விமர்சனம்

இருமொழிக் கவிதைகள் 1- ஒரு இடையன்

தேவதச்சன் (ஆங்கிலம்: நகுல்வசன்) –

goat-herd

ஒரு இடையன்
பத்துப் பனிரெண்டு ஆடுகள்
ஒரு இடையன்
பத்துப் பனிரெண்டு ஆடுகள்
ஆனால்
எண்ணிலிறந்த தூக்குவாளிகள்
எண்ணிலிறந்த மழைகள்
எண்ணிலிறந்த தலைப்பாகைகள்
எண்ணிலிறந்த காற்றுகள்
எண்ணிலிறந்த தொரட்டிகள்
எண்ணிலிறந்த பகல்கள்
ஒரு இடையன்
பத்துப் பனிரெண்டு ஆடுகள்
ரயில்வே கேட் அருகில்
எப்படா திறக்குமென்று.

௦௦௦

One goatherd
Ten twelve goats
One goatherd
Ten twelve goats
But
Countless pails
Countless rainfalls
Countless turbans
Countless winds
Countless herding crooks
Countless days
One goatherd
Ten twelve goats
Beside a railway gate
Wondering when the hell it would open.

000

ஒரு தேர்ந்த சிறுகதையின் வடிவம் கொண்ட கவிதை இது.  துவக்கத்தையும் அதிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் முடிவையும் இடையில் உள்ள பகுதி இணைத்து சிறுகதைக்கு ஒருமையும் வடிவமும் தருகிறது. இணைப்பாக மட்டும் இயங்காமல் இடைப்பகுதிகள் துவக்கமும் முடிவும் கூடும் புள்ளியாகி சிறுகதைக்கு செறிவும் ஆழமும் சேர்கிறது, நல்ல ஒரு சிறுகதையில் சொற்திரள் கூடி இறுக்கமான ஒரு பொருள் தருவதுபோல் இந்தக் கவிதையும், தனக்கேயுரிய மொழியில், எதிரொலிப்புகளின் மூலம் இதைச் சாதிக்கிறது.

இங்கு “ஒரு இடையன்/ பத்துப் பனிரெண்டு ஆடுகள்” என்பது மும்முறையும், “எண்ணிலிறந்த” என்ற சொல் ஆறு முறையும் வருகின்றன. “ஒரு இடையன்/ பத்துப் பனிரெண்டு ஆடுகள்” என்று மீண்டும் மீண்டும் ஒலிப்பது இந்தக் கணம் தொடர்ந்து நிகழ்வதைச் சுட்டுகிறது.. அதை, “ரயில்வே கேட் அருகில்/ எப்படா திறக்குமென்று” என்ற சொற்கள் நிறைவு செய்கின்றன. இவற்றுக்கு இடையில்தான் எண்ணிலிறந்த விஷயங்கள் வருகின்றன- ஒலியளவில் அவை ஒற்றைக் காட்சிகளால் நிறைவு செய்யப்படுகின்றன- எண்ணிலிறந்த – தூக்குவாளிகள், மழைகள், தலைப்பாகைகள், காற்றுகள், தொரட்டிகள், பகல்கள். எண்ணிலறந்த எனிலும் மீண்டும் மீண்டும் அச்சொல் ஒலிப்பதில் அத்தனை தூக்குவாளிகளும் மழைகளும் தலைப்பாகைகளும் காற்றுகளும் தொரட்டிகளும் பகல்களும் ஒன்றேயாகி ரயில்வே கேட்டின் இக்கணத்தின் நிரந்தரமாய் நிற்கின்றன. இங்கு, சிறு கற்பனைத் தாவலில் நாம் ஒரு சிறுகதை போல் துவக்கமும் முடிவும் நெருங்கி இணைந்து விடுவதைப் பார்க்கிறோம்.

ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது ஒரு எதிர்பாராத சிக்கலை எதிர்கொள்ள வேண்டியதாகிறது. தூக்கு வாளிகள், தலைப் பாகைகள்- இரு சொற்கள் என்றாலும், ஒரு பொருளைச் சுட்டுகின்றன. இந்தக் கவிதையில் உள்ள எண்ணிலிறந்தவை அனைத்தும் வெவ்வேறு வஸ்துக்கள், விவரணைகளுக்கு அவசியமில்லாத புறப்பொருட்கள். இங்கு ஆங்கிலத்தில் தலைப்பாகைகள் என்பதை turbans என்றும் தொரட்டி என்பதை herding crooks என்றும் மொழிபெயர்க்க வேண்டியதாகிறது. ஆனால் தமிழ் வாசகர்கள் countless turbans என்ற இடத்தில் சீக்கியர்களையும் countless crooks என்ற இடத்தில் அரசியல்வாதிகளையும் காணும் சாத்தியத்தைக் கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது. countless turbans என்ற இடத்தில் தலைப்பாகைகளை நினைத்துப் பார்த்தாலும் countless crooks என்பதை தொரட்டியாய் புரிந்து கொள்ள இடமில்லை என்று தோன்றுகிறது- எனவேதான் herding crooks என்ற விளக்கம் தேவைப்படுகிறது. countless days என்பதற்கும் countless summer days என்பதற்கும் ஒரு நுண்ணிய வேறுபாடு உண்டு. countless days என்பதில் எல்லா நாட்களும் தொகுக்கப்பட்டு விடுகின்றன, ஆனால் countless summer days பிற பருவங்களை நினைத்துப் பார்க்கவும் இடம் கொடுக்கிறது.

