எழுத்து

கா. சிவா கவிதை- சொல்லற்ற மொழி

கா. சிவா

பூத்துக் குலுங்கும் மரத்தை
குறிக்கும்போது
காய்த்துத் தொங்குவதை
எண்ணிக் கொள்கிறாள்

நறுந்தேன் மலரை உரைக்கையில்
காகிதப் பூக்களை
கைக்கொள்கிறாள்

மரியானா டிரின்ஞ்சை விளக்கும்போது
டீதிஸ் கடலை கற்பனைக்கிறாள்

சொல்ல விழைவதின்
சிறு பகுதியை
உறிஞ்சிக் கொள்கின்றன
கடத்தற் கூலியாக,
சொற்கள்

அறிவதெப்படி,
சொற்களின் துணையின்றி
கச்சிதமாக உணர்த்தும்
மலர்களின் மொழியை.

 

மணவாழ்வின் மதியம் – காலத்துகள் சிறுகதை

காலத்துகள்

“நைட் பூரா இருக்கணுமா”

“..”

“பதினொண்ணு, பண்ணண்டுக்கு கிளம்ப முடியாதா”

“..”

அழைப்பைத் துண்டித்தாள். சுவர்க் கடிகாரத்தின் சதுரம் மங்கலாகத் தெரிந்தது, அலைபேசியில் பார்த்தாள், ஏழு நாற்பது. அறை விளக்கை போடாமல் ஜன்னல் அருகே சென்று இருளினூடே வெளியே நோக்கினாள். மழை நின்றுவிட்டிருக்க, தெருவிளக்கின் ஒளி எதிர்வீட்டின் கண்ணாடி ஜன்னலில் சிந்தி சாலையில் தேங்கியிருக்கும் நீர்க் குட்டையில் விழுந்திருந்தது. கணுக்காலுக்கு மேல் புடவையை இடது கையால் தூக்கிப் பிடித்தபடி அவ்வொளியை தாண்டிச் சென்ற பெண்ணின் வலது கையில் குடை. மழையால்தான் இவன் வர தாமதமாகிறது என்று எண்ணியிருந்தாள். ஏழேகாலுக்கு மேல் அவனுக்குத் தாமதாமாவதில்லை, அதிகபட்சம் எட்டரை, ஒன்பது, அதையும் முன்கூட்டியே சொல்லிவிடுவான். இப்போது போன் செய்து இரவு முழுதும் வர முடியாது என்கிறான்.

அறையை விட்டு வெளியே வந்தவள் அர்ஜுனை சாப்பிட அழைத்தாள். “அப்பா என்னமா இன்னும் வரலை,” என்று கேட்டவனிடம், “வர மாட்டா,” என்றாள். “அஸ்த்து மாதிரி பேசாதடி,” என்பாள் பாட்டி. “இன்னிக்கு நைட் வர மாட்டா, ஆபிஸ்ல வேலை இருக்காம்”. சாப்பிட்டு முடித்தபின் சிறிது நேரம் பேசிவிட்டு தன்னறைக்குச் சென்றான் அர்ஜுன். அடுத்த வருடம் பத்தாவது, ட்யூஷனுக்குச் செல்ல ஆரம்பித்து விடுவான். வீடு அவன் உண்ணும், உறங்கும் இடமாக மாறி விடும்.

வெளிக்கதவைப் பூட்டியபின் ஜன்னல்கள் சரியாக சாத்தப்பட்டுள்ளனவா என்று உறுதி செய்தாள். அபார்ட்மென்ட்டிற்கு செக்யுரிட்டி உண்டு, ஆனால் கிட்டத்தட்ட அறுபது வயது மதிக்கத்தக்க ஆசாமி. கடைசியாக இந்த வீட்டில் எப்போது தனியாகத் தூங்கினோம், சமையலறை விளக்கை அணைத்தாள். ஆயிரத்தி முன்னூற்றி ஐம்பது சதுர அடி, மூன்று படுக்கையறை -அதில் மிகச் சிறியது அர்ஜுனுக்கு. ஒன்றை உபயோகிக்க யாரும் இல்லை. ஹால், சமையலறை. அர்ஜுன் பிறந்த மறுவருடம் வாங்கிய வீடு, அப்போது பேறு கால விடுமுறை முடிந்து மீண்டும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்திருந்தாள். தன் சேமிப்பிலிருந்து ஏழு லட்சம் கொடுத்தாள். ஏழா, ஐந்தா? அவனும் தன் பங்கிற்கு ஒரு தொகையை தந்தான். ஈ.எம்.ஐயை அவன்தான் இத்தனை வருடங்களாக கட்டி வருகிறான். இன்னும் எத்தனை வருடங்கள் லோன் கட்ட வேண்டும் என்பது அவனுக்குத்தான் தெரியும். இரண்டு வருடம் முன்பு நான்கு லட்சம் பார்ட் பேமெண்ட் செய்யப் போவதாகச் சொன்னவன் செய்தானா?

அறைக்கு வந்தவள் விளக்கைப் போடாமல் படுக்கையின் மீதமர்ந்து அவனுக்கு இரு முறை அழைப்பு விடுத்தாள், பின் சாப்பிட்டாயிற்றா என்று வாட்ஸாப் செய்தி. அதற்கும் பதில் இல்லை. சில நிமிடங்கள் கழித்து பார்த்தாள், மெசேஜை அவன் இன்னும் பார்க்கவேயில்லை. ஒன்பதரை மணி, இப்போதும் அவன் பார்க்கவில்லை. ஜன்னலருகே சென்றாள். தெருவில் இன்னும் நடமாட்டமிருந்தது, ஜன்னல் திரைச் சீலையை போடாமல் திரும்பி வந்து படுத்தவள், தெருவில் செல்லும் வண்டிகளின் ஹெட்லைட் ஒளி அறையின் சுவற்றில் பட்டு, அந்த ஒளியில் தெரிந்த மின்விசிறியின் ஏழெட்டு கைகளை பார்த்தபடி உறங்கிப் போனாள்.

oOo

காலை ஐந்தரை மணிக்கு அவள் விடுத்த அழைப்புக்கும், அனுப்பிய வாட்ஸாப் கேள்விகளுக்கும் பதில் இல்லை, நேற்று அனுப்பிய செய்திகளையே அவன் இன்னும் பார்க்கவில்லை. ஏழு மணிக்கு திரும்பியவனிடம் “என்னாச்சு நேத்து?” என்று அவள் கேட்க, “வேல இருந்தது,” என்று மட்டும் கூறினான். இட்லி குக்கரை ஏற்றிவிட்டு அறைக்குள் வந்தவள் குளித்து முடித்து உடலைத் துவட்டிக் கொண்டிருப்பவனைப் பார்த்து, “ஆபிஸா போறீங்க?” என்றாள்.

“வேறெங்க”

“இப்பத் தான வந்தீங்க”

“திருப்பி எட்டு, எட்டரைக்காவது கெளம்பனும்”

“நேத்து, இன்னிக்கும் மூணு நாலு வாட்டி ட்ரை பண்ணேன், மெசேஜ் அனுப்பினேன்”

உள்ளாடையை அணிந்து, முதலில் இடுப்புப் பகுதியின் இலாஸ்டிக்கை விரித்து நீவி விட்டுக் கொண்ட பின், விதைப் பகுதியை சரி செய்து கொண்டான். தொடையுடன் பிருஷ்டம் இணையும் இடம் மட்டும் அவனுடையை மாநிறத்தை விட சற்று கருப்பாக இருந்தது. திருமணமான முதல் ஓரிரு வாரத்திற்கு இருவருமே மற்றவர் முன் உடை மாற்ற கூச்சப்பட்டார்கள் .இவளுக்குதான் முதலில் அவன் முன் அரை, முழு நிர்வாணம் பழக்கமானது.

“சாப்டுட்டுதான கெளம்புவீங்க”

தலையசைத்தான்.

எட்டு மணிக்கு அர்ஜுனுடன் அவனும் கிளம்பியபின் வெளியே சாலையைப் பார்த்தபடி சாப்பிட்டு முடித்தாள். ஒன்பது மணிக்கு தூங்கச் சென்ற தெரு இனி மூன்றரை, நாலு மணிக்கு பள்ளி விட்டு குழந்தைகள் திரும்பும்போதுதான் விழிக்கும். ஆபிஸ் சென்று விட்டானா என்று கேட்க அலைபேசியை எடுத்தவள் அதை படுக்கையின் மீது வைத்தாள். ஐடியில் வேலை பார்ப்பவர்கள்தான் நாள் முழுவதும் வேலை பார்ப்பார்கள். இவனுக்கு இரவு முழுதும் அலுவலகத்தில் தங்கும்படி என்ன வேலை வந்திருக்கும்? தன்னிடம் சொல்லியிருக்கலாம், நிறைய விஷயங்களை அவன் பகிர்ந்து கொள்வதில்லை. என்ன சம்பளம் என்று தெரியாது, திருமணத்தின்போது நாற்பதாயிரம் என்று அவன் வீட்டில் சொன்னார்கள், இப்போது எவ்வளவு வாங்குகிறானோ? நேற்று ஏன் அலுவலகத்திலேயே தங்க வேண்டி வந்தது என்று என்னிடம் சொல்லியிருக்க வேண்டும்.

மாலை எப்போதும் போல் ஏழு மணிக்கே திரும்பினான். கதவைத் திறந்தவள் எதுவும் சொல்லாமல் சமையலறைக்குச் சென்றாள். உடை மாற்றிக் கொண்டு வந்தவன் “என்ன டின்னர்” என்று கேட்டதற்கு திரும்பாமல் பதில் சொன்னாள். சில கணங்கள் நின்றிருந்தவன், ஈயச் சொம்பின் மீதிருந்த தட்டை எடுத்து ரசத்தை முகர்ந்தபின் “நல்ல வாசனை, என்ன ஒடம்பு சரியில்லையா” என்று அவள் பின்னால் அருகில் நின்று கேட்டான். இல்லையென்று தலையசைத்தவளிடம் “வந்தவுடன கிச்சனுக்கு வந்துட்ட” என்றான். “பாதில விட்டுட்டா வர முடியும்”.

