அஜய். ஆர்

கரைதல்

-காலத்துகள்-

பொதுத் தேர்வு நடந்துகொண்டிருப்பதால்   மதியம்தான் இவனுக்கு   பள்ளி.   அடுத்த வருடம் இதே நேரம் இவனும்  பன்னிரெண்டாம் வகுப்பு  தேர்வு எழுதிக்கொண்டிருப்பான்.  எட்டு  மணி அளவில்  அம்மாவும்  அப்பாவும் வேலைக்கு கிளம்ப, தினசரி படித்து முடித்து,  விவித் பாரதியின் காலை நேர தமிழ் ஒலிபரப்பு  சேவை  பத்து மணி அளவில் நிறைவுறும்போது தெரு அடங்கி விட்டது. இனி இரவில்தான்  மீண்டும் தேன்கிண்ணம் கேட்க முடியும்.

இயற்பியல் பாடத்தை புரட்டிப் பார்க்கலாம் என்று புத்தகத்தை எடுத்தவன் வெளியே போய்   படிக்கலாம் என்று மாடிப் படிக்கட்டில் அமர்ந்தான். பத்து பதினைந்து நிமிடங்கள் கழித்து சுற்று முற்றும் பார்த்தவன் கண்ணில் பின்புறமிருந்த வீட்டின் கிணற்றடியில் இவன் வயதையொத்த பெண் அமர்ந்தபடி   குளித்துக் கொண்டிருந்தது  பட்டது.  சட்டெனப் படிக்கட்டினுள் தலையை குனிந்து, பின் மீண்டும் எட்டிப் பார்த்தவனுக்கு அவர்கள் வீட்டு குளியலறையை உபயோகிக்க முடியாதபடி வெளிய குளிக்க ஏன் நேர்ந்தது   என்பதுதான் முதலில் தோன்றியது.  அவள் செயல்களில் எந்த அவசரமோ  யாரேனும் தன்னை கவனிக்கக்கூடும் என்ற பதற்றமோ இருந்தது போல் தெரியவில்லை.   அவ்வீட்டின் புழக்கடையில்  நடப்பட்டிருந்த  பவழ மல்லி, செவ்வரளிச்  செடிகள்,  வாழை , தென்னை மரங்கள் இயல்பான நிழல் படர்ந்த மறைவை  ஏற்படுத்தி  இருந்ததும், இந்த நேரத்தில் பொதுவாக  யாரும் வெளியே வருவதில்லை என்பதும்    அவளுக்கு  வெளியே குளிக்க தைரியம் அளித்திருக்க   வேண்டும். இவனேகூட இந்த இடத்தில் அமராமல்  சில  படிக்கட்டுக்கள் மேலோ கீழோ அமர்ந்திருந்தால்  அவளைப் பார்த்திருந்திருக்க  முடியாது.  தினமும் காலை ஏழு, ஏழரை மணி அளவில் அந்த வீட்டிலிருந்து ஒருவர் பல் துலக்கியபடி கர்ண கொடூரமான குரலில் வாய்  கொப்பளிக்கும்   சப்தங்கள்  எழுப்புவதையும்  அந்த தினசரி சடங்கை  எதிர்பார்த்திருந்து இவன் வீட்டில் கிண்டலடிப்பதும் மட்டுமே  இங்கு  குடி வந்த ஒரு வருடத்தில் பின் வீட்டை பற்றி அறிந்திருந்த அவனுக்கு  அங்கு  ஒரு பெண் இருப்பதே இப்போதுதான் தெரிந்தது.

இவன் பார்வையில் படும் போது குளித்து முடித்திருந்தவள்  மார் வரைச் சுற்றியிருந்த பாவாடையை கீழிறக்கியபடி எழுந்தாள்.  இறுதியாக  ஒரு கையால் தலையில் நீரை ஊற்றி , மற்றொரு கையால் முகத்தில் வழியும் நீரை நளினமாக  துடைத்துக்கொள்ள, நீர் அவள்  உடலில் வழுக்கிச் சென்றது. மரங்களில் இலைகளின் நடுவே ஊடுருவிய ஒளியில் அவளுடலில் நீர்த் துளிகள்  துல்லியமாக தெரிந்தன  ஒல்லியான உடல், முதிரா மார்பகங்கள், இன்னும் வடிவம் கொள்ளாத இடை  சராசரி நீளத்திலான கேசம் முதுகிலும், கன்னங்களிலும் ஒட்டியிருந்தது. (  பெரியவனாக ஆனபின்   இந்த சம்பவத்தை  அவன்  நினைவு கூரும்போதெல்லாம்  மரங்கள் சூழ்ந்த அமைதியான அந்த  இடமும், அவளின் உடலசைவுகளும்  அவளை   வனயட்சியுடன் தொடர்புபடுத்தச் செய்தன. இயல்பான சம்பவமொன்றை பால்ய கால பூதக்கண்ணாடியின்  மூலம் பார்ப்பதால் உருவாகும்  மிகையுணர்ச்சி அது என்று அவன் உணர்ந்தாலும் ,  அப்படி     உருவகிப்பதே  அன்று மட்டுமே பார்த்த, முகம் மறந்துப் போன அந்தப் பெண்ணின்  நினைவுக்கு  தான்   செய்யும் நியாயமாக  இருக்கும் என்றும் நினைத்தான).

அவள் உடலை துவட்டிக் கொண்டிருப்பதை கவனித்துக்கொண்டிருந்தவன்  வேறு யாரேனும் பார்க்கிறார்களா  என்று அருகிலிருந்த வீடுகளை பார்த்தான்.  யாரும் இருப்பது போல் தெரியவில்லை.   கூடப் படிக்கும்   பெண்களின்  காதோர,  கணுக்கால்  மென்  முடிகள், ஜடையை முன்னால்   தழைய விட்டு நீவியபடி பேசுவது ,  தோழியுடன் பேசத் திரும்பும் போதான கழுத்துச் சொடுக்கல்,   சைக்கிளில்  பயணிக்கும்போதும், இறங்கும்போதும் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்திற்கு  மேலேறும் அவர்களுடைய  சீருடை  ஸ்கர்ட்,  அவனை  இன்னும் சிறுவன் என்றே நினைத்து தங்களின்  ஆடை விலகல்கள் குறித்து அதிகம் அலட்டிக் கொள்ளாத அவனை விட   மூத்தப் பெண்கள்   எனச் சில வருடங்களாகவே அவனுள் பெண்ணுடல், அதன் அசைவுகள்  குறித்த குறுகுறுப்பும், அலைக்கழிப்பும் ஏற்பட்டிருந்தாலும் ஆடையின்றி ஒரு பெண்ணை இப்போது தான்  பார்க்கிறான். உள்ளே சென்று விடலாமா என்று யோசித்தவனுக்கு  இனி தன்னால் படிக்க முடியாது என்பது மட்டும் தெரிந்தது.

வீட்டு வாசலில் சைக்கிள் நிறுத்தப்பட்டு கேட் திறக்கப்படும் ஓசை கேட்டது.  “என்னடா படிக்கற” என்று கேட்டபடி சுந்தர் வர  “பிசிக்ஸ்டா” என்றபடி எழுந்து  சுந்தரை  உள்ளே அழைத்தான். ” படிக்கட்டிலேயே  கொஞ்ச நேரம் ஒக்காரலாமேடா ” என்ற சுந்தரிடம், “இல்லடா வெயில் அதிகமாறது, உள்ளயே போலாம்” என்றான். சுந்தர் வந்தது ஒரு விதத்தில் எரிச்சலாக இருந்தாலும், இக்கட்டிலிருந்து மீட்ட  உணர்வையும் தந்தது. உள்ளே சென்று சோபாவில் அமர்ந்தார்கள்.

“இன்னிக்கும் கம்ப்யூட்டர் ஸார் வர மாட்டார்டா, எங்களுக்கு  ஒரு பீரியட் ப்ரீ ” என்றான் சுந்தர்.

 “ஏன்டா நான் என் கம்ப்யூட்டர்லேந்து பேங்க்ல இருக்கற இன்போர்மேஷலாம்  பாக்க  முடியுமாடா?” எத்தனாவது முறை இதை அவன் கேட்கிறான் என்பது அவனுக்கும் சரி  சுந்தருக்கும் தெரியாது. மருத்துவம் படிக்க வேண்டுமென்றெல்லாம் பெரிய ஆசை இல்லாதிருந்தாலும், பெரும்பாலானோரைப் போல உயிரியல் க்ரூப்பையே இவன்  தேர்ந்தெடுத்திருந்தான். கம்ப்யூட்டர் பற்றியும் கூட பெரிய ஆர்வமில்லாவிட்டாலும், அது குறித்த அதீத கற்பனைகள் அவனுக்கு இருந்ததால் அந்த  க்ரூப்பை தேர்வு செய்திருந்த சுந்தரிடம் அது குறித்து கேட்டுக் கொண்டிருப்பான்.

“எல்லாம் முடியும்” என்று சுந்தரும் வழக்கம் போல் சலிக்காமல் பதில் சொன்னான்.

“அப்போ ஈஸியா பேங்க் பணத்த லவுட்டலாம்ல”

“அதாண்டா கம்ப்யூட்டர், ஆனா ஒழுங்கா கத்துக்கணும்”

“உங்க சிலபஸ் வேற ரொம்ப கம்மியா இருக்குடா , நூறு பக்கம் கூட இல்ல, பேசாம இந்த க்ரூப்ப எடுத்துருக்கலாம்”

“எல்லாம் ஏழெட்டு  ப்ரோக்ராம்தான்”

“என்னடா பேரு வெச்சிருக்காங்க  பேசிக், இன்னொன்னு என்ன  கோபால்னு நம்ம ஊர் பேரு மாதிரி”

“அத்த வுட்றா, இத்த கேளு  சூப்பர் மேட்டர், நம்ம மணி இருக்கான்ல அவன் சுஜாதாவ பாக்கறான்”.

“என்னடா சொல்ற”.

“ஆமாண்டா நேத்து கம்ப்யூட்டர் ஸார் வரலல, இவன் கம்ப்யூட்டர் ரூம்ல ஏதோ சீரிஸா எழுதிட்டிருந்தான், என்னடான்னு பாத்தா அவ பேரையும், இவன் பேரையும் வெச்சு ‘ப்ளேம்ஸ்’  ஆடிட்டிருக்கான்”

தன் பெயர் மற்றும்  பிடித்தமான பெண்ணின் பெயரை எழுதி   இரண்டிலும் உள்ள ஒரே அட்சரத்தை நீக்கிக் கொண்டே வந்து இறுதியில் மிஞ்சியிருப்பதை வைத்து அப்பெண்ணுடன் தனக்கு  எந்த வகையான உறவு ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளும்  – ஏழாவது, எட்டாவது படிக்கும் போது பிரபலமாக இருந்த – விளையாட்டை   இப்போதும் மணி ஆடிக்கொண்டிருக்கிறான் என்பது ஆச்சரியம் தான்.  (மீரா  மற்றும்  உமாவுடன்) சுஜாதா மேலும் இவனுக்கும்  – தான் அவர்களை பார்க்கிறோம் என்பது யாருக்கும் தெரியப்படுத்தாமல், பெண்கள் குறித்து அலட்டிக் கொள்ளாதவன்  என்ற பிம்பத்தை இவன்  காப்பாற்றி வந்திருக்கிறான்  – ஈர்ப்பு உண்டு  என்பதால் மணி மீது கொஞ்சம் எரிச்சலும் ஏற்பட்டது. சுஜாதாவுடன் ப்ளேம்ஸ் விளையாட்டில் தனக்கு  என்ன உறவு வந்தது என்று சட்டென்று நினைவுக்கு வரவில்லை, சுந்தர் சென்றவுடன் அதை ஆடிப்பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தான்.

“அவ பயாலஜி க்ரூப் ஆச்சேடா”

” மத்த பீரியட்லாம்  க்ளாஸ்ல ஒண்ணாதானேடா இருக்கோம்,  அவ ஒண்ணும்  இவனல்லாம்  எதுவும் கண்டுக்க மாட்டா’ என்று சுந்தர் சொன்னது கொஞ்சம் ஆறுதலாக இருந்தாலும்  ஒருவேளை சுந்தரும் அவளை பார்க்கிறானோ என்றும் தோன்றியது. சுந்தரென்றால் பரவாயில்லை விட்டுக்கொடுக்கலாம் என்று நினைத்துகொண்டான். உமா  மற்றும் மீரா  இருக்கிறார்களே.

“அவன்  ரேவதிய பாக்கறான்னு நெனச்சேன் ” என்றான் சுந்தர்.

ரேவதி குறித்து அவனுக்கு அபிப்ராயம்  எதுவும் இல்லையென்றாலும் ‘பெண்’ குறித்து அவனுக்கு அப்போதிருந்த மனநிலையில் அவளின்   உருவம்  முதல் முறையாக அவனை கிளர்த்தினாலும்,   அசௌகர்யமாகவும்  இருந்தது.  ‘பெண்கள்’ தவிர  வேறெதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம்  என்று நினைத்தவன்  “ஒங்க வீட்ல கேபிள் போடறது என்னடா ஆச்சு” என்று சுந்தரிடம்  கேட்டான்.