மொழிபெயர்ப்பில் சாத்தியப்படாத விஷயம் அது என்றால் pails, rains, winds, days என்று எண்ணிலிறந்தவற்றை ஏறத்தாழ ஒற்றை அசைகளில் மொழிபெயர்க்க முடிந்தது ஒரு நல்ல விஷயம். கவிதையில் சொல்லப்படுவது போலவே இங்கு எண்ணிலிறந்தவை ஒருமையைச் சேர்கின்றனவல்லவா? அது பொருத்தம். உருமாற்றம் மொழியின் இயல்பு. மொழியாக்கம், நகலெடுக்கும் பணியல்ல என்பதால் சில திரிபுகளைத் தவிர்க்க முடியாது. அவை இழப்பா செறிவா என்பதுதான் கேள்வியாக இருக்க முடியும்.

இருமொழிக் கவிதைகள் 3- துணி துவைத்துக் கொண்டிருந்தேன்

தேவதச்சன் (ஆங்கிலம்: நகுல்வசன் ) –

washing-cloth

துணி துவைத்துக் கொண்டிருந்தேன்
காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்
தொடர்ந்து துவைத்துக் கொண்டிருந்தேன்
காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்
அடுத்த துணி எடுத்தேன்
காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்.

௦௦௦

Washing clothes
Sparrows chirping
More Washing
Sparrowless Silence
More laundry
Silence chirping

000

சங்கக் கவிதைகளை மொழிபெயர்ப்பது குறித்து ஏ.கே. ராமானுஜன் நிறைய எழுதியிருக்கிறார். இந்த நான்கு மொழிபெயர்ப்புகளில் இந்த மொழிபெயர்ப்பு மட்டுமே ஏ கே ராமானுஜன் பாணியைக் கையாண்டுள்ளது. ஏகேஆர் மொழியாக்கங்கள் குறித்து பல விமரிசனங்கள் இருக்கின்றன, அவற்றின் நியாயத்தையும் மறுக்க முடியாது. ஆனால் கவித்துவம் என்று பார்த்தால் இந்தக் கவிதையில் எது கவித்துவமோ அதை எந்த பொழிப்புரை பதவுரைக்கும் அவசியமில்லாமல் ஆங்கில மொழிபெயர்ப்பு சாதித்து விடுகிறது என்பது ராமானுஜன் பாணி, தமிழ்க் கவிதை மொழியாக்கங்களுக்கு ஏற்றதுதானோ என்ற எண்ணத்தை உறுதிப்படுத்துகிறது. அவ்வளவு ஏன், இந்தக் கவிதையின் தமிழ் வடிவில் உள்ள நீர்மை, கதைத்தல் ஆங்கிலத்தில் இல்லை. ஒரு தேர்ந்த ஹைக்கூ போல் நம்மைச் சப்தங்களின் மத்தியில் இருத்துகிறது. இது மொழியாக்கம் என்பது ஒரு செறிவாக்கமாகவும் இருக்கலாம் என்பதை நிருபிக்கும் கவிதை.

இருமொழிக் கவிதைகள் 2- கடைசியாக எப்பொழுது

தேவதச்சன் (ஆங்கிலம்: நகுல்வசன் ) –

last-time

கடைசியாக
எப்பொழுது
தண்ணீர் குடித்தாய்
அதைத் தொடும்போழுதும்
தூக்கும்போழுதும்
செல்லமகளைப்போல்
கூட வந்ததா
தண்ணீரில்
வானவெளியென நீ நுழைகையில்
அது
குதித்துக் கும்மாளமிட்டதைக் கேட்டாயா
பஸ்ஸில்
போலீஸ்காரர் நடுவே
கைவிலங்கிட்டு அமர்ந்திருக்கும்
இளங்கைதியின்
கண்கள்
வருடிக்கொண்டிருக்கின்றன
மூடிய பானையை
மூடாத தண்ணீரை.

௦௦௦

When was
the last time
You drank water
When you touched it
and lifted it
Did it come to you
like your darling daughter
When you entered as if
You were the wide sky gliding
into water
Did you hear
It
Jump with joyful glee
Sitting handcuffed
in a bus
between policemen
That young convict
His eyes
are Caressing
The pot that’s closed
The water that’s left open.

௦௦௦

இந்தக் கவிதையின் பிரச்சினையான பகுதி, துவக்கத்தில் வரும் கேள்விகள். அவை யாரை நோக்கிக் கேட்கப்படுகின்றன?
கவிஞர் கைதியை நோக்கிக் கேட்கிறாரா, அல்லது கைதியைக் குறித்து தனக்குள் கேட்டுக் கொள்கிறாரா, அல்லது, அவை நமக்காக எழுப்பப்படும் கேள்விகளா? இந்த மூன்று விடைகளும் சாத்தியம் என்பதன் ambiguity மூன்று வெவ்வேறு உணர்வுகளை ஏககணத்தில் சாத்தியப்படுத்துகிறது. கைதியை நோக்கிக் கேட்கப்படும் கேள்விகள் என்றால் தாபம் குறித்த புரிந்துணர்வைப் பார்க்கிறோம், கைதியைக் குறித்து தனக்குள் கேட்டுக் கொள்கிறார் என்றால், அங்கு ஒரு சுயவிசாரணையும், நமக்காக எழுப்பப்படும் கேள்விகளானால் அறிவுறுத்தலும் உண்டு. இதன்பின் வரும் உரைநடைத்தன்மை கொண்ட புறவிவரணையின் அழுத்தத்தில் இந்தக் கேள்விகள் ஒன்றுகூடிய உணர்வுகளாகின்றன- இறுதியில் “மூடிய பானையை/ மூடாத தண்ணீரை.” இந்த இரு வரிகளும் ஒரு எதிர்பாராத ஆச்சரியமாய் அமைகின்றன.