சாப்பிட்டபின் மூவரும் அன்றைய செய்திகளை பார்த்துக் கொண்டிருக்க, அவன் எப்போதும் போல் அவற்றைக் குறித்த விமர்சனங்களை வைத்துக் கொண்டிருந்தான். விளையாட்டுச் செய்திகள் ஆரம்பித்தபோது உள்ளறைக்குச் சென்றாள். ஒரு விஷயத்தைப் பற்றி தனக்கு எந்தளவுக்கு தெரியும் என்ற பிரக்ஞை கொஞ்சம்கூட இல்லாமல் எல்லாவற்றைப் பற்றியும் தீர்ப்பு சொல்லிவிட வேண்டியது. அவை முட்டாள்தனமானவை என்று தெரிந்திருந்தும் வாயை மூடிக் கொண்டிருந்திருக்கிறேன் இத்தனை காலமாக. அதனால்தான் அவன் இப்போது அடல்ட்ரி குறித்த தீர்ப்பைப் பற்றிய தன்னுடைய அறிவிலி கருத்தை, எந்த சங்கோஜமும் இல்லாமல் முன்வைக்கிறான். அவன் குரலைக் கேட்டபடி அங்கு அமர்ந்திருப்பதற்கு இப்படி இருளில் தெருவில் செல்லும் வாகனங்களின் ஒலி எவ்வளவோ மேல்.

இவளுக்கு சமகால நிகழ்வுகளில் எப்போதுமே அக்கறை இருந்ததில்லை, நான் ஏதாவது சொன்னால் அதை நேர்மாறாக புரிந்து கொள்வாள் அல்லது எதுவும் பேசாமல் இருப்பாள். சென்ஸ் ஆப் ஹுமர் கிடையாது, எதையும் மேலோட்டமாக புரிந்து கொண்டு அதிலேயே பிடி கொடுக்காமல் இருப்பது.

ஸ்டெப்பியை விட செரீனா சிறந்த வீராங்கனை என்று இவன் சொல்வது உள்ளார்ந்த கருத்து என்றாலாவது அதைப் பற்றி உரையாடலாம். இவன் செலஸ் ரசிகன், என்னமோ ஸ்டெபி ஆள் வைத்து செலஸை தோளில் கத்தியால் குத்தியது போல் பேசுவான், இப்போது ஸ்டெபியை கீழ் இறக்க செரீனா ஒரு கருவி.

oOo

“என்னடி பண்ணிட்டிருக்க?” அலைபேசியில் அழைத்த மேரி கேட்டாள்.

“நானா, ஒன்னப் பத்தியே தாண்டி நெனச்சிக்கிட்டிருக்கேன்”

“அப்படியாடி”

வேலைக்கு முதன் முதலில் சேர்ந்தபோது கிடைத்த முதல் தோழி மேரி. அடுத்தடுத்த இருக்கைகளில் பணி. ஷிப்ட் முறை வந்தபோது ஒரே நேரத்தை இருவரும் கேட்டு ஒன்றாகச் சென்று வந்தார்கள்.

“இப்பவும் சிவா ஆபிஸ்லதான்டி வேல பார்க்கறேன்”. இவள் வேலையை விட்ட சில வருடங்களுக்குப் பின் மேரி ப்ரீலான்சிங் முறைக்கு மாறும்போது “டிவோர்ஸின்னா ஒரு நக்கல், வழிசல் இருக்குடி, ப்ரீலான்சிங்தான் போலான்னு இருக்கேன்” என்று புதுச்சேரியின் இரு பெருநிறுவனங்களில் வேலையை விட்டபின் கூறினாள்.

“அப்பறம் பேசறேண்டி”. போனைக் கட் செய்தாள் மேரி. வேலையை விட்டபோது வாங்கிக்கொண்டிருந்த இருபத்தி ரெண்டாயிரம் ரூபாய் இப்போது இருமடங்காயிருக்கக் கூடும். மகன் பள்ளி செல்ல ஆரம்பித்ததும் வேலையிலிருந்து நின்று விடுவதாகக் கூறியதற்கு அவன் தடையேதும் சொல்லாததை என் விருப்பத்திற்கு மதிப்பு கொடுப்பதாக எண்ணியிருந்தது தவறு. ஏன் இந்த மாதம் அதிகப் பணம் தேவைப்படுகிறது, இது வீண் விரயம் என்று அவன் சொல்வதில்லை என்றாலும், இன்று தினசரி செலவுகளுக்குக்கூட அவனை எதிர்ப்பார்த்திருக்கும் சூழலை அப்போதே அவன் யூகித்திருக்கக்கூடும்.

“சண்டே ஷாப்பிங் போலாம்,” என்று அவன் கூறியதற்கு, “எனக்கெதுக்கு வீட்லதான் இருக்கேன், போன தீபாவளிக்கு வாங்கினதையே நாலஞ்சு வாட்டிக்கு மேல போட்டுக்கல” என்றாள்.

“வெளில போகாமையேவா இருக்க, நாம எப்பவும் வாங்கறதுதானே”.

“இந்த வருஷம் என்னமோ வேணாம்னு தோணுது, நீங்களும் அவனும் வாங்கிக்குங்க”

இப்போதிருக்கும் உடைகளை இன்னும் எத்தனை மாதங்களுக்கு இவள் உபயோகப்படுத்த முடியும், இறுதியில் என்னிடம்தான் வர வேண்டும்.

அவன் உடலசைகிறது. அடுத்து மூச்சுக் காற்று கழுத்தில் படும், பாதி விரைத்த குறியின் அழுத்தம் பின்தொடையிலோ, புட்டத்திலோ அழுத்தும். தூங்குவது போல் இருந்து விடலாம் அல்லது விருப்பமில்லை என்று சொல்லலாம். முட்டை வெடிக்கும் தினம் என்று சொன்னால் கடைசியாக பீரியட்ஸ் வந்த தேதியை வைத்து நான் சொல்வது பொய் என்று புரிந்து கொள்வானா? தயங்குகிறான், இன்னும் சில நொடிகள் இப்படியே இருந்தால் திரும்பிப் படுத்துக் கொள்வான். சற்று அசைந்து உடலில் கீழ் பகுதியை மட்டும் நகர்த்தியவளின், தோளை அவன் தொட, திரும்பினாள்.

உறங்கிவிட்டான். கல்லூரியில் படிக்கும்போது நாலைந்து தோழிகளுடன் காயத்ரியின் வீட்டிற்குச் சென்றபோது சில பார்ன் இதழ்களை காட்டினாள். கட்டுமஸ்தான உடல்கள், நீண்ட, தடிமனான குறிகள். தன் இடுப்பை இரு தொடைகளாலும் இறுக்கியிருந்த பெண்ணின் மீது முழுதும் படர்ந்திருந்த ஆணின் புட்டத்தை தொட்டு “என்னடி பன் மாதிரி இருக்கு,” என்று கேட்ட வெண்ணிலா, “ஒத்தனுக்கும் மீசை இல்ல, மழுமழுன்னு இருக்கானுங்க,” என்று சலித்துக் கொண்ட ஜெரால்டின். வெள்ளையினப் பெண்களுடன் கலவியில் ஈடுபடும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் புகைப்படங்கள்தான் இவளை அதிகம் ஈர்த்தன. திரும்பி அவனை எழுப்பலாம், இரவில் இரண்டு மூன்று முறை கலவியில் ஈடுபட்டிருக்கிறார்கள், இப்போதெல்லாம் மாதம் நாலைந்து முறை கலவி நிகழக்கூடும், கணக்கு வைத்துக்கொள்வதில்லை.

அன்று புகைப்படங்களில் பார்த்தவர்களைப் போல் கட்டுடல் இல்லையென்றாலும் தொப்பை விழவில்லை. அவர்களைவிட நீளத்தில் சிறிய, உள்ளங்கையை நிரப்பும் தடிமனுள்ள குறி. முயக்கத்தில் தேர்ந்தவன். ஆனால் வேறொரு ஆணுடன் கலவி கொண்டிராதபோது எப்படி சொல்ல முடியும்? அன்று பார்த்த ஒரு போட்டோவில் பெண்ணை தூக்கி நின்றபடி புணர்ந்து கொண்டிருந்தவன் போல் இவனால் இயங்க முடியாது. கால்களை உடலுடன் குறுக்கிக் கொண்டாள். அன்றுதான் காயத்ரி அனைவருக்கும் ஒரு சிப் வைன் கொடுத்தாள், கசப்பாக, குமட்டிக் கொண்டு வந்தது. “வீட்ல யாரும் இல்லைன்னு ரொம்ப ஆடாதடி,” என்றாள் அவள் தங்கை. இது பற்றி சொன்னால் என்ன செய்வான்?

சமையலறை விளக்கை அணைத்துவிட்டு படுக்கையறைக்குச் சென்று விட்டாள். டிவியை அணைத்துவிட்டு பெட்ரூம் கதவு வரை சென்றவன் திரும்பி ஹாலுக்கு வந்து, தொலைகாட்சியின் திரையில் தெரியும் தன் பிம்பத்தை பார்த்தபடி அமர்ந்திருந்தான். நேற்று அவளருகே சென்றது மிகப் பெரிய கேவலம், பழகிய செய்கைகளை அறியாதவள் போல் படுத்திருந்து பின்பு திரும்புகிறாள். செக்ஸ் மூலம் என்னை வீழ்த்த நினைக்கிறாள். எவனுக்கு வேண்டும், எல்லா பெண்களிடம் இருப்பதுதான் இவளுக்கும் இருக்கிறது. அவள் முயங்கியதில் ஒரு அலட்சியம் இருந்ததோ? இனி அவளாக அழைத்தால் கூட கலவியில் ஈடுபடக் கூடாது. இன்னொரு படுக்கையறையை உபயோகிக்கலாம் என்றால், அர்ஜுனுக்கு விவரம் புரியும் வயது வந்து விட்டது. மொபைலில் நேரத்தை பார்த்தான், அவள் உள்ளே சென்று அரை மணி நேரமிருக்கும், தூங்கியிருப்பாள். எழுந்தான். அவன் கதவைத் திறக்கும் சத்தத்தை கேட்டவள், அருகில் அவன் உடல் படுக்க கர்லான் பெட் எழும்பி அமிழ்வதையும் உணர்ந்தாள். கண்களை மூடியபடி இருவரும் விழித்திருந்தார்கள்.

oOo

கடற்கரைக்கு அருகாமையில் உள்ள பார்க்கின் முன்பு பைக்கை நிறுத்தினான். எப்போதும் போல்தான் அலுவலகத்திலிருந்து கிளம்பியிருந்தவன் இந்நேரம் இந்திரா காந்தி சிக்னலை அடைந்திருக்க வேண்டும். வண்டியை மீண்டும் இயக்கி முன்னும் பின்னுமாக நகர்த்தியபின் முடிவெடுத்து பார்க் செய்தவன் கடற்கரையை நோக்கி நடந்தான். பல ஆண்டுகளாக உள்ளே சென்று பார்க்க வேண்டுமென்று நினைத்திருக்கும் சட்டசபை வளாகம், புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கென திறக்கப்பட்டிருக்கும் உணவு விடுதிகள். அங்கு சென்று சாப்பிட வேண்டும் என்று முன்பு ஆசைப்பட்டிருக்கிறான். காந்தி சிலை வரை நடந்தவன் பீச்சிற்கு வந்திருந்தவர்களை கவனிக்க ஆரம்பித்தான்.

