எழுத்து

பேசுகிற கலப்பை -மலையாளம் மூலம்- பொன்குன்னம் வர்க்கி [ 1910 –2004] ஆங்கிலம் : நாராயண மேனன் தமிழில் : தி. இரா. மீனா

தி. இரா. மீனா

காளை என்று வருகிற போது, அவுசுப் சேட்டன் எல்லாவற்றையுமே மறந்து விடுவார். மற்ற விவசாயிகள் அவரை ’காளை பைத்தியம்’என்று அழைப்பார்கள். கண்ணனைப் பார்த்து அதியசப்படாத ஒரு விவசாயிகூட இல்லை. கண்ணன்தான் அவரது வாழ்க்கை. சாம்பல் நிறம், உறுதியான உடல்கட்டு, குள்ளம், வளைந்த கொம்பு, வடிவான கூனல், விரைப்பான தோல், பெரிய கண்கள், கண்ணனின் நடைகூட விசேஷமானதுதான். நடவு வயல், மற்றும் பிற இடங்களிலும் அவுசுப்பின் மனதில் என்ன இருக்கிறதென்பதைச் சிறிதும் சந்தேகமின்றி கண்ணன் புரிந்து கொள்வான். கருவிப் பட்டறை அல்லது வயல்வெளி என்று எந்த இடமாக இருந்தாலும் அவுசுப்பின் மனதில் என்ன ஓடுகிறதென்பது கண்ணனுக்கு நன்றாகத் தெரியும்.

கண்ணன் மேல் ஒருபோதும் அவுசுப் சாட்டையைப் பயன்படுத்தியதில்லை. அதை லேசாக உயர்த்துவார். மற்ற விவசாயிகளைப் போல, குரலுயர்த்தி தன் காளையை அழைப்பது, அது இது என்றெல்லாம் அவர் செய்ததில்லை. ஒரு சிநேகிதனிடம் பேசுவதைப் போலத்தான் அவர் கண்ணனிடம் பேசுவார். எவ்வளவு காளைகள் இருந்தாலும், அவைகளுக்கு கண்ணன்தான் தலைவன். வயலின் ஒரு பகுதியை உழுத பிறகு, அடுத்த பகுதிக்கான தூண்டுதல் அவனுக்குத் தேவையில்லை. அவை எப்படி, எப்போது செய்யப்பட வேண்டுமென்று அவனுக்குத் தெரியும். சில சமயங்களில், அடுத்த வயலுக்குள் அவன் காலெடுத்து வைக்கும் போது, அவுசுப் அவனிடம் ஓய்வு வேண்டுவார். “ஏய், கொஞ்சம் பொறு. நான் வெற்றிலை போட்டுக் கொள்கிறேன். போட்டு ரொம்ப நேரமாகிவிட்டது.”

அதைக் கேட்டவுடன், கண்ணன் நின்று விடுவான். வெற்றிலை போட்டுக்கொண்ட பிறகு, ’ஹூம்’ என்று அவுசுப் குரல் கொடுக்க,கண்ணன் மீண்டும் வேலையைத் தொடருவான். வயலின் ஒரு பகுதியில் இருந்து அடுத்த பகுதியில் கால் வைக்கும் போது எவ்வளவு கவனமாக அவன் வரப்பைக் கடப்பான்! அவனுடைய குளம்புகள் வரப்புகளில் பதியாது. ஒரு குதியலில் அவைகளை எப்படிக் கடப்பதென்ற கணக்கு அவனுக்குத் தெரியும்.

தன்னிடம் சொல்லப்பட்டவற்றை அவன் நன்றாகப் புரிந்து கொண்டிருப்பதால் அவனைக் கட்டிப் போட வேண்டிய அவசியமில்லை. உழவு வேலை முடிந்த பிறகு, சுதந்திரமாக மேய அவன் அனுமதிக்கப்படுவான். அப்படிச் சுதந்திரமாக விடும்போது அவுசுப், “போய் ஏதாவது சாப்பிட்டு உன் வயிற்றை நிரப்பிக் கொண்டு வா. வாழை மரங்கள் மீது கண் போடாதே,” என்று எச்சரிக்கை செய்வார். கடும் உழைப்போடும் கவனத்தோடும் பயிரிடப்பட்டிருக்கும் வாழை மரங்கள் அல்லது இளம் தென்னங் கன்றுகள் ஆகியவற்றை கண்ணன் ஒரு போதும் தொட மாட்டான். அவற்றை அழிப்பதென்பது, அதைப் பயிரிட்டவர்களை கொம்புகளால் முட்டுவதை விடக் கொடுமையானதென்று அவனுக்குத் தெரியும். அன்றைய உழவு வேலை முடிந்ததும், உடலில் இருக்கும் சேறு போகும்படி அவுசுப் தவறாமல் அவனைக் குளிப்பாட்டுவார்.

“இடது காலை இந்தப் பக்கம் உயர்த்து — ஏன் தலையை அசைத்துக் கொண்டேயிருக்கிறாய்? இங்கே பார், உன் கொம்புகள் என்னைத் தொட்டால் என்ன செய்வேன் என்று உனக்குத் தெரியும்! அசையாதே , பேசாமலிரு…”

அவுசுப்பின் ஒவ்வொரு வார்த்தையையும் கண்ணன் புரிந்து கொள்வான். ஆனால் கண்ணனுக்கு குறிப்பாக இந்தப் பேச்சு பிடிக்காது. குளிப்பதை அவன் வெறுத்தான். ஆனால் அவுசுப்பை பிடிக்கும் என்பதாலேயே அவன் பேசாமலிருந்து விடுவான். அன்பாலும் அரவணைப்பாலும் மனங்களை கவரத் தெரியாதவர்கள், “மோசமான எந்தக் காளை மாட்டை அவுசுப்பிடம் விட்டாலும், அவர் கையால் தரும் ஒரு வேளை உணவைச் சாப்பிட்டுவிட்டு, அது ஒரு வித்தியாசமான மாடாகி விடும்.” என்று சொல்வார்கள். அவர் அவைகளிடம் மிக இயல்பாகப் பேசுவார். தன் காளைக்காகத் தீவனம் தேடியலைவதிலேயே நாளின் பெரும்பான்மைப் பொழுது போய்விடும். கால்நடைகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்த தடுப்புச் சட்டம் பற்றிப் பேசினால், அவர் தன் பொறுமையை இழந்து விடுவார். ”கால்நடைகளைக் காப்பாற்றுங்கள், நாம் கால்நடைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று எல்லோரும் வகுப்பெடுக்கின்றனர். எந்தச் சபையிலிருந்தாவது அரசாங்கம் ஒரு பிடி அரிசியையாவது கொடுக்கிறதா? உங்கள் கால்நடைகளை உங்கள் தாடியால் காப்பாற்ற முடியுமா? ” என்று கேட்பார்.

கண்ணனுக்கு தீனி கொடுத்து முடித்த பிறகுதான் அவுசுப்பின் பசி தணியும். கால்நடைகள் பசியோடிருந்தால், குடும்பம் அழிந்து விடும் என்று நம்பினார். மரவள்ளியின் தண்டை கண்ணனுக்குக் கொடுக்கும்போது அதை நன்றாக மசித்த பிறகுதான் கொடுப்பார். அல்லது, அன்னாசி கொத்தைக் கொடுக்கும் போது முட்களை நீக்கி விட்டு, இலைகளைத் துண்டுகளாக்கிக் கொடுப்பார்

வயலில் சுற்றித் திரிந்து விட்டு கண்ணன் காம்பவுண்டிற்குள் நுழைந்த கணத்தில் “ஏ, கண்ணா” என்று குரல் கொடுத்தால், அவரது குரலைக் கேட்ட நொடியில் அங்கேயே நின்று விடும். அவுசுப் தன்னருகே வரும்வரை தலையைத் நிமிர்த்திக் கொண்டு காத்திருக்கும். கை நிறைய பசும்புல் அல்லது இரண்டு மூன்று வாழைப்பழத் தோல் –இப்படி ஏதாவது சின்ன பரிசோடு அவுசுப் அவனருகில் போவார். அன்பாக நீவி விடும் போது கண்ணன் அவரை நக்கத் தொடங்குவான். அந்த உப்பான வியர்வை கண்ணனுக்கு மிகவும் பிடித்தமானது.

எந்தக் கூட்டத்திலிருந்தாலும் அவுசுப்பின் குரல் கண்ணனுக்குக் கேட்டுவிடும். அதைக் கேட்டவுடன் இடியோசை கேட்ட மயிலாய் குதூகலிப்பான். வயலில் அவுசுப்தான் கலப்பை ஓட்ட வேண்டும் என்று விரும்புவான். அவுசுப் தவிர மற்றவர்கள் வந்தால் தன் கைவரிசையைக் காட்டுவான். அதைத் தடுப்பதற்கு, அவுசுப் வந்துதானாக வேண்டும்: “வேண்டாம் கண்ணன், இது நம்முடைய குட்டப்பன்தான். உனக்கு அவனைத் தெரியாதா என்ன?” என்று அவுசுப் சமாதானப்படுத்துவார். வயல்களில் ஓர் ஆலாபனை–வார்த்தைகளோ அல்லது வாக்கியங்களோ இல்லாத ஆலாபனை. அவுசுப் வானத்தை எட்டுமளவிற்கு குரலை உயர்த்தி அழகாகப் பாடுவார் :“ ஹோ… ஓ…ஓ… ஒன்றிரண்டு நிமிடங்கள் அந்த மெல்லிசை மிகத் தெளிவாக நிற்கும். அது, காதல் பாடல்களிலிருக்கும் இன்னிசை போல இருக்கும் குறிப்பாகச் சொல்லப் போனால் அது தெய்வீகமான பாடல் அல்லது ஆயர்பாடி இன்னிசையாக இருக்கும்.அவுசுப் பாடத் தொடங்கும் போது, கண்ணன் தன் நோய், வேதனை, வேலை எல்லாவற்றையும் அந்த இசையில் மறந்து விடுவான்.

கழுத்தில் இருக்கும் மணிகளும், குளம்புகளும் மண்ணில் புதைந்து தாளத்தை ஏற்படுத்தும். ஒரு நாள் வேடிக்கையான சம்பவம் ஒன்று நடந்தது. லேசான காய்ச்சல் இருந்ததால் அவுசுப் வீட்டில் படுத்திருந்தார். அவுசுப்பின் காளை மாடுகள் இல்லாமல் அண்டை வீட்டு பச்சனால் அன்று தன் வயலில் வேலை செய்ய முடியாது. அதனால் அவுசுப் கண்ணனையும், அவன் துணையையும் அனுப்பியிருந்தார். கண்ணனும், அவன் துணையும் மற்ற காளைகளோடு வயலுக்குள் நுழைந்தனர். பச்சன் ஒரு சுற்று உழுது முடித்துவிட்டான். இரண்டாவது சுற்றை ஆரம்பித்தவுடன் பச்சனுக்கு பாட வேண்டுமென்ற ஒரு வேகம் வந்து விட்டது; கண்ணனின் பின்னாலிருந்து ஒரு ராகத்தின் ஆலாபனையை ஆரம்பித்தான். இசை பற்றியெதுவும் தெரியாத அவனுக்கு ஏன் பாடவேண்டுமென்ற ஆசை வந்தது ?அவனுக்குப் பாடவேண்டும் என்ற ஆசை. அவ்வளவுதான். பரிதாபமாக அந்த இசை தொடங்கியவுடன், கண்ணனுக்கு வெறுப்பு வந்துவிட்டது. தன் எதிர்ப்பைக் காட்டுவதற்காக ,தன் தலையை இரண்டு புறங்களிலும் வேகமாக ஆட்டினான். பச்சன் இதை கவனிக்கவேயில்லை; அவன் தான் நன்றாகப் பாடுவதாக நினைத்துப் பாடிக் கொண்டிருந்தான். இசையைப் பொறுத்தவரை, தாங்கள் எவ்வளவு மோசமாகப் பாடுகிறோம் என்பதைக் கலைஞர்கள் உணர்வதில்லை. வெளிப்படையாகவே கண்ணன் தன் வெறுப்பைத் தொடர்ந்து காட்டிய போதும் பச்சன் பாட்டை நிறுத்தவில்லை. பச்சனின் நண்பர்களைப் பொறுத்தவரை, உலகத்தின் எல்லா ராகங்களும் அவர்களுக்கு ஒன்றுதான். கண்ணனுக்கு எந்த அனுதாபமும் அவர்களிடமிருந்து இல்லை. பச்சன் இசையை அவமதித்து விட்டான், கண்ணன் அவனது இடது காலில் ஓங்கி ஓர் உதை உதைத்தான். மூன்று நாட்கள் அந்தக் கலைஞன் வீட்டிலிந்து ஓய்வெடுக்க வேண்டியதாயிற்று.

பன்னிரண்டு வருடங்கள் கண்ணன் ஓய்வின்றி அவுசுப்பிற்காக உழைத்தான். பல வசந்தங்களும், இலையுதிர் காலங்களும், பனியும், குளிரும் என்று பல பருவங்கள் வந்து போயின. வீராப்புடன் தங்களைக் காட்டிக் கொள்ளும் வகையில் அரசாட்சி செய்தவர்களின் மகுடங்கள் பிரஜைகளின் முன் கீழே விழுந்தன. நம்பமுடியாத மாற்றங்கள் ஏற்பட்டன. அரசின் புதிய அமைப்பில்— மனிதன் மனிதனைச் சுரண்டக்கூடாது –என்பது போன்ற மகிழ்ச்சியான வாசகங்கள் எழுப்பப்பட்டன. ஆனால் தன் அன்புக்குரிய காளைகளை விற்க அவுசுப்பிற்கு சில கட்டுப்பாடுகளிருந்தன. ஏற்கனவே தன் அதிர்ஷ்டத்திற்குரிய நெல் வயலை அவர் அடமானம் வைத்திருந்தார். அதை விருப்பப்பட்டு வைக்கவில்லை. வேறு வழியில்லை, ஒரு தகப்பன். திருமண வயதைக் கடந்து விட்ட மகளின் அன்புத் தந்தை. மாப்பிள்ளை வீட்டார் ஏழையாக இருந்த போதும் மூவாயிரம் ரூபாய் வரதட்சணையாகக் கேட்டனர், தன் வயலை ஆயிரத்து ஐந்நூறு ரூபாய்க்கு அடமானம் வைத்து, வரதட்சணையைச் சமாளித்தார். ஆனால் திருமணச் செலவுகளுக்கு அதிகப் பணம் தேவையாக இருந்தது. அதனால் தனக்கு மிக அருமையானவைகளாக இருந்த காளைகளை விற்பதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லாமல் போனது.

இருபது வருடங்களாக கடுமையாக உழைத்த, நன்கறியப்பட்ட விவசாயி. ஆனால் என்ன பயன்? முடி நரைத்து விட்டது. கண் பார்வை மங்கிவிட்டது. எந்தக் கத்தியும் சதையைத் துளைக்க முடியாத அளவிற்கு அவர் கைகள் உழைப்பால் உரமேறியிருந்தன. சுருக்கங்கள். வாத நோய் சார்ந்த தொல்லைகள். அவரால் என்ன செய்யமுடியும்? ஐயாயிரம் ஆண்டு பழமையான நிலத்தில் அவர் உழைத்துக் கொண்டிருந்தார். மண் வளம் இழந்து விட்டது. எந்த உரமுமில்லை. கடைசியில் அவுசுப் ரிக் வேத பாடல்களின் நிலைப்பாட்டை நாடினார். தன் நிலத்தைக் காக்குமாறு மேகம், தண்ணீர், மலை, காற்று என்று எல்லா கடவுளரையும் வேண்டினார். பயனற்றுப் போன அந்த நீண்ட கால வழிபாடுகளிலிருந்து அவர் இன்னும் மீட்சி அடையவில்லை. ஆனால் கடைகள் அதிகரித்ததால் சுரண்டல்களின் வழியும் பலவாயின. இவ்வாறு அவரை அவமதிக்கும் நிகழ்வுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போனது.

