எழுத்து

வண்ணக்கழுத்து பகுதி 10அ: தொடரும் போர்ப் பயிற்சி

மாயக்கூத்தன்

நாள் மாறி நாள் வர புதிதாய்ச் சேர்ந்த புறாக்கள் மெதுவாக வீட்டிலிருந்து கொஞ்சம் தொலைவாக பறக்கக் கற்றுக் கொண்டன. ஒரு மாதம் முடியும் போது அவை வீட்டிலிருந்து ஐம்பது மைல்களுக்கும் மேல் தொலைவில் கொண்டு செல்லப்பட்டு, விடுவிக்கப்பட்டன. தங்களுடையை முந்தைய முதலாளியிடமே திரும்பப் பறந்து போய்விட்ட இரண்டைத் தவிர மீதி அனைத்தும் வண்ணக்கழுத்தின் தலைமையில் என்னிடம் திரும்பிவிட்டன.

யாரும் மறுக்க முடியாத தலைமை என்பது அத்தனை எளிதாக தீர்மானித்துவிடக் கூடியதல்ல. உண்மையில், வண்ணக்கழுத்துக்கும் இரண்டு புதிய பெடைகளான ஹிரா மற்றும் ஜகோரேவுக்கும் இடையே தீவிரமான யுத்தம் நடந்தே இதைத் தீர்மானிக்க வேண்டியிருந்தது. இதில் ஜகோரே சுத்தமான கருப்பு டம்ப்ளர். அதன் சிறகுகள் கருஞ்சிறுத்தையின் தோலைப் போல் மின்னும். ஜகோரே மென்மையானது, கடுமையானது அல்ல. ஆனாலும், வண்ணக்கழுத்தை மொத்த கூட்டத்தின் தலைவனென்று ஏற்றுக்கொண்டு பணிய மறுத்தது. தூதுப் புறாக்கள் எத்தனை சண்டைக்காரர்கள் என்றும் எவ்வளவு பெரிதாகத் தங்களை காட்டிக் கொள்பவை என்றும் உங்களுக்குத் தெரியும். எங்களுடைய கூரைக்கு மேல் அத்தனை ஆண் தூதுப் புறாக்களும், கண்ணுக்கெட்டிய தூரம் வரை உள்ள அனைத்தும் தங்கள் ஆளுகைக்குட்பட்டது என்று நினைத்துக் கொண்டு கம்பீர நடை போட்டுக் கொண்டு கத்திக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கும். வண்ணக்கழுத்து தன்னை மாவீரன் நெப்போலியன் என்று நினைத்துக் கொண்டிருந்தது என்றால், சூரியனின் மையப்பகுதியைப் போன்ற வெண்மையான ஹிரா, தன்னை மாவீரன் அலெக்ஸாண்டர் என்று நினைத்துக் கொண்டிருந்தது. தூதுப் புறா இல்லை என்றாலும் கருப்பு வைரமான ஜகோரே தன்னை ஜூலியஸ் சீசரும் மார்ஷல் ஃபோவும் உருக்கிச் செய்யப்பட்டதாக அறியவைத்துக் கொண்டிருந்தது. இந்த மூன்றைத் தவிர வேறு சில கர்வம் பிடித்த ஆண் புறாக்களும் இருந்தன. ஆனால், அவை இந்த மூன்று புறாக்களில் ஏதோ ஒன்றால் தோற்கடிக்கப்பட்டிருந்தது. இப்போது ஒட்டுமொத்த கூட்டத்திற்கும் யார் தலைவன் என்ற கேள்விக்கு சண்டை தேவை.

ஒருநாள் ஹிரா தன் சிறகுகளைக் கோதிக் கொண்டே, திருமதி ஜகோரே முன்னிலையில் ஏதோ உளறிக் கொண்டிருந்தது. திருமதி ஜகோரே, சுத்தக் கருப்பு. ரத்தக்கல் போல சிவப்பான கண்கள். இது கொஞ்ச நேரம் கூட தொடர்ந்திருக்காது, எங்கிருந்தோ ஜகோரே பாய்ந்து வந்து ஹிராவின் மேல் விழுந்தது. ஹிராவும், பயங்கர கோபத்தில் ஒரு பேயைப் போல சண்டையிட்டது. மூக்கும் மூக்கும், காலும் காலும், இறக்கையும் இறக்கையும் மோதிக் கொண்டன. இரண்டு ஆண்களும், ஒன்றை ஒன்று புடைத்துக் கொண்டிருக்கும் இடத்திலிருந்து மற்ற எல்லா புறாக்களும் பறந்து ஓடின. வண்ணக்கழுத்து அவர்களுக்கு மேலே, ஒரு டென்னிஸ் நடுவரைப் போல் சாந்தமாய் உட்கார்ந்திருந்தது. அரை டஜன் முறை மாறி மாறி தாக்கிக்கொண்டபின் , ஹிரா வென்றது. பெருமையின் எல்லைக்கே சென்ற அது, தன் நெஞ்சை விரித்துக் கொண்டு திருமதி ஜகோரேவிடம் போய் “மேடம், உன் வீட்டுக்காரன் ஒரு கோழை. நான் எவ்வளவு நன்றாய் இருக்கிறேன் பார். பக், பக்கூம், கும்கும்” என்று சொல்வது போல நின்றது. திருமதி ஜாகோரே, ஹிராவின் மீது ஒரு கேவலமான பார்வையை வீசிவிட்டு, தன் கணவனோடு இணைய இறக்கையை அடித்துக் கொண்டு தன் வீட்டிற்குச் சென்றுவிட்டது. ஹிரா, அசிங்கப்பட்டு வாடிப் போய்விட்டது. பிறகு திடீர்க் கொந்தளிப்பில், கடுங்கோபத்துடன் வண்ணக்கழுத்தின் மீது பாய்ந்தது. இதை எதிர்பார்க்காத வண்ணக்கழுத்து கடுமையான முதல் தாக்குதலில் கிட்டத்தட்ட தோற்றுவிட்டது. வண்ணக்கழுத்துக்கு மயக்கம் வரும் அளவிற்கு ஹிரா கொத்தவும் இறக்கைகளால் அடிக்கவும் செய்தது. அதனால் வண்ணக்கழுத்து தப்பி ஓடியது. கூடவே இந்தப் பைத்தியமும் துரத்திக்கொண்டு ஓடியது. பம்பரங்கள் போல இரண்டும் வட்டமிட்டு ஓடின. எது துரத்துகிறது எது துரத்தப்படுகிறது என்றே என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவை போன வேகத்தில் ஓட்டத்தை நிறுத்தி ஒன்றை ஒன்று கொத்தி அடித்துக் கொண்டிருந்ததை என்னால் பார்க்கக் கூட முடியவில்லை. இறக்கை இறக்கையை அடிக்கும் ஓசை அச்சுறுத்தும் இரைச்சலாக காற்றை நிறப்பியது. இப்போது எல்லாத் திசைகளிலும் சிறகுகள் பறக்கத் துவங்கின.

திடீரென்று, மூக்கோடு மூக்கு வைத்துக் கொண்டு, நகத்தோடு நகம் கோர்த்துக் கொண்டு இரண்டும் குஸ்தி போட்டுக் கொண்டு தரையில் உருண்டன. இரண்டும் கடுங்கோபத்தின் ஒற்றை உருவமாய் உருமாறின. அந்த வழியில் எந்த முடிவையும் அடைய முடியாது என்பதை உணர்ந்து வண்ணக்கழுத்து தன் எதிரியின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு காற்றில் உயரே பறந்தது. ஹிராவும், தன் இறக்கையை வேகமாக அடித்துக்கொண்டு அதைத் தொடர்ந்தது. தரைக்கு மூன்று அடிக்கு மேலே, வண்ணக்கழுத்து தன் நகங்களை கழுகின் நகங்களைப் போல ஹிராவின் மூச்சுக் குழாயைச் சுற்றிப் போட்டு, மேலும் மேலும் இறுக்கிப் பிடித்தது. அதே நேரத்தில், தொடர்ந்து பயங்கரமாக தன் இறக்கையைக் கொண்டு அடித்தது. முட்கதையை போன்ற அந்த இறக்கைகள், எதிரியின் உடம்பிலிருந்து பனியைப் போன்ற சிறகுகளைப் பொழியச் செய்தது. இப்போது, பொழியும் சிறகு மழையில் மறைந்து இரண்டும் தரையில் உருண்டு, பித்தேறிய பாம்புகள் போல தீவிரமாக ஒன்றை ஒன்று கொத்திக் கொண்டன. கடைசியில் ஹிரா விட்டுவிட்டது. கிழிந்த வெள்ளை மலர் போல வாடி தரையில் வீழ்ந்தது. அதன் ஒரு கால் வேறு பிசகிவிட்டது. வண்ணக்கழுத்திற்கோ, கழுத்திலும் தொண்டையிலும் சுத்தமாக சிறகுகள் எதுவுமே இல்லை. ஆனால், ஏதோ ஒரு வழியில் சண்டை முடிந்ததில் அவனுக்குச் சந்தோஷம். ஹிரா மட்டும் தன் பாதி சக்தியை ஜகோரேயுடனான சண்டையில் செலவிட்டிருக்காவிட்டால், தன்னால் ஜெயித்திருக்க முடியாது என்று வண்ணக்கழுத்துக்கு நன்றாகவே தெரியும். எப்படியிருந்தாலும், நல்ல வகையில் முடிவதெல்லாம் நன்மைக்கே. ஹிராவின் காலுக்கு நான் கட்டு போட்டுவிட்டு, மேலும் அவசியமானதைச் செய்தேன். அடுத்த முப்பது நிமிடங்களில், புறாக்கள் அனைத்தும் அந்நாளின் கடைசி உணவை உண்டு கொண்டிருந்தன. சமீபத்தில் என்ன நடந்தது என்பதை அவை முழுமையாக மறந்துவிட்டது போலிருந்தன. அவற்றின் ரத்தத்தில் எந்த வித பிணக்கோ காழ்ப்புணர்ச்சியோ இல்லை. அவையெல்லாம் நல்ல குடும்பத்திலிருந்து வந்தவை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவற்றில் சிறிய புறாக்களில் கூட நல்ல விதமான வளர்ப்பு இருந்தது. ஹிரா, தன்னுடைய தோல்வியை பண்பான மனிதனைப் போல் ஏற்றுக் கொண்டது என்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும்.

