எழுத்து

கியோர்கி கொஸ்போதினோவின் பல்கேரிய சோகம்

(நியூ யார்க்கர் இதழில் காரத் கிரீன்வெல் எழுதிய கட்டுரையின் தமிழாக்க வடிவம்)

தி எகானமிஸ்ட் பத்திரிக்கையில் 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் “மகிழ்ச்சியின் புவிப்பரப்பு” என்று ஒரு கட்டுரை வந்தது. அப்போதைய ஐரோப்பிய யூனியனில் ரோமானியாவும் பல்கேரியாவும் புதிதாய் இணைந்திருந்தன. ஐரோப்பிய யூனியனில் மிகவும் மோசமாகப் பேசப்பட்ட பல்கேரியாவைத்தான் “உலகின் மிகவும் சோகமான இடம்” என்று எகானமிஸ்ட் கட்டுரை பிரகடனப்படுத்தியது.

அதன்பின் சரியாக ஓராண்டுக்குப்பின், பல்கேரியாவின் மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜியோர்கி கொஸ்போதினோவ் “துயரத்தின் இயற்பியல்” என்ற தனது இரண்டாம் நாவலை எழுதினார் (இவ்வாண்டு அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை ஓப்பன் லெட்டர் புக்ஸ் பதிப்பிக்கிறது). எகானமிஸ்ட் கட்டுரைக்கும், கிழக்கு ஐரோப்பிய மனநிலை குறித்து பரவலாய் அறியப்பட்ட தேய்வழக்குகளுக்கும் ஒருவகையில் இது தன் எதிர்வினை என்று ஜியோர்கி கொஸ்போதினோவ் நேர்முக உரையாடல்களில் தனது இந்த நாவலின் இடத்தை வரையறை செய்து கொண்டார். “அடிப்படையில் என் கதையின் நாயகன் ஒரு கதை சொல்ல முயற்சி செய்கிறான். குறிப்பாக இந்த இடத்தைப் பற்றி கதை சொல்ல முற்படுகிறான், இது மிகவும் சோகம் நிறைந்த இடம். அவன், தன் சோகங்களை எதிர்கொள்ள முயற்சி செய்கிறான். அல்லது, குறைந்தபட்சம் அவற்றை ஓர் ஒழுங்குக்குக் கொணர்ந்து விவரிக்க முயற்சி செய்கிறான்”. (more…)

அம்மாவின் வானம்

ஆதவன் கிருஷ்ணா

அம்மாவின் வானத்தில்
சிதையுண்ட
மேகங்களைக் காண்கிறேன்

பொட்டுப் பொட்டாய்
தூர்த்தும் மேகமழைக்குள்
கை நுழைத்துச்
சில்லிடுகிறாள்
(அப்போது துள்ளிக் குதிப்பதற்காகவாவது மழை நீளலாம் என்று தோன்றும்)

தோழிகள்
வெளிர் நீல நிற மழை வானத்தின்
குறுக்காய்
பணிவாய்க் குனிந்து
நிறங்களமைக்கிறார்கள்

அம்மாவின் வானம்
பாதுகாப்பானது
கருணை மிக்கது
வெயிலின் உக்கிரத்தை
திரைப்பது
இரைஞ்சுதலையும் கூடுமானவரை
பரிவோடு அணைத்துக்
கொண்டும் செல்வது
வண்ணாத்திப் பூச்சியின்
மென் வருகையை நினைவூட்டுவது
விளையாடும்
சிறு குழந்தை போல
வெள்ளந்தித்தனமானது

அதில்

கூடும்
குளிர் தரும்
வெண் புகை
அடர்
கரு மேகம்

தாழ்வாய்
உலாத்தும்
கூரலகு தவிட்டு நிற நீள் றெக்கை
கொடும்
பருந்து.

பாகேஸ்ரீ- சிறுகதையில் வரும் பாடல்கள்

எஸ்.சுரேஷ்

சென்ற வாரம் பதாகையில் ‘பாகேஸ்ரீ’ என்ற என் சிறுகதை வெளியானது. அதில் பல ராகங்களின் குறிப்பும் பாடல்களின் குறிப்பும் வரும். கதையைப் படித்த நண்பர்கள் சிலர் இந்த பாடல்களுக்கும் ராகங்களுக்கும் சுட்டி கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள். அதனால் இங்கு இந்த ராகங்களை பற்றியும் பாடல்கள் பற்றியும் சிறுகுறிப்பு எழுதி சுட்டி தருகிறேன்.