கண்ணனை விற்ற போது அவுசுப் அந்த இடத்தில் இல்லை . விலைப் பத்திரத்திற்கான கட்டணத்தைப் பெறவேண்டியிருந்த போதிலும் அவர் கண்ணீரோடு அந்த இடத்தை விட்டுப் போய்விட்டார். எவ்வளவு பணம் தந்தாலும் நிறுத்த முடியாத அழுகை அது. அந்த இடத்தை விட்டுப் போவதையே கண்ணன் வெறுத்தான். தன் தலையைத் தூக்கி தன் எஜமானன், தன் வாழ்க்கையின் வாழ்க்கையானவன் அங்கிருக்கிறானா என்று சுற்றிலும் பார்த்தான். ஏதோ தவறாக இருக்கிறதென்னும் பாவனையில் ஒன்றிரண்டு முறை தலையைக் குனிந்து கொண்டான். அந்த நேரத்தில் பலா மரத்தினடியில் நின்று, அவுசுப் அமைதியாக வார்த்தைகளின்றி தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தார். வார்த்தைகளையும், செயல் விளக்கங்களையும் அன்பு எதிர்பார்ப்பதில்லை. அன்பு, மனதின் துக்கம் என்பதை அவுசுப், கண்ணன் என்ற இருவர் போல யாரும் உணரமுடியாது. அவர்கள் தங்களின் துயரங்களை ஒருவரிடம் ஒருவர் சொல்லிக் கொள்ளவில்லை. அதனால் இரண்டு இதயங்களுக்குமே வலி மிக அதிகமாக இருந்தது.

தன்னுடைய சொந்த முகாமிலேயே ஆதரவற்றும், அவமதிப்பு செய்யவும் படுகிற ஒரு சிப்பாய் சில சமயங்களில் எதிரியைப் பார்க்க நேரிடலாம். தன் கிராமத்திலேயே கையற்றும் மதிப்பற்றும் போன சில விவசாயிகள் அறியாத, கேட்டிராத வயநாடு’ நிலங்களைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தனர். உறவினர்களையும், நண்பர்களையும் அணுக முடியாத நிலை. மலேரியா தன் கொடுமையைப் பரப்பிக் கொண்டிருந்த நேரம். “இவற்றை எல்லாம் தெரிந்து கொண்ட பின்பும், உன்னை அங்கே போக நாங்கள் அனுமதிப்போமா அவுசுப்?” என்று கேட்டார் பக்கத்து வீட்டுக்காரரான கிட்டு சார். மலபாரைப் பற்றியும் அவுசுப் விசாரித்துக் கொண்டிருந்தார்.

“நான் என்ன செய்வேன் கிட்டு சார்? உயிரோட்டமான ஒரு சிறு நிலத்தை எனக்குத் தாருங்கள். மண்ணின் மணத்தை என்னால் சுவாசிக்க முடியாதெனில் ,என் மனம் சாம்பலாகிவிடும்,” என்றார்.

அவுசுப்பின் வாழ்க்கை, வேதனையான ஒரு வாழ்க்கை, சலித்துப் போன சிறகாய் நகர்கிறது. அவருடைய மலபார் பயணம் தினமும் தடைப்படுகிறது. அது மட்டுமில்லை, தன்னிடம் இப்போது இருக்கிற ஏழு சென்ட் நிலத்தையும் நல்ல விலைக்கு விற்க விரும்புகிறார். இன்னொரு பிரச்னை, அவுசுப்பின் மகள் கேத்ரி கர்ப்பிணியாயிருக்கிறாள். தன் முதல் பேரக் குழந்தையையும், அதன் பிஞ்சு முகத்தையும் பார்க்க அவர் ஏங்குகிறார். ஈஸ்டரும் வரப்போகிறது. ஏழ்மையான கிறிஸ்தவர்களின் வீடுகளில் கூட இந்த நாள் மிக மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். ஒவ்வொரு அடுப்படியிலிருந்தும் சமைக்கப்பட்ட கறியின் அருமையான மணம் வெளிப்படும் நாள் இது. வாணலியில் பொரியும் அப்பங்கள், மயக்கம் தரும் வாசனையை எங்கும் பரப்பும். தேங்காய், கறிவேப்பிலை சேர்க்கப்பட்ட சூடான புழுக்கல் கறியின் மணம் எங்கும். இதுதான் மகிழ்ச்சி. இந்த நாளில் இவை இல்லாமல் கூட சில வீடுகள் இருக்கும். ஆனால் அவுசுப் எதற்காகவோ ஏங்கி அங்கே உட்கார்ந்திருந்தார். அருகிலுள்ள வயலில் யாரோ உழுது கொண்டிருந்தனர். உழவனின் அருமையான குரலையும் அவரால் கேட்க முடிந்தது. அது அவரது மனதை, ஒரு விவசாயியின் மனதை வருத்துவதாக இருந்தது. ஒட்டடை படிந்திருந்த, உயரத்தில் மாட்டியிருந்த தனது கலப்பையைப் பார்த்த போது நெஞ்சு கனத்தது. கண்ணனைப் போன்ற ஜோடிக் காளைகள், ஐந்தாறு ஏக்கர் நல்ல நிலம், இந்தக் கலப்பையின் பயன்பாடு இனி வாழ்க்கையில் அவருக்கு இன்னொரு முறை கிடைக்குமா ?அந்த மாதிரியான அதிர்ஷ்டமான நாள் தனக்குக் கிடைக்குமா என்று நினைத்தார்.

“எவ்வளவு நேரம் இப்படி இருக்கப் போகிறீர்கள்? நடந்தது நடந்து விட்டது. கோட்டயத்திற்குப் போகவேண்டாமா? மகளை அனுப்பி வைக்க வேண்டாமா? அப்பாவாக அதையெல்லாம் செய்ய வேண்டுமல்லவா?” மனைவி மரியா கேட்டாள்.

அடுத்த நாள் மகளை கணவன் வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும். அவளுக்குக் கொடுக்க வேண்டிய புது உடைகளை இன்னும் அவர் கொடுக்கவில்லை. கொடுக்க வேண்டாமென்பதில்லை; கையில் பணமில்லை. அவளுடைய மாமியாரும் நாத்தனார்களும் அவளைக் கிண்டலாகப் பேசுவார்கள். மகள்தான் தாயிடம் இதையெல்லாம் சொன்னாள். தாய் வீட்டிலிருந்து மூன்று துண்டு ஆடைகள், பாடிகள் அவளுக்குத் தர வேண்டும். மற்றவைகளை அவர் விட்டு விடலாம். அது பற்றி யோசிக்க வேண்டியதில்லை. அதற்காக கவலைப்பட்டுக் கொண்டிருந்த போது அதிர்ஷ்டம் ஒரு கோடாக அவர் பக்கம் வந்தது. மரியா தான் போட்டிருந்த இருபது ரூபாய் சீட்டோடு வந்தாள். அந்த சீட்டைக் கட்டுவதற்காக அவர்கள் ஒவ்வொரு அரிசியையும் மிக கவனமாகப் பயன்படுத்தி, தங்கள் வயிற்றைக் கட்டி வந்திருக்கின்றனர். மரியா அந்தப் பணத்தோடு அவரருகில் வந்தாள்.

அவரால் அதைச் செய்திருக்க முடியாது, ஆனால் அதை அவள் சாத்தியப்படுத்திவிட்டாள். கடைக்குப் போவதற்காக அவர் எழுந்தபோது, “அப்பா, ரவிக்கைத் துணி கொஞ்சம் கனமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்,” கேத்ரி எச்சரித்தாள்.

“நாம் இன்னும் நில வரி கட்டவில்லை. அதையும் கட்டி விடுங்கள்,” என்றாள் மரியா.

“நீ அரசாட்சியே செய்ய நினைப்பாய்,இதை வைத்துக் கொண்டு.” என்றார் அவுசுப்.

“நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், எனக்கு ஒரு துண்டு உடை வேண்டும். இடுப்பாடை கிழிந்து விட்டது,” என்றாள் மரியா.

“ஒன்று செய். நீயே போய் விட்டுவா. நான் அடுப்படியைக் கவனித்துக் கொள்கிறேன்.”

“அப்படியானால் உங்கள் தாடியையும் கொடுத்து விடுங்கள்,” என்று மரியா சொன்னாள்.

“ஆமாம், எனக்கு தாடி இருக்கிறது. ஆனால் கடன் தரும்படியான விவகாரம் எனக்குத் தேவையில்லை. உனக்கு தாடியிருந்தால், திருச்சபையில் நீ ஒரு ஆணைக் கூட விட்டு வைத்திருக்க மாட்டாய்,” என்று உறுமினார்.

குடையை கக்கத்துக்குள் வைத்து, தோளில் துண்டைப் போட்டுக் கொண்டு, இடுப்பில் வெற்றிலையைச் சொருகியபடி அவர் கிளம்பினார். ஈஸ்டர் கொண்டாட்டத்தின் உற்சாகமும், கலகலப்பும் கோட்டயத்தில் சிறிதும் குறைந்ததாயில்லை. கிறிஸ்தவக் கடைகள் எதுவும் திறந்திருக்கவில்லை. ஆனால் நிறைய துணிக் கடைகளிருந்தன. ஒன்றிரண்டு கடைகளுக்குள் போய் துணிகளின் தரத்தையும், விலையையும் விசாரித்தார்.

“கடவுளே ,என்ன விலை!” ஆடைகளின் மிக அதிகமான விலையைப் பார்த்த ஒரு முதியவரின் அபிப்பிராயம் இது. “எதுவாக இருந்தாலும் இரண்டு மூன்று கடைகளில் விசாரிக்கிறேன். ஓரணா குறைவு என்றாலும் அது எந்தக் கடையில் என்று யாருக்கும் தெரியாது,” என்று சொல்லிக்கொண்டே மற்ற கடைகளைப் பார்த்து நடந்து, மாநகராட்சிக் கட்டிடத்தின் கேட்டை அடைந்தார். அங்கே, கிணற்றுக்கு அருகே பல காளைகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றின் உடலிலுள்ள ஒவ்வொரு எலும்பையும் எண்ணி விடலாம். வாழ்வின் இறுதிக்கு வந்து விட்ட முதிய காளைகள்; முறிந்த வாலோடு சில ; பல வருடங்கள் கழுத்தில் வண்டியைச் சுமந்திருந்ததால் அந்த அடையாளங்களோடு சில; மிக வளைந்து விட்ட கொம்புகளுடன் சில; மனிதனின் அன்பை வாழும் உயிர்களிடம் வெளிப்படுத்தத் தெரிந்தவை சில- இம்மாதிரி இயல்புடைய காளைகள் இருந்ததை நம்மால் பார்க்கமுடியும். மாநகராட்சியின் கருப்பு முத்திரை ஒவ்வொன்றின் உடம்பிலும் சாவின் அடையாளத்தைக் காட்டுவதற்காக குத்தப்பட்டிருந்தது. அவைகளிடம் மிஞ்சியிருக்கிறவைதான் ஈஸ்டர் விழாவிற்கு கறியாகப் போகிறவை. முத்திரை குத்தப்படாத விலங்கைக் கொல்பவர்கள் மீது மாநகராட்சி கடும் நடவடிக்கை எடுத்தது.

எல்லாவற்றிற்கும் தலைமையான மாநகராட்சி பொது மக்களின் உடல்நலம் குறித்து கவனம் எடுத்துக் கொண்டதால் இந்தச் சோதனை கட்டாயமானதாக இருந்தது. இந்தச் சோதனையில் மனிதனுக்கு அபாயம் விளைவிக்கும் எந்த விலங்கையும் இரக்கமின்றி கசாப்புக் கடைக்காரர்கள் வெட்டித் தள்ளினார்கள். இந்த விஷயத்தில் அவுசுப் மாநராட்சிக்கு ஆதரவு தருபவர். துன்பத்திலிருந்து அவைகளை விடுவிப்பதான இந்தச் சாவு பெரும்பாலான காளைகளுக்கு மிகப் பெரிய நிம்மதி. அவைகளால் முடிந்தபோது நேரம் காலமின்றி உழைத்தன. பலவீனமாகும்போது, கொடூரமாகவும், முறைகேடாகவும் அவற்றின் விதி அமைகிறது. கொடுமைக்கும் , அவமதிப்புக்கும் ஆளாவதற்கு முன்னால் சாவு எவ்வளவு உயர்வானது! அங்கு நின்று அவைகளைச் சிறிது நேரம் பார்த்தபோது மனம் வலித்தது. மொத்தமாக நாற்பது தலைகள் இருந்தன, தர அடையாளத்திற்காக இன்னும் பல காளைகளை விவசாயிகள் கொண்டு வந்துள்ளனர். அவைகளை வேதனையோடு பார்த்துவிட்டு அவர் புறப்பட்டார்.

திடீரென அவுசுப்புக்கு நடுக்கமேற்பட்டது. நம்பமுடியவில்லை. தன் கண்பார்வைக் குறைவு தன்னை ஏமாற்றுகிறதோ என நினைத்தார். எலும்பும், தோலுமாக ஒரு விலங்கைப் பார்த்தவுடன் மனம் நலிந்து, கண் முன்னால் எல்லாம் இருட்டாய்த் தெரிந்தது. ஆமாம், அது கண்ணன்தான். நடுங்கிப் போனார்.

“கண்ணன்!” அடி நெஞ்சிலிருந்து கத்தினார். ஒரே குதியலாக அதனருகில் ஓடினார். ஆறுதலையும் அன்பையும் தருவதாக இருந்த குரல்.. அந்தப் பெரிய கட்டிடத்தின் முன்னால் கண்ணன் தலை குனிந்து நின்றிருந்தான். வாழ்வின் நடப்பு நிகழ்வு அவன் காதுகளில் எதிரொலித்தது. தலையைத் தூக்கிச் சுற்றுமுற்றும் பார்த்தான். “உனக்கு என்னை அடையாளம் தெரிகிறதா மகனே? நான் இப்படியான நிலையில் உன்னைப் பார்க்க வேண்டுமா?” அவுசுப் கண்ணனைத் தழுவி, அதன் உச்சியை நீவினார். அந்தக் கைகளின் ஸ்பரிசம் பட்டதும் அது வாலை உயர்த்தியது. வாயால் அழாமல், மனதால் அழுதது. கண்ணனின் உடலில் தர அடையாள விவரமிருக்கிறதா என்று பார்க்க விரும்பினார். ஆமாம், அதன் முன்னங்காலில், அது இருந்தது. அதை அழித்து விட விரும்பினார்.
ஆனால் நகராட்சியின் கருப்பு அடையாளத்தை அவ்வளவு சீக்கிரமாக அழித்து விட முடியாது.

வயிற்றுப் பகுதியில் சீழ் பிடித்த காயமிருந்தது. அதைச் சுற்றி ஈக்கள் மொய்த்தன.

“ஒரு காலத்தில் இந்தக் காளை உங்களுடையதாக இருந்ததல்லவா?’ கசாப்பு கடைக்காரர்களில் ஒருவர் கேட்டார்.

“நீங்கள்தான் அவனை இங்கு அழைத்து வந்தீர்களா ”அவுசுப் கேட்டார்.

“ஆமாம்.”