இப்போது ஜனவரி மாதம் பிறந்துவிட்டிருந்த்து. குளிர்ந்த வானிலையும், தெளிவான வானமும் இருக்க புறாக்களுக்கான பரிசுப் போட்டி துவங்கியது. ஒவ்வொரு மனிதனுடைய பறவைக் கூட்டமும் மூன்று வகைகளில் சோதிக்கப்பட்டன. அவை, குழு ஒற்றுமை, தொலைதூரம் பறத்தல் மற்றும் ஆபத்துக்கிடையில் பறத்தல். முதல் வகைமையில் நாங்கள் முதற்பரிசு வாங்கிவிட்டோம். அதன் பிறகு நடந்த ஒரு சோகமான சம்பவத்தால் அடுத்த இரண்டு போட்டிகளில் எங்களால் பங்கெடுக்க முடியவில்லை. அது என்ன என்பதை அதற்குரிய இடத்தில் நீங்கள் அறிவீர்கள்.

குழு ஒற்றுமைப் போட்டி இப்படித்தான் இருக்கும். வெவ்வேறு புறாக் கூட்டங்கள் அவரவர் வீடுகளிலிருந்து மேலெழும்பிப் பறக்கும். தங்கள் எஜமானர்களின் சீட்டிகள் மற்றும் அவர்களை உணர்த்தும் வேறு சப்தங்கள் கேட்காத தூரத்திற்குச் சென்றவுடன், தனித்தனியான குழுக்கள் ஒன்றிணையும். பிறகு அவை அனைத்தும் எதற்கு தகுதியுண்டு என்று நினைக்கின்றனவோ அந்த புறாவின் தலைமையில் பறக்க ஒப்புக்கொள்ளும். புறாக்களின் புத்தியும் உள்ளுணர்வும் மேலோங்கியிருக்கும் ஆகாயத்தில் இவையனைத்தும் நடக்கும். எந்தப் பறவை முன்னால் பறக்கிறதோ, எது வழிநடத்த அனுமதிக்கப்படுகிறதோ அது தனக்கு அளிக்கப்பட்ட கெளரவத்தின் இயல்பையும் காரணத்தையும் உணராமலேயே வழிநடத்தும்.

வெப்பம் நாற்பத்தைந்து ஃபேரன்ஹீட்டுக்கு இறங்கிவிட்டது. இந்தியாவின் எங்கள் பகுதியில் அதுவொரு நல்ல குளிர்ந்த காலை. உண்மையில், அது அந்த வருடத்திலேயே குளிர்ச்சியான நாள். மேலே வானம், வழக்கமாய் குளிர்காலத்தில் இருப்பதுபோல மேகங்களற்று, வடிவமில்லா நீலமாணிக்கக் கல் போல இருந்தது. வெளிர்சிவப்பு, நீலம், வெள்ளை, மஞ்சள் வண்ணங்களில் இருந்த நகர வீடுகள், விடியலின் பலவண்ணப் பள்ளத்திலிருந்து எழும் ராட்சதர் படை போல இருந்தன. தொலைவில், அடிவானம் பழுப்பு மற்றும் ஊதா நிறங்கள் கொண்டு எரிந்தது. தேன் நிறத்திலும் ஊதா நிறத்திலும் உடையணிந்த ஆண்களும் பெண்களும் தங்கள் காலைப் பிரார்த்தனைகளை முடித்துவிட்டு, வீட்டு மாடிகளில் கைகளை உயர்த்தி சூரிய நமஸ்காரம் செய்து கொண்டிருந்தார்கள். நகரத்தின் சப்தங்களும் வாசனைகளும் இரவின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டன. பருந்துகளும் காகங்களும் தங்கள் குரல்களால் காற்றை நிறப்பின. அந்தச் சத்தத்திலும் புல்லாங்குழல் வாசிப்பவர்களின் பாடலைக் கேட்க முடிந்தது. போட்டி தொடங்கியதற்காக சமிக்ஞை சீட்டி அடிக்கப்பட்ட அந்த நொடியில், ஒவ்வொரு புறா வளர்ப்பாளரும் தன் வீட்டின் கூரையிலிருந்து வெள்ளைக் கொடியை அசைத்தார்கள். உடனடியாக எங்கிருந்தோ எண்ணற்ற புறாக் கூட்டங்கள் வானத்தில் உயர்ந்தன. கூட்டம் கூட்டமாக, வண்ண வண்ணமாக, அவற்றின் படபடக்கும் இறக்கைகள் அவற்றை நகரத்திற்கு மேலே கொண்டு சென்றன. காகங்களும், சிவப்பும் பளுப்புமான பருந்துகளும், பத்தாயிரக் கணக்கான டம்பளர்களும் தூதுப் புறாக்களும் இடியைப் போல வான்புகும் முன்பே, ஓடி மறைந்துவிட்டன. சீக்கிரமே, காற்றாடி போன்ற வடிவத்தில் பறந்து கொண்டிருந்த ஒவ்வொரு கூட்டமும், பெரிய காற்றுச் சுழியில் சிக்கிக் கொண்ட பல மேகங்கள் போல வானத்தில் வட்டமடித்தன. ஒவ்வொரு நொடியும் அவை மேலே ஏறிக் கொண்டே இருந்தாலும், வெகு நேரம் ஒவ்வொரு புறா உரிமையாளரும் தன் கூட்டத்தை மற்றவருடையதில் இருந்து தனித்து அறிய முடிந்தது. கடைசியில் தனித்தனி கூட்டங்கள் ஒன்றாகக் கலந்து இறக்கைகளால் ஆன கெட்டியான சுவர் போலப் பறந்தபோதும், அவை பறந்த விதத்தைக் கொண்டே, என்னால் வண்ணக்கழுத்து, ஹிரா, ஜகோரே மற்றும் இன்னும் அரை டஜன் புறக்களை அடையாளம் காண முடிந்தது. ஒவ்வொரு பறவைக்கும் தனிப்பட்ட குணாதிசயங்கள் உண்டு, அவை பறக்கும்போது அதைக் காண முடிந்தது. ஒவ்வொரு உரிமையாளரும் ஒரு குறிப்பிட்ட புறாவின் கவனத்தைப் பெற, உரத்த சீட்டியை பிரத்யேக நிறுத்தங்களோடு அடிப்பார். சத்தம் கேட்கும் தூரத்தில் இருந்தால், அந்த பறவையின் கவனத்தை ஈர்க்கும்.

கடைசியில் மொத்த கூட்டமும் எந்தவொரு புறா விரும்பியும் முரசு கொட்டினால் கூடக் கேட்காத உயரத்தை அடைந்துவிட்டன. இப்போது அவை வட்டமிடுவதை நிறுத்திவிட்டு ஒருபக்கமாக நகரத் துவங்கின. தலைமைக்கான போட்டி தொடங்கிவிட்டது. அவை வானத்தின் ஒரு திசையிலிருந்து மற்றொன்று நோக்கி நகர, உரிமையாளர்கள் நாங்கள், புறாக்ககள் தங்களை வழிநடத்த அனுமதிக்கும் புறாவின் குணாதிசயங்களை கவனிக்க மேலே பார்த்துக் கொண்டிருந்தோம். ஒரு சமயம் என்னுடைய ஜகோரே வழிநடத்தும் போல் இருந்தது. ஆனால், அது கூட்டத்தின் முன்பகுதியை அடைந்த சில நேரங்களிலேயே, எல்லாப் புறாக்களும் வலப்பக்கம் திரும்பிவிட்டன. அது பின்தொடர்ந்து பறப்பவர்களிடையே குழப்பத்தைக் கொண்டுவந்தது. குதிரைப் பந்தயக் குதிரைகள் போல வகைவகையாய் பெயர் தெரியாத புறாக்களும் முன்னால் வந்தன. ஆனால், சிறிது நேரத்தில் அவை ஒவ்வொன்றும் மீதி கூட்டத்தால் பின்னுக்குத் தள்ளப்பட்டன. இப்படி அடிக்கடி நடக்க, போட்டியில் ஆர்வத்தை இழக்கத் துவங்கிவிட்டோம். ஏதோவொரு அறியப்படாத புறா, அதிகம் பலராலும் விரும்பப்பட்ட தலைமைக்கான பரிசை தட்டிச் செல்லும் என்று தோன்றியது.

(தொடரும்…)

கம்பன் காதலன்

செந்தில்நாதன்

nanjil_nadan_spl_issueநாஞ்சில் நாடன் சிறுகதைகள் தான் எனக்கு முதலில் பரிச்சயம். பின் அவரது நாவல்கள். கும்ப முனியின் கம்பன் ஈடுபாடு அவர் ‘கம்பனுக்குள் வந்த கதை’ கட்டுரைக்குப் பின் தான் தெரிய வந்தது.

