எழுத்து

சீனாவும் உலகும் – அசாதாரண தனித்துவத்துக்கு அப்பால் – கெர்ரி ப்ரௌன்

– கெர்ரி ப்ரௌன் (Kerry Brown) – 

ஓப்பன் டெமாக்ரசி என்ற தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்

சீன அரசியல்வாதிகள் சீனாவின் மரபார்ந்த கலாசார மகத்துவத்தைச் சுட்டிக்காட்டி உரையாற்றுவதைச் சமீப காலமாக அடிக்கடி பார்க்க முடிகிறது. நவீன சீனாவின் விளம்பரமாகவும் அதற்கு உலகளாவிய சக்தியாக விளங்கும் தகுதி இருக்கிறது என்று நிறுவவும் அதன் கலாசாரத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் இவர்கள்.

அதிலும் குறிப்பாக, இன்aறைய தலைமுறையைச் சேர்ந்த இரு தலைமை கோட்பாட்டியலாளர்கள்- சீன பிரதமர் சி ஜின்பிங்கும் சீன அரசின் பிரச்சார தலைவர் லியு யுன்ஷானும் பண்டைக்கால கவிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் பற்றிய குறிப்புகளை மிக அதிக அளவில் கையாண்டு உரையாற்றுகின்றனர். ஏதோ ஒரு வகையில் தாமும் இந்த “மாபெரும் மரபின்” சந்ததியினர் என்று தம்மை முன்னிறுத்திக் கொள்ளத் தயங்குவதில்லை. வெளியுலகம் தம் மரபை இன்னும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றனர்- கன்பூஷியஸ் இன்ஸ்டிட்யூட் போன்ற நிறுவனங்களைக் கொண்டு இந்த மரபை உலகெங்கும் எடுத்துச் செல்லவும் தம் ஆற்றல்களைச் சீன அரசியல்வாதிகள் செலவிடுகின்றனர்.

தன்னைப் புரட்சிகரமானதாகக் காட்டிக்கொள்ளும் கட்சியொன்று சீன கலாசாரத்தின் சாரம் என்று ஓரளவு மரபார்ந்ததாய் உள்ள பார்வையை விளம்பரப்படுத்திக் கொள்வது நவீன சீனாவின் பெரும் முரண்களில் ஒன்றாக இருக்கலாம். ஆனால் சீனாவின் பெருந்தலைவர்கள் சீன கலாசாரம், அதன் முக்கியத்துவம், பொருள் என்று அத்தனை வலியுறுத்திய பின்னும் ஒரு கேள்வி நம்முன் நிற்கிறது- அவர்கள் எதைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்? வழக்கப்படியான கன்பூசியஸ் சிலைகள், அவர் பற்றிய உரைகள் போன்றவற்றில் ஓரளவுதான் அர்த்தம் இருக்கிறது. உண்மையில், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை கொண்ட அதன் எழுத்துப்பிரதிகளின் பெருந்தொகையே சீன இலக்கியத்தின் தனித்துவ இயல்பை உணர்த்துவதாய் இருக்கிறது. இன்றும் சீனாவின் சிந்தனையை நெறிப்படுத்தும் கூட்டு வரலாற்று நினைவை விரிவான அளவில் புரிந்து கொள்ளும் வாய்ப்பை அதன் தொல் இலக்கிய மரபே நமக்கு அளிக்கிறது.

சீனா தன் “சிறப்பு” என்று சொல்லிக் கொள்ளும்போது, அதன் கலாசார மரபுக்கு வெளியே இருப்பவர்கள் அத்தகைய பெருமிதங்களை எவ்வாறு அணுக வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. நம் கலாசாரத்துக்கு என்று சில மதிப்பீடுகளும் விமரிசன அளவைகளும் வைத்துக்கொண்டு, சீனாவை அணுகும்போது அவற்றையே வேறு விதமாகக் கையாள்வதுமான இரட்டைப் பார்வை கொள்ளக்கூடிய அபாயம்கூட இருக்கிறது.

ஆனால் இதுபோன்ற ஒரு முரண்பாடு சீனாவின் உள்ளும் வெளியேயும் பலரிடம் காணப்படுகிறது- சீனா மெய்யாலுமே “மாறுபட்டதுதான்” என்று சொல்வதில் அவர்களுக்கு அலுப்பதேயில்லை. எனவே அதைப் புரிந்து கொள்ள முழுக்க முழுக்க வேறு தனி கருவிகள் வேண்டும் என்று சொல்கிறார்கள். இப்போது சீனாவின் மரபார்ந்த கலாசாரத்தின் புகழ் பாடும் பீஜிங் அரசியல்வாதிகளுக்கு இது போன்ற அணுகுமுறை மிகவும் உசிதமாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். சீனா “மற்றவர்கள் போலில்லை” என்று அவர்கள் இப்போது அதிக அளவில் சொல்லிக் கொள்கிறார்கள், சீனாவின் சட்ட அமைப்பு, விழுமியங்கள் குறித்து விமரிசனம் செய்யும்போதும், அதன் நிர்வாக அமைப்பு நிலைக்கக்கூடிய சாத்தியம் பற்றியும் கேள்வி எழுப்பும் அந்நியர்களைப் புறம்தள்ளவும், சீனாவின் “அசாதாரண தனித்துவம்” என்ற வாதம் உதவுகிறது. “எங்களை எங்கள் மதிப்பீடுகளின்படி புரிந்து கொள்ளுங்கள், உங்கள் மதிப்பீடுகளை எங்கள் மேல் திணிக்க வேண்டாம்” என்பது அவர்களது பதிலாய் இருக்கிறது.

தனி உலகம்

இப்படி தனி மகத்துவம் கொண்டாடுவது அதற்கேயுரிய ஆபத்துகள் கொண்டிருப்பது தெளிவு. இதற்கேற்றச் சிறந்த முறிமருந்து ஓர் ஆளுமையிடம் உண்டு- இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் அனைவரையும்விட இவர் “மரபார்ந்த ஐரோப்பிய” மற்றும் “மரபார்ந்த சீன” கலாசாரங்களில் ஆழ்ந்த புலமை கொண்டிருந்தார்- சியான் ஜோங்ஷு (Qian Zhongshu).

1998ல், தன் 88ஆம் வயதில் மறைந்த சியான் ஜோங்ஷு (1949க்கு சற்று முன்னர்), நவீன சீன இலக்கியத்தின் மிக முக்கியமான நாவலை எழுதினார்- Cities Besieged. ஆனால் அவர் எழுதியதில் மிக ஆழமான படைப்பு அவரது சிறு கட்டுரைகள் கொண்ட பெருந்தொகுப்பு: அதை அவரால் 1979ல் கலாசார புரட்சி முடிவுக்கு வந்தபின்தான் பதிப்பிக்க முடிந்தது. 1990களின் பிற்பகுதியில் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு, Limited Views: Essays on Ideas and Letters என்ற தலைப்பில் பதிப்பிக்கப்பட்டது.

சியான் பல மொழிகளைத் தேர்ந்தவர் என்று சாதாரணமாகச் சொல்லிவிட முடியாது. அவர் தன் தாய் மொழி சீனத்துக்கு அப்பால் – ஆங்கிலம், ஸ்பானிஷ், லத்தீன், ஜெர்மன், பிரெஞ்சு மொழிகளை – விரிவாகவும் ஆழமாகவும் வாசித்திருந்தவர். அவரது கட்டுரைகள் இதற்குச் சான்றாக இருக்கின்றன- ஹென்றி பீல்டிங் முதல் கிறிஸ்தோபர் மார்லோ, கத்தே, ஜூசெப்பெ உங்கரெட்டி என்று பலரையும் ஏராளமாக மேற்கோள் காட்டுகிறார். அதே சமயம் சீன எழுத்தாளர்களையும் அவர்களது காலகட்டம் கடந்து தொடுகிறார்- ஆவணப்படுத்தப்பட்ட கவிஞர்களில் முதலான்வரான சி யான் முதல் அமானுடத்தைக் கவிதையில் எழுதிய ஹான் வம்ச கவிஞர் ருவான் ஜி, தன் தலைமுறையைச் சேர்ந்த லின் யுசேங் என்று அனைவரையும் மேற்கோள் காட்டுகிறார். எனினும் இவர் தன் மேதைமையை வெளிப்படுத்திக் கொள்வதில் அலங்காரமோ ஆடம்பரமோ சிறிதும் இல்லை. இவரது கட்டுரைகளில் நம் கருத்தைக் கவரும் விஷயம் இதுதான்- தனித்துவமிக்க கலாசார மரபுகள் தம் வேறுபாடுகளை இழக்காதபோதும் ஆழமான ஒற்றுமை கொண்டிருத்தலுக்கான இணைபுள்ளிகளை சியான் அடுத்தடுத்த கட்டுரைகளில் தொடர்ந்து சொல்லிச் செல்கிறார்.

