அசோகமித்திரன்

இதயத்தில் கசிவது – ‘தண்ணீர்’ மற்றும் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நாவல்களை முன்வைத்து வெங்கடேஷ் சீனிவாசகம்

 – வெங்கடேஷ் சீனிவாசகம் – 

ஜெயமோகனின் “அறம்” வரிசை கதைகளில் எல்லா கதைகளும் பிடிக்கும் என்றாலும், ‘யானை டாக்டர்’, ‘சோற்றுக் கணக்கு’, ‘உலகம் யாவையும்’, மிகவும் பிடிக்கும். ஆனால் அதிகம் உலுக்கியவை ‘தாயார் பாதமு’ம், ‘நூறு நாற்காலிகளு’ம். ‘தாயார் பாதத்’தில், ராமனின் பாட்டியின் செய்கைகளுக்கான காரணத்தை, “அந்த பெட்பானை அப்டியே தூக்கி அவ தலைமேலே கொட்டிட்டார்” – வரியில் அறிந்தபோது உண்டான அதிர்வும், மன உளைச்சலும் இரண்டு நாட்கள் நீடித்தன. ‘நூறு நாற்காலிகளி’ல் அம்மாவின் பாத்திர வார்ப்பும், ஜெயமோகனின் எழுத்தின் அடர்த்தியால் விவரிக்கப்பட்ட அம்மாவின் வாழ்வும் மனதைக் கலங்கடித்தன.

‘தன்ணீரி’ல், ஜமுனாவின் அம்மாவைப் பார்க்க அவளும், தங்கை சாயாவும் செல்லும் அந்த அத்தியாயம், மனதை நிதானமிழக்கச் செய்வது. ஜமுனாவின் அம்மா, ‘தாயார் பாதத்’தின் ராமனின் பாட்டியை நினைவுபடுத்தினார். ஜமுனாவின் அம்மா படுத்த படுக்கையாயிருக்கிறாள். எல்லாமே படுக்கையிலேயேதான். நினைவுகள் காலத்தின் பின் உறைந்தும் இளகி ஊசலாடியும் எதையெதையோ பேசிக்கொண்டிருக்கிறாள். ஆட்களை அடையாளம் காண்பதும் கடினமாகிவிட்டிருக்கிறது. ஹாலை அடுத்த தாழ்வாரத்தில் கட்டில் போடப்பட்டிருக்கிறது.

அம்மா வாயைத் திறந்தபடி தூங்கிக்கொண்டிருக்கிறாள். அவள் முகம் உப்பியிருக்கிறது. ஜமுனா எழுப்ப, கண் திறந்து பார்த்து “யாரு சாயாவா?” என்கிறாள்.

“ஜமுனா போர்வையை விலக்கினாள். அம்மாவின் பெரும் உடலுக்கடியில் இருந்த சாக்கு விரிப்பு ஈரமடைந்து நாற்றமடித்துக் கொண்டிருந்தது. ஜமுனா மெதுவாக அம்மாவைப் பிடித்து உட்கார வைத்தாள். அம்மா உட்கார்ந்தபடி பெரிதாக மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள்.

“அம்மா, “முரளிக்கு ஒரு பஜ்ஜி கொடுக்கச் சொல்லுடி” என்றாள்.

“ஜமுனா, “சரிம்மா” என்றாள்.

““பஜ்ஜிக்குப் போய் யாராவது பயறு நனைப்பாளோடி? இரண்டு படி உங்க பாட்டி நனைச்சு வைச்சு உக்காந்து அரைடின்னா. இரண்டு படி பயறு. நான் சின்னப் பொண்ணு. புக்காம் வந்து நாலு மாசம் ஆகல்லே. அந்தக் கிழவி இரண்டு படி நனைச்சு என்னை அரைடின்னா. உங்கப்பாவும் வாயைத் திறக்கல்லே. இரண்டு படி பயறு. உரலும், ஆட்டுக் கல்லும் பாதி ஆள் உசரம் இருக்கு. அரைடீன்னா. இரண்டு படி பயறு. உக்காந்துண்டுகூட சுத்த முடியல. நின்னுண்டே அரச்சிண்டிருந்தேன். உங்கப்பாவும் வாயைத் திறக்கல்லே. உங்க அத்தைகள், தாத்தா யாரும் வாயைத் திறக்கல்லே. இரண்டு படி. நின்னுண்டே அரைச்சேன். ஒத்தர் கிட்டே வரலை. கையெல்லாம் வீங்கிப் போயிடுத்து. இரண்டுபடி பயறை நின்னுண்டே அரைச்சுட்டு ஒரு வாய் பஜ்ஜிகூட திங்காம தவிச்சேன். இரண்டு படி பயறு”

“சாயா அழ ஆரம்பிக்க, அம்மா “அழறியா? அழறதே பிரயோசனமில்லேடி. அழுதுண்டிருந்தா காரியம் ஆயிடுமா? இரண்டு படி பயறை ஊறப்போட்டு அரைன்னு சொன்னா அந்த மகராஜி. நின்னுண்டே அரைச்சேன்.””

மேலே படிக்க முடியாமல் மனது எதிர்மறை உணர்வுகளின் மொத்த உருவாகி நொய்ந்து சுழன்றது. அதன் கசப்பு, நாக்கு வரை வந்துவிடுமோ என்று பயந்து புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, கொஞ்ச நேரம் சும்மா இருந்தேன்.

இது முன்னரே, டீச்சரம்மா வீட்டுக்கு ஜமுனா போகும்போதும் தோன்றியது. டீச்சரம்மாவின் வயதான கணவரும், மாமியாரும்… அவ்வாழ்க்கைச் சூழலின் காட்சிகள் என் மனதில் அறைந்தது. டீச்சரம்மாவின் குடும்பச் சூழல் அந்த ஒரு அத்தியாயத்திலேயே அசோகமித்திரனால் மனதிற்குள் ஆணியடித்து இறக்கப்பட்டது.

வாழ்வின் விரக்தியின் எல்லைக்குச் செல்லும் ஜமுனா, தற்கொலைக்கு முயன்று முடியாமல் போக, டீச்சரம்மாவிடம் சொல்லி அழ அவள் வீட்டிற்குப் போகிறாள். அப்போதுதான் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வரும் டீச்சரம்மா ஜமுனாவைப் பார்த்து, “தண்ணி பிடிக்கக் கூப்பிட வந்தயா?” என்று கேட்கிறாள். “இல்லேக்கா, உங்ககிட்ட பேசணும்” என்கிறாள் ஜமுனா. “சித்தே இரு” என்று சொல்லிவிட்டு வீட்டினுள் சென்று புத்தகங்களை வைத்துவிட்டு பால் வாங்கி வைக்கவில்லை என்று தெரிந்ததும், ஒரு டபராவை எடுத்துக்கொண்டு ஜமுனாவிடம் வந்து “வா, முதலிலே பால் வாங்கிண்டு வந்துடலாம்” என்கிறாள். “ஒரு நிமிஷம் பேசிட்டுப் போகக்கூடாதா?” என்று ஜமுனா கேட்கிறாள். “வா, போயிண்டே பேசிக்கலாம், பால்காரன் கடையைச் சாத்திண்டு சினிமாக்குப் போயிடுவான்” என்கிறாள் டீச்சரம்மா.

ஜமுனா டீச்சரம்மாவுடன் நடந்து போகும்போது “அக்கா” என்றழைத்து, மேலே சொல்லமுடியாமல் தோளில் சாய்ந்து அழுகிறாள். டீச்சரம்மா ஜமுனாவின் முதுகைத் தடவிக் கொடுத்துவிட்டு “முதல்ல பாலை வாங்கி வந்துடலாம்” என்கிறாள்.