பள்ளிப் பருவத்தில் கம்பன் கழகப் போட்டிகளில் கலந்து கொண்டு சில பரிசுகள் வென்றது தான் அதற்கு முன் கம்பனுடனான எனது உறவு. மனப்பாடம் செய்த பாடல்களும் மறந்து போயின. நாஞ்சிலின் கட்டுரை படித்தவுடன் கம்ப இராமாயணத்தைப் படிக்க வேண்டும் என்ற தூண்டுதல் எழுந்தது. ஆனால் எந்த உரை சிறந்தது, அதற்கு எங்கே போவத?. அதற்கும் நாஞ்சில் தான் வழிகாட்டினார். வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியரின் உரையை வைத்துத் தன் ஆசிரியர் பாடம் எடுத்த்தாக அந்தக் கட்டுரையில் எழுதியிருந்தார். அதை ஒட்டியே அந்த உரை கொண்டு நான் கம்பனைப் படிக்கத் தொடங்கினேன்.

அந்தக் கட்டுரையில் அவர் பம்பாயில் ரா.பத்மனாபன் அவர்களிடம் நான்காண்டுகள் கம்ப இராமாயணம் கற்றதைச் சுவை படச் சொல்லியிருப்பார். இருபது பேருடன் கோலாகலமாக ஆரம்பித்த கம்பராமாயாயண வகுப்பு, கடைசியில் நாஞ்சில் மட்டுமே என்று சுருங்கியது, ஆசிரியரின் வீட்டுக்கு வகுப்பு நகர்ந்தது என்று அந்தக் கட்டுரையே ஒரு நல்ல சிறுகதை போல இருக்கும். அக்காலத்தில் தீவிர நாத்திகரான நாஞ்சிலுக்கு இராமன் பட்டாபிஷேகப் படத்தின் முன்னால் அமர்ந்து ஆசிரியரிடம் பாடம் கேட்கத் தடையொன்றுமில்லை. “அவருக்கு தமிழ் மூலம் சமயம், எனக்குச் சமயம் மூலம் தமிழ், சில சமயம் இரண்டும் ஒன்று தான் எனத் தோன்றும்” என்கிறார் நாஞ்சில்.

காரைக்குடி கம்பன் கழக விழாவில் கம்பன் சொல் நயம் பற்றித் தான் ஆற்றிய உரையை விரிவு படுத்தி கம்பனின் அம்பறாத்தூணி என்ற நூலாக 2013ல் வெளியிட்டார் நாஞ்சில். அந்த நூல் அறிமுகமே இந்தக் கட்டுரை. இது விமர்சனமல்ல. நூல்நயம் பாராட்டுதல் என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.

தான் கம்பனுக்குள் வந்த கதையை முதல் அத்தியாயத்தில் சுவை படச் சொல்லுகிறார். மாசி-பங்குனி மாதங்களில் ஊருக்கு வரும் தோல்பாவைக் கூத்துக்காரர்கள் மூலமாக இராமாயணக்கதை அறிமுகமாயிற்று என்று ஆரம்பித்து, பள்ளிப் பருவத்தில் தி.க. கூட்டங்களில் இராமாயணத்தில் எதிர்ப்பக்கங்களையும் கேட்டறிந்த கதை கூறி, பம்பாயில் ரா.பத்மநாபன் அவர்கள் இல்லத்தில் இராமாயணம் முழுமையாகக் கற்றதுடன் நிறைவு செய்கிறார். இந்த நூலை ரா.ப. அவர்களுக்குக் காணிக்கையாக்கியிருக்கிறார் நாஞ்சில்.

பின்னர் நவீன இலக்கியத்துக்குள் வந்த போதும் நாஞ்சில் மரபு இலக்கியத் தொடர்பை விடாமல் காத்து வந்திருக்கிறார். ”என்னை மாற்றிய நூல்” என்ற தலைப்பில் 2009 ஆண்டு சென்னை சங்கமம் விழாவில் கம்ப ராமாயணத்தைப் பற்றி தி.க. தலைவர் வீரமணி முன் பேசிய போது தி.க.வினர் ஏற்படுத்திய அமளியையும் சொல்லுகிறார். அதன் பின்னர் ஜெயமோகன் இதிகாசங்கள் பற்றி ஊட்டி இலக்கிய முகாமில் பேச அழைத்ததிலிருந்து தான் கம்பனுக்குள் மீண்டும் வந்ததாகவும், அந்த அமர்வுக்குப் பிறகு சற்று முயன்றால் தமிழ்க் காப்பியத்தின் மேன்மையை இளைய வாசகர்கள், இளம் படைப்பாளிகள் நெஞ்சத்துள் கடத்திவிடலாம் என்ற நம்பிக்கை வந்ததாகவும் சொல்லுகிறார்.

அடுத்த அத்தியாயத்தில் ‘கம்பனின் அம்பறாத் தூணி” என்று நூலுக்குத் தலைப்பு வைத்ததற்குப் பெயர்க் காரணம் கூறுகிறார். வீரர்கள் தோளில் மாட்டியிருக்கும் அம்பு வைத்திருக்கும் தூணி. இதற்குக் கம்பன் பயன்படுத்திய சொற்கள் கணைப்புட்டில், வாளிபெய் புட்டில், ஆவம், தூணி, பகழி என்று எடுத்துக் காட்டும் நாஞ்சில் எக்காலத்திலும் அம்பு அற்றுப் போகாத தூணி, அம்பு + அறா + தூணி = அம்பறாத் தூணி என்று பெயர்க்காரணத்தை விளக்குகிறார். கம்பன் சொல் வீரன், அவன் தூணி சொற்கள் நிறைந்தது. வில்வீரனின் அம்பறாத்தூணி தோளில் கட்டப்படும் எனில் காப்பியக் கவிஞனின் சொல் அறாத்தூணி அவன் சிந்தையில் கட்டப்படும்’ என்பது நாஞ்சிலின் விளக்கம்.

வில் கிடந்தது மிதிலையின் நகரிலே
கல் கிடந்தது கானகம் தன்னிலே
நெல் கிடந்தது சடையனின் வீட்டிலே
சொல் கிடந்தது கம்பனின் நெஞ்சிலே
உயர்ந்தெழுந்தது இராமனின் கதை அரோ

(கம்பனின் அம்பறாத்தூணி புத்தகத்தில் நாஞ்சில் நாடன் கொடுத்துள்ள தனிப்பாடல்)

வில் கிடந்தது மிதிலையின் நகரிலே

(சீதையை மணப்பதற்காக இராமன் முறித்த சிவதனுசு மிதிலையில் இருந்தது)

கல் கிடந்தது கானகம் தன்னிலே

(இராமன் பாதம் பட்டு சாப விமோசனம் அடைவதற்காக அகலிகை கல்லாய் கானகத்தில் கிடந்தாள்)

நெல் கிடந்தது சடையனின் வீட்டிலே

(கம்பனின் புரவலரான வெண்ணெய்நல்லூர்ச் சடையப்பனின் வீட்டில் வேண்டிய அளவு நெல் (செல்வம்) இருந்தது)

சொல் கிடந்தது கம்பனின் நெஞ்சிலே

(இராம காதை எழுதும் அளவுக்குச் சொல் கிடந்தது கம்பனின் மனத்திலே)

சொல் என்றால் ஒரு சொல்லா, இரு சொல்லா? தமிழ் அகராதிக் கணக்கையும் தாண்டிய சொற்குவை. மூன்றாவது அத்தியாயம் நாழி முகவுமே நாநாழி. நாழி என்பது நெல் அளக்கும் அளவை. ’நாழி முகவாது நாநாழி என்பது தான் பழமொழி. எவ்வளவு அழுத்தி அளந்தாலும் நாழி, நான்கு நாழிகள் தானியத்தைத் தன்னுள் முகந்து கொள்ளாது’ என்று பழமொழியை விளக்குகிறார்.

தமிழ்க் காப்பியங்களின் அளவைக் கணக்குப் போட்டுப் பார்த்து கம்பராமாயணத்தில் சுமார் மூன்று லட்சம் சொற்கள் கம்பன் பயன் படுத்தியிருக்கிறான் என்கிறார் நாஞ்சில். (10368 பாடல்கள், ஒவ்வொன்றும் 4 அடிகள், அதிகமும் அறுசீர் விருத்தம் என்பதால் ஒவ்வொரு அடியிலும் 6 சீர்கள், சில ஓரசைச் சீர்கள், சில ஈரசைச் சீர்கள்). அவற்றில் திரும்பத் திரும்ப பயன்படுத்திய சொற்களைக் கழித்துப் பார்த்தால் ஒன்றரை லட்சம் சொற்கள் இருக்கலாம் என்பது நாஞ்சிலின் துணிபு.

