சிறுகதை

நதி நிறுத்தம்

ரா கிரிதரன்

(This is an unauthorised translation of the poem, ‘River Stop,’ originally written in English by Arvind Krishna Mehrotra. The Tamil translation is intended for educational, non-commercial reproduction at this particular website only)

வடக்கு மலைகளில்
படுகைக் கரையை மீறி
ஓரிரண்டு சாலைகளைக் கடக்கும்
ஓர் நதியைத் தனித்த பயணங்களில் பார்க்கிறேன்.

வருடத்துக்கு ஒன்று அல்லது ரெண்டு முறை
கரையேறும்போது
தவறவிட்ட
பாலங்களைத் திரும்பிப் பார்க்கும்.
மேட்டுப்பகுதியிலிருக்கும்
படகுகள் அதைப் பார்க்கும்.

மறதி அதிகமாயிருக்கும் மூன்று குழந்தைகளைப் போல
நட்சத்திரம், துடுப்பு மற்றும் மீனும்
ஜன்னலைக் கடக்கும்.
நான் அவர்களது கை அளவை அளந்து
சிறு சிவப்பு மேலுடுப்புகள்
தைப்பேன்.

ஒன்றை ஒன்று விட்டுப்போகாமலிருக்க
மந்திர வட்டங்கள் அவற்றைச் சுற்றி வரைகிறேன்.
ஒளியற்ற மலைகளுக்குப் பின்னால் அவை மறைகின்றன.

நதி செல்லும்
சாலையோர மரங்களின்
வரிசையில்
இறுகிய முகம்கொண்ட
யாத்ரிகர்களின்
சிறு கூட்டம்
பயண ஊர்த்திக்காகக் காத்திருக்கிறது.

oOo

(1970களின் நவீன ஆங்கில இந்திய கவிதை உலகத்தில் மிகப் பிரபலமானப் பெயர் அரவிந்த் கிருஷ்ண மெஹ்ரோத்ரா. அருண் கொலாட்கர், ஏ.கே.ராமானுஜம், போன்றவர்களுடன் அரவிந்த் கிருஷ்ண மெஹ்ரோத்ரா ஒரு கவிதை இயக்கமாகச் செயல்பட்டார். அவரது ஆங்கில கவிதைகளும், பிராகிரத மொழியாக்கங்களும், கபீரின் கவிதை ஆக்கங்களும் உலகளாவிய கவனத்தைப் பெற்றுத்தந்தது. பம்பாயின் நவீன சிறு பத்திரிக்கை உலகின் அடையாளமாகக் காணப்பட்டவர் அரவிந்த் கிருஷ்ண மெஹ்ரோத்ரா. damn you எனும் சிறு பத்திரிகையைத் தொடங்கி பல இளம் கவிஞர்களை ஆங்கில கவிதைக்கு ஆற்றுப்படுத்தியிருக்கிறார். Middle Earth, Nine Enclosures போன்ற தொகுப்புகளும் History of Indian Literature, The Oxford India anthology of twelve modern Indian Poets போன்ற விமர்சக நூல்களும் எழுதியவர்.

அவரது கவிதைகளின் மொழியாக்கங்களை இத்தொடரில் பார்க்கலாம்.)

பட்டறை

மு வெங்கடேஷ்

முன்னிருக்கையில் தூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பிய டிரைவர், “சார் நீங்க சொன்ன எடம் வந்துட்டு” என்றார்.

நாங்கள் நின்று கொண்டிருந்த இடத்தில் ஒரு லாலா கடையும் அதற்கடுத்து கல்யாணி காபி கடையும் இருந்ததாக ஞாபகம். மாலை நாலு மணி ஆகவும் லாலா கடை அல்வாவுக்கும் கலையணி கடை உளுந்த வடைக்கும் கூட்டம் வரிசை கட்டி நிற்கும். எதிர் வரிசையில் இருந்த முஸ்தபா சாப்பாடு கடையின் சால்னாவின் ருசி இன்றும் என்னால் உணர முடிகிறது. அத்தனை சுவை. இன்று எல்லாமே மாறியிருந்தன. இருபது வருடங்களுக்கு முன் பார்த்திருந்த எதுவுமே கண்ணில் படவில்லை.

காரின் பின்னிருக்கையில் மனைவியும் மகனும் மகளும் உறங்கிக் கொண்டிருக்க, “சரி கார அந்த கட முன்னாடி விடுங்க நா போயி கேட்டுட்டு வந்துர்றேன்” என்று சொல்ல, அவரும் அதுபோலவே செய்தார்.

“அண்ணாச்சி இங்க காந்தி ஆசாரின்னு?…” நான் கேட்டு முடிப்பதற்குள், “ஓ அவுகளா, அவுகெல்லாம் இங்க இருந்து காலி பண்ணி வருசம் என்னாச்சு?” என்று சொல்லிவிட்டுத்தான் வைத்திருந்த பழைய புத்தகங்களை எடை போடுவதில் மும்முரமானார் கடைக்காரர்.

“எங்க இருக்காருன்னு….?”

“அந்த வெவரம் தெரியல”

“இல்ல யார்ட்ட கேட்டா?”

“நீங்க ஒன்னு பண்ணுங்க. இந்தானிக்கு மேக்க பாக்க ஒரு பர்லாங்கு போனா வலது பக்கம் ஒரு பாங்கு வரும். பாண்டியன் கிராம பாங்கு. அங்க போயி அப்ரைசர் தங்கவேல்னு ஒருத்தர் இருப்பாரு, அவரப் புடிங்க, வெவரம் சொல்லுவாரு” என்றார்.

“சரி அண்ணாச்சி, ரொம்ப நன்றி” என்று சொல்லிவிட்டு காரில் அந்த பாங்கை நோக்கிச் சென்றோம்.

அன்று திங்கள் கிழமை என்பதால் பாங்க் கூட்டமாகஇருந்தது. உள்ளே சென்ற நான் அங்கு நின்று கொண்டிருந்தவரிடம், “இங்க அப்ரைசர் தங்கவேல்னு……?” என்று கேட்கத் தொடங்க, “அவரு உள்ளதான் இருக்காரு, நீரு வரிசையில வாரும். இங்க நிக்கிறவனுவெல்லாம் என்ன கேனப் பயலுவலா? நாங்க எல்லாம் அவரப் பாக்கத்தான் நிக்கோம்” என்று கோபமான பதில் வந்தது. நான் வந்த நோக்கத்தைத் தவறுதலாகப் புரிந்து கொண்டிருக்கிறார். இனியும் அவரிடம் கேட்டால் சரி வராது என்று நினைத்துக் கொண்டு, நேராக மானேஜரிடம் சென்று நான் வந்த நோக்கத்தைச் சொல்லி, ஒரு இரண்டு நிமிடம் அவரைப் பார்த்துவிட்டு போய் விடுகிறேன், என்று அவரைச் சந்திக்க அனுமதிகேட்டேன்.

“என்னய்யா நீங்க? ஒங்களோட ஒரே ரோதனையாப் போச்சு. பேண்டு சட்டைய மாட்டீட்டு காலையிலேயே கூட்ட நேரத்துல வந்து படுத்துறீங்க. சரி அசலூருன்னு வேற சொல்லீட்டீங்க, உக்காருங்க வரச் சொல்றேன்” என்று சொல்லி எழுந்து சென்றார் மானேஜர். சுவரில் மாட்டியிருந்த கண்ணாடியை தற்செயலாகப் பார்த்தேன். நான் முதலில் பேசியவர் என்னை முறைத்துக் கொண்டிருந்தார்.

சில நிமிடங்களில் வெள்ளை வேஷ்டி, வெள்ளைச் சட்டை, நெற்றியில் பட்டை சகிதமாக வந்தவர், “என்ன சார் வேணும்?” என்று கேட்க, “இல்ல தங்கவேல்….”

“நாந்தான். என்னன்னு சொல்லுங்க? கூட்ட நேரத்துல டயத்த வீணடிக்காதீங்க” என்றார் கனத்த குரலில்.

“இல்ல. காந்தி ஆசாரின்னு?”

“ஆமா அவருக்கென்ன?”

“இல்ல அவருக்கு ஒன்னுமில்ல. அவரப் பாக்கணும் அதான்” என்றேன் தயக்கமாக.

“அவரப் பாக்கணும்னா நேராப் போயி பாக்க வேண்டியதான? இங்க பாங்க்ல வந்து?” என்று அவர் முடிப்பதற்குள் இம்முறை நான் முந்திக் கொண்டேன்.

“அவர் அட்ரஸ் வேணும்”

“அட்ரசா அது கொஞ்சம்……” கண்ணை மூடிக் கொண்டே கழுத்தை சாய்த்து நெற்றியை தடவியவாறே “எதுல வந்துருக்கீங்க?” என்று கேட்டார்.

“கார்ல” என்றதும் மூடியிருந்த கண்ணைத் திறந்து கழுத்தை மேலும் சாய்த்து வெளியில் பார்த்தார். கார் நிற்பதை உறுதி செய்த பின்னர், “பையன அனுப்பி விடுறேன். வீட்டக் காமிப்பான்,” என்று சொல்லிவிட்டுச் சென்றவர் சட்டெனத் திரும்பி, “ஆமா நீங்க?” என்று கேட்டார். “அவருக்கு வேண்டப்பட்டவன் தான்” என்று சொல்லிவிட்டு அவர் அனுப்பி வைத்த பையனை அழைத்துக் கொண்டு காரில் ஏறினேன்.

டிரைவரை அந்தச் சிறுவன் வழி நடத்த கார் ஒவ்வொரு தெருவாக சென்று கொண்டிருந்தது. மனைவியும் மகளும் விழித்திருந்தனர். மகன் மட்டும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தான். ஒவ்வொரு சந்தாகச் சென்ற கார் கடைசியாக ஒரு குடிசைப் பகுதிக்குள் நுழைந்தது. “அண்ணே, அண்ணே, இங்க நிப்பாட்டுங்க, இதான் வீடு” என்று பையன் சொல்ல கார் நின்றது. “சரி சார் நா வாரேன். வேல கெடக்கு” என்றான் அவன். “தம்பி நில்லுப்பா, கார்லயே கொண்டு போயி விட்டுருவாரு,” என்று சொல்லி டிரைவரிடம் இருநூறு ரூபாய் கொடுத்து, “அவனுக்கு ஏதாவது வாங்கிக் கொடுத்துட்டு நீங்களும் அப்படியே சாப்பிட்டு வந்துருங்க,” என்றேன். வீடு சரிதானா? அவரு இருப்பாரா? ஒருவித தயக்கத்துடன் கதவைத் தட்டினேன்.

“யாரது?இந்நேரத்துல?” என்ற குரல் கேட்கவும் வீடு சரிதான் என்று உறுதி செய்து கொண்டேன். பெரியவர் ஒருவர் வந்து கதவைத் திறந்தார். வந்தவர் கண்களைச் சுருக்கி வலது கையை நெற்றியில் வைத்தவாறே ஒரு நிமிடம் ஒருவர் மாற்றி ஒருவராக எங்களின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். பின், “யாரு?” என்று கேட்டார். நான் பதில் சொல்வதற்குள் “மொதல்ல உள்ள வாங்க புள்ளைகள வச்சிட்டு வெளிய நின்னுட்டு,” என்று சொல்லி எங்களை உள்ளே அழைத்தவர், மறுபடியும் “யாருன்னு தெரியலையே” என்றார் நாடியில் கை வைத்து தேய்த்தவாறே. “அண்ணாச்சி, நான் பொன்ராசு மகன் சக்தி” என்று சொல்லவும் “எந்த பொன்ராசு? புடிபடலையே” என்றார் தாடியைத் தடவிக் கொண்டே. “பொன்ராசு, பார்வதி, பஜார்ல மளிகை கடை வச்சிருந்தாங்களே” என்று நான் சொல்லி முடிக்கவும், “ஏ நம்ம நாடார் மவனா? எப்படிடே இருக்க? வருசம் என்னாச்சு? உங்க அப்பா அம்மா எல்லாரும் சௌக்யமாடே? நல்லா இருக்காகளா? எங்கடே இருக்கீக? இத்தன வருசம் தகவல் ஒன்னும் காணமேடே?” என்று கேள்வி மேல் கேள்வியாக அடுக்க ஆரம்பித்தார், ஒருவித சந்தோசமும் உற்சாகமும் கலந்த குரலில். “எல்லாரும் நல்லா இருக்கோம்” என்று சொன்னேன்.