’என்னைவிட உனக்கு என்ன பெரிய துக்கம் வந்துவிடப் போகிறது’ என்ற டீச்சரம்மாவின் மனோபாவம் அவளது செய்கையில், நடவடிக்கைகளில் தெரிகிறது. திரும்ப வந்து ஜமுனாவின் வீட்டில், ஜமுனாவிடம் டீச்சரம்மா சொல்லும் அவளின் வாழ்வு…

”எனக்குக் கல்யாணம் ஆறப்போ என்ன வயசு தெரியுமா? பதினஞ்சுதான் இருக்கும். அப்பவே என் வீட்டுக்காரருக்கு நாப்பத்தஞ்சு முடிஞ்சுடுத்து. அப்பவே இந்த இருமல்தான். ஒரு நாள் போடி அந்த ரூம்லேன்னு சொல்லித் தள்ளினா. இவர் இருமிண்டிருந்தார். எனக்கு உங்கிட்ட சொல்றதுல தயக்கம் இல்லை. பத்து நிமிஷம் பல்லைக் கடிச்சிண்டு வெறி பிடிச்சவன் மாதிரி, ஆனா இருமாம இருந்தார். வெறி திடீர்னு ஜாஸ்தியாச்சு. தொப்புன்னு அம்மான்னு கீழே குதிச்சார். இருமல் வந்துடுத்து. நான் அந்த மாதிரி அதான் முதல் தடவை பார்க்கறேன். அவர் கண் விழியெல்லாம் வெளியிலே பிதுங்கி வரது. மூக்கிலிருந்தும், வாயிலிருந்தும் தண்ணியாச் சொட்டறது. அந்தப் பயங்கரத்தைப் பார்க்க முடியாது… இப்போ சொல்லப் போனா, அன்னியைவிட இன்னும் பயங்கரமான நாளெல்லாம் அப்புறம் வந்திருக்கு. எனக்கு அதெல்லாம் யார்கிட்டேயும் சொல்லணும்னுகூடத் தோணிணது கிடையாது. தெய்வத்துக்கிட்டே கூடச் சொல்லி அழுதது கிடையாது…”

நான் இங்கு மேற்கோளிட்டிருப்பது கொஞ்சம்; அசோகமித்திரனின் வார்த்தைகளில் கிட்டத்தட்ட மூன்று பக்கம். டீச்சரம்மா பேசி முடிக்கும்போது ஜமுனா வாயடைத்துப் போகிறாள். வெளியே மழைத் தூறல் ஆரம்பிக்கிறது. ஜமுனா டீச்சரம்மாவை டீ சாப்பிட்டுவிட்டு போகச் சொல்கிறாள்.

பொதுவாக ஜமுனாவை, நவீன தமிழிலக்கியத்தில் புனையப்பட்ட வலுவான பெண் கதாபாத்திரங்களில் ஒருவர் என்பார்கள். அப்படியென்றால் அந்த டீச்சரம்மா?…

oOo

நகரின் ஒரு தெருவின் தண்ணீர்ப் பற்றாக்குறை அவலத்தைப் பேசுகிறது ‘தண்ணீர்’; கூடவே அத்தெருவின் மனிதர்களையும், உறவுகளின் இடையிலான உலர்ந்துபோன ஈரத்தையும் காட்சிப்படுத்துகிறது. சின்னச் சின்ன அத்தியாயங்கள்; ஆனால் காட்சிகளின் செரிவும், கனமும் மனதில் சலனமுண்டாக்குபவை. ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ படித்துவிட்டு, ‘தண்ணீர்’ படித்தது ஒரு முரண் அனுபவம். ‘ஒரு மனிதன்….’ படித்து முடித்தபோது, மனது ஒரு நேர்மறை விகாசத்தால் நிரம்பி வழிந்தது; அதுவும் இயல்புவாதத் தன்மை கொண்டிருந்தாலும் (கிருஷ்ணராஜபுரம் கிராமம்), நேர்மறையான ஒரு இலக்கு நோக்கிய கனவு மிகுந்த பரவசம் அளித்தது. இயல்பின் சிற்சில எதிர்மறைகள்கூட (கிளியாம்பாளின் கணவன்) வித்தியாசமாய் துருத்திக்கொண்டு தெரியவில்லை. நேரையும், எதிரையும் ஒன்றுபோல் ஆகர்ஷிக்கும் பேரன்பின் சாரல் போல் மனது நனைந்து கொண்டே இருந்தது.

ஏன் அசோகமித்திரனைப் படிக்கும்போது ஜெயகாந்தன் ஞாபகம் வருகிறார்?; மனதில் மெல்லிய புன்னகை வந்தது. ஞாபகம் வராவிட்டால்தானே ஆச்சர்யப்பட வேண்டும். அசோகமித்திரனின் உலகம், அசோகமித்திரனின் அவதானிப்புகள் என்னை ஆச்சர்யம் கொள்ள வைக்கின்றன. ‘தண்ணீர்’ கலவையான ஓர் வாசிப்பனுபவத்தை அளித்தது. வண்ணநிலவன் ‘தண்ணீர்’ அசோகமித்திரனின் சிறந்த படைப்பு என்கிறார். நூறு பக்கங்கள்தான்; ஆனால் சுண்டக் காய்ச்சிய பால் போல முன்னூறு பக்கங்களின் அடர்த்தி. இக்கதைக்கு இக்குறுநாவல் வடிவம்தான் சரியென்று தோன்றுகிறது. விரிந்து நாவலாகியிருந்தால், இப்பாலையின் வெப்பத்தை தாங்கியிருக்க முடியுமா என்று தெரியவில்லை. தண்ணீர், எதிரைக் காட்டி, நேரை நோக்கி பார்வையைத் திருப்புகிறதோ?

கார்த்திக் சுப்புராஜின் ‘இறைவி’ மழையோடு துவங்கும்; மழையோடு முடியும். ‘இறைவி’ எடுக்கப்பட்ட விதம், காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால், அக்கதை… (மூன்று ஆண்கள், அவர்களின் அப்பா கொண்ட ஒரு குடும்பம்; அக்குடும்பத்தில் வாழ வரும் பெண்கள் சந்திக்கும் வாழ்க்கை நிகழ்வுகள்…) படம் பார்த்து முடித்தபோது, மனம் இனம்புரியாத தவிப்பில் இருந்தது. ‘தண்ணீர்’ முடித்தபோதும்.

​”ஏதோ ஒரு வகையில் வாழ்க்கை ஈரமாகத்தான் இருக்கிறது. இன்று ஈரம் அற்றது எனத் தெரிவது எல்லாம் எப்போதோ ஈரத்துடன் இருந்தவை, இடையில் ஈரம் உலர்ந்தவை, இனியொரு நாள் மீண்டும் ஈரமாக இருக்கச் சித்தமானவைதான் இல்லையா. இந்த ஈரம் மழையினுடையதா, நதியினுடையதா, வியர்வையினுடயதா, கண்ணீரினுடையதா, ரத்தத்தினுடையதா?​” (வண்ணதாசன்)

முன் நின்று கல் நின்றவர்

மூன்று வாரங்களுக்கு முன், சூரியன் பிரகாசமாக புன்னகைத்துக் கொண்டிருந்த ஓர் வேலை நாள். காலை 8:30 மணி. கனத்த போர்வையாக குளிர். வழக்கமாக இந்த நேரத்தில் அலுவலகம் செல்லும் வழியில் கிட்டதட்ட பாதி தூரத்தைக் கடந்து கொண்டிருப்பேன். ஆனால் அன்று இருபது நிமிடங்களாக ஒரே இடத்தில் என் கார் நின்று கொண்டிருந்தது.

வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 20 மைல்கள் கிராமப் பாதையில் போய், பின்னர் ஒரு மோட்டார் சாலையில், பெரு வழிகள் சாலையில் போய் இணையும் சந்திப்பிற்கு ஒரு மைல் தொலைவிற்கு முன்பிருந்தே, கார்கள் தேக்க நிலையில் இருந்தன. அவ்வப்போது மெல்ல ஊர்ந்தன. நானும் சாலையின் இரு புறங்களையும் பார்த்துக்கொண்டே ஊர்ந்தேன்.

கடந்த இரு வருடங்களுக்கு மேலாக இந்தச் சாலையில் போய் வந்து கொண்டிருந்தாலும் இப்போது கண்களில் படுபவை இதுவரை படாதவை. வலது புறம் பெரிய புல்வெளி மேடு. மேட்டின் உச்சியில், தூரத்தில், சடசடக்கும் கொடிகள் போல சிறுமரங்கள். சட்டென ஒரு ராட்சச பறவை போல், தாழப் பறக்கும் கிளைடர் விமானம் போல் மேக நிழல், சாலையை, என் காரை, தடவி, கடந்து செல்வதை கவனித்தேன். அது அப்புல்வெளியை அலை அலையாய் நடுக்கிவிட்டு, சாரலாகத் தூவிவிட்டுச் சென்றது. ஒரு நிமிடத்திற்கும் குறைவாகத்தான் இருக்கும். நிழல் கடந்தவுடன் சூரியன் திரும்ப பிரகாசமாக புன்னகைத்தான்.

புல்வெளி முழுக்க துளிநீர் மின்னிக்கொண்டிருந்தது.

சட்டென இமைப்பன என்ற வார்த்தை தோன்றியது. மின்னி மின்னி தெரிவதை இமைப்பன என்ற வார்த்தையால் கம்பர் குறிப்பிட்டிருப்பது நினைவிற்கு வந்தது. கூடவே, ஒரு குறள் நினைவிற்கு வந்தது. பலமுறை நினைத்து புன்னகைத்துக் கொண்ட குறள்தான் அது.

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது

விசும்பு என்ற சொல்லிற்கு, பொதுவாக மேகம், வானம் என்ற பொருள் எடுத்துக்கொள்ளப்பட்டாலும் அதை விண்வெளியாக எடுத்துக்கொண்டு அக்குறள் இன்னொரு திறப்பு நிகழ்த்தியிருப்பதைப் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் பலமுறை சிலாகித்துப் பேசியிருக்கிறார்.

