Author: பதாகை

கதை சொல்லி, பறவை வெளி- ஏ. நஸ்புல்லாஹ் கவிதைகள்

ஏ. நஸ்புள்ளாஹ்

கதை சொல்லி


சூபிச ஞானத்தில் உறங்குகிறது பறவை
அதன் இறக்கைகளை
எறும்பு ஒன்று வாய் பிளந்து கடிக்க
அமைதியின்மை தொலைத்து
வலி உணர்ந்த பறவை
அதன் சொண்டால்
எறும்பின் சருமத்தின்மேல்
மரணத்தை எழுத முனைகிறது
தப்பிக்க முடியாத எறும்பின் சருமத்தில்
மின் அலைகளாய்
பட்டுப்பட்டு விலகுகிறது மரண நேரம்
எறும்பு நினைத்துக் கூடப் பார்த்திருக்காது
பிரதியின் கதைசொல்லி
நான் என்பதால்
ராட்ஷச பறவை ஒன்றாக மாறி
பறவைக்கு மரண நேரம் ஒன்றைக் காட்டி அங்கிருந்து பறவையை விரட்டி விடுகிறேன்.

பறவை வெளி


எங்கிருக்கிறாய்
பறவை வெளியில்
அல்லது
உச்சி நடுவானம்
எப்படிச் சென்றாய்
வண்ணத்துப் பூச்சியின்
சிறகில் அமர்ந்து.

எப்போது திரும்புவாய்
காற்று இன்னும்
அனுமதி தரவில்லை

தேநீர் அருந்தினாயா
ஆம்,
மேகங்களை

உணவு
சூரியன்
சில நட்சத்திரங்கள்

அனுபவம்
கவிதை எழுதும் ஆர்வத்தில்
உரையாடலை மறந்துவிட்டேன்

அடுத்து,
வீட்டு கூரையிலிருந்து
கீழிறங்க
ஏணியை வைத்துவிடுங்கள்.

ஷ் – செல்வசங்கரன் கவிதை

செல்வசங்கரன்

அந்தச் சாலையில் விர்ர்ரென என்னை முந்திக் கொண்டு போனார்
அது விர்ர்ரெனவா என ஒரு டவுட்
என் பங்கிற்குக் கைகளைத் திருகியபடி நானும் முந்தினேன்
அதே பழைய சர்ச்சையைக் கிளப்பி அவர் முந்தினார்
அதையும் விட திருகி நான் முந்தினேன்
இப்பொழுது எங்களை இன்னொருவர் முந்திப் போனார்
எங்கள் எல்லோரையும் இன்னொருவர் முந்தினார்
திரும்பவும் அவர் என்னை முந்திக் கொண்டு போக
அவர்கள் எல்லோரையும் முந்திக் கொண்டு
நான் போய்க் கொண்டிருந்தேன்
அவர் என்னை விட்டபாடில்லை
திரும்பவும் என்னை முந்த முந்தப் பார்க்க
இப்பொழுது அந்தச் சாலையில் யாராலும் முந்த முடியவில்லை
தலை தெறிக்க சாலை கீழே ஓடிக்கொண்டிருந்தது
லேசாகக் குனிந்தாலும் மண்டையைக் குழப்பி விடும் ஓட்டம்
சாலை இப்படி ஓடுவதாலேயே வந்துவிட்டோம் வேறு வழியில்லையென
வண்டிகள் அதில் ஓடிக் கொண்டிருக்கிறதோ
ஆம் ஆம் அப்படித் தான்
இல்லையென்று கூறி விட்டால் அதுவே ஒரு பிரச்சினையாகி
வேறு வேறு பிரச்சினைகளைக் கிளப்பலாம்
சாலையின் நட்ட நடுவே இதெல்லாம் கூட ஒரு சிக்கலே
தலையை அங்கிட்டு இங்கிட்டு ஒரு சொட்டு திருப்பமுடியவில்லை
கைகள் மரத்துப்போனதால் அது இருக்கிறதா என்றே தெரியவில்லை
எது எப்படிப் போனாலென்ன
வண்டி சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது
ஆனால் ஏன் நிற்பது மாதிரி இருக்கிறது தெரியவில்லை
எதுயெதுவோ எதிரே கடந்து பறக்கும் போதெல்லாம்
விருட் விருட்டென ஒரு சவுண்டு
ஆனால் அது விருட் விருட்டெனவா என
திரும்பவும் அதே போல ஒரு டவுட்
அய்யய்யோ நேரங்காலம் தெரியாமல் இது வேறா
இனி இந்தச் சாலை உலகம் தான் என்னைக் காக்க வேண்டும்
நானே பறந்து கொண்டிருக்கிறேனோ மிதந்துகொண்டிருக்கிறேனோ
ஒரு கட்டத்தில் அந்தச் சாலையில் வேறெதுவுமே கேட்கவில்லை
வேறெதுவுமே எனக்குள் இல்லை
எல்லாம் ஷ் மயம் தான்
ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்………………………………ஷ்

குடும்ப உறவுகள் – கரைகளும் மீறலும் – எம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’ நாவல் குறித்து லாவண்யா சுந்தரராஜன் நூல் மதிப்பீடு

லாவண்யா சுந்தரராஜன் 

மனை என்பதற்கு இல்லம், இல்லத்தைக் கட்ட உதவும் நிலம், இல்லத்து அரசி, குடும்பம் என்ற பொருள்களை தருகிறது தமிழ் விக்சனரி. ஆக மனை என்ற சொல்லுக்கு குடும்பத்தில் முக்கியமான அங்கம் வகிக்கும் மனைவி என்று பொருள் கொள்ளலாம். மாட்சி என்ற சொல் மாண்பு, பெருமை, அழகு, மகிமை, நன்மை என்று பல பொருள் கொள்கிறது. வள்ளுவர் மனைமாட்சி என்ற வார்த்தைக்குப் பல அதிகாரத்தில் பெரும்பாலான குறள்களில் பெண்களின் குணநலங்கள் எப்படி எல்லாம் இருக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறார். இதனை இங்கே நினைவுகூர வேண்டிய அவசியம் “மனைமாட்சி” என்றொரு நாவல் சமீபத்தில் வாசிக்கக் கிடைத்தது. அதில் மையம் கொள்ளும் பெண்களை நாவலாசிரியர் வடித்திருக்கும் பாங்கு இந்த ஆராய்ச்சியை செய்யத் தூண்டியது.

Image result for மனைமாட்சி நாவல்

மனைமாட்சி மூன்று பகுதிகள் கொண்ட நாவல். ஒவ்வொரு பகுதியுமே தனித்தனி நாவலுக்குரிய தன்மையுடன் விளங்குபவை. அவை மூன்றையும் இணைக்கும் மைய்ய சரடு தன்மனையை இயக்கும் பெண்ணின் மாண்பு. தன்மனைப் பேணும் பொருட்டு கொண்டுவரும் சிடுக்கல்கள் அதன் மூலம் உருவாகும் உறவு, அக சிக்கல்கள். மூன்று பகுதியிலும் இரண்டு பெண்கள் முக்கிய கதாப்பாத்திரங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்கள். அவர்கள் இருவரும் அந்தப் பகுதியில் வரும் ஒற்றை ஆண்மகனுடன் ஏதேனும் ஒருவிதத்தில் (நேரடி உறவாகவோ, முன்னால் காதலனாகவோ, இன்னபிறவாகவோ) சம்மந்தப்பட்டவர்கள். இந்த நாவலின் முக்கியமான எல்லா கதாபத்திரங்களும்(ஆண்களும், பெண்களும்) பிறன்மனை நாடும் பேராளுமை கொண்டவர்கள். அதன் பொருட்டு ஏற்படும் சிக்கல்களே நாவலின் மொத்த இயக்கத்தையும் தீர்மானிக்கிறது. பிறன்மனையாகிவிட்ட தன்மனையும் பின்னர் பிறன்மனையாக நோக்கப்படுவார்கள் தானே. மூன்று பகுதிக்கும் பொதுவான மற்றொரு சரடு மூன்றிலுமே திருமணம் முடிந்து ஒரு சில நாட்களிலேயே கணவனை விட்டு மனைவி பிரிகிறாள் அல்லது பிரிக்கப்படுகிறாள். அங்கிருந்து தான் கதையின் ஒரு இழை தொடங்குகிறது அந்த இழை பிற இழைகளோடு இணைந்து பெரிய தாம்பு கயிறாகத் திரிந்து எழுகிறது. அது தேர் வடத்தின் பிடியாகிறது. நம்மை அதனைப் பற்றி இழுக்கக் கட்டளையிட்டு நகர்வலம் வரச் செய்கிறது.

