விமர்சனம்

நான் நல்ல பெண்ணாக இருக்கவில்லை – கில்லியன் ப்ளின்

-கில்லியன் ப்ளின்  (Gillian Flynn)- 

நான் நல்ல பெண்ணாக இருக்கவில்லை. வெயில்காலத்தில் எனக்குப் பிடித்த பொழுதுபோக்கு, எறும்புகளைத் தாக்கி அவற்றைச் சிலந்திகளுக்குத் தின்னக் கொடுப்பதுதான். “கெட்ட அத்தை ரோஸி” என்ற விளையாட்டுதான் வீட்டில் பொழுதுபோக்க உதவியது- அதில் நான் என் கசின்களைப் பார்த்துக் கொள்பவள், ஆனால் சூனியக்காரி, அவர்கள் என்னிடமிருந்து தப்பியோட வேண்டும்.

எண்பதுகளில் சிறு பெண்கள் பலரும் பிளாஸ்டிக்கில் ஒரு பிங்க் கலர் பொம்மை போன் வைத்திருப்பார்கள் (அழகான பெண்களுக்கு போன் பேசுவது என்றால் ரொம்ப பிடிக்கும்), அது எங்களுக்கு மிகவும் அடிப்படையான விளையாட்டுப் பொருளாய் இருந்தது- அவர்கள் உதவிக்கு ஆள் அழைக்கும்போது எப்போதும் அவர்களிடமிருந்து அதைப் பிடுங்கி விடுவேன்.

எதுவும் செய்யாமல் சும்மா இருக்கும்போது பொதுவில் தெளிவாகத் தெரியாத கேபிள் சானல்களில் ஒலிபரப்பப்படும் சாப்ட் கோர் போர்ன்களைப் பார்த்துக் கொண்டிருப்பேன் (முலைகள், பிருஷ்ட பாகங்கள், ஸ்டாட்டிக், ஸ்டாட்டிக், முலைகள்!). என் பொம்மைகளில் எதுவாவது பிடிவாதம் பிடிக்க ஆரமபித்தால், அவளது முடியை வெட்டிவிடுவேன்.

இங்கு நான் சொல்ல வருவது இதுதான்- நான் ஒன்றும் வித்தியாசமாய் இருந்த குழந்தையல்ல (ஆனால் இதை எல்லாம் காகிதத்தில் படித்துப் பார்க்கும்போது கவலையாய்தான் இருக்கிறது). நான் கெட்ட பெண்ணும் அல்ல (இங்குதான் என் மீது மிகுந்த பாசம் வைத்துள்ள என் பெற்றோருக்காக இதைச் சொல்ல வேண்டும் – அந்த காலத்து கான்சாஸ் நகரில் நான் அதிசயமும் சந்தோஷமுமான ஆண்டுகள் பல வாழ்ந்திருக்கிறேன்). ஆனால் சிறுவயதினர் வளரும்போது சில சாகசங்கள் செய்ய வேண்டுமே- வசதியில்லாத இடத்தில் தங்கியிருப்பது, வயசுக்கு மீறிய பாலுணர்வு அனுபவங்கள், அதிகார விளையாட்டின் முதல் மலர்ச்சி, இதெல்லாம் பல பெண்களின் வாய்மொழிக் கதைகளிலும் இடம் பெறுவதில்லை.

குழந்தைமையின் ஆத்திரம், முதிரா வயதில் படுதோல்வியடையச் செய்த பால்விழைவு போன்றவற்றின் பீறிட்டுக் கிளம்பும் வினோத வெடிப்புகள் பற்றி ஆண்கள் ஆனந்தமாய் பேசுகிறார்கள். பாலுணர்வையும் வன்முறையையும் பேச அவர்களுக்கு சொற்கள் இருக்கின்றன, பெண்களுக்கு அப்படி எதுவும் இல்லை. வளர்ந்த பின்னும்கூட சுய இன்பம் பற்றியோ கலவியின் உச்சம் பற்றியோ எந்தப் பெண்ணும் நிஜமான சந்தோஷத்துடன் பேசியதாய் நினைவில்லை. செக்ஸ் அண்ட் தி சிட்டிதான் அதன் கொஞ்சலான புத்திசாலித்தன சொற்றொடர்களை முன்அனுமதி அளிக்கப்பட்ட வகையில் பொட்டலம் கட்டி அறிமுகப்படுத்தியது.

இப்போதும் நாம் நம் வன்முறையை விவாதிப்பதில்லை. தங்கள் குழந்தைகளைத் தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்ற சூசன் ஸ்மித் அல்லது ஆண்டிரியா யேட்ஸ் பற்றிய செய்திகளை ஆசை தீரத் தெரிந்து கொள்கிறோம், ஆனால் இந்தக் கதைகள் நயமாகச் சொல்லப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். பிரசவத்துக்குப் பின் ஏற்படும் மன அழுத்தம் பற்றி இறுக்கமான குரலில் தனியாய்ச் சொல்லப்பட வேண்டும் என்றும், அவளை அப்படிச் செய்ய வைத்தான் அவன் என்றும் கதை கேட்க விரும்புகிறோம்.

ஆனால் இதிலெல்லாம் அலட்சியப்படுத்தப்படும் ஒத்திசைவு ஒன்று உண்டு. கொலைகாரத் தாய்மார்களைப் பற்றியும் தொலைந்து போன சிறுமிகளைப் பற்றியும் பெண்கள் வாசிக்க விரும்புவதன் காரணம் பெண்ணின் வன்முறையை அந்தரங்க தளத்தில் பேசுவதற்கு மைய ஊடகத்தில் நமக்கிருக்கும் ஒரே வாய்ப்பு இவையாகவே இருக்கின்றன என்பதுதான் என்று நினைக்கிறேன்.

பெண்ணின் வன்முறை என்பது குறிப்பிட்ட தனித்தன்மை கொண்ட சீற்றம். அது எல்லைகளை மதிப்பதில்லை. பெண்களுக்குள் நடக்கும் சண்டை என்பது எல்லாம் பற்கள், தலைமுடி, எச்சில், நகங்கள் என்று நடக்கிறது- இரு ஆண்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொள்வதைவிட இரு பெண்கள் இப்படி சண்டை போட்டுக் கொள்வதைப் பார்க்க பயங்கரமாக இருக்கிறது. அதிலும் மனதளவில் நிகழ்த்தப்படும் வன்முறை மிகக் கொடூரமானது. பெண்கள் பின்னிப் பிணைகின்றனர்.

நான் பார்த்த உறவுகளில் மனதை மிகவும் துன்புறுத்துவதும், நோய்மை கொண்டதாகவும் இருந்த உறவுகள் நீண்டகால தோழியர் சிலரிடையே இருந்த உறவே- இன்னும் குறிப்பாக தாய்- மகள் உறவைச் சொல்லலாம். வம்புப் பேச்சு, திரித்தல், ஊக்குவிப்பது போல் நாடகமாடுதல், உறவை முறித்துக் கொண்டு தண்டித்தல், பாலுணர்வு காரணமான பொறமை- பெண்கள் சண்டை போட்டுக் கொள்வதைப் பார்ப்பது என்பது பல்லாண்டு காலம் நிகழும் படுபயங்கர ஊர்வலத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்றது.

வன்முறைச் சுழலில் சிக்கிக்கொண்ட இரக்கமற்ற ஆண்களை தலைமுறை தலைமுறையாய் பேசும் கதைகளால் நூலகங்கள் நிறைந்திருக்கின்றன. பெண்களின் வன்முறையை நான் எழுத விரும்பினேன்.

எனவே அப்படி எழுதவும் செய்தேன். இருண்மையான, மிக இருண்மையான ஒரு புத்தகம் எழுதினேன். அதன் நாயகி, கதைசொல்லி, அதிகம் குடிக்கிறாள், அதிகம் கலவியில் ஈடுபடுகிறாள், வெகு காலமாய் வார்த்தைகளைக் கத்தரித்துத் தன்னைக் குத்திக் கொள்கிறாள். விஷம் என்பதற்கு இலக்கணமாக இருக்கும் அம்மா, போதை மருந்துகள், பாலுறவு, அதிகாரம் முதலானவற்றின் பண்டமாற்று வர்த்தகத்தில் தேர்ந்த பயிற்சியுள்ள பதின்மூன்று வயதான ஒன்றுவிட்ட சகோதரி. அமைதியற்ற அந்தச் சிற்றூரில் இரு சிறுமிகள் கொலை செய்யப்படுகிறார்கள்.

அந்த நாவல் பெண்களை உயர்வாய்ச் சித்தரிக்கவில்லை, அதில் எனக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. பெண்களின் அழகற்ற முகத்தை ஏற்றுக் கொள்ளும் நேரம் எப்போதுதான் வரப்போகிறது? துணிச்சலான நாயகிகள், கற்பழிக்கப்பட்டபின் போராடும் வீராங்கனைகள், ஆன்ம சோதனை செய்து கொள்ளும் உயர்குடிப் பெண்கள் எத்தனை எத்தனை புத்தகங்களை நிறைத்துக் கொண்டிருக்கிறார்கள்- எனக்கு இதெல்லாம் மிகவும் அலுத்துப் போய்விட்டது.

அதிலும் குறிப்பாக, வில்லிகள் இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது- நல்ல ஆற்றல் வாய்ந்த வில்லிகள். ஒழுக்கமான ஆண்களைக் கல்யாணம் செய்து கொண்டு வசதியாக வாழத் திட்டமிடும் கோபக்கார பெண்கள் அல்ல (போருக்குக் கிளம்ப இதைவிட சுவாரசியமான எதுவும் எங்களுக்கு இல்லை என்பது போலிருக்கிறது). உணர்வுகளை வெளியே காட்டிக் கொள்ளாத, ஆனால் அதற்காக கெட்டவர்கள் என்று சொல்ல முடியாத பெண்கள், அழுது புலம்பும் சதிகாரிகள் (வம்பு வளர்த்தால் மட்டும் போதாது போல்)- இப்படிப்பட்ட வில்லிகளைச் சொல்லவில்லை. வன்முறைக்கு அஞ்சாத, தீய மனம் கொண்ட பெண்களைப் பற்றி பேசுகிறேன். அச்சுறுத்தும் பெண்கள். உங்களுக்கு அப்படி யாரையும் தெரியாது என்று சொல்லாதீர்கள்.

இத்தனை நாட்களாக நாம் நமக்கு பெண்ணாற்றல் சேர்த்துக் கொண்டிருந்ததில் – பகடி என்று சொல்லக்கூடிய அளவுக்கு இந்த ஊக்குவிப்பு போய்விட்டது- நமக்கு நம் இருண்ட பகுதியை ஒப்புக்கொள்ள இடமே இல்லை. இருண்ட பகுதிகள் முக்கியமானவை. விஷப் பூச்செடிகள் போல் அவற்றை நாம் வளர்க்க வேண்டும். எனவேதான் ஷார்ப் அப்ஜெக்ட்ஸ் நான் செய்த விஷப் பூங்கொத்து.

ஷார்ப் அப்ஜெக்ட்ஸ் நாவலில் நல்ல பெண்கள் கிடையாது. நாவலின் கதைசொல்லி, நான் வெறித்தனமாய் நேசிக்கும் காமில்லா- புத்திசாலித்தனமாகப் பேசுபவள், தன்னை அறிந்திருப்பவள், உற்சாகமானவள்- அவள்தான் நல்ல பெண்ணுக்கு மிக அருகில் வருபவள். ஆனால் ஒவ்வொரு நாளையும் ஓட்ட சரக்கு, போதை வஸ்துக்கள், செக்ஸ், கத்தரிக்கோல்கள் பயன்படுத்துகிறாள்.

காமில்லா பற்றி எழுதிக் கொண்டிருக்கும்போது, திருப்திப்படுத்த முடியாத, நச்சுத்தன்மை கொண்ட வீட்டில் எல்லாரையும் திருப்திப்படுத்தச் சொல்லி வளர்க்கப்படும் பெண் எப்படி வளர்வாள் என்று நினைத்துப் பார்த்தேன். எப்போது பார்த்தாலும் குத்திக் குடைந்து கொண்டிருக்கும் ஒரு அம்மா, உடலளவிலும் இதைச் செய்கிறவள், கொஞ்சம்கூட தாய்மையுணர்வு இல்லாதவள், அவளால் வளர்க்கப்படும் பெண் தன் அம்மாவிடம் எப்படி நடந்து கொள்வாள்? அவள் தன் பெண்ணுக்கு எப்படிப்பட்ட வன்முறையைப் புகட்டுவாள்? அது ஒரு சுழல் மாதிரி இருக்கும் என்று உணர்ந்தேன்.