இதற்கு ஒரு சிறந்த உதாரணம், “உயரத்தின் துயரம்” என்ற கட்டுரையில் காண முடிகிறது. இதில் சியான் டாங் மற்றும் சாங் வம்ச அரசர்களின் காலத்தில் வாழ்ந்த கவிஞர்கள் மலைச்சிகரம் ஒன்றை அடையும்போது உணர்ந்து வெளிப்படுத்தும் சோக உணர்வை எழுதுகிறார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம், அவர் இதே உணர்வை பீல்டிங்கின் பதினெட்டாம் நூற்றாண்டு நாவலான டாம் ஜோன்ஸிலும் காண்கிறார். சீன செவ்வியல் நூல்களுக்கும் மேற்கத்திய செவ்வியல் நூல்களுக்கும் பொதுவான உணர்வுகளின் இலக்கணத்தை அவரால் அடையாளம் கண்டு வடிவமைக்க முடிகிறது. இவ்வாறு சோகம், ஆனந்தம், உணர்வுச் சிதைவு முதலான சிக்கலான பல உணர்வு நிலைகளை அடுத்தடுத்த கட்டுரைகளில் எழுதி இதைச் செய்கிறார். இதன் ஒட்டுமொத்த விளைவு நம் மீது மிகுந்த தாக்கம் ஏற்படுத்துவதாக இருக்கிறது.

கலாசார புரட்சி நிகழ்ந்த காலகட்டத்தில் சியான் இந்தக் கட்டுரைகளில் பெரும்பாலானவற்றை எழுதினார். தாம் இருவரும் சிந்தனையாளர்களைச் சீர்த்திருத்தும் நோக்கத்தில் அப்போது அமைக்கப்பட்டிருந்த உழைப்பு முகாம்கள் ஒன்றின் காண்டீனில் பரிமாறுபவர்களாகப் பணியாற்றும் நிலைக்குத் தள்ளி அவமானப்பட்ட காலத்தில் இந்தக் கட்டுரைகளை அவர் எழுதினார் என்ற சாட்சியம் அவரது மனைவி யாங் ஜியாங்கால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நாட்களில் அவர்களது மருமகன் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஆனால் இந்தக் கட்டுரைத் தொகுப்பில் எங்கும் இந்த நிகழ்வுகள் குறித்து தனிப்பட்ட வகையில் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. மிகத் தேர்ந்த வாசிப்பு உள்ளவரும் பல்வேறு சிந்தனை மரபுகளில் அறிமுகம் உள்ளவருமாகிய ஒருவரின் சாட்சியமாகவே அனைத்தும் எழுதப்பட்டிருக்கின்றன. இதில் ஒரு அதிசயம், இந்தக் கட்டுரைகளில் எந்த அரசியலும் இல்லை, அவர் யாரையும் கண்டிப்பதில்லை, யாரையும் குற்றம் சாட்டுவதில்லை. இந்த ஒரு காரணத்துக்காகவே, காலத்தையும் எல்லைகளையும் கடந்த மானுடத்தன்மைக்கு இது ஒரு மகோன்னதமான நினைவுச் சின்னம் என்று சொல்லலாம், எந்த ஒரு தேசமும் பிறரைக் காட்டிலும் தன்னை ஏதோ ஒரு வகையில் தனியாகப் பிரித்துக் காட்டிக் கொள்வதை இந்நூல் முழுமையாய் நிராகரிக்கிறது.

சியானின் இந்த மிகச்சிறந்த நூலை வாசிப்பதால் ஆர்வமுள்ள வாசகர்கள் ஒவ்வொருவரும் பயனடைவார்கள். கூடுதலாக, சீன பண்பாட்டு மரபின் விரிவான கானனை நாம் எவ்வாறு அணுக வேண்டும் என்ற கேள்விக்கும் இங்கு இடமிருக்கிறது. இந்த மரபைத் தங்கள் நோக்கங்களுக்காக மிகுந்த ஆற்றலுடனும் சாமர்த்தியமாகவும் பீஜிங்கின் அரசியல் தலைவர்களும் அவர்களது இரவலர்களும் பயன்படுத்திக் கொள்ளும் காலத்தில் இதன் அவசியம் இன்னும் முக்கியமாய் இருக்கிறது.

சியான் ஜோங்ஷூவின் எழுத்துகள் இறுதியில் நம் அனைவருக்கும் பொதுவான மானுட விழுமியங்களுக்கு அத்தாட்சியாகவே இருக்கின்றன. சீனத்துக்கு அல்லது ஆசியாவுக்கு அல்லது ஐரோப்பாவுக்கு உரியது என்ற விவரித்து இதைக் குறுக்க முடியாது. அவ்வளவு குரூரமான சூழலில் இந்தப் படைப்பு உருவம் பெற்றது என்பது திகைக்க வைக்கும் விஷயம். பாண்டித்தியத்துக்கும் மானுடம் மீதான நம்பிக்கைக்கும் சாட்சியம் சொல்லும் நாயகத்தன்மை கொண்ட எழுத்து இது. எந்த ஒரு கலாசாரமும் இதைக் கொண்டாடுவதில் பெருமை கொள்ள முடியும். இருபதாம் நூற்றாண்டு சீனா இவ்வளவு அற்புதமான குரலைப் படைத்திருக்கிறது என்பதில் நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டும்- சியானின் அசாதார்ண படைப்பை நம்மாலும் படிக்க முடிகிறது, அதில் திளைக்க முடிகிறது, கற்றுக்கொள்ள முடிகிறது என்பது நம் அனைவருக்கும் பெருமையே. இதைச் செய்யும்போது நாம் சீனாவை மட்டும் புரிந்து கொள்வதில்லை, நம்மையும் அறிந்து கொள்கிறோம், நம் கலாசாரத்தையும் புரிந்து கொள்கிறோம், நம் அனைவருக்கும் பொதுவான உலகையும் அறிந்து கொள்கிறோம்.

நன்றி – Open Democracy

ஒளிப்பட உதவி – விக்கிப்பீடியா

அஜாமிலனும் புலிகளும்

காஸ்மிக் தூசி

தங்கள் மன்னரிடம் சென்று
நாங்கள் பட்டினி கிடக்கிறோம்
என்றன புலிகள்.
15 பகல்கள் மற்றும்
16 இரவுகள்
ஒருகவளம் கூட இல்லை
சாப்பிட

அஜாமிலனின் புதுக்காவல் நாய்
எங்களை கண்டுபிடித்து விடுகிறது
எப்படியோ
விரட்டுகிறது காததூரத்தில்
‘அப்படியா, அதிர்ச்சியான செய்தி!
ஏன் முன்பே சொல்லவில்லை
என்னிடம்?
தயாராகுங்கள் விருந்துக்கு.
அந்த காவல்நாய்க்கு
ஞாபகம் இருக்கும்படி
பாடம் கற்பிக்கிறேன் நான்’
-என்றார் புலிராஜா.

அப்படியே ஆகட்டும்
என்றன புலிகள்
’’கவனமாக,’
என்று ராணி சொல்வதற்குள்
விடியும் முன்னரே
தனியாக புறப்பட்டுச்சென்ற
புலிராஜா
ஒரு மணி நேரத்தில்
திரும்பி வந்தார்,
கண்களைச்சுற்றிலும் இரத்தக்கட்டு
வாலில் ஊஞ்சல் கட்டு
திட்டமிட்டு விட்டேன் நான் எல்லாவற்றையும்,
ஒவ்வொரு அசைவையும்.
நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும்
தாக்குதலை நடத்துகிறேன் நான்
முன் நின்று
பார்த்துவிடுவோம் அந்தப்பயலை ஒருகை !
என்றார் ராஜா
காவல்நாயின் வேகமோ
மின்னலைப்போல
ஒரே சமயத்தில் இருந்தது
51 இடங்களிலும்
50 புலிகள் மற்றும் புலி ராஜா
அவர்களுக்கு எந்த வாய்ப்பும் தராமல்
ஒரு ஆட்டைக்கூட அவர்கள் தொடும்முன்
சுற்றி வளைத்தது எல்லோரையும்

51 புலிகளையும் விரட்டிப்பிடித்த காவல் நாய்
போர்க்கைதிகளாக
கயிற்றால் பிடித்துக்கட்டியபின்
வீசிற்று அஜாமிலின் முன்
பெரிய பொதி போல

சற்றே களைப்புடன்
உடைந்த பல்லை துப்பியபடி
’நீ வைத்திருக்கும் நாய்
அருமையானது அஜாமிலன்
என்றார் ராஜா.
விஷயம் என்னவென்றால்
சிறு குழப்பம் அவ்வளவுதான்
உன் ஆடுகளை எல்லாம்
ஒன்றுவிடாமல் சாப்பிட்டிருப்போம்
ஆனால்
அவைகளை பயமுறுத்த விரும்பவில்லை நாங்கள்
என்ன செய்கிறோம் என்பதல்ல
எப்படிச்செய்கிறோம் என்பதுதானே முக்கியம்
உன்னை ஒரு நண்பானாக மட்டும் பார்க்க வந்தோம்
என்பதே உண்மை’
உன் காவல்நாய்
வாழ்நாளின் வாக்குதவறாத உத்தமன்
சின்ன விஷயத்துக்குப்போய்
இப்படிச்செய்துவிட்டான் பாவம்
-என்று பயந்து சொன்னார் புலிராஜா.

