எழுத்து

இன்று நிம்மதியாகத் தூங்க வேண்டும்- அசோகமித்திரன் சிறுகதை குறித்து

 அஜய் ஆர்

ami

அலுவலங்களில் வேலை முடிந்து அனைவரும் வீட்டிற்குச் செல்ல ஆரம்பிக்கும் அன்றாட மாலைப் பொழுதில் அசோகமித்திரனின் ‘இன்று நிம்மதியாகத் தூங்க வேண்டும்‘ சிறுகதை ஆரம்பிக்கிறது. சிக்னல் விழும்போது “… ஏதாவது ஒரு வரிசை வெறி பிடித்தது போலச் சீறி விரையும்,” என்று எழுதியிருந்தால் வழக்கமான விவரிப்பாக இருந்திருக்கும். ஆனால் அதனுடன் “பிரமாண்டமான பஸ்களிலிருந்து சாத்வீகமாகத் தோற்றமளிக்கும் சைக்கிள்கள் வரை அவற்றுக்குச் சாத்தியமான ஆவேசத்தைக் காட்டி ஓடின,” என்ற பின்னிணைப்புப் போன்ற வரியை கோர்க்கும்போது – உண்மையில் அனைத்து வாகனங்களும் ஒரே வேகத்தில் செல்வதில்லை எனபதை, “…அவற்றுக்குச் சாத்தியமான ஆவேசத்தைக் காட்டி ஓடின,” என்று வாகனங்களில் குடிகொள்ளும் வெறி வெளிப்படுவதில் உள்ள வேறுபாட்டை, – அந்த விவரிப்பு நுட்பம் கொள்கிறது. இத்தகைய சிக்கனமான சித்தரிப்புக்கள் பரபரப்பான அந்தி வேளையை உயிர் கொள்ளச் செய்கின்றன.

இந்த பரபரப்பின் ஒரு கண்ணியான சகுந்தலா அலுவலகம் விட்டு வெளியே வருகிறாள். பேருந்து நிறுத்தம் வரும் அவள் ராஜரத்தினம் அங்கில்லை என்று ஆசுவாசப்படும்போது அவள் மனமும் ஏதோ பரபரப்பு கொண்டுள்ளது என்பது புரிகிறது. ராஜரத்தினம் அவளைப் பின்தொடர்ந்து தொந்தரவு செய்பவன் ஒன்றும் இல்லை. அவனும் சகுந்தலாவும் காதலர்கள். அப்போது அவனும் அங்கு வர ஒரு ‘பொறி’ மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஹோட்டலுக்குச் சென்று உரையாடுகிறார்கள். ராஜரத்தினம் தாங்கள் மணம் புரிவது குறித்து சகுந்தலா தன் வீட்டில் சொல்லிவிட்டாளா எனக் கேட்க, சகுந்தலா உடனே பதில் சொல்வதில்லை. சகுந்தலாவின் அக்காவிற்கு திருமணமாகாத நிலையில் தன்னால் வீட்டில் இது குறித்து பேச முடியாத சூழல் இருப்பதாய் சகுந்தலா சொல்கிறாள். இது இவர்களுக்கிடையே ஏற்கனவே நடந்துள்ள, அடிக்கடி நடக்கும் உரையாடலின் நீட்சிதான் என்று நமக்குப் புரிகிறது. சினம் கொள்ளும் ராஜரத்தினம் அடுத்த திங்களன்று முடிவாகச் சொல்ல வேண்டுமென்று கடுமையாகப் பேசிவிட்டுச் செல்கிறான். ஏன் முதலில் ராஜரத்தினம் இல்லாததால் சகுந்தலா ஆசுவாசமடைந்து பின்பு அவனைக் கண்டு ‘பொறி’ மகிழ்ச்சி கொள்ள வேண்டும் என்பது இப்போது புரிகிறது.

சகுந்தலா வீட்டுக்குச் செல்கிறாள். மீண்டும் பின்மாலை/ முன்னிரவு நேரச் சித்தரிப்புகள், அதனூடே அவள் குடும்பம் குறித்தும் தெரிந்து கொள்கிறோம். 30 வயதாகும் சகுந்தலாவின் அக்கா எஸ்.எஸ்.எல்.சி தாண்டாதவள், வீட்டின் அனைத்து வேலைகளையும் அவள்தான் பார்த்துக்கொள்கிறாள், அவள் ஏற்று நடத்தாத வீட்டுப் பொறுப்பே கிடையாது. ஆனால் வேலைக்குச் செல்லாத, அதே நேரம் அதை ஈடு செய்யக்கூடிய பெரிய வசதிகள் இல்லாத குடும்பத்துப் பெண்ணை மணம் புரிய யாரும் இல்லை. இது அக்காவிடம் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தை “இப்போதும் அவள் குளித்துவிட்டு வந்தவுடனே அழகாக இருப்பது போலத்தான் தெரியும். ஆனால் ஐந்து பத்து நிமிடங்களுக்குள் முகத்தைக் களையிழக்கச் செய்யும் சோர்வும் சலிப்பும் மெல்லிய கோடுகளாகவும் சுருக்கங்களாகவும் வந்து விடும்,” என்று அ.மி விவரிக்கிறார். இங்கு சோர்வும், சலிப்பும் வயது அதிகமாவதால் மட்டுமல்ல, ஒரே விதமாக முடியும் தொடர் பெண் பார்க்கும் படலங்கள் உருவாக்குபவை என்று உணர முடிகிறது.

