கவிதை

முடிவில்லா சிகிச்சைப் பயணங்கள்- இஸ்ஸத் கவிதை

இஸ்ஸத்

விடிந்த காலைப்பொழுதுகள் எல்லாம் உட்சாகம் என்கிறீர்கள்.
மாலைகள் எல்லாம் ஓய்வைப் பறைசாற்றுகின்றன என்கிறீர்கள்.
நிசப்த இரவுகள் எல்லாம் மயான அமைதியின் குறியீடென்கிறீர்கள்.
மழை வானமெல்லாம் மனதிற்கு இதம் என்கிறீர்கள்.
கோடைகளெல்லாம் கொடுந்துயர் என்கிறீர்கள்.
வாடைகளெல்லாம் வறுமை என்கிறீர்கள்.
இறுதியில் இறப்புதான் பேரமைதி என்கிறீர்கள்.
இதில் எந்தச் சூழ்நிலைதான் வாழ்தலைச் சொல்கின்றது?
அனைத்தும் என்றால், இவை அனைத்து நிலையிலும் அவளின் நோய்மையின் வலிகளும், சிகிச்சைக்கான பயணமும் மாத்திரம்தானே எஞ்சியிருக்கின்றன.

மலபார் ஹில் கவிதையிலிருந்து சில பகுதிகள் – கெர்சி கத்ரக் (தமிழாக்கம் – நகுல் வசன்)

நகுல் வசன்

4

என்பே வெற்றிபெறும். எப்போதும் இதையே அறிந்து கொள்கிறேன்.
விருத்திப் பெருக்கி அதன்மேல் இருத்திருக்கும் தசையோ
தன்னையே காமுற்றிருக்கும்:
தன் இரத்தநாள வனத்தையும், நரம்புப்  புதர்காட்டையும்
முலையையும் பாலுறுப்பையும் தொடையையும்  பிறப்பித்துக் கொண்டே;
தன் துன்பத்தின் வேதனையில் மரிக்கும்.
எங்கோ அதனடியே,
வெளிச்சமற்ற உட்புறத்தில், என்பு மீந்திருக்கும்
நிர்தாட்சண்யமற்ற வெண்மையாக.

அதை எதிர்த்திருப்பதோ ஆழ்ந்த
விலங்கையொத்த ஏதோவொன்று. தன்னையே தழுவிக்கொள்ளும்
உடம்பின் இயல்புணர்வுத் தழுவுதல்.  குருதியின்  பொறி.
தசையையும் உருவகத்தையும்
சுவர்க்கலோக கனவுகளையும் பூலோகப் பெண் முலைகளயும்
பிணைக்கும் ஏதோவொன்று.
இரவில் அகன்மிடிற்றினூடே
சத்தமிட்டு ஆர்ப்பரிக்கும்,
அலறும் அல்லது பாடும் ஏதோவொன்று.

எனினும் என்பே வெல்கிறது. எப்போதும். எதிலும் பங்கேற்காது
குருதியின் ஆணைகளெதற்குமே அசைந்து கொடுக்காது
வளையாது
உடலின் அப்பட்டமான இச்சைகளுக்கு சாட்சியாக
ஒளிந்து பரவியிருக்கும் மனதின் இச்சைகளை பார்த்தபடி
இறுதிவரையிலும் அதுவாகவே இருக்கும்
அது.

5

என்பை  அறிதல், நன்றாக அறிதல்:
உள்ளார்ந்திருக்கும் அதன் கடினமான கட்டாயங்கள்
அதன் சிடுக்குகள்;
உண்டு புணர்ந்து
மலம்கழித்து உறங்கி
அதை அன்னியோன்யமாக வைத்திருப்பது
ஒருகால்  ஓர் வாழ்க்கைத் தொழிலாகவும் இருக்கலாம்:

அதை மெய்ப்பிக்கும்
மனவலிமையையும் காதலையும் கோரும்
ஒரு வகையான வாழ்தல் முறை.
இப்போது பிடிபட்டுவிட்டதென்று நினைக்கிறேன் –
காதலே – உன்னால்தான்.

இங்கு பலமுறை வந்திருக்கிறேன். அனேகமாக டிசெம்பர்  மாதத்தில்.
இப்போதோ மே மாதத்து முதல் மழையுடன் வரும்போது
என் வலியிடமிருந்து விலகியிருப்பதை உணர்ந்து
ஏதோவொன்றை கூறவும் விழைகிறேன்.

6

காதலைப் பற்றி  நான் அதிகமாக அறிந்ததில்லை.