நாவலாசிரியர் எம். கோபாலகிருஷ்ணன் அதன் தொடக்க அத்தியாயத்திலேயே முதல் பத்தியிலேயே கனலும் இரும்பு கம்பியால் தன் கணவனின் உடலைப் பதம் பார்க்கும் மனைவியைப் பற்றி சொல்லி அதிரவிடுகிறார். அது ஒரு கனவு தானோ என்று நினைக்கும் போதே நாவல் மெல்ல வளர்ந்து எப்படிப்பட்ட இல்லத்தரசி இருக்கக் கூடாதென்பதற்காக அடையாளமான சாந்தி(அணங்கு போல் அத்தனை குரூரமான பெண்ணுக்கு சாந்தி என்ற பெயர்) என்ற கதாப்பாத்திரத்தை மனதுள் இருத்துகிறார். மனையின் மாட்சி அதன் தலைவியை பொறுத்தே பெரும்பாலான இல்லங்களில் அமைகிறது. அதுவே இந்த மொத்த நாவலில் கதைக்களமாக இருக்கிறது. நாவலில் ஒரு இடத்தில் “பேராசையும் எரிச்சலும் கசப்பும் கண்ணீரும் ஏமாற்றமும் துரோகமும் வஞ்சகமும் அசட்டுத்தனமும் தன்னலமும் கொண்ட பெண்கள் கூட்டத்துக்கு நடுவே தான் வாழ்க்கை என்பது ஓடிக் கொண்டிருக்கிறது” என்கிறார். இப்படிப்பட்ட வரியைப் பதிவு செய்ய எல்லா நியாயமும் இருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட கதாப்பாத்திரங்கள் நாவலில் வலம் வருகிறது. ஆனால் இந்த வரிகளுக்கு முற்றும் முரண்படும் விதமாக நாவல் முழுவதும் பெண்ணின் பெருமையைப் பற்றியே பேசியிருக்கிறார். நாவலின் ஒவ்வொரு பகுதியிலும் தன்மனைக்கு விசுவாசமானவளாய்(பகுதி 1 – ராஜம்பாய், பகுதி 3 – வினோதினி), தன்னலத்தை விடப் பிறர் நலம் பேணுபவளாய்(பகுதி 1 – ராஜம்பாய், பகுதி 2 – மங்கை, பகுதி 3 – வாணி), எந்த நேரத்திலும் யாருக்குமே தீங்கு நினைத்திடாத பெரும் பிறவிகளாய் (பகுதி 1 – ராஜம்பாய், பகுதி 2 – மங்கை) இன்னும் பற்பல போற்ற தகும் குணங்களோடு பெண்களை படைத்திருக்கிறார் நாவலாசிரியர். நாவலின் ஒட்டு மொத்த சாரமும் பெண் ஆக்கவும், அழிக்கவும் செய்யவல்லவள் என்பதை எடுத்துக்காட்டும் பெண்ணிய பிரதியாக இருக்கிறது.

நீரும் நெருப்பும் இந்த நாவலில் மூன்று பகுதிகளிலுமே குறீயிடுகளாக வருகின்றன. பகுதி 1 – சாந்தி ஒரீடத்தில் அணைக்கட்டில் அடைந்திருக்கும் நீரைப் பார்த்து “இத்தனை தண்ணியும் இந்த செவுரு தான் தடுத்து நிறுத்துதா? அந்தளவுக்கு அது ஸ்டராங்கா? என்று உதடுகளை ஈரபடுத்திக் கொண்டே சொன்னவள், அசைவற்ற நீர்பரப்பை கூர்ந்து கவனித்தாள். எனக்கெனவோ இந்த தண்ணி தான் சரி இருப்பமேன்னு சும்மா இருக்குன்னு தோணுது” என்கிறாள். அவளுடைய பாத்திர வார்ப்பையே இந்த வரிகள் குறிக்கின்றன. அவள் அணை உடையாத வெள்ளம் போன்றவள். எந்த நேரத்திலும் அணைய உடைத்து அனைத்தையும் அழிக்கவல்லவள். பின்னர் வரும் வரிகளில் அவளே “பொம்பளைங்களும் இந்த தண்ணி மாதிரி தான்” என்கிறாள். அதே பகுதியில் இன்னொரு இடத்தில் ஓடும் நதியில் மிதக்கும் தீபங்கள் மற்றொரு படிமம். “நெருப்பை அணைக்கக் கூடியது நீர் தான் நின்று எரியவும் துணை புரியும்” என்ற வரிகள் தியாகுவின் பாத்திர அமைப்பு. அவன் கனலும் நெருப்பான சாந்தியை தாங்கிக் கொள்ளும் நீர். ஆக ஒரே பெண் ஓரிடத்தில் நீராக மறு இடத்தில் நெருப்பாகவும் வடிவு பெறுகிறாள். பகுதி – 2 “பெண்ணை உருவாக்கியது நீரும் நெருப்பும் தானே? நீராக கொதித்து நெருப்பாகி குளர்கிறதா?” என்று மங்கையைப் பற்றி சோம சுந்தர வாத்தியார் நினைக்கும் இடத்தில் பெண்ணை நீர் என்றோ நெருப்பென்று பிரித்தறிய முடிவதில்லை. மேலும் இந்தப் பகுதியில் இரண்டு இடங்களில் உணர்வுகளை எரியும் நெருப்பாகச் சித்தரித்திருக்கிறார் நாவல் ஆசிரியர். “பசி. காலையிலிருந்து எதுவுமில்லை. வயிற்றுக்குள் எரிகிறது” என்று அத்தியாயம் பத்திலும் “வயிறு பசிக்கவேயில்லை. உடம்பு தவித்தது. கொதித்தபடி இருந்தது” என்று மகாதேவனின் உணர்வுகளைப் பதிவு செய்து இருக்கிறார். உடம்பு 90% நீரால் ஆனாது. அதில் பசியும், காமமும் நெருப்பை படிமாக கொண்டு சித்தரிக்கப்பட்டது மிகவும் பொருத்தமானது. பகுதி 3 “உயிரை நீர் எடுத்துக் கொள்ள உடல் நெருப்பில் சாம்பல் ஆனது” என்று ஆனந்தகுமாரின் மரணத்தைப் பற்றிய பதிவிருக்கிறது.