குழந்தை ரயில் வண்டிப் பெட்டிகள் போல் தொடர்ச்சியாய், ஒன்றையொன்றை சிறு முடிச்சுகளால் தொட்டுக்கொண்ட எண்ணங்கள் தொடர்ந்து வந்தன. அல்லது ஒரு கட்டுரைக்கு கொடுக்கப்பட்ட tags போல.
விசும்பிலிருந்து புல்லும், புல்லிருந்து குறளும், குறளிலிருந்து ஜெமோவும் வந்தபின், இந்த வருடம், 2017 ஜனவரியில் அவர் கோவையில் மூன்று நாட்களாக நிகழ்த்திய “குறளினிது” என்ற தலைப்பில் ஆற்றிய உரைகளும் நினைவிற்கு வந்தன.

தேய்வழக்கு – இந்த சொல்லிற்கு உடனடியாக ஓர் உதாரணம் சொல் என்றால் திருக்குறள் என்று சொல்லி விடலாம். அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் திருக்குறள் கையாளப்பட்டு வந்திருக்கிறது. கொதிக்கும் பஸ்ஸினுள்ளும் கொந்தளிக்கும் அரசியல்வாதிகளின் பேச்சுகளிலும் எங்கெங்கும் தென்படுவது ஆச்சரியம்தான்.
திருக்குறளிற்கான உரைகளுடனும் மொபைல் ஆப்களே வந்துவிட்டன. சலிக்கச் சலிக்க, சுற்றிச் சுற்றி எங்கும் தென்பட்டாலும், பொன், பொன்தானே.

குறளை ஒரு கவிதை நூலாக வாசிக்கலாம் என்று தன் உரையில் குறிப்பிட்டார் ஜெயமோகன். குறள் நீதி நூல் அல்ல; கவிதை வடிவில் நீதியைச் சொன்ன நூல். அந்த மூன்று நாள் உரைகளின் முக்கிய சாரங்களில் ஒன்று இது. அவரது பார்வைகளில், கட்டுரைகளில், அதிகம் கவனத்தை ஈர்க்காதவைகளில், திருக்குறளைப் பற்றிய பார்வையும் ஒன்று என்பது என் எண்ணம்.

இன்றைய தமிழ் சூழலில், அதிகம் பேசப்பட்ட குறள்களையும் அதிகம் பேசப்படாத குறள்களையும் எடுத்தாண்டு ஆற்றிய மிக முக்கிய உரையானது அது.

அதில் ஒரு குறளை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

நடுகற்கள் என்பவை இந்தியாவில் மட்டுமல்லாது உலகமெங்கும் இருந்திருக்கும் ஓர் வழக்கம்.
இங்கிலாந்தில், Stonehenge என்ற இடத்து பிரமாண்ட நடுகற்களை இதுவரை இரண்டு முறைகள் பார்த்திருக்கிறேன்.

என்னை முன் நில்லன்மின் – என்று துவங்கும் ஒரு குறளின் விளக்கங்களின் சாரம்- பகைவர்களே! என் தலைவன் முன் (எதிர்த்து) நிற்காதீர்; அப்படி நின்றவரெல்லாம் தற்போது நடுகல்லாய் நின்று கொண்டிருக்கிறார்கள், நீங்களும் அப்படி மாறப்போகிறீர்கள் என்று பகைவரை எச்சரிக்கை செய்தலாகும்.

என்னை முன் நில்லன்மின்-தெவ்விர்! பலர், என்னை
முன் நின்று கல் நின்றவர்.

ஜெயமோகன் தர்மபுரியில் வாழ்ந்த வந்த காலத்தில் ஒரு முறை கவிஞர் திரு. விக்கிரமாதித்யன், அவரைச் சந்திக்க அங்கு போயிருக்கிறார்.

இருவரும் மாலையில் அதியமான் கோட்டை என்ற இடத்தில் இருக்கும் ஏரிக்கரையில் நின்றிருக்கும் பல நடுகற்களை பார்த்துக்கொண்டே நடக்கிறார்கள். வேறு யாருமே அங்கில்லை. சூரியன் மறையும் நேரம். தன்னை விட மிக நீண்ட நிழல் கொண்ட நடுகற்கள். விளக்க முடியா சோகம் கவ்வும் தருணம். அந் நேரத்தில் கவிஞர், அதியமானை எதிர்த்து நின்றவர்கள் நிற்கும் நடுகற்கள் இவை என இக்குறளை நினைவு கூறுகிறார்.
ஜெயமோகனுக்கு அக்குறள் தரும் திறப்பு வேறு.

இவ்வுலகின் பேரரசன், காலம்தான். மாபெரும் சக்கரவர்த்தி. THE EMPEROR. மாந்தர்கள் அனைவருமே அச்சக்கரவத்தியின் பகைவர்கள்தான். அவன் முன்னால் எவரும் தோற்றே ஆக வேண்டும், கற்களாகத்தான் நின்றே ஆகவேண்டும். எவரும் வெல்ல முடியாது; தப்ப முடியாது. உடல் கொண்டு நிற்பவர், என்றாவது ஒரு நாள் கல் கொண்டு நிற்கத்தான் வேண்டும்.

என் ஐ (அரசன்) முன் நின்று கல்லாய் நின்றவர்….

இப்புவி, காலத்தின் பகைவர்களாகிய நமது நடுகற்களால் நிறைந்திருக்கிறது.

காலந்தோறும் நடந்து கொண்டிருப்பதுதான் இது. ஆனால் குறளின் வடிவில், இந்த திறப்பு நிகழும் போது கண நேரம் உறைந்துவிட்டேன்.

நேரடி விளக்க “கல்லாய்” இறுகியிருக்கும் குறள், உண்மையில் விதையாய், அச்சொற்களின், அவ்வாக்கியங்களின் அனைத்து சாத்தியங்களாகவும் திறக்கும் சிறந்த உதாரணம் இந்த உரை.

எல்லாரும் ஒரு நாள் நடுகல்லாய்தான் போக வேண்டும் என்றாலும் சிலரின் கற்கள் பெரியதாயும் நீண்டதாயும் ஆகின்றன. அவர்களது எண்ணங்களால், செயல்களால், படைப்புகளால்.

இந்தக் குறள் சொற்பொழிவின் இரண்டாம் நாளன்றுதான் வானவன் மாதேவி இயற்கை எய்துகிறார். அதை அன்றைய சொற்பொழிவின் ஆரம்பத்தில் ஜெயமோகன் குறிப்பிடுகிறார். இனி என்றைக்கு, யார், இந்த உரைகளை கேட்கும் போதும் வானவன் மாதேவியைப் பற்றி எண்ணாமல் இருக்கமுடியாது. வானவன் மாதேவியின் கல் நிச்சயம் பெரியதாய், அவரது மனவுறுதியாலும் செயல்களாலும் நிறைந்திருக்கும்.

23 மார்ச் அன்று இயற்கை எய்திய தமிழின் மிக மிக முக்கிய எழுத்தாளர், திரு.அசோகமித்திரன் அவர்களின் கல் அவரது படைப்புகளால் ஆனது. மாலை நிழலைவிட மிக நீண்டதாய், ஆனால் எக்காலத்திலும் குறையா நீளமாயும், உறுதியும் நிறைந்திருக்கும். பிரமாண்டதாய் உயர்ந்திருக்கும்.

உண்மையில் புலிக்கலைஞன் அசோகமித்திரன்தான். படைப்புலக காட்டில், அவர் ஒரு நிஜப்புலிதான். மிகக் கம்பீரமான புலி. வெளியிலிருந்து புரியாமல் பார்ப்பவர்களுக்குத்தான் அவர் வெறும் புலி வேஷம் கட்டினவர். கல் நின்றவர், பெருங்கல் நின்றவர், அழியா கல் நின்றவர் அசோகமித்திரன். காலமெனும் சக்கரவர்த்திக்கு எதிராய் பெருங்கல்லாய், பேரமைதியாய், கம்பீரமாய் நிற்கிறார் – அவருக்கு வணக்கங்கள்.