காமில்லா தன்னையே துண்டம் போட விரும்புகிறாள். வெட்டுபவளே பலி கொள்கிறாள், பலியாகிறாள்- மிரட்டுபவளும் மிரள்பவளும் அவளே. ஆனால் இதில் நோய் தீர்த்தலும் உண்டு- பின்னர் காயங்களைக் கழுவி மருந்திட்டு கட்டு போட வேண்டும். காயப்படுத்து, துயரம் கொள், குணப்படுத்து, காயப்படுத்து, துயரம் கொள், குணப்படுத்து. இது வன்முறையின் முப்புடி, ஒரே ஆளில் உருவம் பெறுகிறது. உலகின் மிகத் தனித்த செயல் இது. காமில்லா அடிப்படையில் தனித்து இருப்பவள்.

நான் சிறுமியாய் இருந்தபோது பிரதர்ஸ் கிரிம் கதைகள் படித்ததைக் கொண்டு காமில்லாவின் அம்மாவைப் படைத்தேன். சுருள் முடி கொண்ட மென்மையான நாயகிகள் நாசமாய்ப் போகட்டும். கெட்ட புத்தி படைத்த இந்த அரசிகளையும் தீய நெஞ்சம் கொண்ட மாற்றாந்தாய்களையும் நான் நேசித்தேன். எனவே காமில்லாவின் அம்மா அப்படி இருக்கிறாள்- அவள் அழகி, ராணி, ஊசிகள் நிறைந்தவள். அவள் பிறர் வலியைத் துய்ப்பவள். காமில்லாவின் வன்முறை தனக்குள் அடங்குவது என்றால், அவளது தாயின் வன்முறை தன்னை மையம் கொண்டது.

கொலை செய்யப்பட்ட சிறுமிகளை எடுத்துக் கொண்டால், இவர்கள் கன்னக்குழியும் ரிப்பன்களுமாய் இருப்பதை நான் விரும்பவில்லை. அது மிகச் சுலபமாய் இருந்திருக்கும் (“அழகிய பெண்ணின் மரணம் கவித்துவமானது,” என்றார் போ, அழகிய சிறுமியின் மரணம் இன்னும் அழகாக இருக்குமோ என்னவோ- தொலைந்து போன பெண்கள் குறித்து நம் ஊடகங்கள் பைத்தியம் பிடித்து அலைவதைப் பார்த்தால் அப்படிதான் இருக்கிறது). கொலையுண்ட பெண்கள் பொம்மை போன்ற பலிகள் அல்ல- அவர்களுக்குள்ளும் ஒரு கொடூரம் உண்டு, அவர்கள் போராளிகள். காமில்லாவின் ஒன்றுவிட்ட சகோதரி அமா, அவள் கோபக்காரி. ஆனால் காமில்லா போலல்லாமல், பேய் பிடித்த அவள் வீடு அவளது கோபத்தை மேல்நோக்கித் திருப்பவில்லை, மாறாய் கண்கவரும் திசையில் செலுத்துகிறது.

ஷார்ப் அப்ஜெக்ட்ஸில் வரும் பெண்களை நினைத்துப் பார்க்கும்போது 1948ஆம் ஆண்டு பிரடரிக் சம்மர் எடுத்த புகைப்படத்தை நினைத்துப் பார்க்கிறேன்- அதன் பெயர் லிவியா. லிவியா ரோமானிய கொலைகார பேரரசி. அது கருப்பு வெள்ளை புகைப்படம், அதில் இருப்பவள் ஓர் இளம் பெண், அப்பாவித்தனத்தின் அலங்காரங்கள் அனைத்தும் அவளிடம் இருக்கின்றன- பின்னி வாரப்பட்ட சுருள் கேசம், லேஸ் நுனியிட்ட ஆடைகள். ஆனால் அவள் கண்களின் புத்திசாலித்தனத்தைப் பார்த்தால் தூக்கிவாரிப் போடுகிறது, அவளது உதடுகள் பிடிவாதமாய் இறுகி இருக்கின்றன, அவள் முகம் முழுக்க குறும்பு- ஒருவேளை அவள் துட்டியாய் இருக்கலாம். உலகில் எனக்குப் பிடித்த புகைப்படங்களில் ஒன்று அது. சிறுமிகள்- பெண்களும்- கெட்டவர்களாக இருக்கக்கூடும் என்று அது நினைவூட்டுகிறது.

நன்றி – http://www.powells.com/essays/flynn.html

ஒளிப்பட உதவி – விக்கி ஆர்ட்

தாய் எழுத்து – பரூல் செகால்

பரூல் செகால்  (Parul Sehgal)-

(குடும்ப அமைப்பினுள் இருந்தவாறு, அதிலும் குறிப்பாக தாய்மை நிலையில், எழுத்துப் பணியில் ஈடுபடுவது குறித்து புக்ஃபாரம் என்ற தளத்தில்  பரூல் செகால் எழுதியுள்ள கட்டுரையின் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு பகுதி)

… இந்தப் புத்தகங்கள் ஒப்புதல் வாக்குமூலத்துக்கு அப்பாற்பட்ட ஒருவகை வெளிப்படைத்தன்மைக்கு தம்மை ஒப்புக் கொடுத்துள்ளன; இவற்றின் தீவிர ஒளிவுமறைவின்மையை முன்னிறுத்தும் கூறுகள் குழுவிழுமியங்களின் வழி வெளிப்படுகின்றன, நாம் வாசிக்கும் புத்தகம் எப்படி உற்பத்தி செய்யப்பட்டது என்பதை வெளிப்படுத்துவதில் ஓர் ஆர்வம் இருக்கிறது என்பதைத் தவிர கூடுதலாய், கண்ணுக்குத் தெரியாத வகையில் எப்போதும் மறைந்திருக்கும் வெவ்வேறு வகை உழைப்பை அம்பலப்படுத்தும் நோக்கமும் தென்படுகிறது.

எ லைப்ஸ் வர்க் என்ற நூலில் ராச்சேல் கஸ்க் இவற்றுக்கான தொனியை நிறுவினார்: “குழந்தைகளும் அவர்களை யார் பார்த்துக் கொள்கிறார்கள் என்பதும், என்னைப் பொறுத்தவரை, ஆழமான அரசியல் கேள்விகளாகிவிட்டன- தாய்மையைப் பற்றி ஒரு புத்தகம் எழுதும்போது அதை எழுதுவதற்கான நேரம் எனக்கு எப்படி கிடைத்தது என்பதையும் ஓரளவுக்காவது விளக்காமல் இருப்பது ஒரு முரண்பாடாக இருக்கும்“. அவர் தான் செய்த ஏற்பாடுகளை விவரிக்கிறார், எப்படி முதல் ஆறு மாதங்கள் அவரது கணவர் வேலைக்குப் போய்க் கொண்டிருக்க, அவர் தன் மகளை கவனித்துக் கொண்டார் என்பதையும், அதன்பின் அவர்கள் இருவரும் லண்டனை விட்டு கிராமப்புறத்துக்கு இடம் பெயர்ந்து, அவரது கணவர் வேலையில்லாமலும் அவர் முழு நேரம் எழுதிக் கொண்டிருந்தும் நடைமுறைப்படுத்திய குடும்ப அளவிலான பரிசோதனை முயற்சியின் கலவையான விளைவுகளையும் விவரமாக எழுதுகிறார்.

மேக்கிங் பேபிஸ் என்ற புத்தகத்தில் ஆன் என்ரைட் இதைத் தொடர்கிறார்: “என் அலுவல் நேரத்தை மாற்றிக் கொள்ள முடியும், நான் பயணம் செய்ய வேண்டியதில்லை, எனக்கு முதல் குழந்தை பிறந்தபோது என் துணைவர் ஆறு வார விடுப்பு எடுத்துக் கொண்டார், இரண்டாம் குழந்தை பிறந்தபோது மூன்று மாத விடுப்பு எடுத்துக் கொண்டார் (ஊதியமில்லா விடுமுறை, இதை மும்முறை குறித்துக் கொள்ளுங்கள்). அவர் சமையலும் செய்கிறார். குழந்தைகளை குளிப்பாட்டவும் செய்கிறார்“.

பென் லெர்னர் மெத்த மகிழ்ச்சியுடன் தன் நிலையை அம்பலப்படுத்திக் கொள்கிறார். வாழ்க்கைக்கு மிகவும் நெருக்கமான அவரது 10:04 என்ற நாவல், குழந்தைப் பிறப்பையும் திருப்புமுனையாய்க் கொண்டிருக்கிறது- இந்த நாவல் சூல் கொண்டது, அதன் கருவை முன்வைத்த வியாபாரம், விற்பனை என்று துவங்கி தன் பிற எழுத்துகளை உண்டு செரித்து புத்தகம் எழுதி முடித்தது என்று அனைத்தையும் தன் கதையில் விவரிக்கிறார். இதில் புத்தகத்தின் மாசற்ற கருத்தரிப்பு குறித்து எந்த மிகைகற்பனையும் கிடையாது- உண்மையான, அழுக்கான நுண்விபரங்கள் மட்டுமே.

கஸ்க் எழுதுவது போல், குழந்தை வளர்ப்பில், “ஆழமான அரசியல்” இருக்கிறது என்றால், எழுதுவதன் உழைப்பிலும் அரசியல் இருக்கிறது, யார் எழுதுகிறார்கள், எதை எழுதுகிறார்கள் என்ற கேள்விகளிலும் அரசியல் இருக்கிறது- இவர்களால் எப்படி நிதிநிலையைச் சமாளிக்க முடிகிறது, என்ற கேள்வியிலும் அரசியல் இருக்கிறது.

டிபார்ட்மெண்ட் ஆப் ஸ்பெகுலேஷன் என்ற நூலில் ஒரு கதைசொல்லி, எழுத முடியாத நிலையிலிருக்கும் எழுத்தாளர், இப்போது புதிதாய் தாயாகியிருப்பவர், தன் ஆரம்பகால லட்சியங்களை நினைத்துப் பார்க்கிறார்: “நான் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ வேண்டும் என்று திட்டம் வைத்திருந்தேன். அதற்கு மாறாக நான் கலை பூதமாக இருக்கப் போகிறேன் என்று நினைத்தேன். பெண்கள் கலைத்துறையில் பூதாகரமான ஆகிருதி அடைவதேயில்லை, ஏனெனில் கலை பூதங்கள் கலை குறித்து மட்டுமே கவலைப்படுகின்றன, அன்றாட விவகாரங்களைப் பற்றியல்ல. நபகோவ் தன் குடையைக்கூட மடித்ததில்லை. தபால் தலைகளை அவருக்கு வேரா எச்சில்படுத்திக் கொடுத்தாள்“. கலை பூதத்தின் பின்னுள்ள சாரங்களை இந்த நூல்கள் வெளிக்கொணர்கின்றன: நிதிக்கொடை விண்ணப்பங்களின் மேலிருக்கும் தபால்தலைகளை எச்சில்படுத்தி ஒட்டியது யார்? யார் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டது? யார் மளிகை சாமான்களுக்கு காசு கொடுத்தது, எப்படி கொடுத்தார்கள்?

நம் படைப்பூக்கம் வெளிப்படும் வடிவம் பெரும்பாலும் வர்க்கம் சார்ந்தது,” என்று எழுதினார் ஆடர் லோர்த். அவர் கவிதையைப் போற்றி அவ்வாறு எழுதினார், கலை வடிவங்களில் மிகச் “சிக்கனமானது”, “மிகவும் ரகசியமானது, மிகக் குறைவான உடல் உழைப்பைக் கோருவது, மிகக் குறைந்த பருண்மை கொண்டது, ஷிப்டுகளுக்கு இடையே, மருத்துவமனைக் கிடங்கில், சப்வேயில், கூடுதலாய் எஞ்சியிருக்கும் காகிதத் துண்டுகளில் எழுதப்படக் கூடியது“.

டோனி கேட் பம்பார இதே காரணத்துக்காக சிறுகதையை நேசித்தார்- அதன் “கைக்கடக்கமாய் கொண்டு செல்லும் தன்மை“. “உழவர் சந்தைக்கு கார் ஓட்டிக் கொண்டு போகும் வேளையில் அதன் அடிப்படை வடிவத்தைச் சொல்லி விட முடியும், விமான நிறுவனம் என் தொலைபேசி அழைப்பை எடுக்கக் காத்திருக்கும் வேளையில் வசனங்களைத் தீர்மானிக்க முடியும், என் மகள் செய்யும் காரட் கேக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கதையின் மையக் காட்சியின் வரைவு வடிவத்தைத் தீர்மானிக்க முடியும், நடுராத்திரியில் கதையின் முதல் வடிவை எழுதி முடித்துவிட முடியும், துணிகள் எந்திரத்தில் சுற்றிக் கொண்டிருக்கும்போது மெய்ப்பு பார்த்து திருத்த முடியும், துண்டுப் பிரசுரங்களை நகலெடுக்கும்போது கூடவே என் கதையையும் நகலெடுத்து விட முடியும்” (கார்ல் ஓவ் நாஸ்கார்ட் பற்றி இங்கு நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை- பெரும் பனிச்சரிவாய் அவர் எழுதிக் குவிக்கும் உரைநடை- தன் குடும்ப வாழ்வு பற்றி மிகத் துல்லியமான நுண்விபரங்கள் கொண்ட அந்த ஆறு நூல்கள்- ஸ்காண்டிநேவிய சமூக சேவை அமைப்புகள் இல்லாமல், அவரும் அவரது கவிதாயினி மனைவியும் தங்கள் நான்கு குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள ஒப்புவித்த குழந்தைக் காப்பகங்கள் இல்லாமல், எவ்வளவு சாத்தியப்பட்டிருக்கும்?)

