். பனி அவள் மீது படர்ந்தது. ஐயோ என்ற எதிரொலி இப்பொழுது கேட்டது. வெள்ளைப் பனி அவள் மேல் படர்ந்திருந்தாலும் அவள் இருளுக்குள் தள்ளப்பட்டாள். மூச்சு இரைத்தது. அவள் மேல் பனியின் பாரம் அதிகரித்தது. கையை அசைக்கப் பார்த்தாள். முடியவில்லை. காலை அசைக்கப் பார்த்தாள். முடியவில்லை. மூச்சு திணருவதை நன்றாக உணர்ந்தாள். மெதுவாக ஒரு மெல்லிய ஒளி தூரத்தில் தோன்றியது. பேச்சு சத்தம் கேட்டது. என்னை யாரோ காப்பாற்ற வருகிறார்கள். நான் பிழைத்துவிடுவேன். கண் முழித்துப் பார்த்தாள். அவள் டெண்டில் ஸ்லீபிங்க் பாக்குக்குள் இருந்தாள். கனவு. வெளியில் இன்னொரு குழு மலையேற தயாராகிக் கொண்டிருந்தது. இருட்டு. டார்ச் வெளிச்சம், பேச்சு சத்தம். அவளுக்கு உடம்பு முழுக்க வேர்த்திருந்தது. மூச்சு விடுவது கடினமாக இருப்பதை உணர்ந்தாள். இன்னும் படபடப்பு ஓயவில்லை. தூங்குவதற்கு கண்ணை மூடினாள். ஆனால் தூக்கம் வரவில்லை. வெளியில் பெண்ணின் குரல் கேட்டது. டெண்ட் ஜிப்பை திறந்து வெளியே பார்த்தாள். வேண்டாம். என்னால் மலை ஏற முடியும் என்ற நம்பிக்கை இல்லை. நான் உன்னுடன் இருக்கிறேன். உன்னால் முடியும். சொன்னால் கேள். என்னால் முடியாது. இவ்வளவு தூரம் வந்துவிட்டு கைவிடக்கூடாது. ஆண் அந்த பெண்ணின் கையை பிடித்து தன் பக்கம் இழுத்தான். அவளை அணைத்துக்கொண்டு, நான் இருக்கிறேன். பயப்படாதே. அவர்கள் எல்லோரும் நடக்க தொடங்கினர். அவள் மறுபடியும் ஸ்லீபிங்க் பாக் உள்ளே சென்று கண் மூடினாள்.

அவள் விழித்தபொழுது மெல்லிய ஒளி பரவத் தொடங்கியிருந்தது. டெண்ட்டுக்கு வெளியே வந்தாள். குட் மார்னிங். குட் மார்னிங். என்னை ஏன் எழுப்பவில்லை? நீ தூக்கத்தில் பெரிதாக அலறினாய். நானும் கைடும் உன் கூச்சல் கேட்டு எழுந்தோம். நீ மை காட் மை காட் என்று அரற்றிக் கொண்டிருதாய். அதனால் உன்னை எழுப்பவேண்டாம் என்று சொன்னேன். நீ பயந்திருக்கிறாய் என்று எங்களுக்கு தெரிந்தது. அவளைப் பார்த்ததும் கைடு அருகே வந்தான். நாம் இப்பொழுதே கிளம்பினால் பாஸை கடக்க முடியும் ஆனால் வெளிச்சம் வந்துவிட்டதால் ஒரு சிறிய ரிஸ்க் இருக்கத்தான் செய்கிறது. என்ன சொல்கிறீர்கள். இன்று தங்கிவிட்டு நாளை அதிகாலையில் ஏறலாமா? ஏறலாம் ஆனால் நாளை வெதர் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. நாளை ஏற முடியவில்லை என்றால் நம் பாடு திண்டாட்டம் ஆகிவிடும். நம்மிடம் உள்ள சாப்பாட்டை வைத்துக்கொண்டு இன்று திரும்பச்  சென்றால் நாம் கசொல் அடைந்துவிடலாம். அதே போல் பாஸை கடந்துவிட்டால் உணவுக்கு அபாயமில்லை. நாளை முடியாவிட்டால் அபாயம்தான். இப்பொழுதே கடப்பதா இல்லை திரும்பிச் செல்வதா?

அவள் குழப்பத்தில் இருந்தாள். சிகரம் தொடவேண்டும். இந்த கணவாய் வழியைத் தாண்ட வேண்டும். ஆனால் அந்த கனவு அவளை அச்சுறுத்தியது. ஒரு வெள்ளை ஸ்மாசனத்தில் நாம் புதைக்கப்பட வேண்டுமா? யாரும் இல்லாத  ஓரிடத்தில் பனிக்கு அடியில் பிணமாய்க் கிடக்க வேண்டுமா? ஆனால் இடர்களை தகர்த்தெறியத்தானே வந்தாய். உயிரைக்  கொடுத்து அதை தகர்க்க வேண்டாம். இல்லை. நானும் எல்லா தடைகளையும் எதிர் கொள்வேன். உயிர் போனபின் தடையேது? அவனைப்  பார்த்தாள். அவன் அவள் மனதில் இருப்பதையே சொன்னான். அவலாஞ்ச் வந்தால் நம் கல்லறை எது என்று யாருக்கும் தெரியாது. அப்பொழுது கைடு அவனிடம் சொன்னான், நீங்க தான் மேடமுக்கு தைரியம் கொடுத்து ஏற சொல்லணும். கொஞ்ச ரிஸ்க் இருக்கு ஆனா இவ்வளவு தூரம் வந்த பிறகு ஏன் திரும்பிப் போகணும்? அவள் அவன் முகத்தை உற்றுப் பார்தாள். அவன் சரி போகலாம் என்று சொன்னால் கிளம்பிவிடுவாள் போல் பட்டது.

அவன் அவளை பார்த்தான். மறுபடியும் பாஸை பார்த்தான். உன் உடல்நலம் நன்றாக இல்லை. உனக்கு பயத்தால் வேர்க்கிறது. இருவரும் பாஸ் இருக்கும் பக்கம் பார்த்தனர். ஏறிக்கொண்டிருந்த பெண் ஒரு இடத்தில் நின்றிருந்தாள். அவள் மூச்சிறைப்பது இவர்களுக்கும் கேட்பது போல் தோன்றியது. அவள் தலையை இல்லை என்பது போல் ஆட்டிக் கொண்டிருந்தாள். முட்டி மேல் இரு கைகளையும் வைத்துக்கொண்டு குனிந்திருந்தாள். அவர்கள் பாதி தூரத்தை கடந்து விட்டிருந்தார்கள். அவர்கள் நின்ற இடத்திலிருந்து மலை செங்குத்தாக இருந்தது. அவன் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான். தன்னிடம் ஏதாவது கேட்பான் என்று அவள் காத்திருந்தாள். அவன் இருவருக்குமான முடிவை எடுத்துவிட்டிருந்தான். திரும்பிச் செல்லலாம். கைடு முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. இவளுக்கு தன்னுள் என்ன நடக்கிறது என்று புரியவில்லை. இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.

