எழுத்து

அப்பாவிற்கான கனவுகள்

– ஸ்ரீதர் நாராயணன் –

little_girl_sleeping

அவள் எப்போதும் உறங்கியதேயில்லை.
அப்பாவிற்கான கனவுகளைத்தான்
உருவாக்கிக் கொண்டிருக்கிறாள்.
எப்போதும்.

பெரிய இறக்கைகளோடு
பறக்கும் வீடு ஒன்று
அப்பாவின் முதுகு போல்
அவளை சுமந்து செல்கிறது எங்கும்

அவள் கனவில் வரும்
புத்தகங்கள் எல்லாம்
அப்பாவின் குரலில் கதைசொல்கின்றன.

குதித்தோடும் தோட்டத்து முயல்கள்
அப்பாவின் பற்களைக் காட்டி
சிரித்து செல்கின்றன.

அப்பாவின் விழிபுலத்தை நிறைத்தபடி
அலங்கார மேஜையின் கண்ணாடி
அவளைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறது

அம்மா கூட
அப்பாவின் கரங்களோடுதான்
உணவு ஊட்டிவிடுகிறாள்.

கிளைகள்தோறும்
ஊஞ்சல்களை வீசி ஆடியபடி
கூடவே நடந்து வரும்
மரங்களின் காற்று
அப்பாவின் மூச்சு போல
அவளை ஆசுவாசமடைய வைக்கிறது.

அவள் கனவுகள் எதுவும்
கலைந்து போகாமலிருக்கும்
ஒரு கனவை
அவனும் எழுதி வைக்கிறான்.

அஜ்ஜி மாதிரி

இருவரும் சாக்லேட்டைப் பிரித்துச் சாப்பிட ஆரம்பித்தனர் அவள் போன பின்பும் வெகு நேரம் அவள் போன திசையை குழப்பத்துடன் நோக்கிக் கொண்டிருந்தான் தந்தை “அப்பா, சாக்லேட் வேணும்” மகனும் மகளும் ஒற்றை குரலில் கேட்டார்கள் நான் ஏதோ வாங்க அந்தக் கடைக்கு சென்றிருந்தேன் என்ன வாங்கச் சென்றேன் இப்பொழுது மறந்துவிட்டது “இல்லை” என்றான் அவன் நடுத்தர வயது உடம்பு முழுக்க மரத்தூள் ஏதோ அபார்ட்மெண்ட்டில் கார்பெண்டர் வேலை செய்கிறான் போல்

கலைந்த கேசம் அதிலும் மரத்தூள் அழுக்குச் சட்டை அடர்ந்த மீசை

“அப்பாஆஆ, ஒரே ஒரு சாக்லேட்” சிணுங்கினாள் சிறுமி மறுபடியும் தலையசைத்து இல்லை என்றான்

பட்டுப் புடவை கட்டிய மூதாட்டி ஒருவர் ஏதோ வாங்க வந்தார் ஏதோ கல்யாணத்திற்குச் செல்கிறார் போல் “எந்த சாக்லேட் வேணும்?” என்று சிறுவர்களைக் கேட்டார் இருவரும் வேண்டாம் என்று தலையாட்டிவிட்டு தந்தையை பார்த்தனர்

“சொல்லு. எந்த சாக்லேட் வேணும்?” என்று கேட்டார் மறுபடியும் கண்ணாடிப் பெட்டிக்குள் பளபளக்கும் சாக்லேட்டை இருவரும் நோக்கினர் பிறகு தந்தையை தந்தையின் அசையும் தலையை இருவரும் வேண்டாம் என்று தலையசைத்தனர்

“நான் உங்களுக்கு அஜ்ஜி மாதிரி. சீக்கிரம் சொல்லுங்க நான் வேற எடத்துக்கு போகணும்”

“வேண்டாம்” என்றான் தந்தை “விடுய்யா, அவங்க பாட்டி போல. ஆசையா வாங்கி தராங்க குழந்தைங்க சாப்பிடட்டும்” என்றான் கடைக்காரன்

குழந்தைகளில் கண்களில் ஆசை மறுபடியும் இருவரும் தந்தையைப் பார்க்க “இந்த சாக்லேட் ரெண்டு கொடு” என்று கேட்டு வாங்கி குழந்தைகளிடம் கொடுத்துவிட்டுச் சென்றாள் பாட்டியம்மா.

