நித்ய சைதன்யா

காதலும் காதல் சார்ந்த மனநிலைகளும்

எத்தனை யோசித்தாலும் தீராத புதிராக இருப்பது காதலும் காதல் சார்ந்த மனநிலைகளும். கடவுள் குறித்து விவாதிக்கப்பட்டதைவிட காதல் குறித்து விவாதிப்பது அதிகம் என்று நினைக்கிறேன். காதல் வரமாக இருக்கிறது. தீராத் தாகமாக நீள்கிறது. சலிப்பில்லா செயலாக தொடர்கிறது. கடுமையின் வெஞ்சினத்தை குறைத்து இதமளிக்கும் மருந்தாகிறது. பரம்பரைப் பகையை வளர்க்கிறது. கருணை மிகுந்து தன்னை ஒப்புக்கொடுக்கிறது. அனைத்தையும் அர்ப்பணித்து சரணாகதியடைகிறது. மூர்க்கம் கொண்டு கொலைகள் செய்கிறது. திகட்டி மீண்டும் மீண்டும் காதலிக்கச் சொல்கிறது.

ஆனால் தீவிர காதல் மனநிலை என்பது நிச்சயமாக வாழ்வில் எப்போதும் எல்லாருக்கும் வாய்க்கும் ஒன்றல்ல. அது ஒரு இயற்கைப் பேரிடர். அறிவியல் உடலை வெறும் நாளமில்லாச் சுரப்பிகளின் முன் பின் விளைவுகளாகக் கருதி எளிமைப்படுத்தினாலும். காதலும் காதல் சார்ந்த உளமாற்றங்களையும் அவ்வளவு எளிதாக வரையறை செய்ய இயலாது என்றுதான் நினைக்கிறேன்.

அனுபவத்தில் சொல்கிறேன். காதல் மனநிலை என்பது ஒருவகை மனநிலைப் பிறழ்வு. ஞானம் வாய்த்த மனநிலைக்கு ஒப்பானது. அல்லது பெரும் துக்கமோ பெரும் வரமோ பெற்றபின் நிகழும் மனஇயல்பு திரிதலுக்கு இணையானது. நம்முடைய சொற்களினால் ஆன தர்க்கம் கொண்டு அதைப்பற்றி எள்ளவும் சொல்லிவிட முடியாது. விளக்கமுடியா எளிமை. தன்னை மீறி ஊற்றென பாய்ந்தோடும் துக்கித்த சொற்கள் அவ்வளவு எளிதில் எல்லாருக்கும் தோன்றிடுமா என்ன?

காதல் மறுக்க முடியாத லட்சியவாதம். லட்சியவாதிகளுக்குரிய அத்தனை குணாம்சங்களும் அதில் உள்ளது. புற உலகிற்கான சொற்களால் அதை நாம் விவாதிக்கும் போதும் புறக்கணிக்கும் போதும் நாம் அதன் தரம் குறைக்கிறோம். அக உலகிற்கான மனநிலையை சொல்ல காலத்தின் களிம்பேறா சொற்கள் வேண்டும். சிறப்பான கலைச்சொற்கள் அவசியம்.

காதலர்களும் குடிகாரர்களும் ஒன்று என்பது போல் காதலர்களை ஏளனம் கொண்டு அவர்களின் வார்த்தைகளை வெறும் பிதற்றலாக எடுத்துக்கொள்வதும் நமக்குள்ள சகஜ மனநிலை. உண்மையில் காதல் உருவாக்கும் சொற்கள் வேறொரு உலகில் உள்ளவை. ஒரு சொல் அவ்வுலகில் இருந்து நமக்கு வரும்போது அச்சொல்லின் சாரம் நம்மை வந்தடைய எடுத்துக்கொண்ட காலஇடைவெளியில் இல்லாமலாகிறது. கண்ணாடிப் பிம்பம் போன்று நம் பொருளை அச்சொல்லிற்கு அணிந்து எளிமையாக்குகிறோம்.