பாம்பு மற்றொரு வித்தியாசமான குறியீடாக இரண்டாம் பகுதியில் வருகிறது. மகா தேவனின் பாத்திர வார்ப்பில் அவன் சிறுவயதில் தாயை இழந்தவன் பார்த்து பரிமாறிப் பசியாற்ற யாருமில்லாத காரணத்தால், பெரும் பசியை தன்னுடைய குணாதிசியமாகக் கொண்டவன். எப்போதும் பார்த்தாலும் சாப்பிட்டபடியே இருப்பது போல ஒரு கதாப்பாத்திரம். அவனுக்குப் பசியை பற்றிச் சொல்லும் இடத்தில் “நீரில் அசையும் அதே பாம்பு தான் வயிற்றுக்குள்ளும் அசைந்தோடுகிறதோ? கண்ணில் படும் மின்னலின் பளபளப்பை வயிற்றுக்குள் பரவும் எரிவிலும் உணர முடிந்தது அது பாம்பு தானா? பசி” இப்படி பசியின் தீவிரத்தை உணரும் ஒருவன் காமம் தலை கண்டதும் பசி மறந்து போகிறான். உள்ளம் தடுமாறுகிறான் “பளபளத்து நகரும் இந்த சர்ப்பமும் காமமும் ஒன்று தானா? இத்தனை நாள் புற்றில் உறைந்திருந்த அது, இன்று வெளிப்பட்டதில் எத்தனை தவிப்பு, எத்தனை தடுமாற்றம்?” என்ற வரிகள் அவன் வயிற்றுப் பசியை தாண்டி, உடல் பசியை உணரும் தடுமாற்றத்தை எவ்வளவு அழகாக வெளிப்படுத்துகிறது. காமத்துக்கு சாரைப் பாம்பையும், பசிக்குக் கண்ணாடி விரியனையும் உருவகமாகச் சொல்லி இருப்பதில் ஏதேனும் உள்கருத்து இருக்கிறதா என்பதை ஆராய மனம் விழைகிறது.

“தெப்பக்குளத்தில் நடு மண்டபத்தில் ஒரு கருப்பு ஆடு அது அங்கே எப்படிப் போய் சேர்ந்தது.” இந்த வரிகள் மதுமிதாவின் பாத்திர வார்ப்பைச் சார்ந்து குறிக்கிறது. அவளும் அப்படித் தான் நடு மண்டபத்துக்கும்(மண வாழ்க்கைக்கு) அறியாமல் வந்து விட்ட ஆடு. பயமற்றவள் போல காட்டிக் கொண்டு தனக்குத் தானே மருளும் குணம் கொண்டவள். மற்றும் “படகுகள் கிழித்து போகும் நீர்பரப்பின் வலியை அறிந்தாள். அவரவர் வலைக்குச் சிக்கிய மீன்களைக் கொண்டு நீரையும் அதன் ஆழத்தையும் அளக்கிறார்கள். வலைக்கு எட்டாத, படகு கிழிக்காத நீரை யார் அளப்பது?” இதுவும் மதுமிதாவின் பாத்திர வார்ப்பின் இன்னொரு பரிமாணம் அவள் மனதில் ஆழத்தில் படிந்திருக்கும் தயக்கங்களும் தர்க்கங்களையும் அவளே அறிய முடியாத ஆழத்தில் கொண்டிருப்பவள். புறத்திலிருந்து அவளைப் பார்ப்பவர்கள் அவரவர் வலையில் அகப்பட்ட மீன்களைக் கொண்டு அவளைப் பற்றிய பார்வையைக் கொண்டிருக்கின்றனர் அவள் அது எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவள். முத்தரசுவின் மகள் தான் கட்டி வைத்த மணல் வீட்டைக் கடல் அலை அழிக்கும் முன்னர் தானே உடைத்து நான் ஜெயிச்சிட்டேன் என்று குதிப்பதும் மதுமிதாவின் வாழ்க்கையை அவளே சிதைக்கும் அதை தன் வெற்றியாக நினைப்பதும் சிறுபிள்ளை அறியாமையை ஒத்த சித்திரத்தை குறிப்பதாகவோ அல்லது முத்தரசு மதுமிதா மேல் கொண்டிருந்த ஒருதலை காமம் உடைந்து ஒன்றுமில்லாமல் போனதை குறிப்பதோ எப்படி வேண்டுமானாலும் சிந்திக்கலாம். மேலும் காமத்தை பாவகாரியமாக நினைக்கும் மதுமிதா சரவணன் மீது காம வசப்படும் தருணத்தை சமயம் காகம் ஒன்று தேங்கிய நீரில் அலகை தயங்கித் தயங்கி அலசி பின்னர் “துவைக்கிற கல்லுக்கு தாவிய அந்தக் காக்கை மறுபடி சரிந்திறங்கி தேங்கிய நீரில் கால்கள் நனைய உட்கார்ந்து அலகை நனைத்தது” என்ற வரிகளில் உணர்த்துகிறார். பறவைகளில் காகம் கொஞ்சம் அருவருக்க தக்கது என்ற காரணத்தால் இந்தக் குறியீடு இவ்விடத்தில் இடம் பெறுகிறதென்று நினைக்கிறேன்.

மகாதேவனின் வீடு அவன் தனிமையின் குறியீடாக அழுக்கும், முடை வாடையும், இருளும் நிறைந்து இருப்பது போலவும் பின்னர் அவனுக்குத் தகுந்த துணை வரும் இடங்களில் அதே வீடு அழகாகவும், பிரகாசமாகும் ஆவதே மனைமாட்சி என்பதன் அர்த்தத்தைப் பிரகாசமாக காட்டும் பதிவு. வீடு அதன் அமைப்பு அந்த வீடு இருக்கும் தெருவும் நாவலில் வரும் கதாப்பாத்திரத்தின் குணாதிசயத்தோடு ஒப்பிட்டு அமைத்திருக்கும் காட்சி பாராட்டத்தக்கது. மூன்றாம் பகுதியில் வரும் கண்ணன் என்பவரின் மனைவி, தனது மாமியார் வீடு அமைத்திருக்கும் தெருவின் நேர்த்தியும், அமைதியும், நிதான போக்கும் தன்னுடைய கணவனின் நிதானமும், வசீகரமும் பொருந்திய குணத்தோடு ஒப்பிட்டு “எல்லா வீடுகளில் தென்னைகளும், கொய்யா மரங்களும் இருந்தன, அமைதியான, அழகான தெரு. கண்ணனைப் போலவே நிதானமான, எதற்கும் அவசரப்படாத தெரு”என்ற பதிவு நாவலின் மூன்றாம் பகுதியில் இருபத்தி எட்டாம் அத்தியாயத்திலிருக்கிறது.

மூன்றாம் பகுதியின் முக்கிய கதாபத்திரமான வினோதினி கணவன் மீது தீராத காதல் கொண்டவள். இழந்த கணவனின் அவள் நினைவுகளே அவளைத் தொடர்ந்து இயக்குகிறது. அவளைத் தவறான கண்ணோட்டத்துடன் அணுகும் கொழுந்தனை “உங்களுக்கு குழம்புல போட்ட கரண்டி ரசத்துல போட்டாலே பிடிக்காது. இது மட்டும் சரியா?” என்று கேட்டு விரட்டுகிறாள். திருமணத்திற்கு முன்னர் “பா தாயே பா” என்று சக்தி அழைப்பில் தனது காதலை வெளிப்படுத்திய கண்ணனுக்கு அவள் தந்த காதல் நிறைகுடம் அலுங்காதது மேல் விழுந்து பிறாண்டாதது. அந்தக் காதல் கை கூடாமல் போகிறது. வினோதினியை காதலிக்கும் லோகுவின் காதல் ஊதா பலூனாக ஒரு அத்தியாயத்தில் வந்து போகிறது. வினோதினியின் திருமணத்திற்கு முன்னர் ஒரு பொங்கல் விழாவில் பலூன் ஊதும் போட்டியில் லோகு ஜெயிக்க காரணமான ஊதா பலூன், அவள் திருமணத்துக்கு பின்னர் லோகு அவளை விட்டு விலகி நடக்கும் போது ஊதா நிற பலூன்கள் வெடித்துச் சிதறியது(வினோதியின் நினைவோடையாக வரும் பகுதி) என்று எழுதி இருப்பது நுட்பமான குறியீடு.