புத்தக கண்காட்சி – எம். ஏ. சுசீலாவுடன் ஒரு நேர்முகம்

மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ்த்துறை இணைப் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சிறுகதைகள், செவ்வியல் மொழியாக்கம், பெண்ணிய ஆய்வு என்ற பல தளங்களில் இயங்கி வரும் முனைவர் எம்.ஏ.சுசீலா அவர்களின் புதிய படைப்பாக ‘யாதுமாகி’ நாவல் இவ்வருடம் வம்சி வெளியீடாக வருகிறது. இவருடைய முந்தைய படைப்பான ‘அசடன்’ (தஸ்தெய்வ்ஸ்கியின் ‘இடியட்’டின் தமிழ் மொழியாக்கம்) பல விருதுகளை பெற்று பெருவாரியான வரவேற்பை பெற்ற நிலையில் இந்த நூல் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. சுசீலா அவர்களுடன் பதாகை நிகழ்த்திய உரையாடல் –

yathumaagi

செவ்வியல் இலக்கிய ஆக்கங்களில் ஆழ்ந்த புலமையும், அடுத்த தலைமுறையினருக்கு அவற்றை எடுத்துச் செல்லும் வழிகாட்டியான பொறுப்பும் அனுபவமும் கொண்ட நீங்கள், ஒரு புது நாவல் படைப்பிற்காக மீள் உருவாக்கம் செய்து கொள்ள வேண்டியிருந்ததா? இலக்கிய வகுப்பெடுப்பதும், இலக்கிய உருவாக்கமும் முரணான மனநிலைகள் கொண்டு செயல்பட வேண்டியதாக இருக்கிறதா?

அப்படிப்பட்ட முரணான மனநிலைகள் எனக்கு ஒருபோதுமே ஏற்பட்டதில்லை. மிகச்சிறு வயதிலிருந்தே இலக்கிய உருவாக்கத்தின் மீது நான் மாளாத காதல் கொண்டிருந்தேன். அதுவே வேதியியலில் இளம் அறிவியல் படித்த என்னை இலக்கியக் கல்வியிடம் கொண்டுபோய்ச் சேர்த்தது.

நான் பெற்ற செவ்வியல் இலக்கியப்பயிற்சி என் மொழியை வளப்படுத்தியது. தமிழின் ஆழங்களையும் நுட்பங்களையும் அறிய வைத்தது. செவ்வியல் இலக்கிய ஆக்கங்களைப் படித்த காலகட்டம், அவற்றைப் பயிற்றுவித்த காலகட்டம் என இரண்டிலுமே சமகால இலக்கிய வாசிப்பை நான் இடைவிடாமல் தொடர்ந்து கொண்டிருந்தேன். பாடத்திட்டத்தில் இல்லாதபோதும் வாய்ப்பு நேரும்போதெல்லாம் ஆர்வமுள்ள மாணவியருக்கு சமகாலத் தமிழ்ப்போக்குகளை இனம் காட்டிக் கொண்டிருந்தேன். சங்கத் தமிழும், காப்பியத் தமிழும், சமயத்தமிழும் இவை எதுவுமே படைப்பிலக்கிய உருவாக்கத்துக்கு இடையூறாக என் நடையையோ உள்ளடக்கத்தையோ பாதிக்கவில்லை; அவற்றை அடித்தளங்களாக மட்டுமே கொண்டு பண்டித நடையின் குறுக்கீடுகள் இன்றிக் கதைகளை எழுதிக்கொண்டு போவது ஒன்றும் இயலாத செயல் அல்ல; நான் செய்ததும் அதைத்தான். இளம் வயது முதல் நான் படித்த ஏராளமான சிறுகதைகளும் நாவல்களும் எனக்குத் துணையாக நின்றபடி – நான் பெற்ற இலக்கியக்கல்வியும் நான் போதிக்கும் இலக்கியமும் எந்த வகையிலும் என் படைப்பைப் பாதிக்காமல் பார்த்துக்கொண்டன என்றுதான் சொல்ல வேண்டும்.