ஒரு வீரனின் முன் கிடக்கும் பல ஆயுதங்களில் எதைப் பயன் படுத்துவான் வீரன்? பகைவனின் சேண்மை அல்லது அண்மை, தான் நிற்கும் இடம், ஆயுதம் பயன்படுத்தும் வெளி, தனதாற்றல், பகை ஆற்றல் என எத்தனை தீர்மான்ங்கள். வீரனுக்குரிய அத்தனை முன் தீர்மான்ங்களும் கவிஞனுக்கு உண்டு. அதில் மாட்சி தெரிக்கும் தெய்வமாக்கவி எனில்? கவிச்சக்கரவர்த்தி எனில்? அவன் சொல் தேர்வு எங்ஙனம் இருக்கும்?” என்று நம்மைக் கேள்வி கேட்டு அவன் சொல் தேர்வின் வீச்சைப் புரிய வைக்கிறார். தூணியின் கொள்ளளவையும் மீறி சொற்கள் கிடக்கும் தூணி அவனுடையது. எனவே கம்பனின் காப்பியத்தில் நாழியும் முகவும் நாநாழி என்கிறார்

தமிழில் வழக்கொழிந்து ஆனால் மலையாளத்தில் வாழும் கம்பன் சொற்களைப் பட்டியலிடுகிறது ’மலையாளத்தில் வாழும் கம்பன் சொற்கள்’ அத்தியாயம். ஒவ்வொரு சொல்லுக்கும் அது மலையாளத்தில் எப்படிப் பயன்படுத்தப் படுகிறது, பழந்தமிழ் இலக்கியங்களில் எங்கெல்லாம் வருகிறது, தமிழில் இன்று அதற்குப் பதிலாக எந்த சொல் இன்று புழக்கத்தில் உள்ளது என்று கூறுகிறார் நாஞ்சில். இந்தப் நூலில் அவர் எடுத்துக் காட்டும் அனைத்துச் சொற்களுக்கும் இது போல் ஒரு குறுங்கட்டுரை வரைந்திருக்கிறார். அங்கங்கே அவருக்கே உரிய அங்கதத்துடன் தன் ஆதங்கத்தையும் பதிவு செய்கிறார்.

உறக்கம் என்ற சொல்லைத் தமிழன் மறந்து தூங்கப் போய்விட்டான் என்று வருத்தப் படுகிறார். கிங்கரர்கள் கும்பகர்ணனை எழுப்பும் பாடலை

உறங்குகின்ற கும்ப கன்ன! உங்கள் மாய வாழ்வெலாம்
இறங்குகின்றது! இன்று காண் எழுந்திராய்! எழுந்திராய்!
கறங்குபோல வில் பிடித்த காலதூதர் கையிலே,
உறங்குவாய், உறங்குவாய் இனிக்கிடந்து உறங்குவாய்

உதாரணமாகத் தரும் நாஞ்சில் ‘இந்தப் பாட்டுக்கும் கூட உரை வேண்டுமெனில், புத்தகத்தை மூடி வைத்து நீங்கள் உறங்கப் போகலாம்’ என்று வாசகனையும் எச்சரிக்கிறார். இது போன்ற நாஞ்சிலின் முத்திரைகள் நூல் வாசிப்பின்பத்தைக் கூட்டுகின்றன. இந்த அத்தியாயத்தில் முடிவில் ’இப்படியே போய்க் கொண்டிருந்தால் மொத்தக் கம்பராமாயணமுமே மலையாள மூல மொழியில் எழுதப்பட்ட இதிகாசம் என்று இந்த நூலாசிரியன் நிறுவிவிட்டுப் போய்விடுவான்“ என்று அவர் கூறும் போது புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை.

சொல் காமுற்றற்று அத்தியாயத்தில் கம்பனில் தன்னை ஈர்த்த, தனக்கு நூதனம் என்று தோன்றிய சொற்களை விளக்குகிறார். தான் கம்பன் சொல் திறத்தை விரும்புவதையே (காமுறுவுதையே) சொல் காமுற்றற்று என்ற தலைப்பின் மூலம் நமக்கு உணர்த்துகிறார் நாஞ்சில்.

கல்லாதான் சொல் காமுறுதல் முலைஇரண்டும்
இல்லாதாள் பெண் காமுற்றற்று

கல்வி கற்காதவன் அவையில் சொல்ல விருப்பப் படுவது முலை இரண்டும் இல்லாதவள் பெண்மையை விரும்புவது போன்றது என்பது வள்ளுவன் வாக்கு. இது தனக்கும் தெரியும் என்று கூறும் நாஞ்சில் இந்த இடத்தில் தனது தோதுக்கு ஏற்றாற் போல பொருள் கொள்கிறார்.

இசை ரசிப்பவர் குறுந்தகடுகள் சேகரிப்பது போன்றும் ஓவிய ரசிகர்கள் ஓவியம் சேகரிப்பது போன்றும் ஒரு படைப்பிக்க்கியவாதிக்கு சொற் சேகரம். ஆனால் அவன் பணி சேகரித்து அழகு பார்த்துக் கொண்டிருப்பதில் முற்றுப் பெறுவதில்லை. அடுத்த கட்டமாக அவற்றைப் பயன்படுத்த முடிவது. பயன்படுத்தும் முனைப்பு இல்லாதவனுக்கு சொல் மோகமும் இருக்காது, சொல் யோகமும் இருக்காது’ என்று கூறும் நாஞ்சில் படைப்பாளிக்கு கம்பன் காப்பியம் என்பது சொற் சுரங்கம் என்கிறார்.

நாஞ்சிலின் வாசகர்களுக்கு அவர் படைப்புகளில் உணவுக்கு இருக்கும் முக்கியத்துவம் தெரியும். இந்த நூலிலும் அவர் காளான் நம் நாட்டுத் தாவரமா என்று பேராசிரியர் பா.நமசிவாயத்திடம் கேட்டுத் தெரிந்து கொண்டதைப் பகிர்கிறார். புறநானூற்றிலும், சிறுபாணாற்றுப் படையிலும், களவழி நாற்பது நூலிலும் குறிப்பிடப்பட்டிருக்கும் காளாம்பி என்பது காளான் என்று உரைக்கும் நாஞ்சில் கம்பனில் கிட்கிந்தா படலத்தில் ஆம்பியைக் கண்டடைகிறார். இன்றும் செட்டிநாட்டில் பூஞ்சை படிவதை ’ஆம்பிப் போவது’ என்று சொல்லுவதையும் சுட்டிக் காட்டுகிறார்.

குண்டிகை (கமண்டலம் அல்லது குடுக்கை) என்ற சொல்லையும் நிறைவாக விளக்கிச் சொல்லுகிறார் நாஞ்சில். இது திருமழிசை ஆழ்வார் ஏழாம் நூற்றாண்டில் பாடிய நான்முகன் திருவந்தாதியில் வருகிறது என்று உரைத்து அதற்கு ஒரு குதர்க்க அர்த்தத்தையும் உரைக்கிறார். அதை இங்கு எழுதினால் சண்டை வந்துவிடும். நூலை வாங்கிப் படித்து நாஞ்சிலிடம் சண்டை போடுங்கள்.

பல சொற்களை நயம் பாராட்டிய ’சொல் காமுற்றற்று’ அத்தியாயத்திற்கு அடுத்து இரு சொற்களைப் பாராட்டும் ‘ஊழியும் ஆழியும்’. ஊழ் என்பதைக் கம்பன் ஊழ்வினை, முறைமை, பகை, முடிவு, ஊழிக்காலம் என்று பல அர்த்தத்தில் பயன்படுத்தியுள்ளதைக் காட்டும் நாஞ்சில் ஊழி தொடர்பாகக் கம்பன் பயன்படுத்தியுள்ள 43 சொற்றொடர்களைப் பட்டியலிடுகிறார். ஊழ்வினைக்கு எடுத்துக் காட்டாகத் தசரதன் அரச பதவியைத் துறந்து இராமனை அரசாள வேண்டுவதாக அமைந்த பாடலைக் காட்டுகிறார்.

முன்னை ஊழ்வினைப் பயத்தினும், முற்றிய வேள்விப்
பின்னை எய்திய நலத்தினும், அரிதினும் பெற்றேன்;
இன்னம் யான் இந்த அரசியல் இடும்பையின் நின்றால்,
நின்னை ஈன்றுள பயத்தினின் நிரம்புவது யாதோ?

பாடலில் தசரதனின் மனத்தை விளக்கும் நாஞ்சில் ‘அரச பாரம் துறந்து, மகனிடம் பொறுப்பை ஒப்படைக்க நினைத்த ஒரு பேரரசனின் துறவு மனம் இது. தயவு செய்து சமகால அரசியலோடு ஒப்பு நோக்காதீர்கள். இங்கு எவரும் தசரதனும் இல்லை, இராமனும் இலக்குவனும் பரதனும் சத்ருக்கனும் இல்லை’ என்று முடிக்கிறார். இது தான் நாஞ்சில்.

தமிழ் லெக்சிகன் ஆழி என்னும் சொல்லுக்கு 11 பொருள் தருகிறது. கம்பனோ 12 பொருள்களில் ஆழி பயன்படுத்துகிறான் என்று கூறும் நாஞ்சில் அவற்றில் சில பாடல்களை மேற்கோள்களோடு விளக்குகிறார். வாலி இறக்கும் முன் இராமனிடம் வரம் இரந்து நிற்கும் பாடல்

அனுமன் என்பவனை – ஆழி ஐய! – நின் செய்ய செங்கைத்
தனு என நினைமதி

கூறி இந்த வரிகளைத் தான் சிகரமாக நினைப்பதாக்க் கூறுகிறார் நாஞ்சில். சாவதற்குச் சில கணங்கள் முன்பு, தன்னைக் கொன்றவனிடம், தன்னைக் கொல்ல அனுப்பியவர்களை நன்றாகப் பார்த்துக் கொள்ளுமாறு கூறுவது காப்பியத்தின் உச்சகணங்களில் ஒன்று.