ஓப்பில், ரூல், மன்கூசோ, என்ரைட்- இவர்கள் துண்டிலக்கியம் மற்றும் சிறுபொறிகளாய்த் தெறிக்கும் உரைநடை வடிவத்தைத் தேர்ந்தெடுக்க அழகியல் மற்றும் அறிதலியல் காரணங்கள் இருக்கின்றன என்பது நிச்சயம்தான், ஆனால், வேறு ஆழமான கட்டாயங்களும் இவர்களுக்கு இருக்கின்றன என்று தோன்றுகிறது- “என் குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு என்னால் எழுத முடியாது,” என்று எழுதுகிறார் நெல்சன். தன் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருக்கும்போது அவசர அவசரமாக தான் எழுதியதாக என்ரைட் சொல்கிறார், பின்னரே அவர் தன் குறிப்புகளை புத்தக வடிவில் தொகுத்திருக்கிறார். ஓப்பில் எழுதிய டிபார்ட்மெண்ட் ஆஃப் ஸ்பெகுலேஷன் நாவலின் கதைசொல்லி, காரில் சென்றுகொண்டிருக்கும் வேளையில் மளிகை சாமான் பட்டியலில் எழுதுகிறார், கிரெடிட் கார்ட் ரசீதுகளின் பின்புறம் கிறுக்குகிறார் (ஓப்பில்கூட தன் நாவலை இன்டெக்ஸ் கார்டுகளில்தான் எழுதியிருக்கிறார்).

ஜோன் டிடியன், எலிசபெத் ஹார்ட்விக், ரேனாடா ஆட்லர் முதலியவர்கள் எழுபதுகளில் புகழ்பெறச் செய்த துண்டங்கள்- அல்லது உணர்வுநிலை துண்டித்தல்களின் பலவகைகள்- அல்ல இவை. அவர்களது துடிப்பான, மெல்லிய வாக்கியங்கள் நளினமாய் அவிழ்ந்து விழும் பணக்காரப் பெண்களின் அலுப்பை நினைவூட்டின. இப்போது எழுதுபவர்கள் வேறு திசையில் செலுத்தப்படுகிறார்கள், இது வலிமிகுந்த நிலைபெயர்தலாக இருக்கிறது. இந்தத் துண்டங்கள் கரடுமுரடாக இருக்கின்றன- ஆனால் இவை அன்னியப்படுதலை நிகழ்த்திக் காட்டுகின்றன என்பதைவிட ஒருங்கிணைத்தலை நோக்கி உணர்ச்சிகரமான முயற்சி எடுத்துக் கொள்கின்றன.

பெண்கள், அதிலும் குறிப்பாக தம் பணியில் உணர்வுப்பூர்வமான ஈடுபாடு கொண்ட பெண்கள், மகப்பேற்றுக்குப்பின் தம்மிலிருந்தே அன்னியப்பட்டு உணர்வதைக் கைப்பற்ற விரும்பியதாய் பல நேர்முகங்களில் ஓப்பில் கூறியிருக்கிறார். நொறுங்கிய கண்ணாடியில் வரையப்பட்ட சுய ஓவியம்தான் டிபார்ட்மெண்ட் ஆஃப் ஸ்பெகுலேஷன்.

மணவாழ்வு, புரட்சி மற்றும் வழமை, ஏன், கதையாடல்கள் குறித்தே உள்ள வழக்கமான கதையாடல்களின் மத்துறுதல்களை எதிர்த்து நிற்கும் அலகுகளாய் ஆர்கனாட்ஸ் என்ற நூலில் மாகி நெல்சனின் துண்டங்கள் ஒவ்வொன்றும் இருக்கின்றன என்ற உணர்வு எழுகிறது. “எப்போது, எப்படி, பழைய நியூக்லியர் குடும்ப அமைப்பை புதிய உறவு அமைப்புகள் பிரதிபலிக்கின்றன, எப்போது எப்படி அவை தம்மை முற்றிலும் புதிய சூழியலில் அமைத்துக் கொண்டு உறவுகள் குறித்து மறுபரிசீலனையாகும் வகையில் தம்மைத் தொகுத்துக் கொள்கின்றன“, என்று கோட்பாட்டியலாளர் ஜூடித் பட்லரின் மொழியை கடன் வாங்கி அவர் கேட்கிறார். “உன்னால் எப்படிச் சொல்ல முடியும்; அல்லது, அதைக் காட்டிலும், சொல்வது யார்?

மேலும் வாசிக்க- புக்பாரம்

ஒளிப்பட உதவி- விக்கிப்பீடியா

ஹங்கேரிய மொழி இலக்கியத்தை இந்திய ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கலாம்- பாரிஸ் ரிவ்யூ தளத்தில் ஒரு நேர்முகம்

வாலரி ஸ்டைவர்ஸ் (Valerie Stivers)

(இவ்வாண்டு மேன் புக்கர் பரிசு பெற்ற ஹங்கேரிய எழுத்தாளர் லாஸ்லோ க்ராஸ்னஹோர்க்காய் நாவல்களை மொழிபெயர்த்தவர் ஓட்டிலி மூல்ஸட். இவரை பாரிஸ் ரிவ்யூ தளத்துக்காக பேட்டி கண்டவர் வாலரி ஸ்டைவர்ஸ் (Valerie Stivers))

க்ராஸ்னஹோர்க்காய் எழுத்தை மொழிபெயர்த்த அனுபவத்தைக் கூறுங்கள். நீங்கள் எப்படி அவரது மொழிபெயர்ப்பாளர் ஆனீர்கள்? அவருடன் எப்படி வேலை செய்கிறீர்கள்?

நான் அவரைச் சந்திப்பதற்கு முன், செயோபோ தேர் பிலோவிலிருந்து “சம்திங் இஸ் பர்னிங் அவுட்சைட்” என்ற சிறுகதை ஒன்றை மொழிபெயர்த்திருந்தேன். அது http://www.hlo.hu என்ற ஹங்கேரிய மொழி இணையதளத்தில் பதிப்பிக்கப்பட்டது. 1989ஆம் ஆண்டுக்கு இருபதாண்டுகள் பிற்பட்ட கிழக்கு ஐரோப்பிய சிறுகதைகள் என்ற ஒரு மொழிபெயர்ப்புத் தொடரில் பதிப்பிக்க ஜூன் 2009ல் கார்டியன் தளம் அதைத் தேர்ந்தெடுத்தது. அப்போது சிறிது நேரம் க்ராஸ்னஹோர்க்காயைச் சந்திக்க நேர்ந்தது. நாங்கள் கடிதங்கள் பரிமாறிக் கொண்டோம். செயோபோவை மொழிபெயர்க்க நான் முயற்சி செய்யத் தயாராக இருப்பதைச் சொன்னேன். முதலில் க்ராஸ்னஹோர்க்காய்க்கு அதில் சிறிது தயக்கம் இருந்தது, அந்தப் படைப்பு அசாதாரண அளவில் சிக்கலானது என்பதால் அவரது தயக்கம் புரிந்துகொள்ளப்படக் கூடியதுதான். ஆனால் நான் அனிமல் இன்சைடை மொழிபெயர்த்தேன், அது மிக நல்ல வரவேற்பு பெற்றது, ஓரளவு சீக்கிரமாகவே இரண்டாம் பதிப்பும் வெளிவந்தது. அடுத்த ஆண்டு இளவேனிற் பருவத்தில் நான் செயோபோவிலிருந்து ஓர் அத்தியாயத்தை நியூ டைரக்சன்ஸ் பதிப்பகத்துக்கு முன்மாதிரியாக அனுப்பி வைத்தேன்.

க்ராஸ்னஹோர்க்காயும் நானும் மின் அஞ்சல்வழி நிறைய பேசிக்கொள்கிறோம். எனக்கு ஏதும் கேள்விகள் இருந்தால், அவர் மிகவும் உற்சாகமாக பதிலளிக்கிறார். பெரும்பாலும் ஹங்கேரிய மொழியில்தான் பேசிக் கொள்கிறோம். சில சமயம் அவர் நேரடியாகச் சில குறிப்புகள் அளிப்பதுண்டு. உதாரணமாக, செயோபோவில் உள்ள அந்நிய மொழிச் சொற்களை சாய்வெழுத்துகளில் எழுதக்கூடாது என்று சொன்னார், அது ஏன் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. பிரதியில் இயல்பாகவே ஒன்றியிருப்பது போல் சேரும்போதும் அவை மேலும் குழப்புவதாய் இருக்கின்றன. எனக்கு அது ஒரு தீவிரமான செய்கையாகத் தெரிந்தது.

ஒரு மொழியாக ஹங்கேரிய மொழியின் பலங்களும் தனித்தன்மைகளும் என்ன, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது அதன் சவால்கள் என்ன?

ஒரு மொழியாக ஹங்கேரியன் எனக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது. நான் அதன் ஒலியை நேசிக்கிறேன், அதன் இலக்கணம் எப்படி வேலை செய்கிறது என்பதை நேசிக்கிறேன். அதன் மொழிக் களஞ்சியத்தை நேசிக்கிறேன், பல்வேறு மொழிகளின் திகைக்க வைக்கும் கலவையாக அங்கு குவிந்திருக்கும் சொற்தொகையை நேசிக்கிறேன், அதைக் கொண்டு எழுத்தாளர்கள் என்னவெல்லாம் செய்கின்றனர் என்பதை நேசிக்கிறேன். ஹங்கேரிய மொழி உயிரொலி இயைபு கொண்ட ஒட்டுநிலை மொழி- அதன் பின்னொட்டுகள் முடிவற்றவை, கூட்டுச் சொற்களுக்கான சாத்தியம் ஏராளமானவை, அதன் சொல்வரிசை மிகவும் நெகிழ்வுத்தன்மை கொண்டது- எதற்கு முக்கியத்துவம் அளிக்க விரும்புகிறாயோ, அதற்குத் தகுந்த வகையில் வாக்கிய அமைப்பை உருவாக்கிக் கொள்ளலாம். நம்ப முடியாத அளவுக்கு ஹங்கேரிய மொழிக்கு ஒரு நெகிழ்வுத்தன்மை உண்டு என்பதை அவசியம் சொல்லியாக வேண்டும்- அது ஒரு ரப்பர் பாண்ட் போன்றது. அது விரிந்து கொண்டே செல்லக்கூடியது, ஆஹா, இப்போது எந்த நொடியும் அறுபட்டுவிடப் போகிறது என்று நீங்கள் நினைக்குமளவு அது விரியக்கூடியது. அல்லது, வெகு சில எளிய சொற்களில் அதைச் சுருக்கி விடலாம்- அதிலுள்ள மிக முக்கியமான பகுதிகள் அனைத்தையும் உங்கள் யூகத்துக்கே விட்டுவிடவும் முடியும்.

ஆங்கிலம் உலகளாவிய மொழியாக இருந்தாலும் அத்தனை நெகிழ்வுத்தன்மை கொண்டதல்ல. ஒருவேளை இந்திய துணைக்கண்டத்தில் பேசப்படும் ஆங்கிலம் அப்படியிருக்கலாம்- அங்கு அது இந்தியின் போக்குகளுக்கு ஏற்ப ஓரளவு கட்டுப்பட வேண்டியிருக்கிறது- ஹங்கேரிய மொழி இலக்கியத்தை மொழிபெயர்ப்பதற்குச் சரியான ஆங்கிலமாக அது இருக்கலாம். ஆனால் எனக்கு எந்த மொழி நன்றாகத் தெரியுமோ அதில்தான் நான் வேலை செய்தாக வேண்டும்.

தகவல்களால் நெருக்கமாகத் தொகுக்கப்பட்ட வாக்கியங்களைத் தவிர்க்கப் போராடியாக வேண்டும், என்றாலும் கூட கொஞ்சம் தீவிரமான இழப்புகளை எதிர்கொள்ள வேண்டும் எனும்போது நீங்கள் ஆங்கில மொழியின் எல்லைகளை மீறத்தான் வேண்டும். ஆங்கில மொழியின் எழுவாய்- பயனிலை- செயப்படுபொருள் என்ற வரிசை இறுக்கமானது, செயல்வினை காட்டிகள் எல்லாமும் அதனதன் இடத்தில் இருந்தாக வேண்டும்.