1979 முதல் என் சிறுகதைகள் வரத் தொடங்கி விட்டதால் என்னை நான் மீள் உருவாக்கம் செய்து கொள்ள வேண்டிய தேவையே எனக்கு ஏற்படவில்லை. மேலும் முனைவர் பட்டத்துக்காக நான் தேர்ந்து கொண்டதும்கூட நவீன இலக்கியம் சார்ந்ததாகவே இருந்தது. என் நவீன இலக்கியச்சார்பு, சங்கத் தமிழைக்கூட நவீன இலக்கியப்பாணியில் கற்பிக்கும் கலையை எனக்கு சொல்லித் தந்தது என்று வேண்டுமானால் சொல்லலாம். (more…)

கொலாட்கரின் ஜெஜூரி, ஓர் அறிமுகம் – அமித் சௌத்ரி

(நியூ யார்க் ரிவ்யூ ஆப் புக்ஸ் கிளாசிக் பதிப்புக்கு அமித் சௌத்ரி எழுதியுள்ள ஓர் அறிமுகம்)

1976ஆம் ஆண்டில் ஜெஜூரி பதிப்பிக்கப்பட்டபோது என் வயது பதினான்கு. அதைப் பற்றி அடுத்த ஆண்டுதான் கேள்விப்பட்டேன். அப்போது அந்த நூல் காமன்வெல்த் கவிதைப் பரிசு வென்றிருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியாவில் செய்தி வந்திருந்தது, அதனுடன் அருண் கொலாட்கர் பற்றிய ஒரு கட்டுரையையும் அந்தப் பத்திரிக்கை வெளியிட்டிருந்தது. என் நினைவு சரியாக இருந்தால், அதன்பின் ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று, கவிஞர், புத்தகம், மற்றும் மகராஷ்டிர மாநிலத்தில் உள்ள யாத்திரைத் தலமான ஜெஜூரி பற்றிய கட்டுரைகள் அந்தச் செய்தித்தாளில், வந்திருந்தன. அப்போது அதில் பார்த்த ஒரு புகைப்படத்தால்தான் கொலாட்கரின் தொங்கு மீசையும் நீண்ட தலைமுடியும் எனக்குப் பரிச்சயம் ஆகியிருக்க வேண்டும்.

இலக்கியம் என்ற ஒன்றே இல்லை என்பதுபோல் இப்போது கடந்த பத்தாண்டுகளாக பாவனை செய்து கொண்டிருக்கும் அந்தச் செய்தித்தாள், ஒரு கவிஞருக்காக அத்தனை நியூஸ்பிரிண்ட்டை அப்போது செலவு செய்தது என்பது இன்று அசாதாரண விஷயமாகத் தெரிகிறது; ஆனால், பம்பாயின் பண்பாட்டுச் சூழல், ஆங்கிலத்தில் எழுதப்படும் இந்திய கவிதைகளின்பால் அன்றெல்லாம், ஏறத்தாழ எதுவுமே யோசிக்காமல், வரையறைத்துக் கொள்ளாமல், நட்பு பாராட்டுவதாகத்தான் இருந்தது, தான் பொழுதுபோக்கு கேளிக்கைகளாகக் கொண்ட பலவற்றுக்கும் காட்டிய அதே இணக்க உணர்வுதான் இங்கும் அதற்கிருந்தது. (more…)