ஹோட்டலில் உட்கார்ந்துகொண்டு கதைசொல்லி முதலில் பாடும் ராகம் பாகேஸ்ரீ: இது ஒரு ஹிந்துஸ்தானி ராகம். கர்நாடக இசைக்கு வடக்கேயிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. திரை இசையில் பல அருமையான பாடல்கள் இந்த ராகத்தில் அமைந்திருக்கின்றன. கதையில் வரும் பாகேஸ்ரீ பாடல்கள் இவை:

– ஜாக் தரத் எ இஷ்க் ஜாக். இந்த பாடல் ‘அனார்கலி’ என்ற படத்தில் வந்தது. இதற்கு இசையமைத்தவர் சீ.ராமச்சந்திர. இந்தப் படப்பாடல்கள் அந்த காலத்தில் இந்தியா முழுவதும் முழங்கின. குறிப்பாக லதா பாடிய ‘எ ஜிந்தகி உசிகி ஹய்’ பாடலும் இந்தப் பாடலும் எல்லோராலும் விரும்பப்பட்டன. ஹேமந்த் குமார் மற்றும் லதா மங்கேஷ்கர் சேர்ந்து பாடிய ஜாக் தரத் எ இஷ்க் ஜாக்’ பாடலை இங்கு கேட்கலாம்:

– சித்சோர் என்ற படம் சின்ன பட்ஜெட் படம் ஆனால் பெரிய வெற்றி பெற்ற படம். அந்த வெற்றிக்கு உறுதுணையாக அந்த படத்தின் பாடல்கள் இருந்தன. ‘கோரி தேரா காவ்ன் படா ப்யரா’ பாடல் ஒலிக்காத இடமே இல்லை. ஜேசுதாசுக்கு ஹிந்தியில் அழியாப் புகழை இந்தப் படப்பாடல்கள் பெற்றுக் கொடுத்தன. ரவீந்திர ஜெயின் இசையில் ஜேசுதாஸ் மற்றும் ஹேமலதா பாடிய பாகேஸ்ரீ ராக பாடல் இங்கே:

– மாயா பஜார் ஓர் அழியாக் காவியம். நான் இதை தெலுங்கில்தான் பார்த்திருக்கிறேன். ரங்கா ராவின் நடிப்பும் சாவித்ரியின் நடிப்பும் அருமையாக இருக்கும். அதுவும் சாவித்திரி கடோத்கஜன் போல் நடிக்கும்பொழுது ஏன் அவர் சினிமா உலகில் அவ்வளவு பெரிய அந்தஸ்து பெற்றிருக்கிறார் என்று நமக்கு தெரியும். அந்த படத்தில் எல்லா பாடல்களும் அருமையாக இருக்கும். ‘கல்யாண சமையல் சாதம்’ அறியாதவர்கள் இருக்க முடியாது. இந்தப் படத்திற்கு ராஜேஷ்வர் ராவ் முதலில் இசையமைத்ததாகவும் பிறகு ஏதோ காரணத்தால் அவர் விலகி கண்டசாலாவின் பெயர் இசையமைப்பாளராக வந்தது என்றும் சொல்வதுண்டு. மாயா பஜார் படலை இங்கு கேட்கலாம். கண்டசாலாவும் லீலாவும் பாடியது:

– தமிழ் திரையிசையில் பல அருமையான பாகேஸ்ரீ ராக பாடல்கள் வந்திருக்கின்றன. ஆனாலும் இன்றும் பாகேஸ்ரீ என்று சொன்னால் எல்லோருக்கும் முதலில் ஞாபகம் வரும் பாடல் ராமு படத்தில் வந்த ‘நிலவே என்னிடம்’தான். பாடல் காட்சிப்படுத்தப்பட்ட விதம், எம்.எஸ்.வி.யின் அருமையான மெட்டு, பி.பி. ஸ்ரீனிவாசின் மென்மையான குரல். இவை எல்லாம் சேர்த்து நம்மைச் சொக்க வைத்து விடுகின்றன. பாடல் இங்கே கேட்கலாம்:

– பாகேஸ்ரீ ராகத்தை அற்புதமாகப் பாடியவர்களில் கிஷோரி அமோன்கர் ஒருவர். பல வருடங்களுக்கு முன் அவர் ரிலீஸ் செய்த ரெகார்டில் ஒரு பக்கம் பாகேஸ்ரீயும் மறுபக்கம் பூப் ராகமும் (மோகனம்) இருக்கும். இது ஒரு அற்புதமான இசைத்தட்டு. ஹிந்துஸ்தானி இசை அறிந்தவர்கள் இதைக் கேட்காமல் இருந்திருக்க மாட்டார்கள் என்று அடித்துச் சொல்லலாம். விளம்பித் க்ஹையால் மற்றும் திருத் பாடியிருப்பார். இங்கே கேட்கலாம்:

– இந்த பாகேஸ்ரீ ரகத்தை அற்புதமாக கையாண்ட இன்னொரு இசைக் கலைஞர் அமீர் கான். இவருடைய பாடும் பாணிக்கு இது போன்ற ராகங்கள் வெகு உகந்தவைக இருந்தன. ஒரு அவசரமும் இல்லாமல் ஒவ்வொரு ஸ்வரத்தையும் அனுபவித்து பாடும் இவர் ஹிந்துஸ்தானி இசையின் மாமன்னர்களில் ஒருவர். அவர் பாடிய பாகேஸ்ரீ இங்கே:

தாகூர்ஸ் ஹோம் ஸ்கூலில் பேப்பர் திருத்தும்பொழுது கதைசொல்லி பாடும் ராகம் பூர்ய தனஸ்ரீ. இதை கர்நாடக இசையில் பந்துவராளி என்கிறோம். இந்த ராகத்திலும் தமிழ் திரைசையில் பல பாடல்கள் வந்திருக்கின்றன.