அடுத்த அத்தியாயம் அம்பு என்னும் சொல்லுக்குக் கம்பன் உபயோகப்படுத்தும் சொற்கள். அம்பு, சோணை, கோல், கணை, சரம், வாளி, பகழி, என்று பட்டியலிட்டு ஒவ்வொன்றிற்கும் மேற்கோள் காட்டுகிறார்.

அடுத்து வழக்கொழிந்து போன உறவுச்சொற்கள். உம்பி (உன் தம்பி) நுந்தை (உன் தந்தை), உங்கை (உன் தங்கை), தவ்வை (தமக்கை, மூத்தவள்) போன்ற சில சொற்களை விளக்குகிறார். இவற்றில் தவ்வைக்கு எடுத்துக்காட்டியுள்ள பாடல் மிகச் சிறப்பான ஒன்று. பரதனுக்கு முடிசூட்ட வேண்டுமென்று கேட்பதற்காக கைகேயி வீழ்ந்து கிடக்கும் காட்சி. இதற்குக் கம்பன் உதாரணம் “தாமரையில் வீற்றிருக்கும் தாயாகிய திருமகள், எப்படியும் அயோத்தியை விட்டு நீங்கப் போகிறாள் என்று கருதி அயோத்தி வந்தடைந்த திருமகளின் தமக்கையாகிய மூதேவி போல கைகேயி கிடந்தாள்’.

’கவ்வை கூர்தரச் சனகிஆம் கடிகமழ் கமலத்து
அவ்வை நீங்கும்’ என்று அயோத்திவந்து அடைந்த அம் மடந்தை
தவ்வை ஆம் என கிடந்தனள் கேகயன் தனையை

இதற்கு நாட்டார் வழக்கிலிருக்கும் எளிய சொலவடையைக் காட்டுகிறார் நாஞ்சில் ‘சீதேவி போனாள், மூதேவி வந்தாள்’.

கம்பனின் மொழியாக்கங்கள் என்ற அடுத்த அத்தியாயத்தில் நாஞ்சில் களம் கட்டி ஆடுகிறார். கம்பனை வால்மீகியை மொழி பெயர்த்தவன் தானே என்று துச்சமாகப் பேசுபவர்களுக்குப் பதிலே இந்தப் பகுதி. ‘வடமொழியில் வான்மீகமும் வாசித்திராத, தமிழில் கம்பனும் கற்றிராத மூடன் தான் அவ்விதம் சொல்வான்’ என ஆரம்பத்திலேயே தன் கருத்தை நிறுவுகிறார். கம்பன் செய்தது மொழியாக்கம் என்றும் 10368 பாடல்களிலும் கம்பன் ஒரு கிரந்த எழுத்தைக்கூட பயன்படுத்தவில்லை என்றும் சொல்லுகிறார்.’கம்பனின் தமிழ்ப்பற்று வடமொழி துதி பாடிகளுக்குப் புரியாது. திராவிட இயக்கக் கனபாடிகளுக்கும் அர்த்தமாகாது’ என்று கம்பன் பக்கம் நின்று எல்லா பக்கமும் சாட்டை வீசுகிறார்.

எடுத்துக்காட்டாக நாகம் என்ற சொல்லைக் கையில் எடுக்கிறார். ‘நாகம் எனும் சொல் தமிழ்ச்சொல், அதே சமயம் வட சொல். கம்பன் பல பாடல்களில் நாகம் எனும் சொல்லை தென் சொல்லாகவும், வட சொல்லாகவும் ஆள்கிறார். அவருக்கு அதில் பேதமில்லை’ என்று கம்பனின் அம்பறாத்தூணியை குறுக்குபவர்களைச் சாடுகிறார் நாஞ்சில். கதாபாத்திரங்களின் பெயரைத் தமிழ்ப் படுத்தியதையும் சுட்டிக்காட்டுகிறார். இப்படிப் போய்க்கொண்டிருக்கும்போதே சென்னையில் இன்று பயன்படுத்தப்படும் ‘காண்டாயிட்டான்’ என்ற சொல்லுக்குத் தாவுகிறார். கடுப்பாகிவிட்டான் என்ற அர்த்தத்தைக் கேட்டபின், ஒருவேளை இது கம்பன் பயன்படுத்திய ‘கான்று’ ( கனல் வீசும் ) தானோ என்று கேட்டு நம்மைச் சிரிக்கவும் வைக்கிறார்.

அசைச் சொற்கள், தாமரைக்கு ஈடான சொற்களை அடுத்தடுத்த அத்தியாயங்களில் விளக்கும் நாஞ்சில், ’கம்பனின் கலப்பை’ அத்தியாயத்தில் தன் பெயருக்கே வருகிறார். ‘நாஞ்சில்’ என்ற நிலப்பகுதி புறநானூற்றில் வருகிறது. ஆனால் அதன் பொருள் என்ன? கலித்தொகையில் இருந்து கலப்பை என்ற பொருள் கண்டடைகிறார். கம்பன் நாஞ்சிலை கலப்பையாகவும் போர்க்கருவியாகவும் பயன்படுத்துகிறான் என்கிறார். நாஞ்சில் நாடனுக்கும் இது பொருந்தும். கம்பனின் சொற்சுரங்கத்தைத் தோண்டி எடுக்கும் கலப்பையாகவும் இருக்கிறார், கம்பனை யாரும் தூற்றினால் போரிடும் போர்க்க்கருவியாகவும் இருக்கிறாரல்லவா நாஞ்சில்?

கம்பன் சேமித்த தகவல்கள் அத்தியாயத்தில் ‘புல்லிடை உகுத்த அமுது’ ஆயிற்று கம்பனின் கவித்திறம் என்று குறைபட்டுக் கொண்டு கம்பன் சேமித்து வைத்துள்ள பண்பாட்டுக் கூறுகளை விளக்குகிறார் நாஞ்சில். வாத்தியங்கள், மலர்கள், பறவைகள், ஆயுதங்கள் பற்றி எண்ணற்ற பாடல்களில் வரும் குறிப்புகளைக் காட்டிக் கம்பனில் உள்ள தகவல்கள் பற்றி ஆய்வு செய்யப்பட வேண்டும் என்கிறார்.

நாஞ்சிலின் சொல்லாய்வு நூல் பல்கலைகழகப்ங்கள் வெளியிடும் படிக்க முடியாத நூல் போன்றது இல்லை. கம்பனைத் தஞ்சாவூர் கோயில் கோபுரம் போல் பெருமை மிக்கப் பழம் பொருளாய்ப் புரியாமல் பார்த்து விட்டு நகருகிறவர்களைக் கூப்பிட்டு சில சிற்பங்களை, அதன் நுணுக்கங்களை, அழகை எடுத்துக் காட்டுகிறார் நாஞ்சில் நாடன்.

’எம்மனோர்’ என்ற சொல்லும் கம்பன் உபயோகப்படுத்திய சொல் தான். எம்மைப் போன்றவர் என்று அர்த்தம். அதுவே இந்த நூலின் கடைசி அத்தியாயம். காப்பியத்தின் உச்ச தருணங்களில் கம்பன் இதை எம்மனோர் எப்படி விவரிப்பர் என்று கேட்கிறான். அந்தச் சொல்லைப் பற்றி விளக்கும் போது கம்பன் எம்மனோர் என்பது யாரை என்று கேட்கும் நாஞ்சில் தானே அதற்கு பதிலும் சொல்கிறார் ”மடக்கி எழுதி 120 பக்கம் நிறைத்து, நீட்டி அடித்தால் 20 பக்கம் வரும் கவிதைத் தொகுப்பு போட்டவர்களையா? கவிஞர் விக்ரமாதித்தன் பாடியதுபோல் ஓய்ந்த நேரத்தில் கவிதை எழுதுபவர்களையா? இல்லை, 10000 பாடல்கள்எனும் பெருங்கனவு கொண்டவர்களையா?”

கம்பராமாயணம் படிக்க ஒரு தூண்டுதலாக இருக்கும் இந்த நூல். கம்பனைக் கற்றறிந்தவர்களுக்கு மேலும் சுவை கூடும். இந்த நேரத்தில் ஒரு கேள்வி எழலாம். கம்பராமாயணம் படிக்கத் தான் வேண்டுமா? படித்து என்ன ஆகப் போகிறது? தமிழ்ச்சுவையும், எதுகையும் இன்றைய அவசர உலகத்தில் தேவையா? நியாயமான கேள்வி தான். எதையும் தெரிந்து கொண்டு என்ன ஆகப் போகிறது? வெந்ததைத் தின்று விதி வந்தால் செத்துப் போகும் வாழ்க்கையில் எதுவுமே தேவையில்லை தான்.

நம் கல்வி முறையில் செவ்வியல் ஆக்கங்களுக்கு இருக்கும் இடம் ஓரிரண்டு செய்யுட்கள், மிஞ்சிப் போனால் ஒரு கட்டுரை, அவ்வளவு தான். சங்கத்திலிருந்து ஆரம்பித்து இருபதாம் நூற்றாண்டு வரை நீளும் இலக்கியத்தை சில பக்கங்களுக்குள் சுருக்கி விட வேண்டியிருக்கிறது. மதிப்பெண் பெறுவதற்கு கம்பனைப் பற்றிக் கோனார் கூறியதை மனனம் செய்தால் போதும்.கல்லூரிப் படிப்பு என்பது வேலைக்குப் போவதற்கான கருவி என்பதால் அங்கு இந்தப் பேச்சே இல்லை. இளங்கலை தமிழ் படிப்பவர்களுக்கு மட்டுமே செவ்வியல் இலக்கியங்களுக்கான அறிமுகம் இருக்கிறது.

