ஸிந்துஜா

வலி

ஸிந்துஜா

காலையில் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் போதே முதுகு வலி தன் கைவரிசையைக் காட்டத் துவங்கி விட்டது. அன்றையக் காப்பி, சமையல் கடையைக் கவனிக்க வேண்டுமே என்று குஞ்சாலி எழுந்து விட்டாள். கொதிக்கும் நீரை முதுகில் விட்டுக் கொண்டு குளித்தது இதமாக இருந்தது. இன்று டாக்டரிடம் போக வேண்டும். மூன்று மாதமாக ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் ஏதோ மீனாக்ஷி அம்மன் கோயிலுக்குப் போவது போல டாக்டரிடம் போக வேண்டியிருந்தது. வெள்ளிக்கிழமைதான் சந்திரசேகரனுக்கு வார விடுமுறையாதலால் அவரே குஞ்சாலியைக் கூட்டிக் கொண்டு போய் வருவது சிரமமில்லாதிருந்தது. ஆனால் இந்த வெள்ளிக்கிழமையன்று டாக்டருடைய மாப்பிள்ளை திருச்சியில் புது வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்ததால் அவர் ஊரில் இருக்கவில்லை. அதனால் ஞாயிற்றுக் கிழமை வரச் சொல்லியிருந்தார்.

சந்திரசேகரன் அவள் முகத்தைப் பார்த்து விட்டு டாக்டரிடம் அவள் போவதை ஒத்திப் போட்டு விடலாம் என்றார். “இன்னிக்கி ஷாக் ட்ரீட்மெண்ட் வேறே கொடுத்துப் பாக்கலாம்னு சொன்னாரே. நானும் கூட இருந்தாத்தானே சரியா இருக்கும்” என்றார் குஞ்சாலியிடம்.

“அதெல்லாம் வேண்டாம். நான் போய்ப் பாத்துட்டு வரேன். ஒவ்வொரு நாளும் இந்த முதுகே இல்லாம இருந்தா எவ்வளவு நன்னா இருக்கும்னு வெறுப்பா இருக்கு” என்றாள் குஞ்சாலி. “நீங்க ஆபீசுக்குப் போங்கோ. நான் சீமாவை அழைச்சசிண்டு போயிட்டு வரேன்.”

“சே, குழந்தைக்கு என்ன தெரியும்?” என்றார் சந்திரசேகரன்.

பக்கத்திலிருந்து கேட்டுக் கொண்டிருந்த சீமா “ஏன் தெரியாது? பத்தொம் போதாம் நம்பர் பஸ்ஸிலே ஏறி சின்னக்கடைத் தெருவிலே இறங்கி டாக்டரோட கிளினிக்குக்கு கூட்டிண்டு போறது என்ன பிரமாதம். அப்பா! நான் இப்ப ஏழாவது படிக்கிறேன்” என்றான்.

குஞ்சாலி “ஆமாண்டா என் ஆம்பிளை சிங்கம்” என்று சீமாவைப் பார்த்துச் சிரித்தாள்.பிறகு சமையலைக் கவனிக்க ஆரம்பித்தாள். குனிந்து வேலை செய்யும் போது வலி ஜாஸ்தியாகத்தான் இருந்தது. குனிந்து நிமிராமல் சமையக்கட்டில் வேலை செய்யும் நிபுணத்துவத்தை ஏன் யாரும் இதுவரை கண்டு பிடிக்கவில்லை?

அவர்கள் இருவருக்கும் தோசை வார்த்தாள். சந்திரசேகரனுக்கு டிபன் செட்டில் சாப்பாடு வைத்துக் கொடுத்ததும் அவர் கிளம்பிச் சென்றார். குஞ்சாலி சீமாவிடம் “நான் சித்தே ஊஞ்சல்லே படுத்துக்கறேன். பதினோரு மணிக்குத்தானே வரச் சொல்லியிருக்கார். நாம் பத்து பத்தேகாலுக்குக் கிளம்பினா சரியா இருக்கும்” என்று சொல்லி விட்டுக் கூடத்தில் போட்டிருந்த ஊஞ்சலை நோக்கிச் சென்றாள். சீமா ஊஞ்சல் மேலிருந்த தினமணியையும் அம்புலிமாமாவையும் எடுத்துக் கொண்டு திண்ணைக்குப் போனான்.

பத்து மணிக்கு “அம்மா!” என்று கத்திக் கொண்டே சீமா வாசலிலிருந்து வீட்டுக்குள் ஓடி வந்தான். குஞ்சாலி தரையில் உட்கார்ந்து கூடத்துச் சுவரில் சாய்ந்திருந்தாள். அவள் முகம் வேதனையில் சுருண்டிருந்தது. சிறு முனகல்கள் அவளிடமிருந்து வெளிப்பட்டன.

“ரொம்ப வலிக்கிறதாம்மா?” என்று சீமா அவள் கையை எடுத்துத் தன் மடியில் வைத்துக் கொண்டான்.அவன் கண்கள் கூடத்துச் சுவரின் மேலே தொங்கிக் கொண்டிருந்த அனுமார் படத்தை இறைஞ்சலுடன் பார்த்தன.

“ஆமா. என்னமோ தெரியலே. இன்னிக்கிக் கொஞ்சம் வலி ஜாஸ்தியாத்தான் இருக்கு. நீ எதுக்குக் கத்திண்டே உள்ளே வந்தே?” என்று குஞ்சாலி கேட்டாள்.

“பத்தொம்போது பைக்காராவுக்குப் போயிண்டிருக்கு. அவன் போயிட்டு அஞ்சு நிமிஷத்திலே வந்துடுவான். அதான் நீ கிளம்பறையா?” என்றான் சீமா.

“அது வரதுக்குப் பத்து நிமிஷம் ஆகும் போ” என்றாள் குஞ்சாலி. “நான் புடவை மாத்திண்டு வரேன்” என்று உள்ளேயிருந்த அறைக்குச் சென்றாள்.

‘சோமசுந்தரம் செட்டியார் நகை மாளிகை’ என்று அச்சாகியிருந்தஅம்மாவின் மஞ்சள் பையை சீமா கையில் எடுத்துக் கொண்டான். போன தீபாவளிக்கு அப்பாவின் தடிமனான கழுத்துச் சங்கிலியை அழித்து மூக்குத்தியும் தோடுகளும் செட்டியார் கடைக்குப் போய்ப் பண்ணிக் கொண்டு வந்தார்கள். அப்போது கடையில் கொடுத்த பை அது. மூன்று மாசத்துக்கு முன்னால் வரை அது புதுக்கருக்கு அழியாமல்தான் இருந்தது. அம்மா அதைக் காட்ரெஜ் பீரோவுக்குள் வைத்திருந்தாள். எந்தப் புதுசு வந்தாலும் அதை அவள் அங்கே ஜாக்கிரதை பண்ணி வைத்திருப்பாள். தங்கம், வெள்ளிக்குக் கிடைக்கும் மரியாதை துணிப்பைக்கும் புதுக் கர்சீப்புக்கும் வளையல்களுக்கும் கிடைக்கும், ஆனால் வாரா வாரம் டாக்டரிடம் போக ஆரம்பித்த பின்னால் நோயைப் போல மஞ்சள் பையும் கூட ஒட்டிக் கொண்டு வந்தது. பணம் வைத்துக் கொள்ளும் சுருக்குப்பை, டாக்டர் சீட்டுக்களும் மருந்து பைல்களும் அடங்கிய சின்ன ஃபைல், டாக்டரிடமிருந்து திரும்பி பஸ்ஸில் வரும் போது வயிற்றைப் புரட்டினால் வாயில் போட்டுக் கொள்ளவென்று இரண்டு அசோகா பாக்குப் பொட்டலம், அப்பா ஆபிசிலிருந்து ஒரு தடவை கொண்டு வந்த ரைட்டர் பேனா என்று உள்ளடக்கிய பையின் மீது ஊரழுக்கும், கை வேர்வையும் படர்ந்து திட்டுத்திட்டாகக் கறுப்பு பரவியிருந்தது.

அவர்கள் இருவரும் வாசலுக்கு வந்த போது பக்கத்து வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த காவேரி மாமி “இந்த வெய்யில்லே எங்கே கிளம்பிட்டேள்? கறிகாய் மார்க்கெட்டுக்கா?” என்று கேட்டுக் கொண்டு வந்தாள்.

“ஆமா. எனக்கு டாக்டர் வீடுதான் கறிகாய் மார்க்கெட்டு” என்று சிரித்தாள். வெய்யில் உக்கிரமாகத்தான் இருந்தது. தலையைத் தூக்கி மேலே வானத்தைப் பார்த்தாள். சூடான தோசைக்கல் வானில் பளபளத்துக் கொண்டிருந்ததின் எதிரொலியில் ஊர் புழுங்கித் தவித்தது.

“இன்னிக்கி ஞாயத்திக்கிழமைன்னா?” என்றாள் காவேரி.

“ஆமா. வெள்ளிக்கிழமை போகலே. அதனாலே இன்னிக்கிவரச் சொன்னார்னு இப்ப போயிண்டிருக்கேன்.”

“சமையல்லாம்? நான் வேணா குழம்பு கறி ஏதாவது பண்ணி வைக்கட்டா?”

“அதெல்லாம் காலம்பறவே சீக்கிரம் எழுந்து பண்ணிட்டேன். அதான் முதுகைப் பிடிச்சு இழுக்கறது” என்றாள் குஞ்சாலி.

“அம்மா, பஸ் வரது” என்றான் சீமா.

அவர்கள் இருவரும் வீட்டு வாசலின் முன் இருந்த ஸ்டாப்பில் வந்து நின்ற பஸ்ஸில் ஏறிக் கொண்டார்கள். அம்மா கடைசி வரிசையில் இருந்த பெண்களுக்கான இருக்கையில் காலியாக இருந்த ஒற்றை சீட்டில் உட்கார்ந்து கொண்டாள். உள்ளே உட்கார இடமில்லாமல் ஆண்கள் வாரைப் பிடித்துக் கொண்டு நின்றார்கள். சீமா தனக்கு முன்னால் நின்ற ஒல்லியான ஆளின் பின் பக்கம் நின்றான். கண்டக்டர் சீமாவை நெருங்கிய போது “சின்னக்கடை ரெண்டு” என்று சொல்லி டிக்கட் வாங்கிக் கொண்டான்.

சீமாவுக்கு அருகில் இருந்த சீட்டில் உட்கார்ந்திருந்த ஒரு வயதானவர் “வேலு! எதுக்கு இன்னிக்கு ஞாயத்துக் கெளமை இப்பிடி ஒரு கூட்டம் வண்டியிலே?” என்று ஒல்லி ஆளிடம் கேட்டார்.

“இன்னிக்கி எம்சியாரு வாராரில்லே. அதுக்குத்தான். எந்த முக்கு திரும்பினாலும் சனக் கூட்டம்தான்” என்று சிரித்தான் வேலு

“அடக் கெரகமே! அவுரு சினிமாலே வரவருதானே? அவருக்கா இம்புட்டுக் கூட்டம்?”

“ஆமா. லச்சம் பேரு வருவாங்கன்னு தினத்தந்திலே போட்டுருக்காங்கே. தமுக்கத்திலே இல்லே கூட்டம்? அதுக்கு மேலேயும் கூட எக்கும் பெரியப்பா” என்றான் வேலு.

“ஓரு லட்சமா? அளகரு ஆத்துலே எறங்கறே அன்னிக்கிக் கூட இம்மாஞ் சனம் வராதேடா?” என்றார் பெரியவர்.

அவருக்குப் பக்கத்தில் இருந்த நாமக்காரர் “இப்பல்லாம் அழகரை விட அரிதாரத்துக்குத்தான் மவுஸ் ஜாஸ்தி!” என்றார் சிரித்துக் கொண்டே,

பெரியவர் மறுபடியும் “வேலு!எதுக்குடா இப்ப இதெல்லாம்?” என்று கேட்டார்.

“நாடோடி மன்னன் சினிமா ஓடிக்கிட்டு இருக்கில்லே? அதுக்கு விளா எடுக்கறாங்களாம். இந்த வண்டியிலே முக்காவாசிப் பேரு அங்க போறவங்கதான்.”

பஸ்ஸிலிருந்து யாரும் இறங்காததாலும் பயணிகள் நின்று செல்ல வேண்டிய நிலைமைக்கு வண்டி வந்து விட்டதாலும் பழங்காநத்தம், ஆண்டாள்புரம், நந்தவனம், சுப்பிரமணியபுரம் என்று ஒரு நிறுத்தத்திலும் நிற்காமல் பஸ் ஓடிற்று. வழக்கமான நேரத்துக்குச் சற்று முன்பே சின்னக்கடை ஸ்டாப் வந்ததும் சீமாவும் குஞ்சாலியும் இறங்கிக் கொண்டார்கள்.

அவர்கள் சற்று முன் சென்று இடது பக்கம் சென்ற திண்டுக்கல் ரோடில்
திரும்பி நடந்தார்கள்.

“இன்னிக்கி பஸ்ஸிலே கூட்டம் இருக்காதுன்னு நினைச்சிண்டு வந்தா அப்பிடி ஒரு கூட்டம். சினிமாக்காரான்னா எம்கேடி காலத்திலேர்ந்தே ஜனங்களுக்கு அப்படி ஒரு ஆகர்ஷணம் . நீதான் பாவம், வழி பூரா பஸ்ஸிலே நின்னுண்டே வந்தே” என்றாள் குஞ்சாலி.

“நல்ல வேளையா உனக்கு உக்கார இடம் கிடைச்சதே” என்று சீமா சிரித்தான்.

ராஜா பார்லியிலிருந்து பிஸ்கட் வாசனை காற்றில் மிதந்து வந்தது. அந்தக் கடைக்குச் சற்றுத் தள்ளியிருந்த இடது பக்கத்துத் தெருவில் நுழைந்து சென்றார்கள். டாக்டரின் கிளினிக் முன்பு அவரது ஆஸ்டின் கார் நின்றிருந்தது. வாசலில் டாக்டர் சாமிநாதன் எம்பிபிஎஸ் என்று போர்டு தொங்கிற்று. பெயரிலும் பட்டத்திலும் இருந்த புள்ளிகள் காலத்தின் இரையாக உயிரை விட்டிருந்தன. சீமாவின் அப்பாவுக்கு டாக்டரை வெகு காலமாகத் தெரியும்.

அவர்கள் உள்ளே போன போது வேறு யாரும் இல்லை. டாக்டரின் அறை வாசல் திறந்திருந்தது. குஞ்சாலியைப் பார்த்ததும் “வாங்கோ” என்றார். இருவரும் அவருக்கு எதிரே இருந்த நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டார்கள்.

“இன்னிக்கி சந்துருவுக்கு ஆபீஸோ? அதான் இந்தப் பெரிய மனுஷன் உங்களை அழைச்சுண்டு வந்திருக்கானா? என்று சீமாவைப் பார்த்து ஒரு புன்சிரிப்பைச் சிந்தினார்.

“வலி எப்படி இருக்கு முன்னைக்கு?” என்று கேட்டார்.

“அப்படியே தண்டு வடத்தைப் பிச்சு எடுத்து வீசியெறிஞ்சிட மாட்டமான்னு இருக்கு டாக்டர். ராத்திரியிலேதான் வலி பொறுத்துக்க முடியாம போறது.”

“சந்துரு வந்திருந்தா நன்னாயிருந்திருக்கும்” என்றார் டாக்டர்.

“ஏன் டாக்டர்?” என்று குஞ்சாலி கேட்டாள்.

“மூணு மாசமா இங்கே நீங்க ட்ரீட்மெண்ட் எடுத்துண்டு இருக்கேள். முதுகு வலி அப்படி ஒண்ணும் குறைஞ்ச மாதிரி தெரியலையே. மருந்தும் மாத்திரையும் சொல்றதை இந்த வலி கேக்க மாட்டேங்கறதேன்னுதான் சந்துரு கிட்டே சொன்னேன் எலெக்ட்ரிக் ஷாக் வேணா கொடுத்துப் பார்க்கலாம்னு” என்றார் டாக்டர் யோசனையுடன்.

“அதுக்கென்ன, கொடுக்க வேண்டியதுதானே?”

டாக்டர் அவளை வியப்புடன் பார்த்தார்.

“என்கிட்டேயும் அவர் சொன்னார். இன்னிக்கி மனசில்லாமதான் ஆபீசுக்குப் போனார். நான்தான் சொன்னேன். இது என்ன பிரமாதம், குணமாகணும்னா டாக்டர் சொல்றதை செஞ்சுதானே ஆகணும்; வழவழன்னு இதமா வெண்ணையைத் தடவி ட்ரீட்மெண்ட் கொடுத்து இந்த வலி அடங்கும்னா டாக்டர் அதை நமக்கு மொதல்லேயே பண்ணிடுவாரேன்னேன்.”

டாக்டர் இன்னும் வியப்புத் தாளாமல் கண்ணகல அவளைச் சில வினாடிகள் பார்த்தார்.

“உங்கம்மாவுக்கு ரொம்ப தைரியம் ஜாஸ்தி” என்றார் சீமாவிடம் . “அப்ப
இன்னிக்கி ட்ரீட்மெண்ட் ஆரமிச்சிடலாமா?” என்று குஞ்சாலியிடம் கேட்டார். அவள் சரியென்று தலையசைத்தாள்.

“நான் இப்ப மயக்க மருந்து கொடுத்து ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கறேன். ஷாக் கொடுத்து முடிஞ்சதும் ரொம்பவே வலிக்கும். அதனாலே இங்கேயே ஒரு மணி நேரம் படுத்துண்டு ரெஸ்ட்லே இருங்கோ. ஆத்துக்குப் போய் சாப்பிட்டதுக்கு அப்புறம் இப்ப நான் தர்ற மாத்திரையை சாப்பிடுங்கோ. ஒரு சார்ட் தரேன். பகல்லே ஆறு மணி நேரத்துக்கு ஒரு தடவை வலி எப்படி இருக்கு? குறைஞ்சிண்டு வரதா, இல்லே அப்படியே இருக்கா, இல்லே முன்னை விட ஜாஸ்தியா ஆயிண்டு வரதான்னு நோட் பண்ணி வச்சுண்டு அடுத்த தடவை வரப்போ கொண்டு வந்து காமியுங்கோ. ஒரு வாரத்துக்கு மாத்திரை தரேன். ஒண்ணையும் வெளியே போய் வாங்க வேண்டாம். முடிஞ்ச வரை ஆத்து வேலைகளைக் குறைச்சுக்கப் பாக்கணும். இது உங்களுக்குக் கஷ்டமான காரியந்தான். வேறே வழியில்லே. வாரத்திலே ரெண்டு நாள்னு அடுத்த மூணு வாரத்துக்கு வரணும். செவ்வாயும் வெள்ளியுமா வச்சுக்கோங்கோ” என்று சொல்லி விட்டு சீமாவைப் பார்த்தார். பிறகு தன் மேஜை டிராயரைத் திறந்து ஒரு புத்தகத்தை எடுத்து “படிச்சிண்டிரு. இன்டரெஸ்டிங்கா இருக்கும்” என்று அவன் கையில் கொடுத்தார். மெதுவாகக் குஞ்சாலியை அவர் அடுத்திருந்த அறைக்கு அழைத்துச் சென்றார்.

சீமாவுக்கு இனம் தெரியாத பயம் ஏற்பட்டது. அம்மாவுக்கு ஒரு கெடுதலும் நேரக் கூடாது என்று வேண்டிக் கொண்டான். அம்மா எவ்வளவு தைரியமாக இருக்கிறாள் என்று டாக்டர் சொன்னதை நினைத்துக் கொண்டான். டாக்டரை ‘எமகாதகன்’ என்று அவனுடைய அப்பா செல்லமாகத் திட்டுவதை அவன் பலமுறை வீட்டில் கேட்டிருக்கிறான். நிதானமும் திறமையும் உடைய டாக்டர் என மதுரையில் பெயர் எடுத்தவர் என்றும் அப்பா சொல்லியிருக்கிறார். சீமா உட்கார்ந்த இடத்திலிருந்து சுற்றிலும் பார்த்தான். சிகப்பும், நீலமும் வெள்ளையுமாய் மூளை, முதுகுத் தண்டுவடம், இருதயம், கால்கள் கைகள் என்று கோட்டுப் படங்கள் தொங்கிக் கொண்டிருந்தன.

டாக்டர் கொடுத்த துப்பறியும் நாவலை எடுத்துப் பார்த்தான். அதை எழுதியவருடைய மற்ற துப்பறியும் நாவல்களையும் அவன் விரும்பிப் படித்திருக்கிறான். அதில் துப்பறிவாளரின் உதவியாளனாக வரும் கத்தரிக்காயை சீமாவுக்கு ரொம்பப் பிடிக்கும். அவன் பேசுவது செய்வது நடந்து கொள்வது எல்லாம் சிரிப்பை வரவழைக்கும். அந்தத் துப்பறிவாளரைப் போலவே தானும் ஒரு நாளைக்குப் ஏழெட்டுத் தடவை டீ குடிக்க வேண்டும் என்று சீமா ஒரு நாள் சொன்ன போது குஞ்சாலி “ஏண்டா, கீழ்ப்பாக்கத்துலேதான் அவாம் இருக்கு. அங்கே உன்னைக் கொண்டு போய் விட்டுட்டா தினம் ஏழெட்டு டீ உனக்கும் கிடைக்கும்” என்று சிரித்தாள்.

கையிலிருந்த நாவலைப் படிக்க ஆரம்பித்ததும் அதன் சுவாரஸ்யத்தில் சீமா தன்னை இழந்து விட்டான். “அவ்வளவு நன்னாவா இருக்கு புஸ்தகம்?” என்று குரல் கேட்டு சீமா தலை நிமிர்ந்தான். டாக்டர் அவனைப் பார்த்துச் சிரித்தார். அவன் வெட்கத்துடன் புத்தகத்தை மூடினான். “வேணும்னா நீ இதை ஆத்துக்கு எடுத்துண்டு போய்ப் படி” என்றார்.