“பெஹேன்சோத்” என்று அந்த வடக்கத்திய பெண் முணுமுணுப்பாக திட்டும் ஆண் அவன் கணவனாக இருக்க வேண்டும். அவன் இவள் பக்கம் திரும்பவும், அருகிலிருக்கும் சிறுமியிடம் ஏதோ பேச ஆரம்பிக்கிறாள். முதல் முறை பெண் பார்க்கச் சென்றவளுக்கும் வடக்கதியவளைப் போல பருத்த மார்பகங்கள்தான். ஜாதகமும் பொருந்தி, அவளுடனான பத்து நிமிட தனிப் பேச்சும் பிசிறில்லாமல் சென்ற பின்பும், அந்த இடம் தகையவில்லை. கை புணர்ச்சியின்போது அந்த பெண்ணை தன்னுள் தோற்றுவித்துக் கொண்டிருந்தவன் திருமணம் முடித்து, கலவி சுரப்புக்களின் மணமும், இவனுடையை எச்சில் வாசமும் ஊறியிருக்கும் மனைவியின் சராசரி அளவிலான மார்பகங்களை உதடுகளால் வருடும்போது அவை அப்பெண்ணினுடையவையாக மாறி மீண்டும் முயங்க அழைக்கும். பெயர் மறந்து போய்விட்டவளின் துணைதான் இனி… ஆனால் திடீரென்று பாத்ரூமில் அதிக நேரம் செலவிட்டால் இவளுக்கு சந்தேகம் வரலாம், பதினான்கு வயதான மகனுடைய தந்தை செய்யக்கூடியதா இது? சக பணியாளர் சிலாகித்து தந்த நூலில் ‘நாற்பது வயதிலும் மாஸ்ட்ருபேட்டிங் பாஸ்டர்ட்ஸ்’ என்று படித்தது என்னளவில் உண்மையாகி விடும். வீடு திரும்பி உடை மாற்றிக் கொண்டிருந்தவனிடம் “சாப்பாடு எடுத்து வெக்கட்டா?” என்றாள். “நீங்க?”’, “நாங்க சாப்டாச்சு”, “நா வெளிலயே சாப்டுட்டேன்”.

“நான் லஞ்ச் வெளிலையே பார்த்துக்கறேன்,” என்று கூறிவிட்டு காலை ஏழு மணிக்கே கிளம்பினான். பீச்சில் காலை நடை செய்பவர்களை பார்த்துக் கொண்டிருந்தவன், ஐநூறு ரூபாய்க்கு என்ன சுவையென்றே பிடிபடாத உணவை உண்டபின் அலுவலகம் சென்றான். மாலை கடற்கரையில் சுயமைதுனத்தின் சாத்தியக் கூறுகள் பற்றி யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு எந்த விடையும் கிட்டவில்லை. “சாப்பாடு வெக்கட்டுமா?” என்று கேட்டவளைப் பார்த்து தலையாட்டியவன், அவள் முகத்தை கவனித்தான். எப்போதும் போல்தான் இருக்கிறாள். இல்லை, இது நடிப்பு, உள்ளூர நான் சாப்பிடுவதைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறாள். தினமும் வெளியே சாப்பிட பொருளாதாரமும், உடலும் ஒத்துழைக்காது என்பது அவளுக்கும் தெரியுமென்பதால் எழும் ஏளனம். ஒரு முறை மட்டும் சோற்றைப் போட்டு சாப்பிட்டபின் எழுந்து கொண்டவனிடம் எதுவும் கேட்காதவள், அவன் கையலம்பிக் கொண்டிருந்தபோது “நா மாடிக்கு போறேன், கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்,” என்றாள். அடுத்த நாள் இரவு வீட்டிற்குத் திரும்பியவன், “நானே போட்டு சாப்டுக்கறேன்,” என்றான். மறுநாள் அலுவலகம் முடித்து அவன் வந்தபோது அவள் மாடிக்குச் சென்று விட்டிருந்தாள்.

மாடியிலிருந்து முன்பு தெளிவாக காண முடிந்த ஆலமரம், அதனையொட்டிய ரெயில்வே ட்ராக், அதன் மறுபுறமுள்ள – மார்கழி பனியில் அசைவின்றி ஓவியம் போல் தெரியும் – தென்னை மர வரிசை எல்லாம் இப்போது வீடுகளால் மறைக்கப்பட்டு ஆலமரத்தின் உச்சியை மட்டும் காண முடிகிறது. குடி வந்த புதிதில் பம்பாய்க்கு போகும் ரெயில் ஏழு மணிக்கு இந்த இடத்தை கடக்கும்போது எழுப்பும் ஒலியால் விழித்த, எந்த அவசரமும் இன்றி மெதுவாக முயங்கிய ஞாயிறு காலைகள், அர்ஜுன் பிறப்பதற்கு பின் நிறைய முறை வந்தன. இப்போது இந்தப் பகுதி மொத்தமும் மின்சார இணைப்பு துண்டிக்கபட்டால் மட்டுமே ரயில் செல்லுமொலி கேட்கிறது.

மேரியை அழைத்தாள். “ரொம்ப வருஷம் ஆயிடுச்சேடி, நெறய புது ப்ராசஸ் வந்திருக்கு,” என்ற மேரியிடம், “ப்ரூப் ரீடிங்கூட ஓகேதாண்டி எனக்கு, அதுல என்ன சேஞ் இருக்கப் போகுது,” என்றாள்.

“அது என்ட்ரி லெவல் ஜாப்டி, நீ டீம் லீடா இருந்திருக்க, செட் ஆகாது”.

“அதெல்லாம் பிரச்சனையில்ல, ஒரு பேஜுக்கு என்ன தராங்க இப்ப”.

“பார்டி, பிப்டி இருக்கும், கண்டு பிடிக்கிற எர்ரர்ஸ பொறுத்து தான”

“அது போதுமடி”

“கேட்டுப்பாக்கறேன், ப்ரீலான்சிங் ஜாப் வாங்கி பண்ணலாம், ப்ரூப் ரீடிங் நீ வீட்லயே பண்ணலாம்”

“ஆபிஸ்கே வரேண்டி”

“ஏண்டி… எதாவது பிரச்சனையா”

“அதெல்லாம் இல்ல, வீட்லயே இருந்து இருந்து போர் அடிக்குது”

மேரி ஏதாவது ஏற்பாடு செய்வாள், அவள் இப்போது வேலை செய்யும் இடத்திலேயே கிடைத்தால் நல்லது. ஒவ்வொரு சிக்னலிலும் பச்சை விழுந்தபின் நின்றுகொண்டிருக்கும் வண்டிகளிலிருந்து எழும் நாராசமான ஒலிகூட வீட்டிலுள்ள மௌனத்தைவிட மென்மையானது. ஒரு நாள் இரவு முழுவதும் அலுவலகத்தில் சும்மாவேனும் தங்கிவிட்டு வர வேண்டும். இவனிடம் காரணம் சொல்லக் கூடாது. அன்றிரவு எதற்காக தங்கினான் என்று சொல்லத் தோன்றாதவனுக்கு என்னை கேட்க என்ன உரிமை? என்னிடம் மறைக்குமளவிற்கான விஷயம் எதுவும் இருக்க முடியாது.

மேரியுடன்தான் கேண்டீனுக்கு எப்போதும் செல்வாள். அங்கும் தன்னிடம் பேசிச் செல்பவர்களை கவனித்தபடி, “என்ட்டையா பேச வராங்க, ஒன்ன லுக் வுடனும் அதான்,” என்பாள் மேரி. பிறந்த நாளுக்கு அலுவலக காவலாளியிடம் பொம்மை கொடுத்தவன் யார் என்று இறுதி வரை இவளால் கண்டு பிடிக்கவே முடியவில்லை “தெரியாது மேடம், இங்க இருந்தது,” என்று செக்யுரிட்டி மீண்டும் மீண்டும் சொன்னார். இவன்தான் சைட் அடித்ததைப் பற்றி சொல்லியிருக்கிறான். அதுதான் செய்ய இயலும், காதலிக்கிறேன் என்று ஒரு பெண்ணிடம் அப்போது சொல்லியிருக்கவோ, அடல்டரி தீர்ப்பைப் பற்றி கிண்டலடித்தாலும் இப்போது மணவுறவை தாண்டிய பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளவோ, தைரியம் கிடையாது.

oOo

“ப்பா, பேப்பர்காரர் வந்திருக்கார்.” என்று மகன் சொன்னான். சென்ற மாதத்திற்கான பேப்பர் பணம் தந்த, பத்து பதினைந்து நிமிடங்களில் “ப்பா பால்காரர்”, அதன் பின் அபார்ட்மென்ட் மெயின்டெனன்ஸுக்காக முதல் தளத்தில் வசிக்கும் யுவராஜ். எப்போதும் முதல் அல்லது இரண்டாம் தேதி மாத செலவுக்கான பணத்தை கொடுத்து விடுபவன் இந்த மாதம் ஐந்தாம் தேதி வரை தரவில்லை. என்னிடம் கேட்பதற்கு பதில், அவர்களை ஞாயிறன்று வரச் சொல்லியிருக்கிறாள். திமிர் பிடித்த நாய், இத்தனை வருடம் என் பணத்தில் வாழ்ந்து விட்டு இப்போது ரோஷம் வருகிறது. மளிகை பொருட்கள் வாங்க என்னிடம்தான் எப்படியும் வர வேண்டும்,

புதன் காலை மலம் கழித்து விட்டு ப்ளஷ் செய்யும் போதுதான் கவனித்தான். வெஸ்டர்ன் டாய்லெட்டின் அடி விளிம்பில் மஞ்சள் நிறக் கோடுகள், மேற்பகுதியில் ஒட்டிக் கொண்டிருக்கும் சிகப்பு நிற மலத் துகள்கள். ஞாயிறன்று டாய்லெட்டை சுத்தம் செய்பவள் ஸ்ட்ரைக் செய்வதாக நினைக்கிறாள் போல். இவள் கருவுற்றிருந்தபோதும், குழந்தை பிறந்த ஒரு வருடம் வரைக்கும்கூட நான்தான் இதை செய்து வந்தேன். ஹார்ப்பிக்கை டாய்லெட்டினுள் ஊற்றியவன் பிரஷ்ஷை எடுத்தான்.