– மிகவும் பிரசித்தி அடைந்த ‘ஏழு ஸ்வரங்களுக்குள்’ பாடலில் பல்லவி பந்துவாரளியில் அமைக்கப்பட்டது. (இந்த பாடல் ராகமாலிகை பாடல். சரண்த்தில் ராகம் மாறும்) :

– ரங்கீலா படத்தில் வரும் ‘ஹே ராமா’ பாடல் இந்த ராகத்தில் அமைந்ததுதான். இந்திய முழுக்க முழங்கிய இந்த பாடல் ரஹ்மானுக்கு ஹிந்தி பட உலகில் உயர்ந்த இடத்தை கொடுத்தது:

– ஹிந்துஸ்தானி இசையில் பூரிய தனஸ்ரீ எப்படி இருக்கும்? பாரத் ரத்னா பீம்சென் ஜோஷி பாடுகிறார்:

– கர்நாடக சங்கீதத்தில் பந்துவராளி எப்படி இருக்கும்? இன்னொரு பாரத் ரத்னா, எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடுகிறார்:

மேஹபில் ஒன்றில் குல்கர்னியின் மகனும் கதைசொல்லியும் பாடுகிறார்கள். கதைசொல்லி மால்கௌன்ஸ் ராகத்தில் அமைந்த ஹிந்தி சினிமா பாடலை பாடுகிறான். இந்த ராகத்தை கர்நாடக இசையில் ஹிந்தோளம் என்பார்கள். அந்த பாட்டு இதோ. நவ்ஷாத் இசையில் முஹம்மத் ரபி பாடிய பாடல்:

மழை பெய்து கொண்டிருக்கும்போது பக்கத்து இருக்கையில் இருப்பவன் கதைசொல்லியின் பாட்டைப் புகழ அவர் பாட ஆரம்பிக்கும் ராகம் மியான் கி மல்ஹார். இது மழைக்கால ராகம். கர்நாடக சங்கீதத்தில் இந்த ராகம் கிடையாது. ஹிந்துஸ்தானியில் இதை பலர் பாடியிருக்கிறார்கள். ஹிந்துஸ்தானி இசையில் எல்லோருக்கும் பிடித்த ராகம் இது.

– இதில் முக்கியமான பாடல் படா க்ஹையால் ‘கரீம் நாம் தேரோ” இதை பல பிரசித்தமான பாடகர்கள் பாடியிருக்கிறார்கள். அமீர் கான், பீம்சென் ஜோஷி, கிஷோரி, மன்சூர் மற்றும் பலர். இதில் என்னை மிகவும் கவர்ந்தது அமீர் கான் பாடியதுதான்.

http://gaana.com/song/karim-naam-tero-khayal

– ‘மேகா தாகே தாரா என்னும் வங்காள படத்தில் இதே பாடல்

– ‘போலே ரே பபிஹரா’ என்ற சோட்டா க்ஹையால் இந்த ராகத்தில் புகழ்பெற்ற ஒன்று. அதை குமார் கந்தர்வா பாடுகிறார்:

– குட்டி என்ற படத்தில் வந்த பிறகு ‘போலே ரே பபிஹரா’ இன்னும் புகழ் பெற்றது. வாணி ஜெயராம் என்ற பாடகியை இந்தியா முழுவது அறிமுகம் செய்து வைத்த பாடல் இது. வசந்த் தேசாய் இசையமைப்பு:

‘இவன் கான் சாப் போல பாடுகிறான்’ என்று குல்கர்னியை வியக்க வைத்த பாட்டு ‘கா கரூன் சஜனி’. படே குலாம் அலி கான் பல தும்ரிகளுக்கு அதிபதி. அவற்றில் முக்கியமானவை ‘ஓம் தத் சத்’ மற்றும் ‘கா கரூன் சஜனி’. அவர் ‘ஓம் தத் சத்’ பாடாமல் எந்த கச்சேரியும் முடிக்க முடியாது என்று படித்திருக்கிறேன். என்ன அருமையான குரல். உணர்வுப்பூர்வமான பாடல். ‘கா கரூன் சஜனி’ :

இதே முதல் வரியை எடுத்துக்கொண்டு சுவாமி என்ற படத்தில் அமைக்கப்பட்ட பாடல். ஜேசுதாசின் புகழ் பெற்ற ஹிந்தி பாடல்களில் இதுவும் ஒன்று. இந்தப் பாடல் வந்த காலத்தில் தினமும் ரேடியோவில் ஒலித்த பாடல்.

கான் சாப் அவனிடம் வாங்கிய சத்தியத்தை எண்ணி கதைசொல்லி பாடும் ராகம் தோடி. ஹிந்துஸ்தானி இசையில் ராக் தோடி என்று அழைக்கப்படும் ராகம் கர்நாடக இசையில் சுபபந்துவராளி என்று அழைக்கப்படுகிறது. (கர்நாடக இசையிலும் தோடி என்ற ராகம் உண்டு ஆனால் அதற்கும் ஹிந்துஸ்தானி தோடிக்கும் சம்பந்தம் இல்லை).