கசொல் வந்து சேர்ந்தபோது சிக்னல் கிடைத்தது. கைடு இவர்களைப் பார்த்து இன்னொரு குழு பாஸை தாண்டி இன்று காஜாவில் இருக்கிறார்கள். அவர்களின் கைடு எனக்கு இந்த படங்களை அனுப்பினான். அந்த பெண் பின்-பார்வதி பாஸில் கொடி நட்டுக் கொண்டிருந்தாள். அவள் உடம்பு பூரிப்பில் இன்னும் குண்டாகிவிட்டது போல் இருந்தது. குளிர்க் காற்றுக்கு கன்னங்கள் செக்கச்செவேல் என்று இருந்தன. எல்லா பற்களும் தெரியும்படி சிரித்துக் கொண்டிருந்தாள். இன்னொரு படத்தில் மூவரும் உயரே குதித்து அங்கேயே நின்றுவிட்டிருந்தார்கள். நீல வானம், வெள்ளை மேகங்கள், சுற்றிலும் பனி. கண்களுக்கு காகில்ஸ். தலையில் குரங்கு குல்லாய். எல்லா படங்களும் பிரமாதமாக இருந்தன. ஒரு சிறு வீடியோ அவளை கவர்ந்தது. அந்த பெண் பாஸ் அடைவதற்கு பத்து அடிகளே இருக்கும்பொழுது நடக்க முடியாமல் கிட்டத்தட்ட கீழே விழ இருக்கிறாள். அவள் கூட வந்த ஆண் அவள் கையைத்தன் தோல் மேல் போட்டுக்கொண்டு அவளை பாஸ் வரை இழுத்து செல்கிறான். அந்த வீடியோவை அவள் பல முறை பார்த்தாள். அன்று இரவு, நாம் கல்யாணம் செய்து கொள்ள வேண்டாம். ஃபிரண்ட்ஸ்சாகவே இருந்துவிடலாம் என்று உறுதியாகச் சொன்னாள்.

புத்த வீர சாமி

காஸ்மிக் தூசி 

 

பிக்குகளின்
கனவில் வந்த பெருமழை
அவர்களை
ஆற்றைக் கடக்க விடாமல்
கரையில் நிறுத்தி விட்டது

பழைய
மேலாடைக்கு
குழந்தையின் குருதி ஊற்றி
நிறம் ஏற்றிக்கொண்டிருக்கிறான்
ஒரு முதிர்ந்த பிக்கு

கை தளர்ந்து
தாமரை மடிந்த ஆசனத்தின்
குமிழ் சிரிப்பில்
புத்தன் சிலை
குமிழி எழ ஆற்றின்
ஆழம் அமிழ,

காற்றில் துடி துடிக்கும்
குருதி நிறத் துணி போர்த்தி
மறுகரையில்
புதிதாய் எழுகிறார்,

விரிந்த பெருமார்புடன்
மீசை முறுக்கி,
முறைத்த விழியுடன் –

தோள் புடைக்க
கொடுவாள்
ஏந்தும்,
புத்த வீர
சாமி.

தனிமை

எஸ். சுரேஷ் 

                  image credit- Craiyon

எப்பொழுதும் போல் எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டு பெரிய கண்ணாடி ஜன்னல் அருகில், பிக்சர் விண்டோ என்கிறார்கள், குஷன் நாற்காலியில், கையில் வைன் கோப்பையுடன் அமர்ந்தாள். வெளியே இருள் கவ்வியிருந்தது. கண்கள் பழகப் பழக வடிவங்கள் தெரிய ஆரம்பித்தன. இருபது வருடங்களுக்கு மேலான பழக்கம் இது.

ஊருக்கு வெளியில் இருந்த இந்த வீட்டை இருளுக்காகவே அவள் வாங்கியிருந்தாள். முதலில் நகரத்தில் இருந்தாள். ஆனால் அவளுக்கு வேண்டிய இருள் கிடைக்கவில்லை. தனிமையில் இருளை பார்த்துக் கொண்டிருப்பது அவளுடைய இரவு நேர பொழுதுப்போக்கு. இன்று நிலவொளி அதிகமாக இல்லை என்றாலும் மூன்றாம் பிறையின் ஒளியில் மெதுவாக எல்லாம் தெரிய ஆரம்பித்தன. இப்பொழுது பூனையின் கண்கள் போல் அவளால் இருளில் பார்க்க முடியும். இரவு பத்து மணிக்கு விளக்குகளுடன் மொபைலையும் அணைத்து விடுவாள். செயற்கை வெளிச்சமும் சத்தமும் இல்லாத சூழலை உருவாக்கிக் கொண்டு, வைன் ருசித்தப்படி ஒரு மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்திருப்பாள்.

இருபது வருடங்களாக நிகழாத ஒன்று அன்று நிகழ்ந்தது: இருளின் அமைதியை காலிங் பெல்லின் ஓசை கீறி சிதைத்தது. திடுக்கிட்டு எழுந்த அவளின் கோப்பையிலிருந்து மது சிந்தியது. படபடக்கும் நெஞ்சுடன் காதவருகே சென்ற அவளுக்கு,- அம்மா, உங்கள இப்பொழுதே பாக்கணும்னு ஒருவர் வந்திருக்காரு– என்ற காவல்காரனின் குரல் கேட்டது.

வெள்ளை உடுப்பில் நின்ற டிரைவர் மொபைல் ஃபோனை நீட்டினான் – புரொஃபசர் உங்களோட பேசணுமாம்.

புரொஃபசர்– டிரைவர் அழைத்துச் செல்லும் வீட்டுக்குப் போ. அங்கே இருக்கும் பெண்மணியை பரிசோதித்து அவளுக்கு வேண்டிய மருந்துகள்  கொடு.

புரொஃபசர் பல காலங்களுக்கு முன் அவளுக்கு வாத்தியாராக இருந்திருக்கிறார். அவர் கட்டளையை மீற முடியாது. ஸ்டெதஸ்கோப்பையும் பையையும் எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.

நகரத்தில் மின்னும் மின்சார விளக்குகளினூடே, பணக்காரர்கள்  மட்டும் வாழும் ஒரு பகுதியில் இருந்த பங்களாவை அடைந்தனர். இரண்டடுக்குகள் கொண்ட வீட்டின் முதல் மாடிக்கு அவள் அழைத்துச் செல்லப்பட்டாள். – புரொஃபசர்– இவர்கள் ராஜபரம்பரையை சேர்ந்தவர்கள்– – காத்திருப்பதற்கான அறையில் அவளை அமர்த்திவிட்டு டிரைவர் எங்கோ சென்றுவிட்டான். அந்த அறை அவள் ஹால் அளவு பெரிதாக இருந்தது. டீக் மரத்தினாலான அலமாரிகள், நாற்காலிகள். பளிங்குத்  தரை பளபளத்தது. பளிச்சிடும் வெண்ணிறச் சுவர்கள். அறை நடுவில் உயர்ரக பெர்ஷியன் கார்பெட். பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த பொம்மைகள் எல்லாம் சுத்தமாக துடைக்கப்பட்டு அதனதன் இடத்தில் இருந்தன. தூசு என்னும் பேச்சுக்கே இடமில்லை. விசாலமான அறை அவள் தனிமையை தீவிரமாக்கியது. இனம் புரியாத பயம் அவள் நெஞ்சை கவ்வியது. இருட்டில் தினமும் உட்கார்ந்திருக்கும் தனக்கு  வெளிச்சத்தில் அச்சம் ஏற்பட்டதை கண்டு அவளே சிரித்துக்கொண்டாள்..