பொதுக் கேள்விகள் என்றாலும் கவிதையின் தண்ணீர் பானை, அல்லது அது போன்ற ஒரு கொள்கலனுக்குரியது பானைத் தண்ணீரைக் குடிக்கிறோம், பானைத் தண்ணீரைதான் செல்ல மகளைப் போல் தொட்டுத் தூக்க முடியும். ஏன், பானைத் தண்ணீரில்தான், “தண்ணீரில்/ வானவெளியென நீ நுழைகையில்/ அது குதித்துக் கும்மாளமிட்டதை நீ கேட்டாயா” என்ற கேள்விக்கு பொருள் கிட்டுகிறது- பானையில் உள்ள தண்ணீரில் பிரதிபலித்து ஆடும் ஒளியாகிறோம் நாம்.. இந்த, உயர்ந்த கவித்துவம் கொண்ட, புதிர்த்தன்மை மிக்க கேள்வியில்தான் இறுதி வரிகளின் ஆச்சரிய தாக்கத்தை உணர்கிறோம்- மூடிய பானையும் மூடாத தண்ணீரும் தத்துவம் சார்ந்து பொருட்படுகின்றன. மூடிய பானை கலன் எனில், மூடாத தண்ணீர் கொள்பொருள்- கொள்பொருளைக் கொள்கலனின் வடிவம் சிறைப்படுத்துவதில்லை. பானைத் தண்ணீரில் தோன்றும் சூரியன்களை சாங்கிய தத்துவம் பேசுவது இங்கு நினைவுக்கு வரலாம்.

“பஸ்ஸில்/ போலீஸ்காரர் நடுவே. கைவிலங்கிட்டு அமர்ந்திருக்கும்/ இளங்கைதி” புனைவுக்குரியவன், ஆனால் அவன் ஒரு குமாஸ்தாவாகவோ கணினி நிபுணனாகவோ வேறு யாராகவும் இல்லாமல் சிறைப்பட்ட கைதியாக இங்கு மூடிய பானையையும் மூடாத தண்ணீரையும் கண்களால் வருடிக் கொண்டிருப்பதில்தான் கவிதைக்குரியவன் ஆகிறான்- அவனது வேட்கை தண்ணீருக்கல்ல, விடுதலைக்கு என்று உணரும்போது மேற்கண்ட சாங்கிய தத்துவத்தின் சாயல் நம்மை வேறொரு, இதனினும் உயர்ந்த, விடுதலை வேட்கைக்கு இட்டுச் செல்கிறது. ஆனால் இது தத்துவக் கவிதை அல்ல. “அதைத் தொடும்போழுதும்/ தூக்கும்போழுதும்/ செல்லமகளைப்போல்/ கூட வந்ததா/”- என்ற கேள்வி தவிர்க்க முடியாதபடி சிறைக்கைதியை ஒரு தகப்பனாக, அவனது தாபத்தை வெறும் விடுதலை வேட்கையாக அல்லாமல், தீண்டல், தழுவுதல், நுகர்தல் என்ற மானுட உறவுகளை நோக்கும் வேட்கையாக நிறுவுகிறது. செல்ல மகளைத் தொட்டுத் தூக்கும் ஏக்கத்தை இன்னும் தீவிரமான உணர்வாக நாம் அறிகிறோம். ஆனால், சாங்கிய விடுதலையின் எதிரொலிப்புக்கு கவிதை இடம் கொடுத்திருக்கிறது என்பதுதான் நோக்கத்தக்கது.

மொழியாக்கம் குறித்து ஒரு விஷயம்- “தண்ணீரில்/ வானவெளியென நீ நுழைகையில்” என்பது முதலில் “When you entered as if/ You were the firmament gliding/ Into Water” என்று மொழிபெயர்க்கப்பட்டது.கிறித்தவ தொல்மறையில், மண்ணின் நீரையும் ஆகாயத்தின் நீரையும் பிரிக்கும் கூரைதான் firmament, Firmament தண்ணீரில் இறங்கும்போது ஆகாய நீரும் மண்ணின் நீரும் சேர்கின்றன. எல்லையற்ற விடுதலை என்று இதைக் கொள்ளலாம். கவிமொழியில் firmament என்பது ஆகாயத்தின் குறியீடாகவும் கையாளப்படுகிறது. மேலும் நாம் தண்ணீரில் இறங்கும்போது பருப்பொருளாகவே இறங்குகிறோம், ஒரு firmamentக்கு உரிய திடத்தன்மை நமக்கு இருக்கிறது, என்பதால் இந்த மொழிபெயர்ப்பில் குறை சொல்ல முடியாது. ஆனால், இங்கு சாங்கிய தளையறுதலை காணும் சாத்தியங்கள் குறைவு, மாறாக தமிழறியாத ஒருவர் கிறித்தவம் சார்ந்த தளையறுதலைக் காண இயலும். இது சரியான தேர்வா இல்லையா, கவிதையின் சுட்டலுக்கும் கவிஞரின் நோக்கத்துக்கும் நியாயம் செய்கின்றதா என்பதெல்லாம் சிக்கலான கேள்விகள். ஆனால் ஒன்று சொல்லலாம். இந்த இரு சாத்தியங்களையும் நம்மால் நினைத்துப் பார்க்க முடிகிறது.