சீமா உள்ளே இருந்த அறையைப் பார்த்தான்.

“பத்து நிமிஷம் கழிச்சு அவ முழிச்சுப்பா. அப்ப நீ போய்ப் பாரு. அப்புறம் அரை மணி கழிச்சு நீங்க ரெண்டு பேரும் ஆத்துக்குக் கிளம்பினாப் போறும்” என்றார். சீமா சுவரில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தான். பதினொன்றே முக்கால்.

பத்து நிமிஷம் கழிந்த பின் சீமா உள்ளே சென்றான். கண்களை மூடிப் படுத்திருந்த குஞ்சாலி அவன் வரும் சத்தம் கேட்டுக் கண்களைத் திறந்து பார்த்தாள். முகத்தில் அயர்ச்சி படிந்திருந்தது. அவனைப் பார்த்ததும் புன்னகை செய்ய முயன்றாள். சீமா அவளருகே சென்று “எப்படி இருக்கும்மா?”என்று நடுங்கும் குரலில் கேட்டான். அவள் அவன் கையைப் பிடித்து ஆறுதலாகத் தடவிக் கொடுத்தாள்.

“ரொம்ப வலிக்கறதுடா” என்றாள் ஈனஸ்வரத்தில். உடம்பு புரண்டு நெளிந்தது. “அம்மா, அம்மா” என்று வாய்விட்டு அழுதாள். சீமாவுக்கு என்னசெய்வதென்று
தெரியவில்லை. “நான் போய் டாக்டரை அழைச்சுண்டு வரேன்” என்று திரும்பினான்.

“அவர்தான் நன்னா வலிக்கும்னு சொல்லியிருக்காரே. நான்தான் பொறுத்துக்கணும். ஆனா, அம்மா, முடியலையே” என்று இரு கால்களையும் ஒட்டி முறுக்கிக் கொண்டாள்.

“நா முதுகைப் பிடிச்சி விடட்டுமாம்மா?” என்று கேட்டான் சீமா.

அவள் “நீ பாவம்டா” என்று ஒருக்களித்துப் படுத்துக் கொண்டு அவன் கையைத் தன் முதுகின் அருகில் எடுத்துச் சென்றாள்.

“இரும்மா. நான் அந்தப் பக்கம் வந்துக்கறேன்” என்று சொல்லி விட்டு அவன் கட்டிலைச் சுற்றிக் கொண்டு மறுபக்கம் சென்றான். இப்போது அவன் குஞ்சாலியின் முதுகைப் பார்த்தபடி நிற்க முடிந்தது. போர்வையை நீக்கி விட்டு இரண்டு கைகளாலும் அவள் முதுகை அமுக்கி விட்டான்.

“மெள்ள, மெள்ள, ரொம்ப அமுக்கினா அதுவே வலிக்கறது” என்றாள் குஞ்சாலி.

ஐந்து நிமிஷம் போயிருக்கும்.

“போறும்டா கண்ணா” என்றாள் குஞ்சாலி. சீமா கேட்காமல் கழுத்திலிருந்து இடுப்பு வரைக்கும் தன் கைகளால் மெதுவாக அமுக்கி விட்டான்.

“அப்பாடா, எவ்வளவு இதமா இருக்கு!” என்றாள் குஞ்சாலி. சற்றுக் கழித்து “சரி, போறும். நிறுத்திக்கோ. அப்புறம் உனக்குக் கை வலிக்கும்” என்றாள்.

அவன் காதில் வாங்கிக் கொள்ளாமல் மேலும் அவளது முதுகுப்புறத்தை அமுக்கி விட்டான்.

அவன் தான் சொல்வதைக் கேட்கவில்லை என்று குஞ்சாலி முதுகைத் திருப்பி நேராக விட்டத்தைப் பார்த்தபடி கட்டிலில் படுத்துக் கொண்டு அவனைப் பார்த்துச் சிரித்தாள். பிறகு “மணி என்ன?” என்று கேட்டாள்.

“பன்னெண்டு. பன்னெண்டேகால் இருக்கும்.”

“இப்ப கிளம்பினாலே ஆத்துக்குப் போய்ச் சேர ஒரு மணி ஆயிடுமே”என்றாள்.

“இன்னும் அரை மணி கழிச்சு டாக்டர் போகச் சொன்னார்” என்றான் சீமா.

“உனக்குப் பசிக்கிறதா?” என்று கேட்டாள் குஞ்சாலி.

“இல்லே. இப்போ வயத்திலே பயம்தான் இருக்கு” என்றான் சீமா.

“சீ அசடே, இதுக்கென்ன பயம் வேண்டிக் கிடக்கு? உங்கப்பா சொன்னதும் சரிதான். சின்னப் பசங்களைக் கூட்டிண்டு வரக் கூடாதுதான். டாக்டர் எதோ புஸ்தகம் கொடுத்தாரே. என்ன புஸ்தகம்?”

அவன் சொன்னான். “ஓ, உனக்குத்தான் ரொம்பப் பிடிக்குமே. சரி அதை வச்சுண்டு வெளியே போய் உக்காரு. அரை மணி கழிச்சு நாம கிளம்பலாம்” என்றாள் குஞ்சாலி.

சீமா மறுபடியும் வெளியே வந்து உட்கார்ந்து கொண்டு கத்தரிக்காயை ருசிக்க ஆரம்பித்தான்.

குஞ்சாலியும் சீமாவும் கிளினிக்கை விட்டுக் கிளம்பும் போது பனிரெண்டே முக்கால் ஆகியிருந்தது.

“அம்மா. நாம ரிக் ஷாலேயே போயிடலாம். நீ ரொம்ப டயர்டா இருக்கியே!” என்றான் சீமா.

“மனுஷனை மனுஷன் இழுத்துண்டு போறதுலையா? வேண்டாம். வேண்டாம். நாம பஸ்லேயே போலாம். உடம்பு அப்படி ஒண்ணும் உருகிப் போயிடாது.”

ராஜா பார்லியைக் கடக்கும் போது குஞ்சாலி அவனிடம் “ஒரு கேக் வாங்கிக்கோடா. கார்த்தாலே எட்டு மணிக்கு மூணு தோசை சாப்பிட்டது” என்று கடை வாசலில் நின்றாள். அவனுக்கு ஒரு சாக்லேட் கேக் வாங்கிக் கொடுத்தாள். அவன் அதைச் சாப்பிட்டுக் கொண்டே அவளுடன் நடந்தான். பஸ் ஸ்டாப்பை நெருங்கும் சமயம் அப்போது வந்த பத்தொன்பதாம் நம்பர் பஸ் ஸ்டாப்பில் நிற்காமல் அவர்களைக் கடந்து சென்றது. சீமா குஞ்சாலியிடம் “ஒரே கூட்டமா இருக்கேம்மா பஸ்ஸிலே இப்பக் கூட” என்றான்.

“அடுத்த பஸ் வர இன்னும் காமண்னேரம் ஆகும்” என்றாள் குஞ்சாலி
சலிப்புடன். சுற்றும் முற்றும் பார்த்தாள்.

“இங்கே கொஞ்சம் உக்காந்துக்கறேன்” என்று பஸ் ஸ்டாப் அருகே இருந்த ஒரு வீட்டு வாசலில் உட்கார்ந்து கொண்டாள்.

“நீயும் வரியா?” என்று சீமாவிடம் கேட்டாள்.

“நீ உக்கார்றதுக்கே அங்கே இடமில்லே” என்றான் சீமா

“அப்பாடா! என்ன வெய்யில், என்ன வெய்யில்!உஸ் !” என்று முகத்தைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டாள் குஞ்சாலி..

ஆங்காங்கு இருந்த மரங்களுமே வெய்யிலில் வதங்கிக் கொண்டிருந்தன. இயற்கை மூச்சு விட மறந்து விட்டதை இலைகளின் அசைவு அற்று நின்ற மரங்கள் சுட்டின.

அப்போது அந்த வீட்டின் உள்ளிருந்து வந்தவர் குஞ்சாலியைப் பார்த்தார். “இந்தப் பாழாப் போன வெய்யில்லே எடமும் பத்தாம உக்காந்துண்டு இருக்கேளே. ஆத்துக்குளே வேணும்னா போயி சேர்லே சித்த நாழி உக்காந்துக்குங்கோ. பாத்தா ரொம்ப டயர்டா இருக்கேளே” என்றார்.

“இல்லே, இப்ப பஸ் வந்துடும்” என்றாள் குஞ்சாலி.

“கொஞ்சம் தேர்த்தம் தரட்டுமா?” என்று கேட்டவர் அவள் பதிலை எதிர்பாராமல் உள்ளே சென்று ஒரு சொம்பில் தண்ணீரும் ஒரு தம்பளரும் கொண்டு வந்து கொடுத்தார். குஞ்சாலி வாங்கிக் குடித்த பின் சீமாவுக்கும் கொடுத்தாள். பாத்திரங்களைத் திரும்பக் கொடுக்கையில் “தவிச்ச வாய்க்குத் தூத்தம் கொடுத்தேள்” என்று நன்றியுடன் சொன்னாள்.

அடுத்த பஸ்ஸும் கூட்டத்தை அப்பிக் கொண்டு வந்து நின்றது. இரண்டு பேர் இறங்கினார்கள். குஞ்சாலிக்கும் சீமாவுக்கும் முன்னால் பஸ்ஸின் ஏறும் படியருகே மூன்று பேர் நின்றார்கள். பஸ்ஸை விட்டு இறங்கி வந்த கண்டக்டர் “ரெண்டு பேர்தான் ஏறலாம்” என்றான். அதைக் கேட்டு அந்த மூவரும் ஒதுங்கிக் கொண்டார்கள். குஞ்சாலியும் சீமாவும் ஏறிக் கொள்ள பஸ் புறப்பட்டது. பஸ் உள்ளே பெண்கள் பக்கம் காலியாக இருந்த ஒரே சீட்டில் குஞ்சாலி உட்கார்ந்து கொண்டாள்.

அவர்கள் வீட்டை அடையும் போது ஒன்றரை மணியாகி விட்டது. குஞ்சாலி சீமாவிடம் “வரப்பவும் கூட்டம் ஏன் தெரியுமோ? பசுமலை சர்ச்சிலே கல்யாணம்னு முக்காவாசி பஸ்ஸை ரொப்பிண்டு ஏழெட்டு குடும்பம் தல்லாகுளத்திலேர்ந்து வராளாம். என்ன மிச்சம்னா நீ திரும்பி வரச்சேயும் கால் கடுக்க நின்னுண்டு வந்ததுதான்” என்றாள். வீட்டை அடைந்ததும் அவர்கள் சாப்பிட்டார்கள்.

சாப்பிட்டு முடிந்ததும் சீமா “அம்மா, நான் கோபாலாத்துக்குப் போறேன். இன்னிக்கி அங்கே கேரம் மேட்ச். ஆறு மணிக்கு வந்துடறேன்” என்றபடி கிளம்பினான்.

“ஏண்டா, கொஞ்சம் ஆத்திலே இருந்து ரெஸ்ட் எடேன். எனக்கும் ஒத்தாசையா இருக்கும்” என்றாள் குஞ்சாலி.

அவன் பதில் எதுவும் பேசாமல் அவளைப் பார்த்து விட்டுக் கூடத்தில் இருந்த நாற்காலியில் போய் உட்கார்ந்து கொண்டான். குஞ்சாலியும் டாக்டர் கொடுத்த மாத்திரையைப் போட்டுக் கொண்டு ஊஞ்சலில் படுத்தாள். ஆனால் அவள் தூங்க முடியாமல் முதுகைத் திருப்பியும் நெளிந்தும் புரள்வதை சீமா பார்த்தான்.

“அம்மா, இப்ப கொஞ்சம் முதுகைப் பிடிச்சு விடட்டுமா?” என்று சீமா கேட்டான்.

“வேண்டாம். வேணும்னா நானே கூப்பிடறேன்” என்றாள் குஞ்சாலி. ஆனால் அவள் முன்பைப் போலவே புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள். அவன் அதைப் பார்க்க முடியாமல் தன்னுடைய அறைக்குள் போய் உட்கார்ந்து கொண்டான். டாக்டர் கொடுத்த நாவலில் மனதைச் செலுத்த முயன்றான். அரை மணி கழித்து குஞ்சாலி அவனைக் கூப்பிட்டாள். இப்போது தரையில் ஒரு விரிப்பைப் போட்டுக் கொண்டு படுத்திருந்தாள். அவனைப் பார்த்ததும் “வலி விடமாட்டேங்கிறதேடா கண்ணா” என்றாள்.

பிறகு அவனிடம் “நான் குப்புறப் படுத்துக்கறேன். நீ உன் காலாலே கொஞ்சம் மெள்ள முதுகை மிதிச்சு விடறயா?” என்று கேட்டபடி குப்புறப் படுத்துக் கொண்டாள்.

சீமா வலது காலை குஞ்சாலியின் முதுகில் வைத்து மெல்ல அழுத்தினான். “ஆங், அப்படித்தான். அம்மாடா எவ்வளவு நன்னா இருக்கு!” என்றாள் குஞ்சாலி. “அப்படியே கொஞ்சம் மேலாகக் கழுத்து வரைக்கும் மிதிச்சிண்டு போயிட்டு வரியா?”

சீமா அவள் சொல்படி காலை வைத்து அமுக்கி விட்டான். சற்றுக் கழித்து இடது காலுக்கு மாற்றிக் கொண்டான்.

“வலிக்கிறதாம்மா உனக்கு? சரி போறும்” என்றாள்.

அவன் அவள் சொல்வதைக் காதில் வாங்காமல் தன் வேலையைத் தொடர்ந்தான். சற்றுப் பெரிதாக ஆரம்பத்தில் அவளிடமிருந்து வந்த குரல் இப்போது தேய்ந்து சிறு முனகலாக வெளிப்பட்டது. அந்த முனகலும் நின்ற போது சீமா மிதிப்பதை நிறுத்தினான்.

ஐந்து மணிக்கு சந்திரசேகரன் ஆபிசிலிருந்து வந்து விட்டார். அப்போது குஞ்சாலி தனக்குக் காப்பியும் சீமாவுக்கு ஓவல்டினும் போட்டுக் கொண்டிருந்தாள். கணவரைப் பார்த்ததும் அவருக்கும் காப்பி கலந்தாள்.

“நீ படுத்திண்டிருப்பேன்னு நினைச்சிண்டு வந்தேன்”என்றார் அவர் காப்பியை வாங்கிக் கொண்டு.

“நான் என்ன உங்க சித்தி பொண்ணு பத்மாவா? ஒரு தும்மல் போட்டா நாலு நாளைக்கிப் போர்வையைப் போத்திண்டு கட்டில்லே படுத்து ராயசம் பண்ணறதுக்கு?” என்று சிரித்தாள் குஞ்சாலி.

“எங்காத்துக்காராளைப் பத்தி ஒசத்தியா சொல்லாட்டா உனக்குத் தூக்கம் வராதே” என்றார் சந்திரசேகரன். “எலக்ட்ரிக் ஷாக் கொடுத்ததுக்கு என்ன எஃபெக்ட்? ரொம்ப வலிக்கும்னாரே சாமிநாதன்?”

“ஆமா. வலிக்கும்தான்? யார் கிட்டயாச்சும் கொடுத்து முடியுமா? அழுதாலும் பிள்ளை நான்தானே பெறணும்? ஆனா பாவம் கொழந்தை. ரொம்பக் கஷ்டப்பட்டுடுத்து இன்னிக்கி” என்று வாஞ்சையுடன் சீமாவைப் பார்த்தாள் குஞ்சாலி.

“ஏன், என்ன ஆச்சு?”

“போகறச்சேயும் எம்ஜியார் வரார்னு அப்படி ஒரு கூட்டம் பஸ்ஸிலே. கொழந்தை நின்னுண்டுதான் வந்தான். திரும்பி வரச்சேயும் ஏதோ கல்யாணக் கூட்டம் பஸ்ஸை அடைச்சிண்டு வந்ததிலே கொழந்தை நின்னுண்டுதான் வரவேண்டியதாப் போச்சு. அதுக்குக் கால் இத்துப் போயிருக்கும். ஆனா ஒரு வார்த்தை சொல்லலியே?” என்றாள் குஞ்சாலி.

“இன்னிக்கி எம்ஜியார் வரார்னு கார்த்தாலேர்ந்து ஊரே திமிலோகப்படறது. இப்ப நான் வரச்சே ஆபீஸ் கார்லேதான் கொண்டு வந்து விட்டுப் போனா ” என்றார். பிறகு சீமாவைப் பார்த்தபடி. “ராஜா பார்லிலே ஒரு மொக்கு மொக்கியிருப்பானே!”

“ஆமா. கடவாய்க்குக் கூடப் பத்தாம ஒரு கோலிக்குண்டு சைசிலே கேக்குன்னு கொடுத்தான். ஆத்துக்கு வரச்சே ரெண்டு மணி ஆயிடுத்து. பாவம் நன்னா பசிச்சிருக்கும். அப்புறம்தான் கொழந்தை சாப்பிட்டான்.”

“அம்மா ட்ரீட்மெண்ட் எடுத்துண்டு இருக்குறப்போ என்னடா பண்ணினே பொழுது போறதுக்கு?”

“ஒரு நாளைக்கு ஏழெட்டு டீ குடிக்கறவர் புஸ்தகத்தை டாக்டர் அவன்கிட்டே கொடுத்தார்” என்று குஞ்சாலி சீமாவைப் பார்த்துச் சிரித்தாள். “ஆனா கொழந்தை நான் அங்கே படுத்துண்டு இருக்கறதைப் பாத்துப் பயந்து நடுங்கிடுத்து. சின்னவன்தானே? மணியாச்சே, பசிக்கிறதாடான்னு கேட்டா, இல்லே வயறு பூரா பயம் ரொம்பிக் கிடக்குன்னது. பாவம்” என்றாள் குஞ்சாலி.

“வேறென்ன சொன்னார் டாக்டர்? வலி ஜாஸ்தியாகாம இருக்க மருந்து கொடுத்திருக்காரா?” என்று கேட்டார் சந்திரசேகரன்.

“ம். கொடுத்தார். ஆனா வலியைக் கொறைக்கிற தன்வந்த்ரி இதோ நம்மாத்துலேயே இருக்காரே” என்று சீமாவை இழுத்து அணைத்துக் கொண்டாள். “ஒத்தடம் கொடுத்தாப்பிலே அதோட காலையும் கையையும் வச்சு என் முதுகிலே அமுக்கி அமுக்கி அப்படி ஒரு சிஷ்ருக்ஷை பண்ணித்து கொழந்தை. எப்படி வலிச்சிருக்கும் அதுக்கு காலிலேயும் கையிலேயும்?” என்றாள் குஞ்சாலி.

பிரார்த்தனை – ஸிந்துஜா

ஸிந்துஜா

இன்னும் பனி விலகவில்லை. வைகறை இருட்டின் மீது காதல் கொண்டாற் போல சில்லென்று காற்று தவழ்ந்து வந்தது. மனிதர்களைப் படுக்கையிலிருந்து எழுப்புவதற்காகவென்று மரங்களிலிருந்து தத்தம் இனிய குரல்களுடன் பறவைகள் பறந்து சென்றன. இதெல்லாம் போதாது என்று சொல்வது போல ஒரு வீட்டு வாசல் வழியே எம்.எஸ். சுப்ரபாதம் சொல்வது கேட்டது. தில்லியில் பல நாள்கள் எட்டு மணி எட்டரை மணிக்குதான் பக்கத்து பிளாட்டிலிருந்து சுப்ரபாதம் கிளம்பி வரும்.

தெரு ஆரம்பத்தில் ஒரு வீட்டு வாசலில் கோலம் போட்டு விட்டு உள்ளே செல்லும் ஒரு பெண்ணை சபரி பார்த்தான். கோலத்தின் நடுவில் மஞ்சள் பூசணிப் பூ பளீரென்று மின்னிற்று. கல்யாணத்துக்கு நிற்கும் பெண் போலிருக்கிறது. அந்த வீட்டில்தான் பதினைந்து வருஷம் ஹேமு இருந்தாள்.

அவன் வீட்டை நெருங்கியதும் சபரி ஆட்டோவை நிறுத்தச் சொன்னான். வாசல் கம்பியைப் பிடித்துக் கொண்டு அம்மா நிற்பதைப் பார்த்தான். பையை ஆட்டோவிலிருந்து எடுத்துத் தோளில் மாட்டிக் கொண்டு ஆட்டோக்காரரிடம் பணம் கொடுத்தான். அம்மாவை நெருங்கும் போது அவள் “வராதவன் வரானேன்னு ட்ரெயின்காரனும் சரியான நேரத்துக்கு வந்துட்டானா?” என்று சிரித்தாள். அந்தச் சிரிப்பில் அவர்கள் ஒருவரை யொருவர் பார்த்துக் கொள்ளாத ஒன்பது வருஷ தூரம் தூக்கியெறியப் பட்டது என்று சபரிக்குத் தோன்றிற்று.

“திருஷ்ணாப்பள்ளிக்கு மூணு மணிக்கே வந்தவனை அவுட்டர்லே போட்டான். அப்படியும் வண்டி தஞ்சாவூருக்கு நாலு அம்பதுக்கு டாண்ணு வந்துடுத்து” என்றான் சபரி.

“என் காலத்து இன்ஜின் டிரைவர் போல!” என்ற அம்மா “உள்ளே வா” என்று சொல்லி விட்டுத் திரும்பி உள்பக்கம் நடந்தாள்.