அவளை உள்ளே அழைக்க யாரும் வரவில்லை. வாசல் கதவுக்கு வெளியே பார்த்தாள். எதிரில் ஒரு லான். முதல் மாடியிலும் ஒரு  லான். அதில் இரண்டு வெள்ளை இரும்பு நாற்காலிகள். புல்தரைக்கு அப்பால் இருட்டு. சுவரில் பொருத்தப்பட்ட இரண்டு மின்விளக்குகள் புல்தரையை வெளிச்சத்தில் நனைத்தன. அந்த இரண்டு வெள்ளை நாற்காலிகளும் யாருக்காகவோ காத்திருப்பது போல் அவளுக்கு பட்டது. அந்த பெரிய வீட்டில் எங்கும் தனிமை நிறைந்திருப்பது போல் அவள் உணர்ந்தாள். யாராவது அந்த நாற்காலிகளில் உட்கார்ந்தால் தனிமை விலகும் ஆனால் நாற்காலிகளைப் பார்த்தால் அவை வெகு நாட்களாக யாரையோ எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பது போல் தோன்றியது. யாரும் வரமாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டபொழுது அவளுக்கே தூக்கிவாரிப் போட்டது.

– அம்மா கூப்பிடறாங்க.

சிங்கிள் பெட்ரூம் ஃப்ளாட் கட்டலாம் போல் இருந்த ஹாலின் ஒரு மூலையில் சக்கரவண்டியில் ஒரு முதிய பெண்மணி உட்கார்ந்திருந்தாள். ராஜகம்பீரம் என்றால் என்ன என்று அவளுக்கு அந்த பெண்மணியை பார்த்ததும் புரிந்தது. ஐந்து நட்சத்திர விடுதிகளில் நாட்டின் முதன்மை பணக்காரர்களுடனும், முதல்வர் மற்றும் கவர்னருடனும் வெகு இயல்பாக பேசும் அவள் இந்தப் பெண்மையின் முன் மௌனமாக நின்றாள். ஒரு பிரஜை அரசியின் ஆக்ஞை இன்றி பேசக்கூடாது. சுருக்கங்கள் நிரம்பிய முகம், நரைத்த தலைமுடி, மனதுக்குள் ஊடுருவி பார்க்கும் கூர்ந்த பார்வை. அந்தப்  பார்வை அவளை எடை போடுவது போல் இருந்தது. அவள் மனதில் மறுபடியும் ஏதோ ஒரு அச்சம் தோன்றியது.

ராஜமாதா – ஆம் அவள் ராஜமாதாவாகதான் இருக்கவேண்டும் – சைகை செய்ய, பக்கத்தில் இருந்த பெண் ராஜமாதாவின் உடம்புக்கு என்ன பிரச்னை என்பதைக் கூறிவிட்டு மௌனமானாள். ராஜமாதாவைப்  பரிசோதித்து  மருந்துச் சீட்டு எழுதிக் கொடுத்தவுடன் அதை வாங்கிக்கொண்ட பெண் நீங்கள் டீ குடிக்கிறீர்களா? என்று கேட்டதும் ராஜமாதா அவளை உற்றுப் பார்த்தாள். உடனே அந்த பெண் தலை குனிந்து நின்றாள். இல்லை, வேண்டாம், என்று அவள் சொல்லவும், ராஜமாதாவின் சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு அந்த பெண் ஹாலைவிட்டு உள்ளே சென்றாள். யாரும் அவளுக்கு நன்றி சொல்லவில்லை. அவள் மட்டும் அந்த அதிபெரிய அறையில் தனியாக நின்றாள். மெதுவாக வீட்டை விட்டு வெளியே வந்தாள். இரண்டு வெள்ளை நாற்காலிகள் மஞ்சள் நிற வெளிச்சத்தில் யாருக்காகவோ காத்துக்கொண்டிருந்தன.

வீட்டுக்கு வந்தவுடன் இருட்டில் மறுபடியும் ஜன்னலருகே உட்கார்ந்தாள். மிகக் கோபமான மனநிலையில் இருந்த அவளால் வைனை ரசிக்க முடியவில்லை. அங்கு சென்று அவமானப்பட்டதை நினைத்து தனக்குள் குமுறினாள். கோபக் கனல் அவளுக்குள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. இவ்வளவு பெயர் பெற்ற அவளை ஒரு பணிப்பெண் போல் அந்த சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருந்த பெண்மணி நடத்தினாள். அவள் ராஜமாதாவாக இருந்தால் எனக்கென்ன. உலகிலேயே மிகப் பெரிய பணக்காரியாக இருந்தாலும் பரவாயில்லை, நான் அவள் வீட்டிற்கு இனி செல்லப் போவதில்லை. புரொஃபசரிடம் கறாராக சொல்லிவிடுகிறேன். அன்று இரவு கனவில் இரண்டு வெள்ளை நாற்காலிகள் தோன்றின.

அடுத்த முறை டிரைவர் ஒன்பது மணிக்கே வந்துவிட்டான். அவள் உடனே கிளம்பினாள். முதல் முறை போல் சற்று நேரம் வரவேற்பு அறையில் உட்கார்ந்திருந்தாள். அந்த வீடு ஒரு பூட்டிக் கிடக்கும் ம்யூசியம் போல் அவள் கண்ணுக்கு பட்டது. எல்லா பொருள்களும் பளபளப்பாக இருந்தன ஆனால் எல்லாம் உயிரற்றவையாக இருந்தன. என் வீட்டில் எல்லா பொருள்களும் உயிருடன் இருப்பது போல் எனக்கு தெரியும் ஆனால் இங்கோ எல்லாம் உயிரிழந்த சடலங்களாக இருக்கின்றன. ஏனோ மனிதர்கள் இருந்தாலும் இந்த வீட்டில் உயிர் இல்லை.