இப்படி அரைகுறையாக சுத்தம் செய்வதற்கு பாதி ஹார்பிக்கை வீணடித்திருப்பான். துணிகளை அடுக்கி வைத்தால் ஒரு வாரத்திற்கு மேல் நிலைப்பதில்லை, சட்டைகளுக்கு நடுவே ஜட்டி, பெர்முடாக்களுக்குள் சாக்ஸ் என்று எல்லாவற்றையும் மீண்டும் முறையாக அடுக்கி வைக்க மணி நேரம் ஆகிறது. அர்ஜுன் பாத்ரூமையும் சுத்தம் செய்வானா என்று அவனிடம் கேட்க வேண்டும்.

உடையணிந்து தயாராகிக் கொண்டிருந்தவனிடம், “ப்ரோவிஷன்ஸ் இன்னும் நாலஞ்சு நாள் தான் வரும்,” என்றாள். என்னாயிற்று இவளுடைய சுயமரியாதை, உடை வேண்டாமென்றவள் இதை மட்டும் கேட்கிறாள். ஷர்ட்டை டக் செய்து பெல்ட் போட்டுக்கொள்ளும் வரை எதுவும் சொல்லாதிருந்தவன், “நானே வாங்கிடட்டுமா” என்றபடி பர்ஸை பேண்டினுள் திணித்தபடி, அறையை விட்டு வெளியேற ஆரம்பிக்க, “உங்கிஷ்டம்”, என்றவள் சொன்னவுடன் திரும்பினான். என்னால் வாங்கி வர முடியாதென்று எண்ணும் அவளுடைய ஏளனப் பார்வை. தண்டச் சோறு உண்ணும்போதே இவ்வளவு அகங்காரம். “ஈவினிங் சொல்றேன்”

இடது காலில் சாக்ஸ் அணிந்த பின், ஷூவை எடுத்தான். திமிர் வழியும் இவள் முகத்தை சுவற்றில் வைத்துத் தேய்த்து, ஷூவினால் அடித்து வீட்டை விட்டு துரத்த வேண்டும். குக்கரிலிருந்து சோற்றை எடுத்து மேடையின் மீது வைத்தாள். அவ்வப்போது காய்கறி வாங்கி வருவதைத் தவிர என்ன தெரியும் இவனுக்கு. மாலை சொல்கிறானாம், எப்படியும் என்னிடம்தான் பணம் தருவான். அப்படியே இவன் மளிகைப் பொருட்கள் வாங்கினால் அன்றுடன் உலகம் அழிந்து விடும்.

டைனிங் டேபிள் மின்விசிறியின் கீழ் ஆற வைக்க, இடுக்கியில் சோற்றுப் பாத்திரத்தை பிடித்தபடி சமையலறையிலிருந்து வெளியே வரும்போது, ஒரு கையில் ஷூவும் மற்றொன்றில் சாக்ஸுமாக எதிரே இருந்த சுவற்றை வெறித்தபடி அமர்ந்திருந்தவனைக் கண்டு நின்றாள். இரண்டு நாட்களுக்கு ஒரு முறைதான் சாக்ஸை மாற்றுவான், அவற்றை தோய்ப்பதற்காக எடுக்கும்போது குமட்டும். பெர்ஸனல் ஹைஜீன் என்பதே கிடையாது. இங்கிருந்தே அவன் மீது ஏனத்தை வீசலாம், அருகே சென்று சுடு சோற்றை கவிழ்த்தால் தரையில் கொஞ்சமும் சிந்தாது. இடுக்கியிலிருந்து நழுவிய பாத்திரத்தை இறுக்கிப் பிடித்தவள் நடக்க ஆரம்பித்தாள்.

ரமேஷ் பிரேதனின் ‘சாராயக்கடை’: வான்மதி செந்தில்வாணன் அறிமுகம்

வான்மதி செந்தில்வாணன்

தொகுப்பு _ சாராயக்கடை
ஆசிரியர் _ ரமேஷ் பிரேதன்
வெளியீடு _ உயிர்மை

மரக்கிளையில் தானாகக் கனிந்த கனியின் சுவையானது அவற்றைப் பதப்படுத்திக் கனியச்செய்வதைக் காட்டிலும் அலாதியானது. அதுபோல ஒரு படைப்பானது தன்னைத்தானே படைத்துக்கொள்வதென்பது தனிச்சிறப்பு. அத்தகைய தனித்துவம் ததும்பும் படைப்புகள் மட்டுமே கலை இலக்கிய உலகில் வெற்றிவாகை சூடுகின்றன.

கவிஞன் ரமேஷ் பிரேதனின் “சாராயக் கடை” கவிதைத் தொகுப்பானது டிசம்பர் 2008 ல் உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இத்தொகுப்பைக் கையிலெடுக்கையில் சாராயக்கடை என்ற பெயர்ப்பலகை மாட்டப்பட்ட கூடத்திற்குள் நுழைவதைப் போலிருந்தது. பிரெஞ்சு ஆதிக்கத்திற்கு ஆட்பட்டிருந்த புதுச்சேரி நிலத்தில் அயோக்கியன், காமுகன், பயங்கரவாதி எனப் பெயர் பெற்ற ஒருவனுக்குள்ளிருந்து எழும் கூக்குரல்களும், கூச்சல்களும் கவிதைகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. தனக்கு வாய்த்த சூழியல் அனுபவங்களின் கருத்து சாரங்கள் மற்றும் தனது கற்பனை வளம் ஆகியவற்றைக் கொண்டு உருவமைக்கப்பட்ட இத்தொகுப்பானது வாசகருக்கு வேண்டுமட்டும் நனையக் கிடைத்த சாராயச் சாரலென திருப்தி கொள்ளலாம்.

சாராய வாசனை பிடிக்காதவர்களுக்கு அதை நெடியாகத்தான் நுகர இயலும். மாறாக, பருகிப் பழக்கப்பட்டவருக்கோ அது அமிர்தம். ஒரு படைப்பு எவ்வாறு தன்னைத்தானே படைத்துக்கொள்கிறதோ அதுபோல் இத்தொகுப்பில் பாரபட்சம் எதுவுமின்றி சாராயம் தன்னைத்தானே எதார்த்தமாக எழுதிக் கொண்டுள்ளது என்பது மறுக்க இயலாத உண்மை. ஒவ்வொரு கவிதையாய் உள்வாங்குகையில் மனம் ஒருவித உச்சகட்டத் தாக்கத்திற்கு உள்ளாகிறது. கவிஞர், சிந்தனையை அதன் போக்கில் ஓடவிட்டு தன் சார்ந்த அவலங்களையும், ஓலங்களையும், வலிகளையும் எவ்வித நெருடலுமின்றி அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்துள்ளார். தனது தவிர்க்க இயலாத அனுபவங்களைத் திரட்டி ஒரு நிதானப்பட்ட எழுத்தினை வாசகர்களுக்கு வாசிக்கத் தந்துள்ளார்.

கவிதை வரிகள் ஒவ்வொன்றும் சிக்கனத்துடன் ஒருவித அழகியலோடும், பொருட்செறிவோடும் புனைவு பெற்றிருப்பதாலும், எளிமையான மொழி மற்றும் சொற்கட்டமைப்பைக் கொண்டிருப்பதாலும் கவிதைக் களத்தில் சஞ்சரிக்கும் உத்தியானது இங்கு பாந்தமாகக் கையாளப்பட்டிருப்பதாகக் குறிப்பிடலாம். இவரது கவிதைகளில் எதார்த்தங்களும், எதார்த்தத்தை மீறிய அணுகுமுறைகளும், எதார்த்தத் தத்துவங்களும் பொதிந்து வைக்கப்பட்டுள்ளன.

oOo

ஒரு பிரெஞ்சு ஆதிக்கச் சமூகத்தில் பாலின வேறுபாடு எதுவுமின்றி அதிகப்படியான வயது வித்தியாசத்துடன் கூடிய பாலியல் வன்புணர்வு, பாலியல் சீண்டல்கள் மற்றும் பாலியல் சுரண்டல்கள் உள்ளிட்ட பாலியல் துன்புறுத்தல்களுக்கு நிர்பந்திக்கப்படுகிற ஒரு பதின்வயதுப் பாலகனின் உளக்குமுறல்களின் பிரதிபலிப்போடு துவங்குகிறது தொகுப்பின் முதற்கவிதையான “சாக்லேட் நகரம்”.

“………………….
எனக்குப் பன்னிரண்டு வயது
என் அம்மா வீட்டுவேலை செய்துவரும்
வெள்ளைக்காரப் பெண்மணிக்கோ
நாற்பது வயது
விதவையா விவாகரத்து ஆனவரா
ஞாபகமில்லை
இரவில் என்னை வீட்டோடு வைத்துக்கொள்வார்
…………………………………
நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது
ஒரு வெள்ளைக்காரக் கிழவனால் புணரப்பட்டேன்
ஒரு வாரத்திற்கும் மேல்
பின்புறத்தில் வலியிருந்தது
பெரிய பிரெஞ்சு சாக்லேட்டைக் கொடுத்தார்
எனது பதின் பருவத்தில் என்னை
பிரான்சுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி
அறுபது வயது மதிக்கத்தக்க
வெள்ளைக்காரக் கிழவி
படாதபாடுபடுத்தினார்
எனது முகத்தில் அவரின்
மூத்திரவாடை எந்நேரமும் கமழும்
…………………………………………”

அனைத்து சீவராசிகளும் இயல்பூக்கத்தின் காரணமாகவோ அல்லது தீவிர மன அழுத்தத்தின் தாக்குதலிலிருந்து கூடுமானவரை விரைந்து விடுபடவோ அவ்வப்போது புணர்வில் ஐக்கியமாவது அவசியமாகிறது. ஒரு மனிதன் தன் வயிற்றுப் பசிக்கென புணர்ச்சி கொள்வதென்பது தவிர்க்க இயலாத நிகழ்வாகிவிடுகையில் அவன் தன் மனதை அதற்கென வலிந்து பழக்கிக்கொள்ளத் துணிந்துவிடுகிறான்.