அவளை மட்டுமே நாளெல்லாம் எண்ணி சொற்களாக ததும்பும் மனம். ஒரு நளினமோ கூந்தல் அசைவோ புருவச் சுழிப்போ எங்கிருந்தோ கேட்கும் சிரிப்போ மின்னதிர்ச்சியாக மாறி மொத்த இருப்பையும் கலைத்தடுக்குவது . அவள் மணமாகி பிறிதொரு ஊரேகிய பின்பும் அவள் வாழ்ந்த வீட்டைக் கடக்கும் ஒவ்வொரு முறையும் மனதில் ஏற்படும் கனிவும் துயர் கனக்கும் நடையும் அத்தனை சாதாரணமானதா? அவள் வாழ்ந்த ஊர் என்பதனாலும் வீதி என்பதனாலும் வீடு என்பதனாலும் அவற்றிற்கெல்லாம் நம் மனதில் ஒரு தனிப்பிரியம் இருக்கத்தானே செய்கிறது. என்ன செய்தாலும் அப்பிரியத்தை அழித்துவிடமுடிவதில்லையே.

உடற்தாகமெனும் சிக்கிமுக்கி கற்களின் மோதலில் தெறித்து மனச்சருகில் பற்றி வான்நோக்கி தழலாட எரியும் சுடர் காதல். சுடர்களின் நடனத்தை மோகித்து தன்னிலை மறக்கும் நிலையில் ஆண் பெண்ணாகவும் பெண் ஆணாகவும் மாறும் உருவழிப்பு நிகழ்கிறது. சுடர்கள் முற்றிக்கனிந்து பழரசமாகி லார்வாக்களின் ஊட்டஉணவுபோன்று காதலர்களால் உண்ணப்பட்டு சதா போதையில் தள்ளாடச்செய்கிறது. அவர்களின் சொற்களில் சுடர்களின் மதுவாசனை. சுடர்களின் வெக்கையும்கூட அதன் அந்நியத்தால் அஞ்சி பிரியத்தோடு தவிக்கிறோம். வாழ்நாளெல்லாம் நம்மால் மீட்டப்படும் தனிராகம்தான் அவரவர் காதலும் காதல் நினைவுகளும். இசையோடு இயைந்த பெருவாழ்வு. ஊனுக்குள் வந்தமரும் உன்மத்தம்.

சுடர்களின் மது

நித்ய சைதன்யா

இங்கிருப்பவையெல்லாம்
இங்கிருந்தே தோன்றின
உன்னைப்போல

இச்சையால் உன் கவிச்சி நாடி
நல்லெச்சில் உதிர
பாதச்சுவடுகளை நுகரும் கருநாசி
என்னுடையதாக இருக்கட்டும்

பாய்ந்தோடி தேடிச்சலித்து
காற்றில் நீ இருந்த இருப்பை
சுயஅறிதல் கொண்டு
விரும்பிச் சுமப்பேன்

ஊரெல்லாம்
நீ நீங்கியபின்
உனதென்றாயிற்று
உருவெல்லாம்
உன் மறைவால்
உன்னெழிலாயிற்று

ஒவ்வொன்றை அறியும் தோறும்
ஒவ்வொன்றிலும்
இருக்கிறாய்
இருக்கக் காண்கிறேன்
இருப்பதான நாதமீட்டலில்
சுழன்றாடி தன்னிலை இழக்கிறேன்