மொழியாக்கம் என்பது மொழிபால் உள்ள காதலால் செய்யப்படுவது. ஒரு கவிதையை மொழிபெயர்க்கும்போது அதில் உள்ள ஒவ்வொரு சொல்லின் எடையையும் இடத்தையும் கூர்ந்து நோக்கித் தேர்ந்தெடுக்க வேண்டியதாகிறது. மொழியாக்கத்தைவிட நெருக்கமான வாசிப்பு வேறொன்றில்லை. “தண்ணீரில்/ வானவெளியென நீ நுழைகையில்” என்பது “When you entered as if/ You were the firmament gliding/ Into Water” என்று மொழிபெயர்க்கப்பட்டு, பின்னர் “When you entered as if/ You were the wide sky gliding/ into water” என்பது தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னணி இதை உணர்த்தும். உண்மையில், எந்தத் திரிபும் இல்லாதபோதும்கூட வெவ்வேறு சுட்டல்களால் இருவேறு மொழிதல்களை ஏககாலத்தில் நிகழ்த்தும் தன்மை மொழியாக்கங்களுக்கு எப்போதும் உண்டு, இரு மொழிகளையும் அறிந்தவனால் அதைத் தவிர்க்கவும் முடியாது. மொழியாக்கத்தின் இன்பமும் வாதையும் இதுதான்.

இருமொழிக் கவிதைகள் 4- ஜெல்லி மீனே ஜெல்லி மீனே

தேவதச்சன் (ஆங்கிலம்: நகுல்வசன் ) –

jellyfish

ஜெல்லி மீனே ஜெல்லி மீனே:
என் கண்களை நழுவ விடுகிறேன்
என் காதுகளை உதிர்க்கிறேன்
மறையச் செய்கிறேன் என் நாசியை
இப்போது
மிஞ்சி நிற்கிறேன்
வாயும் வயிறுமாய்
மெல்ல நகர்ந்து கடலுக்கடியில் செல்கிறேன்
கரையோரம் வந்து
காத்துக் கிடக்கிறேன்
மாலைச்சிறுவர்கள் வருவார்கள் என
என்னை உள்ளங்கையில் ஏந்தி
ஜெல்லி மீன் ஜெல்லி மீன் என்று கத்துவார்கள் என
அப்போது அவர்களிடமிருந்து
விரல்களைப் பரிசுபெறுவேன்
கண்களை வாங்கிக் கொள்வேன்
நாசியைப் பெற்றுக் கொள்வேன்.
கூடவே கூடவே
நானும்
விளையாடத் தொடங்குவேன்:
ஜெல்லி மீனே ஜெல்லி மீனே என்று

௦௦௦

O Jellyfish Jellyfish:

I let my eyes slip away
I shed my ears
I get my nose to vanish
Now
I stand with what’s leftover
All mouth and stomach
I pregnantly inch towards the bottom of the sea
I move towards the seashore
and wait patiently for
the kids to show up in the evening
Rest me on their palms and scream
O Jellyfish Jellyfish
I would then get from them
a gift of :
Fingers,
Eyes and
Nose.
And also, also
I would begin to play :
O Jellyfish Jellyfish.

௦௦௦

கவிதை இங்கே ஆரம்பிக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம்- “கரையோரம் வந்து/ காத்துக் கிடக்கிறேன். மாலைச்சிறுவர்கள் வருவார்கள் என/ என்னை உள்ளங்கையில் ஏந்தி/ ஜெல்லி மீன் ஜெல்லி மீன் என்று கத்துவார்கள் என/”.  மாலைச் சிறுவர்கள் என்பதை தினமும் மாலைப் பொழுதில் வரும் சிறுவர்கள் என்று எடுத்துக்கொண்டால், சிறுவர்கள் ஜெல்லி மீன் பிடித்து கையில் வைத்து விளையாடுவது வழக்கம் என்றும் அதைக் காணும் கவிஞர், சிறுவர்களின் மகிழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ள நினைக்கிறார் என்றும் சொல்ல இடமிருக்கிறது

இங்கிருந்து துவங்கி,. கவிதையின் முதல் பகுதியை வாசித்தால், ஜெல்லி மீனாகும் நோக்கத்தில் அவர் தன் அவயங்களை இழந்து ஆழ்கடலுக்குச் சென்று தனக்குரிய பூதத்தலத்தைக் கண்டுகொண்டவராய், கரையோரம் வந்து காத்து நிற்கிறார் என்று வாசிக்கிறோம். அதன்பின் அவரை உள்ளங்கையில் ஏந்தி ஜெல்லி மீன் ஜெல்லி மீன் என்று கத்தும் மாலைச் சிறுவர்களில் ஒருவராகி கவிஞரும் ஜெல்லி மீன் ஜெல்லி மீன் என்று கத்துகிறார்.