” அடுத்த மாசத்துலேந்து கேபிள் போடறங்கடா,  மாசம் அம்பது ரூபா, சாங்காலம் ஆறரைலேந்து சன் டி.வி, ராஜ் டிவி  உண்டு, அப்பறம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல். “

“பரவாயில்ல அடுத்த  வருஷம் ஒனக்கு  பப்ளிக் எக்ஸாம்னாலும் போட்டுட்டாங்க”

“தினமும்  காத்தால ரெண்டு  தமிழ்  படங்க போடறாங்களாம், புதுப் படங்க கூட போடுவாங்களாம் அதனாலத்தான்னு  நெனக்கறேன். எப்படியோ  வீட்ல அப்பாம்மா  இருந்தாங்கன்னா நான் பாக்க சான்ஸ் கெடையாது, யாரும் இல்லேனா ஸ்போர்ட்ஸ் சேனல் பாக்கலாம் “

“இங்க கொஞ்சம் ட்யூன் பண்ணா அடுத்த  போர்ஷன்  கேபிள் ரொம்ப பொறி பொறியா தெரியுது, அதுக்கு பாக்காமையே  இருக்கலாம் கண் வலியாவது இல்லாம இருக்கும்”. அடுத்த போர்ஷன் என்றதுமே இன்று முதல் முறையாக பார்த்த  பின்  வீட்டுப் பெண் மீண்டும் நினைவுக்கு வந்து சங்கடப்படுத்த  கால்களை மடித்து உட்கார்ந்தவன், “கருத்தம்மா பாட்டு கேக்கலாம்டா ” என்றான்.

 பாடல்களைக் கேட்டுக்கொண்டே, ஆட ஆரம்பித்த  ஐந்து ஆறு  வருடங்களில் கவாஸ்கரின் இடத்தை  நிரப்பிய   சச்சின்   சமீபத்திய தொடரில் நிகழ்த்திய  சாகசங்கள், அடுத்த வருட பாடங்களை எப்போதிலிருந்து படிக்க ஆரம்பிக்க வேண்டும் போன்றவற்றை பேசித் தீர்த்து  பள்ளிக்கு தயாராக சுந்தர் கிளம்பிச் சென்றவுடன் மீண்டும் படிக்கட்டு அருகே சென்று  பின் வீட்டின் கிணற்றடியை பார்த்தான். யாருமில்லை. அவள்  குளித்ததற்கு தடயங்களாக  கிணற்றடியின் ஈரமும், சோப்பின் நுரை கலந்த   கழிவு நீரும் இருந்தன. அங்கேயே  பார்த்துக்கொண்டிருந்தால் அவள் உருவம்  மீண்டும் அங்கு தோன்றக் கூடும்  என்ற   எண்ணம் ஏற்பட்டது.  இத்தகைய நேரங்களில்  இடுப்புக்குக் கீழ் உருவாகும் இறுக்கம்  இப்போதும் ஏற்பட உடல் எடை கொண்டது போல் தோன்றியது. மெல்ல நடந்து வீட்டிற்குள்  சென்றான். இம்மாதிரியான மனநிலையில்  என்ன, எப்படிச் செய்தோம் என்றெல்லாம் பள்ளியில்   நண்பர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறான் என்றாலும்  அவர்கள் அந்த செயலுக்கு சூட்டிய  பெயரை உச்சரிப்பதுகூட அவனுக்கு தவறொன்றை செய்கிறோம் என்ற   கூச்சத்தை ஏற்படுத்தக் கூடியதாகவே இருந்தது. வீட்டில் அங்குமிங்கும் நடப்பது , மனதில் உள்ளதற்கு முற்றிலும் சம்பந்தமில்லாத வேறொன்றைக் குறித்து யோசிப்பது என   வழக்கமாக அவனுக்கு உதவும்  உத்திகள் இன்று உதவவில்லை.    கட்டிலில் சென்று அமர்ந்தவன்  தன்னிச்சையாக குப்புறப்படுத்து  தன் உடலின் மீது கட்டுப்பாட்டை  இழந்தான்.

கிணற்றடியில் பார்த்தவள்,  பள்ளி சீருடையில் சுஜாதா, மீரா , உமா , அடுத்த போர்ஷனில் வசிக்கும் சுந்தரி அக்கா  – அக்கா  எப்படி, ஏன் என்று குற்றவுணர்ச்சி கொள்ளக் கூட  அவகாசம் இல்லாமல்   –    என பலர் மனதில் உருக்கொண்டு கரைந்தார்கள்.   சில நிமிடங்கள் கழிந்தபின்  வாயிலிருந்து எச்சில் தலையணையை நனைத்திருக்க  தொடைகளின் இடுக்கில் கொழ கொழவென  ஒட்டிக்கொண்டிருந்தது. சற்றே மூச்சிரைக்க, உடலில் இன்னும் சிறு அதிர்வு  இருந்தது.  அனிச்சையாக  மூடியிருந்த கண்களை திறக்க முதலில் எதுவும் விழிகளில்  தங்கவில்லை.  கையை உள்ளே நுழைத்து பிசுபிசுப்பை தொட்டு முகர  இதுவரை அறிந்திராத மணம்.  திரும்பிப்  படுக்க முயன்றபோது  கால்கள்  தொளதொளவென வலுவிழந்து இருக்க  உடனடியாக எழ முடியாது என்று புரிந்தது.

அச்செயல்    அவன்   கற்பனை செய்திருந்தது  போல  அவனை  அருவருப்பானவனாக  உணரவைக்கவில்லை. மாறாக  இடுப்பின் இறுக்கம்  தளர்ந்திருக்க  மனதில்    முற்றிலும் புதிய பரவசமும், பூரண நிறைவும் பரவியிருந்தது.    விட்டத்தை பார்த்தபடி படுத்திருந்தவனுக்கு  ஆபத்தான எல்லையொன்றை  வெற்றிகரமாக கடந்து     பெரிய மனிதனானது போன்ற உணர்வு.    இப்போது   நடந்தது அவனுக்கே மட்டும் உரியதான அந்தரங்கமான அனுபவமாகவும் அதே நேரம்  இதை குறித்து  யாரிடமாவது  பகிர்ந்து கொள்ள வேண்டியதாகவும்  தோன்றியது. மதியம் பள்ளியில்   சுந்தரிடம் இதை பற்றி  சொல்லலாமா, அவன் என்ன நினைப்பான்  என்று யோசித்துக்கொண்டிருந்தான். பத்து பதினைந்து நிமிடங்கள் கழித்து எழுந்து முகம் கழுவி  பள்ளிக்குச் செல்ல தயாராக சீருடையை அணியும் போது உள்ளாடையில்  கெட்டி தட்டி படிந்திருந்த கறையை  பார்த்தவனுக்கு  அதுவரை இருந்த உற்சாகமனைத்தும் வடிந்து  வீட்டிற்கு தெரியாமல் அதை எப்படி அகற்றுவது என்ற கவலை ஏற்பட்டது.

பாலை

காலத்துகள்

இரவுணவை தயார் செய்து கொண்டிருக்கும்போது, என்ன நேரம் என்று கவனித்தவளுக்கு வழக்கமான சஞ்சலம் உண்டாக, சமையலைத் தொடர முடியாமல் சமையலறை மேடை மீது கைகளை வைத்து கொண்டு நின்றிருந்தாள். “என்னமா ஆச்சு?” என்று தண்ணீர் எடுக்க வந்த ரோஹித் கேட்க, அப்போதைக்கு ஏதோ சொல்லி சமாளித்தாலும் அவன் வீட்டின் சூழலை கவனித்து வருகிறான் என்ற சந்தேகம் அவளுக்கு இல்லாமல் இல்லை. அலைபேசியில் ஆனந்தியின் அழைப்பு வரவும், விடுபட்ட உணர்வோடு அவளுடன் பேசுவதற்காக படுக்கையறைக்குச் சென்றாள்.

தன் தெருவிற்குள் நுழைந்தவனின் கண்பார்வையில் அவன் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு தென்பட்டதும் நடையின் வேகம் அனிச்சையாக குறைய, எந்த அவசரமும் இன்றி அபார்ட்மெண்ட்டை அடைந்தான். தரைதளத்தில் நின்றிருந்த ராகவன், “ஸார், இந்த வீக்எண்டு வாட்டர் டாங்க் க்ளீன் பண்ணப் போறோம், ஆளுக்கு ஐநூறு ரூபாய் ஆகும், உங்க மிசஸ் கிட்ட சொல்லி இருக்கேன்” என்றார். “பண்ணிட்லாம் சார்,” என்றவன், சுத்தம் செய்யப்போகிறவர்கள் பற்றி, அங்கு நடப்பட்டிருந்த செடிகள் பற்றி, தெருவில் புதிதாக வைக்கப்பட்டிருந்த அரசாங்க குப்பைத் தொட்டியைப் பற்றி ராகவனிடம்- அவர் சொல்லும் பதில்களில் அதிக கவனம் செலுத்தாமல்- விசாரித்தபடி கொஞ்சம் நேரம் செலவிட்டான். பின்னர் லிப்டைத் தவிர்த்து, மெதுவாக நடந்தே மூன்றாவது தளத்தில் உள்ள தன் வீட்டிற்கு வந்து படுக்கையறைக்குள் நுழைந்தவன் அங்கே அவள் ஜன்னலருகே அலைபேசியில் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து வெளியே செல்லலாமா என ஒரு கணம் யோசித்து, தன் அலைபேசியில் ஏதோ நோண்டுவது போல் படுக்கையில் அமர்ந்தான். ஓரிரு நிமிடங்களுக்குப்பின் அவன் இருப்பை உணர்ந்தவள் அறையை விட்டு வெளியேறவும், உடைகளைக் களைந்து குளித்து முடித்தவன் ஜன்னலருகே அமர்ந்திருக்கும்போது அவள் மீண்டும் உள்ளே வந்தாள்.

‘கிச்சன்ல குழா லீக்….’

‘ப்ளம்பர் நம்பர் இருக்…’

‘அவன்ட்ட பேசி, வந்து பாத்துட்டான். நாளைக்கு மாத்தரானாம், ஆயிரம் ருபாய் ஆகும்’

”ம்ம்ஹம்…’

‘வாட்டர் டாங்க்..’

‘வரும்போது ராகவன் சார் சொன்னார்’

அவள் அறையை விட்டு வெளியேறத் திரும்பியவுடன், ‘நாளைக்கு லேட்டா வருவேன்’

‘… நைட் சாப்பாடு?’

‘கலீக் ரிஷப்ஷன், நேத்து சொன்னேனே’

‘… ‘

எதுவும் சொல்லாமல் வெளியேறினாள்.

‘சாப்ட வாப்பா’ என ரோஹித் கூப்பிடும்போதுதான் வெளியே வந்தான். பாத்திரங்கள் அவ்வப்போது நகர்த்தப்படுவதைத் தவிர வேறெந்த ஓசையும் இல்லாத இரவுணவின் அமைதியை தாள முடியாமல் தலையை தூக்க, அவள் தன்னை பார்த்தபடியே சாப்பிடுகிறாள் என முதலில் நினைத்தவன், அவள் தன்னை கவனிக்காமல் எதையோ யோசித்தபடி உண்கிறாள் என்பதைப் பிறகுதான் உணர்ந்தான்.

“ஸ்கூல்ல பி.டி.ஏ மீட்டிங் இந்த வாரம் இருக்கு”

பதில் சொல்லாமல் இருந்தவன், அவள் எதுவும் பேசாமல் இருக்கவே அவளை கவனித்தான். மீண்டும் தலையை குனிந்தபடி சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். ரோஹித் இவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

“நானும் வரணுமா?”

“எப்பவும் ஒருத்தரே வரக்கூடாதுன்னு ஸ்கூல்ல சொன்னாங்கன்னு சொன்னேனேப்பா”

“ம்ம், என்னிக்கு மீட்டிங்”

“சனிக்கிழமை, உங்களுக்கு எஸ்.எம்.எஸ் கூட அனுப்பி இருந்தாங்களே”

“வரேன்”

ரோஹித் ஏதோ பேசியபடி இருக்க, இருவரும் எதையோ யோசித்தபடி அவனுக்கு பதிலளித்தபடியும், கண்கள் சந்திக்கும் அசந்தர்ப்பமான கணங்களில் உடனே பார்வையை விலக்கியபடியும் சாப்பிட்டு முடித்தனர். இரவுணவு ஏற்படுத்திய கட்டாய அண்மையின் முடிவு இருவருக்குமே ஆசுவாசமாக இருந்தது.

படுக்கையறைக்குச் சென்று விளக்கை அணைத்தவன், மின்னொளியின் வெப்பம் இல்லாமலாகும் முதற்கணம் தரும் மெல்லிய குளிர்ச்சியை உணர்ந்தான். அறையின் இருளில் அலைபேசியில் நீல நிற ஒளிப்புள்ளி சுடர் போல் மினுங்கியது. திருவிழாக் காலம் ஆரம்பித்து விட்டதால், வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப வேண்டிய ஆடைகளுக்கான விற்பாணைகள் பல மடங்கு அதிகரித்திருந்தன, அதற்கேற்றார் போல் சரக்கு அனுப்புவதில் குழப்பங்களும் தவிர்க்க முடியாத தாமதங்களும். அது குறித்ததாக இருக்கலாம் என்று எண்ணியவன் எதுவாக இருந்தாலும் நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து, வந்திருந்தது அழைப்பா அல்லது குறுஞ்செய்தியா என்று எதுவும் பார்க்காமல் அணைத்தான். சில கணங்களின் முழு இருட்டிற்குப் பின் தெரு விளக்குக்களின் ஒளியினால் அறை சற்றே துலங்கத் தொடங்கியது.

தொலை தூரத்தில் கலங்கரை விளக்கம் வழக்கம் போல் அதே சீரான இடைவெளியில் சுற்றி அவன் வீடிருக்கும் திசை பக்கம் திரும்பும்போது அறையின் சுவர்களில் அலை போல் வெளிச்சம் நெளிந்து மறைந்தது. இன்னொரு புறமுள்ள ஜன்னலில் வழியே தெருவில் செல்லும் வாகனங்களின் ஒளிக்கற்றைகள் அவ்வப்போது ஊடுருவின. அறையில் இருந்த மங்கலான ஒளியில் கைகளினால் சுவற்றில் நரி, மான், பாம்பு என வழக்கமான நிழலுரு வடிவங்களை- அவை ஒரே போல் தோற்றமளிக்கின்றன என்ற சந்தேகத்தோடு- உருவாக்கிக் கொண்டிருந்தான்.