என் தந்தை என் தலையை உருவமைத்து பிரத்தியேகமான
மூக்கையும்  எனக்களித்தார். தரவுகளைக் கற்பித்தத்தை தவிர வேறெதையும்
என் தாய் எனக்கு விட்டுச் செல்லவில்லை. மிடுக்கும்  நாணமும்
பதற்றமும் புணர்ச்சியைப் பற்றிய பயமும் கலந்து
என்னை உருவாக்கிய
அவர்களின் முதல் செயகையப் பற்றி
எதுவுமே கூறப்பட்டதில்லை.
அமைதியாகவா அல்லது உணர்ச்சிமிகுந்தா
சராசரியாகவா அல்லது ஆழ்ந்தா
அது எப்படி இருந்ததென
என் கண்கள் அறிந்து கொண்டதில்லை.  முதல்
ஒலித்தடயங்களில் எதுவும் எஞ்சவும் இல்லை.

தன்னந்தனியே, காதலை நாடியே இங்கு வந்திருக்கிறேன்.
இப்போது அது கிட்டிவிட்டதால்
தசையும் என்பும் அதன்  களத்தில் எதிரிகளாக
பழைய பிளவுகளைக் காண்கிறேன்.
குளிருக்கெதிராக சளைக்காமல் காதலர்கள்
ஏன் சிரிக்கிறார்கள் என்று இப்போது புரிகிறது.
உலகை இரண்டாய்ப் பிளக்கும்
பழம்பெரும் சக்திகளை  தவிர்க்கவியலாமல்
காதலிலும் அவர்கள் கண்ணுற வேண்டும் போலும்.

(This is an unauthorised translation of selected parts of the poem, “Malabar Hill” by Kersey Katrak . The Tamil translation is intended for educational, non-commercial display at this particular web page only).

 

 

 

 

 

 

 

அந்த சம்பவத்துக்குப் பிறகு – காஸ்மிக் தூசி கவிதை

காஸ்மிக் தூசி

பாட்டு பயிற்சியை
அன்றே நிறுத்தி விட்டது
வடையை பறிகொடுத்த காகம்.
கால் செண்டரில் வேலை முடித்து
வீட்டுக்கு வந்து உடைமாற்றி
சூப்பர் சிங்கர் பார்த்துக்கொண்டு
யோகா வகுப்புக்கு செல்கிறது.
ராயப்பேட்டையிலிருந்து
காரில் வரும் ஒல்லியான பையனுடன்
காதலாம்.

வடையை தின்றாலும்
இன்னொரு கதையில் வந்து
திராட்சையை எட்ட முடியாத நரி
சாலை விபத்தில்
கால் முறிந்து
புத்தூருக்குப் போய்
வைத்தியம்
பார்த்துக்கொண்டதாய் கேள்வி.
அதற்குப்பின்
எங்கே போனதென
அறிந்திலர் எவரும்.

திருவாரூர்
பேருந்து நிலையத்துக்கு பக்கத்தில்
மருந்துக்கடை வாசலில் பார்த்தாக ஒருவர்
விழுப்புரம்
அபிராமி திரையரங்கின் எதிரில்
தள்ளுவண்டியின் முன் நின்று
வாழைப்பழம் வாங்கி கொண்டிருந்ததாக
மற்றொருவர்
மும்பை ரயிலின்
முதல் வகுப்பு இருக்கையில்
இருமிக்கொண்டு சென்றதை
கண்டதாக இன்னொருவர்.
தவிர
ஊரை விட்டுச்சென்ற நரி
திரும்பி வந்தாக
தகவல் ஏதும் இல்லை.

கண்பார்வை மங்கி விட்டதால்
வடைக் கடையை மூடிவிட்டு
அறந்தாங்கியில்
பெரிய மகள் வீட்டுக்கு சென்ற பாட்டி
கேட்டராக்ட் செய்தபின்
கீரை ஆய்ந்து, காய்கறி நறுக்கி
வாணிராணியும் பிரியமானவளும் பார்த்து
தான் வடை சுட்டு விற்றதும்
இன்ன பிற
குட்டிக் கதைகளும் சொல்லி
பேரப்பிள்ளைகளுடன்
பொழுதைக் கழிக்கிறாள்.

திருடுபோன வடையும்
புளிக்கும் திராட்சையும் தவிர
சில கதைகள் மட்டும்
ஏன் இவ்வளவு நீளமானவையாக இருக்க வேண்டும்
என்பது மட்டும்
அவளுக்கு விளங்கவே இல்லை.