“இந்தா இருங்க வாரேன்” என்று சொன்னவர் உள்ளிருந்து ஒரு பாயை எடுத்து தரையில் விரித்து எங்களை அமரச் சொன்னார். நாங்கள் அமரவும் அவர் அருகில் கிடந்த ஒரு இரும்பு சேரில் அமர்ந்தார், “கீழ உக்காந்தா குறுக்கு புடிக்கி” என்று சொல்லிக் கொண்டே. அவர் அணிந்திருந்த பூணூல் கடந்த வாரம் ஆவணி அவிட்டம் வந்து சென்றதை நினைவூட்டியது. அவர் காலில் ஏதோ அடிபட்டு மஞ்சள் வைத்து வெள்ளைத் துணியால் கட்டப்பட்டிருந்தது. கண்டிப்பாக அது வைத்தியரோ டாக்டரோ போட்ட கட்டு அல்ல என்பதை என்னால் உணர முடிந்தது.

“இது யாரு? உன் பொண்டாட்டியும் புள்ளைகளுமாடே?” என்று கேட்டார்.

“ஆமா அண்ணாச்சி இது என் பொண்டாட்டி கௌரி. இது பசங்க. மூத்தவ சாலினி, இளையவன் சஞ்சய்” என்றேன். மனைவி வணக்கம் சொல்ல அவரும் பதிலுக்கு வணக்கம் சொல்லிக் கொண்டார். “இப்போ பாம்பேல இருக்கோம். இவளுக்கும் பாம்பே தான். மராத்தி. தமிழ் தெரியாது” என்றேன். “ஏ பெரிய ஆளுடே நீ. பம்பாய்க்காரிய புடிச்சிட்டியா? கழுதை எதுன்னா என்ன? தமிழா இருந்தா என்ன மராத்தியா இருந்தா என்ன? எல்லாம் மனுசங்க தான?” என்றார் சிரித்துக் கொண்டே. இருபது வருடங்களுக்கு முன்பிருந்த அதே எடக்கு பேசும் குணம் இன்றும் குறையவில்லை. “வீட்ல தமிழா? இல்ல….?” என்று அவர் கேட்க வரும் கேள்வி புரிந்துவிட, “இல்ல இங்கிலீஷ். அப்ப அப்ப மராத்தி” என்றேன். சிரித்துக் கொண்டவர் “ஏ பேரப் புள்ளைகளா தாத்தாவத் தெரியுமா? உங்க அப்பன் ஏதாச்சும் சொல்லிருக்கானா? ஓல்ட் மேன்,தெரியுமா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார். குழந்தைகள் இருவரும் என் முகத்தைப் பார்க்கத் தொடங்கினர். நான் “தாத்தா – கிரான்ட் பா” என்றேன். அவர் சிரித்துக் கொண்டிருந்தார்.

“சரி உங்க அப்பா அம்மா எங்க இருக்காக? எப்படி இருக்காக ஒன்னும் சொல்ல மாட்டிக்கியே?” என்று கேட்கவும், “எல்லாரும் பாம்பேல தான் இருக்கோம். அவங்க நல்லா இருக்காங்க” என்றேன். “ரொம்ப சந்தோசம்டே கேக்குறதுக்கே சந்தோசமா இருக்கு” என்றார். “சரி இங்கனையே இருங்க இந்தா வாரேன்” என்று சொல்லி விட்டு உள்ளே சென்றார். பாத்திரம் உருட்டும் சத்தம் கேட்டது. நான் அமர்ந்திருந்தவாறே வீட்டைச் சுற்றிப் பார்த்தேன். எழுந்து சென்று சுற்றிப் பார்க்கும் அளவுக்கு வீடு பெரிதாக இல்லை. ஒரு பெரிய ஹால். அதன் நடுவே ஒரு கயிற்றுக் கட்டில், அருகில் எச்சில் துப்புவதற்கு மணல் நிரப்பிய ஒரு டப்பா. அதைச் சுற்றி அணைக்கப்பட்ட பீடித் துண்டுகள். ஹாலுக்கு பக்கவாட்டில் ஒரு சிறிய அறை. கதவு சாத்தி இருந்தது. ஹாலின் ஒரு மூலையில் உமி மூட்டை ஒன்றும் கரி மூட்டை ஒன்றும் சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தன. அதனருகே ஒரு உமி லோடு, பட்டறைக் கல், தராசுப் பெட்டி, சுத்தியல் என சில பட்டறை சாமான்கள். சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வேறு ஒன்றும் அங்கு இல்லை.

ஒன்றும் புரியாமல் அமைதியாக அமர்ந்திருந்த மனைவியிடம் அவர் யாரென்பதை விளக்கத் தொடங்கினேன், மராத்தியில்.

“அண்ணாச்சி பேரு காந்தி ஆசாரி. உண்மையான பேரு பட்டவராயன். காந்தி மீது அவ்வளவு பாசம். அதுனால அவர் பெயரையும் காந்தின்னு மாத்திக்கிட்டாரு. தீவிர காங்கிரஸ்காரர். வருசா வருசம் சுதந்திர தினத்துக்கு கொடி ஏத்தி வெடி போட்டு முட்டாய் வாங்கித் தருவாரு. போடுறது எப்போதும் கதர் ஜிப்பாதான். அப்போல்லாம் நகை செய்யணும்னா ஊர்ல இவர விட்டா வேற ஆள் கிடையாது. இந்த ஊர்ல மட்டும் இல்ல, சுத்தியுள்ள எட்டு ஊருக்கும் இவரு ஒருத்தர்தான். பேருக்கு ஏத்த மாதிரி, செய்யிற தொழிலுக்கு ஏத்த மாதிரி, மனசும் கையும் அவ்வளவு சுத்தம். கைராசிக்காரர். அன்னைக்கு மட்டும் அண்ணாச்சி ஊர்ல இல்லைன்னா ஒருத்தருக்கும் கல்யாணம் முடிஞ்சிருக்காது. அண்ணாச்சி வந்து தாலிக்கு பொன் உருக்குனாத்தான் கல்யாணப் பேச்சே. மண்டபம் கிடைக்கோ இல்லையோ அண்ணாச்சிட்ட நாள் கிடைக்கணும். அந்தளவுக்கு பரபரப்பா இருந்தாரு. நம்ம பலசரக்கடைக்கு எதுத்த மாதிரிதான் அண்ணாச்சியோட பட்டறையும். பலசரக்கடைக்குப் போட்டியா அண்ணாச்சி பட்டறையில ஆள் நிக்கும். சனமெல்லாம் மூட்டையும் முடிச்சுமா வந்து நிக்குங்க, அண்ணாச்சி பட்டறை வாசல்ல. ஒன்னு நாளைக்கு எம்பொண்ணுக்கு கல்யாணங்கும், ஒன்னு மறுநாள் மகளுக்கு சடங்குங்கும், ஒன்னு அடுத்த வாரம் காது குத்துங்கும்… இப்படி வருச கட்டி நிக்குங்க. எனக்கு வெவரம் தெரிஞ்சு அண்ணாச்சி வாக்கு தவறினதில்ல. சொன்னா சொன்னபடி செய்வாரு. என்ன ஒரு சில நேரத்துல முன்னப் பின்ன ஆகும் ஆனா தங்கத்துல எந்தக் குறையும் இருக்காது.

“காலைல எந்திச்சு, குளிச்சு, நெத்தி நிறையா பட்ட போட்டு, ஒரு சில்வர் பிளஸ் பைக் வச்சிருந்தாரு, அதுலதான் பட்டறைக்கு வருவாரு. வரும்போதே கூட்டம் வரிசை கட்டி நிக்கும். அந்தளவுக்கு கிராக்கி உண்டு அண்ணாச்சிக்கு. இவரு வீட்டம்மா லட்சுமி அக்கா. அந்தக்கா அதுக்கு மேல. இவரு தங்கம்னா அவுக சொக்கத் தங்கம். ஜாடிக்கேத்த மூடி. எப்பவும் மஞ்ச தேச்சு குளிச்சு,நெத்தி நிறைய குங்குமப் பொட்டு வச்சு மங்களகரமா இருக்கும். இவ்வளத்தையும் குடுத்த ஆண்டவன் பாவம் புள்ளை ஒன்னுகூட கொடுக்கல. பாவம் அந்தக்கா அதுக்காக போவாத கோவில் இல்ல. ஆனா நம்மாளு எதுக்கும் கவலைப்பட மாட்டாரு. அஞ்ச மாட்டாரு. நல்லா ஞாபகம் இருக்கு, ஒருநாள் நான் கடையில இருந்தேன். அப்பா விளையாட்டுக்கு அண்ணாச்சிட்ட கேட்டாரு, “புள்ளைக ஒன்னும் இல்ல, இவ்ளோ சொத்து சுகம் இருக்கு, என்ன பண்ணப் போறீகன்னு?” அதுக்கு அண்ணாச்சி சொன்னாரு, “புள்ள இல்லன்னா என்னையா? பெரிய புள்ள? எனக்கு அப்புறம் எம்பொண்டாட்டி அனுபவிப்பா, அவளுக்கு அப்புறம் ஏதாவது அனாத ஆசிரமத்துக்கு எழுதி வைப்பேன். அங்க உள்ளதுக அனுபவிச்சிட்டு போவுது” என்று.

“அப்போல்லாம் அண்ணாச்சி வீட்ல அவ்ளோ வசதி. நாங்க எல்லாரும் அவரு வீட்லதான் போயிக் கெடப்போம். அந்த அக்கா எங்கள அப்படி பாத்துக்கும். விதவிதமா சாப்பிடுறதுக்கு செஞ்சு தரும். விடிஞ்சதுல இருந்து அடையிற வரைக்கும் அவுக வீட்லதான். அப்போ அண்ணாச்சி வீடு பெரிய தெருவுல இருந்துச்சு. எங்க வீடுந்தான். அண்ணாச்சி வீடே இருக்கும் ஒரு பெரிய கல்யாண மண்டபம் பெருசு. அப்படி இருந்தவரு.”

திடீரென்று சத்தம் கேட்கவும் திரும்பிப் பார்த்தேன். அண்ணாச்சி. கையில் ஒரு தட்டு அதில் நான்கு கிளாசுகள். “என்னம்மா உம்புருசன் உன்ன பயம்புருத்தீட்டு இருக்கானா? அவன் சொன்னதெல்லாம் கேட்டுட்டுத்தான் இருந்தேன்” அவளுக்கு தமிழ் தெரியாது என்பதை அவர் மறந்திருந்தார். நான் ஞாபகப்படுத்தவும் “நா ஒரு கூறுகெட்டவன்டே. வயசு ஆக ஆக குண்டி மறந்து போயிருது” என்று சொல்லிக் கொண்டே காபியை நீட்டினார். விளையாடிக் கொண்டிருந்த என் குழந்தைகளிடம் “ஏ பேரப் புள்ளைகளா இங்க வாருங்க, வந்து ஒரு வாய் காப்பி குடிச்சிட்டு விளாடுங்க” என்று கூப்பிட்டார். சட்டென்று என்னிடம் “புள்ளைக இதெல்லாம் குடிக்குமாடே?” என்று கேட்டார். “என்ன அண்ணாச்சி இப்படி கேட்டீங்க? அதெல்லாம் குடிப்பாங்க” என்றேன். “இல்ல இப்ப உள்ள புள்ளைகெல்லாம் ரொம்ப சுத்தம் பாக்குமே. அதுவும் பம்பாய்ப் புள்ளைக வேற? அதான் இந்த கெழவன் போட்ட காப்பிய…….” என்று முடிப்பதற்குள், “ஐயோ அண்ணாச்சி அப்படி எல்லாம் சொல்லாதீங்க,” என்று சொல்லி ஒரு கிளாசை நான் எடுத்து, மற்ற மூன்றையும் மனைவியிடமும் குழந்தைகளிடமும் கொடுத்தேன். “ஏ பேரப் புள்ளைகளா இங்கன வாங்க, தாத்தா ஆத்தித் தாரேன்” என்று சொல்லி இரண்டு கிளாசு காபியையும் எடுத்து அருகில் கிடந்த விசிறியால் வீச ஆரம்பித்தார். நான் காபியை உறிஞ்சினேன். சீனி கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது.