மேலும் தன் பதின் வயதைப் பசியின்றி கடத்துவதற்கு இடப்புறம் மட்டும் வளரும் மார்பும், அச்சிறு வயதிலேயே அளவுமீறிய வளர்ச்சியுடைய அவனது குறியுமே காரணமாக அமைவதென்பது எவ்வளவு பரிதாபத்திற்குரியது! அத்தகையதொரு வாழ்வை ஏற்றுக்கொண்டு தனது நாட்களைக் கடத்தும் அவனது மனநிலையின் ஸ்பரிசங்களை கவிதை வரிகள் நம்முள் இயல்பாக கடத்துகின்றன. தனது வாழ்வின் அடிமைத்தனத்தையும், தான் நேசிக்கும் வெள்ளைப் பெண் தனது காதலை நிராகரிக்க அவனது கறுப்புநிறமே காரணமெனும் உளப்பிரேமையினையும் பெருவலியுடனும், பேரேக்கத்துடனும் எடுத்தியம்புவதாக வரிகள் அமையப்பெற்றுள்ளன. கவிதையில் காமத்தினூடே மென்மையான காதல் ஒருவித குமுறலோடு இழையோடுகிறது. இக்கவிதை முழுக்க அநேகக் காட்சிகள் நிர்வாண அடுக்கமைவு கொண்டவையாகவும், வக்கிரம் ததும்பும் ஆதிக்க மக்களின் பெருங்கூச்சல்களோடும் விரிகின்றன.

oOo

நினைவுகளை அசைபோடுவதென்பது மனிதர்களின் வாழ்வில் தவிர்க்க இயலாத ஒன்றாகவே இதுநாளதுவரை தொடர்கிறது. நமக்கு விருப்பமான சில நினைவுகளை அசைபோடுகையில் உடன் நமது கற்பனைகளும் சேர்ந்து அந்த இனிமையான நிமிடங்களை மேலும் களைகட்டச் செய்கின்றன. நமக்கு விருப்பமான நிகழ்வுகளை எண்ணிக்கொண்டே காலம் கடத்துகையில் வாழ்நாட்கள் வெகுவிரைவாகத் தீர்ந்துபோகின்றன அல்லது உற்சாகமாகக் கரைந்துவிடுகின்றன. மாறாக, நாம் வெறுக்கும் அல்லது ஒதுக்கும் நினைவுகள் அவ்வப்போது மேலெழும்புகையில் அவைகளின் தலைதட்டி அப்போதைக்கு மனக்குழியின் ஆழத்திற்குள் தள்ளும் உத்தியை நாம் திறம்பட தெரிந்துவைத்திருக்கிறோம் ஒருநாள் அவை விஸ்வரூபமெடுக்குமென அறிந்திருப்பினும்கூட. அப்படியானஅனுபவம் வாய்ந்த ஒரு இறந்தகால சிலிர்ப்பூட்டும் நிகழ்வுதான் இங்கு கவிதையாக்கம் பெற்றுள்ளது.

“வாழ்ந்த நினைவுகளை
அசைபோட்டபடி வாழ்ந்து கொண்டிருக்கிறான்
குறுக்காக ஒரு வெள்ளைப் பசு
சாலையைக் கடக்கிறது
உணவகத்தின் வாசலில் வைத்துக் கறக்க
சைக்கிள் கேரியரில்
வைக்கோல் திணித்த கன்றோடு
அவன்
வாழ்ந்த நினைவுகளை அசைபோட்டபடி
வாழ்ந்துகொண்டிருக்கிறான்
சாலையைக் குறுக்காகக் கடக்கிறான்
பசுவைப் பின்தொடர்ந்து”

முதலிலிருந்து தொடங்கி ஒவ்வொரு வரியாய் வாசித்துக்கொண்டே வருகையில் ‘மடி கனக்கிறது’ என்ற வரியில் நமது மொத்த அசைவும் நின்றுபோகிறது. உண்மையில் உணர்வானது மனம் முழுக்க சுரந்து வழிகிறது. கன்றினை இழப்பது அல்லது பறிகொடுப்பதென்பது கிட்டத்தட்ட மடி அறுந்து விழுவது போலத்தான். ஒரு கன்றானது பிறப்பின்போதோ அல்லது பிறந்த சில தினங்களிலோ உயிர்துறக்க நேரும்போது அதனது தோல்களை உலரச்செய்து பதப்படுத்தி பின்பு அதனுள் வைக்கோல் திணிக்கப்பட்டு கிட்டத்தட்ட கன்றைப்போலவே ஒரு பொதி உருவாக்கப்பட்டு பால் கறக்கவென உபயோகப்படுத்தப்படும். பசுவின் தாகமும் சரி உரிமையாளரின் தாகமும் சரி இவ்வாறுதான் தீர்க்கப்படுகிறது. இவ்வாறான நினைவு நிச்சயம் வலிகூட்டக்கூடியதுதான். கடைசி இரு வரிகளில், நினைவுகளின் பின்னே அவன் ஓடும் நிகழ்வில் அவ்வளவு அழகாய்ப் பிறக்கிறது இக்கவிதை. நல்லதொரு உளவியற்பாங்குடனும் அளவான சொற்பிரயோகத்துடனும் நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ள வரிகள் இவை. நமது வாழ்வில் மிகத் தரமான அழுத்தப்பொதிகளை அவ்வப்போது எண்ணிப்பார்க்கையில் இப்படியொரு சிறப்பில் யதார்த்த அடித்தளத்துடன் கூடிய நற்பாங்கான கவிதை அமையப்பெறுவது சாத்தியமாகிறது. இத்தொகுப்பைக் கையிலெடுக்கும்போதெல்லாம் முதலில் இக்கவிதையினை வாசித்தபிறகே மற்ற கவிதைகளில் கவனத்தினை அனுமதிக்கிறது மனம்.

oOo

“தாமரைப் பூக்குளம் அழகு
அழுகி அமிழும் பூவின்
மரணம் குறித்து யாருக்கும்
கவனமில்லை

புதிய பூ மறுநாள் காலை
குளம் தேடுகிறது
நேற்று செத்த மகளை”

ஒரு தாய் தன் குழந்தையைத் தொலைக்கவோ அல்லது பறிகொடுக்கவோ நேர்கையில் அவளது உள்ளத்தின் பதைபதைப்புகள் தாங்கவொண்ணாத மனவேதனையினை அவளது எஞ்சிய வாழ்நாள்களுக்கு அனிச்சையாய்க் கடத்தி விடுகிறது. கவிஞரது இக்கவிதையில் , அனுதினமும் காலையில் மலரும் தன் மகளைப் பறிகொடுத்தபடி தவிக்கும் குளமானது நிதானமாக ஒரு தாய் ஸ்தானத்தில் இருத்தப்படுகிறது. ஆக, குளத்தில் இருப்பது வெறும் தண்ணீரல்ல, முழுக்க முழுக்க கண்ணீர் என்று கதறும்படியான எண்ண அலைகள் மனதினுள் சுழன்றடிக்கின்றன. உண்மையில் வாடிய மலர்கள் பற்றி யாருக்கு என்ன கவலை? ஒருவேளை அம்மரமும், மலரும் வேண்டுமானால் வருத்தப்படலாம்.

பொதுவாக நமது எண்ணங்களிலும் , செயல்களிலும் வாடிய மலர் என்பது குப்பையாகவோ அல்லது கழிவாகவோ ஒருவித எதார்த்தத்துடன் சுதந்திரமாக அனுமதிக்கப்படுகிறது. ஆனால் கவிஞர் அம்மலரை ‘செத்த மகள்’ எனக் குறிப்பிடுகையில் அவை மட்டுமே நமது சிந்தனையை ஆக்கிரமிப்பு செய்து அதன்பின் பலவித கிளை ஓட்டங்களுக்கு வழிவகை செய்கிறது.

முதல் நான்கு வரிகள் மிகச் சாதாரணமாக இருப்பினும் தொடர்ந்து வரும் மூன்று வரிகள் வாசகரிடையே அசாதாரண கவன ஈர்ப்பைப் பெறுகின்றன. இக்கவிதையைப் பொறுத்தமட்டில் முதல் நான்கு வரிகள் கழிவு பெற்றிருப்பினும் கூட அடுத்ததான வரிகளில் தெளிவான மற்றும் ஆழமான புரிதலை உள்வாங்கியிருக்க இயலும். இறுதி மூன்று வரிகள் ஹைகூ வடிவில் தோற்றம் பெற்றிருப்பினும் ஹைகூவாகக் கருத இயலாது. இம்மூன்று வரிகளை எண்ணிக்கொண்டு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உறைந்துபோய் உட்கார்ந்திருக்கலாம். அது ஒரு வாசகனுக்குக் கிடைக்கும் பொன்னான நேரத்தைச் சார்ந்தது மட்டுமன்றி கவிதையினூடாகப் பயணிக்கவென அவனுக்கு வாய்க்கும் மனநிலையையும் பொறுத்தமைகிறது.

oOo

சர்வமும் சாராயமென்கிறார் கவிஞர்.

“மாமது போற்றுதும்” எனும் கவிதையின் இறுதியில், ஒரு தாய் தன் மகனிடம் கூறுவதாக, “அப்பாவைக் கலக்காமலேயே சாராயத்தால் உன்னைக் கருத்தரித்தேன்” எனும் வரிகள் இடம் பெற்றுள்ளன. இது சாராயத்தின் மீது தீராக்காதல் கொண்ட கவிதை என்று எண்ணத் தோன்றுகின்றதே தவிர இந்நிகழ்வு எப்படி சாத்தியம் என்றெல்லாம் ஆராயத் தோன்றவில்லை. இப்படியான சில புலகாங்கிதங்களை உள்வாங்க முடிகிறதே ஒழிய உணர்வுகளை முழுக்க முழுக்க வார்த்தைகளால் எடுத்தியம்ப இயலவில்லை.

“சாத்தானும் கந்தசாமியும்” எனத் தலைப்பிட்ட கவிதையானது புதுமைப்பித்தனின் “கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்” எனும் சுவராஸ்யம் ததும்பும் சிறுகதையினை நினைவூட்டுகிறது. கதையில், குழந்தை கதாபாத்திரமான வள்ளி கடவுளைப் பார்த்து “ஆட்டம் தெரியாமே ஆட வரலாமா?” என்று எழுப்பிய வினாவிற்கு ஆட்டவிதிகளைப் பற்றிய வர்ணனைகளை இக்கவிதை எடுத்தியம்புவதாக அமைந்துள்ளது. குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால் சாராயம் குடிப்பதற்கான ஆட்டநெறி.