வீட்டிற்கு வரும் சகுந்தலாவிடம் அவள் அக்கா தலைவலியால் படுத்திருப்பதாக அவள் தாய் சொல்கிறார். அவள் மூக்குக்கண்ணாடி அணிய நேரக்கூடும், அதுவும் வரன் தகைய தடையாக இருக்கக்கூடும் என என சகுந்தலா எண்ணுகிறாள்.

இப்போது அ.மியின் கதைசொல்லலில் வாசகன் நேரடியாக ஒரு முறை கூடப் பார்க்காத, வீட்டில் மட்டுமல்ல கதையிலும் ஒரு ஓரத்தில் இருக்கும் சகுந்தலாவின் அக்கா விஸ்வரூபமெடுக்கிறார். சகுந்தலாவின் காதலுக்கு இணையாக -அவள் இன்னும் எத்தனை நாள் அக்காவிற்காக தன் திருமணத்தை தள்ளிப்போடுவாள் – அவள் அக்காவின் எதிர்கால வாழ்க்கை என்ன என்றும் வாசகன் கவலை கொள்ள ஆரம்பிக்கிறான். இதற்கடுத்து வாசகனின் கவனம் இருவரின் பெற்றோர் மீதும் திருப்புகிறது. தங்கள் மகள்களுக்கு திருமணம் செய்விக்க முடியாதது குறித்த குற்றவுணர்வுடன் அவர்கள் குமைந்து கொண்டிருக்கக்கூடும். அவர்கள் சகுந்தலாவின் அக்காவை மணம் முடிக்க அதிக முயற்சிகள் எடுக்கவில்லையா, அல்லது அவர்களின் இயலாமையே ஒரு தடையாக இருக்கிறதா என்பதை வாசகனின் யூகத்திற்கே அ.மி விட்டுவிடுகிறார்.

“இன்று ஒரு நாளாவது நிம்மதியாகத் தூங்க வேண்டும்” என்று நினைத்துக் கொண்டே சகுந்தலா படுக்கும்போது கதை முடிய, அந்த நினைப்பில் உள்ள நம்பிக்கையின்மையை அவள் மட்டுமல்ல, வாசகனும் உணர முடிகிறது. சகுந்தலா மட்டுமல்ல, அவள் அக்கா, பெற்றோர் மற்றும் ராஜரத்தினம் அனைவருக்கும் – இதையே விழையும் நகரின் எண்ணற்ற மனிதர்கள் போல் – அன்றிரவு உறக்கம் அரிதான ஒன்றாகத்தான் இருக்கும்.

தினமும் நாம் பங்குபெறும் காட்சியில் – சகுந்தலாவும் ராஜரத்தினமும் தாங்கள் சந்திக்கும் முதல் நிமிடத்தில் ‘என்ன என்ன’ என்று பரஸ்பர கேள்விகள் முடியும் முன் பேருந்து வந்து விட ராஜரத்தினம் இடம் பிடிக்க ஓடும் வழக்கமான நிகழ்வு – ஆரம்பித்து, அதில் அரை கணத்திற்கு மேல் கவனம் கொள்ளாமல் நாம் கடந்து செல்லும் எண்ணற்ற – பலதரப்பட்ட இக்கட்டில் இருக்கும் – முகங்களில் ஒன்றின் பிரச்சனையாக விரிந்து, அதனூடாக ஒரு குடும்பத்தின் சித்திரத்தை உருவாக்கும் மூன்று இழைகள் ஊடுபாவாக நெய்யப்பட்டுள்ள இக்கதை எளியவர்களின் அன்றாடத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் அ.மியின் இன்னுமொரு கவனத்திற்குரிய படைப்பு.

oOo

அசோகமித்திரனின் பிற சிறுகதைகள் குறித்து- 

இரு திருமணங்கள்

இரண்டு விரல் தட்டச்சு

oOo

ஒளிப்பட உதவி – காலச்சுவடு

யாரும் இறங்கா நிலையம் – சரவணன் அபி

கூரை நடைபாதை 
கற்குவியல்கள் 
இருப்புப் பாதை என எங்கும் 
உதிர்ந்த சருகுகள் 

நிறம் மங்கிய 
நீர்வண்ண ஓவியம் 
போலொரு 
களைத்த பொலிவு 

இற்றது போல்வன 
எனினும் 
இறாது நிற்கும் 
நிலையத்தின் 
மரவரிகள் 
ஒரு நூறு 
நினைவுகளின் மௌன சாட்சிகள் 