மாடிக்குச் சென்று ஒரு சுற்று சுற்றி வந்தாள். அருகில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் அடுக்ககத்தின் காப்பாளர் பண்பலை கேட்டுக் கொண்டிருப்பது சன்னமாக ஒலித்தது. பிரதான சாலையில் இருந்த ஆடை, வீட்டுப் பொருள் விற்பனை கடைகள் ஒளிர்ந்து கொண்டிருப்பது இங்கிருந்தே தெரிந்தது. மேற்கு திசையில் தான் வழக்கமாக அமரும் மேடையில் அமர்ந்து தெருவை கவனிக்க ஆரம்பித்தாள். சதுர, செவ்வக வடிவிலான ஜன்னல்களின் வழியே தெரிந்த அறைகளுக்குள் ததும்பி இருந்த வெளிச்சத்தில் உருவங்கள் மிதப்பது போல் தோன்றின. இரண்டு வீடுகள் தள்ளி மாடியில் சிறிய போர்ஷனொன்றில் குடியிருப்பவர் வராண்டாவில் அமர்ந்தபடி அன்றைய தினசரியை எப்பவும் போல் படித்துக் கொண்டிருந்தார். இன்னும் சிறிது நேரத்தில் அவர் மனைவியும் வந்தமர, இருவரும் பேச ஆரம்பிப்பார்கள். சில நேரங்களில் அவர்களுடன் சேர்ந்து கொள்ளும் அவர்களின் கல்லூரி செல்லும் மகள் சில காலமாக அவள் கண்ணில் படவில்லை என்பது நினைவுக்கு வர, வேலையில் சேர்ந்திருப்பாள் என்று நினைத்தவளுக்கு தானும் மீண்டும் வேலைக்குச் சென்றால் என்ன என்று சமீப காலமாக தோன்றும் எண்ணம் மீண்டும் ஏற்பட்டது. அது குறித்து யோசித்தவாறே, பள்ளியில் இருந்து மகளை- பொதுத் தேர்வுக்கான சிறப்பு வகுப்புக்கள் முடிந்து நேரங்கழித்து வருகிறாள் போல என இவள் யூகித்திருந்தாள்- அழைத்து வரும் பெண் எப்பவும் போல் தெருவைக் கடந்து செல்வதை கவனித்தாள்.

தெரு வழக்கம் போல் இயங்கிக்கொண்டிருப்பது ஆசுவாசமாக இருந்தது. குளிர் அதிகமாகவே, கீழே இறங்கியவள் ரோஹித்தை படுக்கப் போகச் சொன்னாள். அறைக்கு வெளியே பேச்சுச் சத்தத்தைக் கேட்டவன், ஜன்னல்களை மூடிவிட்டு சுவற்றை பார்த்தபடி பெட்டில் படுத்தான். வீடு பூட்டப்பட்டுள்ளதா என்பதை மீண்டும் ஒரு முறை சரி பார்த்துவிட்டு படுக்கையறை அருகே வந்தபின் ஒரு கணம் தயங்கியவள், உள்ளே விளக்கு எரியாததை உணர்ந்து கதவைத் திறந்து நுழைந்தாள்.

கிளி ஜோசியம்

காலத்துகள்

kamadeva1

இன்று அலுவலகத்திற்கு மட்டம் போட்டு விட்டு எந்த இலக்குமில்லாமல் வீட்டில் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்தேன். 11.30 மணி அளவு கடைக்குச் செல்ல வேண்டி வர, அந்த வேலையை முடித்துக் கொண்டு திரும்பும்போது, கூரை வீட்டொன்றின் திண்ணையில் அமர்ந்தபடி கிளி ஜோசியன் ஒருவன், 50-60 வயதிருக்கக்கூடிய பெண்ணிற்கு ஆரூடம் சொல்லிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். கதையொன்றிற்கு விஷயம் தேறுமே என்று அவர்கள் பேசுவதை கவனிக்க ஆசைப்பட்டாலும், நாகரீகம் கருதி – அவர்களை பேசுவதை முடிந்தளவு உள்வாங்க காதுகளை கூர்மையாக்கி -, அவர்களைக் கடந்து வந்தேன். உண்மையில் நாகரீகம் கருதி அல்ல, ஆள் நடமாட்டமில்லாத நிச்சலமான தெருவில், நான் அங்கு நின்றிருந்தால் கண்டிப்பாக வசவு கிடைக்கும் என்பதால்தான் அங்கு நிற்காமல் வந்திருந்தேன். யாரும் கவனிக்காதபடி ஒட்டுக்கேட்கும் வாய்ப்பு கிடைத்திருந்தால் அதைக் கண்டிப்பாகச் செய்திருப்பேன். சரி, நான் கண்ட காட்சியை வைத்து கற்பனையில் கதை எழுத வேண்டியதுதான், இன்றைய பொழுதும் போகும் என்று யோசித்தபடி எழுத அமர்ந்தேன்.

நான் கடைசியாக கிளி ஜோசியனொருவனைப் பார்த்தது 6-7 வருடங்களுக்கு முன் கிழக்கு தாம்பரத்தில் வசித்தபோதுதான். ரயில் நிலையத்திற்குள் நுழையும் சாலையில், ஜோசியர்கள் சிலர் இருப்பார்கள், அவர்களில் கிளி ஜோசியர்களும் உண்டு. நான் பார்த்த வரை பெரும்பாலும், அவர்கள் யாருக்கேனும் ஆருடம் சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். அதைக் கேட்பவர் முகத்தில் தெரியும் ஆயாசத்தையும், துயரையும் எளிதில் மறக்க முடியாது. நான் புதுச்சேரி வந்த பிறகு -இன்று பார்ப்பது வரை-, கிளி ஜோசியர் எவரும் கண்ணில் தென்பட்டதில்லை.

எங்கிருந்து கதையை ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருக்குக்கும்போது நான் செங்கல்பட்டில் வசித்தபோது கிளி ஜோசியம் பார்த்த நிகழ்வொன்று நினைவுக்கு வர, அதையே கொஞ்சம் இட்டுக் கட்டி கதையாக எழுதி விடலாமே என்று முடிவு செய்தேன். இது கதையே இல்லை, வெறும் அனுபவக் குறிப்பாக இருக்கிறதே என்று -நியாயமான – விமர்சனம் வரும்தான் என்றாலும், உண்மையின் வீச்சிற்கு என்று ஒரு மதிப்பு இருக்கும் இல்லையா, என்று என்னை சமாதானம் செய்து கொண்டு இதை எழுத உட்கார்ந்தேன்.

செங்கல்பட்டில் பெரிய மணியக்காரத் தெருவில் நாங்கள் குடியிருந்த வீட்டிற்கு பின்மத்திய பொழுதொன்றில் கிளி ஜோசியன் வந்த அன்று பள்ளி விடுமுறை நாளாக இருந்திருக்க வேண்டும். மாடியில் வீட்டின் சொந்தக்காரரும், கீழே மூன்று போர்ஷன்களில் குடியிருப்பவர்களுமாக இருந்த 4 வீடுகளிலும் பெண்களும், குழந்தைகளும் மட்டுமே இருந்தார்கள். குடித்தனக்காரர்கள் அனைவரும் ஜோசியம் கேட்க கூடினோம். ஆனால் நான் இன்று பார்த்த பெண் போல் இல்லாமல், கொஞ்சம் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும், அத்துடன் வித்தையொன்றை பார்க்கப்போகும் ஆர்வத்துடன் தான் அனைவரும் இருந்தார்கள் என்று நினைக்கிறேன்.

முதலில் ஜோசியம் பார்த்தது சுந்தரி அக்கா. கிளி அவருக்கு எடுத்த சீட்டை பார்த்து விட்டு, “கவலைப் படாதம்மா, எல்லாம் நல்லபடியா நடக்கும்” ,”புருஷனுக்கு வேலை சரியாகிடும்” என்றெல்லாம் ஜோசியன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்த எனக்கு மகா ஆச்சரியம். பின்னே, சுந்தரி அக்கா பற்றி புட்டு புட்டு வைக்கிறானே. புதிதாக திருமணமாகி செங்கல்பட்டிற்கு அருகில் இருந்த கிராமத்தில் இருந்து வந்திருந்தவர் சுந்தரி அக்கா. அவர் கணவர் சென்னையில் எதோ தொழிற்சாலையில் தற்காலிக ஊழியராக பணியாற்றிக்கொண்டிருந்தார். நீண்ட பணி நேரம், விரைவுப் பேருந்துகள் அதிகம் இல்லாத காலத்தில் நீண்ட நேர ரயில் பயணம், இரவு நேர ஷிப்ட் என கடும் சுமை அவருக்கு. நேரங்கெட்ட நேரத்தில் பணி முடிந்து வருவதாலேயே இருவருக்கும் அவ்வப்போது சண்டை வர அக்கா கடுமையாக கத்திக் கொண்டிருப்பார். அருகில் இரு குடும்பங்கள் இருக்கின்றனவே, நான் வேறு பேச்சுத் துணைக்கு இருக்கிறேன், அக்காவிற்கு என்ன தனிமை இருக்கப்போகிறது, எதற்காக தேவையில்லாமல் சண்டையிடுகிறார் என்று அப்போது நினைத்துக் கொள்வேன். அதே நேரம், அந்த வார இறுதியிலே சிரித்தபடி பரவசமாக கிராமத்திற்கோ, சினிமாவிற்கோ இருவரும் கிளம்பி விடுவார்கள் என்பதையும் கவனிப்பேன். வத்தக் குழம்பின் உபாசகனாக மட்டுமே இருந்த எனக்கு, உருளைக் கிழங்கும், பூண்டும் கொண்டு செய்யப்பட்ட காரக்குழம்பை அறிமுகப்படுத்தியவர் அக்காதான். பின் என் வீட்டில் சொல்லி அதை செய்வித்த போதும் , பிற இடங்களில் அதை உண்டபோதும் அந்த முதல் நாள் ருசியின் பரவசம் மட்டும் கிட்டவேயில்லை. இதெல்லாம் எனக்கும் தெரிந்த விஷயங்கள் ஆச்சே, ஜோசியனும் சரியாக அக்காவின் கணவரின் வேலை குறித்தெல்லாம் சொல்கிறானே என்று பரவசமாக அவன் பேசுவதையே கேட்டுக்கொண்டிருந்தேன்.

அதிலிருந்த சூட்சுமத்தை புரிந்து கொள்ள இன்னும் சில வருடங்கள் தேவைப்பட்டன எனக்கு. உண்மையில் நான் மேலே கூறியவற்றுள் பல விஷயங்களை ஜோசியன் சொல்லவில்லை (கணவன்-மனைவி சண்டை, வார இறுதி இணக்கம் இத்தியாதி). அவன் சொல்லியது வேலை, எதிர்கால வாழ்க்கை பற்றிய பொதுப்படையான விஷயங்களை மட்டுமே. அவற்றையும்கூட, அக்காதான் பெரும்பாலும் சொல்லிக்கொண்டிருந்தார் என்பதும் பிறகு புரிந்தது. ஜோசியனின் பாணி எளிமையானது. கிளி எடுக்கும் சீட்டைப் படிக்க வேண்டியது, தொண்டையைச் செறுமி, “இன்னும் கொஞ்ச காலத்துக்குத்தான், அப்பறம் சரியாகி விடும்” என்பது போல் எடுத்துக் கொடுக்க வேண்டியது. அதுவே ஜோசியம் பார்க்க வந்தவர்களுக்கு தூண்டுதலாக அமைய, அவர்கள் தங்கள் கஷ்டங்களைச் சொல்ல ஆரம்பித்து விடுவார்கள், அதன் பின் அதைப் பற்றிக் கொண்டு சில நல்வார்த்தைகளை ஜோசியன் சொல்ல வேண்டியது. அவ்வளவு தான் விஷயம். அன்றும் அதுதான் நடந்தது. கிளியையே அதிகம் கவனித்துக் கொண்டிருந்த எனக்கு இந்த நுட்பம் அன்று புரியவில்லை, ஜோசியனே அனைத்தையும் சொல்லி விட்டதாக – எனக்குத் தெரிந்த, அவன் சொல்லாததை, பிற விஷயங்களைக் கூட அவன் சொல்லியதாக நானே மிகைப்படுத்தி – எண்ணிக்கொண்டேன். அக்காவும் அப்படி உணர்ந்தாரா என்று தெரியாது. அக்காவின் மனதை இலகுவாக்கும் சிலவற்றை ஜோசியன் சொல்லி முடிக்க, வீட்டின் முன்பகுதியில் குடியிருக்கும் அக்கா அடுத்து ஜோசியம் பார்த்தார்.

அவருக்கு ஜோசியம் பார்ப்பது எளிதாக இருந்திருக்க வேண்டும். அக்காவின் முதல் குழந்தைக்கு – அப்போது அவனுக்கு 3 வயதிருக்கும் – உதட்டில் பிளவு (cleft lip) இருக்கும். பள்ளியில் சேர்த்தபின், அவனால் படிக்க முடியுமா என்ற கவலை அவர்களுக்கு. அவர்களாக எதுவும் சொல்லாமலேயே ஜோசியன் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த நல்ல விஷயங்களை சொன்னான். நல்ல படிப்பு, சம்பாத்தியம், நல்ல இடத்தில் திருமணம் (3 வயது மற்றும் 1 வயதான குழந்தைகளின் திருமணம் பற்றி அவன் குறி சொல்வதின் அபத்தம் அப்போது எனக்கு புரியவில்லை).

