எழுத்து

சு வேணுகோபாலின் வெண்ணிலை

செந்தில் நாதன்

வெண்ணிலை சிறுகதைத் தொகுப்பு படிப்பதற்கு முன் அந்த வார்த்தையை  நான் அறிந்ததில்லை. அகராதி வெண்ணிலை என்றால் ஈடுகாட்டாது வாங்கப்பட்ட கடன் (unsecured loan) என்கிறது. சு. வேணுகோபால் கதையில் கையறுநிலை என்ற பொருளில் உபயோகப்படுத்தியிருக்கிறார்.

வேணுகோபாலின் இந்த சிறுகதைத் தொகுப்பில் வரும் எளிய மனிதர்கள் முக்கால்வாசிப் பேர் கைவிடப்பட்டவர்கள்தான். விவசாயம் நொடித்துப் போய் என்ன செய்வதென்று தெரியாமல் திகைப்பவர்கள், குடிகாரக் கணவனை விட்டுச் செல்ல வழி தெரியாமல் தவிப்பவர்கள், வாழ்ந்து கெட்டவர்கள், மெட்ரிகுலேஷன் பள்ளியின் அரைகுறை ஆங்கிலத்துக்குத் தடுமாறும்  குழந்தைகள் என அனைவரும் கைவிடப்பட்டவர்கள்தான்.

ஆனால் யாரும் நம்பிக்கை இழப்பதில்லை. எப்பாடுபட்டாவது முன்னேறி விடலாம் என்று நம்புகிறார்கள். ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தண்ணீர் வந்து விடும் என்றும், ஆங்கில வழிக் கல்வி கற்பதன் மூலம் குழந்தைகள்  முன்னுக்கு வந்துவிடுவார்கள் என்றும், தன் சாதி அரசியல் தலைவர் மூலம் அரசியல்வாதியாகிவிடலாம் என்றும், வாழும் கலை கற்பதன் மூலம் தன் கஷ்டங்களுக்கு விடிவு கிடைக்கும் என்றும்  நம்புகிறார்கள். ஆனால் அவர்கள்  நம்பும் விடிவெள்ளிகள் அவர்களைக் கைவிட்டுவிடுகின்றன. அதையும் அவர்கள் தாங்கிக்கொண்டு வாழ்க்கையைத் தொடர்கிறார்கள்.

வேணுகோபாலின் கதைகள் நேரடியானவை. விவரணைகள் மூலம் கதைக்களனைச் செறிவுபடுத்துபவை. விவசாயம் சார்ந்த அவரது  கதைகளில் இவை சற்று அதிகமாகவே தெரியும். அந்த விவரணைகளையே படிமங்களாக்கும் ரசவாதம் இயல்பாகவே அவரது கதைகளில் கைகூடி வருகிறது.

’உயிர்ச்சுனை’ பெரியமகளிடம் கடன் வாங்கி போர்வெல் போடும் ஒரு சம்சாரியின் கதை. அவள் கணவனுக்குத் தெரியாமல் எடுத்து கொடுத்த பணம். பக்கத்து ஊரில் கோலா கம்பெனி ஆரம்பித்த பிறகு கிணறு வற்றி விடுகிறது. போர்வெல் போட்டாலாவது நீர் கிடைக்குமா என்று முயற்சி செய்கிறார். முயற்சி வீணாகிறது. பணமும் போய்விட்டது. எல்லாரும் நிலைகுலைந்து கிடக்கையில் பேரன் கீழே விழுந்து அழுகிறான். யாரும் அவனைக் கண்டுகொள்ளவில்லை. “நான் செத்துப்  போறேன்” என்றவாறு போகிறான். அதைக் கேட்டு அவன் அம்மா ஓடிவந்து தூக்குகிறாள்.

உயிர்ச்சுனை வற்றி விட்டால் விவசாயி என்ன செய்வான்? ஒவ்வொருவராய் வயல் வரப்பை விட்டு சிறு நகரங்களுக்கும் வணிகத்துக்கும் நகரும் அவலம் இந்தக் கதையில் அழுத்தமாய்ப் பதியப்படுகிறது. மெட்ரிகுலேஷன் பள்ளியில் இரண்டாயிரம் ரூபாய்க்கு ஆசிரியர் வேலை பார்க்கும் மகள், கண்ணப்பரின் பேரன் பெயர் நிதின் என்று விவரங்கள் மூலம் சமூக மாற்றங்கள் உணர்த்தப்படுகின்றன. கண்ணப்பர், திருமணத்திற்கு நிற்கும் அவரது இளைய மகள், பேரன் நிதின் என்று மூன்று பேர் பார்வையில் இந்தக் கதை பயணிக்கிறது, கதையில் என்னைப் பாதித்த வரிகள் இவை

      மரங்கள் ஒரு நொடியில் காணாமல் போனால் கூடப் பரவாயில்லை. கண்ணெதிரே சிறுகச் சிறுக சாவில் துடிப்பதை தினமும் பார்த்துத் தொலைப்பது தான் வேதனை. இதென்ன ஜென்ம பாவமோ

விவசாயி ஒருவரின் அப்பட்டமான வேதனையைப் பிரதிபலிக்கும் குரல்.

’புத்துயிர்ப்பு’ கதை இந்தத் தொகுப்பில் சிறந்த கதைகளில் ஒன்று. வறட்சியினால் சினை மாட்டுக்கு வைக்கோல் வைக்க முடியாமல் ஊரெல்லாம் தேடி அலைகிறான். வீட்டில் அவன் மனைவியும் நிறை மாதக் கர்ப்பிணியாய் இருக்கிறாள். மாட்டை விற்றுவிட அவன் மனம் மறுக்கிறது. வேறு வழியில்லாமல் நள்ளிரவில் தீவனம் திருட முயன்று மாட்டிக்கொள்கிறான். மறுநாள் பஞ்சாயத்தில் நிற்க நேரிடும் என்று பயந்து பூச்சி மருந்து குடித்துத் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்படுகிறான். இந்தக் களேபரத்தில் அவன் மனைவிக்குக் குறைப் பிரசவத்தில் பெண் பிள்ளை பிறக்கிறது.

`கொஞ்சம் கூட இரக்கம் காட்ட மாட்டேங்கிற மேல போகிற பகவானே!. இந்தா இந்தப் பிஞ்சப் பாருஎன்று ஆகாயத்தைப் பார்த்து சொன்னாள் கனகராஜின் அம்மா. பிசுபிசுக்கும் குழந்தையைப் பார்த்தாள். அவசர அவசரமாக உலகைப் பார்க்க வந்திருக்கும் அதன் உருவைப் பார்த்துதுணிச்சலகாரிஎன்றாள். பசலையின் கடவாய் ஓரத்தில் நுரைத்த எச்சிலில் சூரியன் ஒடுங்கி  ஒளிர்ந்தான். சிசுவின் புன்முறுவலில் சூரியன் நடுங்கியது

அந்தக் கடைசி இரண்டு வரிகளில் உள்ளது புத்துயிர்ப்பு. எவ்வளவு வறண்டாலும் உயிர் என்பது எப்போதும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளப் போராடும். அந்தப் போராட்டத்தில்தான் இந்த உலகம் இயங்குகிறது.

இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளை விவசாயக் கதைகள், சிறு நகரக் கதைகள் என்று இரண்டாகப் பிரித்துவிடலாம். சிறு நகரக் கதைகள் பெரும்பாலும் பெண்கள் சுமக்கும் பாரத்தைப் பற்றியவையே. வேணுகோபால் தன் கதைகளில் வரும் பெண்களைக் கரிசனத்துடனேயே படைக்கிறார். குடிகாரக் கணவனிடம் அடி வாங்கும் பெண்கள், வேலைக்குப் போகுமிடத்தில் கை பிடித்து இழுக்கப்படும் பெண்கள் அவர் கதைகளில் அடிக்கடி வந்து போகிறார்கள்.

தலைப்புக் கதையான ’வெண்ணிலை’ அப்படிப்பட்ட ஒரு பெண்ணைப் பற்றியது. பாலியல் கிளர்ச்சிக்காகத் திரை அரங்குக்குச் செல்லும் வழியில் சாலையோரத்தில் நிற்கும் பெண்ணைப் பார்க்கிறான் அவன். முதலில் அவளைத் தவறாக நினைக்கிறான் பின்னர் நகலெடுக்கும் கடையில் வேலை பார்த்த பெண் என்று ஞாபகம் வருகிறது.  அவளைச். சில முறைதான் பார்த்திருக்கிறான். எதற்காக சாலையில் காத்து நிற்கிறாள் என்று அவளிடம் கேட்கும்போது, அவள் அப்பா அருகில் உள்ள மருத்துவமனையில் இறந்து விட்டதாகவும் அவர் உடலைப் பெற காசில்லாததால் தெரிந்தவர்கள் யாரும் வருகிறார்களா என்று காத்திருந்த்தாகவும் கூறுகிறாள். அண்ணன்களால் விரட்டப்பட்டு ஊருக்குப் புதிதாய் வந்தவர்கள். நகரத்தில் யாரையும் தெரியாது. வேலை பார்த்த இடத்திலும் முதலாளி கையைப் பிடித்து இழுத்ததால் வேலையை விட்டு நின்றுவிட்டாள். இப்படிப்பட்ட கையறுநிலையில் நிற்கும் பெண்ணைத் தவறாக நினைத்துவிட்டோமே என்று இவன் மனம் பதறுகிறது. இறுதிக் காரியத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்குகிறான்.

      உடலை வீட்டிற்குக் கொண்டு வந்ததும் என்னைப் பார்த்து அவள் கும்பிட்டது உள்ளே கிடந்து குடைந்தது. அவள் கைகளில் இருந்த நடுக்கம் முள்ளாய்க் குத்த்த் தொடங்கியது

என்று முடிகிறது கதை. சுஜாதாவின் புகழ் பெற்ற ’நகரம்’ கதைக்குச் சமமாக இந்தக் கதையைச் சொல்லலாம்.

’பேரிளம் பெண்’ கதை கண் முன்னே கரைந்து கொண்டிருக்கும் தன் இளமையைத் தக்க வைக்கப் போராடும் பெண்ணைப் பற்றிய கதை. சடங்கு விழாவிற்குப் போகிறவள் அங்கு எல்லாரும் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எடுப்பாய் அலங்காரம் செய்து கொண்டு அங்கு இருக்கும் சின்னப் பெண்களுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்க்கிறாள். இவள்1 பெண்ணோ நிறைமாத கர்ப்பிணியாய் வீட்டில் இருக்கிறாள். இரவு விழாவிற்கு அலங்கரித்துக் கொள்ள எல்லாம் தயார் செய்து கொண்டிருக்கும்போது  பெண்ணிற்குப் பிரசவ வலி வந்து விடுகிறது. இவளுக்குப் பெண் மேல் கோபம் கோபமாய் வருகிறது. பொதுவாகக் கதைகளில் காணக்கிடைக்கும் தாய்மைக்கும் நிஜ வாழ்க்கைக்கும் உள்ள முரணைக் காட்டுகிறது இந்தக் கதை.

வேணுகோபாலின் கதைகளில் வரும் குழந்தைகள் இயல்பு மாறாதவர்களாகவே இருக்கிறார்கள். ’நிரூபணம்’ கதையில் வரும் எபனேசர் இதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு. குடிகாரத் தந்தை, அதனால் எரிச்சலில் இருக்கும் தாய், பயமுறுத்தும் ஆங்கில வழிக் கல்வி என்று அவன் உலகம் பயத்தாlலானதாக இருக்கிறது. கூட விளையாடும் பையன் கெட்ட வார்த்தை சொல்லித் திட்டும்போது பதிலுக்குத் திட்டவும் முடியவில்லை (ஜீசஸ் கைவிட்டு விடுவார் என்று அவன் அம்மா சொல்லியிருக்கிறாள்). இத்தனை பிரச்சனைகளுக்கு நடுவில் சர்ச்சுக்குப் போகும் வழியில் அநாதரவாய் கிடக்கும் பிச்சைக்காரத் தாத்தாவைப் பார்த்துப் பரிதாபப்பட்டு  பிஸ்கெட் வாங்கிக் கொடுக்கிறான்.

      பிஸ்கெட்டை வாங்கியவன் ,”Jesus Christ never fails to feed his followers” என்றான் ஆங்கிலத்தில். “He lives with Children” என்று புன்னகைத்தபடி மேரி கோல்டு உறையை ஆர்வமாகப் பிரித்தான்

’புற்று’ கதையில் வரும் சிறுமி பூமிகாவும் பயப்படுகிறாள். கதை அவளும் அவள் சிநேகிதிகளும் நாய்க்குட்டி வாங்க முயற்சிப்பதில் ஆரம்பிக்கிறது. விலை அதிகமுள்ள நாய்க்குட்டியை வாங்க முடியாமல் தவிப்பவள், தெருவில் வளரும் நாய்க்குட்டி ஒன்றினை வீட்டுக்கு எடுத்துச் செல்கிறாள். பெட்டை நாய்க்குட்டியை வளர்த்தால் குட்டி போட்டுத் தள்ளும் என்று அவள் மாமா சொல்கிறான். பூமிகாவை ஏமாற்றி குட்டியை எடுத்துக் கொண்டு போய் நடுரோட்டில் தள்ளிவிட்டு விடுகிறான். தூக்கி எறியப்பட்ட நாய்க்குட்டி, மேல்வீட்டில் இருந்த அக்கா கல்யாணம் என்ற பெயரில் இன்னொருத்தர் வீட்டுக்குத் தள்ளி விடப்பட்டது, தனக்கு அடுத்துப் பிறந்து சில நாட்களில் தவறிப்போன தங்கையின்  நினைவு எல்லாம் சேர்ந்து பூமிகாவைப் பயமுறுத்துகிறது. அவள் அம்மாவிடம் கெஞ்சிகிறாள்

      சொல்லுமா. என்னைய எங்கயாவது தள்ளி விட்டுறமாட்டயே. சாகுந்தண்டியும் ஒங்கூடவே இருக்கேம்மா. ப்ளீஸ்மாநெஞ்சு என்னவோ அதிர்ந்தது அம்மாவிற்கு.

ஆண் பெண் உறவின் சிக்கல்களை இரு கதைகளில் தொட்டுச் செல்கிறார் வேணுகோபால். அவற்றில் ’உள்ளிருந்து உடற்றும் பசி’ அதிர்ச்சி மதிப்பீட்டையும் மீறி முக்கியமான கதை. கதையின் தலைப்பு திருக்குறளில் இருந்து எடுக்கப்பட்டது.

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி

என்பது குறள். வேண்டிய காலத்தில் மழை பெய்யாவிட்டால் நீரால் சூழ்ந்த இவ்வுலகத்தின் உயிர்களை வருத்தும் பசி.

கதை மூன்று தங்கைகளைக் கரை சேர்க்கும் அண்ணனைப் பற்றியது. சின்ன வயதிலேயே அப்பா விட்டுவிட்டுப் போய்விட்டார். அம்மாவும்  இறந்து போக, கூலி வேலை செய்து தங்கைகளைக் காப்பாற்றுகிறான் அண்ணன். கதை கடைசித் தங்கையின் பார்வையில் சொல்லப்படுகிறது. இரண்டாம் அக்கா கல்யாணம் ஆகிப் போன பிறகு இவள் தங்களுக்காக தன் இளமை முழுவதும் செலவழித்த அண்ணனை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாள். வேலை பார்க்கும் துணிக்கடையின் வாசலில் நின்று தன்னை நோட்டம் விடும் ஜெயக்குமார் மேல் வரும் ஈர்ப்பை  இனி துண்டித்துக் கொள்ள வேண்டும், அண்ணன் சொன்னபடி கேட்க வேண்டும் என்று உறுதி கொள்கிறாள். அன்று இரவு அண்ணனுக்கு சமைத்துப் போட்ட பின் உறங்கும்போது கனவில் ஜெயக்குமார் வருகிறான். அவன் உடல் சூடு அவள் மேல் பரவுகிறது. விழித்துப் பார்த்தால்  நிஜமாகவே ஒரு கை அவள் மேல் இருக்கிறது. அதிர்ந்து நகர்கிறாள். என்ன நடக்கிறதென்றே புரியவில்லை.

      தலை குனிந்தவாறே முனகலைப் போல அவன் கேட்டான், ”அக்கா அவுங்க ஒங்கிட்ட வேற ஒண்ணும் சொல்லலையா..”