சபரி உள்ளே நுழைந்தான். வாசலைத் தாண்டி நடை ஆரம்பத்தில் இரு பக்கமும் நீண்ட திண்ணைகள் உட்கார்ந்திருந்தன. வலது பக்கத் திண்ணையில் முக்கால் வாசி இடத்தை மூட்டைகள் அடைத்துக் கொண்டிருந்தன. நவரைப் பட்ட நடவு தொடங்கும் சமயத்தில் வேண்டியிருக்கும் உரங்களை அடக்கிய மூட்டைகளாயிருக்கும். இடது பக்கத்துத் திண்ணை ஹோவென்று விரிந்து கிடந்தது. ஒரே சமயத்தில் நான்கு படுக்கைகளைப் போட்டுத் தூங்கலாம். அவன் இடது கையை வைத்துத் திண்ணையைத் தடவினான். வழக்கம் போலக் குளிர்ச்சியும் வழவழப்புமாக அவனைக் கூப்பிட்டது. பகலில் விளையாட்டுத் ‘திடலா’கவும் வெய்யிலோ, மழையோ, பனியோ எதுவாக இருந்தாலும் இரவு அவனைப் போட்டுக் கொஞ்சுமிடமாகவும்தான் அது இருந்தது என்று நேசத்துடன் நினைத்தபடி உள்ளே சற்றுக் குறுகலாக ஓடிய ரேழியைக் கடந்து கூடத்தில் நுழைந்தான்.

கூடத்து ஊஞ்சல் மீது தோள்பையை வைத்தான். வலது பக்கமிருந்த அறை வாசலில் சார்த்தியிருந்த கதவுக்கு முன்னால் அம்மா நின்றாள். அந்த அறைக்குள்தான் அப்பா படுத்துக் கொண்டிருக்கிறார். அவர் கட்டிலை விட்டு எழ முடியாமல் படுத்த படுக்கையாய் அங்கே வாசம் செய்கிறார் என்று அன்று அண்ணாசாமி ஊருக்குத் திரும்பிப் போகுமுன் அவனுக்குப் போன் பண்ணிச் சொன்னான். அவன் அம்மாவை நெருங்கியதும் அவள் கதவைச் சத்தமில்லாமல் திறந்தாள். அவன் பார்வை கட்டில் மீது விழுந்தது. படுக்கையில் ஒரு ஈர்க்குச்சி படுத்திருப்பதைப் பார்த்துத் திடுக்கிட்டான். மை காட்! என்னமாய் உருக்குலைந்து கச்சலாகி விட்ட உடம்பு ! வயல்காடுகளில் ஆஜானுபாகுவாகத் திரிந்து ஆட்களை வேலை செய்யச் சொல்லி விரட்டியடித்த ராஜமய்யரா இப்படி பிரேதமாகப் படுத்துக் கிடக்கிறார்? ராஜமய்யரது கண்கள் மூடியிருந்தன. ஏறி இறங்கும் மார்புதான் உயிரை இழுத்துப் பிடித்திருக்கும் உடம்புக்குச் சாட்சி சொன்னது. ‘தூங்கட்டும்’ என்பது போல் சைகையில் தெரிவித்து விட்டு அம்மா கதவை மூடினாள்.

அவளுடன் சேர்ந்து சபரியும் சமையலறைக்குச் சென்றான்.

“என்னம்மா இப்பிடி ஆயிட்டார் அப்பா?” என்று அவன் தாங்க முடியாது கேட்டான்.

“சொல்றேன் அப்புறம்” என்றாள் அம்மா. அடுப்பைப் பற்ற வைத்துப் பால் குக்கரை ஏற்றினாள். அவனிடம் “பெங்களூர் ஸ்டைலா இல்லே திருவையாத்து ஸ்டைலா நீ இப்ப காப்பி குடிக்கப் போறது?” என்றாள்.

“வென் யூ ஆர் இன் ரோம் யூ மஸ்ட் பீ எ ரோமன்” என்றான் சபரி. “பல் தேச்சிட்டு வந்து காப்பி குடிக்கிறேன்.”

பிறகு “ரொம்ப இளைச்சிட்டியேம்மா” என்று அவள் கையைப் பிடித்துத் தன் கையில் வைத்துக் கொண்டான். “பாரு, எப்படி நரம்பெல்லாம் தெரியறது?” என்று வருத்தமான குரலில் கேட்டான்.

“ஆமா, இப்ப எனக்கு பதினஞ்சு வயசுதான் ஆறது திம்மு திம்முன்னு இருக்கறதுக்கு!” என்றாள். “நீயும் கூடத்தான் பாக்க சகிக்காம இருக்கே. ராஜா மாதிரி எப்படியெல்லாமோ இருந்திருக்க வேண்டியது..ஹூம், நாமென்ன கடவுளா நினைச்சதை நினைச்சபடி நடத்தி முடிக்க?” என்றாள் அம்மா.

அவள் பேச்சை எங்கே நகர்த்துகிறாள் என்று அவனுக்குத் தெரியும். “சரி, நான் போய்ப் பல் தேச்சிட்டு வரேன்” என்று ஊஞ்சலை நோக்கி நடந்தான். அவள் பெருமூச்சு விட்டாள். கையில் பிடிபடாமல் பறக்கப் பார்க்கும் நாகணவாய். காப்பிப் பொடியை டப்பாவிலிருந்து எடுத்து ஃபில்டரின் அடிப்பாத்திரத்திற்கு மேலே இருந்த வட்டமான சிறு சல்லடையில் போட்டு அதன் மேலே வெந்நீரை ஊற்றினாள். அப்பாவுக்கும் பிள்ளைக்கும் காப்பி திக்காக இருக்க வேண்டும். எவ்வளவோ விஷயங்களில் இருவருக்கும் ஒரே குணம். விருப்பு வெறுப்பு எல்லாவற்றிலும் இருவருக்கும் அப்படியொரு பொருத்தம். ஒன்றைத் தவிர. சபரி ஹேமுவைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள அவர் ஒப்புதல் தெரிவிக்க மறுத்து விட்டார்.

சபரி தாழ்வாரம் வழியே வீட்டின் பின்புறமிருந்த தோட்டத்தை அடைந்தான். கண்ணை இறுக்கி மனசில் பரவசத்தை ஊட்டும் பச்சை சுற்றிலும் நிரம்பியிருந்தது. துணி துவைக்கும் கல்லில் இரண்டு தையல் சிட்டுக்கள் அவைகளும் பச்சையில் மயங்கியனவாகத் தோற்றம் தந்து உட்கார்ந்திருந்தன. அவனைப் பார்த்ததும் கொண்டையை நாலைந்து முறை ஆட்டி ‘கீ’ ‘கீ’ என்று குசலம் விசாரித்து விட்டுப் பறந்தன. ஹேமுவுக்கும் இந்தப் பச்சை மரங்கள், செடி கொடிகள் மீதும் பறவைகள் மீதும் அப்படி ஒரு ஈர்ப்பு. அவளை நினைக்கும் போது மழைநீர் ஒற்றிய சாயங்காலத்தில் திடீரென்று சிரித்துக் கொண்டு வானில் வளைய வரும் வில், காவேரியாய்ப் புரளுகிறோம் என்ற கர்வத்தில் அலைகளுடன் பொங்கி ஓடும் கணபதி அக்கிரகார ஆறு, ஐயாறப்பர் சன்னதியில் இருட்டை அண்ட விடாது மினுங்கிக் கொண்டிருக்கும் ஆளுயர எண்ணெய் விளக்கு இவையெல்லாம் ஞாபகத்துக்கு வருகின்றன.அவளும் இப்போது ஓடிச் சென்ற சிட்டுக்களைப் போலத்தான் பறந்து போய்விட்டாள். சிட்டுக்களைப் போவென்று விரட்டாத மாதிரிதான் சபரி ஹேமுவிடமும் இருந்தான். ஆனால்?

பற்பசை ஈஷிக் கொண்டிருந்த பிரஷ்ஷை வாயில் வைத்துக் கொண்டு கிணற்றிலிருந்து நீரை எடுத்து அங்கு கிடந்த வாளியில் ஊற்றினான். பற்களைத் தேய்த்து விட்டு வாயைக் கொப்புளித்தான். வாளியில் மிதந்து கொண்டிருந்த செம்பை நீரில் முக்கி கைகளிலும் கால்களிலும் விட்டுக் கொண்டான். இரு கைகளாலும் நீரை அள்ளி முகத்தில் அடித்துக் கொண்டான். பாதி குளித்து விட்ட முயற்சியில் உடல் சூடு இழந்து மலர்ச்சியை ஏற்படுத்திவிட்டதாக உணர்ந்தான்.

அவன் முகத்தைக் கையில் வைத்திருந்த டவலால் துடைத்துக் கொண்டே சமையலறைக்குச் சென்றான். அம்மா ஃபில்டரின் மேல் மூடியை வைத்து ஃபில்டரைத் தட்டி டிகாக்ஷன் இறக்கிக் கொண்டி
ருந்தாள். அவனைப் பார்த்தும் காப்பி கலந்து கொடுத்தாள்

அவன் ஒரு வாய் அருந்தி விட்டு “ஆஹா பிரமாதம்” என்றான். அம்மா அதைக் கேட்டுச் சிரித்தாள்.

“அப்பாவுக்குக் கொண்டு போய்க் கொடுக்கட்டா?” என்று கேட்டான்.

“அப்பாவுக்கா? அவருக்குக் காப்பியை நிறுத்தி ரெண்டு மாசமாச்சு” என்றாள் அம்மா.

“ஏம்மா?”

“திடீர்ன்னு ஒரு நாள் வாண்டாம்னுட்டார். காப்பிக்குப் பதிலா ஒரு வாய் ஹார்லிக்ஸ் குடிப்பார். சாப்பாடும் இப்ப ரொம்ப கொறஞ்சு போயாச்சு. எல்லாம் கரைச்சுக் கொடுக்கறதுதான். இட்லி பண்ணினாக் கூட மிக்சிலே அரைச்சு ஜூஸ் கொடுக்கற மாதிரி கொடுத்திண்டு இருக்கு. சாப்பாடுன்னா மோர் சாதம்தான். அதையும் கரைச்சுதான் கொடுக் கறேன். லேசா காரம் இருந்தாக் கூட பீச்சிண்டு அடிக்கறது. டாக்டர் வந்து பாத்துட்டு காரமில்லாம கஞ்சி மாதிரி வாட்டரியா கொடுங்கோ, ஜீரண சக்தியும் குறைஞ்சாப்பிலே இருக்குன்னுட்டார்.”

“ஏன் திடீர்னு இப்படி?”

“நீ லண்டனுக்குப் போய் நாலைஞ்சு மாசம் ஆனப்போ இவர் படுக்கையிலே விழுந்தாச்சு. அன்னிலேர்ந்தே இந்தக் கஷ்டகாலம் ஆரமிச்சிடுத்தே” என்றாள் அம்மா.

சபரிக்கு அண்ணாசாமி போன் பண்ணிய அன்றைய தினம் ஞாபகத்தில் தெளிவாக இருந்தது. அப்போது அவன் படுக்கையில் இருந்தான். வெளியே லண்டன் மழை தூறிக் கொண்டிருந்தது. அந்தக் குளிர் நசநசப்பும் ஞாயிற்றுக் கிழமையும் அவனைச் சோம்பேறித்தனத்தில் ஆழ்த்திக் காலை எட்டு மணிக்குக் கூடப் படுக்கையிலிருந்து எழ வைக்கவில்லை. இன்னும் ஒரு மாதத்தில் இந்தியாவுக்குத் திரும்பிப் போக வேண்டும். அவனுடைய ஆறு மாத டிரெய்னிங் காலம் முடிந்து விடும்.

கைபேசி அடித்த போது எடுத்துப் பார்த்தான். தெரிந்த நம்பராக இல்லை.

“ஹலோ! சபரி ஹியர்.”

“சபரி, நான் அண்ணாசாமி பேசறேன்டா. எப்படியிருக்கே? இன்னிக்கிக் காத்தாலேதான் எங்க குலதெய்வப் பிரார்த்தனைன்னு திருஷ்ணா
பள்ளிலேந்து காரை எடுத்துண்டு வீரசிங்கம்பேட்டைக்கு வந்தேன் அம்பாளுக்கு அபிஷேகம் முடிஞ்சதும் பதினோரு மணிக்கு இங்கே ஆத்துக்கு வந்தேன். சித்தப்பாவையும் சித்தியையும் கூடவே தரிசனம் பண்ணிட்டுப் போலாமேன்னு” என்ற அவனது இயல்பான குரல் அவனுக்கு முதலில் எந்த சந்தேகத்தையும் எழுப்பவில்லை. அண்ணா சாமி அவனுடைய பெரியப்பாவின் பையன்.

“எங்கே ஆத்திலேர்ந்தா பேசறே? வேறே என்னமோ சத்தம்லாம் கேக்கறதே?”

“இங்கே ஆஸ்பத்திரிக்கு வந்திருக்கோம்.”

“ஏன்? யாருக்கு என்னாச்சு?” என்று அவன் பதறியபடி படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தான்.

“நான் ஆத்துக்கு வந்து சித்தே நாழி ரெண்டு பேர் கிட்டேயும் பேசிண்டு இருந்தேன்.அரை மணி கூட ஆகலே. திடீர்னு சித்தப்பாக்குத் தலை கிறுகிறுத்து நடக்க முடியாம போயி எல்லாரும் தஞ்சாவூருக்கு ஓடி வந்தோம். மீனாட்சியிலேதான் அட்மிட் பண்ணியிருக்கு. பி.பி., சுகர்லாம் எகிறிக் கிடக்குங்கறா. திடீர்னு கொலஸ்ட்ரால் வேறே ரொம்ப ஜாஸ்தியா இருக்காம். அப்பப்போ பாக்காம விட்டுட்டுதுனாலே இப்ப இப்படி ஆயிடுத்துங்கறார் டாக்டர்” என்று அண்ணாசாமி சொல்லும் போது சபரிக்கு உடம்பு ஒரு தடவை நடுங்கி விட்டுப் பழைய நிலமைக்குத் திரும்பியது.

“இப்ப எப்படி இருக்கார்? நான் இன்னிக்கிக் கிளம்பி வரட்டா?”

“இரு. அம்மாகிட்டே கொடுக்கிறேன். நீ அடுத்த மாசம் திரும்புவேன்னு உங்க ஆபீஸிலே கேட்டதுக்கு சொன்னா. இன் பாக்ட் உன்னோட போன் நம்பரையே நான் உன் ஆபீஸ்லேர்ந்துதான் வாங்கினேன்.”

அம்மா அவனிடம் நேரடியாக “நன்னாயிருக்கு. நீயென்ன மாயவரத் திலேயா இல்லே கும்பகோணத்திலேயா இருக்கே பஸ் பிடிச்சு உடனே கிளம்பி வரதுக்கு? டாக்டர் வாயிலே ஐயாரப்பர் வந்து உக்காந்து உயிருக்கு ஒண்ணும் ஆபத்தில்லேன்னு சொல்லிட்டுப் போயிட்டார். ஒரு வாரம் இங்கே அப்பா இருக்கணும். அப்பா ஆத்துக்குத் திரும்பி வரவரைக்கும் அண்ணாசாமி கூடவே இருக்கேங்கறான். நீ கிளம்பி வந்தா ஆஸ்பத்திரி வாசல்லே வேப்பமர நெழல்லே உக்காந்துண்டு போறவா வரவாளோட கவலை மூஞ்சிகளைப் பாத்துண்டு இருக்கலாம்” என்றாள். அப்பா ! என்ன ஒரு நிதானம்! ஒரு இம்மி அளவு பயம், நடுக்கம் எதுவும் தெரிவிக்காத குரல்!

அடுத்து வந்த நாள்களிலும் அவன் அவளுக்குப் போன் போட்டுப் பேசும் போதெல்லாம் அவனுக்கு எதெது எவ்வளவு தெரிய வேண்டுமோ, அவ்வளவு தெரிஞ்சால் போதும் என்பது போலப் பேசுவாள். அவள் சொல்வதை வைத்து அவன் மேற்கொண்டு எதுவும் கேட்க விடாத மாதிரி அவள் பேச்சு இருக்கும். அப்பா ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனது, அவர் சாப்பிடும் மாத்திரை, மருந்துகள், டாக்டர் வந்து போனது, அவரை வந்து பார்த்து விட்டுப் போன உறவு ஜனம் என்று ஏதோ நிறைய விஷயங்களை சொல்லி விட்டது போன்ற பாவனையை ஏற்படுத்தி விடுவாள். அவர் காப்பி சாப்பிடுவதை நிறுத்தியது, நீர் ஆகாரமாய் சாப்பிடுவது, உடல் இவ்வளவு மோசமாகத் தேய்ந்து போய்விட்டது பற்றியெல்லாம் இன்றுதான் அவன் தெரிந்து கொண்டான். தொலைவில் தனியாக இருக்கிறவன் கவலையில் கிடந்து மன்றாடக் கூடாது என்று நினைத்திருப்பாள்.

அம்மா கையில் ஹார்லிக்ஸ் எடுத்துக் கொண்டாள். இருவரும் அப்பாவின் படுக்கைக்குச் சென்றார்கள். ராஜமய்யர் விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவனைப் பார்த்ததும் அவர் முகத்தில் சந்தோஷம் தோன்றுவதை சபரி கவனித்தான். கையை மெல்ல அசைத்து அவனைத் தன் பக்கம் வரச் சொன்னார். அம்மா அவன் கையில் ஹார்லிக்ஸ் தம்ளரைத் தந்தாள். சபரி அவர் ஹார்லிக்ஸ் குடிப்பதற்கு உதவினான்.அவர் மிகவும் மெல்லிய குரலில் அவனிடம் ஏதோ கேட்டார். சற்றுக் குழறலாய்த் தொனித்த வார்த்தைகளை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

“‘நீ எப்போ வந்தே? சௌக்கியமா இருக்கியான்னு கேக்கறார்” என்றாள் அம்மா.

அவன் சற்று உரத்த குரலில் “நா நன்னாயிருக்கேம்ப்பா. உங்களுக்கு எப்படி இருக்கு? ரொம்ப மோசமாயிருக்கேளே?” என்றான்.

அம்மா சபரியிடம் “நீ குரலை ஒசத்திப் பேச வேண்டியதில்லே. உன் உதடைப் படிச்சு நீ கேக்கறதைத் தெரிஞ்சுப்பார்” என்றாள்.

அப்பா அவனுடைய வலது கையைப் பற்றித் தன் கையுடன் கோர்த்துக் கொண்டார். வாடிய பூ தன் கையை உரசுவது போல அவனுக்கு இருந்தது.

‘நீ ஏன் இப்படி இளைச்சுப் போயிருக்கே? ஒழுங்கா சாப்பிடறதுக்கு என்ன? லண்டனிலேந்து நேரே இங்கே வந்தியா? எப்போ திரும்ப ஊருக்குப் போய் வேலையிலே ஜாயின் பண்ணனும்? எனக்காக நீ இங்கே தங்க வேண்டாம். ஆனா நாலஞ்சு நாள் இருந்தேன்னா மரூருக்குப் போய் நிலத்தைப் பாத்துட்டு வா. திருநாவு கணக்கெல்லாம் சரியாய் எழுதி வச்சிருக்கானான்னு ஒரு பார்வை பாத்துட்டு வா. அவன் நல்லவன்தான். ஆனா யாரும் பாக்கலே கேக்கலேன்னா சோம்பேறியா ஆயிடுவான். எழுத வேண்டிய செலவை மறந்து போயிடுவான், அதுக்குத்தான் சொல்றேன்’ என்று அவரது கேள்விகளையும் உத்திரவுகளையும் அம்மா மொழிபெயர்த்துக் கொண்டே இருந்தாள்.

அவனும் அம்மாவும் அவரிடமிருந்து வெளியே வந்ததும் சபரி அம்மாவிடம் “ரொம்ப தெளிவாதானே இருக்கார்” என்றான் சற்று உற்சாகத்துடன்.

“எல்லாம் உன்னைப் பாத்த சந்தோஷம்தான்” என்றாள் அம்மா. “ஆனா இன்னிக்கே இன்னொரு சமயம் வேறே மாதிரி அவதாரத்தில் இருப்பார். உனக்கு அப்ப அவரைப் பாத்தா வாழ்க்கையே வெறுத்துப் போயிடும்.”

சபரி அவளை உற்றுப் பார்த்தான்.

“அவர் மனசிலே என்ன ஓடறதுன்னு யாருக்கு தெரியறது? கத்துவார். கூப்பாடு போடுவார். வாயிலிருந்து அவ்வளவு நாத்தமான வார்த்தைகள் நாராசமா வரும். கட்டில்லேர்ந்து கீழே விழறதுக்கு அப்படி ஒரு ஆகாத்தியம் பண்ணுவார். அப்போல்லாம் எதுத்தாப்பிலே நிக்கறது யாருன்னு தெரியாது. என்னோட அப்பாவைக் கூட்டிண்டு வாடின்னு என்னைப் பாத்து சத்தம் போடுவார்.செத்துப் போனவாளைக் கொண்டு வர நான் என்ன கிருஷ்ண பரமாத்வாவா இல்லே என் மாமனார்தான் பரீக்ஷித்தா?”

“இப்படி தினமும் நடக்குமா?”