அஜாமிலனோ தேர்ந்த நிர்வாகி
புலியின் கண்களை பார்க்கவே இல்லை
ஆனால் அது சொல்வதையெல்லாம்
நம்புவதாய் நடித்தான்
எல்லாப் பொய்களையும்
ஏற்றுக்கொண்ட்தாய் பாவித்து
கட்டுகளை விடுவித்து
அவைகளை இருக்கும்படி சொன்னான்
இரவு உணவுக்கு.
புலிகளால் மறுக்க முடியவில்லை
ஆட்டுக்குழம்பு, ஆட்டுகறி வறுவல்

உணவுக்குப்பின்
நாம் ஒரு நெடுங்கால நண்பர் ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டால் என்ன
-என்றான் அஜாமிலன்.
கர்ஜித்து உறுமின புலிகள்
அருமையான விஷயம்
நாங்கள் நினைத்ததும் அதுவே
நண்பர்களாய் இருப்போம் வாழ்நாள் முழுதும்
என்றன புலிகள்,
சாப்பிட்ட முள்கரண்டியை
கீழே வைத்தபடி.
புலிகளுடன்
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டான்
அஜாமிலன்
அன்புளிப்பாக ஆடுகள்,
தோல் ஆடைகள்
மற்றும் கம்பளிப்பந்துகள்
அளித்து வழியனுப்பினான்.

அஜாமிலன் ஒன்றும் முட்டாள் அல்ல
அவனுக்குத்தெரிந்த
எல்லா நல்ல மேய்ப்பர்களையும் போல
அவனும் அறிவான்
சிலசயம்
புலிகளுக்கும்
விருந்தளிக்க வேண்டும்
என்பதை.

விலாபுடைக்க உண்ட
புலிகளும் ஆடுகளும்
நட்புணர்வுடன்
ஒரே துறையில் நீர் அருந்துகையில்
அவன்
நாள் முழுக்கவும்
குழல் இசைக்கலாம்

=====

அருண் கொலாட்கரின் Ajamila and the Tigers  என்ற கவிதை தமிழாக்கம்

ஒளிப்பட உதவி – hippyshopper.com

வண்ணக்கழுத்து 14: உளவு பார்க்கப்போன கோண்ட்

டிசம்பரின் முதல் வாரத்தில் கோண்டும் வண்ணக்கழுத்தும் தன்னந்தனியாக உளவு பார்க்கப் போக வேண்டியிருந்தது. அவர்கள் போன இடம் ஒரு காடு. அது ஏப்ரெ, அர்மெண்டியர் மற்றும் ஹெஸ்ப்ரோக் நகரங்களில் இருந்து வெகு தொலைவில் இல்லை. ஃபிரெஞ்சு வரைபடத்தை எடுத்துக் கொண்டு, கலேவிலிருந்து தெற்கு நோக்கி ஒரு நேர்க்கோட்டை வரைந்தீர்கள் என்றால், பிரிட்டிஷ் மற்றும் இந்திய ராணுவம் நின்றிருந்த இடங்கள்அடுத்தடுத்து இருப்பதைக் காண முடியும். அர்மெண்டியருக்குப் பக்கத்தில் இந்திய மொகம்மதிய வீரர்களின் கல்லறைகள் நிறைய இருக்கின்றன. இந்திய இந்து மத வீரர்களின் கல்லறைகள் ஏதுமில்லை. ஏனென்றால் இந்துக்கள் ஆதிகாலத்திலிருந்தே இறந்தவர்களை எரியூட்டி வந்தார்கள். எரியூட்டப்பட்டவர்களுக்கு கல்லறைகள் கிடையாது. அவர்களுடைய அஸ்தி காற்றில் தூவப்படுகின்றன. அவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் இல்லை, ஆம், எந்தவொரு இடமும் அவர்களின் நினைவை பாரமாய்ச் சுமப்பதில்லை..

மீண்டும் கோண்டிற்கும் வண்ணக்கழுத்திற்கும் வருவோம். எதிரியின் எல்லைக்கு அப்பால், ஹெஸ்ப்ரோக் அருகில் காட்டிற்குள் இருக்கும் மிகப்பெரிய இரகசிய ஆயுதக் கிடங்கின் இருப்பிடத்தை துல்லியமாய் அறிய அவர்கள் இருவரும் அனுப்பப்பட்டார்கள். அதைக் கண்டுபிடித்தால், கோண்டும் வண்ணக்கழுத்தும் தனியாகவோ இருவருமாகவோ, ஒரு துல்லியமான வரைபடத்தோடு பிரிட்டிஷ் ராணுவ தலைமையகத்திற்குத் திரும்ப வேண்டும். அவ்வளவு தான். ஆக, தெளிவான டிசம்பர் மாத காலையில் ஒரு நாள் வண்ணக்கழுத்தை ஒரு விமானத்தில் ஏற்றிக் கொண்டார்கள். அது காட்டின் மேலே இருபது மைல் தூரம் பறந்தது. அந்தக் காட்டின் ஒரு பகுதி இந்தியப் படை வசமும் மற்றொரு பகுதி ஜெர்மானியப் படை வசமும் இருந்தது. ஜெர்மனியர்களின் இடத்திற்குள் நுழைந்த பிறகு வண்ணக்கழுத்து விடுவிக்கப்பட்டது. அவன் காடு முழுக்கப் பறந்தான். பிறகு அந்த நிலப்பரப்பைப் பற்றி அறிவை வளர்த்துக் கொண்டு வீடு திரும்பினான். வண்ணக்கழுத்து தன்னுடைய பாதையை அறிந்து கொள்ளவும், அவனிடம் எதிர்பார்க்கப்படும் வேலையைப் பற்றி அவனுக்கு அறிவுறத்தவுமே இந்த ஏற்பாடு.

அன்று மாலை சூரியன் மறைந்ததும், நியூ யார்க்குக்கு வடக்கே பத்து பாகையில் இருக்கும் அந்த இடத்தில் சுமார் நான்கு மணிக்கே அந்தி சாய்ந்துவிடும்,, குளிருக்கு கணப்பான உடைகளை அணிந்து கொண்டு, வண்ணக்கழுத்தை தன் மேல் சட்டைக்கு உள்ளே வைத்துக் கொண்டு, கோண்ட் கிளம்பினார். அவர்கள் ஒரு ஆம்புலன்ஸில் அந்தப் பெரிய காட்டில், இந்திய ராணுவத்தின் இரண்டாவது எல்கை வரை சென்றார்கள். முழு இருட்டில், உளவுத்துறை ஆட்கள் வழிநடத்த அவர்கள் போர்முனை நோக்கிச் சென்றார்கள்.

சீக்கிரமே அவர்கள் இரு படைகளின் ஆக்கிரமிப்பிலும் இல்லாத மையப்பகுதியை அடைந்தார்கள். அதிர்ஷ்டவசமாக அது மரங்களால் மறைக்கப்பட்டிருந்தது. குண்டுவீச்சில் அம்மரங்களில் பல இன்னும் சேதமடையாமல் இருந்தது. பிரெஞ்சோ ஜெர்மனோ, ஆங்கிலத்தில் ‘யெஸ்’, ‘நோ’, ‘வெரி வெல்’ என்பதைத் தாண்டி ஒன்றும் அறியாத கோண்ட், தன்னுடைய மேல் சட்டைக்கு அடியில் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் புறாவின் துணையோடு, ஜெர்மனியப் படையின் ஆயுதக் கிடங்கை கண்டுபிடிக்க தனித்து விடப்பட்டார்.

முதலில் அவர், தான் குளிர்ந்த இமாலயத்தின் சீர்தோஷணம் கொண்ட ஒரு நாட்டில், குளிர் காலத்தில் மரங்கள் மொட்டையாக நிற்க, இலையுதிர்கால சருகுகளும் உறைபனியும் தரையை மூடியிருக்கும் இடத்தில் இருக்கிறோம் என்பதை தனக்கு நினைவூட்டிக் கொள்ள வேண்டியிருந்தது. மரங்களிலும் மரக்கன்றுகளிலும் குறைந்த அளவே இலைகள் இருக்க அவருக்கு தன்னை மறைத்துக் கொள்வது அத்தனை எளிதான காரியமாக இல்லை. அந்த இரவு இருள் சூழ்ந்திருந்தது; பிணத்தைப் போல சில்லிட்டிருந்தது. ஆனால், எந்த ஒரு மனிதனைவிடவும் இருட்டில் சிறப்பாக அவரால் காண முடியும் என்பதாலும், அவருடைய மோப்பம் பிடிக்கும் சக்தி எந்தவொரு விலங்கை விடவும் கூர்மையானது என்பதாலும், யாரும் புக முடியாத இடத்தைக் கடந்து முன்னேறுவது என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த இரவில் காற்று கிழக்கிலிருந்து வீசியது.