– பன்னாலால் கோஷ் புல்லாங்குழலில் ராக் தோடி ;

– டி.என். சேஷகோபாலன் குரலில் சுபபந்துவராளி ராகம் :

வண்ணக்கழுத்து 10ஆ: தொடரும் போர்ப்பயிற்சி

இப்போது திடீரென்று பல வீடுகளின் மாடியிலிருந்துவண்ணக்கழுத்து! வண்ணக்கழுத்து! வண்ணக்கழுத்து!’ என்ற கூச்சல் எழுந்தது. புறா விரும்பிகள் பலர் அவனுடைய பெயரைக் கூவிக் கொண்டிருந்தார்கள். இப்போது என்னால் கொஞ்சம் கூடப் பிழையில்லாமல் காண முடிந்தது. தலைவர்களுள் தலைவனாய் என்னுடைய புறா ஒரு பெரிய கூட்டத்தின் முன்னின்று, அவர்களுடைய பயணத்தை வழிநடத்தியது. எத்தனை பெருமிதமான தருணம் அது! அவன் அவர்களை இந்த அடிவானத்திலிருந்து அந்த அடிவானம் நோக்கி வழிநடத்தினான். ஒவ்வொரு முறையும் புறாக்கள் சீரான இடைவெளையில் சில அடிகள் மேலே உயர்ந்தன. காலை எட்டு மணியளவில் வானத்தின் எந்த மூலையிலும் ஒரு புறாவைக்கூட காணமுடியவில்லை. இப்போது எங்கள் கொடிகளை சுருட்டிவைத்துவிட்டு, பாடங்களைப் படிக்க கீழே சென்றுவிட்டோம். மதியம் நாங்கள் மீண்டும் மாடிக்குச் சென்றபோது, புறாக்கூட்டம் மொத்தமாக இறங்குவதை அனைவராலும் பார்க்க முடிந்தது. வண்ணக்கழுத்துதான் இன்னமும் வழிநடத்திக் கொண்டிருந்தான். மறுபடியும்வண்ணக்கழுத்து! வண்ணக்கழுத்து! வண்ணக்கழுத்து!” என்ற சத்தம் உயர்ந்தது. புறாக்களுக்கு தலைவனாக நான்கு மணிநேரத்திற்கு மேல் நிலைத்திருந்ததால், அவன் பரிசை வென்றான். மேலே சென்றது போலவே கீழே இறங்கிக் கொண்டிருந்தான் அவன்- இப்போது தலைவன்!

பறப்பதன் அபாயகரமாக நிகழ்வு இப்போது வந்தது. அந்தப் பெரிய  கூட்டத்தின் தளபதி கலைந்துச் செல்ல ஆணையிட்டான். பெரிய கூட்டத்திலிருந்து ஒவ்வொரு கூட்டமாகப்  பிரிந்து, தங்கள் வீடு நோக்கிச் சென்றன. ஆனால், மிக வேகமாகச் செல்லவில்லை. அவர்கள் வீடு நோக்கிச் செல்லும்போது, அவர்களுக்கு மேலே வானத்தில் யாராவது காவல் காக்க வேண்டும். மற்ற போட்டியாளர்களின் புறாக்கள் கீழிறங்க, அவர்களைப் பின்னிருந்து காவல்காக்க, வண்ணக்கழுத்து என்னுடைய சிறிய புறாக்கூட்டத்தை ஒரு குடையாய் வியூகம் அமைத்து நிறுத்தினான். இதுதான் தலைமைக்குக் கொடுக்கும் விலை. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் தியாகம்.

ஆனால், இப்போது கோரமான முடிவொன்று துவங்கியது. இந்தியாவில் குளிர்காலங்களில், பெரும்பருந்து இனத்தில் ஒன்றான ராஜாளி தெற்குப் பக்கம் வரும். அவை இறந்த மிருகங்களின் இறைச்சியை உண்ணாது. கழுகையும் பருந்தையும் போல, ராஜாளியும் தான் தன் நகங்களால் கொன்றதை மட்டுமே உண்ணும். அவை மோசமானவை, கபடம் நிறைந்தவை. கழுகுகளில் கொஞ்சம் தாழ்வானவை என்று நினைக்கிறேன். அவற்றின் இறக்கைகள் ஓரத்தில் கிழிந்திருக்காது என்றாலும், அவை பருந்தைப் போல இருக்கும். ஜோடியாக பருந்துக் கூட்டத்திற்கு கொஞ்சம் மேலே பறக்கும். இதனால், இவற்றின் இரையின் பார்வையிலிருந்து தப்பித்துவிடும். ராஜாளிகள் தங்கள் இரையைப் பார்க்க முடியும். ஆனால், இரைகளால் அவற்றை பார்க்க முடியாது.