இந்த முறை இரண்டாவது மாடியில் இருந்த ராஜமாதாவின்  அறைக்குள் அவளை நுழைய அனுமதித்தார்கள். நான்கு பேர் படுக்கக்க்கூடிய பெரிய கட்டிலில் அவள் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தாள். படுக்கையறையும் பிரம்மாண்டமாக இருந்தது. ராஜமாதாவை அந்த பெரிய அறையில் பார்த்தபோது உலகமே ராஜமாதாவை கைவிட்டுவிட்டதுபோல் அவளுக்கு தோன்றியது. ஒரு வினாடி அவளுக்காக பரிதாபப்பட்டாள். வாய் திறந்து பேசினால் எங்கு இந்த ஆழ்ந்த மௌனம் கலைந்துவிடுமோ என்ற பயத்தில் பேசாமல் ராஜமாதாவைப்  பரிசோதித்தாள். எல்லா சோதனைகளும் முடிந்தவுடன், இவங்களுக்கு டீ கொண்டுவா, என்று ராஜமாதா சொல்ல, டீ வந்தது. இரவுப்பொழுது அவளுக்கு டீ குடிக்கும் பழக்கம் இல்லையென்றாலும் ஆணையை மீற முடியவில்லை. அது ஆணைதானே? அவள் எங்கு என்னை டீ குடிக்கிறாயா என்று கேட்டாள்? இந்த முறையும் ஒன்றும் பேசாமல் வெளியே வந்தாள். எப்பொழுதும் போல் வெளிச்சத்தில் இரு நாற்காலிகள்.

அடுத்த முறை எப்படியாவது பேசிவிடவேண்டும் என்று முடிவு செய்தாள். இந்த முறை அவளை காக்க வைக்கவில்லை. நேராக ராஜமாதாவின்– அவள் பெயர் தான் என்ன?– அறைக்குள் அழைத்துச் சென்றார்கள். டீ குடித்துக்கொண்டே ராஜமாதாவை கேட்டாள் – உங்களுக்கு யாரும் இல்லையா? அவளைச் சுட்டுவிடுவது போல் ராஜமாதா ஒரு பார்வை பார்த்தாள். உன் வேலையை நீ பார் என்று சொல்வது போல் இருந்தது அந்தப் பார்வை. அவள் தலை குனிந்து டீ குடிப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள். வெளியே வரும்பொழுது டீ கொடுத்த பெண்மணி அவள் காதில் மெதுவாக, இரண்டு மகன்கள். இருவரும் வெளிநாட்டில், என்று சொன்னாள்.

அமாவாசை. வீட்டுக்கு வெளியில் நாற்காலியை போட்டு உட்கார்ந்து கொண்டிருந்தாள். அருகில் வெளிச்சம் எதுவும் இல்லை. இருளும் தனிமையும். அண்ணாந்து ஆகாயத்தைப் பார்த்தாள். விண்மீன்கள் கண் சிமிட்டின. அவள் கூர்ந்து பார்க்கும் பொழுது புது புது விண்மீன்கள் தெரிய ஆரம்பித்தன. விண்மீன்களின் ஒளியில் எல்லாம் தெளிவாக தெரிவது போல் இருந்தது. வைன் சற்று அதிகம் பருகிவிட்டிருந்ததால் காற்றில் மிதப்பது போல் ஒரு உணர்வு. கண்ணை மூடிக்கொண்டாள். கண்ணை திறந்து பார்க்கையில் விண்மீன்கள் மறுபடியும் அவளைப் பார்த்து கண் சிமிட்டின. இப்பொழுது இருள் சூழ்ந்திருக்கும் கடலுக்கு நடுவில் ஒரு மிக பெரிய கப்பலில் இருந்தாள். வலது புறம் திரும்பிய பொழுது பெரிய கட்டில் ஒன்றைப் பார்த்தாள். அதில் ராஜமாதா  ஆகாயத்தை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள். எங்கிருந்தோ வந்த ஒளி கப்பலின் ஒரு கோடியில் வட்டமாக விழுந்தது. அந்த வட்டத்துக்கு நடுவில் அதே இரண்டு வெள்ளை நாற்காலிகள்.

இந்த முறை டிரைவர் அவள் ஹாஸ்பிடலின் அலுவலக அறைக்கு வந்துவிட்டான். ராஜமாதா மூன்றாவது மாடியில் வி.ஐ.பி.களுக்கான ஐ‌சி‌யு அறையில் இருந்தாள். சற்று சோர்ந்திருந்தாலும் கம்பீரம் குறையவில்லை. ஆஸ்பத்திரி என்பதால் அவள் தைரியமாக பேசினாள். – வலிக்கிறதா?– ஆம் – ஸிடெரோய்ட் இஞ்ஜெக்ஷன் போடச் சொல்கிறேன் – அவள் ராஜமாதாவை பரிசோதிக்க ஆரம்பித்தாள். பரிசோதித்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று ராஜமாதா இவள் கையை இறுகப் பற்றினாள். ஒல்லியாக இருந்தாலும் பிடி பலமாக இருந்தது. அவளுக்கு கை வலிக்க ஆரம்பித்தது. ராஜமாதாவின் வலி அதிகரித்துவிட்டதை அவள் அறிந்தாள். முகத்தில் சுருக்கங்கள் அதிகமாக, கண்கள் இரண்டும் இடுங்க, பற்களை நறநறவென்று கடித்துக்கொண்டு ராஜமாதா அவள் கைகளை பிடித்து வலுவாக இழுத்தாள். இழுத்தவுடன் அவள் குனிந்தாள். அவள் முகம் இப்பொழுது ராஜமாதாவின் முகத்துக்கு அருகில் இருந்தது. ராஜமாதாவின் கண்கள் விரிந்து அவளை கண்ணிமைக்காமல் உற்றுப் பார்த்தன. அந்த கண்களில் பயம் கூடிக்கொண்டிருப்பதை அவள் பார்த்தாள். – என்னை எப்படியாவது காப்பாற்றிவிடு – என்று அவை கதறின. இனி உலகில் அதிகம் நேரம் இருக்கமுடியாது என்று நம்பிய ஒருவரின் பார்வை அது. – நான் உலகை விட்டுச்செல்ல தயாராக இல்லை – அவளால் மூச்சு விட முடியவில்லை. சட்டென்று பிடி தளர்ந்தது. திடுக்கிட்டு ராஜமாதாவை பார்த்தாள். ராஜமாதா வாய் வழியால் மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள். அங்கு விட்டு விலகப் பார்த்த அவள் கையை மறுபடியும் ராஜமாதா பிடித்துக்கொண்டாள். ஏதோ சொல்ல வருகிறாள் என்று அவளுக்கு தெரிந்தது ஆனால் வாயை விட்டு வார்த்தை வரவில்லை. மறுபடியும் முயற்சி செய்து தோற்றாள். மூன்றாவது முறை, வாழ்க்கையில் யாருக்கும் அதிகம் சொல்லாத அந்த வார்த்தை வெளிப்பட்டது – நன்றி – சில வினாடிகள் கண்களை மூடிக்கொண்டிருந்த ராஜமாதா கண்களை திறந்து – இனி நீ போகலாம் – என்று அவளுக்கு சைகை செய்தாள். இரண்டு நாட்களுக்கு பிறகு ராஜமாதாவை டிஸ்சார்ஜ் செய்துவிட்டதாக செய்தி வந்தது. அதற்கு பிறகு அவளுக்கு ராஜமாதா வீட்டிலிருந்து அழைப்பு வரவில்லை.

