எழுத்து

நினைவின் வண்ணங்கள்

சிகந்தர்வாசி 

குழந்தைகள் சிரிக்கும் ஒலி நீல நிறமாக என் காதில் விழுகிறது

ஓடிக்கொண்டிருக்கும் நினைவு நதியில்
ஒரு கூழாங்கல்லைக் கையில் எடுக்கிறேன்
மறந்துவிட்டேன் என்று நான் எண்ணிய முகமொன்று
அதன் மேடு பள்ளங்களில் மலர்கிறது
கூழாங்கல் ஏந்திய கை சில்லிட்டுப் போகிறது

அம்மாக்கள் கத்தும் ஒலி சிவப்பாக இருக்கிறது

அந்த முகம் மறைந்து வேறொரு முகம்
மெதுவாகத் தோன்றுகிறது, ஆனால் தெளிவாக இல்லை
சூரிய ஒளி கல் மேல் விழ அது பளபளக்கிறது
கண் கூசி மூடிய இமைகளுள் முகம் தெளிவாகிறது

மெதுவாக நடந்து செல்லும் முதியவர்களின் குரல் மஞ்சள் நிறம்

எடுத்த கூழாங்கல்லை நதியில் மெதுவாக இடுகிறேன்
மெல்ல அசைந்து அசைந்து தரை தட்டுகிறது
அதன் பளபளப்பு என் கண்களுக்குள் தேங்கி நிற்கிறது

குழந்தைகள் சிரிக்கும் ஒலி நீல நிறமாக என் காதில் விழுகிறது

ஒளிப்பட உதவி- Jean Gregory Evans, Panoramio

வண்ணக்கழுத்து 2 – கல்வி

மாயக்கூத்தன்– 

பறவைகளின் உலகில் காண்பதற்கு அருமையான விஷயங்கள் இரண்டு உண்டு. ஒன்று, அம்மா தன் குஞ்சை வெளிச்சத்திற்கு கொண்டு வர முட்டையைக் கொத்தி உடைப்பது. மற்றொன்று, அவனை அவள் அணைத்து, கொஞ்சி உணவு ஊட்டிவிடுவது.

வண்ணக்கழுத்தை அவனுடைய அப்பாவும் அம்மாவும் மிகவும் பாசத்துடன் அணைத்து வளர்த்தார்கள். மனிதர்களின் குழந்தைகள் பெற்றோரின் அணைப்பில் பெறுவதை அவனும் பெற்றான். ஒன்றும் அறியாத அந்தக் குஞ்சுகளுக்கு, இது கதகதப்பையும் சந்தோஷத்தையும் தரும். உணவைப் போலவே அணைப்பும் அவைகளுக்கு அவசியம்.

இந்தப் பருவத்தில், புறாக்கூண்டில் அதிக அளவில் பஞ்சையோ பருத்தித் துணியையோ அடைக்கக்கூடாது. துணியும் பஞ்சும் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் கூடு அதிகம் சூடாகாமல் இருக்கும். இந்த அறிவு இல்லாத புறா வளர்ப்பாளர்கள், குஞ்சு வளர வளர தன் உடம்பிலிருந்து மேலும் மேலும் உஷ்ணத்தை உண்டாக்குவான் என்பதைப் புரிந்துகொள்வதில்லை. மேலும், இந்த சமயத்தில் அடிக்கடி புறாக்கூண்டை சுத்தம் செய்வதும் நல்லதில்லை என்றே நினைக்கிறேன். தாய் தந்தைப் பறவைகள் கூண்டில் என்னவெல்லாம் வைத்திருக்கிறார்களோ அவையெல்லாம் குஞ்சை சுவுகரியமாகவும் மகிழ்வாகவும் வைத்திருக்கும். (more…)

அடில் ஜுஸ்ஸாவாலாவின் “களிமண்”

செந்தில் நாதன்

கடவுளின் மாதிரி.
அவரது பன்முகங்கள்.
நீர்கொள்ள பாதுகாப்பான பாத்திரம்.
நெருப்பில்,
தன்னுள் அடைபட்டிருக்கும்
ஆன்மாக்களை வெளிப்படுத்தும்:
கிளி, வண்டு, நரி.

கைவிடப்பட்டால், வெற்றுப்பலகை
உயிரற்றிருந்தால், உறைவிடம்.
முழுமையானால், கலை.
மூளியானால், மனிதன்.