இந்த ஒற்றை வரியில் அவனது இயலாமை, வேறு வழியில்லாத நிலமை, அசூயையை மீறி அவன் மேல் பரிதாபம் என அனைத்தையும் கொண்டு வந்து விடுகிறார் வேணுகோபால். நேரத்தே மழை பெய்யாவிடின் நீர் சூழ்ந்த உலகத்தின் உயிர்களைப் பசி வருத்தும்.

எளிய மக்களையும் அவர்கள் பிரச்சனைகளையும் கரிசனத்தோடு அணுகியுள்ளார் வேணுகோபால். அவருக்கு முன்னோடியாகச் சொல்ல வேண்டுமென்றால் அசோகமித்திரனைத்தான் சொல்ல வேண்டும். ஆனால் அசோகமித்திரன் கதைகளில் வரும் கசப்புடன் கூடிய அங்கதத்தை வேணுகோபால் கதைகளில் காண முடிவதில்லை.  நெருஞ்சி முள் தைத்த வெகு நேரத்திற்குப் பின்னும் வலிப்பது போல் இந்தக் கதைகள் ஏற்படுத்தும் அதிர்வுகள் வெகு நேரம் நம்மைத் தொடர்கின்றன். தமிழின் முக்கியச் சிறுகதை எழுத்தாளர்கள் வரிசையில் வேணுகோபாலுக்கு முதல் வரிசையில் என்றும் இடமுண்டு.

வேணுகோபாலின் வேரெழுத்துக்கள்

– சிவானந்தம் நீலகண்டன் – 

படம்: www.discoverybookpalace.com

ஐந்தாறு வருடங்களுக்குமுன் ஜெயமோகன் கூந்தப்பனை பற்றி எழுதிய கட்டுரைகளின் மூலமாகத்தான் சு.வேணுகோபால் என்ற பெயர் எனக்கு அறிமுகமாகியது. ஓர் உந்துதல் அப்போது எழுந்தும் பிறகு வாசித்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டது ஆகப்பெரிய தவறென்று சமீபத்தில் ஒரே மூச்சில் அவரது ஏழு குறுநாவல்களையும் பதினைந்து சிறுகதைகளையும் வாசித்தபோது புரிந்தது. அவரது குறுநாவல்களை முன்வைத்து இக்கட்டுரையை எழுதுகிறேன்.

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய கண்மணி குணசேகரன், “தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப்படும்” என்ற குறளை விளக்கிப் பேசுகையில் வள்ளுவர் ஒரு விவசாயியாகத்தான் இருந்திருக்கக்கூடும் என்று ஊகித்தார். புழுதியடிப்பதைப் பற்றி அந்த அளவுக்கு நுட்பமான செய்தியைக் கொண்ட குறளது. ‘நிலம் எனும் நல்லாள்’ குறுநாவல் வாசிக்கையில் வேணுகோபாலைப் பற்றியும் அப்படியொரு சந்தேகம் எழுந்துகொண்டே வருவதை வாசகர் தவிர்க்கவியலாது. பருத்தியோ, துவரையோ, மிளகாயோ, சூரியகாந்தியோ, நிலக்கடலையோ, வயற்காடுகளையும் அவற்றின் பயிர்களையும் விதையிலிருந்து, விதைப்பதிலிருந்து, விளைச்சலைக் காசாக்குவதுவரை எவ்வளவு ஆழத்திற்குப் போய் எழுத்தில் சித்தரித்துவிடமுடியும் என்று குமரன் பாத்திரத்தின் வழியாகக் காட்டியிருக்கிறார். மண்ணின் மீது மூர்க்கமான காதல்கொண்ட – மண்ணைக் கொஞ்சம் சாப்பாட்டில் போட்டுச்சாப்பிடும் – இக்கதாபாத்திரத்தின் வாழ்வு மண்ணிலேயே அற்ப ஆயுளில் முடிந்துபோயினும் வாசகர் மனங்களைவிட்டு அவ்வளவு விரைவில் நீங்காது.

வயல்வெளிகளை எழுத்தாளர்கள் வாசகருக்குப் பலவிதமாகக் காட்டித்தரமுடியும்; தூரத்து மேடுகளில் நின்று சுட்டுவிரல்களை நீட்டிப் பசுமையை மட்டும் காட்டிச் செல்லலாம். கூட அழைத்துச்சென்று வரப்புகளில் நடந்து இலை, காய்களைத் தடவச்செய்யலாம். மாடுகளின் பின்னாலேயே கலப்பை பிடித்து முழங்கால் அளவு சேற்றில் நடக்கச் செய்யலாம். இன்னும் எத்தனையோ வழிகளிலும். ஆனால் வேணுகோபால் நமக்குக் காட்டித்தருவது வெளியே தெரியாத அப்பயிர்களின் வேர்களைத்தான். பயிர்கூட ஓரிடத்திலிருந்து பறித்து வேறெங்கோ நடப்படும்போதும் சூழ்நிலைக்குத்தக்க தன்னைத் தகவமைத்துக்கொண்டு தழைத்துவிடுகிறது. ஆனால் விவசாயக் குடும்பத்தில் பிறந்து மண்ணின் அருகாமையை அனுபவித்துவிட்டுப் பல்வேறு காரணங்களால் புலம்பெயர நேரிடும் ஒருவனுக்குக் கடைசிவரை – அதன் கஷ்ட நஷ்டங்களை முற்றிலும் உணர்ந்திருக்கும் போதிலும் – என்றோ ஒருநாள் சொந்தமண்ணுக்கு மீண்டும் திரும்புவோம் என்ற ஆசை அழிவதில்லை. பொதுவாக புலம்பெயர்தலை வெளிநாடுவாழ் தமிழர்களுக்கானதாகவே பார்த்திருக்கும் பொதுப்புத்தி, இந்நாவலில் மதுரையிலிருந்து சென்று கோயம்புத்தூரில் வேர்பிடிக்க மனமில்லாமல் திணறும் பழனிக்குமாரைப் பார்த்தால் திகைக்கக்கூடும். பேசும் மொழியின் நுண்ணிய வேறுபாடுகள்கூட விருப்பு வெறுப்புகளை மாற்றியமைக்க முடிவதையும் நாவல் பதிவுசெய்கிறது.

மாமியார்- மருமகள் பிரச்சனையை ஆசிரியர் அணுகும் விதம் அலாதியானது. ‘உங்க அம்மா ஒண்ணுக்குப் போயிட்டு ஏன் பத்தும் பத்தாததுமா தண்ணி ஊத்திட்டு வராங்க? தண்ணிக்கு என்ன பஞ்சமா? சுத்தம்னா என்னன்னு தெரியவேண்டாமா?’ என்று பொருமும் மனைவியின் புகாரைத் தன் புகாராக மாற்றி அன்னையிடம் சொல்லும் பழனிக்குமாருக்கு, ‘கங்காதேவிய அப்பிடி கண்டபடி செலவுபண்ணக் கூடாதுப்பா’ என்று அறிவுரை கிடைக்கிறது. ‘ஏன் பழைய புடவையை ஒட்டுப்போட்டுக் கட்டிக்கொண்டு திரிகிறார்கள்? அவமானம்’ என்ற புகாருக்கு, ‘எவ்வளவு நாள் நமக்கு உழைச்சது. அப்படி தூக்கிப்போட மனசு வல்லப்பா’ என்ற பதில் கிடைக்கிறது. அவரவருக்கு அவரவர் நியாயங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

ஆனால் நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை படைத்ததாயிற்றே இந்த உலகம். யாரையும் தன் போக்கில் செல்ல அது விட்டுவிடுவதில்லை. நேற்றிருந்தான் இன்று இல்லை என்று பொருள்கொள்வதைவிட நேற்றிருந்ததைப் போல் அவன் இன்று இல்லை என்று பொருள்கொள்வது நிலையாமையை இன்னும் ஆழப்படுத்தவே செய்கிறது. ஏதோ ஒரு எதிர்பாராத நிகழ்ச்சியின் மூலம் நம்பிக்கை துளிர்க்கக்கூடும். அப்படி அவனுக்கும் நடக்கிறது. குடும்பத் தலைவனில்லாத ஓர் ஏழைக்குடும்பத்தின் எதிர்காலமாக நிற்கிறது ஒரு சினையாடு. வயிற்றிலேயே குட்டிகள் இறந்துவிட்டதால் கால்நடை மருத்துவரால் கைவிடப்பட்ட அந்த ஆட்டைப் பிழைக்கச்செய்வதன் மூலம் அக்குடும்பத்தைப் பிழைக்கச்செய்யும் அவனுக்கு நன்றிக்காகச் செலுத்தப்படும் ஒரு வாழைத்தார் வாசகர் கண்களில் நீரரும்பச் செய்வதோடு பழனிக்குமாருக்கும் வேற்றுமண்ணில் வேர்விட ஒரு புதிய துவக்கத்தைக் கொடுக்கிறது. ஆட்டைப் பிழைக்கச்செய்ய பழனிக்குமார் எடுக்கும் முயற்சியில் அவனும், ஆடும், அக்குடும்பமும் படும் பாடுகளை வாசிக்கையில் நமக்குக் கைகால்கள் வெலவெலத்துப் போகின்றன. காட்சிகள் அவ்வளவு தத்ரூபம்.

‘ஆட்டம்’ என்றொரு குறுநாவல். ஒருமுறை முழுதாக வாசித்தது போதாமல் ஆங்காங்கே தாவித்தாவி சில பகுதிகளை மீண்டும் மீண்டும் வாசிக்கவைத்தது ஆட்டம். குறிப்பாகக் கபடி ஆட்டம் நிகழும் ஓர் அத்தியாயம் ஆட்ட நுணுக்கங்களின் அரிய ஆவணம். எப்படியெல்லாம் விதவிதமாகப் பாடிச்செல்வார்கள் என்பதுமுதல் விழுந்துபுரண்டபின் காயங்களில் ஒட்டியிருக்கும் நுண்கற்களை குளிக்கும்போது கவனமில்லாமல் தேய்த்துவிட்டால் காந்தல் எடுத்துவிடும் என்பதுவரை வரிக்கு வரி தகவற்குவியல்கள். அவற்றைத் துருத்திக்கொண்டிருக்கும் ஒட்டுத்தகவல்களாக இல்லாமல் வடிவேல் கதாபாத்திரத்தின் மூலமாக இயல்பாகப் பதிவுசெய்து வாசகர் கண்முன்னே கபடி ஆட்டமும் சூடுகுறையாமல் நிகழச்செய்தது மலைக்கச்செய்த எழுத்து நேர்த்தி.

இன்னொரு வகையில் காமம் நம் அனைவரின் மீதும் கபடி ஆடிவிட்டுச் சென்றுவிடுவதையும் ‘ஆட்டம்’ சித்திரமாக வரைந்து காட்டுகிறது. உயிரே அவள்தான் என்று வடிவேலை நினைக்கச்செய்வதும் சரி, ஒரு கட்டத்தில் அவள் உயிரை எடுத்துவிட்டால் என்ன என்று வெம்பச்செய்வதும் சரி வெவ்வேறு இடங்களில் உயிர்கொள்ளும் காமத்தின் வேர்களே. உயிரின் செயல்பாடுகள் அனைத்துக்கும் உந்துவிசையாவது இந்த ஆதாரக் காமம். மற்ற உயிர்களைப் போலல்லாது சமூக விலங்குகளான மனிதர்கள் தங்களுக்காகத் தாங்களே உருவாக்கிக் கொண்டுள்ள அற, ஒழுக்க விதிகளுக்குட்பட்டு அந்த உயிரியல் விசையின் கொந்தளிப்புக்கு ஈடுகொடுக்க வேண்டியுள்ளது. ஒருபக்கம் மலைப்பாறைகளில் சுரந்து வெளியேறும் நீரூற்றுபோல் பிரவாகிக்கும் காமத்தின் அளப்பரிய ஆற்றல். மறுபக்கம் அதன் மனவிகாரங்களைத் தவறு, கெட்டது, பாவம், குற்றம், சுற்றம் என்று பல அணைகளைக் கட்டித் தேக்கும் மனிதனின் முயற்சி. பல சமயங்களில் முன்னது வெல்கிறது. சில நேரங்களில் பின்னது உதவுகிறது. வாழ்க்கை ஆடித்தீர்த்துவிட முடியாத ஆட்டம் என்பதையும் அந்த ஆட்டத்திலிருந்து விலகிக்கொள்ள நினைப்பது எவ்வளவு அபத்தம் என்பதையும் பல பாத்திரங்களின் வழியாக உக்கிரம் குறையாமல் எழுதிக்காட்டியிருக்கிறார்.

‘இரட்சணியம்’ குறுநாவலிலும் காமம் பேசப்படுகிறது, பதினெட்டு வயதுப் பையனின் மனம் வழியாக. கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்த அவனுக்குள் இயல்பாகப் பொங்கும் காமம் கீழ்த்தரமான பாவம் என்று போதிக்கப்படுவதால் அவன் கடும் குற்ற உணர்ச்சிக்காளாகிறான். குளியலறையில் எட்டிப்பார்க்க முயன்று முடியாத நிலையில் பெண்ணின் உடலைத்தொட்டு வழிந்துவரும் தண்ணீரைப் பார்த்ததுமே அவனுக்கு உடல் கனன்று தகிக்கிறது. சினிமாவில் எப்படிக் காதலனும் காதலியும் அருகருகே அமர்ந்து சாதாரணமாகப் பல விஷயங்களைப் பேசிக்கொள்கிறார்கள்? தனக்கு மட்டும் ஏன் எந்தப்பெண்ணைப் பார்த்தாலும் காமம் பீரிட்டுக்கிளம்புகிறது? போன்ற கேள்விகள் அவனை வதைக்கின்றன. +2 தேர்வில் தோல்வியடைவது கூட ஒருவேளை இந்த பாவத்தின் சம்பளமாக இருக்குமோ என்று அவனுக்குத் தோன்றுகிறது.

இந்த நாவல் என்னைக் கவர்ந்தது வேறொரு தளத்தில். பதின்வயது காமக் கிளர்ச்சியை அதன் தெறிப்புகளுடன் பதிவு செய்திருக்கும் ஆசிரியர், கவனமாக வாசகர் அதில் தன்னை இழந்துவிடாமல் அதேநேரம் புறவயமாகக் காமத்தை உற்றுநோக்க வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்திருக்கிறார். காமத்துக்குக் கட்டுப்பாடுகள் தேவைதான் என்று வாசகரே விழிப்புடன் ஒரு முடிவை நோக்கி மெல்லச் செல்லவைக்கும் வகையில் சம்பவங்களை அமைத்திருக்கிறார். பாவம் குறித்த போதனைகள் காமத்தைக் கட்டுப்படுத்த பயன்படாமல் போகும் அதே தருவாயில் விழிப்புடன் காமத்தைப் புரிந்துகொள்ள வாசகரையே சாட்சியாக்கியிருக்கிறார். கம்பிமேல் நடப்பதுபோன்ற கவனத்தைக் கோரும் இக்கதை கீழே விழுந்துவிடாமல் சாதுர்யமாக காப்பாற்றியிருக்கிறார்.

‘உருமால் கட்டு’ குறுநாவல் கிராமத்து மனிதர்களின் ஆசாபாசங்களை, ஒரு குறிப்பிட்ட சாதியின் திருமண முறைகளை, பேசுகிற சாக்கில் ஒரு முக்கியமான கேள்வியையும் கேட்கிறது. காலம் யார் யாரையோ மேலே தூக்கிச்செல்கிறது. அதில் ஏன் ஒரு விவசாயியைக்கூடக் கண்கொண்டு காணவில்லை? யார் பிழை அது? பழைய குடும்பப்பகையை மனதிற்கொண்டு எப்படிப்பொங்கி வெடிப்பாரோ என்று பலவித ஊகங்களுடன் தன் திருமண உருமால்கட்டுக்கு பத்திரிகை வைக்கப்போகும் குபேந்திரனைத் தாய்மாமா கதிரய்யா வீட்டுக்குள் அழைத்துச்சென்று, படித்து வேலையில்லாமல் இருக்கும் தன் பேரனை ‘மெட்ராஸ் பக்கம் ஏதும் தெரிஞ்ச கம்பெனியில சேர்த்துவிட’க் கோரிக்கை வைக்கும்போது அவன் மனதில் குடிகொண்டிருந்த அவரது கம்பீரம் நொறுங்குகிறது. அக்கணத்தில் அவனுக்குள் பிறக்கும் கேள்வியே அது. பெரிய சம்சாரிகளையும் கூலிவேலை செய்யவைத்துவிடுகிறதே காலம். விவசாயக் குடும்பத்துப் பையன்கள் படித்துத் தகுதியிருந்தும் அரசாங்க வேலையைக்கூட அடிமைத் தொழிலாக நினைத்த காலம் எப்படி இவ்வளவு விரைவில் – ஒரே தலைமுறையில் – தலைகீழாகிப் போனது?