அவ்வப்போது 
பாதை தேய்த்து 
சலிப்புடன் பெருமூச்செறிந்து 
வந்து நின்று 

பொருமலுடன் 
நீர் சிந்தி 
வேண்டா வெறுப்பாக 
கிளம்பிச் செல்லும் 
புகையற்ற வண்டி தரும் 
கிளர்ச்சியின் 
குற்றவுணர்வுடன் 
இரவில் தனித்திருக்கும் 

பகிர்வுகளில் 
பேதமேதும் 
பாராட்டுவதில்லை 
இருப்புப் பாதையோரம் 
இன்று முளைத்த 
எருக்கம்செடிக்கும் 
நடைமேடையின் 
நடுவீற்றிருக்கும் 
முரட்டு அரசுக்குமிடையே  

செல்லமாய் வருடி  
செந்நிறப் புழுதியை 
வீசியடித்து கழுவும்  
எத்தனையோ மழைக்காலங்களில் 
ஒன்றைக் கடந்து செல்ல 
இன்று காத்திருக்கும் 
உடலம்

திரிதலின்பம் – நித்ய சைதன்யா

யாரிடம் என்றில்லாமல்  
சதா
கதையாடி மகிழும்
நதிக்கரையோர நாணல்கள்

இரவுகளை பகைத்தஞ்சி
விடியல்களை ஏங்கி
காத்திருந்த
நீர்மையின் நடுக்கத்தில்
அன்றைய எனதின்பங்கள்

தெருக்களில் இல்லை
தேரடி வீதியில் இல்லை
கண்களால் பேசிக்களித்த
படித்துறையிலும் இல்லை
நதிக்கரையில் தேடியலைகிறேன்
நட்பிலமர்ந்த அந்நாட்களின் சுவடுகளை

நதியில் மிதந்துசெல்கின்றன
நீ சூடிய
பொன்னிற மலர்கள்

மாட்டுக்கார வேலன்

மு வெங்கடேஷ்

அதிகாலை ஐந்து மணி, விடிந்தும் விடியாமலும் இருந்தது. கோவில் மூலஸ்தானத்தில் இருக்கும் சாமியைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார் பண்டாரம். ராசம்மாள் கோவிலுக்குள் இருக்கும் குப்பைகளைத் தூத்துப் பெருக்கிக் கொண்டிருந்தாள். அவளுக்குத் துணையாக இருந்த மகள் சங்கரி, எதையோ கையில் எடுத்துக் காட்டி அது என்னவென்று கேட்டாள். “அது ஒன்னுமில்லம்மா, பாம்புச் சட்டதான். கழட்டிப் போட்டு போயிருக்கு, நீ அதத் தூக்கித் தூரப் போட்டுட்டு வேலயப் பாரு” என்றாள் ராசம்மாள்.

அனைத்து வேலைகளையும் முடித்த பின்னர் பண்டாரம் ராசம்மாளிடம்,“தங்கப் பாண்டி அண்ணாச்சி  தோட்டத்துல மோட்டார் ஓடுற சத்தம் கேக்கு, நீங்க ரெண்டு வேரும் போயி மொதல்ல குளிச்சிட்டு வந்துருங்க, நா செத்த நேரம் கழிச்சிப் போறேன்” என்றார். சரி, என்றவாறு ராசம்மாளும் சங்கரியும் சென்றனர்.

பண்டாரம் கோவில் திண்ணையில் தனியாக அமர்ந்திருந்தார்.

அப்போது ஏதோ சத்தம் கேட்கவே, “யார்ல அது? வேலனா? என்ன சத்தத்தையே காணும்? காது கேக்குதா இல்லையா? ஏல ஒன்னத்தான கேக்கேன்,” என்றார்.

பதில் ஏதும் சொல்லாமல் வந்த வேலன் சுதாரித்துக் கொண்டு, “அண்ணாச்சி நாந்தான் வேலன். ஏதோ சிந்தனைல இருந்துட்டேன். மன்னிச்சிக்கோங்க,” என்று சொல்லிக்கொண்டே கோவிலைப் பார்க்க நடந்து வந்தான். உடன் அவன் வளர்க்கும் மாடும்.

“சரியாப் போச்சுடே ஒன்னோட, கேட்டா ஒடனேப் பதில் ச்சொல்ல வேணாமா? அந்தானிக்கு வார?” என்று கேட்ட பண்டாரத்திடம், “அதான் ச்சொன்னம்லா அண்ணாச்சி” என்றான் வேலன்.

பண்டாரம் விடுவதாக இல்லை. “எப்பச் ச்சொன்னடே? கேட்ட ஒடனேச் சொல்ல வேணாமா? சரி, இன்னைக்கு என்ன இவ்ளோ வெள்ளன?”

“ஆமா அண்ணாச்சி, மாட்டக் கூட்டிட்டு இன்னைக்கு பக்கத்துக்கு ஊர் வரப் போ வேண்டி இருக்கு, அதான்”

“சரிடே. பாத்து பைய சூதானமாப் போயிட்டு வா,” என்று சொல்லிவிட்டு பண்டாரம் எழுந்து கோவிலுக்குள் சென்றார்.