இப்பொழுதெல்லாம் அவள் இரவு பத்துமணிக்கெல்லாம் தூங்கிவிடுகிறாள். இருந்தாலும் அவ்வப்போது கனவில் அந்த இரு வெற்று நாற்காலிகள் வரத்தான் செய்கின்றன.

 

 

 

 

தாயார்

ஸிந்துஜா

image credit Craiyon

 

வாசல் கதவை அம்மாதான் திறந்தாள். சுதாமதியைப் பார்த்ததும், “ஐயோ!” என்றாள்.

தன்னை அவள் வரவேற்கும் விதம் எதிர்பாராத ஒன்றல்ல என்று நினைத்தபடி சுதாமதி வீட்டுக்குள் நுழைந்தாள். ஹாலில் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள். தொலைக்காட்சிப் பெட்டியில் ஸ்ருதிராஜிடம் சங்கீதா, உன்னை இந்த வீட்டை விட்டுத் துரத்தாத வரை எனக்கு நிம்மதி இல்லை, என்று பற்களைக் கடித்துக் கொண்டிருந்தாள். இங்கேயும் வீட்டை விட்டுத் துரத்தும் கதைதானா என்று சுதாமதி நினைத்தாள்.

வீடு கும்மென்று வெப்பத்தில் தவித்துக் கிடந்தது. இவ்வளவுக்கும் மாலை பிரிந்து இரவு வரும் நேரம் என்று பேர். பொட்டுக் காத்து இல்லை.

அவளருகில் வந்து நின்ற அம்மாவை சுதாமதி ஏறிட்டாள். ‘எதுக்குடி இப்ப இங்கே வந்திருக்கே?’ என்கிற கேள்வி தொங்கிக் கொண்டிருக்கும் அவளின் பார்வையைச் சந்தித்தாள். அதற்குப் பதில் சொல்ல வேண்டுமா? அவளாகவே பேச்சை ஆரம்பிக்கட்டும் என்று மறுபடியும் தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்த்தாள்.

“இந்த அழகு சீரியலைப் பாக்கறதுக்கா தும்கூர்லேந்து ஓடி வந்திருக்கே?” என்றாள் அம்மா. “அந்தக் கடங்காரன் என்ன சொல்லி இப்ப உன்னை இங்கே தொரத்திருக்கான்?”

பார்வையில் மட்டுமில்லாது குரலிலும் எகிறும் கோபத்தை சுதாமதி கவனித்தாள். எதையும் செய்ய முடியாத தனது கையறு நிலையை நினைத்தா அம்மாவின் குரலில் துக்கத்தின் இடத்தைக் கோபம் கவ்விக் கொண்டிருக்கிறது? ஹாலில் வீசிய அரை மங்கலான விளக்கொளியில் அம்மாவின் முகம் காட்டுவதென்னவோ துக்கத்தைத்தான்.

“அம்மா, ரொம்பப் பசிக்கிறதும்மா” என்றாள் சுதாமதி.

க்ஷணத்தில் அம்மா மாறி விட்டாள் . கனிவு அவள் முகத்தில் ஏறிய தருணம் “என்னது பட்டினியா வந்திருக்கியா? வாடி உள்ளே. வயித்துக்கு எதுக்கு வஞ்சனை பண்ணிண்டு வந்திருக்கே?” என்று அவள் கையைப் பிடித்துத் தன்னுடன் இழுத்துச் சென்றாள். சமையலறைக்குள் நுழைந்தவள் “தட்டை எடுத்துப் போட்டுண்டு இங்கேயே உக்காரு ” என்று சொல்லி விட்டு மேடையை அடைந்தாள். சுதாமதியின் பார்வை சமையலுள்ளை அளைந்தது இரண்டு பித்தளை பாத்திரங்களும் ஒரு எவர்சில்வரும் மேடையிலிருந்தன. பித்தளை உருளியின் வெளிப் பாகத்தில் நாலைந்து சாதப் பருக்கைகள் ஒட்டியிருந்தன. கச்சட்டிப் பிடியில் குழம்புத் துளிகள் தெறித்து விழுந்து காய்ந்து கொண்டிருந்தன. எவர்சில்வர் பாத்திரத்தின் கீழ் பீன்ஸ் துகள்கள் கிடந்தன. மேடை மேலிருந்த ஸ்டவ்வில் அதன் ஒரிஜினல் மஞ்சள் நிறம் போய் எண்ணெய்ப் பிசுக்கு கறுப்பாக மாற முயன்று கொண்டிருந்தது. அலமாரியென்று சுவரில் ஒட்டியிருந்ததில் ஒரு கதவு மட்டும் திறந்து கிடந்தது. போன தடவை அவள் வந்த போது இருந்த இன்னொரு கதவு இப்போது இல்லை. அப்போதே அது உடைந்து உயிரை விடுவது போல்தான் இருந்தது. அம்மா மேடையிலிருந்த ஏனங்களை எடுத்துக் கொண்டு வந்து சுதாமதி உட்கார்ந்திருந்த இடத்துக்கு எதிரே வைத்தாள்.

பிறகு அவளது அருகில் உட்கார்ந்து பரிமாறினாள். சுதாமதி அம்மாவை ஒருமுறை பார்த்து விட்டுத் தட்டில் இருந்தவற்றைக் கலக்கி உருட்டி வாயில் போட்டுக் கொண்டாள்.

“இப்ப சாப்பாடு போடறதுக்குக் கூட வக்கில்லையா அவனுக்கு? இல்லே, உன்னைப் படுத்தி எடுக்கணுமேன்னு இப்பிடிப் பண்ணறானா?” என்று அம்மா கேட்டாள்

“நேத்திக்கு விடியறச்சேயே காப்பிக்குப் போட சக்கரை வாங்கி வைக்கத் துப்பில்லையா முண்டமேன்னு கத்தினான். காலங்காத்தால அவனோட கையாலாகாத்தனத்துக்கு என்னைப் போட்டு நொறுக்கறதான்னு எனக்கும் எரிச்சல் மண்டிண்டு வந்தது, கடையிலே போய் வாங்கிண்டு வந்து வச்சா இருக்கும். இல்லேன்னா அது மானத்துலேந்து வந்து குதிக்குமான்னேன் வேகமா என்கிட்டே வந்து வாயைப் பாரு வாயை. கிழிச்சு எறிஞ்சுடுவேன்ன்னு சொல்லிண்டே பளார்ன்னு கன்னத்திலே அறைஞ்சான். முழு பலத்தையும் கைக்குள்ளே கொண்டு வந்து அடிச்ச அடியிலே கீழே விழுந்துட்டேன். பின்னாலே நகர்ந்துண்டு என்னைப் பார்வையாலேயே மிதிச்சபடி போய் உங்கப்பன்ட்டேர்ந்து பத்தாயிரம் வாங்கிட்டு வா. நான் இன்னிக்கி திப்டூருக்கு டூர் போறேன். நாளைக்கு சாயங்காலம் நான் திரும்பி வரப்போ நீ பணத்தோட இங்க இருக்கணும், ஆமாம்ன்னு கத்திட்டுக் கோபத்தோட தரையிலே கிடந்த பிளாஸ்டிக் வாளியைக் எத்திண்டே பாத்ரூமுக்குப் போயிட்டான். நேத்திக்கி கார்த்தாலே ரெண்டு இட்லி பிச்சு வாயிலே போட்டுண்டது” என்றாள் சுதாமணி. “அவன் சாப்பிடறதுக்குன்னு டிபன் பண்ணினதாலே அந்தப் புண்ணியத்தில் எனக்கும் இட்லி கிடைச்சது. டூர் போயிருக்கான். வீட்டிலே ஒரு இழவும் கிடையாது. அவன் ஊர்லே இல்லாதப்போ நான் காத்தைக் குடிச்சிண்டு உயிர் வாழணும்.”