‘நாளைக்கு ஒரு செழிப்பு வராமயா போகும்’ என்ற எதிர்பார்ப்பில் மட்டுமே இவர்கள் வாழ்வு நகர்ந்துகொண்டிருப்பதைக் கதையாக்கியுள்ளார். ஏழ்மை, முறுக்குள்ளவர்களைப் பணியச்செய்கிறது. பணம், அறிவாளிகளைக்கூட சுயநலவாதிகளாக்கி விடுகிறது. பணமிருந்தாலும் சொந்தபந்தங்களை விட்டுவிடாமல் நடக்கிறார் என்று அவன் நினைத்திருந்த அப்பாவும்கூட மனதார மற்ற சொந்தங்கள் பொருளாதார ரீதியாக முன்னேறுவதை விரும்பவில்லை. தன் நல்ல நிலைமையை வெளிக்காட்டிக்கொள்ள அவருக்கு அவர்கள் தேவைப்படுகிறார்கள். அதைப் பகட்டாகச் செய்யாமல் பக்குவமாகச் செய்கிறார் அவ்வளவுதான்.

‘திசையெல்லாம் நெருஞ்சி’ நாவல் இருபத்தைந்து பக்கங்களுக்குள் இவ்வளவு சொல்லமுடியுமா என்ற வியப்பைத்தான் முதலில் தந்தது. வேணுகோபாலின் அனைத்து நாவல்களிலும் கிராமங்கள் உண்டு. கிராமங்களின் சில அம்சங்களை அவர் மறுப்பதோ மாற்றுவதோ இல்லை. சாதி அதில் ஒன்று. கதையின் மையத்திலோ ஓரத்திலோ சாதி அதன் வீச்சோடு காண்பிக்கப்பட்டுவிடுகிறது. கண்ட இடங்களில் மலஜலம் கழித்து வைத்திருப்பது மற்றொன்று. நான் வாசித்த ஏழு நாவல்களிலும் ஒருவரியேனும் இதைக்குறித்த வர்ணனை இல்லாமலில்லை. அதனால் நாம் கனவுகாணக்கூடிய உட்டோப்பிய கிராமங்களல்லாத நிஜ கிராமங்கள் கண்முன் விரிகின்றன. இவை எழுத்தின் நம்பகத்தன்மையையும் கூட்டுகின்றன.

கிராம நாவிதன் பழநி அந்த ஊருக்கு வந்து இருபது வருடமானாலும் அவன் – சாதியின் பொருட்டு – அவர்களில் ஒருவனல்ல என்பதைக் காட்டக் கிடைக்கும் சிறுவாய்ப்புகளையும் ஊர்க்காரர்கள் யாரும் நழுவ விடுவதில்லை. அவர்களில் சிலருக்குக் கடன் கொடுக்கும் நிலையில் தான் வளர்ந்திருப்பதைக் குறித்து உள்ளூர அவனுக்குப் பெருமிதமிருந்தாலும் பணத்தைத் திரும்பக் கேட்பதைக்கூடக் குறுகிமருகித்தான் செய்ய வேண்டியிருக்கிறது. ஏச்சுக்களையும் வாங்க வேண்டியிருக்கிறது. கொடுத்த காசைக் கேட்டதற்கு மனைவியைக் குறித்த இழிசொற்களுடன் அறையப்படும்போது ஆத்திரத்தில் பழநி தன்னிலை இழந்து திருப்பியடித்துவிடுகிறான். உடனே இங்கு சாதி நுழைந்துவிடுகிறது. மற்ற நியாயங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு அம்பட்டையன் எப்படி நம்மில் ஒருவரை அடிக்கலாம் என்பதே பிரதான பிரச்சனையாகி ஊரைவிட்டுப் போய்விட அவனுக்குக் கெடு விதிக்கப்படுகிறது. அவன் நினைவுகள் வழியாக ஊரார்களுக்குக் கைவைத்தியம் செய்து வியாதிகள் தீர்த்தது முதல் கைகால் விழுந்துபோன இளைஞனுக்கு அந்தரங்கப் பகுதிகளில் சுத்தம் செய்துவந்தது வரை அனைத்தும் நமக்குச் சொல்லப்படுகிறது. இவ்வளவு செய்துகொண்டிருக்கும் ஒருவனைச் சாதி என்ற ஒன்றுக்காக – பலருக்கு விருப்பமில்லாவிட்டாலும் – ஏன் தூக்கியெறியத் தயாராக இருக்கிறார்கள் என்ற கேள்வியை வாசகர் தானாகவே வந்தடையட்டும் என்று விட்டிருக்கிறார்.

‘பால்கனிகள்’ குறுநாவல் ஆணாகப்பிறந்து பெண்ணாக மாற்றமடையும் ஒருவரின் கதையைப் பேசுகிறது. அதன் ஒவ்வொரு கட்டத்தையும் உடல், மன, குடும்ப, சமூகக் கோணங்களில் நுணுக்கமாக எழுதியிருக்கிறார். என்னதான் கற்பனை வளமிருந்தாலும் வெறும் செய்திகளை மட்டும் வைத்துக்கொண்டு ஒருவர் இவ்வளவு உணர்வுபூர்வமாக எழுதிவிட இயலுமா என்று மலைப்பு தட்டுகிறது. உண்மையில் அந்த மலைப்பு நான் வாசித்த ஆசிரியரின் எல்லா நாவல்களிலுமே உண்டானது; அதன் அளவில் மெல்லிய வேறுபாடுகள் அவ்வளவுதான். எதையும் எளிதாகத் தள்ளிவிட முடியவில்லை.

‘பால்கனிகள்’ கதையில் வரும் திவ்யா பால்குடி மறக்காத தன் பிள்ளையை வீட்டில் விட்டுவிட்டு அலுவலகம் செல்லும் முதல் நாள் படும் அவஸ்தைகள் அணுஅணுவாக விவரிக்கப்படுகின்றன. இதற்குமேல் முடியாதென்று அலுவலகத்திலிருந்து புறப்பட்டு வீட்டை அடைகையில், மஞ்சுளாவாக மாறிக்கொண்டிருந்த தன் தம்பி கிட்ணன் குழந்தைக்கு முலையூட்டிக் கொண்டிருப்பதைக் காணும் இடத்திலேயே கதை உச்சமடைந்து விடுகிறது. தன்னுடைய பால் இதுவென்று உணரும் அவன், அதன் நியாயத்தைத் தனக்குள் சுரக்கும் தாய்மையிலிருந்து பெறுகிறான். வீட்டைவிட்டுத் துரத்தப்பட்டுப் பின்னாளில் திவ்யாவை எதிர்பாராமல் கண்டு பேசும்போது, ‘ஏமாத்துறதுதானக்கா மனுசனோட இயல்பு’ என்று அவளுக்கே சமாதானம் சொல்லும்போதும், ‘என்னோட வேதனையை சொன்னாலும் யாருக்கும் புரியாதுக்கா’ என்று குமையும்போதும், வாழ்க்கையை இப்படி வெறும் நரகமாக மட்டுமே அனுபவிக்க இவர்கள் செய்த குற்றமென்ன என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. இக்கதையை வாசிக்கும் ஒருவர் திருநங்கைகளைக் கேலிப்பொருட்களாகப் பார்க்கும் பொதுப்புத்தியின் பகுதியாக இருந்ததை எண்ணி வெட்கமடையக்கூடும். அதுவே மாற்றத்தின் விதை.

‘இழைகள்’ கீழ்ச்சாதியில் பிறந்து, எத்தனையோ கஷ்ட நஷ்டங்களுக்கிடையில் படித்து ஆசிரியராகி, ஓய்வு பெறப் போகும்போது நல்லாசிரியர் விருது பெற்றுவிடும் ஒருவரின் கதை. உளவியல் தளத்தில் சிந்தனைப் பாய்ச்சல்கள் நிகழ்ந்துள்ள கதை இது. விருதுபெற்ற செய்தியைக் கேள்விப்பட்டவுடன் ஓடிப்போய்ச் செய்தியை அச்சில் பார்த்துவிட ஆவல் துடிப்பினும், நெஞ்சு படபடக்க ஆனால் பொறுமையாகச் சென்று செய்தித்தாளை சத்தம் வராமல் புரட்டிப் பார்ப்பதிலிருந்து தொடங்குகிறது வேணுகோபாலின் உளவியல் அவதானிப்புகள். அடுத்தவர்களுக்குக் கிடைத்த போதெல்லாம் விருதை இழித்துரைத்த மனம் தற்போது பெருமிதத்தில் விம்முகிறது. தனக்குப் பெருமை கிடைத்தவுடன் அதைப் பகிர்ந்துகொள்ள ஆட்களை எண்ணத்தில் வரிசைப்படுத்தும் மனம், அடுத்த கணம் தான் அவர்களை உறிஞ்சி வளர்ந்ததைத் தவிர அவர்களுக்கு எதுவுமே செய்யவில்லையோ என்ற குற்ற உணர்ச்சி மேலிட்டுவிடுவதால் அவதியுறுகிறது. நல்லாசிரியர் என்றவுடன் தான் உண்மையில் நல்லவன்தானா என்ற கேள்வி எழுந்து வாலிபத்தில் சந்தர்ப்பவசத்தால் செய்த காரியங்களைக்கூட அசைபோட்டுப் பெருமூச்செறிய வைக்கிறது. அம்மாவின் நினைவு வரும்போதெல்லாம் அவள் ஆடுகளுடன் வரும் உருவம்தான் தெரிகிறது. அவள் உயிர்க்குயிரான அவ்வாடுகளை ஆசிரியப் பயிற்சிப் படிப்புக்கு அவசரத் தேவை என்று பொய்சொல்லி விற்கவைத்தது இப்போது குத்துகிறது. ‘நானும் வாங்கிட்டண்டா’ என்று சில சாதிப்பித்தர்களின் முன்னால் இறுமாப்புடன் நடக்கமுடியும் என்ற ஒன்றைத்தவிர உள்ளுக்குள் எல்லாம் நெருடலாகவே இருக்கிறது. ஆசிரியராக இருந்து ஜனாதிபதியான ராதாகிருஷ்ணனைப் பற்றி ஏதாவது கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும். நல்லாசிரியர் விருது வாங்கியிருக்கீங்க ஆனா இது தெரியாம இருக்கீங்க என்று யாரும் கேட்டுவிடக்கூடும் என்ற பயமும் எழுகிறது.

நாவல்களில் பொதுவாக சில அவதானிப்புகளைச் செய்ய முடிந்தது.

பால்கனிகளைத் தவிர மற்ற குறுநாவல்கள் ஆண் கதாபாத்திரங்களின் வழியாகச் சொல்லப்படுபவை. இதன் காரணமாகவோ என்னவோ அக்கதைகளில் காமம் பேசப்படும் இடங்களெல்லாம் பெரும்பாலும் பெண்களே முதல் தூண்டிலாகவோ தூண்டுதலாகவோ இருக்கிறார்கள். ஒருவகையில் அப்படி தூண்டப்படும் ஆண்கள் தாம் பயன்படுத்தப்பட்டு விட்டோம் என்ற உணர்வை பின்னாளில் வந்தடைகிறார்கள். அதேசமயம் பால்கனிகள் பெண் கதாபாத்திரம் வழியாகச் சொல்லப்படுகையில் ஆண்கள் தூண்டுகிறார்கள்; திருநங்கை பயன்படுத்தப்பட்டதாக உணர்கிறார். இதைப் பொருந்தாக் காமத்தின் இயல்பைக் குறித்து ஆசிரியர் காட்டும் உட்குறிப்பாக எடுத்துக்கொள்ளலாம். அதாவது காமம் சார்ந்த பொதுவான சமூக ஒழுக்க விதிகளை மீறும்போது அதில் ஈடுபடும் அனைவருமே பால்பேதமின்றி குற்றவுணர்ச்சி கொள்கிறார்கள். இன்பம் துய்த்தபின் வந்து கவிழ்ந்து கொள்ளும் இக்குற்றவுணர்ச்சியைப் போக்கிக்கொள்ள இயல்பாக இருவருமே அதை மற்றவர்தான் தன்னைப் பயன்படுத்திக்கொண்டார் என்று கருதிக்கொள்வதால் சுய இரக்கத்தின் மூலம் ஆறுதல் கொள்ள முயல்கின்றனர்.

தமிழில் சாதி பேசப்படும் புனைவுகளில் உக்கிரம் நீர்த்துப் போய்விடக்கூடாது என்று கருதியோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ பொதுவாக மேல்சாதியிலிருந்து ஒரு நல்ல உள்ளம்கூட இல்லாத நிலை இருப்பதுபோலவே கதைக்களங்களை அமைக்கிறார்கள். உண்மை நிலை அதுவல்ல என்பது அனைவருக்கும் தெரியும். வேணுகோபால் எழுத்துக்களில் தன் சாதிக்கு எதிராகத் துணிந்து பேசமுடியாத அதேநேரம் மனசாட்சிக்கு விரோதமாக நியாயத்துக்கு எதிராகச் செயல்படவும் முடியாத கையறு நிலையில் தள்ளப்படும் மேல்சாதிக்காரர்கள் அடையாளம் காட்டப்படுகிறார்கள். நியாயத்தைப் பேச விரும்பும் படைப்பாளிகள் எல்லாத் தரப்பின் இண்டுஇடுக்குகளிலும் மறைந்துள்ள நிதர்சனத்தையும் தேடிப்பாரத்து பேசுவதுதான் நியாயம். அதுவே சாதி வேற்றுமைகளைக் குறித்து தார்மீகக்கோபம் கொள்வதற்கான அடிப்படைத் தகுதியும் கூட.

மற்றவற்றைவிட முக்கியமான ஒரு பொது அம்சம் – பலவிதமான சிக்கல்கள் பேசப்பட்டாலும் நம்பிக்கைக் கீற்றோடு நாவல்களை முடிப்பதுதான். திசையெல்லாம் நெருஞ்சியில் மட்டும் முடிதிருத்தும் பழநி கடைசியில் ஊர் தன்னை ஏற்றுக்கொண்டுவிடும் என்ற நம்பிக்கையை இழந்துவிடுகிறான். ஆயினும் அவன் மனைவி நம்பிக்கை இழக்காதவளாகவே இருக்கிறாள். குழந்தைகளுக்கு அம்மை போட்டுவிடுவதைக்கூட அந்நிலையில் ஊரைக் காலிசெய்யச் சொல்ல மாட்டார்கள் என்பதால் சாதகமான விஷயமாகப் பார்க்கிறாள். மானுடத்தின் சிக்கல்களுக்கு மகத்தான ஒரே பொதுத்தீர்வு இருக்கக்கூடுமென்றால் அது அச்சிக்கல்களைத் தீர்த்துவிடமுடியும் என்ற நம்பிக்கை மட்டும்தான் அல்லவா?

நாஞ்சில் நாடனின் ‘பாம்பு’ சிறுகதை புகழ்பெற்றது. ஒரு தமிழ்ப்பேராசிரியரின் வீட்டிற்குள் நுழைந்துவிடும் பாம்பு ஒன்று அவருடைய ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையைப் படிக்க நேர்ந்து, தொல்தமிழ்க்குடிக்குச் செய்யும் சேவையாக இருக்கட்டும் என்று முடிவெடுத்து, ‘வக்காளி வரட்டும்’ என்று காத்திருப்பதாக அந்தக் கதையை முடித்திருப்பார். தமிழ்ப் பேராசிரியர்களின் எழுத்துக்கள் அந்த அளவுக்குப் படைப்பாளிகளை பாதித்திருக்கின்றன. அவ்வகையில் பெருமாள்முருகன் விதிவிலக்கு என நான் நினைத்துக் கொள்வதுண்டு. சு.வேணுகோபாலும் தமிழ்ப் பேராசிரியராக பணிபுரிவதை அறிந்து மகிழ்ந்தேன். தமிழ் இவர் வார்த்தைகளில் இன்னும் ஆழமாக வேர்பிடிக்கிறது. ஏன் வம்பு என்று தொடாமலோ அல்லது பட்டும்படாமலோ சொல்லிப்போகப்படும் விஷயங்களை ஆதியந்தமாக அணுகும் இவரின் வேரெழுத்துக்கள் ஊடுருவும் ஆழங்கள் சொற்களில் விவரிக்க முடியாததாக இருக்கிறது. தமிழ் வாசகப்பரப்பும் படைப்பாளிகளும் இவ்வெழுத்துக்களைக் கூர்ந்து கவனித்தால் தமிழும் புனைவும் மேலும் வளம்பெறும்.