காகிதத்தின் சிந்திய மசித் துளிகள் போல் ஹங்கேரிய மொழி இருக்க முடியும். சில வாக்கியங்கள்- க்ராஸ்னஹோர்க்காய் விஷயத்தில் சில உட்கூறுகள்- இரண்டு அல்லது மூன்று சொற்கள் மட்டுமே கொண்டவையாக இருக்கும். இதில் சொல்லப்படாமல் விட்டுப்போவது பற்றியெல்லாம் யோசிப்பது எனக்கு சுவையாக இருக்கிறது, வழிக்கு வர முரண்டு பிடிக்கும் ஆங்கிலம் போன்ற ஒரு மொழியில் அதைச் சொல்ல வேண்டியிருப்பது மிகவும் சுவாரசியமான விஷயமாக இருக்கிறது- ஆங்கில மொழியில் சாத்தியமற்ற ஏதோ ஒன்றைச் செய்யவைக்க முயற்சிப்பதில் ஓர் ஆர்வம் இருக்கிறது.

ஆங்கில மொழி இன்று வணிகத்திலும் வர்த்தகத்திலும் உலகளாவிய மொழியாக இருக்கிறது, எனவே அது மேலாதிக்கம் செலுத்துகிறது என்று சொன்னாலும் சில வகைகளில் அது மிகவும் ஏழைப்பட்ட மொழியாகவே இருக்கிறது. பிற மொழிகளிலிருந்து இது போல் ரத்தம் செலுத்தப்படுவது ஆங்கில மொழிக்கு அவசியமாக இருக்கிறது.

க்ராஸ்னஹோர்க்காய் எழுத்தை ஆங்கில மொழியில் வாசிக்கும்போது எத்தகைய இழப்புகள் ஏற்படுகின்றன, மொழியின் தொனி என்ற அளவில் சொல்லுங்கள்.

ஹங்கேரிய வாசகர்கள்- நான் சொல்வது தீவிர இலக்கியம் படிக்கும் ஹங்கேரிய வாசகர்கள்- மிகக் கடினமான வகையில் சிக்கலான அமைப்பு கொண்ட இந்த வாக்கியங்கள் சிலவற்றை பிறரைக் காட்டிலும் அதிக அளவில் ஏற்றுக் கொள்கின்றனர், இங்கு நான் வாக்கியத்தின் நீளத்தைப் பற்றியே பேசவில்லை. எந்த அளவுக்கு சிக்கலான வாக்கிய அமைப்பை ஆங்கிலத்துக்கு கொண்டு வர முடியுமோ, அந்த அளவுக்கு அதைக் காப்பாற்றியிருக்கிறேன்- மூல நூலிலேயே புத்தகத்தின் சில பகுதிகள், வாசகனுக்கு தான் எங்கே இருக்கிறோம் என்ற குழப்பத்தைத் தோற்றுவிக்கின்றன, அதை எல்லாம் அப்படியே கொண்டுவர முயற்சி செய்திருக்கிறேன்.

ஹங்கேரிய மொழியில் ஆங்காங்கே சிதறிய சில சிறு பத்திகள் இருக்கின்றன, அவை வாசிக்க கவிதை போலிருக்கின்றன, அவற்றில் சிலவற்றின் ஒலியைக் காப்பாற்ற முடியவில்லை. நினைவுக்கு வரும் சொற்றொடர் இது, “rízs és víz, rízs és víz”- “அரிசியும் நீரும் அரிசியும் நீரும்” – மிகுந்த வறுமையில் இருக்கும்போது வீட்டில் இருந்த ஒரே உணவு இதுதான் என்று மாஸ்டர் இனோயி கசுயூகி சொல்கிறார். இந்தச் சொற்றொடரில் வரும் ஐ என்ற நெடில் இறுதியில் வரும் குழிந்துரசொலிகளோடு (Sibilant) இணையும்போது, மறக்க முடியாத ஓர் ஒலித்தாக்கத்தை ஏற்படுத்துகிறது- அது ஆங்கிலத்தில் வராது என்று நினைக்கிறேன். ஆனால் மீண்டும் மீண்டும் இதைச் சொல்வதில் க்ராஸ்னஹோர்க்காய்க்கே உரிய தனித்துவம் கொண்ட வரண்ட நகைச்சுவையை மீளுருவாக்கம் செய்ய முடிந்திருக்கிறது என்று நம்புகிறேன்.

குறுகிய வாக்கியங்களைக் காட்டிலும் நீண்ட வாக்கியங்கள் கடினமாக இருக்கின்றனவா?

அந்த நீண்ட வாக்கியம் எப்படிப்பட்டது என்பதைப் பொறுத்த விஷயம் இது. நீண்ட வாக்கியங்கள் சிலவற்றில் ஓர் ஒழுங்கு வரிசை இருக்கக்கூடும்- ஒவ்வொரு தகவலாக ஒன்றன்பின் ஒன்று தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது ஒரே ஓட்டமாக இல்லாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும், அந்த ஆபத்து இருக்கிறது. மூல நூலில் முற்றுப்புள்ளி இல்லாத இடத்தில் நான் முற்றுப்புள்ளி வைக்கவே மாட்டேன்- ஏனெனில் என்னைப் பொறுத்தவரை இந்த வாக்கியங்கள் நதி போலிருக்கின்றன, மூல பிரதியில் இல்லாத இடத்தில் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும்போது அது ஆற்றில் அணை கட்டுவது போன்றது.

ஆனால் அப்படிப்பட்ட வாக்கியங்கள் ஒப்பீட்டளவில் சுலபமானவை. க்ராஸ்னஹோர்க்காய் ஹங்கேரிய மொழி இலக்கணத்தின் அசாதாரண நெகிழ்வுத்தன்மையை பயன்படுத்திக் கொண்டு வேண்டுமென்றே சில சமயம் சிக்கலான வாக்கியங்களை அமைக்கிறார்- துணைநிலைத் தொடர்களுக்கு இடையேயுள்ள உறவுகளை ஒரு வரைபடமாக வரைந்தால், அது அச்சுப்பிரதியில் சிலந்தி வலைபோல் இருக்கும். தொடர்ந்து இணை அமைப்புகள் கொண்ட சொற்களாலான நீண்ட வாக்கியங்கள்- ஆங்கிலம் ஓரளவு இயல்பாக அதை ஏற்றுக் கொள்கிறது.

சில மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளவாறே மொழிபெயர்ப்பதாகச் சொல்கின்றனர், வேறு சிலர் இயல்பான வாசிப்புக்கு உதவும் வகையில் கூடுதல் சுதந்திரம் எடுத்துக் கொள்வதாகச் சொல்கின்றனர். இதில் உங்கள் நிலை என்ன?

சில சமயம் இந்த முரண்நிலை சற்றே செயற்கையானது என்று நினைத்திருக்கிறேன். ஏனென்றால், நீ மொழிபெயர்ப்பதன் அந்நியத்தன்மையை வேறொரு மொழிக்குக் கடத்திச் செல்ல பல வழிகள் இருக்கின்றன. மூல மொழியின் தனித்தன்மை எதுவோ அதை கொண்டு செல்ல நான் என்னாலான அளவு முயற்சி செய்கிறேன்- அது ஏன் ஆங்கிலத்தில் எழுதப்படவில்லை, அது ஏன் ஆங்கிலத்தில் எழுதப்படுவது சாத்தியமேயில்லை என்பதை உணர்த்த விரும்புகிறேன். அசாத்தியமான ஒன்றை என் மொழிபெயர்ப்பு சாதிக்க வேண்டும், ஆனால் அது முற்றிலும் மாறுபட்ட, பொருத்தமற்ற இரு உலகங்களின் எல்லைகளில் புழங்கப்படுவதாகவும் இருக்க வேண்டும், அந்த இரு உலகங்களுக்கு இடையே என் மொழிபெயர்ப்பு ஒரு பாலமாகச் செயல்பட வேண்டும். நான் மூல மொழியில் எத்தகைய அதிர்ச்சியை உணர்ந்தேனோ, ஆங்கில வடிவில் வாசிக்கும் வாசகனும் அதை உணர வேண்டும் என்று விரும்புகிறேன்.

சுலபமாக்க வேண்டும், ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் செய்ய வேண்டும் என்பதெல்லாம் என் நோக்கமல்ல, பிரதியை மிகவும் உள்ளூருக்கு உரியதாகச் செய்துவிடக் கூடாது. ஹங்கேரிய மொழியில் அற்புதமான கவித்துவம் உள்ளது. சிலபோது அது அளவற்ற மென்மை கொண்டுள்ளது, சிலபோது அது முரட்டுக் கவிதையாய் இருக்கிறது.

ஒரு முறை, வெகுநாட்களுக்கு முன், நான் மிகவும் தீவிரமான ஹங்கேரிய மொழி செமினார் ஒன்றில் பங்கேற்றேன். ஹங்கேரிய இலக்கணத்தில் உள்ள வழக்கத்துக்கு மாறான கூறுகள், “இவர்களை யார் உள்ளே விட்டார்கள்?” என்பது போன்ற எதிர்வினைகளைச் சந்தித்தன. “இந்த மொழியின் தேவைதான் என்ன?” என்ற வழமையான கேள்விகளோடு பங்கேற்பாளர்கள் பிறர் தம்மை நிறுத்திக் கொண்டார்கள். அப்போது பயிற்றுனர் சற்றும் தாமதிக்காமல் சொன்ன பதில், “குருதி, வியர்வை, கண்ணீர்”.

க்ராஸ்னஹோர்க்காயின் ஆங்கில வாசகர்களின் குருதியும் வியர்வையும் கண்ணீரும் எனக்கு வேண்டாம், ஆனால் ஹங்கேரியன் போன்ற ஒரு முற்றிலும் மாறுபட்ட மொழியின் முழு அந்நியத்தன்மை நமக்கு அசௌகரியமாக இருக்கிறது, அந்த அசௌகரியத்தை மொழிபெயர்ப்பு காப்பாற்றித் தருமா?- அசௌகரியமானது, வித்தியசமானது, முடிவில் நமக்கு மேன்மையளிப்பதும் உயிரூட்டுவதுமாக மொழிபெயர்ப்பு இருக்க முடியுமா? க்ராஸ்னஹோர்க்காய் போன்ற ஓர் எழுத்தாளர் பற்றி பேசும்போது, தன வாசகர்களை அசௌகரியப்படுத்தி தடுமாறச் செய்வதை நேரடி நோக்கமாகக் கொண்ட ஒரு எழுத்தாளர் பற்றிதான் பேசுகிறோம். “பிரதியின் கிறுகிறுப்பு”- இதில் நிச்சயம் வெளிப்படையான, வாசக கிளுகிளுப்பின் உச்சம் இருக்கிறது.

எப்போதாவது மாலைப் பொழுதில் உங்கள் மடிக்கணினியை மூடி வைத்துவிட்டு, “அப்பாடா, இன்று ஒரு வாக்கியம் முடித்தேன்,” என்று நினைத்தது உண்டா?

“ஆம், சில சமயம், “இன்று ஒரு வாக்கியத்தைத் துவங்கினேன்,” என்றோ, “இன்று ஒரு வாக்கியத்தை முடித்தேன்” என்றோ, அல்லது, “இன்று ஒரு வாக்கியத்தைப் படித்து முடித்தேன்” என்றும்கூட இருப்பதுண்டு”

அந்த முதல் ஆறுபக்க வாக்கியத்தைப் படித்துக் கொண்டிருக்கும்போது எங்கோ ஓரிடத்தில், க்ராஸ்னஹோர்க்காயின் ஆங்கில மொழி வாசகர்கள் படிப்பதை நிறுத்தி, என்னைப்போல், இதை மொழிபெயர்த்தது யார் என்று நினைப்பதுண்டு என்று தோன்றுகிறது. அப்புறம் உங்கள் பெயர் இவ்வளவு அழகாக, மர்மம் நிறைந்ததாக இருக்கிறது, ஓட்டிலி மூல்ஸட்..

