விமர்சனம்

துயரமும் இலக்கியமும்

 – மாயக்கூத்தன்

Capture

ட்விட்டர் உலகில் ஸ்க்ரீன்ஷாட் எடுப்பதென்பது ஒருவிதமான மிரட்டல். எனக்கு அப்படி எந்த நோக்கமும் இல்லை. ஒரு ட்விட்டிற்கு வந்த பதில் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது, அவ்வளவுதான்.. மேலே படியுங்கள், நான் நினைப்பதை எழுத முடிகிறதா பார்க்கிறேன்.

வாழ்க்கை கொள்ள முடியாத அளவிற்கான துயரம் என்று ஒன்று இல்லை, அப்படி ஒரு துயரம் நேரும் போது நாம் நம்முடைய முடிவைச் சந்தித்திருப்போம் என்று வாதாட வேண்டும் என்ற நினைப்பிலேயே ‘வாழ்வு கொள்ளாத துயரம்’ என்ற தலைப்பை வைத்தேன். பிறகு, அப்படியொரு வாதம் செல்லுபடியாகுமா என்ற சந்தேகம் வலுக்க, அந்த வாதத்தை விட்டுவிட தலைப்பு மட்டும் நிலைத்தது. சிறப்பிதழில் வந்திருந்த மற்ற கட்டுரைகளின் தலைப்போடும் (நிர்க்கதியின் நிழலில், மானுடத்துயர், கரை சேர்ந்தார் காணும் கடல், நிறைவின்மையின் வழியே) பொருந்திப்போனது. ஆனாலும், துயரங்கள் எழுத்தில் எவ்வளவு விரிவாகச் சொல்லப்பட வேண்டும் என்ற கேள்வி இல்லாமல் இல்லை.

சு.வே சிறப்பிதழில் ஒரு கதையில் வரும் ஒரே இடம் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளில் கவனத்தைப் பெற்றிருக்கிறது. தன் மகனுடைய ஆடம்பரத்திற்காக அம்மா தன்னுடைய ஆட்டுக்குட்டியை விற்பது, தான் வளர்த்த நாய்க்குட்டியை தன்னிடமிருந்து பிரிக்கும் போது வெள்ளந்தியாய், ஆனால் அர்த்தத்தோடு கேள்வி கேட்கும் பெண் குழந்தை, இந்த இடங்கள் படிக்கும் எவருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கும். இவை எல்லாவற்றையும் விட சேதுபதி அருணாசலத்தின் கட்டுரையில் அவர் இரண்டாவதாக குறிப்பிடும் பத்திகள்- அவர் ஏன் அந்தப் பத்திகளைத் தேர்வு செய்தார் என்பது எனக்கு விளங்கவே இல்லை. ஒருவருக்கு நடக்கும் வன்முறையை இத்தனை விரிவாகச் சொல்லியாக வேண்டியதன் அவசியம் தான் என்ன? நான் இங்கே சு.வேயின் படைப்புகளைப் பற்றி மட்டுமே சொல்லவில்லை. சுஜாதாவின் ‘நகரம்’ கதையையும்கூட இந்த வகையில் சேர்த்துக் கொள்ளலாம். என்னைச் சில நாட்கள் தூக்கமில்லாமல் செய்த சில ஸ்ரீரங்கத்துக் கதைகளும் கூட.

இசை, ஓவியம், இலக்கியம் என்று ஒவ்வொரு கலையும் நம்மை சமநிலையில் வைத்திருந்து ஒரு உயர்வான சிந்தனை நிலைக்கு இட்டுச் செல்பவை என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். எழுத்து என்னுடைய நம்பிக்கைகளை கேள்வி கேட்கலாம், முன்முடிவுகளை உடைத்துப் போடலாம். ஆனால், வாழ்வு வலி மிகுந்தது என்று உரைப்பது எழுத்தின் நோக்கமாக இருக்கமுடியுமா? வாழ்வில் வலியே இல்லையா என்றால், வலி மட்டுமே இல்லையே. நாம் பாட்டுக்கு ஓடிக்கொண்டிருக்றோம். பெருமகிழ்ச்சியும் துன்பமும் நம்மை எப்போதும் ஆட்கொண்டிருப்பதில்லை. இன்பமோ துன்பமோ, அவரவருக்கு ஏற்படுத்தும் தாக்கத்தைப் பொறுத்து நாம் நம்முடைய சமநிலைக்கு மறுபடியும் வந்துவிடுகிறோம்.

வலியும் துன்பமும் நிறைந்த படைப்புகளின் மீது தேவைக்கதிகமாக ஒரு பிரியம் இருப்பதாகத் தோன்றுகிறது. முழுக்க முழுக்க நகைச்சுவையாக நகரும் திரைப்படம், பதறச் செய்யும் முடிவோடு அதிகம் பேசப்படும் ஒன்றாகிவிடுகிறது. புனைவுகளுக்கும் இது பொருந்தும். துயரம் மிகுந்த படைப்புகளை, அதுவும் விளிம்புநிலை மனிதர்களின் துயரை விவரிப்பதாகச் சொல்லப்படும் படைப்புகளைக் கேள்வி கேட்க ஒரு தயக்கம் இருப்பது போல் இல்லையா?

கல்கியின் சிறுகதையை விமர்சனம் செய்த ஒருவர், அவை நம்மை உலுக்குவதாய் இல்லை என்று எழுதியிருந்தார். கல்கியின் கதைகளை நான் வாசித்ததில்லை. ஆனால், ஒரு கதை நம்மை உலுக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறோம்? ஒருவேளை நம் வாழ்வை விட மோசமாக ஒன்று இருக்கிறது என்று ஒரு ஆறுதலா? சில சமயம் உலுக்குவது மாதிரி எழுதுவதில்லை என்றால், ஒரு மாதிரி ஒதுக்கிவிடுவார்கள் என்று கூட தோன்றுகிறது. துயரக் கதைகள் எழுதப்படுவது கூட, ஒருவருக்காவது நேர்ந்திருக்கலாம் அதனால் பிழை சொல்ல முடியாது என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால், இது மாதிரி கதைகள் அதிகம் அங்கீகரிக்கப்படுவதைப் பற்றி என்ன சொல்ல?

ஏன் நகரத்தில் நல்ல வேலையில் இருப்பவர்களின் வாழ்க்கை இது போல எழுதப்படுவதில்லை. பெங்களூரூவில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் எல்லோருமே பணத்தைப் பற்றிக் கவலைப்படமாட்டார்கள் என்று நினைப்பது போல, குறிப்பாக ஆட்டோ ஓட்டுனர்கள் நினைப்பதைப் போல, இதுவும் ஒரு பொதுமைப்படுத்தல் தானா?. ஒருவேளை மேல்நிலையில் இருப்பவர்கள் வருடத்தில் நூறு நாட்கள் சமநிலையில் இருக்க, விளிம்பு நிலையில் இருப்பவர்கள் வருட்த்தில் இருநூறு நாட்கள் சமநிலையில் இருந்தால்? இதைப் பற்றிய ஆராய்ச்சி எதுவும் இருக்கிறதா என்று தெரியவில்லை.

இன்னொன்று, எது சவாலாக இருக்கும்- ஒருவனுடைய அவநம்பிக்கையை உடைத்து வாழ்வின் மேல் நம்பிக்கை எழச் செய்வது எளிதா அல்லது துளிபோல இருந்தாலும் அந்த அவநம்பிக்கையை ஊதிப் பெரிதாக்குவது எளிதா? கதைமாந்தர்களின் மீதெழும் அனுதாபம் நம்மை மேலானவர்களாக, மனிதர்களாக உணரச் செய்கிறதா? அதற்காகவாவது துயரக் கதைகள் அவசியம் வேண்டுமா? நான் எத்தனை கருணையோடும் அக்கறையோடும் இருக்கிறேன் என்று எழுதுபவர்களும் வாசிப்பவர்களும் காண்பித்துக் கொள்ள துயரக் கதைகள் அவசியமா?

எத்தனையோ கேள்விகள் இருந்தாலும் இந்தக் கதைகளின் இருப்பிற்கு என்னவோ அவசியம் இருக்கிறது. அது என்ன என்பது தான் விளங்கவில்லை. எழுத்தாளர் பேயோன், திசை காட்டிப் பறவைகள் புத்தகத்தில் ‘ரஷ்ய இலக்கியம் பேசுகிறேன்’ என்ற கட்டுரையை இப்படி முடித்திருப்பார். ”மனித வாழ்க்கை அர்த்தமற்றது, துயரமானது, எதுவும் நிலைக்காது என்று எழுத இத்தனை பேர்.”

நாம் ஏன் கிளாசிக்குகளை வாசிக்க வேண்டும்? – இடாலோ கால்வினோ

துவக்கத்தில் நாம் சில வரையறைகளை முன்வைத்துக் கொள்ளலாம்-

1. கிளாசிக்குகள் என்று அழைக்கப்படும் புத்தகங்களைப் பற்றிப் பேசும்போது, “….ஐ மீண்டும் வாசித்துக் கொண்டிருக்கிறேன்,” என்று சொல்வதுதான் வழக்கம், :”… படித்துக் கொண்டிருக்கிறேன்,” என்று ஒருபோதும் சொல்வதில்லை.

யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, நல்ல வாசிப்பு உள்ளவர்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பவர்கள் விஷயத்திலாவது இது பொருந்தும்; இளைஞர்களுக்கு இது பொருந்தாது. ஏனெனில், இந்த வயதில் முதல் அறிமுகம் என்ற காரணத்தால்தான் அவர்களுக்கு இவ்வுலகின் தொடுகையும் இவ்வுலகின் அங்கங்களாய் உள்ள கிளாசிக்குகளின் தொடுகையும் முக்கியமாகின்றன.

