
துபாயின் நீல நிறக் கடலைப் பார்த்தபடி மிக உயர்ந்த கட்டடத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் உயர்தர ஹோட்டலில் அமர்ந்து அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். ரஹத் ஹஸன் தன் பூனைக் கண்களில் அங்கிருக்கும் பெண்களை மேய்ந்துகொண்டே அவ்வப்போது பேசவும் எத்தனித்தான். உலகெங்கும் இயங்கிக் கொண்டிருக்கும் மிகப்பெரிய பன்னாட்டு கம்பெனி ஒன்றின் மார்க்கெட்டிங் ஹெட் என்பது அவனது மிடுக்கிலும் திமிரிலும் தெரிந்தது. மென்மையான தலைமயிர் அவன் கண்ணை மறைத்து விழுவதும் அதை மிகப் பொறுமையாக கையால் தள்ளிவிடுவதுமென அவனைப் பார்க்கும் எந்த ஒரு பெண்ணும் அவன் மடியில் விழுந்துவிடுவாள் என்று நினைத்துக்கொண்டார் நீல்ஸ்.
ஐந்து நட்சத்திர விடுதிகள் பலவற்றுக்கும் இதுபோன்று அலுவலக விஷயமாக நீல்ஸ் போயிருக்கிறார் என்றாலும் இந்த ஹோட்டலின் பகட்டு அதற்கும் மேலே. முதலில் இதை ஹோட்டல் என்பதே அவதூறு என்று அவருக்குப்பட்டது. இதற்கான சரியான வார்த்தையைத் தேடிப் பிடிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டார். அவரது தாழ்வுணர்ச்சி இப்படி அடிக்கடி எட்டிப் பார்க்கும்போதெல்லாம் ஏனோ அவருக்கு தன்னை நினைத்துக் கூச்சமாக இருக்கும். அவரது இந்தியாவும் அவரது திண்டுக்கல்லும் அவரது சக்கம்பட்டியும் அவரது அப்பா பழனிச்சாமியும் அம்மா தாயம்மாவும் இப்போதும் இதோ நிமிடத்தில் அந்த உயர்தர ஹோட்டலில் அவருக்குப் பின்னே ஓர் ஓரத்தில் அமர்ந்து ‘சாப்பிட்டியா தம்பி’ என்று ஒரே குரலில் கேட்பதுபோல் அவருக்கு எப்போதும் தோன்றும். மெல்ல நாசுக்காக யாருக்கும் தெரியாமல் நீல்ஸ் திரும்பிப் பார்த்தார். (more…)