கண்ணன் தன் எஜமானனின் வியர்வை நிறைந்த உடலை நக்கினான். வாழ்வின் பெரும் பகுதியில் அந்த வியர்வையை அவன் குளிர வைத்திருக்கிறான். தனது கடைசி நேரத்திலும் அவன் வியர்வையை நக்குவான். அது அவனுக்குச் சுவையானது என்பதோடு மட்டுமல்லாமல் அவன் வாழ்வின் ஓர் அங்கமுமாகும். அந்த முதிய விவசாயியின் சூடான கண்ணீர் கண்ணனின் முகத்தில் விழுந்தது.

“நாம் போகலாம். நேரமாகி விட்டது. நான் இந்த இறைச்சியை கடையில் கொடுத்தாக வேண்டும்,” கடைக்காரர் மற்றொருவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அவர்களில் ஒருவர், கண்ணனோடு சேர்த்து இரண்டு ,மூன்று காளைகளை கூட்டிச் சென்று விடுவார். ஆமாம், இன்னும் ஓரிரு மணி நேரத்தில் கண்ணன் ஈஸ்டர் விருந்துக்கு கறியாகி விடுவான்.

இருட்டிக் கொண்டிருந்தது. “விளக்கை ஏற்றுவதற்கு முன்னால் இந்த இடத்தைச் சுத்தம் செய்து விடு,“ என்று மரியா தன் மகளிடம் சொன்னாள். அவர்கள் அவுசுப்பின் வரவிற்காக காத்திருந்தனர்.

“அப்பா வர ஏன் இவ்வளவு நேரமாகிறது ?”மகள் கேட்டாள்.

“வேலையை முடித்துக் கொண்டு வருவார். வரட்டும்,” மரியா மகளை அமைதிப்படுத்தினாள்.

“அவர் கோட்டயத்திற்குப் போயிருந்தால் இதற்குள் திரும்பியிருக்க வேண்டும்,“ தனது புத்தாடைகளுக்காக காத்திருந்த மகள் பொறுமையின்றி பேசினாள். அவள் கண்கள் சாலையின் மேலேயே பதிந்திருந்தன. மரியாவின் கண்களும்தான். அவுசுப் வருவதாகத் தெரியவில்லை. விளக்கை ஏற்றினர்.

மகள் பார்த்து விட்டாள். “அப்பா, ஆமாம், அப்பாதான்,” மகள் உற்சாகமாகச் சொன்னாள். தான்தான் அப்பாவை முதலில் பார்த்தோம் என்று மகிழ்ந்தாள். அம்மாவும், பெண்ணும் ஒரே சிந்தனையில் நின்றனர்.

“அது அவுசுப்பா?” பக்கத்து வீட்டுக்காரரான மாத்யூ கேட்டார். அவர் ஒரு தையல்காரர். இன்றிரவிற்குள் மூன்று ரவிக்கைகளைத் தைத்தாக வேண்டும். கேத்ரி காலையில் கிளம்புகிறாள். எல்லாவற்றையும் இரவில் முடித்து விடவேண்டுமென்பதால் மாத்யூவும் தயாராக இருந்தார்.

தனது புத்தாடைகளைப் பார்க்க வேண்டுமென்று காத்திருந்த அந்தக் கண்கள் அவுசுப் கண்ணனோடு நுழைவதைப் பார்த்தன.

“ஆ.. அது கண்ணன்தான்,” கேத்ரி வியப்பாகச் சொன்னாள்.

“எங்கே புதுத்துணி? இதுதான் நீங்கள் வாங்கி வந்ததா?”மரியா கேட்டாள். கண்ணன் தனது பழைய இடத்திற்குப் போய் நின்றான்.

அவர்கள் பல கேள்விகள் கேட்டனர், குரல்கள் உயர்ந்து கொண்டே போயின. தாடையில் கை வைத்தபடி அமைதியாக அவுசுப் உட்கார்ந்திருந்தார்.மரியா விரக்தியோடு தலையை ஆட்டினாள். கேத்ரி துக்கம் தாங்க முடியாமல் அழுதாள். அவுசுப் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அவர் உடல் வியர்வைக் குளமானது.

“அப்பா, நீங்கள் இப்படிச் செய்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை,” கேத்ரி அழுதுகொண்டே சொன்னாள்.

“மகளே,” குரல் தழுதழுக்க, “கண்ணனும் நீயும் எனக்கு ஒன்றுதான். கசாப்புக் கடைக்காரர்…” துண்டால் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். அந்த வாக்கியத்தை முடிக்க முடியவில்லை.

அந்த இரவு கொடியதான ஓர் இரவு. தூங்காமலே அவர்கள் இரவைக் கழித்தனர்.

பொழுது விடிந்தது. கண்ணனின் வயிற்றுப் பகுதியிலிருக்கும் சீழ் புண்ணிற்குத் தானே தயாரித்த மருந்தை எடுத்துக் கொண்டு அவுசுப் மாட்டுக் கொட்டகைக்குப் போனார். காளைகளுக்கான வியாதிகளுக்கு அது மிக நல்ல மருந்து. “உன் கால்களை நீட்டு, தலையைத் தூக்கு,” என்று படுத்துக் கொண்டிருந்த கண்ணனிடம் சொன்னார்.

“கண்ணன்!” கூப்பிட்டார். கண்ணன் இனி எழுந்திருக்கவே மாட்டான் . அவுசுப்பின் மனம் கரைந்தது. அவுசுப்பின் குடும்பம் அவரைக் காயப்படுத்துவதை அவனால் பொறுக்க முடியாமல் போயிருக்கலாம். இந்த உலகை விட்டு அவன் போக அது காரணமாக இருந்திருக்கலாம். கண்ணனின் உடல் ,நொறுங்கிப் போன அவுசுப்பின் மனம்… மேலே ஒட்டடை படிந்து கிடந்த கலப்பையின் மேலிருந்த ஒரு சிறிய பல்லி சோகமாக குரல் கொடுத்தது.
—————————————————————-

நன்றி : Contemporary Indian Short Stories Series 1,Sahitya Akademi

கவிதை, சிறுகதை,நாடகம், கட்டுரை திரைப்படம் என்று பல துறைகளில் பங்களிப்புச் செய்திருக்கும் பொன்குன்னம் வர்க்கி மலையாள இலக்கிய உலகின் மிகச் சிறந்த படைப்பாளியாக மதிப்பிடப்படுகிறார். சமூக அக்கறை, சமூக அநீதிக்கு எதிரான சமரசமற்ற எழுத்து இவருடையது என் விமர்சகர்கள் மதிப்பிடுகின்றனர். வள்ளத்தோள், எழுத்தச்சன், லலிதாம்பிகா மற்றும் முட்டத்து வர்க்கி விருதுகளைப் பெற்றவர். நிவேதனம், தாகம், வெளியில் எனக்கு ஸ்தலமில்லை, பேசுகிற கலப்பை உள்ளிட்ட சிறந்த சிறுகதைகளை எழுதியவர்.
———————————————————————

ரிச்சர்ட் சிஸ்மாரின் (Richard Chizmar) ‘சேஸிங் த பூகிமேன்’ (Chasing the Boogeyman) – செமிகோலன்

ரிச்சர்ட் சிஸ்மாரின் (Richard Chizmar) Chasing the Boogeyman நூலில் நான்கு கொலைகள் நிகழ்கின்றன. ஆனால் இது ‘தொடர் கொலைகாரனை’ (serial killer) பற்றிய நூல் அல்ல. எண்பதுகளின் இறுதியில் தான் பிறந்து, வளர்ந்த சிறு நகரில் நடந்த இந்தக் கொலைகளைப் பற்றிய ஆவணப் பாணியில் ரிச்சர்ட் சொல்லப் போவதாக அவர் கூறுவதால், நேர்காணல்கள், குற்றம் நடந்த இடங்களின், பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் போன்ற வடிவ யுத்திகள் நூலில் உள்ளதால்  இது ‘I’ll Be Gone in the Dark’ போல் உண்மை குற்ற (True Crime) நூலும் அல்ல. மெட்டா-பிக்க்ஷனும் அல்ல. சிறு நகரப் பின்னணியில் நிகழும் எண்ணற்ற திகில்/குற்றப் புனைவு நாவல்களின் ஒன்றோ, அந்த நிலவியல், அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வியல் விவரிக்கப் படுவதால் இது ‘பொது’ நாவலோ அல்ல. ரிச்சர்டின் பால்ய/இளமைக் காலத்தை பற்றி பேசுகிறது என்பதாலேயே இது ‘வெறும்’ நினைவுக் குறிப்பும் கூட அல்ல.

1988ஆம் ஆண்டின் கோடையில், இதழியல் பட்டப் படப்பை முடித்து சொந்த ஊரான எட்ஜ்வுட்டிற்கு ரிச்சர்ட் திரும்புவதற்கு சில நாட்களுக்கு முன், அவருடைய வீட்டிற்கு ஓரிரு தெருக்கள் தள்ளி ஒரு பதின் பருவப் பெண் கொல்லப்படுகிறாள். நெருங்கிய தொடர்பில்லையென்றாலும்,  கடையில், தெருவில் பார்த்தால் சிரித்து, ஓரிரு வார்த்தை பேசுவது மட்டுமின்றி, சிறு நகரத்தில் இருபது வருடங்கள் அருகருகே வசித்தால் உருவாகும் பரிச்சயம் அந்தப் பெண்ணின் குடும்பத்துடன் ரிச்சர்ட் மற்றும் அவர் பெற்றோருக்கு உள்ளது. அப்பெண்ணின் சகோதரன், ரிச்சர்டுடன் படித்தவன். துயர நிகழ்வுகள் எப்போதுமே அலைகழிப்பவை என்றாலும், அதனால் பாதிக்கப்பட்டவருடன் கொஞ்சமேனும் பரிச்சயம் இருந்தால் அதன் தாக்கம் இன்னும் அதிகம்.

இதழியல் படித்தவர் என்பதால் மட்டுமே இந்தக் கொடுங்கொலை ரிச்சர்ட்டை கவனத்தை ஈர்த்தது என்று சொல்ல முடியாது. ஏனெனில், ரிச்சர்ட்டின் லட்சியம், அவருடைய வார்த்தைகளிலேயே சொல்வதென்றால்

That’s right, I’m talking about the bane of every real journalist’s existence—the hippy-dippy, Peter Pan world of Make Believe: fiction.

But wait, it’s even worse than that. I’m talking about genre fiction. Crime, mystery, suspense, and that black sheep of them all: horror.

சரி, திகில் புனைவுகள் வாசிப்பதில்/எழுதுவதில் அதி ஆர்வம் கொண்டவர் என்பதால் மட்டுமே இந்தக் குற்றத்தை பற்றிய செய்திகளை சேகரிக்கத் தொடங்குகிறார் என்று சொல்ல முடியுமா? பரிச்சயமான குடும்பத்தில் நேரும் துயரம், இதழியில் பயிற்சி, திகில் ஆர்வம், இத்தகைய நிகழ்வுகளால் ஈர்க்கப்படும் மனித இயல்பு இவை எல்லாமும் சேர்ந்து தான் அவருடைய – அடுத்த சில மாதங்களுக்கான – செயல்களை வடிவமைத்தன என ஆரம்பித்திலேயே புரிய வருகிறது.

இத்தகையை புனைவுகளின் இரு போது அம்சங்களை உணரலாம். ஒன்று, தொடர் கொலைகளைப் புரிபவன், தான் எண்ணியதை துல்லியமாக நிறைவேற்றுபவனாக, காவல்துறையினரை முட்டாள்கள் போல் எண்ண வைப்பவனாக, மற்றவர்கள் நெருங்க முடியாத அதி மானுடனாக, அவனைக் குறித்த சித்திரம் உருவாவது. இறுதியில் அவன் பிடிபட்டாலும், இத்தகைய கோணம் உருவாவது -ஆசிரியர் அப்படி யோசித்திருக்காவிட்டாலும் – தவிர்க்க இயலாததாகி விடுகிறது. அடுத்தது, அவனுக்கு பலியானவர்கள், பிறசேர்க்கையாக, அவனுடைய தீய மேதமையை வாசகன் உணர மட்டுமே உதவுபவர்களாக மட்டுமே தங்கி விடும் அபாயமும் உள்ளது.

இந்த இரு அம்சங்களையும் முற்றிலும் தவிர்த்து விடும் ரிச்சர்ட், பலியாகும் நான்கு பெண்களை தன் கதையாடலின் மையத்தில் வைக்கிறார். அந்தப் பெண்களின் இயல்புகளை, கனவுகளை விரிவாக பதிவு செய்கிறார். தன் நெருங்கிய தோழியுடன் ஒரே கல்லூரியில் கால்நடை மருத்தவப் படிப்பு படித்து, ஐந்து வருடங்கள் வேலை செய்த பின், சொந்த க்ளினிக் தொடங்கும் கனவுடன் ஒருத்தி, சிறு வருடங்களுக்கு முன் போதை பழக்கம், வீட்டை விட்டு ஓடுதல் என்றிருந்த தன் வாழ்க்கையை முயற்சி செய்து சரிபடுத்தி, கல்லூரியில் சேர்வதை எதிர்நோக்கியிருந்த மற்றொருத்தி. பலியானவர்கள் மட்டுமா? கணவனை இழந்தப் பின் தனியாக இரு பெண்களை வளர்க்கும் தாய், தன் மூத்த மகளை இழக்கும் போது அனுபவிக்கும் வலி. இவர்களனைவரின் கனவுகளை சிதைத்தவனை தன்னிச்சையாக கூட வியக்க முடியாது இல்லையா.

ஆம், இதிலும், அடுத்து என்ன நடக்கும் என யூகிக்க வைக்கும், பதற்றப்படச் செய்யும் நிகழ்வுகள், கணங்கள் உள்ளன. ஆனால் அவை ஒரு சிறு நகரின், அதில் வசிப்பவர்களின், ரிச்சர்ட்டின் உணர்வுகளாக உள்ளனவேயன்றி வாசகன் கொலைகாரனை கண்டுபிடிக்க தன் மனதில் நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஆடுபுலியாட்டமாக இல்லை.  

ஒரு நிகழ்வு. ஓரிரவு ரிச்சர்ட் வீட்டு கழிவுகளை, தெருவின் குப்பைக் கூளத்தில் போட வெளியே வருகிறார். அங்கு வைத்த பின் திரும்ப எத்தினிப்பவருக்கு தன்னை யாரோ கவனித்துக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. எந்த வாகனமும் செல்லாத, சன்னமான தெரு விளக்குகளின் ஒளி மட்டுமே உள்ள இருள், அதனூடே உற்றுப் பார்க்கப் படுவது. ரிச்சர்டால் திரும்ப முடியவில்லை, இப்போது இருளில் ஒளிந்து கொண்டிருப்பவன் நினைத்தால் அருகில் வந்து என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். இப்படி எவ்வளவு நேரம் அசைவற்று இருந்தார் ரிச்சர்ட்? சில நொடிகளாக இருக்கலாம் அல்லது பல நிமிடங்களாக இருக்கக் கூடும். தெருவை கடக்கும் வாகனத்தின் முகப்பு விளக்கொளி அவரை மீட்கிறது. வீட்டிற்குள் ஓடிச் செல்கிறார். எந்த உயர் திகில், குற்றப் புனைவிலும் காணக் கூடிய ‘இருக்கையின் நுனியில் உட்கார வைக்கும்’ கணம் இது. ஆனால் இதனூடே நான் உணர்வது ரிச்சர்டின் பயத்தை மட்டுமல்ல, ஒட்டு மொத்த எட்ஜ்வுட்டின் மனநிலையையும் தான்.