“ஆமா. அவரைப் பாசத்தோட பரிவோட பாக்க வராளே சொந்தக்காராளும் சினேகிதாளும், அப்ப அவாளைத் துச்சமாப் பார்த்து அவர் காரி உமிழ்றது இருக்கே அது எல்லார் மனசையும் குத்திப் பிடுங்கிடும். எப்படி இவரோட இருக்கேன்னு பயத்தோட, ஆச்சரியத்தோட மரியாதையோட கனிவோட என்னைப் பாத்துட்டுப் போவா. இவ்வளவுக்கும் அவருக்கு ஒண்ணும் கல்லு மனசு இல்லே, அவாளைக் காயப்படுத்தணும்கிற வெறி எதுவும் இல்லேன்னு அவாளுக்கு ரொம்ப நன்னாவே தெரியும். ஆனா ஒரு தடவை வந்தவா ரெண்டாவது தடவை வந்தான்னு இதுவரை இருக்கலே. ஒரு நா காத்தாலே லால்குடியிலேந்து ஹைமவதிப் பாட்டி வந்தா. ‘தொண்ணூறு வயசுக்கு எதுக்கு இப்பிடி நீங்க டிரெயினிலேயும் பஸ்சிலேயும் அவதிப்பட்டுண்டு வந்தேள்?’ன்னு கூட நான் கேட்டுட்டேன். “பாக்கணும் போல இருந்துதுடி. நா தூக்கி வளர்த்த பிள்ளையாச்சே’ன்னா. கண்ணுலே கரகரன்னு ஜலம் ஊத்தறது. கட்டிலுக்குப் பக்கத்திலே போய் கிழவி நின்னா. இவர் இமைய அசைக்காம அவளையே முறைச்சுப் பாத்துண்டு இருக்கார். அவள் பேசற எதையும் கேக்கறதுக்குத் தனக்குக் காதே இல்லாத மாதிரி ஒரு முக்கல் முனகல் இல்லாமே முறைச்சிண்டு இருக்கார். அஞ்சு நிமிஷம் ஆச்சு. பத்து நிமிஷம் ஆச்சு. அப்புறம் வேறே பக்கம் திரும்பிப் படுத்துண்டு அசையவே இல்லே.”

சபரிக்குத் திகைப்பாக இருந்தது. ஏதோ மாந்தரீகத்தின் பிடியில் சிக்கிக் கொண்டு தவிப்பவர் போல ஆகி விட்டாரா? அவரது உடல்நிலமையின் சீரழிவு அவர் மனதை ஆட்டிப்படைக்கும் விஷயங்களில் பொதிந்தி ருக்கிறதா? என்ன மாதிரியான விஷயங்கள் அவை?

அம்மா “சரி. நீ போய்க் குளிச்சிட்டு வா. நான் தோசைக்கு அரைச்சு வச்சிருக்கேன். சாப்பிட்டு விட்டு கொஞ்சம் தூங்கு. ராத்திரி பூரா முழிச்சிண்டு கவலைப்பட்டுண்டு வந்திருப்பே” என்று சமையலறையை நோக்கிச் சென்றாள். அவன் குளித்து விட்டு சுவாமி கும்பிட பூஜை அறைக்குச் சென்றான். சுவாமி மாடத்தில் குத்து விளக்கு அரை வெளிச்சத்தில் ஆடிக் கொண்டிருந்தது. அவன் மர பீரோவுக்குப் பின்னால் இருந்த சுவிட்சை அமுக்கினான். விளக்கு எரியவில்லை. ஃபியூஸ் ஆகி விட்டது போல என்று நினைத்துக் கொண்டே சுவாமி கும்பிட்டான். டிபன் சாப்பிட்டு முடித்ததும் மாடியில் இருந்த அறைக்குச் சென்று படுக்கையில் விழுந்தான். படுத்த உடன் தூங்கியும் விட்டான்.

திடீரென்று பலத்த சத்தம் கேட்டு விழிப்பு ஏற்பட்டது. பிளிறலைப்
போன்று தாங்க முடியாத சப்தம். அவன் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து கடிகாரத்தைப் பார்த்தான். இரண்டு மணி நேரத்துக்கும் மேல் தூங்கி விட்டது தெரிந்தது. கீழே சென்றான். அப்பாவின் அறையிலிருந்துதான் சத்தம் வந்து கொண்டிருந்தது. திறந்திருந்த கதவின் வழியே அவன் உள்ளே பார்த்தான். அம்மா அப்பாவை அமுக்கிக் கட்டிப் பிடித்துக் கொண்டிருக்க அவர் திமிறி அவளிடமிருந்து விடுபட முயன்று கொண்டிருந்தார். அவர் உடம்பில் ஒரு பொட்டுத் துணி இல்லை.

“ஏ முண்டே, ஏண்டி இங்கே வந்து என் உயிரை எடுக்கறே? என் டிரெஸ்ஸெல்லாம் அவுத்துப் போட்டு… இந்த வயசிலே உனக்கு இவ்வளவு ஆசையா? அவ்வளவு ஆசை இருந்தா யாராவது சின்னப் பயலை இழுத்துப் பிடிச்சிண்டு அலைய வேண்டியதுதானேடி? கொஞ்ச நாள் என்னைப் பாத்துக்கன்னு ஒரு கிணடனைக் கூட்டிண்டு வந்து ஆத்திலே வச்சிண்டிருந்தே. அவன் எதுக்கு ஓடிப் போயிட்டான்னு தெரியலே. என்னை இப்படி டிரெஸ் இல்லாம பாக்க உனக்கு வெக்கமா
இல்லியா? மானங் கெட்ட கழுதை. நீ இப்பிடி இருக்கறதுனாலேதான் ஒரு சொந்தம் என்னை எட்டிப் பாக்கறது இல்லே. எனக்கு இந்த அவமானமெல்லாம் தேவையா? கடவுளே, என்னை சீக்கிரம் கொண்டு போயிடேண்டா. இவ பாட்டுக்கு இவ இஷ்டப்படி ஊர் மேலே திரியட்டும். அடியேய். என் மேலே கை வச்சேன்னா தெரியும். அப்பிடியே முறிச்சுப் போட்டுடுவேன். ஏய், ஏய் என்ன நான் சொல்லிண்டே இருக்கேன். நீ என் கையை அமுக்கிக் கீழே தள்ளிண்டு இருக்கே… நாயே!”

அம்மா அவர் கத்துவது எதுவும் தன் காதில் விழாதது போல அவரது இடுப்பில் கையை வைத்துத் தூக்கி வேட்டியை இடுப்போடு சுற்றிக் கட்டினாள். அவர் திமிறுவதை கொஞ்சமும் லட்சியம் செய்யாது இரு கைகள் வழியாக சட்டையைப் போட்டு விட்டாள். அவர் கால்களை அசைத்துத் திமிருக்கையில் அவை அவளது உடம்பில் உதைகளாக விழுந்தன.

சபரி கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே புகுந்தான் சத்தம் கேட்டு அம்மா நிமிர்ந்து பார்த்தாள். அவனைக் கண்டதும் அவள் முகம் இறுகிற்று. கடுமையைத் தெரிவிக்கும் முகத்துடன் அவள் கண்களாலேயே அவனை வெளியே போகச் சொன்னாள். சபரி தயங்கியபடி காலைப் பின் வைத்தான். கதவை சத்தமில்லாமல் சாத்தினான். கூடத்து ஊஞ்சலில் போய் உட்கார்ந்து கொண்டான். அவனால் சற்று முன் கண்ட காட்சியையும் கேட்ட நாராசங்களையும் நம்ப முடியவில்லை. மூன்று மணி நேரத்துக்கு முன்னால் அவனுடன் அன்பும் பரிவும் சாந்தமும் தெளிவும் நிரம்பிய உடல் மொழிகளுடன் உரையாடியவரையா இப்போது பார்த்தோம் என்று அதிர்ந்தான்.

அவனருகில் அம்மா வந்து நின்றாள். அவள் முகத்தில் களைப்பும் சோர்வும் தெரிந்தன. கலைந்து முன் நெற்றியில் விழுந்திருந்த தலை மயிரை ஒதுக்கிக் கொண்டே அவனருகில் அமர்ந்தாள்.

அவன் அவள் கையைப் பற்றி “என்னம்மா இப்படி ஆயிட்டார்?’ என்று கேட்டான் நடுங்கும் குரலில்.

“ரெண்டு மாசமா இப்பிடித்தான் போயிண்டிருக்கு.”

“யாராவது ஆள் போட்டு இந்த க்ளீன் பண்ணற வேலையை எல்லாம் பாத்துக்கச் சொல்லலாமே? நான் தஞ்சாவூருக்குப் போய்ப் பாத்து கூட்டிண்டு வரேன் இன்னிக்கி” என்றான் சபரி.

“அந்தக் கந்திரகோலமெல்லாம் ஆயாச்சு” என்று அம்மா பெருமூச் செறிந்தாள். “டாக்டர் சௌரிதான் கூட்டிண்டு வந்தார். வந்தவனுக்கு நாப்பது வயசு இருக்கும். ஈச்சங்குடிலே விவசாயம் பாத்துண்டு இருந்தவன். இப்பதான் மழையே அத்துப் போயி தண்ணிக்கு வெளி லேர்ந்து ஓடி வர்ற காவேரியைத்தானே நம்பிண்டு கிடக்கு ஜனங்கள். நாலு மாசம் உதவிக்கு இருக்கட்டும்னு அழச்சிண்டு வந்தார் டாக்டர். வந்தவன் பலசாலி. உங்கப்பாவைப் பட்டுப் போலத் தூக்கி இறக்கி ஏத்தி அப்பிடி சிஷுரூட்சை பண்ணினான். எண்ணி அஞ்சு நாள்தான். கொஞ்ச நாழிக்கு மின்னே கிண்டன்னும் எதனாலேயோ ஓடிட்டான்னும் கத்தி னாரே! அவனை இருக்க விடாம அடிச்சுத் துரத்தினது இவர்தான். பகல்பூரா தூங்கிண்டுதான் இருப்பார். இன்னிக்கி என்னமோ அதிசயம் ஒரு பொட்டுத் தூக்கம் இல்லே. நேத்தி ராத்திரி பூரா தூங்கவே இல்லை. தினம் ராத்திரி தூங்காம இந்த மாதிரி நாராசமா கத்திண்டிருப்பார். அதனாலே பகல்லே அவர் தூங்கிண்டு இருக்கறச்சே அவனைக் காய்கறி வாங்க, மளிகைக்குப் போகன்னு அனுப்புவேன். ரொம்ப ஒத்தாசையா இருந்தான். வந்து அஞ்சாம் நாள் என்கிட்டே வந்தான். அம்மா, இந்த அஞ்சு நாளா உங்க கிட்டே நான் வந்து சொல்லலே. நீங்க படற கஷ்டம் போறாதான்னு என் வாயைத் தச்சுப் போட்டுக்கிட்டு கிடந்தேன். ஆனா இப்ப வேறே வழியில்லே. போறதுக்கு முன்னாலே மகாலட்சுமி நீங்க உங்க கிட்டே சொல்லிடுப் போகணும்னு தோணிருச்சு. அய்யாஎன்னைப் பாத்து பேசாத பேச்செல்லாம் பேசுவாரு. சரி வலியிலே பேசறாருன்னு விட்டிருவேன். அப்புறமா என் குழந்தைகளை என் பொண்டாட்டியைன்னு எல்லோரையும் சபிப்பாரு. என்னைத் தொடாதேடா பாவின்னா நீ கேக்க மாட்டேங்கிறே, உன் குடும்பம் என் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிட்டு நாசமாய்ப் போகன்னு கத்துவாரு. உம்பசங்க ஒருத்தனும் உருப்படமாட்டாங்கன்னு சாபம் கொடுப்பாரு. நீயும் உன் பொண்டாட்டியும் இந்த பிராமணனை இப்படிப் போட்டு நீ கொல்லு றதுக்கு தெருவிலேதான் போய் நிக்கப்போறீங்கடான்னு என் மேலே எச்சியைத் துப்புவாரு. ரெண்டு நாளைக்கி மின்னாலே என் மூத்த மகன் வேலைக்குப் போனான். ரோடு ஓரமா நடந்து போனவனை ஒரு மோட்டார் சைக்கிள்காரன் அடிச்சுக் கீழே தள்ளிட்டு ஓடிட்டான். ஆஸ்பத்திரிக்குப் போயி கட்டுப் போட்டுக்கிட்டு வந்து வீட்டிலே உக்காந்திருக்கான். பத்து நாள் நகரப்பிடாதுன்னு டாக்டர் சொல்லிட் டாராம். செலவுக்கு செலவு. மனசுக்கு நிம்மதி இல்லே. பத்துப் பதினஞ்சு நாள் கூலி போயிருச்சு. அய்யா திட்டிதான் இப்பிடி ஆச்சுன்னு நான் சொல்லலே. ஆனா அந்த நினைப்பு தானா வந்து குத்திகிட்டே இருக்குன்னு சொல்லி அழுதான். நான் என்னத்தைப் பண்ணறது? அஞ்சு நாள் சம்பளத்தோடு கூட ஒரு ஐநூறு ரூபாய் வச்சுக் கொடுத்தேன். அதுக்கப்புறம் யாரையும் இவர் வரவிட மாட்டார்னு நானே செய்ய ஆரமிச்சிட்டேன்” என்றாள் அம்மா.

சபரி “நான் இங்கே இருக்கற வரைக்கும் இதையெல்லாம் நானே செய்றேம்மா” என்றான்.

அவள் மறுத்துத் தலையை ஆட்டினாள். “உங்கிட்ட சொல்லித்தான் ஆகணும். ஹேமுவை நீ கல்யாணம் பண்ணிக்க விடாம தடுத்தி நிறுத்தினது தான் செஞ்ச பெரிய பாவம்னு அவருக்குள்ளே ஓடிண்டு இருக்கு. ஒரு தடவை என்கிட்டே சொல்லி அழுதுட்டார். நடக்கறது தானே நடக்கும். நீங்க நிறுத்தாட்டா வேறே யாராவது வந்து தடுத்து நிறுத்தியிருப்பா. ஒருத்தன் பொண்டாட்டியை இன்னொருத்தன் கட்டிக்க முடியாதுன்னு தெரியாமலா சொன்னா?ன்னேன். அவருக்கு சமாதான மாகலை. அப்படீன்னா சபரிக்குன்னு பொறந்தவளை அவன் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கான்னார். என்ன பதில் சொல்றது?” என்று சிரித்தாள். உயிரற்ற அந்தச் சிரிப்பை அவனால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை.

அன்று மாலை சபரி ஐயாறப்பர் கோயிலுக்குப் போனான். சுவாமி சன்னதியில் அதிகக் கூட்டமில்லை. தரிசனத்தை முடித்து விட்டு அம்மன் சன்னதிக்குச் சென்றான். தர்ம சம்வர்த்தினி அம்மன் சர்வாலங்கார பூஷிதையாய் நின்றாள். அன்று அஷ்டமி என்று கூட்டம். நல்ல நாள் அல்ல என்று மக்கள் ஒதுக்கி விட்ட அஷ்டமியன்று அம்மன் திருமணம் செய்து கொள்ளும் வைபவத்தைக் காணவே கூட்டம். எல்லா நாளும் நல்ல நாளே என்று சிரித்துக் கொண்டு நின்ற அம்மனிடம் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஒவ்வொரு தினமும் நல்லதினமாக ஆகக் கடாட்சம் புரியுமாறு வேண்டிக் கொண்டான். பிறகு கடைத் தெருவுக்குப் போய்ப் பழங்கள் காய்கறிகள் வாங்கினான். வரும் வழியில் ஒரு எலெக்ட்ரிக் ஷாப்பில் பல்பு வாங்கிக் கொண்டான். வீட்டுக்குள் நுழைந்த போது வீடு அமைதியாக இருந்தது. அப்பாவின் அறைக்கதவை மெல்லத் திறந்து பார்த்த போது அவர் கண்களை மூடியபடி படுத்திருந்தார். வலது கால் லேசாக ஆடிக் கொண்டிருந்தது. காமிரா உள்ளில் அம்மா ஏதோ சுலோகம் சொல்லும் குரல் கேட்டது. முகம் அலம்பி விட்டு தலை வாரிக் கொள்ள அங்கே வந்திருப்பாள் என்று சபரி நினைத்தான். அவன் கையி லிருந்த பைகளை சமையல் அறைக்குள் சென்று வைத்து விட்டு பூஜை அறைக்குச் சென்றான். அம்மா இன்னும் வந்து விளக்கேற்றாததால் வெளி வெளிச்சத்தையும் மீறி அறையினுள் இருட்டு குடியிருந்தது.

இருட்டில் லேசாகத் தடுமாறிக் கொண்டு போய்க் கை எட்டும் தூரத்தில் உயரே தொங்கிக் கொண்டிருந்த ஹோல்டரில் பல்பைச் சொருகினான். இரண்டு மூன்று தடவை முயற்சித்த பின் அது சரியாக உட்கார்ந்து கொண்டது. அவன் மர பீரோவை நெருங்கினான். அதன் பின்புறம் கையை நுழைத்து சுவிட்சைத் தேடினான். அப்போது அறையுள் ஸ்லோகக் குரலுடன் அம்மா நுழைந்தாள்.அவன் அவளை அந்த இருட்டில் கலவரப்படுத்த வேண்டாம் என்று பீரோவின் பின்னே நகர்ந்து நின்றான்.

அம்மா சுலோகத்தைத் தொடர்ந்து கொண்டே சுவாமி மேடையில் இருந்த விளக்கில் எண்ணெய் ஊற்றி அங்கிருந்த தீப்பெட்டியை எடுத்தாள். விளக்கேற்றினாள். பழக்கப்பட்ட இருட்டு என்று சரளமாக அவள் காரியம் செய்கிறாள் என்று சபரி நினைத்தான். அப்போது அவள் குரல் நின்று விட்டதால் சுலோகம் முடிந்து விட்டது போல என்று சபரி நினைத்தான். திடீரென்று அம்மாவின் குரல் கேட்டது. “தாயே புவனேச்வரி. இப்பிடி வாய் விட்டுக் கேக்க வச்சிட்டியேன்னு நான் அழலை. நானும் தினமும் உன்கிட்டே மன்னாடிண்டுதான் இருக்கேன். இந்த மனுஷன் படர பாடு அவராலே தாங்கிக் கொள்ளவே முடியாதபடி இருக்கே. நீதான் கருணை காட்டணும், மனசு வக்யணும். சீக்கிரம் அவரைக் கொண்டு போயிடும்மா. அதை நான் தாங்கிண்டுடுவேன். ஏன்னா எனக்கு அப்புறம் அவரைப் பாத்துக்க யாரும் வரமாட்டா. வந்தாலும் அவரைப் பாத்துக்க அவர் விடமாட்டார். அப்புறம் அவருக்கு உயிரோடேயே நரகம்தான். அதை என்னாலே நினைச்சக் கூடப் பாக்க முடியலே. சர்வேஸ்வரி நீதான் எல்லோருக்கும் நல்லது பண்ணறவ. இவரை சீக்கிரம் நாளேக்கே கூட கூட்டிண்டு போயிடு.”

அம்மா விசும்பும் சத்தம் கேட்டது. சற்றுக் கழித்து எழுந்து அவள் வெளியே சென்றாள் . ஆடாமல் அசையாமல் எரியும் குத்துவிளக்கின் திரியைப் பார்த்தபடி சபரி அரையிருட்டில் நின்றான்.

கற்றது

ஸிந்துஜா

கிருத்திகா ஆறு மணிக்கு எழுந்து பாத்ரூம் சென்று விட்டு அவள் அறைக்குள் வந்த போது டிரஸ்ஸிங் டேபிள் மீது பால் டம்ளர் இருந்தது. அதன் மீது பால் ஆறி விடாமல் இருக்க ஒரு சிறிய தட்டு மூடியிருந்தது. இந்த வீட்டுக்கு அவள் திருமணமாகி வந்து கிட்டத் தட்ட ஆறு மாதங்கள் ஆகின்றன. ‘தினமும் இப்படிச் செய்யாதீர்கள்’ என்று அவளது மாமியாரிடம் பல விதங்களில் அவள் மன்றாடியும் மாமியார் மசியவில்லை. தன் வார்த்தைகள் அலுப்புற்றுத் தம் நிறத்தை இழந்து விட்டதை அறிந்த ஒரு நாளில் அவள் தனது மன்றாடலை நிறுத்தி விட்டாள்.

கிருத்திகா பாலைக் குடித்து விட்டு கொல்லைப்புறம் சென்று கிணற்றடியில் ஏற்கனவே கிடந்த பாத்திரங்களுடன் பால் டம்ளரையும் மூடியையும் போட்டாள். உள்ளே வந்த போது அந்த நேரத்துக்கு சமையற்கட்டிலிருந்து வரும் பாத்திரங்களின் கடபுடா சத்தம் கேட்கவில்லை. கூடத்தில் அவள் மாமியார் லலிதா உட்கார்ந்திருந்தாள். கிருத்திகாவைப் பார்த்ததும் கையிலிருந்த தினமணியைக் கீழே போட்டு விட்டு “மறுபடியும் காஸ் விலையை நூறு ரூபாய் ஏத்திட்டான்” என்றாள்.

“காஸ் அடுப்பு இலவசம்னு கொடுத்துட்டு காஸ் விலையா அதை திரும்ப எடுத்துண்டுடறா இல்லே?” என்று கிருத்திகா கேட்டாள்.

“கெட்டிக்காராதான்” என்று உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தாள் லலிதா. “இன்னிக்கி அடுப்பைக் கட்டிண்டு அழவேண்டாம். காஸ் மிச்சம். பதினோரு மணிக்குதானே உன் பாட்டு டீச்சராத்து கிருகப் பிரவேசம்?”

ஆமென்று கிருத்திகா தலையை ஆட்டினாள். பாட்டு டீச்சர் கிருத்திகாவின் வீட்டுக்கு வந்து பத்திரிகை கொடுத்த போது லலிதாவைப் பார்த்து “நீங்க கண்டிப்பா வரணும்” என்று நாலைந்து தடவை வற்புறுத்தி அழைத்து விட்டுப் போனாள் .

“எப்ப கிளம்பலாம்?” என்று லலிதா கேட்டாள்.

“கார்த்தாலே டிபனுக்கே அங்க வந்துடணும்னு படிச்சுப் படிச்சு சொல்லிட்டுப் போனாம்மா!”