காபியை குடித்து முடித்த குழந்தைகள் “daddy it’s so boring here. come lets move” என்று ஆரம்பித்தனர். “என்னடே எம்பேரப் புள்ளைக என்ன சொல்லுதுக?” என்று கேட்டார். “அவங்களுக்கு போர் அடிக்காம், அதான்” என்று இழுத்தேன். “அட இவ்ளோதானா? சரி நீ ஒன்னு பண்ணு, பொண்டாட்டி புள்ளைகள வேணா நம்மூரு கோவிலுக்குப் போயிட்டு வரச் சொல்லு. நா வேணா ஒரு ஆட்டோ சொல்லவா?” என்றார். “இல்ல அண்ணாச்சி, கார் வெளில தான் நிக்கி அதுல வேணா போயிட்டு வரச் சொல்றேன்” என்று சொல்லிவிட்டு டிரைவருக்கு போன் செய்தேன். “கோயிலுக்கு போயிட்டு நேரா இங்க வரச் சொல்லீரு. வெளில கண்டத கழுதையும் வாங்கிச் சாப்ட்ராம, மத்தியானம் இங்கதான்” என்றார். சரி என்று தலையாட்டிவிட்டு அவர்களை காரில் ஏற்றிவிட்டு நான் மீண்டும் வீட்டிற்குள் வந்தேன்.

“அண்ணாச்சி தப்பா நெனச்சிக்காதீங்க, வருமானத்துக்கு?” என்று கேட்கவும் “அது அப்படியே ஓடுதுடே, எல்லாம் அத நம்பித்தான்” என்று பட்டறைக் கல்லை நோக்கிக் கை காண்பித்தவர் “ஏதாவது பத்தவைக்கிற வேல வரும், அதுல கிடைக்குற அஞ்சு பத்த வச்சு அப்படியே வண்டி ஓடுது. ஓடுற வரைக்கும் ஓடட்டும் பாப்போம்,” என்று சொல்லி சிரித்தார். சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு “ஆமா அக்காவ எங்கண்ணாச்சி?” என்று கேட்டேன். “அவளா இங்கதான் உள்ள தூங்கீட்டு இருக்கா,” என்று பூட்டிய அறையை நோக்கி கண்ணைக் காண்பித்தார். திரும்பிப் பார்த்துவிட்டு அமைதியாக இருந்துவிட்டேன்.

சற்று நேரத்திற்குப் பின் “என்னாச்சு நல்லாத்தான இருந்தீங்க, இப்ப எப்படி இப்படி?” என்று தயங்கியவாறே கேட்டேன்.

“இப்ப என்னடே இப்பவும் நல்லாத்தான இருக்கேன். அப்போ கையில கொஞ்சம் காசு இருந்துச்சு இப்ப இல்ல அவ்வளவுதான? காசு தான் போச்சே தவிர மானம் மரியாதை எல்லாம் அப்படித் தான்டே இருக்கு” என்றார்.

“அது சரி அண்ணாச்சி, அதான் எப்படி போச்சு?” என்று நான் இழுக்க, “அட அதுவா? எல்லாம் ஒழுங்காத்தான்டே போயிட்டு இருந்துச்சு, எப்ப ஊருக்குள்ள இந்த வெளியூர்க்காரப் பயலுவெல்லாம் நகக் கட வைக்க ஆரம்பிச்சானுவளோ அப்ப ஆரம்பிச்சதுதான் இந்தக் கேடு. கட வச்சிருக்கானுவலாம் கட, பொல்லாத கட. ஒரு பயலுக்காவது தங்கத்த ஒரசிப் பாக்கத் தெரியுமா? இல்ல ஒரசிப் பாத்து எத்தன டச்சு இருக்குன்னு சொல்லத்தான் தெரியுமா? வேண்டாம்டே, கொறஞ்சது தங்கமா பித்தளையானாவது பாக்கத் தெரியுமா? ஒரு மயிரும் தெரியாது. இவனுவெல்லாம் யாவாரம் பண்ணி? எல்லாம் இந்த நாசமாப் போற வெளம்பரம் பண்ற வேலயாக்கும். வெளம்பரம் பண்ணிப் பண்ணியே சனங்கள ஏமாத்தீட்டானுவோ. சரி, அவந்தான் அப்படி பண்றான்னா அத வாங்குற கூதி புள்ளைகளுக்காவது அறிவு வேணாம்? என்னத்தையாவது ஃப்ரியா தாராம்னா பின்னாலயே போயிர்றது. தாயோளி நேத்தைக்கு சேதாரம் இல்லன்னான், இன்னைக்கு கூலி இல்லங்கிறான், நாளைக்கு அது தங்கமே இல்லங்கப்போறான். நடக்குதா இல்லையான்னு பாரேன். பட்டாத்தான் இந்தக் கூதிபுள்ளைகளுக்கும் ஓர்ம வரும்.

“என்னமோ ஹால் மார்க்குங்கான், 916 ங்கான் எதுவா இருந்தாலும் இந்த காந்தி ஆசாரி செஞ்ச நக கிட்ட வந்து நிக்க முடியுமாடே? இல்ல நிக்க முடியுமான்னு கேக்கேன்? என்னடே ஊமையா இருக்க? வாயத் தொறந்து சொல்லேன். ஒத்த காத்த அறுத்து வச்சிர்றேன் எவனாச்சும் குத்தம் கண்டு புடிச்சாம்னா. தங்கங்கிறது வீட்ல தங்கணும்டே. அதுக்கு ஒரு கை ராசி வேணும். என்னமோ இந்த பான்சி கடையில போயி வாங்குற மாதிரி வாங்குதுக இப்போல்லாம், அதான் எல்லா நகையும் பாங்குல இருக்கு. ஒரு மூதியாது ரோட்ல நக போட்டு போதா பாரு? அப்போல்லாம் பொம்பளைக வெளில வந்தாலே சும்மா தக தகன்னு மின்னுங்க. ஏன்னா நக வீட்ல தங்குச்சு. நாடு எங்கயோ போயிட்டு இருக்கு. அதுக்கு ஒரு அழிவு எப்போ வரும்னு தெரியல. ஒங்க அப்பாட்டப் போயி கேளு நம்ம கை ராசிய. சொல்லுவாரு. ஒங்க அம்மா போட்ருக்காளே தாலி அது நா செஞ்சதுதான். வருசம் என்னாச்சு? இன்னும் அப்படியே கெடக்கும் பாரு” என்றார்.

“எங்க அம்மா தாலிய செஞ்சது மட்டும் நீங்க இல்ல, அது இப்போ அவங்க கழுத்துல கெடக்குறதுக்கே நீங்க தான் காரணம்” என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.

பேசிக் கொண்டிருந்ததில் நேரம் சென்றதே தெரியவில்லை. கோவிலுக்குச் சென்ற மனைவியும் குழந்தைகளும் திரும்பி வர, மணி மதியம் ஒன்றாகி இருந்தது. குழந்தைகள் உள்ளே வரவும் “எம் பேரப்புள்ளைகளுக்கு பசிக்கா?” என்று கேட்டார். “சரி நீங்க செத்த இருங்க நா போயி நம்ம ஐயர் கடேல சாப்பாடு வாங்கியாந்துறேன்” என்று சொல்லிவிட்டு ஒரு வயர் கூடையை கையில் எடுத்துக் கொண்டார். நான் எவ்வளவோ மறுத்தும் அவர் கேட்பதாக இல்லை. அதற்குமேல் என்னால் அவரை வற்புறுத்தவும் முடியவில்லை. வெளியில் சென்றவர் திரும்பி வந்து, “நம்ம டிரைவர் தம்பியையும் உள்ள உக்காரச் சொல்லு, அவருக்கும் சேத்து வாங்கியாந்துறேன்,” என்று சொல்லிவிட்டு, “நம்ம பேரப்புள்ளைக பிஸ்கோத்து சாப்டும்லா?” என்று கேட்டவாறே சென்றார்.

உள்ளே வந்த டிரைவர் அங்கும் இங்கும் பார்த்துவிட்டு “யார் சார் இவரு?” என்று கேட்டார். “சுருக்கமாச் சொல்லனும்னா நா இன்னைக்கு இந்த நெலமைல இருக்குறதுக்கு இவருதான் காரணம்” என்றேன். அவருக்குப் புரிந்திருக்காது என்று எனக்குத் தெரியும். அவர் முகமும் அவ்வாறே காட்டியது.

“இவரு பட்டறைக்கு எதுத்த கடைதான் நம்ம கடை அப்போ. நல்லா வசதியாத்தான் இருந்தோம். இவரு அளவுக்கு இல்லனாலும், ஏதோ கொஞ்சம் சுமாரா வாழ்க்கை நல்லா போயிட்டு இருந்துச்சு. தேவையில்லாம லாரி ஒன்னு வாங்குனோம். அதுல புடிச்சது சனி. ஒவ்வொன்னா வித்து வித்து கடைசியில எல்லாத்தையும் வித்துட்டோம். வீடு, லாரி, காரு, தோட்டம், கடை எல்லாத்தையும். மிஞ்சுனது எங்கம்மா கழுத்துல கிடக்குற தாலி மட்டும்தான். ஊரு பூராம் கடன். வெளியில தல காட்ட முடியல. எங்கப்பா தற்கொலை செஞ்சுக்கக்கூடப் போனாரு. கடைசியா ஒருவழியா அவரப் புடிச்சுக் காப்பாத்தி, இருக்குற கொஞ்சநஞ்சத்தையும் வித்து கடன அடச்சிட்டு, அதுக்குமேல இந்த ஊருல இருந்தா நல்லாருக்காதுன்னு ராத்திரியோட ராத்திரியா ஊரக் காலி பண்ணீட்டு போலாம்னு கெளம்புனோம். எங்க போறது எப்படி போறது ஒன்னும் தெரியாது. எங்கப்பா கையிலயும் அஞ்சு பைசா இல்ல. ரொம்ப நேரம் யோசிச்சிட்டு வேற வழியே இல்லாம எங்கம்மா தாலிய கழட்டி இவர்ட்ட விக்கலாம்னு ராத்திரி ஒரு மணிக்கு இவரு வீட்டுக் கதவத் தட்டினோம்.

“கதவத் தொறந்து உள்ள கூப்பிட்டுப் பேசுனவரு எங்கள அந்த ஏச்சு ஏசுனாரு. அந்த அக்காவும் எவ்வளவோ சொல்லுச்சு. நாங்க பிடிவாதமா இருந்ததுனால அவங்களால எங்களத் தடுக்க முடியல. ஆனா தாலிய மட்டும் வாங்கவே மாட்டேன்னு சொல்லிட்டாரு. அந்தக்கா எங்கம்மாவ சாமி ரூம்குள்ள கூட்டீட்டுப் போயி எங்கப்பாவக் கூப்ட்டு தாலிய மறுபடியும் கட்டச் சொல்லி, திருநீருபூசி கையில ரெண்டாயிரம் பணம் கொடுத்துச்சு. அண்ணாச்சி கூடவே நின்னாரு. அந்தக்கா என்ன கட்டிப்புடிச்சு அழுத்துச்சு. போம்போது அண்ணாச்சி என் சட்டப் பையில நூறு ரூபாவ திணிச்சாரு. அன்னைக்கு இந்த ஊரவிட்டுப் போனவங்கதான் தெக்கு தெச தெரியாம எங்கெல்லாமோ போயி கடைசியா பம்பாய் போயி சேந்தோம். அதுக்கடுத்து தான் வாழ்க்கை இப்படி மாறிப் போச்சே.”

நான் சொல்லி முடிக்கவும் அண்ணாச்சி வரவும் சரியாக இருந்தது. எங்களை அதே பாயில் அமரச் சொல்லி, வாங்கி வந்த சாப்பாடு பொட்டலங்களைப் பிரித்தார். மூன்று சாப்பாடுதான் இருந்தன. டிரைவருடன் சேர்த்து நாங்கள் ஐவரும் அதைப் பங்கிட்டுச் சாப்பிட்டோம். குழந்தைகளுக்கு ஒரு பிஸ்கட் பாக்கட்டும் வாங்கி வந்திருந்தார். அண்ணாச்சியோ, “எனக்குப் பசி இல்ல நா அப்பறமா சாப்பிட்டுக்கிறேன்,” என்று சொல்லிவிட்டார்.