மூன்றாம் பகுதியில் கோவையில் சாரதா டீச்சர் வீட்டுக்கு முன் வீட்டு நாய் குரைப்பு மற்றுமொரு குறியீடு. ஒரு காதல் தோல்வியின் அடையாளமாக அந்த குரைப்பொலி மாறிப் போகிறது. அதைக் கேட்கும் தருணமெல்லாம் சாரதாவும், அவள் கணவனும் மிகவும் ஆத்திரபடுக்கின்றார்கள். ஒருநாள் அந்த குரைப்பொலி முற்றிலும் மறைந்ததும் சூன்யமாய் உணரும் கண்ணன், அது தன் தங்கை ஜோதிக்கு நிம்மதி தருமென்று நினைக்கிறான். மனதைத் தொட்ட பல இடங்களில் இதுவும் ஒன்று.

மூன்றாம் பகுதியின் மற்றொரு முக்கியமான கதாப்பாத்திரமான வாணி, திருமணத்தின் பின்னர் தனது முன்னாள் காதலனுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக தன் கணவனிடம் சொல்லும் தைரியசாலியாகவும் நேர்மையானவளாகவும் இருக்கிறாள். தன்னுடைய காதலனுக்கு மிகவும் விசுவாசமானவளாய், அதே நேரம் கணவனின் கண்ணியத்தையும் அன்பையும் அக்கரையையும் மறுக்க முடியாதவளாய் இருக்கிறாள். அவள் சிவசமுத்திரம் அருவியைப் பார்க்கும் போது திருமணத்திற்கு முன்னர் ரசித்த அதிரப்பள்ளி நினைவுக்கு வருகிறது. இரண்டு அருவியையும் ஒப்பிடுகிறாள். சிவசமுத்திரம் கண்ணனையும், அதிரப்பள்ளி அவள் காதலன் சசி. இரண்டிலும் கொட்டுவது நீர் தானே. சிவசமுத்திரம் பெரியதாய் வசீகரமாய் இருப்பதற்காக அதிரப்பள்ளியை விட முடியுமா என்பது அவள் நம்மைக் கேட்காமல் கேட்கும் கேள்வி.

இந்த நாவலில் மனதில் நிற்கும் ஆண் கதாப்பாத்திரங்களாக தியாகு, கண்ணன் மற்றும் லோகுவை சொல்வேன். தியாகு கொடூர குணமும் பிடிவாதமும் கொண்ட சாந்தி அவளை அடித்து கை கால்களை உடைத்துச் சூடு போட்டு இன்னும் எத்தனையோ சித்திரவதைகளை செய்தாலும் அவள் நான் காதலித்து மணந்தவள் அவளை நானே பொருத்துக் கொள்ள முடியவில்லை என்றால் பின்னர் வேறு யார் பொறுப்பார்கள் என்று நினைக்கிறான். கண்ணன் பெரு நகரத்தில் பணமும் உல்லாசமும் ஒருங்கே அமைந்த வாழ்க்கை முறையில் உடன் பணிபுரியும் தோழிகள், பிற பெண்களுடன் அவர்களில் சம்மதத்தோடு உடனிருந்தாலும் வாணியை மிகவும் விரும்பி அவள் அழகில் மயங்கி திருமணம் செய்து கொண்டவன் அவள் சிறுபிள்ளைத்தனமாக செய்யும் எல்லாத் தவறுகளையும் பொறுமையாகக் கையாள்கிறான், அவள் காதல் வாழ தன் வாழ்க்கையே விட்டுத் தரும் பக்குவத்தோடு இருக்கிறான். கொஞ்சமும் நிதானம் இழக்காமல் வாணி மீண்டும் அவளோடு வரும் போதும் ஏற்கிறான். லோகு காதலித்த பெண் ஜாதியைக் காரணம் காட்டி வேறொருவனைத் திருமணம் செய்தாலும் பின்னர் அவளே தன் துணையை இழந்து நிற்கும் போது எந்த வித தடுமாற்றமும் இல்லாமல் அவளையும் அவள் குழந்தைகளையும் ஏற்கிறான். அவ்வாறான ஒரு நிலை வரும் முன்னர் அவள் அருகிலேயே இருந்தாலும் கொஞ்சமும் வினோதினியை தொந்தரவு செய்யாது இருக்கிறான். இத்தனை நல்லவர்களா ஆண்கள் ஆம் இருக்கத் தான் செய்கிறார் அதனை கோபாலகிருஷ்ணன் என்றொரு ஆண் எழுத்தாளர் எழுதாமல் வேறு யார் எழுத முடியும்.

நாவலாசிரியர் கோபால கிருஷ்ணன் ஆண்களில் வினோத மனநிலையையும் கொஞ்சம் தயக்கமின்றி பதிவு செய்து இருக்கிறார். கண்ணன், சசியை சந்திக்க வரும் போது அவன் தன்னை விட எந்த விதத்தில் சிறந்தவன் என்று ஆராய்வதும், அவன் வீட்டுக்கு வரும் போது தன் மனைவியை அவனோடு விட்டு விட்டு வெளியிலே சுற்றும் போது தடுமாறுவதும், மனைவி அவனை விட்டு நிரந்தரமாகப் பிரிய நினைக்கும் போது அவனையே மீறி அதிகமாய் சாப்பிடுவதுமான சில இடங்களே கண்ணன் தடுமாறும் இடங்கள். அவை நுட்பமாகச் சித்தரிப்புகள்.

சோமு வாத்தியார் மிக நுட்பமான பாத்திர வடிவம். புரோகிதம் பண்ணும் தனிகட்டை அவருடைய வீட்டை நேர்த்தியாய் பராமரிக்கும் சித்தரிப்புகள், மகாதேவனுக்காகப் போராடும் இடங்கள், மங்கையைப் பார்த்து தடுமாறும் மனநிலையும் அதன் பொருட்டு மகாதேவன் மேல் பொறாமைகொள்ளுமிடங்கள், அவனுக்கு மங்கையோடு திருமணம் பேச வேண்டிய நேரத்தில் தவிர்க்குமிடங்கள் எல்லாமே மிகவும் தத்துருபமானவை. எதார்த்தமானவை.

முத்தரசுவின் பாத்திர வடிப்பு மிகவும் அருமையானது. ஒரு பெண் தன்னிடம் நல்ல அபிப்பிராயம் கொண்டிருக்கிறாள். தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறாள். தனியாக உடன் வருகிறாள் என்றதும் அவளை திசைதிருப்பி தன்னிச்சைக்கு அடிபணியச் செய்யாமல் நட்பைப் போற்றும் நேயம் மிக்க கதாப்பாத்திரம். பின்னர் அவள் சரவணனுடன் திருமணம் செய்யப் போகிறாள் என்றதும் சரவணன் மீது பொறாமை கொள்ளும் அழகான பாத்திர அமைப்பு.