இது எப்படி சாத்தியம்? ஜெல்லி மீன் என்றால் அவர் ஜெல்லி மீனாகவே மாறுவதில்லை. தன்னிழப்பு ஏற்படுகிறது. எப்படி ஜெல்லிமீனாக மாறுகிறாரோ அதே போல் அதன்பின் அடுத்தகட்ட நடவடிக்கையாய் அந்த உருவத்தையும் இழந்து சிறுவர்களின் விரல்களாகவும் கண்களாகவும் நாசிகளாகவும் இருந்து மகிழ்கிறார்..தனிமை, அதையொட்டிய சுத்திகரிப்பும் – இவற்றில்தான் கலப்பின் சாத்தியங்களும் கூடலின் திளைப்பும் உருவாகின்றன என்பதில் பல சிந்தனைகளை அளைய இடமுண்டு.

ஆனால் பொழுது சாயும்போது ஜெல்லி மீனின் கதி என்ன? அவரவர் பாதை அவரவருக்கு, இந்தக் கூடல் நிலையானதல்ல. இது தெரிந்தும் உருமாற்றம் பெறும் விருப்பம் வெளிப்படுகிறது எனில் பிறருடன் தொடர்பு கொள்ளும் விழைவில் தன்னிழப்பையும் மரணத்தையும் தழுவ விரும்பும் மிக உக்கிரமான தனிமை மேலோங்கித் தெரிகிறது என்றுதான் கொள்ள முடியும். இதில் ஒரு atavistic impulse உள்ளது என்றும் சொல்லலாம். ஜெல்லி மீன்தான் உலகின் மூத்த பல்லுறுப்பு உயிரி என்பதால் தன் உறுப்புகள் அனைத்தையும் இழந்து துவக்கங்களுக்குச் செல்வதில் பரிணாம வளர்ச்சியில் பின்னோக்கிய பயணத்தைக் கற்பனை செய்து பார்க்கிறார் கவிஞர். அதன்பின் தன்னுணர்வு பெற அவர் தேர்ந்தெடுப்பது சிறுவர்களின் உடலை, இதிலும் தனிமனித அனுபவத்தின் பின்னோக்கிய பயணமே மேற்கொள்கிறார். இது போதாதென்று ஒரு ஜெல்லி மீனாய் மாறியபின் அவர், கரையோரம் “வாயும் வயிறுமாய்” நிற்கிறார்- சூல் கொண்ட பெண்ணைப் போல், சூலின் நிறை சாத்தியங்களோடு.

தனிமையின் துயரைப் பேசும் இக்கவிதை அதை romanticise செய்வதில்லை- அகத்தின் வேலிகளற்ற ஒரு ஆனந்தம் எதிர்பார்க்கப்படுகிறது, தனிமையின் தடுமாற்றங்களை, அதன் ‘பிற்போக்கு’ உணர்வை, அதன் உளச்சிக்கல்களை மிக அழகாக, எதையும் எளிமைப்படுத்தாமல் வெளிப்படுத்துவதால்தான் இந்தக் கவிதையில் ஒரு சிறு உறுத்தல் தென்படுகிறது. ஒரு நண்பர் இது குரூரமான கவிதை என்றும் பதிவு செய்திருக்கிறார், அது ஏன் என்பதை ஒருவாறு புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் குரூரமல்ல, தனிமையும் அதன் தீர்வாய் தனிமையற்ற கூடலின் வசீகர அழைப்பும்தான் இந்தக் கவிதையின் அடிநாதம். அதற்குரிய விலை தன்னிழப்பு எனில் அவ்வாறே ஆகட்டும்.

வாயும் வயிறும் என்பதை அதன் முழுப்பொருளில் ஆங்கிலப்படுத்த இயலாமல் போய் விட்டது, இந்த மொழியாக்காத்தின் மிகப் பெரிய இழப்பு. ஆனால், |I stand with what’s left over/ A mouth and a stomach” என்பதில் மிகப் பெரும் வறுமையையும் பசியையும் சுட்ட முடிகிறது என்பதே இதன் மிகச் சிறந்த பயன்.

Pebbles. Shingles. கூழாங்கற்கள். சிதைகற்கள்.- மாத்யூ அர்னால்டின் டோவர் பீச்.

பதாகையில், “பூமணியின் அஞ்ஞாடி- இருட்டில் நிகழும் மோதல்கள்” என்றொரு கட்டுரை இரு பகுதிகளாக பதிப்பிக்கப்பட்டது. ஆங்கிலத்தில், “Clashing by night,” என்ற தலைப்பில் The Caravan என்ற இதழில் என்.. கல்யாணராமன் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் அது. பூமணிக்கும், அஞ்ஞாடிக்கும் இரவில் நிகழும் மோதல்களுக்கும் என்ன தொடர்பு என்று புரியாமல் வேறொரு தலைப்பு கோரப்பட்டது. அப்போது அவர், The Dover Beach, என்ற ஆங்கிலக் கவிதையைச் சுட்டிக் காட்டினார். அதன் இறுதி சொற்கள்- “And we are here as on a darkling plain/ Swept with confused alarms of struggle and flight,/ Where ignorant armies clash by night//“. “இருள்சூழும் சமவெளியில் இருப்பது போலிருக்கிறோம்’, என்கிறார் கவிஞர். “ஓட்டம் போராட்டம் என்றெழும் ஓலங்களின் குழப்பத்தில் கொண்டு செல்லப்படுகிறோம்”- இதன் முத்தாய்ப்பாய் வரும் சொற்கள்- “இங்கு சூதறியாப் படைகள் இரவில் மோதிக் கொள்கின்றன”. வரலாறோ விதியோ, மனிதர்கள் அதன் சூதறியா கைப்பாவைகள்