“ஒனக்கு ஞாபகம் இருக்கா இல்லையான்னு தெரியலடே நம்ம பானு சித்திய. நம்ம வீட்டுக்கு ரெண்டு வீடு தள்ளி இருந்துச்சுகளே”. என் முகத்தைப் பார்த்து அவரே கணித்திருக்க வேண்டும் எனக்கு ஞாபகம் இல்லை என்று. “என்னப்பா ஆளு நீ? அட நம்ம மொய்தீன் பழக்கட. பஸ் ஸ்டாண்டுல இருந்ததே” என்று சொல்ல, “ஆமா ஆமா” என்று ஞாபகம் வர தலையாட்டினேன். “ஒரு மாசத்துக்கு முன்னால வந்துருந்துச்சுகடே கொழந்த குட்டிகளோட. இப்போ எங்கயோ துபாய்ல இருக்குகளாம். ரொம்ப நேரம் பேசிட்டு இருந்துச்சுக, பழைய கதை எல்லாம். அது மக நிசா இருக்காளே சின்ன வயசுல கிளிஞ்ச சட்டையும் பாவாடையும் தான் போட்டுட்டு வந்து நிக்கும் நம்ம வீட்ல. பாதிநாளு நம்ம வீட்லயேதான் கெடக்கும். பாவம் அந்த காலத்துல அதுக வீட்ல குடிக்க நல்ல கஞ்சி கெடையாது. மொய்தீனும் என்ன பண்ணுவான்? நாலும் பொட்ட புள்ளைகளா பெத்து வச்சிருந்தான். பேசிச் சிரிச்சிட்டு இருந்துச்சுக. கடைசி போகேல பொசுக்குன்னு அழுதுட்டுக, நாங்க கெடக்க கெடையப் பாத்துட்டு. சும்மா சொல்லப்பிடாதுடே பாசக்கார சனங்கதான். பழச ஞாபகம் வச்சு தேடி வந்துட்டுக பாரேன். என்ன இருந்தாலும் பழைய ஆளுக பாத்தியா? தாயும் புள்ளயாவுமுல்லா பழகுனோம். சொல்லச் சொல்ல கேக்காம போகேல முழுசா 50,000 ரூவாவ தூக்கி கையில திணிச்சிச்சுக. வேணாம்னு எவ்வளவோ சொல்லிப்பாத்தேன். கடைசியில அந்த சாமி படத்துக்கு முன்னால வச்சிட்டுப் போயிட்டுக. இப்படிலாம் சனங்க இருக்கறதுனால தான்டே நாட்ல இன்னும் மழை பெய்யுது” என்றார்.

சாப்பிட்டுக் கை கழுவிய பின்னர் மணி பார்த்தால் இரண்டாகி இருந்தது. உடனே புறப்பட்டால் தான் இருட்டுவதற்குள் ஊர் செல்ல முடியும் என்று எண்ணி, “அண்ணாச்சி அப்போ நாங்க கிளம்புறோம்,” என்றேன். “என்னடே சாப்ட்ட ஒடனே கெளம்புறேங்குற? சாந்தரம் வர இருந்து காப்பி கீப்பி குடிச்சிட்டுப் போறது?” என்றார். “இல்ல அண்ணாச்சி அடுத்தவாட்டி கண்டிப்பா அம்மாவையும் அப்பாவையும் கூட்டீட்டு வாரேன். அம்மா, அப்பாட்ட உங்களப் பாத்ததா சொன்னா ரொம்ப சந்தோசப்படுவாங்க” என்றேன். “அட, எனக்கும் தான்டே சந்தோசம். அடுத்தவாட்டி அம்மா அப்பாவோட நாலு நாள் இங்க தங்குற மாதிரி வாங்க” என்றார். மேலும் “பேரப்புள்ளைகளுக்குப் போர் அடிக்காத மாதிரி பாத்துக்கலாம்” என்றார்.

“சரி அண்ணாச்சி” என்று சொல்லிவிட்டு “எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க” என்று சொல்லி நாலு பேரும் அவர் காலில் விழுந்தோம். டிரைவரும் சேர்ந்து கொண்டார். “அட என்னடே இது? இதெல்லாம் எதுக்கு? நம்ம புள்ளைக எங்க இருந்தாலும் இந்த கெழவன் ஆசி உண்டுடே” என்றார். மனைவி ஓடிச் சென்று சாமி படத்தின் அருகில் இருந்த திருநீர் கிண்ணத்தை எடுத்து அவரிடம் கொடுக்க, அதிலிருந்த திருநீரை எடுத்து அனைவரின் தலையிலும் தூவி நெற்றியில் பூசி விட்டார். பின் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, “பிள்ளைகளுக்கு கொடுக்க ஒன்னும் இல்லயேடே” என்று சொல்லி வேஷ்டியில் முடிந்து வைத்திருந்த சில்லரைக் காசுகளை எடுத்து அதிலிருந்து ஆளுக்கு ஒரு ரூபாய் விகிதம் “தாத்தா old man poor man” என்று சொல்லிக் கொடுத்தார், சிரித்துக் கொண்டே. வாங்கிய குழந்தைகள் என் மனைவியிடம் அதைக் கொடுத்தனர்.

நாங்கள் கிளம்புவதற்காகத் தயாராக நிற்கையில் பூட்டி இருந்த அறையிலிருந்து இருமல் சத்தம் கேட்கவே, “முழிச்சிட்டா போல, அவளுக்குத்தான் கொஞ்சம் ஒடம்புக்கு முடியல. சுகரு கூடி ஒத்தக் கால எடுக்க வேண்டியதாப் போச்சு. நாலு வருசம் ஆச்சு. எல்லாம் படுக்கையிலதான். இருந்த கொஞ்ச நஞ்ச காசும் அதுலயே போச்சு. அந்த கடவுள்ட்ட என்னெல்லாமோ வேண்டுனேன். கடைசியில இப்ப வேண்டுறதெல்லாம் ஒன்னுதான். எப்படியாது எனக்கு முன்னால அவளக் கூட்டீட்டுப் போயிருன்னு. பாவம் கழுத அவளுக்கு நம்மள விட்டா வேற ஆளு கெடையாது பாத்துக்கோ. மூதிக்கு ஒன்னும் தெரியாது. நாமளாது காசு பணம் சேக்கலாட்டியும் நாலு ஆட்கள சேத்து வச்சிருக்கோம். மண்டையப் போட்ட அன்னைக்கு தூக்கிக் கொண்டு போயி போட்ருவானுவோ. அனாதையா விட்ற மாட்டானுவன்னு நெனைக்கேன். நம்பிக்கை இருக்கு. அப்படி விட்டுட்டா அது என்ன மூதி பழக்கம்?” என்று சொல்லிவிட்டு, “எம்மா… எம்மாடி கொஞ்சம் தண்ணி குடிக்கியா?” என்று கேட்டவாறே அறைக் கதவைத் திறந்து உள்ளே சென்றார். நாங்களும் பின் தொடர்ந்தோம்.

அறையை நெருங்க நெருங்க இருமல் சத்தம் அதிகரித்துக் கொண்டே இருக்க, உள்ளே சென்றவர் மூடியில் ஊற்றி ஏதோ மருந்தைக் கொடுத்தார். இருமல் மருந்தாக இருக்க வேண்டும். இருமலும் குறையத் தொடங்கியது. வெளியில் நின்று கொண்டிருந்த நானும் மனைவியும் உள்ளே சென்று அவளைப் பார்த்தோம். இருபது வருடங்களுக்கு முன்பு தலை நிறைய பூவும், நெற்றி நிறைய பொட்டும், மஞ்சள் பூசிய முகமுமாய் நான் பார்த்து வளர்ந்த அதே லட்சுமி அக்கா கண்களைத் திறக்க மனமில்லாமல் படுத்துக் கிடந்தார். முறுக்குச் செயின், கல் நெக்லஸ், ரெட்டவடச் செயின் என்று நிறைந்திருந்த அவர் கழுத்தில் இப்போதுமெலிதாய் ஒரு சரடு மட்டும்தான் மிஞ்சியிருந்தது.

ராமதூதம்

ரா. ராமசுப்பிரமணியன்

ராமன் பட்டாச்சாரியார் தாடியை மழித்து ஒரு மூன்று வாரங்கள் ஆகிறது. அவரை எப்போது பார்த்தாலும் நன்கு தாடியை மழித்து தலைமுடியில் டை அடித்து வகுடு எடுத்து வாரி நெற்றியில் தென்கலையார் திருநாமமும் ஸ்ரீசூர்ணமும் இட்டுக்கொண்டு இருப்பார். கோவிலுக்கு வருபவர்களுக்கே ஸ்ரீனிவாச பெருமாளை சேவிப்பதா இல்லை பட்டாச்சாரியாரை சேவிப்பதா என்ற குழப்பம் வருமென்றால் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். அவர் தாடியை மழிக்காமல் சோகத்தில் இருக்கிறார் என்பதற்கு பல காரணம்.

அவர் மகன் இன்ஜினியரிங் படித்துவிட்டு சென்னைக்கு வேலை பார்க்கச் சென்று இரண்டு மாதங்கள் ஆகிறது. வீட்டில் ஓடித் திரியும் ஸ்ரீலக்ஷ்மியும் சமஸ்கிருதத்தில் எம். ஏ. படிக்க சென்னை சென்று மூன்று மாதமாகிறது. முதல் வாரம் வந்தபோது இருந்தது நான்காவது வாரம் வந்த ரகுநந்தனின் தலையில் காணோம். அவன் உச்சித் தலையில் இருந்து நீண்டு வளர்ந்திருந்த பின்சிகையை கிராப் பண்ணிவிட்டான். காலையில் பெருமாள் திருமஞ்சனத்துக்கும் நைவேத்யத்துக்கும் பால் தரும் மதுஸ்ரீயைப் பராமரிப்பதற்கு ஆளில்லாமல் அங்கிருந்து தொழுவத்திற்கு சிவசங்கரன் இழுத்துச் சென்றதும் கோவில் வாசலில் வாட்ச்மேனாக இருந்த சுப்பையா காச நோயால் இறந்த துக்கம்கூட இருக்கலாம்.

காலையில் குளித்து முடித்து ஏழு மணிக்கெல்லாம் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்ய கோவில் கதவைத் திறந்து கொண்டு ஆஜராகும் ராமன் பட்டாச்சாரியார் ஏனோ முகில்வண்ணனிடம் முற்றிலுமாக அதனை விட்டுக் கொடுத்து கோவில் பின்புறத்தில் இருக்கும் தெப்பக்குளத்தைப் பார்த்தபடி நரை கூடிய தலைமுடி காற்றில் அசைந்தாடியபடி உட்கார்ந்திருக்கையில் அம்மங்கார் பில்டர் காபி சொம்பைக் கொண்டு வந்து தரையில் “டொக்” என வைத்ததும் அதில் இருந்து வந்த காபியின் மணம் அவர் அம்மங்காரிடம் அதனைக் கேட்கச் செய்தது.

“முகிலன் வந்தாச்சா?”