வைத்தியநாதன், சசி போன்றோர் தனது அன்னையரிடம் கொண்டிருக்கும் அதீத பக்தி/பயம் அவர்களது வாழ்க்கையை எப்படிப் புரட்டி போடுகிறது என்பது மிக எதார்த்தமான சித்தரிப்பு. வைத்தியநாதனிடம் அவர் மனைவி மங்களா “அந்த வியாதியோட கை கால் முடியாம எங்காயவது ஹோம்ல இருந்து உங்களை பாக்கனும் கேட்டிருந்தா போய் பார்த்திருப்பீங்களா?” என்ற கேள்வி வாசகரை சரென திரும்பி “ஆமால்ல” என்று யோசிக்க வைக்கும் கேள்வி. அதே போல் கண்ணன் தன்னுடன் படுக்கை பகிர்ந்து கொண்டு, தன்னையே உயிராக நினைக்கும் லதாவை நிராகரிப்பதற்கு காரணமாக அவள் அழகாய் இல்லாத காரணமோ என்று நிஜமான ஆண் மனவோட்டத்தை பதிவு செய்த நேர்மைக்காக நாவலாசிரியரைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

நாவலில் சில இடங்கள் நெருடலாக இருக்கிறது. முக்கியமாக மங்கை மதுமிதாவிடம் பேசுவதில் சில இடத்தில், குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், மங்கை மிகப் பிறர் மனதை ஆராய்ந்தறிந்திடும் திறன்படைத்தவள் என்பதை எடுத்துக்காட்டும் பதிவுகளும், மண முறிவு ஏற்பட்டு மதுமிதா தாலியை கழிட்டி கொடுத்து அதனை பெற்றுக் கொள்ளும் சமயம் மகாதேவன் மதுமிதாவோடு இருக்க வேண்டுமென்று சொன்னதாக சரவணன் சொல்வதும்(சரவணனுக்கு அது எப்படியோ தெரிந்தது என்று எடுத்துக் கொள்ள வேண்டும் ) எதார்த்தோடு ஒத்துப் போகாத விஷயங்களாக எனக்குத் தெரிந்தன. சோமு வாத்தியார் கோபமாக மகாதேவனைத் திட்டுவதோடு நிறுத்தியிருக்கலாம். எல்லா விஷயங்களையும் வாசகர்களுக்குச் சொல்ல வேண்டுமா என்ன?

நாவலில் சில இடங்கள் ஓரிரு வரிகளில் மிக பூடகமாக சொல்லிய விஷயம் இன்னொரு நாவலை வாகசர் மனதில் புனைய விடும் வலிமை பொருந்தியதாக இருக்கிறது. உதாரணத்துக்கு தியாகுவிடம் செந்தில் சொல்லும் “கவுண்டர் மில்லுன்னா காயத்ரியோடா…” இந்த வரிகள், பின்னர் அத்தியாயம் முப்பத்தேழாம் அத்தியாயத்தில் தன் மகள் காயத்ரி பற்றி வைத்தியநாதன் “இப்பவும் இங்க வரும் போது பொள்ளாச்சிக்கு தானே ஓடி வர, என்னை அவன் கிட்ட வேலைக்கு சேர்த்து விட்டு, அவன் தோப்புலயே வீடு குடுக்க சொன்னதெல்லாம் என்ன கணக்குக்குன்னு எனக்கு தெரியாதா?” வரிகளோடு இணையும் போது அந்த புனைநாவல் தென்படும். நுட்பமாக வாசிக்கும் போது இது போன்ற பல புனைகதைகளை மறைத்து வைத்திருக்கும் பெரிய கதை மனைமாட்சி என்பது விளங்கும்.

நாவலின் மிக முக்கியமான சமூகத்தின் மீது அக்கரைக் கொண்ட தருணமாக நான் பார்ப்பது இரண்டாம் பகுதியில் மங்கை மிக இக்கட்டான சூழலில் கழிக்கும் ஒரு இரவு. அவள் பின்னாளில் தன்னை அந்த இக்கட்டான சூழலில் இருந்து மீட்ட, பொருள் பெண்டிரை தன்னைக் காத்த தெய்வமெனக் காண்கிறாள். ஆம் நாட்டில் விலை பெண்டிர் எல்லோருமே தெய்வத்துக்கு இணையாக போற்றப்பட வேண்டியவர்கள் தான். பாலியல் சார்ந்த குற்றங்கள் பெரும்பாலும் பெருகாமல் இருக்க இவர்கள் முக்கியமான காரணம். இந்த நாவலிலும் அப்பாவி குடும்பப் பெண் சில கயவர்களின் காமபசிக்கு பலியாகாமல் காக்கும் காட்சிப் பதிவாகி இருக்கிறது. அது நாவலுக்கு வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்ட பகுதி போல தோன்றினாலும் மிக முக்கியமான பதிவு.

நாவலில் பல இடங்களில் சித்தரிக்கப்பட்டிருக்கும் மரங்கள், நதிகள், இயற்கை காட்சிகள், பழங்கள் ஆகியவற்றைப் பற்றி தனி கட்டுரையே எழுதலாம். கும்பகோணம் / கீழ தஞ்சை நிலப்பரப்பையும், இயற்கை எழிலையும், கீழ தஞ்சைக்கே உரிய “இஞ்ச, சாரிட்டேன்” போன்ற வட்டார வழக்கையும் மிக அழகாகப் பயன்படுத்தியிருக்கிறார். கோபால கிருஷ்ணன் அவர்களில் மூன்று நாவல்களிலும் நெசவு தொழில் சார்ந்த பல தகவல்களும் கொங்கு வட்டார வழக்கும், ஆதிக்க ஜாதியினரின் உடல் மொழி, அதிகார போக்கு, சாமர்த்தியம், கொஞ்சமும் இரக்கமற்றதன்மை சார்ந்த பதிவுகள் பொதுவானதாக இருக்கின்றன. கும்பகோணம், கீழ தஞ்சை, திருச்சி, கோயம்பத்தூர், பெங்களூர், விஜயாவாடா, ராஜமுந்திரி, ஒத்தபளையம் என்ற தென் இந்தியாவின் அனேக நிலப்பரப்புகளை அங்கேயே வாழ்ந்து அனுபவிப்பது போல பதிவு செய்து இருக்கிறார்.

பாவ புண்ணிய தீர்த்தங்கள் மூன்று பகுதிகளிலுமே வந்து போகிறது. கும்பகோணம் மகாநதி தீர்த்தம், பாசநாசம் பாபவிமோசன தீர்த்தம், பிற புண்ணிய நதி நீராடல்கள் என்று பதிவாகி இருக்கும் அதே சமயம் அழுக்கைக் கழுவ வந்த நதியே அழுக்காகி இருக்கிறது என்ற அவல காட்சியையும் பதிவிடத் தவறவில்லை நாவலாசிரியர்.

இந்த நாவலில் எனக்கு மிகப் பிடித்த கதாப்பாத்திரமென்றால் மீரா என்ற குழந்தையின் கதாப்பாத்திரம். அவ்வளவு சிறிய வயதில் இவ்வளவு அறிவு முதிர்ச்சியும், பொறுப்புணர்ச்சியும் அந்தக் குழந்தையை போன்ற குழந்தையை பெற்ற பெற்றோர் புண்ணியம் செய்தவர்கள். அவள் செயல்பாடுகளை தங்கையை கவனித்துக் கொள்ளுமிடங்களை நெகிழாமல் கடக்க முடியாது. இப்படி எழுதிக் கொண்டே போக எத்தனையோ விஷயங்கள் இந்த நாவலில் இருக்கிறது. எல்லாம் சொல்லிய பின்னர் ராஜம்பாய் என்ற கதாப்பாத்திரத்தை பற்றிச் சொல்லாமல் விடமுடியுமா? அவளைப் பற்றி ஒருசில வரிகளில் சொல்லி விட முடியுமா? நாவலை வாசித்தறிந்து கொள்ள இந்தக் கட்டுரையை வாசிப்பவர் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

எந்த ஒரு படைப்பும் அதனை வாசிக்கும் போதே அல்லது வாசித்து முடித்தவிட்ட நிலையிலோ ஒரு சில கணங்களாவது அந்தப் படைப்போடு ஒன்றாகப் பயணப்பட வகைபுரிய வேண்டும். அப்படி இந்த நாவலில் எல்லா கதாபத்திரங்களும் அவற்றோடு சில கணங்களேனும் வாழ வழி செய்கிறது. தியாகு கோயம்புத்திரிலிருந்து ஹைதரபாத் கிளம்பும் தருணம் அப்பாடா என்று பெரு மூச்செறிய வைக்கிறது. அந்த ஒரு உணர்வே இந்த நாவலின் மிகப் பெரிய வெற்றிக்குச் சாட்சி. அதைப் போல இன்னும் பல்வேறு இடங்களில் நம்மை நெகிழ, கண்ணீர் விட, ஆனந்தம் அடைய, நிம்மதியை உணரச் செய்கிறது இந்த நாவல். ஒட்டுமொத்தமாக மிகச் சிறந்ததொரு வாசிப்பவனுவத்தை கடத்தி இருக்கும் நாவல் மனைமாட்சி. அவசியம் வாசித்து பாதுகாக்கப்பட வேண்டிய படைப்பு. நாவலாசிரியருக்கு எனது வாழ்த்துகள். மேலும் இது போன்ற பல நாவல்களைத் தர வேண்டும் என்ற பேராசையுடன் முடிக்கிறேன்.

அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018- வெள்ளையானை – ஜினுராஜ்

அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018

கடந்த காலத்திலும்,நிகழ் காலத்திலும் மற்றும் எக்காலத்திலும் உள்ள அந்த மாறாத ஒன்றை இலக்கியத்தின் வழியே கண்டடையவேண்டுமெனில்,கவிஞனுக்கு கடந்த காலத்தை பற்றிய அவதானிப்புடன் கூடிய பிரக்ஞை இருக்க வேண்டும் என்கிறார் டி.எஸ்.எலியட். கடந்த காலத்தை விசாரணைக்குட்படுத்தும் வரலாற்று நாவல்கள் வழியே காலதீதமாக உள்ள அந்த ஒன்றை கண்டடைகிறான் வாசகன்;அதே வேளையில் வரலாற்று அறிஞர்கள் போல தரக்கத்தராசு கொண்டு வரலாற்றை தட்டையாக்கி ஒற்றைப்படையாக அறிய முற்படாமல் மனிதர்களை மனிதர்களாக கடந்த காலத்தில் வாழவிட்டு மெய்நிகர் அனுபவங்களை பெற முற்படுகிறான் வாசகன்,எனவே வரலாற்று நாவல் வாசிப்பின் வழியே யார் மீதும் பழி சுமத்தாமல் கடந்த காலத்தைப்பற்றிய மறு பரிசீலனையை வாசகன் மேற்கொள்கிறான்.

அயர்லாந்தின் பஞ்சத்தால் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து இந்தியாவில் பணியாற்றுகிறான் ஏய்டன். சென்னையில் பணியாற்றும் பொது நீலமேகம் இரு தொழிலாளர்களை அடிப்பதை பார்த்து ஐஸ்ஹவுஸ் தொழிலாளர் பிரச்சனையில் ஏய்டன் தலையிடுகிறான்;காத்தவராயன் வழியே இந்தியாவில் நிகழும் பஞ்சத்தின் உண்மையான முகம் ஏய்டனுக்கு தெரியவருகிறது;பஞ்சத்தின் விளைவுகளில் சிறிதளவேனும் மற்ற இருவரும் முயற்சி செய்கிறார்கள். ஏய்டன் செங்கல்பட்டுக்கு பயணம் செய்து பஞ்சத்தை பற்றி பக்கிங்ஹாம்க்கு அறிக்கை அளிக்கிறான். காத்தவராயன் ஐஸ்ஹவுஸ் தொழிலாளர்களை கொண்டு இந்தியாவின் முதல் வேலை நிறுத்தப்போரட்டத்தை செய்கிறான்.முரஹரி ஐயங்கார் எளிமையாக ஏய்டனைக்கொண்டே அந்த போராட்டத்தை நிறுத்திவிடுகிறார் மற்றும் வரலாற்று தடயங்களை ஒட்டு மொத்தமாக அழித்துவிடுகிறார்.ஏய்டனின் அறிக்கையை கொண்டே ரஸ்ஸல் பல லட்சம் தொழிலாளர்களை அடிமைகளாக கொண்டு மிகப்பெரிய கட்டிட வேலைகளை செய்து லாபம் மீட்டிக்கொள்கிறான்;வெறுப்படைந்த ஏய்டன் தன்னையே சுட்டுக்கொள்கிறான் மண்டையோட்டை குண்டு துளைக்காமல் சென்றதால் ஏய்டன் மீண்டும் உயிர்த்தெழுகிறான். ஒட்டு மொத்தமாக மூன்று அல்லது நான்கு நாட்களில் நிகழும் நிகழ்வுகளால் நாவல் முடிவடைந்துவிடுகிறது.

வரலாற்று நிகழ்வுகளை மையமாக கொண்ட நாவல்களை நமது புரிதலுக்காக நாவல் நிகழும் காலத்தை கொண்டு இரண்டு வித அமைப்பாக பிரிக்கலாம்.

முதலாவது அமைப்பு போரும் அமைதியும் நாவல் போன்று வரலாற்று நிகழ்வுகளை பல மைய கதாப்பாத்திரங்களைக்கொண்டு பெரும் வலைப்பின்னல் கொண்ட ஆடல் களம் போன்று சித்தரித்தல். இந்த அமைப்பில் பல மைய கதாப்பாத்திரங்கள் மற்றும் மிகப்பெரிய காலத்தில் நிகழ்வதால்,எல்லா நிகழ்ச்சிகளும் தொடர்வினைகளாகவும் ஆதியும் அந்தமுமின்றி சுழற்சியாக தெரிகின்றது எனவே இந்த அமைப்பிலிருந்து எக்காலத்திலும் மாறாது சில தரிசனங்களையும்,ஒட்டு மொத்த மானுடத்துக்குரிய சில உயரிய விழுமியங்களையும் வாசகன் கண்டடைகிறான்.

இரண்டாவது அமைப்பு – நாவல் நிகழும் காலம் குறிகிய காலமாக இருத்தல்;இந்த அமைப்பில் ஒரு சில மைய கதாப்பாத்திரங்களைக்கொண்டு ஒற்றை செல்லை நுண்ணோக்கியில் வைத்து ஆராய்ச்சி செய்தல் போன்று அமைத்தல். இந்த அமைப்பில் சில மைய கதாப்பாத்திரம் மற்றும் குறிகிய காலத்தில் நிகழ்வதால் எல்லா நிகழ்வுகளும் நாவலின் மையத்தை நோக்கியே இட்டுச்செல்கின்றன எனவே இந்த அமைப்பிலிருந்து வரலாற்றில் நிகழும் சில உச்ச தருணங்களின் காரணங்களையும்,வரலாற்றின் உச்ச தருணங்கள் மீண்டும் நிகழ அல்லது நிகழாமல் இருப்பதற்கான வாய்ப்புகளையும்,அந்த தருணத்திற்கே உரிய சில தரிசனங்களை வாசகன் கண்டடைகிறான்.

வெள்ளையானை நாவலின் மையப்பகுதி இந்தியாவின் முதல் வேலை நிறுத்தத்தை பற்றியது.இந்த நாவல் இரண்டாவது அமைப்பில் அமைந்துள்ளதால் அதற்கான காரணங்களை தெளிவாக நம்மால் அறியமுடிகிறது. நாம் நமது அறத்தை இழந்துவிட்டதுதான் அதற்கான காரணம் என அறியமுடிகிறது,நாம் அனைவரும் அதற்கு பொறுப்பேற்று எங்கே நாம் நமது அறத்தை இழந்தோம் என்று வாசகனை சுய பரிசீலனைக்கு உட்படுத்துகிறது.


நாவலின் பெரும் பகுதி பஞ்சம்,தலித் அரிசியல் பற்றி இருந்தாலும் நாவலின் ஊடே மேலைநாட்டுக்கல்வி,கிறிஸ்துவ மதம் காலுன்றுதல்,பண்பாட்டு கலப்பு போன்றவற்றையும் நாவல் தொட்டுச்செல்கிறது.எனவே தலித் அரிசியல் மற்றும் பஞ்சத்தை பற்றிய பன்முகம் கிடைக்கிறது.