மரங்களுக்கு இடையே கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்த அவர், தன்னால் முடிந்த அளவிற்கு விரைவாக முன்னேறினார். ஒரு ஜெர்மனியப் படை தன் வழியைக் கடக்கப்போகிறது என்பதை அவர்கள் வருவதற்கு சில நிமிடங்கள் முன்னதாகவே அவருடைய முக்கு அவருக்குச் சொல்லிவிட்டது. அவர், ஒரு சிறுத்தையைப் போல மரத்தின் மீது ஏறி காத்திருந்தார். அவர்களுக்கு ஒரு சிறு அசைவின் ஓசை கூடக் கேட்கவில்லை. அதுவே பகலாக இருந்திருந்தால் அவர் இருப்பதைக் கண்டுபிடித்திருப்பார்கள். ஏனென்றால், உறைபனியின் மீது நடந்து வந்திருந்த அவருடைய கால்களில் இருந்து ரத்தம் சொட்டி, கறைபடிந்த கால்தடத்தை விட்டிருந்தது.

ஒருமுறை அவர் மிக குறுகிய இடைவெளியில் தப்பித்தார். இரண்டு ஜெர்மானிய வீரர்கள் கீழே கடந்து செல்ல வழிவிட்டு அவர் மரத்தின் மீது ஏறியிருக்க, ஒரு கிளையிலிருந்து அவர் காதில் யாரோ ஒருவர் கிசுகிசுத்ததைக் கேட்டார். உடனே அவருக்கு அது ஒரு ஜெர்மானிய துப்பாக்கி வீரர் என்பது புரிந்து விட்டது. ஆனால், அவர் தன் தலையைத் தாழ்த்தி கவனமாகக் கேட்டார். அந்த ஜெர்மானியர் ‘குடன் நாட்ஜ்’ என்றார். பிறகு, வெளிவந்து மரத்திலிருந்து இறங்கினார். அவர் கோண்ட் தன்னை பணியிலிருந்து விடுவிக்க வந்த சக வீரர் என்று தவறாக நினைத்துக் கொண்டார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. சில நிமிடங்கள் கழித்து, கோண்ட் மரத்திலிருந்து இறங்கி, அந்த ஜெர்மானியரின் கால் தடத்தை பின்தொடர்ந்தார். இருட்டாக இருந்தாலும் அவருடைய வெற்றுப் பாதம், அந்த மனிதனின் காலடி தடம் பதித்திருந்த மண்ணை உணர்ந்தது. அது அவருக்கொன்றும் கடினமில்லை.

கடைசில் அவர் நிறைய மனிதர்கள் தற்காலிகமாகத் தங்கியிருக்கும் இடத்தை அடைந்தார். அவர் மெதுவாக அவர்களைச் சுற்றிச் சென்று முன்னேற வேண்டியிருந்தது. தன் காலடியில் ஏதோவொரு புதிய சத்தத்தைக் கேட்டார். நின்று, கவனித்தார். சந்தேகமே இல்லை, அது அவருக்கு பழக்கமான சத்தம்தான். அவர் காத்திருந்தார். ஒரு மிருகத்தின் காலடி. பட்டர்ர் பட், பட்டர்ர்! கோண்ட் அந்த சத்தத்தை நோக்கி நகர்ந்தார். உள்ளழுந்திய ஒரு உறுமல் சத்தம் வந்தது. பயத்திற்கு பதிலாக, சந்தோஷம் அவர் மனதை நிறைத்தது. புலிகள் நிறைந்த இந்தியக் காடுகளில் இரவைக் கழித்த அவர், ஒரு காட்டு நாயுடைய உறுமலுக்கு பயந்துவிடவில்லை. சீக்கிரமே இரண்டு சிவப்புக் கண்கள் அவருடைய பார்வைக்கு வந்தது. கோண்ட், கவனமாக தனக்கு முன்னால் இருக்கும் காற்றை முகர்ந்தார். அந்த நாயின் மீது சிறிதளவு கூட மனித வாசனை இல்லை. அந்த நாய் காட்டு விலங்காகிவிட்டிருந்தது. அந்த நாயும், தான் என்ன விதமான விலங்கை எதிர் கொண்டிருக்கிறோம் என்பதை அறிய காற்றை முகர்ந்தது. கோண்ட் சாதாரணமாக மனிதர்கள் வெளிப்படுத்தும் பய வாசனையை வெளிப்படுத்தவில்லை என்பதால், அந்த மிருகம் முன் வந்து தன்னை அவர் மீது உரசி, தீவிரமாக முகர்ந்தது. அதிர்ஷ்டவசமாக, கோண்ட் வண்ணக்கழுத்தை அந்த நாயின் மூக்கிற்கு மேலே தூக்கிக் கொண்டிருந்தார். மேலும், காற்று பறவையின் வாசனையைக் கொண்டுபோய்க் கொண்டிருந்தது. ஆக, அந்த நாய் தனக்கு முன்னால் இருந்த மனிதனை பயமில்லாத ஒரு நண்பனாகவே பார்த்தது. அது தன் வாலைக் குழைத்துக்கொண்டு கொண்டு செல்லம் கொஞ்சியது. தன் கையால் அதன் தலையை தட்டிக் கொடுப்பதற்கு பதிலாக கோண்ட், மெதுவாக தன் கையை நாயின் கண்களுக்கு முன்னால், அது பார்ப்பதற்காகவும் முகர்வதற்காகவும் நீட்டினார். அடுத்த ஒரு நொடி நிச்சயமின்மை தொடர்ந்தது.

அந்த நாய் கையைக் கடிக்கப் போகிறதா? இன்னொரு நொடியும் கழிந்தது. பிறகு… அந்த நாய் கையை நக்கியது. இப்போது சுகமாய்க் கொஞ்சியது. “ஆக, இது வேடனுடைய நாய். தலைவனைப் பிரிந்திருக்கிறது. இதனுடைய எஜமானன் இறந்திருக்கக் கூடும். ஜெர்மானியப் படைக்கு வரும் உணவுப் பொருட்களைக் கவர்ந்து தின்று உயிர் பிழைத்திருக்கிறது. ஏனென்றால், இது இதுவரை மனித மாமிசத்தை தின்றதாகத் தெரியவில்லை. இதுவரைக்கும் பரவாயில்லை” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டார் கோண்ட்.

கோண்ட் மெதுவாக சீட்டியடித்தார். எந்த நாடாக இருந்தாலும் எக்காலத்திலும் இது தான் வேடர்களின் சமிக்ஞை. ‘வழிநடத்து’ என்பது அதன் அர்த்தம். அந்த நாயும் அவரை வழிநடத்தியது. ஒரு ஆண் கலைமான், புலியின் குகையை மிகத் திறமையுடன் கடப்பதைப் போல, அந்த நாய் ஜெர்மானிய வீரர்களின் தற்காலிக முகாமை சுற்றிக் கொண்டு சென்றது. பல மணிநேர அலைச்சலுக்குப் பின், அவர்கள் தங்கள் இலக்கை அடைந்தார்கள். சந்தேகமே இல்லை. கோண்ட் அவர் தேடி வந்த ஆயுதக் கிடங்கை கண்டுபிடித்துவிட்டார். ஆயுதங்கள் மட்டுமல்ல ஜெர்மானியர்களின் உணவுக் கிடங்கும் அது தான். அவரை வழிநடத்திக் கொண்டு போன காட்டு நாய், ஒரு ரகசியப் பொந்துக்குள் சென்று அரை மணி நேரம் கழித்து ஒரு கன்றின் கால் இறைச்சியோடு திரும்பியது. அதுவொரு மாட்டிறைச்சி என்று அதன் வாடையைக் கொண்டே கோண்டால் கணிக்க முடிந்தது. அந்த நாய் உறைபனித் தரையில் தன்னுடைய இரவுணவோடு அமர்ந்தது. அதே நேரத்தில், கோண்ட் தான் இரவு முதல் தோளில் போட்டுக் கொண்டிருந்த பூட்ஸ்களை எடுத்து அணிந்து கொண்டு, மேலே உற்று நோக்கினார். நட்சத்திரங்களின் நிலை இருப்பை வைத்து அவரால் தன் இருப்பிடத்தை அறிய முடிந்தது. அங்கே கொஞ்ச நேரம் காத்திருந்தார்.