அசோகமித்திரனுக்கு ஒரு அஞ்சலி – எஸ். சுரேஷ்

எஸ். சுரேஷ்

அசோகமித்திரனை வாசிக்கும்போது, முதல் பார்வையில் அவர் எப்படிப்பட்ட எழுத்தாளர் என்பதைச் சுலபமாக வரையறை செய்து விடலாம் என்று தோன்றுகிறது. சாதாரண மனிதர்களைப் பற்றி எழுதிய ஒரு யதார்த்தவாதி, என்று சொல்லி விடுகிறீர்கள். அதன் பின் தொடர்ந்து வாசிக்கும்போது உங்கள் பார்வை விரிகிறது, அசோகமித்திரன் பற்றிய உங்கள் கணிப்பும் விரிவடைகிறது. அவர் அபத்தங்களை எழுதியவரா? நம் வாழ்வின் அபத்தம் மிகுந்த கணங்களை எடுத்துக் கொண்டு அவற்றுக்கு வெளிச்சமிட்டவரா? அவரது எழுத்தில் இருத்தலியல் சிக்கல்களுக்கு இடமுண்டா, என்று கேட்டுக் கொள்கிறீர்கள். உங்கள் கேள்விகள் அத்தனைக்கும், ‘ஆம்,’ என்ற பதில் உரத்து ஒலிக்கிறது. அதன் பின் இன்னும் கொஞ்சம் படிக்கிறீர்கள். அவரது கதைகளில் மாயங்கள் நிகழ்வதைக் காண்கிறீர்கள். அவரது கதைகளின் வெளி தொடர்ந்து விரிகிறது, ஆனால் அவற்றின் ஒருமைப்பாடு ஒரு போதும் குலைவதில்லை. அசோகமித்திரனை எந்த வகைமைக்குள்ளும் முழுமையாய்ப் பொருத்த முடியாது என்று மெல்ல மெல்ல நீங்கள் உணர்கிறீர்கள். அசோகமித்திரன் நம் வாழ்வைப் பற்றி எழுதினார்- அவரது எழுத்து, வெளிப்பார்வைக்கு மிக எளிமையாகத் தெரிந்தாலும், நம் வாழ்வைப் போலவே சிடுக்குகள் நிறைந்ததாய் இருக்கிறது.

அசோகமித்திரனின் குவிமையம் வெளிச்சமிடுவதுதான், அதை அவர் பலவகைகளில் நிகழ்த்துகிறார். நம் அன்றாட வாழ்வின் அற்ப சந்தோஷங்களில், அச்சங்களில், ஏமாற்றங்களில் அவர் ஒளியூட்டுகிறார். ஒரு சிறு நிகழ்ச்சி மனிதர்களைப் பற்றி நிறைய சொல்கிறது. அவரது கதைகளில் ஒன்றில், கையில் ஒரு பைசா இல்லாத ஒருவன், இருபத்தைந்து பைசா கடன் கேட்க தன் நண்பன் வீட்டுக்குச் செல்கிறான். அந்தக் காலத்தில் பஸ் டிக்கெட்டின் விலை அது. அவன் தன் நண்பன் வீட்டுக்கு வந்ததும்தான் தெரிகிறது, அவன் வெளியே எங்கோ போயிருக்கிறான் என்பது. அவனது மனைவி காய்கறிக்காரனிடம் ஏதோ வாங்கிக் கொண்டிருக்கிறாள்- அவனுக்கு அவள் பணம் கொடுக்கும்போது ஒரு இருபத்தைந்து பைசா கீழே விழுந்து விடுகிறது, அவள் அதைக் குனிந்து எடுத்து வைத்துக் கொள்கிறாள். அவன் தன் வீட்டுக்குத் திரும்புகிறான். கதை முடிகிறது. அந்தப் பெண்ணின் கையிலிருந்து விழும் இருபத்தைந்து பைசாவில்தான் கதை இருக்கிறது. அவனுக்கு அது கிடைத்தால் போதும், ஆனால் அதை அவன் வாய்விட்டு நண்பனின் மனைவியிடம் கேட்க முடியாது. கதை நம் உள்ளத்தில் தொடர்ந்து விரிகிறது.

இதுதான் அசோகமித்திரனின் தனித்தன்மை. அவரது கதைகள் நம்முள் நிலை கொள்கின்றன, நினைவை விட்டு நீங்க மறுக்கின்றன. “புண் உமிழ் குருதி” என்ற கதையில் வருவது போல், அவை நம்முள் ரத்தம் சுரக்கின்றன. இப்போது சொன்ன கதையும்கூட மானுட நிலையை அருமையாக விவரிக்கிறது. உண்மை பிடி கொடுப்பதில்லை. எப்போதும் சந்தேகம் தீர்வதில்லை, முழு உண்மை வசப்படுவதில்லை. ஒரு பெயிண்டர், ஏழை, பஸ் ஒன்றில் பயணிக்கிறான். அங்கு ஒரு முதியவர் அவனிடம் பரிவுடன் பேசுகிறார். பஸ்ஸை விட்டு கீழே இறங்கியதும்தான் அந்த பெயிண்டருக்கு தன் பாக்கெட்டில் இருந்த பணம் திருட்டு போயிருப்பது தெரிகிறது. முதியவர்தான் தன்னிடம் திருடியிருக்க வேண்டும் என்று அவன் முடிவு செய்கிறான். பின்னொரு நாள் எதிர்ப்படும் அந்த முதியவரை வழிமறித்து குற்றம் சாட்டவும் செய்கிறான். ஆனால் அந்த முதியவர் தனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்கிறார். பெயிண்டர் குழம்பிப் போகிறான். எது உண்மை, அவனது மனக்காயம் ஆறுவதாயில்லை. இந்தக் கதையைப் படித்து முடித்ததும் நம்மால் நம் வாழ்வை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடிவதில்லை. நம் வாழ்வில் நிறைய விஷயங்கள் சந்தேகங்களால் செலுத்தப்பட்டிருக்கின்றன. உண்மை என்ன என்று தெரியாமல், ஏதோ ஒரு சந்தேகத்தில், அந்த பெயிண்டரைப் போல் நாமும் நடந்து கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் இப்படிதான் வாழ்ந்தாக வேண்டும். போர்சுகீசிய கவிஞர் பெசோவா சொல்கிறார், “ஒரு மனிதன் சொல்வது, வெளிப்படுத்துவது எல்லாமே முழுமையாய் அழிக்கப்பட்ட பிரதியின் விளிம்பில் எழுதப்பட்ட குறிப்பே. குறிப்பில் இருப்பதைக் கொண்டு பிரதியில் என்ன இருந்திருக்கும் என்பதன் சாரத்தை நாம் பெற முடியும், ஆனால் எப்போதும் ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது, அர்த்தங்களின் சாத்தியங்கள் பல”. இந்தக் கதையை பெசோவாவின் மேற்கோள் கச்சிதமாய் விவரிக்கிறது.

அசோகமித்திரன் சிறு நிகழ்வுகளின் கவிஞன் மட்டுமல்ல. சில கதைகளில், ஒரு சிறு நிகழ்வில் முழு வாழ்வே கண்முன் விரிகிறது. ‘தொப்பி’ கதையில் தன் அப்பா அவமானப்படுத்தப்பட்ட இடத்துக்கு ஒருவன் வருகிறான். அப்போது அவன் சிறுவனாக இருந்தான் என்றாலும் அப்பாவுக்கு ஆதரவாக ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற இயலாமை அவன் இதயத்தைப் பிணித்துக் கொண்டிருக்கிறது. கதைச் சூழலும் மொழியும் எனக்கு ரூல்ஃபோவையும் மாய யதார்த்த எழுத்தையும் நினைவுபடுத்தின. இந்தக் கதை மாய யதார்த்த வகை இல்லைதான், ஆனால் ரூல்ஃபோவைப் படிக்கும்போது உங்கள் அனுபவம் எப்படியிருக்கிறதோ அதற்கு மிக நெருக்கமான அனுபவத்தை இந்தக் கதை தருகிறது. நம் வாழ்வின் முக்கியமான மற்றொரு இயல்பை இந்தக் கதை வெளிச்சமிடுகிறது. நாம் அனைவரும் ஆறா வடுவொன்றோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சரியான பதில் அளிக்க முடியாத ஒரு அவமானம். நம் உயிரைப் பிணிக்கின்றது, முடிவில் நாம் யார் என்பதையும் தீர்மானிக்கின்றது.

“பாவம் டல்பதடோ” கதையும் இப்படிதான். மாயத்தன்மை கொண்ட ஒரு பின்புலம். தன் மகளின் இழப்பை எதிர்கொள்ள முடியாத ஒரு முதியவரின் தவிப்பு. நேரடியான கதையாகவே வாசிக்க முடியும், ஆனால் நான் இதை ஒரு மிகுகற்பனைக் கதையாக வாசிக்க விரும்புகிறேன். இத்தனையும் நிஜமாகவே நடந்ததா, அல்லது நிம்மதி பெற முடியாத ஒருவர் அழிவுக்கெல்லாம் தன்னையே குற்றம் சொல்லிக் கொண்டு ஆறுதல் அடைகிறாரா? இந்தக் குறுநாவல் மனதைத் தடுமாறச் செய்யும் ஒன்று, முன் சொன்னது போல், நம்முள் குருதி சுரக்கச் செய்கிறது. இழப்பை வாசகனாலும் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. வாழ்வுக்கும் சாவுக்கும் உரிய அபத்தம் நம்மைத் தாக்குகிறது – எத்தனை செய்து என்ன சாதித்து என்ன, நம் உணர்ச்சிகள் ஒரு சிலரை மட்டுமே சார்ந்து இருக்கின்றன. அவர்களில் ஒருவரை இழந்தாலும் அதிலிருந்து மீள முடிவதில்லை.