“இன்னும் வரலை. வேணும்னா போன் செஞ்சு பாக்கிறேன்”

ராமன் பட்டாச்சாரியார், தமிழ் பண்டிதர். அந்தக் கோவிலில் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் கைங்கர்யம் செய்து கொண்டு இருக்கிறார். காலை மாலை தவிர்த்த தருணங்களில் ஓர் அரசு பள்ளியில் தமிழாசிரியர். அந்தக் கோவில் மூலவர் திருவேங்கடமுடையார் எனப்படும் ஸ்ரீநிவாச பெருமாள். உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி கூடிய வரதராஜ பெருமாள். மிகவும் சின்ன கோவிலாய்த்தான் இருந்தது. உற்சவர், மூலவர் தவிர்த்து ஓரத்தில் சிறிய திருவடி எனும் அனுமனும், மூலவருக்கு சன்னதிக்கு முன் பெரிய திருவடி எனும் கருடனும் மட்டும்தான் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். கருடன் எண்ணையில் ஊறியிருப்பார் என்றால் அனுமன் வெண்ணையிலும் செந்தூரத்திலும். அனுமன் சன்னதிக்கு மேல் அமைந்திருக்கும் வேலைப்பாடுகளில் “ஸ்ரீ ராம ஜெயம்” எழுதப்பட்ட காகிதச் சுருள் தோரணங்களும், அதன்கூடவே நூலாம்படை பந்தல்களும் படர்ந்து இருக்கும். இதைத் தவிர உற்சவர் கோவிலுக்குள் பெருமாள் சுற்றி வர ஒரு சின்ன தோளுக்கினியான் எனப்படும் சப்பர பல்லாக்கும் பூஜை பாத்திரங்களும் சொம்புகளும் நிறைந்திருக்கும். கோவிலுக்குள் நுழைகையில் இருக்கும் நடையின் வலது பக்க அறையில்தான் பெருமாளுக்கு தளிகை நடக்கும் மடப்பள்ளி. விசேஷ நாளென்றால் புளியோதரை மணம் கோவில் பிரகாரம் எங்கும் வீசும்.

கோவில் உடமையாளார் திரு. வேணு நாயக்கருக்கு பிசினெஸ் ஓகோ என்று போனது தான் போனது கோவிலுக்கு கோலியனூரில் இருந்து ஆசாரியர் பட்டறையில் இருந்து கருட அனுமந்த வாகனங்கள் வந்திறங்கின. வாகனங்கள் வந்திறங்கிய உற்சாகத்தில் உற்சவம் நடத்தும் உத்வேகம் கூடியது. பத்து நாள் ப்ரஹ்மோற்சவம் என முடிவானதும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் கூடியது. பத்துநாள் உற்சவத்துக்கு இரு வாகனத்தில் பெருமாள் ஏளுவது இரண்டு ஆண்டுகளில் பட்டருக்கும் பக்தருக்குமே அலுத்து விட்டதால் உடனே அடுத்து நாகர், சந்த்ர பிரபை, சூரிய பிரபை, வெட்டுங்குதிரை, யானை, அன்ன பக்ஷி வாகனம் வந்திறங்கின. வாகனத்தில் வரதராஜரையே ஏளப்பாடு செய்யவேண்டாமே என்று தான் அடுத்த இரு வருடத்திலேயே ராதே கிருஷ்ண விகிரஹமும், சீதா லக்ஷ்மண ஆஞ்சநேய சமேத ராமர் விகிரஹங்கள் திண்டிவனத்தில் வார்த்தெடுக்கப்பட்டு வந்திறங்கின. அதன் பின் தான் சில சமயங்களில் அனுமந்த வாகனத்தில் ராமர் ஏள ஆரம்பித்தார்.

சொம்பு நிறைய காபி குடிப்பது தான் ராமன் பட்டாச்சார்யாருக்கு வழக்கம். முன்பெல்லாம் ஏழு மணிக்கே நடை திறந்து பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்தபின் ஆபிசுக்கு போக வேண்டும் என்பதால் காலை ஐந்து மணிக்கே எழுந்து ஸ்நானம் செய்துவிட்டு முதலில் வீட்டு பெருமாளுக்கு பூஜை, பின் கோவில் பெருமாளுக்கு திருமஞ்சனம் முடித்து அலங்காரம் செய்து தளிகை நைவேத்தியம் முடிந்தபின் வேலைக்குச் சென்று விடுவார். ரகுநந்தன் படித்துக் கொண்டு இருக்கும்போது வீட்டு பூஜையை சில நேரங்களில் பார்ப்பதும் அவ்வப்போது கோவில் பூஜைக்கு கீழ்சாந்தியாய் வேலை செய்வதுமாக இருப்பான். இப்போது அவனும் இல்லை. முகிலனோ சைக்கிளில் தூரத்தில் இருந்து வரவேண்டும். காபி சொம்பை அடுக்களையில் வைத்து விட்டு ஹாலில் டிவி முன் வந்து அமர்ந்தார். ஹாலில் சுவரில் பெருமாள் படங்கள், கிருஷ்ணர் படங்கள், ராமர் படங்கள், தசாவதாரங்கள், தனி அவதார படங்கள், வைஷ்ணவ ஆசார்யர்கள் படங்கள், திவ்ய தேச மூலவ உற்சவ மூர்த்திகள், ஆழ்வார், வைணவ பெரியார்கள் படங்கள் என பிரேம் செய்து மாட்டப்பட்டிருந்தன. ஒவ்வொன்றாய்ப் பார்த்து வந்த ராமர் பட்டாச்சாரியாருக்கு ராதே கிருஷ்ணர், கிருஷ்ணர் சத்யபாமா, காளிங்க கிருஷ்ணர், நவநீத கிருஷ்ணர், புன்னைமர கிருஷ்ணர் எனத் தென்பட்டது. கூடவே ராமர் பட்டாபிஷேக படமும்.

குழந்தை கிருஷ்ணர், தேரோட்டி கிருஷ்ணர், ராதே கிருஷ்ணர் அனைவரும் கடவுள் என இருந்ந்தாலும் ஏனோ ராமர்களில் ராஜாராமனே கடவுள் என வணங்கப்படுவதாய் தோன்றியது. எதிரில் இருந்த ஸ்டூலில் இருந்த ரிமோட்டை அழுத்தியதும் சினிமா பக்தி பாடல்கள் ஓடிக்கொண்டிருந்தன. ஒவ்வொரு அலைவரிசையாய் மாற்றும்போது சில ஸ்வாமியார்களின் அருளாசிகள் ஓடிக்கொண்டு இருந்தன. திடீர் என்று ஒரு சானலில் “பால கனக மய” என்ற தியாகராஜர் பாடல் ஓடிக்கொண்டு இருந்தது.

அது சினிமா பாடல். கீழே சாகர சங்கமம் என்று படத்துடைய பெயர் போடப்பட்டிருந்தது. தெலுங்கு சேனல். மேடையில் ஒரு பெண் நன்கு பரத நாட்டியம் ஆடிக்கொண்டு இருந்தாள் . ஓரத்தில் ஒரு பெண் நல்ல கமகத்துடன் பாடுவதாய் பாவனை செய்தாள். பல்லவி முடிந்து சிட்டை ஸ்வரங்கள் வீணையிலும் வயலினிலும் ஒலித்துக்கொண்டு இருந்தது. இறுதியில் மிருதங்கம் வாசிப்பவர் முத்தாய்ப்பு வைத்து முடித்தார். இடையில் சிட்டை ஸ்வரம் முடிந்து “ரா… ரா…” என்று அனுபல்லவி ஆரம்பித்தபோது காட்சிகள் மேடைக்கும் சமயலறைக்கும் மாறியதும் மஞ்சு பார்கவியும் கமலஹாசனும் அபிநயம் பிடித்தபடி இருந்தபின் “தேவாதி தேவா ரா.. ரா.. மஹானுபாவா” என்று வரிக்கு கோதண்டம் ஏந்திய ராமரை கமலஹாசன் அபிநயம் பிடித்தபோது அப்படியே ராமரை பார்ப்பது போல் இருந்தது. முகத்தில் மீசை மட்டும் கொஞ்சம் இடித்தது. ஆனால் ராமர் க்ஷத்ரிய தெய்வம் என்பதால் அவருக்கு மீசை உண்டு என்று அவருடைய ராமபக்தி தர்க்கம் செய்தது. பாடல் முழுவதும் முடிந்தபின்னும் பாடலை முணுமுணுத்தபடி அங்கவஸ்திரத்தையும், நூல் துண்டையும் தோளில் போட்டுக் கொண்டு கிணத்தடிக்கு குளிக்கச் சென்றார்.

அந்த கோவிலில் ஒரு மாதத்துக்கு முன்புதான் ப்ரஹ்மோற்சவம் முடிந்தது. பொதுவாய் ஒவ்வொரு முறையும் அவர்தான் ஆஸ்தான அத்யந்த பட்டர். ஆனால் அந்த வருடம் முழுக்க ஏதோ ஒரு வகை துக்கம் அவருள். பெருமாள் தெருவில் உலா வந்தபோதுகூட கோஷ்டியில் இல்லாது கோவில் வந்திருந்த பக்த நண்பர்களுடன் அரசியல் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் ஏழாம் நாளன்று வேடுபறி உற்சவம் நடந்தபோது பெருமாளின் கால் தண்டையை திருமங்கை ஆழ்வார் பறித்த காட்சி அரங்கேறியபோது கோஷ்டியுடன் சேர்ந்து,

“வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால் பெருந்துயரிடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு அவர்தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடியுய்வதோர் பொருளால் உணர்வெனும் பெரும்பதம் தெளிந்து
நாடினேன் நாடி நான்கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்”

என்று பாசுரம் பாடி கண்ணீர் மல்கினார்.

அன்று அதற்காகவே ஒரு நாள் லீவு போட்டுவிட்டு தலையில் டை அடித்து நெற்றியில் திருநாமம் இட்டுக் கொண்டு அவருடைய மஞ்சப்பையில் திவ்ய பிரபந்த புத்தகங்களும், வேத மந்திர மஞ்சரிகளும் எடுத்துக் வைத்துக் கொண்டு செல்போனில் வரும் அழைப்புக்கும், கோவில் வாசலில் வரவிருக்கும் காருக்கும் காத்திருந்தார். அழைப்பு வந்த ஐந்தே நிமிடத்தில் வாசலில் வந்து நின்ற காரில் இருந்து ஹார்ன் சத்தம் வந்தது. காரின் முன் சீட்டில் ட்ரைவர் மாரிமுத்துவும், முகில்வண்ணனும் இருந்தனர். பின் சீட்டில் அமர்ந்த ராமன் பட்டாச்சாரியார் அலுப்பில் கண் அசந்து எழும்பியது திண்டிவனத்தில்தான். காரை விட்டு இறங்கியபின் மேலே ஒரு போர்டில் நீல வண்ண எழுத்துருவில் “திருமுருகன்” என்று எழுதப்பட்டிருந்தது. கீழே “பொற்கொல்லர்” என்றும் எழுதப்பட்டிருந்தது.

அந்த இடத்துக்குள் செல்ல ஆரம்பித்தபோது உள்ளிருந்து அனல் அடிக்க ஆரம்பித்தது. திருமுருகனும் அவருடைய சகாக்களும் சேர்ந்து கொண்டு அந்த பொன்னொளிர் திரவியத்தை மோல்டுகளில் ஊற்றியபோது விராட புருஷனின் அவய லக்ஷணங்களை விவரிக்கும் மந்திரங்கள் ஓதப்பெற்றது. அன்றிலிருந்து ஏழாம் நாள்தான் சீதா, லக்ஷ்மண, ஆஞ்சநேயர் சமேதராய் கோவிலுக்கு வந்திறங்கினர். வந்திறங்கிய நாள் முதலாய் ஒவ்வொரு மாசம் வரும் புனர்பூச நட்சத்திரமன்று ராமருக்கு திருமஞ்சனமும் சிறிய தளியலும் எப்படியாவது நடந்தேறியது. கோவிலுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று கேட்டு வரும் பக்தரை ராமருக்கு செய்ய வைத்து விடுவார். ராமநவமி அன்று பானகமும், நீர்மோரும் அண்டாவில் செய்து பக்தகோடிகளுக்கு தருவார். வரதராஜ பெருமாளுக்கே பொன்னில் ஆபரணம் இல்லை என்றாலும் ராமர் விக்ரஹத்துக்கு பொன்னால் ஆன ஆரம் ஒன்றை வாங்கித்தர வேணு நாயக்கரிடம் வேண்டினார்.

ராமரும் அவருக்கும் நித்யம் அருள் புரிந்தார். ஒவ்வொன்றும் அருளினார். ஒவ்வொரு புனர்பூச நட்சத்திரத்துக்கும் எப்படியாவது ஒரு உபயதாரரை ஏற்பாடு செய்து பட்டாச்சாரியாருக்கு செலவில்லாமல் பார்த்து கொண்டார். அந்த பொன்னால் ஆன ஆரத்தை ராம விக்ரஹத்துக்கு போட்டு பார்த்து அகம் மகிழ்ந்தார் பட்டாச்சாரியார்.

