எழுத்து

எறும்பு வீடுகள்

childimage

எறும்புகளை வளர்க்க என
சிறிய நெகிழி பெட்டிகளில்
கண்ணாடி மூடிகள் கொண்ட
சச்சதுர வீடுகள் அவை.

ஒவ்வொன்றிலும் காற்றுபோக்கியாக
சிறு துளைகளும் உண்டு.

அவற்றின் வழியே வந்து போகும்
எறும்புகள் ஒவ்வொன்றுக்கும்
ஒரு பெயரும், குடும்பமும்
கண்டுபிடித்து வைத்திருந்தாள்

நுணுக்கிய சர்க்கரை
இணுக்குகளை சேர்த்து
வைத்துக் கொள்ள ஓரத்தில்
சிறு மூலையும் உண்டு.

எறும்புகள் வந்து சேர
தாமதமாகும்போது
தேடிப்பிடித்து கொண்டுவந்து
சேர்ப்பார்கள்
அவளும் அண்ணனும்.

குளிர்காலங்களில் மட்டும்
முற்றிலும் கைவிடப்பட்ட நிலையில்
வெறிச்சோடிக் கிடக்கின்றன.

அவற்றை உள்ளங்கையில் ஏந்தி
உதடுகளால் ஊதி
கதகதப்பாக்குகிறாள்.

சாரிசாரியாக வந்து நிறைக்கின்றன
நெகிழ்ச்சியின் தருணங்கள்.

வெள்ளி வீதியில்…

நம்பி கிருஷ்ணன்

        
       பூக்கள்
         மது
     தனி    மை
       நிலவு
       நிழல்
என்னொடும் மூவரானோம்!
சுயமின்றி பிரதிபலிக்கிறது நிழல் .
நிலவிற்கோ ஒழுக்கமெய்தும் பாவனைகள்.
தனியாகத்தான் குடிக்கிறேன்.

பாடினால் நிலவு நாசூக்காக நழுவுகிறது.
ஆடினாலோ நிழல் துள்ளி விலகுகிறது.
என்ன செய்வது , நட்பின் பாசாங்குகள்
குடிக்கையில் சிதைந்தழிகின்றன.

இப்போதைக்கு இவர்கள் போதும்
காலத்தின் சுமையை சற்றே மறக்க.
அதோ தெருமுனையில் வசந்தம் காத்திருக்கிறது.

ஆனாலும் வாருங்கள், கைகுலுக்குவோம்,
வெள்ளி வீதியின் வெறுமையையும் மீறி
மீண்டும் சந்திப்போம்,
நண்பர்களாக.

( After Li Bai’s Drinking Alone)

ஒளிப்பட உதவி – Poems Found in Translation

ஸ்தலபுராணம் IV : ஆடு தாண்டும் ஆறு

நந்தா குமாரன்

சிறுநீர் கழிக்கப் பதினைத்து ரூபாய்
கொடுத்துக் குடித்த ஹோட்டல் காஃபி
சுவை துடைத்து
மகவின் குரங்கு பயம் போக்கிச்
சுமந்து கடந்து
ஆற்று ஆலாக்கள் மீன் பிடிக்கும்
அர்காவதி இணையும்
காவிரி சங்கமம் தாண்டி
பள்ளத்தாக்கில்
பாயும் பஸ் பயணம் முடிய
நட்ட குழிப் பாறைகளில் வழுக்கப் பார்த்த
சாகசப்பெண் கண்ட சாகசஆண் தோன்றும்
வெய்யில் மூச்சு படர்ந்த
புவியில்
உடல் பசிக்க
புளி சாதம் கலந்து உண்ட
ஜிலேபி மீன் வறுவல் சுவை போற்றி
உள்ளூர் கைத்தடி தாத்தா வழிகாட்டியாகிக் காட்டிய
அருவி போற்றி
“இடையா இதை உன்
ஆடு தாண்டுமா …”
“மடையா இதை உன்
கவிதை தாண்டுமா …”
வேண்டாம் என்றால் கொடுத்து
வேண்டிக் கொண்டால் தடுத்து
ஆடும் லீலை நிறுத்து

நாம்பல்லிச் சம்பவம்

சிகந்தர்வாசி 

அமீர்பெட் போக எதுக்கு ட்ரைன்?”

“அமீர்பெட் இல்லப்பா. நாம ஹைதராபாத் போறோம்”

“என்ன பைத்தியம் மாதிரி பேசற ! நாம இருக்கறது ஹைதராபாத்.”

“இல்லப்பா. நாம இப்போ மெட்ராஸ்ல இருக்கோம். பெரியப்பா பேரன் கல்யாணத்துக்கு திருச்சி போனோம். இன்னிக்கி கார்த்தால மெட்ராஸ் வந்தோம். இப்போ ஹைதராபாத் போறோம்”

அவர் குழப்பமாக அவளைப் பார்த்தார். பிறகு ஜன்னல் வழியாக வெளியே பார்த்தார். சற்று நேரத்துக்குப் பிறகு, “இது பேகம்பேட் ஸ்டேஷன் இல்லையோ?”

“இல்லப்பா, இது மெட்ராஸ் சென்ட்ரல்” (more…)

வருகையைப் பற்றி ஒன்பது கவிதைகள்

நம்பி கிருஷ்ணன்

வானைச் சிலந்திகள் மொய்க்கின்றன.
நீயோ அவை ஒளியின் வலையில்
தொங்கவிடப்பட்டிருக்கும் பனைகள் என்கிறாய்.

மறைத்து வைக்கப்பட்ட சுருள்களையும் பொறிகளையும்
பற்றிச் சிந்தித்தபடி
விமானத்தை விட்டுப் பைய இறங்குகிறேன்
தரையிறக்கத்தின் போதே உயர்தலை எதிர்பார்த்து.

மாலைகள் சிரச்சேதம் செய்கின்றன.
அனைவரும் வெள்ளை அணிந்திருக்கிறோம்.
யாருடைய ஆவிகள் நாம்?

நீ. நீ. நீ.
கைகுலுக்குகிறோம். நீயும் கூட.

சில்லிட்ட கைகள். சில்லிட்ட பாதங்கள்.
கழுத்தை நனைப்பதற்கு ஏதாக இங்கு
வெயில் இன்னமும் கீழிறங்கியிருக்குமென
நான் நினைத்தேன்.

சந்திப்பு. ஏற்கனவே நிறுவப்பட்ட கம்பிகளின் மீது
மணிகளின் மொழியில் பேசுகிறோம்.
மணிகள் நழுவிச் செல்கின்றன, திறந்து கொள்கின்றன,
ஒன்றையொன்று பட்சிக்கின்றன.

சிலர் முக்கியமானவர்களாக இருந்தார்கள்.
தொடுவானத்தைப் போல் ஆழத்துடன் உயிரற்று
நிற்பது அவனா ?

நீரைப் போல் சலனமுற்று
முக்குளித்தேன் பிரியமான எனது மரத்தை நோக்கி.
இப்போது அது அங்கில்லையென்றாலும்
அதன் வேர்களை விட்டு வைத்திருந்தார்கள்.

வறண்ட மண்கட்டிகள்
அழ முயற்சிக்கையில் தங்கள் சிறிய முகங்களை
இறுக்கிக் கொள்கின்றன. அங்கே,
என் பிறப்பிடத்தில், இனியேனும்
என் ஜனநத்தை நானே காணக்கூடும்.

Nine Poems on Arrival, Adil Jussawala – தமிழாக்கம், நம்பி கிருஷ்ணன்

ஒளிப்பட உதவி- Draw as a Maniac