அசோகமித்திரனை அபத்தங்களின் கவிஞன் என்றும் சொல்லலாம். ஏறத்தாழ நிஹிலிசம் என்றே சொல்லப்படக்கூடிய அளவில் ‘பயணம்’ போன்ற கதைகள் வாழ்வின் பொருளையும் நோக்கத்தையும் கேள்விக்குட்படுத்துகின்றன. யோகியும், வழிபாடுகுரியவருமாய் இருந்த ஒரு ஆன்மீக குருவின் வாழ்வு அபத்தமான வகையில் முடிவுக்கு வருவது, வாழ்க்கையில் உள்ள எல்லாவற்றையும் குறித்து நம்மைச் சிந்திக்கச் செய்கிறது. ‘மணல்’ கதையில் அம்மா திடீரென்று இறந்து போவது சரோஜினி வாழ்வை புரட்டிப் போடுகிறது. ‘இன்னும் சில நாட்கள்’ கதையில் சாமிநாதனின் கதி, ‘மாலதி’ குறுநாவலில் மாலதியின் வாழ்க்கை, பெற்ற குழந்தையின் திருமணத்துக்கு முந்தைய நாள் கணவன் காணாமல் போனபின் அவனது மனைவி வாழும் வாழ்க்கை, எல்லாமே மானுட வாழ்வின் அபத்தங்களைச் சுட்டுகின்றன. யாராலும் தம் விதியை மாற்ற முடிவதில்லை. ஆனால் அசோகமித்திரன் விதி வலியது என்ற நம்பிக்கை கொண்டவரல்ல. அவரது பாத்திரங்கள், சரோஜினியும் மாலதியும் தம் சூழலுக்கு எதிராய் போராடுகின்றனர், அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். ஆனால் அதுவல்ல அசோகமித்திரனின் அக்கறை. வாழ்வின் தீர்மானமின்மை குறித்து நாம் அறியாதிருத்தல், அதுதான் அவரது மையக் கவலை.

அசோகமித்திரனின் படைப்புகளில் பெரும்பாலானவற்றில் கடவுள் இல்லை. அவர் சமயம் பற்றியோ தெய்வநம்பிக்கை பற்றியோ அதிகம் பேசியதில்லை. அது அவரது மைய அக்கறையாக இருந்ததில்லை. சிக்கலான சூழ்நிலைகளில் அகப்பட்டுக் கொள்ளும் பாத்திரங்களைக் காப்பாற்ற கடவுளோ தெய்வ நம்பிக்கையோ கை கொடுப்பதில்லை. மாறாய், அவர் எல்லாவாற்றையும் தர்க்கப்பூர்வமாய் காண்கிறார். அவரது கூர்மையான பார்வையில் கடவுளின் தேவையில்லை. அவர் மனிதர்களை மனிதர்களாய் பார்த்தார். அவர்களை மறைக்கும் அடையாளங்களை அகற்றி அவர்களின் மானுடத்தை வெளிச்ச்சமிட்டார். அதனால்தான் வேலை நியமன உத்தரவு பெற்ற இஸ்லாமியர், லாரி சக்கர ட்யூப்களில் காலணி அணிந்து சாலை போடும் தொழிலாளி, தன் பணத்தை இழக்கும் பெயிண்டர்- யாராக இருந்தாலும் நம் உணர்வுகளைத் தொடுகிறார்கள். அவர்கள் உண்மையாய் இருப்பது அசோகமித்திரன் அவர்களைச் சாதாரண மனிதர்களாய் காட்டுவதால்தான். அடையாளங்களால் பிரிந்து நிற்கும் மனிதர்களாய் அவர்களை பார்க்கிறார்.

இந்த மானுட நேயம்தான் அசோகமித்திரனை குறியீடுகளுக்கு அப்பால் பார்க்கச் செய்கிறது. ஒரு சிறுகதையில், மணப்பெண் தான் காதலித்தவனைத் திருமணம் செய்து கொள்ளும் நாளன்று தன் முடிவு சரியானதுதானா என்று மீண்டும் தன்னைக் கேட்டுக் கொள்கிறாள். எது மகிழ்ச்சியான தருணமாக இருந்திருக்க வேண்டுமோ, அது அந்த நாளைய நிகழ்வுகளைத் தொடர்ந்து சுய-ஐயங்களுக்கான கணமாக மாறுவதை அசோகமித்திரன் சித்தரிக்கிறார். இது போன்றதுதான் முதல் முறையாக நடிக்கும் நடிகை பற்றிய கதையும். நடிகையில் அம்மாவைக் கவனிக்கிறார் அசோகமித்திரன், திரையுலகத்தின் அபத்தங்கள் குறித்து அவர் வருந்துவதாய் கதை முடிகிறது.

மொழிபெயர்க்கப்பட்ட அசோகமித்திரன் சிறுகதைகள் தொகுப்பின் முன்னுரையில் பால் சக்காரியா, அசோகமித்திரன் கதையின் பெண் பாத்திரங்கள் குறித்து எழுதுகிறார். பெண்கள்பால் அசோகமித்திரனுக்கு உள்ள பரிவு மிகப் பெரியது. அவர்கள் நிலையை அவர் உணர்ந்திருக்கிறார், ஆணைவிட பெண்ணிடமே சமூகம் தன் குரூர முகத்தைக் காட்டுகிறது. புரிதலால் ஒத்திசைவு ஏற்படுகிறது, இந்த ஒத்திசைவுதான் பாத்திரங்களின் போக்கைத் தீர்மானிக்கிறது. அசோகமித்திரனின் கருணை கடல் கடந்து, அமெரிக்காவையும் அணைத்துக் கொள்கிறது- அவரது ‘ஒற்றன்’ நாவலில் பல்வேறு தேசங்களைச் சேர்ந்த பெண்கள் புரிந்துணர்வுடன் விவரிக்கப்படுகின்றனர்.

புரிந்துணர்வின் மறுபக்கமாக இன்னொன்று சொல்லலாம் – அசோகமித்திரனின் புரிந்துணர்வு காரணமாகவே அவர் எதையும் காவியத்தன்மை கொண்ட கதையாகப் பார்ப்பதில்லை. ஹைதராபாத் மாகாணத்தில் இந்திய சுதந்திரத்தால் ஏற்பட்ட விளைவுகள் ஒரு காவியத்துக்கு உரிய அத்தனை தன்மைகளும் கொண்டவை. இந்து-முஸ்லிம் பிரிவினை, கொலைகார ரஜாக்கர் இயக்கம், நிஜாமின் சரணாகதி, அதைத் தொடர்ந்து இந்து-முஸ்லிம் கலவரங்கள். இது போன்ற ஒரு களம் பல எழுத்தாளர்களுக்கு உற்சாகம் அளித்திருக்கும். ஆனால் அசோகமித்திரன், தான் இப்போது வரலாற்றின் அங்கமாய் இருப்பதை அறியாத ஒரு சிறுவனின் பார்வையில் வரலாற்று மாற்றங்களை விவரிக்கிறார். ‘பதினெட்டாம் அட்சக்கோடு’ நிச்சயமாக அசோகமித்திரனின் சிறந்த நாவல்தான். இது போன்ற கதைகளை கொந்தளிப்புடனும் சார்புடனும் அணுகும் பிற நாவல்கள் போலில்லாது பதினெட்டாம் அட்சக்கோட்டில் வெளிப்படும் கருணையே அதைத் தனித்துக் காட்டுகிறது. இந்த நாவலின் இறுதிக் கட்டம் மிகவும் உக்கிரமானது. இங்கு இந்தக்க் கதையின் நாயகன் இளம்பருவத்தைக் கடந்து ஒரு முழு ஆணாய் மனதளவில் வளர்ந்து தன்னைச் சுற்றியுள்ள கொடூரத்தை திடீரென்று புரிந்து கொள்கிறான். வெறுப்பு உமிழ்பவர்கள் அனைவரும் படித்தாக வேண்டிய நாவல் இது, குறிப்பாக இதன் இறுதி பக்கங்கள். பிரிவினை மரணம், அழிவு, நம் மானுடத்தின் இழப்பு என்று தீயவைக்கே கொண்டு செல்கிறது. அசோகமித்திரன் இதை மென்மையான குரலில் சொல்கிறார், ஆனால் அது நம்முள் எதிரொலிக்கிறது. அசோகமித்திரனை வாசித்தும் பிறரின் உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு, இன்னும் மேன்மையான மனிதர்களாய் நாம் மாறவில்லை என்றால் நம்மிடம் ஏதோ குறையிருக்கிறது என்றுதான் பொருள்.