புகழ்பெற்ற ஒரு புத்தகத்தை வாசித்ததில்லை என்ற உண்மையை ஒப்புக்கொள்ள வெட்கப்படுபவர்கள் விஷயத்தில், வாசித்தல் என்ற வினைச்சொல்லுக்கு முன் மீள் என்ற அடைமொழி சேர்த்துக் கொள்வது, ஒரு சிறிய போலித்தனமாக இருக்கக்கூடும். ஆனால் வாசிப்பின் இயல்பு தீர்மானிக்கப்படும் இளமைப்பருவத்தில் ஒருவன் எவ்வளவு விரிவாக வாசித்திருந்தாலும், அவன் வாசித்திராத அவசியப் படைப்புகளின் எண்ணிக்கை எப்போதுமே மிகப்பெரிதாகத்தான் இருக்கும். கிளாசிக்குகள் அனைத்தையும் வாசிக்கவில்லை என்று வெட்கப்படுபவர்களுக்கு இந்த உண்மையைச் சுட்டிக் காட்டுவது ஆறுதல் அளிக்கக்கூடும்.

ஹெரோடோடஸ் மற்றும் தூசிடைடஸ் எழுதிய அத்தனையையும் படித்துவிட்டேன் என்று சொல்பவர்கள் யாராவது இருந்தால் கை தூக்குங்கள். அப்படியானால் செயிண்ட்-சைமனைப் படித்தவர்கள்? கார்டினல் ரெட்ஸ்? பத்தொன்பதாம் நூற்றாண்டு நாவல்களின் மகத்தான தொகுப்புகள் வாசிக்கப்படுவதைவிட குறிப்பிடப்படுவதே அதிகம். பிரான்சில் பள்ளிப்பருவத்தில் பால்ஸாக் வாசிக்கத் துவங்குகிறார்கள்; புழக்கத்தில் உள்ள பதிப்புகளைக் கணக்கில் கொண்டால், பள்ளிப்படிப்பு முடிந்தபின்னும் வெகுகாலம் அவரைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டியதாகிறது. ஆனால் இத்தாலியில் பால்ஸாக் எவ்வளவு பிரபலமாக இருக்கிறார் என்று ஒரு அதிகாரப்பூர்வ ஆய்வு நடத்தினால், அவரது இடம் பட்டியலில் மிகக்கீழே எங்கோ இருக்கும் என்றுதான் வருத்தத்துடன் சொல்ல வேண்டும். இத்தாலியில் உள்ள டிக்கன்ஸ் வாசகர்கள், மிகச் சிறிய எண்ணிக்கையில் உள்ள எலீட்டுகள், அவர்கள் சந்தித்துக்கொள்ளும்போது, தாம் நிஜமாகவே பேசிப் பழகியவர்களைப் பற்றி பேசுவதுபோல் டிக்கன்ஸ் நாவலின் பாத்திரங்களையும் சம்பவங்களையும் விசாரித்துக் கொள்கிறார்கள். பல ஆண்டுகளுக்குமுன் மிஷேல் பூதோ அமெரிக்காவில் கற்பித்துக் கொண்டிருந்தபோது, எமிலி ஜோலா பற்றி விசாரித்தவர்களின் எண்ணிக்கை அவருக்கு அலுப்பூட்டுவதாக இருந்தது. அதனாலும் அவர் ஜோலாவைப் படித்ததே இல்லை என்பதாலும் Rougon-Macquart நாவல்களின் தொகையை முழுமையாக படித்துவிடுவது என்று தீர்மானித்துக் கொண்டார். ஆனால் அவர் நினைத்துக் கொண்டிருந்ததைவிட அந்த நாவல் முற்றிலும் மாறுபட்டிருப்பதை நேரடியாகப் படித்துப் பார்க்கும்போதுதான் கண்டுணர்ந்தார்- உலகின் துவக்கத்தையும் அதன் வம்சாவளியினரையும் விவரிக்கும் அற்புதமான, தொன்மைத்தன்மை கொண்ட படைப்பு அது என்று உணர்ந்து அருமையான கட்டுரையொன்றில் அதன் சிறப்பை விவரித்தார்..

இது நமக்கு உணர்த்தும் உண்மை- மகத்தான ஒரு புத்தகத்தை நம் வளர்ச்சி முழுமையடைந்தபின் நாம் முதன்முறை வாசிப்பது என்பது அசாதாரண இன்பம் தரும் அனுபவமாக இருக்கக்கூடும். அதே புத்தகத்தை இளமையில் வாசிப்பதைவிட இது மிகவும் வேறுபட்ட அனுபவமாக அமையலாம் (ஆனால் இதனால் கிட்டக்கூடிய இன்பம் அதிகரிக்கிறதா குறைகிறதா என்பதைச் சொல்வது சாத்தியமில்லை). இளமைப்பருவம் ஒவ்வொரு புத்தகத்துக்கும் ஒவ்வொரு அனுபவத்துக்கும் தனித்தன்மை கொண்ட சுவையும் முக்கியத்துவமும் அளிக்கிறது; ஆனால், மனம் முதிர்ந்த வயதில் ஒருவன் இன்னும் பல நுண்விபரங்களையும், உள்ளடுக்குகளையும், பல்பொருள் விரிவுகளையும் சுவைத்து மகிழ்கிறான் (அல்லது, சுவைத்து மகிழ வேண்டும்). எனவே மேற்கூறிய வரையறையை நாம் இவ்வாறு மாற்றி எழுதிப் பார்க்கலாம்-

2. கிளாசிக்குகள் அவற்றை வாசித்து நேசித்தவர்களுக்கு மறக்க முடியாத அனுபவங்களின் தொகை நூல்களாக விளங்குகின்றன; ஆனால், அவற்றுக்குத் தக்க ஆகச்சிறந்த மனநிலை உருவாகும்போது வாசித்துக் கொள்ளலாம் என்று எடுத்து வைத்திருப்பவர்களுக்கும் அதே அளவு செறிவான அனுபவம் காத்திருக்கிறது.

ஏனெனில் இது உண்மை- இளமையில் செய்யும் வாசிப்பின் மதிப்பைப் பெரிதாய் பொருட்படுத்துவதற்கில்லை- அது பொறுமையற்ற பருவம், நம் கவனம் குவியாத வயது, நாம் தேர்ந்த வாசிப்பை நிகழ்த்தப் பழகியிருக்க மாட்டோம், அல்லது, நமக்கு வாழ்வனுபவம் போதாது என்ற காரணமும் உண்டு. நம் இளமைப்பருவ வாசிப்பு (அது நிகழும்போதும்கூட) நம் பிற்கால வாசிப்பின் தன்மையை உருவாக்குவதாக இருக்கலாம்- நம் எதிர்கால அனுபவங்களுக்கு அது உருவமும் வடிவமும் கொடுக்கிறது; அவற்றைப் உள்வாங்கிக் கொள்வதற்கான முன்மாதிரிகள் அளிக்கிறது, அவற்றை எதிர்கொள்ளும் வழிகளைக் கற்பிக்கிறது, அவற்றை ஒப்பிட அளவைகள் தருகிறது, நம் அனுபவங்களை வெவ்வேறு பகுப்புகளில் சேர்த்துக்கொள்வதற்கான வரைவுகளை உருவாக்குகிறது, நம் மதிப்பீட்டு விழுமியங்களை அமைக்கிறது, நம் அழகனுபவத்தின் முன்னுதாரணப் படிவங்களைத் தகவமைக்கிறது: நாம் நம் இளமைப்பருவத்தில் வாசித்த புத்தகத்தைப் பற்றி அனைத்தும் மறந்தபின்னும் அல்லது மிகக் குறைவாகவே நினைவில் வைத்திருக்கும்போதும் அவற்றின் படிப்பினைகள் நம்மை இயக்குகின்றன. புத்தகம் ஒன்றை அகம் முதிர்ந்த பருவத்தில் மீண்டும் வாசிக்கும்போது, இப்போது நம் அக இயக்கத்தின் உறுப்புகளாய், அவை எங்கிருந்து வந்தன என்பதை மறந்து விட்டிருந்தபோதும். நிலைத்து நிற்பனவற்றை மீண்டும் கண்டறிகிறோம், தன்னளவில் மறக்கப்பட்ட போதும் தன் வித்தினை நம்மில் விட்டுச் செல்லும் படைப்புக்கு குறிப்பிடத்தக்க ஒரு வீரியம் உண்டு. எனவே, இனி நாம் இப்படி வரையறை செய்து கொள்ளலாம்-.

3. கிளாசிக்குகள் குறிப்பிட்ட ஒரு தாக்கத்தை விட்டுச் செல்லும் நூல்கள், அவை மறக்க முடியாது என்று சொல்லத்தக்க தடத்தை நம் உள்ளத்தில் பதிக்கும்போதும் தனிமனித அல்லது பொது நனவிலி மனதின் நினைவு அடுக்குகளில் ஒளிந்து கொள்ளும்போதும்..

இக்காரணத்தால்தான் நம் இளம்பருவத்தின் மிக முக்கியமான வாசிப்புகளை மீண்டும் கண்டறிய ஆடவப் பருவத்தில் சிலகாலம் அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்கிறேன். புத்தகங்கள் மாறாதிருப்பினும் (மாறுதலுக்குட்பட்ட நம் வரலாற்று நோக்கின் வெளிச்சத்தில் அவையும் மாறுகின்றன என்றாலும்), நாம் நிச்சயம் மாறியிருக்கிறோம், எனவே இந்தப் பிந்தைய எதிர்கொள்ளல் முழுமையாகவே புதிய அறிமுகமாகிறது.