வண்ணக்கழுத்து தலைமைக்கான போட்டியில் வென்ற சற்று நேரத்தில், பருந்துக் கூட்டத்திற்கு மேலே ஒரு ராஜாளி ஜோடி பறந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். அந்த நொடியிலேயே, விரல்களை என் வாயில் வைத்து கிறீச்சென்று சீட்டியடித்தேன். வண்ணக்கழுத்து என்னுடைய சமிக்ஞையைப் புரிந்து கொண்டான். தான் மையத்தில் நின்று கொண்டு, மற்றவர்களின் இடத்தை மாற்றியமைத்தான். இப்போது அந்தக் கூட்டம் ஒரு பிறையைப் போன்ற வடிவத்தில் பறந்து கொண்டிருந்தது. ஜகோரேவையும் ஹிராவையும் பிறையின் இரண்டு முனைகளை பார்த்துக் கொள்ளப் பணித்தான். மொத்த கூட்டமும் ஒரு பெரிய பறவையைப் போல ஒன்றாகப் பறந்தன. வேக வேகமாக கீழே இறங்கத் துவங்கின. அவை எதற்காக வானத்தில் ஏறினவோ அந்த வேலை இப்போது  முடிந்திருந்தது. அவர்களோடு காலையில் விளையாடிக் கொண்டிருந்த புறாக்கூட்டங்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றுவிட்டன.

இவை வேகமாக இறங்குவதைக் கண்டு ஒரு ராஜாளி, இமாலய விளிம்பிலிருந்து விழும் பாறை போல அவர்கள் முன்னால் விழுந்ததுஎன் பறவைகள் இருக்கும் நிலைக்கு வந்தவுடன் தன்னுடைய இறக்கையை விரித்து அவர்களை நேருக்கு நேர் எதிர் கொண்டது. இதுவொன்றும் புதிதல்ல. ஒவ்வொரு ராஜாளியும் புறாக் கூட்டத்தைப் பயமுறுத்த இதையே செய்து வந்திருக்கிறது. அதில் பதினொன்றுக்கு பத்து முறை வெற்றியும் பெற்றுவிடும் என்பதை மறுக்க முடியாது. அவை புறாக்களின் முன்னால் வரும் போது, புறாக்கள் தங்கள் உறுதி இழந்து, பீதியில் ஓர் ஒழுங்கில்லாமல் எல்லாத் திசைகளிலும் பறக்கும். இப்போதும், அந்த ராஜாளி அதைத்தான் எதிர்பார்த்தது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், தந்திரமான நம் வண்ணக்கழுத்து, கொஞ்சம் கூட அசராமல், இறகுகளை அடித்துக் கொண்டு, மொத்த கூட்டத்தையும் எதிரிக்கு ஐந்தடிக்குக் கீழே பறக்கச் செய்தது. எதிரி ஒருபோதும் ஒற்றுமையாக இருக்கும் கூட்டத்தை தாக்காது என்பதை அறிந்தே அவன் இப்படிச் செய்தான். ஆனால் அவன் சில நூறு அடிகள் பறந்திருக்க, இரண்டாவது ராஜாளி, பெண் ராஜாளியாக இருக்கலாம், புறாக்களின் முன்னால் விழுந்து தன் கணவனைப் போலவே இறக்கையை விரித்தது. ஆனால், வண்ணக்கழுத்து கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவில்லை. மொத்த கூட்டத்தையும் அந்த ராஜாளியை நோக்கி நேராகச் செலுத்தியது. இதை நினைத்துப்  பார்க்கவும் முடியாது. எந்தப் புறாவும் இதுவரை இது போலச் செய்யத் துணிந்ததில்லை. பெண் ராஜாளி, பறந்து ஓடிவிட்டது. அது கொஞ்சம் திரும்பியிருக்கும், உடனே வண்ணக்கழுத்தும் மற்ற புறாக்களும் தங்களால் முடிந்த அளவுக்கு வேகமாக கீழே இறங்கின. எங்கள் கூரைக்கு மேலே அறநூறு அடிக்குக்குப் பக்கத்தில் அவை வந்துவிட்டன. ஆனால் விதி. ராஜாளி வடிவில் ஒரு ஒரு வெடிகுண்டைப் போல மீண்டும் விழுந்தது. இந்த முறை பிறை வடிவத்திற்கு நடுமத்தியில் விழுந்து, தன் இறக்கைகளையும் அலகையும் தீப்பொறிகள் போல விரித்தது. கூடவே அலறலும் கிறீச்சிடுதலும். இது தாக்கத்தை ஏற்படுத்தியது. உறுதியான ஒரே கூட்டமாக இருந்த புறாக்கள் இப்போது இரண்டு பாகமாகப் பிரிந்துவிட்டன. ஒரு பாதி வண்ணக்கழுத்தைப் பின் தொடர்ந்ததுஇன்னொரு பாதி பயத்தால் பீடிக்கப்பட்டு எங்கெங்கோ பறந்தது. ஒரு நல்ல தலைவன் ஆபத்துக் காலத்தில் என்ன செய்வானோ, அதை வண்ணக்கழுத்து செய்தான். பயத்தால் சிதறிய கூட்டத்தைப் பின் தொடர்ந்து, அதை முந்திச் சென்று, மீண்டும் இரண்டு பாதியையும் ஒரு பெரிய கூட்டமாக இணைத்துக்கொண்டான்.