மூல்ஸட் என்ற பெயர் என் மத்திய ஐரோப்பிய வேர்களோடு தொடர்பு கொண்டது- என் பாட்டி ஹங்கேரிய தேசத்தைச் சேர்ந்தவள், அவள் பெயர் மூல்ஸட், லூயிஸா மூல்ஸட். ஓட்டிலி என்ற பெயர் எனக்குப் பிடித்திருந்ததால் அதை வைத்துக் கொண்டேன். காப்காவின் சகோதரிகளில் ஒருத்தியின் பெயர் அது- ஹங்கேரிய மொழியில் ஓட் என்றால் அங்கே என்று பொருள், நான் எப்போதும் அங்கிருப்பவள், இங்கல்ல, எனபதையும் அது குறிக்கிறது என்று நினைத்துக் கொள்கிறேன்…

நான் தத்து எடுத்து வளர்க்கப்பட்டதால் ஹங்கேரிய மொழி பயின்றேன். என் பின்னணியல் ஹங்கேரியர்கள் இருக்கிறார்கள் என்பதுகூட எனக்கு பெரியவளாகும்வரை தெரியாது. இந்த பூமியில் என் மூதாதையர்களாய் இருந்தவர்களைப் பற்றி ஏதோவொன்று அறிந்து கொள்ள இது ஒரு வழி என்று நினைத்தேன். அறிவார்ந்த ஆர்வத்தால் மட்டும்தான் அந்த மொழி கற்றுக்கொள்ளத் துவங்கினேன், ஆனால் அதன் பின் அது ஒரு போதையாகி விட்டது.

க்ராஸ்னஹோர்க்காய் நாவல்களில் நான்கு மட்டுமே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்று அவரது ரசிகர்கள் வருந்துகிறார்கள். உங்கள் வாழ்க்கைப்பணியைக் கண்டுகொண்டு விட்டதாக நினைக்கிறீர்களா? மொழிபெயர்க்கப்படாத நாவல்கள் உங்களைத் துன்புறுத்துகின்றனவா?

இப்போது பேசிக்கொண்டிருக்கும்போதுகூட இரண்டு மொழிபெயர்ப்புகள் நினைவுக்கு வருகின்றன. டெஸ்ட்ரக்சன் அன்ட் சாரோ பினீத் த ஹெவன்ஸ் என்பது ஒன்று, அதை இப்போது மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன். சீனாவில் க்ராஸ்னஹோர்க்காய் மேற்கொண்ட விரிவான பயணங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இலக்கியக் குறிப்புகள் அது. முதன்முதலில் 2002ல் பதிக்கப்பட்டபோது இருந்ததைவிட இப்போது அதற்கு கூடுதல் முக்கியத்துவம் இன்று இருக்கிறது. மற்றொன்று, த வர்ல்ட் கோஸ் ஆன், என்ற அற்புதமான சிறுகதை தொகுப்பு. 2013ஆம் ஆண்டு சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான பரிசு பெற்ற ஜார்ஜ் ஜைர்டஸ், அவர் பரிசு பெற்றதும் க்ராஸ்னஹோர்க்காய் நூலுக்காகதான், ப்ரம் த நார்த் பை ஹில், ப்ரம் த சவுத் பை லேக், ப்ரம் த வெஸ்ட் பை ரோட், ப்ரம் த ஈஸ்ட் பை ரிவர் ஆகிய நான்கு புத்தகங்களை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார்- வரும் சில ஆண்டுகளில் இந்த நான்கேனும் வாசிக்க கிடைக்கவிருக்கின்றன.

புதிய செய்திகள் அல்லது திட்டங்கள் எதுவும் சொல்வதற்கு உண்டா?

சைலார்ட் பார்பேலியின் த டிஸ்பொசஸ்ட் மொழியாக்கம் செய்யப் போகிறேன்- அறுபதுகளின் பிற்பகுதியில் வடகிழக்கு ஹங்கேரியில் ஏழ்மைப்பட்ட கிராமத்தில் தான் வளர்ந்த அனுபவத்தை எழுதியிருக்கிறார் அவர். தன் சமகால தலைமுறையின் மிகவும் திறமை வாய்ந்த கவிஞர் அவர், இவ்வாண்டு பிப்ரவரி மாதம் தற்கொலை செய்து கொண்டார். என் நெருங்கிய நண்பர் அவர், நம்ப முடியாத அளவுக்கு உயர்ந்த மனிதர். அவரது மரணம் நினைத்தே பார்க்க முடியாத இழப்பு, ஹங்கேரிய இலக்கியத்திலும் ஐரோப்பிய இலக்கியத்திலும் மிகப்பெரிய வெற்றிடத்தை விட்டுச் சென்றிருக்கிறது. அவரது எழுத்துக்கு புதிய ஆங்கில வாசகர்களை அறிமுகப்படுத்த முடியும் என்றால், எனக்கு அதுவே ஒரு மகிழ்ச்சியாக இருக்கும்- இப்படிப்பட்ட சூழ்நலையில் ஒருவர் எவ்வளவு சந்தோஷப்பட முடியுமோ அவ்வளவு சந்தோஷப்பட முடியும்.

குடும்ப அமைப்பின் இருண்மையை விவரிக்கும் எழுத்தின் எழுச்சி / The Rise of Domestic Noir – கில்லியன் ப்ளின்

அஜய் ஆர்

தன் உடலில் தானே காயங்களை ஏற்படுத்திக்கொள்பவர், சிறு வயதில் நடந்த கொடூரச் சம்பவத்தால் எந்தவிதமான உறவுகளையும் தக்கவைத்துக் கொள்ள முடியாதவர், அனைத்து உறவுகளையும் ஆடு புலி ஆட்டமாக பாவித்து, வெற்றி பெறுவதையே முக்கியமானதாக எண்ணுபவர் என மனதளவில் உடைந்தவர்களாக, சமூகத்துடன் ஒன்றக்கூட முடியும் ஆனால் குடும்பம் என்ற அமைப்பில் ஒன்ற முடியாமல் திணறும், கில்லியன் ப்ளின் (Gillian Flynn) மூன்று நாவல்களின் முக்கியமான பெண்பாத்திரங்களின் குணாதிசயங்கள் வித்தியாசமானவை.

பெண்கள் முக்கிய பாத்திரமாக – மென்மையானவர்களாக, தூய்மையே உருவானவர்களாக இல்லாமல் – சிக்கலான பாத்திரங்களாக வரும் குற்றப்புனைவுகள் புதிதல்ல.  மனநல காப்பகத்தில் சிகிச்சை பெறும், மதுவிற்கு அடிமையான பெண் பாத்திரங்கள் கொண்ட டெனீஸ் மினாவின் (Denise Mina) நாவல்கள்/ பாத்திரங்கள் ஒரு உதாரணம். தன் தந்தையாலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர் மினாவின் நாயகி, ஆனால் அது நாவலின் மையம் அல்ல, அவர் சந்திக்கும் ஆபத்துக்கள் குடும்பம் அல்லாத வேறு இடங்களில் வருகின்றன. இங்கு அவரின் குடும்பச் சூழல், அவர் பாத்திரத்தை இன்னும் கனமாக்க உதவுகிறதே அன்றி நாவலில் நடக்கும் குற்றத்திற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை.  மேகன் ஆபட்டின் (Megan Abbot) நாவல்களில் பதின் பருவப் பெண்களில் சிக்கல்கள், போட்டி/ பொறாமைகள் குற்றப்புனைவாக மாறுகின்றன. இங்கு பெண்களுக்கான ஆபத்து என்பது அவர்களின் நட்பில் இருந்து வருகிறது.  கடும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான Millennium Trilogyன் ‘சலண்டர்’ (Salander),  தன் கடந்த காலம் தந்த வலிகள் இன்னும் சுமந்து கொண்டிருந்தாலும், சமூகத்தை ஒதுக்கி, தன் கணினி திறமையால், வேறு விசாரணைகள்/ வழக்குக்களில் தன் திறமையை காட்டுகிறார்.

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களின் சூழலை முன்வைத்து குற்றப்புனைவுகள் வந்துள்ளன (‘Arnaldur Indriðason ‘ , ‘Camille Lackberg’). இவற்றில் பாதிக்கப்படும் பெண்கள் பற்றிய விசாரணையை இன்னொருவர் செய்கிறார். இங்கு மூர்க்கமான கணவன், அவனிடம் அல்லல்படும் மனைவி என விஷயம் கருப்பு/ வெள்ளையாக உள்ளது.

இப்படி பல எழுத்தாளர்கள் இருக்க, இவர்களிடமிருந்து ப்ளின் எவ்வாறு வேறுபடுகிறார்?

ப்ளின்னின் நாவல்களின் மையம் என்பது முற்றிலும் ‘குடும்பம்’ என்ற அமைப்பும், அது ஏற்படுத்தக்கூடிய மூச்சுத்திணறலும்தான் (claustrophobia) . இவரின் பாத்திரங்கள் சந்திக்கும் சவால்கள்/ சோதனைகள்/ ஆபத்துக்கள் அனைத்தும் குடும்பத்திற்குள் இருந்தே தோன்றுகின்றன. தாய், தந்தை, அண்ணன்/ தங்கை, கணவன்/ மனைவி என அனைத்து உறவுகளிலும் ஆபத்து மறைந்துள்ளது. கணவன் மனைவியை அடிப்பது போன்று வெளிப்படையான எந்த முறிவும் இந்த உறவுகளில் தெரிவதில்லை. சாப்பாட்டு மேஜையில், பேசிக்கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் கணவன் -மனைவி , உள்ளுக்குள் புகைந்து கொண்டு, ஒருவரை ஒருவர் கொல்லத் திட்டமிடுவதைப் போன்றது இந்த நாவலில் வரும் உறவுச் சிக்கல்கள்.


தன் பத்திரிக்கையாளர் வேலை சம்பந்தமாகக்கூட தான் பிறந்த ஊருக்குச் செல்வதை கமீல் (Camille) வெறுக்கும் அளவிற்கு (Sharp Objects) குடும்பம் இவர்களை பாதித்துள்ளது. இப்படி குடும்பம் சம்பந்தப்பட்ட, குடும்பம் சார்ந்து கடும் உளக்காய்ச்சலில் இருக்கும் பெண்கள் பற்றிய குற்றப்புனைவுகள் “இல்லற நுவார்” (Domestic Noir) என்று வகைப்படுத்தப்படுகின்றன. Julia Crouch என்ற எழுத்தாளர் 2013ஆம் ஆண்டு தான் உருவாக்கிய இந்தப் பதத்தை

“In a nutshell, Domestic Noir takes place primarily in homes and workplaces, concerns itself largely (but not exclusively) with the female experience, is based around relationships and takes as its base a broadly feminist view that the domestic sphere is a challenging and sometimes dangerous prospect for its inhabitants. That’s pretty much all of my work described there.”

என்று விளக்கிறார். இந்த விளக்கம், அதற்கு முன்பும்/ பின்பும் வெளிவந்த படைப்புக்களுக்கும் பொருத்தப்பட , 2005ல் தன் முதல் நாவலை வெளியிட்ட ப்ளின்னும் இதில் சேர்க்கப்பட்டார்.

இன்னொரு கோணத்தில் பார்த்தால் ‘இல்லாமலாகிய இல்லறம்’ பற்றிய நாவல்களின் (Dysfunctional family novels) பாத்திரங்கள் குற்றங்களில் ஈடுபட்டால் ‘Domestic Noir’ஐ வந்தடைய முடியும்.  எனவே இந்த வரையறைகள் நெகிழ்வானவைதான்.  ஒரே எழுத்தாளர்  ஒன்றுக்கு மேற்பட்ட வகைமையில் சேர்க்கத்தகுந்த படைப்புகளைத் தரக்கூடும். தான் எண்ணியே இராத வகைமைக்குள் ஒரு எழுத்தாளர் அடைக்கவும் படக்கூடும். ப்ளின்னின் படைப்புகளையுமேகூட ‘சிறுநகர நுவார்’ (Small Town Noir) என்றும் வரையறை செய்யலாம். ஒரே இடத்தில் பல்லாண்டு காலம் வாழ்ந்து, பல கசப்புக்களை/ பொறாமைகளை/ ரகசியங்களைச் சுமந்து கொண்டிருக்கும் சிறு நகரங்களே இவரின் கதைக்களன். தன் ஊரான ‘Wind Gap ‘ல் நடந்துள்ள சில துர்ச்சம்பவங்கள் குறித்து தன் பத்திரிக்கைக்காக எழுத வரும் ‘Sharp Objects’ நாவலின் நாயகி, ‘இந்நகர மக்கள் குற்றவாளி வெளியாளாக இல்லாமல், தங்களுள் ஒருவனாக இருந்தால் மகிழ்ச்சியடைவார்கள், ஏனென்றால் அப்போது ஒரு கொலைகாரனுக்கு அருகில் தாங்கள் வசித்ததையும், அவனுடன் பழகியதைக் குறித்தும் நிறைய கதைக்க முடியும் அல்லவா‘ என்று நினைக்கிறார். தங்கள் வாழ்வின் அழுத்தத்திற்கு, மாறாத தன்மைக்கு, ஏதோவொரு வடிகால் தேவைப்படும் இவர்களை, ரிச்சர்ட் ரூஸோவின் (Richard Russo) சிறுநகர மாந்தர்களிலும் பார்க்கலாம்-என்ன, அவர்கள் கொலையெல்லாம் செய்வதில்லை.