வாழ்வு கொள்ளாத துயரம்

மாயக்கூத்தன்

படம்: www.nhm.in

இரண்டு நாவல்களையும் ஒரு சிறுகதைத் தொகுப்பையும் கொண்டு தான் சு.வேணுகோபால் படைப்புகளை இங்கு அணுகுகிறேன். அவருடைய படைப்புகளில் ஒரு சிறு பகுதி தான் இவை என்றாலும் அவருடைய கதையுலகத்தை ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடிந்தது.

‘நிலம் எனும் நல்லாள்’ நாவல் ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவனுடைய கதை. நாவல் முழுக்க முழுக்க அவன் தனக்கும் தன் குடும்பத்திற்கும் நேர்ந்த அசந்தர்ப்பமான நிகழ்வுகளை அசை போட்டுக் கொண்டேயிருக்கிறான். தம்பியின் மரணம், விவசாயத்தின் வீழ்ச்சி- இது எல்லாவற்றையும் விட, அணுக்கமில்லாத மனைவி. கவலைகளுக்கு குறைவில்லாத வாழ்வு. மனச்சோர்வில் விழுந்தவன் போல, ஒன்றை விட்டு மற்றொன்றைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டே இருக்கிறான். தன்னுடைய கடந்த கால வாழ்வையும் தற்கால வாழ்வையும் மாறி மாறி அசைபோடும் பழனிக்கு, அவன் தேடும் பிடிமானம் சிக்குவதில்லை. நமக்குமே கூட.

நாவல் முழுக்க முழுக்கவே பழனியின் கவலைகளோடும் புலம்பல்களோடுமே வளர்கிறது. நல்லவிதமாக நகரும் விஷயங்களும்கூட கடைசியில் துயரத்தையும் சண்டைகளையுமே சந்திக்கின்றன. முதன் முதலில் பழனியும் அவன் மனைவியும் சண்டை போடும் போதே, அவர்கள் பரிமாறிக் கொள்ளும் வார்த்தைகளைக் கொண்டே, அவர்களுக்கு இடையிலான உறவின் தன்மை நமக்குப் புரிந்துவிடுகிறது. ஆனால், அவர்கள் திரும்பத் திரும்ப சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். வாழ்க்கையில் இப்படிதான் இருக்கும் என்றாலும் வாழ்பவர்க்ளுக்குக் கிடைக்காத புரிதல்கள் வாசகர்களுக்கு சீக்கிரம் பிடிபட்டுவிடுகின்றன. எனவேதான், நாவலின் இறுதி வரை, ஒரு நோக்கமுமில்லாமல் தம்பதிகளுக்குள் சண்டை, பழனியின் கவலைகள் என்று மாறி மாறி சொல்லப்பட்டிருப்பது சலிப்பைத் தருகிறது.

இந்நாவலின் மிக நல்ல பகுதிகள் என்று சொல்லக்கூடியவை, விவசாய முறைகளைப் பற்றியும் மனிதர்களின் இடப்பெயர்வு பற்றியும் ஆசிரியர் எழுதியிருப்பவை. என்னுடைய தேவைக்காக, வேணுகோபால் விவரித்திருக்கும் மிளகாய் சாகுபடி நுட்பத்தைக் குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன். நமக்கு உதவினாலும், பல இடங்களில் இம்மாதிரியான விரிவான குறிப்புகள்/விவரணைகள் கதையோடு ஒட்டாமல் அதன் ஓட்டத்திற்கு தடைபோடுகின்றன. குறிப்பாக இப்படிப்பட்ட ஒரு இடம்- பழனி தெருவில் போய்க் கொண்டிருக்கும் போது ஒருவர் வீட்டில் மாடு இருக்குமே என்று யோசிக்கிறான், பிறகு அதற்கு அவன் வைத்தியம் பார்த்தது விரிவாகச் சொல்லப்படுகிறது. எதற்கு அவசியமேயில்லாமல் இது போன்ற விவரணைகள் என்று புரியவில்லை. தம்பதியர் மீண்டும் மீண்டும் சண்டை போட்டுக் கொள்வதிலாவது ஒரு யதார்த்தம் இருக்கிறது.

ஆழமான மனச்சோர்வு கொண்ட பழனி கதையின் கடைசியில் தனக்குக் கிடைக்கும் ஒரு சிறிய அங்கீகாரத்தைக் கொண்டு வாழ்வு முழுமைக்கும் நிம்மதி அடைவான் என்று நினைக்க முடியவில்லை. பொதுவாக, வேணுகோபாலின் கதைகள் சில இது போன்ற ஒரு புதிய புரிதல் அல்லது தெளிவு அல்லது உணர்த்தல் அல்லது தரிசனத்தில் வந்து முடிவதை நிறைய பேர் பாராட்டியிருக்கிறார்கள். இத்தனை காலமாய் துயரம் நிறைந்திருந்த வாழ்க்கையையே முழுசாக மாற்றிவிடும் என்ற நம்பிக்கை ஒளியை வாசகர் உள்ளத்தில் இது போன்ற முடிவுகள் பாய்ச்சுகின்றன. ஆனால் நிம்மதியாய் தூங்கி எழுந்ததும் தொற்றிக் கொள்ளும் கவலைகள் போல் புறவுலக அழுத்தங்கள் கதையின் முடிவுக்குப்பின் இன்னும் வீரியமாக தொடரத்தானே போகின்றன.

‘ஆட்டம்’ வேணுகோபாலின் மற்றொரு நாவல். கதை அமைப்பில் இவ்விரண்டு நாவல்களும் ஒரே மாதிரியே எழுதப்பட்டிருக்கின்றன. கருப்பொருள்தான் வேறு. ‘நிலம் எனும் நல்லாள்’ஐக் காட்டிலும் ஆட்டம் இன்னும் மேலான படைப்பு. நாயகர்களுக்கு திடீரென்று ஏற்படும் மனத் தெளிவு போன்ற சில ஒற்றுமைகள் இவ்விரு நாவல்களுக்கு இடையே உண்டு. ஒற்றுமை என்று சொல்லும்போது இன்னும் ஒரு விஷயம்- வேணுகோபாலின் நாவல்கள், கதாபாத்திரங்களின் எண்ணங்கள் மூலமே சொல்லப்படுகின்றன. கதாபாத்திரத்தின் குரல், ஆசிரியரின் குரல் என்று பிரித்தறிய முடிவதில்லை. அப்படி இருக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை. ஆனால், இங்கே எழுத்தாளர் உருவாக்கும் ஒரு கதாபாத்திரத்தின் கருத்தை எழுத்தாளருடையது என்று நினைத்துவிட நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

மனைவி தன்னை விட்டுப் போய்விட்ட ஒருவனுக்கு தன்னை மீண்டும் மதிக்கத் தகுந்தவனாக ஆக்கிக் கொள்ள ஏதாவது செய்தாக வேண்டும். அப்படிப்பட்ட நிலையில் இருக்கும் வடிவேலுக்கு எப்படியாவது தன்னை நிரூபித்தாக வேண்டும். வடிவேல் அவன் முன்பு கொடிகட்டிப் பறந்த கபடியின் மூலம் இழந்த தன்மானத்தை மீட்டு விட முயற்சிக்கிறான். அதிலும் கூட கபடியின் மூலம் யாரையாவது தனக்குப் பெண் கொடுக்க வைத்துவிட வேண்டும் என்று விரும்புகிறான். அவனுடைய உடைந்த தன்மானத்திற்கு இன்னொரு பெண் வந்துவிட்டால் போதும் என்று தோன்றுகிறது. ஆனால், கதையின் போக்கில் அவனுடைய எண்ணங்கள் மாறுகின்றன.

கோமாரி திருவிழா பற்றியும் நரிக்குறவர்களின் வாழ்க்கையைப் பற்றியும் இந்நாவலில் விரிவாக எழுதியிருக்கிறார். வேணுகோபால் மிகத் துல்லியமாக எழுதுபவர். அவருடைய கதையில் ஒரு விஷயம் நடந்தால் அது எங்கே நடக்கிறது என்பது வரை அவருடைய கவனம் போகிறது. ”கடக்கும் போதாவது ஓரக்கண்ணால் பார்ப்பாள் என்று நினைத்தான். ஆளற்ற தெருவில் நடந்து போவது போலக் கடந்து சென்றாள். பார்க்கவே இல்லை. நான்கு எட்டு வைத்ததும் ஞானசேகரன் அஸ்திவாரம் எழுப்பி மண்மெத்திப் போட்டிருந்த அடிச்சுவர் ஓரம் போய் காளை சுவர்தொட்டு நின்றான். அடுத்து கருவேல மரத்தடியில் பசுமாடு கட்டிக் கிடக்கிறது. இந்தப் பக்கம் பாண்டி ஆசாரியின் இடிந்து போன வீடு. குலுங்கிக் குலுங்கி அழுந்தான்”. வேணுகோபாலின் பலம் இந்த விவரணைகள் என்பதில் சந்தேகமேயில்லை.

நாவல்களை விட்டுவிட்டு சிறுகதைகளுக்கு வந்தோமென்றால், சு.வேணுகோபாலின் கதையுலகம் விரிகிறது. அங்கும் இங்கும் அலைபாயும் நாவல்களைவிட அவருடைய சிறுகதைகள் கச்சிதமாக ஒரு சட்டகத்திற்குள் வருகின்றன. ’களவு போகும் புரவிகள்’ தொகுப்பில் அவருடைய வீச்சு எவ்வளவு அதிகம் என்பதைப் பார்க்கமுடிகிறது. ’வெகுதூரம் விலகி…’ கதை ஒரு சிற்றூர் மருத்துவரைப் பற்றிய கதை. இதில் மலைவாழ் மக்களின் மருத்துவ முறைகளைப் பற்றி விவரணைகள் வருகின்றன. எதுவும் கதையை மீறி துருத்திக் கொண்டிருக்கவில்லை. அவ்வளவு அருமையான கதை.

நாவல்களின் நாயகர்கள் கவலையில் உழன்றால், அவருடைய சிறுகதைகள் பெரும்பாலும் வீழ்ச்சியைப் பேசுபவை. இயலாமையைப் பேசுபவை. அதுவே அவருடைய கதைகளைப் பலருக்கு பிடிக்க வைத்திருக்கின்றன என்று தோன்றுகிறது. பல தலைமுறைகளாக உருகி உருகிக் கதை கேட்டவர்கள் நாம். தோல்விகளில் துவளும் ஒரு இளம் விவசாயி (மண்ணைத் தின்றவன்), கணவனால் நீர்பந்திக்கப்பட்டு மீண்டும் மீண்டும் கருக்கலைப்பு செய்து கொள்ளும் பெண் (வட்டத்திற்குள்), ஓர் பாலியல் தொழிலாளி (மீதமிருக்கும் கோதும் காற்று), முப்பத்தைந்து வயதில் கல்யாணம் செய்து கொண்டு தான் நினைத்த வண்ணம் உறவு கொள்ள முடியாத ஒருவன் (சங்கிலி) இவை இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகளின் பிரதான பாத்திரங்கள். இந்தக் கதைகளை வாசிக்கும்போது இவர்கள் மீது நமக்குப் பரிதாபம் ஏற்படுகிறது. ஆனால், இந்தக் கதைகள் அத்தோடு நின்றுவிடுகின்றன. மண்ணைத் தின்றவன் கதையில், இசக்கியினுடைய தோல்விகளை ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டே வந்து கடைசியில் அவனுடைய சாதி சுட்டிக் காட்டப்பட்டு மேலும் குறுகிப் போவதாக வருகிறது. இதைப் போலவே மற்ற கதைகளும். உண்மையில் இந்தக் கதைகள் நிறைய பேரின் பாராட்டைப் பெற்றிருக்கிறது. ஆனால், அதில் என்ன சவால் இருக்கிறது என்று தெரியவில்லை. அடுக்கடுக்கான துயரங்களை விவரித்து அதன் முடிவில் மேலும் ஒரு இடியை இறக்குவதையும் அல்லது ஒரு வெளிச்சக் கீற்றைக் காட்டுவதையும் தாண்டி எழுத்துக்கு இருக்கும் சாத்தியங்கள் நிறைய.

வேணுகோபாலின் நாவல்களாகட்டும் சிறுகதைகளாகட்டும், அவற்றில் திருமண பந்தத்திற்கு வெளியே நிகழும் ஆண்-பெண் உறவுகள் அதிகம் எழுதப்பட்டிருக்கின்றன. ‘ஆட்டம்’ நாவலே வடிவேலின் மனைவி கனகம் அவனையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு வேறொருவனுடன் போவதிலே தான் நிகழ்கிறது. அதே நாவலில் வடிவேலின் நண்பன் காளையனுக்கும் அவனுடைய சித்திக்குமான உறவு பேசப்படுகிறது. ’நிலம் எனும் நல்லாள்’ நாவலிலும் இப்படிப்பட்ட உறவு பேசப்படுகிறது. இதைக் குறையாகச் சொல்ல முடியாது என்றாலும் எனக்கு இதில் இரண்டு பிரச்சனைகள் இருக்கின்றன. ஒன்று, ஒரு குறிப்பிட்ட சமூக பொருளாதார வட்டத்தில் இருக்கும் மக்களைப் பற்றி இப்படி எழுதும்போது அவர்களோடு தொடர்பிலே இல்லாத ஒரு வாசகன் அவர்களைப் பற்றி என்ன நினைத்துக் கொள்வான்? நாம் செய்தித்தாள்களில் தினம் தினம் படிப்பது வேறு. அதே விஷயங்களை இலக்கியத்தில் படிப்பது வேறு. செய்திகள் பிறர் வாழ்வை நம்மிடம் கொண்டு வந்து கொடுத்தால், இலக்கியம் நம்மை அவர்களின் இடத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். அது போதுமான அளவில் நிகழ்கிறதா அல்லது வேறு யாருக்கோ நடக்கும் விஷயங்களை வேடிக்கை பார்ப்பவர்களாக இருக்கிறோமா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது, அதுதான் என் இரண்டாவது பிரச்சினை.

அங்கீகரிக்கப்பட்ட உறவுமுறைகளுக்கு அப்பால் ஏற்படும் தொடர்பு மாதிரியான விஷயங்களில் உள்ள என் குறுகுறுப்பு இன்னமும் எனக்குக் குறையவில்லை என்பதால், இந்தக் கதைகளில் இந்த உறவுகளின் நோக்கம் என்ன என்பது புரியவில்லை. வேணுகோபால் இத்தகைய உறவுகளை நிறைய எழுதியிருக்கிறார். ஆனாலும், இவ்வுறவுகளின் காரண காரியங்களை அவர் பேசவில்லை. இந்த உறவுகள் இருக்கின்றன, ஆனால் திருமண பந்தத்தை உடைத்துக் கொண்டு போகும் அளவிற்கு மனிதர்களை ஈர்ப்பது எது? காமம் மட்டும்தானா? எதிர்காலமே தலைகீழாகிவிடும் நிலையிலும் மனிதர்கள் ஏன் அதற்கு துணிகிறார்கள்? ‘ஆட்டம்’ நாவலின் ஒரு பெரும் புள்ளியே இதுதான் என்றாலும், அங்கும் இதன் தாக்கம் மட்டுமே பேசப்படுகிறது. ஏனோ, எழுத்தாளர் இந்த உறவுகளை விவாதிக்கவில்லை. அதனால் அவை ஒரு குறுகுறுப்பை ஏற்படுத்துவதோடு நின்றுவிடுகின்றன. ஒரு உயிர் இன்னொரு உயிரை அணைத்துக் கொள்ள வேண்டும் என்பது இயற்கைத் துடிப்புதான். ஆனால், நம் சமூக உறவுக் கட்டுமானங்கள் இவ்வளவு மெலிதாகவா இருக்கின்றன?