மாட்டைக் கூட்டிக் கொண்டு சிறிது தூரம் சென்ற வேலன் ஏதோ ஞாபகம் வர மீண்டும் கோவிலைப் பார்க்க வந்தான். வந்தவன் பண்டாரத்தைப் பார்த்து, “இந்தாரும், வர்ற வழில பேச்சியம்மங் கோயில்ல கொட, பொங்கல் குடுத்தானுவோ, ஒங்க ஞாபகம் வந்துச்சு. அதான் வாங்கியாந்தேன். மைனிக்கும் புள்ளைக்கும் குடுங்க,” என்று ஒரு பொட்டலத்தை நீட்ட, அதை வாங்கிய பண்டாரமோ “ஒனக்குடே?” என்றார்.

“நாந்தான் கோயில் ச்சாப்பாடு ச்சாப்ட மாட்டம்லா, விட்டுப் பல வருசமாச்சு” என்று சொன்ன வேலனிடம், ”வெளங்காமப் போச்சு. எக்கேடும் கெட்டுப் போ” என்றார் பண்டாரம்.

எதையும் கண்டுகொள்ளாதவன், “சரி அண்ணாச்சி சாந்தரம் வாரேன்,” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

சற்று நேரத்தில் ராசம்மாளும் சங்கரியும் குளித்து விட்டு வர, பண்டாரமும் குளித்துவிட்டு வந்தார். சாமிக்குப் பூசை முடித்துவிட்டு, வேலன் கொடுத்த பொங்கலைச் சாப்பிட்ட மூவரும் கோவில் திண்ணையில் அமர்ந்திருந்தனர்.

உச்சி வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தாலும் காற்று சிலுசிலுவென வீசிக் கொண்டிருந்தது. நாலாபுறமும் மரங்களாலும் வயல்களாலும் சூழ்ந்து இருந்தது கோவில். ஆள் அரவமற்ற அந்த காட்டுக்குள் மொத்தத்தில் இருந்ததோ ஆறு வீடுகளும் ஒரு சின்ன பொட்டிக் கடையும்தான். கிழக்கு திசை நோக்கிச் செல்லும் ஒற்றையடிப் பாதையைப் பிடித்தால் ஐந்து மைல் தூரத்தில் ஊர் வந்து விடும்.

ராசம்மாளும் சங்கரியும் அடுப்பு எரிப்பதற்காகக் கோவிலைச் சுற்றி விழுந்து கிடக்கும் சுள்ளிகளைப் புறக்கிக் கொண்டிருந்தனர். பண்டாரமோ சில நாட்களுக்கு முன் கீழே விழுந்து உடைந்த மணியை சரி செய்து கொண்டிருந்தார்.

சிறிது நேரம் கழித்து, “மத்தியானத்துக்கு நேத்து வச்ச பழைய சோறு கெடக்கு தொட்டுக்குறதுக்கு ஊறுகா மட்டும் வாங்கியாரீங்களா,” என்று ராசம்மாள் கேட்க, சரி என்று சொன்ன பண்டாரம் எழுந்து கடைக்குச் சென்றார். மடியில் படுத்திருந்த சங்கரிக்கு தலைவாரிக் கொண்டிருந்தாள் ராசம்மாள்.

“எம்மா நா ஒன்னு கேக்கவா?”

”கேளும்மா” என்றாள் ராசம்மாள்.

“இல்ல நமக்கு சொந்த வீடு வாசலெல்லாம் இல்லையாம்மா?”

“இருந்துச்சும்மா. அதெல்லாம் ஒரு காலம். ஒங்க அப்பாவுக்கு என்னைக்குக் கண் பார்வ போச்சோ அன்னைக்கே நம்ம வாழ்க்கையும் இருண்டு போச்சு”.

ஒன்றும் புரியாத சங்கரி, “ஏம்மா என்னாச்சு?” என்று கேட்க, குடும்பத்தில் நடந்த சண்டை, அதில் தாங்கள் ஏமாற்றப்பட்ட கதை என எதையும் கூற விரும்பாத ராசம்மாள், ”அத விடும்மா, அதெல்லாம் நமக்கு இனிமே இல்ல, இனி இந்த கோயில்தான் நமக்கு வீடு, இந்த நத்தமுடையார்தான் நமக்கு எல்லாமே” என்று பேச்சை முடித்தாள்.

சங்கரி யோசித்துக் கொண்டே ராசம்மாளின் மடியில் படுத்திருந்தாள்.

மணி ஒன்றைத் தொட்டிருந்தது. கைக்குழந்தையுடன் வந்த ஒரு பெண் ராசம்மாளிடம் தான் கொண்டு வந்திருக்கும் வெங்காயத்தைக் கோவிலுக்குள் காய வைத்துக் கொள்ளலாமா என்று கேட்க, ராசம்மாள் சரி என்றாள். இடுப்பிலிருக்கும் குழந்தையை இறக்கி விட்டு, வெங்காயம் காய வைத்துக் கொண்டிருந்தாள். அந்தக் குழந்தையின் தலை சற்று விநோதமாக இருக்கவே சங்கரி வைத்த கண் மாறாமல் அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். வேலை முடிந்ததும் குழந்தையை மீண்டும் இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு ராசம்மாளிடம் சொல்லி விட்டு அப்பெண் கிளம்பிச் சென்றாள். சங்கரி அக்குழந்தையை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க, இடுப்பிலிருக்கும் அக்குழந்தையும் சங்கரியைப் பார்த்து சிரித்தது.