ஆண்டானுக்கும், அடிமைக்குமிடையே அறம் ஒரு ஊறுகாய் மட்டையெனில் தோல்வியுற்ற நபருக்கென கடவுள் சாராயக்கடையில் ஊறுகாயோடு காத்திருப்பதெனும் கூற்றானது அறத்தோடு காத்திருப்பது என்றாகிறது. ஆனால்,ஒரு ஆட்டம் வெற்றியில் முடிந்தாலோ அல்லது தோல்வியைத் தழுவினாலோ பாடுபொருளான சாராயமே அறம் என்கிறது இத்தத்துவார்த்தக் கவிதை. இப்படியாக இவரின் பெரும்பான்மையான கவிதைகள் அயோக்கியனாக வாழத்தெரிந்த யோக்கியதை மட்டுமே பழகிக்கொண்டுள்ள ஒரு யோக்கியனின் கூற்றுகளாக ஒலிக்கின்றன. மேலும் எவ்வித போலித்தனமுமற்ற சுய பிதற்றல் இவரது கவிதைகளில் மிகுந்து காணப்படுகிறது.

இன்னும் இத்தொகுப்பில் ‘போகமார்க்கம்’, ‘பீர்பாட்டில்’, ‘சூன்யபோகம்’, ‘எலி’, ‘புறவழிச்சாலை’, ‘சிதை’ போன்றதலைப்புகளில் இடம்பெற்றுள்ள கவிதைகளில் ததும்பும் உள்ளுயிர்ப்பின் தாக்கம் மிகுந்து காணப்படுகிறது.

’நத்தையின் வரலாறு’ எனும் தலைப்பிலமைந்த கவிதை தவிர்த்து பிரேதன், யவனிகா ஸ்ரீராம் , கரிகாலன், இத்தியாதி, இத்தியாதி பெயர்களை இடையீடாகக் கொண்டமைந்த கவிதைகள் வாசிப்பில் சற்று அயற்சியை ஏற்படுத்துகின்றன. புத்தக வாசிப்பென்பது இன்றியமையாத இக்காலகட்டத்தில் “நகர்வு” என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. ஆகவேதான் ஒரு வாசகன் , சமகால வாசிப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். பொதுவாக எல்லா படைப்பாளிகளையும் வாசகர்களென்றோ, எல்லா வாசகர்களையும் படைப்பாளிகளென்றோ கூறிவிட இயலாது. ஒரு தரமான படைப்பாளி என்பவன் ஒரு தரமான வாசகனென்று உறுதியாகக் கருதலாம்.

ஒரு படைப்பாளியின் தனியொரு படைப்பை வாசிப்பதன் மூலம் அவரது எண்ண ஓட்டங்களின் மொத்த பரிமாணங்களையும் அளவீடு செய்வதென்பது இயலாத காரியம். அவரது மொத்த படைப்புகளின் ஆழங்களுக்குள் ஊடுருவுகையில் வாசகருக்கு ஒரு நூலளவு பிடிப்பு கிடைக்கப்பெறலாம். இருப்பினும் , நாம் வாசிக்கும் சில நூல்கள் நம் மனதின் உள்ளடுக்கில் தாக்கத்தினை உண்டுசெய்வதால் அவை பற்றி எழுதும் உந்துதல்கள் நம்முள் எழுவது இப்படியாக சாத்தியமாகிறது.

எம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’- வெ. சுரேஷ் விமரிசனம்

எம்.கோபாலகிருஷ்ணன் அவர்களை தியாகு புத்தக நிலைய நண்பர்கள் ஒரு நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் சொல்வனம் இதழுக்காக ஒரு பேட்டி எடுத்தோம். அப்போதே, அவரது ‘மனைமாட்சி,’ நாவல் மிக விரைவில் வெளிவரும் என்ற தகவலும், அது பற்றிய ஒரு சிறு குறிப்பும் அதில் இடம்பெற்றன. ஆனால், ‘மனைமாட்சி,’ அதற்குப்பின் மிகவும் காலம் தாழ்த்தி, இந்த ஜூலை மாதத்தில்தான் வெளியாகி இருக்கிறது. ஆசிரியரின் பணிச்சுமை, இடமாற்றம், போன்றவை காரணமாக இவ்வளவு காலதாமதமாகி விட்டது என்று அறிந்தேன். நாவல் வெளிவரத் தாமதமாகும் காரணத்தாலேயே அதன் மீதான எதிர்பார்ப்பும் கூடிக் கொண்டே வந்தது. கோபாலகிருஷ்ணன், தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். அவரது இரு நாவல்களான, ‘அம்மன் நெசவு’ம் ‘மணல் கடிகை’யும் விமர்சகர்களால் தமிழின் முக்கிய படைப்புகள் என்று அடையாளம் காட்டப்படுபவை. அவரது சிறுகதைகளும் சோடை போனதில்லை. தவிர, மொழிபெயர்ப்புகளும் செய்திருக்கிறார். ஆனாலும், அவர் இன்னமும் அதிகம் எழுதியிருக்க வேண்டியவர் என்பதே இலக்கிய வாசகர்களின் எதிர்பார்ப்பு. இவையெல்லாம் சேர்ந்து இந்த நாவலுக்கு மிகுந்த எதிர்பார்ப்பினை உண்டாக்கியிருந்தது. அவ்வளவு ஆவல், எதிர்பார்ப்புகளுக்கிடையில் அவரது இந்த ‘மனைமாட்சி’ நாவலை வாசித்து முடித்தேன்.

இது நிறைய கேள்விகளை மனதில் எழுப்பும் புத்தகம். முதல் கேள்வி, ஏன் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத மூன்று நாவல்களை ஒரே புத்தகமாக போட்டிருக்கிறார்கள் என்பது. எல்லாமே இல்லறம், அதாவது மனைமாட்சி சம்பந்தப்பட்டதாக இருப்பதால் என்று வைத்துக் கொள்ளலாம். மேலும்,இந்த ஒவ்வொரு நாவலிலுமே இரண்டு கதைகள் உள்ளன. அதுவும் ஏன் என்று கேள்வி வந்தது. அவற்றை ஏதோ ஒரு சின்ன நூலிலாவது கட்டி ஆசிரியர் தொடர்பு ஏற்படுத்திவிடுகிறார். அதனால் அவை ஒரே நாவலாக முன்வைக்கப்படுவதில் ஒரு நியாயம் இருக்கிறதென்று வைத்துக் கொள்ளலாம்.

ஒரு வியப்பூட்டும் அம்சமாக, இந்த நாவல்களைப் படித்துக் கொண்டிருக்கும்போது மனதில் உடனடியாக தோன்றுவது, திஜா.வின் ‘அன்பே ஆரமுதே’, லக்ஷ்மியின் ‘தேடிக் கொண்டே இருப்பேன்’, சிவசங்கரியின் ‘அடிமைகள்’, போன்ற நாவல்கள் மற்றும் மணிரத்னத்தின் ‘மௌன ராகம்’, பாக்யராஜின் ‘அந்த ஏழு நாட்கள்’, போன்ற திரைப்படங்கள். இன்னும் நிறைய வணிக நாவல்களின், தொலைக்காட்சி கேளிக்கை நெடுந்தொடர்களின் தருணங்களும் ‘மனைமாட்சி’ நாவலை வாசிக்கும்போது ஆங்காங்கே நிழலாடுகின்றன.

முதல் நாவல் ஒரு தொலைக்காட்சி நெடுந்தொடருக்குத் தோதான நாவல். இதில் இரண்டு கதைகள் சொல்லப்படுகின்றன- ஒன்று, மகா பொறுமைக்கார தியாகு, மகா கொடுமைக்கார சாந்தி இவர்களின் புயலடிக்கும் குடும்பக் கதை. இன்னொன்று, வைத்யநாதன் என்ற மராத்திய (சவுராஷ்டிர?) பிராமணர் இளவயதில் திருமணம் ஆகி, அந்தப் பெண்ணுக்கு (ராஜம் பாய்) தொழுநோயோ என்று பயந்து அவளைக் கைவிட்டு (குடும்பத்தினரின் வற்புறுத்தலால்) இன்னொரு திருமணம் செய்து கொண்டு நல்லபடியாக வாழ்கையில், முதல் மனைவி நன்றாக இருப்பதைக் கேள்விப்பட்டும் அவளாகவே தொடர்பும் கொண்டதாலும், கும்பகோணம் சென்று அவருடன் மீண்டும் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் கதை. இந்த இரண்டு கதைகளுக்கும் என்ன சம்பந்தம், ஏன் அவை ஒரே கதையாக சொல்லப்படுகின்றன என்றால், வைத்யநாதனின் மகள் ரம்யா தியாகுவின் முன்னாள் காதலி, தியாகுவின் இளம்பருவத்து தோழனும் இப்போது அவனுக்கு எல்லாவிதத்திலும் உதவி புரிபவனுமான செந்திலின் மனைவி.

ரம்யா -தியாகு காதல் செந்திலுக்குத் தெரியும், தியாகு இடையில் டிராக் மாறி, சாந்தியை கல்யாணம் செய்து கொண்டதும் தெரியும். இவர்களின் இன்னொரு நண்பன் குமரேசன், ரம்யாவின் அண்ணன் வைத்யநாதனின் மகன். செந்திலுக்கும் ரம்யாவுக்கு நடந்தது, காதல் திருமணமா அல்லது பிராமணர் அல்லாத செந்திலுக்கு ரம்யாவை மணம் செய்து வைக்கும் அளவுக்கு வைத்யநாதன் குடும்பத்தினர் அவ்வளவு புரட்சி மனப்பான்மை கொண்டவர்களா? இரண்டு பெண்களுக்கு ரம்யா, காயத்ரி, என்று பெயர் வைத்திருக்கும் ஒரு மராத்தி அல்லது சவுராஷ்டிர பிராமணர் குடும்பத்தில் மகனுக்கு குமரேசன் என்று பெயர் வைப்பார்களா? தியாகு என்ன சாதி என்று சொல்லும் கதாசிரியர், செந்தில், சாந்தி எல்லாம் என்ன சாதி என்று ஏன் சொல்வதில்லை போன்ற கேள்விகளையெல்லாம் புறந்தள்ளி விட்டு கதைக்குள் போனால், கீழே உள்ளவற்றை மேலும் கேள்விகள் கேட்காமல் நம்ப வேண்டியிருக்கிறது.