இக்காரணத்தால், நாம் வாசிப்பு என்ற வினைச்சொல்லையோ மீள்வாசிப்பு என்ற வினைச்சொல்லையோ, இரண்டில் எதைப் பயன்படுத்துகிறோம் என்பது முக்கியமற்றுப் போகிறது. உண்மையில் நாம் இப்படிச் சொல்லலாம்:

4. முதல் முறை வாசித்தபோது அனுபவப்படும் புதிய உணர்வை ஒவ்வொரு மீள்வாசிப்பிலும் அதே அளவு அளிக்கும் புத்தகம்தான் கிளாசிக் எனப்படுகிறது.

5. முதல் முறை வாசிக்கும்போதும்கூட முன்னரே வாசித்துவிட்ட ஏதோவொன்றை மீள்வாசிப்புக்கு உட்படுத்துகிறோம் என்ற உணர்வை அளிக்கும் புத்தகம்தான் கிளாசிக் எனப்படுகிறது.

மேற்கண்ட நான்காம் வரையறையை இதன் கிளைத்தேற்றமாகக் கொள்ளலாம்..

ஆனால் ஐந்தாம் வரையறை இன்னும் விரிவான வடிவமைப்பைக் கோருகிறது, இதுபோல்-

6. தான் வாசகர்களுக்குச் சொல்ல இருப்பதை எத்தனை சொல்லியும் தீராத் தன்மை கொண்ட புத்தகம்தான் கிளாசிக்.

7. முந்தைய பொழிப்புரைகளை ஆலவட்டமாய்த் தாங்கி வரும் புத்தகங்களே கிளாசிக்குகள்; அவை கடந்து வந்த பண்பாடு அல்லது பண்பாடுகளில் (அல்லது மொழிகளிலும் பழக்கவழக்கங்களிலும்) விட்டுச் சென்ற தடங்கள் அவற்றைத் தொடர்கின்றன.

இது பண்டைய கிளாசிக்குகளுக்கும் நவீன கிளாசிக்குகளுக்கும் ஒருசேரப் பொருந்தும். நான் ஒடிஸி வாசிக்கிறேன் என்றால், ஹோமரின் பிரதியை வாசிக்கிறேன். ஆனால் கடந்த பல நூற்றாண்டுகளில் யூலிசிஸின் சாகசங்களுக்கு எப்படிப்பட்ட புரிதல்கள் கூடியிருக்கின்றன என்பதை நான் மறக்க முடியாது. மூலப்பிரதியிலேயே இத்தனை அர்த்தங்களும் உள்ளுறை பொருளாய் இருந்தனவா அல்லது அவை பிற்காலத்தைய சேகரங்களாகவோ திரிதல்களாகவோ விரிதல்களாகவோ இருக்கக்கூடுமா என்று நான் வியக்காதிருக்க இயலாது. நான் காப்காவை வாசிக்கிறேன் என்றால், ஏறத்தாழ எல்லாவற்றையும் விவரிக்கப் பயன்படுத்தப்படும் ‘காப்காத்தனம்’, என்ற அடைமொழி முறையானதுதானா என்று தொடர்ந்து விசாரித்து ஏற்றுக்கொண்டும் நிராகரித்துக் கொண்டுமிருக்கிறேன். .நான் துர்ஜனீவின் “ஃபாதர்ஸ் அண்ட் சன்ஸ்” என்ற புத்தகத்தையோ தாஸ்தாவெஸ்கியின் “தி டெவில்ஸ்” என்ற புத்தகத்தையோ வாசிக்கிறேன் என்றால், இந்தப் புத்தகங்களிலுள்ள பாத்திரங்கள் நம் காலம் வரை தொடர்ந்து மறுபிறப்பு எடுத்து வந்திருப்பது குறித்து சிந்திக்காமல் இருக்க முடியாது.

ஒரு கிளாசிக்கை வாசிப்பது என்றால் அது குறித்து நமக்கு முன்னிருந்த பிம்பத்தோடு ஒப்புநோக்கையில் நம் வாசிப்பு ஆச்சரியப்படுத்துவதாக இருக்க வேண்டும். அதனால்தான் நாம் பிரதியின் நேரடி வாசிப்பை எத்தனை பரிந்துரைத்தாலும் தகும், இயன்றவரை இரண்டாம்நிலை புத்தகங்களையும், விளக்கங்களையும் பிற வாசிப்புகளையும் தவிர்க்க வேண்டும். விவாதிக்கப்படும் புத்தகத்தைப் பேசும் வேறு எந்தவொரு புத்தகமும் மூலநூலைக் காட்டிலும் அதிகம் சொல்லிவிட முடியாது என்ற எண்ணத்தை பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் தொடர்ந்து வலியுறுத்தவேண்டும். ஆனால் கல்வி அமைப்புகளோ, மாணவர்கள் இதற்கு நேர் எதிர் கருத்தை நம்பும் வகையில் அனைத்தும் செய்கின்றன. வாசிப்பு குறித்த மதிப்பீடுகளின் இவ்வாறான தலைகீழாக்கம் பரவலாக நிலவுகிறது. இதனால் பிரதி என்ன சொல்ல வருகிறதோ, பிரதியைக் காட்டிலும் தனக்கு அதிகம் தெரியும் என்று கோரும் இடையூட்டாளர்கள் இல்லாமல் தனித்து விடப்படும்போது மட்டுமே ஒரு பிரதி சொல்லக்கூடியது எதுவோ, அதை மறைக்கும் புகைமூட்டமாய்த்தான் அறிமுகம், விமரிசனக் கருவிகள் மற்றும் பிறநூல் வரிசைகள் பயன்படுகின்றன. எனவே நாம் இந்த முடிவுக்கு வர இயலும்:

8. கிளாசிக் என்பது எப்போதும் தன்னைச் சுற்றிலும் ஒரு மேகமாய் விமரிசனச் சொல்லாடலை உருவாக்கிக் கொள்வதாக இருக்கும், ஆனால் அது எப்போதும் அத்துகள்களைத் துடைத்தெறியும் வல்லமை கொண்டதாகவும் இருக்கும்.

நமக்கு ஏற்கனவே தெரியாத ஏதோ ஒன்றைக் கற்பிப்பதாக கிளாசிக்குகள் எப்போதும் இருக்க வேண்டியதில்லை; சில சமயம் நாம், எப்போதும் அறிந்திருந்த ஒன்றை (அல்லது அறிந்திருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒன்றை), அந்தச் செந்நூல்தான் முதலில் வெளிப்படுத்தியது (அதையோ அல்லது குறிப்பிட்ட அந்த வகையில் அது அப்பிரதியோடுதான் தொடர்பு கொண்டிருக்கிறது) என்பதை இதுவரை அறியாதிருந்து இப்போதுதான் நம் வாசிப்பில் கண்டறிகிறோம், இவ்வாறு கண்டறிதல் எப்போதும் மிகுந்த மனநிறைவு அளிக்கும் ஆச்சரியமாகவே இருக்கிறது- எந்த ஒரு கருத்தின் மூலத்தையும் அல்லது அதனுடன் ஒரு பிரதி\யில் உள்ள தொடர்பை அல்லது அதை முதலில் கூறியது யார் என்பதையும் கண்டறியும்போது எப்போதும் நாம் அடையும் ஆச்சரியம்தான் இது. இவை அனைத்தையும் கொண்டு நாம் இத்தகைய ஒரு வரைமுறையை உருவாக்கிக் கொள்ளலாம்:

9. கிளாசிக்குகள் எனும் புததகங்களை நாம் எவ்வளவுக்கு எவ்வளவு கேள்வி ஞானத்தால் அறிந்திருப்பதாய் நினைத்துக் கொண்டிருக்கிறோமோ, அந்த அளவுக்கு மூலத்தன்மை கொண்டதாகவும் எதிர்பாராததாகவும் புதிய நுட்பங்கள் அமைந்ததாகவும் அவை உள்ளதை நாம் நம் நேரடி வாசிப்பில் அறிகிறோம்

ஆம், ஒரு கிளாசிக் பிரதி கிளாசிக்காக உயிர்ப்பிக்கும்போதுதான் இது நிகழ்கிறது, அதாவது, அது வாசகனுடன் அந்தரங்க உறவை நிறுவிக்கொள்ளும்போதுதான் இது நிகழ்கிறது. அவ்வாறாகிய பொறி தெறிக்கவில்லை என்றால் இந்த முயற்சி அர்த்தமற்றுப் போகிறது. கடமைக்காகவோ மரியாதை நிமித்தமாகவோ ஒரு கிளாசிக்கை வாசிப்பதில் பயனில்லை. நாம் நம் நேசத்தை முன்னிட்டே கிளாசிக்குகளை வாசிக்க வேண்டும். இதற்கு பள்ளிப்பருவம் மட்டுமே விலக்கு: பள்ளிக் கல்வி அறிவு புகட்ட வேண்டும், நீ விரும்புகிறாயோ இல்லையோ, குறிப்பிட்ட சில கிளாசிக்குகளை உனக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அவற்றினிடையே (அல்லது அவற்றை ஒரு அளவுகோலாகப் பயன்படுத்தி) நீ பின்னர் உனக்கான கிளாசிக்குகளை அடையாளம் கண்டு கொள்வாய். நீயே உனக்கான தேர்வுகளைச் செய்து கொள்ளத் தேவையான கருவிகளை உனக்கு அளிப்பது பள்ளியின் கடமை. ஆனால் உன் தேர்வுகளில் கணக்கில் கொள்ளத்தக்கவை பள்ளிக்கல்விக்குப் பின்னர் அல்லது பள்ளிக்கல்விக்கு வெளியே நீ மேற்கொள்பவை மட்டுமே.