“எம்மா நா ஒன்னு கேக்கவா?”

”கேளும்மா” என்றாள் ராசம்மாள்.

“இல்ல, அந்தப் பையனோட தல கொஞ்சம் ச்சாஞ்ச மாரி இருக்கே அதான் என்னனு” என்று கேட்டு முடிப்பதற்குள், “அதாம்மா,அது ஒரு பெரிய கத. இந்த பையன் வயித்துல இருக்கும்போது அவங்க அப்பேன் மூக்கன் இருக்காம்லா, ஒரு நா ச்சாராயத்தக் குடிச்சிட்டு இங்க வந்து தேங்காய ச்சாமி தலைல ஒடச்சிருக்கான். நாம வேற அந்த நேரத்துல இங்க இல்லையா, குடிச்சிட்டு வந்த மூதி தேங்காயப் போயி ச்சாமி தலைல ஓடச்சாம்லா, அதுல ச்சாமி தல லேசா ச்சாஞ்சிட்டு. பொறந்த கொழந்த தலையும் லேசா ச்சாஞ்சிட்டு. இந்த ச்சாமி அவ்ளோ சக்தி வாஞ்சதாக்கும். இந்தக் கோயில்ல இருந்து யாரும் ஒரு கல்லக்கூடத் திருட முடியாது” என்று பழைய கதையைச் சொல்லி முடித்தாள் அவள்.

சங்கரி ஓடிப் போய் பார்த்தாள், சாமி தலையும் லேசாக சாய்ந்திருந்தது.

கடைக்குச் சென்று திரும்பி வந்தார் பண்டாரம். வாங்கி வந்த ஊறுகாயை வைத்து மூன்று பேரும் சாப்பிட்ட பின்னர் சற்று நேரம் படுத்திருந்தனர். வெயில் இறங்கத் தொடங்கியது.

“அண்ணாச்சி இருக்கீகளா இல்லையா?” என்று கேட்டவாறே மாட்டுடன் வந்தான் வேலன்.

“இந்தக் கோயில விட்டுட்டு நா எங்கடே போ போறேன். இங்கனதான் இருக்கேன். ச்சரி அதவிடு. நீ போன காரியம்லாம் நல்லவடியா முடிஞ்சிச்சா?”

“முடிஞ்சிச்சு முடிஞ்சிச்சு. நீருதான் இந்தக் கோயிலே கதின்னு கெடக்கீரு. போய் ஊருக்குள்ள பாரும்யா மனுசங்கெல்லம் எப்படி இருக்காங்கன்னு, அதவிட்டுட்டு” என்று வேலன் சொல்லவும் பண்டாரத்துக்கு கோவம் பொத்துக் கொண்டு வந்தது. “போடே நீயும் ஓ ஊரும், நன்றி கெட்ட ஊரு, தீயதான் வைக்கணும். அதுக்கு இந்தக் காட்டு வாழ்க்கையே சொகமாத்தாம்டே இருக்கு” என்றார் கோபமாக.

“ச்சாமி ச்சாமின்னு இந்தக் கோயிலையே கெட்டி அழும், கடைசியில கோட்டிதான் புடிக்கப்போவுது ஒமக்கு. இந்தச் ச்சாமியாவே ஒமருக்கு சோறு போடப் போவுது? பாவம் மைனியும் புள்ளையுந்தான்” என்றான் வேலன்.

கண்கள் சிவக்க, கைகள் நடுங்க, பல்லைக் கடித்துக் கொண்டு பண்டாரம், “செத்த மூதி வாய மூடுல. எடுபட்ட பய. கூறு கெட்டத்தனமாப் பேசிக்கிட்டு. என்னல பேசுற? நீ ச்சொன்ன அதே ஊருக்குள்ள இருந்துட்டுத்தாம்ல இங்க வந்து கெடக்கேன். ஊராம்லா ஊரு? மனுசன மனுசனாவாடே மதிக்கிறானுவ? வண்டிக்காரப் பய ரோட்டுல அவங் குறுக்க வந்துட்டு என்ன குருட்டுப் பயலேங்குறான், கடைல கொள்ளையடிக்கிற மூதிட்ட என்னன்னு கேட்டா குருட்டுப் பயலுக்கு இவ்ளோ ஆகாதுங்குறான், ஒரு திருட்டுப் பய, அந்த நாய் என்ன குருடேன்னு சொல்லுது, குடிகாரப் பயலுவோ அங்கயும் இங்கயும் நின்னுட்டு குருட்டுப் பயலுக்குப் பொண்டாட்டி புள்ள எதுக்குங்குறான். கொஞ்சோம் ஏமாந்தா கட்டிருக்க கோவணத்தக்கூட அவுத்துட்டு விட்ருவானுவடே. அவ்ளோ கேவலமா இருக்கு ஒங்க ஊரு. ஒங்க ஊருக்கு இந்த காடே மேலு. நல்லாக் கேட்டுக்கோ எனக்குக் கண்ணுதாம்டே இல்ல மானம் மரியாதையெல்லாம் நெறையவே இருக்கு. ஏங்கெட்ட நேரம் இங்க வந்து கெடக்கேன். ஆனா கெட்டதுலயும் ஒரு நல்லது இருக்குடே இந்த நிம்மதியான வாழ்க்க, கடவுள் புண்ணியத்துல குடிக்கிறதுக்கு கூழோ கஞ்சியோ கெடக்கி. இதவிட வேறென்னடே வேணும்? கோடி ரூவா குடுத்தாலும் இந்த சுகங்கிடைக்குமாடே ஒங்க ஊருல?” என்று தன் கோவத்தைக் கொட்டித் தீர்த்தார்.