இப்போது பெண் ராஜாளியின் முறை. இரண்டு பாதியும் இணைந்த சற்று நேரத்திற்கெல்லாம் பெண் ராஜாளி வண்ணக்கழுத்திற்கும் மற்ற புறாக்களுக்கும் நடுவே விழுந்தது. கிட்டத்தட்ட அவன் வால் மேலேயே விழுந்து, அவனையும் மற்ற புறாக்களையும் பிரித்துவிட்டது. தங்களுடைய வழிகாட்டியை இழந்த புறாக்கள், எதையும் கணக்கில் கொள்ளாமல் பாதுகாப்பைத் தேடிப் பறந்தன. எந்தப் பக்கத்திலிருந்தும் தாக்கக் கூடிய வகையில் வண்ணக்கழுத்து தனித்துவிடப்பட்டான். இப்போதும் அசராமல், கீழே இறங்கிக் கொண்டிருக்கும் தன்னுடைய கூட்டத்தை நோக்கிச் செல்ல முயன்றான். ஒரு டஜன் அடிகள் கீழே இறங்கியிருப்பான், ராஜாளி அவன் முன்னால் பறந்து வந்தது. இப்போது எதிரி கிட்டத்தில் வர, அவனுடைய தைரியம் அதிகமானது. ஒரு கரணம் போட்டான். அவனது அதிர்ஷ்டம், நல்ல காரியம் செய்தான். இல்லையென்றால், அவனுக்குப் பின்னால் நகங்களை நீட்டிக் கொண்டு வந்த பெண் ராஜாளி அவனை அங்கேயே அப்பொழுதே பிடித்திருக்கும்.

இது நடந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் என்னுடைய மற்ற புறாக்கள் வேகமாக பறந்து கிட்டத்தட்ட என் வீட்டை அடைந்துவிட்டன. கனிந்த பழங்கள் மரத்திலிருந்து விழுவதைப் போல வேக வேகமாக அவை கூரையில் விழுந்தன. ஆனால், அவற்றில் ஒன்று மட்டும் கோழையல்ல. மாறாக முழுக்க முழுக்க வீரத்தின் உருவம் அது. அவன்தான் கருமுத்து ஜகோரே. மொத்தக் கூட்டமும் எங்கள் கூரையில் இறங்கிவிட, ஜகோரே மட்டும் கரணம் போட்டு உயரே பறந்தான். அவனுடைய நோக்கம் என்னவென்பது தெளிவாகத் தெரிந்தது.. அவன் வண்ணக்கழுத்துக்கு துணையாக இருக்கப் பறக்கிறான். அவன் மீண்டும் கரணம் போட, ராஜாளி தன்னுடைய எண்ணத்தை மாற்றிக் கொண்டுவிட்டது. வண்ணக்கழுத்தைத் துரத்துவதை விட்டுவிட்டு, ஜகோரேவை நோக்கிப் பறந்தது. உங்களுக்குத் தான் வண்ணக்கழுத்தைப் பற்றித் தெரியுமே, அவன் ஜகோரேவைக் காப்பாற்ற கீழே இறங்கினான். மின்னலைப் போலே வேகமாக வட்டமடித்துக் கொண்டும் வளைந்து கொண்டும் இறங்கினான். அவன் பின்னால் வந்த பெண் ராஜாளிக்கு மூச்சுவாங்கியது. வண்ணக்கழுத்து போட்ட அத்தனை வளைவுகளையும் அதனால் போட முடியவில்லை. எண்ணிக்கையில் கிட்டக்கூட வரமுடியவில்லை. ஆனால் அனுபவசாலியான ஆண் ராஜாளி குறிவைப்பதற்காக மேலே மேலே ஏறியது. இதனால் ஜகோரேவுக்கு ஆபத்து வந்தது. ஒரே ஒரு தவறான முடிவு போதும், ராஜாளி, ஜகோரேவைப் பிடிக்க. பாவம் இந்தப் பறவைகள்; எதைச் செய்திருக்கக் கூடாதோ, ஜகோரே அதைச் செய்தான். ஆண் ராஜாளிக்கு கீழே, நேர்க் கோட்டில் பறந்தான். ராஜாளியோ தன் இறக்கையை முடுக்கிக் கொண்டு, மெளனத்தின் இடியைப் போல விழுந்தது. எந்தச் சத்தமும் கேட்கவில்லை. ’சத்தத்தின் நிழல்கூடக் கேட்கவில்லை. கீழே, கீழே, கீழே மரணத்தின் உருவமாக அது விழுந்தது. அப்போதுதான் மிகக் கொடுமையான அந்த விஷயம் நடந்தது. எப்படி என்றே தெரியவில்லை, ஆனால் ஜகோராவைக் காப்பாற்றவும் எதிரியை சலிப்படையச் செய்யவும் வண்ணக்கழுத்து, ஜகோரேவுக்கும் ராஜாளிக்கும் நடுவே நுழைந்தான். தாக்குதலை நிறுத்துவதற்கு பதில், ராஜாளி தன் நகங்களை முடுக்கிக் கொண்டு, நடுவே நுழைந்தவனைப் பிடித்துவிட்டது. இறுக்கிப் பிடிக்கவில்லை தான், ஆனால் காற்றெங்கும் இறகுகள் பொழிந்தன.