இத்தகைய முத்திரை குத்தல்கள் பல நேரங்களில் ஒரு விளம்பர உத்தியாக மட்டுமே இருக்கின்றன என்றாலும், படைப்புகளுக்குள் உள்ள நுட்பமான வித்தியாசங்களையும் (ஒற்றுமைகளையும்கூட) சுட்ட உதவுகின்றன.

ப்ளின்னின் நாயகிகள் மன அழுத்தம் உடையவர்கள் என்று பார்த்தோம். அது மட்டுமே அவர்களின் அடையாளம் அல்ல. வாசகன் எளிதில் பற்று கொள்ள முடியாதவர்களாக ப்ளின்னின் பெண் பாத்திரங்கள் உள்ளார்கள். அதற்கு அவர்களின் இருமையான எதிர்மறை குணங்கள் ஒரு முக்கிய காரணம். ‘தாய்’, ‘நாயகி’ போன்ற பிம்பங்கள் குறித்து நாம் எதிர்பார்ப்பவையை உடைத்துச் செல்பவர்கள் இந்தப் பெண்கள். நாயகி மட்டுமல்ல  “…domestic sphere is a challenging and sometimes dangerous prospect for its inhabitants.” என்ற விளக்கத்தில், குடும்பத்தில் ஆபத்தை உருவாக்கும் எதிர்மறை பாத்திரங்களும் பெண்கள்தான், அதாவது பாதிக்கப்படுபவர்களும்/ பாதிப்பை ஏற்படுத்துபவர்களும் பெண்களாகவே உள்ளார்கள். ‘Gone Girl‘ தவிர்த்து, மற்ற இரு நாவல்களில் எதிர்மறை குணாதிசயங்கள் கொண்ட ஆண்கள் வந்தாலும் இருண்மையான குணம் கொண்டவர்களாக இல்லை, ‘Gone Girl’ன் நிக்கும்கூட ஏமியுடன் ஒப்பிடும்போது அத்தனை மோசமானவனாக தெரிவதில்லை (ஒப்பீட்டளவில் என்பதை நினைவில் கொள்க).

Dark Places‘ நாவலின் நாயகி, சிறு வயதில் நடந்த சம்பவத்தால் மிகவும் பாதிக்கப்படுகிறார். மிகவும் சோகமான விஷயம்தான், ஆனால் அதே நேரம் அந்த துயரத்தை உபயோகித்து, தன்பால் பரிவு கொண்டவர்கள் தரும் நன்கொடைகளை வைத்தே 30 வயதுவரை எந்த வேலைக்கும் செல்லாமல் காலத்தை ஓட்டுகிறார். தன் கடந்தகாலத்தைப் பற்றி எப்படி பேசினால் மற்றவர்களின் மனதை இளக்கி பணம் கறக்க முடியும் என்பதில் வித்தகராக இருக்கிறார். தன் குடும்பத்தினர் எழுதிய கடிதங்களை/ புத்தகங்களை விற்றால் பணம் கிடைக்கும் என்றால் அதற்கும் அவர் தயாராகவே இருக்கிறார். ஒருவிதத்தில் தந்திரக்காரராக அவர் தோன்றினாலும், அவரின் செயல்கள் பரிதாபகரமாகவும் உள்ளன.


ப்ளின் இப்படி தனித்தன்மையுடன் பெண் பாத்திரங்களைப் படைத்திருந்தாலும், அதனாலேயே  பெண் வெறுப்பாளர் (misogynist) என்றும் விமர்சிக்கப்படுகிறார் . அதற்கு அவர்,

“To me, that puts a very, very small window on what feminism is,” she responds. “Is it really only girl power, and you-go-girl, and empower yourself, and be the best you can be? For me, it’s also the ability to have women who are bad characters … the one thing that really frustrates me is this idea that women are innately good, innately nurturing. In literature, they can be dismissably bad – trampy, vampy, bitchy types – but there’s still a big pushback against the idea that women can be just pragmatically evil, bad and selfish … I don’t write psycho bitches. The psycho bitch is just crazy – she has no motive, and so she’s a dismissible person because of her psycho-bitchiness.”

என்று பதிலளித்துள்ளார்.

ஆம், இந்தப் பெண்கள் ரத்த வெறியோடு கத்தியை எடுத்துக்கொண்டு அலைபவர்கள் இல்லை. ‘அதீத தாய்மை’ ஏற்படுத்தும் (திட்டமிட்ட/ திட்டமிடப்படாத) எதிர்மறை பாதிப்பைப் பற்றியதாக இவரின் இரண்டு நாவல்களைச் சுட்ட முடியும். ‘Gone Girl‘ நாவலின் ‘ஏமியின்’ (Amy) செயல்களை நியாயப்படுத்தும் ஒரு விஷயமும் நாவலில் கிடையாது என்றாலும்

“….Men always say that as the defining compliment, don’t they? She’s a cool girl. Being the Cool Girl means I am a hot, brilliant, funny woman who adores football, poker, dirty jokes, and burping, who plays video games, drinks cheap beer, loves threesomes and anal sex, and jams hot dogs and hamburgers into her mouth like she’s hosting the world’s biggest culinary gang bang while somehow maintaining a size 2, because Cool Girls are above all hot. Hot and understanding. Cool Girls never get angry; they only smile in a chagrined, loving manner and let their men do whatever they want. Go ahead, shit on me, I don’t mind, I’m the Cool Girl.

“….Men actually think this girl exists. Maybe they’re fooled because so many women are willing to pretend to be this girl. For a long time Cool Girl offended me………..”

“…but believe me, he wants Cool Girl, who is basically the girl who likes every fucking thing he likes and doesn’t ever complain. (How do you know you’re not Cool Girl? Because he says things like: “I like strong women.” If he says that to you, he will at some point fuck someone else. Because “I like strong women” is code for “I hate strong women’.

என்ற ஏமியின் புகழ்பெற்ற பேச்சை (monologue) , பெண்ணியமாகக் கருத முடியும் அல்லவா?


ஒரு குற்றம், அதைப் பற்றிய விசாரணை, அத்துடன் இணையாத, ஆனால் நாவலின் போக்கில் உருவாகும் முக்கியமான பாத்திரத்தின் தனி மனித குணநலன்கள்/ குடும்ப வாழ்வு பற்றிய சித்திரம் என்ற வரிசையில் எதுவும் இந்த நாவல்களில் இல்லை. ஒன்று குற்றம் பற்றிய தகவல்கள் தெரிய வர வர நாயகியின் உருவச் சிக்கல்களின் மேல் வெளிச்சம் விழ ஆரம்பிக்கும், அல்லது நாயகியின் உறவுச் சிக்கல்கள் பற்றி பிடிபட ஆரம்பிக்க, நடந்த குற்றம் பற்றிய உண்மைகள் துலங்க ஆரம்பிக்கும் என்று குற்ற விசாரணைக்கும்/ குடும்ப வாழ்விற்குமான எல்லைகள் கலந்து, எது எங்கு ஆரம்பித்து எங்கு முடிகிறது என்று சொல்ல முடியாதபடி உள்ளன இந்த நாவல்கள்.

Sharp Objects‘ நாவலில், பெரும்பகுதிவரை பரபரப்பாக எதுவும் நடப்பதில்லை. நாயகி தான் எழுத வந்த குற்றங்களைப் பற்றி விசாரணை செய்வதைவிட, தன் குடும்ப உறவுகளைச்\ சீர்தூக்கிப் பார்ப்பதிலேயே நேரம் செலவழிக்கிறார். ஆனால் அதே நேரம், அவருடைய கடந்த காலத்தில் நடந்த சில சம்பவங்கள் குறித்து தெரியவரும்போது நமக்கு ஏன் அமைதியின்மை ஏற்படுகிறது. கடந்த காலத்திலும் சரி, நிகழ்காலத்திலும் சரி, சில பாத்திரங்கள் ஏன் அடிக்கடி திடீர் திடீரென்று நோயுறுகிறார்கள், பின்பு எந்த ஆபத்தும் இல்லாமல் ஒவ்வொரு முறையும் தப்புகிறார்கள். இதற்கும் நாவலின் மையத்திற்கும் என்ன சம்பந்தம் போன்ற கேள்விகளுக்கான விடைகளை இறுதியில் ப்ளின் தருகிறார்.

Dark Places‘ நாவலில், குற்றப் புனைவின் தாக்கத்தை/ நிஜ குற்றங்கள் மீதான அதீத ஆர்வத்தைப் பகடி செய்வது போல், வருடந்தோறும் நடக்கும் “Kill Convention’ என்ற மாநாட்டை நாவலின் ஆரம்பப்புள்ளியாக வைத்துள்ளார். நிஜ குற்றங்கள் மீது பெரும் மோகம் கொண்டுள்ளவர்கள் நடத்தும் இம்மாநாட்டில், துலக்கப்படாத குற்றங்கள் அக்கு வேறு/ ஆணி வேறாக, தொழில்முறையாக இல்லாதவர்களால் பிய்த்துப் போடப்படுகின்றன. குற்றச் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களிடம் உள்ள கடிதங்கள்/ பொருட்கள் நினைவுச் சின்னங்களாக கருதப்பட்டு வாங்கப்படுகின்றன. நாவலின் நாயகிக்கும் பணம் கொடுத்து, தன் வாழ்வில் நடந்த துர்ச்சம்பவம் குறித்த விசாரணை செய்யத் தூண்டுகிறார்கள்.

நாவலின் கட்டமைப்பைப் பற்றி குறிப்பிட வேண்டும். நாயகியின் நிகழ்காலம் பற்றி அவரே கதை சொல்லியாகக் கூற, அத்தகைய அத்தியாயங்களோடு, அந்த துர்ச்சம்பவம் நடந்த அன்று நிகழ்ந்தவை குறித்த விவரணைகள், நாயகியின் சகோதரன்/ தாய் இவர்களின் பார்வையில் கடந்த காலத்தைப் பற்றிய அத்தியாயங்களாக ஒன்றுடன் ஒன்று கலந்து வருகின்றன. நாயகி துர்ச்சம்பவம் நடந்த நாளைப் பற்றிய உண்மையை நோக்கிப் போக, அதே நேரம் அன்று என்னதான் நடந்தது எனபதை அவருக்கு சற்று முன்பே வாசகன் தெரிந்து கொள்கிறான் என்பதோடு, உடைந்து கிடைக்கும் கண்ணிகளை அவருக்கு முன்பே ஒட்டவைத்து அவர் ஆபத்தை நோக்கிப் பயணிக்கிறார் என்று உணர்ந்து பதைக்கிறான். இது சுவாரஸ்யமான உத்தியாக இருந்தாலும், ஒரு குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது. நாயகி நிகழ்காலத்தின் கதைசொல்லி சரி, ஆனால் கடந்த சம்பவங்கள் அவரின் சகோதரன்/ தாய் இவர்கள் கதைசொல்லியாக இருந்து விவரிக்கப்படுகிறது எனும்போது அதை இப்போது, இந்த நாவலில் சொல்வது யார்? நாவலுக்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கிய விதத்தில் உள்ள சிக்கல் இது. பதின்வயதின் peer-pressure, சில தவறான புரிதல்கள், சில தொடர்பற்ற நிகழ்வுகள் ஒரே நேரத்தில் நடக்கும்போது ஏற்படும் எதிர்பார்த்திராத விளைவுகள் என ஒரு துன்பவியல் நாடகத்தை ஒத்திருக்கிறது இந்த நாவல்.

2012ஆம் ஆண்டு வெளிவந்த ‘Gone Girl‘ நாவல், ப்ளின்னுக்கு மிகுந்த புகழையும்/ பாராட்டுக்களையும் பெற்றுத் தந்தது. தங்களின் ஐந்தாவது மணநாளன்று தன் மனைவி காணாமல் போனதைப் பற்றி நிக் (Nick) விவரிப்பதாக ஆரம்பிக்கும் இந்த நாவல், உண்மையான உணர்வுகள் மேல் போடப்படும் திரை, முற்றிலும் பொய்யும் இல்லாமல் முற்றிலும் உண்மையும் இல்லாமல் தரப்படும் தகவல்கள் என நம்பத்தகாத கதைசொல்லிகளால் வாசகனுடன் விளையாடுகிறது.

வெளிப்பார்வைக்கு சந்தோஷமான வாழ்வைக் கொண்டிருந்த இவர்களுக்குள் என்ன பிரச்சனை? “வெளிப்பார்வைக்கு” என்ற வார்த்தை இங்கு முக்கியமோ? “Nothing is what as it seems” என்பதற்கு மிகப் பொருத்தமாக ஒருவரையொருவர் தோற்கடிக்க நினைப்பவர்களாக நிக் மற்றும் ஏமி நம்முன் உருவெடுக்கிரார்கள்.