இதனைத்தையும் கேட்டு பதில் ஒன்றும் சொல்ல முடியாத வேலன், மாட்டை அருகிலிருக்கும் மரத்தில் கட்டி வைத்துவிட்டு தலை குனிந்தவாறே வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

“ஏல வேலா, என்ன அண்ணாச்சி மேலக் கோவமாடே? பேசாமப் போற?”

“ச்ச அதெல்லாம் ஒண்ணுமில்ல அண்ணாச்சி. நீங்க சொல்றதும் நியாயந்தான”

“சரிடே அண்ணாச்சி ஏதாது தப்பாப் பேசிருந்தம்னா மன்னிச்சிக்கோ”

“அட விடுங்க அண்ணாச்சி, வயசுக்கு மூத்தவரு நீங்க போய் என்ட மன்னிப்பு கேட்டுட்டு” என்று சொல்லிக் கொண்டே நடந்து சென்றான்.

“பாவங்க வேலன். அவனப் போயி இந்த ஏச்சு ஏசிட்டீங்களே” என்றாள் ராசம்மாள்.

”இல்லம்மா, என்னன்னேத் தெரியல, அந்தப் பய அப்படிச் சொன்னதும் கோவம் ச்சுள்ளுன்னு வந்துட்டு அதான் மனசுல உள்ளத அப்படியே கொட்டித் தீத்துட்டேன். இப்போ ஏன்டா அப்படிப் பேசுனோம்னு ச்சங்கடமா இருக்கு” என்றார் பண்டாரம்.

“சரி விடுங்க நாளைக்கு வருவாம்லா பேசித் தீத்துக்கலாம்” என்று ஆறுதல் கூறிவிட்டு சாப்பிடக் கூப்பிட்டாள்.

மீதமிருந்த சோறையும் பழத்தையும் சாப்பிட்டு விட்டு மூன்றுபேரும் கோவில் திண்ணையில் ஒரு பாயை விரித்துப் படுத்தனர். சிறிது நேரத்தில் பண்டாரம் குறட்டை விடத் தொடங்கினார். ராசம்மாளுக்கும் கண் அசந்தது.

“எம்மா நா ஒன்னு கேக்கவா?”

பதில் ஒன்றும் இல்லாததால் மீண்டும் “எம்மா… எம்மா…” என்றாள்.

தூக்கத்தில் இருந்து விழித்த ராசம்மாள், “என்னதும்மா கேளு” என்றாள்.

“இல்ல அங்க பாருங்களேன் வயக்காட்டுக்குள்ள ஏதோ கொள்ளிப் பிசாசு மாரித் தெரியுது”.

“அதெல்லாம் ஒன்னு இல்லம்மா. பேயும் கெடயாது பிசாசும் கெடயாது. பேசாம கண்ண மூடிட்டுப் படு தாயி” என்று அவள் பயத்தைப் போக்கச் சொன்னாள் ராசம்மாள்.

பயம் தெளியாத சங்கரியோ, “அப்போ அது என்னதும்மா?” என்றாள்.

“அதா…? அதா…? அது வயக்காட்டுக்குள்ள பன்னி வரக் கூடாதுன்னு இந்தப் பயலுவ தீப்பந்தத்த ஏந்திட்டுப் போறானுவ. பயப்படாம கண்ண மூடிட்டுத் தூங்கும்மா,” என்று சொல்லிவிட்டு அவளை அணைத்துப் படுத்தாள்.

என்னதான் சொன்னாலும் சங்கரிக்கோ பயம் போகவில்லை. “பயம்மா இருக்கும்மா,” என்று மறுபடியும் கூறிய சங்கரியிடம், ”கோயிலுக்குள்ள என்னம்மா பயம்? பேசாமப் படு” என்று சொல்லிவிட்டு ராசம்மாளும் படுத்தாள்.

சற்று நேரம் கழித்து, “எம்மா நா ஒன்னு கேக்கவா?” என்று மறுபடியும் ஆரம்பித்தாள் சங்கரி.