ஆனால் கவிதையே இரவில்தான் துவங்குகிறது- “The sea is calm tonight,” என்ற துவக்கம், “ignorant armies clash by night” என்று முடியும் கவிதைக்கு எப்படிப்பட்ட துவக்கம் அளிக்கிறது! முடிவைப் போலவே கவிதையின் துவக்கத்திலும் இரவில் நிகழும் ஒரு மோதல்- கடல்களின் நீர்ச்சந்தி, கடல் நிறைந்திருக்கிறது, அமைதியாய் இருக்கிறது, பௌர்ணமி நிலவு அதன் மேல் ஒளிர்கிறது- “The tide is full, the moon lies fair/ Upon the straits;“.

இந்தக் கவிதையை எழுதும்போது மேத்யூ ஆர்னால்டும் அவர் மனைவியும் புதுமணத் தம்பதியர், தேனிலவு கொண்டாட கடற்கரைப் பகுதிக்கு வந்திருக்கிறார்கள்- இப்போது தன் துணையை ஜன்னலுக்கு அழைக்கிறார் கவிஞர்- “Come to the window, sweet is the night-air“| தொலைதூரத்தில் தெரியும் பிரெஞ்சு கடற்கரையில் ஒளி மின்னி மறைகிறது. இங்கிலாந்தின் மலைச்சிகரங்கள் ஓங்கியுயர்ந்து நிற்கின்றன- ‘Glimmering and vast‘, என்கிறார் ஆர்னால்ட் ‘out in the tranquil bay‘, கடலும் நிச்சலனமாய் நிற்கிறது. தன் காதலியை வா என்று அழைக்கிறார், வெளியே பார், இரவின் காற்று எவ்வளவு இனிதாய் இருக்கிறது.

ஆனால் இனிதாகவா? Only, என்ற வார்த்தை ஒரு அவலக்குரலாய் வந்து விழுகிறது. நாமிருக்கும் இடத்தில் கடல் அமைதியாய் இருக்கிறது, ஆனால் தூரத்தே வேறொரு ஓசை கேட்கிறது, அது வேறொரு சந்திப்பின் ஓசை, இங்கு அங்கு என்றல்ல, ஒரு நீண்ட கோடாய், நிலவொளியில் வெளிறிக் கிடக்கும் மண்ணில் கடலலைகள் மோதும் ஓசை. “Only, from the long line of spray/ Where the sea meets the moon-blanched land,”. கேள், என்று கவிதையின் ஓட்டத்துக்குத் தடை போட்டுத் தொடர்கிறார், கூழாங்கற்கள் அரைபடும் ஓசை கேட்கிறதா,அவற்றைக் கொண்டு செல்லும் கடலலைகள் திரும்பி வரும்போது, உயர்ந்து நிற்கும் கரை மீது வீசி எறிகின்றன- “Listen! you hear the grating roar/ Of pebbles which the waves draw back, and fling,/ At their return, up the high strand,“. கவிதையின் முடிவில் வரும் வரிகளை இங்கு நோக்கலாம் – “And we are here as on a darkling plain/ Swept with confused alarms of struggle and flight“. Swept with confused alarms– இதற்கும் அதற்கும் எத்தனை பொருத்தம், நாம் சூதறியா கைப்பாவைகள் என்பதுகூட அவ்வளவு சரியில்லை, நம்மைக் காட்டிலும் ஆற்றல் வாய்ந்த சக்திகளின் போராட்டத்தில் அரைபடும் கூழாங்கற்கள்- இதுதான் நாமறியாச் சூது..

ஒளியையும் ஒலியையும் கொண்டு தெளிவையும் குழப்பத்தையும் விவரிக்கும் கவிதையில் அடுத்து வரும் வரிகள் செவிக்குரியவை- “Begin, and cease, and then again begin,/ With tremulous cadence slow, and bring/ The eternal note of sadness in.//” அலையோசை உயர்கிறது, ஓய்கிறது, மீண்டும் உயர்கிறது, அதன் தீனமாய் நடுங்கி மெல்லத் தேயும் ஒலி, நித்திய துயரத்தின் நாதத்தைக் கொணர்கிறது. பெருமளவு முரண்களைக் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட இந்தக் கவிதையில், கடலின்- கர்ஜனை grating roar – தீனமாய் நடுங்கித் தேயும் கீதமாய் ஒலிப்பது – tremulous cadence slow– பொருத்தமாய் இருக்கிறது அதற்கு முன், Begin, and cease, and then again begin என்று இதற்கான சூழல் உருவாக்கப்பட்டு விட்டது.