அதன் பின் ஒரு நாள் காலை ஏழு மணிக்கு நடை திறந்து கர்ப்பகிரஹத்துக்கு முன் இருக்கும் சிறு முகப்பில் கண்ணதாசன் எழுதி எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த கிருஷ்ண கானங்களை ஸ்டீரியோவில் ஒலிக்கச்செய்து வால்யூம் திருகை மெல்ல திருகும்போது கோவில் கோபுரத்தில் இருந்த இரு ஒலிபெருக்கிகளில், “கோகுலத்தில் ஒரு நாள் ராதை கோபத்தில் ஆழ்ந்திருந்தாள்,” என்று பாடல் ஒலிப்பது கொஞ்சம் அவருக்கும் கேட்டபோது பக்கவாட்டில் இருந்த சன்னதியின் க்ரில் கதவைச் சேர்த்து பிடித்திருக்கும் பூட்டு எண்ணெய் வழிந்து கொண்டு திறந்தே இருந்ததைப் பார்த்து பதறினார்.
2.

ஸ்டூலில் இருந்த செல்போனில் அழைப்பு.

சற்று நேரத்தில் வாசலில் கார் வந்து நின்றது. காரில் மாரிமுத்துவும், முகில்வண்ணனும் வேணு நாயக்கரும் இருந்தனர்.

“கொஞ்சம் தெருமுக்குல இருக்குற பூக்கடைல வண்டிய நிறுத்துங்கோளேன்” என்றபடி காரில் ஏறினார் .

கடையில் இருந்த முண்டாசு கிழவர் பேத்தி கட்டி வைத்திருந்த பூப்பந்தினை ஒரு நீல கலர் ரப்பர் ஷீட்டை விரித்து அதில் அவ்வப்போது தண்ணீரை தெளித்து இருந்ததால் நீர்த் துளிகள் அதில் எஞ்சி இருந்தன.

பட்டாச்சாரியாரை பார்த்து மிகவும் சகஜமாக ஆள்காட்டி விரலை நீட்டி ஒன்றா என்றும் அடுத்த நடு விரலையும் நீட்டி இரண்டா என்றும் கேட்டார் காரில் இருந்து மோதிர விரலையும் சேர்த்து நீட்டி மூன்று என்று பதில் வந்தது. எதிரில் இருந்த பூப்பந்தில் மூன்று முறை முழத்தை அளந்து பக்கத்தில் இருந்த வாழை இலையை மடித்து ஓரத்தில் இருந்த வெள்ளை நூல் கண்டில் இருந்து நூல் இழுத்து அதை சுற்றி நீட்டி , “பதிவு உண்டா சாமி?” என்று கேட்டார்

“உண்டு”

கடையின் மேலிருந்து ஒரு வாழைக்குலையில் இருந்து தனியாக ஒரு வாழைப் பழ சீப்பை பிரித்து அதில் இருந்து இரண்டு பழத்தையும், வெற்றிலையும் களி பாக்கையும் சேர்த்து நீட்டினார் கிழவர் .

கார் உடனே கிளம்பி பஸ் ஸ்டாண்டின் எதிரில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் வந்து நின்றது.

அறைக்குள் நுழைந்த உடனே வேணு நாயக்கரும், ராமன் பட்டாச்சாரியாரும் இன்ஸ்பெக்டர் முன் அமர்ந்தனர்.

ராமன் பட்டாச்சாரியாரின் நெற்றியில் இருந்த நாமத்தை பார்த்துவிட்டு “சாமிக்கு சொந்தூரு ஏது?” என்று கேட்டார் இன்ஸ்பெக்டர்.

அவருடைய காக்கிச் சட்டையில் இருந்த வெள்ளை நிற பிளாஸ்டிக்கில் “ஏ. அல்போன்ஸ்” என்ற பெயரைப் படித்து அவருடைய நீண்ட மீசையில் இருந்த ஓரிரு வெள்ளை முடியையும் பார்த்து விட்டு, “திருநெல்வேலி பக்கத்துல ஸ்ரீவைகுண்டம்”

“ஸ்ரிவேண்டமா…. நமக்கு நாசரேத்தில்லா”

ஓரமாய் இருந்த அறைக்கு இருவரையும் கூட்டிக் கொண்டு சென்றார். அவருடைய ராமர், லக்ஷ்மணர், சீதை அனுமன் தென்பட்டதில் அவருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டதுக்கு மேலாக இன்னும் துக்கம் தான் மூண்டது.

லக்ஷ்மணருடைய கோதண்டமும் அதை ஊன்றி இருந்த கையும் முழுவதுமாக உருக்கப்பட்டிருந்தது. ராமருடைய பீடம் வெல்டால் அறுக்கப்பட்டிருந்ததால் சரியாக பெஞ்சில் நிறுவ முடியாமல் சுவரில் சாய்க்கப்பட்டிருந்தது. சீதையும், அனுமனும் மட்டுமே களவாண்டபோது இருந்த அதே உருவில் இருந்தனர்.

கண்ணீர் நிறைந்த முகத்துடன் அல்போன்சை பார்த்தபோது, “சாமி நம்மால மீட்க முடிஞ்சது இம்புட்டுதான். பழங்காலத்து ஐம்பொன் சிலைகள்தான் முழுசா கிடைக்கும். புதுசல்லாம் திருடுறதே ஐம்பொனுல்ல இருக்கிற தங்கத்தையும், வெள்ளியையும் உருக்கி எடுக்குறதுக்குதான”

எதுவும் பேசாமல் மஞ்சப்பையில் இருந்து பூ ஆரத்தில் எடுத்து சில கண்ணிகளை அறுத்து சிலைகளின் கழுத்தில் போட்டு, வெற்றிலை தாம்பூலத்தையும் கதலி பழத்தையும் பெஞ்சில் இட்டு நைவேத்தியம் செய்து விட்டு,

ஆபதாம் அப ஹர்த்தாரம் தாதாரம் சர்வ சம்பதாம்
லோகாபி ராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்

ஆர்த்தானம் ஆர்த்தி ஹந்தாரம் பீதானாம் பீதி நாஷனம்
த்விஷதாம் கால தண்டந்தம் ராமச்சந்திரம் நமாம்யஹம்

என்று ஸ்லோகத்தை முணுமுணுத்தார் பட்டாச்சாரியார்.

அலைகளுக்கப்பால்

பானுமதி. ந

அலைகடலில் மிதவைகள் கனவைச் சுமந்து செல்கின்றன. அலைகளை எதிர்த்தும் அவற்றுடன் இசைந்தும்,செல்லும் அவைகள் ஒளிக்கதிரில், புரிந்தும் புரியாமலும் புன்னகைக்கின்றன.

வண்ணக் கொடிகள் கட்டிய என் ஓடம் தனித்துத் தெரிகிறது. அதைக் காற்று சீண்டும்போதெல்லாம் கொடிகள் சீறுகின்றன, நிலைக்கு வருவதற்கு தவிக்கின்றன. பறக்காத கொடியில் பார்வை இலயிப்பதில்லை.

இதனுள் மூன்று பெட்டகங்கள் இருக்கின்றன. எல்லாம் உன் பொருட்டுத்தான்; ஒருக்கால் என் பொருட்டாகவும் இருக்கலாம். சொல்லவும், சொல்லாமல் சொல்லவும் எனக்கு நிறைய இருக்கிறது. உனக்கும் இருக்கலாம்? பின்னரும் அக்கரை போனது ஏன்?

மல்லியும், முல்லையும் சேர்ந்து பூத்த அதிசயம் நம் நட்பு. மாதவிப் பந்தல் மேல் பல்கால்  குயிலினங்கள் கூவின காலை. நீ எதிர் வந்தாய். நான் உன் எதிரில். ஆனால், எதிரியாக வரவில்லை. ஒரு தயக்கப் புன்னகை; தலையசைப்பில் நாம் மீண்டும் எதிரெதிர்.

எனக்குச் சிறு சபலம். என்னுடன் வருவாய் என. நடந்த பாதையில் மீண்டும் பயணிக்க மாட்டாயோ? அப்படியென்றால் அப்பால் அலைகள் தழுவும் கரையை நோக்கி ஏன் சென்றாய்? எனக்கு எதிர்த்திசை என்பதாலா? இந்தப் பிரிவினைகள் நமக்கு இல்லை என்று சொல்ல நான் தவித்தேன். நான் நீயாக நினைத்தபோது நீயும்         நானாக நினைத்திருப்பாய். அது நமது வெற்றி. அதன் நினைவாகத்தான் அந்த பச்சைப் பெட்டகம்.ஆனால் அது நிறையவேயில்லை. இருந்தும் அதிலுள்ள பவள மணிகளை நான் எண்ணிப் பார்க்கையில் என்னுள் உணரும் இன்பம் உன்னிலும் வருகிறதா என இந்தக் கடல் கேட்டு வந்து என்னிடம் சொல்லும்.

எனக்கோ நிறங்கள், ஆசைகள், ஆவல்கள். உனக்கு பிடித்தது வெள்ளை அல்லவா?அதனால்தான் இரண்டாம் பெட்டகத்தில் முத்துக்கள். அது என் இயல்பின் வெளிப்பாடு என்பதும் உனக்குப் பிடிக்கும் என்பதால்தான். நீ வெண்முத்துக்களைச் சேர்த்து உன் மார்பில் அணைப்பதை என் வெண்கொடி நிச்சயம் வந்து சொல்லும். எனக்குத் தெரியும், உன்னால் அனைவர் எதிரிலும் அதை எடுத்து அணிய முடியாதென்று. ஆனாலும் என் வெள்ளைக்கொடி உன் கைவிரல்கள் அதை அளைவதை என்னிடம் மீண்டு வந்து சொல்லும்.

ஏனோ, நாம் அன்றொரு நாள் தற்செயலாக நின்றிருந்த சிறு குளக்கரையோரம் மீண்டும் சென்றேன். அதில் மண்ணெடுத்து கோபி சந்தனமெனக் குழைக்கிறார்கள். வாசனைத் துளி ஏதுமில்லை. கலாபச் சந்தனத்தின் விழைவு இல்லை. மண்ணனிந்த நெற்றி அல்லது நெற்றி அணிந்த மண்ணா?

கோபிகைப் பெண்கள் கூட்டமாக மரணித்த குளம். உனக்குச் சொல்ல நினைத்த அந்தக் கதை இன்னமும் சொல்லப்படவேயில்லை.அந்தக் குறையாத அன்பை வார்த்தைகளால் நான் சொல்ல முயற்சித்தபோதெல்லாம் உன் கண்கள் என்னைக் கெஞ்சும்-சொல்லிவிடாதே, நான் மரணப்பட்டுப் போவேன் என்று.

வெராவலில் கண்ணனின் காலில் அம்பு பட்டுவிட்டதாம்; அவன் என்னமோ சிரித்துக்கொண்டுதான் இருந்தான். அவன் குழல்தான் காற்றில் மிதந்து அவர்கள் உயிரை உருக்கியது. அவன் இல்லாமல் போவதைத் தாங்காத அந்தப் பெண்கள் இறந்த கோபி தலாபில் உன்னை நினைத்துக் கொண்டு,ஏதோ தோன்றி இந்தக் கடலின் கரைக்கு வந்து அலைகள் மூலம் தோணியில் என் கனவுகளை உனக்குச் சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.

நீ ஏன் இங்கு வந்தாய்? என்ன கற்றுக் கொள்ள வந்தாய்? கேத்தி பந்தாரின் மௌனச் சந்துகளில் ஓடியோடி உன்னை அழைத்த குரல் எது? எந்தக் காற்றின் உயிரோசையாய் அதை நீ இனம் கண்டாய்? துறந்தும், மறந்தும், துடிப்பும், தவிப்புமாய் அந்தக் கண்களில் நான் கண்ட துயரம்தான் என்ன? அதை நான் எப்படி உணர்ந்தேன்? அந்தத் துயரை நீ அணை தேக்கிப் பாதுகாப்பது உன் வெற்றி என்று யார் சொன்னார்கள்? தன் வாதையை முழுதும் மௌனமாக சகித்துக் கொள்ளும் வனமிருகமா நீ?