“நீ இன்னும் தூங்கலையா? என்னம்மா கேக்கப் போற? என்றாள் ராசம்மாள்.

“அங்க பாரும்மா ஏதோ அசையிற மாரித் தெரியுது. எனக்குப் பயம்மா இருக்கு”

“எங்கம்மா?”

“அப்பாவுக்கு அந்தப் பக்கம்”

“ஐயோ அது அப்பாவோட ச்சாரத்தத் தொவச்சிக் காயப் போட்ருக்கேன். அது காத்துல ஆடுது. அதுக்குப் போய் பயமா? இந்தா ச்சாமி தின்னாரப் பூசிக்கோ பயம் வராது” என்று தான் இடுப்பில் முடிந்து வைத்திருக்கும் சுருக்கப் பையில் இருந்த திருநீரை எடுத்து சங்கரியின் நெற்றியில் பூசினாள்.

மூன்றுபேரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.

திடீரென்று “ச்சில் ச்சில்” என்றொரு சத்தம். திடுக்கென்று விழித்த சங்கரி அசையாமல் படுத்திருந்தாள். மீண்டும் “ச்சில் ச்சில்” என்ற சத்தம். பயத்தில், அசையாமல் “எம்மா எம்மா” என்று ராசம்மாளைக் கூப்பிட்டாள்.

“என்னம்மா வேணும் ஒனக்கு?”

“ஏதோ “ச்சில் ச்சில்” னு சத்தம் கேக்குதும்மா. பயமா இருக்கும்மா,” என்று நடுங்கினாள் சங்கரி.

கண் விழித்த ராசம்மாளுக்கும் அதே “ச்சில் ச்சில்” சத்தம். சத்தம் நெருங்கிக் கொண்டே இருக்க, ராசம்மாளுக்கும் பயம் தொற்றிக்கொண்டது.

“என்னங்க என்னங்க,” பண்டாரத்தை எழுப்பினாள் அவள்.

பண்டாரம் என்னவென்று கேட்க, ஏதோ சத்தம் கேட்பதாகக் கூறினாள்.
“என்ன சத்தம்?” என்று தூக்கம் தெளியாத பண்டாரம் மீண்டும் கேட்க, ஏதோ “ச்சில் ச்சில்” னு சத்தம் என்றாள். பண்டாரம் விழித்துப் பார்த்தார். எல்லாம் இருட்டாக இருந்தது. “ச்சில் ச்சில்” சத்தம் அவருக்கும் கேட்டது.

திடீரென்று சங்கரி “எம்மா அங்க பாரேன், ஏதோ வெள்ளையா” என்றாள்.

“அடி ஆமாடி” என்ற ராசம்மாளிடம் “என்னதும்மா?” என்று கேட்டாள் சங்கரி.

அதைப் பார்த்த ராசம்மாளுக்கும் பயம் வரவே பண்டாரத்திடம் “என்னங்க அங்க ஏதோ வெள்ளையா” என்று சொல்லி முடிப்பதற்குள் “அடப் பேசாமப் படுங்க. வெள்ளையாது நொள்ளையாது. நா போய் என்னன்னு பாக்குறேன்” என்று கூறிவிட்டு அருகில் வைத்திருந்த கட்டையை எடுத்துக் கொண்டு சென்றார் பண்டாரம்.

“யார்ல அது? ஏ ஒன்னத்தான கேக்குறேன் யார்ல அது இந்த நேரத்துல?” என்று கேட்டுக்கொண்டே சென்றார்.

“எப்பாஅந்தப் பக்கம் இல்லப்பா இந்தப் பக்கம்” என்றாள் சங்கரி.

பண்டாரம் திசையை மாற்றினார்.

“ச்சில் ச்சில்” சத்தம் இன்னும் நெருங்கியது.

“எப்பா பக்கத்துல போவாத, மாடு கயிற அவுத்துட்டு வருது. அதான் இந்தச் சத்தம்” என்று கத்தினாள் சங்கரி.

மாடு இவர்களை நோக்கி “ச்சில் ச்சில்” என்று புதிதாக கழுத்தில் கட்டியிருக்கும் சலங்கையின் சத்தத்தோடு நெருங்கியது.

பண்டாரமோ “ச்சூ ச்சூ” என்றவாறு எங்கோ சென்று கொண்டிருந்தார். ராசம்மாளும் “ச்சூ ச்சூ” என்று கூறிக் கொண்டே சங்கரியை கட்டி அணைத்துக் கொண்டாள். சங்கரியும் பயத்தினால் ராசம்மாளை இறுக்கி அணைத்துக் கொண்டு ராசம்மாளின் முந்தானைச் சேலையை எடுத்து முகத்தை மூடிக்கொண்டாள். வெள்ளை மாடு இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. பக்கத்தில் நெருங்கியது. சங்கரி பயத்தில் எம்மா என்று அலறினாள்.