எதிரியின் பிடியின் வண்ணக்கழுத்தின் உடல் துடிப்பதைப் பார்க்க முடிந்தது. பழுக்கக் காய்ச்சிய ஒரு இரும்புக் கம்பி என்னில் நுழைந்தது போல் நான் என் பறவைக்காக வலியால் துடித்து  அலறினேன். ஆனால் எதுவும் பயனளிக்கவில்லை. வட்ட வட்டமாக, உயரே உயரே அந்த ராஜாளி வண்ணக்கழுத்தை தூக்கிச் சென்றது. கூடவே, தன் நகங்களால் இன்னும் இறுகப் பிடிக்க முயன்றது. இங்கே நான் வெட்கப்பட வேண்டிய ஒன்றைச் சொல்லியாக வேண்டும். வண்ணக்கழுத்தைக் காக்க மிகத் தீவிரமாக இருந்த நான், பெண் ராஜாளி விழுந்து ஜகோரேவைப் பிடித்துவிட்டதைக் கவனிக்கவில்லை. வண்ணக்கழுத்து பிடிபட்ட உடனேயே இது ரொம்ப வேகமாக நடந்திருக்க வேண்டும். இப்போது காற்று முழுக்க ஜகோரேவின் இறகுகள். எதிரி அவனை மிக இறுக்கமாக பிடித்துக் கொண்டிருந்த்து. அவனும் தன்னை விடுவித்துக் கொள்ள அசையக் கூட இல்லை. ஆனால், வண்ணக்கழுத்து அப்படியில்லை. அவன் ஆண் ராஜாளியின் பிடியில் இன்னமும் துடித்துக் கொண்டிருந்தான். தன் துணை இரையை மேலும் இறுக்கமாக பிடிக்க உதவி செய்யப் போவதைப் போல, பெண் ராஜாளி தன் துணைக்கு வெகு அருகில் பறந்தது. அப்போது பார்த்து ஜகோரேவும் விடுபடப் போராடினான். அது பெண் ராஜாளியை ஆடச் செய்ததால், அதன் இறகு துணையின் இறகு மீது மோதியது. ஆண் ராஜாளி தன் சமநிலையை இழந்தது. அது காற்றில் கிட்டத்தட்டக் கவிழ்ந்துவிட, மீண்டும் ஒரு இறகு மழையோடு வண்ணக்கழுத்து அதன் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டான். அவன் கீழே விழுந்தான். அடுத்த முப்பது நொடிகளில் மூச்சிறைத்துக் கொண்டு ரத்தம் வடிய ஒரு பறவை எங்கள் கூரையில் கிடந்தது.

அவனுடைய காயத்தின் தீவிரத்தை அறிய அவனைத் தூக்கினேன். அவனுடைய இரண்டு பக்கங்களும் கிழிந்திருந்தது. ஆனால், அத்தனை மோசமாக இல்லை. உடனடியாக அவனை புறா மருத்துவரிடம் கொண்டு போனேன். அவர் அவனுடைய காயங்களுக்கு கட்டு போட்டார். இதற்கு ஒரு அரைமணி நேரம் ஆனது. நான் வீடு திரும்பி, வண்ணக்கழுத்தை அவன் கூண்டில் விட்டுவிட்டுப் பார்த்தால், ஜகோரேவை எங்கும் காணோம். அவனுடைய கூண்டும் காலியாக இருந்து. நான் கூரைக்குப் போன போது, ஜகோரேவின் துணைப் பெடை விளிம்பில் உட்கார்ந்து கொண்டு, அவனைத் தேடி ஒவ்வொரு திசையையும் அளந்து கொண்டிருந்தது. அன்று மட்டுமல்ல,. அடுத்த இரண்டு மூன்று நாட்களும் அப்படியே தன் துணையத் தேடிக் கொண்டிருந்தது. தன் துணை ஒரு தைரியமான வீரனுக்காக தன்னையே தியாகம் செய்திருக்கிறது என்பதை அறிந்து அது ஆறுதல் அடைந்ததா என்ன என்று எனக்குத் தெரியவில்லை.

(தொடரும்…)

நாஞ்சிலும் நானும்

 சுல்தான்

nanjil_nadan_spl_issueசுபாவமா நான் ஒரு தீவிர வாசிப்பாளன், எழுதப்படிக்க தெரிந்த நாளிலிருந்து கன்னித்தீவு சிந்துபாத் முதல் தொடங்கியது, இன்றைய ஜெயமோகன் வரை கிடைப்பதையெல்லாம் படிப்பேன். நாஞ்சிலின் கதைகளை படிக்கும் போது அவரின் நாஞ்சில் நாட்டு கதைகள் பெரும்பாலும் எங்க ஊர் பேச்சுத்தமிழை ஒத்திருப்பதாலும், அவரது நாஞ்சில் நாட்டு மொழியில் உள்ள சொல்வழக்குகள், விவசாய அனுபவங்கள், அனைத்தும் ஏதோ ஒரு அன்னியோன்யத்தை எனக்கு உண்டாக்கியது.