ஆகி கவிதைகள்: உயிர்ப்பித்தல், மேய்ப்பரற்றவன்

ஆகி

உயிர்ப்பித்தல்

கிளைகள் சொடக்கிடும்
காற்றில்
இலைகளென்ன
சருகுகளும் சலசலக்கும்

செவ்விந்திய மாந்திரிகனின்
மேளம் துடிப்பு எனில்
கருப்பினக் கூத்துக் கலைஞனின்
சாக்ஸஃபோன் மூச்சு

யாழும் பேஸும் இசையின்
அதிநுட்ப வடிவங்கள் எனில்
மேளதாளத்தை மிகுவேகத்தில்
நிகழ்த்தும் பறையாட்டம் இசையின் உச்சம்

இன்மை இருப்பு இவற்றின்
ஊசலாட்டத்தினூடாக கலைகள்
திரும்பத் திரும்ப இருப்பை
சுட்டுகின்றனவே கோருகின்றனவே
உயிர்ப்பித்தலின் அகமகிழ்வா

இசையென்ன ஓவியம் உள்பட
அனைத்து கலைகளும்
இதயத்துடிப்பையும்
மூச்சியக்கத்தையும்
நிகழ்த்திக் காட்டவோ
உணர்த்தவோ
உணர்த்தாது தோற்கவோ
யத்தனிக்கின்றனவே

தூர்வாரிய ஏரியில் நீருக்காக
அலைகழியும் துடுப்பில்லா
மரப்படகுகள்
நாம்
கட்டுமரங்கள்
இயற்கையின் நீட்சிகளா
ஆம் பச்சையத்தின் எச்சங்கள்

……………………………………

மேய்ப்பரற்றவன்

கூண்டுக் கிளியாய்
கேட்டதை ஒப்பித்து
சதாகாலமும்
மாறாதிருக்கும்
அந்த மேய்ப்பர்
இல்லை
என் மேய்ப்பன்

என் மேய்ப்பன்
கூடுகள் கலைத்து
படிநிலை தகர்த்து
கலைகளின் கலவையை
ஒப்பனை செய்துகொள்ளும்
வண்ணத்துப்பூச்சி

பிடிவாதமாய்
வெவ்வேறு
வாதத்தினால்
தாக்குதலுக்குள்ளாகும்
மேய்ப்பர் இல்லை
என் மேய்ப்பன்

என் மேய்ப்பன்
பேதமின்றி
அனைவரையும்
அனைத்தையும்
தழுவிக்கொள்ளும்
நுண் நன்னுயிரி

அவ்வப்போது
கணவனுக்காய் மனைவியை
மகளுக்காய் பெற்றோரைப்
பழிக்கும் வசைக்கும்
மேய்ப்பர் இல்லை
என் மேய்ப்பன்

என் மேய்ப்பன்
வசையை உட்கொண்டு
ஆசியை வெளியிட்டு
குட்டிக்கரணமிட்டு
முக்குளிக்கும்
ஓங்கில் குட்டி

மேடையில் லபலபத்து
வீட்டில் லகலகத்து
சுற்றி வளைத்துப்
பேசும் அறிவார்ந்த
மேய்ப்பர் இல்லை
என் மேய்ப்பன்

என் மேய்ப்பன்
மரம் விட்டு மரம் பாய்ந்து
உச்சக்குரலில் கீறிச்சிட்டு
புட்டுப் புட்டு வைத்திடும்
உள்ளங்கையில் அடங்கினும்
அடங்கா அணிற்பிள்ளை

அடிக்கடி
பெயரளவில்
நற்செய்தி கூறி
சாபங்களைத் தூவி வீசும்
மேய்ப்பர் இல்லை
என் மேய்ப்பன்

என் மேய்ப்பன்
அகத்தின் கும்மிருட்டில்
ஒளிர்ந்து மகிழ்ந்து
வதைந்து மரித்து
மீண்டும் மீண்டும்
உயிர்த்தெழும்
மின்மினிப்பூச்சி