அக்காவின் கணவர் பற்றி வழக்கமான பொத்தம் பொதுவான கருத்தாக “எல்லாம் சரியாயிடுவாரம்மா” என்று சொன்ன போது மட்டும் பிலி பிலி என அவரை அக்காவும், அவர் மாமியாரும் பிடித்துக் கொண்டது எனக்கு வியப்பளித்தது. ஏனென்றால், அக்காவின் குடும்பத்தை விட பொருளியல் ரீதியாக பின்தங்கிய குடும்பம் என்றாலும், அரசு வேலை, பணி உயர்வுக்கான வாய்ப்புக்கள் இதையெல்லாம் பார்த்து திருமணம் முடிக்கப்பட்டது என்று பேசிக்கொள்ளப்பட்டது (அதாவது மற்றவர்கள் பேசிக்கொள்வதை நான் தன்னிச்சையாக ஒட்டுக் கேட்டேன்). மாமியாரும் இவருடன் அவ்வப்போது வந்து தங்கியிருந்தார். கிராமத்தில் கணவரின் தம்பி ஒருவன் படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு இவர் அதிகம் உதவுவதாக வீட்டில் சண்டை வரும், அக்காவின் குடும்பத்தினரும் வந்து சண்டையிடுவதை பார்த்திருக்கிறேன். மாமியார், மருமகள் இருவருக்குமே மகன்/கணவன் மற்ற தரப்பிற்குதான் சாதகமாக இருக்கிறான் என்ற எண்ணம் உண்டு என்பதால் சில சமயங்களில் இருவரும் ஒரே நேரத்தில் அவரை திட்டிக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். அதே சூழல் என்று சொல்ல முடியாவிட்டாலும், பல ஆண்டுகள் கழித்து நாவலொன்றைப் படித்தபோது, அதன் சம்பவங்களிற்கும் நான் அக்காவின் குடும்பத்தில் பார்த்ததற்கும் உள்ள சில ஒற்றுமைகளை ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை.

அன்று ஜோசியம் பார்த்த பெண்கள் , குழந்தைகளின் எதிர்காலம், கணவனின் வேலை இவற்றை பற்றியே கேட்டார்களே தவிர தங்களை பற்றிய தனிப்பட்ட கணிப்புக்கள் எதுவும் கேட்கவில்லை. அனைவரும் முதன்மையாக எதிர்பார்த்தது தங்கள் குடும்பம் குறித்த சில நற்சொற்களை மட்டுமே.

அடுத்து நான் ஜோசியம் பார்த்து முடித்தபின், ராட்சசி எங்களுடன் சேர்ந்து கொண்டார். எங்களுக்கு அடுத்த வீடு அவருடையது. வக்கீலிடம் குமாஸ்தாவாக இருந்த அவர் கணவர், வக்கீலின் சில பல ரகசியங்கள் அறிந்தவர் என்றும் அதனால்தான், இத்தனை பெரிய வீட்டை அவரால் கட்ட முடிந்தது என்றும் பேச்சு  இருந்தது. ராட்சசி குமாஸ்தாவின் மனைவியே அல்ல (குறைந்தபட்சம் முதல் மனைவி அல்ல), முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது தொடுப்பு ஏற்பட்டதாகவும், அவர் நோயில் விழ – நோயுற்றவரை கருணையில்லாமல் வீட்டின் பின்புறத்தில், தோட்டத்தில் இறக்கும் வரை கவனிப்பற்று படுக்க வைத்திருந்ததாக, ராட்சசிதான் செய்வினை வைத்ததாக – இவர் வீட்டினுள் நுழைந்ததாகவும் பேசிக்கொண்டார்கள். இதனாலெல்லாம் சிறுவர்களான நாங்கள் அவரை ராட்சசி என்றழைக்கவில்லை. இன்று இதை சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறது, ஆனால் சராசரிக்கும் சற்று அதிகமான உயரம், பருமனான உடல்வாகு, அடர் கருப்பு நிறம், சுருட்டை முடி என அவரின் தோற்றம்தான் அப்படி அழைக்கச் செய்திருக்க வேண்டும்.

இத்தனைக்கும் எப்போதும் அடர்த்தியாக குங்குமமும் விபூதியும் பூசிக்கொண்டிருக்கும், கழுத்தில் சிறு ருத்திராட்சை மணி அணிந்து கொண்டிருக்கும் அவரைப் பார்த்தால், பக்தி மிகுந்தவர் என்றே சொல்லலாம். எனக்கோ அவைகூட பீதி அளிக்கக்கூடியதாக – மந்திரம்,சூனியம் என என் கற்பனை தறிகெட்டு ஓடும் – இருந்தது. தலையில்லாதப் பெண் ஒருவர் இரவு நேரத்தில் பிச்சை கேட்க வருகிறார், இல்லையென்று சொன்னாலும் சரி, ஏதேனும் கொடுக்க கதவைத் திறந்தாலும் சரி பயங்கரமாக எதோ செய்து விடுகிறார் என்றும் ஒரு முறை புரளி பரவியது. (கொஞ்ச நாட்களுக்குப் பிறகு தலையில்லாத பெண்ணும் வேறெங்கோ பிச்சை எடுக்கக் சென்று விட, எல்லாப் புரளிகளைப் போல இதுவும் முழுமையாக இல்லாததால் அவர் பயங்கரமாக என்ன செய்தார் என்பது இறுதி வரை தெரியாமலேயே போய் விட்டது ). இதைக் கேட்டதும் நான் முதலில் சந்தேகப்பட்டது ராட்சசியைத்தான். நாங்கள் குடியிருந்த வீட்டின் கடைசி போர்ஷன் எங்களுடையது என்பதால் நீண்ட சந்தொன்றில் நுழைந்து தான் செல்ல வேண்டும். வீட்டின் முன்புறத்தில் உள்ள – காலமாகி விட்ட – வீட்டைக் கட்டியவரின் மார்பளவு சிலை கிலியை ஏற்படுத்தினால், இருண்ட சந்திற்குள் நுழைந்தவுடன் சுவற்றின் மறுபுறமுள்ள வீட்டில் ராட்சசி என்ன மந்திர தந்திர செயல்களில் ஈடுபட்டிருக்கிறாரோ என்று தறிகெட்டு ஓடும் என் கற்பனை பீதியை இன்னும் அதிகமாக்கும்.

பயம் உருவாக்கிய விலகலுடன்தான் தெருவில் உள்ளவர்கள் அவரிடம் பழகினார்கள். அன்றெல்லாம் சாதாரண கருப்பு/ வெள்ளை தொலைக்காட்சி என்பதே தெருவில் ஓரிரு வீடுகளில் மட்டுமே இருந்த சூழலில், ராட்சசி வீட்டில் வண்ணத் தொலைக்காட்சியே இருந்தது. இருந்தும் தொலைக்காட்சி இருக்கும் மற்ற வீடுகளுக்கு வார இறுதி படம், பாடல் நிகழ்ச்சியை பார்க்க முண்டி அடித்து செல்வார்களே தவிர ராட்சசியின் வீட்டிற்கு யாரும் சென்றதில்லை. வார நாட்களில் மாலை நேரத்தில் பெண்கள் சிறு சிறு குழுக்களாக வீட்டு வாசல்களில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருப்பது தினசரி காட்சி. ஆனால் ராட்சசி மட்டும் தனியாக தன் வீட்டு வாசலில் அமர்ந்திருப்பார். தெருவில் செல்பவர்களிடம், அடுத்த வீட்டுக்காரர்களிடம் சில சமயம் பேச்சு கொடுத்தாலும் அதை சில நிமிடங்களுக்கு மேல் அவர்கள் நீடித்ததில்லை.

எனவே ராட்சசி எங்களுடன் சேர்ந்து கொண்டது எங்களுக்கு உவப்பாக இல்லாததோடு, சிறிது அசூயையும் உருவாக்கியது. அவர் எதிர்காலம் குறித்து தெரிந்து கொள்ள அல்ல, வேடிக்கை பார்க்க மட்டுமே வந்திருந்தார். ஜோசியன் அவரிடம் சீட்டெடுக்கச் சொன்ன போது ‘எல்லாம் அவனுக்குத் தான் தெரியும்’ என்பதாக ஏதோ முதலில் சொன்னவர், சின்ன வற்புறுத்தலுக்குப் பின் ஒப்புக்கொண்டார். ஆனால் இரண்டு மூன்று முறை கிளி அவருக்கான சீட்டை எடுக்கவில்லை. அவர் குறித்து விபரீத கற்பனைகளையே கொண்டிருந்த எனக்கு இதுவும் பயத்தையே உண்டாக்கியது, கிளிக்கு இவர் ரகசியங்கள் குறித்து தெரியும், ஆனால் அவற்றை சொல்ல பயம் அதனால்தான் சீட்டை எடுக்கவில்லை என்று நினைத்தேன். ஜோசியனோ அதற்கு சிறிது பருப்பும் தண்ணீரும் கொடுத்து சீட்டை எடுக்க வைத்து விட்டான். வழக்கம் போல், நேர்மறை விஷயங்களை சொல்ல ஆரம்பித்தவன், சற்று நிறுத்தி, கொஞ்சம் யோசித்தபின், ராட்சசி அடுத்த இரு வருடங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று பொருள்படும் படி பூடகமாக ஏதோ கூறினான். இப்படி சொல்வதால் ராட்சசி கோபமடைவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர் முகத்தில் எந்த மாறுதலும் இல்லை, மீண்டும் ‘எல்லாம் அவன் பாத்துப்பான்’ என்பதாக ஏதோ சொன்னார். இருந்தாலும் அவர் வந்ததிலிருந்தே குறைந்து கொண்டிருந்த சூழலின் இனிமை இப்போது முற்றிலும் மறைந்து விட்டது. மாலை நேர வேலைகளை ஆரம்பிக்கும் முன், சிறிது நேரம் பொழுதைக் கழிக்கும் வழியாக ஜோசியம் பார்ப்பதை அணுகியவர்களுக்கு இப்போது அங்கிருந்து கிளம்பினால் போதும் என்று தோன்ற ஆரம்பித்தது. ஜோசியனும் கிளம்பினால் போதும் என்ற மனநிலையில் இருந்தவன் போல மூட்டை கட்டிக் கொண்டு அங்கிருந்து சென்றான். ராட்சசியிடம் பணம் வாங்கினானா என்பதைக்கூட இப்போது என்னால் சரியாகச் சொல்ல முடியவில்லை. இது என்னுடைய வழக்கமான அதீத கற்பனையாகக் கூட இருக்கலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை.

அடுத்த ஒரு வருடத்தில், சுந்தரி அக்காவின் கணவருக்கு பணி நிரந்தரமாகி அவர்கள் சென்னைக்கே சென்று விட்டார்கள். அக்காவிற்கு குழந்தை பிறந்தது என்பது தான் அவர்கள் குறித்து நான் கடைசியாக கேள்விப்பட்டது. (“ஜோசியர் சொன்ன மாதிரியே நடந்துடுச்சு இல்ல அக்கா ” என்று அவர்கள் கிளம்புவதற்கு சில நாட்கள் முன் நான் கேட்ட போது “எந்த ஜோசியண்டா” என்று அவர் ஏன் கேட்டார் என புரிந்து கொள்ள சில ஆண்டுகள் தேவைப்பட்டது). இன்னொரு அக்காவின் கணவருக்கு பதவி உயர்வு கிடைத்து அவர்களும் காலி செய்து, செங்கல்பட்டிலேயே வேறு வீட்டிற்கு சென்று விட்டார்கள். அந்தப் பையனின் உதட்டுப் பிளவிற்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. இப்போது இரு குழந்தைகளும் பெரியவர்களாகி, நல்ல வேலை கிடைத்து (இரண்டாவது குழந்தை டாக்டர்) அவர்களுக்கும் திருமணம் முடிந்து பெற்றோர்களாகி விட்டார்கள் . இதல்லாம் இயல்பாக நடந்தவை, எளிதில் யூகிக்கக் கூடியவை என்று நினைத்தாலும் ராட்சசி குறித்து யோசிக்கும் போது அப்படி உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

இரண்டு வருடங்களுக்குள், அதிக பட்சம் 60 வயது வயதாகியிருக்கக்கூடிய குமாஸ்தா, எந்த நோயினாலும் பீடிக்கப்பட்டிருக்காத நிலையில், திடீரென்று காலமாகி விட்டார். அதன் பின் சில நாட்களில் ராட்சசி வீட்டை விட்டு சென்று விட்டார், அவரை அதன் பின் குமாஸ்தாவின் -முதல் மனைவியின்- பெண் தன் சொந்தக்காரர்களுடன் வந்து சண்டையிட்டதில் ராட்சசி வெளியேற நேரிட்டது என்ற பேச்சு இருந்தது. சூனியம், பேய் குறித்த அதீத பயங்கள் அப்போது கொஞ்சம் குறைந்து விட்டதால், அவர் குறித்து நான் அதிகம் கவனம் கொள்ளவில்லை, ஆனால் மந்திரம், தந்திரம் தெரிந்தவர் என்று சொல்லப்பட்டவர் ஏன் பெரிதாக எதிர்க்காமல் சென்று விட்டார் என்று மட்டும் பின்னர் யோசித்திருக்கிறேன். அனைவரும் நல்ல விஷயங்களையே சொன்ன ஜோசியன், ஏன் ராட்சசிக்கு மட்டும் எதிர்மறையாகச் சொன்னான் என்பதும் குறித்தும் ஒரு வேளை நாலைந்து பேருக்கு ஜோசியம் பார்க்கும்போது ஒருவருக்கேனும் அவ்வாறு சொல்லவேண்டும் என்பது அவன் தொழில் முறையோ என்றும், கிளி ஏன் இரண்டு மூன்று முறை கழித்தே சீட்டை எடுத்தது என்றால், அதற்கும் அயர்ச்சி ஏற்பட்டிருக்கக் கூடும் என அதற்கும் நானே காரணங்களை உருவாக்கி இருக்கிறேன்.