கடலின் துயரம் காலங்காலமாய் உள்ள துயரம்- வெகுகாலம் முன்னர் ஒரு கிரேக்க காவியகர்த்தா தன் கடற்கரையில் இதைக் கேட்டு நின்றிருக்கிறான்- அது மானுட துன்பங்களின் கொந்தளிக்கும் ஏற்ற இறக்கங்களை அவனுக்கு நினைவுபடுத்தியிருக்கிறது. காலத்திலும் இடத்திலும் அவனுக்கு வெகு தொலைவில் உள்ள இந்தக் கடற்கரையில், அதன் ஓசையில் நமக்கும் ஒரு எண்ணம் கிட்டுகிறது- . “Sophocles long ago/ Heard it on the Ægean, and it brought/ Into his mind the turbid ebb and flow/ Of human misery; we/ Find also in the sound a thought,/ Hearing it by this distant northern sea.”

கண்முன் காணக்கிடைக்கும் காட்சிகள், செவிக்குரிய ஓசைகள் என்று இதுவரை விவரித்த ஆர்னால்ட் கடலின் slow, tremulous cadence என்பதை eternal note of sadness என்று உருவகித்து காலவெளியில் விலகிச் சென்று சொபோகிலஸ் என்ற தொல் காவியகர்த்தாவைத் தொடுவதால் அவர் இப்போது தனிமனித அவஸ்தைகளிலிருந்து விலகி பொதுநிலைகளைப் பேச முடிகிறது. கவிதையில் இந்த இடம் மிக அழகாக, எந்தப் பிசிறுமின்றி எட்டப்படுகிறது- ,

ஒருகாலத்தில் நம்பிக்கை ஒரு கடலாய் இருந்தது. அது நிறைந்திருந்தது. பூமியின் கரைகளை வளைத்திருந்தது.- இதன் இழப்பு சோகம் நிறைந்தது. முன்னமே நாம் ‘slow, tremulous cadence’, ‘eternal note of sadness‘, என்பதை எல்லாம் படித்துவிட்டதால், “The Sea of Faith/ Was once, too,” என்ற இடத்தில் நம்பிக்கையின்மையை ஒரு பெருஞ்சோகமாய் நாம் எதிர்கொள்கிறோம், “Was once, too, at the full, and round earth’s shore/ Lay like the folds of a bright girdle furled“” என்பதை எல்லாம் இல்லாத ஒன்றாகவே வாசிக்கிறோம். கடல் ஒரு நீண்ட பெருமூச்சு போல் பின்வாங்குவதன் சோகத்தை உணர்கிறோம்.

இதை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை, சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்வது போலிருக்கலாம் – ஒரு இசைப்பாடல் போல் மாத்யூ ஆர்னால்ட் இந்தக் கவிதையில் ஆரோகண, அவரோகணங்களை அமைத்திருக்கிறார். முன்னர், “Listen! you hear the grating roar/ Of pebbles which the waves draw back, and fling,/ At their return, up the high strand,/ Begin, and cease, and then again begin,” என்பதில் நாம் ஒரு தொடர் எழுச்சியைக் கண்டோம்- ஆனால் அது எழுச்சியல்ல, வீழ்ச்சி என்பது இங்குதான் தெரிகிறது- “But now I only hear/ Its melancholy, long, withdrawing roar,/ Retreating, to the breath/ Of the night-wind, down the vast edges drear/ And naked shingles of the world.Grating roar என்பது melancholy, withdrawing roar என்றாகிறது; ‘Begin, and cease, and then again begin‘ என்று எத்தனை தொடர்ந்தாலும் அது, நீண்டகால பார்வையில், “melancholy, long, withdrawing” என்று தோற்கிறது; “pebbles which the waves draw back, and fling,” என்பது போய் கடல் எல்லாம் விட்டுச் செல்லும் பெருந்தோல்வியாகிறது- “naked shingles of the world“. “Come to the window, sweet is the night-air!” என்று சொன்னவர்தான், “Retreating, to the breath/ Of the night-wind,” என்றும் சொல்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

we/ Find also in the sound a thought,” – அலையோசை கேட்டுப் பிறந்தது ஒரு எண்ணம்தான், அது கிரேக்க துயர்காவியங்களுக்குச் சென்று அமைதியைக் குலைத்து பெருஞ்சோகத்தால் நிறைத்துவிட்டது. எழுச்சி கண்ட உணர்வுகள் வீழ்ச்சியின் முன் நிற்கின்றன.

இது ஏன் சாதாரண ஒரு காதல் கவிதையாக நிற்பதில்லை என்றால் இங்கு ஒரு சுத்திகரிப்பு நிகழ்ந்திருக்கிறது. எல்லாம் அமைதியாய், நிர்மலமாய், நிச்சலனமாய் இருக்கின்றன என்ற திரை விலகிவிட்டது. பரஸ்பர காமத்தின் நிர்வாணத்தை அல்ல, சமய நம்பிக்கை அளிக்கும் நிச்சயங்களின் உறுதிப்பாடற்ற “naked shingles of the world” என்ற நிர்மூல நிர்வாணத்தை எதிர்கொள்கிறது காதல். இனிவரும் வரிகள் மிகவும் உருக்கமானவை, அவ்வளவு எளிதில் மறக்கப்பட முடியாதவை. தேசீய கீதத்துக்குரிய உணர்ச்சி மேலீடு கொண்டவை.