வெறும் புகழ்ச்சியில் அர்த்தமில்லை என்பதால்தான் விவாதத்துக்குரிய சில விஷயங்களைச் சொல்லியிருக்கிறேன். நாம் ஒரு கலைஞனை மதிக்கும்போது நாம் முரண்படும் இடங்களைச் சொல்வது அவசியமாகிறது. சு.வேணுகோபாலுடைய மொழி அவருக்கே உரித்தானது. அவருடைய அனுபவங்கள் தனித்தன்மையானவை. சொல்ல வருவதை அப்படியே எழுத்தில் கொண்டு வருவதில் அவருக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அவருடைய படைப்புகள் இன்னும் அதிகம் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்படும்போதுதான் அவை இன்னும் அதிகம் அர்த்தமளிக்கும்.

சு. வேணுகோபால் என்னும் இலக்கிய மேதைமை

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

srirangam v mohanarangan

மிழ் இலக்கியம், குறிப்பாக சிறுகதை, கவிதை, நாவல் போன்ற துறைகள்தாம் எத்துணை முன்னேற்றம் கண்டுள்ளன! எத்தகைய உயிர் விகாசங்கள் பொலிய தமிழ் மொழியின் செறிவில் வகைபாடுகள் கூடுபூரிக்கின்றன! இவ்வண்ணம் நான் வியக்கக் காரணமாய் இருந்தவர்கள் சிலர். அதுவும் சு வேணுகோபாலைப் படித்ததும் இந்த எண்ணம் உரத்து எழுகின்றது. இதுவரை வெகுசில இலக்கிய ஆளுமைகளே சாதித்திருக்கும் அளவிற்கு உணர்வின் துல்லிய துலாக்கோல் துடிப்பில் சன்னத்தமாகி எழும் எழுத்தின் கச்சிதம், இலக்கியத்திற்கும் வாழ்விற்குமான ஊடாட்டப் புணர்வு சு வேணுகோபாலில் சாத்தியப்படுகிறது.

யதார்த்தமான மானிடத்தின் இயல்பான எழுச்சியும், பிறழ்வும், நொடிப்பும் பாவனை இன்றி வெளிப்படும் எழுத்து திரு வேணுகோபாலின் எழுத்து. படிப்பவர்கள் அவர் எழுத்தின் புதினவெளியில் இருக்கின்றார்கள்தான், சக மனிதர்களாக மட்டுமே. அவர்கள், பார்வையாளர்களாகவோ, ரசிகர்களாகவோ, ஆமோதிப்போ, மறுதலிப்போ தரும் முகாந்தரங்களாகவோ அவருடைய எழுத்து ஏற்படுத்தும் உலகில் இடம் பெறுவதில்லை. அவரவர் கவலைகளில் விரைந்தவண்ணம் வாழ்வில் பங்கு கொள்ளும் யதார்த்தமான சக மனிதர்களாக மட்டுமே வாசகர்களை அவருடைய எழுத்து வகைப்படுத்திக் கொள்கிறது. அதுவும் அவர் கருதிச் செய்வது என்று இல்லாமல், அவர் தமக்கு இயல்பான இடத்தை இயற்கையில் தம் எழுத்தில் இணங்கி அமர்வதால், வாசகர்களும் அவர்களுக்கேயான இயல்பான இடங்களில் சுதந்திரமாக விடப்படுகிறார்கள். அவருடைய நோக்கிலும், கருத்திலும் எதிர்பார்ப்புகளின் மேடைகளோ, திரைகளோ இல்லாத காரணத்தால், பாவனையற்ற எழுத்தின் வெட்ட வெளியில் வாசகர்கள் இயல்பாக நடமாட முடிகிறது.

சு வேணுகோபாலின் ‘உற்பத்தி’ சிறுகதை பல முறை படித்தது என்றாலும் விட்டுப் போன ஒரு கோணம் தொட்டுக் கொண்டே இருக்கிறது. சிறுகதை என்ற இலக்கிய வடிவைக் கச்சிதமாகக் கடைந்து வனைவதில் ஓர் அநாயாசமான நிபுணன் வேணு. அழகாகத் தோன்றும் வாழ்க்கை எங்கோ ஓர் ஓரத்தில் விகாரம் அடைவதையும் வக்கிர விளம்பரத்தனம் இன்றி இயல்பின் வேர்ப்பற்று பிசகாமல் சொல்வதில் வேணுகோபாலுக்கு இணை கிடையாது. இரையைத் தேடும் மிருகத்தின் அசைவுகளில் தெரியும் அமைதியான தயவுதாட்சண்யமின்மை மொழிநடையில் துலங்க வரிகளை விதைத்துச் செல்கிறார் வேணு.

நிலத்தடி நீரும் நிலங்களை வளைத்துப் போட்டு அந்நிய முதலீடு கட்டிய தொழிற்சாலைக் கழிவுகளும் சொல்லின் மௌனக் கதையின் பாத்திரங்கள். இயற்கையும், மனிதரும், தொழிற்சாலை நோக்கும் ஒன்றொடு ஒன்று சேராத பிணக்கில் நிலத்தடி நீர் பலியாகிறது. அதன் இறப்பைத் தாவரங்களும், பறவைகளும், விலங்குகளும் தம்மில் நிகழக் காட்டுகின்றன. இயற்கை எங்கும் மயான அமைதி மெய்ப்பாடு கொள்ளும் என்பதைச் செம்பூத்துகளும் வெகுவாக முயன்று காட்டிவிட்டுச் சாகின்றன. தன் எழுத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் நம்மில் ஏதோ ஒன்று, இறப்பை வெற்றி கொள்ளப் படும் அவஸ்தையை உக்கிரமாக்கிக் கடைசியில்

‘இறகுகள் சிலிர்த்து தலை கொணங்கிய செம்பூத்தைக் கட்டுக்காப்பில் போட்டுவிட்டு வெந்த புல்வரப்பில் நடந்தோம். கையகல நிலத்திலே ஆதி ஜீவன்கள் அழியத் தொடங்கிவிட்ட காலம் தெரிந்தது. ஓடைக்கரையில் ஏறியபடி அதிகம் பேசாத நைனா “ஹிரோசிமாவில் அணுகுண்டை மேலிருந்து போட்டான்னா எல்லா எடத்திலயும் அப்பிடிதான் போடணுமெங்கிறதில்ல. சத்தமில்லாம கீழ இருந்தும் போடலாம். பூமாதேவி செத்துப் போச்சுன்னு தோணுது” என்றார். கருகிய காகித வார்த்தைகளாய் காற்றில் நொறுங்கிப் போனது நைனா சொன்னதும். பாதச்சுவட்டில் நெமுறும் குறுமணல் ஓசையோடு ஓடையில் நடக்கலானோம். கரையில் ஏறி நின்றதும் தொழிற்சாலையின் சங்கு ஆங்காரமாய் ஒலிக்கத் தொடங்கியது.”

என்று முடிக்கும் போது சங்கொலியின் மெய்ப்பாடு, அத்தனை வேதனை, விரசம், வாழ்வின் தோல்வி, நீரின் கேடு என்று வந்த வேலை முடிந்த எக்காளமாய் நம் சினத்தில் சூல் கொள்கிறது. (சிறுகதை குறிப்பு: ‘உற்பத்தி’, பூமிக்குள் ஓடுகிறது நதி – சு வேணுகோபால், தமிழினி, டிசம்பர் 2000)

’மறைந்த சுவடுகள்’ என்னும் சிறுகதை, சிறுகதையில் மட்டுமே சில பிரக்ஞைகளை எட்ட முடியும் என்பதை நிரூபிக்கும் ஒன்று. கவிதை என்னும் மொழியின் சுயமார்ந்த இயக்கத்தோடு போட்டி போடக்கூடிய தகுதி சிறுகதைக்கு மட்டுமே உண்டு என்பதையும் ’மறைந்த சுவடு’களில் வரும் ஞான வள்ளி என்னும் வரைவு சான்று பகர்கிறது.

காதலன் ஏமாற்றியதால் ஒரு வித வக்கிரமான பழிவாங்கும் முனைப்பாக தன் அழிப்பு என்பதையே தேர்ந்தெடுக்கும் மூர்க்கம் கையாலாகாத நிலையில் தள்ளப்படும் பெண்ணுக்குச் சில சமயம் ஏற்படலாம். அப்படி ஏற்படும் போது அது எத்தகைய உள் வேதனையில் வாடுகிறது என்பதைத் தொனிப் பொருளாகவே மட்டும் காட்டி மிகத் திறமையாக அமைகிறது ஆசிரியரின் மொழிதல் ஓட்டம். மனித வாழ்க்கையாகிய கிராமத்தில் சாத்தியப்படும் எத்தனை விதமான உள்ளம் என்னும் நிஜத்தின் முனைகளைத் தொட்டு காட்ட முடிகிறது திரு வேணுகோபாலால் என்பது என்னை மயக்கும் சிந்தனையாக இருக்கிறது.

குழந்தைமையிலிருந்து தன்னைத் தூக்கிக் கொஞ்சியவள் என்னும் போதும், அவள் எழில் கட்டுடன் இருக்கக் காண்கையில் தழுவத் துடிக்கும் ஆண் மனம், நோயில் படுத்து உருக்குலைந்து காண்பதற்கு ஆள் விட்டனுப்பி, சேர்ந்து வெளியில் சற்றுக் காற்றாடப் போய் வரவெண்டும் என்று வேட்குங்கால் ஊர்ப்பார்வைக்கு நாணி அவளைத் தவிர்க்க வேண்டி சினிமாவிற்குச் சென்று தப்பும் நேரத்தில், கெஞ்சிய அவளின் உயிர் பிரிகிறது என்று காட்டும் போது தயக்கம் இன்றி முகம் சுளிப்பு இன்றி மன மெய்ம்மையின் ரணங்களை அறுவைக் கத்தியால் நேர்த்தியாகக் கிழித்துக் காட்டும் உள இயல் மருத்துவராகத் தோற்றம் தருகிறார் வேணு.

‘ஏங்க சொல்லிட்டுப் போக வேணாமா?… என் கிருஷ்ணாவை இன்னும் காணலையேன்னு, பஸ்கள்ல அடிபட்டிட்டானோன்னு அழுக ஆரம்பிச்சுடுச்சு. சாகுறப்ப யாருமே இல்லிங்க,’

ஞான வள்ளி இறந்துவிட்டாள்.

சு வேணுகோபால் இப்படி இந்தச் சிறுகதையை முடிக்கிறார் –

“வாழ்ந்ததற்கான சுவடற்றுப் போகும் வாழ்க்கை. வரலாற்றில் கால் பதியாது ஓடும் தொன்ம நதியில் கலந்த கோடானுகோடி ஜீவன்களில் ஒருத்தி.”

பெரும் பெரும் சித்தாந்தங்களுக்கெல்லாம் பரிந்துகொண்டு திரு வேணுகோபாலின் எழுத்து எழுவதாகத் தெரியவில்லை. அவருக்கு என்று தனிப்பட்ட சித்தாந்தப் பிடிப்புகளும் இருக்கலாமாக இருக்கும். ஆனால் அவருடைய எழுத்து எங்கும் எதற்கும் அடமானமாகப் போகாத எழுத்து என்று அவரது ஒவ்வொரு கதையின் மூச்சிரைப்பிலும் சான்று படுகிறது. கதைகளாக முருடு தட்டிப் போகும், வாழ்க்கையில் விதியில் முரண்களாகவும் ரணங்களாகவும் வெடிக்கும் வேதனைகளையும், கீழ்மைகளையும் அவற்றின் கொதியோடு இலக்கியம் ஆக்குவது கருதிச் செயல் என்பதைவிடத் தன்னுள் நடக்கும் இயக்கமாக வெளிப்பாடு காண்கிறார் சு வேணுகோபால் என்றுதான் தோன்றுகிறது. இதை சித்தாந்தப்படுத்த முடியாது என்பதுதான் இந்த வெளிப்பாட்டின் வலிமை. வாழ்க்கை எதிலும் கூறுபடக் கூடுமெனில் இதுவும் கூடுமாகலாம். இப்படியும்  இருக்குமோ என்று ஐயம் எழுமானால் நிச்சயம் அவரது ‘வெண்ணிலை’ தொகுதி அதற்கான விளக்கமாக இருக்கும். ‘தொப்புள்கொடி’யில் மனநிலை பிறழ்ந்து திரியும் பெண்ணின் கருவாய்த்த குழந்தையைப் பேணுவதாக நினைத்து அது இறந்தபின்னும் தூக்கித் திரியும் தாய்மையின் தொப்புள் கொடியும், ’வெண்ணிலை’ யில் இறந்த தந்தையின் உடலை எடுத்துச் செல்ல உதவி நாடி நிற்கும் பெண்ணும் வெறும் கதையாக ஒரு நாளும் ஆகிவிட முடியாத உணர்வின் உறுத்தல்கள். அவற்றையும், அது போல் பலவற்றையும் தன் எழுத்தால் கைபொறுக்கும் சூடாக ஆக்காமல் எப்படி முழு மெய்மையுடன் திரு வேணுகோபாலால் தர முடிகிறது என்பது வியப்புதான்.

அவருடைய நூல்கள் ‘பூமிக்குள் ஓடுகிறது நதி’, ’வெண்ணிலை’, திசையெல்லாம் நெருஞ்சி, ஒரு துளி துயரம், பால்கனிகள், ‘ஆட்டம்’ (என்னிடம் இருப்பவை, சில விடுபட்டிருக்கலாம்) என்னும் எந்தத் தொகுப்பிலுமே, எந்தக் கதையிலும், குறுநாவலிலும் அவருடைய இலச்சினை மாற்றுக் குறைவு இல்லாமல் அவையவை தன்னிச்சையாய் இயல முடிந்தது என்பது அவருடைய இலக்கிய மேதைமை எப்படி வாழ்வின் ஊற்றுக்கண்ணில் வேர் விட்டு நிற்கிறது என்பதைத்தான் காட்டுகிறது போலும்.

இலக்கியம் என்பது மனித உள்ளத்தின் அகத்தில் அடைந்துபோய் விட்டிருக்கும் கீழ்மை, மாசு, கெடுதல் முதலியவற்றைத் தயவு தாட்சண்யமின்றி வெளிப்படுத்தி, மறுக்க இயலாத கவனத்தில் கொண்டு வந்து உணர்வில் நிறுத்தி, அதனால், மனித உள்ளத்தைத் தூய்மையுறச் செய்யும் ஒரு மார்க்கம் என்னும் பொருள்பட ‘Catharsis’ என்று அரிஸ்டாடில் கூறும் இயக்கத்தை சு வேணுகோபாலில் முழுமையாகக் காணலாம்.

சு வேணுகோபாலைப் படிக்காமல் நம்காலத்துத் தமிழ் இலக்கியம் படித்திருப்பதாக ஒருவர் சொன்னால் அவருடைய நவீன தமிழிலக்கியப் படிப்பு முழுமை பெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் திரு வேணுகோபாலுடைய இலக்கியப் படைப்பு என்பது வாழ்வு என்னும் முடிவற்ற மூலக்கருவிலிருந்து முகச்சாயம் கூடப் பூசாமல் உருவெடுத்து வந்து நம்மைச் சந்திக்கும் சுய கௌரவம் மிக்க எழுத்துகள். ஏதோ வழிவழியாகச் சொல்லிச் சொல்லிப் பலரும் பலருக்குச் சொல்லச் சொல்லி வந்து சேர்ந்த புராணங்களில் உருவியெடுத்து, அவற்றுக்கு அரிதாரம் பூசி உலவ விடும் எழுத்துகள் மலிந்து போன வழிவழி இலக்கியச் சூழல்களில் உண்மையும், உணர்ச்சிகளின் வேதனையும் உள்ளத்தில் அருளும் வாழ்வில் விதியும் மனித அறிவின் எல்லைகளும் ஒன்றுற முயங்கும் கணத்தில் கூடு பொரித்த உயிரான எழுத்துகளாய் அவை நம்மை நோக்கி விழிக்கின்றன. அந்த யதார்த்தத்தின் பசுமை நம் நினைவிலும் படர்கிறது. அன்றாட வாழ்க்கையின் தன்மையைப் புதுப்பித்தது போன்ற ஒரு நிம்மதி படிப்பின் பிற்றை நிலையாய் நாம் உணரக் கிடைக்கிறது.