(பக்:91) “அத்தனைக்கும் மேலாக நீங்கள் எங்களுக்கு உங்களுடைய மொழியில் ஒரு வாசலைத்திறந்து வெளியுலகத்தை காட்டினீர்கள்.எங்களுக்கும் மானுடநீதி கிடைக்க வாய்ப்புண்டு என்று எங்களிடம் முதன்முதலாக சொன்னீர்கள்

தீண்டத்தகாதவர்கள் அல்லது நான்கு வர்ணம் போன்றவை தொன்மங்களிலிருந்து உருவானவை.தொன்மங்கள் பழங்குடி சடங்குகளிருந்து உருவானது. அறச்சமுதாயம் மற்றும் அமைதியான சமுதாயம் உருவாக மற்றும் நிலைநிறுத்த தொன்மங்கள் உதவி புரிகின்றன.

(பக்:191) “அந்த மதச்சின்னங்கள்தான் உண்மையில் இங்கே வாழ்கின்றன.இந்த உடல்கள் அவற்றின் வாகனங்கள்.இவை பிறந்து வந்து அவற்றை ஏந்திக்கொண்டுச்செல்கின்றன”.

(பக்:171) “சில அசட்டுப்பாதரிகள் இவர்களை ஏதாவது சொல்லி மதம் மாற்றி சிலுவை போட்டுவிட்டுச் செல்கிறார்கள்.அதன்பின் திரும்பியே பார்பதில்லை.அவர்களுக்கும் பெயர்கள் மாறுவதோடு சரி வேறெந்த மாற்றமும் நிகழ்வதில்லை

தொன்மங்களில் மாற்றம் நிகழாமல் சமுதாய அமைப்பில் நிலையான மாற்றம் நிகழ்த்தயிலாது.இல்லையேல் முன்னர் விஷ்ணு சிலை இருந்த இடத்தில் தற்போது கிறிஸ்துவின் சிலை மட்டுமே மாற்றமடையும்,அதே சாதி பாகுபாடு மீண்டும் நீடிக்கும்.தொன்மங்களில் மாற்றத்தை தொன்மங்களுக்கு மறு விளக்கமளித்தல்,புது தொன்மங்களை உருவாக்கி அவற்றை தத்துவங்களின் வழியே நிறுவுதலின் வழியே ஏற்படுத்தலாம்.தொன்மங்களின் மாற்றம் ஒட்டு மொத்த சமூகத்தையும் புது ஞானத்தை நோக்கி இட்டுச்செல்கிறது ஞானத்தை நோக்கி இட்டுச்செல்வதுதான் கல்வி.ஞானம் அக விடுதலையை அளிக்கிறது.அந்த ஒரு துளிக்கல்வி காத்தவராயனை சமத்துவத்தை நோக்கி ,கருப்பனை சுதந்திரத்தை நோக்கி செல்லவைக்கிறது

(பக்:320) “எனக்கு கிறித்துவ நம்பிக்கை இல்லை.நான் நம்புவது சுதந்திரத்தையும் சமத்துவத்தையும்தான்.அந்த நம்பிக்கைகள் மீது ஒவ்வொருநாளும் சேறு அள்ளிக் கொட்டப்படுவைதைப் போல உணர்கிறேன்

இதை பார்மர் கூருகிறார்,சமத்துவம் சுதந்திரம் போன்ற தொன்மம் மேலை நாடுகளில் முன்னரே வலுவாக உள்ளது.அந்த தொன்மத்தை அப்படியே நகல் எடுத்தார் போல இங்கு நிறுவ இயலாது அதை இந்தியத்தொன்மத்துடன் இணைத்தால் மட்டுமே இங்கு நிரந்தரமாக நிறுவயியலும்.நாவலில் வரும் காத்தவராயன் உடை போன்று தூரப்பார்வையில் கிறுத்துவன் போன்றும் அருகில் பார்க்கும்போது வைணவன் போன்றும் இரண்டும் கலந்ததாக இருக்கவேண்டும்.


நாவல் முழுவதும் ஏய்டனின் பார்வையில் கூறப்பட்டுள்ளதால் ஏய்டனின் ஆளுமையை பொருத்தும் நாவலை புரிந்துகொள்ள வாய்ப்பளிக்கிறது.ஏய்டனின் ஆளுமை என்பது பஞ்சத்தால் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்தவன்,கவிதையின்மீது விருப்பமுள்ளவன்,கனவு காண்பவன்,எதிலும் பொருந்தி போகதவன்,கிறித்துவ மதத்தை சார்ந்தவன்,அகச்சிக்கல் உடையவன். அவனுடைய பார்வையிலிருந்து இந்தியத்தொன்மங்களை அணுகும்போது அபத்தமாகவும்,தர்க்கத்திற்கு உட்படாமலும்,பிழையாகவும் தெரிகிறது.

அந்தப்பிழை,அபத்தம்தான் ஒழுங்கு படுத்துவதற்கான வாய்ப்பை அளிக்கிறது. பலருக்கு வாய்ப்பு இருந்தும் ஒரு சிலர் மட்டுமே மாற்றத்தை நிழ்த்துகிறார்கள் அதற்கு காரணம் சிலர் மட்டுமே அவர்களுடைய தொன்மத்தின் அர்த்தத்தை ஆன்மாவால் அறிந்துள்ளனர்.அவர்களுடைய தொன்மத்தை முழுமையாக அறிந்தால் மட்டுமே இங்குள்ள பிழையை நீக்க முடியும்.

‘உதாரணமாக கிறிஸ்து மற்றும் சாத்தான் தொன்மம்,கிறித்துவ மதத்தில் உள்ள பழைமையான தொன்மம்.

(பக்:187) “பஞ்சத்தை பார்க்கச் செல்வதில் உள்ள மிகப்பெரிய சாவலே இதுதான்.அது ஒரு பிரம்மாண்டமான சாத்தான்.உங்கள் கண்களுக்குள் ஊடுருவி ஆன்மாவுடன் பேச அதனால் முடியும்

அது நம் தர்க்கபுத்தியை அழிக்கும்.நம்ம அழச்செய்யும் .வாழ்க்கையின் எல்லா அடிப்படைகளையும் நிராகரிக்க வைக்கும்

கடவுளிடம் அதிக அன்பு கொண்டது சாத்தான் தான் ,மனிதனிடம் அதிக அன்பு கொண்டவர் கடவுள் எனவே சாத்தன் மனிதனை வெறுக்கிறது.சாத்தானை கண்டடைந்தவன் கடவுளிடம் நெருங்குகிறான்,கடவுளை அடையவேண்டுமானால் சாத்தனின் அருகில் எப்பொழுதுமிருக்க வேண்டும்.

(பக்:195) “உண்மையான கிறித்தவனாக இருப்பது ஒரு கடமை.ஒரு பெரிய வேலை.அதைச் செய்து கொண்டுருக்கிறேன்

அவரும் என்னைப்போல இதற்க்கு முயற்சி செய்து கொண்டுருந்தவர்தான்.நாங்கள் சக ஊழியர்கள்

மனிதன் பிறக்கும்போது மிருகத்தன்மையுடன் தான் பிறக்கிறான்,மனிதத்தன்மை என்பது தொடர் முயற்சி செய்தல்தான்,மானுடத்தன்மைதான் கிறிஸ்து.

இதை போன்று தொன்மங்களை ஏய்டன்,ஆண்ட்ரு,பாதர் பிரண்ணன் போன்ற ஒரு சிலர் மட்டுமே புரிந்துள்ளனர் அவர்கள் மட்டுமே செயல் புரிகின்றனர்.


தலித் அரசியலை இந்திய தத்துவ பின்புலத்துடன் பின்னி இந்த நாவல் உருவாகி இருப்பதால்,இதற்கான காரணத்தை நமது இந்தியத்தொன்மங்களில் தேடவும் அதற்கான தீர்வை இந்திய தத்துவத்தில் கண்டடையவும் வாய்ப்பளிக்கிறது.