“அப்ப, எட்டு எட்டரைக்குப் போனா சரியாயிருக்கும். என்ன, கொஞ்சம் அவதி அவதின்னு குளிச்சு ஸ்வாமி நமஸ்காரம் பண்ணிட்டுக் கிளம்பணும். நான் போய் முதல்லே குளிச்சிடறேன்”‘ என்று சொல்லி விட்டு அவள் பதிலை எதிர்பார்க்காமல் லலிதா வீட்டின் உள்ளே சென்றாள். அரை மணியில் கிருத்திகாவும் தயாராகி விட்டாள். கூடத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு முந்தின இரவு விவாதம் என்ற பெயரில் அர்னாப் போட்ட கூச்சலை மறு ஒளிபரப்பிக் கொண்டிருந்த டி.வி.யை மியூட்டில் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். லலிதா
அவளுடைய அறையிலிருந்து இன்னும் வெளி வரவில்லை. மேக்கப்பின் கடைசிக் கட்டத்தில் இருப்பாளாய் இருக்கும் !

“கிருத்திகா, ரெடியா? ” என்று லலிதா அவள் அறையிலிருந்து குரல் கொடுத்தாள்.

“நான் ரெடிம்மா” என்று கூடத்திலிருந்து சொன்னாள் கிருத்திகா. அவள் அங்கே முன்னேயே வந்து காத்திருப்பதைத் தன் பதிலில் காட்டவில்லை.

லலிதா அறையிலிருந்து வெளியே வந்த போது கிருத்திகா அவளையே கண் கொட்டாமல் ஒரு நிமிஷம் பார்த்தாள். இவளைப் பார்த்தால் ஐம்பத்திரெண்டு வயதுக்காரி என்று யாராவது சொல்வார்களா? அரைமணி நேரத்துக்கு மேல் எடுத்துக் கொண்ட அலங்காரம் அவளது வயதில் பத்து வருஷத்தைக் குறைத்து விட்டது. தலையில் ஓரிரு இடங்களில் மூக்கை நீட்டிய வெள்ளையை நிறம் மாற்றி விட்டிருந்தாள். இளமையாகத் தெரிய அவள் மேற்கொண்ட முயற்சிகள் வீணாகி விடவில்லை என்று கிருத்திகாவுக்குத் தோன்றியது. எடுப்பான முகம். ஓரளவு சதை போட்ட பருமனை அவளது உயரம் வெளிக்காட்டாமல் தடுத்தாட் கொண்டு விட்டது. கிருத்திகா இந்த வீட்டில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பே சின்ன வயசில் அவள் மாமியார் அழகியாக நடமாடியதைப் பற்றி எல்லோரும் சொன்னார்கள். அந்த வயதில் அவள் பல உள்ளங்களை ஏங்க வைத்திருக்கக்கூடும். அவையெல்லாம் இன்னும் தனது மாமியார் மனதில் குடி கொண்டிருக்கின்றனவா?

தன் சிந்தனை செல்லும் வழியைத் தடுத்து கிருத்திகா தலையை உதறிக் கொண்டாள்.

“எதுக்கு அப்படி மலைச்சுப் போய் நிக்கறே? டிரஸ் மேட்சிங்கா இல்லையா? பொட்டு, மைன்னு ஏதாவது ஈசிண்டு இருக்கா?” என்று கேட்டாள் லலிதா.

“நான் உங்களோட வரணுமான்னு யோசிச்சிண்டு இருக்கேன்” என்று கிருத்திகா மாமியாரைப் பார்த்தாள்.

“என்னது?”

“என் கண்ணே பட்டுடும் போலிருக்கு” என்று லலிதாவிடம் சொன்னாள்.

லலிதா பெருமையுடன் தன்னை ஒரு முறை பார்த்தபடி “போதும். ரொம்பதான் காலை வாராதே. நாழியாச்சு, கிளம்பலாமா?” என்று கிருத்திகா அருகில் வந்து அவள் சூடியிருந்த மல்லிகைச் சரத்தைச் சரி செய்தாள்.

அவர்கள் விசேஷம் நடக்கும் வீட்டை அடைந்தார்கள். வாசலில் இருந்த கேட்டுக்கு முன்னால் செம்மண் தெருவில் சிறு பையன்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். உள்ளே நுழைந்த போது வாசலின் இருபுறமும் சிறிய வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்தன. மாவிலைகளும் புஷ்பங்களும் நிரம்பிய தோரணம் வாசலின் இரு கதவுகளுக்கு இடையே தொங்கிக் கொண்டிருந்தது. .அங்கிருந்த ஒரு சிறுவன் “விடும்மா விடும்மா” என்று தன் தாயின் கையிலிருந்து விடுதலை பெற முண்டிக் கொண்டிருந்தான். அவனது அம்மா “அதோ அந்தக் கேட்டுக்கு வெளியிலே கறுப்புக் கோடு இருக்கில்லே. அதைத் தாண்டிப் போய் நீ விளையாடினே உன்னைப் பெலி வச்சிருவேன்” என்று கடுமையான குரலில் எச்சரித்து விடுவித்தாள். இதே அளவு கடுமை கலந்த எச்சரிக்கைக் குரலை அன்றொரு நாள் லட்சுமணன் கேட்டிருந்தால் கோட்டை மீறி இருக்க மாட்டான் என்று கிருத்திகா சிரித்துக் கொண்டே உள்ளே சென்றாள். நாதஸ்வரக்காரர் கல்யாண வசந்தாவில் ராக லோலுடையை இழைத்துக் கொண்டிருந்தார்.

“வாங்கோ, வாங்கோ” என்று அவர்களை வரவேற்கும் குரல் கேட்டது. பாட்டு டீச்சரின் பெண். கிருத்திகா அவளைப் பார்த்து “ஹாய் பத்மா!” என்றாள்.

பிறகு அவளிடம் “இவா என் மாமியார்.” என்று அறிமுகப்படுத்தினாள்.

பத்மா லலிதாவைப் பார்த்துப் புன்னகையுடன் கைகூப்பினாள்.

அப்போது “ஏய் கிருத்தி” என்று குரல் கேட்டது. கிருத்திகா. திரும்பிப் பார்த்தாள். விமலா. அவளது பால்ய சிநேகிதி. இருவரும் சேர்ந்துதான் பாட்டு டீச்சரிடம் கற்றுக் கொண்டார்கள்.

விமலாவின் கையைப் பிடித்துக் குலுக்கினாள் கிருத்திகா. “ஹலோ விமலா அக்கா!” என்று பத்மாவும் அவளைப் பார்த்துச் சிரித்தாள்.

விமலா லலிதாவைப் பார்த்து ” மாமி,எப்படியிருக்கேள்?” என்று கை குவித்துக் கேட்டாள்.

“நன்னாயிருக்கேன். நீ எப்படியிருக்கே?” என்று கேட்டாள் லலிதா.

“ஐ’ம் குட் . ஆனா மாமி, நீங்க உங்க இளமையின் ரகசியம் என்னன்னு இன்னிக்கி சொல்லியே ஆகணும்” என்றாள் விமலா.

“சும்மா கிண்டல் பண்ணாதே” என்றாள் லலிதா சிரித்தபடி.

“நிஜமாத்தான் மாமி. யூ ஆர் லுக்கிங் பியூட்டிஃபுல்.”

“சரி போ. உனக்கு ஒரு தாங்க்ஸ் தரேன்” என்று புன்னகை செய்தாள் லலிதா. ..

விமலா கிருத்திகாவிடம் “உன்னோட புடவை ரொம்ப சூப்பரா இருக்கே. எங்கே வாங்கினே? த்ரெட் போட்டு நெளி டிசைன்லே அழகாப் பண்ணியிருக்கான். எப்படித்தான் உனக்குன்னு பொறுக்கி எடுத்துண்டு வரியோ?” என்றாள்.

“சபையர் ப்ளூ கலரும் உங்க உடம்புக் கலருக்கு ரொம்பவே எடுப்பா மேட்சிங்கா இருக்கு அக்கா” என்றாள் பத்மா.

“தாங்க்ஸ். மல்லேஸ்வரம் நல்லிலதான் வாங்கினேன்” என்றாள் கிருத்திகா. “எவ்வளவு விலை இருக்கும்னு நினைக்கிறே விமலா?”

“அஞ்சு, இல்லே ஆறு?” என்று கேட்டாள் விமலா.

“இல்லே. மூவாயிரத்து ஐநூறு.”

“ஏய் சும்மா டூப் விடாதேடி” என்று நம்ப முடியாதவளாகப் புடவையை விமலா இன்னொரு முறை பார்த்தாள்.

“நிஜமா விமலா. காட் ப்ராமிஸ்!”.

விமலா லலிதாவைப் பார்த்து “மாமி, உங்க மாட்டுப் பொண்ணு அழகு மட்டுமில்லே. ரொம்பக் கெட்டிக்காரியும் கூட” என்றாள்.

லலிதா புன்முறுவல் பூத்தாள்.

“முதல்லே டிபன் சாப்பிட்ருங்கோ. அப்புறம் ஹாலுக்குப் போகலாம்” என்று பத்மா அவர்களை டைனிங் ஹாலுக்குக் கூட்டிக் கொண்டு போனாள். லலிதாவுக்கும் கிருத்திகாவுக்கும் நடுவில் உட்கார்ந்து கொண்டாள் விமலா.

“விமலா, நீ மட்டும் தனியா வந்திருக்கே. எங்கே கோபி?” என்று கிருத்திகா கேட்டாள்
.
“அவருக்கு பாஸ் சிகாகோலேதானே? கார்த்தாலே ஏழு மணியிலிருந்து எட்டு மணி வரைக்கும் மீட்டிங். அதை முடிச்சிட்டு வரேன் போன்னு என்னை அனுப்பிச்சிட்டார்” என்றாள் விமலா.

பிறகு அவள் லலிதாவிடம் “எங்கே மாமாவும் கிருத்தி ஆத்துக்காரரும் வரலே?” என்று கேட்டாள்.

லலிதா “மாமா அவர் சிநேகிதர் பையன் கல்யாணம்னு திருச்சிக்குப் போயிருக்கார். இன்னிக்கும் நாளைக்கும் நல்ல முகூர்த்த நாளாமே ராஜா நாளைக்குத்தான் டெல்லிலேர்ந்து வரான்” என்றாள்.

“இந்த ஃபங்க்ஷன் இல்லேன்னா நாங்க ரெண்டு பேரும் திருச்சிக்கும் டெல்லிக்கும் போயிருப்போம்” என்று சிரித்தாள் கிருத்திகா.

அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு வந்த ஒரு பெண்மணி “அப்படி நாங்க உங்களைப் போக விட்டுடுவோமா?” என்று அவர்களுக்கு எதிரில் வந்து நின்றாள்.

“என்ன சித்தி, அக்காவோட கிருகப்பிரவேசத்துக்கு புதுசா மூக்குத்தி வாங்கிப் போட்டுண்டேளா?” என்றாள் விமலா. வாயாடி.

“ஆமா. இந்த அரதப் பழசை நீதான் மெச்சிக்கணும்” என்று பாட்டு டீச்சரின் தங்கை சங்கரி கூறினாள். பிறகு கிருத்திகாவைப் பார்த்து “எப்படி இருக்கே கிருத்தி? உன்னைப் பாத்து நாலஞ்சு மாசம் இருக்குமா? இந்த கல் வச்ச நெக்லஸ் உன்னைத் தூக்கலா காமிக்கிறதே ! இதை விட்டுட்டு என் தேஞ்ச மூக்குத்தியைப் புகழறது பார் இந்தப் போக்கிரி” என்று செல்லமாக விமலாவைத் திட்டினாள்.

“கிருத்தியோட அழகைப் புகழறதுக்கு எனக்கு ஒரு நாள் போறாது!” என்றாள் விமலா. “அது இருக்கட்டும். தங்கையோட நெக்லஸைப் பத்தி இவ்வளவு விஜாரிக்கிறேள். அவ அக்காவைப் பார்த்து ஒரு வார்த்தை கூடக் கேக்கலையே?”

“கிருத்தியோட அக்காவா?” என்று சங்கரி சற்றுக் குழம்பினாற் போல நின்றாள்.அவள் பார்வை அங்குமிங்கும் அலைந்து லலிதாவின் மேல் நின்றது.

விமலா “இவாளைத்தான் சொல்றேன்” என்றாள்.

சித்தி லலிதாவைப் பார்த்து “சாரி, நான் இதுக்கு முன்னாலே உங்களைப் பாத்ததில்லே. நீங்களும் இந்த ஊர்லேதான் இருக்கேளா? கிருத்தி சொன்னதே இல்லையே?” என்றாள்.

பத்மா பொறுக்க முடியாமல் சிரித்து விட்டாள்.

“சீ சனியனே, என்ன விளையாட்டு இது?” என்று லலிதா பொய்க் கோபத்துடன் விமலாவைத் திட்டினாள். சங்கரியிடம் கிருத்திகா புன்னகையுடன் “அவா என் மாமியார்” என்றாள்.

“அப்படியா?”என்று திகைப்பு தழுவிய கண்களுடன் சங்கரி லலிதாவைப் பார்த்தாள்.

“அப்ப நீங்க கிருத்தி வயசானவ மாதிரி இருக்கான்னு சொல்றேள்?” என்று விமலா சங்கரியைச் சீண்டினாள்.

“அடச்சீ, சும்மாயிரு. குழந்தையையும் கிள்ளி விட்டுக் கிழவன் தொட்டிலையும் ஆட்டினானாம்” என்றாள் லலிதா விமலாவிடம்.

“”முதல்லே ஒரு நிமிஷம் நம்பிட்டேன். ஆனா இப்ப தெரியறதே கொஞ்ச வயசு வித்தியாசம்.” என்றாள் சங்கரி சமாளித்துக் கொண்டு. “இது இருக்கே, ரொம்பப் பொல்லாதது. சரி. நா வரேன். சாப்பிட்டு விட்டு ஹாலுக்கு வாங்கோ” என்று சிரித்தபடி நகர்ந்தாள். பத்மாவும் அவளுடன் சென்றாள்.

அப்போது விமலாவின் கணவன் கோபி அவர்கள் இருக்குமிடத்துக்கு வந்தான்.

“வா கோபி, சௌக்கியமா? இங்கே உக்காரு” என்று லலிதா தனக்கு அருகில் இருந்த நாற்காலியைக் காட்டினாள்.

“இல்லே, எனக்கு ஒண்ணும் சாப்பிட வேண்டாம். நீங்க சாப்பிட்டு முடிச்சப்புறம் காப்பி குடிக்கிறப்போ நானும் எடுத்துக்கறேன்” என்று அவர்கள் எதிரே நின்று கொண்டான்.

மற்ற மூவரும் சாப்பிடுவதில் கவனம் செலுத்தினார்கள். பதார்த்தங்களின் வாசனை நாசியையும், ஆசை நாக்கையும் தூண்டி விட்டன.

“கேசரி ரொம்ப நன்னாயிருக்கில்லே? யார் சமையக்காராளாம்?” என்று கேட்டாள் லலிதா.

“எல்லாம் நம்ம மல்லேஸ்வரம் ரக்ஷிதாதான் ” என்றாள் விமலா.

“எப்பவும் அவா ஸ்டாண்டர்ட் மெயின்டெய்ன் பண்றா இல்லே?” என்று கேட்டாள் லலிதா.

“ஆனா கேசரிக்குக் கிருத்தியை யாரும் பீட் அடிச்சுக்க முடியாது” என்றான் கோபி.

லலிதா சாப்பிடுவதை நிறுத்தி விட்டுக் கோபியைப் பார்த்தாள்.

“சும்மா கிண்டல் பண்ணாதீங்கோ கோபி,” என்றாள் கிருத்திகா.

“இதிலே என்ன கிண்டலும் கேலியும்? நன்னாப் பண்ணினான்னா நன்னா இருக்குன்னுதானே சொல்லணும் !” என்ற கோபி லலிதாவைப் பார்த்து “ஒரு நா நானும் விமலாவும் ராஜாவைப் பார்க்கலாம்னு உங்காத்துக்கு வந்தோம். அப்ப நீங்களும் மாமாவும் ஏதோ விசேஷம்னு மதுரைக்குப் போயிருந்தேள். பொழுது போகாம போராடிக்கிறதேன்னு பண்ணினதா கேசரி கொண்டு வந்து கொடுத்தா அன்னிக்கி. அந்த கேசரி இன்னும் நாக்கிலே நிக்கறது. சூப்பர்ப்” என்றான். விமலா லலிதாவைப் பார்த்தாள். அவள் சாப்பிடுவதில் கவனமாக இருந்தாள்.

அப்போது ஒரு பரிசாரகர் “ஏதாவது வேணுமா?கேட்டு வாங்கிச் சாப்பிடுங்கோ” என்று சொல்லியபடி அவர்களைக் கடந்தார்.

லலிதா அவரிடம் “மாமா, இன்னும் கொஞ்சம் கேசரி போடுங்கோ” என்றாள்.

“ஓ, திவ்யமா” என்று அவர் போய்க் கேசரியை எடுத்துக் கொண்டு வந்து அவள் இலையில் போட்டார்.

அவர்கள் காப்பி குடித்து விட்டுப் பூஜை நடக்கும் இடத்துக்குச் சென்றார்கள். புகைக்கு நடுவே சாஸ்திரிகளும், வந்திருந்த ஜனமும் இரைச்சலை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். பாதிப் பேர் உள்ளேயும் மீதிப் பேர் வெளியேயும் நின்றும் உட்கார்ந்தும் பேசிக் கொண்டிருந்தார்கள். சந்தனம், குங்குமம், ஊதுபத்தி, சாம்பிராணி மணங்களுக்குப் போட்டியாக இன்டிமேட்டும், சானலும் ஹாலை ஊடுருவியிருந்தன.

பூஜை முடிவதற்கு பனிரெண்டு மணியாகி விட்டது. பாட்டு டீச்சரும் அவள் கணவரும் ஹாலில் அமர்ந்தவர்களை வரவேற்றபடி வந்தார்கள். பாட்டு டீச்சர் கிருத்தியும் லலிதாவும் உட்கார்ந்திருந்த இடத்துக்கு வந்த போது லலிதாவைப் பார்த்து அகலமாகக் கண்களை விரித்துத் தன்
மகிழ்ச்சியைக் காண்பித்தாள். அவர்களருகில் வந்து லலிதாவின் கையைப் பிடித்துக் கொண்டு “பெரியவாளா வந்து நீங்க ஆசிர்வாதம் பண்ணினதுக்கு ரொம்ப தேங்க்ஸ்” என்றாள்.

“நாங்கதான் உங்களுக்கு தேங்க் பண்ணனும். எல்லாம் இவ்வளவு ஜோரா ஏற்பாடு பண்ணி நாக்குக்கு ருசியாப் போட்டு அமர்க்களம் பண்ணிட்டேள். வீடு பாக்க ரொம்ப அழகாயிருக்கு” என்றாள் லலிதா. கையில் கொண்டு வந்திருந்த பரிசுப் பொருளைப் பாட்டு டீச்சரிடம் கொடுத்தாள்.

அதை வாங்கிக் கொண்ட டீச்சர் கிருத்திகாவுக்கு இடது பக்கத்திலிருந்த பெண்மணியிடம் “அக்கா, இவ என் ஸ்டூடன்ட். கிருத்திகான்னு பேரு. இவளுக்குக் குரல்னா அப்படி ஒரு குரல் ! மேடையேறிப் பாடினா இன்னிக்கி ஃபேமஸா இருக்கற இவ வயசுப் பாடகில்லாம் ரொம்ப தூரம் பின்னாடி போய்தான் நிக்கணும். ஆனா மேடையேற மாட்டேன்னு அப்படி ஒரு பிடிவாதம். மியூசிக்கோட நுணுக்கத்தையெல்லாம் கத்துக்கணும்னு ரிசர்ச் ஸ்காலரா ஆயிண்டிருக்கா,” என்று குரலில் பெருமையும் ஏக்கமும் வழியச் சொன்னாள். கிருத்திகாவிடம் “இவா என் நாத்தனார். கோமளான்னு பேர். கோலார்லே பாத்துக்க யாரும் இல்லாத வயசான பொம்மனாட்டிகளுக்குன்னு ஒரு ஆச்ரமம் நடத்திண்டு வரா” என்றாள்.

அந்த வயதான பெண்மணியின் முகத்தில் சாந்தம் நிலவியிருந்தது. பாட்டு டீச்சர் சொன்னதைக் கேட்டு சிரித்த போது அவள் கண்களும் சேர்ந்து சிரித்தன. கிருத்திகா அந்த அம்மாளைப் பார்த்துக் கைகூப்பி நமஸ்கரித்தாள்.

“மனுஷாளுக்குக் கடவுள் கொடுத்திருக்கிற பலஹீனங்கள்லே புகழ்ச்சியும் ஒண்ணுதானே? புகழறவா புகழப்படறவா ரெண்டு பேருமே ஒரு தராசோட ரெண்டு தட்டு மாதிரிதான். இந்த சின்ன வயசிலே உனக்கு இப்படித் தெளிவா இருக்கணும்னு தோணறதே பெரிய விஷயம்னா ! உன்னைப் பாத்ததிலேர்ந்து இவ்வளவு களையா இருக்கே இந்தப் பொண்ணுன்னு நினைச்சிண்டே இருந்தேன்..அக அழகு முக அழகுன்னு பெரியவா தெரியாமலா சொன்னா?” என்று அந்த அம்மாள்
கிருத்திகாவைப் பார்த்துச் சொன்னாள்.

கூச்சத்தில் கிருத்திகா நெளிந்து நின்றாள்..அவள் பார்வை விமலா மீது விழுந்தது. விமலா அந்த அம்மாளையும் லலிதாவையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

லலிதா எழுந்து கையில் கட்டியிருந்த வாட்சைப் பார்த்தபடி “அப்ப நாங்க உத்தரவு வாங்கிக்கிறோம்” என்றாள் பாட்டு டீச்சரிடம்.

டீச்சர் “இருந்து சாப்பிட்டு விட்டு வெத்தலை பாக்கு வாங்கிண்டு போங்கோ. .அடி பத்மா, மாமியை டைனிங் ஹாலுக்கு கூட்டிண்டு போ” என்று பெண்ணைக் கூப்பிட்டாள்.

