விமர்சனம்

வேண்டுவது அறவை நெஞ்சத்தாயர்

ரா கிரிதரன்

பெனடெட்டோ மார்செல்லோவின் சுழற்தகடைச் சுற்றிவிட்டு சில கரகரப்புகள் முடிந்து இசை ஆரம்பிக்கக் காத்திருந்தேன். அட்டையில் அவரைப் பற்றி சிறு குறிப்பு வரைந்திருந்தார்கள். 1710இல் அவரது அண்ணன் அலெச்சாண்டோ மார்செல்லோ எழுதிய இசைக்குறிப்புகள் இவை. இந்த ஓபோ வாந்தியக்குறிப்பை 1717 ஆம் ஆண்டு தந்திக்கருவிக்கு ஏற்றவாறு மாற்றம் செய்துள்ளார் பாஹ். இளையராஜா ஏன் மீண்டும் மீண்டும் பாஹ் காலகட்டத்தைச் சுட்டிக்காட்டுகிறார் என விளங்கும். நிற்க. இக்கட்டுரை இந்த இசைக்குறிப்புகளைப் பற்றியதல்ல. சுட்டியைத் தட்டிவிட்டு பின்னணி இசையாகக் கேட்டபடி மேற்கொண்டு படியுங்கள்.

நாஜிக்களின் திட்டமிட்ட அழித்தொழிப்பைப் பற்றி பல புத்தகங்களும், எண்ணிலடங்கா திரைப்படங்களும் வெளியாகியுள்ளன என்றாலும் ஒவ்வொரு புது வரவும் நமது மனதை ஏதோ ஒருவிதத்தில் கவர்ந்துவிடுகிறது. 1933இல் நார்மன் ஆங்கெல் War pays என தீர்க்கதரிசி மாதிரி சொன்னது நினைத்துப்பார்க்க முடியாதபடி இன்றுவரை பலனளித்துவருகிறது. The Book Thief வரை இது புத்தக சந்தைக்கும் திரைப்படங்களுக்கும் பொருந்தும். (more…)

The Granta Book of the American Short Story – Richard Ford : ஊடுபாவுகள் 1

அஜய் ஆர்

I – தந்தைகளும் மகன்களும்

அறநெறிகளை போதிக்கும் நூல்களும் கதைகளும் பெற்றோர்களை தெய்வமாக எண்ண வேண்டும் என்று சொல்கின்றன. இந்நூல்களில் வரும் பிள்ளைகளும் அப்படித்தான் இருக்கிறார்கள் அல்லது இறுதியில் திருந்தி பெற்றோரை வழிபடுகிறார்கள். ஆனால் யதார்த்தம் வேறாக இருப்பதால், அதை பிரதிபலிக்கும் இலக்கியமும் வேறு வகையான பெற்றோர்- பிள்ளை உறவையே காட்டுகிறது. நம் பெற்றோரிடம் நமக்கும், நம்மிடம் பெற்றோருக்கும் பல மனக்கசப்புக்கள் அவரவருக்குரிய காரணங்களோடு இருக்கின்றன. அதனால் நேரில் சந்திப்பதோ, கடிதமெழுதுவதொ, தொலைபேசியில் பேசுவதோகூட அதிகம் நிகழாமல் இருக்கலாம்.

இப்படிப்பட்ட ‘செயலிழந்த குடும்பங்கள்’ (Dysfunctional families) பற்றிய நாவல்களில்கூட குடும்ப உறவுகள் நிகழ்காலத்தில் எவ்வளவு மோசமாக இருந்தாலும், நாவலின் பாத்திரங்களால் உறவின் பிணைப்பிலிருந்து முற்றிலும் விடுபட முடிவதில்லை. புனைவுகள் என்றில்லை, ஏன், மக்கோர்ட்டின் நினைவுக் குறிப்புக்களிலும், குடும்பத்தைத் தவிக்கவிட்ட தந்தைமீது அன்பு இல்லாமலிருந்தாலும், பல்லாண்டுகள் கழித்து அவரைப் பார்க்க ப்ரான்க் செல்கிறார். உணர்ச்சிகரமான சந்திப்பாக அது இல்லையென்றாலும், அந்தச் சந்திப்புக்கான தூண்டுதல் என்ன? ஒரேயடியாக விலகிச் செல்வது அதிக வலி ஏற்படுத்தும் என்றாலும், இப்படி முழு ஒட்டும் இல்லாமல் பிரிவும் இல்லாமல் தொடர்ந்து அவதிப்படுவதற்கு அதுவே மேல் என்று எண்ணுமளவிற்கு இருக்கும் இந்த உறவுகளை, ஈரமே இல்லாத பாழ்வெளி ஆக்காமல் பிணைத்திருப்பது எது? (more…)

பருவங்களில் நான் பால்யம்- பாய்ஹூட் திரைப்பட விமரிசனம்

பாஸ்டன் பாலா

I

ஆறு வயதில் நானும் ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறேன். 1979ஆம் ஆண்டு குழந்தைகளின் ஆண்டாக கொண்டாடப்பட்டது. என்.எஃப்.டி.சி ஆதரவில் படம் எடுக்க, சென்னை தூர்தர்ஷனில் ஆடிஷன் வைத்தார்கள். நானும் சென்றிருந்தேன். குடிகாரனாக, பிச்சைக்காரனாக, ஊமையாக எல்லாம் சிவாஜித்தனமான செயற்கையில், அங்கு வந்திருந்த பிற சிறுவர்களைப் போலவே நானும் ஒரு மினி திரைத்தாரகையாக ஓவர் – ஆக்டிங்கில் மின்னினேன். பின்னர் இயக்குநரின் குழுவோடு உணவருந்தும்போது எல்லோரிடமும் சும்மா பேசிக்கொண்டிருந்தார்கள். அதை வைத்தோ, என்னுடைய முகத்தை வைத்தோ, என்னை நடிக்கத் தேர்ந்தெடுத்தார்கள்.