உன் கோட்டைக் கதவுகளை நான் தட்டித் தகர்த்தெறிய உண்மையாக முயலவில்லை. அதன் சிறு பிளவொன்றில் கால் நுழைத்து, உடல் நுழைத்து ஒரு சிலிர்ப்பாக உன் உளம் நிறைக்க விழைந்தேன். யாசகன் கேட்காத உணவை கைகள் கோர்த்து இருத்தி வைத்துக் கொடுக்க ஏன் இந்த விழைவு என என் தன்மானம் தடுத்தது. வண்ணங்களின்  உலகை உனக்குக் காட்ட ஆசைப்பட்டேன்.

மண்ணையே பார்த்துக் கொண்டு இருக்கும் உனக்கு விண்ணைக் காட்ட வேண்டும். புல் வேய்ந்த குடிசையில் ஒரு வாரமேனும் உன் ஸுஃபி பாடல்கள் என் ஆத்மாவை துளைக்க வேண்டும். ஆகையால்தான் நீல வானை மட்டுமே காட்டும் வெற்றுப் பெட்டகமும் இதில் வைத்துள்ளேன். நீ அதை நிரப்பி அணுப்புவாய் என. நீ சிரிக்கிறாய் என நினைக்கிறேன். வரமாட்டாய் எனத் தெரிந்தும் என் மிதவைகள் பயணப்படுகின்றன.

சிந்து நதியின் மேற்பரப்பில் பட்டுத் தெறித்து நலுங்கும் நிலாக் கதிர்கள் இன்று மாலை அரபிக் கடலின் மேல் படர்ந்து அடர்ந்து சிவந்து அடங்கிய சூரியனின் கதிர்களல்லவா? இந்தக் கடலலையும் மீறும் அந்த துப்பாக்கி குண்டுகளை நீ இயக்கவில்லை என்று சொல்வதற்காகவாவது வருவாயா?

 

பெண் – கலைச்செல்வி சிறுகதை

கலைச்செல்வி

மணி பத்தாகி பத்து நிமிடங்கள்தான் கடந்திருந்தது. அதற்குள் அலுவலகம் சுறுசுறுப்பாக இயங்க தொடங்கியிருந்தது. கணவனிடம் சொல்லிக் கொள்ள கூட அவகாசமின்றி காரிலிருந்து இறங்கி கொண்டாள். முதல் தளத்திலிருந்து அவளது இருக்கை. அவசரமாக படிகளில் தாவி ஏறினாள். பச்சை மையில் கையெழுத்து போடும் தகுதி பெற்றவள். ஒரே மகன். பன்னிரண்டாம் வகுப்பிலிருந்தான்.

”மேடம்.. சிஇ உங்களை வர சொல்றார்..” என்றார் அலுவலக உதவியாளர் அவளுக்காக காத்திருந்தவர் போல.

”கடவுளே.. அதுக்குள்ள வந்துட்டாரா.. இருங்க பேக்க வச்சிட்டு வந்துடுறேன்..”

”பேக்க நான் வச்சிடுறன்.. சார் உங்களை ரெண்டு தடவை கூப்டுட்டாரு..”

அதுவும் உண்மைதான். பேச்சின் நுனியிலேயே கோபத்தை வைத்திருப்பார். முகாம் அலுவலர் என்பதால் வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள்தான் அலுவலகப் பணியிலிருப்பார். அதுவும் இத்தனை சீக்கிரம் வருவதில்லை. ஏதேனும் அவசர வேலையாக இருக்கும்.

“வீரபாண்டியன் சார் வந்துட்டாரா..?” பேக்கை அவனிடம் நீட்டினாள்.

”வந்துட்டாரு மேடம்.. அவரும் சிஇ ரூம்லதான் இருக்காரு..” பதட்டமான நடந்தாள். இவளும் வீரபாண்டியனும் இரண்டாம் மட்ட அதிகாரிகள். கதவை தள்ளிக் கொண்டு நுழைந்தாள். தலைமைப் பொறியாளர் அலைபேசியில் பவ்யமாக பேசிக் கொண்டிருந்தார். தலைமை அலுவலகம் அது. துறை செயலரிமிருந்து போன் வந்திருக்க வேண்டும்.

”வணக்கம் சார்..” தயக்கமாக கூறினாள். கண்கள் அவளை கவனித்தாலும் யோசனை அதிலில்லாதது போல வெற்றுப் பார்வை பார்த்தார். மீண்டும் “வணக்கம் சார்..“ என்றாள். படபடப்பாக இருந்தது. வீரபாண்டியன் இவளை பார்த்து வணக்கம் சொல்வது போல நெஞ்சு வரை வலது கையை உயர்த்தினான். தனது பக்கத்து இருக்கையை சைகையால் காட்ட, அவள் தலைமை பொறியாளரின் உத்தரவுக்காக காத்திருந்தாள். அலைபேசியை வைத்து விட்டு, விட்டதிலிருந்து தொடர்ந்தார். அவளை அப்போதுதான் கவனித்தது போல நாற்காலியை காட்டினார். கைப்பையிலிருந்து எடுத்து வைத்திருந்த குறிப்பேட்டையும் பேனாவையும் எடுத்து வைத்துக் கொண்டு அமர்ந்தாள் அவள்.

”அனொவ்ன்ஸ்மெண்ட்ல அறிவிச்ச வொர்க் பத்தின டீடெயில்ஸ் டிவிஷன்வைஸா ரெடி பண்ணனும்..” என்றார்.

”சரிங்க சார்..” என்றான் வீரபாண்டியன். அவளுக்கு விஷயம் பிடிப்பட்டது. சட்டசபை கூட போவதால் இந்த கெடுபிடி.

”எக்ஸ்பெட்டட் கொஸ்டின்ஸ் சர்க்கிள்ல கேட்டு வாங்கி.. ரிப்ளைய ரெடி பண்ணனும்..” சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்ப சாத்தியமுள்ள கேள்விகளுக்கு பதில் தயார் செய்ய வேண்டும். சட்டமன்றம் தொடங்கிய பிறகு கவனஈர்ப்பு.. கட்மோஷன்.. ஸ்டார்ட்.. அன்ஸ்டார்ட் என பல்வேறு ரூபத்தில் மூச்சு விட அவகாசமின்றி கேள்விகள் வந்து விழும். இவைகளெல்லாம் வீரபாண்டியனுக்கான பணிகள். அவனுக்கு கீழே மூன்று உதவிப்பொறியாளர்கள். அதில் இரண்டு காலியிடம். அவளுக்கும் அப்படிதான்.

”மேடம்.. இம்மீடியட்டா ப்ராகரஸ் ரிப்போர்ட் வேணும்.. போத் ஃபிஸிக்கல் அண்ட் ஃபைனான்சியல்.. பிபிடி தயார் பண்ணீடுங்க..” என்றார் இவளிடம் திரும்பி. மூன்று வட்டங்களும் ஒன்பது கோட்டங்களும் உள்ளடக்கியது தலைமை அலுவலகம். பணிகளின் விபரமும் அதன் தற்போதைய நிலையையும் புத்தகமாகவும் பவர்பாயிண்ட்டாகவும் தயார் செய்ய வேண்டும்.

”சரிங்க சார்..”

”டிலே பண்ணீடாதீங்க மேடம்..” என்றார் சற்றே கண்டிப்புடன்.

”ஒகே சார்..”

கதவை தள்ளிக் கொண்டு வெளியே வந்தனர் இருவரும்.  “கவர்மெண்ட் ஆபிசுன்னா வேலையே கெடையாதுன்னு வெளில பேசுவாங்க.. இங்க வந்து பாக்க சொல்லுணும் அவங்களெல்லாம்..” என்றாள் கீதா.

”ஆமா மேடம்.. சிஇ சொல்ற டீடெயில்ஸ கேட்டு வாங்கறதுக்குள்ள ஒரு வழியாயிடும்..” என்றான்.

”இன்னைக்குள்ள வொர்க் ஸ்டேஜ் வாங்கினாதான் நாளைக்கு பிபிடி ரெடி பண்ண முடியும்..” என்றாள்.

”சார்.. இந்த தபாலை கொடுக்க சொன்னாரு சிஇ..“ வீரபாண்டியனின் கையில் திணித்தார் அலுவலக உதவியாளர். சென்ற முறை கேட்கப்பட்ட சட்டமன்ற கேள்விகளின் தற்போதைய நிலை வேண்டி அனுப்பப்பட்ட அவசர நிகரி தபால். “சரி.. வர்றேன்.. மேடம்..” தபாலோடு தனது இருக்கைக்கு விரைந்தான். குளிரூட்டி பொருத்தப்பட்ட அடுத்தடுத்த கேபின்கள். கண்ணாடி தடுப்பு.. முதல் தடுப்பு அவனுடையது. அதற்கடுத்த கேபினிலிருந்தது கீதாவின் இருக்கை. மேசை மேலிருந்த தோள்பையை அதற்கான இடத்தில் வைத்து விட்டு அமர்ந்தாள். டிராவை திறந்து சிறு நோட்டை எடுத்து ஸ்ரீராமஜெயம் போல எதையோ இரண்டு நிமிடம் எழுதினாள். செல்போன் ஒலித்தது. கணவரின் பெயர் ஒளிர “ஒங்க ஆபிசே பரபரப்பா இருந்துச்சு.. எதும் அவசரமா..?” என்றான் அக்கறையாக. “அசெம்ளி கூட போவுதுல்ல.. அதான்..“ என்றவள்  ”சரி.. மணிகண்டன் ஸ்கூலுக்கு மூணறைக்கு போவுணும்.. மறந்துடாதீங்க..” என்றாள்.

”மேடம்.. இதுல நாலு கொஸ்டின் நீங்க டீல் பண்ற சப்ஜெக்ட்..” என்றான் அங்கிருந்தே வீரபாண்டியன்.

”ஒரு ஜெராக்ஸ் எடுத்து குடுங்க சார்..” என்றாள் இவளும் இங்கிருந்தபடியே.

கொஸ்டினை சமாளிப்பது கொஞ்சம் சுலபம். “பரிசீலனையில் உள்ளது.. வரும் நிதியாண்டில் நிதி ஒதுக்க ஆவண செய்யப்படும்.. இது எங்கள் துறை சார்ந்ததல்ல..“ என்ற மூன்று பதில்களுக்குள் முன்னுாறு கேள்விகள் என்றாலும் அடங்கி விடும். உதவி பொறியாளரை அழைத்தாள்.

”மேம்..”

”இன்னைக்குள்ள பிராகிரஸ் ரிப்போர்ட் முடிச்சாவணும். நீங்க மளமளன்னு எல்லா இஇக்கு ஃபோன் போட்டு விஷயத்தை சொல்லுங்க.. சி.இ உடனே தர சொன்னாருன்னு சொல்லுங்க..”

”முடிஞ்சளவு வாங்கீடுறேன் மேடம்..”

”நீங்க எங்கிட்ட சொல்றமாதிரி நான் சிஇட்ட சொல்ல முடியுமா சார்.. நீங்க ஃபோன் ரூம்க்கு போங்க.. நா வேலைய முடிச்சுட்டு வந்துடுறேன்..” என்றாள்.

வீரபாண்டியன் அவள் கேபினுக்குள் நுழைந்தான்.

”மேடம்.. இந்த கொஸ்டினை பாருங்களேன்…” என்றான். சட்டசபை தொடங்கினாலே வரும் தலைவலி இது. சமூக ஆர்வலர் என்ற பெயரில் ஒருவர் எதாவது எசகுபிசகான கேள்விகளை முதலமைச்சர் தனிப்பிரிவு.. துறை செயலர்.. உட்பட உயர்நிலை அலுவலங்களுக்கு அனுப்பி விட்டு இங்கும் ஒரு பிரதி அனுப்பி விடுவார். ”யாரு சார்.. அந்த ராஜ மன்னாருதானே..” என்றாள்.

”ஆமா மேடம்..” என்றான் அலுப்பாக. பெரிய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டிருப்பதால் பதில் அளிக்காமல் அலட்சியம் செய்து விட முடியாது. இமயத்திலிருந்து வங்காள விரிகுடா வரையிலான நீர்த்தடங்களை இணைத்து அதன் மூலம் இந்திய மக்கள் அனைவருக்கும் நீர் வழங்கும் திட்டம் என்ற தலைப்பில் நுணுக்கி நுணுக்கி வெகு அபத்தமான யோசனைகளோடு பத்து பக்கத்துக்கு எழுதியிருந்தார். இடையிடையே சிவப்பு மையில் படங்கள் வேறு வரைந்திருந்தார்.