கட்டாயமாய் வாசிக்கப்பட்டாக வேண்டிய தேவையால் அல்லாத வாசிப்பால் மட்டுமே உனக்குரிய புத்தகத்தை நீ எதிர்கொள்ள நேரிடும். சிறந்த கலை வரலாற்றாய்வாளர் ஒருவரை நான் அறிவேன், மிகப் பிரமாதமான வாசிப்புக்குரியவர். அவர் வாசித்த அத்தனை புத்தகங்களில் தி பிக்விக் பேப்பர்ஸ்தான் அவருக்கு மிகவும் பிடித்தமான புத்தகமாக இருக்கிறது. எந்த உரையாடலிலும் டிக்கன்ஸின் அந்தப் புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டுவார், தன் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் பிக்விக்கில் உள்ள சம்பவங்களுடன் தொடர்புபடுத்திக் கொள்வார். சுயத்தை முழுமையாய்ப் பிறிதொன்றுடன் உருவகித்துக் கொள்ளும் போக்கில் மெல்ல மெல்ல அவரும், அவரது உலகும் அதன் உண்மையான தத்துவமும் தி பிக்விக் பேப்பர்ஸின் வடிவம் பெற்றிருக்கின்றன. நாம் இந்தப் பாதையில் செல்வோமானால் கிளாசிக் பற்றிய, மிக உயரிய, கடும் எதிர்பார்ப்புகளைக் கொண்ட கருத்தொன்றுக்கு வந்து சேர்கிறோம்.

10. உலகம் முழுமைக்கும் பிரதிநிதியாய் விளங்கக்கூடிய, பண்டைய தாயத்துகளுக்கு இணையான எந்த ஒரு புத்தகத்துக்கும் கிளாசிக் என்ற பதம் வழங்கப்படுகிறது.

இப்படிப்பட்ட வரையறை முழுநூல் என்ற கருத்தாக்கத்துக்கு, மல்லார்மின் கனவுக்கு நெருக்கமாய் நம்மைக் கொண்டு செல்கிறது, ஆனால் சுய அடையாளத்தைப் போன்ற அதே அளவு சக்திவாய்ந்த உறவொன்றை எதிர் அல்லது மாற்றுநிலையிலும் நிறுவ இயலும். ரூஸோவின் அத்தனை சிந்தனைகளும் செயல்களும் எனக்கு மிகவும் நெருக்கமானவை, ஆனால் அவை ஒவ்வொன்றும் மறுக்கவும் விமரிசிக்கவும் அவரோடு வாதாடவும் என்னைச் செலுத்தும் வகையில், அடக்க முடியாத உத்வேகத்தை என்னில் உருவாக்குகின்றன. என் இயல்புக்குப் பொருந்தாத ஆளுமை கொண்டவராக அவர் இருப்பதாய் நான் உணர்வதற்கும் இதற்கும் தொடர்புண்டு என்பதும் உண்மைதான், ஆனால் அத்தோடு முடிந்து போகிறது என்றால், நான் அவரை வாசிப்பதைத் தவிர்த்தால் போதும்; உண்மையில் அவரை எனக்குரிய எழுத்தாளராய் நான் கருதுவதை என்னால் தவிர்க்க இயலவில்லை. எனில், நான் இப்படிச் சொல்வேன்:

11. உன் கிளாசிக் நீ கண்டுகொள்ளாமல் இருக்க விடாத புத்தகம், அதனோடான உறவில், ஏன், அதனோடான எதிர்ப்பிலும் உன்னை வரையறை செய்து கொள்ள உனக்கு அது உதவுகிறது.

தொன்மை, நடை, அதிகாரம் என்ற வகைகளில் எதையும் சீர்தூக்கிப் பாராமல் கிளாசிக் என்ற பதத்தை நான் பயன்படுத்துவதை நியாயப்படுத்த வேண்டியதில்லை என்று நினைக்கிறேன் (இந்தப் பதத்தின் இப்படிப்பட்ட அத்தனை அர்த்தங்களின் வரலாற்றையும் அறிய, Enciclopedia Einaudiன் மூன்றாம் தொகுதியில் பிராங்கோ போர்டினி, கிளாசிகோ என்ற தலைப்பில் மிக விரிவாக எழுதியிருப்பதை வாசிக்கலாம்). ஆனால் என் வாதத்துக்கு உதவும் வகையில் இப்படிச் சொல்லலாம்- ஒரு கிளாசிக்கைப் பிறவற்றிலிருந்து எது பிரித்துக் காட்டுகிறது என்றால், தொல்நூலோ நவீன படைப்போ, அதில் எழுவதாய் நாம் உணரும் ஒருவகை ஒத்திசைவுதான் அது. எனினும், கலாசாரத் தொடர்ச்சியில் தனக்கென்று ஒரு இடம் கொண்டதாய் அது இருக்கிறது. இப்படிச் சொல்லலாம்-

12. எந்தப் படைப்பு பிற கிளாசிக்குகளுக்கு முனனர் வருகிறதோ, அதுவே கிளாசிக்; ஆனால் பிற கிளாசிக்குகளை முதலில் வாசித்து விட்டவர்கள் செவ்வியல் ஆக்கங்களின் வரிசையில் அதன் இடம் என்ன என்பதை உடனடியாக அடையாளம் கண்டு கொள்கின்றனர்.

அவ்வப்போது முரசாகியையும் ஐஸ்லாண்டிய சாகசங்களையும் தொட்டுத் திரும்புவதுவன்றி எப்போதும் லுக்ரீஷியஸ், லூசியன், மான்டைன், இராஸ்மஸ், க்விவீடோ, மார்லோ, Discourse on Method, கதேவின் வில்ஹெம் மெய்ஸ்டர், கூல்ரிட்ஜ், ரஸ்கின், ப்ரூஸ்ட், வலேரி முதலியவர்களை மட்டும் வாசிக்க தன் வாசிப்பு நேரத்தை அர்ப்பணிக்கக்கூடிய அதிர்ஷசாலி வாசகர் இருக்கக்கூடும் என்று வைத்துக் கொள்வோம். சமீபத்திய மறுபதிப்பு குறித்த மதிப்புரையோ, பல்கலைக்கழக பதவி நியமனத்துக்கான தேடலில் கட்டுரைகள் எழுதியனுப்பவோ, கழுத்தை நெரிக்கும் கடைசி கணத்தின் அவசரத்தில் பதிப்பகத்துக்கு எழுதி அனுப்ப வேண்டிய அவசியமோ இல்லாமல் இது அத்தனையையும் அந்த அதிர்ஷ்டசாலி வாசகர் செய்ய முடியும் என்றும் வைத்துக் கொள்வோம். எந்தக் களங்கமுமின்றி இந்தச் நடைமுறை தொடர வேண்டுமென்றால் அந்த அதிர்ஷ்டசாலி வாசகர் செய்தித்தாள்கள் வாசிப்பதைத் தவிர்க்க வேண்டும், மிகச் சமீபத்தில் வெளியிடப்பட்ட நாவல் அல்லது சமூகவியல் ஆய்வை வாசிக்கும் உந்துதலை எதிர்த்து நிற்க வேண்டும். ஆனால் இப்படிப்பட்ட கட்டுப்பாடு எந்த அளவு நியாயப்படுத்தத்தக்கது என்பது மட்டுமல்ல, எவ்வளவு பயனுள்ளது என்பதும்கூட கேள்விக்குரியதுதான். சமகால உலகம் சுவாரசியமற்றதாகவும் மூச்சு திணற வைப்பதாகவும் இருக்கலாம், ஆனால் அதன் சூழமைவில் நம்மை இருத்திக்கொண்டே நாம் பின்னோக்கியோ முன்னோக்கியோ பார்த்தாக வேண்டும். கிளாசிக்குகளை வாசிப்பதானால் நீ எங்கிருந்து அவற்றை வாசிக்கிறாய் என்ற உன் ‘இடத்தை’ துல்லியமாக நிறுவிக் கொண்டாக வேண்டும். இதைச் செய்யத் தவறும்போது வாசகனும் பிரதியும் காலப்பிரக்ஞையற்ற மூட்டத்தில் திசையற்று கொண்டு செல்லப்படுகின்றனர். எனவே, சரியான விகிதத்தில் சமகால விஷயங்களையும் கிளாசிக் வாசிப்பையும் மாறி மாறி நிகழ்த்தக்கூடிய திறன் வாய்க்கப் பெற்றவன்தான் கிளாசிக்குகளின் வாசிப்பில் மிக அதிக அளவில் பயன்பெருவான் என்று நாம் சொல்ல முடியும். அதற்காக, அவனது அகம் அமைதியில் இயைந்திருக்க வேண்டும் என்ற முன்முடிவுக்கு வரவேண்டிய அவசியமில்லை: இத்தகைய வாசிப்பு பொறுமையற்ற, படபடப்பான இயல்பின் விளைவாகவும் இருக்கலாம், எப்போதும் எரிச்சலும் அதிருப்தியும் உள்ளவனின் இயல்பிலும் இது சாத்தியப்படக்கூடும்.

13. கிளாசிக் என்றறியப்படும் ஒரு படைப்பு சமகால சப்தங்களை பின்னணி ஒலியாய் மட்டுப்படுத்தும், அதே சமயம் அதுவன்றி கிளாசிக்குகளும் இருக்க முடியாது..