‘இது உங்க சொந்த அனுபவமா’, ‘இது நிஜமாக நடந்ததா’ போன்ற கேள்விகளை க்ரிஸ்டியோ அல்லது வேறு எந்த குற்றப் புனைவு/திகில் எழுத்தாளரோ எதிர்கொண்டிருக்க வாய்ப்பு குறைப்பு. ஆனால் இவை ரிச்சர்டை நோக்கி கேட்கப் படும் வாய்ப்புள்ளது. இதற்கு நூலின் வடிவம் சார்ந்த கட்டமைப்பு -நேர்காணல்கள், புகைப்படங்கள் – மட்டும் காரணமல்ல. அவருடைய நினைவோடை பாணியும் இந்த சந்தேகத்தை எழுப்பக் கூடும். ஒருவர் தன் கடந்த காலத்தை பற்றி, தான் வளர்ந்த நிலவியல், வசித்த மக்கள் பற்றி எழுதினால், ‘என்ன நடந்ததோ’ அதை எப்போது அப்படியே அவர் பிரதி எடுக்கிறார் என்று புரிந்து கொள்ள வேண்டியதோ, ‘நடந்ததை எழுதுதல்’ என்ற, நாம் உருவாக்கியிருக்கும்  அரக்கனை/Boogeymanஐ தேட வேண்டுமென்றோ கட்டாயமில்லை.  உண்மையில் புனைவில் எந்தளவுக்கு உண்மையுள்ளது என்பதை, எந்தளவிற்கு வாசகனை உள்நுழைய அனுமதித்துள்ளார் என்பதை எழுத்தாளர் மட்டுமே அறிவார். இந்த நூலிலும், ரிச்சர்டின் பால்யத்தின் சில பகுதிகளை – பகுதிகளாக அவர் முன்வைப்பதை – நான் அறிகிறோம், நூலின் காலகட்டமான 1988ன் பதிவுகளும் – அவருடைய சிறுவயது நகரத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றங்கள்- உள்ளன. இவை ‘நிஜத்தில்’ நடந்தவையா என்பது இங்கு அலசப்பட வேண்டியது அல்ல,   அந்த சில மாதங்களின் கொடுநிகழ்வுகளுக்கு, மனித முகத்தை அளிக்கின்றன என்பது தான் முக்கியம். கடந்த கால நிஜம், கடந்த கால புனைவு இரண்டிற்கும் இடையிலான இலக்கிய ஊசலாட்டமாக, அது இயங்கக் கூடிய, வெளிப்படக் கூடிய விதங்களைப் பற்றிய சிந்தனைகளாக இந்த நினைவுக் குறிப்பு யுத்தியை பார்க்கலாம்.

பலியாகும் பெண்கள், அவர்களின் குடும்பம் தவிர நாம் சந்திக்கும் முக்கியமான மனித முகங்கள்,நிருபராக வேலை பார்க்கும் ரிச்சர்டின் தோழி கார்லி, தொடர் கொலைகளை விசாரிக்க அனுப்பப்படும் காவல்துறை அதிகாரி ஹார்ப்பர், ரிச்சர்டின் பெற்றோர் ஆகியோர்.

கொலைகளை தடுக்க முடியாத இயலாமை, அது உருவாக்ககூடிய உளைச்சல், அதன் நீட்சியான மனச்சோர்வை ஒரு புறம் ஒதுக்கி வைத்து விசாரணை செய்து வந்த, இந்த நிகழ்வுகள் நின்று பல்லாண்டுகள் ஆன பின்பும், ஓய்வு பெரும் வரை அதை மனதிலிருந்து நீக்க முடியாத ஹார்ப்பர் ஒரு புறமென்றால், ‘கறுப்பின அதிகாரி தலைமையில் விசாரணை, மூன்று வெள்ளையினப் பெண்கள் கொலை, வேறென்ன எதிர்பார்க்க முடியும்’ என்று ஹார்ப்பரின் நிறத்தை வைத்து அவருடைய திறமையை, நேர்மையை முடிவு செய்யும் வெள்ளையின நகரவாசியொருவன் மற்றொரு புறம். எட்ஜ்வுட்டின் மற்றொரு முகத்தை காட்டும் நிகழ்வு.

கார்லி, ரிச்சர்ட் இருவரும்  கொலைகள் குறித்து தகவல்கள் திரட்டி, அதன் வழியாக ஏதேனும் கண்டறிய முடியுமா என்று முயற்சிக்கிறார்கள். ஆனால், காவல்துறை கோட்டை விட, தொழில்முறையில்லாத துப்பறியும் ஆசாமிகள் உண்மையை பிடிப்பது போல் எதுவும் நடப்பதில்லை. காவல்துறை அறியாத ஏதேனும் தடயம் இவர்களிடம் கிடைத்ததா என்று கூட உறுதியாக கூற முடியாது. ரிச்சர்ட் வீட்டிற்கு அடிக்கடி தொலைபேசி அழைப்பு விடுத்து, எதுவும் பேசாமல், பலமாக மூச்சை மட்டும் விட்டு வைத்து விடுபவன் தான் கொலைகாரனா அல்லது ரிச்சர்டின் ஆர்வத்தை அறிந்து அவனை பயமுறுத்த, கிண்டல் செய்ய விரும்பும் ஏதேனும் ஆசாமியா. கார்லி வீட்டின் வாசலில் சாத்தானின் குறியீடான 666ஐ எழுதி வைத்தவன் யார்? இவர்களுடைய இணை விசாரணையின் பலன்/பலனின்மை, ரிச்சர்டின் அதீத ஆர்வம் வாசகனுக்குள் எழுப்பும் கேள்விகள் – துயர நிகழ்வை தனதாக்கிக் கொள்ளும் சுயநல விழைவோ? – நூலின் கதைசொல்லலுக்கு இன்னும் நம்பகத்தன்மையை அளிக்கிறது.

இதழியல் படித்த மகனின் ‘எழுத்தாளர்’ லட்சியத்தை சிறுமைப்படுத்தாத, அவன் இந்தக் கொலைகள் மீது அதீத ஆர்வம் கட்டுவது அச்சுறித்தனாலும், அதை தடை செய்ய முயற்சிக்காத ரிச்சர்டின் பெற்றோர்

குற்றவாளி பல்லாண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்படுகிறான். ஆனால் அது, மகளை இழந்தவர்களின் குடும்பத்திற்கும், ரிச்சர்டிற்கும், ஏதேனும் வகையில் 1988-89ஆம் ஆண்டுகளை முடிவுக்கு கொண்டு வரும் (closure) என்று கூற முடியாது. அவர்களுக்கும், வாசகனுக்கும் தெரிய வருவது ‘தீமையின் அற்பத்தன்மையை’ (banality of evil) தான் நினைவுறுத்துகிறது. கூடவே இந்த அற்பத்தன்மை, அழியாதது, வேறு வேறு உருவத்தில்  எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற அயற்சியையும்.

பல ழானர் எழுத்தின் கூறுகளை கொண்டிருந்தாலும், Chasing the Boogeyman முற்றிலும் தனித்தன்மையுடைய ஆக்கம். நல்லெழுத்து, ழானர் எல்லைகளை கடந்து தனக்கான இருப்பை உருவாக்கி, தனக்கான இடத்தை நிறுவிக் கொள்ளும் என்பதை இந்த நூலின் மூலம் மீண்டும் உறுதி செய்கிறார் ரிச்சர்ட்.

பச்சிலை

ராம்பிரசாத் 

 

“டொக் டொக் டொக்”

மரக்கதவில் இரைச்சல் உண்டாக்கும் சத்தம் கேட்டு ஞானன் குடிலின் கதவைத் திறந்து வெளியே வந்தார். வெளியே வானதி நின்றிருந்தாள். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள்.

“ஜோஸ்.. ஜோஸ்.. ஜோஸை காணவில்லை,” என்றாள் மூச்சு வாங்கியபடி.

நிதானம் கொள்ளக் கேட்கும் தோரணையில் கைகளை அசைத்தபடி ஞானன், வானதியை குடிலின் வாசலில் இருந்த மர நாற்காலியில் அமர வைத்தார். அவளின் மூச்சு சீராகும் வரை பொறுத்திருந்தார்.

“நீங்கள் என் குடிலில் நான் தயாரித்துத் தந்த உற்சாக பானம் அருந்தினீர்களே. அதுவரை பாதுகாப்பாகத்தானே இருந்தீர்கள். அதன் பின் புறப்பட்டு எங்கே சென்றீர்கள்?” என்றார்.

“காட்டுக்குள் நடைப்பயணம் சென்றோம். ஒரு கட்டத்தில் நதி ஒன்று வந்தது. ஜோஸ் முதலில் நதியைக் கடந்தான். நான் கடக்க எத்தனிப்பதற்குள் நதியில் வெள்ளம் வந்துவிட்டது. சற்று தொலைவில் இருந்த பாலம் வழியாக நான் ஜோஸ் இருந்த கரைக்கு சென்றுவிடலாம் என்று நினைத்து அதை நோக்கி நடந்தேன். ஆனால், நான் பாலம் கடந்தபோது ஜோஸ் அந்தப்புறம் இல்லை. அங்குமிங்கும் தேடினேன். ஒரு கட்டத்துக்கு மேல் என்னால் காட்டு வழிப்பாதையைத் தொடர்ந்து செல்ல முடியவில்லை,” என்றாள் வானதி.

“சரி, இருங்கள். நாம் இருவரும் செல்லலாம். நிச்சயம் ஜோஸைக் கண்டுபிடித்துவிடலாம்,” என்று சொல்லிவிட்டு, ஒரு சிம்னியும், தண்ணீர் போத்தலையும் எடுத்துக்கொண்டார். வானதியை முன்னால் நடக்க விட்டு அவளைப் பின் தொடர்ந்து நடந்தார். வானதி, தானும் ஜோஸும் சென்ற பாதையை, தன் நினைவடுக்கிலிருந்து தெரிவு செய்து கவனமாக நடந்தாள். அவளது கண்கள், காட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஜோஸின் உருவத்தை தேடி அலைந்தன.

வழி நெடுகிலும், அவனது கால் தடங்களையோ அல்லது அவன் பயன்படுத்திக் கைவிட்ட பொருட்களையோ தேடிச்செல்வதாக ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். நேரம் மதிய வேளை தாண்டி மாலையை நெருங்கிக் கொண்டிருந்தது. இன்னும் சற்றைக்கெல்லாம் வெளிச்சம் குன்றி இருள் கவியத் துவங்கிவிட்டால், தேடிச்செல்வது கடினம் என்பதை அவர்கள் உணர்ந்தே இருந்தார்கள். ஆதலால் தேடலில் சற்று துரிதம் காட்டினார்கள். லேசான பரபரப்பு தொற்றிக்கொண்டது.

காடு அவ்வப்போது குழப்பியது. தோற்றப் போலிகளைக் காட்டி அங்குமிங்கும் அலைக்கழித்தது. இருந்தும் வானதி பழக்கப்பட்ட பாதையை மிகக் கவனமாக நினைவு கூர்ந்து ஞானனை வழி நடத்தினாள். ஞானன் தன் கையிலிருந்த அறிவாளால் பாதையில் இடையூறுகளாக இருந்த செடிகள், கொடிகளை வெட்டி விலக்கி வழி ஏற்படுத்தியபடி நடந்தார். அவ்வப்போது கடந்து செல்ல நேர்ந்த மரங்களில் அறிவாளைப் பாய்ச்சி, பாதையை குறிக்க அடையாளங்களை ஆழப் பதித்தார்.

முழுமையாக ஒரு மணி நேரம் கடந்த பின் ஒரு வழியாக, அவர்கள் இருவரும் நதிக்கரையை அடைந்தார்கள். மரப்பாலத்தில் ஏறி நதியைக் கடந்தார்கள். அங்குமிங்கும் ஆராய்ந்ததில், ஈர சதுப்பு நிலத்தில் மனிதக் காலணித் தடமும், சிறுத்தை ஒன்றின் காலடித்தடமும் ஒருங்கே தென்பட்டன. அதைப் பார்த்துவிட்டு, வானதி அழத்துவங்கினாள்.

“அய்யோ கடவுளே.. ஜோஸ்.. உன்னை காலனுக்கு பறி கொடுத்துவிட்டேனா?” என்று அரற்றினாள்.

“பொறு. பதறாதே,” என்ற ஞானன், தடங்களைக் கூர்மையாக அவதானித்துவிட்டு, “காடு தடயங்களை ஒன்றன் மீது ஒன்றாகப் பதிக்க வல்லது,” என்றார்.

வானதி, கண்ணீருடன் ஞானனைப் பார்க்க, “சிறுத்தையின் கால் தடம் மூன்று நாட்களாகியிருக்கும். ஆனால், காலணியின் கால் தடம் வெகு சமீபத்தில் தான் உருவாகியிருக்கிறது. ஜோஸ் காட்டின் அழகில் மயங்கி, சிறுத்தையின் கால்தடங்கள் மீது நடப்பதை உணராமல் கடந்திருப்பான்,” என்றார்.

வானதிக்கு தன்னை சமாதானம் செய்துகொள்ள அந்த விளக்கம், அதிலிருந்த தர்க்கம் போதுமானதாக இருந்தது. அதன் பிறகு ஞானனும், வானதியும் காட்டினூடே விரைந்து நடக்கலானார்கள். மாலை மெல்ல மெல்ல கவிந்து கொண்டிருந்தது.

பசுங்காட்டின் மணம் நாசியைத் துளைத்தது. தூரத்தில் கொட்டும் அருவியின் சீரான ஓசை ஒரு மெல்லிசையாய் நீண்டது. அருவிக்கு அருகே இருந்த காளி கோவிலிலும் ஜோஸின் கால் தடங்கள் தென்பட்டன. மிளாக்கள் நீர் அருந்த வந்திருந்தன. முகில்கள் இறங்கிய வானத்தில் தேக்கி வைத்த மழையைக் கொட்டிக் கவிழ்க்கும் திட்டத்தின் சாயல். இரு பக்கமும் பசுமரச்செறிவு. துடுப்பு வால் கரிச்சான் மற்றும் வெண்வயிற்று வால் காக்கை ஆகியன தென்பட்டன. செந்தலை பஞ்சுருட்டானை மிளிரும் சிவப்பு நிறத்திலான தலையையும் மஞ்சள் நிறத்திலான தொண்டையையும் கொண்டு அங்குமிங்கும் கீச்சிட்டு தாவியபடி ஈர்த்தது. சீகார்ப் பூங்குருவி , அடர் ஆரஞ்சு நிற உடலும் நீண்ட வாலும் கொண்ட குங்குமப் பூச்சிட்டு, சுடர் தொண்டைச்சின்னான் குருவிகள் ஜோஸைத் தேடும் வானதி, ஞானன் கவனங்களை ஈர்க்க முயன்று தோற்றன. இவற்றுடன் மிக அழகிய காட்டுப் பறவைகளும், கூட்டம் கூட்டமாக வெண்கொக்குகளும், நாரைகளும் மற்றும் பல வித நீர்ப்பறவைகளும் அருவியை ஒட்டிய தடாகத்தில் நீர் அருந்த இறங்கியிருந்தன.

எதிரில் மலைகளின் உச்சிப்பாறைகள் உருண்டு திரண்டு ஒரு போர் வீரன் போல் நின்றிருந்தன. அதற்கும் மேலாக விண்ணைத் தொட்டுவிடும்படி நின்றிருந்தன சிறு மரங்கள். கீழிருந்து பார்க்கையில் ஒரு பஞ்சுக் கூரை போல் மேகக் கூட்டங்கள் விரவிக் கிடந்தன. மேகங்கள் திரண்டு, தங்களிடமிருந்த நீர்ச்சத்தை சட்டென்று மழைத்துளிகளாக அள்ளி வீசி காற்றடிக்க தொடங்கின. சிறிது நேரத்தில் நல்ல மழை. வீசிய காற்றில் மழைத்துளிகள் வானில் நீண்ட பெரும் கோடுகள் கிழித்தன. தூரத்தில் தெரிந்த மலைச்சரிவில் மழை நீர் வழிந்து அருவி கொட்டிக் கொண்டிருந்தது.