அவன் ஜோசியம் மெய்யோ, பொய்யோ இருந்தாலும் சரி, என்னளவில் அவனை நம்ப மாட்டேன். பின்னே, கிளி எடுத்த எனக்கான சீட்டை பார்த்து ‘அய்யனாருக்கே அல்வா கொடுப்பாரு’ என்று என்னைப் போய் மகா சாமர்த்தியசாலியாக குறிப்பிட்டவனை நான் எப்படி நம்ப முடியும்? ஆனால் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். பெரும்பாலான வீடுகளைப் போல, என் பெற்றோரும் என் ஜாதகத்தை சில, பல தொழில்முறை ஜோசியர்களிடம் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். சொல்லி வைத்தார் போல் அனைவரும் ‘மிகச் சிறந்த ஜாதகம், ஆஹா, ஓஹோ’ என்றும் ‘பணம் கொட்டும் , வெளிநாட்டு வாழ்க்கை கிடைக்கும் ‘ என்றெல்லாமும் சொன்னதாக திரும்பி வந்து என்னிடம் கூறும் போது உண்டாகாத மகிழ்ச்சியும், நம்பிக்கையும் அன்று கிளி ஜோசியன் சொன்னதைக் கேட்டு எனக்கு உண்டானது. அதன் பிறகு சில நாட்களுக்கு, எதிலும் வெற்றி பெறுவதற்கென்றே ஆசிர்வதிக்கப்பட்டவனாக, பலே சாகசக்காரனாக என்னை நினைத்துக் கொண்டிருந்ததும், பிறகு இயல்பாகவே அந்த மயக்கங்கள் கலைந்து விட்டன -என் அசமஞ்சத்தனம் குறித்து வெகு விரைவில் உணர்ந்து கொண்டதால் – என்பதும் உண்மையே (மற்ற தொழில்முறை ஜோசியர்கள் சொன்னதும் கூட பெரிதாக பலிக்கவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்). ஆனாலும் அவன் சொன்னதைக் கேட்டபோது உண்டான சந்தோஷத்தின் எச்சத்தை , இதோ இப்போது அதை பற்றி எழுதும்போதும் உதட்டில் தோன்றும் புன்முறுவலில் உணர்கிறேன்.

வேதாளத்தின் மோதிரம்

காலத்துகள்

நான் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது எனக்கு அதிஅத்தியாவசமாக வேதாளத்தின் மோதிரம் தேவைப்பட்டது. நான் பல நேரங்களில் கோபப்படுபவன் தான் என்றாலும் இன்றுவரை யாருடனும் கைகலப்பில் ஈடுபட்டதில்லை. அத்தகைய மூர்க்கம் எனக்குள் ஒருவேளை எழுந்தாலும், அதற்கான தைரியம் எனக்கு கிடையாது என்றே நினைக்கிறேன். ஆனால் ‘சாது’ என்று பட்டம் கொடுக்கப்படும் பலரைப் போல என் மனவுலகில் சாகஸக்காரனாகவே உலவினேன்.

நாங்கள் குடியிருந்த வீட்டின் பின்புறத்தில் இருந்த காலி மனை, சில நேரம் போர்க்களமாகும், சில நேரம் கொள்ளையர்களின் கப்பல் பயணிக்கும் கடலாக மாறும். இப்படி அந்த இடத்திலிருந்து வீட்டை, பள்ளியை, ஏன் உலகையே எதிரிகளிடமிருந்து காப்பாற்றிக்கொண்டிருப்பேன். எனவே தீயவர்களை அழிக்கும் நாயகர்கள் பால் நான் ஈர்க்கப்பட்டது ஆச்சர்யமில்லை. அதிலும் தான் குத்து விடும் தீயவர்களின் முகத்தில் மண்டையோட்டு முத்திரையை பாதிக்கும் மோதிரம் கொண்ட வேதாளம் (phantom) என்னை அதிகம் ஈர்த்தார். அவர் வைத்திருந்ததைப் போல ஒரு மோதிரத்தை – நிஜத்தில் நான் குத்து விட யாரும் இல்லாவிட்டாலும் அந்த காலி மனையின் உலகில் என்னிடம் அடி வாங்க பல நாசகார சக்திகள் காத்திருந்தன – வாங்க வேண்டும் என்று மிகவும் விரும்பினேன். என் வீட்டிலும் அதை வாங்கித்தருவதாக சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அப்படியொரு மோதிரம் கிடைக்காது என்று அவர்கள் சொல்லி இருந்தால் நான் அன்றிருந்த மனநிலையில் அதை நம்பியிருக்க மாட்டேன் தான்.

மோதிரம் கிடைக்குமா கிடைக்காதா என நான் ஏங்கி இருந்தபோது தான் மணி என் தெருவிற்கு குடி வந்தான். ஒரே வகுப்பு என்றாலும், வேறு வேறு பள்ளிகளில் படித்து வந்தோம். காமிக்ஸ் ஆர்வம் எங்களை இணைத்தது. அவனிடம் வேதாளத்தின் மோதிரம் பற்றி நான் சொல்ல, கடைத்தெருவுக்கு சென்று பார்க்கலாம் என்று அவன் கூறினான். எங்களிடம் காசு இல்லாவிட்டாலும், எந்தக் கடையில் அது கிடைக்கிறது என்றாவது தெரிந்து கொள்ளலாமே என்பது அவன் வாதம். ஒரு சனிக்கிழமை காலை மோதிரத்தை தேடி கிளம்பினோம்.

80களில் பரிசுப் பொருட்களுக்கென்றோ, குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களுக்கென்றோ தனிப்பட்ட கடைகள் எதுவும் கிடையாது. ‘பேன்சி ஸ்டோர்’ என்ற பெயரொட்டோடு இருக்கும் சில கடைகளில் மட்டுமே மோதிரத்தை தேட வேண்டும். பஜாரில் நாங்கள் நுழைந்த முதல் கடையில், ‘வேதாள மோதிரம் இருக்கா’ என நாங்கள் கேட்க எங்களை கடைக்காரர் பார்த்த பார்வை அவ்வளவு சிலாக்கியமாக இல்லை. ஏதேனும் மந்திரவாதியின் அடிப்பொடிகளான குட்டிச்சாத்தான்கள் என எங்களை அவர் கருதி இருக்கக் கூடும் என்று நினைத்தோம். அடுத்த இரு கடைகளில் எங்களை வம்பு செய்ய வந்தவர்கள் என்று கருதி, ‘கடை தொறந்தவுடனேயே தரித்திரங்க வந்துடுச்சு’ போன்ற வசவுகளோடு துரத்தி விட்டார்கள். யாரும் நாங்கள் அப்படியொரு மோதிரத்தை தேடுகிறோம் என்பதை நம்பவே இல்லை. இன்னும் ஓரிரு கடைகள் மட்டும் பார்ப்போம் என்று முடிவு செய்து நாங்கள் நுழைந்த கடை தான் கணேசன் அண்ணனுடையது. நாங்கள் சொல்லியதைக் கேட்டதும் அவர் முகத்தில் தோன்றிய புன்னகையில், நக்கலோ, கிண்டலோ இல்லை. அத்தகைய மோதிரம் கடையில் இல்லையென்று சொன்னவர், ‘இதை பாருங்கள்’, என்று சில காமிக்ஸ் புத்தகங்களை எடுத்துக் கொடுத்தார். அண்ணனும் காமிக்ஸ் ஆர்வலர். கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு தந்தைக்கு துணையாக கடையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

மோதிரம் கிடைக்கவில்லை என்றாலும் அவருடன் ஏற்பட்ட தொடர்பு எங்களுக்கு உற்சாகமளித்தது (அவர் படிக்கத் தந்த புத்தகங்களும், பத்திரிக்கைகளும்தான்). ஒவ்வொரு சனி, ஞாயிறும் காலையில் சில மணி நேரம் அவர் கடையில் இருப்பதை பழக்கமாக்கிக் கொண்டோம். சில பல ஆண்டுகள் பழமையான (பெரும்பாலும் தமிழ்) காமிக்ஸ் புத்தங்களை அவர் வைத்திருந்தார். கடையில் வாடிக்கையாளர்களுடன் அவர் பேசிக்கொண்டிருக்கும்போது, ஓரத்தில் அமர்ந்து அவற்றை படித்துக் கொண்டிருப்போம். யாருமில்லாத ஒரு நாளில் டார்ஜானுக்கும் வேதாளத்திற்கும் சண்டை வந்தால் யார் ஜெயிப்பார்கள் என்று அவருடன் படு சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருக்கும்போது ஒருவர் நுழைந்தார். வெளியே கிடந்த புத்தகங்களையும், எங்களையும் பார்த்து விட்டு, ‘நீ கெட்டது போறாதுன்னு இவங்களையும் கெடுக்கறையா”, என்று அண்ணனிடம் சண்டை பிடித்தார். நாங்கள் பயந்து ஓடி விட்டோம். ஓரிரு வாரங்கள் அந்தப் பக்கம் போகவில்லை. பிறகு ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு செல்ல, கடையில் அண்ணன் மட்டுமே இருந்தார்.

அவரை அன்று திட்டியது அவர் அப்பாவாம். தன்னைக் குறித்தும், தன் ஆசைகள் குறித்தும் அண்ணன் அப்போதுதான் எங்களிடம் பகிர்ந்து கொண்டார். சின்ன வயதிலிருந்தே அவருக்கு கதைகள் படிப்பதில் மிகுந்த ஆர்வம். அவர் தந்தைக்கு அதெல்லாம் வீண் வேலை என்ற எண்ணம். படிப்பு முடிந்த பின் ஏதேனும் அரசு வேலைக்கு மகன் செல்ல வேண்டும் என்பதே அவரது ஆசை. அண்ணன் செங்கல்பட்டிலேயே ஒரு வேலை பார்க்க வேண்டும் அல்லது கடையை நடத்த வேண்டும் என்று எண்ணியிருந்தார். அவரைப் போல செங்கல்பட்டை அங்குலம் அங்குலமாக சுற்றி வந்தவர்கள் மிகக் குறைவாகவே இருப்பார்கள். ‘பழைய பஸ்ஸ்டாண்ட்’ என்று அழைக்கப்படும் செங்கல்பட்டின் ஒரு எல்லையில் இருந்து, இன்னொரு எல்லை என்று சொல்லக்கூடிய கலெக்டர் ஆபீஸ்ஸை தாண்டி இருக்கும் பிள்ளையார் கோவில் வரை சைக்கிளில் சென்று திரும்புவார். (இந்த பிள்ளையார் கோவில் பிரசத்திப் பெற்றது. அந்த வழியே செல்லும் தொலைதூர வாகனங்கள் அங்கு நின்று தேங்காய் உடைத்துவிட்டுச் செல்வது வழக்கம். 60 களில் தமிழில் வெளியான ‘பஸ்’ முக்கிய பாத்திரமாக வரும் படம் -ரோட் மூவி என்று அதை வகைப்படுத்தலாமா என்று தெரியவில்லை – ஒன்றில் பஸ் இங்கு நின்று தேங்காய் உடைத்து செல்வதாக ஒரு காட்சி வரும். இதை 80களிலும் பெருமிதத்தோடு குறிப்பிட ஒரு சிலர் இருந்தார்கள்). இதிலும் ஒரே பாதையில் செல்லாமல், வேறு வேறு தெருக்களில் நுழைந்து வருவார். பெரியமணியக்காரத் தெருவில் நாங்கள் வசித்தோம் என்று சொன்ன போது , அதன் அருகில் இருந்த ‘டப்பா ஸ்கூல்’ என்று அழைக்கப்பட்ட, அதிகமும் -பல பள்ளி, கல்லூரி மாணவர்களாலும், – விளையாட்டு மைதானமாகவே உபயோகப்படுத்தப்பட்ட அரசு ஆரம்பப்பள்ளி பள்ளி, ராமர் கோவில், மிகவும் மாசுபடுத்தப்பட்ட கோவில் குளம் எல்லாவற்றையும் சரியாக குறிப்பிட்டார். அது மட்டுமல்ல, “உங்க தெருல ஒரு வீட்ல ஆளோட சிலை ஒண்ணு இருக்கும்ல” என்று கேட்டு எங்களை ஆச்சரியப்படுத்தினார்.

அது நான் குடியிருந்த வீடு தான். அந்த மார்பளவுச் சிலை வீட்டின் சொந்தக்காரருடையது தான். அவர் மகன் தந்தை நினைவாக அதை வீட்டில் எழுப்பி இருந்தார். உயிருடன் இருக்கும் வரை தந்தையும் மகனும் அடித்துக் கொண்டதெல்லாம் வேறு கதை. வீட்டிலேயே சிலை வைத்தது அந்நாட்களில் எங்கள் தெருவில் பரபரப்பை கிளப்பிய விஷயம். ‘ செல இருக்கற வீடு தானே’ என்றே குறிப்பிடுவார்கள். என் நண்பர்கள் அதை வைத்து என்னை கிண்டல் செய்வதும் உண்டு. இப்போதும் நண்பர்களுடன் செங்கல்பட்டு நாட்களை பற்றி பேசும் போது, நான் குடியிருந்த வீட்டை ‘அந்த சிலை வீடு தானே ‘ என்று தான் குறிப்பிடுகிறார்கள். எங்கள் தெரு என்றில்லை, செங்கல்பட்டில் எந்த இடத்தை, தெருவை சொன்னாலும் அங்குள்ள அல்லது அருகிலுள்ள ஏதேனும் குறிப்பிடத்தக்க அடையாளச் சின்னத்தை அவரால் துல்லியமாக சொல்ல முடியும். ரயில் நிலையமருகே இருந்த- 60களில் அரசு மருத்துவமனையாக இருந்து கைவிடப்பட்ட – பாழடைந்த கட்டிடங்களுக்கு எங்களை அழைத்துச் சென்று, “இங்கு எத்தனை பேர் பிறந்திருப்பாங்க, இறந்திருப்பாங்க, எவ்வளவு பரபரப்பரா இருந்திருக்கும்” என்பதாக ஏதோ சொல்லி வந்தார். அப்போது பெரிதாக புரியாவிட்டாலும், வரலாறு (கடந்த காலம்) என்பது அரசர்கள், போர் என்பது மட்டுமே அல்ல, சிதிலங்கள் தோல்வியின் இடிபாடுகள் மட்டுமல்ல, கைவிடப்பட்ட முயற்சிகளின் மிச்சங்களாகவும் இருக்கலாம் என்ற எண்ணத்தை என்னுள் அவர்தான் விதைத்தார் என்று நினைக்கிறேன். வெற்றியோ தோல்வியோ, அல்லது எதிர்கொள்ளத் தவறிய யுத்தங்களோ, காலம் தன் முத்திரையைப் பதிக்கத் தவறுவதில்லை.