இத்தகைய சூழலில் நம் மொழியின் ஆற்றலை, நம் முன்னோர்கள் சாதனைகளை, அவை இன்றும் நீடித்திருப்பதற்கான காரணங்களை நமக்கு எடுத்துரைக்க வேண்டிய கடமை நம் கலாச்சார ஆளுமைகளுக்கு உள்ளது. அந்த விதத்தில் நாஞ்சில் செய்வது முக்கியமானதொரு செயல். பள்ளிக்குப் பின் நான் மீண்டும் கம்பராமாயணம் படிக்க ஆரம்பித்ததற்கு நாஞ்சிலே தூண்டுகோல். கம்பராமாயணம் மட்டுமல்லாது, சிற்றிலக்கியங்கள் பற்றியும் அவர் தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் எனக்குப் பாடமாய் அமைந்தவை.

இந்த நூலிலேயே நாஞ்சில் கூறுகிறார் “யோசித்துப் பார்த்தால் இவையெல்லாம் படைப்பிலக்கியவாதியான் என் பணியே அல்ல எனத் தோன்றும். மீண்டும் யோசித்துப் பார்த்தால் இவற்றை நான் செய்யாவிட்டால் வேறு யார் செய்வார்கள் எனத் தோன்றும்”. முற்றிலும் உண்மையான கூற்று. கண் முன்னே கிடக்கும் ரத்தினங்களை விட்டுவிட்டு கூழாங்கற்கள் தேடும் தேசத்தில் இவ்வகையான பணிகள் செய்வது சோர்வூட்டக்கூடியது தான். ஆனால் அவரது இந்த முயற்சியால் தமிழ்ச் செவ்விலக்கியங்கள் மீது பலருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அவர்களில் நானும் ஒருவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன்.

தான் கம்பனைக் கற்றுச் சுவைத்துத் தோய்ந்த அனுபவத்தை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சியே கம்பனின் அம்பறாத்தூணி நூல். நாஞ்சில் நாடன் கம்பன் மேல் கொண்ட காதலால் உருவான நூல் இது. கிட்கிந்தா காண்டத்தில் காதலன் என்ற சொல்லை மகன் என்ற அர்த்தத்தில் உபயோகிக்கிறான் கம்பன். வாலியின் மகன் அங்கதனை “வாலி காதலனும், ஆண்டு, மலர் அடி வணங்கினானை” என்று வருணிக்கிறான். அதே போல் நாஞ்சில் நாடனைக் கம்பன் காதலன் என்றே அழைக்கலாம்.

தக்காளி போற்றுதும்

பாப்லோ நெரூதா

தமிழில்: செந்தில்நாதன்

செந்தில்நாதன் தமிழாக்க கவிதை புகைப்படம்

சாலையெங்கும்
தக்காளிகள்,
கோடை,
மதியம்,
வெயில்
தக்காளியின்
இரண்டு
கோளங்களாய்ப்
பிளந்து
சாலையில்
சாறாய்
வழிந்தோடுகிறது.
டிசம்பரில்
காட்டுத்தீயாய்ப் பரவும்
தக்காளி
அடுப்பங்கரைகள் மீது
படையெடுத்து,
மதிய உணவில் ஊடுருவி,
மர அலமாரிகளில்
கண்ணாடிக்கோப்பைகள்,
வெண்ணெய்க் கிண்ணிகள்,
நீலநிற உப்புச் சாடிகள் நடுவே,
அமைதியாய்
அமர்கிறது.
அதற்கென்று
தனித்துவமான ஒளியும்,
அணைத்துச் செல்லும் அதிகாரமும் உண்டு.
துரதிர்ஷ்டவசமாக நாம் அதைக்
கொல்ல வேண்டும்:
அதன் உயிர்ச் சதைக்குள்
கத்தியைச்
செருக வேண்டும்,
செந்நிற
இதயம் அது,
நித்தம் புதிதாய்ப் பிறக்கும்
சூரியன்,
செறிவாக,
துவண்டு போகாது,
சிலே நாட்டின்
சாலடுகளில்,
படிகம் போன்ற வெங்காயத்தை
மகிழ்ச்சியாய் மணமுடிக்கும்.
அதைக் கொண்டாட
ஆலிவ் பழத்தின்
ஆதாரமான
எண்ணெய்,
அரைக் கோளங்களின்
மீது
தன்னையே ஊற்றிக்கொள்கிறது,
குறுமிளகுகள்
நறுமணத்தைச்
சேர்க்கின்றன,
உப்பு தன் ஈர்ப்பை;
இது ஒரு நளினமான
திருமணம்,
பார்ஸ்லி
சிறு பதாகைகளை
உயர்த்துகிறது,
உருளைக்கிழங்குகள்
துடிப்போடு கொதிக்கின்றன,
அந்த வறுவல்
வாசம்
கதவைத்
தட்டி,
நேரமாயிற்று!
வா! என்றழைக்கிறது.
மேசைக்குப்
போனால்
உச்சிக் கோடையில்
தக்காளி,
உலக நாயகன்,
மீண்டும்மீண்டும்
தோன்றி
வளமூட்டும் நட்சத்திரம்,
தன் வளைவுகளை,
தன் நாளங்களை,
புகழ்பெற்ற தன் முழுமையை,
வனப்பை,
நமக்குக் காட்டி,
விதையில்லாமல்
தொலியில்லாமல்
செதிலோ, தண்டோ இல்லாமல்
தன் செந்தீ வண்ண
யெளவனம் முழுவதையும்
கொடையாய்த்
தாரை வார்க்கிறது.

Ode to Tomatoes – Pablo Neruda

A.S.Kline ஆங்கில மொழியாக்கத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப் பட்டது
புகைப்படம் Anoosrini – Instagram

நாஞ்சிலின் நறும்புனல்

சுனில் கிருஷ்ணன்

nanjil_nadan_spl_issueமூன்று அல்லது நான்காண்டுகளுக்கு முன், முதன்முறையாக விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் நடத்திய ஊட்டி முகாமில்தான் திரு நாஞ்சில் நாடன் அவர்களைச் சந்தித்தேன். தமிழினி ‘வெளியிட்ட நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’ எனும் ஒரேயொரு கட்டுரை தொகுப்பு மட்டுமே அப்போது வாசித்திருந்தேன். பள்ளியில் தமிழ் பயிலாதவன். ஆகவே மரபிலக்கியம் வாசிக்கும் அடிப்படை பயிற்சியற்றவன். எனவே, அவருடைய கம்ப ராமாயான உரையை முழுவதுமாக உள்வாங்குவது அத்தனை எளிதாக இருக்கவில்லை. 

 
ஐம்பது அறுபது பேர் இணைந்திருக்கும் கூடுகையில் பிற அனைவரும் அவருடன் இயல்பாக பேசிக்கொண்டிருந்தபோது, அவரிடம் உரையாட தகுதியற்றவனாக என்னை மட்டும் கற்பிதம் செய்துகொண்டேன் (என்னைத் தவிர பிற அனைவருமே அவரை வாசித்தவர்கள், அதனாலேயே இயல்பாக உரையாடுகிறார்கள் என்றொரு அசைக்கமுடியாத நம்பிக்கை). மேலும், நாஞ்சில் எளிதில் அறச்சீற்றம் கொள்பவர் எனும் மனப்பதிவு வேறு இருந்ததால், அவரை வாசிக்கவில்லை என்பது பாதுகாப்பான சமாதானமாகவும் இருந்தது. அடுத்தமுறை சந்திக்கும்போதாவது ஒழுங்காக வாசித்துவிட்டு உரையாட வேண்டும் என உறுதி பூண்டவனாய், சம்பிரதாய வணக்கங்களுக்கு அப்பால் எதுவுமே உரையாடாமல் புறப்பட்டுவிட்டேன்.  
 
அடுத்த கூட்டத்திற்குதான் இன்னும் காலமிருக்கிறதே என்றிருந்தேன். ஆனால் அதற்கு முன்னரே காரைக்குடி புத்தககண்காட்சி சிறப்பு விருந்தினராக நாஞ்சில் அழைக்கப்பட்டிருந்தார். அழைப்பில் அவர் பெயர் பார்த்தவுடன் மனம் பரபரக்க, நண்பர்களிடமிருந்து அவருடைய எண்ணைப் பெற்று அழைத்தேன். ஆச்சரியமாக, நான் எப்படியோ அவருடைய நினைவில் இருந்தேன். முன்அனுமதி பெற்று, அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்றேன். மிக இயல்பாக அரசியல், இலக்கியம், பயணம், அனுபவம் என உரையாடத் துவங்கினார். அந்த இரண்டாம் சந்திப்பிற்கு பின்னர் கம்பன் விழா, எனது திருமணம் என இந்த மூன்று நான்கு ஆண்டுகளில் குறைந்தது பத்து முறைகளாவது அவரைச் சந்தித்திருக்கிறேன்.
 