காடுகளில் மாலையின் அறிமுக சமிக்ஞையாக விதவிதமான பறவைகள் பூச்சிகளின் ரீங்காரம் ஒலிக்கத் துவங்கியிருந்தது. தூரத்தில் புதர்களுக்குப் பின்னால் ஏதேதோ கொடிய வன விலங்கின் சாயல் மிரட்சி கூட்டியது. சமிக்ஞையைச் சரியாகப் புரிந்துகொண்ட ஞானன் நடையில் வேகம் கூட்டினார்.

சற்று தள்ளி, ஒரு புகைப்படம், செடி ஒன்றின் சிக்கலான கிளைகளுக்கு மத்தியில் அகப்பட்டு விடுபட இயலாமல் அலைக்கழிந்து கொண்டிருந்தது. ஞானன் அதை கையிலெடுத்தார். வானதி அருகாமையில் வந்து பார்த்தாள். ஜோஸ் ஒரு மரத்தின் அருகே நின்று தன்னைத் தானே புகைப்படம் எடுத்தது போலிருந்தது. அந்த மரத்தின் மேனியெங்கும் ஆங்காங்கே வெடித்து, ஒரு விதமான காளான் முளைத்தது போன்ற தோற்றத்தில் மிக வினோதமாக இருந்தது. பச்சிலைகளுக்கு நடுவே ஆங்காங்கே வெளிர் ரோஜா நிறத்தில் பூக்கள் பூத்திருந்தன. மரத்தின் கிளைப்பட்டைகளில் ஆங்காங்கே சாம்பல் அல்லது சந்தன நிறம் கண்டிருந்தது. கூழ் போல் மரத்தின் கிளைகளிலிருந்து எதுவோ ஒழுகிக் கொண்டிருந்தது.

ஞானனும், வானதியும் சுற்றிலும் பார்த்தார்கள். எங்குமே அந்த மரம் தென்படவில்லை.

“பல அறிபுனைக் கதைகளில் இதுபோன்ற வினோதமான மரங்கள் குறித்துப் நாங்கள் படித்திருக்கிறோம். மனிதன் மரமாகிவிட்ட கதைகள். அந்தக் கதைகளை நினைவூட்டியிருப்பதால் இந்தப் புகைப்படத்தை எடுத்திருப்பான். மேலும், இந்தக் காடு குறித்தும், இந்த மரங்கள் குறித்தும் இங்கு வந்து சென்ற சிலர் சொன்ன செவிவழிச் செய்திகளைக் கேட்டு ஆர்வம் உந்தியே இங்கு வர விரும்பினான் ஜோஸ். அதுமட்டுமல்லாமல் , அவனுக்கு அமெரிக்காவில் உள்ள அமேசான் காடுகளைப் பார்க்கவே விருப்பம். ஆனால், அதற்கு அதிகம் செல்வாகும். நம் ஊர் காடுகளும் அமேசான் காடுகளும் ஒப்பீட்டளவில் ஒன்றாகத்தானே இருக்க வேண்டும். அதனாலும், இந்தக் காட்டிற்கு வர விரும்பினான்,” என்றாள் வானதி.

“அதற்கு உங்களுக்கு வேறு காடே கிடைக்கவில்லையா?” என்றார் ஞானன்.

“இந்த உலகில் பெண் இனம் தான் முதலில் தோன்றியிருக்க வேண்டும். பிறகு தான் ஆண் இனம் உருவாகியிருக்க வேண்டும். அந்த அடிப்படையில், பெண்ணான எனக்கே முன்னுரிமை அளிக்க விரும்புவதாக அவன் அவ்வப்போது சொல்வதுண்டு. ஆகையால், இந்தக் காட்டிற்குத்தான் வரவேண்டும் என்று தேர்வு செய்தது நான் தான். இப்படி ஆகுமென்று யார் தான் யூகித்திருக்க முடியும்?” என்றாள் வானதி.

புகைப்படத்தில், அந்த மரம் நன்கு செழித்து வளர்ந்திருந்தது. மிக அதிக உயரமில்லை. குட்டையும் இல்லை. சீராக வளர்ந்திருந்தது. ஒவ்வொரு நேரம் பார்வைக்கு வெவ்வேறு விதமாகத் தோன்றுவதாகப் பட்டது. சில நேரங்களில் சர்ப்பமும், சில சமயங்களில் முதலையும், இன்ன பிற ஊர்வன விலங்குகளுமாய் அது பார்வைக்குத் தோன்றுவதாகத் தோற்றமளித்தது வினோதமாக இருந்தது.

“இந்தக் காட்டில் சுற்றுலா வந்த மனிதர்களில் சிலர் காணாமல் போன கதைகளை நானும் கேட்டிருக்கிறேன். முடிந்தவரை கவனமாக இருப்பது என்று முடிவு செய்துதான் வந்தோம். எங்குமே எவ்விதப் பிரச்சனையும் எழுவதற்கான சாத்தியங்கள் முழுவதுமாக இல்லை என்று சொல்லிவிடமுடியாதல்லவா?” என்றாள் வானதி தொடர்ந்து.

“இந்த அடர்ந்த வனத்தில், காற்று ஒரு காகிதப் புகைப்படத்தை அதிகம் தூரம் கடத்திச் சென்றிருக்க வாய்ப்பில்லை. இந்த மரம் இங்கு எங்காவது அருகில் தான் இருக்க வேண்டும்,” என்ற ஞானன் அந்த மரத்தைத் தேடத்துவங்கினார். வானதியும் இணைந்துகொண்டாள்.

இருவருமாக அங்குமிங்கும் தேடியதில் அந்த மரம் சற்று தொலைவில் தென்பட்டது. ஞானனும், வானதியும் அந்த மரத்தை நெருங்கி கிட்டத்தில் பார்த்தார்கள். சுற்றி வந்தார்கள். ஓரிடத்தில், ஜோஸின் சட்டையின் ஒரு பகுதி மரத்தின் பட்டைக்குள் சிக்கியிருப்பதான தோற்றம் தந்தது. வானதி அதைப் பிடித்து இழுக்க, யாரோ அந்த சட்டையை மரத்துடன் இறுகப் பிணைத்து இணைப்பான் ஒன்றினால் இணைத்தது போலிருந்தது. வானதி தன் பலம் முழுமைக்கு பிரயோகித்து அந்த மரத்தின் இடுக்குகளில் சிக்கிக்கொண்டிருக்கும் ஜோஸை வெளியே இழுக்க முயல, சட்டை கையோடு கிழிந்து வந்தது. ஜோஸின் உடல் மரத்தினுள் முழுமையாக மறைந்தது.

அதிர்ச்சியடைந்த வானதி, தன்னிடம் ஒட்டிக்கொண்ட பதட்டமோ, அதிர்ச்சியோ ஞானனிடம் ஒட்டாததையும், அவர் மரத்தையே ஆழமாகப் பார்த்துக்கொண்டே இருப்பதையும் உணர்ந்து மேலும் பீதியடைந்தாள்.

“இந்த மரத்தைப் பாரேன். புகைப்படத்தில் இருந்ததைக் காட்டிலும் இப்போது சற்று மேலாக இருக்கிறது அல்லவா?” என்றார் ஞானன் மரத்தின் எழிலை உள்வாங்கியபடி.

“என்ன இது? நான் ஜோஸ் குறித்து பதட்டமாக இருக்கிறேன். நீங்கள் மரம் குறித்து பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? ஜோஸ் எங்கே? அவன் சட்டை மரத்தின் இடுக்கில் எப்படி வந்தது? ஜோஸ் மரத்தின் உள்ளே சிக்கிக் கொண்டுவிட்டானா? அல்லது ஜோஸ் வாசிக்கும் அறிபுனைக் கதைகளில் வருவதைப்போல் ஒருவேளை ஜோஸ் மரமாகிவிட்டானா?” என்றாள் வானதி பதட்டம் தனியாமல்.

“அவன் மரமாகியிருக்க வாய்ப்பில்லை. அது நிச்சயமாகத் தெரியும்,” என்றார் ஞானன்.

“பின்னே? அவன் எங்கே? அவன் சட்டை இங்கே எப்படி வந்தது? அவனை யார் என்ன செய்தார்கள்?”

ஞானன் எதுவும் பேசாமல் அந்த மரத்தையே ஆழமாக ஊடுறுவிக் கொண்டிருந்தார்.

“ஞானன், என்ன செய்கிறீர்கள்? அவன் மரத்தினுள் எப்படி அகப்பட்டான்? இங்கே என்ன நடக்கிறது?” என்றாள் பதட்டத்துடன்.

“ஏன் பதட்டப்படுகிறாய், வானதி? நிதானம் கொள். நேற்று உற்சாக பானம் அருந்தினாயே? அது ஒரு மூலிகைச் செடி தானே. அந்த மூலிகைச்செடியை நீ கபளீகரம் செய்கிறாய் என்று இங்கே உள்ள ஆயிரம் கோடி தாவரங்கள் உன் போல் பதட்டப்பட்டனவா?” என்றார் ஞானன்.

“என்ன அபத்தமாகக் கேட்கிறீர்கள்? அதுவும், ஜோஸைத் தேடிக் கொண்டிருக்கையில்,” என்றாள் வானதி லேசான முகச்சுளிப்புடன்.

“கேள்விக்கு என்ன பதில்?”

“இல்லை தான். ஆனால், இது ஒரு கேள்வியா? காலங்காலமாக நாம் பச்சிலைகளும், மூலிகைகளும் எடுத்துக்கொள்வதுதானே. இதில் கேள்வி கேட்க என்ன இருக்கிறது?”

“ஏன் இல்லை? அதே போல், ஆயிரம் கோடி மனிதர்களில் ஓரிருவரை ஒரு தாவரம் தன் நோய்களுக்கு மருந்தாக எடுத்துக்கொண்டால் தான் என்ன?” என்றார் ஞானன், மரத்தின் எழிலை அங்குலம் அங்குலமாக அவதானித்தபடி.

“என்ன? என்ன சொல்கிறீர்கள்?”

“இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் விண்ணிலிருந்து ஒரு கல் வந்து விழுந்தது. அது முதல் தான் இப்படி நடக்கிறது. என் பாட்டனார் கவனித்தார். தலைமுறை தலைமுறையாக இந்த மரங்களுக்கு நாங்கள் சேவகம் செய்கிறோம். இந்த ரகசியத்தை ரகசியமாகவே கட்டிக் காக்கிறோம். காட்டின் இந்தப் பகுதியில் இதுகாறும் அந்த மர- நோய்மை அண்டாதிருந்தது. அந்தக் கல் விழுந்ததிலிருந்து, இந்தக் காட்டிலுள்ள சில மரங்கள் வினோதமாக வளர்கின்றன. நோய்வாய்ப்படுகின்றன. அவை நோய்வாய்ப்படுகையில் அவற்றுக்கு பிரத்தியேக மருத்து தேவைப்படுகிறது. மனிதர்கள் நோய்வாய்ப்படுகையில் பிரத்தியேக குணாதிசயங்கள் கொண்ட பச்சிலைகள் உண்பது போலத்தான் இதுவும். இலைகளில் பிரத்தியேகமானவை மூலிகையாவது போல், விலங்குகளில் பிரத்தியேகமான மனிதர்கள் தான் இம்மரங்களின் நோய்களுக்கான மூலிகை, பச்சிலை ஆகிறார்கள் என்று என் அப்பாவிடமிருந்து நான் கற்றுக்கொண்டபோது நானும் சற்று அதிர்ந்து தான் போனேன். பிறகு அதுவே பழகிவிட்டது. இந்தக் காட்டில் இறக்க நேர்ந்தவர்கள், காணாமல் போயிருக்கிறார்கள். ஆனால், காணாமல் போனவர்களில் கணிசமானவர்கள் உண்மையிலேயே காணாமல் போகவில்லை. அவர்கள் இங்குள்ள மரங்களுக்கு மருந்தாகியிருக்கிறார்கள். அந்த வகையில், அவர்கள் சராசரி மனிதர்களின் ஆயுளைத் தாண்டி நூற்றுக்கணக்கான வருடங்கள் கூட வாழ இயலும். நீங்கள் வெற்றிலையை நாவிலேயே இருத்தி, சாற்றை மட்டும் விழுங்குவது போலத்தான்”

வானதி இமைகள் இமைக்க மறுத்த ஸ்திதியில் ஞானனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அப்படியானால், ஜோஸ் மரமாகிவிட்டானா?”

“வெற்றிலையை நீ வாயில் இட்டு குதப்பினால், வெற்றிலை குட்டி மனிதனாகிவிடுகிறதா? இல்லை அல்லவா? வெற்றிலை வெற்றிலையாகவே தான் நீடிக்கிறது. இதோ பார்.. நீ பலவற்றைத் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறாய். மனிதன் விழுங்குவதாலேயே செடிகள் மரணிப்பதில்லை. செடிகளின் உள் இயக்கம் பாதிப்படையாமல் இருக்கத் தேவையான அனைத்து புறச்சூழலும் சரியாக அமையும் பட்சத்தில் மனிதனின் உடலுக்குள்ளிருந்தபடி கூட செடிகள் ஜீவித்தே தான் இருக்கும். அந்தப்படி, மனிதனின் உடல் என்பது அந்தச் செடிகளைப் பொறுத்த வரை வெறும் வெளி தான்”

“அது போலத்தான் ஜோஸும் என்கிறீர்களா?”

“நிச்சயமாக. ஒன்று சொல்லட்டுமா? பெண் இனம் தான் முதலில் தோன்றியது என்று ஜோஸ் சொன்னதாகச் சொன்னாய் அல்லவா?. ஆதலால் பெண் இனத்திற்கே முன்னுரிமை என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், பூமியில் மனிதப் பெண் இனம் தோன்றுவதற்கு முன்பே தாவரங்கள் தோன்றியிருக்க வேண்டும். பெண் இனம் தான் மூத்தது என்பதை ஒப்புக்கொள்ளும் நீ இதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இப்படி யோசித்துப் பார். பூமி என்ற இந்த கிரகமே தாவரங்களுக்கானதென்றால்? மனிதர்கள் முதலான விலங்குகள் அனைத்தும், தாவரங்கள் தங்கள் பிழைத்தலுக்கென உருவாக்கிய இந்திரிய சாத்தியங்களின் பக்க விளைவுகள்தான் என்றால்? அப்படியென்றால், தாவரமான இந்த மரம், தன் பிழைப்புக்கென, தான் உருவாக்கிய மனிதர்களில் ஒன்றே ஒன்றை தன் நோய்க்கு மருந்தாக எடுத்துக்கொண்டால் தான் என்ன குறைந்துவிடப் போகிறது?” என்றார் ஞானன்.