சிந்தை தனில் பற்றித்துடிக்கும்
தீச்சுடர் நீ

ஆடா நின்ற அச்சுடரின்
ஒளிப்பிம்பம் உனது

உன் மூச்சே
சுடரின் வெம்மை

சுடர்களின் மது
நீ

வாழ்ந்ததன் பொருள்: பறவையும் தாழ்ந்தாடும் மரக்கிளையும் – நித்ய சைதன்யா

வாழ்வாசை ஒருபோதும் மனிதர்களை கைவிடுவதில்லை. விரும்பி தன்னை முடித்துக் கொள்பவர்கள் இங்கு மிக அரிதிலும் அரிதே. வழங்கப்பட்டதை கடைசித்துளிவரை உறிஞ்சிக் குடித்துவிடவேண்டும் என்றுதான் அனைவரும் நினைக்கிறோம். அத்தனை பேருக்கும் அந்த வாய்ப்பு கிடைத்து விடுகிறதா என்ன? எத்தனை துய்த்த பின்னும் மனம் மீண்டும் நுகரும் வேட்கையால் அலையாடிக் கொண்டே இருக்கிறது. எல்லா ஆசைகளும் முதலில் ஒரு துளியென இம்மண்ணில் விழுகின்றது. வேரோடி வாழும் நிலத்தை ஆரத்தழுவியபோது இது நிரந்தரம் என்றும் இன்னும் அதிகக்காலம் வழங்கப்பட்டுள்ளது என்றும் நம்புகிறோம். அதனால் ஓயாமல் லௌகீக காரியங்களில் நம்மை இழக்கிறோம். செய்கின்ற அனைத்தும் நம் விருப்பம் ஒன்றினால் மட்டுமே நிகழ்கிறதா?

எக்கணமும் நம் வாய்ப்பு காலாவதியாகலாம். காலடி மண் இல்லாமலாகி பறத்தலின் சாமான்யம் விதிக்கப்பட்டு மீண்டும் இங்கு நிகழ்வனவற்றை கண்ணாடியின் அப்புறம் நின்று வெறிக்கும்போது நம்மால் என்ன செய்துவிட முடியும்? விடைபெற்றுக் கொள்ளும் மனநிலையை எப்போதும் கைவசம் வைத்துக்கொள்வது சாலச்சிறந்தது. நம் காற்றை நிறுத்தும் கணம் எங்கிருக்கிறது? எப்படி அதன் தருணமறிந்து நம்மைத்தேடி அடைகிறது? இத்தனை நுண்ணிய நீர்த்துளிகளை பேராழி கணக்கில் வைத்துள்ளதா? பேராழி என்பதே நுண்ணிய நீர்த்திவலைகளின் தொகைதானோ? தொகுப்பதும் பகுப்பதும் எவரின் கரம்?

ஒரு மரணம் நிகழும்போது ஒரு பறவை பறந்து செல்கிறது, தொடுவானம் தாண்டிய தொலைவிற்கு. இனி ஒருபோதும் அது மீண்டு வருவதில்லை. தாழ்ந்தும் உயர்ந்தும் தவித்தாடும் மரக்கிளையே அப்பறவை இருந்ததற்கான பருப்பொருள் சாட்சி. வந்தமரும் பறவையை ஆடி ஓயும் மரக்கிளை எவ்வாறு எதிர்கொள்கிறது? அமர்தலும் பறத்தலும் தவித்தாடுதலும் உலக இயல்பு என்றறியும் கணம் புன்னகையாக அன்றி வேறென்னவாக விரியும்? மரணத்தை எதிர்கொள்ள தர்க்கத்தைவிட சிறந்த கேடயம் வேறு உண்டா?

வாழ்ந்ததன் பொருள்

நித்ய சைதன்யா

துளியென உருப்பெற்று
வெள்ளமென பெருக்கெடுத்து
சுழற்றி உட்கொள்ள பாய்ந்தோடுகிறது
உயிர் ஏகிய சாவின் நிழல்
எம்மிப் பறந்தபின் தவித்தாடுகிறது
பறவையை ஏந்திய மரத்தின் கிளை
மண்ணின் அணைப்பை விழைந்து
காற்றில் மிதந்து தணியும் ஓரிலையில்
முன்னோக்கி செல்லும் அகாலப்பெருவெளி
தணியாத இரவொன்றின் விசனம்
விழித்து முறைக்கும்
வனத்தின் விழி கொண்டு
நிழல் தாண்டிய பயணத்தில்
எக்கணமும் நிகழக்கூடும்
மண்ணோடு கரையும் பேறு
பாசக்கயிற்றின் அழுத்தம் பழகி
சிரிக்க முடிந்தால் போதும்
இங்கு வாழ்ந்ததன் பொருள் கிட்டும்