“அடிப்பாவி! நேத்திக்கே இங்கே வரதுக்கென்ன?” என்று அம்மா அவளைக் கோபத்துடன் பார்த்தாள்.

“அவன் உங்கப்பா கிட்டே போய்ப் பத்தாயிரம் வாங்கிண்டு வான்னு அடிச்சு அனுப்பியிருக்கான். போன தடவை அப்பா அடிச்ச கூத்துக்கு அப்புறம் நான் எப்பிடி அவரைப் பாத்துக் கேப்பேன்? இப்பவே அவர் வந்து என்னைப் பாத்தவுடன் இந்த பிரும்மஹத்தி எதுக்கு இங்கே வந்து நிக்கறதுன்னு அவருக்குக் கோபம் பிச்சிண்டு வரப் போறது” என்றாள் சுதாமதி.

அம்மா அவள் தலையைப் பரிவுடன் தடவிக் கொடுத்தாள். “அப்படில்லாம் ஒண்ணும் ஆகாது” என்றாள்.

போன தடவை என்றால் ஒரு வருஷத்துக்கு முன்பு. சுதாமதிக்குக் கல்யாணம் ஆகி தலை தீபாவளிக்கு வந்ததுதான். இவ்வளவு பக்கத்தில் இருந்து கொண்டு தலையையே காமிக்க மாட்டேங்கிறியே என்று அவளுடைய தோழிகள் கேட்பார்கள். அவள் புருஷனின் லட்சணம் அவர்கள் குடும்பத்துக்குள் மட்டும் இருந்தது. அதனால் மற்றவர் கேள்விகளையெல்லாம் சிரித்து மழுப்பி விடுவாள். ஆனால் ஒரு வருஷத்துக்கு முன்பு இன்றைய தினம் போல சுதாமதி மட்டும் தனியாக வந்து நின்றாள். ராமசாமி அன்றும் அவளைப் பணம் வாங்கிக் கொண்டு வரச் சொல்லி அனுப்பியிருந்தான்.

மாலையில் ஆபிசிலிருந்து வந்த சபாபதி அய்யருக்கு அசாத்தியக் கோபம் வந்து விட்டது. “அவன்தான் கேட்டான்னா எந்த மூஞ்சியை வச்சுண்டு நீ இங்கே வந்து நிக்கறேடி? உன் கல்யாணத்துக்கு வாங்கிய கடனுக்கு இப்ப வட்டி கட்டறதே எனக்குப் பெரும் பாடுன்னு உனக்குத் தெரியாதா? அந்த நாய்ப்பயல் கேட்டால் எடுத்துக் குடுக்க நான் என்ன நோட்டு அடிச்சு வச்சிருக்கேனா? எவ்வளவு கடன் வாங்கி உனக்கு நகை வாங்கிப் போட்டேன்? அந்த ராஸ்கல் எல்லாத்தையும் கழட்டி எடுத்துண்டு போய் வித்துட்டான்னு வந்து சொல்றியே? அவன் கேட்டப்போ கழட்டிக் கொடுக்க மாட்டேன் போடான்னு இங்கே வந்திருக்க வேண்டியதுதானே? அமுக்கு மாதிரி இருந்துட்டு இங்க வந்து இப்ப பணம் கொடுங்கிறே. என் கையிலே கொடுக்கறதுக்கு ஒண்ணுமில்லே. அடியோ உதையோ வாங்கிண்டு அங்கேயே விழுந்து செத்துத் தொலை” என்று காட்டுக் கத்தல் கத்தினார். அவர் பேச்சைக் கேட்டு அவர் மேல் அம்மாவுக்குக் கோபம் வந்து விட்டது.

“விளக்கு வச்ச நேரத்திலே என்ன பேச்சுப் பேசறேள்? இவ பணம் கேட்டுதானே வந்திருக்கா, என்கிட்டே இல்லைன்னு ஒரு வார்த்தையை, அது கூட உதடு பிரியற கஷ்டத்தைக் கொடுக்காத ஒரு வார்த்தையைக் கடவுள் எதுக்குப் படைச்சு வச்சிருக்கான்? நறுக்குத் தெறிச்சாப்பிலே ஒரு வார்த்தை சொல்றதை விட்டுட்டு எதுக்கு நீங்க இப்பிடி நெருப்புக் கங்கை அவ மேலே
விட்டெறியணும்? குழந்தை துடிக்கிறா பாருங்கோ. பெத்த வயிறு இன்னும் மேலாவே பதர்றது. ஜனகன் போட்டு அனுப்பாத நகைகளா சீதைக்கு? ஒரு நட்டு இல்லாம புருஷனோட அன்பை மட்டுமே வச்சுண்டு காட்டுக்குப் போற கஷ்டத்தைத் தேவி தாங்கிக்கலையா? கர்மாவை யார் தடுக்க முடியும்?” என்றாள் அம்மா.

அப்பா “நான் ஒண்ணும் ஜனகன் இல்லே, எடுத்து அள்ளி அள்ளி வீசறதுக்கு. இவ தான் கஷ்டத்துக்கு சீதையை கொண்டிருக்கா. எக்கேடு கெட்டு ஒழியுங்கோ. என்கிட்டே ஒரு சல்லி இல்லே” என்று மறுபடியும் கத்தி விட்டு வெளியே போய் விட்டார்.

இரவு வெகு நேரம் கழித்து வந்தவர் மனைவியைக் கூப்பிட்டு “சுப்பு, இந்தா. இந்தக் கவர்லே ஐயாயிரம் இருக்கு. முத்துச்சாமிகிட்டேர்ந்து ரெண்டு வட்டிக்கு வாங்கிண்டு வந்தேன். இவ்வளவுதான் தர முடியும்னு சொல்லிட்டான். இதை எடுத்துண்டு அவ போகட்டும். ஆனா இனிமே பணம்னு கேட்டுண்டு இங்கே வர வேண்டாம்னு சொல்லிடு”என்றார். ராமசாமியின் முரட்டுத்தனத்தை நினைத்து அஞ்சி அவளுடைய அம்மாவும் அப்பாவும் அதன் பிறகு அவள் எப்படி இருக்கிறாள் என்று கூட விசாரிக்க முடியவில்லை.