சிறு குழந்தைகள் நாய்க்குட்டிகளைக் கண்டால் அவற்றைக் கொஞ்சுவதும் வளர்க்க விழைவதும் இயல்பு. அவ்வாறு இய்லபான ஒரு கணத்தைத்தான் பூமிகா என்னும் பெண் குழந்தையின் மழலையில் நமக்குக் காட்டுகிறார் ‘புற்று’ என்னும் சிறுகதையில். ஆனால் பெண்ணியம் இதுவரை உணர்த்திவிட முடியாத கடுமையுடனும் மெய்மையுடனும் கணிசமான சமுதாயம் பெண் குழந்தையை எப்படி நோக்குகிறது என்பதை பூமிகாவிடமிருந்து நயமாக அந்தப் ‘பெண் நாய்க் குட்டியை’ பூமிகாவின் மாமா வாங்கி ஓடும் வண்டியிலிருந்து விட்டெறியும் கணத்தில், அப்பொழுது பூமிகா படும் வேதனையில், அதற்கு மாமா சொல்லும் அலட்சியமான தேற்றுதலில் சொல்லாமல் உணர்த்திவிட முடிகிறது வேணுவால் என்றால் இலக்கியம் எங்கு இருக்கிறது ! —

“தங்கம், பொட்ட குட்டிய யாராவது வளப்பாங்களாடா? வீட்டுக்கு வீரமா ஆண் குட்டிய வளக்குறதவிட்டு….”
…………

கிராமங்களில் பொட்டைக் குட்டிகளை புற்றில் விடுவதுண்டு. …
……………………

பின்கதவைத் திறந்தவுடன் காலால் சட்டென எத்திவிட்டான். குட்டி கரணமடித்து விழுந்து வீச்சென கத்தியது. சட்டென எழுந்து வண்டிக்குப் பின்னாக ஓடி வர முயன்றது, பூமிகாவுக்கு செத்துப்போய் விடலாமெனக் குமுறியது மனசு. வரவர பின் தங்கிப் போகும் குட்டியைப் பார்த்துப் பார்த்து தேம்பித் தேம்பி அழுதாள். “எங்கயாவது கோயில்ல விடு மாமா. பசிக்கு அது என்ன பண்ணும்? பாவம் மாமா. அதுக்கு யாருமில்ல. பயப்படும் மாமா” உதடுகள் கோணி தழுதழுத்தது.

……………….

பூமிகாவை அம்மாவால் சமாதானப்படுத்த முடியவில்லை…..

“அம்மா நான் ஒங்கூடயே இருக்கேம்மா. என்னைய தொலச்சிடாதம்மா”

:”பூமிகா எங் கண்ணுல்ல… நீ அம்மா செல்லந்தான்… என்னாச்சு உனக்கு… அழக்கூடாது” வாரியெடுத்தாள்.

“சொல்லுமா, என்னைய எங்கயாவது தள்ளிவிட்டுறமாட்டயே. சாகுந்தண்டியும் ஒங்கூடவே இருக்கேம்மா. ப்ளீஸ்மா”

வாழ்க்கையின் தயவுதாட்சண்யமற்ற ஆட்டத்தைக் கபடியாட்டத்தினால் குறியீடாக்கிக் காட்டும் குறுநாவல் சு வேணுகோபாலின் ’ஆட்டம்.’ திறமையின் வெளிப்பாட்டில் திளைக்கும் வடிவேல் காதல், மனைவாழ்க்கை, மனைவியின் துரோகம் என்ற வளைக்கும் சுழலில் மாட்டி, வீழ விரும்பாத வீரமாய்த் தன்னை மீட்டெடுக்கும் முயற்சியில் படும் அவஸ்தை. இயல்பான ஆட்டம் கூடிவர, காலத்தால் தான் விழுந்துவிட்ட பள்ளத்தினின்றும் செங்குத்து ஏற்றமாய், பழைய நினைவுகளின் சாகசமாய்ப் படுத்தும் வேதனை. விட்டவளை மீண்டும் பிடிக்க விளையாட்டைப் பயன் கொள்ள முயலுங்கால் அது வினையாட்டாய் மாறி நிற்கும் முரண். கனகம் மீண்டும் தன்னிடம் வரவேண்டும் என்பது தன் ஆண்மைக்கே சவால் என்னும் போது, ‘மீண்டும் அம்மா வந்துடுவாங்களாப்பா’ என்று கேட்கும் குழந்தைகளின் குரலும் தன் வேதனைப்படும் மனத்தின் இடைவெளிகளின் ஊடே நுழைந்து ஒலிக்கும் உள்ளத்தின் ஏக்கம்தான் என்பதை உணரும் கணம்; தாயைப் போல் தாரம் என்ற பழமொழியின் எதிர்நீச்சுபோல் தாரத்தைப் போலவே நிகழ்ந்த தாயின் வாழ்விலும் ஒரு மிச்சம், தன்னை ஆதுரம் காட்டும் அக்காவின் அன்பாய்த் தீச்சட்டி எடுக்கும் வாழ்வின் ஒரு புது கோணம்; உடலிலிருந்துதான் பழைய தன்னை மீட்டெடுக்க வேண்டும் என்பதை உணரும் கணத்திலேயே, உடல் தனக்கென்று கற்பனைச் சுகவழியாய்க் கனவு காணும் நாகமணியென்னும் காமப் புதைகுழியின் சாத்தியம்; தயவுதாட்சண்யமின்றிப் பிரிக்கப்படும் தாய்மைக்கும் சேய்க்கும் இடையே வலிகண்டு திரியும் நாயின் முனகோலம், வெகுஅலட்சியமாகத் தாய்மையால் பெண்ணைக் கழுவேற்றித் தூக்கிலிட்டுக் கவலையே இல்லாமல் தன்வழியே போகும் ஊர்வாய், – என்று வாழ்க்கையின் கருணையற்ற கபடியாட்டத்தை நெடுக சுழல் ஆட்டமாகக் காட்டும் திரு வேணுகோபாலின் திறன் வியப்பிற்குரியது. இதில் அவ்வப்பொழுது ஆசிரியரின் குரலாக, மனித விழுமியங்களைப் பற்றிய சொல்லாடல் கதை உலகத்திற்குச் சற்று அந்நியப்பட்டு ஒலிப்பது போல் தோன்றினாலும், அதையும் திருவிழாவில் ஒலிக்கும் கிராமபோன் ஒலியாக்கி நகர்கிறது சற்றும் குறையாத மூர்க்கத்துடன் கதை அணியின் மாறு ஆட்டம்.

திரு வேணுகோபால் அவர்களின் இலக்கிய மேதைமைக்கு ஓர் உதாரணம் அவருடைய ‘பால்கனிகள்’ என்னும் நூல். இரு குறுநாவல்கள் – பால்கனிகள், இழைகள், இரண்டும் சேர்ந்த நூல். இரண்டிலும் அவர் எடுத்துக்கொண்டு புதினமாக்கியிருக்கும் பொருள் மிகவும் உருக்கும் சமுதாய அவலங்கள். ட்ரான்ஸ்ஜெண்டர் எனப்படும் மாற்றுப் பாலியல் பிறவியர் குறித்த மிக நுட்பமான துயர வாழ்க்கையைப் பற்றிய கவனத்தை ‘பால்கனிகள்’ என்பதில் தருகிறார். கூடப் பிறந்த சூழல்களே, சமுதாயமே, வேலை வாய்ப்பு தருவோரே அவர்களுடைய வாழ்க்கையை எவ்வளவு மனிதத்தன்மை அற்ற விதத்தில், மரியாதையும் இரக்கமும் இன்றி நலிகிறார்கள் என்பதைத் தமக்கே உரிய இலக்கிய லாகவத்தோடு திரு வேணுகோபால் படிப்பவர்களின் உச்ச பட்ச அக்கறைக்கு இலக்காக ஆக்கிவிடுகிறார்.

மரபுகளாலும், வழிவழிச் சமுதாயத்தாலும் சாதி என்ற பெயரால் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த ஒரு பள்ளியாசிரியர் எப்படிப்பட்ட சூழல்களில் தம் வாழ்க்கையின் கதியோடு துவண்டு, நிமிர்ந்து, பொருது, நிதானித்து, தாங்கி நடத்திச் செல்ல வேண்டியிருக்கிறது என்பதை மிக நெருக்கமான பார்வையாகக் காட்டி, படிப்பவர்களின் நியாய உணர்வைத் தூண்டி விடுகிறார்.

வளர்ந்து வரும் பருவத்து மாணவன், உடற்கூறில் விழித்தெழும் பாலியல் உணர்வுகள், கல்வியின் கடமை, யேசுவின் இரட்சண்யத்தில் விசுவாசித்த குடும்பம், பைபிளிலிருந்து உபதேசிக்கும் பாஸ்டராகத் தந்தை, ஒன்றுவிட்டு ஒன்று திறந்து கொண்டே இருக்கும் பாபத்தின் வாயில்கள், இவற்றின் ஊடாக இரட்சண்யத்தின் கரம் எதிர்வீட்டு ஜெபராணியின் குழந்தையின் கரமாக வருவதை அமைக்கும் விதம் ‘இரட்சண்யத்தின்’ அழகு. இதற்கும், முன்னால் மரித்த குழந்தையின் நினைவு மீண்டெழுகையாய், கண்ணீர் துடைக்கும் குழந்தையின் கரம் இரட்சண்யமாக ஆகிறது என்று காட்டும் நுட்பம் வேணுவிற்கே கைவந்த கலை.

மிக யதார்த்தமான கிராமத்தின் மாற்றக் கோடுகளை ‘உருமால்கட்டு’ தெளிவுறக் காட்டுகிறது. கிராமத்தின் இயற்கைவாய்ப்புகள் குறைய புதிய வாழ்வின் கதவுகளைக் கல்வி திறக்க, மூடும் என்று நினைத்த படல்கள் திறக்கின்றன. திறந்த வாயில்களும் மூடவும் கூடும் என்பதை குபேந்திரன் மாமன்மார்களை அழைப்பதில் வைத்துக் காட்டுகிறார். ‘இனி என்ன பிடிவாதம் வேண்டிக் கிடக்கு’ என்னும் மாமன்களும், ‘நொப்பமா இருக்கணும்டா… எது எக்கேடு கெட்டுப் போனா நமக்கென்ன?’ என்னும் அப்பாவும் கிராமத்தின் மாற்ற ஓட்டத்தின் இரு சுழிகளாய், படிப்பில் மெய்ப்பாடு கொள்ளவைக்கிறார் சு வேணுகோபால்.

சாதியின் ஈவு இரக்கமற்ற கொடிய முகத்தைத் தயவுதாட்சண்யமின்றி, பந்தம் கொளுத்திக் காட்டுபவர் வேணு. இதற்கு அருமையான உதாரணம் அவருடைய ‘திசையெல்லாம் நெருஞ்சி’. ‘எப்படி இவர்கள் இதில் மட்டும் ஒற்றுமையாக ஒரு பக்கம் நின்றுகொள்கிறார்கள் என்று விளங்கவில்லை’ என்று பழநி சொல்வது இந்திய சமுதாய அவலங்களின் வரலாற்றின் மீதே ஒட்டு மொத்த காயும் குரலாக ஒலிப்பது, படிப்பில் யதேச்சையாக நிகழும் உருவெளித்தோற்றமன்று, உள்ளபடியான ஒன்றின்பால் உறுத்து எழும் சீற்றத்தின் கோட்டுச் சித்திரம்தான். சமுதாய அவலங்களுக்கு உள்ளான கதாபாத்திரங்களை வரையும் பொழுதெல்லாம் தம் எழுத்தில் நடுநிலைப் பாவனையைச் செய்ய மறுக்கும் திரு வேணுகோபாலின் அறச்சீற்றம் அவருடைய உள்ளத்திற்குப் பொய்க்காத எழுத்தின் நாடி அதிர்வாய்த் துடிக்கிறது. சான்றாண்மை மிக்கோனின் குரலாகப் படிப்பவர்களின் உள்ளத்தில் பதிவாகிறது.

பொதுவாக வேணு அவர்களின் கதைகள் கவனத்தின் கூர்மையில் விரியும் கதைகளாய் இருக்கின்றன. கற்பனையின் புகை மூட்டங்களில் மறைந்து யூக பிம்பங்களாய் மயக்குவதை விட அவரது கதைகள் விடியலில் ஸ்வச்சமாகத் தெரியும் காய்ந்த நிலத்தில் பட்டுப் போக மறுத்து மூர்க்கமாக நின்று முறைக்கும் செடிகளின் பழுப்பு கலந்த பசுமையின் பல வேறு அனுமானங்களாய் நம் நெஞ்சில் பதிகின்ற காட்சிகள். அவை ஆகாயத்தை நிலத்தின், அதுவும் காய்ந்த வெடித்த நிலத்தின் அத்தனை முருடுகள், நெளிவுகள், முறிவுகள், அத்தனையோடும்தான் கலந்த ஒரு சாத்திய வெளியாய்ப் பார்க்கின்றன. நிலத்தையே மறந்த நெட்டுக் குத்துப் பார்வையில் ஒரே பாங்காய் கண்ணில் பூசும் வான வெளி அன்று அவருடைய கதைகள் காட்ட முனைவது. வேணுவின் கதைகளை நினைக்கும் போது, Classic Short Story என்னும் நூலில் Florence Goyet கூறும் கருத்துக்கு நேர் எதிர்மாறான சித்திரம்தான் தோன்றுகிறது.

The objective social distance which we have identified between the readers of short stories and their characters is galvanized in the feeling of that distance. In their ferocious and ludicrous struggle for a grotesque object, the characters establish their distance from the reader who would not for the world have it cluttering his room. (pp 123) (The Classic Short Story1870 -1925, Florence Goyet, Open Book Publishers)

வேணுவின் கதைகள் நம் அறைக்குள் வந்து அடைபட மறுக்கின்றன. அவற்றின் புற மெய்மையிலும் அவை நம் கண்ணுக்குப் பட்டும் படாமலும் போக்கு காட்டுகின்றன. ஆனால் அவருடைய புதினவெளியில் அவை கட்டாந்தரையை விட கனத்த மெய்மையுடன், நம் கவனத்தின் கூர்மையில் விரிய, பல்வேறு தொடர்ப்பாடுகளில் சங்கதிகளைச் சொல்லிய வண்ணம் நமக்காக என்றும் காத்திருக்கின்றன.

***

பெற்றுக் கொடுப்பவர்கள்-

சேதுபதி அருணாசலம்

IMG_2211

வீட்டிலிருந்து அடிலெய்ட் நகர் மத்தியிலிருக்கும் அலுவலகத்துக்குப் போக ரயிலில் அரைமணிநேரப் பயணம். அலுவலக அழுத்தத்துக்குத் தயார்ப்படுத்திக் கொள்வதற்கு ரயில் பயணத்துக்கு இணையான வேறொன்று இல்லை. புத்தகம் ஏதேனும் படித்துக்கொண்டே போகலாம். சக பயணிகளை கவனித்தபடி பயணிக்கலாம். தினமும் ஒரே குறிப்பிட்ட நேரத்தில் பயணம் செய்தால் தெரிந்த முகங்கள் மீண்டும் மீண்டும் வருவதை கவனிக்கலாம்.

ரயிலுக்குள் ஏறியதுமே கைப்பையிலிருந்து கண்ணாடியை விரித்து க்ரீம் தடவி அழகுபடுத்திக்கொள்ளும் அறுபது வயது பெண்மணி, பயணத்தில் கூட லேப்டாப்பில் படு தீவிரமாக ப்ரொக்ராம் எழுதுபவர் (எட்டிப் பார்த்தபோது டீபியன் லினக்ஸில் C++), ஒரே நாவலையே மூன்று மாதங்களாகியும் படித்து முடிக்காத, ஹெட்ஃபோன் மாட்டிய இளைஞர் – எனத் தெரிந்த முகங்கள் சிலவும், பல புதிய மனிதர்களுமாக அடிலெய்டில் சென்று இறங்குவோம். எல்லா ஜன்னல்களும் மூடப்பட்ட ஏஸி ரயில் என்பதால் கொஞ்சம் தள்ளியிருப்பவர்கள் பேசிக்கொள்வது கூட தெளிவாகக் கேட்கும். மொபைல் மூலமாகவே ஓர் இளைஞர் நியூஸிலாந்து பயணத்துக்கு பெயர், வயது, முகவரி, க்ரெடிட் கார்ட் எண் உட்பட அத்தனையையும் சத்தமாகச் சொல்லி முன்பதிவு செய்து கொண்டார். பின் சீட்டிலிருந்த டீன் ஏஜ் சிறுமி, “பதினெட்டு வயது ஆவதற்காகத்தான் காத்திருக்கிறேன். அதற்கு அடுத்தநாளே வீட்டை விட்டுக் கிளம்பி உன்னோடு வந்துவிடுவேன். என் அம்மாவைப் போன்ற ஒருத்தியோடு இனியும் இருக்க முடியாது” என்று கிட்டத்தட்ட பயணம் முழுதுமே சத்தமாகப் புலம்பியபடி வந்தாள்.