ஆறு வயதில் நான் எப்படி இருந்தேன் என்பதற்கு எடுத்துக்காட்டாக என்னுடைய சிறுவயது புகைப்படம் இருக்கிறது. அதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. குண்டு கன்னம்; கண்ணாடி போடாமல் மலங்க மலங்க விழிக்கிறேன்; வட்ட முகம்; நிச்சயமாக நானில்லை. ஆனால், அது நான்தான். “நான் மாறிக் கொண்டேயிருந்தால், எவனாக நான் இருந்தேனோ, அது நானில்லை” – ரில்கே சொன்ன கதை இது. (Rilke, The Notebooks of Malte Laurids Brigge). நான்- எல்லாம் மாறும்போதும் எது மாறுவதில்லை? – இந்த பாரடாக்ஸை அணுக முயற்சிக்கிறார் ரிச்சர்ட் லிங்க்லேட்டர் (Richard Linklater). இதற்கு முன் இந்த மாதிரி ஒரு படம் வந்ததில்லை. (more…)

The Granta Book of the American Short Story – Richard Ford : அறிமுகம்

அஜய் ஆர்

ஒரு எழுத்தாளரின் சிறந்த கதைகள் என தொகுக்கப்படும் தொகைநூல் குறித்தே பல வேறுபட்ட பார்வைகள் இருக்கும்போது, அமெரிக்கச் சிறுகதை இலக்கியத்தின் சிறந்த படைப்புகள் என ரிச்சர்ட் போர்டால் (Richard Ford) தொகுக்கப்பட்டுள்ள ‘The Granta Book of the American Short Story’ இன் இரண்டாம் தொகுப்பை, முழுமையான ஒன்றாக, அதுவும் இந்தியாவிலிருந்து கொண்டு (நமக்கு படிக்கக் கிடைப்பதை வைத்து) அமெரிக்க இலக்கியச் சூழலை கவனிக்கும் நம்மால் கண்டிப்பாகச் சொல்ல முடியாது.

2007இல் வெளிவந்த இந்த இரண்டாவது தொகுப்பேகூட, 1992இல் வெளிவந்த (அதையும் தொகுத்தது போர்ட்தான்), முதல் தொகுப்பிலிருந்து வேறுபட்டுள்ளது. முதல் தொகுப்பில் இல்லாத எழுத்தாளர்கள், அதில் இருந்த எழுத்தாளர்கள், ஆனால் அவர்களின் வேறு கதைகள் என பல மாற்றங்கள் உள்ளன (அதற்காக மாற்றப்பட்ட கதைகள் சிறந்து அல்ல என்று கூற முடியமா, போர்டின் பார்வை அந்த 15 ஆண்டுகளில் மாறி இருந்திருக்கலாம்). (more…)

எஸ்தரும் காவேரியும்

-ஷாந்தேரி மல்லையா-  

இரு பெண்கள். நிம்மதியற்ற இணை வாழ்வுகள். நெகிழ்வற்ற சமூக அமைப்புக்கு எதிராய்க் குமுறிப் போராடி உடையும் உயிர்கள். எஸ்தரும் காவேரியும்.

சில்வியா ப்ளாத்தின் பெருமையை எனக்கு உணர்த்திய நண்பருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். அவரது துயர வாழ்வையும் முடிவையும் வாசித்தபோதுதான் ப்ளாத்தின் பெயரையே முதன்முறை கேள்விப்படுகிறேன். எழுத்தாளர் டெட் ஹ்யூஸுடன் அமைதியில்லாத மணவாழ்வு. ப்ளாத்தை அறியும் பயணம் இறுதியில் அவரது கிளாசிக் படைப்பான பெல் ஜாருக்கு என்னை இட்டுச் சென்றது (The Bell Jar). மேதைமையின் என்னவொரு அற்புதப் படைப்பு. அமைதியற்ற தன் உள்ளத்தின் இருண்ட பகுதிகளிலிருந்து அவர் எஸ்தர் கிரீன்வுட்டை உருவாக்கினார். எஸ்தரைப் பற்றி படிப்பதற்கு முன்பே எனக்கு அவளைத் தெரியும் என்ற உணர்வு ஏன் தொடர்ந்து இருந்து வந்தது? இந்த அனுபவம் எனக்கு முன்னரே ஏற்பட்டிருக்கிறது, இந்தப் பக்கங்களை நான் முன்னரே வாசித்திருக்கிறேன் என்ற ஆழ்ந்த உணர்வு ஏன் ஏற்பட்டது? பின்னர்தான் காவேரியின் சாயல்களைக் கொண்டவள் எஸ்தர் என்ற உண்மை புலப்பட்டது. (more…)