“அம்மா, எனக்கு நிஜமாவே இங்கே பணம் கேட்டுண்டு வர கொஞ்சமும் பிடிக்கலே. அப்பா என்ன வச்சுண்டா இல்லேங்கிறார்? ஆனா அவர் கடனோ உடனோ வாங்கிக் கொடுத்துடுவார்னு அவனுக்கு அப்படி ஒரு நம்பிக்கை. ஆனா நான் இப்ப வந்தது அதுக்காக இல்லே” என்றாள் சுதாமதி.

“நீ அன்னிக்கிக் கிளம்பிப் போனதுக்கு அப்புறம் இந்த மனுஷன் கதறியிருக்கார் பாரு, எனக்கே அழுகை வந்துடுத்து. எவ்வளவு செல்லமா வளர்த்தேன் இந்தக் குட்டியை. அவ அஞ்சாங் கிளாஸ் படிக்கறப்போ கணக்கு சரியா போடலேன்னு கிளாஸ் வாத்தியார் கிள்ளினதுக்காக நேரே அவன் வீட்டுக்குப் போய் அவன் வீட்டு ஹால்லே இருந்த கிரிக்கெட் பேட்டை எடுத்து இந்தக் கைதானே கிள்ளினதுன்னு ஏழெட்டு அடி போட்டேன். துடிச்சிட்டான். இதுமாதிரிதானேடா குழந்தைக்கும் வலிச்சிருக்கும்னேன். ‘நான் உன்னை இப்ப அஞ்சாங் கிளாஸ் வாத்தியாரா நினைச்சு அடிக்கலே. வய்யாளிக்காவல் நரசய்யான்னுதான் அடிச்சேன். திரும்ப ஏதாவது என் குழந்தைக்குப் பண்ணினாயோ அப்புறம் இந்த அடி தெருவுக்கு வந்துடும்’னு சொல்லிட்டு வந்தேன்னு உனக்குத் தெரியுமே.
அவ கேட்டதையெல்லாம் என்னிக்காவது தர மாட்டேன்னு சொல்லியிருக்கேனா? ஆனா இப்ப யாரோ ஒரு அயோக்கியன் கிட்டே சிக்கிண்டு அவ படற பாட்டை என்னாலே தாங்கிக்க முடியலையே. வாயிலே இருக்கு வார்த்தைன்னு என்னமாக் குழந்தையைப் போட்டுத் திட்டிட்டேன்னு சொல்லிச் சொல்லி மாய்ஞ்சு போயிட்டார்” என்றாள் அம்மா.

“பாவம் அப்பா!” என்று மெல்லிய குரலில் சொன்னாள் சுதாமதி. சில நிமிஷங்கள் கழித்து “நான் இப்ப வந்தது அதுக்காக இல்லேன்னு சொன்னேன். நீ காதிலே வாங்கிக்கலையே” என்றாள் சுதாமதி.

“புரியலையேடி. சொல்றதை சரியா சொன்னாத்தானே இந்த மரமண்டைக்கும் கொஞ்சம் ஏறும்” என்று அம்மா சிரித்தாள்.

“நான் இங்க வரதுக்கு மின்னாலே தம்புவைப் பாத்தேன்.”

அம்மா கண்களை அகல விரித்து “ஓட்டல்காரத் தம்புவையா? அவன் எங்க உன்னைத் தெருவிலே பாத்தான்? எப்பவும் கார்லே மிதந்துண்டு இருக்கறவனான்னா ஆயிட்டான் அவன் உன்னை அடையாளம் கண்டானோ?”

சுதாமதி அம்மாவைப் பார்த்தாள். அம்மாவின் ஆச்சரியம் அவளுக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை. தம்பு இப்போது பெரிய பணக்காரனாகி விட்டான். அம்மா சொல்லும் காரைத் தவிர ராஜாஜி நகரில் வீடு, இப்போது அவன் நடத்துகிற ஒட்டல் எல்லாவற்றையும் வாங்கி விட்டான்.

அம்மாவும் அவள் நினைப்பதையே நினைக்கிறாள் என்பதை அம்மாவின் அடுத்த பேச்சு நிரூபித்தது.

“யார் யாருக்கு என்ன கிடைக்கணுமோ அதுதான் லபிக்கும். ஆத்துக்குள்ளே வந்து சுதாவை எனக்குத் தாங்கோன்னு கேட்டான். நாலு பேர் வந்து டீசண்டா உட்கார்ந்து சாப்பிடக் கூட முடியாத ஒரு குச்சுலே ஏழை பாழைகளுக்கு இட்லி தோசை போட்டு விக்கறவனுக்கு எப்படி என் பொண்ணைக் கொடுக்கறதுன்னு வேண்டாம்னுட்டார் உங்க அப்பா. ராஜா மாதிரி கவர்மெண்ட் உத்தியாகத்திலே இருக்கற மாப்பிள்ளைன்னு பண்ணி வைச்சார். இப்ப கவர்மெண்ட் ராஜா பிச்சைக்காரனா ஆயிட்டான். ஓட்டல்காரன் எங்கையோ உசரத்திலே இருக்கான் பாரு” என்றாள் கோபமும் வருத்தமும் தொனிக்கும் குரலில்.

அவள் சற்று சமாதானமாகட்டும் என்று சுதாமதி ஒன்று சொல்லாமல் அம்மாவின் கையைப் பிடித்துத் தன் கையேடு இணைத்துக் கொண்டாள்.

திடீரென்று அம்மா நினைவுக்கு வந்தவள் போல “தம்புவை நீ எங்கே பாத்தே? என்ன சொன்னான்?” என்று கேட்டாள்.

“அவனை நான் ஒரு மாசத்துக்கு மின்னாலே பாத்தேன். தும்கூர்லே. நாளைக்கு காலம்பற எட்டு மணிக்கு அவன் ஆபீசுக்கு வரச் சொல்லியிருக்கான்.

“என்னது?”

சுதாமதி அம்மாவிடம் சொல்ல ஆரம்பித்தாள்.

ஒரு மாதத்துக்கு முன்பு அவள் தும்கூரில் கடைவீதியில் சென்று கொண்டிருந்த போது அவளுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென்று நின்றது. அவள் பார்த்துக் கொண்டிருந்தபோதே அதிலிருந்து தம்பு இறங்கினான்.

அவள் அருகே வந்து “நீ சுதாதானா? என்ன இப்படித் தேஞ்சு போய்க் கிடக்கே” என்றான்.

“ஆனா நீ அடையாளம் கண்டுபிடிச்சிட்டியே” என்று அவள் புன்னகை புரிந்தாள்.