“ஒரு பெரிய மரத்தின் கிளையில் இலையாக ஒட்டிக்கொண்டிருக்கும் வரை, இலையானது மரத்தையும், மரம் வீற்றிருக்கும் இந்த வெளியையும், இவை அமையப்பெற்றிருக்கும் இந்தப் பிரபஞ்சத்தையுமே தன் வெளியாகக் கொள்கிறது. நோயின் நிமித்தம் அதே இலையை மூலிகையாக, பச்சிலையாக நீங்கள் உட்கொள்கையில் அது உங்கள் உடலையே பிரபஞ்ச வெளியாகக் கொள்வதில்லையா? அந்தப் பிரபஞ்சவெளியில், அது ஒப்பீட்டளவில் எத்தனை சிறியதாய் இருப்பினும், அதற்குள்ளும் தன் இயல்பை வெளிப்படுத்துவதில்லையா? அந்த இலையைப் பொருத்த மட்டில், பிரபஞ்ச வெளிக்கும், உங்கள் உடலுக்கும் பெரிய வித்தியாசங்கள் இருப்பதில்லை. இரண்டையுமே அதனதன் இடத்தில் சமமான அளவில் சிக்கலான ஒழுங்கைக் கொண்டுள்ளதாகத்தான் கொள்கிறது. அல்லவா? மனிதர்கள் இருக்கும் ஒரே வெளியை, வெவ்வேறாய்க் காண்கிறார்கள்.இத்தனைக்கும் ஒவ்வொன்றிற்கும் மிகச் சன்னமான வித்தியாசமே. பார்க்கப்போனால், இந்த சன்னமான வித்தியாசங்களே மனிதர்களை வேறுபடுத்துகிறது. ஆனால், வெளியாக, அவ்வெளியில் இயக்கமாக மனிதர்கள் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். படுக்கையில், வைக்கோலுக்கும், பஞ்சுமெத்தைக்கும் தான் வித்தியாசமே ஒழிய உறக்கங்களுக்கும், கனவுகளுக்கும் அல்ல ”

“பிரபஞ்ச வெளியை தங்கள் வெளியாகக் கொள்ளும் மனிதர்கள், ஒரு மரத்தின் நோய்க்கான பச்சிலையாகையில் பிரபஞ்ச வெளியையே தன் வெளியாகக் கொள்ளும் மரத்தை ஏன் தங்கள் வெளியாகக் கொள்ளக்கூடாது? வெளியில் வாழ்வதற்கும், அந்த வெளிக்கு சமமான, அளவில் சிறிய ஒரு வெளிக்குள் இயங்கிக்கொள்வதற்கும், இயக்க ரீதியில், என்ன வித்தியாசம் இருக்க முடியும்? உயிர்களில் மூத்த உயிரான, தாவரங்களே அப்படி ஒரு வித்தியாசத்தை தங்கள் இருப்புக்குக் கற்பித்துக்கொள்ளாதபோது, அப்படி ஒரு வித்தியாசம் தங்களுக்கு இருப்பதாக மனிதன் தனக்குத்தானே கற்பித்துக்கொள்ளும் மதிப்பு என்பது எத்தனை மடத்தனமானது என்பதை நீ உணர்கிறாயா?” என்றார் ஞானன் தொடர்ந்து.

“நீங்கள் சொல்வது மிக வினோதமாக இருக்கிறது. இப்படி நான் இதுகாறும் கேள்விப்பட்டது கூட இல்லை. எனக்கு விளங்கவில்லை. ஒரு கொலைக்கு நிகராக இங்கே எதுவோ நடக்கிறது. அதன் விளிம்பையே நான் தொட்டிருப்பதாக உணர்கிறேன். நீங்கள் ஒரு கொலையை, எதை எதையோ சொல்லிக் குழப்புகிறீர்கள்,” என்றாள் வானதி.

“இந்த பூமியில் உயிர்கள் சார்ந்த உன் பார்வையை நீ மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன் வானதி. இல்லையேல், அனர்த்தங்களையே உண்டு, அனர்த்தங்களையே செரித்து வாழும் ஒரு அற்ப பிறவியாக மட்டுமே நீ வாழ்ந்து மரிப்பாய். உனக்கும் ஒரு கிணற்றுத்தவளைக்கும் பெரிதாக பேதங்கள் இல்லாமல் போகும். ஜோஸுக்கு என்ன நடந்ததோ, அது, இப்பூமியில் உயிர்களின் பார்வையில், நன்றாகவே நடந்தது. இனியும் நடக்கும். அந்த நிகழ்வுகளை, ‘காட்டிற்குள் தொலைந்தவர்கள்’ என்று மனிதர்கள் கடந்து போவது இனியும் தொடரும். ஜோஸ் தன் கைக்கு எட்டாத அமேசான் காடுகளில் தொலையும் அனுபவத்தை, இந்தக் காட்டில் தொலைவதில் பெற முயற்சித்தே இங்கு வந்திருக்கிறான். ஒருவேளை அதனால் தான் இந்த மரங்கள் அவனைத் தெரிவு செய்தனவோ என்னவோ? அவனிடத்தில் வெளிகளுக்கு இடையிலான வேறுபாடுகள் பெரிதாக இல்லை என்பதை இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம். ஜோஸை நீ காப்பாற்ற முனைய வேண்டியதில்லை. இன்னும் சொல்லப்போனால் ,அவன் எப்போதும் போல தனக்கான வெளியில் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறான். அந்த வெளி ஒரு மரத்திற்குள் இருக்கிறது என்பது மட்டுமே உன் போன்ற சராசரி மனிதர்களை சலனம் கொள்ள வைக்கும் ஒரே வித்தியாசம்,” என்ற ஞானன், மரத்தை ஒருமுறை ஆழமாகப் பார்த்துவிட்டு, திரும்பி வந்த வழியே நடக்கலானார்.

செய்வதறியாது திகைத்த வானதி மரத்தையே கையாலாகாமல் பார்த்து நின்றாள். மரம் முன்பு தோன்றியதைவிடவும் தெளிவாகவும், ஒளி பொருந்தியதாகவும் தோற்றமளித்தது.

 

ஸ்மால்

ஸிந்துஜா

“கோயிலுக்கு வந்துட்டு கால் வலிக்கறதுன்னு சொல்லக் கூடாதும்பா. நானும் குழந்தையும் இங்க சித்த உக்காந்துக்கறோம். நீங்க போய் ஸ்டால்லேர்ந்து பிரசாதம் வாங்கிண்டு வாங்கோ” என்று உமா சேதுவை அனுப்பி விட்டு முன் வாசலைப் பார்த்தபடி இருந்த மண்டபத்தின் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து கொண்டாள். மண்டையைப் பிளக்கும் வெய்யிலில் பிரகாரத்தைச் சுற்றி வந்த களைப்புக்கு மண்டபத்து நிழல் இதமாக இருந்தது.

“அம்மா பசிக்கறது” என்றாள் குழந்தை. காலையில் ஒரு இட்லி சாப்பிட்டது. இரண்டு வயசுக்கு இவ்வளவு நேரம் பசி தாங்கியதே பெரிய விஷயம்.

“இதோ அப்பா வந்துடுவா. வெளிலே போய் ஹோட்டல்ல சாப்பிடலாமா? குழந்தை என்ன சாப்பிடப் போறா?” என்று குழந்தையின் தலையைத் தடவிக் கொடுத்தபடி உமா கேட்டாள்.

“ஐஸ்கீம்” என்றாள் குழந்தை.

“ஆமா. அதான் உன்னோட லஞ்ச்!” என்று சிரித்தாள்.

அப்போது “நீங்க…நீ…உமாதானே?” என்ற குரல் கேட்டது.

உமா திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள். முகம் எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. குரல் கூட. ஆனால் அவளது க்ஷண நேர சிந்தனையில் விடை கிடைக்கவில்லை.

“ஆமா. நீங்க?” அவள் அவனை உற்றுப் பார்த்தாள். உயரமாக இருந்தான். முன் நெற்றி பெரிதாக இருப்பது போலத் தோற்றமளித்தது. பிரகாசமான வழுக்கை ! கண்களைக் கண்ணாடி கவர்ந்திருந்தது. மீசையற்ற பளீர் முகம். ஐயோ ! யார் இது? ஞாபகத்துக்கு வராமல் அடம் பிடிக்கும் நினைவு மீது எரிச்சல் ஏற்பட்டது.

“நான் ரமணி” என்று சிரித்தான். கீழ் உதடு லேசாக வளைந்து சிரித்ததைப் பார்த்ததும் அவளுக்கு ஞாபகம் வந்து விட்டது.

“மணிபர்ஸ் ரமணியா?” வார்த்தைகள் வேகமாக வெளியே வந்து புரண்டு விட்டன. அவள் உதட்டைக் கடித்துக் கொண்டாள். “ஸாரி”

“அவனேதான்” என்று அவன் மறுபடியும் சிரித்தான்.

அவள் அவனை உட்காரச் சொன்னாள் . சற்றுத் தள்ளி உட்கார்ந்து கொண்டான்.

“அடையாளமே தெரியலையே” என்றாள் உமா. பத்து வருஷங்கள் இவ்வளவு கீறல்களை ஏற்றி விடுமா முகத்திலும் உடலிலும்?

அப்போது அவன் முன் நெற்றியில் தலை மயிர் புரண்டு அலையும். சொன்ன பேச்சைக் கேட்காத குழந்தை போல. தலை முழுதும் அடர்த்தியான கறுப்பு மயிர். கண்ணாடியும் கிடையாது அப்போது. அதனால் பார்வையின் கூர்மையையும் சாந்தத்தையும் வெளிப்படையாகக் கண்கள் காட்டி விடும். பிறக்கும் போதே லேசாகப் பின்னப்பட்டிருந்த கீழ் உதடை ஆப்பரேஷன் செய்த பின்னும் சற்றுக் கோணலாகத் தோன்றுவதைச் சரி செய்ய முடியவில்லை. சிரிக்கும் போது அவன் வாய் சற்று அகலமாகத் தோன்றும். அதனால் பட்டப் பெயர். எவரையும் ஒரு முறை திரும்பிப் பார்க்க வைக்கும் தோற்றம். அவளுடைய இளம் வயதுத் தோழன். நெருக்கமான தோழன்.

“ஆனா நீ கொஞ்சம் கூட மாறலையே? முன் நெத்தி தலைமயிர்லே மாத்திரம் கொஞ்சம் வெள்ளை. அப்போ பாத்ததை விட இப்ப கொஞ்சம் குண்டு, மத்தபடி… ”

“நிறுத்து, நிறுத்து, அசிங்கமா ஆயிட்டேன்னு எவ்வளவு அழகா சொல்றே” என்று சிரித்தாள்.

“சும்மா கிண்டல் பண்ணினேன்” என்று சிரித்தான் அவனும்.

“அம்மா, பசிக்கிறது” என்று குழந்தை சிணுங்கினாள்.

“இதோ அப்பா வந்துடுவார்டா கண்ணா” என்ற அவள் அவனிடம் கணவன் பிரசாதம் வாங்கிக் கொண்டு வரச் சென்றிருந்ததைச் சொன்னாள்.

“சாக்லேட் சாப்பிடறயா?” என்று கேட்டபடி கால்சட்டைப் பைக்குள் கையை விட்டு இரண்டு சாக்லேட்டுகளை எடுத்துத் தந்தான், குழந்தை அம்மாவைப் பார்த்தது.

“வாங்கிக்கோ. வாங்கிண்டு என்ன சொல்லணும்?” என்று கேட்டாள் உமா.

அது கையை நீட்டவில்லை. உமா சாக்லேட்டுகளை வாங்கி அதன் கையில் கொடுத்தாள். உயர்ரக சாக்லேட்டுகள். மேல்நாட்டைச் சேர்ந்தவைஎன்பதைச் சுற்றியிருந்த வண்ணக் காகிதத்தில் இருந்த புரியாத எழுத்துக்கள் காண்பித்துக் கொடுத்தன.

“தங்கியிருக்கற ஹோட்டல்லே கொடுத்தானேன்னு வாங்கி பாக்கெட்லே போட்டுண்டேன்” என்றான்.

“எந்த ஹோட்டல்?”

“ரிஜென்ஸி.”

“காஞ்சிபுரத்து ஸ்டார் ஹோட்டல்!” என்று சிரித்தாள் உமா.

குழந்தை அம்மாவிடம் வாங்கிய சாக்லேட் ஒன்றைப் பிரித்தபடி அவனைப் பார்த்து ” டேங்யூ” என்று மழலையில் மிழற்றியது.

“அடேயப்பா!” என்றான் ரமணி.

“நீயும் எங்களை மாதிரி வெளியூர்தானா?” என்று கேட்டாள் உமா.

“ஆமா. நா இப்போ டில்லியிலே இருக்கேன். நீ?”

“நாங்க பெங்களூர்லே இருக்கோம். நாலஞ்சு வருஷமா எனக்குதான் இங்க வந்து காமாட்சியைப் பாத்துட்டுப் போகணும்னு. சின்னவளா இருக்கறச்சே முதல் தடவையா வந்தப்போ அவளோட முகத்திலே பளீர்னு மின்ற முத்து மூக்குத்தியும், காதிலே வைரத் தோடும் கழுத்திலே ரத்னப் பதக்கமும், மோகன மாலையும் , வைடூரிய புஷ்பராகத்தால பண்ணின தாலியும்னு ஜொலிக்கறதைப் பாத்து மயங்கிட்டேன். ஆனா இப்போ வந்திருக்கறச்சே அதெல்லாம் ஒண்ணும் கண்ணிலே படலே. இப்பவும் அவ்வளவு அலங்காரமும் அவ உடம்பிலே இருந்தாலும் நான் பாக்கறச்சே பளீர்னு வெறும் மூஞ்சியும், ஆளை அடிக்கிற சிரிப்பும்தான் எனக்குத் தெரிஞ்சது. மனசெல்லாம் ஏதோ ஒரு குளிர்ச்சி பரவர மாதிரி இருந்தது எனக்கு ” என்று உடம்பைச் சிலிர்த்துக் கொண்டாள். “ஆனா அவருக்கு இந்தக் கோயில் குளமெல்லாம் போறதுக்கு இன்ட்ரெஸ்ட் கிடையாது. நான்தான் இழுத்துண்டு வந்தேன்.”

“எனக்கும் அம்மனின் முகத்தைப் பாத்து ஒரே பிரமிப்பா இருந்தது. ஆனா நீ சொல்ற மாதிரி எனக்குச் சொல்லத் தெரியலே” என்றான் ரமணி. தொடர்ந்து “அப்போ மனசைக் கவர்ந்த விஷயம்லாம் இப்பவும் கவரணும்னு இருக்கறதில்லையே” என்றான்.

“வயசாயிடுத்துங்கறே !” என்று சிரித்தாள் உமா. “ஆனா எல்லாத்தையும் அப்படிக் கழிச்சுக் கட்டிட முடியாதுன்னு வச்சுக்கோயேன்.”

அவன் அவள் சொல்வதின் அர்த்தத்தைக் கிரகிக்க முயன்றான்..

“டில்லிலேர்ந்து நீ எப்படி இவ்வளவு தூரம்?” என்று கேட்டாள் உமா.

“மெட்றாஸ்லே என் மச்சினன் பையனோட கல்யாணம்னு வந்தேன். நேத்திக்குக் கல்யாணம் முடிஞ்சது. நாளைக்கு ஊருக்குத் திரும்பிப் போறேன். நடுவிலே ஒரு நாள் இருக்கேன்னு இங்க வந்தேன்.”

“உன் ஒய்ப்?”.

“இல்லே. அவளுக்கு இங்கல்லாம் வந்து போறதிலே இன்ட்ரெஸ்ட் கிடையாது. வரலைன்னு சொல்லிட்டா. அவளுக்குத் தெரிஞ்ச பெயிண்டரோட எக்சிபிஷன் சோழமணடலத்திலே நடக்கறதுன்னு போயிருக்கா” என்றான்.

“ஓ, பெயிண்டிங் பெரிய விஷயமாச்சே!” என்றாள் உமா.

அவன் கண்கள் அகலமாக விரிந்து அவளைப் பார்த்தன.