இத்தகைய மனநிலையில் இருந்தவருக்கு சொந்த ஊரை விட்டு பிரிய மனசே இல்லை என்பது இயல்பான ஒன்றுதான். அரசாங்க வேலையென்றால் பணியிட மாறுதலால் உள்ளூரில் தொடர்ந்து இருக்க முடியாது என்று அவர் நினைத்தார். வேலைக்கு போகாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அவருக்கில்லை. செங்கல்பட்டில் தனியார் வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகமில்லை என்பதால், தினமும் சென்று திரும்பும்படி சென்னையில் வேலை தேடினார், தனியார் நிறுவனமொன்றில் ஒரு வேலை கிடைத்தும் அரசு தேர்வுக்கு தயாராகவேண்டுமென்று அவர் தந்தை அதில் சேருவதிலிருந்து தடுத்து விட்டார்.

அவர்கள் கடையையேகூட வங்கியிலோ அல்லது தனியாரிடமோ கடன் வாங்கி விரிவாக்கும் எண்ணம் அவருக்கு இருந்தது. சென்னைக்கு சென்று அங்கு எந்த மாதிரியான புது பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்றெல்லாம் கூட பார்த்து வந்தார். தன் மற்ற ஈடுபாடுகளுக்கு இடையேயும் வேலை, தொழில் குறித்து யோசித்துக் கொண்டு தான் இருப்பார். எங்கள் ஊரில் தசரா பண்டிகையின் இறுதி நாட்களில் சந்தை ஒன்று நடக்கும். ராட்டினம், (பொம்மை) துப்பாக்கி வைத்து சுடுதல், வளையத்தை எறிந்து அது எந்தப் பொருள் மீது விழுகிறதோ அதை சொந்தமாக்குதல் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுடன், நிறைய கடைகளும் போடப்படும். மேட்டுத் தெரு என பொதுவாக அழைக்கப்பட்ட பாதையில் 2-3 கிலோமீட்டர் வரை விரிந்திருக்கும் சந்தையின் ஒரு எல்லை எங்கள் வீட்டிற்கு அருகிலேயும் (ராமர் கோவில் குளத்தை ஒட்டி உள்ள தெருவில்) இருந்தாலும் எங்கள் வீட்டிற்கு மிக எங்கள் வயதைக் கருதி தனியாக அனுப்ப மாட்டார்கள் என்பதால், நாங்கள் நினைக்கும் அளவிற்கு அந்தச் சந்தையில் சுற்றித் திரிய முடியாது. அந்த வருடம் எங்களை அழைத்துச் செல்வதாக அண்ணன் கூறினார். எங்களை இரவில் தனியாக அனுப்ப வீட்டில் முதலில் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், நானும் மணியும் ஒருவருக்கொருவர் துணையாக இருப்போம் என்று கூறி சமாதானப் படுத்தி விட்டோம். பெரியவர்களின் அதீத கட்டுப்பாடு இல்லாமல் நாங்கள் கண்டு களித்த முதல் தசரா சந்தை அதுதான். பல கடைகளுக்கு எங்களை அழைத்துச் சென்றவர், பேன்சி பொருட்கள் விற்கப்படும் இடங்களில் அதிக நேரம் கழித்தார். என்ன மாதிரியான பொருட்கள் அதிகம் விற்கின்றன என்று கவனித்தவர், அவற்றை சந்தை முடிவதற்குள் தானும் கொஞ்சம் கொள்முதல் செய்யப்போவதாக சொன்னார்.

ஆனால் இதெல்லாம் அவர் தந்தையிடம் எடுபடவில்லை. மகன் அரசாங்க உத்தியோகத்தில் சேர்வது மட்டுமே அவரது குறிக்கோளாக இருந்தது. அண்ணன் வியாபாரத்தை கவனிப்பதையே அதிகம் விரும்பாதவர், அவர் ஊர் சுற்றிக் கொண்டிருப்பதையோ, புத்தகங்கள் படிப்பதையோ எப்படி ஏற்றுக்கொள்வார், இதில் அவர் கதைகளும் எழுதுகிறார் என்றால் சும்மா விடுவாரா? அண்ணன் கதைகளும் எழுதுவார் என்பது எங்களுக்கு வியப்பாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. கூச்சத்துடன் ‘பூந்தளிர்’ இதழ் ஒன்றை எடுத்து அதில் வெளியாகி இருந்த ஒரு சிறுகதையை காட்டினார். அது புனைப்பெயரில் அவர் எழுதியது. பல கதைகள் எழுதி, சிலவற்றை அனுப்பியுள்ளதாகவும் அவற்றில் இது ஒன்று தான் பிரசுரமாகியுள்ளது என்று சொன்னார். எங்களுக்கு கொண்டாட்டம் அதிகமாகி விட்டது. அந்த கோடை விடுமுறையில் நிறைய நேரம் அவருடன் கழித்தோம். அவர் மனதில் இருந்த கருக்களை எங்களிடம் பகிர்ந்து கொள்வார், நாங்களும் எங்களுக்குத் தோன்றியதை சொல்வோம். அந்த மே மாதம் பூந்தளிரில் வெளியாகிய அவருடைய ஒரு கதையில் என்னுடைய பங்களிப்பும் கொஞ்சம் இருந்தது என்பது இன்றும் எனக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது. நானும் ஒரு வகையில் அச்சு ஊடகத்தில் பிரசுரிக்கப்பட்டேன் என்று எண்ணிக்கொள்கிறேன்.

சிறார் கதைகளைத் தவிரவும் வேறு சில கதைகளை அண்ணன் படிப்பார், எழுதுவார் என்பதும் எங்களுக்குத் தெரியவந்தது. அவர் கடையில் தான் முதன் முதலில் ‘கணையாழி’ பத்திரிக்கையைப் பார்த்தேன். நூலகத்திலிருந்து புத்தகங்கள் எடுத்து வருவார். நாங்கள் அவற்றைப் பற்றிக் கேட்டால், ‘நீங்கள் இதெல்லாம் கண்டிப்பா படிக்கணும், ஆனா இப்போ வேண்டாம்’ என்று சொல்லி விடுவார். “பெரியவங்க வேற மாதிரி படிப்பாங்க இல்ல அண்ணா ” என்று ஒருமுறை நாங்கள் கேட்க, ஒரு புத்தகத்தை எங்களிடம் காட்டி ‘நீங்க வேதாள மோதிரத்தை தேடி அலைஞ்சீங்க இல்ல, அதே போல் இந்த புத்தகத்துல வர பொண்ணு இருக்கற தெருவை தேடி சில பேர் கும்பகோணம் போறாங்க. விஷயம் வேணா வேறவா இருக்கலாம், ஆனா படிக்கறதுங்கறது ஒரே மாதிரியான கிறுக்கு தான் ” என்றார். என்னடா பெண்ணை தேடி போறாங்களே என்று அப்போது தோன்றினாலும் (பெண்களை கவனிக்காமல் இருப்பது தான் கௌரவம் என்ற பருவத்தில் அப்போது இருந்த எங்களுக்கு ,ஓரிரு ஆண்டுகளிலேயே அதன் பிழை தெரிந்து விட்டது என்பது வேறு விஷயம்) அந்தப் பெண் யார் என்பதும், அப்படி தேடித் செல்வது அந்தப் புத்தகத்தின் வாசகனைப் பொறுத்தவரை புனித யாத்திரையாக இருக்கும் என்பதும் நானும் கல்லூரி படிக்கும் காலத்தில் அந்த நாவலை வாசித்தபோதுதான் புரிந்தது.

அண்ணன் அரசு தேர்வுகளில் தேர்ச்சி பெறாதது அவர் தந்தைக்கு மிகவும் வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. பன்முக ஆளுமையும் ஆற்றலும் கொண்ட அவர் வேண்டுமென்றே தேர்வுக்காக பெரிதாக பிரயத்தனம் செய்யாமல் இருந்திருக்க வேண்டும் என்று எனக்கு சில வருடங்கள் கழித்து தான் சந்தேகம் வந்தது. அவர் தந்தைக்கு அது அப்போதே பிடிபட்டிருக்க வேண்டும். பெரும்பாலானப் பெற்றோர்களை போல ‘கால் கட்டு போட்டா சரியாகிவிடும்’ என்று முடிவு செய்து சொந்தத்திலேயே மணம் முடித்து விட்டார். திருமணம் செங்கல்பட்டில் தான் நடந்தது, அண்ணன் எங்களுக்குக்கூட பத்திரிகை வைத்தார். ஆனால் நாங்கள் செல்ல முடியாத சூழல். அண்ணனைப் பற்றியே வீட்டில் யாருக்கும் தெரியாத போது திடீரென்று எப்படி சொல்ல என்று போகாமல் இருந்து விட்டோம். திருமணம் முடிந்த ஓரிரு வாரங்கள் கழித்து கடைக்குச் சென்றபோது அவர் மனைவியும் அங்கிருந்தார். அண்ணன் எங்களை திருமணத்திற்கு வராததற்காக திட்டினார், பின் ‘நான் சொல்லல அந்தப் பசங்கதான்’ என அவர் மனைவிக்கு அறிமுகம் செய்து வைத்தார். அக்கா என்று அவரை நான் முதலில் அழைக்க, ‘ஏண்டா நான் அண்ணன் இவ அக்காவா’ என்று சிரித்தபடி அவர் கேட்க, புரிந்தும் புரியாமலும் வெட்கமாகி விட்டது. பிறகு அவர் மனைவியை ‘மன்னி’ என்று அழைக்க ஆரம்பித்து விட்டேன். மன்னியும் அண்ணனை புரிந்து கொண்டது அவருடைய அதிர்ஷ்டம் தான் என்று சொல்ல வேண்டும். சொந்தமென்பதால் அண்ணனைப் பற்றி அவருக்கு முன்பே தெரிந்திருக்கக் கூடும். மன்னி அண்ணனின் கதைகளின் முதல் வாசகியானார்.

எத்தனை முறைதான் மோசமாக தேர்வெழுத முடியும். அந்த வருடமே அவருக்கு அரசுப் பணி கிடைத்தது. தென் தமிழகத்தில் பணி. அண்ணியுடன் கிளம்பிவிட்டார். கிளம்பும் முன் அவரைப் பார்க்க கடைக்குச் சென்றிருந்த போது, சோர்வாகவே இருந்தார். “சீக்கிரம் ட்ரான்ஸ்பர் வாங்கி வந்துடனும்” என்று வேலைக்குச் சேரும் முன்பே பணியிட மாற்றம் குறித்து பேசிக்கொண்டிருந்தார். ஆனால் அவருக்கே அது குறித்த அதிக நம்பிக்கை இல்லை என்று தெரிந்தது. நாங்கள் கிளம்பும்போது “படிக்கறத மட்டும் விடாதீங்க, அப்பப்போ கடைப்பக்கம் வந்து பாருங்க” என்று சொல்லியவர் ,சில காமிக்ஸ் புத்தங்களை அன்பளிப்பாக கொடுத்தார். பிறகு நாங்கள் அவ்வப்போது கடைப் பக்கம் சென்றாலும் அவரை பார்க்க முடியவில்லை. அந்த வருட கோடையில் மணியின் தந்தையும் பணி மாற்றலாகி வேறு ஊர் செல்ல, அது ஒரு சேர வருத்தத்தையும், அண்ணனும் இதே போல் மீண்டும் செங்கல்பட்டு வரக்கூடும் என்ற நம்பிக்கையும் கொடுத்தது.

அப்படி எதுவும் நடக்கவில்லை. அடுத்த சில வருடங்களுக்கு அவரைப் பார்க்க முடியவில்லை என்றாலும், பஜார் பக்கம் செல்ல வேண்டியிருக்கும் போதெல்லாம் அண்ணனின் கடைவழியே செல்வேன், அவர் தந்தை தான் எப்போதும் இருப்பார். பூந்தளிர்,கோகுலம் போன்ற இதழ்களில் அவர் பெயரில் ஏதேனும் கதைகள் வெளிவந்திருக்கின்றனவா என்று தேடுவேன். நான் ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்த போது ஒரு மாலை ஏதோ வேலையை முடித்துக் கொண்டு வழக்கம் போல் அவர் கடை வழியாகச் சென்ற போது அண்ணன் உள்ளே இருந்தார். அவரைக் கண்டதும் பரவசமாக இருந்தாலும், என்னை நினைவில் வைத்திருப்பாரா என்ற தயக்கத்துடன் உள்ளே சென்று என் பெயரைச் சொல்லி என்னைத் தெரிகிறதா என்று கேட்டேன். பெரிய சிரிப்புடன் ‘டேய் எப்படி டா மறக்க முடியும்” என்று என்னை தழுவிக் கொண்டார். பரஸ்பர தகவல்களை பரிமாறிக்கொண்டோம். மணி வேரூருக்குச் சென்றதையும், சில காலம் கழித்து அவனுடனும் தொடர்பறுந்து போனதையும், அதுவரை அவன் எனக்கு அனுப்பிய கடிதங்களில் அவரைப் பற்றி விசாரித்ததையும் தெரிவித்தேன்.