“இந்தக் கோணக்கால் நடையை இந்த சுதாமணியைத் தவிர இந்தக் கர்நாடகாலே வேற யார் கிட்டே பாக்க முடியும்?” என்று பதிலுக்கு அவனும் சிரித்தான்.

எப்போதும் அவன் அவளை அப்படித்தான் கேலி செய்வான்.

“அடேயப்பா! எவ்வளவு இந்த?” என்று அவள் சிரித்தாள். “நீ எங்கே இங்கே?”

“தும்கூருக்கு ஒரு ஓட்டல்காரன் எதுக்கு வருவான்? வருஷாந்திர காண்ட்ராக்ட் போட்டு தும்கூர் புளி வாங்கிண்டு போறதுக்குத்தான். இவ்ளோ நாளும் மானேஜரை அனுப்பிடுவேன். இந்த வருஷம்தான் இப்ப அவர் பொண்ணுக்கு அடுத்த மாசம் கல்யாணம்னு லீவிலே போயிருக்கார். அதனாலே அவர் கொள்முதல் பண்ற எல்லா இடத்துக்கும் நான் போயிண்டு இருக்கேன்” என்றான்

“ரொம்பப் பிஸிதான் நீ” என்று சுதாமணி சிரித்தாள்.

“சரி எதுக்கு ரோடுலே நின்னுண்டு பேசணும்? கார்லே போலாம் வா” என்றான். அவன் டிரைவர் சீட்டில் உட்கார்ந்து கொண்டான். அவள் முன் சீட்டில் உட்கார்ந்து கொண்டாள்.

“நிஜமாவேதான் கேக்கறேன். எப்படி இவ்வளவு மோசமா உன் உடம்பு இருக்கு? ஏதாவது ஹெல்த் பிராப்ளமா?”

ஒரு நிமிடம் அவள் மௌனம் சாதித்தாள். பிறகு அவனைப் பார்க்காமல் “மனசு உடைஞ்சா உடம்பும் உடைஞ்சுதானே போகணும்?” என்றாள்.

அவன் வண்டியை இடது பக்க ஓரமாகச் செலுத்தி நிறுத்தி விட்டான்.

அவள் தன் மணவாழ்க்கையை அந்த ஒரு வரியில் சுருக்கி விட்டதை அவன் பிரமிப்புடன் பார்த்தான்.

ஆனால் எதையும் எதற்காகச் சுற்றி வளைத்துப் பேச வேண்டும்?

தம்பு அவளைப் பார்த்து “அப்ப நரகத்திலேந்து வெளியிலே வந்துடு. என் கிட்டே சொர்க்கமில்லே. அதை நீ எதிர்பார்க்கிறவளும் இல்லேன்னு எனக்குத் தெரியும்” என்றான்.

அவள் அவன் கண்களைச் சந்தித்தாள்.

“இதை நீ அன்னிக்கே எங்கப்பா கிட்டே சொல்லிட்டு என்னை ஏன் தரதரன்னு இழுத்துண்டு போகலே?” பேசிக் கொண்டிருக்கும் போதே அழுகை வெடித்து வர அவள் கைகள் கண்களில் பதிந்தன.

தம்பு அவள் கைகளை முகத்திலிருந்து எடுத்தான். அவள் கர்சீப்பை எடுத்துக் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

சுதாமதி அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தவள் பேச்சை நிறுத்தி விட்டாள்.

“இன்னிக்கிப் போய்ப் பாத்தேங்கிறியே? என்ன சொல்றதுக்குப் போனே?”

சுதாமதி உடனே பதில் சொல்லி விடவில்லை. ‘ஒரு தப்பை எங்கப்பா செஞ்சு வச்சார். ரெண்டாவது தடவையா அதையே நான் செய்யறதாயில்லே. நீ ரொம்ப நல்லவன். என்னோட சிநேகிதன். எனக்கு உன்கிட்டேயே, இல்லேன்னா உனக்குத் தெரிஞ்சவா கிட்டேயே ஒரு வேலை பண்ணிக் கொடு. நானும் பி.காம்.னு ஒண்ணைப் படிச்சு வச்சிருக்கேன். கணக்கு எழுதறேன். எங்கப்பாம்மா என்னை அவாளோட வச்சிக்கிறேன்னா அவளோடயே இருந்துண்டு வர்ற சம்பளத்தை எங்கப்பா கையிலே கொடுக்கறேன். அவர் கடனை அடைக்கறதுக்கு அது ஒரு அணில் பங்கா இருந்துட்டுப் போகட்டும்னு சொல்லறதா இருக்கேன்’ என்று மனதிற்குள் நினைத்தாள்.

அம்மா அவள் பதிலுக்கு காத்திருக்க முடியாதவள் போல “என்னவோ கடவுள் இப்பவாச்சும் கண்ணைத் திறந்து பாக்கறானே” என்றாள்.

சுதாமணி திடுக்கிட்டு அம்மாவைப் பார்த்தாள். அவளிடமிருந்து இப்படி ஒரு பேச்சு வருமென்று அவள் எதிர்பார்க்கவில்லை.

“என்னம்மா சொல்றே?”

“ஏன், தமிழ்லேதானே சொன்னேன்” என்றாள் அம்மா பதிலுக்கு.

யாரோ வாயைக் கட்டிப் போட்டது போல சுதாமதி பேசாமலிருந்தாள். பிறகு சமாளித்துக் கொண்டு “அன்னிக்கி சீதாவுக்கு வராத கஷ்டமான்னு எல்லாம் பேசினே. இப்போ நான் சீதாவா உன் கண்லே படலியா?” என்று கேட்டாள். ஆனால் அவள் குரலில் நிலவிய அமைதி அவளுக்கே ஆச்சரியத்தை அளித்தது.

அம்மா அவளைப் பார்த்துச் சிரித்தாள். “அன்னிக்கி உன்னை ஜனகனோட பொண்ணாப் பாத்து உங்கப்பா மேலே கோபப்பட்டேன். ராமசாமிதான் ராமன் இல்லையே. அதனாலே நீயும் இப்போ என்னோட சுதாமணி மட்டும்தான்.”

அம்மாவின் லாஜிக்கைப் பார்த்து சுதாமணிக்குச் சிரிப்பு பொங்கிக் கொண்டு வந்தது. வாய் விட்டுச் சிரித்தாள். அம்மாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு “சுப்புலெச்சுமி, நீ ரொம்பப் பொல்லாதவடி!” என்று சொல்லி விட்டு மறுபடியும் சிரித்தாள்.

இடமாற்றம்

காஸ்மிக் தூசி 

புல்வெட்டும் எந்திரத்துக்கு
கூடுவிட்டு கூடுபாய்ந்த
கிராமத்து வீட்டு
காராம்பசு,

தன் கட்டுப்புல்லையும்
சுவைத்து
தின்றுவிட்டது.

மறுநாள் காலை
வெட்டிய புல்லை
கொட்ட எடுக்கையில்

நாசியில் நிறையும் –
நீராவி பறக்கும் –
பசுஞ்சாணத்தின்
மணம்.