அடுத்து நானும் பம்பாயில் லேபராக வேலை செய்திருக்கிறேன். அவரது பம்பாயை தளமாக கொண்ட நாவல்களில், கதைகளில் வரும் பம்பாயின் சந்துகளிலிலும். பொந்துகளிலும் நானும் நிஜமாகவே நடந்திருக்கிறேன், எஸ் கே முத்துவாகவும் சண்முகமாகவும் நிஜமாகவே வாழ்ந்திருக்கிறேன். இதுவும் நாஞ்சில்நாடனின் எழுத்துக்கள்மீது எனக்கு மிகுந்த அன்னியோனியத்தை உண்டாக்கியது..

இதனால் நாஞ்சில் நாடனின் எழுத்துக்களை இணையத்தில் தேடி தேடி வாசிக்க தொடங்கினேன். இணையத்தில் வாசிப்பது என்றால் எனக்கு ஒரு பழக்கம் இருக்கிறது.. அன்றன்று கிடைக்கும் கதைகள் , கட்டுரை முதலியவைகளை கணிணியிலேயே நேரடியாக படிக்காமல் , அவற்றை வேர்ட் பைலில் தொகுத்து ,ஒரு 30, 40 பக்கமாக சேர்த்து பிரிண்ட் எடுத்து தினமும் படிப்பது என் வழக்கம். அப்படி தொகுக்கும்போது நாஞ்சிலின் கதைகளை தனி பைலாக தொகுக்க ஆரம்பித்தேன்.

சில வருடங்களுக்கு முன் பிளாக் எழுதுவது பிரபலமாக தொடங்கியது. அந்த நேரத்தில் நானும் பிளாக் தொடங்க ஆசைப்பட்டேன். ஆனால் எழுத என்னிடம் சரக்கு இல்லையே?

அந்த நேரம் இணையத்தில் கிடைக்கும் நாஞ்சில்நாடனின் எழுத்துக்களையும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களையும் ஒரே இடத்தில் கிடைக்குமாறு தொகுத்தால் என்ன எனும் எண்ணம் தோன்றியது.. நாஞ்சில்நாடன் பிளாக்கை தொடங்கினேன்.

அந்த நேரம் நாஞ்சிநாடனை எனக்கு நேரடியாக பழக்கம் கிடையாது. ஏதோ என்போக்கில் நான் தொகுத்துக் கொண்டு இருந்தேன்.. இந்த பிளாக்கை தொடங்கிய சில மாதங்களில் நாஞ்சிநாடனுக்கு சாஹித்ய அகாதமி விருது கிடைத்தது. நாஞ்சிலின் எழுத்துக்களை படிக்க விரும்பிய வாசகர்களுக்கு என் தளம் ஒரு சிறந்த வாசலாக தொடங்கியது..

நாஞ்சிலுக்கு சாஹிய அகாதமி விருது கிடைத்ததை பாராட்டி ஜெயமோகனின் விஸ்ணுபுரம் வாசகர் குழு சென்னையில் பாராட்டுவிழா நட்த்தினார்கள். எனக்கும் அழைப்பு வந்தது. விழாவுக்கு முன்தினமே சென்று அவர்களுடன் தன்கினேன். அன்றுதான் நான் முதன்முதலாக நாஞ்சில்நாடனை சந்தித்தது..

”ஓஓ.. நீங்கதானா எஸ் ஐ சுல்தான் என்பவங்களா? வணக்கம்!”

””ஓஒ.. நீங்கதான் நாஞ்சில் நாடன் என்பவங்களா?? வணக்கம்!!” என எங்கள் நட்பு தொடங்கியது..

நாஞ்சிநாடனின் வாசகனாக இருந்த நான் அன்றுமுதல் நாஞ்சில்நாடனின் நட்பு வட்டத்தில் இணைந்தேன்.

ஒரு மூத்த அண்ணன்போல பாசாங்கில்லாத அவரது பழக்கவழக்கங்கள், நட்பை பாசமாக வளரச் செய்தது.

எனக்கு வேறு பொழுது போக்கில்லை. நண்பர்கள் கிடையாது. சாஹித்ய அகாதமி விருதுக்கு பின் நாஞ்சிநாடனை குறித்த செய்திகள் தினமும் வரத் தொடங்கின.. நானும் தளவேலைகளில் பிசியானேன்..

ஒரு கால கட்டத்துக்கு பிறகு அவரது நாவல்கள், கதைகளை நானே ஸ்கேன் எடுத்து  பிளாக்கில் பதிக்க தொடங்கினேன். நல்ல வரவேற்ப்பிருந்தது.  இருக்கிறது.

இன்று நாஞ்சில்நாடனின் எழுத்துக்களில், அவர் குறித்த செய்திகளில் 90 சதவீதத்துக்கும் மேலானவை இந்த நாஞ்சிநாடன் தளத்தில் தொகுக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடப்பட வேண்டிய விசயம். பூவோடு சேர்ந்த நாரும் மணக்கிறது என்பது எனக்கும் பெருமையான விசயம்..

அவ்வளவுதாங்க மேட்டர்!!