‘முழுநேரத் தேநீரகம்’, ‘மண்டையோடெனும் பால்மண்டலம்’ – ஆகி கவிதைகள்

ஆகி

முழுநேரத் தேநீரகம்

பேசக்கூடாது பேசக்கூடாது
பேசக்கூடாதென்றால்
பேசாமலென்ன செய்வதாம்
பேசவேண்டாம் சரி
எதுவுமே பேசக்கூடாதா
எதப் பேசக்கூடாது முதலாளி
அரசியலா
அதைத் தவிர்த்து பிறிதொன்றை
குறிப்பா இலக்கியம் பேசக்கூடாது
அரசியலென்றால் இலக்கியமுந்தானே அடக்கம்
கூடாது கூடாது பேசக்கூடாதென்றால் கூடாது
இப்படித்தான் டீக்கடைக்காரர் அவ்வப்போது
எதையாச்சும் புதுசு புதுசாக எடுத்துவிடுவார்
இப்போதெல்லாம் கதவைத் தட்டாமலே
வாடைக்காற்று உள்ளே புகுந்துவிடுகிறதென்று நாங்கள்
லொக்கு லொக்கென்று பேசி முடித்து நடையைக் கட்டினோம்
டீக்குக் காசு தரவில்லையே அன்பர்களே
நாங்கள்தான் குடிக்கவேயில்லையே முதலாளி
குடித்துவிட்டுதான் போகவேண்டும் தெரியுந்தானே
இப்போதெல்லாம் எமக்கு கேப்பைக் கூழ் மட்டுந்தான்
கீழே இறங்குதுன்னா நம்பவாப் போகின்றீர்
நாற்பது பேர்களா இன்றைக்கு நாற்பத்து நாலா
எத்தனை வண்டி வேண்டும் சொல்லுங்கள் இறக்கிவிடுவோம்
இப்படித்தான் டீக்கடைக்காரர் எம்மை அவ்வப்போது
திருதிருவென முழிக்கவும் வைத்துவிடுவார்
எம்மை என்றால் என்னை மட்டும்தான்
தேக்கரண்டியைத் தட்டித் தட்டி அத்தாளகதியில்
சும்மா அப்படியே தேமேயென்று உட்கார்ந்திருப்பேன்
சும்மா சும்மா கையை ஓங்கக்கூடாதென்று விரலை
நீட்டிக்கொண்டு எழுந்தால் மூவர் முப்பத்து மூணு பேர்களாயிருப்போம்
அம்மாட்டப் போவணும்
அப்பாட்டச் சொல்லிருவேன்
ஒண்ணுக்குப் போயிட்டேன்
தலைக்குள் இடித்துக் கொள்வதற்கு நேருக்கு நேர் அடித்து
விவாதித்து வியாக்கியானித்துக் கொள்வது எவ்வளவோ தேவலை
இவளே மோர்காக்கின் ஐயர்ன் ஆர்க்கிட்தானேடி அப்படிச் சொன்னது
பேசக்கூடாது பேசக்கூடாது இலக்கியம் பேசக்கூடாதென்று
சொல்லிக்கொண்டே இருக்கவேண்டுமா உங்களுக்கு
முதலாளி எனக்கு இருமலுக்கு கசாயமிட்டுக் குடிக்கனும்
இவங்களுக்கு கேப்பக் கூழ் ஆளுக்கு லொக்கு லொக் ஒரு கப்
கூழெல்லாம் தேனா தீயாயினிக்கிது சரிதான் முதலாளி ஆனாலென்ன
தேநீர் கடன்னா சில்லுன்னுக் கள்ளு இல்லன்னா குறைந்தபட்சம்
சப்புக்கொட்டப் பதநீராவது வச்சிருக்கவேண்டாமா

oOo

மண்டையோடெனும் பால்மண்டலம்

ஏதேன் தோட்டத்திற்கு ஞானப்பழம் தேடிப்போன முருகன்
ஆட்டக்காரர் மட்டையால் பந்தடிப்பதைக் கண்டு ஆரவாரிக்கிறான்
பாறாங்கல்லில் கால்வைத்து நிற்கும் மேய்ப்பனின் கோல் கண்ணின்
ஓரு சிமிட்டலில் திரிசூலாய் மற்றொரு சிமிட்டலில் வேலாகிறது
மிஸ்கோமகட் கடற்கரையில் தயங்கும் மெல்லிசாவின் விம்மல்கள்
அல்பட்ரோசாய் அலையில் பாய்ந்து சிறகுவிரித்தெழுகிறது
குறிசொல்வதை குறிக்கோளாய்க் கொண்ட குருவிச்சித்தர்
குறியீட்டை குறியாக்க முப்பரிமாண அச்சுப்பொறியைத் தேடுகிறார்
பொறுமைசாலியென்று பெயரெடுத்த ஆங்குயின் பெங்குயினின்
முதுகுக்குப் பின்னால் முகஞ்சுழித்து முணுமுணுக்கிறாள்
ட்ரோனாய் வந்திறங்கிய ட்ரோஜன் ஒட்டகம் அரேபியப் பாலையில்
தீகக்கி அணையாப் பிழம்பாய் சடசடத்து முறிந்தெரிகிறது
நரிகள் திரியும் தேரியில் குறிபார்த்து எறியப்பட்டக் கூழாங்கல்
செம்மண்கறை படிந்த கோள்பந்தாய் பத்ரகாளியின் காலடியில்
கிணறுகள் அகற்றப்பட்ட மண்டையோடெனும் பால்மண்டலத்தில்
எண்ணிறந்தோர் என்னுள் எண்ணங்களாய் வசிக்கின்றனர்
ஆப்பிள் கடையை வலம் வந்து விலை கேட்டால் கணேசன் சொல்கிறான்
தலையை அடகுவைத்தால் அசல் ஆப்பிள் கிடைக்குமோ கிடைக்காதோ
கடிபட்ட மெழுகு ஆப்பிள் ஒன்றிரெண்டு கிடைத்தாலும் கிடைக்கும்

oOo