அண்ணனுக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. ” வீட்டுக்கு வந்து பாப்பாவையும் உங்க மன்னியையும் பாரு” என்றார். லீவில் வந்திருக்கிறாரா என்று நான் கேட்டதற்கு “ஆமாம்டா, கடைய விக்கப் போறோம். அப்பாவால தனியா பாத்துக்க முடியல” என்றவர் “வீட்ட கூட இன்னும் கொஞ்ச மாசத்துல வித்துட்டு போயிடுவோம்” என்று சோர்வுடன் சொன்னார். “என்னன்னவோ நெனச்சிருந்தேன்” என்று தனக்குள்ளேயே ஆயாசத்துடன் கூறிக்கொண்டார். எதுவும் சொல்லத்தோன்றாமல் அமைதியாக இருந்தேன். சூழலை இலகுவாக்கும் என்று நினைத்தாரோ என்னவோ “என்னடா இன்னும் மோதிரத்தை தேடறயா” என்று அவர் கேட்க, சட்டென்று கண்ணில் நீர் தளும்பியது போல் இருந்தது. பேசினால் அழுது விடுவேன் என்று தோன்ற, எதுவும் சொல்லாமல், தொண்டையில் திரண்டுக் கொண்டிருந்த அழுகையை அடக்கியவாறு அவரை பார்த்துக் கொண்டிருந்தேன். “உன்ன பாத்ததும் நல்லதா போச்சு, நாளைக்கு சாயங்காலம் கடைக்கு வா. வீட்டுக் அழைச்சிட்டுப் போறேன், நெறய காமிக்ஸ் இருக்கு. எல்லாம் எடுத்துக்கோ, இனி அதுக்கெல்லாம் எங்க எடம்” என்றார். தலையாட்டி விட்டு கிளம்பியவன் அடுத்த நாள் அங்கு செல்லவில்லை. ரெண்டு மூன்று வருடங்கள் சென்ற பின்பே மீண்டும் அந்தத் தெரு வழியாகச் செல்லும் மனநிலை ஏற்பட்டது. ஆனாலும், 15 வருடங்கள் கழித்து நாங்களும் ஊரிலிருந்து கிளம்பும் வரையிலும் கூட, அந்தத் தெரு வழியாகச் செல்வதை முடிந்தளவு தவிர்க்கவே முயன்று கொண்டிருந்தேன்.

யாருமற்ற மனை

காலத்துகள்

செங்கல்பட்டில் நாங்கள் குடியிருந்த வீட்டின் பின்புறத்தில் -சகோதர பூசலினால் யாரும் பயன்படுத்தாத – காலி மனையொன்றும், அதன் ஒரு புறம் பங்களா பாணியிலான, யாரும் வசிக்காத வீடொன்றும், இன்னொரு புறம் முதியவர் ஒருவர் மட்டுமே வசிக்கும் பழமையான சத்திரமும் இருந்தது. சிறுவர்களான எங்களுக்கு இந்தச் சூழல் தந்திருக்கக் கூடிய உற்சாகத்தைப் பற்றிச் சொல்லவேண்டியதில்லை.

அந்த வீட்டில் சில பல பேர் கொன்று புதைக்கப்பட்டிருப்பதாகவும் பேய் ஒன்று உலவுவதாகவும் ஒரு புரளி தெருவில் உலவியது. இந்திய பேய்களின் தேசிய உடையான வெள்ளைச் சேலையில் இல்லாமல் கறுப்புப் புள்ளிகள் நிறைந்த மஞ்சள் நிற புடவையில் உலா வருவதாக புரளியை கிளப்பி விட்டவனின் கற்பனை வளம் இன்றும் வியப்பளிக்கிறது. அப்பேய் வழக்கம் போல் தலையை விரித்துப் போட்டுக்கொண்டு உலவியதா அல்லது விசேஷ தலையலங்காரம் ஏதேனும் செய்திருந்ததா என்பது குறித்து இப்போது எனக்கு சரியாக நினைவில்லை.

இப்படிப்பட்டச் சூழலில், மனையில் கிரிக்கெட் விளையாடும்போது, பந்து பங்களாக்குள் சென்று விட்டால் அதை எடுத்து வருவதை சாகசமாகவே கருதினோம். ஒருமுறை அப்படி பந்தெடுக்கச் சென்றபோது எலும்புத் துண்டு ஒன்று தட்டுப்பட அதை மனித எலும்பென்று முடிவு செய்து , யார்/ எப்படி கொலை செய்யப்பட்டார்கள், யார் செய்தார்கள் என்றெல்லாம் எங்களை நாங்களே துப்பறிவாளர்களாக பாவித்து சில நாட்கள் அது குறித்து பேசிக்கொண்டிருந்தோம். வீட்டில் இருந்த கிணற்றை எட்டிப் பார்த்து, ஏதேனும் உடல் தெரிகிறதா -அது எப்படி சாத்தியம் என்றெல்லாம் யோசிக்கலாம் – என்றும் பார்ப்போம்.

எட்டாம் வகுப்பு ஆண்டுப் பரீட்சை முடிந்த அந்த கோடை விடுமுறையில் அந்த பங்களா கிளப்பாக மாற்றப்படுகிறது என்று அறிந்தோம். கிளப் என்றவுடன் எங்கள் மனக்கண்ணில் தோன்றிய வண்ண வண்ண விளக்குக்கள் , காபரே, சீட்டாட்ட, குடிகாரச் சண்டைகள் இவையெல்லாம் இல்லாமல், ஒரு சிறு போர்ட் மட்டும் தொங்க விடப்பட்டு, மாலையில் சிலர் வந்து எந்த பிரச்சனையும் செய்யாமல் செல்வது மட்டுமே நடந்தது எங்களுக்கு சற்று ஏமாற்றமளிப்பதாகவே இருந்தது. அப்போது தான் அவன் கிளப்பில் வேலைக்குச் சேர்ந்தான்.

செங்கல்பட்டிற்கு அருகிலிலுள்ள கிராமமொன்றில் இருந்து வந்திருந்த அவன் எங்களைவிட ஓரிரு வயது மூத்தவன். ஏதோ ஒரு கட்டத்தில் -நாங்கள் பந்தை கிளப்பில் இருந்து எடுக்க சென்ற போதாக இருக்கலாம் – எங்களுடன் பழக ஆரம்பித்தான். அவனுடைய தாய் சில ஆண்டுகளுக்கு முன்பு காலமாகி இருந்தார். சித்திக் கொடுமையெல்லாம் இல்லையென்றும், தனக்கு படிப்பில் விருப்பமில்லாததனாலும், வறுமை காரணமாகவும் தெரிந்தவர் மூலம் இங்கு வேலைக்கு சேர்ந்ததாகச் சொன்னான். அங்கேயே தங்கி இடத்தை சுத்தப் படுத்துவது, கடையிலிருந்து வேண்டிய பொருட்களை வாங்கி வருவது போன்ற வேலைகளை செய்து வந்தான்.

எப்போது என்ன வேலை வரும் என்று சொல்ல முடியாததால் அவன் தினமும் எங்கள் விளையாட்டில் கலந்து கொள்வான் என்று சொல்ல முடியாது, சில நேரங்களில் பாதி விளையாட்டில் சென்று விடுவான். ஓரிரு நாட்கள் அவனைக் காணவே முடியாது, அல்லது அவன் வேலை செய்து கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டே நாங்கள் விளையாடிக் கொண்டிருப்போம். ஆனால் மீண்டும் எப்போது அவன் எங்களுடன் கலந்து கொண்டாலும், அந்த இடைவெளியே தெரியாதவாறு, தொடர்ந்து எங்களுடன் பழகிக் கொண்டிருப்பவன் போல சேர்ந்து கொள்வான். பந்து வீச்சு, பேட்டிங் செய்வது, விக்கெட் கீப்பிங் என அனைத்தையும் அனாயசமாக செய்தான். நாங்கள் கூச்சலிட்டபடி ஒவ்வொரு பந்தையும், ரன்னையும், விக்கெட்டையும் எதிர்கொண்டிருக்க , 1 ரன் மட்டுமே எடுத்தாலும் அதையும் எந்த பிரயத்தனமும் இல்லாமல் செய்த உணர்வையே அவன் தருவான். அவன் களத்தில் இருக்கும் போது எங்கள் கிரிக்கெட் திறனைக் குறித்த தாழ்வுணர்ச்சியை உருவாக்கி விடுவான். கிளப்பில் உள்ள மற்ற வேலையாட்களுடனும் கூட மிக இயல்பாகவே அவன் பழகுவதை பார்த்திருக்கிறேன். மற்றவர்கள் யாரும் விளையாட இல்லாத போதும் வீட்டின் பின்புறச் சுவற்றில் உட்கார்ந்து அவனுடன் பேசிக்கொண்டிருப்பேன்.

அந்த இடத்தில் தனியே அமர்ந்திருப்பது நாங்கள் அந்த வீட்டிற்கு குடிவந்ததில் இருந்து எனக்கிருந்த பழக்கம். காலி மனையின் ஒரு ஓரத்தில் இரு தென்னை மரங்களும், பஞ்சு மரம் ஒன்றும் இருந்தன. யாரும் கவனிக்காததால் பஞ்சு தானே வெடித்து தென்னை மரத்தின் காற்றில் பறக்கும்போது அவற்றைப் பிடிக்க முயல்வேன். இரவு நேரத்தில் சில நேரங்களில் அங்கு மின்மினிப் பூச்சிகள் தென்படும், அவற்றை ஜாடியில் அடைக்க நினைத்தாலும், இரவு நேரத்தில் அந்த மனைக்குச் செல்ல வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள். அங்கு முளைத்திருக்கும் புதர்களில் பட்டாம்பூச்சிகள் வந்தமரும். நான் ஆறாவது படிக்கும்போது ஏதோவொரு புத்தகத்தைப் படித்துவிட்டு, அவற்றைக் கையாலேயே பிடிக்க முயன்று (அவற்றை பிடிக்க பயன்படும் வலையை இன்றுவரை நான் நேரில் பார்த்ததில்லை அலர்ஜி ஏற்பட்டு) -ஏதேனும் பூச்சி கடித்திருக்க வேண்டும் -, வீட்டில் கடும் திட்டு வாங்கினேன். அத்துடன் இயற்கையியலாளர் ஆகும் என் முயற்சி முடிவுக்கு வந்தது. இத்தகைய ஒரு இடத்தில் நாங்கள் சில வருடங்கள் கிரிக்கெட் விளையாடினோம் என்பதை நினைக்கும்போது இப்போது மிகவும் வியப்பாக இருக்கிறது. நான் கற்பனையில் செய்யும் சாகசங்களை அரங்கேற்றும் இடமாகவும் அது இருந்திருக்கிறது. யாருமற்ற மனையை பார்த்தபடி என் வீர தீர பராக்கிரமங்களை மனதில் சொல்லிக்கொண்டிருப்பேன்.

அந்த விடுமுறையில் அடுத்த தெருவில் இருந்த முரளியிடம் சில ஸ்டாம்ப்களை பார்ப்பதற்காக வாங்கியிருந்த நான் அவற்றை தொலைத்து விட்டேன். அவற்றுக்கீடாக அதே மதிப்பில் உள்ள சில ஸ்டாம்ப்களை தருவதாக சொல்லியும் அவன் கேட்காமல் 3 ருபாய் தர வேண்டும், இல்லையென்றால் வீட்டிற்கு வந்து சொல்லி விடுவேன் என்று கறாராக கூறி விட்டான். 80களின் இறுதிப்பகுதிகளில் மத்தியதர குடும்பப் பையனிற்கு 3 ருபாய் என்பது பெரிய தொகை என்பதால் நான் மிரண்டு விட்டேன். இதைப் பற்றி நான் அந்தப் பையனிடம் புலம்பிக்கொண்டிருக்க, முரளியிடம் தான் பேசுவதாக சொன்ன அவன் அதன் படியே பேசி, நான் தொலைத்தவற்றுக்கு ஈடாக மாற்று ஸ்டாம்ப்களை ஏற்கத் செய்து விட்டான். இத்தனைக்கும் அவனக்கு ஸ்டாம்ப் பற்றி எதுவும் தெரியாது, நான் முரளியிடம் முதலில் என்ன சொல்லி அது ஒப்புக்கொள்ளப்படவில்லையோ, அதையேதான் அவனும் கூறினான். ஆனால் அவன் சொன்னதை முரளி ஏற்றுக்கொண்டான் என்பது தான் விஷயம் (இதை என்னுடைய அசமஞ்சத்தனத்திற்கான பால்ய கால நிரூபணம் என்றும் எடுத்துக் கொள்ளலாம்) .

இப்போது யோசிக்கையில் இப்படி எந்த (பழகிய/பழகாத) சூழ்நிலையிலும் தன்னை எந்த பிரயத்தனமும் இல்லை எளிதில் பொருத்திக் கொள்ளும் குணம் தான் அவனுடைய சிறப்பம்சம் என்று தோன்றுகிறது. அதனால் தான் சத்திரத்து தாத்தாவுடன் அவனுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும்.