”இதுக்கெல்லாம் என்னன்னு சார் பதிலெழுதறது.. பேசாம ஒருநாள் ஆபிசுக்கு வர சொல்லி கவுன்சிலிங் பண்ணி அனுப்பலாம்..” சிரித்தாள்.

”கரெக்ட்தான்.. நாமளும் ஒருநாள் இதுக்காக ஒதுக்கி சிரிச்சிக்கலாம்..” என்றான் சின்ன சிரிப்படன்.

”காபி சாப்றீங்களா சார்..” என்றாள். வீட்டிலிருந்தே ப்ளாஸ்கில் எடுத்து வந்து விடுவாள். காபி போட்டு இவளுக்கும் கணவருக்கும் ஆளுக்கொரு ப்ளாஸ்கில் ஊற்றி வைப்பது அம்மாவின் வேலை. ”தாரளமா..” என்றான்.

மதியம் வரை கால்வாசி தகவல்களை கூட பெற முடியவில்லை. தினசரி பார்வையிட வேண்டிய தபால்கள் வேறு குவிந்திருந்தன. அதற்குள் தலைமைப் பொறியாளரிடமிருந்து அழைப்பு. ”மேடம்.. என்னாச்சு..?” என்றார்.

”பண்ணீடுறேன் சார்..” என்றாள்.

”எப்ப முடியும்னு சொல்லுங்க..” என்றார் கூடுதல் வேகமாக.

”சார்.. முடிச்சிடுறேன் சார்..”

”இஇட்ட நீங்களே நேரடியா பேசுங்க.. ஏஇ பேசறதுக்கும் எஸ்டிஓ பேசறதுக்கும் வித்யாசமில்லையா..?” என்றார்.

செயற்பொறியாளர்கள் விபரங்களை உடன் அளித்து விடுவதாகதான் சொன்னார்கள். ஆனாலும் நான்கு மணியாகியும் வேலை சுணக்கமாகவே இருந்தது. வீரபாண்டியனுக்கும் அதே நிலைதான். ”ஒரு கேள்விக்கு பதில் தர்றதுக்கே இவ்ளோ நேரமா சார்..? அத்தனையும் வாங்கி கம்பைல் பண்ணி நாங்க எப்போ செகரட்ரிக்கு அனுப்பறது..” தொலைபேசியில் சத்தமாக பேசிக் கொண்டிருந்தான். அருகில் போய் ”எந்த டிவிஷன் சார்..” என்றாள். சொன்னான்.

”வைக்காதீங்க.. நான் பேசறேன்..” என்றபடியே ரீசிவரை வாங்கிக் கொண்டாள்.

“சார்.. எல்லா டிவிஷனும் ஃபிகர் குடுத்துட்டாங்க.. உங்கள்ட்டேர்ந்து வந்தவொடனே கம்பைல் பண்ணி செகரட்டரிக்கு அனுப்பணும்.. அங்கேர்ந்து ஃபோன் வந்துட்டே இருக்கு சார்..”

”எல்லாமே ஒடனே.. ஒடனேன்னா எப்டீங்க மேடம்..?” என்றார் அந்த செயற்பொறியாளர்.

”உங்க கஷ்டம் புரியுது சார்.. நாங்க என்ன செய்ட்டும்.. ப்ரீதிங் டைம் கூட குடுக்காம அவசரப்படறாங்களே சார்..” செயற்பொறியாளர் பதவி இவள் பதவியை விட ஒரு படி மேலானது. அவளின் பணிவில் மனம் இளகியவற்போல ”உங்க ஆபிஸ் மெயில் ஐடி குடுங்க மேடம்.. அனுப்ப சொல்றேன்..“ என்றார்.

”சார்.. பிபிடிக்கு ஃபோட்டோஸ் வேணும் சார்..” என்றாள் மின்னஞ்சல் முகவரியை சொல்லி விட்டு.

”தெரியும்மா.. சொன்னீங்களே..” அலைபேசியை துண்டித்துக் கொண்டார்.

”பாருங்க சார்.. டெய்லி பத்து மெயில் கரஸ்பாண்ட் பண்றோம்.. மெயில் ஐடி வேணுமாம்..” என்றாள் வீரபாண்டியனிடம் கோபமாக..

”அப்றம் அவங்க கெத்தை காட்றது எப்டீ..?” சிரித்து விட்டு தொடர்ந்தான். ”எல்லா டிவிஷன்லேர்ந்தும் பர்டிகுலர்ஸ் வந்துடுச்சா மேடம்..”

“அட.. நீங்க வேற சார்.. இன்னும் வர்ல..”

”மேடம்.. சிஇ கூப்டுறாங்க..” என்றார் அலுவலக உதவியாளர் குறுக்கிட்டு.

தலைமைப் பொறியாளர் கடுப்பாக வைத்திருந்தார் முகத்தை. ”மேடம்.. ஒம்பதே ஒம்பது டிவிஷன்.. அதை கேட்டு வாங்க இவ்ளோ நேரமாங்க..? மத்த ரீஜின்லேர்ந்தெல்லாம் வந்துருச்சாம்.. நம்பதான் இன்னும் அனுப்பலயாம்.. செகரடேரியட்லேர்ந்து அர்ஜ் பண்றாங்க.. சீக்ரம்..” பேசிக் கொண்டே வந்தவர் குரலை உயர்த்தி கத்த தொடங்கினார். ”எல்லாம் அவசர நேரத்திலதான் செய்வீங்களா..?  அசெம்ளி கூட்டம் கூட போவுதுன்னு தெரியும்ல்ல.. இதெல்லாம் தயாரா வச்சிக்க வேணாமா..? அவசர கோலத்தில அள்ளுப்புளிக்கணக்க கொடுத்துடுவீங்க.. அங்க மினிஸ்டர் முன்னாடி பதில் சொல்றது நாந்தானே..? போய் விறுவிறுன்னு வேலைய பாருங்க மேடம்..”

எரிச்சலாக வந்தது அவளுக்கு. செயற்பொறியாளர்களின் அலைபேசியை தவிர்த்து அலுவலக எண்ணில் தொடர்பு கொண்டு கத்தினாள். ”தோ.. வாங்கீ்ட்டே இருக்கோம் மேடம்..” என்றார்கள்.

”எவ்ளோ நேரம் இதயே சொல்லுவீங்க.. ஒரு டிவிஷன் ஒர்க்கை கூட கம்பைல் பண்ணி தர முடியலேன்னா என்ன சார் அர்த்தம்.. நீங்க எப்போ அனுப்பி.. நாங்க எப்போ செகரடேரியட்டுக்கு அனுப்பறது..?” என்றாள் கோபமாக.

கணவரிடமிருந்து அழைப்பு. ”சொல்லுங்க..” என்றாள்..

”மணிகண்டனோட மிஸ் ரொம்ப பிரைஸ் பண்ணினாங்க.. எல்லாம் அவங்கம்மா கோச்சிங்ன்னு சொன்னேன்.. அவங்களுக்கு ஆச்சர்யமா போச்சு.. நைசா நீ வேலைக்கு போறீயான்னு விசாரிச்சாங்க.. எங்கம்மா எஸ்டீஓவா இருக்காங்கன்னு ஒன் பையன் பெருமையா சொன்னான்..” என்றான்.

”இங்க ஆபிஸ்ல ஒரே புடுங்கு.. எல்லாம் ஓரே நாள்ல எல்லாத்தையும் முடிச்சுக் குடுன்னு உசிர வாங்றாங்க..” என்றாள்.

”சரி.. பொறுமை.. பொறுமை.. கௌம்பும்போது மிஸ்ட்கால் குடு.. உன்னை பிக்கப் பண்ணீக்கிறேன்.. வீட்ல ஃப்ரஷ்அப் பண்ணீட்டு வெளில சாப்டுக்கலாம்..”

”நேரமாயிடும்னு நெனக்கிறேன்..”

”அப்டீன்னா உங்கம்மாவையும் மணியையும் கூட்டீட்டு வந்துடுறன்.. சாப்டுட்டே வீட்டுக்கு போலாம்..” என்றான். அவனும் அதிகாரி என்பதால் மனைவியை புரிந்துக் கொள்ள முடிந்தது.

”சரிங்க.. வைக்றன்..” என்றாள். வெளியே இருட்டத் தொடங்கியிருந்தது. ”கடவுளே.. ஆறாயிடுச்சா.. நேரம் போறதே தெரில..”

மெயிலில் புகைப்படங்கள் வந்துக் கொண்டேயிருந்தன. ”எல்லாத்தையும் டவுன்லோடு பண்ணி டிவிஷன்வைஸ் ஃபோல்டர் போட்டு ஏத்தி வச்சுடுங்க மேடம்.. பிபிடி பண்றதுக்கு கம்ஃபர்டபளா இருக்கும்…” என்றாள் தனது உதவியாளரிடம். அதற்குள் தலைமைப் பொறியாளர் கனிணி அறைக்கே வந்து விட்டார்.

”எவ்ளோ நேரம் எடுத்துக்குவீங்க..?” அனைவரும் எழுந்துக் கொண்டனர்.

”இதோ ஆச்சு சார்.. முடிச்சுட்டோம்..” பதற்றமாக பேசினாள்.

”இன்னும் எத்தனை பெட்டிஷன் பெண்டிங்..?” என்றார் வீரப்பாண்டியனிடம்.

”டோட்டலா இருவத்தொண்ணு சார்.. பதினாறு குளோஸ் பண்ணீட்டேன்.. இன்னும் அஞ்சு இருக்கு சார்..”

சிஎம் செல் பெட்டிஷன் பைலை பார்வையிட்டவர் ”ஒரு மாசத்துக்கு முன்னாடி வந்த பேப்பர்.. .ஃபைல்ல கட்டி வச்சிட்டு இப்ப வேலை செய்றீங்க.. அப்டிதானே..? உதவிப் பொறியாளரை கத்தி விட்டு ”இதெல்லாம் மானிட்டர் பண்ணாம நீங்க என்ன சார் பண்றீங்க..? என்றார் கோபமாக வீரபாண்டியனிடம்.

பிறகு இவளிடம் திரும்பி ”நீங்கம்மா..?” என்றார்.

”இதோ முடிச்சிட்டேன் சார்..” என்றாள் பவ்யமாக.

”காலைலேர்ந்து ஒரே பதில்தானே சொல்றீங்க.. புக்லெட் போட்டாச்சா..?“

”இன்னும் இல்ல சார்.. இப்பதான் எல்லா ப்ராகிரசும் வந்துச்சு.. இதோ போட்டுடுறன் சார்..” என்றாள்.

நிமிர்ந்து பார்த்து விட்டு கோபமாக நகர்ந்தார். மணி ஏழரையை தாண்டியிருந்தது.

”கடவுளே.. இவருக்கென்னா..? சொல்லீட்டு போயிடுவாரு.. அவசரம்னு கேட்டாலே ஆடி அசஞ்சு குடுக்குறாங்க.. இதுல டெய்லி வேற ரிப்போர்ட் கேக்குணுமா.. ச்சே.. வெறுத்துப் போச்சு.. பொம்பளன்னு கூட அந்தாளுக்கு அறிவில்ல.. இவரு பாட்டுக்கு பேசிட்டு போறாரு.. மினிஸ்டர்.. செகரட்டரின்னு அலைஞ்சு வருமானம் வர்ற பக்கமா போஸ்டிங் வாங்கீட்டு வந்து உக்கார தெரியுதுல்ல.. கேள்விக் கேட்டா வலிக்குதாம்மா..? இவரு பொண்டாட்டீ பொம்பளபுள்ளயெல்லாம் இத்தனை நேரத்துக்கு வெளிய இருந்தா தாக்கிக்குவாராம்மா… ஆம்பளபொம்பள வித்யாசம் கூட தெரியாம ஒரேடீயா எகிற்றாரு.. சே..” என்றாள் படபடப்பாக நாளை மருத்துவ விடுப்பு எடுக்க வேண்டும் என்ற முடிவோடு.

***