வேலையே கதி என்றும் வீட்டில் என்ன நடக்கிறது என்றும் தெரியாத அடிமையான தியாகு, திடீரென்று எல்லாம் அறிந்த சாந்திக்குத் தெரியாமல் மகள்களுக்கு கோவை ஸ்கூலிலிருந்து டி.சி. வாங்குவது, ஐதராபாத் பள்ளியில் அட்மிஷன் வாங்குவது, தாங்கள் ஊருக்கு கிளம்பும்போது, பாலில் தூக்க மாத்திரை கலந்து சாந்திக்குக் கொடுப்பது, பின் விழித்து எழும் சாந்தி, தான் கைவிடப்பட்டதை அறிந்து தற்கொலை செய்து கொள்ள தூக்க மாத்திரை சாப்பிட்டதும், பொறுப்பாக, கரெக்ட்டாக, அவள் அம்மாவுக்கு போன் செய்வது, அவர்கள் ‘வசந்த மாளிகை’ க்ளைமாக்ஸ் காட்சி போல சரியான நேரத்தில் வந்து காப்பாற்றுவது (ஆம், இங்கேயும், அந்தக் காட்சியில் மழை உண்டு, நிச்சயமாக); பின் இவர்களின் இளைய மகள் மீனா ஐதராபாத்தில், திடீரென்று, “அம்மா எப்பப்பா வருவாங்க?” என்று கேட்பது, பக்கத்து வீட்டுப் பெண் வயதுக்கு வந்தவுடன், தன் பெண் வயதுக்கு வரும்போது என்ன செய்வோம் என்று தியாகு கலங்குவது எல்லாவற்றையும் எந்தக் கேள்வியும் இல்லாமல் படித்து முடித்துவிட்டால், தியாகுவுக்கும் சாந்திக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் வைத்தியநாதனுக்கும் அவரது முதல் மனைவி ராஜம் பாய்க்கும் கண்ணீர்விட்டு துக்கப்படலாம். இடையில், கால் ஊனமான, பலவீனமான, ரம்யா, தன் கணவன் தியாகுவின் கைகால்களையே அவ்வப்போது உடைத்துப்போட்டு உட்கார வைக்கும் பலம் வாய்ந்த சாந்தியின் வீட்டுக்கு வந்து அவளுடன் கைகலப்பில் ஈடுபட்டு அவளையே வீழ்த்தும் ஒரு சண்டைக்காட்சியும், பின், சாந்தி மொத்த ஆடைகளையும் அவிழ்த்துவிட்டு தெருவில் ஓடி விடுவேன் என்று பாதி ஆடையை அவிழ்த்துக் கொண்டு தியாகுவை மிரட்டும் (ஏற்கனவே சாந்தி சிறு வயதில் அப்படி செய்திருக்கிறாள்) திகில் காட்சிகளும் உண்டு.

இரண்டாவது நாவல், என்ன வகை என்றே தெரியாமல், வாயடைக்கச் செய்யும் விதத்தில் அமைந்திருக்கும் படைப்பு. என்னால் அதை வகைப்படுத்தவே முடியவில்லை. சற்றும் ஒட்டவுமில்லை. இதிலும், சற்று ‘மௌன ராக’த்தின் சாயல் உண்டு என்றாலும், இடம்பெறும் மனிதர்கள், நடக்கும் சம்பவங்கள்- எல்லாம் எங்கோ நம்பகத்தன்மைக்கு அப்பால் தலைக்கு மேலே பறந்து கொண்டு இருக்கிறார்கள்/ இருக்கின்றன. எனவே, இதைப் பற்றி ஒன்றும் சொல்லவே தோன்றவில்லை எனக்கு.

மூன்றாவது நாவல், கல்யாணம் முடிந்த மறுநாளே, கணவனிடம் விவாகரத்து கேட்கும் துவக்கத்தில், ‘மௌனராகம்’ வகை, முடியும்போது, “சாரே, எண்ட காதலி நிங்ஙள் பெண்டாட்டி ஆகலாம், பட்ச்சே, நிங்ங்கள் பெண்டாட்டி, ஒரு போதும் எண்ட காதலி ஆகிட்டில்லா,” என்று சம்பந்தப்பட்ட காரெக்டர் சொல்லாவிட்டாலும், ஆசிரியர் சொல்லிவிடும்,‘அந்த ஏழு நாட்கள்’ வகை. இடையில் வழக்கம் போல வரும் இரண்டாம் கதையில் ஒரு (கல்யாணமான) குட்டியை ஏகப்பட்ட குட்டன்கள் காதலிக்கிறார்கள், குட்டி யாருக்கு என்று ஒருபோதும் ஊகிக்க முடியாமல் கதையை முடிப்பதில் மன்னன்கள் என்று ஜேஜே சொல்லும் வகை. இந்த ஏகப்பட்ட கூட்டங்களில், முதல் கதையின் நாயகனும் உண்டு என்பதுதான் இரண்டு கதைகளுக்கும் உள்ள சம்பந்தம்.

முதல் கதை தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தை இந்நாள் கணவனா அல்லது முன்னாள் காதலனா, என்று அந்தப் பெண்ணுக்கே பெண்ணே தெரியாமல் மலைக்கும் புரட்சி வகையும்கூட. இரண்டு ஆண்கள் ஒரு ஓரு பெண்ணை மணந்து கொண்டு குடும்பம் நடத்தி பின் விலக்கம் ஏற்படும் பா. ராகவனின் ‘ரெண்டு’ நாவலில்கூட, அந்தப் பெண்ணுக்கு தனது குழந்தையின் தகப்பன் யாரென்று தெரிகிறது. இது அதையும் தாண்டிய புரட்சி. இதிலும் சில பாத்திரங்களின் மொழி சாதி போன்றவை தெளிவாக சொல்லப்படுகின்றன, சில பாத்திரங்களது சொல்லப்படவில்லை. சொல்லப்படுவதால் என்ன தெரிகிறது, சொல்லப்படாததால் என்ன மறைக்கப்படுகிறது, அதில் என்ன லாஜிக் என்றும் எனக்குப் புரியவில்லை.

இக்கதைகளை ஏன் தீவிர இலக்கிய வகையில் வைத்துப் பேச வேண்டி இருக்கிறது, மாத இதழ்களில் வரும் நாவல் என்று ஏன் சொல்லக் கூடாது என்று இயல்பாகவே ஒரு கேள்வி எழுந்தது. அதற்கான பதில்களில் முதன்மையானது, இந்நாவலாசிரியரின் முந்தைய நாவல்களின் தரம். நான் யோசித்ததில் இரண்டாவதாக எனக்குத் தோன்றிய காரணம், அவற்றில் இடம் பெறாத சில அம்சங்கள் இதில் இருப்பது. உதாரணமாக, உரையாடல் முடியும்போது பக்கத்தில் இருந்த மைனா பறந்தது, எதிர்வீட்டுச் சிறுவன் சிரித்தபோது அவன் முன்பற்களைக் காணவில்லை, அந்தச் செடி அப்படி வளைந்து நின்றது, என்றெல்லாம் விவரிக்கும் வரிகளும், கதைமாந்தர்கள் குடிபுகும் அடுக்கக வீடுகள் அதற்கு முன்பு என்னவாக இருந்தன, கோவை அன்னபூர்ணா காபியின் சுவை, மாதிரியான அசலான தகவல்கள் கொட்டிக் கிடப்பதும் பெண் பாத்திரங்களின் உடல் மணம், கூந்தல் மணம், அவர்கள் உபயோகிக்கும் சோப், ஷாம்பூ எல்லாம் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றியெல்லாம் ஓடும் ஆண் பாத்திரங்களின் மனவோட்டங்களும்தான் என்று தோன்றுகிறது. இவற்றையெல்லாம் சேர்த்து ஒரு புகழ் பெற்ற பதிப்பகம் மூலமாக பிரசுரித்தால் அது முக்கியமான தீவிர இலக்கிய புத்தகம் ஆகிவிடும் என்ற நம்பிக்கை வருகிறது. இதில் புத்தகத்தை வெளியிடும்போதே படித்துவிட்டு யாரும் எந்தக் கருத்தும் சொல்வதற்கு முன்னமே அந்த பதிப்பகம் அதை CLASSIC என்று அட்டையில் போட வேண்டியதும் மிக முக்கியமானது. போலிருக்கிறது. இன்று ஒரு படைப்பின் உள்ளடக்கத்தைவிட, அதை யார் வெளியிடுகிறார்கள் என்பதை வைத்தே அது தீவிர இலக்கிய வகையா அல்லது வெகுஜன எழுத்தா என்று தீர்மானிக்கப்படும் ஒரு நிலை வந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அண்மைக்காலமாக வெளிவரும் பல படைப்புகளும் அதிகம் காட்சி ஊடகங்களால் பாதிக்கப்பட்டவை போலவே தோன்றுகின்றன. ஒரு வகையில், நம் எழுத்தாளர்கள் எல்லோருக்குமே சின்னத் திரை அல்லது பெரிய திரையில் பிரகாசிப்பதற்கான ஆர்வம் அதிகமாகியிருப்பதால், எழுத்தும் சுலபமாக ஒரு வணிக நெடுந்தொடர் அல்லது கேளிக்கைத் திரைப்படம் எடுக்கத் தோதாக மாறி வருகிறதோ என்றும் தோன்றுகிறது. இன்னும் ஒரு முக்கியமான விஷயம், இன்று வாரப் பத்திரிக்கைகளில் தொடர்கதை எனும் வெகுஜன எழுத்துவகை முற்றிலும் அழிந்துவிட்ட சூழலில், அவற்றுக்கும், தீவிர இலக்கிய படைப்புகளுக்கும் இடையேயான வேறுபாடும் அழிந்து கொண்டே வருகிறதோ என்று நினைக்க வைக்கிறது. உதாரணமாக, ஒரு மகரிஷிக்கும் அசோகமித்திரனுக்கும், ஒரு தாமரை மணாளனுக்கும் வண்ண நிலவனுக்குமான வித்தியாசத்தை, பேரைக் கொண்டல்லாது எழுத்தைக் கொண்டே கண்டுபிடிக்கும் நிலையில் இன்றைய இளம் வாசகர்கள் இருக்கிறார்களா என்று கேட்க வேண்டியிருக்கிறது. இந்த நாவல்கள், முன்பு ஓரளவு வெற்றிகரமாக எழுதிக்கொண்டிருந்த எஸ். பாலசுப்பிரமணியம் என்பவரின் எழுத்தை எனக்கு நினைவுபடுத்தியது. கோபாலகிருஷ்ணன், இதைவிட இன்னும் மிகச் சிறப்பாக எழுதக் கூடியவர். அவர் இடையில் சற்று நீண்ட இடைவெளி விட்டுவிட்டதால், இந்தத் தடுமாற்றம் ஏற்பட்டிருக்கிறதோ என்று சந்தேகமாக இருக்கிறது. இந்தக் காலகட்டத்திலேயேகூட அவரது சில சிறுகதைகளின் தரத்தைக் கொண்டு நோக்குகையில், மீண்டும் அந்த பழைய ஃபார்முக்கு வந்துவிடுவார் என்ற நம்பிக்கையும் எனக்கிருக்கிறது.