மெதுவாக விடியத் துவங்கியது. தன் பையிலிருந்து ஒரு திசைகாட்டியை எடுத்தார். அந்த இடத்தின் வரைபடத்தை தன்னால் வரைய முடியும் என்று நிச்சயமாக உணர்ந்தார். அப்போது, அந்த நாய் மேலே குதித்து, கோண்டின் மேல் சட்டையை பற்களால் கடித்து இழுத்தது. மீண்டும் அந்த நாய் தன்னை வழிநடத்த விரும்புகிறது என்பதில் அவர் மனதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அந்த நாய் முன்னால் ஓட, கோண்ட் விரைவாக பின்தொடர்ந்தார். விரைவிலேயே அவர்கள் முட்களாலும் உறைந்த கொடிகளாலும் அடர்த்தியாக மறைக்கப்பட்டிருந்த ஒரு இடத்தை அடைந்தார்கள். அந்த பாதை விலங்குகளுக்கு மட்டுமே சாத்தியமானது. அந்த நாய் பல கூரான முட்களுக்கு கீழே தவழ்ந்து சென்று மறைந்துவிட்டது.

இப்போது கோண்ட் நட்சத்திரங்களின் நிலை இருப்பை ஒரு படமாக வரைந்து, தன்னுடைய திசைகாட்டியின் சரியான நிலையையும் வரைபடத்தில் குறித்து இரண்டையும் வண்ணக்கழுத்தின் காலில் கட்டிப் பறக்கவிட்டார். அந்தப் புறா ஒவ்வொரு மரமாகப் பறந்து, ஒவ்வொன்றிலும் ஒரு நிமிடம் வரை உட்கார்ந்து தன் அலகுகலால் இறகுகளை ஒழுங்குபடுத்துவதைப் பார்த்தார். பிறகு, காலில் கட்டப்பட்ட தாள் இருக்கிறதா என்று சரிபார்ப்பது போல தன் அலகால் கொத்தி ஒழுங்குபடுத்திக் கொண்டு, இருப்பதிலேயே உயரமான மரத்தின் உச்சிக்கு சென்று, அங்கே அமர்ந்து கொண்டு அந்த இடத்தின் அமைப்பை ஆய்வு செய்தது. அந்த நொடியில், மேலே பார்த்துக் கொண்டிருந்த கோண்ட் தான் இழுக்கப்படுவதை உணர்ந்தார். குனிந்து தன் காலின்கீழ் பார்த்தார். அந்த நாய் முட்களுக்கு அடியிலிருந்த ஒரு குழிக்குள் அவரை இழுத்தது. கோண்ட் தாழக் குனிந்தார். தன்னுடைய வழிகாட்டியை தொடரும் அளவிற்கு கீழே வளைந்தார். ஆனால், கடைசியில் தலைக்கு மேலே இறக்கைகள் அடிக்கும் சத்தமும், துப்பாக்கிகள் வெடிக்கும் சப்தமும் கேட்டது. எழுந்து வண்ணக்கழுத்து கொல்லப்பட்டுவிட்டானா இல்லையா என்று ஆராயக் கூட அவருக்கு விருப்பமில்லை.

முட்களுக்கு அடியில், தன் வயிறும் முதுகெலும்பும் ஒட்டிக் கொண்டது போலும், இரண்டும் சேர்ந்து தரையோடு தைக்கப்பட்டது போலும் அவர் தவழ்ந்தார். அவர் உந்தித் தவழ்ந்து திடீரென்று எட்டு அடி வரை வழுக்கிக் கொண்டு போய், ஒரு இருண்ட குழியில் விழுந்தார். கும்மிருட்டாக இருந்தது. சிராய்த்த தலையை தேய்த்துக் கொண்டிருந்த்தால் கோண்ட் அதை முதலில் கவனிக்கவில்லை.

கடைசியில் எங்கே இருக்கிறோம் என்பதை அவர் அறிய முற்பட, திருடர்களின் குகை போல முட் புதர்களால் பாதுகாக்கப்பட்ட உறைந்த தண்ணீர்க் குழியாக இருக்கலாம் என்று நினைத்தார். குளிர்காலத்திலும், தலைக்கு மேலே உள்ள கிளைகளிலும் கொடிகளிலும் இலைகளே இல்லாத போதும், பகற்பொழுதிலும்கூட அந்தக் குழியில் இருள் அடர்த்தியாகவே இருந்தது. அந்த நாய் இப்போதும் அவருடன் தான் இருந்தது. அது தான் அவரை பாதுகாப்பான இடத்திற்கு இழுத்து வந்திருந்தது. பாவம், அந்த விலங்கு ஒரு நண்பன் கிடைத்த மகிழ்ச்சியில் இருந்தது. அந்த நேரத்திலும் கோண்ட்டோடு மணிக்கணக்காக விளையாடிக் கொண்டிருக்க விரும்பியது. ஆனால், களைப்படைந்த கோண்ட், கிட்டத்தில் ஒலிக்கும் துப்பாக்கிச் சத்தத்தையும் பொருட்படுத்தாது தூங்கிவிட்டார்.

மூன்று மணிநேரங்கள் கழித்து அந்த நாய் திடீரென்று சிணுங்கியது. பைத்தியம் பிடித்ததைப் போல ஊழையிட்டது. அதன் பிறகு பயங்கர வெடிச் சப்தங்களால் பூமி அதிரந்தது. அதைப் பொறுக்க முடியாமல், அந்த நாய் கோண்டின் மேல் சட்டையைப் பிடித்து இழுத்தது. வெடிச் சத்தம் படிப்படியாக, கோண்ட் இருந்த இடம் ஒரு தொட்டில் போல ஆடும் வரை உயர்ந்தது. ஆனால், அவரால் மறைவிடத்திலிருந்து வெளியே வருவதாய் இல்லை. ”ஓ வண்ணக்கழுத்தே, ஒப்பில்லாத பறவையே, எவ்வளவு சிறப்பாக உன் வேலையைச் செய்திருக்கிறாய். அதற்குள், அந்த செர்ரிப்பழ முகம் கொண்ட தளபதியிடம் செய்தியைக் கொண்டு சேர்த்திருக்கிறாய். எனவேதான் இந்த இடி போன்ற பதில். நீ பறவை இனத்தின் மாணிக்கம்” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டார். அவர் முனகிக் கொண்டிருக்க விமானங்கள் போட்ட குண்டுகள் ஜெர்மானிய ஆயுதக் கிடங்கை வெடிக்க வைத்தது.

அப்போது, அவரை மேற்சட்டையின் கையைப் பிடித்து இழுக்க முயன்று கொண்டிருந்த அந்த நாய், காய்ச்சல் வந்தவன் போல ஊழையிட்டு நடுங்கியது. அந்த நொடியில் காற்றில் ஏதோ உரசிக் கொண்டு வந்து பொத்தென்று பக்கத்தில் விழுந்தது. ஒரு அழுகையான ஊளையோடு அந்த நாய் தன்னுடைய மறைவிடத்திலிருந்து வெளியே விரைந்தது. கோண்டும் அதைப் பின் தொடர்ந்தார். ஆனால், காலம் கடந்துவிட்டது. அந்த முட்களின் ஊடே அவர் பாதி தூரம் கடந்திருக்க, அவருக்கு கீழே இருந்து காதைப் பிளக்கும் வெடிச்சத்தம் பூமியை நொறுக்கியது. கொடூரமான வலி அவருடைய தோளைத் துளைத்தது. ஏதோ ஒரு பேயால் தூக்கி, கடும் வலிமையுடன் தரையில் எறியப்பட்டதைப் போல அவர் உணர்ந்தார். கருஞ்சிவப்பு வைரங்களில் ஒளி அவர் கண்களின் முன்னே சில நொடிகள் ஆடிவிட்டு, திடீரென்று ஆற்றுப்படுத்தும் இருள் சூழ்ந்தது.

ஒரு மணிநேரம் கழித்து அவருக்கு நினைவு திரும்பிய உடன், முதன் முதலில் அவர் உணர்ந்தது ஹிந்துஸ்தானி குரல்களைத்தான். தன்னுடைய ஊர் மொழியை மேலும் தெளிவாகக் கேட்க அவர் தன் தலையை உயர்த்தினார். அந்த நொடியில், அவர் ஆயிரம் நல்ல பாம்புகள் கொத்தியதைப் போன்ற வலியை உணர்ந்தார். தான் தாக்கப்பட்டதையும் உயிர் போகுமளவிற்கு காயம்பட்டிருப்பதையும் அவர் புரிந்து கொண்டு விட்டார். அதே நேரத்தில், ஒவ்வொரு முறை ஹிந்துஸ்தானி ஒலி கேட்கும் போதும், இந்தக் காடு எதிரியின் வசம் இல்லை, இந்தியப் படையின் வசத்தில் இருக்கிறது, என்பதை அறிந்து அவர் உள்ளம் மகிழ்ந்த்து. ’ஆ! என் வேலை முடிந்தது. இனி நான் சந்தோஷமாகச் சாகலாம்’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டார்.

