ஆகி

நிழல்கள், நிலக்காட்சி – ஆகி கவிதைகள்

ஆகி

நிழல்கள்

வான் தொட எத்தனிக்கும்
பனையினடியில் வேறெதுக்கோ
ஒதுங்கி நிழலைத் தேடியவனின்
நிழலில் ஒதுங்கியது
மரப்பல்லியொன்று
நிழலென்று மரப்பல்லிக்கும்
ஒன்றுண்டு போலும்
அருகினில் எறும்பும்
தனது நிழலை இழுத்தபடி
ஊர்ந்து வருகிறது
தூரத்தில் நீள்கழுத்தில்
தலையசையாத் தலையாக
பனையின் நிழல்
அத்தினம் அரைவட்டமிட்டு
கதிரவனை உச்சந்தலைக்கு
கொணரும் கணம் வரை
எவரும் காத்திருக்கவில்லை
அவரவர் நிழல்களோடு

நிலக்காட்சி

அரை நூற்றாண்டுக்கு இருமுறை நிகழும் நிலக்காட்சியில்
விற்போர் நிலம் விற்பனைக்கென்று துடிக்கும்
மெலிந்து நலிந்த உடல்களைக் கிடத்தியிருக்க
நன்றாய் வளர்ந்த வாங்குவோர் நிலம் விற்பனைக்கல்லவென்று
உடலை நிறுத்தியிருந்த இவனைச் சூழ்ந்திருக்கத் தேவையில்லை
நா நுனியில் வசைகள் வரிசையில் நெருக்க
இவன் தும்மினால் நாசியில் ரீங்கரிக்கும் தேனீ
சொரிந்தால் தலையை வட்டமிடும் சிட்டு
ரத்தநாளத்திலிருந்தெழும் செடி கொடிகள்
முதுகுத்தண்டிலிருந்தெழும் தேக்குகள்
எலும்பிலிருந்தெழும் அத்தி மரங்கள்
நரம்பிலிருந்தெழும் புற்கள்
நெளியும் கம்பளிப்புழுக்களும்
மினுக்கும் மின்மினிகளும்
இவையும் இன்னபிறவும் யாவும் எவையும்
குளிரூட்டியே கதியெனக் கிடக்கும் மஞ்சள் பார்வைக்குத்
தத்தம் இயல்பில் புலப்படாது போனதில் ஆச்சரியமொன்று மில்லை
அதிலும் திமிர்ந்து நிமிர்ந்த உடலில் முளைவிடும் பச்சையக்
குருத்துகள் அநியாயத்துக்கு மயக்கமளிப்பவை
இவன் விசிலடித்துக்
காளையாய் நின்றான்
விற்போரும் வாங்குவோரும்
பிரமை விலகி
மும்முறை திடுக்கிட்டனர்
எல்லாம்
சட்டெனத்
துலங்கினாற்போல்

 

நகர்வுகள் – ஆகி கவிதை

ஆகி

காமப்பெருங்குன்றின் முகட்டில்
வசிக்கின்றவன்
முகர்கின்றான்
கேட்கின்றான்
மல்லாந்து கிடக்கின்றான்
உரையாடுகின்றான்

வியர்க்கின்றான்
இறங்கி நிற்கின்றான்
கண்ணிமைக்கின்றான்
அவன் காதற்பள்ளத்தாக்கினுள்
எப்போதைக்குமாக
இறங்கிக்கொண்டிருக்கின்றான்
அக்காதற்பள்ளத்தாக்கினடியில்
வசிக்கின்றவள்

குப்புறக் கிடக்கின்றாள்
உரையாடுகின்றாள்
மூச்சிழுக்கின்றாள்
மெல்ல முயங்குகின்றாள்
மூச்சிரைக்கின்றாள்
வியர்க்கின்றாள்
கண்ணிமைக்கின்றாள்
எழுந்து நிற்கின்றாள்
அவள் அக்காமப்பெருங்குன்றின் முகட்டுக்கு
எப்போதைக்குமாக
ஏறிக்கொண்டிருக்கின்றாள்