றியாஸ் குரானாவுடன் ஒரு நேர்முகம்

பதாகை வாசகர்களுக்கு றியாஸ் குரானாவை அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. இவ்வாண்டு பதிப்பிக்கப்பட உள்ள தனது கவிதை தொகுப்பு குறித்து, பதாகையுடன் அவர் நிகழ்த்திய மின் அஞ்சல் உரையாடல் இங்கு- 

பதாகை – இந்த ஆண்டு வெளிவரவிருக்கும் தங்கள் கவிதை தொகுப்பில் உள்ள கவிதைகள் எழுதப்பட்ட காலகட்டம் என்ன என்று சொல்ல முடியுமா?

றியாஸ் குரானா – கடந்த இரண்டு ஆண்டுகளில் எழுதப்பட்டவை.

பதாகை – இதில் உள்ள கவிதைகளுக்குப் பொதுத்தன்மை உண்டா?

றியாஸ் குரானா – பொதுவாக கவிதை என்பதற்கு பொதுத்தன்மை இல்லை. ஆனால், கவிதைகள் குறித்து பேச முற்படுபவர்கள், அவைகளுக்கு ஒரு பொதுத்தன்மையை உருவாக்கிவிடுகிறார்கள். பொதுத்தன்மையை கண்டடைவதும், பொதுத்தன்மையை உருவாக்குவதுமே கவிதைப் பிரதிகளை அனுகுவதற்கான விமர்சன முறை என நினைத்திருக்கின்றனர். உண்மையில் அதிகம் பாவிக்கப்படும் விமர்சன முறையும் இதையே கோருவதாக இருக்கின்றது.

உண்மையைச் சொல்லப்போனால், விரிந்த தளத்தில் அல்லது ஆழமாக தென்படுவது, பொதுத் தன்மைகளுக்கு எதிராக வாசகர்களைத் துாண்டும் விமர்சனமுறைதான் தேவையான ஒன்று. ஒன்றிலிருந்து மற்றது எப்படி வேறுபடுகிறது என்பதைக் கண்டுபிடிக்கும்போதுதான் கவிதைப்பிரதி உயிர்ப்பு நிறைந்ததாக செயலுக்கு வருகிறது. இப்படி வேறுபாட்டை நோக்கி சிந்திக்கும்போதுதான் பொதுத்தன்மை என்பது கண்டுபிடிக்கப்படுகிறது. வேறுபாட்டை அறிந்துகொள்ளும் நோக்கில் பிரதியை அணுகும்போது சந்திக்கும் பொதுத் தன்மைகள் கவிதையில் நடந்திருக்கும் மாற்றத்தை அறிவதற்கு உதவுகிறது. எனவே, பொதுத் தன்மை என்பது கவிதை குறித்த பழைய விசயங்களை அடையாளங்காண உதவுகிறது.

அத்தோடு, குறித்த ஒருவருடைய கவிதையின் பொதுத்தன்மையை முன்வைப்பதற்கு தேவைப்பாடுகள் ஏற்படும்போது மட்டும் அது பற்றி அக்கறை கொள்வதில் பிரச்சினையில்லை. அந்த வகையில் சொல்வதானால், இதிலுள்ள கவிதைப் பிரதிகளுக்கான பொதுத்தன்மை என்பது, நாம் நவீன கவிதை என நம்பிக் கொண்டிருக்கும் கவிதைப் பிரதிகளுக்கு முற்றிலும் எதிரானது என்பதுதான். அதே நேரம் ஒவ்வொரு கவிதையும் தன்னளவில் மற்றவற்றிலிருந்து வேறுபட்டதே. எனது கவிதைகள் வேறுபடுவதின், அதாவது பிறிதாக இருப்பதின் அரசியலை தீவிரமாக அக்கறை கொள்கிறது. (more…)