திடீரென்று ஓடி வந்த வேலன் மாட்டைப் பிடித்து இழுத்து மரத்தில் கட்டி வைத்தான். மாடு திமிறிக் கொண்டிருந்தது.

“எப்பா வேலண்ணே வந்துட்டாக” என்றாள் சங்கரி.

“என்னப்பா வேலா இப்படிப் பண்ணீட்ட? ஒழுங்கா கட்டீருக்க வேணாமா?” என்றாள் ராசம்மாள்.

“ஏ அண்ணாச்சி மேல இன்னுங் கோவந்தனியலயாடே ஒனக்கு?” என்றார் பண்டாரம்.

பதிலொன்றும் சொல்லாமல் சென்றான் வேலன்.

“இந்தப் பய எப்பவும் இப்படித்தான் கேட்ட கேள்விக்கு பதிலே ச்சொல்ல மாட்டான். சரி இனி பயப்படாமப் போய்ப் படுங்க. அதான் அந்தப் பய வந்துட்டாம்லா. காலேல பேசிக்கலாம் அவன்ட” என்று சொல்லிவிட்டு “ஏல வேலா இப்பயாது ஒழுங்கா கட்டிருக்கியாடே” என்றார் கத்தினார்.

பதில் இல்லை.

காலை ஐந்து மணி, வழக்கம்போல் கோவிலை சுத்தம் செய்யும் வேலையில் மும்முரமாக இருந்தனர் பண்டாரமும் ராசம்மாளும். சங்கரி மட்டும் இன்னும் பயத்திலிருந்து மீளாமல் இருந்தாள் .சற்று நேரத்தில் மாட்டின் சத்தம் கேட்கவே, மூவரும் வெளியே வந்தனர்.

“ஏல கூறுகெட்ட மூதி, ராத்திரி இப்படியாடே பண்ணுவ? மாட்ட ஒழுங்கா கட்டாம அது அவுத்துட்டு வந்து எங்க தூக்கத்தக் கெடுத்து, கடைசியில வந்து கட்டிட்டுப் போற? என்னனு கேட்டா பதிலே ச்சொல்லல. அண்ணாச்சி மேலக் கோவமாடே? அதான் நேத்தே மன்னிப்பு கேட்டம்லா. இன்னும் கோவந்தீரலயா ஒனக்கு? வாயத் தொறக்க மாட்டிக்கிற?” என்று வேலனைப் பார்த்துக் கேட்டார் பண்டாரம்.

“என்ன அண்ணாச்சி கனவு கினவு கண்டீகளா? நானாது ராத்திரி வர்றதாவது? நேத்து ராத்திரி வீட்டுக்குப் போய் கட்டய சாச்சவந்தான், இப்பத்தான் எந்திச்சு வாறேன். என்ன மைனி, அண்ணாச்சிக்கு மண்டைக்குச் சரி இல்லமாப் போயிருச்சா? அப்போ நா சொன்னது சரியாப் போச்சு போல” என்று கூறியவாறே கயிற்றை அவிழ்த்து மாட்டை இழுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

“வேலா வேலா” என்று பண்டாரமும் ராசம்மாளும் கூப்பிட, வழக்கம்போல் பதிலேதும் சொல்லாமல் போய்விட்டான் அவன்.

இந்தக் கணம் – ந. ஜயபாஸ்கரன் (மொழிபெயர்ப்பு: Nakul Vāc)

கல்யானைகள் மதம்பிடித்து
அலைகின்றன இரை எடுக்க
சித்தரின் சிரிப்பையும் கரும்பையும்
உதாசீனம் செய்து.

சித்தரோ எனில்
புன்னகை துறந்து
பொன்னணையாளின்
நம்பிக்கையுடனும் பொன்னுடனும்
நீங்குகிறார் திருப்பூவனம்.

எதிர் ஏற முடியாமல்
தத்தளிக்கின்றன ஏடுகள்
திரு ஏடகத்தில்.

பிரம்மாண்டமான ஆலவாய்க்
கோவில் பிரகாரங்களில்
கொலையும் சூதும் மணமும் பேசி முடித்து
நீண்ட பகலில் உறங்குகிறார்கள் 
கல்தளங்களில்
இருண்ட மனிதர்கள்.

ஓடுகாலில் கொலையுண்ட
அடையாளம் அற்றவனின்
அங்காத்த வாயில் 
படிந்து செல்கிறது
வையை மணல்
பயணமாய்.


This Moment

Spurning 
The Ascetic's smile and cane
Stone elephants in rut
roam in search of prey.

The Ascetic meanwhile
renounces laughter and 
removes to Thirupuvanam
with Ponnanaiyaal's
Faith and Gold.

Unable to tide against the current
the palmyra-scripts bob helplessly
in Thiruvedakam.

In Madura's massive temple 
courtyards of stone
Dark saturnine men
sleep through the long day
Having shaken hands on
Murder, Plots, and Matrimony. 

Through the gaping mouth
of the murdered 
Anonymous runaway
wend the journeying
Sands of Vaikai.

This post was changed on March 11th, 2016, following the comments of சரவணன் . Original version of this translation is here – this moment