இப்படி வழக்கமான ஒரு பயணத்தில்தான் அந்த இளம்வயது தம்பதியினரையும் பார்த்தேன். எனக்கு எதிர்வரிசை இருக்கைப். பெண் ஜன்னலோரம் அமர்ந்திருந்தாள். அவர்களுக்குள் ஏதோ தகராறு. அடங்கிய குரலில் வார்த்தைகள் தெளிவாக விளங்காத வகையில் சண்டை போட்டுக்கொண்டே வந்தார்கள். திடீரென்று ஒரு சத்தம் – ‘ச்சப்’. அவன் அந்தப் பெண்ணைக் கன்னத்தில் அறைந்திருந்தான். புத்தகம், மொபைல், நியூஸ்பேப்பரில் மூழ்கியிருந்த அத்தனை பேரும் ஒரு கணம் தலையை உயர்த்தி அவர்களைப் பார்த்தார்கள். அந்தப் பெண்ணுக்கு அழுகை பொங்கிப் பொங்கி வந்தது. அதை அடக்கியபடியே இருந்தாள். அவசர அவசரமாக கருப்புக்கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டாள். அப்படி ஒரு விஷயம் நடந்ததை மறைக்கும் முயற்சி தெளிவாகத் தெரிந்தது. ‘Domestic Violence’ என்று யாராவது புகார் செய்தால் பல விளக்கங்கள் சொல்ல வேண்டியிருக்கும் என்பதால் இருக்கலாம். அடுத்து வந்த ஸ்டேஷனில் அந்த இளைஞன் கோபமாக இறங்கிப் போனான். அடிலெய்ட் ஸ்டேஷன் வந்ததும் அந்தப் பெண் இறங்குவதற்காக இருக்கையிலிருந்து எழுந்து கதவருகே வந்தாள். அப்போதுதான் கவனித்தேன் – அவள் ஒரு கர்ப்பிணி. ரயிலிலிருந்து விறுவிறுவென்று இறங்கி ஜனத்திரளில் கரைந்து காணாமற் போனாள்.

***

சு.வேணுகோபால் எழுதிய ’வட்டத்திற்குள்ளே’ என்ற ஒரு சிறுகதை. அவருடைய ’களவு போகும் புரவிகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பில் இருக்கிறது. கதையின் மையகதாபாத்திரம் கீழ் மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு பெண். திருமணமாகியிருக்கிறது. ஒயர்கள், நூலிழைகள் எனப் பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களைக் கொண்டே பல அருமையான கைவினைப் பொருட்களை உருவாக்கத் தெரிந்த, படைப்பூக்கம் கொண்ட அபாரமான கலைஞி. திருமணத்துக்குப் பின் அவள் படைப்பூக்கத்தின் ஒரே வடிகால் சாரதா கைவினைஞர்கள் நிலையத்தில் அவளுக்குக் கிடைக்கும் வேலை. சென்னை, பெங்களூரிலிருந்தெல்லாம் அவளுடைய கலைப்படைப்புகளுக்கு ஆர்டர் கிடைக்கிறது. கடை முதலாளியிலிருந்து உடன் பணிபுரிபவர்கள் வரை அனைவரும் பாராட்டும் அந்த வேலைக்கு இன்னும் நூறு ரூபாய் குறைத்துக் கொடுத்தால் கூடப் போகலாம் என்று நினைக்கிறாள் அவள்.

வெறும் நானூறு ரூபாய் அதிக சம்பளத்துக்காக அவளை அந்த வேலையிலிருந்து நிறுத்தி வலுக்கட்டாயமாக அவளுக்குச் சற்றும் விருப்பமில்லாத ஒரு நர்சரிப் பள்ளியில் டீச்சராகச் சேர்த்துவிடுகிறான் அவள் கணவன். முந்தைய வேலையைப் போலில்லாமல் டீச்சர் வேலைக்கு அவள் பிதுங்கி வழியும் கூட்டம் கொண்ட பஸ்ஸில் வேறு தினமும் செல்லவேண்டும்.

கதை முழுக்கவே அந்த ‘வட்டத்துக்குள்’ சிக்கிக்கொண்டுவிட்ட அந்தக் கலைஞி சுரண்டப்படுவதைப் பற்றி அவளுடைய பார்வையிலேயே நகர்கிறது. கதையின் உச்சகட்ட சுரண்டல் அந்தப் பெண்ணுக்கு அவள் கணவன் வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்விப்பது. ஒருமுறை அல்ல இரண்டு முறை. இப்போது ஒரு கதைச் சுருக்கமாகச் சொல்லும்போது இது எந்த ஒரு பெண்ணியவாதியும் எழுதிவிடக் கூடிய கதை என்று தோன்றுகிறது. ஆனால் சு.வேணுகோபாலின் எழுத்தில் இது அபாரமான வேறொரு தளத்துக்கு நகர்கிறது. கதை இரண்டாம் முறை கருக்கலைப்பு முடிந்து அதற்காக எடுத்துக்கொண்ட விடுப்பும் முடியும் இரவு தூக்கம் வராமல் அந்தப் பெண் அவதிப்படுவதில் தொடங்குகிறது. கருக்கலைப்பு அந்தப்பெண்ணை எவ்வளவு பலகீனமானவளாக மாற்றிவிட்டது என்பதைக் காட்டுவது சு.வேணுகோபாலின் எழுத்து.

”மணி மூணேகால். பதினொன்றரைக்கு மேல்தான் தூக்கம் வந்தது. முதல் அபார்ஷனின் போது கூட உடல் சடவு இத்தனை இருந்ததில்லை. எல்லோரும் சொல்கிறார்கள் உடல் சடவுக்கு நல்ல தூக்கம் வருமென்று. எனக்கு ஏன் தூக்கம் வருவதில்லை. தூக்கம் விரைவாகக் கவியத் தோதான உடல்சடவு என்று ஒன்று இருக்கிறதா? வயிற்றுக்குள் புருபுருத்துக் கொண்டிருந்த நான்கு மாத சிசு இப்போது இல்லை. சூனிய வயிறு. அவ்வப்போது வயிற்று வலி கவ்விப்பிடிக்கிறது.”

“கண்கள் காந்தின. வயிறெல்லாம் ரணமாக இருப்பது போல் இருந்தது. கரண்டியை விட்டு ரேவதி டாக்டர் அழுத்தி சுரண்டி விட்டாளோ? விடிந்ததும் வேலைக்குப் போவதை நினைத்தால் வண்டியில் முட்டி ஏறுவதுதான் காட்சியாக வருகிறது. மூச்சை தம் கட்டி ஏறுவது போல் வயிற்றை இறுக்கினாள். முரட்டுபலம் எங்கோ நழுவிப் போய்விட்டது போல இருந்தது. பஸ்ஸைத் தவறவிட்டுவிடுவேனோ? கைகள் லேசாக நடுங்கின.”

”நேற்று சாயந்திரம் குடத்தைத் தெருக்குழாயிலிருந்து தூக்கி வந்தவள் வயிறு கவ்விப்பிடிக்க சந்துவராண்டா முன்பு வைத்துவிட்டுக் கூப்பிட்டாள். வயிற்றுவலி குடலோடு முறுக்கியது. ’எதுக்கு இந்த அலட்டு அலட்டற? யாருமே அபார்ஷன் பண்ணதில்லையா? நானும் ஊரு ஒலகத்துல பாத்திருக்கேன். ஒன்ன மாதிரி ஆக்‌ஷன் பண்றவள பாத்ததே இல்ல… ஹூம்..’”

இரண்டாம் முறை கருக்கலைப்பு செய்ய டாக்டர் ஒத்துக்கொள்ளவில்லை. ‘கர்ப்பப்பைச் சுவரைச் சுரண்டச் சுரண்ட மெல்லிசாகி ஓட்டை விழுந்துவிடும். அப்புறம் குழந்தை தரிக்காது. தரித்தாலும் அங்ககீனம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது’ என்று முதல் டாக்டர் மறுத்துவிட இன்னொரு மருத்துவரிடம் இது முதல் கர்ப்பம் என்று பொய் சொல்லிச் செய்யப்பட்ட கருக்கலைப்பு இது. அதில் ஏற்பட்டிருக்கும் அசதியையும், வலியையும் சற்றும் பொருட்படுத்தாத கணவன். அதைப் பொறுத்துக் கொண்டு, தனக்குப் பிடித்தமே இல்லாத ஒரு வேலைக்கு அடுத்த நாள் காலை செல்ல வேண்டியிருக்கும் பெண்ணின் உறக்கம் வராத இரவின் எண்ண ஓட்டங்கள் கதையாக விரிகின்றன. குடும்ப வாழ்க்கையில் கணவனால் சுரண்டப்படும் இப்பெண், வேலைக்குச் செல்ல வேண்டியிருக்கும் காலை நேரப் பயணத்தில் பிற பயணிகளால் உடல்ரீதியாகச் சுரண்டப்படுகிறாள்.

பெண்களின் துயரம் தமிழ் இலக்கியத்தில் மட்டுமல்ல, இந்திய அளவிலேயே கூட மீள மீளப் பேசப்பட்ட ஒன்று. கன்னட எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பாவின் ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ (க்ருஹபங்கா) என்ற பிரபலமான நாவல் ஒரு மிகச்சிறந்த உதாரணம். மொத்த சூழலுக்கும் எதிராக ஒரு பெண் தன் குடும்பத்தை நிலை நிறுத்த எடுத்துக்கொள்ளும் முயற்சிகளைப் பேசும் புத்தகம் இது. ‘வட்டத்திற்குள்ளே’ சிறுகதையில் சொல்லப்படும் பெண்கள் பஸ்ஸுக்குள் உரசப்படும் வக்கிரத்தனங்கள் கூட தி.ஜானகிராமன் (‘சிவப்பு ரிக்‌ஷா’ சிறுகதை), அசோகமித்திரன் (‘இன்று’ குறுநாவல்) போன்றோரால் ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் எத்தனை எழுதினாலும் தீராத சுரண்டல்களைப் பெண்கள் இன்றும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்குக் கால தேச கலாசார எல்லைகளே இல்லை. இச்சூழலில்தான் சு.வேணுகோபாலின் ‘வட்டத்திற்குள்ளே’ சிறுகதை விடாமல் தொடரும் பெண்கள் மீதான அக வன்முறையை நவீனச்சூழலில் பொருத்திக் காட்டுகிறது.

புனைவெழுத்தின் நுண் விவரங்களும், உண்மைக்கு அருகில் கொண்டு சென்று நிறுத்தும் உணர்வுச் சித்தரிப்புகளுமே அதை உயரிய இலக்கியமாக்குகின்றன. சு.வேணுகோபாலின் இச்சிறுகதையில் கைவினை கலைப்பொருட்களைச் செய்யும் விவரணைகள் அதை உயர்ந்த இலக்கியமாக்கும் இன்னொரு அம்சம்.

“இருவாச்சியின் நான்கைந்து இலைகளைப் பக்கவாட்டில் வைத்து அடுக்கினால் பிராக்கெட் போல உருவாக்கலாம். அதன்மீது கோவையின் நுனிக்கொடியைப் படரவிட்டால் கூட் அம்புதான். நாயுருவி இலைகளாலே மயிலில் அமர்ந்த பெண் அம்பை ஏந்த நாணோடு வில்லை காதுவரை இழுக்கும் காட்சி இப்போதும் நன்றாக நினைவுக்கு வருகிறது. எதிர்க்கிளையில் சிங்கம் வலதுகால் தூக்கி அமட்டுகிறது. கோவக்கொடியின் பூ, பிஞ்சு, காய், பழங்கள் உறுப்புகளாக மாறியிருக்கின்றன. சாதாரணமாய்ப் பார்த்தால் பச்சைக்கொடி இருவாச்சியில் அப்பியிருப்பதுதான் தெரியும். முதுகுபோர்த்திய இறக்கைகள் இருவாச்சியின் கொழுந்து இலைகளைப் புள்ளிவிட்டு அடுக்கி அடுக்கி உயிர் பெற்றன. பெண்ணின் காலில் தண்டையாக அடிக்கொடி சுற்றியது. ஐந்தைந்து இதழ்களைக் கொண்ட கொடி. இரு பூக்களில் ஒன்றின் இதழின் நாவு காதுவரை நீளக் கண்களாக பரிணமித்தது. தெய்வாம்சம் கொண்ட பாதி மூடிய இமைகள். காதுவரை எட்டிப் பார்க்கும் நீள்வடிவக் கண்கள். இருவாச்சியின் பழுப்பு இலைகளால் எதிர்க்கிளையில் கர்ஜிக்கும் சிங்கம். கிளிமூக்குப் பச்சைக் கைகளின் மஞ்சள் நுனியே நகங்கள். நுணுகி நுணுகிச் செய்த உருவங்கள். டேபிளில் நிறுத்தி பெண் நோக்கும் கோணத்தில் பார்த்தால்தான் இந்தப் பின்னல் தெரியும். கோணம் கொஞ்சம் பிசகினாலும் இருவாச்சி மரத்தின் மேல் கொடிகள் ஜப்பாலையாகப் படர்ந்திருப்பதைத்தான் பார்க்க முடியும்.

நாணிழுக்கும் வலக்கையின் மடக்கு மொழி பின்போக முதுகுப் பள்ளத்தில் துடியிடை வளைய கழுத்தை எட்டும் மார்புகள்.

இருவாச்சியின் பிஞ்சுகள் கர்ஜிக்கும் சிங்கப்பற்கள்.

ஆனால் வில் எப்படி முறிந்தது?”

சிறுகதையில் ‘கதை’ என்ற ஒன்றைக் காட்டுவதிலிருந்து விலகி, அது ஒரு காட்சிச்சித்தரிப்பாக மாறியிருக்கும் நவீன வடிவத்திற்குக் கச்சிதமாகப் பொருந்திப் போகிறது ‘வட்டத்திற்குள்ளே’. அதே சமயம் சிறுகதையின் முடிவில் அப்பெண்ணின் படைப்பூக்கத்தின் வழியாகவே ஒரு படிமத்தை உருவாக்கி அதிலிருந்து கவிதை போன்ற உயர்தளத்தில் முடிக்கிறார் வேணுகோபால். அழகும், நுணுக்கமும், படைப்பூக்கமும் பொருந்திய தேவி, சூழல், விதி, சமூகம் இவற்றின் கலவையாகத் தன்னை நோக்கிப் பாயும் சிங்கத்தை குறிபார்க்கிறாள். ஆனால் வில் முறிந்திருக்கிறது.

***

ஆஸ்திரேலியாவில் குடியேறிய ஐரோப்பியர்களுக்கு பல நூற்றாண்டுகளாகவே ஆஸ்திரேலியத் தீவில் வசித்துவந்த பூர்வ குடியினரைக் குறித்த உறுத்தல் இருந்துகொண்டேயிருந்தது. அவர்கள் பல விதங்களில் அழித்தொழிக்கப்பட்டார்கள். அவர்களை நவீன உலகின் ‘நாகரிகம்’ அறிந்த மக்களாக மாற்றுவதற்கும் பல முயற்சிகள் நடைபெற்றன. அதன் உச்சம் – ’திருடப்பட்ட தலைமுறையினர்’ (Stolen Generations).