(தொடரும்…)

நான் நல்ல பெண்ணாக இருக்கவில்லை – கில்லியன் ப்ளின்

-கில்லியன் ப்ளின்  (Gillian Flynn)- 

நான் நல்ல பெண்ணாக இருக்கவில்லை. வெயில்காலத்தில் எனக்குப் பிடித்த பொழுதுபோக்கு, எறும்புகளைத் தாக்கி அவற்றைச் சிலந்திகளுக்குத் தின்னக் கொடுப்பதுதான். “கெட்ட அத்தை ரோஸி” என்ற விளையாட்டுதான் வீட்டில் பொழுதுபோக்க உதவியது- அதில் நான் என் கசின்களைப் பார்த்துக் கொள்பவள், ஆனால் சூனியக்காரி, அவர்கள் என்னிடமிருந்து தப்பியோட வேண்டும்.

எண்பதுகளில் சிறு பெண்கள் பலரும் பிளாஸ்டிக்கில் ஒரு பிங்க் கலர் பொம்மை போன் வைத்திருப்பார்கள் (அழகான பெண்களுக்கு போன் பேசுவது என்றால் ரொம்ப பிடிக்கும்), அது எங்களுக்கு மிகவும் அடிப்படையான விளையாட்டுப் பொருளாய் இருந்தது- அவர்கள் உதவிக்கு ஆள் அழைக்கும்போது எப்போதும் அவர்களிடமிருந்து அதைப் பிடுங்கி விடுவேன்.

எதுவும் செய்யாமல் சும்மா இருக்கும்போது பொதுவில் தெளிவாகத் தெரியாத கேபிள் சானல்களில் ஒலிபரப்பப்படும் சாப்ட் கோர் போர்ன்களைப் பார்த்துக் கொண்டிருப்பேன் (முலைகள், பிருஷ்ட பாகங்கள், ஸ்டாட்டிக், ஸ்டாட்டிக், முலைகள்!). என் பொம்மைகளில் எதுவாவது பிடிவாதம் பிடிக்க ஆரமபித்தால், அவளது முடியை வெட்டிவிடுவேன்.

இங்கு நான் சொல்ல வருவது இதுதான்- நான் ஒன்றும் வித்தியாசமாய் இருந்த குழந்தையல்ல (ஆனால் இதை எல்லாம் காகிதத்தில் படித்துப் பார்க்கும்போது கவலையாய்தான் இருக்கிறது). நான் கெட்ட பெண்ணும் அல்ல (இங்குதான் என் மீது மிகுந்த பாசம் வைத்துள்ள என் பெற்றோருக்காக இதைச் சொல்ல வேண்டும் – அந்த காலத்து கான்சாஸ் நகரில் நான் அதிசயமும் சந்தோஷமுமான ஆண்டுகள் பல வாழ்ந்திருக்கிறேன்). ஆனால் சிறுவயதினர் வளரும்போது சில சாகசங்கள் செய்ய வேண்டுமே- வசதியில்லாத இடத்தில் தங்கியிருப்பது, வயசுக்கு மீறிய பாலுணர்வு அனுபவங்கள், அதிகார விளையாட்டின் முதல் மலர்ச்சி, இதெல்லாம் பல பெண்களின் வாய்மொழிக் கதைகளிலும் இடம் பெறுவதில்லை.

குழந்தைமையின் ஆத்திரம், முதிரா வயதில் படுதோல்வியடையச் செய்த பால்விழைவு போன்றவற்றின் பீறிட்டுக் கிளம்பும் வினோத வெடிப்புகள் பற்றி ஆண்கள் ஆனந்தமாய் பேசுகிறார்கள். பாலுணர்வையும் வன்முறையையும் பேச அவர்களுக்கு சொற்கள் இருக்கின்றன, பெண்களுக்கு அப்படி எதுவும் இல்லை. வளர்ந்த பின்னும்கூட சுய இன்பம் பற்றியோ கலவியின் உச்சம் பற்றியோ எந்தப் பெண்ணும் நிஜமான சந்தோஷத்துடன் பேசியதாய் நினைவில்லை. செக்ஸ் அண்ட் தி சிட்டிதான் அதன் கொஞ்சலான புத்திசாலித்தன சொற்றொடர்களை முன்அனுமதி அளிக்கப்பட்ட வகையில் பொட்டலம் கட்டி அறிமுகப்படுத்தியது.

இப்போதும் நாம் நம் வன்முறையை விவாதிப்பதில்லை. தங்கள் குழந்தைகளைத் தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்ற சூசன் ஸ்மித் அல்லது ஆண்டிரியா யேட்ஸ் பற்றிய செய்திகளை ஆசை தீரத் தெரிந்து கொள்கிறோம், ஆனால் இந்தக் கதைகள் நயமாகச் சொல்லப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். பிரசவத்துக்குப் பின் ஏற்படும் மன அழுத்தம் பற்றி இறுக்கமான குரலில் தனியாய்ச் சொல்லப்பட வேண்டும் என்றும், அவளை அப்படிச் செய்ய வைத்தான் அவன் என்றும் கதை கேட்க விரும்புகிறோம்.

ஆனால் இதிலெல்லாம் அலட்சியப்படுத்தப்படும் ஒத்திசைவு ஒன்று உண்டு. கொலைகாரத் தாய்மார்களைப் பற்றியும் தொலைந்து போன சிறுமிகளைப் பற்றியும் பெண்கள் வாசிக்க விரும்புவதன் காரணம் பெண்ணின் வன்முறையை அந்தரங்க தளத்தில் பேசுவதற்கு மைய ஊடகத்தில் நமக்கிருக்கும் ஒரே வாய்ப்பு இவையாகவே இருக்கின்றன என்பதுதான் என்று நினைக்கிறேன்.

பெண்ணின் வன்முறை என்பது குறிப்பிட்ட தனித்தன்மை கொண்ட சீற்றம். அது எல்லைகளை மதிப்பதில்லை. பெண்களுக்குள் நடக்கும் சண்டை என்பது எல்லாம் பற்கள், தலைமுடி, எச்சில், நகங்கள் என்று நடக்கிறது- இரு ஆண்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொள்வதைவிட இரு பெண்கள் இப்படி சண்டை போட்டுக் கொள்வதைப் பார்க்க பயங்கரமாக இருக்கிறது. அதிலும் மனதளவில் நிகழ்த்தப்படும் வன்முறை மிகக் கொடூரமானது. பெண்கள் பின்னிப் பிணைகின்றனர்.

நான் பார்த்த உறவுகளில் மனதை மிகவும் துன்புறுத்துவதும், நோய்மை கொண்டதாகவும் இருந்த உறவுகள் நீண்டகால தோழியர் சிலரிடையே இருந்த உறவே- இன்னும் குறிப்பாக தாய்- மகள் உறவைச் சொல்லலாம். வம்புப் பேச்சு, திரித்தல், ஊக்குவிப்பது போல் நாடகமாடுதல், உறவை முறித்துக் கொண்டு தண்டித்தல், பாலுணர்வு காரணமான பொறமை- பெண்கள் சண்டை போட்டுக் கொள்வதைப் பார்ப்பது என்பது பல்லாண்டு காலம் நிகழும் படுபயங்கர ஊர்வலத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்றது.

வன்முறைச் சுழலில் சிக்கிக்கொண்ட இரக்கமற்ற ஆண்களை தலைமுறை தலைமுறையாய் பேசும் கதைகளால் நூலகங்கள் நிறைந்திருக்கின்றன. பெண்களின் வன்முறையை நான் எழுத விரும்பினேன்.

எனவே அப்படி எழுதவும் செய்தேன். இருண்மையான, மிக இருண்மையான ஒரு புத்தகம் எழுதினேன். அதன் நாயகி, கதைசொல்லி, அதிகம் குடிக்கிறாள், அதிகம் கலவியில் ஈடுபடுகிறாள், வெகு காலமாய் வார்த்தைகளைக் கத்தரித்துத் தன்னைக் குத்திக் கொள்கிறாள். விஷம் என்பதற்கு இலக்கணமாக இருக்கும் அம்மா, போதை மருந்துகள், பாலுறவு, அதிகாரம் முதலானவற்றின் பண்டமாற்று வர்த்தகத்தில் தேர்ந்த பயிற்சியுள்ள பதின்மூன்று வயதான ஒன்றுவிட்ட சகோதரி. அமைதியற்ற அந்தச் சிற்றூரில் இரு சிறுமிகள் கொலை செய்யப்படுகிறார்கள்.