நாவலின் முதல் பகுதி முடியும்போது நமக்குத் தெரியவரும் விஷயம், நாவலின் போக்கைப் புரிந்து கொண்டு விட்டோம் என வாசகனை ஆசுவாசப்பட வைக்கும் அதே நேரத்தில் இன்னும் சில திருப்பங்களை ப்ளின் ஏற்படுத்துகிறார். பொம்மலாட்டம் நடத்துபவன் பொம்மையாக மாறுவதும், பொம்மை அவனை ஆட்டுவிப்பதும், மீண்டும் இந்த வேடங்கள் இடம் மாறுவதும் என மனித மனம் செய்யக் கூடிய ‘manipulation’ன் அடி ஆழத்திற்கு ப்ளின் செல்கிறார். (Jonathan Franzenன் “The Corrections” நாவலின் பாத்திரங்கள் இன்னும் கீழே இறங்கி இருந்தால், நிக்/ ஏமி போலத்தான் நடந்து கொண்டிருப்பார்கள்.அந்த விதத்தில் இந்த நாவலை ‘Dysfunctional family noir’ என்றும் சொல்லலாம்.)

நிஜக் குற்றங்கள் மேல் உள்ள ஆர்வம் ‘Dark Places’ல் பகடி செய்யப்பட்டால், இதில் பரபரப்புக்காக, செய்திகளை முந்தித் தரவேண்டும் என்பதற்காக ஊடகங்கள் செய்யும் பொறுப்பற்ற செயல்களை, ஊடக விசாரணை (trial by media), அவர்களே எழுதும் தீர்ப்பு என்று வெகுஜன கருத்துக்களை அவர்கள் பாதிக்கும் விதத்தை முகத்திலறைவது போல் சொல்கிறார்.  ஆனால் நாவலின் மிக முக்கிய அம்சம் இவை எதுவும் இல்லை.  முக்கிய பாத்திரங்களில் கொஞ்சமேனும் நன்மையை அல்லது அவர்களின் செய்கைகளுக்கான நியாயத்தை எதிர்பார்க்கும் வாசகர்கள் இந்தப் பாத்திரங்கள் மேல் எரிச்சல் அடையலாம், நாவலை வெறுக்குமளவுக்கு எந்த நல்லியல்பும் இல்லாத இருவரை நாயகன்/ நாயகியாக்கிய ப்ளின்னின் துணிச்சல் அசாத்தியமானது, அதுவே நாவலின் USPம் கூட. இந்த பலமே நாவலின் ஒரு கட்டத்தில் பலவீனமாகவும் உள்ளது என்பது ஒரு நகைமுரண்தான்.

ஏமி/ நிக் இருவருக்கான கடந்த காலம் என்பது கிட்டத்தட்ட கொஞ்சம்கூட விவரிக்கப்படாமல் உள்ளது, இருவரின் செயல்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும்போது வாசகன் ஒரு த்ரில்லை அடைகிறான், இப்படிகூட மனித மனம் இயங்குமா என்று வியக்கிறான், இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் பாத்திரங்கள் மேல் ஒரு பயம் வருகிறதா என்றால் இல்லை. உதாரணமாக அவரின் மற்ற இரு நாவல்களின் வரும் எதிர்-பாத்திரங்கள் ஏமி /நிக் அளவிற்கு குரூர புத்தியுடையவர்களோ, புத்திசாலிகளோ இல்லை என்றாலும், அவர்களின் செயல்கள் இது நமக்கும் நடக்கக்கூடும் என்று உணரச் செய்வதால் நம்மை அவை சில்லிட வைக்கின்றன. ‘Gone Girl’ நாவலின் சம்பவங்கள் எங்கோ தூரத்தில் நடக்கக்கூடியதாகவே தோன்றுவதால், அந்த நேர பரவசத்திற்கு மேல், அச்சப்பட வைப்பதில்லை. இதை ‘ஆர்தர் கேனன் டோயலின்’ ‘Moriarty’ பாத்திரத்துடன் ஒப்பிடலாம். அவர் குறித்து நமக்குத் தெரியவரும் மிகச் சில தகவல்களிலிருந்து, அவர் மிக மோசமான குற்றங்களைச் செய்தவர் என்று அறிகிறோம். ஹோம்ஸுடன் மோதி அவரை வீழ்த்தக்கூடியவர் என்ற அளவில் அவர் நம்மைப் பரவசப்படுத்தினாலும், அச்சுறுத்துவதில்லை, ஏனென்றால் அவர் குறித்த அதிக தகவல்கள் நம்மிடம் இல்லை. ‘Gone Girl‘ நாவல் அதன் முடிவைச் சார்ந்து ஒரு ‘sequel’க்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டிருப்பதோடு, நாவலில் சொல்லப்படாத விஷயங்களில் ஒரு prequelக்கான உள்ளடக்கம் இருக்கிறது. (Anthony Horowitz போன்றோர் ‘Moriarty’ பாத்திரத்தை விரிவாக ஆக்கும் pastiche நாவல்கள் வெளிவந்துள்ளன)

நாவலின் இறுதி (3rd act) என்பது ப்ளின்னின் அனைத்து நாவல்களின் பலவீனமான பகுதியாக உள்ளது. ‘Dark Places‘ல் இறுதியில், இரட்டை திருப்பமாக அவர் செய்வதில் ஒன்று அபத்தமான ஒன்றாக உள்ளது. (நிஜ வாழ்வில் எந்த அளவுக்கு தர்க்கம் செல்லுபடியாகிறது, அதில் அபத்தமே இல்லையா என்றும் இங்கு வாதாட முடியும்). ‘Gone Girl‘ நாவலில் இறுதிக்கு சற்று முன்பு ஒரு பாத்திரத்தின் ‘மூவ்’ அசர வைக்கக்கூடியது, அதற்கான துப்புக்களை ப்ளின் நாவலில் முற்பகுதிகளில் வைத்துள்ளார் என்றாலும் அந்தப் பாத்திரத்தின் ‘consistency’ஐ அது உடைக்கிறது. இதை தர்க்கரீதியான பிரச்சினை என்று சொல்வதற்கு பதில், இறுதியில் இன்னும் இன்னும் வாசகனை அசரடிக்க வேண்டும் என்ற ப்ளின்னின் அணுகுமுறையின் பலவீனம் எனலாம். அசந்து விடுகிறோம் என்பது உண்மைதான் என்றாலும் அதற்கு ப்ளின்/ நாம் கொடுக்கும் விலை தேவைதானா? “Less is more” என்று ப்ளின் சில நேரங்களில் எழுதினால், இறுதி பரபரப்பு சற்று குறைந்தாலும், நாவலின் முழுமையை பாதிக்காமல் இருக்கும்.

Gone Girl‘ நாவலின் வெற்றி என்பது மிக அதிக விற்பனை, விருதுகள், திரைப்படமாக்கம், அதன் வெற்றி என்பதையெல்லாம் தாண்டி குற்றப் புனைவுகளில் ‘Cultural Touchstone’ஆக மாறியதுதான். ‘Domestic Noir’ (நாவல் வெளிவந்த காலத்தில் இந்தப் பதம் புழக்கத்தில் இல்லையென்றாலும்) என்ற  உப-வகைமையின் பெரும் எழுச்சிக்கு இந்த நாவலின் வெற்றி வித்திட்டது. அந்த விதத்தில் இதை ‘The Da Vinci Code‘ உருவாக்கிய அலையுடன் ஒப்பிட முடியும்.

The Da Vinci Code’/’Gone Girl‘ நாவல்களின் சாதக/ பாதகங்களைப் விமர்சித்து அவை பெற்ற பெரும் வெற்றிக்கு தகுதியானவை அல்ல என்று வாதிடலாம். ஆனால் அவற்றின் தாக்கம் மறுக்க முடியாத ஒன்று. ‘Gone Girl‘ நாவலைப் போலவே, உள்ளடக்கத்தில் மட்டுமின்றி, தலைப்பிலும் ‘read alikes’ வெளிவந்த வண்ணம் உள்ளன. ‘The Girl on the Train’, ‘The Girl in the Red Coat’, ‘The Book of You’, ‘Disclaimer’, ‘The Silent Wife’ சில உதாரணங்கள். இவற்றில் ‘The Girl on the Train’ இந்த வருடம் வெளிவந்து வெறும் வெற்றியைப் பெற்றிருக்கும் நாவல்.

Javier Sierra -ஸ்பானிய மொழியில் – எழுதிய ‘The Secret Supper‘ம், ‘The Da Vinci Code’ம் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் எழுதப்பட்டு, ‘The Da Vinci Code’ வெளிவந்த பின் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது போல, சில நாவல்கள் ‘Gone Girl’கு முன்பே எழுத ஆரம்பிக்கப்பட்டு/யோசிக்கப்பட்டு இப்போது தான் வெளி வந்திருக்கலாம் அல்லது முன்பே வெளி வந்து இந்த நாவலின் வெற்றியினால் இப்போது தான் கவனம் பெற்றிருக்கலாம்.

தினமும் காலையில் எழும் போது, தன் கடந்த காலம் குறித்த எந்த நினைவும் இல்லாத, அன்று தெரிந்து கொண்ட விஷயங்ககளை அடுத்த நாள் மீண்டும் ‘மறக்கும்’ பெண் பாத்திரத்தை மையமாக வைத்து புனையப்பட்ட, 2011ல் வெளிவந்த S.J Watsonன் ‘Before I go to Sleep‘ என்ற நாவல் இந்த வகைமையில் குறிப்பிடத்தக்க ஒன்று . Sophie Hannahவின் குற்றப்புனைவுகளில் இந்த வகைமையின் கூறுகளைக் காண முடிகிறது. எல்லா அலையைப் போலவே இதிலும் நல்ல, சுமாரான, மோசமான படைப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ‘The Da Vinci Code‘ பாணி நாவல்களின் பொற்காலம் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்தது போல் இதற்கும் நடக்கும். ஆனால் இந்த அலை இப்போதைக்கு ஓய்வதாகத் தெரியவில்லை.

ஒளிப்பட உதவி – விக்கிப்பீடியா : Gone Girl, Sharp Objects, Dark Places, Gillian Flynn

சபத், ஸ்வீட் – பிலிப் ராத் நாவல்களின் இரு ஆண் பாத்திரங்கள்

அஜய் ஆர்

       

பிலிப் ராத் நாவல்களில் நாம் சந்திக்கும் ஆண்கள் பொதுவாக எப்படிப்பட்டவர்கள்? பெண்பித்து கொண்டு அலையும் முதியவர்கள் (Mickey Sabbath/ மிகி சபத்), வெடித்துச் சிதறும் மனநிலைக்கு மிக அருகில் இருப்பவர்கள் (Ira Ringold), தங்கள் குழந்தைகளின் (அந்தக் குழந்தைகள் பெரியவர்கள் ஆன பின்பும்) நலம் குறித்த பதட்டத்திலேயே எப்போதும் இருப்பவர்கள், தெளிவற்ற அறம் சார்ந்த கொள்கை உடையவர்கள் (morally ambivalent), சுயநலக்காரர்கள், மற்றவர்களின் உணர்வுகளை மிதித்துத் தள்ளுபவர்கள், ஒரு அபத்த நிகழ்வால் வேலையை ராஜினாமா செய்ய வேண்டிவர, தனக்கு மட்டுமே தெரிந்த உண்மை தன்னைக் காப்பாற்றும் என்ற நிலையில், தான் வாழ்வு முழுக்க சொல்லி வந்த பொய்யை வெளிப்படுத்த விரும்பாத, அந்த உண்மை தரக்கூடிய கசப்புணர்வைவிட ராஜினாமாவே மேல் என்று முடிவெடுக்கும் Coleman Silk (The Human Stain) போன்ற பிடிவாதக்காரர்கள்- எத்தனை பலவீனங்கள் இருந்தாலும், எத்தனை இடர்ப்பாடுகளை சந்தித்தாலும், உறுதியான மனநிலை உடையவர்கள் இவர்கள். ஆனால் ஒருபோதும் கழிவிரக்கத்துக்கு இடம் கொடுப்பவர்கள் அல்லர் (வெளிப்படையாகவேணும்). எவரும் இவர்களை விரும்பலாம், வெறுக்கலாம் ஆனால் ஒதுக்க முடியாது.

roth

Testosteroneஆல் உந்தப்படும் இத்தகைய ஆண் பாத்திரங்களின் மிகச் சிறந்த உதாரணம் Sabbath’s Theatre நாவலின் Mickey Sabbath/ மிகி சபத் என்றால், இதற்கு நேர் எதிரான பாத்திரம் ‘American Pastoral’ நாவலின் ‘Seymour “Swede” Levov/ஸ்வீட்.