பூர்வ குடியினரின் பெற்றோரிடமிருந்து அவர்கள் குழந்தைகள் வலுக்கட்டாயமாகப் பிடுங்கப்பட்டு அவர்கள் இதற்காகவே உருவாக்கப்பட்ட ‘சிறப்புக் காப்பகங்களில்’ வளர்த்தப்பட்டார்கள். அப்படிப் பிடுங்கப்பட்ட குழந்தைகள், எங்கே எந்தக் காப்பகத்தில் இருக்கிறார்கள் போன்ற விவரங்கள் அவர்கள் பெற்றோர்களிடமிருந்து மறைக்கப்பட்டன. இந்தக் காப்பகங்களில் அக்குழந்தைகள் ‘நாகரிகப்படுத்தப்பட்டார்கள்’. வளர்ந்து பெரியவர்களானதும் அக்காப்பகங்களிலிருந்து அவர்கள் பொதுச்சமுதாயத்தில் விடப்பட்டார்கள். பொது உலகோடு என்று அறியப்பட்ட சமுதாயத்தோடு எந்த அறிமுகமும் இருக்காத இவர்கள் அதில் பொருந்திப்போகத் தெரியாமல் போதைப்பழக்கத்துக்கு அடிமையானார்கள். இதெல்லாம் நடந்தது – பழங்காலத்தில் அல்ல – இதோ நாற்பது வருடங்களுக்கு முன்பு – 1970கள் வரை கூட குழந்தைகள் வலுக்கட்டாயமாகப் பெற்றோரிடமிருந்து பிடுங்கிச் செல்லப்பட்டார்கள்.

இந்தக் குழந்தைகள்தான் அந்தத் திருடப்பட்ட தலைமுறையினர். இதைக் குறித்து பல புத்தகங்கள், திரைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

எழுத்தாளர் பில் ப்ரைஸனிடம் பூர்வ குடியினருக்காக வாதிட்ட ‘ஜிம் ப்ரூக்ஸ்’ என்ற வழக்கறிஞர் இதைக் குறித்துச் சொல்வதை இங்கே தருகிறேன். (Down Under என்ற புத்தகத்திலிருந்து.)

’உங்களுக்குக் குழந்தைகள் இருக்கின்றனவா?’

‘ஆம், நான்கு.’

‘இப்படியொரு காட்சியை யோசித்துப் பாருங்கள். உங்கள் வீட்டு வாசலில் ஒரு அரசாங்க வேன் வந்து நிற்கிறது. ஒரு இன்ஸ்பெக்டர் அதிலிருந்து இறங்கி வந்து உங்களிடம் உங்கள் குழந்தைகளை எடுத்துச் செல்லப் போவதாகச் சொல்கிறார். உங்கள் கைகளிலிருந்து உங்கள் குழந்தைகளைப் பிடுங்கி ஒரு வேனுக்குள் திணித்தால் உங்களுக்கு எப்படியிருக்கும் என்று மீண்டும் ஒரு முறை யோசித்துப் பாருங்கள். வேனுக்குள் குழந்தைகள் உங்களிடம் வரவேண்டும் என்று அழுது கொண்டிருக்கிறார்கள். வேனின் பின் ஜன்னலிலிருந்து அவர்கள் உங்களைப் பார்த்து அழ அழ வேன் கிளம்பிச் செல்கிறது. உங்கள் குழந்தைகளை நீங்கள் அதுதான் கடைசி முறையாகப் பார்க்கிறீர்கள். உங்களுக்கு எப்படியிருக்கும்? உங்களால் அதைத் தடுத்து நிறுத்த முடியாது. யாரும் உங்களுக்கு உதவப் போவதில்லை. எந்த நீதிமன்றமும் உங்கள் பக்கம் நிற்காது. உங்களுக்கு எப்படியிருக்கும்?’

***

தொன்னூறுகளில் தமிழ் நவீன இலக்கியத்தில் தென்னமெரிக்காவிலிருந்து இறக்குமதியான ‘மாய யதார்த்தம்’ என்றொரு விஷயம் சிக்கிச் சீரழிந்தது. மரங்கள் பேசின; இலைகள் நெகிழ்ந்தன; வீடுகள் அழுதன; மேசைகள் பாடின. அடியோட்டமாகச் சென்று கொண்டிருக்கும் கதையோடு எந்த சம்பந்தமும் இல்லாமல் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டு இவை இலக்கியத்தின் ருசியை மாயம் செய்ததுதான் மிச்சம். ஆனாலும் வெகு அரிதாக சில நல்ல மாய யதார்த்தப் படைப்புகளும் இல்லாமல் இல்லை. சு.வேணுகோபாலின் ‘மாயக்கல்’ சிறுகதை அப்படிப்பட்ட நல்ல மாய யதார்த்தப் படைப்புகளில் ஒன்று.

போக்குவரத்தற்ற ‘பகலிலேயே கூட ஆள் நடமாட்டமில்லாத’ வண்டிப்பாதைக் கரையிலிருக்கும் ஒரு பெரும்புளியமரத்தை அறுத்துத் திருடுவதற்காக அடிமரத்தில் ரம்பம் போடும்போது மரத்திலிருந்து முணகல் சத்தம் கேட்கிறது; ரத்தம் கசிகிறது.

‘தடதட தவ்வலில் ரம்பத்தின் பற்கள் மரத்தின் அடிப்பாகப் பெருந்தண்டில் முதல் உராய்வை முழுமையாக நிகழ்த்தவில்லை. மூச்சு முட்டும் ஊமை முனகல் புளியமரத்தில் கிளம்பியது. லேசாக வேர்த்தது. மறுபடி ஒரு இழுப்பு இழுத்துத் தள்ளியதும் வாய் நிறைய துணிப்பந்து திணித்திருப்பவனின் உறுமல். […] எங்கோ நரி ஊளையிடும் ஓசை வந்தது. ஓசை நெருங்கிக்கொண்டே வந்தது. ‘பிச்சையனா பயப்படறது…’ தனக்குத்தானே தைரியமூட்டிக்கொண்டு ரம்பத்தை மறுபடி உராயவிட்டான். ரத்தக்கசிவோடு கெர் கெர் ஓசை கிளம்பியது. ரம்பத்தைத் தனியாக எடுத்தது. பற்களில் மினுமினுத்தது ரத்தம்.’

அந்த மரத்தில்தான் பன்றி மேய்க்கும் மூக்கம்மாவின் மகன் பெத்தனன் தூக்குப் போட்டு நான்கு வருடங்களுக்கு முன் செத்துப் போயிருந்தான்.

திருடர்கள் மூக்கம்மாவை எழுப்பி விசாரிப்பதில் கதை தொடங்குகிறது. அர்த்த ஜாமத்தில் வந்து அவர்கள் எழுப்புகையில் மூக்கம்மா கேட்கும் முதல் கேள்வி:
‘என்ன சாமியோவ் நீங்க? யாரும் செத்திடாங்களா?’

உள்ளூர் சாவுகளுக்கு மூக்கம்மாதான் ஒப்பாரி வைத்துப் பாடுபவள். ’மூக்கம்மாதான் எந்த இழவென்றாலும் மாரடித்துப் பாடுகிறாள். அவளும் போய்விட்டால்… ஒப்பாரியின் மூச்சும் முடிந்துவிடும்.’

திருடர்கள் மூக்கம்மாவிடம் ‘ஒம் மகன் எறந்த பின்னாடி ஒனக்கு ஏதாவது தோற்றம் பட்டுச்சா?’ என்று கேட்டு புளியமரத்திலிருந்து ரத்தம் கசிந்த விஷயத்தையும் சொல்லிச் செல்கிறார்கள்.

மூக்கம்மாவின் பதினைந்து வயது மகன் பெத்தனன் ‘ஸ்டாட்டர் பெட்டியைத்’ திருடிவிட்டதாக ஊருக்குள் சந்தேகப்படுகிறார்கள். போலிஸ் அவனையும், கூடவே மூக்கம்மாவையும் போலிஸ் ஸ்டேஷனுக்கு அள்ளிப்போட்டுச் செல்கிறார்கள். செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளவைக்கவேண்டி அடித்து உதைக்கப்படுகிறார்கள். ஒருநாள் முழுதும் சாப்பிட எதுவும் கொடுக்காமல் அடுத்தநாள் கொடுக்கிறார்கள்:

‘மூன்று மணிக்கு ரெண்டு பொட்டணத்தைத் தூக்கி எறிந்தார்கள். அழுக்கேறிய போணியில் மஞ்சள் தண்ணீர். வாய் வைத்ததும் உப்பு கரித்தது. யாருடைய மூத்திரமோ?’

தொடரும் போலிஸ் ‘விசாரணையின்’ உச்சகட்டமாக இருவரும் நிர்வாணமாக்கப்படுகிறார்கள்; பெத்தனனை அவன் தாய் மூக்கம்மாவை வன்புணர நிர்பந்திக்கிறார்கள். போலிஸ்காரர்களும் மூக்கம்மாவை வன்புணர்கிறார்கள்.

‘கையெடுத்துக் கும்பிட, தள்ளிவிட்டார்கள். மனதில் பயங்கர பயம் தவிர வேறெதுவும் இல்லை. ’கத்துன கொன்னுடுவோம்’ – ஊசியால் சிசுனத்தில் குத்தினார்கள். ’ஜோலி பண்ணு’ கண்களைத் திரட்டினார்கள். மறுபடி குத்தவிடாமல் மறைத்தான் சிசுனத்தை. கைகளைப் பிடித்ததும் சிசுனத்தில் இறங்கியது ஊசி.

அழுதவண்ணம் மேலே விழுந்தான் பெத்தனன். அவன் குழந்தையாகி ஒட்டுவதுபோல் இருந்தது. கண்களை மூடி மூச்சடக்க இறுகியது முகம். கட்டளை நிறைவேற… பின் ஆடை களைந்து மாறி மாறித் தாவிய போலிஸ் தடியன்கள்…’

பெத்தனன் திருடவில்லை என்பது தெரிந்ததும் அவர்களை வெளியே விடுகிறார்கள். வெளியே வந்த பெத்தனன் அவமானம் தாங்காமல் புளியமரத்தில் தொங்கிவிடுகிறான். ஊருக்கெல்லாம் ஒப்பாரி வைக்கும் மூக்கம்மா வாய்விட்டு ஒப்பாரி வைக்கமுடியாமல் வாய்க்குள்ளேயே முனகும்படி மருகிப் போகிறாள்.

‘நீல குளத்தங்கரை – நாங்க
நின்னழவும் மந்தாரை
நின்னழுது வீடு வந்தா
நீரு தண்ணி யாரு குடுப்பா
தூரத்தே பேஞ்ச மழை
தூத்தலோ என்னிருந்தேன்
வாசல்ல பேஞ்ச மழை
வரிக்கல்லை பேத்ததிப்போ
கண்டாருக்கு நல்ல மரம்
கணுக்கணுவா இந்த மரம்
உள்ளீடு அற்ற மரம்
உள்ளுக்குள்ள வெந்த மரம்’

கதை முழுதும் துண்டுத்துண்டு காட்சிகளாக முன்னும் பின்னும் நகர்கிறது. அப்படியே ஒரு குறும்படம் போல் விரியும் காட்சித் துளிகள். மூக்கம்மாவை திருடர்கள் நள்ளிரவில் எழுப்புவதில் ஆரம்பமாகிறது கதை. பெத்தனனைக் குறித்து அவர்கள் கேட்டதும் அவள் மனதில் வந்துபோவது ’லத்திகள் தொங்கும் கரங்கள்.’ ஒரு பேரவலத்தின் ஒரே ஒரு காட்சித்துளி. ஸ்டேஷன் மூலையில் பதுங்கியிருக்கும் மூக்கம்மாவின் கண் மட்டத்தில் போலிஸ் கையில் தொங்கும் லத்திகள் எத்தனை முறை வந்துபோயிருக்கும்! மரத்தை அறுத்துத் தள்ளும் நள்ளிரவின் மர்மம், மரத்திலிருந்து எழும் முனகல், தலை உயர்த்திப் பார்த்தால் மரத்தில் தொங்கும் பசுமாடுகளின் ‘மாசு’, குமிழாக எரியும் மஞ்சள் வெளிச்சத்தில் ரம்பத்தில் ஒட்டியிருக்கும் ரத்தத்தின் மினுமினுப்பு, மரத்தில் தூக்குமாட்டித் தொங்கும் பெத்தனின் ரத்தம் தரையில் சொட்டுச் சொட்டாக விழுவது எனக் கதை முழுக்க காட்சிச்சட்டகங்கள்.

தினம் காலை பன்றிகளை மேய்த்துச் சென்று அவை மனிதமலத்தைத் தின்று போடும் விட்டையை எருவாக்கி விற்று வாழ்க்கையை ஓட்டும் மூக்கம்மாவின் வாழ்க்கையும் நுணுக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அந்தப் பன்றிகள் கூட காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

“ஒல்லிவால் வீசி ஓடும் மூணாம் ஈத்து கோணக்காது பன்றிக்கு இரண்டு காம்புகள் சோடை. ஜலதாரி கருஞ்சேறு உடல் முழுக்க. இந்த வம்சமே ஈத்துக்கு ஒரு காம்பு சோடையாகி வருகிறது. இறுதியில் மடியற்ற காம்புகள். போன ஈத்தில் யானமூக்கு குட்டி ஈண்டது. ஊரே அதிசயித்துப் பார்த்தது.”

இப்படிப் பன்றி மேய்த்து அவற்றின் விட்டையை எருவாக்கினால் ஒரு மூட்டைக்கு இருபத்தைந்து ரூபாய் கிடைக்கும். அந்தக் காசில் கூட பங்கு கேட்கும், அவளை வன்புணரும் மனிதர்கள். அத்தனையையும் சகித்துக் கொண்டு அவர்கள் வீட்டு இழவுக்கு ஒப்பாரி வைக்கும் மூக்கம்மா. ஆனால் அவளை உடைத்துப் போடுகிறது, திருடர்கள் சொல்லிச் செல்லும் விஷயம் – ‘மகன் பேயாகிவிட்டானா? அவன் தெய்வமாகவில்லையா?’

மகன் குடியிருப்பதாகச் சொல்லப்படும் அந்த மரத்தைப் பார்த்து ‘கட்டி அணைக்க முடியாத அடிமரத்தில் நெஞ்சைச் சாய்த்து கண்கள் கலங்கிவிட்டு’ அதன் கீழே கொஞ்சநேரம் உட்கார்ந்துவிட்டு வருகிறாள் மூக்கம்மா. இரவில் ரத்தம் வந்ததாகச் சொல்லப்படும் அந்த மரத்தடியில் அவளுக்குக் கிடைப்பது அதன் குளுமையும், பூத்துக் குலுங்கும் அதன் அழகும், கீழே உதிர்ந்து கிடக்கும் புளியம்பிஞ்சுகளும்தான்.

அது சரி, பேயானாலும், தெய்வமானாலும், ‘மாயக்கல்’லை நெஞ்சில் சுமக்கும் கூகையானாலும் மூக்கம்மாவுக்கு அது மகன்தானே?

***

ஆஸ்திரேலிய அரசாங்கம் ’திருடப்பட்ட தலைமுறையினர்’ குறித்து 2008-ஆம் வருடம் அதிகாரபூர்வமாக பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி பூர்வ குடியினரிடம் மன்னிப்புக் கேட்டது.

சென்ற வருடம் டிசம்பரில் கான்பெர்ரா பாராளுமன்றத்துக்குச் சென்றிருந்தபோது அங்கே பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த, அரசாங்கம் நிறைவேற்றிய மன்னிப்புக் கடிதத்தைப் படித்தேன். அதன் அருகேயே அந்த மன்னிப்பை ஏற்றுக் கொண்டு பூர்வகுடியினரின் பிரதிநிதிகள் எழுதிய கடிதமும் இருந்தது. அந்தக் கடிதத்தோடு சேர்த்து, மன்னிப்பை ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக பூர்வகுடிகள் பயன்படுத்திய ஒரு பொருளையும் அவர்கள் அரசாங்கத்துக்குக் கொடுத்திருந்தார்கள்.

அது குழந்தைகளை ஏந்திச் செல்வதற்காக பூர்வகுடியினர் பயன்படுத்திய ‘Coolamon’ என்ற கண்ணாடிப்பேழை. ஆம், குழந்தைகளைத் ‘திருடிச்’ சென்ற ஒரு சமூகத்துக்கு அவர்கள் திருப்பிக் கொடுத்த பரிசு – குழந்தைகளைப் பாதுகாப்பாக ஏந்திச் செல்லும் பேழை.

IMG_2214