அவர்கள் வீட்டுக்குத் திரும்பும் வழியில் “ஒரே அசட்டுப் பிசட்டுக்கூட்டம். இல்லே?” என்றாள் லலிதா.

கிருத்திகாவுக்கு ஒன்றும் புரியவில்லை.

“ஒருத்தியாவது பாக்கறபடி இல்லே.ஒரே பங்கரை மூஞ்சி.”

இவளுக்கு என்ன வந்து விட்டது என்று கிருத்திகா ஆச்சரியப்பட்டாள்.

“விமலா ஒருத்திதான் பேசினா கேக்கறபடி இருந்தது. மத்ததெல்லாம் ஏண்டா வாயைத் திறக்கிறதுன்னு தோணிடுத்து” என்றாள் லலிதா. அவள் குரலில் லேசான ஆங்காரம் தென்பட்டது.

ஏதாவது பதில் சொல்லியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் தள்ளப்பட்டவளாக “விமலா எப்பவுமே ரொம்பக் கெட்டிக்காரி” என்றாள் கிருத்திகா.

லலிதா “ஆனா அவ ஆம்படையான்தான் கொஞ்சம் தத்துப் பித்து. ‘நான் சாப்பிடலே, நின்னுண்டு இருக்கேன்’னு சொல்லிட்டு அங்கையும் இங்கையும் பொண்களை ஒரக் கண்ணாலே பாத்து அசடு வழிஞ்சிண்டு இருந்தான். நீ கவனிச்சயோ?” என்று கேட்டாள்.

கிருத்திகாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது. கோபி இந்த மாதிரி என்று எப்போது லலிதா கவனித்தாள்? தனக்குத் தெரிந்த வரை கோபி அப்படிநடந்து கொள்ளவில்லையே என்று கிருத்திகாவுக்குத் தோன்றியது. ஆனால் இப்போது ஒன்றும் பேசாமல் இருப்பதுதான் உத்தமம். வீட்டை அடைந்ததும் திடீரென்று லலிதா “எனக்குத் தலையை வலிக்கிறது. போய்ப் படுத்துக்கறேன்” என்று அவளறையை நோக்கிச் சென்றாள்

நாலைந்து நாள் போயிருக்கும். கடைத் தெருவில் மாலையில் எதிர்பாராவிதமாக விமலாவைக் கிருத்திகா சந்தித்தாள்.

“என்ன இது ஒண்டியா? கர்ணனோட கவசகுண்டலம் மாதிரி எப்பவும் மாமியோரடன்னா ஒட்டிண்டு வருவே நீ?” என்று சிரித்தாள் விமலா. “லலிதா மாமி எப்படி இருக்கா?”

“கொஞ்சம் உடம்பு சரியில்லேன்னு ஆத்துலேதான் இருக்கா” என்றாள் கிருத்திகா.

” உடம்பா? மனசா?”

கிருத்திகா ஆச்சரியத்துடன் சிநேகிதியைப் பார்த்தாள்.

“எப்போலேர்ந்து சரியில்லே? பாட்டு டீச்சரராத்துலே பாத்தோமே அன்னிலேர்ந்தா?” என்று கேட்டாள் விமலா.

கிருத்திகா பதில் எதுவும் சொல்லவில்லை.

“அன்னிக்கே எனக்குத் தெரிஞ்சது.வந்தவா போனவா எல்லாரும் உனக்கு வாயாலே பூச்சூட்டி விட்டுண்டு போறச்சேயே நினைச்சேன்.”

“என்னன்னு?” என்றாள் கிருத்திகா.

விமலா பதில் சொல்லவில்லை.

“அன்னிக்கி வந்தவாளைப் பத்தி என்னென்ன கமெண்ட் எல்லாம் அடிச்சா உன்னோட மாமியார்?”

“உன்னை ஓகோ ஓகோன்னு புகழ்ந்து தள்ளிட்டா” என்று கிருத்திகா விமலாவைப் பார்த்து சிரித்தாள்.

“கோபியைப் பிடிச்சிருக்காதே. ஏன் பாட்டு டீச்சர், அவ சொந்தக்காரா, தெரிஞ்சவா பத்தியெல்லாம் புகழ்ந்தா தள்ளினா?” என்று கேட்டாள் விமலா.

கிருத்திகாவுக்கு ஆச்சரியம் தாளவில்லை. இவள் ஏதோ லலிதா பேசும் போது கூடவே இருந்தவள் மாதிரி அல்லவா எல்லாவற்றையும் பிட்டுப் பிட்டு வைக்கிறாள் !

“கிருத்தி! உனக்குக் கல்யாணமான இந்த ஆறு மாசத்தில் உங்க மாமியாரோட எத்தனை விசேஷத்துக்குப் போயிருப்பே?”

“ஏன், நிறைய விசேஷத்துக்குப் போயிருக்கேன்!” என்றாள் கிருத்திகா.

“உங்காத்து விசேஷத்துக்கு?” என்று மேலும் கேட்டாள் விமலா.

“ரெண்டு தடவையோ என்னமோ போயிருக்கேன். ”

“வெளி விசேஷம்னு உனக்குத் தெரிஞ்சவான்னு பாட்டு டீச்சராத்து விசேஷத்துக்கு வந்ததுதான் ஃபர்ஸ்ட்.டைம். இல்லியா?” என்று கேட்டாள் விமலா..

“ஆமா.”

“அதனாலதான்” என்று சொல்லியபடியே கிருத்திகாவின் கையைப் பற்றிக் கொண்டாள் விமலா.

கிருத்திகாவுக்கு ஏதோ புரிவது போலிருந்தது.

“இப்ப உன் மேலே கோபமா, மனஸ்தாபமா இருக்காளா உன்னோட மாமியார்?”

“அப்படின்னு காட்டிக்கலே .ஆனா கொஞ்சம் வித்தியாசமாத்தான் இருக்கா” என்றாள் கிருத்திகா. ” இதனால எனக்கு ஒரு ரிலீஃப் கிடைச்சது.”

“அதென்ன கண்ராவி?” என்று ஆச்சரியப்பட்டாள் விமலா.

“டெய்லி கார்த்தாலே என் ரூம்லே வந்து பால் கொடுத்துட்டுப் போவா. நான் வேண்டாம் வேண்டாம்னு அடிச்சுண்டாலும் கேக்க மாட்டா. .இப்ப அதை நிறுத்திட்டா” என்றாள் கிருத்திகா.

விமலா அதைக் கேட்டுச் சிரித்தாள்.

இது நடந்த பின் வந்த வெள்ளிக் கிழமையன்று கிருத்திகாவின் வீட்டில் சத்தியநாராயணா பூஜா நடந்தது. நெருங்கிய சொந்தங்களும், பக்கத்து வீடுகளில் இருந்த சில வயதான சுமங்கலிகளும் வந்திருந்தார்கள். பூஜை பத்து மணிக்கு ஆரம்பித்துப் பனிரெண்டரைக்கு முடிந்தது. வந்திருந்தவர்கள் பூஜையை திருப்திகரமாக நடத்தியதாய் லலிதாவைப் பாராட்டினார்கள். பக்கத்து வீட்டுக் கல்யாணி மாமி, லலிதாவிடம் அவள் அணிந்திருந்த பட்டுப் புடவையைப் பார்த்து “மடிசார்லே மாமி அழகா இருக்காளா, இல்லே மாமி கட்டிண்டு இருக்கறதாலே மடிசார் அழகா இருக்கா?” என்று சொன்னதைக் கேட்டு லலிதா மற்றவர்களுடன் சேர்ந்து சிரித்தாள்.

“எங்கே மாட்டுப் பொண்ணைக் காணோம்?” என்று மங்களா மாமி கேட்டாள் .

அப்போது சமையல் அறையிலிருந்து கிருத்திகா வந்தாள். மஞ்சள் வாயில் புடவையும், அதே நிறத்தில் ரவிக்கையும் அணிந்திருந்தாள்.

“இன்னிக்கி பூஜை சாப்பாடு உன் கைப்பாகமா?” என்று மங்களா கேட்டாள்.

“கேலி பண்றேளா ! எல்லாம் அம்மா கை ஜாலம். கல்யாணத்திலே எல்லாம் நளபாகமா பண்றவருக்கு ஒரு எடுபிடி இருப்பார் இல்லியா? அதுமாதிரி நான். அம்மாவோடது பெரிய கை. அனுபவம் ஓடி ஓடி அந்தத் தழும்பு ஏறியிருக்கிற கை. நானெல்லாம் கத்துக்குட்டி. அம்மா
கிட்டேர்ந்து கத்துக்க எவ்வளவோ இருக்கு. கொஞ்சம் கொஞ்சமா கத்துண்டுடுவேன்” என்று சிரித்தாள் கிருத்திகா. “சமையல்லே உப்பு ஓஒரப்பு குறைச்சோ, கூடவோ இருந்தா என்னைத் திட்டுங்கோ.”

“தேவலையே! மாட்டுப் பொண்ணை நன்னா தயார் பண்ணிருக்கே லலிதா” என்று கிருத்திகாவின் மாமனாரின் சித்தி சொன்னாள்.

“நீங்கள்லாம் எங்களைத் தயார் பண்ணலையா? அது மாதிரிதான்” என்றாள் லலிதா புன்னகையுடன்.

எல்லோரும் சாப்பிட்டு விட்டுக் கூடத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போது சமையலறையில் பாத்திரங்களை ஒழித்து வைத்துக் கொண்டிருந்த கிருத்திகாவிடம் அவளுடைய அத்தை வந்தாள். மிக மெல்லிய குரலில் “ஏண்டி உனக்குக் கட்டிக்க வேறே புடவையே கிடைக்கலையா இன்னிக்கின்னு பாத்து?” என்று கேட்டாள்.

“ஏன் அத்தை? இந்தப் புடவைக்கு என்ன? அழகாய்த்தானே இருக்கு. ரவிக்கை கூட ரொம்ப மேட்ச்சிங்கா இருக்கே!” என்றாள்.

“உங்காத்து வேலைக்காரி கூட இதை விடப் பளிச்சுன்னு கட்டிண்டிருக்கா” என்றாள் அத்தை மனத்தாங்கலுடன்.

அப்போது அங்கே யாரோ வர பேச்சு நின்று விட்டது.

வந்தவர்கள் எல்லோரும் கிளம்பிப் போன பின் கூடத்தில் படுத்துக் கொண்டிருந்த மாமியார் கிருத்திகாவைக் கூப்பிட்டாள். அவளருகே கிருத்திகா சென்றாள்.

“இன்னிக்கி எல்லாம் நன்னா நடந்தது இல்லே?” என்று மாமியார் கேட்டாள்.

“ஆமா. எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம். அதுவும் அவா கிளம்பறச்சே நீங்க ஒரு கிஃப்ட் பாக்கெட் வேறே கொடுத்து அசர அடிச்சிட்டேள்” என்று சிரித்தாள் கிருத்திகா.

“ஆமா. வருஷத்திலே ஒரு நாள் கொடுக்கறோம். எல்லோரும் சந்தோஷமா இருந்தா சரி” என்றாள் மாமியார்.

மறுநாள் காலை கிருத்திகா ஆறு மணிக்கு எழுந்து பாத்ரூம் சென்று விட்டு அவள் அறைக்குள் வந்த போது டிரஸ்ஸிங் டேபிள் மீது பால் டம்ளர் இருந்தது. அதன் மீது பால் ஆறி விடாமல் இருக்க ஒரு சிறிய தட்டு மூடியிருந்தது.

.

அவளுக்கு மிகவும் பிடித்த நக்ஷத்திரம் – ஸிந்துஜா

ஸிந்துஜா

கிளினிக்கிலிருந்து திரும்பி வரும்போதே லேட்டாகி விட்டது. மத்தியானச் சாப்பாடை முடித்து விட்டு டாக்டர் சோமநாதன் ஹால் சோஃபாவில் அமர்ந்த போது வாசலில் அழைப்பு மணி ஒலித்தது. அவர் எழுந்து சென்று கதவைத் திறந்தார். சிரித்துக் கொண்டே உள்ளே நுழைந்த தங்கம்மா “குட் மார்னிங் அங்கிள்” என்றாள். அலங்கரித்து விட்ட பூஜை அறை மாதிரி பளிச்சென்று இருந்தாள்.

அவள் கண்கள் வீட்டைச் சுற்றுவதைப் பார்த்து அவர் “ரேவதி இப்பதான் சாப்பிட்டு விட்டுக் கை அலம்பப் போனாள்” என்றார். “உன்னைத்தான் நினைச்சிண்டிருந்தேன். எங்கே ரெண்டு நாளா இந்தப் பக்கம் வரலே?”

“அதை ஏன் கேக்கறேள்? புருஷனையும் பொண்டாட்டியையும் ஒரே இடத்திலே வேலைக்கு வச்சிண்டது தப்பாயிடுத்து. கார்த்தாலே லலிதாம்மா தெனைக்கும் வந்து வீடு பெருக்கி தொடச்சி பாத்திரம் தேய்ச்சு துணி ஒணத்தி எல்லா வேலையும் பண்ணி வச்சிட்டுப் போவா. சாயங்காலம் அவ புருஷன் மோகா வந்து சமையல் வேலை எல்லாம் பண்ணிட்டுப் போவான். மோகாவோட அக்கா பொண்ணுக்குக் கல்யாணம்னு ரெண்டும் லீவை வாங்கிண்டு கோரக்பூருக்குக் கிளம்பிப் போயுடுத்து. ரெண்டு நாளா நான்தான் வேலைக்காரி, நான்தான் சமையல்காரி. அவா வர ஒரு வாரம் ஆகும்” என்றாள் தங்கம்மா.

உள்ளேயிருந்து வந்த ரேவதி “அடக் கண்றாவியே!” என்று தங்கம்மாவின் கையை எடுத்துத் தன் கைமீது வைத்துக் கொண்டாள்.

“சரி, போகட்டும் போ. ஏதோ ஒரு வாரம் பத்து நாள் உனக்கும் எக்சர்சைஸ்னு ஒண்ணு இருந்தா நல்லதுதானே!” என்றார் சோமநாதன்.

தங்கம்மா அவரை நக்கலாகப் பார்த்தாள். “போன மாசம் ரெண்டு நாள் ரேவதி உடம்பு சரியில்லேன்னு படுத்துண்டப்போ நீங்க எக்சர்சைஸ் பண்ணினதைத்தான் நான் பார்த்தேனே !”

ரேவதி அவரைப் பார்த்து “இவ கிட்டே யாராவது வாயைக் கொடுப்பாளா?”என்று செல்லமாகத் தங்கம்மாவின் முதுகைத் தட்டினாள்

“எதுக்கு என்னை நினைச்சிண்டு இருந்ததா நான் நுழையறச்சே சொன்னேள்?” என்று தங்கம்மா கேட்டாள்.

“நேத்திக்கு சாயந்திரம் அபிஷேக் பச்சன் படம் போட்டான். உடனே உன் நினைப்பு வந்தது.”

“ஐயையோ , எப்போ?” என்று பதறிக் கொண்டே கேட்டாள் தங்கம்மா. “எந்த சேனல்லே?”

சோமநாதன் “ஸ்டார்லே” என்றார்.

தங்கம்மா ஏதோ சொல்ல வந்தவள் சட்டென்று நிறுத்தி விட்டாள். பிறகு அவரைப் பார்த்து “இதானே வேண்டாங்கிறது” என்றாள்.

கணவனும் மனைவியும் அவளைப் பார்த்தார்கள்.

“நேத்திக்கிக் காலம்பற ஃபர்ஸ்ட் கிராஸ்லேந்து பத்தொம்பதாவது கிராஸ் வரைக்கும் ஹோல் ஆஃப் மல்லேஸ்வரத்துக்கே கரண்ட் இல்லாம இருந்து இன்னிக்கிக் கார்த்தாலேதான் ஆறு மணிக்கு வந்தது. அங்கிளுக்கு மட்டும் தனியா யாரோ வந்து அபிஷேக் பச்சன் படம் போட்டுக் காட்டியிருக்கா இல்லே?” என்று தங்கம்மா ரேவதியைப் பார்த்தாள்.

“உன்னைச் சீண்டாட்டா இந்த மனுஷனுக்குப் பொழுதே போகாது” என்று ரேவதி சோமநாதனைப் பார்த்துச் சிரித்தாள்.

ஆறு மாதத்துக்கு முன்னால்தான் ரேவதிக்குத் தங்கம்மாவுடன் பழக்கம் ஏற்பட்டது. சோமநாதனும் ரேவதியும் சொக்கலிங்கம் வீட்டுக் கிருகப் பிரவேசத்துக்குப் போயிருந்தார்கள். சோமநாதன் சொக்கலிங்கத்துக்குக் குடும்ப வைத்தியராகப் பத்து வருஷப் பழக்கம். அந்த விசேஷத்துக்கு வந்திருந்த தங்கம்மாவை சொக்கலிங்கத்தின் மனைவி சிவகாமி
ரேவதிக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். தங்கம்மாவின் கணவர் தனது கம்பனியின் வக்கீல் என்றும் அவர் மும்பை போயிருப்பதால் விசேஷத்துக்கு வரவில்லை என்றும் சோமநாதனிடம் சொக்கலிங்கம் சொன்னார். விசேஷத்துக்கு மறுநாளே தங்கம்மா ரேவதியைத் தேடிக் கொண்டு வந்து விட்டாள்.

“நாங்க மல்லேஸ்வரம் வந்து ஒரு வாரம்தான் ஆறது” என்றாள் தங்கம்மா ரேவதியிடம் அன்று.

“அதுக்கு மின்னே?”

“மதிக்கரையிலே இருந்தோம். ஏழெட்டு வருஷமா ஒரே வீட்டிலே இருந்தோம்னுதான் பேரு. மூணு பெட்ரூம். வீட்டுக்காரன் வருஷா வருஷம் வாடகையை கண்மண் தெரியாம ஏத்திடுவான். அங்கே
பக்கத்திலேயே இவர் ஆபீஸ் போட்டிருந்தாரேன்னு சகிச்சிண்டு இருந்தோம். இப்ப ஆறு மாசத்துக்கு மின்னாலே அவன் காலி பண்ணிக் கொடுங்கோன்னு நச்சரிக்க ஆரமிச்சிட்டான். நாமென்ன பந்திக்கு இல்லாத வாழக்காயா பந்தல்லே கட்டித் தொங்க விடறதுக்கு? மல்லேஸ்வரத்திலே வீடு பாக்க ஆரம்பிச்சோம். இங்கே பதினேழாவது கிராஸ்லே ரெண்டு பெட்ரூம் தான் கிடைச்சதுன்னு வாங்கிட்டார். வாசல், பெட்ரூம்ஸ், கிச்சன்னு எல்லாம் தலை குனிஞ்சு அடக்கமா இருன்னு சொல்லிண்டிருக்கிற மாதிரி கட்டியிருக்கான். கைக்கெட்றாப்லே பரண் பண்ணி வச்சிருக்கான். மின்னே இருந்த வீட்டிலே அதெல்லாம் உசர உசரமா, நீள நீளமா இருக்கும். எந்த சாமானை எடுக்கணும்னாலும் எட்டி எட்டி எடுக்கணும். இல்லாட்டி ஏணி வேணும். இது அதுக்கு நேர் மாறா வசதியா இருக்கு. வடக்குப் பார்த்த மச்சு வீடை விட தெக்குப் பார்த்த குச்சு வீடு நல்லதுன்னு வந்துட்டோம். எங்காத்துக்காரருக்கு இந்த வீடு ரொம்பப் பிடிச்சுப் போயிடுத்து” என்று சிரித்தாள்.

“உனக்கு?””

“எனக்கும் அங்க இருந்ததை விட இங்க இருக்கறது ரொம்பப் பிடிச்சிருக்கு” என்றாள் தங்கம்மா.”அங்கே நாலு வார்த்தை தாய் பாஷையிலே பேச மாட்டமா, இல்லே கேக்க மாட்டமான்னு ஆயிடுத்து. வரவா போறவா கிட்டே ஒண்ணு இங்கிலீஷு, இல்லேன்னா இந்த ஊர் பாஷைதான் பேசணும். எனக்குக் கட்டிப் போட்ட மாதிரி இருந்தது. அன்னமிடற கையை தூஷணை பண்ணக் கூடாதும்பா. மனசிலே இருக்கறதைச் சொன்னேன். அங்கே இருந்தப்போ நம்ம பாஷையைக் கேக்கறதுக்குன்னே மல்லேஸ்வரம் மார்க்கெட்டுக்கு வருவேன். எட்டாவது கிராஸ்லே ஷாப்பிங் பண்ணுவேன்.”

“இப்ப வீடு எந்த மெயின்லே?’

“பத்தாவது மெயின்லே. மின்னாலே கிரிக்கெட் ஹவுஸ்ன்னு இருந்து அதை இடிச்சிக் கட்டிருக்கால்லியா? அதுக்கு நாலு பில்டிங் தள்ளி. விலைதான் கொஞ்சம் ஜாஸ்தி” என்றாள் தங்கம்மா.

“ஓ, அது அடுத்த தெருதான். வீட்டு விலையிலே எல்லாம் எப்பவும் நடக்கறதுதானே ! நாம வீட்டை விக்கறச்சே நாடே நாசமாப் போயிடுத்துன்னு சொல்லி அடிமாட்டு விலைக்குக் கேப்பான். நாம வாங்கறப்போ டிமாண்டு பிச்சிண்டு மானத்துக்குப் போயிடுத்தும்பான்” என்று சிரித்தாள் ரேவதி.

இருவரும் குறுகிய காலத்தில் நெருங்கி விட்டார்கள். நீங்கள் நீயாகி விட்டது. எல்லாம் வா, போ தான். சேர்ந்து மார்க்கெட்டுக்கு, புடவைக் கடைகளுக்கு, கோயில்களுக்கு, சினிமா, டிராமாக்களுக்குப் போய் வந்தார்கள். இந்த ஆறு மாதத்தில் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளாத நாள்கள் என்பதை விரல் விட்டு எண்ணி விடலாம். இதற்கு மாறாக ஆண்கள் இருவரும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ள வாய்ப்புக் கிட்டவில்லை.