(Adil Jussawala, Clay)

ஒளிப்பட உதவி – விக்கிப்பீடியா

அடில் ஜுஸ்ஸாவாலா – இங்கிருத்தல் 1

(அடில் ஜுஸ்ஸாவாலாவின் கட்டுரைத் தொகுப்பான Maps for a Mortal Moon என்ற நூலை முன்வைத்து அர்விந்த் கிருஷ்ண மெஹ்ரோத்ரா காரவன் பத்திரிகையில் எழுதிய  Being Here என்ற கட்டுரையின் தமிழாக்கம்)

பம்பாய் பல்கலைக்கழக மாணவனாய் புகுபதிவு செய்துகொள்ள நான் 1966ஆம் ஆண்டின் கோடைப்பருவத்தில் அலகாபாத்திலிருந்து பம்பாய் வந்தபோது எனக்குத் தெரிந்தவர்கள் யாரும் அந்த ஊரில் இல்லை. என் பெற்றோர்கள் முலுந்த் பகுதியில் எனக்கு இடம் பார்த்திருந்தார்கள், ஆசிரமம் போன்ற அதை ஒரு பெண் கவனித்துக் கொண்டிருந்தார், அவரை நாங்கள் மாஜி என்று அழைத்தோம். அவரது பெயர் பிரிஜ்மோகினி சரின். என் பெற்றோர் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். அவர்களுக்கு மாஜி ஒரு குருவாய் இருந்தார். மெலிந்த, கீச்சுக் குரல் கொண்ட, நாற்பதுகளின் மத்திய பருவத்தில் இருந்த அவர் டெர்ரிகாட்டில் தைக்கப்பட்ட வெளிர் வண்ண மேக்சி அணிந்திருப்பார், ஆசிரமத்தை இரும்புக் கரம் கொண்டு நிர்வகித்தார். அவர் அருகில் வரும்போது, பக்கத்தில் இருக்கும் தூணுக்குப் பின்னால் பதுங்கிக் கொள்ளத் தோன்றும். அவருக்கு மணமாகியிருந்தது. அவரது கணவர், பப்பாஜி, டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் வேலை செய்து கொண்டிருந்தார். ஆசிரமத்தில் அவருக்கென்று தனியாக ஒரு அறை இருந்தது.

அந்த இடத்தில் நிரந்தரமாக இருந்த மற்றவர்களில் பணக்கார மார்வாரி விதவைகள் இருவரும் அடக்கம், சர்ச்கேட்டில் ரிட்ஸ் ஹோட்டலுக்குப் பின்புறம் இருந்த ஆர்ட் டிகோ கட்டிடங்களில் ஒன்றின் உரிமையாளர்கள் இவர்கள் பொழுதெல்லாம் சமையலறையில் இருந்தனர், பாத்திரம் தேய்த்துக் கொடுத்து சில்லறை வேலைகளைச் செய்யும் பணிப்பெண்கள் என்று எளிதாக அவர்களை நினைத்துவிட முடியும். ஆசிரமத்துக்கு விருந்தினர்கள் அவ்வப்போது வந்து சிறிது காலம் தங்கிவிட்டுப் போவார்கள், மாஜி ஆசிரமத்தைச் சுற்றிக் காட்டும்போது, விதவைகளைச் சுட்டிக் காட்டி, வைரங்களை விட்டுவிட்டு ஆத்ம ஞானத்தைத் தேடிச் செல்ல வந்திருக்கின்றனர் என்று அவர்களிடம் பாராட்டிச் சொல்வார். முடிந்த அளவுக்கு நான் ஆசிரமத்தைவிட்டு வெளியே இருந்தேன்; எனக்கு அப்போது பத்தொன்பது வயது. (more…)

செம்பக வனம்

– மோனிகா மாறன் –

“சார்வாள்! சொகமாயிரிக்கீறா?” இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் வள்ளிநாயகத்தின் குரலில் குமரித்தமிழ் கொஞ்சியது. “ஜே எம் எஸ் பஸ்ஸுல என்ன கூட்டம்.நல்ல குளுறு வேற. சமுனாமரத்தூர் எப்படி மாறிடுச்சு. நாப்பது வருசமாயிட்டுல்ல. தம்பி கல்யாணங்கெட்டாமலே இருந்துட்டீக. நம்ம ஊரு பக்கம் ஏதாச்சும் நல்ல நாயரு பொண்ண அம்பது பவுனோட முடிச்சிருக்கலா”.

நான் சிரித்தேன். “நம்ம எளங்கோவன் மகளாட்டு நாரோல்ல தா கலியாணம் வச்சிருக்கு. நீரு வாரீரு. அந்தால என்னமாச்சும் சொல்லீட்டு இங்கனயே கெடந்தீரு. சவட்டி புடுவேன். ரிட்டைடாயிட்டு இன்னும் என்னவே இந்தூருல? நம்ம மக்க மனுசாளோட வந்து சேராம”. என்மீது மாறா அன்பு கொண்ட தம்பதியர். தம்பி மகளின் திருமண அழைப்பினைத் தந்து விடைபெற்றனர்.

நினைவுகளின் கனம் தாளாமல் வீட்டின் முன்புறமிருந்த இலவச மருத்துவ மையத்துக்குச் சென்றேன். என் வாழ்வு இவ்விடத்தை விட்டு நகராது. “செண்பக வனம்”.

பெயர்ப்பலகையை நோக்குகிறேன். எழுபத்து மூன்றில் நான் இந்த ஜவ்வாது மலைக்கு வந்தபோது,  “சாருக்க சுசீந்தரமா எனக்க தக்கல இந்தா இவ ஆரவாமொளிக்காரிதான்,” என என்னை வரவேற்று போஷித்த ஆசிரியர் தம்பதியர்தான் இந்த வள்ளி நாயகமும் கோலம்மையும். (more…)