“ஏன் தப்பா எதாவது சொல்லிட்டேனா?”

“இல்லே. அன்னிக்கு மாதிரியே இப்பவும் இருக்கியே. எதைப் பாத்தாலும் எதைக் கேட்டாலும் எதைத் தொட்டாலும் நன்னா இருக்குங்கற ரண்டு வார்த்தையை வாயில வச்சிண்டு…”

“நம்ப கிட்டே வரவாகிட்டே எதுக்கு ஆயாசமா பேசணும்? அவா சந்தோஷப் படணும்னுதானே வரா?”

“அன்னிக்கும் உங்கப்பா சந்தோஷப்பட்டா போறும்ன்னு நீ நினைச்சுதான்…” என்று மேலே சொல்லாமல் நிறுத்தி விட்டான்.

அவள் பதில் எதுவும் அளிக்காது அவனைப் பார்த்தாள். அவள் வலது கை விரல்கள் குழந்தையின் தலையைத் தடவிக்கொண்டிருந்தன.

“இன்னமும் அந்தப் பழசையெல்லாம் நினைச்சிண்டிருக்கயா?”

“எப்பவும் நினைச்சிண்டு இருக்கறதைப் பழசுன்னு எப்படிக் கூப்பிடறது?”

அவள் மறுபடியும் பேசாமல் இருந்தாள்.

“ஏன் உனக்கு ஞாபகம் வரதில்லையா?”

“நினைப்பு ஒண்ணைத்தானே எனக்கே எனக்குன்னு வச்சிண்டு சந்தோஷப்பட முடியும்? அதை நான் எப்படி எதுக்காக விட்டுக் கொடுக்கப் போறேன்?” என்றாள் அவள்.

தொடர்ந்து “இன்னிக்கு உன்னைப் பாக்கப் போறேன்னு உன்னைப் பாக்கற நிமிஷம் வரைக்கும் எனக்குத் தெரியாது. ஆனா காமாட்சி நீயும் நாலுலே ரண்டுலே சந்தோஷப்பட்டுக்கோயேன்டின்னு அனுப்பி வச்சுட்டா போல இருக்கு” என்றாள். அவனைத் தின்று விடுவது போல ஒருமுறை ஏற இறங்க முழுதாகப் பார்த்தாள்

“அம்மா, அப்பா!” என்றது குழந்தை.

அவன் திரும்பிப் பார்த்தான். அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த நபருக்கு அவன் வயதுதான் இருக்கும். கொஞ்சம் பூசின உடம்பு. உமாவை விட ஒரு பிடி உயரம் கம்மி என்பது போலக் காட்சியளித்தான். கையில் ஒரு மஞ்சள் நிறப் பை. பிரசாதம் அடங்கியிருக்கும்.

சேது அவர்களை நெருங்கியதும் குழந்தை அவனை நோக்கித் தாவியது. கையிலிருந்த பையை உமாவிடம் கொடுத்து விட்டு அவன் குழந்தையைத் தூக்கிக் கொண்டான். ஆனால் அவன் பார்வை மட்டும் ரமணியை விட்டு விலகவில்லை.

உமா ரமணியிடம் ” இவர்தான் என் ஆத்துக்காரர். சேதுன்னு பேர். இவன் ரமணி. எங்க ஊர்க்காரன். பால்யத்துலேர்ந்து பழக்கம். எதேச்சையா என்னைப் பாத்ததும் அடையாளம் கண்டு பிடிச்சுட்டான். எனக்குத்தான் அவன் யார்னு புரியறதுக்கு ரண்டு நிமிஷம் ஆச்சு. பத்து வருஷம் கழிச்சுப் பாக்கறோம்” என்று சிரித்தாள் உமா.

சேது “ஓ!” என்றான். அவன்கண்கள் லேசாகப் படபடத்து இமைகள் ஏறி இறங்கின. அவனுக்கு எரிச்சல் ஏற்பட்டால் அம்மாதிரி அவன் முகம் போவதை அவள் கவனித்திருக்கிறாள். உமா ரமணியைப் பார்த்தாள். அவனும் உன்னிப்பாக சேதுவைக் கவனித்துக் கொண்டிருந்தான்.

ரமணி சேதுவைப் பார்த்து “கிளாட் டு மீட் யூ” என்று புன்னகையுடன் சொன்னான்.

“நம்ப கல்யாணத்துக்கு இவர் வந்தாரோ?” என்று சேது கேட்டான்.

“இல்லை. நான் வரலே. எனக்கு அப்போதான் டில்லிலே வேலை கிடைக்கும் போல இருந்ததுன்னு அங்கே இருந்தேன்” என்றான் ரமணி. அவன் பார்வை உமாவின் மேல் பட்டு விலகி நின்றது.

“இல்லே. பால்யத்திலேர்ந்து சிநேகம்னு சொன்னேளே. அதான் கேட்டேன். இப்பதான் நாம ஒருத்தருக்கொருத்தர் முதல் தடவையா பாக்கறோம். இல்லே?” என்றான் சேது.

“ஆமா.”

அப்போது குழந்தை “அம்மா, மூச்சா” என்றது.

உமா கணவனைப் பார்த்தாள்.

சேது அவளிடம் ” வெளி வாசலுக்கு ரைட் சைடிலே ஒரு பே அண்ட் யூஸ் டாய்லெட் இருக்கு. நா வரச்சே அங்கதான் போனேன். க்ளீனா வச்சிருக்கான்” என்றான். “நீ வரவரைக்கும் நா இவரோட பேசிண்டு இருக்கேன்.”

உமா ரமணியைப் பார்த்து “என்ஜாய் மை ஹஸ்பன்ட்ஸ் கம்பனி” என்று சொன்னாள். அது எச்சரிக்கும் குரல் போல ஒலித்தது.

“உங்களைப் பத்தி உமா ஜாஸ்தி சொன்னதில்லே. அவ அப்பா ஒரு தடவை வந்திருந்தப்போ நீங்க நன்னா வசதியா இருக்கறதா உமா கிட்டே சொல்லிண்டு இருந்தார். உங்க ஒய்ப் சைடிலே அவா பெரிய இடம்னு அவர் சொன்னப்பிலே எனக்கு ஞாபகம்” என்றான்.

“யாரு ராமகிருஷ்ண மாமாவா? ஆமா. எங்க ரெண்டு குடும்பத்துக்கும் ரொம்ப சிநேகம். அக்கா அத்தை மாமா பெரியப்பா பெரியம்மான்னு உறவு வச்சுதான் ரெண்டு குடும்பத்துக்குள்ளேயும் கூப்பிடுவோம்” என்று சிரித்தான் ரமணி. அவன் மனைவி பக்க செல்வாக்கைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.

“நீங்க உமா ஆத்துக்குப் பக்கத்திலே இருந்தேளா? இல்லே ஒரே தெருவா?”

“ஒரே ஆத்திலே அவா கீழே , நாங்க மேலே இருந்தோம். அது உமாவோட தாத்தா வீடு. நாங்க வாடகைக்கு இருந்தோம். நாங்க ரெண்டு பேரும் ஒரே ஸ்கூல்லதான் படிச்சோம். ஆனா நான் அவளுக்கு இரண்டு வருஷம் சீனியர். அவளுக்கு கணக்கு சைன்ஸ் எல்லாத்துக்கும் நான்தான் ட்யூஷன் வாத்தியார்.”

சேதுவின் முகத்தில் புன்னகை தெரிகின்றதா என்று ரமணி பார்த்தான். இல்லை.

“அப்ப ரொம்ப நெருங்கின பழக்கம்னு சொல்லுங்கோ.”

ரமணி உடனே பதில் சொல்லவில்லை. சற்றுக் கழித்து “நாம ஒருத்தரை ஒருத்தர் தினமும் பாத்துக்கறதில்லையா, அது மாதிரிதான்” என்றான்.

“ஆனா இவ்வளவு வருஷங் கழிச்சு கரெக்ட்டா உமாவைக் கண்டு பிடிச்சிட்டேளே!” என்றான் சேது.

அந்தக் குரலில் ஏதாவது வித்தியாசமாகத் தெரிகிறதா என்று ரமணி பார்த்தான். இருப்பது போலவும் இருந்தது. இல்லாதது போலவும். இருந்தது

அப்போது உமா திரும்பி விட்டாள் . கணவனைப் பார்த்து “என்ன சொல்றான் ரமணி?” என்று கேட்டாள்.

“இவ்வளவு வருஷங் கழிச்சு எப்படி நான் உன்னை அடையாளம் கண்டு பிடிச்சேன்னு கேக்கறார்” என்று ரமணி பதில் சொன்னான்.

“அன்னிக்கிப் பாத்த அதே அச்சுப் பிச்சு முகம் கொஞ்சம் கூட மாறாம இருக்கேன்னு பாத்துக் கண்டு பிடிச்சிட்டான்” என்றாள் உமா.
பிறகு கணவனைப் பார்த்து “குழந்தை பசிக்கிறதுன்னு அப்போலேந்து சொல்லிண்டு இருக்கு. நாம கிளம்பலாமா?” என்று கேட்டாள்.

“ஓ கிளம்பலாமே!” என்று சேது எழுந்தான். ரமணியும் எழுந்தான். ‘எங்களுடன் சேர்ந்து சாப்பிட வாயேன்’ என்று சேது கூப்பிடுவான் என்று உமா எதிர்பார்த்தாள். அவன் கூப்பிடவில்லை. சரியான கிறுக்கு என்று உமா மனதுக்குள் திட்டினாள்.

“ரமணி, நீயும் எங்களோட சாப்பிட வாயேன்” என்றாள் உமா.

அவன் “இல்லே உமா. நான் லேட்டா டிபன் சாப்பிட்டேன். பசியே இல்லை” என்று மறுத்தான்.

சேது ரமணியிடம் “உங்க ஒய்ப், குழந்தையெல்லாம் கூட்டிண்டு வரலையா?” என்று கேட்டான்.

“ஒய்ப் மெட்றாஸ்ட்லே வேலையிருக்குன்னு தங்கிட்டா. குழந்தை அம்மாவை விட்டு எங்கையும் வராது.”

“குழந்தை இருக்கா? நீ சொல்லவே இல்லையே. பையனா பொண்ணா?” என்று உமா ஆவலுடன் கேட்டாள்.

“பையன்தான். இந்தப் பொட்டுண்ட விட ஒண்ணு ரண்டு வயசு ஜாஸ்தி இருப்பான்.”

உமா “போட்டோ இருக்கா? எனக்குப் பாக்கணும் போல இருக்கு” என்றாள்.

அவன் கால்சட்டையின் பின்புறப் பாக்கெட்டிலிருந்த பர்ஸை எடுத்துத் திறந்து போட்டோ ஒன்றை வெளியே எடுத்துக் கொடுத்தான். போட்டோவில் ரமணியுடன் அவனது குழந்தையும் அதன் அம்மாவும் இருந்தார்கள். உமா “ரொம்பக் க்யூட்டா இருக்கே குழந்தை!” என்று சொன்னபடி போட்டோவை சேதுவிடம் நீட்டினாள்.

அதை வாங்கிப் பார்த்த சேது “அட, ஆர். நிர்மலா மாதிரி இருக்காளே உங்க ஒய்ப்!” என்று ஆச்சரியத்துடன் ரமணியைப் பார்த்தான்.

ரமணி அவனிடம் “நிர்மலாவை உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டான். உமாவும் கணவனை ஆச்சரியத்துடன் நோக்கினாள்.

“ஆமா. திருச்சியிலே நாங்க ஆண்டார் தெருவிலே இருந்தப்போ எங்க ஆத்துக்கு எதிர் ஆத்திலே அவ இருந்தா. நான் அவ ஆத்திலேதான் எப்பவும் இருப்பேன். இல்லாட்டா அவ எங்காத்துலே. ரெண்டு பேரும் சேந்து ரொம்ப ஊர் சுத்துவோம். சினிமா போவோம். குட் ஓல்ட் டேஸ். திடீர்னு இன்னிக்கி அவ உங்க ஒய்ப்ன்னு தெரியறப்போ என்ன ஆச்சரியமா இருக்கு? தி வேர்ல்டு இஸ் ஸோ ஸ்மால்” என்றான் சேது.

போஸ்டர்

லட்சுமிஹர்

 “லோ கேக்குதா… ஹலோ,“ சிக்னல் கெடைக்காம அப்படியே நடந்து கேணிப் பக்கம் இருக்குற பம்பு செட்டு வரைக்கும் வந்துட்டான் அமுதன். வெயிலு அவனப் பாத்து ரொம்ப நேரமா பல்ல காட்டிட்டு இருந்துச்சு, சுளீர்னு.

செல்போன தலைக்கு மேல சிக்னல் கெடைக்க தூக்கிட்டு அலஞ்சவன் சடாலுனு காதுல வச்சு பதட்டப்பட்டுப் போனவனாட்டம், “ஹலோ..”

“சொல்லுங்க “

“ ராம் கடையா?”

“ஆமா“

“அப்பாக்கு எழவு போஸ்டர் அடிக்கணும், அதான் கூப்டேன் “

“போட்டோ அனுப்புங்க இன்னைக்கு மதியம் கொடுத்தரலாம்”

தன்னோட தீனிய பாதி புடுங்குன வேகமாட்டம், “ஐயோ.. நீங்க வேற இன்னும் எங்க அப்பேன் சாகல.. எதுக்கு இம்புட்டு அவசரம்!“

“நீதான்யா இப்ப போன் பண்ண“

“இல்ல.எம்புட்டுனு கேக்கலாம்னுதான்“

அமுதன் எம்புட்டு ஆகுன்றத மட்டும் கேட்டு வச்சுக்கிட்டான். ராத்திரி முழிச்சிருந்து ட்ரிப்பு கார் ஓட்டுன வலி பிக்க கை, கால நீட்டி நெட்டி புடுச்சு, பொறந்ததுலருந்து பீபேண்ட வீட்டு முன்வாசல்ல வந்து உக்காந்தான்.

கொடஞ்சதுல மிச்சமிருந்த மலை அடிவார கிராமம். எண்ணுனா ஒரு ஐம்பது வீடுகதான் தேறும், போனீங்கனா மதுர ரோடு திருமங்கலம் விளக்குல எறங்கிக்கலாம்.

கைல வச்சுருந்த செல்போன திண்ணையில வச்சுட்டு வீட்டுக்குள்ள போனான். நடுவீட்ல அவன் அப்பே மணிமுத்து படுத்துருந்துச்சு, விடுஞ்சப்போ மணியக்கா வச்சுட்டு போன சாதம் கம்முனு மணிமுத்து எந்திரிக்கட்டுமுனு இருக்க.

அப்பே படுத்துருந்த கட்டுலு பக்கம் போனவன் தட்டையும் தொனைக்கு கையில் எடுத்துகிட்டு அப்பே காது பக்கம் போய், ‘சாப்டலயா இன்னும்’

பதிலுக்கு, நீ சொன்னது கேட்டுச்சுன்ற மாதிரி தலைய ஆட்டி கண்ண தொறந்து மூடிக்கிட்டார் தொர.

தட்லருந்த சாதத்த கைக்கு இம்புட்டா எடுத்து ஊட்டுனான். இத்துனுண்டுதான் சோறு, ரெண்டு வாய்க்கு மேல உள்ள போல. தண்ணியக் கொடுத்து வேலைய முடுச்சுகிட்டான் .

‘எப்ப வந்த..?” மணியக்கா சவுண்டு உள்ள கேட்டுச்சு. கட்டுலுல உக்காந்திருந்தவன் எந்திருச்சு தட்ட ஓரமா போட்டு கைய கழுவிக்கிட்டான், “இப்போதா உள்ள நொழஞ்சே அத்த, சாப்டாம வச்சுருந்தாரு அதா எடுத்தே ஊட்ட, கொஞ்சூண்டு தான் சாப்ட்டாரு.”