நாஞ்சிலுக்கு அபார உணவு ரசனை உண்டு என்பது எல்லாருக்கும் தெரியும். நாஞ்சில் நாட்டு உணவு வகைகளைப் பற்றி பேசும் அவருடைய கட்டுரைகள் மட்டுமின்றி அவருடைய புனைவுகளிலும் அவை வெளிப்படும். மும்பை சேரியில் கிடைக்கும் வடா பாவ் துவங்கி நாஞ்சில் நாட்டு தீயல்கள் வரை உணவின் வாசனையை நாம் அவரது எழுத்தில் உணர முடியும். ஒருமுறை, செட்டிநாடு பலகார கடைக்கு ஒரு நாள் மாலை சென்றோம். அதற்கடுத்த முறையிலிருந்து மதிய உணவை தவிர்த்து நேராக மாலை பலகாரம்தான். ஒவ்வொருமுறை இங்கு வந்துவிட்டு ஊர் திரும்பும்போதும் அக்கம்பக்கத்தினருக்கும் சேர்த்து சீப்பு சீடை, முறுக்கு போன்ற செட்டிநாட்டு தின்பண்டங்களை வாங்கிக்கொண்டு போவார். ‘செட்டிநாட்டு சாப்பாடக் காட்டிலும் நாஞ்சில் நாட்டு சாப்பாடு பிரமாதமா இருக்கும், ஆனா பாருங்க, எப்படியோ வியாபாரம் பாக்க போன இடத்துல பிரபலமாகிட்டாங்க… செட்டிநாடுன்னு போட்டு கேரளாகாரங்ககூட ஹோட்டல் நடத்துறாங்க’, என்பார். 
 
மறைந்த தமிழறிஞர் பா.நமசிவாயம் மீது நாஞ்சிலுக்கு பெருமதிப்பு உண்டு. அவர் காரைக்குடிக்கு வரும்போதெல்லாம் அங்கு சென்றுவருவோம். நாளுக்கொரு முறை டயாலிசிஸ் செய்துகொள்ளும் எண்பது வயதிற்கு மேலான நமசிவாயம் அவர்கள் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்க,  நாஞ்சில் அவருடன் உரையாடக் கேட்பது அபாரமான அனுபவம். 
 
நாஞ்சில் காரைக்குடி கம்பன் கழகத்திற்காக கம்பனின் அம்பறாதூணி எனும் சொற்பொழிவாற்றினார். அந்தச் சொற்பொழிவை விரித்து நூலாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தபோது இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். மிக முக்கியமான சொல்லாய்வு நூல் அது. ஒவ்வொரு சொல்லாகப் பகுத்து நுணுக்கி அதன் அத்தனை சாத்தியங்களையும் ஆராயும்போது மொழியின் வீச்சை உணர்ந்துகொள்ள முடியும். பொதுவாக, குருடர்கள் துழாவிய வேழமாகத்தான் நாம் மொழியை உணர்ந்து கொள்கிறோம் என்று நினைத்துக் கொள்கிறேன்.
 
தமிழ் மெல்லச் செத்துவிடுமோ எனும் அச்சம் அவருக்குண்டு. ‘மொழி சுருங்கிகிட்டு இருக்கு. கொஞ்சம் கொஞ்சமா செத்துக்கிட்டு கிடக்கு’ என்பதே அவருடைய தலையாய கவலை. மேடைகளிலும், நேர்ப்பெச்சிலும் அவர் இந்த அச்சத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார். ஒரு நவீன எழுத்தாளனாக மரபிலக்கியங்களில் அவர் எதை தேடுகிறார் என்பதற்கான விடை இதிலுண்டு. வழக்கொழிந்த சில சொற்களை தன் வாழ்நாளில் மீண்டும் கவனப்படுத்தி நிலைநிறுத்துவதை தனது கடமை எனக் கருதுகிறாரோ என்றுகூட எண்ணுவதுண்டு. 
 
உணர்ச்சி மிகுந்த ஆளுமை என்றாலும் அவர் நேருக்கு நேராக எவரையும் நோகடித்து நான் கண்டதில்லை. ஆனால் மேடைகளில் அவரை இருக்கையில் இருத்திவிட்டு கும்பமுனி உரையாற்றும் தருணங்களும் உண்டு. ‘நானும் எத்தனையோ மேடைகள்ல பேசிட்டேன். ஆனா இன்னிக்கும் எனக்கு கொஞ்சம் கலக்கம் உண்டு’, என்று சொல்லியிருக்கிறார். ஆம், மேடைப் பேச்சுக்கு முன்பான அரைமணிநேரம் கொஞ்சம் நிலையிழந்து காணப்படுவார். ஆனால் அது தன்னம்பிக்கை குறைப்பாட்டால் விளைந்ததல்ல என்பதையும் நான் நன்கறிவேன். திட்டமிட்ட தலைப்புகளில் தயாரித்த உரைகளைத் தவிர்த்து பிறவற்றுக்கு அவர் சென்றுவிடும் தருணங்களுமுண்டு. மேடையில் அமரச்செய்து அவருடைய பொறுமையைச் சோதித்த காரைக்குடி புத்தக கண்காட்சியில் நாற்பது நிமிடங்களுக்கு மேல் எவ்வித தயாரிப்புமின்றி மிகக் கூர்மையாய்ச் சீண்டும் உரையை ஆற்றி முடித்தார். 
    
நாஞ்சில் அபாரமான உரையாடல்காரர். அவருடைய புனைவுகளை வாசித்திருந்தாலும், ஒன்றிரண்டு வரிகளுக்கு மேல் அவரிடம் அவைகளைப் பற்றி பேசியதில்லை. தன் படைப்புகள் குறித்து நேரடியாகப் பேசுவதில் அவருக்கு ஏதோ ஒரு தயக்கம் எப்போதும் உண்டு. உரையாடல் அது காட்டும் வாழ்க்கைக்கும், அது சார்ந்த வாழ்க்கை அனுபவங்களுக்கும் இடம்பெயர்ந்து விடும். 
 
நாஞ்சில் தனது பணி நிமித்தமாக நாடெங்கும் பயணித்திருக்கிறார். கூடவே ஒவ்வொரு ஊரின் உணவு சிறப்புகளைப் பற்றியும் கச்சிதமாகச் சொல்வார். அவர் இங்கு வந்திருந்தபோது அவர் பணியாற்றிய பரதேசி திரைப்படத்தை ஒருநாள் இரவு சென்று பார்த்தோம். அப்போது தன் சினிமா அனுபவங்களை அவ்வப்போது சொல்லி வந்தார். ‘அந்த டான்ஸ் மாஸ்டர் பன்ன பாதிரியார் ரோல் நான் பண்ணியிருக்க வேண்டியது… பாலாகிட்ட முடியாதுன்னு சொல்லிட்டேன். இந்த டான்செல்லாம் நான் ஆடியிருந்தா?… நெனைச்சே பார்க்க முடியல”, எனச் சொல்லி சிரித்தார்.
 
ஒருமுறை உறவினர் ஒருவரின் திருமணம் நின்றுபோன கதையை அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். சொல்லி முடிப்பதற்குள் அவரது கண்கள் சிவந்து நீர்த்துளிகள் உருண்டோடின. ‘என்ன சார்?’ “பாவமுள்ள’ என்று சொல்லிவிட்டு வேறேதும் பேசவில்லை. சக மனிதர்களின் மீது அவருக்கு இருக்கும் பரிவு, அதுவே நாஞ்சிலின் உலகம். நெடுந்தூர பேருந்து பயணங்களில் மூத்திரத்தை அடக்கும் சர்க்கரை நோயாளிகளுக்காகவும், பெண்களுக்காகவும் அவரால் கவலைகொள்ள முடிகிறது. அசோகமித்திரனை எண்ணும்போதும் எனக்கு இதே உணர்வு ஏற்படுவதுண்டு. ஆனால் வெளிப்பாட்டின் அளவில் இருவரும் வேறானவர்கள். 
 
ஒரு படைப்பாளி என்பதைத் தாண்டி அவர் மீது ஒரு தந்தைக்குரிய நேசம் எனக்குண்டு. எனது திருமணம், சகோதரனின் திருமணம் ஆகியவற்றில் முழுமையாக பங்கெடுத்து ஆசியளித்தவர். இவ்வகையான உணர்வுகளுக்கும் நினைவுகளுக்கும் அவற்றுக்குரிய இடமுண்டு என்றுதான் நினைக்கிறேன். இது இலக்கிய மதிப்பீடோ விமர்சனமோ அல்ல, அந்தரங்கமான ஒரு நினைவோடை மட்டுமே. இத்தகைய ஆளுமையின் அண்மை வாழ்வின் கணங்களை ஏதோ ஒருவகையில் செறிவாக்குகிறது. அவ்வகையில் எழுத்திலும், அணுக்கத்திலும் அளித்த எல்லாவற்றிற்கும் பிரியத்துக்குரிய நாஞ்சிலுக்கு நன்றிகள்.     

‘குரு’ முனி!

தமிழ்மகன்

nanjil_nadan_spl_issueதீதும் நன்றும், நதியின் பிழையன்று நறும்புலன் இன்மை, எட்டுத் திக்கும் மதயானை, சூடிய பூ சூடற்க… இந்தத் தலைப்புகளில் கிடைக்கிற காவியச் சுவையை இலக்கியம் அறிந்தோர் நன்கு உணர்வர்.

தமிழ் இலக்கணமும் இலக்கியமும் நன்கு அறிந்தவர் எழுத்தாளர் நாஞ்சில் நாடன். அவருடைய ஒவ்வொரு தலைப்புகளிலும் எனக்கு அந்த ஆச்சர்யம் உண்டு. ஒவ்வொரு கதையிலும் தொனிக்கும் அறச் சீற்றம் அவற்றைப் படிக்கும் எனக்குள்ளும் அந்தச் சீற்றத்தை உருவாக்கும். ஒரு எழுத்தின் ஆகச் சிறந்த பாதிப்பு அதுவாகத்தானே இருக்க முடியும்?