தனக்கு அபிஷேக் பச்சனை மிகவும் பிடிக்கும் என்று ரேவதியிடம் ஒரு நாள் தங்கம்மாள் சொன்னாள். அப்போது சோமநாதனும் அவர்களுடன் இருந்தார்.

“அவன் ஒட்டடைக் குச்சின்னா?” என்றார் சோமநாதன்.

“இருந்தா என்ன? அவனை என்ன நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேனா? என்ன உயரம்? வாட் எ பெர்சனாலிட்டி?” என்று சிரித்தாள் தங்கம்மா. “எப்பவும் உடம்பை ட்ரிம்மா வச்சிண்டு…. அந்த உயரத்துக்கு இன்னொரு ஹீரோவை இந்தப் பக்கம் காட்ட முடியுமா?”

“நீ என்ன சொன்னாலும் அவன் நெட்டைக் கொக்குதான்” என்றார் சோமநாதன்.

“சும்மா என்னைச் சீண்டறதுக்கு சொல்லாதீங்கோ. ஆறு அடி. ரெண்டு அங்குலம். ஒரு தொப்பை, தொந்தி கிடையாது. இங்க அஞ்சறை அடி கூட இல்லாதவன் பெரிய ஹீரோன்னு சொல்லிண்டு உட்லண்ட்ஸ் ஷூஸ் வாங்கிப் போட்டுண்டு நாலு இஞ்ச் ஜாஸ்தி உயரமா காமிக்க ட்ரை பண்றான். உண்டா இல்லியா சொல்லுங்கோ அங்கிள்?”

“அடேயப்பா! விட்டா பெரிய ரசிகை மன்றமே வச்சிடுவே போல இருக்கே?” என்றாள் ரேவதி.

“நாளைக்கி ஓட்டீட்டிலே எங்க அபிஷேக்கோட புதுப் படம் லூடோ வரப் போறது. நெட்ஃப்ளிக்ஸ்காரன் அறுபது கோடி குடுத்து வாங்கியிருக்கானாம். நம்ம ஊர் ஆக்ஷன் ஹீரோக்கெல்லாம் அதுலே எத்தனை சைபர் இருக்குன்னு கூடத் தெரியாது. ஒரே ஒரு ஆள். அறுபது கோடி.”

“இதெல்லாம் சினிமாக்காரங்க விடற ரீல் தங்கம் ! ஒரு வாரம் போனா காத்தாடறது எல்லாப் படமுமே.”

“மத்தவா படத்துக்கு அப்படி இருக்கலாம். ஆனால் எங்க அபிஷேக் படம் எப்பவுமே சூப்பர்தான். வாவ். என்ன ஒரு மெஜெஸ்டிக் பெர்சனாலிட்டி!”

“சினி பிளிட்ஸ்லே படிச்சேன் “என்றார் சோமநாதன்.

“என்னன்னு?”

“கதாநாயகியா உங்க அபிஷேக்கோட ஒருத்தி நடிக்கணும்னா எப்பவும் அவ ஹை ஹீல்ஸ்லேதான் இருக்கணுமாம்.!”

தங்கம்மா காயமுற்றவள் போல ரேவதியைப் பார்த்தாள்..

“இதெல்லாம் பத்திரிகைக்காராளே விக்கணுமேன்னு ஏதாவது கற்பனை செஞ்சு போடுவா. கிசுகிசு எழுதுவா.நான் நம்பறதில்லே ” என்று சமாதானமாகச் சொன்னாள் ரேவதி. தொடர்ந்து “நம்ம ஊர் மன்மத ராஜாகூட தன்னோட நடிக்கற ஹீரோயின்லாம் தன்னை விட உயரமா இருக்கக் கூடாதுன்னு கண்டிஷன் போடுவாராமே! அது தெரியுமா உங்களுக்கு?” என்று கணவனிடம் சொன்னாள்.

தங்கம்மா குபுக்கென்று சிரித்தாள்.

“நம்ம ஊர்னா அவ்வளவு இளப்பமா உனக்கு? சிரிப்பைப் பாரு !” என்றாள் ரேவதியும் சிரித்தபடி.

சோமநாதன் “தங்கம்! நீயும் அஞ்சே முக்கால் இல்லே அஞ்சு பத்து இருப்பியா?” என்றார்.

இரு பெண்களும் அவரை ஆச்சரியத்தோடு பார்த்தார்கள்.

அப்போது சோமநாதனின் கைபேசி ஒலித்தது.

“…………….”

“ஆமா, டாக்டர்தான் பேசறேன்.”

“………….”

“சரி, நான் ஒரு கால்மணியிலே அங்க வரேன். அவசரம்னுதானே போன் பண்ணினேள் ? இதிலே தப்பா எடுத்துக்க என்ன இருக்கு?” என்று போனை வைத்தார்.

“சாரி, அர்ஜண்டா மணிப்பால்லே கூப்பிடறா?” என்று எழுந்தார்.

“நானும் வந்து நாழியாயிடுத்து. கிளம்பறேன். நாளைக்கு நீங்களும் ரேவதியும் எங்காத்துக்கு வாங்களேன். எல்லாருமே சேந்து ஜாலியா சினிமா பாக்கலாம்” என்றாள் தங்கம்மா.

“அடடா, நாளைக்கு நாங்க மைசூர் போறோமே,.என் பெரியம்மா பேத்திக்குக் கல்யாணம்னு” என்றாள் ரேவதி. “ஊருக்குப் போயிட்டு வந்தப்பறம் வரோம்.”

ஆனால் அடுத்த வாரம் வியாழக்கிழமை காலையில் டாக்டருக்குத் தங்கம்மாவிடமிருந்து போன் வந்தது.

“டாக்டர், நீங்க இன்னும் கிளினிக்குக்கு கிளம்பலையே? நேத்தி மத்தியானத்திலேந்து இவருக்கு ஜொரம். டோலோ கொடுத்து சரியாயிடும்னு பாத்தேன். ஜொரம் எறங்கவே இல்லை. நான் இவரை அங்க ஆத்துக்குக் கூட்டிண்டு வந்து காமிக்கட்டுமா?” என்று கேட்டாள்.

“நீ எதுக்கு வரே? நான் கிளினிக் போற வழிதானே ? ஒரு பத்து நிமிஷத்திலே அங்கே வரேன். வீட்டு நம்பரும் அபார்ட்மெண்ட் பேரும் மட்டும் வாட்ஸப்பில் அனுப்பிடு” என்றார்.

அவர் தங்கம்மாவின் ஃப்ளாட்டை அடைந்த போது அவள்தான் கதவைத் திறந்தாள். “படுத்துண்டுதான் இருக்கார்” என்று பெட் ரூமுக்கு அழைத்துச் சென்றாள். அவள் கணவர் தலையிலிருந்து கால் வரை போர்த்திக் கொண்டிருந்தார். சோமநாதனைப் பார்த்ததும் படுக்கை
யிலிருந்து எழுந்திருக்க முயன்றார். சோமநாதனிடம் “உங்க பேர் எனக்குத் தெரியும். நான் லட்சுமணன்” என்றார்.

சோமநாதன் “எழுந்திருக்க வேண்டாம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே லட்சுமணன் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து விட்டார்.

அவர் கையைப் பிடித்து நாடி பார்த்தபடி “குளிர்றதா?” என்று கேட்டார் சோமநாதன்..

“ஆமா. இப்ப பரவாயில்லே. ராத்திரி ரொம்ப குளிரினது. அவ்வளவு டோலோ போட்டுண்டும் வேர்க்கவே இல்லே.”

சோமநாதன் அவரை நாக்கை நீட்டச் சொன்னார். கண்களைச் சோதித்தார். ஸ்டெதெஸ்கோப்பை மார்பிலும் முதுகிலும் வைத்துப் பரிசோதித்தார். கை விரல்களை அமுக்கி “வலிக்கிறதா?” என்று கேட்டார். ஆமென்று லட்சுமணன் தலையை அசைத்தார்.

“பசி?” என்று கேட்ட போது தங்கம்மா “கஞ்சியும் ஆர்லிக்ஸும்தான் கொடுத்தேன்.வாயெல்லாம் கசக்கறதுன்னார்” என்றாள்.

“வைரல் ஃபீவர்தான். கவலைப்பட ஒண்ணும் இல்லே” என்று மருந்து எழுதிக் கொடுத்து விட்டு சோமநாதன் கிளம்பினார்.

“இருங்கோ, ஒரு நிமிஷம். முதல் தடவையா ஆத்துக்கு வந்திருக்கேள். காப்பி கொண்டு வரேன்” என்று அவர் மறுப்பதைக் கேட்காமல் தங்கம்மா உள்ளே சென்றாள்.

“ரெண்டு நாள் கம்ப்ளீட் ரெஸ்ட் எடுங்கோ. ஊர் பூரா இருமலும் காச்சலும்தான். சாயந்திரம் பசியெடுக்கும். ரசஞ் சாதமா கரைச்சு எடுத்துக்கோங்கோ” என்றார் சோமநாதன் லட்சுமணனிடம்.

அப்போது அறையின் மூலையில் இருந்த தொலைபேசி ஒலித்தது. லட்சுமணன் எழுந்து போய் அதை எடுத்தார்.

“எதுக்கு நீங்க எழுந்து நடக்கறேள் ? ஜாக்கிரதையா இருக்கணும்” என்று சொல்லியபடியே சோமநாதன் அவரைப் பார்த்தார். லட்சுமணன் குட்டையாகவும் சற்றுக் குண்டாகவும் இருந்தார். நின்று கொண்டு அவர் பேசியதைப் பார்த்து ஐந்தடிக்கும் கீழேதான் அவர் உயரம் இருக்கும் என்று டாக்டர் நினைத்தார்.

சிதிலம் – ஸிந்துஜா சிறுகதை

ஞாயிற்றுக்கிழமையன்றுதான் காலை ஐந்து மணிக்கே முழிப்பு வந்து தொலைக்கும் என்று பத்து படுக்கையில் புரண்டான். வலது கை தன்னிச்சையாகத் தலையணைக்கருகே சென்று கைபேசியை எடுத்தது. பிரித்துப் பார்த்தான். உங்கள் பாஸ்வேர்டை யாருக்கும்

சொல்லாதீர்கள் என்று வங்கியில் பணமில்லாதவனுக்கு வரும்

செய்தி, மல்லேஸ்வரம்ஆஸ்திகசமாஜநன்கொடைவேண்டுதல், றுநாள் திங்கட்கிழமை ஷேர் மார்க்கெட்டில் என்னென்ன ஷேர் வாங்கினால் அடிபடாமல் தப்பிக்கலாம் என்னும் ஹேஷ்யம், சிவசுவின்செய்தி, இத்தாலியில் புது வருஷம் கொண்டாடப் போவதென்றால் டூர்செலவில் நாற்பது சதவிகிதம் கழிவு என்று ஜன்பத்துக்குப் போகவேண்டிய, ஆனால் தப்பாக  வந்து விட்ட போஸ்டர், சுப்புணி குரூப்பிலிருந்து மஹாலக்ஷ்மிபடம்,…எல்லாம் குபேரன் சம்பந்தப்பட்ட விஷயங்கள்!

பத்துசிவசுவின்செய்தியைப்பிரித்துப்படித்தான். ‘காலை பதினோருமணிக்குவருகிறேன்’ என்றது.  பத்துவெறுப்புடன்கண்களை மூடிக்கொண்டான். ஐந்து மாதங்களுக்கு முன்பு பத்து சிவசுவிடமிருந்து பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கினான். இரண்டு மாதத்தில் திருப்பிக் கொடுத்துவிடுவதாக. ஆனால் மறு மாதம் ஐயாயிரம் கொடுத்ததுதான். அதற்குப்பின் என்னென்னவோ செலவுகள் என்று தள்ளிக்கொண்டே போயிற்று. சிவசுவும் இரண்டு மாதங்களை விட்டுவிட்டு மூன்றாவது மாதம் முடியும் வரைகாத்திருந்தான். அதன் பிறகு பத்துவிடம் பணம்திருப்பிக் கொடுப்பதைப் பற்றி இரண்டு தடவை நினைவுறுத்தினான். ஒவ்வொரு தடவையும் பத்து சிவசுவிடம்அடுத்த மாதம் திருப்பிக்கொடுத்துவிடுவதாகக் கெஞ்ச வேண்டியிருந்தது. ஆனால் போன மாதம் சிவசு வீட்டுக்குவந்துவிட்டான்.

பத்துவுக்கு சிவசு  தூரத்து உறவு. தூரம் என்றால் ரொம்ப தூரம் ! மூன்று தலைமுறைகளாக சிவசுவின் குடும்பம் லூதியானாவில் இருந்ததால் மட்டுமில்லை, உறவு மடிப்புகளின் உள்ளே புகுந்து வெகு தூரம் பிரயாணம் செய்த பின்பே  கண்டு பிடிக்க முடிந்த சொந்தமாகவும்  இருந்தது. ஒரு வருஷம் முன்பு சிவசுவின் பாட்டி ஒரு கல்யாணத் துக்காக பெங்களூர் வந்தாள். அவள் சென்னையில் அவளது அண்ணாவுடன் இருந்தாள். தொல் பொருள் ஆராய்ச்சி நிலையத்தில் வேலை பார்த்தவளைப் போல பத்துவின் குடும்பத்துக்கும் தங்கள் குடும்பத்துக்கும் இடையே உள்ள சொந்தத்தைத் தோண்டிக் கண்டு பிடித்து விட்டாள். பத்து மல்லேஸ்வரத்திலும் சிவசு தேவனஹள்ளியிலும் குடித்தனம் இருந்ததால் (32 கிலோமீட்டர்) கடந்த ஒரு வருஷத்தில் ஒரே ஒரு முறை சிவசுவின் வீட்டில் நடந்த சத்யநாராயணா பூஜைக்குப் பத்துவும்அலமேலுவும்சென்றுவிட்டுவந்தார்கள். அதற்கடுத்தாற்போலசிவசுஇவர்கள்வீட்டுக்குவந்ததுசென்றமாதம்தான்.

அவன் அன்று வந்த போது மாலை ஐந்தரை இருக்கும். அன்றும் ஞாயிற்றுக்கிழமைதான். பணம் கேட்க வீட்டிற்கே வந்து விட்டானே என்று இருந்தது பத்துவுக்கு. வந்தவனை இருவரும் வரவேற்றார்கள்.

“ஏன், தங்கம்மாவையும் அழைச்சுண்டு வந்திருக்கலாமே?” என்றாள் அலமேலு.

“அவளுக்கு சன் டிவியிலே சினிமா பாக்காட்ட தலை வெடிச்சிடும். வரலேன்னுட்டா.”

“என்ன படமாம்?” என்று கேட்டாள் அலமேலு.

“என்னவோ வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்னு சொன்னா” என்றான் சிவசு.

“ஓ, அதைப் பார்த்தா எனக்குத் தலை வெடிச்சிடும்” என்றான் பத்து.

சிவசு பத்துவைப் பார்த்துப் புன்னகை புரிந்தான்.

அவன் வந்த கால்மணியில் அலமேலு காப்பி கலந்து கொண்டு வந்து கொடுத்தாள்.”ஐயையோ ! இதெல்லாம் எதுக்கு?” என்றபடி மறுத்தான். அலமேலு ஒரு டீபாயை அவனுக்கு முன்னால்  கொண்டு வந்து போட்டு அதன் மேல் டவரா டம்ளரை வைத்தாள்.

அவன் குடித்து விட்டு “ஆஹா, காப்பி பிரமாதம். ஆத்துலேயே வறுத்துப் பொடி பண்ணிணதா? இந்த மாதிரி ஒரிஜினல் காப்பி குடிச்சு ரொம்ப வருஷமாச்சு” என்றான்.

பத்து “தங்கம்மா காதுக்கு எட்டற மாதிரி சொல்லி வைக்காதே” என்று சிரித்தான்.

அலமேலு சிவசுவிடம் “இல்லே. இங்க கோத்தாஸ்னு காப்பி பவுடர் கடை பெரிசா வச்சிருக்கான். காப்பி ரொம்ப நன்னா இருக்கில்லே?”என்று கேட்டபடி உள்ளே சென்று ஒரு பாக்கெட்டை எடுத்துக் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள்.

“என்னது இது?”

“கோத்தாஸ் அரைக் கிலோ பாக்கெட். எப்பவும் நான் ஸ்டாக் கையிலே வச்சிண்டிருப்பேன். நீ யூஸ் பண்ணிப் பாரேன்.”

சிவசு திகைப்புடன் அவளைப்  பார்த்தான்.

பிறகு பத்துவைப் பார்த்து “என் ஃப்ரெண்டு புது வீடு வாங்கி கிரகப்

பிரவேசத்துக்கு வாடான்னான். போன மாசம் மெட்றாஸ் போனேன். அப்ப நாராயண மாமாவாத்திலேதான் தங்கினேன். ரெண்டு மூணு நாள் அங்கே இருந்தப்போ ஒரு நாள் உங்க கல்யாணப் போட்டோ கொஞ்சம் இருந்ததுன்னு மாமா காமிச்சார்” என்றான்.

“ஐயோ ! சகிக்கப் போறாம இருந்திருப்பமே!” என்று சிரித்தாள் அலமேலு.

“ஆமா” என்றான் சிவசு.

“என்னது?” அலமேலு திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள்.

“நீதன்னடக்கத்துக்குகோயில்கட்டிண்டிருக்கிறவமாதிரிபேசினா, நானும்பொய்சொல்லித்தானேஆகணும்” என்றுசிரித்தான்சிவசு.

அலமேலு வெட்கத்துடன் சிரித்தாள்.

“வாஸ்தவத்திலே நீ போட்டோலே விட நேர்லே அழகாயிருக்கே!” என்றான்சிவசு. பிறகுபத்துவின்பக்கம்திரும்பி”இப்பநான்பொய்சொன்னேன்னுநீநினைச்சாநான்அதைத்தடுக்கப்போறதில்லே” என்றான்.

அலமேலு”உனக்குரொம்பப்பொல்லாத்தனம்” என்றாள்.

பிறகு சிவசுவிடம் “இப்பதானே முதல் தடவை நீ இந்தாத்துக்கு வந்திருக்கே. சுத்திப் பாரேன்” என்றாள் அலமேலு. பத்து எழுந்து சிவசுவைக் கூட்டிக் கொண்டு போனான். ஒவ்வொரு அறையையும் சிவசு விசாலமாகப் பார்த்தான். கதவுகளை பிடித்துப் பார்த்தான். தேக்கா என்று கேட்டான். ஜன்னல் பெயிண்டுகளைத் தடவியும் லேசாக சுரண்டியும் பார்த்தான். மொசைக் தரையில் காலைத் தேய்த்து இழுத்து நடந்தான். மாடியில் இருந்த பாத்ரூமில் தண்ணீர் வேகமாக வருகின்றதா என்று குழாயைத் திருகினான் .பாத்ரூமில் வைத்திருந்த டியோடிரண்ட் பாட்டில்களைத் திறந்து முகர்ந்து பார்த்தான்.

மறுபடியும் ஹாலுக்கு வந்து உட்கார்ந்து கொண்டார்கள். அலமேலு அவனிடம் “வீடு எப்படி இருக்கு?” என்று கேட்டாள்.

“இது சொந்த வீடா?” என்று கேட்டான் சிவசு.

“இன்னும் அதுக்குப் பிராப்தம் வரலையே” என்றாள் அலமேலு.

“எவ்வளவு வாடகை கொடுக்கறேள்?”

பத்து “இது கம்பனிலே கொடுத்திருக்கா. சொந்தமும் இல்லாம வாடகையும் இல்லாம திரிசங்கு சொர்க்கம்” என்றான்.

“அப்படீன்னா நிச்சயம் நீ சீக்கிரம் ஒரு வீடு வாங்கப் பாரு” என்றான் சிவசு. “எங்கப்பா ரயில்வேலே இருந்தார்னு உனக்குத் தெரியுமே. கார்டா இருந்தார். மாத்தல் ஆகிப் போற இடமெல்லாம் ரயில்வேக்காரன் குவார்ட்டர்ஸ் கொடுத்தான். ‘இவ்வளவு பெரிய வீடு கொடுக்கறான். நீ எதுக்கு சொந்த வீடுன்னு அலையணும்?’னு எங்க தாத்தா, அப்பாவுக்கு அப்பா, அவரைக் கரைச்சு வீடே வாங்க விடலை. ஐம்பத்தெட்டு வயசுக்கு ரிட்டையர் ஆயாச்சு, ஆத்துக்குப் போன்னு  சொன்னப்பதான் வீட்டுக்கு அலைஞ்சு திரியற கஷ்டமே அப்பாவுக்குத் தெரிஞ்சது. கடனோ உடனோ வாங்கி ஒரு வீடு வாங்கப் பாரு” என்றான் சிவசு.

“பணம் இல்லாம எப்பிடி ? வெறுங் கைலே முழம் போடற மாதிரி?” என்றாள் அலமேலு.

“கையிலே கேஷ் வச்சிண்டுதான் வீடு கட்டணும்னா மேனகை விச்வா

மித்ரரைக் கல்யாணம் பண்ணிக்கிறப்பதான்” என்று சிவசு பத்துவைப் பார்த்தான். “பேங்குலே பதினஞ்சு பர்சன்ட் மார்ஜின் மணி கேப்பான். பி.எஃ ப் இருக்கில்லே? ஒரு லோனைப் போடு. எல்லைசி பாலிசி இருக்கா?அலமேலு நகைல்லாம் இருக்கும். அதெல்லாம் செக்யூரிட்டின்னு காமி. இன்னும் இருபது இருபத்தி அஞ்சு வருஷ சர்வீஸ் இருக்கில்லே உனக்கு? ஏன் கொடுக்கமாட்டான் பேங்க் லோன்?” என்றான் சிவசு.