14. கிளாசிக் என்றறியப்படும் ஒரு படைப்பு எப்போதும் ஒரு பின்னணி ஒலியாய் தொடர்ந்திருக்கும்- அதனோடு கொஞ்சமும் பொருந்தாத சமகாலம் மேலாதிக்கம் செய்து கொண்டிருக்கும்போதும்.

உண்மையைச் சொன்னால், கிளாசிக்குகளை வாசிப்பது என்பது நம் வாழ்வின் வேகத்துக்கு ஒத்து வராத செயலாக இருக்கிறது. வாழ்க்கையின் துரித கதியில் காலப்பாதையின் நீள்வெளிகளுக்கு இடமில்லை, மானுட தர்மத்துக்குத் தேவையான ஒழிவுக்கு அவகாசமுமில்லை; நம் கலாசாரம் கலவைத்தன்மை கொண்டிருப்பதால் நம் காலத்துக்குத் தக்க செவ்வியல் ஆக்கங்கள் இவை என்றொரு பட்டியல் தொகுப்பதை அது என்றும் சாத்தியப்படுத்தாது.

ஆனால் தன் தந்தையின் கோட்டையில் வாழ்ந்த லெபார்டியின் சூழ்நிலை இதுவாக இருந்தது- அவன் தன் தந்தை மொனால்டோவின் மாபெரும் நூலகத்தைக் கொண்டு கிரேக்க, லத்தின் மொழிகளின் தொல்நூல்களை அறிவது என்ற குறுவழிபாட்டை நிகழ்த்த முடிந்தது. அங்கு அவன் அதுவரை பதிக்கப்பட்ட இத்தாலிய இலக்கியம் முழுமையையும் சேர்த்துக் கொள்கிறான், தன் சகோதரி வசதியாய்ப் படிக்க விளிம்பில் ஒதுக்கப்படும் மிகச் சமீபத்தைய படைப்புகளையும் நாவல்களையும் தவிர (“உன் ஸ்டென்தால்” என்று அந்தப் பிரெஞ்சு நாவலாசிரியர் குறித்து பவோலினாவிடம் சொல்கிறான்) பிற பிரெஞ்சு இலக்கியம் அனைத்தையும் சேர்த்துக் கொள்கிறான். கியாகொமோ தன் மிகக்கூர்மையான அறிவியல் மற்றும் வரலாற்று ஆர்வங்களைக் காலாவதியாகிவிட்ட பிரதிகளின் வாசிப்பில் நிறைவு செய்து கொள்கிறான் புஃப்போனில் குறிப்பிடப்படும் பறவைகளின் பழக்க வழக்கங்கள், ஃபோன்டநெல்லில் பிரடரிக் ரூய்ஷின் மம்மிக்கள், ராபர்ட்சனில் கொலம்பஸின் பயணங்கள்.

இளம் லேபாரடிக்கு வாய்த்தது போன்ற கிளாசிக் கல்வி இன்று கற்பனை செய்ய முடியாதது, அதிலும் குறிப்பாக, அவனது தந்தை கவுண்ட் மொனால்டோவின் நூலகம் தூர்ந்து போய்விட்டது. தூர்ந்து போய் விட்டது என்று சொல்லும்போது, பழைய வரத்துகள் சிதைந்து விட்டன என்று மட்டுமல்லாமல் நவீன இலக்கியங்கள் மற்றும் கலாச்சாரங்கள் அனைத்திலும் புதியவை புகுந்து நிறைக்கின்றன என்றும் பொருள் கொள்ள வேண்டும். நாம் ஒவ்வொருவரும் நமக்கான கிளாசிக்குகளைக் கொண்ட ஆதர்ச நூலகத்தை நாமே கண்டறிவது மட்டும்தான் நமக்குச் சாத்தியப்படக்கூடிய ஒன்று. அதில் ஒரு பாதி நாம் வாசித்து நமக்கு ஏதோ ஒருவகையில் முக்கியமாக இருக்கும் நூல்களைக் கொண்டிருக்க வேண்டும்; மறு பாதி, நாம் வாசிக்கப்போகும், நமக்கு முக்கியமாக இருக்கக்கூடிய புத்தகங்களைக் கொண்டிருக்க வேண்டும். இது தவிர சந்தர்ப்பவசமாய் எதிர்ப்படக்கூடிய கண்டுகொள்ளல்களுக்கும் ஆச்சரியங்களுக்கும் வெற்றிடங்கள் கொண்ட ஒரு பிரிவும் இந்த நூலகத்தில் விட்டு வைக்கப்பட்டிருக்க வேண்டும். இத்தாலிய இலக்கியத்தில் நான் சுட்டிக்காட்டியிருக்கும் ஒரே பெயர் லெபார்டிதான் என்பதை இங்கு கவனிக்கிறேன். நூலகம் தூர்ந்து போனதன் விளைவு இது. இப்போது நான் இந்தக் கட்டுரை முழுமையையும் திருத்தி எழுதி நம்மை நாம் புரிந்து கொள்ளவும் நாம் வந்தடைந்திருக்கும் இடத்தைப் புரிந்து கொள்ளவும் கிளாசிக்குகள் உதவுகின்றன என்பதைத் தெளிவுபடுத்தி, பிற மொழி கிளாசிக்குகளுடன் ஒப்பிட இத்தாலியர்களான நமக்கு இத்தாலிய கிளாசிக்குகள் இன்றியமையாதவை என்றும் இத்தாலிய கிளாசிக்குகளுக்கு நிகராய் ஒப்பிட்டறிய அந்நிய கிளாசிக்குகளும் அதே அளவு இன்றியமையாதவை என்றும் கூறியாக வேண்டும்.

அதன்பின் நான் இந்தக் கட்டுரையை மூன்றாம் முறை திருத்தி எழுதியாக வேண்டும். ஏதோ ஒரு தேவையை நிறைவு செய்வதால்தான் கிளாசிக்குகள் வாசிக்கப்பட வேண்டும் என்ற நம்பிக்கையைப் போக்கும் வகையில் நான் எழுத வேண்டும். கிளாசிக்குகளை வாசிப்பதற்கு ஆதரவான ஒரே பரிந்துரை, கிளாசிக்குகளை வாசியாதிருப்பதைக் காட்டிலும், வாசித்தல் எப்போதும் நன்று என்பதாக இருக்கும்.

கிளாசிக் வாசிப்புக்காக இத்தனை சிரமப்பட வேண்டியதில்லை என்று யாரேனும் ஆட்சேபம் தெரிவிப்பதானால் நான் சியோரன் கூறுவதை மேற்கோள் காட்டுவேன் (இவர் இன்னும் கிளாசிக் என்ற நிலையை எட்டவில்லை, இந்தச் சிந்தனையாளர் இப்போதுதான் இத்தாலிய மொழிக்கு மொழிபெயர்க்கப்படுகிறார்): “ஹெம்லாக் அரைக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது சாக்ரடிஸ் தன் குழலில் ஒரு பாடல் வாசிக்கக் கற்றுக் கொண்டிருந்தார். “இதனால் உனக்கு என்ன பிரயோசனம்?” என்று அவரிடம் கேட்கப்பட்டது. “சாவதற்குள் நான் இந்தப் பாடலாவது கற்றுக் கொள்வேன்“.
[1981]
(“நம்பி கிருஷ்ணனுக்கும் அர்விந்த் கருணாகரனுக்கும்” – மொழிபெயர்ப்பு- பீட்டர் பொங்கல்)

கவியின்கண்- “வேண்டாம்”

எஸ். சுரேஷ்

வேண்டாம்

எனக்கு மிகவும் வயதாகி விட்டது என்பதால் அல்ல,
மிகவும் கிழடு தட்டி விட்டது என்பதால் அல்ல-

வேண்டாம் என்று நான் சொல்வது,
ஆம் என்பதால் எதுவும் கிடைக்காமல்
மேலும் உக்கிர தனிமைதான் மிஞ்சும்
என்ற அச்சமே காரணம்

– சீமாட்டி கி னோ வாஷிகா

ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – கிரெய்ம் வில்சன்

காதலைச் சொல்லியபின் பதிலுக்கு காத்திருத்தல் ஒரு வாதையாக இருக்க வேண்டும். எனக்கு அது பற்றி நேரடியாக எதுவும் தெரியாது, காதலைச் சொன்ன அனுபவம் இல்லை.. ஆனாலும்கூட ஒன்று நிச்சயம். தன் காதலைத் தெரிவித்து சம்மதத்துக்குக் காத்திருக்கும் ஒருவன் உன் நண்பனாக இருந்தால் உனக்கும் காதல் ஒரு வாதையாக இருக்கும். ஓரிரு நண்பர்கள் விஷயத்தில் இந்த அனுபவம் இருப்பதால் இது உண்மை என்று தீர்மானமாய்ச் சொல்ல முடியும்.

பிரச்சினை என்னவென்றால், காதலைச் சொன்னவன் கணக்கில்லாத சூழ்நிலைகளைக் கற்பனை செய்து கொள்கிறான்- அவற்றை உண்மையாக எடுத்துக் கொண்டு தன் நண்பர்களிடம் தொடர்ந்து தீர்வு கேட்க ஆரம்பித்துவிடுகிறான். இப்படிதான் ஒரு முறை நான் ஒரு நண்பனிடம், நீ கவலைப்பட்டுக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு வேறொரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொள், என்று அறிவுரை சொன்னேன். அதனால் அவன் மிகவும் வருத்தப்பட்டு அடுத்த சில நாட்கள் தனிமையில் சோக கீதம் இசைத்துக் கொண்டிருந்தான். ஆனால்கூட அவனால் ரொம்ப நாளைக்குத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க முடியவில்லை. மனதில் புதிய கற்பனை உதித்ததும் அந்த மாதிரி நடந்து விடுமா, அப்படி நடந்து விட்டால் நான் என்ன செய்வேன், என்று கேட்டுக்கொண்டு ஓடி வந்துவிட்டான்.