அந்தக் கோபாவேசம்தான் அவர். அதனாலேயே சொல்ல வருகிற எதையும் உள்ளது உள்ளபடி தெள்ளத் தெளிவாகத் தன் படைப்புகளில் சொல்கிறார். கதையின் முடிவை… கதைக்கான  தீர்வை ஆசிரியன் சொல்ல வேண்டியது இல்லை என ஓர் இலக்கிய போக்கு உண்டு. தீர்வைச் சொல்லாமல் மழுப்புவது என்ன இலக்கியம் என்ற இன்னொரு போக்கும்கூட உண்டு. சோப்பு அழுக்கைப் போக்குவதற்கா, சோப்பு சோப்புக்காகவா என்றெல்லாம் பேசி ஓய்ந்தாகிவிட்டது. அந்த சோப்பு போடுகிற வேலை எல்லாம் நாஞ்சில் நாடனிடம் இருக்காது. வெட்டு ஒன்று துண்டு இரண்டு வகை இவருடைய எழுத்து.

நாஞ்சில் நாடன் எழுத்துகளில் கிட்டத் தட்ட தீர்வு நெருங்கிவந்துவிடும். இன்னும் ஒரு வரி சொன்னால், ‘ஆகவே எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்’ என்றோ ‘ஆகவே நேர்மையாக இருக்க வேண்டும்’ என்றோ சொல்ல வேண்டிய வரி ஒன்று இருக்கும். அந்த இடம் வந்ததும் நாஞ்சில் நாடன் தன் படைப்பின் கடைசி வரியை மிச்சம் பிடிப்பார். ஒளிவு மறைவு இல்லாத இலக்கியம் என்று இவருடைய எழுத்துக்களைச் சொல்வேன். தலைகீழ் விகிதங்களாகட்டும், மிதவை ஆகட்டும் வாழ்வை அப்பட்டமாக எடுத்து நம் கண் முன் வைப்பவை. அதில் நாஞ்சிலாருக்கு ஒரு தயக்கமும் இருந்ததில்லை.

அவருடைய கட்டுரைகளுக்கும் கதைகளுக்கும் கரு ஒன்றுதான். உணவைப் பற்றி எழுதினாலும் ஒழுக்கத்தைப் பற்றி எழுதினாலும் ஏதோ ஒரு புள்ளியில் அது கதையாகவோ, கட்டுரையாகவோ உருமாறும். இரண்டுக்குமே அவர் முதலில் பழந்தமிழ் இலக்கியத் தரவுகளை தயார் செய்கிறார். சமூக ஆய்வுகள் தரும் விளக்கங்களைத் தருகிறார். கதையோ, கட்டுரையோ இரண்டுக்குமே அவர் ஈடுபாடுகாட்டும் செய்நேர்த்தி அல்லது செய் பாணி எனக்கு ஒன்றுபோலவே இருக்கும்.

ஒரு படைப்பின் வகை எப்படி எந்த இடத்தில் திசை மாறுகிறது என்பது அசாத்தியமானது. அவர் ஓட்டுப் பொறுக்கிகளைப் பற்றி எழுதினால் கட்டுரை, ஓட்டுப் போட வேண்டிய ஒருவனின் பெயரில் ஏற்படும் குழப்பத்தை நுட்பமாக படம்பிடிக்கும்போது அது தரமான சிறுகதை (எல்லோரும் இந்நாட்டு மன்னர்)ஆகிறது. அவர் நாஞ்சில் நாட்டு உணவு பற்றி எழுதினால் கட்டுரை. அதை (இடலாக்குடி ராசா) ஆக்குவது அவருடைய எழுத்தின் ஜாலம்.

ஒரு சில பால் பாயின்ட் பேனா இரண்டு நிறங்களில் எழுதும். அதன் தலையை ஒரு முறை அழுத்தினால் அது நீல நிறத்தில் எழுதும். இன்னொரு முறை அழுத்தினால் சிவப்பு நிறத்தில் எழுதும். அப்படி ஏதோ ஒரு ஜாலம்தான் எனக்கு நாஞ்சில் நாடன் எழுத்துகளில் தெரிகிறது.

அரசியல், இலக்கியம் சினிமா என பல துறைகளிலும் அவருடைய அறிவு தனித்துவப் பார்வையுடன் இருக்கும்.

எனக்கு அவரை அவருடைய ‘மிதவை’ முதல் பதிப்பு வந்த நாளில் இருந்து தெரியும். அவருக்கு என்னை நான் எழுதிய ‘வெட்டுப்புலி’யில் இருந்து தெரியும்.

என் நாவலை அவர் சென்னை புத்தகச் சந்தையில் வாங்கியதாகச் சொன்னார். அதைப் படித்துவிட்டு, உயிர்மை பதிப்பகத்தில் என்னுடைய எண்ணைப் பெற்று என்னிடம் பேச விரும்புவதாகச் சொல்லியிருக்கிறார். உயிர்மையில் இந்தத் தகவலை என்னிடம் சொன்னார்கள். நானே அவரிடம் பேசினேன். மிகவும் மகிழ்ந்தார். சில நிமிடங்கள்தான் பேசினார் என்றாலும் எனக்கு கல்வெட்டு போல பதிந்தது. ‘இது பத்திரிகையாளர் ஒருவர் எழுதிய கதை என்பதால் அன்று புத்தகச் சந்தையில் நான் வாங்கிய நூல்களில் கடைசியாகத்தான் இதைப் படித்தேன். மிகச் சிறப்பாக வெளிவந்திருக்கிறது. நான் நூல்களை படித்தவுடன் யாருக்காவது படிக்கக் கொடுத்துவிடுவேன். சில நூல்களை மட்டும் என்னுடனேயே வைத்துக்கொள்வேன். வெட்டுப்புலி அத்தகைய நூல்களில் ஒன்று.’

அன்றுதான் நான் இலக்கிய ஏணியில் அடுத்தப்படியில் ஏறியதாக நினைத்தேன். நான் மிகவும் நேசிக்கும் ஓர் எழுத்தாளர் என்னை யார் என்றே அறிமுகம் இல்லாமல் என் நூலை வாங்கி வாசித்திருக்கிறார் என்ற பெருமை சூழ்ந்தது. உடனே இன்னொரு நாவலை எழுத வேண்டும் என்று ஆவேசம் ஏற்படுத்தும் பாராட்டு அது. இளம் எழுத்தாளர்களைத் தேடிப்பிடித்துப் பாராட்டும் அவருடைய குணம், பாராட்டுக்குரியது.

நான் எந்த எழுத்தாளரையும் தேடிச் சென்று பார்த்தவன் இல்லை. நான் பணியாற்றும் பத்திரிகைகளுக்காக ஏற்பட்ட பழக்கம்தான் பெரும்பாலும். ஏனோ… அப்படி ஒரு தயக்கம். தினமணியில் பணியாற்றும்போது சுந்தர ராமசாமி, சி.சு செல்லப்பா, ஜெயமோகன், கோபி கிருஷ்ணன் என பலர் வருவார்கள். ஒரு வணக்கம் சொல்வதோடு என் அறிமுகம் நின்றுவிடும். அதற்கு மேல் பேச என்ன இருக்கிறது எனத் தோன்றும். பேசுவதன் மூலம் நம்முடைய அறியாமையை வெளிப்படுத்திவிடுவோமோ என நினைப்பேன். பேசுவதன் மூலம் நமக்கு அவர்களைப் பிடிக்காமல் போய்விடுமோ எனவும்கூட நினைத்ததுண்டு. அது வாத்தியாரிடம் பையன் காட்டும் வினோதமான அச்ச உணர்வுதான்.

ஓர் இலக்கிய விழாவுக்காக நாகர்கோவில் சென்றிருந்தபோது ஜெயமோகனைச் சந்திக்கச் சென்றதுதான் என் சுய முயற்சியினால் நடந்தது. அந்தச் சந்திப்பில் திருவனந்தபுரத்தில் தமிழ் வளர்த்த பல அறிஞர்களைப் பற்றிச் சொன்னார். ஆச்சர்யமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

ஆக, நாஞ்சில் நாடனுடன் நானும் அதற்கு மேல் பெரிதாக எதுவும் பேசியதில்லை. விகடன் மாணவர் பயிற்சி திட்டத்துக்காக, மாணவர்களிடம் பேசுவதற்கு அவரை அழைக்கச் சொன்னார்கள். அழைத்தேன். அந்தப் பொறுப்பை ஏற்று செய்யும்போது அவர் வர வேண்டிய தேதி, ரயில் டிக்கெட், தங்கும் அறை சம்பந்தமாகப் பேசினேன்.

ஏனோ அந்தக் குறுமுனி தன் கமண்டலத்தில் இருந்து நீரை எடுத்து பிடிசாபம் எனச் சொல்லிவிடுவாரோ என்ற தயக்கம் இருக்கிறது. எழுத்துலகில் எனக்கு யாரும் குரு இல்லை… அப்படி யாரையாவது அடையாளம் காட்ட வேண்டுமானால் இவரையும் சேர்த்து 100 பேரையாவது காட்ட வேண்டியிருக்கும்.

என்னுடைய அந்த 100 வாத்தியார்களுக்குமே நான் அவர்களின் சீடன் எனத் தெரியாது.