அசோகமித்திரனின் ‘துரோகங்கள்’

ஆர்.அஜய்

18 வயதில், தன்னை விட ஒரு வயது அதிகம் இருக்கக்கூடிய சக மாணவி ரஞ்சனியைப் பெண் கேட்டு அவள் வீட்டிற்கு நீலகண்டன்     செல்வதுடன் ‘துரோகங்கள்’ கதை ஆரம்பிக்கிறது. அசோகமித்திரனின் தொடர்வாசகனுக்கு மிகவும் பரிச்சயமான, சுதந்திரம் நெருங்கும் காலகட்டம்.  பதின் வயதிற்கு உரிய குறுகுறுப்பும் அயல் பெண்களுடன் பழகுவதில் தயக்கமும் கொண்ட   அ.மியின் பாத்திரங்களில்  (நாகரத்தினத்தின் மீது ஈர்ப்பும் அவளை அணுகத் தயக்கமும் கொண்ட சந்திரசேகரன் ஒரு முன்னுதாரணம்) நீலகண்டன்  மாறுபட்டிருக்கிறார்.

பெண் கேட்டு வந்ததைப் பார்த்து ரஞ்சனியின் வீட்டில் முதலில் அதிர்ச்சி அடைந்தாலும், ரஞ்சனி  ஒப்புக்கொண்டபின் அவர்களும் சம்மதிப்பதாக சொல்வதோடு, ஒரு மாதத்திற்கு  வீட்டிற்கு வரக்கூடாது என்றும்  நிபந்தனை விதிப்பவர்கள், கெடு முடிவதற்குள் மெட்ராஸிற்கு குடி பெயர்ந்து விடுகிறார்கள். 18 வயதில் நீலகண்டனுக்கு  இந்த  தைரியம் எப்படி வந்தது என்பதற்கு  எந்த முகாந்திரமோ அதை விவரிப்பதற்கான  சூழலோ  கதையின் போக்கில்    இல்லை என்பது ஒருபுறமிருக்க ரஞ்சனியின் தந்தை சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டு முப்பது நாட்கள் அந்தப் பக்கம் வராமல் இருப்பதில் உள்ள பேதமைக்கும்  பெண் கேட்டுச் செல்வதற்கும் அதிக வித்தியாசம் இல்லை என்றும் தோன்றுகிறது.

ரஞ்சனி சென்னை போனபிறகு நடக்கும் சம்பவங்கள்  வாசகனுக்கு ஆசுவாசமளிக்க  வேண்டும் என்று திணிக்கப்படவில்லை.  உடம்பிற்கு முடியவில்லை என்று சாதாரணமாக மருத்துவமனைக்குச் செல்லும் தந்தை திரும்பி வரவில்லை என்று ஒற்றை வரியில் நீலகண்டன் சொல்லிச் செல்வதன்  பின்னால்  அந்தப் குடும்பத்தின் அன்றாட வாழ்க்கை தலை கீழாகிப்போன வரலாறு உள்ளது.

சிறிது காலம் கழித்து நீலகண்டன் குடும்பம்  மெட்ராஸ் வருகிறது.   அக்காவை அவன் கணவனிடம் அழைத்துச் செல்ல,  அவன் அவர்களைத்  துரத்தி விடுவது, குடும்பத்தைத் தாங்க வேண்டிய பல சூழ்நிலைகள் என அ.மி.யின் புனைவுகளில் ஏற்கனவே பார்த்ததுதான்;  சிறிது காலம் ரஞ்சனியை தேடினாலும் வாழ்க்கை  நீலகண்டனைத் தன் போக்கில் இழுத்துச் செல்வதை -திருமணம், குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆவது – வழக்கமான நேர்த்தியோடு பதிவு செய்கிறார்.   ‘அவனுடைய  பெற்றோர் முகம் கூட  மறந்துவிட்டது’ என்று ஒரு இடத்தில்  முதுமை தரும் குரூரமான யதார்த்தத்தின் சுட்டுவது போல் காலச் சுழற்சி சிக்கனமாக  பதிவு செய்யப்படுகிறது. ஒரு கட்டத்தில் கண்ணாடியில்  பார்க்குமபோது அவர் முகமே வேறு யாருடையது போல் தெரிகிறது.

நீலகண்டனின் அக்கா பெயர் கொண்டுள்ள பெண்ணை தனக்குத் தெரிந்த  வயதான பெண்ணொருவர்  அடிக்கடி கேட்டுக்கொண்டிருப்பார் என்று அவருக்கு  ஒருவர் சொல்ல அப்பெண்ணின் வீட்டிற்கு   செல்கிறார் நீலகண்டன். வாசகன் யூகிப்பது போல் அது ரஞ்சனிதான். ஆனால் பல பத்தாண்டுகளுக்கு பின்னான சந்திப்பை  உணர்ச்சிகரமாக ஆக்க அ.மி முயலவில்லை. தன் அக்காவின் பெயரை சொல்லித் தேடியவர் யார் என்று நீலகண்டனுக்கு ரஞ்சனியை நேரில் கண்ட பிறகும் அடையாளம் காண முடியவில்லை. இருவர் மனதிலும்  இத்தனை ஆண்டுகளாக பொத்தி வைக்கப்பட்டிருந்த ஏக்கம் அர்த்தமற்றதோ என்ற சந்தேகத்தை எழுப்பும் அதே நேரம் யாருக்கும், எந்த மெல்லுணர்வுக்கும் கருணை காட்டாத  காலத்தின் பிணைப்பில்  இருந்து  நீலகண்டனும் தப்பவில்லை   என்று  மீண்டும் புரிகிறது.  அவர்  பெற்றோரின்/தன் முகத்தையே நினைவு கூற தடுமாறும் ஆசாமியாகி விட்டாரே.

நடைமுறை வாழ்வில் தர்க்கத்திற்கான மதிப்பு அதிகப்படியாகத்தான் தரப்படுகிறது என்றாலும்,  நீலகண்டனின் பெயரைச் சொல்லி தேடாமல் அவர் அக்காவின் பெயர் சொல்லி தேடுவதற்கான காரணத்தை ரஞ்சனி கூறுவது  வாசகனின் மனதில் கண்டிப்பாக அது குறித்து  எழும்  கேள்வியை முன்கூட்டியே யூகித்து கதையில் அதற்கான பதில் இருக்க வேண்டும்  என்ற அளவில் மட்டுமே பொருந்துகிறது.

 ரஞ்சனி திருமணம் செய்துகொள்ளவில்லை.  ‘எனக்கு உன்னோட  ஆன கல்யாணம்தான்டா’ என்று  ஒற்றை வரியில் அதை ரஞ்சனி முடித்து விடுவது அவர் எடுத்த இந்த முடிவைப்  பற்றி  பல வரிகளில் எழுதப்பட்டிருக்கக் கூடியதை விட அதிக தாக்கத்ததை ஏற்படுத்தும், அவர்  அன்பின் முழு வீச்சை உணரச் செய்யும் நெகிழ்வான  இடம். வாசகன் எளிதில் கடந்து செல்லக்கூடிய  அ.மியின் சொற்சிக்கனத்தின் இன்னொரு எடுத்துக்காட்டு.    அதே போல் நீலகண்டனும் ரஞ்சனியும்    மற்றவரின் குடும்பத்தை பற்றி பொதுவான  ஒரு சில விவரங்கள் தவிர எதுவும் தெரிந்து கொள்ளாததால்  – அதற்கான தேவையோ, சாத்தியங்களோ பொதுவாக எந்த உறவின் ஆரம்பத்திலும்  தேவைப்படுவதும் இல்லை என்பதால் –  ஒருவரை மற்றொருவர் கண்டுபிடிக்க முடியாமல் போனது  எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல், நடந்த உண்மைகளாக மட்டுமே இருவராலும் பகிரப்படுகிறது.  ஒரு சில மேலதிக  தகவல்கள் மட்டும் பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தால் இருவரின் வாழ்வும் முற்றிலும் வேறு மாதிரியாக இருந்திருக்கக்கூடும் என்ற பகற்கனவை அவர்களிருவருள்  மட்டுமல்ல, வாசகனிடமும்கூட உருவாகக்   கூடும்.

நீலகண்டன் திருமணம் செய்து கொண்டிருக்க,  ரஞ்சனி தனித்தே தன் வாழ்கையை கடத்தியது பெண்களை குறித்தான சமூகத்தின் வழமையான எதிர்பார்ப்பின் வெளிப்பாடு  என்ற விமர்சனம்  எழலாம்  ஆனால் ,  ‘இனி வேண்டியதில்லை’ கதையின் சுஜாதா, ‘ இந்தியா 1948’ன்  லட்சமி போன்ற அ.மியின் பெண் பாத்திரங்களின்  நீட்சியாகவும்  ரஞ்சனியையும் பார்க்க முடியும். சுஜாதா பாத்திரம் குறித்து ‘பெண்களுக்குத் தான் எத்தனை பொறுமை? தன்னுடையவன் என்று அவர்கள் ஏற்றுக்கொள்பவனுக்காகத்தான் எவ்வளவு சிறுமைகளையும் அவதிகளையும் அனுபவிக்கிறார்கள்! எவ்வளவு விடாமுயற்சி! எவ்வளவு நம்பிக்கை!’  என்று அ.மி ஒரு கட்டுரையில் சொல்வதை இங்கு பொருத்திப் பார்க்கலாம். ஆனால் இப்பெண்கள் அனைவரும் ஆண்களின் கைப்பாவைகள் மட்டுமே அல்ல.  ‘இனி வேண்டியதில்லை’ கதையும்  சுஜாதாவும்கூட இனி சந்தரை தேடி வரமாட்டாள் என்ற சூசகத்துடன், அவள் தன் சுயத்தை முற்றிலும் இழக்காதவாறு தான் முடிகிறது. 1948ன் லட்சமி வெளிநாட்டில் தனியே படித்து முடிக்கும், நிர்வாகத் திறன் மிக்க பெண்தான்.