70 வயதிற்கும் மேல் இருந்திருக்கக்கூடிய அவருக்கு ஒரு கண்ணில் மட்டுமே பார்வையுண்டு. அவரைப் பற்றியும் சில சுவாரஸ்ய புரளிகள் தெருவில் உலவின. பந்து சத்திரத்தினுள் சென்றால் எடுக்கச் செல்லும் போது அவரைப் பார்ப்போம். அதட்டவோ, மிரட்டவோ செய்யாமல் எங்களை பந்தை எடுத்துச் செல்ல அனுமதிப்பார். எனினும் அவருடன் நாங்கள் பேசியதெல்லாம் இல்லை, எனவே இவன் அவரைக் குறித்து சொன்ன விஷயங்கள் எங்களுக்கு புதிதாகவும் ஆச்சர்யமாகவும் இருந்ததன. தாத்தா நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவராம். குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டதால், அவர்களுடன் பிணக்கு ஏற்பட்டு பிரிந்து வந்து விட்டார். அவர் பங்காக கிடைத்தவற்றை மற்றவர்களுக்கு உதவி செய்வதில் செலவழித்து விட , அந்த – இப்போது யாரும் வாடகைக்கு எடுக்காத – பழமையான சத்திரம் மட்டுமே அவரிடம் இருந்தது. அங்கேயே தங்கி, சமைத்து, மீதியிருக்கும் சிறு கையிருப்பை வைத்துக் கொண்டு, காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறார். இவற்றை விட அவர் பார்வை போன விதம் பற்றி அவன் எங்களுக்குச் சொன்னது தான் எங்களை நெகிழ்த்தியது. சிறு குழந்தையொன்றை விபத்திலிருந்து காப்பாற்றும் போது தான் இப்படியானதாம்.

இதையெல்லாம் கேட்டப் பின் மிகவும் ஆர்வமுண்டாக, அவனுடன் அவரைச் சந்தித்தோம். ஆனால் எங்களைக் குறித்து கேட்டுத் தெரிந்துகொண்ட அளவிற்கு தன்னைக் குறித்து அதிகம் பேச அவர் விரும்பவில்லை. சுதந்திர போராட்டத்தில் அவர் பங்களிப்பு, பின்னர் அவர் ஆற்றிய சேவைகள் பற்றி “சொல்ல பெருசா ஒண்ணும் இல்லை” என்று கடந்து சென்று விட்டார். குழந்தையை காப்பாற்றியதைக் குறிப்பிட்டு “நீங்க ஒரு ஹீரோ தாத்தா” என்று மணி சொன்ன போது மட்டும் “அப்படிலாம் இல்லை, அந்த நேரத்துல நான் எதையுமே யோசிக்கல, அந்த நேரத்துல தோணினதை செஞ்சேன் அவ்வளவு தான்” என்று பதிலளித்தார். அதன் பின் தாத்தா குறித்து நாங்கள் எப்போதும் கேட்டாலும் அவனும் பிடி கொடுக்காமல் தான் பேசினான்.

(அவன், தாத்தா என்றே இருவரையும் குறிப்பிடக் காரணம் அவர்களிருவரின் பெயர் எனக்கு இப்போது ஞாபகத்தில் இல்லை என்பதால் தான். சொல்லப்போனால் தாத்தாவின் பெயரை அப்போதே கூட நாங்கள் அறிந்திருக்கவில்லை. அந்தப் பையனைப் பற்றி பல விஷயங்கள் ஞாபகத்தில் இருந்தும் பெயரை மட்டும் எப்படி மறந்தேன் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இருவருக்கும் ஏதேனும் பெயர் வைக்கலாம் என்று தான் நினைத்தேன். இதைப் பற்றி பெரியவர் முற்றுப்புள்ளியிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அவர்தான், உனக்கு எப்படி ஞாபகம் வருகிறதோ அப்படியே எழுது, என்றார். தான் நிஜத்தில் பார்த்ததை, உணர்ந்ததை, உண்மையின் வீச்சு உள்ளதை மட்டுமே எழுத வேண்டும் என்ற கொள்கை உடையவர் அவர். அதில் எனக்கு முழுதும் ஏற்பு இல்லையென்றாலும், இந்தக் கதையைப் பொறுத்தவரை பெயரைக் குறிப்பிடாமல் சொல்லும் போது, விலகலும் நெருக்கமும் கொண்ட நினைவுகள் குறித்த நகைமுரண் கிடைப்பதாக தோன்றியதால் அப்படியே செய்தேன். பொதுவாக ஏன், எப்படி எழுதினேன் என்றெல்லாம் கோனார் உரை போடுவதெல்லாம் இலக்கியத்தில் தேவையில்லை என்று நினைப்பவன் நான். இருந்தாலும் முற்றுப்புள்ளியின் உதவியை பதிவு செய்ய வேண்டுமென்பதால் இதை எழுதுகிறேன். மேலும், இதைப் பார்த்து அவருக்கும் தன் கதைகளைப் பொதுவும் பகிரும் எண்ணம் தோன்றக் கூடும் என்றும் எதிர்பார்க்கிறேன்).

இதையெல்லாம் படிக்கும் போது இந்தச் சம்பவங்கள் பல காலமாக நடந்து வந்தவை போல் தோன்றினாலும், உண்மையில் அந்தக் கோடை விடுமுறை, பின் பள்ளி திறந்து 3-4 மாதங்கள, என்ற காலகட்டத்திற்குள்ளேயே இவையனைத்தும் நிகழ்ந்தன. ஒரு வாரஇறுதியில் ஊருக்குச் சென்ற அவன் திரும்பி வரவில்லை. முதலில் அதை கவனிக்காத நாங்கள் ஓரிரு வாரங்கள் கழித்தே- பந்தை எடுக்க சத்திரத்திற்கு செல்லும் போது அவனைக் குறித்து தாத்தா கேட்டதும் தான் – உணர்ந்தோம். கிளப்பில் வேலை செய்பவர்களிடம் கேட்க எங்களுக்கு பயம் அல்லது கேட்கத் தோன்றவில்லை, ஒன்றிரெண்டு மாதங்களில் அவனை கிட்டத்தட்ட மறந்து விட்டோம், அவனில்லை என்பதால் தாத்தவுடனும் பேச்சு இல்லாமல் போனது. அவரும் பிறகு அவனைப் பற்றி எங்களிடம் எதுவும் கேட்கவில்லை. சில மாதங்களில் வரவு இல்லையென்று கிளப்பையும் மூடி விட்டார்கள். மீண்டும் யாருமற்றுப் போனாலும், அங்கு மனிதர்களின் நடமாட்டத்தைப் பார்த்தப் பிறகு, அந்த இடத்தை குறித்த நாங்கள் உருவாக்கி வைத்திருந்த மர்மங்கள் அர்த்தமற்றதாக தோன்ற முன்பைப் போல பேய், எலும்புகள் என்று பங்களவைக் குறித்த கிளர்ச்சிகளை எங்களால் உருவாக்கிக் கொள்ள முடியவில்லை.

பத்தாவது பொது தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த வேளையில், தாத்தா காலமாகி விட்டார் என்ற செய்தி கிடைத்தது. இரவில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்து விட்டது. நாங்கள் பள்ளிக்குச் சென்று விட்டிருக்க, அன்றே அவர் சொந்தக்காரர்கள் இறுதிச் சடங்குகளை செய்து விட்டார்கள் என்று தெருவில் பேசிக்கொண்டார்கள். இவையெல்லாம் எங்களுக்கு அடுத்த நாள் தான் தெரிய வந்தது. சில நாட்கள் அவரைப் பற்றி பேசிக்கொண்டிருந்து விட்டு, பரீட்சை, இன்னொரு கோடை விடுமுறை கொண்டாட்டம் என்று அவரையும் கடந்து சென்று விட்டோம்.

பதினொன்றாம் வகுப்பில் என்.என்.ஸில் சேர்ந்தேன் ( சேர்க்கப்பட்டேன் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்). என்.என்.எஸ் சார்பில் எங்களூரில் இருந்த சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அரைநாள் முகாமிற்கு ஒரு ஞாயிறன்று சென்றோம். அன்றைய முதல் அதிர்ச்சியாக அந்தப் பையனை அங்கு சந்தித்தேன். என்னுடைய வியப்பிற்கு நேர்மாறாக எப்போதும் போல் இயல்பாகவே என்னை அவன் எதிர்கொண்டு, இங்கு எப்படி வந்தான் என்பதைச் சொன்னான். சிறுவயதிலிருந்தே அவனுடன் படித்த சிறுமியுடன் அவனுக்கு நெருங்கிய நட்பிருந்தது (காதல் என்றெல்லாம் அவன் சொன்னது போல் ஞாபகம் இல்லை, பிரியத்துக்குரியவள் என்று மட்டும் பொருள்படும்படியான வார்த்தைகளை அவன் உபயோகித்தான் என்று நினைக்கிறேன்). அவளை கூடப் படித்த இன்னொரு மாணவன் கிண்டல் செய்திருக்கிறான். இவன் ஊருக்குச் சென்ற அந்த வார இறுதியில், இது குறித்து அவனுக்குத் தெரிய வர, அந்த மாணவனை எதிர்கொண்டிருக்கிறான். ஒரு கட்டத்தில் பேச்சு முற்றி அந்த மாணவனை மிரட்ட இவன் அடிக்கப் போக, அவன் தலையைத் திரும்பியதால் பின் மண்டையில் அடி பட அம்மாணவன் இறந்து விட்டான். இவன் இங்கு சேர்க்கப்பட்டான். “அவனை கொல்லணும்லாம் யோசிக்கல, அவ பிரச்னையை தீர்க்கணும்னு நெனச்சேன், இப்படியாகிப் போச்சு” என்று சொன்னவன், கிளப் குறித்தும், மற்ற நண்பர்கள் குறித்தும் கேட்டான். பிறகு தாத்தா எப்படி இருக்கார் என்றவனிடம், அவர் மறைவைப் பற்றிச் சொன்னேன். அடுத்த வியப்பான செய்தியாக தாத்தா குறித்து அவன் என்னிடம் சில விஷயங்களை சொன்னான்.

இவன் திரும்பி வராததால், கிளப்பிற்குச் சென்று விசாரித்த தாத்தா நடந்ததை அறிந்து, இவனுடன் தொடர்பு கொண்டு, அவ்வப்போது இவனைப் பார்க்க சீர்திருத்தப் பள்ளிக்கு வருவாராம். இவன் இங்கு சேர்க்கப்பட்ட பின் இவனைப் பார்க்க எப்போதேனும் மட்டுமே வந்து கொண்டிருந்த இவன் தந்தை, சில மாதங்களிலேயே யாருக்கும் எதுவும் சொல்லாமல் ஊரை விட்டுச் சென்றதையும் தாத்தாதான் -அவன் தந்தையைத் தேடி ஊருக்குச் சென்ற போது இதை அறிந்து – இவனிடம் சொல்லி இருக்கிறார். அதன் பின் அவருடைய வருகை மட்டுமே அவனுக்கிருக்கும் ஒரே ஆசுவாசமாக இருந்திருக்கிறது. சில மாதங்களாக தாத்தா ஏன் வரவில்லை என்று குழம்பி இருந்தவன், நான் சொன்னதைக் கேட்டு நொறுங்கி விட்டான். “நீ திரும்பி வந்ததும் நல்ல வழி பண்றேன்” என்று தாத்தா சொன்னதாக சொல்லும் போது உடைந்து தேம்பித் தேம்பி அழ ஆரம்பிக்க விட ஒருவாறு அவனை தேற்றினேன். அவன் சமநிலை குலைந்ததை அப்போது தான் பார்த்தேன். நாங்கள் கிளம்ப வேண்டிய நேரம் வர, மீண்டும் வந்து பார்பதாகச் சொல்லி விடை பெற்றேன்.

அவனுடைய சுபாவம் அவனை அவனிருந்த சூழலில் இருந்து மீளச் செய்தது என்று சொல்ல விரும்பினாலும் நீங்கள் இந்நேரம் சரியாக யூகித்திருப்பதைப் போல, அவனை நான் மீண்டும் சென்று பார்க்கவில்லை. இருந்தாலும் அவனை பார்க்கச் செல்லாத குற்றவுணர்ச்சியை மட்டுப்படுத்த அவன் மீண்டிருப்பான் என்றே நம்ப விரும்புகிறேன். படிப்பின் அழுத்தம், வீட்டில் உள்ளவர்கள் என்ன சொல்வார்களோ என்ற அச்சம் என என் செய்கைக்கு எவ்வளவோ காரணங்கள் சொல்லலாம் என்றாலும், உண்மையில் அவனையும் தாத்தாவையும் எங்கள் அன்றாட வாழ்வின் ஒரு ஓரத்தில் இருப்பவர்களாகவே எங்களின் ஓட்டத்தில் அவ்வப்போது நின்று, பாதுகாப்பான தூரத்திலிருந்து பார்க்கப்படவேண்டியவர்களாகவே அணுகினோம் என்பதே உண்மை (தாத்தா இதை உணர்ந்திருந்ததால் தான் பல ஆண்டுகள் அருகிலேயே வசித்த எங்களை விட, புதிதாய் வந்த அவனிடம் சில நாட்களிலேயே நெருக்கமாக உணர்ந்திருக்க வேண்டும்). ஆனால், அவனை இறுதியாகப் பார்த்த அன்று ஊரே -80களில் தமிழ்நாட்டில் எந்தவொரு வார இறுதியின் மிக முக்கிய நிகழ்வான – ஞாயிறு மாலை தமிழ் படத்தில்- ஐக்கியமாகி இருக்க, நான் மட்டும் வீட்டின் பின்புறச் சுவற்றில் அமர்ந்து, ஆகஸ்ட் மாத மாலை நேர தென்றலை எப்போதும் போல் அனுபவிக்க முடியாமல், யாரும் இருந்ததற்கான தடயமே இல்லாதிருந்த பங்களாவையும், சத்திரத்தையும் அவற்றினிடையே இருந்த வெற்று மனையையும் பார்த்துக் கொண்டிருந்தேன்.