அலமேலு அவனைப் பிரமிப்புடன் பார்ப்பதைப் பார்த்தான் பத்து.

“கேரண்ட்டார் கேப்பான். நான் கையெழுத்து போடறேன் போ” என்றான் சிவசு.

விட்டால்கழுத்தைப்பிடித்துத்தள்ளிபேங்க்வாசலில்கொண்டுபோய்நிறுத்திவிடுவான்போலிருந்தது. கூடவே’நம்நல்லதுக்குத்தானேசொல்கிறான்’ என்கிறநன்றிஉணர்ச்சியும்பத்துவுக்குள்எழுந்தது.

“எனக்கு எப்பவுமே என்ன பயம்னா கடனை வாங்கிட்டு எப்பிடி திரும்பக் கட்டறதுன்னுதான். ஒரு ஆள் சம்பளத்தில் எப்படிச் சமாளிக்க முடியும்?” என்றான் பத்து.

“வீடு கட்டி முடிக்கிற வரைக்கும் கடன் கொடுப்பான். அது வரைக்கும் நீ பணம் திரும்பக் கட்ட ஆரமிக்க வேண்டாமே. கட்டின வீட்டை

வாடகைக்கு விட்டா அது முக்காவாசி இன்ஸ்டால்மென்டைக் கவர் பண்ணிடும்” என்றான் சிவசு. “இல்லேன்னா கட்டின வீடா பாத்து வாங்கிடு . உடனே வாடகைக்கு விட்டுறலாம்.”

“ரெடி ரெக்கனர் மாதிரின்னா எல்லாத்துக்கும் ஆன்சர் வச்சிருக்கே !” என்றாள் அலமேலு.

” நீ அடுத்த வருஷம் இந்த நாளைக்கு சொந்த வீடு வாங்கிடனும்” என்று சிவசு சிரித்தான். பிறகு சுவரில் இருந்த கடிகாரத்தைப் பார்த்து விட்டு “ஓ, ஏழரை ஆயிடுத்தா? நான் கிளம்பறேன். ரெண்டு பஸ் பிடிச்சு ஆத்துக்குப் போய் சேர்ரப்போ அந்த புல்லு மண்ணு படமெல்லாம் பாத்துட்டு தங்கம்மா ஏதானும் சாப்பிடப் பண்ணி வச்சிருப்பா” என்று எழுந்தான்.

“நன்னாயிருக்கு. இவ்வளவு தூரம் வந்துட்டு சாப்பிடற வேளையிலே கிளம்பிப் போறதாவது. இன்னிக்கி அடைக்கு அரைச்சு வச்சிருக்கேன். நாலு வாத்துப் போடறேன்.முதல் தடவை வந்ததுக்குப் பாயசம் வச்சு சாப்பாடு போடணும். அடுத்த தடவை தங்கம்மாவோட வரச்சே ஜமாய்ச்சுறலாம்” என்றாள் அலமேலு.

அவள் குரலில் இருந்த கண்டிப்பும், அன்பும் சிவசுவை எழ விடாமல் அடித்தன. அடை சாப்பிடும் போது சிவசு “எனக்கு சின்ன வயசிலிருந்தே அடைன்னா ரொம்ப இஷ்டம். எங்கம்மா எங்களுக்கெல்லாம் எது சாப்பிடக் கொடுத்தாலும் ஒரு திட்டம் வச்சிருப்பா. மூணு வயசுக்கு மேலதான் குழந்தைக்கு அடை. அதுவும் அரை அடைதான் ! அஞ்சு வயசாகறப்போ ஒரு அடை. அடுத்த பிரமோஷன் ஹைஸ்கூல்ல சேர்ரப்போ. ஒண்ணரை  நான் ரெண்டு அடை சாப்பிடறப்போ ஒம்பதாங் க்ளாஸ் படிச்சிண்டிருந்தேன். அப்போ எங்கம்மாட்ட சொல்லுவேன், நான் பெரியவனானதும் குறைஞ்சது பத்து அடையாவது சாப்பிடு

வேன்னு. அப்பிடி சாப்பிட்டேன்னா ரயில்வே லைன் தாண்டி இருக்கற வயக்காட்டுலே போயி பீச்சி அடிச்சிண்டிருக்க வேண்டியதுதான்னு சிரிப்பா” என்றான்.

அலமேலுவால்சிரிப்பைஅடக்கமுடியவில்லை.

“இப்ப எவ்வளவு அடை வெளுத்துக் கட்டறே?” என்று பத்து சிரித்தான்.

“ரெண்டுதான் !” என்றான் சிவசு.

சாப்பிட்டுவிட்டுசிவசுகிளம்பிச்சென்றான்.அவன்போனதற்குப்  பிறகுகணவனும்மனைவியும்அவனைப்பற்றி, அவன்மனைவி, அம்மாபற்றி, வீடுவாங்குவதுபற்றிஎல்லாம்பேசினார்கள்.

“உன் உபசாரத்திலே அவன் மயங்கிட்டான்” என்றான் பத்து.

அலமேலு “அவன்தான் பேசிப் பேசி நம்மளை மயக்கிட்டான்” என்று சிரித்தாள். “ரொம்பக் கெட்டிக்காரனாயிருக்கான் இல்லே?”

பத்து பதிலளிக்காமல் அவளை பார்த்தான்.

சிவசு பணம் பற்றிப் பேசாமல் சென்றது பத்துவிற்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. அலமேலுவின் பேச்சும் உபசரிப்பும் அவனைப் பணம் பற்றிப் பேசாமல் தடுத்திருக்க வேண்டும் என்று பத்து நினைத்தான்.

பத்து கடைசியில் எட்டுமணிக்குத்தான் படுக்கையிலிருந்து எழுந்தான்.

பல் தேய்த்துக் காப்பி குடித்து விட்டு பேப்பரை மேய்ந்தபின்  பாத்ரூமுக்குச் சென்றான். அவன் குளியலை முடித்து விட்டு, பூஜை அறைக்குள் சென்று சாமியைக் கும்பிட்டு விட்டு ஹாலுக்கு வந்தான். அலமேலு டைனிங் டேபிளில் காலை உணவை வைத்துக் கொண்டிருந்தாள். பூரி. இருவரும் எதிரெதிரே உட்கார்ந்து கொண்டு சாப்பிட ஆரம்பித்தார்கள்.

“பூரி சூப்பரா இருக்கு” என்றான் பத்து. அலமேலு சிரித்தபடி அவனைப் பார்த்தாள். “ஆலுவுக்குப் பதிலா சோளே போட்டு பண்ணிட்டியே. ரொம்ப டேஸ்டியா இருக்கு” என்றான்.

“இன்னும் ரெண்டு பூரி போட்டுக்கோங்கோ” என்று எடுத்துப் போட்டாள்.

“போறும், போறும். பத்து மணிக்கு ஆபீசுக்குப் போகணும்” என்றான்.

“ஆபீஸா? இன்னிக்கி எங்கையும் போகப் போறதில்லே. நன்னா ரெஸ்ட் எடுக்கணும்னு நேத்தி ராத்திரி சொன்னேளே?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் அலமேலு.

“செவ்வாக்கிழமை போர்டு மீட்டிங்காம். இன்னிக்கி பத்து பத்தரைக்கு வந்துடு. கொஞ்சம் ஸ்டேட்மெண்ட்ஸ், ரிப்போர்ட்ஸ்லாம் பண்ணனும்னு டைரக்டர் மெஸேஜ் அனுப்பிச்சிருக்கான்” என்றான் சிவசு குரலில் அலுப்புடன்.

“அட ராமா ! இப்பதான் பாதி சமையலை நான் முடிச்சேன்” என்றாள் அலமேலு.

“ம், சொல்ல மறந்துட்டேனே. இன்னிக்கி சிவசு வரேன்னுருக்கான். பதினோரு மணி வாக்கிலே” என்ற பத்து சற்று யோசித்து விட்டு “அவன் வந்தா நான் அவசர வேலையா ஆபீஸுக்குப் போக வேண்டியதாயிடுத்துன்னு சொல்றியா? உன் சமையலும் வேஸ்டாப் போக வேண்டாம். அவனை இங்கேயே சாப்பிடச் சொல்லிடேன்”

என்றான் பத்து.

“எத்தனைமணிக்குத்திரும்பிவருவேள்?”

“சொல்ல முடியாது. ராத்திரி வரைக்கும் இழுத்தடிக்காம விட்டான்னா சரி” என்றான் பத்து.

பத்துமணிக்குஅவன்வீட்டைவீட்டுக்கிளம்பினான். ஆபீசைஅடையும்போதுபத்தரைமணிஆகியிருந்தது. வாசலில்நின்றவாச்சுமேன்அவனைப்பார்த்துசல்யூட்அடித்தான்.

“இதுவரைக்கும் உங்க டிபார்ட்மெண்டு ஆளுங்க யாரும் வரலே சார்” என்றான்.

பத்து அவனுக்கு எதுவும் பதில் அளிக்காமல் தலையை அசைத்து விட்டு லிஃப்டை நோக்கிச் சென்றான்.அவனைச் சுற்றி மௌனம் இரைச்ச

லிட்டது.

அவன் ஏழாவது மாடியில் இருக்கும் தன் அறைக்குச் சென்றான். ஏ ஸி யைப் போட்டு விட்டு மேஜை மீதிருந்த கம்ப்யூட்டரைத் தட்டினான்.இந்த வருஷத்தில் மீதமிருக்கும் மூன்று மாதத்தில் எவ்வளவு இன்கம்டாக்ஸ் பிடித்தம் இருக்கும் என்று பார்த்தான்.நிறைய இருந்தது. ஒவ்வொரு முறையும் இப்படித்தான் ஆகிவிடுகிறது. ஏப்ரல் முதல் நவம்பர் டிசம்பர் வரை கொஞ்சமாகப் பிடித்து சற்று அதிகமாகக் கைக்கு வரும் பணத்தின் ஆனந்தம் எல்லாவற்றையும் சூறைக் காற்றைப் போல் அடித்துத் தள்ளி விடும் கடைசி மூன்று மாதங்களை நினைத்தால் அவனுக்கு வெறுப்பாக இருந்தது. மேஜையில் இருந்த கோப்புகளைப் படித்துப் பார்த்து விட்டுக் கையெழுத்திட்டான்.

ஒருமணிநேரம்போயிருக்கும். இண்டர்காமில்பெல்அடித்தது. அட, அவனைப்போல்வேறுயாரோஅலுவலகத்துக்குவந்திருக்கிறார்களா? ஆச்சரியத்துடன்போனைஎடுத்தான்.

“ஹலோ பாஸ் !” என்று மறுமுனையில் இருந்து தேவுவின் குரல் கேட்டது. கம்பனி செகரட்டரி. இவனுக்கு என்ன ஞாயிற்றுக் கிழமை ஆபீஸ் வேலை?

“ஹலோ தேவு !” .

“இப்பதான் வந்தேன். வாச்சுமேன் சொன்னான், நீ வந்திருக்கிறதா. ஃப்ரீயா? அங்க வரட்டா?”

“வா, வா” என்றான் பத்து.

 

அடுத்த நாலு கட்டிடங்களில் இருப்பவர்களின் நாசிகளைத் தீண்டும் அளவுக்குப் பெர்ஃப்யூம் வாசனையுடன் தேவு உள்ளே வந்தான்.

“அக்கவுண்ட்ஸ் எல்லாம் முடிஞ்சு போன வாரம் போர்டு மீட்டிங் ஏஜிஎம் எல்லாம் ஆயாச்சே. எதுக்கு இன்னிக்கி இங்கே டேரா போட்டிருக்கே?” என்று சிரித்தான் தேவு.

“கொஞ்சம் பெர்சனல் ஒர்க், கொஞ்சம் ஃபைல் கிளியரன்ஸ்னு வந்தேன். ஆனா உனக்கு என்ன இங்க வேலை?” என்றான் பத்து.

“போன வாரம் போர்டு மீட்டிங் ஆச்சில்லே. அடுத்த போர்டு மீட்டிங்குக்கு இன்னும் தாராளமா மூணு மாசம் இருக்கு. ஆனா இந்த யூனியன் கேட்ட பே ரிவிஷனை போர்டு அப்ரூவ் பண்ணிதை அர்ஜன்ட்டா  மினிட்ஸ் போட்டுக் கொடுக்கணுமாம். அதான் இன்னிக்கி அதை முடிச்சிடலாம்னு வந்தேன்” என்றான்.

அப்போது வாச்சுமேன் கதவைத் திறந்து கொண்டு வந்து இருவருக்கும் காப்பி கொடுத்தான்.

“நான்தான் சந்திரிகாலேந்து வாங்கிட்டு வரச் சொன்னேன்” என்றான் தேவு.

காப்பியை அருந்திக் கொண்டே இருவரும் ஆபீஸ் பாலிடிக்ஸில் கொஞ்ச நேரம் ஆழ்ந்தார்கள்.

“சரி, நான் என் வேலையை பாக்கப் போறேன்” என்று தேவு எழுந்தான். கதவருகில் சென்றவன் “லஞ்ச் எங்கே? வீட்டுக்குப் போறியா?” என்று கேட்டான்.

“நீஎன்னபண்ணறதாஇருக்கே?” என்றுகேட்டான்பத்து.

” நீ வீட்டுக்குப் போகலேன்னா நாம ரெண்டு பேரும்  வெளியே போய் சாப்பிடலாம்.”

பத்து சரியென்று தலையை அசைத்தான்.

“இன்னிக்கிக் கம்பனி செலவிலேதான் சாப்பாடு. வின்சர் மேனர் போகலாம்” என்று சிரித்துக் கொண்டே தேவு வெளியே சென்றான்.

அவர்கள் இரண்டு மணி சுமாருக்கு ஹோட்டலை அடைந்தார்கள். விடுமுறை தினமென்rறாலும் கூட்டம் இல்லை. தொற்று நோய் தொற்றி விடக் கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வு காரணமாக இருக்கலாம். ஆர்டரை வாங்கிக் கொண்டு போக அரைமணி ஆகியது. கேட்டவற்றைக் கொண்டு வர இன்னொரு அரைமணி ஆயிற்று. நேரம் பொன்னானது என்னும் வாசகத்துக்கு மரியாதை கொடுக்க வேண்டாம் என்று நிர்வாகம் நினைத்து விட்டது போலிருக்கிறது. அவர்கள் சாப்பிட்டு விட்டு வெளியே வரும் போது மணி நாலு. இருவரும் வீட்டுக்குப் போக ஓலாவுக்குப் போன் செய்தார்கள்.

அவனை நாலரை மணிக்கு வீட்டில் பார்த்து அலமேலு ஆச்சரியம் அடைந்தாள். “அட, சீக்கிரம் ரிலீஸ் பண்ணிட்டாளே” என்று கண்களை அகல விரித்து அவனிடம் சொன்னாள்.

“ஏதோ ஜெயில்லேர்ந்து வரவன்கிட்டே பேசற மாதிரின்னா இருக்கு” என்றான் பத்து.

“நானும் இப்பதான் ஆத்துக்குள்ளே நுழைஞ்சேன்.”

“எங்கே போயிருந்தே? சிவசு வரலியா?”

“சிவசுவோடதான் வெளியிலே போயிட்டு அந்தப் பக்கம் சிவசு போக நான் இந்தப்பக்கம் வந்தேன்” என்றாள் அலமேலு.

அவன் பதில் எதுவும் அளிக்காது அவளைப் பார்த்தான்.

“சிவசு வந்ததும் நீங்க இல்லைன்னு சொன்னேன். ‘அப்ப  நீ எதுக்காக அடுப்பைக் கட்டிண்டிண்டு அழறே? ஒரு சேஞ்சுக்கு வெளியிலே போய் சாப்பிடலாம். நீ வின்சர் மேனருக்குப் போயிருக்கியா? இல்லாட்டா வெஸ்ட் என்ட் போகலாம்’னான். நான்தான் ‘சும்மா கிட , காசுக்குப் பிடிச்ச கேடு. இன்னிக்கி பீன்ஸ் பருப்பு உசிலியும் வெத்தக் குழம்பும் பண்ணிருக்கேன்னேன். சாப்பிட்டு விட்டு ரொம்ப சந்தோஷம் அவனுக்கு. நன்னா இருக்கு, வாசனையா இருக்குன்னு மாஞ்சு போயிட்டான். அதுக்கப்புறம் நாட்டு மருந்து சாமான்லாம் கொஞ்சம் வாங்கணும்னான். சரின்னு கிளம்பி எய்ட்த் கிராஸ் இந்தியன் டிரக் ஸ்டோருக்குக்  கூட்டிண்டு போனேன்.  சுண்டக்கா வத்தல், மணத்தக்காளி வத்தல்ன்னு ஆரமிச்சு பனங்கருப்பட்டி, மிளகு, பெருஞ்சீரகம்  சித்தரத்தை தூள்,  திப்பிலி, அதிமதுரத் துண்டு, சுக்குன்னு எல்லாத்தையும் வாங்கிப் போட்டுண்டான். நான் இருக்கற இடத்திலே இந்த மாதிரி சாமான் ஒண்ணும் கிடைக்கிறதில்லேன்னான்.”

“சிவசுவோட அசிஸ்டன்ட்டா ஆயிட்டேன்னு சொல்லு” என்றான் பத்து.

அவள் அவனைப் பாத்து “ஒரு சிநேகிதம் சொந்தம்னா இதெல்லாம் கூடப் பண்ண மாட்டமா?” என்றாள் அலமேலு சற்றுத் தாங்கலான குரலில்.

அவளைச் சமாதானப்படுத்துவது போல “என்கிட்டே இதெல்லாம் வாங்கணும்டான்னு சொல்லிருந்தான்னா முழிச்சிருப்பேன். நீதான் வெட்டிண்டு வான்னா கட்டிண்டு வரவளாச்சே” என்றான் பத்து.

“அப்புறம்’உன்னைஇத்தனைசிரமப்படுத்தியாச்சு. வா, உனக்குஒருஐஸ்க்ரீம்வாங்கித்தரேன்’னான். பதினாறாம் கிராஸ்லேஇருக்கற

நேச்சுரல்ஸ் போனோம். பக்கத்திலேயிருக்கற காலேஜ்லேந்து பாய்ஸும் கேர்ள்ஸுமா பசங்க கூட்டம் நெரிஞ்சுண்டு நின்னது. ஒருத்தர் மேலே ஒருத்தர் இடிச்சிண்டு போய் வாங்கறதுக்குள்ளே உன்னைப் பாரு என்னைப் பாருன்னு ஆயிடுத்து” என்று சிரித்தாள் அலமேலு.

“நீ எதுக்கு இடிச்சிண்டு போய் நிக்கணும்? கடை வாசல்லே நீ நின்னா அவன் போய் வாங்கிண்டு வரான்” என்றான் பத்து.

“எனக்கும் அங்கே உள்ளே என்னென்ன வெரைட்டி வச்சிருக்கான்னு பாக்க ஆசை. டென்டெர் கோகனட் ஐஸ்க்ரீம்னு ஒண்ணு போட்டு விக்கறான் பாருங்கோ. அதுக்கு அப்படி ஒரு டிமாண்ட். ஆளுக்கு ரெண்டு வாங்கிண்டு வந்து சாப்பிட்டோம். என்னமா இளநி வாசனை வரதுங்கறேள் ! நீங்க இல்லையேன்னு நான் கூடச் சொன்னேன்.  சரி அடுத்த வாரம் பத்துவையும் கூட்டிண்டு இங்க வரலாம்னான் சிவசு.”

“அடுத்த வாரமா?” என்றான் பத்து.

“ஆமா. அடுத்த ஞாயித்துக் கிழமை நீங்க எதாவது வெளி வேலை வச்சுக்க வேண்டாம்” என்ற அலமேலு “சரி, நான் காப்பி போட்டுண்டு வரேன்” என்று சமையலறையை நோக்கி நடந்தாள்.

அடுத்த வாரம் நாள்கள் சில சமயம் பறந்தும் சில சமயம் நகர்ந்தும்

சென்றன. சனிக்கிழமை பத்து ஆபிசிலிருந்து சிவசுக்குப் போன் செய்தான்.

“ஹலோ சிவசு, எப்படியிருக்கே? லாஸ்ட் சண்டே உன்னை மிஸ் பண்ணிட்டேன். ஸாரி. பிடுங்கல் ஆபீஸா ஆயிடுத்து. இப்பகூடப் பாரு நாளைக்கு ஞாயத்துக் கிழமை  ஏர்போர்ட்டுக்குப் போயி எங்க டைரக்டரை அழைச்சுண்டு ஆபீசுக்குக் கூட்டிண்டு வரணும். ஆமா. அவர் கல்கத்தாலேர்ந்து வரார். ஃபிளைட்  பனிரெண்டரைக்கு வரது. உன் வீடு ஏர்போர்ட் கிட்டதானே? நான் ஏர்போர்ட் போறதுக்கு முன்னாலே உன்னை வந்து பாத்துட்டுப் போறேன். உன் கிட்ட வாங்கின பணத்தில்

ஐயாயிரம்பாக்கிஇருக்கில்லியா? ரொம்பத் தள்ளிப்போயிடுத்து. நாளைக்குவரச்சேபணத்தையும் எடுத்துண்டுவரேன். நீயும்சரியான

நேரத்திலே ஹெல்ப் பண்ணினே. ரொம்ப தேங்க்ஸ். நாளைக்குப் பாக்கலாமா? வச்சிடறேன்” என்று சொல்லி விட்டுப் போனைக் கீழே வைத்தான்.

 

அப்போது அறைக் கதவைத் திறந்து கொண்டு பியூன் உள்ளே வந்தான்.

“சார், டைரக்டரு உங்களை பே ரிவிஷன் பைலை எடுத்துக்கிட்டு வரச் சொல்றாரு” என்றான்.