மாரி மயினி – நித்ய சைதன்யா

என்னைப் பார்த்துச் சிரிக்காத மாரி மயினியை அன்றுதான் பார்த்தேன். நம்ப முடியவில்லை. தயக்கத்தோடு அவர்களின் அருகில் நின்று மயினியின் முகத்தை ஏறிட்டேன். வழக்கமாக அவர்கள் என்னைப் பார்த்ததும், கொழுந்தனாரே ஏன் மெலிஞ்சிட்டே போறிக, என்று கைநீட்டி இழுத்து அணைத்துக் கொள்வார்கள். எனக்கென்று தனியான ஒரு துள்ளல் அவரிகளிடம் வெளிப்படும். பான்ட்ஸ் வாசனையோடு உடல் அதீத கூச்சத்தில் குறுகும், வெட்கம் கொண்டு விலகி ஓடுவேன். ஒவ்வொரு முறையும் இது நடக்கும். கேள்விகள் மாறுமே தவற அன்பு மிகுந்த அணைப்பு மாறியதே இல்லை. மயினிமார்களின் பிரியத்தை வேறு எந்த பெண்ணும் தந்துவிட முடியாதல்லவா?

அன்று அவர்கள் என்னைக் கண்டுகொள்ளவே இல்லை. உண்மையில் அவர்கள் அங்கு எங்களோடு இருக்கவேயில்லை. அசையாத விழிகளில் இந்த மண்ணில் வந்து சென்ற அத்தனைப் பெண்களின் இல்லறத் துக்கத்தைச் சுமந்து நின்றார்கள்.

மாரி மயினி அந்தத் திருமணம் நிச்சயித்தபோது எல்லாப் பெண்களையும் போல மௌனமாகத்தான் இருந்தார்கள். நெருங்கிய அண்ணா ஒருத்தர், மாப்பிள பிடிச்சிருக்கா, என்று கேட்டபோது, பெரியவங்க பாத்துச் செஞ்சா சரிதான், என்றார்கள். மாப்பிள்ளை குட்டையாக இருப்பதோ, கருப்பாக இருப்பதோ, அதைவிட, பள்ளிப் படிப்பை தாண்டாததோ, இதெல்லாம் அவர்களைச் சங்கடப்படுத்தவில்லை.

மாரி மயினியின் ஆண் யாரென்று எனக்குத் தெரியும். நடுநிசி வரை அவர்கள் என்னிடம் சொல்லும் கதைகளில் வரும் அவரின் ஆணை நான் நன்கறிவேன். ஆனால் இந்திய பெண்களின் யதார்த்தம் என்ன என்பது பெண் மரபின் மறைபொருளாக அவர்களுக்குத் தெரிய வந்திருந்தது போலும். எங்கேயும் போல எல்லாம் சுபமாகத்தான் நடந்தது. அவர்களை மறுவீடு அனுப்பிய அன்று நான் அடைந்த இழப்பினை அதன்பின் எப்போதுமே அனுபவித்ததில்லை.

ஆனால் ஆறாவது மாதம் கழித்து அவர்கள் தனியாக திரும்பி வந்ததைக் கேள்விப்பட்டு அம்மாவுடன் சென்றேன். இரண்டு நாட்களாக யார் யாரோ வந்து உபதேசித்துச் சென்றார்கள். அத்தை, மாரி மயினியை கொலை பாதகம் செய்தவரை நடத்துவதைப்போல நடத்தினார்கள். மயினியும் அதை எதிர்க்கவில்லை. கடைசிவரை கட்டிக் கொடுத்த ஊருக்குத் திரும்பிச் செல்ல மறுத்துவிட்டார்கள். கன்னிகாத்த மாரி மயினி திருமணத்தோடு இந்த மண்ணில் இருந்து மாயமாகிவிட்டார்கள். தேவதைத் தருணங்கள் என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் அளந்து வழங்கப்பட்ட ஒன்றுதானோ?

அதன்பின் மாரி மயினியை பார்க்கும்போதெல்லாம் வெயில் காலத்தின் வேம்பு நினைவுக்கு வரும். மீண்டும் வசந்தம் வந்தாலும் தளிர்க்கும் முடிவை தள்ளிப் போடும் வைராக்கியத்தை அவர்கள் எங்கிருந்து பெற்றார்கள்? ஆணின் தீமையை அஞ்சியா? அல்லது மீண்டும் ஆறுதல் தேடிவந்த அவர்களை அந்நியப் பார்வையோடு எதிர்கொண்ட அம்மாவை வெல்லவா? எந்தக் காற்றுக்கும் அசையாமல் நின்றெரியும் சுடராகிப் போனார்கள்.