இறுதியாக, இங்கு நம்பகத்தன்மை என்னும் ஒரு விஷயத்துக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதோ, ஏன் இது போன்ற சம்பவங்கள் நடக்காதோ என்று கேட்பவர்களுக்கு, மார்க் ட்வெயினின் இந்த வரிகளைத் தருகிறேன்: “The only difference between reality and fiction is that fiction needs to be credible.” ஆம், நிஜத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். அதன் புனைவடிவம் ஒரு கலைப் படைப்பாக மாற வேண்டுமென்றால் நிஜமாக நடந்ததென வாசகனை நம்ப வைப்பதில் அது வெற்றி காண வேண்டும்.

ஆட்கொல்லி – க. நா. சுப்ரமண்யம் முதற்பதிப்பிற்கான முன்னுரை

க. நா. சுப்ரமண்யம்

ஏதோ ஒரு உறவினர் வீட்டுக் கல்யாணத்துக்குப் போனபோதுஅங்கு பிள்ளை வீட்டாருடன் உற்றார் உறவினர் என்று சொல்லிக் கொண்டு அதிகம் பேர் வந்திருக்கவில்லை என்று கவனித்தேன். ஏன், என்ன என்று விசாரித்தபோது ஒரு உண்மை தெளிவாயிற்று. அவர்கள் பணக்காரர்கள்; பணம் சேர்க்கிற காரியத்தில் மும்முரமாக இருந்த அவர்கள் உற்றார் உறவினர் நண்பர்களை லக்ஷ்யம் செய்யாதது மட்டுமில்லை, உற்றார் உறவினர் நண்பர்களை நசுக்கியே பணம் சேர்த்தார்கள். ஆகவேதான் ஒரு முக்கியமான கட்டத்தில் அவர்களை எல்லாரும் கைவிட்டு விட்டார்கள் என்று அறிந்து கொண்டேன். “ஆட்கொல்லி” என்று பணத்தைச் சொல்வதற்கு ஒரு புது அர்த்தம் அங்கு காணக் கிடைப்பது போலப் பட்டது எனக்கு. சாதாரணமாக பணத்திடம் ஈடுபாடுள்ளவனை, அவனுடைய நல்ல தனங்களைக் கொன்றுவிடும் பணம் என்றுதான் இதற்கு வியாக்கியாயனம் செய்வார்கள். ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் பணம் சுற்றத்தைக் கொன்றுவிட்டது என்பதனாலேயும் அதற்கு ஆட்கொல்லி என்கிற பெயர் பொருந்தும் என்று தோன்றிற்று எனக்கு.

என் மனத்தில் பல வருஷங்களாக ஊறிக் கிடந்த இந்த விஷயத்தை வெளிக்கொணர சென்னை அகில இந்திய ரேடியோவில் பணியாற்றும் என் நண்பர் டி. என். விசுவநாதன் எனக்கு உதவினார். ரேடியோவில் வாராவாரம் வாசிக்க ஒரு நாவல் வேண்டுமென்று அவர் கேட்டபோது இதை எழுதித் தந்துவிடுவதாக ஒப்புக்கொண்டேன். நாவலை சுலபமானதாக, சம்பவங்கள் நிறைந்ததாக, சுலபமாக வாரா வாரம் பின்பற்றக்கூடிய சுவாரசியமான தொடர்கதையாக அமைக்க விரும்பவில்லை நான். ரேடியோ மூலமும் கனமான கருத்துள்ள, ஆழ்ந்து கவனிக்க வேண்டிய நாவல் ஒன்று வெளியிட்டுவிட வேண்டும்- சமூக சித்திரம் என்று முன்பு எழுதிய ஒரு லேசான கதைக்குப் பரிகாரமாக என்று எனக்குத் தோன்றியது. அப்படியே செய்தேன். அதற்கு வாய்ப்பளித்த என் நண்பருக்கு நன்றி.

தொடர்கதை படிக்கும் ரஸிகர்கள் பெருகப் பெருக நாவல் கலை தேய்ந்து கொண்டுதான் வரும். அது தவிர்க்க முடியாத இலக்கிய விதி, தொடர்கதையும் நாவல்தானே என்று கேட்பது இலக்கியத்தின் அடிப்படைகளை அறியாததால் எழுகிற கேள்வி. தொடர்கதை என்பது இலக்கியத்தில் ஒரு தனி ரகம். நாவல் என்பது தனி ரகம்.

நாவல்தான் உயர்ந்தது என்று நான் சொல்வதை, படிக்க முடியாததுதான் உயர்ந்தது என்று நான் சொல்வதாக எண்ணிக் கொண்டு கேலி செய்யலாம். சந்தர்ப்ப விசேஷங்களினால் நல்ல நாவல்கள் சிலவும் தொடர்கதைகளாக வெளிவந்ததுண்டு. இருந்தாலும் நாவல்தான் இலக்கியக் கலையிலே இந்தக் காலத்தில் முதல் பிரிவு, கவிதைகூட இன்று பின்னர் வருகிற பிரிவுதான் என்கிற திடமான அபிப்பிராயம் உள்ளவன் நான்.

இந்த நாவலில் உருவாகிற வேங்கடாசலத்தையோ , ஜானகியையோ, மருமானையோ, ஏன், கண்ணப்பனையோகூட நான் அனுதாபத்துக்கோ, கோபத்துக்கோ, வெறுப்புக்கோ உரிய பாத்திரமாக நினைத்து சிருஷ்டித்துத் தரவில்லை. உங்களுக்கோ எனக்கோ பிடிக்கிறது என்பதற்காக இது இப்படி இல்லை. பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இது இப்படித்தான் என்கிற ஒதுங்கி நிற்க முயலும் ஒரு சிருஷ்டி தத்துவத்தைக் கடைபிடித்துத்தான் நான் இந்த நாவலை எழுதினேன். சில சமயங்களில் மனிதனின் பலஹீனம் கலைஞனின் திடத்தை அசைத்து விடுகிறது. அந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில், “இப்படி நேர்ந்துவிட்டதா? அடடா! இனிமேலாவது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்,” என்று எண்ணிக்கொண்டு மேலே முயற்சி செய்ய வேண்டியது கலைஞனின் கடமை. இந்த மாதிரி பலஹீனம் இந்த நாவலைப் பற்றிய வரையில் கடைசிக் கட்டத்தில் ஒரு இடத்தில் வந்து விட்டதாக எனக்குத் தோன்றுகிறது. வேங்கடாசலத்தின் ஒரு மருமான் கல்யாணத்துக்கு வந்திருக்கிறான். இன்னொரு மருமான் சமையல்காரனாகப் பெண் வீட்டார் வீட்டில் வேலை செய்ய வந்திருக்கிறான் என்று நான் முடிக்கிற இடம் தொடர்கதை ரஸிகர்களுக்கு என்று ஏற்பட்ட மெலோட்ராமா (Melodrama). அதிகப்படுத்திக் கூறல், கோயின்ஸிடென்ஸ் (Coincidence)என்கிற வகையைச் சேர்ந்து விட்டது. அதை நான் மாற்ற முயலவில்லை. அப்படித்தான் வந்தது, போகட்டும், என்று விட்டுவிட்டேன்.

இந்த ஒதுங்கி நிற்கிற தத்துவ விஷயத்தில் உலகத்தில் பெரிய கலைஞர்கள், சிருஷ்டி கர்த்தாக்கள் எல்லோரும் ஒன்றுதான். அதை விவாதிக்க, விவாதித்து முடிவு கட்ட, இது இடமல்ல; ஓரிரண்டு கோடிகள் மட்டும் காட்டுகிறேன். ஹாம்லெட்டைப் பற்றி கவிஞன் நம்மை அழச் சொல்கிறானா? அனுதாபப்படச் சொல்கிறானா? கோவலன்- கண்ணகி முடிவைப் பற்றி எண்ணி நம்மைச் சிலப்பதிகார ஆசிரியன் கண்ணீர் உகுக்க எங்காவது சொல்லி இருக்கிறானா? பின்னர் எழுந்த நாடகங்களையும், நடுக்கால ஐயோ அந்தோ பரிதாப வியாக்கியானங்களையும் வைத்துக்கொண்டு சொல்லாதீர்கள். “கடவுள் போல் மறைந்து சிருஷ்டிக்குப் பின் ஒதுங்கி நின்று நகத்தைக் கிள்ளுவதில் ஈடுபட்டிருப்பவன்தான் கலைஞன்,” என்பது முப்பது வருஷங்களுக்கு முன் ஜேம்ஸ் ஜாய்ஸ் எழுதிய வாக்கியம். “கண்ணீர்த்துளி வர உள்ளுருக்குதல்,” கலையின் ஒரு கோடிச் செய்கை. அசைந்து கொடுக்காமல் ஒதுங்கி நிற்கச் செய்வது கலையின் மறு கோடி. இதுவரையில் இலக்கிய உலகில் மிகப் பெரியவர்கள் என்று சொல்லக்கூடிய ஒரு நாலைந்து பெர்வழிகளுக்கே கைவந்த கலை அது.

இந்த ஆட்கொல்லிச் சிந்தனையை வேறு ஒரு கோணத்திலிருந்து பார்த்து இன்னும் ஒதுங்கி நின்று, சிந்திக்க வேண்டும் என்ற ஆசை எனக்குண்டு. இன்னும் பத்து வருஷங்களில் கைகூடலாம் அது. அவசரம் ஒன்றுமில்லையே?

திருவனந்தபுரம், 25.3.57.

க. நா. சுப்ரமண்யம்

 

(நன்றி: சிறுவாணி வாசகர் மையத்துக்காக, பவித்ரா பதிப்பகம், 24-5, சக்தி மஹால், சின்னம்மாள் வீதி, கே.கே. புதூர் (P.O), கோவை – 641038. siruvanivasagar@gmail.com., 94881 85920/ 99409 85920)