என் நண்பன் தன் காதலைச் சொன்ன கணத்திலிருந்து அவனது காத்திருப்பு நீண்டுகொண்டே சென்றது (கடைசியில் அவள் சம்மதித்தாள்). ஆனால் இப்போதெல்லாம் காதலர்கள் சுலபத்தில் உணர்ச்சி வசப்படுவதில்லை- ஆற அமர யோசித்துதான் முடிவெடுக்கிறார்கள். என்னோடு வேலை செய்திருந்த ஒருவருடன் சமீபத்தில் நடந்து போய்க் கொண்டிருந்தேன். அப்போது அவர் தன் மகன் அமெரிக்காவில் இருந்த காலத்தில் ஒரு பெண்ணிடம் காதல் வயப்பட்டதாகவும், அதை வெகுகாலம் மறைத்து வைத்திருந்ததாகவும் சொன்னார். நீ எந்தப் பெண்ணையாவது காதலிக்கிறாயா, என்று பலமுறை அவர் கேட்டிருக்கிறார், நீ அவளைத் திருமணம் செய்து கொள், பிரச்சினையில்லை என்றுகூட சொல்லியிருக்கிறார். ஆனால் மகன், அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்றே சாதித்து வந்திருக்கிறான். அப்புறம் கடைசியில் ஒரு வருஷம் போனபின், தான் காதலிக்கும் விஷயத்தைச் சொல்லி, அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகச் சொல்லியிருக்கிறான். இத்தனை நாள் இதை ஏன் சொல்லவில்லை, என்று என் நண்பர் கேட்டதற்கு, திருமணம் செய்து கொள்ள வேண்டுமா என்று இருவரும் யோசித்துக் கொண்டிருந்ததாகச் சொன்னானாம் அவன்.

அந்தக் காலத்தில் ஒரு ஆணும் பெண்ணும் சில காலம் பழகியவுடன் சீக்கிரம் திருமணம் செய்து கொள்வார்கள், அல்லது உறவை முறித்துக் கொள்வார்கள். அப்படிச் செய்யாவிட்டால் ரகசியமாகச் சந்திக்க வேண்டியிருக்கும். இப்போதெல்லாம் அப்படிப்பட்ட அவசியம் இல்லை. பொதுவாக அப்போதெல்லாம் காதலைச் சொன்னால் சரி என்று பதில் வரும் என்று நம்ப முடிந்தது. இருவரில் ஒருத்தருக்காவது திருமண உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் இருந்தது.. இதில் தயக்கம் ஏற்பட்டால் அதற்குக் காரணம் தனிப்பட்ட காரணமாக இருப்பதைவிட சமூகம் சார்ந்த விஷயங்களாகதான் இருக்கும். திருமணத்துக்கு பெற்றோர் ஒப்புக் கொள்வார்களா, கல்யாணம் நல்லபடி நடக்குமா, உறவினர்கள் என்ன சொல்வார்கள் என்றெல்லாம் யோசிக்க வேண்டியிருந்தது. எனக்குத் தெரிந்து ஒரு ஜோடி ஏழு வருடம் காதலித்த பின்னரே கல்யாணம் செய்து கொள்ள முடிந்தது. எப்போதோ அவர்கள் திருமணம் செய்து கொள்ளத் தயாராகி விட்டனர், ஆனால் தத்தம் குடும்பத்தினரைச் சம்மதிக்க வைக்க ஏழு ஆண்டுகள் ஆகியிருக்கின்றன!

ஆனால் இப்போதெல்லாம் இளைய தலைமுறையினர், பிடித்திருந்தால், எல்லா இடங்களுக்கும் சேர்ந்தே போகின்றனர், ஆனால் திருமணம் செய்து கொள்வது குறித்து மௌனம் சாதிக்கின்றனர் என்பது பெற்றோருக்கு ஒரு பிரச்சினையாக இருக்கிறது. இங்கே யாரும் திருமணம் செய்து கொள்ளும் விருப்பத்தைத் தெரிவிப்பதும் இல்லை, காத்திருப்பதும் இல்லை. நாம் ஒருவரையொருவர் விரும்புகிறோமா இல்லையா என்று இருவரும் சந்தேகப்பட்டுக் கொண்டு, இந்த இணக்கம் எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்று பார்த்துவிட்டு, அதற்குப் பின்னரே தனக்கு தகுந்த துணையாக இருப்பார்களா என்று முடிவெடுப்பதுபோல் தெரிகிறது.

இளைஞர்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை அறிந்திருக்கிறார்கள். அதை அடைவதற்கான பொருளாதார சுதந்திரமும் அவர்களுக்கு இருக்கிறது. முன்னெல்லாம் ஒருவர் வருமானத்தில் குடும்பமே வாழ வேண்டியிருந்ததால் இது போன்ற சுதந்திரம் இருந்ததில்லை.. இப்போது இந்தப் பொருளாதாரச் சுதந்திரம் போதாதென்று பணியிடத்தில் வளர்ச்சியடைவதற்கு திருமணம் குடும்பம் போன்ற பந்தங்கள் முட்டுக்கட்டையாக இருக்குமா என்றெல்லாம் யோசிக்கிறார்கள். எப்போது திருமணம் செய்வது, யாரைத் திருமணம் செய்து கொள்வது என்பதை முடிவு செய்வதில்கூட வேலை வாய்ப்பு வசதிகள் கணக்கில் வருகின்றன. எனவேதான் நிரந்தர உறவு பற்றி எந்த முடிவும் எடுக்காமல் சுமுகமாகப் பழகும் ஜோடிகளை நாம் அதிகம் பார்க்க முடிகிறது. “ஓ காதல் கண்மணி” படத்தில் மணிரத்னம் இது போன்ற உறவுகளைச் சித்தரிக்க முயன்றார்.

இன்னொரு விஷயம். எல்லாரும் தனிக்குடித்தனம் என்பதால் அம்மா அப்பாவைச் சம்மதிக்க வைத்தால் போதும் என்ற நிலைதான் இப்போது இருக்கிறது. நகரத்தில் வசிப்பவர்கள் இதற்குப் பழகிப்போய் விட்டார்கள், தம் பிள்ளைகள் காதலிப்பது பற்றி அலட்டிக் கொள்வதில்லை. ஆனால் திருமண தயக்கம்தான் அவர்களுக்குப் பிரச்சினையாக இருக்கிறது. வேறென்ன, உறவு முறிந்தால் பிள்ளைகள் எதிர்காலம் என்னவாகும் என்ற கவலைதான். காலம் போய் விடும், ஆண்டொன்று கூடி வயதாகிவிடும். சீக்கிரம் கல்யாணம் செய்து கொண்டு சீக்கிரம் குழந்தைகள் பெற்றுக்கொண்டு குடும்ப உறவில் நிலைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இன்னம்கூட இருக்கிறது. எனவே திருமணம் தாமதமாவது கவலைக்கு இடம் கொடுக்கிறது. இதில் வெளியே சொல்ல முடியாத கவலை, காதல் முறிவு திருமணச் சந்தையில் ஏற்படுத்தக்கூடிய பின்னடைவுதான்.

ஆனால் இந்த விஷயத்தில் நாம் மெல்ல மெல்ல மேற்கத்திய சமூகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். இப்போதைக்கு இது நகரிலுள்ள உயர்குடியினரில் ஏற்பட்டுள்ள மாற்றமாக மட்டும் இருக்கிறது என்பது உண்மைதான். பெற்றோர் மனநிலை முழுமையாக மாற வேண்டும். நாம் நம் குழந்தைகளின் முடிவெடுக்கும் திறனில் நம்பிக்கை வைக்க வேண்டும். இக்கால இளைஞர்கள் உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக, சரியான முடிவெடுப்பார்கள், காதல் முறிவைத் தாங்கிக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். எந்த முடிவெடுத்தாலும் பெற்றோரின் உணர்வுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். ஆனால் அம்மா அப்பாவுக்கு சரியான பெண்ணாகவோ பிள்ளையாகவோ இருக்கக்கூடும் என்றெல்லாம் பொருத்தம் பார்த்து ஒருவரை ஏற்றுக் கொள்வது என்பது நினைத்துப் பார்க்க கடினமான விஷயம்தான். குழந்தைகள் சுயநலமானவர்கள் என்று பல பெற்றோர்களும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அது உண்மையல்ல.

அதற்காக இப்போதெல்லாம் பெரியவர்கள் பார்த்து வைத்து திருமணம் செய்யும் வழக்கம் போய் விட்டது என்று அர்த்தமில்லை. நம் சமூகச் சூழலில், கல்லூரியிலோ வேலை செய்யும் இடத்திலோ, நம் மனதுக்குப் பிடித்தவர்களைத் தேர்ந்தெடுப்பது என்பது இன்றும் சுலபமில்லை. எனவே, சம்பிரதாய திருமணங்களின் அவசியம் இருக்கவே செய்கிறது. ஆனால் அவற்றின் நடைமுறை மாறிவிட்டது. இப்போதெல்லாம் காதலித்த பெண்ணும் பையனுமே சம்பிரதாய திருமணம் செய்து கொள்கின்றனர். தங்களுக்கு ஏற்ற துணையை திருமண தகவல் தளங்களில் தேடுகின்றனர், பேசிப் பார்க்கின்றனர், மேலே செல்லலாமா என்று முடிவு செய்கின்றனர். அதன்பின் பெற்றோரிடம் சொல்லி ஏற்பாடுகளை முடித்துக் கொள்கின்றனர்.