பயணம் – ஆகி கவிதை

ஆகி

உலர்ந்திட்ட ஒருசொட்டு கிருபை
எண்ணிறந்த கபாலங்களுக்கப்பால்
கல்வாரியில் ஒன்றுமில்லை
களைத்திட்ட மிகப்பெரும் மக்கட்திரள்
கருத்தியல்களின் உன்னத
கல்லறைகளுக்கப்பால் மெக்கா
வாரணாசி இரண்டுமில்லை
இரகசிய பன்னாட்டு இராணுவ தளமியங்கி
போதிமரத்தடியும் எல்லாமிருக்க
வெறிச்சிட்டதொரு கல்லறையாகிட
யப்பப்பா இதென்ன இழவென்று
நீண்ட நின் விழிப்பொன்றிலிருந்து
நான் விழித்திட்ட தருணத்தில்
யப்பப்பா இதென்ன களைப்பென்று
இதுகாறும் முறித்திராத சோம்பல் முறித்து
வேதாகமம் நாத்திகம் பௌதிகவாதம்
ஆத்திகம் வேதாந்தம் கடந்ததிட்டவொரு
சின்னஞ்சிறு மக்கட்திரளொன்று
உருப்படியாக ஏதாவதுண்டெனில்
இவ்வியாபித்துள்ள பிராமணியமெனும்
வினோத சிக்குப்பின்னலுக்கப்பாலன்றி அது
வேறெங்குமிருந்திட வாய்ப்பேயில்லையென்று
தயக்கமேதுமின்றி ஆளரவமற்ற அதற்கப்பால்
அடிமேலடி யெடுத்து பொடிநடை போடுகின்றது

இப்படியுமோரமைப்பு – ஆகி

ஆகி

கண்ணாய் தாய்மார்
தந்தைமார் தோளாய்
கேசமாய் மெத்தப்படித்தோர்
மதம்பிடித்தோர் மயக்கமாய்
இதயமாய் வீடற்றோர்
பாலியக்கமற்றோர் இயல்பாய்
இயலுணர்வாய் திருனர்கள்
கலைஞர்கள் நுண்ணுயிர்கட்டாய்
உணர்கொம்பாய் தாவரங்கள்
தோட்டத்திற்கு நீர்பாசனத்தை சட்டெனத்துண்டித்த உணவதிகாரியை
நீயதை வாசிக்காதே என்றாணையிட்டறைந்த நூலதிகாரியை
ஆசைப்பட்டானென்று பட்டென்றுதைத்தக் காதலதிகாரியை
பாதிக்கப்பட்டோரனைவரின் உயிரணுக்களில் வசிக்கும் தீங்கற்ற
இச்சைகளனைத்தும் முடிவிலிவரை ஒத்திசைத்து பச்சைபச்சையாய்
வசை பாடுகின்றன
குரல்நாணாய் மகள்கள்
மகன்கள் செவியாய்
நனவாய் விலங்குகள்
பறவைகள் கனவாய்
இப்படி யோரமைப்பு
பிறப்புறுப்பாய் இச்சைகள்
இச்சைகள் இரைப்பையாய்
மூளையாய் இச்சைகள்
குறிக் கோள்களற்ற
பரிசுத் தமான
இச்சைகள்

சாயல் – ஆகி

ஆகி

மெட்ராசா என்பார் ஐதராபாதிலிருந்து திரும்பினால்
புது தில்லியிலிருந்து திரும்பினாலும் மெட்ராசாதான்
கிட்டத்தட்ட ஓர் நூற்றாண்டைக் கண்டவரானால்
திருச்சிக்கு அந்தப் பக்கம் கண்டதில்லையாதலால்
அவர் இருந்திருந்தால் கொள்ளுப்பேரன் நிலவிலிருந்து
திரும்பியிருந்தால் எப்பப்பு வந்தா மெட்ராசிலிருந்து என்றிருப்பார்
அகமாசா என்றுணர்ந்து கைகளைத் தடவி முகத்தில் ஒத்தியெடுத்து
விரல்கள் உள்ளீடற்று போகிறார்போல் முகர்ந்துகொள்வார்
பிளசர் கார் ஒத்துவராதென்று ஜெயசீலி சித்தி வசிக்கும்
திருச்சிக்கும் சென்றிருக்கவில்லை கடைசி நாட்களில்
படுத்த படுக்கையாயிருந்த நட்சத்திரம் பாட்டிம்மாவை பல மாதங்கள்
மாங்கு மாங்கெனத் தாங்கிக்கொண்டார் ஜெபதங்கம் பெரியம்மா
கர்த்தருக்குள் நித்திரையடைந்தவரின் முகம் கன்னம் வற்றி
எலும்பு துருத்தி சாயலொன்றை கொணர்ந்தது கண்ணாடிப்பெட்டியுள்
பலநாள் பட்டினியில் என்னைக் கண்ணாடியில் நானே முறைத்தால்
காணும் பழந்தின்னி வௌவாலின் சாயல் அதைவிட அச்சு அசலாக
நானிப்போதெல்லாம் வீம்புக்காகவன்றி பட்டினி கிடப்பதில்லை
பழந்தின்னி வௌவால் பறக்கும் நரியென்றுமறியப்படுகிறதாம்
தேரிக்காட்டின் நிலவொளியில் பறக்கும் நரிகள் அருகி வருகின்றன