அந்த நாவல் பெண்களை உயர்வாய்ச் சித்தரிக்கவில்லை, அதில் எனக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. பெண்களின் அழகற்ற முகத்தை ஏற்றுக் கொள்ளும் நேரம் எப்போதுதான் வரப்போகிறது? துணிச்சலான நாயகிகள், கற்பழிக்கப்பட்டபின் போராடும் வீராங்கனைகள், ஆன்ம சோதனை செய்து கொள்ளும் உயர்குடிப் பெண்கள் எத்தனை எத்தனை புத்தகங்களை நிறைத்துக் கொண்டிருக்கிறார்கள்- எனக்கு இதெல்லாம் மிகவும் அலுத்துப் போய்விட்டது.

அதிலும் குறிப்பாக, வில்லிகள் இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது- நல்ல ஆற்றல் வாய்ந்த வில்லிகள். ஒழுக்கமான ஆண்களைக் கல்யாணம் செய்து கொண்டு வசதியாக வாழத் திட்டமிடும் கோபக்கார பெண்கள் அல்ல (போருக்குக் கிளம்ப இதைவிட சுவாரசியமான எதுவும் எங்களுக்கு இல்லை என்பது போலிருக்கிறது). உணர்வுகளை வெளியே காட்டிக் கொள்ளாத, ஆனால் அதற்காக கெட்டவர்கள் என்று சொல்ல முடியாத பெண்கள், அழுது புலம்பும் சதிகாரிகள் (வம்பு வளர்த்தால் மட்டும் போதாது போல்)- இப்படிப்பட்ட வில்லிகளைச் சொல்லவில்லை. வன்முறைக்கு அஞ்சாத, தீய மனம் கொண்ட பெண்களைப் பற்றி பேசுகிறேன். அச்சுறுத்தும் பெண்கள். உங்களுக்கு அப்படி யாரையும் தெரியாது என்று சொல்லாதீர்கள்.

இத்தனை நாட்களாக நாம் நமக்கு பெண்ணாற்றல் சேர்த்துக் கொண்டிருந்ததில் – பகடி என்று சொல்லக்கூடிய அளவுக்கு இந்த ஊக்குவிப்பு போய்விட்டது- நமக்கு நம் இருண்ட பகுதியை ஒப்புக்கொள்ள இடமே இல்லை. இருண்ட பகுதிகள் முக்கியமானவை. விஷப் பூச்செடிகள் போல் அவற்றை நாம் வளர்க்க வேண்டும். எனவேதான் ஷார்ப் அப்ஜெக்ட்ஸ் நான் செய்த விஷப் பூங்கொத்து.

ஷார்ப் அப்ஜெக்ட்ஸ் நாவலில் நல்ல பெண்கள் கிடையாது. நாவலின் கதைசொல்லி, நான் வெறித்தனமாய் நேசிக்கும் காமில்லா- புத்திசாலித்தனமாகப் பேசுபவள், தன்னை அறிந்திருப்பவள், உற்சாகமானவள்- அவள்தான் நல்ல பெண்ணுக்கு மிக அருகில் வருபவள். ஆனால் ஒவ்வொரு நாளையும் ஓட்ட சரக்கு, போதை வஸ்துக்கள், செக்ஸ், கத்தரிக்கோல்கள் பயன்படுத்துகிறாள்.

காமில்லா பற்றி எழுதிக் கொண்டிருக்கும்போது, திருப்திப்படுத்த முடியாத, நச்சுத்தன்மை கொண்ட வீட்டில் எல்லாரையும் திருப்திப்படுத்தச் சொல்லி வளர்க்கப்படும் பெண் எப்படி வளர்வாள் என்று நினைத்துப் பார்த்தேன். எப்போது பார்த்தாலும் குத்திக் குடைந்து கொண்டிருக்கும் ஒரு அம்மா, உடலளவிலும் இதைச் செய்கிறவள், கொஞ்சம்கூட தாய்மையுணர்வு இல்லாதவள், அவளால் வளர்க்கப்படும் பெண் தன் அம்மாவிடம் எப்படி நடந்து கொள்வாள்? அவள் தன் பெண்ணுக்கு எப்படிப்பட்ட வன்முறையைப் புகட்டுவாள்? அது ஒரு சுழல் மாதிரி இருக்கும் என்று உணர்ந்தேன்.

காமில்லா தன்னையே துண்டம் போட விரும்புகிறாள். வெட்டுபவளே பலி கொள்கிறாள், பலியாகிறாள்- மிரட்டுபவளும் மிரள்பவளும் அவளே. ஆனால் இதில் நோய் தீர்த்தலும் உண்டு- பின்னர் காயங்களைக் கழுவி மருந்திட்டு கட்டு போட வேண்டும். காயப்படுத்து, துயரம் கொள், குணப்படுத்து, காயப்படுத்து, துயரம் கொள், குணப்படுத்து. இது வன்முறையின் முப்புடி, ஒரே ஆளில் உருவம் பெறுகிறது. உலகின் மிகத் தனித்த செயல் இது. காமில்லா அடிப்படையில் தனித்து இருப்பவள்.

நான் சிறுமியாய் இருந்தபோது பிரதர்ஸ் கிரிம் கதைகள் படித்ததைக் கொண்டு காமில்லாவின் அம்மாவைப் படைத்தேன். சுருள் முடி கொண்ட மென்மையான நாயகிகள் நாசமாய்ப் போகட்டும். கெட்ட புத்தி படைத்த இந்த அரசிகளையும் தீய நெஞ்சம் கொண்ட மாற்றாந்தாய்களையும் நான் நேசித்தேன். எனவே காமில்லாவின் அம்மா அப்படி இருக்கிறாள்- அவள் அழகி, ராணி, ஊசிகள் நிறைந்தவள். அவள் பிறர் வலியைத் துய்ப்பவள். காமில்லாவின் வன்முறை தனக்குள் அடங்குவது என்றால், அவளது தாயின் வன்முறை தன்னை மையம் கொண்டது.

கொலை செய்யப்பட்ட சிறுமிகளை எடுத்துக் கொண்டால், இவர்கள் கன்னக்குழியும் ரிப்பன்களுமாய் இருப்பதை நான் விரும்பவில்லை. அது மிகச் சுலபமாய் இருந்திருக்கும் (“அழகிய பெண்ணின் மரணம் கவித்துவமானது,” என்றார் போ, அழகிய சிறுமியின் மரணம் இன்னும் அழகாக இருக்குமோ என்னவோ- தொலைந்து போன பெண்கள் குறித்து நம் ஊடகங்கள் பைத்தியம் பிடித்து அலைவதைப் பார்த்தால் அப்படிதான் இருக்கிறது). கொலையுண்ட பெண்கள் பொம்மை போன்ற பலிகள் அல்ல- அவர்களுக்குள்ளும் ஒரு கொடூரம் உண்டு, அவர்கள் போராளிகள். காமில்லாவின் ஒன்றுவிட்ட சகோதரி அமா, அவள் கோபக்காரி. ஆனால் காமில்லா போலல்லாமல், பேய் பிடித்த அவள் வீடு அவளது கோபத்தை மேல்நோக்கித் திருப்பவில்லை, மாறாய் கண்கவரும் திசையில் செலுத்துகிறது.

ஷார்ப் அப்ஜெக்ட்ஸில் வரும் பெண்களை நினைத்துப் பார்க்கும்போது 1948ஆம் ஆண்டு பிரடரிக் சம்மர் எடுத்த புகைப்படத்தை நினைத்துப் பார்க்கிறேன்- அதன் பெயர் லிவியா. லிவியா ரோமானிய கொலைகார பேரரசி. அது கருப்பு வெள்ளை புகைப்படம், அதில் இருப்பவள் ஓர் இளம் பெண், அப்பாவித்தனத்தின் அலங்காரங்கள் அனைத்தும் அவளிடம் இருக்கின்றன- பின்னி வாரப்பட்ட சுருள் கேசம், லேஸ் நுனியிட்ட ஆடைகள். ஆனால் அவள் கண்களின் புத்திசாலித்தனத்தைப் பார்த்தால் தூக்கிவாரிப் போடுகிறது, அவளது உதடுகள் பிடிவாதமாய் இறுகி இருக்கின்றன, அவள் முகம் முழுக்க குறும்பு- ஒருவேளை அவள் துட்டியாய் இருக்கலாம். உலகில் எனக்குப் பிடித்த புகைப்படங்களில் ஒன்று அது. சிறுமிகள்- பெண்களும்- கெட்டவர்களாக இருக்கக்கூடும் என்று அது நினைவூட்டுகிறது.