முன்னெல்லாம், ஜாதகம், குடும்பப் பின்னணி என்று தேடுவார்கள், அல்லது, “எனக்குப் பிடித்ததுதான் வேண்டும்,” என்று சொல்வார்கள். ஆனால் இப்போது இளைஞர்கள் தெளிவாகி விட்டார்கள் என்று நினைக்கிறேன்- நம் நட்பு வட்டத்தில் சரியான துணை கிடைக்காதபோது நவீன வசதிகளைப் பயன்படுத்தி மரபுச் சூழலில் திருமண ஏற்பாடுகளைச் செய்து கொள்கிறார்கள். இது தவிர டிண்டர் போன்ற ஆப்புகள் வேறு இளைஞர்களுடன் கைகோர்க்க வந்து விட்டன.

ஏதோ இளைஞர்களின் காதல் ஏற்பாடுகளும் திருமணமும் அறிவார்ந்த செயல்திட்டங்கள் என்பது போல் எழுதிக் கொண்டிருக்கிறேன், இது கதையின் ஒரு பகுதிதான். உண்மையில், முடிவெடுப்பதில் உணர்ச்சிகளின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. இந்தக் கவிதையில்கூட சீமாட்டி கி னோ வாஷிகா சொல்வது போல், “மேலும் உக்கிர தனிமையே மிஞ்சும்” என்பதால்கூட ‘சரி’ என்று சொல்லத் தயங்கி, ‘மாட்டேன்’ என்று சொல்லலாம். இத்தனை குறைவான சொற்களில் இவ்வளவு உக்கிரமான உணர்ச்சியை வெளிப்படுத்தும் இதுபோன்ற கவிதைகள் மிக அரியவை. இளைஞர்களுக்கு என்னென்ன இலட்சியங்கள் இருந்தாலும், அவர்கள் எத்தனைதான் யோசித்து தீர்மானித்தாலும், பல முடிவுகள் உணர்ச்சிவசப்பட்டு செய்யப்படுபவை. இதனால்தான் எப்போதும் இருப்பதைப் போலவே இப்போதும் மகத்தான இல்லறம், மனமொத்த இல்லறம், சாதாரண இல்லறம், முறிமணம் என்று பலவற்றைப் பார்க்க முடிகிறது.

இரு துப்பறிவாளர்கள்

அஜய் ஆர்

poe

ஷெர்லாக் ஹோம்ஸ் குற்றப்புனைவு இலக்கிய வானில் தோன்றிய முதல் நாவலான ‘A Study in Scarlet’ல், அவருடைய துப்பறியும் ஆற்றலைப் பார்த்து வாட்ஸன், ஹோம்ஸ் போவின் (Poe) அகஸ்ட டுபானை (C. Auguste Dupin) தனக்கு நினைவுபடுத்துவதாகக் கூற, அதற்கு-

‘Sherlock rose and lit his pipe. ‘No doubt you think you are complimenting me in comparing me to Dupin, he observed ‘Now in my opinion, Dupin was a very inferior fellow. That trick of his of breaking in on his friends’ thoughts with an apropos remark after a quarter of an hour’s silence is really very showy and superficial. He had some analytical genius, no doubt; but he was by no means such a phenomenon as Poe appeared to imagine.’

என்று ஹோம்ஸ் பதில் அளிக்கிறார். மூன்று வழக்குகளை மட்டுமே துப்பறியும் டுபான் குறித்து இவ்வாறு ஹோம்ஸ் ஏன் கூறுவதாக ஆர்தர் கானன் டோயல், ஹோம்ஸின் முதல் வருகையிலேயே அமைக்க வேண்டும்?

இதில் பொறாமையோ காழ்ப்புணர்ச்சியோ இல்லை என டோயல்,

“Edgar Allan Poe, who, in his carelessly prodigal fashion, threw out the seeds from which so many of our present forms of literature have sprung, was the father of the detective tale, and covered its limits so completely that I fail to see how his followers can find any fresh ground which they can confidently call their own. “

என்று ஒரு கட்டுரையில் சொல்வதின் மூலம் அறியலாம்.

போ இந்த வகை எழுத்தின் முன்னோடி என்பதால் மட்டுமே அவரைக் குறிப்பிடுகிறார் என்றும் சொல்ல முடியாது. ஏனென்றால் முன்னோடி எழுத்தாகவே இருப்பினும் அதைச் தாண்டிச் செல்ல வேண்டும் என்ற உந்துதலை அந்த முன்னோடி எழுத்தின் தரம்தான் ஏற்படுத்த வேண்டும். இதை “covered its limits so completely” என்று டோயல் சொல்வதின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

இதை ‘ஹோம்ஸ்’ என்ற பாத்திரம் ‘டுபான்’ என்ற இன்னொரு பாத்திரத்தின் மீது வைக்கும் விமர்சனத்தின் உள்சென்று தேட வேறொன்றும் இல்லை என்றும் கடந்து செல்லலாம்தான். ஆனால் டுபான்/ ஹோம்ஸ் இருவர் வரும் கதைகளை ஒருசேரப் பார்ப்பது, பெயர் குறிப்பிடப்படாத டுபானின் தோழர்/ வாட்ஸன் கதைசொல்லிகளாக இருப்பது, (குற்றப்புனைவுகளில் இரட்டையர்களின் கூட்டணி -ஒருவர் துப்பறிபவர், இன்னொருவர் உதவியாளர் – என்ற மோஸ்தர் இங்கிருந்தே ஆரம்பித்து இன்றும் தொடர்கிறது), காவல்துறை அதிகாரிகள் துப்பறிவாளர்களின் புலனாய்வு முறைகளை அவநம்பிக்கையோடு பார்ப்பது என சட்டென்று தெரியும் ஒற்றுமைகளைத் தவிர வேறு சில திறப்புக்களையும் அளிக்கக்கூடிய விஷயம் இது.

The Murders in the Rue Morgue“ல் கதைசொல்லியும் / டுபானும் ஓர் இரவு, நகர வீதிகளில் வலம் வருகின்றனர். 10-15 நிமிடங்கள் பேசிக்கொள்ளாமல் நடந்த நிலையில், கதைசொல்லி அந்தக் கணம் மனதில் நினைத்துக் கொண்டிருந்ததை டுபான் சரியாகக் குறிப்பிடுகிறார். ஹோம்ஸ், வாட்ஸன் இருவரும் அவர்கள் அறையில் அவரவர் வேலையில் ஆழ்ந்திருக்க, திடீரென்று ஹோம்ஸ் வாட்ஸன் நினைத்துக் கொண்டிருப்பதைப் பற்றி சரியாக கூறும், வாட்ஸன் வெளியே எங்கேனும் சென்று வந்தபின் அவர் எங்கு சென்றிருந்தார் என்று சரியாக யூகிக்கும், பல நிகழ்வுகளை நாம் ஹோம்ஸ் கதைகளில் காண முடிகிறது.

‘Now, brought to this conclusion in so unequivocal a manner as we are, it is not our part, as reasoners, to reject it on account of apparent impossibilities. It is only left for us to prove that these apparent ‘impossibilities’ are, in reality, not such.’ (“The Murders in the Rue Morgue”)

என்ற டுபானின் கூற்றிற்கும்

‘How often have I said to you that when you have eliminated the impossible, whatever remains, however improbable, must be the truth?’ (-The Sign of Four)

என்ற ஹோம்ஸின் கூற்றிற்கும் கருத்தளவில் அதிக வித்தியாசம் கிடையாது இல்லையா?

“The Murders in the Rue Morgue”/ ‘A Study in Scarlet‘ இரண்டின் முடிவையும் பார்ப்போம். இரண்டிலும் குற்றத்திற்கு காரணமானவர், குற்றம் நடந்த இடத்தில் தனக்கு மிக முக்கியமான ஒன்றைத் தொலைத்து விடுகிறார். துப்பறிவாளர் அதைப் பற்றியும் குற்றத்தின் பின்னணி பற்றியும் தெரிந்து கொண்டு துப்பறிந்தபின், குற்றவாளி தொலைத்தது தன்னிடம் உள்ளதாக நாளிதழில் விளம்பரம் செய்கிறார். அதைப் படித்து அங்கு வரும் குற்றவாளி பிடிபடுகிறார்.

இத்தனை ஒற்றுமைகள் இருப்பதால், டோயல் போவை நகல் எடுத்தவர் என்ற ஒற்றைத்தன்மையான விமர்சனத்தை வைக்கலாமா? ‘The Purloined Letter‘/ ‘A Scandal in Bohemia‘ கதைகளில் சில விடைகள் கிடைக்கின்றன. இரண்டு கதைகளின் களமும் ஒன்றுதான். அரச குடும்பத்தில் முக்கியமான ஒருவர் (ஒரு கதையில் ஆண் இன்னொன்றில் பெண்) மட்டுமின்றி, அரசே பெரிதும் பாதிக்கப்படக்கூடிய கடிதம் எதிராளியிடம் சிக்கி விடுகிறது. எதிராளி யார் என்று தெரிந்தாலும், என்ன தேடினாலும் அந்தக் கடிதத்தைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் நம் துப்பறிவாளர்களிடம் வருகிறார்கள். இதுவரை இரு கதைகளும் கிட்டத்தட்ட ஒரே பாதையில் செல்கின்றன. கடிதத்தைக் கண்டுபிடிக்கும் முறை எப்படி இருக்கிறது?