ரஞ்சனியின் வீடு, அவரின் உறவினர்கள் குறித்த சுருக்கமான சித்தரிப்பு,  அவர்கள் ரஞ்சனியை அழைக்கும் விதம் இவற்றை   வைத்து அவர்  கம்பீரமான, மதிப்பிற்குரிய பெண்மணியாகத்தான் அவ்வீட்டில் இருக்கிறார் என்று வாசகன் யூகிக்க முடியும். இவர்களிடமிருந்து  ‘தண்ணீரின்’ ஜமுனாவை சென்றடைவதும் சாத்தியமே.  நீலகண்டன் திருமணம் செய்து கொண்டதை அறிந்து அவரை துரோகி என்று ரஞ்சனி சொல்வதை அவரும் ஏற்றுக்கொள்கிறார்.”நீ நிஜமாகவே உங்க அம்மாவுக்காகவா கல்யாணம் பண்ணிண்டே? உங்க அம்மா உயிரைக் காப்பாத்திட்டியா..’ என்று ரஞ்சனி கேட்பதற்கு நீலகண்டன் எதுவும் சொல்வதில்லை,  ரஞ்சனி அதை எதிர்பார்க்கவும் இல்லை, பதில் இருவரும் உள்ளூர அறிந்ததுதான். அதனால் தான்  இந்த கேள்வியுடனேயே ‘சரி முதல்ல சாப்பிடு ..’ என்று  சொல்லி அந்த உரையாடலை ரஞ்சனியே   முடித்து விடுகிறார்.   1948ன் லட்சமி கதைசொல்லியின் -முதல் மனைவியோடு கூடிய – குடும்பத்தை தன்னுடன் வசிக்க அழைப்பது போல்  இங்கும்  ரஞ்சனி  நீலகண்டனையும் அவர் மனைவியையும் தன்னுடன் வந்து இருக்குமாறு சொல்கிறார். (இத்தகைய நுட்பமான உணர்வுகள் பெண்களுக்கு மட்டுமே புனைவில் ஏன் அதிகளவில்  ஏற்படுகின்றன  என்ற கேள்வியும் எழுப்பப்படக்கூடியதே ).

சுருக்கமாக இரண்டு மூன்று வரிகளில்  ஒரு அதிர்வை அளித்து  – தான்   யூகிப்பது உண்மையாக இருக்கக்கூடாது என்ற பதபதைப்பையும், ஆனால்  அதற்கான சாத்தியக்கூறே அதிகம் உள்ளது என்ற கசப்பான புரிதலையும்  – வாசகனுள் உருவாக்கி விடுகிறது ரஞ்சனியிடம் விடை பெறும் நீலகண்டன் எடுக்கும் முடிவு. வாசகனை திடுக்கிடச் செய்வது மட்டுமே இதன் நோக்கம் என்று முதற்பார்வைக்கு தோற்றமளித்தாலும் அவர் பெண் கேட்டுச் சென்றதையும், பேதமையுடன்  முப்பது நாட்கள் கழித்ததையும், அவர் இப்போது  எடுக்கும் முடிவையும்  ஒருசேரப் பார்க்கும்போது அவரது ஆளுமையோடு இந்த முடிவும் பொருந்துவது தெரிகிறது. இச்சிறுகதை தனித்தன்மையுடன்  ஒளிர்கிறது என்று சொல்வதை விட, மனித இருப்பின் பல வண்ணங்களைக் காட்டும் அ.மியின் புனைவுலகின் ஒளி மண்டலத்தில் சிறு  இழையாக இணைந்து கொள்வதாலேயே அதிகம்  மிளிர்கிறது என்றே குறிப்பிட முடியும்.

புனைவும் நிஜமும் – அசோகமித்திரன் படைப்புலகின் நெருங்கிய இரு வடிவங்கள்

 அஜய் ஆர்

நான் அமெரிக்கா பற்றி எழுதுவதாகவே இல்லை. அன்று பயணக்கட்டுரைகள் ஒவ்வொரு பிரபல பத்திரிகையிலும் தொடராக வெளிவந்துகொண்டிருந்தன. புதுடில்லி ஸ்பான் பத்திரிகை என்னை அயோவா குறித்து ஒரு கட்டுரை கேட்டது. நான் எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் கட்டுரை எழுதி அனுப்பி வைத்தேன். அதைச் சிறுகதை என்று அப்பத்திரிக்கை வெளியிட்டது. ‘ஒற்றன்!’ பிறந்தான்.
– (ஒற்றன் நூலின் காலச்சுவடு பதிப்பிற்கான அசோகமித்திரனின் முன்னுரையில் இருந்து)

ashokamithiran-04

கல்லூரிக்குச் செல்ல ஹூசேன் சாகர் டாங்க் பண்ட் வழியாகவோ, பப்ளிக் கார்டன்ஸ் வழியாகவோ செல்வது, அந்தப் பாதையில் உள்ள மைதானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நீச்சல் குளம் அதில் குளித்த அனுபவம் என அசோகமித்திரனின் ‘கல்லூரி வாழ்க்கையின் கடைசி நாள்’ துவங்குகிறது. இந்தியா மட்டுமல்ல ஐதராபாத்தும் சுதந்திரம் அடைந்த காலம். கடந்த ஒரு மாதமாகவே வகுப்புக்கள் சரியாக நடக்காதது, தொடர் பிரிவுபசார விழாக்கள் என இதில் விவரிக்கப்படுவதை ‘கதை’ என்று ஏற்றுக்கொள்ள வாசகனுக்கு அதிக சிரமம் இருக்காது. ஆனால் இதை கட்டுரை என்றே அசோகமித்திரன் வரையறுக்கிறார்.

அ.மியின் சிறுகதைத் தொகுதிகளிலும், ‘ஒற்றன்‘ நூலின் ஒரு அத்தியாயமாகவும் சேர்க்கப்பட்டுள்ள ‘அம்மாவின் பொய்கள்‘ ‘கதை’யில், ஞானக்கூத்தனின் ‘அம்மாவின் பொய்கள்‘ கவிதையின் முதல் பகுதி தாய் தன் சிறு வயது மகனைப் பார்த்து சொல்வதாகவும், பின்னர் அவன் பெரியவனாகிய பின் முழு கவிதையைச் சொல்வது போலவும் நாடகமாக்கப்படுகிறது. அயோவாவில் ‘உறைவிட எழுத்தாளராக’ அசோகமித்திரன் இருந்தபோது நடந்த உண்மைச் சம்பவத்தைப் பற்றிய கட்டுரை என்று முதற் பார்வையில் இதை வரையறுக்க முடியும். அதே நேரம் ஞானக்கூத்தனின் கவிதையை வேறொரு சந்தர்ப்பத்தில் கதைசொல்லி மொழிபெயர்த்து வாசிக்க, அது ‘விக்டோரியா’ என்பவரிடம் கிடைத்து அதை அவர் நாடகத்தில் உபயோகிக்கிறார் என்பதை புனைவின் உத்தியாகப் பார்க்கலாம். ஒற்றன் நூலிலேயே ‘கவிதை வாசிப்பு’ என்ற அத்தியாயத்தில் அசோகமித்திரன் கவிதையை மொழிபெயர்த்து வாசித்தது குறித்து உள்ளது, ஆனால் அதில் கதைசொல்லி வாசிப்பது ஞானக்கூத்தனின் ‘அன்று வேறு கிழமை‘ கவிதையை. இதுவும் இந்த படைப்பிற்கு புனைவின் சாயலையே தருகிறது. இந்த இரண்டு படைப்புக்களையும், யார் எழுதியது என்று சொல்லாமல், கதையா/ கட்டுரையா என்பதை மாற்றிக் குறிப்பிட்டு படிக்கக் கொடுத்தால், பலர் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

அசோகமித்திரனின் படைப்புகளில் இப்படிப்பட்ட மயக்கம் ஏற்படுவதற்கு காரணங்கள் என்னவாக இருக்கும்? கதைக்கென்று ஒரு நடையையும் கட்டுரைக்கென்று இன்னொன்றையும் அ.மி வைத்துக் கொள்வதில்லை. இரண்டிலும், மெல்ல ஒரே சரடாக இணையும் சம்பவங்கள், நுண்ணிய விவரிப்புக்கள், இதழோரச் சிரிப்பை ஏற்படுத்தும் நகைச்சுவை என்ற பொதுவான – ஒரே படைப்பில் புனைவாகவும், அபுனைவாகவும் உணரக்கூடிய – தொனி உள்ளது. அசோகமித்திரன் ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே‘ பாடலை ( ‘கல்லூரி வாழ்க்கையின் கடைசி நாள்‘) பாடிய விதத்தை சொல்லும்போது (‘ஒவ்வொரு சரணத்தையும் வெவ்வேறு கதியில் பாடினோம். பாரதியார் சிறிது சுருக்கமாகவே பள்ளு பாடியிருக்கலாமென்று தோன்றிற்று‘) , அதைப் பாடியது தமிழ் மன்ற விழாவில், சாமி பாட்டு பாட பணிக்கப்பட்டு ‘சகுந்தலை‘ படத்தின் பாடலைப் பாடிய 18வது அட்சக்கோட்டின் சந்திரசேகரனாக இருக்கக் கூடும் என்றே அவரை பின்தொடர்ந்து வரும் வாசகன் எண்ணினால் அதில் பிழையேதும் இருக்க முடியாது.