நன்றி – http://www.powells.com/essays/flynn.html

ஒளிப்பட உதவி – விக்கி ஆர்ட்

அமேசான் காடுகளிலிருந்து…

மித்யா

ஒன்று

ஜார்ஜ் ட்ருக்கர் என்பவர் எழுதிய ‘லைப் ஆப் எ லிவிங் செயின்ட்’ என்ற புத்தகம் பத்தொன்ம்பதாம் நூற்றாண்டு இறுதியில் வெகு பிரபலமடைந்து பல சர்ச்சைகளுக்கு வித்திட்டது. பிரிட்டன் மற்றும் அமெரிக்கா இந்தப் புத்தகத்தைத் தடை செய்யவும், அந்தத் தடையை எதிர்த்து பல வாசகர்கள் வீதியில் இறங்கினார்கள். இவர்களுக்கு எதிராக தடை கோரியவர்களும் வீதியில் இறங்கவே கைகலப்பு நடந்து பிறகு போலீஸ் தடியடி நடந்து பலர் காயப்பட்டு லண்டன் நகர வீதிகள் நான்கு நாட்களுக்கு மூடப்பட்டன.

இந்தப் புத்தகம் கார்ல் கிறிஸ்டோ என்பவரின் இறுதி ஐந்தாண்டு கால வாழ்க்கையைச் சித்தரிக்கிறது. கிறிஸ்டோ என்பவர் 1850இல் பிறந்து 1882 வரை முப்பத்திரண்டு வருடங்கள் உயிர் வாழ்ந்தார். இருபத்தேழு வயது வரை சாதாரண இளைஞனாக இலக்கில்லாமல் சுற்றிய இவர், பல ஐரோப்பிய ‘எக்ஸ்ப்ளோரர்’ கதைகளைக் கேட்டு தானும் அது போல் ஏதாவது சாகசம் செய்ய வேண்டும் என்று எண்ணி அமேசான் காடுகளுக்கு 1877இல் புறப்பட்டார்.

அமேசான் காடுகளில் அங்குள்ள வனவாசிகள் துணையுடன் சுற்றிக்கொண்டிருந்தவர், எல்லோரும் அந்தக் காட்டின் ஒரு பகுதிக்குள் நுழைய மறுப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். விசாரித்ததில் அந்தப் பகுதியில் புலிகள், சிங்கங்கள், கரடிகள், அனகோண்டாக்கள் மற்றும் பிரான்ஹா மீன்கள் அதிகமாக இருப்பதாகவும், அந்தப் பகுதிக்குள் சென்ற யாரும் உயிருடன் திரும்பியதில்லை என்றும், எல்லோரும் கோர மரணத்தை அடைந்தார்கள் என்றும் தெரிய வந்தது. இதையெல்லாம் நம்ப மறுத்த அவர், தான் அந்தக் காட்டுக்குள் சென்று உயிருடன் திரும்பி வருவதாக சவால் விட்டு, எல்லோரும் தடுத்ததை பொருட்படுத்தாமல், வனவாசிகள்கூட வர மறுத்ததைக் கண்டுக்கொள்ளாமல், அந்தக் காட்டுப்பகுதிக்குள் நுழைந்தார்.

அங்கே மரங்கள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து சூரிய கிரணங்களை தடுத்து காட்டை இருளில் மூழ்கச் செய்திருந்தன. பறவைகளின் கூக்குரலும் பூச்சிகளில் இடைவிடாத கர்ணகடூரமான சப்தத்திற்கும் நடுவே வியர்க்க விருவிருக்க கிறிஸ்டோ நடந்து கொண்டிருந்தார். திடீரென்று புதருக்குள் சலனம் ஏற்பட, அது என்ன என்று கிறிஸ்டோ திரும்பிப் பார்ப்பதற்குள் அவர் மேல் ஒரு புலி பாய்ந்தது. இளைஞரான கிறிஸ்டோ சட்டென்று குனிய புலி உயரத் தாவிச் சென்று ஐந்தடி தாண்டி இறங்கியது. இறங்கியவுடன் சட்டென்று திரும்பி மறுபடியும் அவரை நோக்கி தாவி வந்துக் கொண்டிருந்தது. கிறிஸ்டோ ஓட்டம் பிடிக்க, புலி அவரை துரத்த, ஓடும் நதி முன் வந்து மாட்டிக் கொண்டார் கிறிஸ்டோ. புலி அவர் மேல் வேகமாகப் பாயவும், இந்த முறை சட்டென்று தரையில் படுத்துக் கொண்டார் கிறிஸ்டோ. புலி அவரைத் தாண்டிச் சென்று ஓடும் நதியில் விழுந்தது. கீழே விழுந்து கிடந்த கிறிஸ்டோ எழுந்து நிற்க முடியாத அளவிற்கு முட்டியில் காயம் பட்டிருந்தது. இதை கவனித்த புலி நதியில் மெதுவாக நீந்திக்கொண்டு கிறிஸ்டோவை நோக்கி வந்தது. இனி தனக்கு மரணம்தான் என்று கிறிஸ்டோ எண்ணிக் கொண்டிருக்கையில் காட்டைப் பிளப்பது போல் புலியிடமிருந்து ஓர் ஓலம் எழுந்தது. முதலில் திடுக்கிட்ட கிறிஸ்டோவிற்கு நிலைமை மெதுவாக பிடிபட ஆரம்பித்தது. அந்தப் புலியை நதியில் இருக்கும் பிரான்ஹா மீன்கள் தின்ன ஆரம்பித்து விட்டன. அந்த வலி தாங்க முடியாமல் புலி கத்திக்கொண்டிருந்தது. மூன்று நிமிடத்திற்குப் பின் காடு நிசப்தமானது. புலியின் எலும்புக்கூடு தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது.

தான் காட்டுவாசிகளின் சொல்லை கேட்டு நடந்திருக்க வேண்டும் என்றும் இனி இங்கிருந்து தப்பிச் செல்வது முடியாத காரியம் என்றும் கிறிஸ்டோ நினைத்துக் கொண்டார். நாலாபுறமும் காடு சூழ்ந்திருக்க அவருக்குத் திரும்பிச் செல்லும் வழி எதுவென்று தெரியவில்லை. போதாததற்கு முட்டியில் பலத்த அடி. இனி எல்லா பாரமும் இறைவன் மேல் போட்டுவிட்டு ஏதோ ஒரு திசையில் நடந்து செல்ல வேண்டும் என்று கிறிஸ்டோ முடிவெடுத்தார்.

மெதுவாக நொண்டிக் கொண்டு நதியோரமாக கிறிஸ்டோ நடந்தார். ஆழ்ந்த சிந்தனையில் நடந்து கொண்டிருந்தவர் ஒரு மரத்துக்குப் பின்னாலிருந்து அவரைப் பார்த்துக் கொண்டிருந்த சிங்கத்தை கவனிக்கவில்லை. சப்தம் செய்யாமல் தன் பிடரியை சிலிர்த்துக்கொண்டு அவரைச் சிங்கம் பின்தொடர்ந்தது. தன் இளமைக் காலம் பற்றியும், லண்டனில் இருந்திருந்தால் இந்நேரத்திற்கு அருமையான தேநீர் அருந்திவிட்டு ஷேக்ஸ்பியர் நாடகத்தை பார்த்துக் கொண்டிருக்கலாம் என்றும் கனவுலகில் மிதந்து கொண்டிருந்த கிறிஸ்டோ தரைக்குத் தள்ளப்பட்டார். ஆம், கீழே விழுந்து உருண்டு மல்லாக்கப் படுத்திருந்த கிறிஸ்டோ, அந்தச் சிங்கம் தன்னைப் பார்த்து சிரிப்பது போலிருக்கக் கண்டார். இப்போது தனக்கு மரணம் நிச்சயம் என்று அறிந்த கிறிஸ்டோ சிங்கத்தைப் பார்த்து விரக்தியாகச் சிரித்தார்.

சிங்கம் அவரிடம் மெதுவாக வந்து அவர் கழுத்தைக் கவ்வ இருந்த நேரத்தில் தண்ணீரிலிருந்து ஒரு ராட்சத அனகோண்டா வெளியே பாய்ந்து வந்தது. அனகோண்டா வருவதை கிறிஸ்டோவோ சிங்கமோ உணர்வதற்குள் அனகோண்டா சிங்கத்தைச் சுற்றிக்கொண்டது. சிங்கம் பலம் கொண்ட மட்டும் போராட, அனகோண்டாவும் சிங்கமும் சகதியில் புரண்டன. கடைசியில் அனகோண்டாவின் அணைப்பைத் தாங்க முடியாத சிங்கம் உயிர் விட்டது. அனகோண்டா ஊர்ந்து வந்து கிறிஸ்டோவை சுற்றிக்கொண்டு, ஒரு பந்து போல் உருண்டு சென்று கிறிஸ்டோ எங்கிருந்து புறப்பட்டாரோ அதே இடத்திற்கு வந்து அவரை தன் பிடியிலிருந்து அவிழ்த்துவிட்டு மறுபடியும் காட்டுக்குள் சென்று விட்டது. இந்த நிகழ்வைக் கண்ட வனவாசிகள் வாயடைத்துப் போனார்கள்.

இதறக்கு பிறகு என்ன நடந்தது என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.

ஒளிப்பட உதவி – Shukernature