ஆபாசமாக நடந்து கொண்டதாக போடப்பட்ட வழக்குகள், தன் மகளின் அறையில் நண்பன் தங்க அனுமதிக்க, நண்பனின் 20 வயது மகளின் உள்ளாடைகளைக் கொண்டு கைப்புணர்ச்சி செய்யும், நண்பனின் மனைவியிடம் நூல் விடும், 64 வயதான சபத்தின் வாழ்வே சமூகத்தின் எந்த விதிக்கும் கட்டுப்படாத (விதிகள் என்பதே இல்லை என்பதே இவரின் விதியாக இருக்கக்கூடும்,) களியாட்டம் (orgy) எனலாம்.

மறுபுறம் ஸ்வீட். கல்லூரி காலத்தில் விளையாட்டு வீரரான, இவரின் மஞ்சள் நிற தலைமுடி/நீல நிறக் கண்கள் Nordic தேசத்தைச் சேர்ந்தவரை நினைவூட்டுவதால் ஸ்வீட் (Swede), என்ற பட்டப் பெயர் உடையவர். மனசாட்சிக்குக் கட்டுப்பட்ட, இளமையில் தந்தை சொல் மீறாத, தந்தையின் வியாபாரத்தை ஏற்று திறம்பட நடத்தும், தான் தந்தையானவுடன் தன் பதின்பருவப் பெண்ணைப் பற்றிய அதீத கவலை கொண்ட, மனைவி மீது அன்பு கொண்ட ஆசாமி இவர். அழகு, பணம், அன்பான மனைவி/ குழந்தை என ‘American Dream’ஐ அடைந்தவர் போல் இவர் வாழ்வு வெளியிலிருந்து பார்க்கத் தெரிகிறது. குடும்பத்தின் மீது அதீத அக்கறை/ கவலை கொண்ட ராத்தின் ‘யூத தந்தை’ பாத்திரங்களின் அச்சு அசல் உருவம் இவர். மற்றவர்கள் அதிகமும் ‘உப-பாத்திரங்களாக’ இருக்க, இவர் நாவலின் மைய பாத்திரமாக இருப்பதே முக்கிய வித்தியாசம்.

சபத் தன் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் எந்த மெல்லிய பிணைப்பையும் உடைக்க நினைத்தால், ஸ்வீட் அத்தகைய பிணைப்புக்களை வரவேற்பது போல் தோன்றுகிறது.

சபத்துக்கு கொஞ்சம் கூட ஒவ்வாத சமூக கட்டுப்பாடுகள், ஸ்வீடுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை அளிக்கக்கூடும். இருவரும் பல விதங்களில் வேறுபட்டு இருந்தாலும், வாழ்வு அவர்களுக்கு அளிக்கும் அனுபவங்கள் கிட்டத்தட்ட ஒன்றாக இருக்கின்றன என்பது ஒரு நகைமுரண்தான்.

சபத்தின் வாழ்வு, , விபத்தை நோக்கி மிக விரைவாகச் செல்லும் தறிகெட்ட வாகனம் போன்றது என்பதால், அவர் வாழ்வின் சம்பவங்கள் வாசகனுக்கு ஆச்சர்யமளிப்பதில்லை. மாறாக, தானே உருவாக்கும் ஒவ்வொரு சிக்கலிலிருந்தும், இந்த மனிதர் எப்படி மீண்டு, மீண்ட அடுத்த கணமே அடுத்த சிக்கலுக்கு அடிபோடுகிறார் என்பதே வியப்பளிக்கிறது. கட்டுப்பாடான வாழ்வை நாடும் ஸ்வீடுக்கோ, தன் பதின்வயது மகள், ஸ்வீட் அவருக்காக எண்ணியிருந்த வாழ்விலிருந்து திசை திரும்புதல், தன் மனைவி துரோகமிழைத்தல் என்று தான் மேய்ப்பராக உருவாக்கிய ‘pastoral’ கொஞ்சம் கொஞ்சமாக சிதைவதைப் பார்க்கவேண்டிய அவலம் நேர்கிறது. சபத் pastoral என்பதையே வெறுப்பவராக, scorched earth policy உடையவராக இருப்பார். மனைவி தனக்கு துரோகமிழைத்தால் சபத் அதற்கு வருந்தவோ, கடிந்து கொள்வார் என்றோ எண்ண முடியாது, இதுதான் சாக்கு என்று அவர் அடுத்த பெண்ணைத் தேட ஆரம்பித்துவிடுவார் (அந்த நேரத்தில் அவர் இன்னொரு பெண்ணிடம் உறவில் இல்லாமலிருந்தால்)

ஆயிரம் பிழைகள் இருந்தாலும், “Beloved Whoremonger, Seducer, Sodomist, Abuser of Women, Destroyer of Morals, Ensnarer of Youth, Uxoricide, Suicide” என்று தன் கல்லறையில் பொறிக்கச் சொல்லும், தன்னைக் குறித்த எந்த மேலான கற்பனையும் இல்லாத, தன்னை நன்கறிந்துள்ள சபத்தை, நாம் முற்றிலும் வெறுக்க முடியுமா என்ன? 64 வயதில் ஒருத்தியுடன் மட்டும் வாழ வேண்டும் என்றவுடன் கொதிப்படையும் முதியவரை அந்த நேர்மைக்காகவாவது நாம் மதிக்க வேண்டும். சிறு வயதில் சகோதரனை இழந்து, அந்த இழப்பைத் தாங்காமல் தாயும் இறக்க, இந்த நிகழ்வுகளில் இருந்து மீண்டு வராத, இன்னும் சிறுவனாகவே இருக்கும் ஒருவனின் பாவனைகளோ இவை அனைத்தும் என்றும் தோன்றுகிறது.

ராத் பெண் வெறுப்பு கொண்டவர் (misogynist) என்று விமர்சிக்கப்படுபவர். அதை அவர் ஏற்பதில்லை என்றாலும், இந்த இரு பாத்திரங்களை முன்வைத்தும் அத்தகைய விமர்சனங்களை வரக்கூடும், அவற்றுக்கான நியாயமும் இந்த நாவல்களில்/பாத்திரங்களில் உள்ளன. சபத் பெண்களைப் போகப் பொருளாகவே பார்க்கிறார் என்ற தொனி நாவல் முழுக்க உள்ளது. ஸ்வீடைப் பொருத்தவரை, அவரின் பாசத்தை அவர் மகளும்/மனைவியும் புரிந்து கொள்ளாமல் , தங்களின் செயல்பாடுகளால் ஸ்வீடுக்கு துன்பமளிக்கிறார்கள். ஆக பெண்கள் எதிர்மறையாகாவே வார்க்கப்பட்டுள்ளார்கள் என்ற விமர்சனம் எழுவது இயல்பே.

இதை இன்னொரு கோணத்தில் பார்ப்போம். சபத்தின் அனைத்து செயல்களும் சிறுவயது இழப்பிற்கான எதிர்வினையே (அதற்காக மற்றவர்களிடம் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாமா என்ற எதிர் கேள்வியும் எழுப்பலாம்). ஸ்வீடின் மகளைப் பொருத்தவரை அவர் ஒரு அரசியல் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு, சில செயல்கள் செய்கிறார், அவ்வளவே. ஸ்வீடை காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் அவருக்கில்லை என்றும் நாம் சொல்லலாம். எனில், இங்கு பெண் மறுப்பு என்பது இல்லையா என்று கேட்டால், ஆம்/இல்லை என்று இரண்டு பக்கமும் ‘Devils Advocate’ போல் வாதிட முடியும் என்று தான் சொல்ல முடியும்.

Sabbath’s Theaterம் American Pastoralம் அடுத்தடுத்து வெளியானவை (முறையே 1995 மற்றும் 1997ஆம் ஆண்டுகளில்). தன் ஆண் பாத்திரங்களின் உச்சகட்ட வகைமாதிரியை படைத்த கையோடு அடுத்த நாவலிலேயே அதற்கு நேர் எதிரான பாத்திரத்தை ராத் படைத்தது சுவாரஸ்யமான ஒன்று தான் (“…wanted to write about a conventionally virtuous man. I was sick of Mickey Sabbath and I wanted to go to the other end of the spectrum….” என்று ராத் சொல்கிறார்). இந்த இரு பாத்திரங்களையும் வெளியிலிருந்து பார்க்கலாம், விமர்சிக்கலாம், சிலாகிக்கலாம், ஆனால் அந்த வாழ்வை நடைமுறையில் வாழ விழைவது என்பது இயலாத ஒன்று.

சபத்தின் வாழ்கைமுறையா அல்லது ஸ்வீடின் வாழ்க்கை முறையா என்று அந்தரங்கமாக ஒரு கேள்வி எழுப்பினால், பெரும்பாலான ஆண்கள் சபத்தின் பக்கம்தான் இருப்பார்கள். ஆனால் நடைமுறையில் அத்தகைய கட்டுப்பாடற்ற, யாருக்கும் அடங்காத வாழ்வை வாழ்வது என்பது மிகவும் சிலருக்கு மட்டுமே சாத்தியம். சமூக விதிகளுக்கு அடங்கி, அது நமக்கு ஏற்புடையது இல்லை என்றாலும், வெளிப்பார்வைக்கேனும் அனைவருடனும் ஒத்துப் போகும் வாழ்வையே பெரும்பாலானோர் விரும்புவர். அதே நேரம், அனைவருக்கும் நன்மை செய்ய எண்ணி, பொறுப்பானவராக இருந்து, இறுதியில் , தான் மிகவும் நேசித்தவர்களாலேயே வஞ்சிக்கப்பட்டு, ” And what is wrong with their life? What on earth is less reprehensible than the life of the Levovs?” என்ற நாவலின் இறுதியில் வரும் ஸ்வீடின் வாழ்வு குறித்த கேள்வியோடு நாவல் முடியும்போது, தன் வாழ்வின் துன்பங்களுக்கு இணையாக இன்பங்களையும் நுகர்ந்த/ நுகரும் சபத்தின் வாழ்வோடு ஒப்பிடுகையில், அனைவரிடமும் சரியான முறையில் நடக்க வேண்டும் என்ற ஸ்வீட் வாழ்வில் மோசமான துன்பங்களைச் சந்திக்க அவர் செய்த குற்றம் என்ன (அனைவரிடமும் அவர் கொண்ட அதீத அக்கறையா?) என்று யாரும் எளிதில் பதில் சொல்ல முடியாது.

இன்னொரு புறம், தற்கொலை குறித்து சிந்தித்து “And he couldn’t do it. He could not fucking die. How could he leave? How could he go? Everything he hated was here.” என்று ‘Sabbath’s Theatre’ முடியும்போது சபத்தின் நிலையும் ஒன்றும் சிலாக்கியமானதாக இல்லைதான் என்று தோன்றுகிறது.

தங்கள் வாழ்வின் வறட்சியின் கொதிநிலையை இருவரும் அடைவதோடு நாவல்கள் முடிவது எதை உணர்த்துகிறது? ஒருவர் கொஞ்சம் கூட புலனடக்கம் இல்லாமல், தன் இச்சைகளைத் தவிர வேறு எதைப்பற்றியும் கவலை இல்லாமல் வாழ்ந்தாலும் சரி, அல்லது எப்போதும் சமூகத்தை அனுசரித்துப் போகும், நியாமான வாழ்வை முயற்சித்தாலும் சரி, இறுதியில் வாழ்கை எப்படியும் அவர் மீது காரி உமிழத்தான் போகிறது என்று ராத் சொல்வதாக கொள்ளலாமா? இங்கு இன்னொரு கோணத்தைப் பார்ப்போம். ஸ்வீட் நாவலின் இறுதியில் தெரிந்து கொள்ளும் உண்மையில் இருந்து மீண்டு வருவாரா என்பது நமக்குத் தெரியாது, மீள வேண்டும் என்று வாசகன் விரும்பினாலும், அது குறித்த நம்பிக்கை அவனுக்கு அதிகம் இல்லை. ஆனால் சபத்துடைய இந்த பித்து நிலை, கண நேரத்திற்கானது, இதிலிருந்து அவர் மீள்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன என்று வாசகன் உறுதியாக நம்ப முடியும். எனில் எப்போதும் அனுசரித்துப் போவதை விட, எப்போதும் வெளியாளாக (outsider), தன்னியல்போடு இருப்பதே மேல் என்றும் புரிந்து கொள்ளலாம்.

பின்குறிப்பு:

தன் படைப்புக்களில் தனக்கு மிகவும் பிடித்த பாத்திரங்கள் என சபத் மற்றும் ஸ்வீடை ராத் குறிப்பிடுகிறார். இருவருக்குள்ள வித்தியாசம் மட்டுமின்றி, அவர்களின் தனித்தன்மையும் கூட இவர்களை ராத்தின் புனைவுலகின் மிக முக்கிய பாத்திரங்களாக்குகிறது.