அதே போல் விழா முடிந்து கதைசொல்லி சைக்கிளைத் தள்ளிக்கொண்டு தனியாக வீடு திரும்பும்போது அது “இனி கல்லூரி கிடையாது, இனி கல்லூரி கிடையாது’ என சொல்வது போல உணர்ந்து ஆறுதல் கொள்வது புனைவின் உத்தியாகவே உள்ளது. இன்னொரு புறம் வில்லியம் டெல் பிறந்த சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பிரின்ஸ்பாலின் மனைவி, அவரின் ‘கலைந்த தலையுடன் போரிலிருந்து திரும்பிய ஜோன் ஆப் ஆர்க்’ போலிருக்கும் மகள் போன்ற விவரிப்புக்கள் புனைவு/அ-புனைவு இரண்டிற்கும் பொருந்துகின்றன. இந்தக் கட்டுரையில் உரையாடல்களே இல்லை என்பதும், இதன் அளவும், இந்தப் படைப்பு கட்டுரை என்ற தரப்பின் வாதத்திற்கு வலு சேர்க்கக் கூடும். கதை என்றால் கண்டிப்பாக உரையாடல் இருக்க வேண்டும் போன்ற அளவுகோலை இங்கு முன்வைக்கவில்லை, ஆனால் ஒரு படைப்பில் உரையாடல்கள் அதிகமிருப்பின் அதை ‘புனைவு’ என்ற கோணத்தில் வாசக மனம் அணுக சாத்தியமுண்டா என்று சந்தேகத்தை இங்கு முன்வைக்கிறேன்.

கதை, கட்டுரை எதுவாக இருந்தாலும் அ.மியின் நுண்ணிய நகைச்சுவையை அனைத்திலும் உணர்ந்து கொண்டே தான் இருக்கிறோம். எடுத்துக்கொள்ளும் புகைப்படம் கௌரவமாக இருக்க வேண்டும் என்பதற்காக கண்ணில் பட்டவர்களையெல்லாம் சேர்த்துக்கொண்டு நிற்பதில் உள்ள ஹாஸ்யம் கட்டுரை/கதை இரண்டிற்கும் பொருந்துவதாகத் தான் உள்ளது. அம்மாவின் பொய்களில் நாடகம் நடக்கும் போது, அப்போது வாசிக்கப்படும் கவிதையை எழுதியவரிடம் கதைசொல்லி ஒரு கேள்வி கேட்க அவர் “..யமதர்மராஜன் போல் ‘ஆமாம்‘” என்று சொல்வதை நிஜத்திலும் நடந்திருக்கக்கூடியதாய் ஏற்றுக்கொள்வதில் கடினம் ஏதும் இருக்காது. எந்த எழுத்தாளர்தான் தன் படைப்பு அரங்கேற்றப்படுவதை பார்த்துக் கொண்டிருக்கும்போது தன் கவனம் குலைக்கப்படுவதை பொறுத்துக் கொள்வார்? இந்தக் கதையில் ஒப்பீட்டளவில் உரையாடல்கள் அதிகம் இருப்பதும் இதை கதையாக உள்வாங்கிக்கொள்ளச் செய்யக் கூடும். கதைசொல்லி வசிக்குமிடத்தில் உள்ள வங்கி மேலாளரின் மூக்கைப் பற்றிய விவரிப்பிலும் , ‘பறவை மனிதன்’ என அவரை கதைசொல்லி அழைப்பதிலும் humorஐ விட comedyஏ சற்று தூக்கலாக தெரிவதால் இந்தப் படைப்பிற்கு புனைவின் சாயல் வருகிறது.

காபி க்ரீம் – கமலதாஸ்‘ என்ற கட்டுரையின் மூன்றில் இரண்டு பகுதி வரை, அசோகமித்திரன் பிராங்க்பர்ட் புத்தகச் சந்தை, அதில் பங்கேற்க  பிராங்க்பர்ட் சென்றது, ஹோட்டலில் தங்கியது என்று கட்டுரையின் வரையறைக்குள் பயணம் செய்து, அ.மி கமலாதாஸ் மற்றும் இந்தியாவின் மிகப் பெரிய பிரசுர நிறுவனத்தின் உரிமையாளர் மல்ஹோத்ராவும் ஒன்றாக காலையுணவு உண்ட/உண்ண ஆரம்பித்தபோது நடந்த – உதவி செய்யப் போய் மல்ஹோத்ரா மீது அ.மி க்ரீமை கொட்டி விடும் – நிகழ்வுடன், “என்றென்றும் மல்ஹோத்ரா என் நூல்களை வெளியிட மாட்டார் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. ஆனால், எனக்குக் கமலாதாஸ் பற்றியும் சந்தேகம் வந்தது. காரணம் அன்று அதிகமாகச் சிரித்தது அவர் தான்” முடிகிறது. இந்த நிகழ்வு நடந்திருக்காது என்பதோ, அப்படியே நடந்திருந்தாலும் கமலாதாஸ் வெடிச் சிரிப்பை உதிர்த்திருக்க மாட்டார் என்றோ சொல்ல முடியாது. புனைவை விட நிஜம் விசித்திரமானது தான் என்றாலும், இந்நிகழ்வில் வாசகன் உணரக் கூடிய slapstick அம்சம், அதை வாசிக்கும் முதற்கணத்தில், கட்டுரை புனைவின் பாதைக்கு தடம் மாறுகிறதோ என்ற சந்தேகத்தை அவனுள் எழுப்பக்கூடும்.

ஒரு ஆக்கம் புனைவா அல்லது அ-புனைவா என்பதைப் பற்றிய உரையாடல் ஒரு கட்டத்திற்கு மேல் வெறும் கல்விசார் பயிற்சியாக (‘academic exercise’) மட்டுமே முடியக் கூடும் என்றாலும், பல பொது அம்சங்களைக் கொண்ட இரு எழுத்து வகைமைகள் எந்த இடத்தில் தமக்குரிய இடத்தை (கதை/கட்டுரை) தேர்வு செய்கின்றன என வாசகன் புரிந்து கொள்ள முயல்வது அவன் வாசிப்பை நுட்பமாக்க உதவக் கூடும். மொத்தமாக பார்க்கும்போது அ.மி எழுதியுள்ள கதைகளை/ கட்டுரைகளை ஒரு முழு வாழ்க்கையின் சிதறல்களாக – வேறு வேறு பெயர்களில் வரும் அவர் பாத்திரங்களையும், நாம் ஒருவருடன் ஒருவரை முடிச்சு போட முடிகிறது – ஒருவர் உணரக் கூடும். அவருடைய கட்டுரைகள் மட்டுமே படித்தவரும், கதைகள் மட்டுமே படித்த இன்னொருவரும் உரையாடினால், ஐதராபாத் இந்தியாவுடன் இணைந்ததைப் பற்றிய தகவல்களை பரிமாறிக்கொள்ள முடிவதோடு, ஹுசேன் சாகர் டாங்க் பண்ட்டையும், லான்சர் பாரகஸையும் எளிதில் அடையாளம் காண முடியும். அ.மியின் மாடு (கோணல் கொம்பு) வளர்ப்பு புராணத்தையும், மாரிஸ், லாரா, டெரின்ஸ், போன்றோரையும் அவர்கள் அறிந்திருப்பார்கள். எனவே அ.மியின் படைப்புலகம் குறித்து எந்த தடையும் இன்றி உரையாட முடிவதோடு அதில் ஒரு பொது தளத்தையும் அவர்கள் கண்டடையக் கூடும் என்றே தோன்றுகிறது.

அசோகமித்திரனின் குறும்புனைவுகள் குறித்து- 

ஒளிப்பட உதவி- காலச்சுவடு