மணியக்கா அமுதனோட அப்பாக்கு கூடப் பொறந்த கடைசி தங்கச்சி. அமுதனுக்கு வெவரம் தெருஞ்சது மொத மணியக்கா அங்க தான் இருக்கு. அத்துட்டு வந்தவன்னு ஊர் சொல்லுது, நான் சொல்லல.

“அமுதா.. அப்பனுக்கு நோவு கூடுதுடா“ மணியக்கா அத சொல்லி முடிக்கிறதுக்குள்ள அண்ணே படுத்திருந்த கட்டுலுக்கு கீழ போய் உக்காந்துகிச்சு.

அமுதன் மணிமுத்த ஒருக்கா பாத்த வாக்குல அதுக்கு பதில் சொல்லாம வெளிய கெளம்பிட்டான்.

திண்ணையில கெடந்த செல்போன பாத்த உடனே தான் விட்டு போன அப்பன் போட்டோ நெனப்பு தொத்திக்கிச்சு.

வெளிலருந்து திரும்ப நடுவீடுக்கு வந்தவன் மணியக்காகிட்ட, “அப்பா போட்டோ இருக்கா அத்த”

மணியக்கா, “அதெல்லாம் தெர்ல அமுதா. அண்ணே கல்யாணத்தப்ப எடுத்த போட்டோதான்.. அதயும் உங்க அம்மா…” உங்க அம்மானு மேல சொல்ல வந்தத வேணும்னே சொல்லாம விட்ருச்சு.

வீட்டுல இருந்த சாமான் ஒன்னையும் விடல எல்லாத்துலையும் போட்டோ இருக்கானு மூக்க நொழச்சுட்டான். ஒரு போட்டோனாது கைல மாட்டிக்கும்னு நெனச்சவனுக்கு, ஒன்னும் இல்லேன்றத ஏத்துக்க முடில. மிச்ச சொச்சம் விட்டுருந்த எடத்துலயும் தேடிப்புட்டான், ‘பெப்பே’.

ஹாலுக்கு வந்தவன் அத்தையப் பாத்து, “வேற எங்கயாச்சும் போன போது எடுத்தது இருக்குமா?“

மணியக்காவுக்கு அப்படி ஏதும் ஞாபகம் இல்ல, “நம்ம கல்யாணி வீட்டு விசேஷத்தப்போ போட்டோ எடுத்துட்டு இருந்தாங்கனு அண்ணே சொல்லுச்சு.“

கல்யாணி வீட்டு ஆளுங்க இங்கிருந்து கெளம்பி ரொம்ப நாள் ஆச்சு. எங்குட்டு போய் அமுதன் அத தேட. போனு அடிக்கும் சத்தம். அமுதனோட ஓனர் தான்.

“அமுதா வேலைக்கு வர முடியுமா நாளைக்கு ..?”

“அப்பாக்கு முடியாம இருக்குணா.. இந்த வாரம் முடு….” பாதியோடு நிறுத்திக்கிட்டான்.

“ஹாஸ்பிட்டல் போகலயா”

“வச்சு பாத்துட்டு வந்தாச்சுணா. கடைசி நேரம் தான். ஒன்னும் முடியல, அதான் கூட்டிட்டு வந்துட்டோம்.”

“எங்க பாத்த?.. ”

“நம்ம உசிலம்பட்டி பிரபாகரன் டாக்டர் கிட்டதாணா ”

“நல்லா பாப்பாரே. நல்ல மனுஷன் ஆச்சே.”

“ஆமாணா”

“அப்பனா எல்லா முடுஞ்சுதானா,” என இழுத்தார் ஓனர்.

….

“சரி அப்போ எந்த விசயனாலும் சொல்லு. கைல பணம் இருக்குல “

“வேணுனா கேக்குறேணா.“ பம்பு செட்டு நிழல் அமுதனுக்கு புடுச்சதுதான், அந்தப் பக்கம் இருக்குற கெணத்த எட்டிப் பாத்தான், அடி மட்டத்துல கெடஞ்சு தண்ணி அழுக்கேறி போய். இங்க சின்ன வயசுல வந்துருக்கான், அம்மா கூடத்தான். அமுதனோட அம்மா மணிமுத்தோட கோச்சுட்டு போனதுக்கு பின்னாடி கெணத்து பக்கம் வந்ததே இல்ல பம்பு செட்டோடையே நின்னுக்குவான். அதுக்கப்பறோம் அம்மா பத்தி அமுதனுக்கு ஒண்ணுமே தெரியாது .

“கடைசியா இங்க விழுந்துச்சு. கெணத்துல,“ அது தான் அம்மா பத்தி அமுதனோட கடைசி ஞாபகம்.

“அதோட சாபமோ என்னவோ அதுகப்பறோம் இந்த கேணி நெம்பவே இல்ல“.

அமுதன் அம்மா பத்தி யார்ட்ட கேட்டாலும் ஒழுங்கான தகவலே இல்ல.

அதான் மணியக்கா போட்டோ பத்தி சொல்லும் போது திக்குச்சு, ஒரு பயத்தோட. “அம்மா எடுத்துட்டு போயிருக்கும்னு.“ அது அண்ணனுக்கு கேட்டுப்புடும்னு, அதுக்கடுத்து சொல்ல வந்த வார்த்தைய முழுங்கிப் புடுச்சு. மணியக்காவும் அமுதனோட அம்மாவும் தான் எப்பயும் ஒண்ணா சுத்துவாங்க. அமுதனோட அம்மா போனதுல இருந்து மணியக்கா இந்த கெணத்துப் பக்கம் வாரத நிப்பாட்டிக்கிச்சு. சின்னாளப்பட்டி பக்கம் அவங்க அம்மா அப்பாவோடதான் அமுதனோட அம்மா இருக்காங்கனு ஒரு சேதி அவ்ளோதான்.

அப்பா போட்டோக்கு என்ன பண்ணணும்னு தெரியாம இருக்கான் அமுதன். இப்ப போய் இதெல்லா போட்டு மனசுக்குள்ள ஒளப்பிகிட்டு கெடந்தான் .

திடீருன்னு கட்டுல்ல படுத்துக்கெடக்கும் அப்பேன் எந்துருச்சு அமுதன் கைய புடுச்சு அந்த கெணத்துகிட்ட கூட்டி போய் ஒன்னும் பேசாம ஓஓன்னு அலறமாட்டம் கனா கண்டுருக்கான், அப்போ அவங்க அப்பேன் சின்ன வயசுக்காரனாட்டம் இருந்தாரு, அழுதுட்டிருந்தவர திடீருன்னு காணல, அமுதன் அந்த கெணத்தவே சுத்தி வந்துட்டு இருந்தான். சுத்தி வந்தான். சுத்தி சுத்தி, சுத்தி வந்துட்டே இருந்தான்.

“ஏன்டா எங்களுக்கலாம் டவர் கெடைக்க மாட்டிது பேசணுனா கூட. நீ மட்டும் எப்பயும் போனு கையுமா சுத்துற“

ஊர்ல இப்போ இருக்கவங்கள விரல விட்டு எண்ணிப்புடலாம். எல்லா இங்கிருந்து நகந்து போய்ருச்சுங்க, இல்ல இன்னும் பொழப்ப தேடி கெளம்பிட்டே தான் இருக்குங்க ஜனம். இளவட்டங்களே கொறஞ்சு போச்சு. அப்படிருந்தும் இங்கருக்கும் சிலதுகள்ல ஊமையன் மகன் வடிவேலு கொஞ்சம் ஊருக்குள்ள ஜோரா திரியிறவன், பையன் பசும்பொன்னு பாலிடெக்னிக் காலேஜில படிக்கிறான்.

“அண்னே இது டச் மொபைல். நா காலேஜில இருந்தே படம் ஏத்திட்டு வந்துருவேன் அத பாப்பே. இங்க வாங்க நாம செல்பி எடுப்போம்“

“எம்புட்டுடா. இது.”

“7000 ணா..”

“ஒக்காலோளி உனக்கெல்லா எவண்டா வாங்கித் தரது. ”

“எங்க மாமே வச்சுருந்துச்சு. அது புதுசு வாங்குனதும் எனக்கு பழச கொடுத்துடுச்சு.“

“ஏன்டா உங்கொக்காவ கட்டுனவன் அம்புட்டு க்ராக்கியாடா? சிருச்சு தொலையாத மாட்டுப் பல்லு தெரிது. இங்க வா எனக்கு ஒரு ஒத்தாச பண்ணு“

ஹால்ல நொழஞ்சதும் கட்டில்ல படுத்துருந்த மணிமுத்தை ரெண்டு பேரும் பாத்தாங்க. மணியக்கா அமுதனோட வந்த வடிவேலுக்கு குடிக்க தண்ணி கொடுத்தா. அமுதன் கட்டில மூலையில இருந்து கொஞ்சம் வெளிச்சம் மேல படுறமாட்டம் நகத்துனான்.

வடிவேலு கையில வச்சுருந்த மொபைல் போனுல கேமராவ ஆன் செஞ்சு மணிமுத்துக்கு பக்கத்துல போனவன், “அண்னே அப்பா கண்ண மூடி இருக்காரு “

கட்டில்ல உக்காந்திருந்த அமுதன், அப்பன் காதுக்கு பக்கத்துல போய். “எப்போய். அமுதே வந்துருக்கே, கண்ண தொறங்க“

ஒன்னும் கேக்காத மாட்டம் பெருசு இருக்க, பக்கத்துல நின்ன மணியக்கா, “நேத்துலருந்து ஒண்ணுமே உள்ள போகல.“

கொசுவம் போட்டு கட்டிருந்த சேலையோட மூக்க எடுத்து ஒப்பாரி பாடப் போன வாயப் பொத்திக்கிட்டா.

இன்னு கொஞ்சம் சத்தமா அதட்ற தொனில, “எப்போய் அமுதே வந்துருக்கே கண்ணத் தொற..”

இந்தா பொலச்சுப் போனு பெருசு மொகத்த கொஞ்ச அசச்சுக் காட்ட, பக்கத்துல இருந்த வடிவேல, “டேய். மாட்டுப் பல்லு மவனே, கரெக்டா எடு. என்ன பாரினா போற, பக்கத்துல வந்து எட்றா”

அமுதே அதுக்குள்ள அவங்க அப்பன் முகத்த தண்ணில தொடச்சுட்டு, கொஞ்சம் பவுடரையும் போட்டுவிட்டான் .

“எப்போய் இங்க பாரு.. இங்க பாரு…” அதுக்குள்ள வடிவேலு நாலு தடவ பட்டன அழுத்தி சத்தம் வெளிய கேக்குற அளவுக்கு போட்டோ எடுத்துட்டு இருந்தான்.

மணிமுத்துனால பாதி முடிது, ஆனா முழுசா கண்ணத் தொறக்க முடில. முடுஞ்ச அளவு பாத்தாங்க அப்பறோம் தொந்தரவு செய்யக் கூடாதுன்னு விட்டுட்டாங்க.

எடுத்த போட்டோவ பாத்த அமுதனுக்கு அதுல ஒன்னு கூட நல்லதா புடிபடல. ஏன்னா அப்பனோட பாதி கண்ணு மூடிதான் இருந்துச்சு.

“எதுவுமே நல்லா இல்லண்ணே “

மொகத்த உம்முன்னு வச்சுக்கிட்டு, “ஆமாடா,“ தலைய மட்டும் ஆட்டி, எடுத்த போட்டோவையே பாத்துட்டு இருந்தான் அமுதன்.

மண்டைய ஒடச்சுக்கிட்டு ஏதோ புது ஓசன வந்தகணக்கா வடிவேலு, “அண்ணே.. பேசாட்டுக்கு நம்ம கம்ப்யூட்டர்ல கொடுத்து கண்ண மட்டும் தொறக்குற மாட்டம் பண்ணிரலாமா?“

“இங்க யாருடா அப்டிலா பண்ணுவாங்க? உனக்கு யாராச்சு தெரியுமா?“

“தெரியு.. அப்பனா போட்டோவா மாத்திட்டு வரேன் மொதல நானு,“ சொல்லிகிட்டே அங்கேந்து கெளம்பிட்டான்.

ரெண்டு நாளா நீர் ஆகாரம் மட்டு உள்ள போய் மணிமுத்து உடல காப்பாத்தி வச்சுட்டு இருந்துருச்சு. வடிவேலு சொன்ன ஓசன சரியா வரல. அந்த போட்டோல கண்ண தொறந்ததும் வேத்து ஆளு யாரோ போல ஆகிட்டதால வேணாம்னு சொல்லிட்டான்.

ஹால்ல அப்பாவ பாத்தபடி அமுதனும் வடிவேலும் உக்காந்து இருந்தாங்க..

“இப்போ என்னாணே பண்றது.. ”

….

“போட்டோவும் சரியா வரலையேணே,“ அமுதன திரும்பி பாத்தான்.

“போஸ்டர் அடுச்சு நல்லா தூக்கி போடலாம்னு இருந்தேன். நடக்காது போலயே.”

அமுதன் மண்டைக்குள்ள இப்போ எழவுக்கு எவ்ளோ செலவாகுங்கிறது மனக்கணக்காக ஓடிட்டு இருந்துச்சு..

“அண்ணா பேசாட்டுக்கு வரஞ்சரலாமா? “

“அதுவு இப்போ கண்ண தொறந்த மாட்டம் தான இருக்கும்”.

மணியக்கா படுத்தே கெடந்த அவ அண்ணனுக்கு தண்ணி தொட்டு எடுத்தா. ஒடம்ப திருப்பாம ஒரே பக்கம் இத்தன நாளு படுத்தே கிடந்ததால பின்னாடி முதுகெல்லா தோல் பிஞ்சு சொத சொதனு கெணத்து பாசாம் பிடிச்சது போல இருந்துச்சு கூட பூஞ்சை வாசம். ஒத்தாசைக்கு உக்காந்துருக்க, மணியக்காக்கு எப்புடி இது அண்ணி விழுந்த கெணத்த ஞாபகம் படுத்தாம போயிரும்?.

பெருச கயித்து கட்டில்லருந்து இரும்பு கட்டிலுக்கு மாத்தியாச்சு. மாத்துன கட்டிலு பெருசுக்கு புடிக்கலங்குற மாதிரி அன்னைக்கு நைட்டே செத்து போச்சு.

ஒரு கட்டத்துல சுத்துரத நிப்பாட்டிட்டு ஈரம் வத்தி போயிருந்த கெணத்த அமுதன் எட்டிப் பாத்தான்.

அப்பனுக்கு தான் நெனச்சத எதுவும் பண்ணமுடியாம போன வருத்தம் முகத்துல தெருஞ்சாலும், அத காட்டிக்காம அப்பன் பக்கத்துல போனவனுக்கு என்ன தோணுச்சோனு தெரில, இதுவரைக்கும் அவர்கிட்ட சொல்லாத ஒன்ன சொல்லப் போரவனாட்டம் மரச் சேருல உக்கார வச்சு செவுத்தோட சாத்தி வச்சுருந்த மணிமுத்து காதுகிட்ட போய், யாரு பாத்தா என்னங்குற தொனியில அவன், “அந்த கெணறு இன்னும் ஆழம் போலப்பா”

அமுதன் வெளிய வந்து அடுத்த சடங்குக்கான வேலைய பாக்கப் போக, பெருசோட போட்டோ இல்லாம வெறும் எழுத்த மட்டும் வச்சு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிருந்துச்சு. அதுலயும் அம்புட்டு பெழ!