கடிதத்தை ஒளித்து வைத்தவன் தேடுபவர்களின் மனநிலையை அறிந்து கொண்டு, அதற்கு நேர்மாறாக நடந்து கொள்வான் என்ற கருத்தின்படி டுபான் செயல்பட்டு கடிதத்தைக் கண்டுபிடிக்கிறார். ”Counter-intuitive‘ என்று டுபானின்/ எதிராளியின் மனவோட்டத்தைச் சொல்லலாம். ஆனால், ஹோம்ஸ் என்ன செய்கிறார்? தனக்கு முக்கியமான ஒன்றைக் காக்க முனையும் மனித மனத்தின் இயல்பான சுபாவத்தின்மீது நம்பிக்கை வைத்து கடிதத்தின் இருப்பிடத்தை இன்னொரு வழியில் கண்டுபிடிக்கிறார். ஒப்பீட்டளவில் எளிமையாக/ நேரடித்தன்மையுடன் இருந்தாலும், தனக்கென தனிப் பாதையை உருவாக்கும் ஹோம்ஸைப் பார்க்கிறோம். “Where does a wise man hide a pebble?” என்று G.K. Chestertonன் ‘The Sign of the Broken Sword‘ (1911ஆம் ஆண்டு வெளிவந்தது) கதையில் வரும் கூற்றையும், அவரின் ‘The Invisible Man‘ கதையையும் இந்த இரு கதைகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இவற்றிலும் ஒத்த கூறுகளைக் காணலாம்.

டுபானை முன்வைத்து மூன்று கதைகளை மட்டுமே எழுதி இருக்கிறார் போ. போவின் கதைகளில் சரடாக ஓடும் இருண்மையின் சாயலை ‘The Murders in the Rue Morgue‘ல் உள்ள குற்றம் நிகழ்ந்த இடம் மற்றும் இறந்தவர்கள் சடலங்கள் பற்றிய முகத்திலறையும் அப்பட்டமான வர்ணனைகளில் காண முடிகிறது. டுபானின் இருள் மீதான ஈர்ப்பைப் பற்றிச் சொல்லும்-

“It was a freak of fancy in my friend (for what else shall I call it?) to be enamored of the Night for her own sake; and into this bizarrerie, as into all his others, I quietly fell; giving myself up to his wild whims with a perfect abandon. The sable divinity would not herself dwell with us always; but we could counterfeit her presence. At the first dawn of the morning we closed all the messy shutters of our old building; lighting a couple of tapers which, strongly perfumed, threw out only the ghastliest and feeblest of rays. By the aid of these we then busied our souls in dreams –reading, writing, or conversing, until warned by the clock of the advent of the true Darkness.”

என்ற பத்தியிலும் இருண்மையின் அம்சம் உள்ளது. இதில் போவின் பிற வகைமைக் கதைகளின் தாக்கத்தைக் காணலாம்.

இதற்கு மாறாக, டுபான் வரும் மூன்றாவது/ இறுதி கதையான ”The Purloined Letter‘ல் இருண்மையான அம்சங்கள் இல்லாததோடு, அது வேறெந்த வகையின் பாதிப்பும் இல்லாத ‘அறிவுசார்’ விளையாட்டாக / துப்பறியும் கதையாக உள்ளது. ஒருவேளை போ டுபானை முன்வைத்து இன்னும் பல கதைகள் எழுதி இருந்தால், நமக்கும் டுபானைப் பற்றிய இன்னும் தெளிவான சித்திரம் கிடைப்பதோடு, ‘macabre‘ அம்சங்கள் இல்லாத ‘தூய’ குற்றப்புனைவுகளும் உருவாகி இருக்கக்கூடும். அதை டோயல் செய்கிறார்.

ஹோம்ஸும் தனிமை விரும்பி, விசித்திர பழக்கவழக்கங்கள் உடையவர்தான், ஆனால் அவற்றில் இருண்மையைக் காண முடியாது, ‘eccentric‘ என்று வேண்டுமானால் குறிப்பிடலாம். ஹோம்ஸை வைத்து டோயல் 56 சிறுகதைகளுடன் 4 நாவல்களும் எழுதியதால் அந்தப் பாத்திரத்தை சிற்சில நிகழ்வுகள் மூலம் இன்னும் விரிவாக்க முடிகிறது. வாட்ஸனுக்கு ஆபத்து எனும்போது ஹோம்ஸ் அடையும் பதைபதைப்பைச் சுட்டிவிட்டு சட்டென்று விலகி விடும் இடங்கள் ஓர் உதாரணம். இவை ஹோம்ஸ் என்ற துப்பறியும் இயந்திரத்தின் உள்ளே உள்ள இதயத்தை சுட்டுகின்றன.

The Hound of the Baskervilles‘ நாவல், “The Adventure of the Devil’s Foot”,”The Adventure of the Lion’s Mane” சிறுகதைகளில் அமானுஷ்ய/ bizarre செயல்கள் இருந்தாலும் இவை வாசகனுள் குறுகுறுப்புடன் கூடிய பரபரப்பை உண்டாக்குகின்றனவே தவிர இவற்றை இருண்மை /ஹாரர் அம்சங்கள் கொண்டவை என்று சொல்ல முடியாது. பணம்/ பகை/ பொறாமை இவற்றுக்கான கொலை/ திருட்டு என்று மட்டுமில்லாமல், அரசியல் சார்ந்த பின்னணியிலும் (முக்கிய ஆவணங்கள் திருட்டு போவது) கதைகளை அமைத்து, வகைமைகளின் சாயல் இல்லாத மரபார்ந்த குற்றப்புனைவுகளுக்கு டோயல் வித்திடுகிறார்.

The Murders in the Rue Morgue‘ கதையில் பாரிஸ் நகரின் மாலை/ இரவு நேரக் காட்சிகள் மற்றும் அதன் தெருக்களின் வர்ணனைகள் இருந்தாலும், அந்நகரம் கதைகளிடமிருந்து பிரிக்கமுடியாத அளவிற்கு ஒன்றவில்லை. (இதற்கும் அவர் மூன்று கதைகளே எழுதியது முக்கிய காரணம் என்றாலும், நமக்கு கிடைத்துள்ள கதைகளை வைத்து இந்த முடிவுக்குத்தான் வர முடிகிறது).

மாறாக மூடுபனி படர்ந்த லண்டன் நகரம், அதனூடாக கடகடக்கும் குதிரை வண்டிகளின் சத்தம், மூடுபனியை ஊடுருவ முயன்று சிறிய வெற்றியையே பெறும் தெருவிளக்குகளின் மெல்லிய வெளிச்சம் என பொதுவாகவே புறச்சூழலையும், குறிப்பாக லண்டன் நகரையும் ஒரு பாத்திரமாக ஆக்குவதில் டோயல் வெற்றி பெறுகிறார். ‘The Hound of the Baskervilles‘ல் அமானுஷ்ய சூழலை உருவாக்குவதில் (வாசகனுக்கு உண்மை தெரிவதற்கு முன்னால்) மக்கள் அஞ்சும் பயங்கர மிருகத்திற்கு மட்டுமின்றி, முக்கியப் பாத்திரம் வசிக்கும் ‘Baskerville Hall‘, அதன் அருகில் உள்ள moorன் வெறுமையான பெரும்பரப்பு, அதில் ஒளிந்திருக்கும் ஆபத்துக்கள் இவற்றுக்கும் பங்கு உள்ளது.

டோயல் குற்றப்புனைவுகள் எழுத ஆரம்பித்த காலத்தில் போவின் தாக்கம் அதிகமிருந்தாலும்,

“…On this narrow path the writer must walk, and he sees the footmarks of Poe always in front of him. He is happy if he ever finds the means of breaking away and striking out on some little side-track of his own.”

என்று போவைப் பின்தொடரும் எழுத்தாளர்களின் / துப்பறிபவர்களின் இலக்கு என்று அவர் குறிப்பிடுவதை ஹோம்ஸ் அடைந்து, தனக்கென புதுப்பாதையை வகுத்து, புதிய திசைகளில் பயணித்து, துப்பறிவாளர்களின் பிதாமகராக உள்ளார். அவரைக் கொண்டாடும் நேரத்தில், ‘முன்னத்தி ஏரான” டுபானை தவிர்க்க/ மறக்க முடியாது.

oOo

 

ஒளிப்பட உதவி – விக்கிப்பீடியா

 

இதுவே உண்மை- பிற உண்மைகளைக் கைவிடு! (கவியின்கண் கட்டுரைத் தொடர்)

எஸ். சுரேஷ்

இதுவே உண்மை- பிற உண்மைகளைக் கைவிடு!
யாரும் இந்தப் பூமியில் போராடத் தேவையில்லை.
பார்- அந்தி சாய்ந்து விட்டது, பார், இரவு நெருங்கி விட்டது:
கவிஞர்களே, காதலர்களே, தளபதிகளே, நீங்கள் சொல்வதற்கென்ன இருக்கிறது?

ஓய்ந்துவிட்டது காற்று, பூமியில் பனித்துளிகளின் ஈரம்,
இனி வானின் நட்சத்திரச் சூறாவளியும் அமைதி கொள்ளும்.
விரைவில் நாம் அனைவரும் மண்ணின்கீழ் உறங்கப் போகிறோம், நாம்
அதன்மேல் ஒருவரையொருவர் உறங்க விடாத நாம்.

(‘I know the Truth, Marina Tsvetaeva. English version by Elaine Feinstein) (more…)