Ah, love, let us be true/ To one another! for the world, which seems/ To lie before us like a land of dreams,/ So various, so beautiful, so new,”- இதில் உள்ள ah, என்ற சொல், நாம் ஒருவருக்கொருவர் உண்மையாய் இருப்போம் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தும்போது எவ்வளவு இனிதாய் நம் மனதில் ஒலிக்கிறது. இந்த உலகம் நம் முன் கனவுகள் நிறைந்த ஒன்றாய் காணப்படுகிறது, இதில் எத்தனை எத்தனை காட்சிகள், எத்தனை எத்தனை அழகுகள், இது எத்தனை புதிதாய்ப் பிறந்தது போலிருக்கிறது” – ஆனால். ஆனால், இங்கு ஆனந்தமில்லை, காதலில்லை, ஒலியில்லை, உறுதிப்பாடில்லை, அமைதியில்லை, வலிக்கு மருந்தில்லை “Hath really neither joy, nor love, nor light,/ Nor certitude, nor peace, nor help for pain;“. இங்கு நாம் ஒருவருக்கொருவர் உண்மையானவர்களாய் இருப்பதைத் தவிர நமக்கு வேறென்ன மெய்ம்மை இருக்கிறது?

சமய உணர்வுகளும் சமய நம்பிக்கைகளும் வலுவாக இருந்திருந்தால் இது ஒரு கனவுலகாக இருந்திருக்குமா, இதன் அழகுகளும் அத்தனை இன்பங்களும் புதுமைகளும் நமக்குரியனவாய்க் கிடைத்திருக்குமா? Faith என்பதைக் குறிப்பிட்ட ஒரு சமயம் சார்ந்ததாய் நாம் குறுக்கிப் புரிந்துகொள்ள வேண்டாம் என்று நினைக்கிறேன் (மாத்யூ ஆர்னால்டு சமய நம்பிக்கையைதான் குறிப்பிடுகிறார் என்றாலும்). நமக்கு மிஞ்சிய எந்த விஷயத்திலும் நம்பிக்கை கொள்ளாதிருத்தல் – அது சமயமோ கோட்பாடோ லட்சியமோ ஆளுமையோ, எதிலும் நம்பிக்கை கொள்ள முடியாத நிலை, இங்கு நாம் என்ன செய்ய முடியும்? ஒருவருக்கு ஒருவர் உண்மையாய் இருக்கலாம். எல்லாம் பொய்க்கக்கூடும், ஆனால் எனக்கு நீயும் உனக்கு நானும் உண்மையாய், விசுவாசமாய் இருப்போம். இது எதையும் மாற்றப் போவதில்லை. நம்மை இருள் சூழ்கிறது, நம் பாதுகாப்புக்கு அரணில்லை. போர் ஒலியும் தப்பியோடும் பாதங்களின் ஓசையும் ஒரு கலவரமாய் நம்மைக் கொண்டு செல்கின்றன. இங்கு சூதறியா போர்ப்படைகள் இருளில் மோதிக் கொள்கின்றன. – “And we are here as on a darkling plain/ Swept with confused alarms of struggle and flight,/ Where ignorant armies clash by night.”

இப்போது இதை எழுத முக்கியமாக இருந்த காரணத்தைச் சொல்லி விடுகிறேன் – அண்மையில் பதிப்பிக்கப்பட்ட சொல்வனம் – வெங்கட் சாமிநாதன் சிறப்பிதழ் வாசித்திருப்பீர்கள். அதில் திலீப்குமார் கட்டுரை ஒன்றிருக்கிறது- “வெங்கட் சாமிநாதன் மறைவைத் தொடர்ந்து – திலீப்குமாருடன் ஓர் உரையாடல்” என்ற கட்டுரையில் எழுத்தாளர் திலீப்குமார், “இன்று நாம் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகியிருக்கிறோம். தீமை கலவாத நன்மை என்ற ஒன்றே இல்லாதது போலிருக்கிறது,” என்று சொல்லி, பின் இப்படி முடிக்கிறார்- “இன்று நாம் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பார்க்கும்போது, இலக்கியத்தின் வாயிலாக எந்த ஒரு சமூக, அரசியல் நோக்கத்தையும் கை கொள்ள முடியாத ஒரு சூழலே நிலவுகிறது. இந்த அபத்தத்தை எதிர்கொள்ள, மற்ற எல்லாவற்றையும் விட, சாமிநாதன் பரிந்துரைத்த நேர்மையும் தனி மனித மதிப்பீடுகளும் நமக்கு ஒருவேளை உதவக்கூடும்” எது சரி, எது தவறு, எந்தப் பக்கம் திரும்பினால் நன்மை கிட்டும், எது அழிவுக்கு கொண்டு செல்லும் என்று தெரியாத நிலையில் நமக்கு ஒரு கலங்கரை விளக்கம் போலிருப்பது தனி மனித நேர்மை ஒன்றுதான். உனக்கு நானும் எனக்கு நீயும் நேர்மையாய் இருப்போம், என்று நம்பிக்கையே கொந்தளிப்புக்கும் மாய அமைதிக்கும் அப்பால், பாதுகாப்பான இடத்துக்கு நம்மைக் கொண்டு செல்வதாக இருக்கும்.

(இந்த வாசிப்பில் சில பிரச்சினைகள் இருக்கின்றன, அவை அடுத்த பகுதியில்)