(பக்:382) “அந்த தாக்குதல் நிகழும்போது நான் ஒரு கணம் முரஹரி ஐயங்காரின் முகத்தைப் பார்தேன்.நீங்கள் அதை பார்க்கவில்லை.பார்த்திருந்தால் ஒருபோதும் உங்கள் கொடுங்கனவுகளில் இருந்து அந்த முகம் விலகியிருக்காது

அந்த தாக்குதலை நடத்திய அத்தனை முகங்களும் ஒன்றுபோலத்தான் இருந்தன.கொடூரமான வெறி கொந்தளிக்கும் முகங்கள்.உச்சகட்ட கூச்சலில் அப்படியே நிலைத்துவிட்ட பாவனைகள்.ஆனால் அவரது முகம்.அது வேறுமாதிரி இருந்தது சார்.அது ஒரு உச்சகட்ட பரவசத்தில் இருந்தது சார்.ஒவ்வொரு காட்சியையும் கண்ணாலும் காதாலும் அள்ளி அள்ளிப்பருகி வெறி தீர்பதுபோல.பிறகு நான் நினைத்துக்கொண்டேன்.அங்கே நூற்றுக்கணக்கான உடல்கள் பின்னிப்பிணையும் ஒரு காமக்களியாட்டம் நடந்தால் அதைப்பார்க்கும் முகம் அப்படித்தானிருக்கும்

ஏய்டனின் பார்வையில் பார்க்காமல் இந்தியத் தொன்மங்களின் வழியே பார்க்கும்போது இவையாவும் பிழையாகவும்,அபத்தமாகவும் தோன்றாது .எல்லாம் பிரம்மத்தின் லீலையாகவும்,பௌத்தத்தில் உள்ள தர்மமாகவும் தோன்றும். நீலமேகம்,முரஹரி ஐயங்கார்,நாராயணன் போன்ற யாரும் குற்றமுடையவர்களாக தோன்றாது.அது அவர் அவர்களின் சுதர்மம் எனத் தோன்றும்.

இந்தியத்தொன்மங்களின் வழியே பார்க்கும்போது காத்தவராயன் கண்ணனைப்போன்று ஞானயோகியாகவும்,ஏயிடன் அர்ஜுனைப்போன்று கர்மயோகியாகவும் தோன்றுகிறது.காலச்சுழலில் மீண்டும்மீண்டும் கண்ணனும்,அர்ஜுனனும் தோன்றிக்கொண்டே இருக்கிறார்கள்.


தொன்மங்கள் மலை உச்சியில் கூழாங்கல்லென தவம் புரிக்கின்றன என்றோ ஒருநாள் ஒரு ஆட்டிடையான் கண்டடைகிறான்,கிறிஸ்து ஒரு போதும் தனியாக இருப்பதில்லை.

அழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: நிழலின் தனிமை – கமலக்கண்ணன்

அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018

தனிமையின் இலக்கியம்.

“ஒருவரை ஒருவர் சித்திரவதை செய்து கொள்வதற்காகத் தான் இந்த மனிதர்களே படைக்கப்பட்டிருக்கிறார்கள்.” – தஸ்தயேவ்ஸ்கி.

அள்ள அள்ள குன்றா அமுதம் தரும் வாழ்வின் பல முனைகள் – குறிப்பாக வாழ்வின் இச்சைகளை சமூகக் கட்டமைப்பிற்கேற்ப நேர்பட வாழச்சொல்லும் ஒழுக்க விதிகளினால் ஊடறுக்கப்படும் முனைகள் – இலக்கியத்தின் ஊற்றாக தொடர்ந்து வாய்த்து, காய்த்து கிடக்கிறது. இதன் சாதகங்களை எழுத்தாளரின் மனம் மெல்ல, நேர்மையாய் கைக்கொள்ளும் தோறும் ஒரு செவ்விலக்கியம் நம் அவதானிப்புகளின் முன் இணைந்து கொள்ள தயாராய் முன் வைக்கப்படுகிறது.

நினைவிலிருந்து எழுதப்படும் எந்த ஒரு இலக்கியமும் அதன் சிறப்பான ஒருமை அழகை அடைய – நினைவேக்கம், பால்யம், காலப்பற்று என – சில காரணங்கள் உண்டு. அவை அனைத்தையும் தாண்டி, அடிப்படையில் நினைவுகளே புனைவெழுப்பிடும் கட்டுமானப் பொருட்கள் என்ற உண்மை இலக்கியத்தின் செந்தன்மைகளுக்கு அடிநாதமாகிடுகிறது. இன்று காலையில் நிகழும் நினைவுகள் கூட பொருட்படுத்தும் தோறும் புனைவாகவே வெளிப்படுகிறது. காலம் நீள நீள புனைவின் வீச்சும் அதிகமாகிற வாய்ப்புகளே பெரிதும் நிகழ்கிறது.

‘நிழலின் தனிமை’ நாவல் தமிழின் வெகுமதியாய் திகழ்வதற்குக் காரணம், அது கொண்ட வடிவம், பெரிதும் சிக்கலற்றதாகவும், உண்மைகளைச் சொல்லி இருளை அடையாளம் காட்டும் பண்புடையதாலுமே! உலகின் அதிக நவீன செவ்வியல் படைப்புகளைச் செய்தது தஸ்தயேவ்ஸ்கியாவே இருப்பார். நிழலின் தனிமை, தஸ்தயேவ்ஸ்கியின் நாயகர்களால், கட்டி எழுப்பப்படும் ஒரு இருண்மையின் கதைகளை போலவே உருவாகி நிலை பெற்றிருக்கிறது. அதிகம் புற வர்ணனைகளை பயன்படுத்தாமலும், அகத்தின் தவிப்புகளை பற்றி பேசுவதிலும் அந்த உருசிய இராட்சதனின் படைப்புகளின் தன்மை கொண்டே இருக்கிறது.

இது சிறுகதையா, நாவலா என்ற குழப்பம் ஏதுமெனக்கு ஏற்படவில்லை. மனதின் ஒட்டுமொத்த தொகுப்புகளை உருவாக்கிக் காட்டியதனால், அது வாழ்வை முன்வைத்து நாவலாகவே உருவெடுத்திருக்கிறது. ஆனால், சிகப்பு நிறத்தில் தொடங்கி பழுப்பேறிய கண்கள் வழியே நமக்கு கதை சொல்லி, சாம்பல் நிறத்தில் முடிவதால் அதை ஆசிரியர் சிறுகதையே (சற்றே நீண்ட சிறுகதை – தேவிபாரதி) என சொல்லவும் தயங்கவில்லை. எளிய வாசிப்பு தரும் சிறு ஓடையில் பெரும் காட்சிகள் உருவாகும் பெருநதியின் ஓட்டம்.

சிறிய சுனை போலத் தோற்றம் கொண்ட நீர்பரப்பு, இறங்கியதும் தன் ஆழத்தை விரித்துக் காட்டுவது போல, நாவல் முழுவதும் விரவிக் கிடக்கும், திடுக்கிடல்கள், அவற்றிற்கான இயல்புகளையும், வடிவ ஒருமையைச் சிதைக்காமலும் மினுக்கிடுகின்றன. வருடும் பீலியே சட்டென பறந்து வந்து நம் கண்களைக் கிழிக்கும் தன்மை பெறுவது போல, இந்த சிறுசுனையில் ஒரு பெருநதியின் ஓட்டத்தை பெற முடிகிறது. அது, நம் தோல்விகள், பழியுணர்வு, வஞ்சினம், காமம் என தொடர்ந்து எதிர்மறை பற்றிய கேள்விகளை அல்லது காட்சிகளை எழுப்பும் தோரும் நம் நினைவின் நதியில் வந்து இணைந்து கொள்கிறது.

மகாபாரதம் முதலாய் நிழலின் தனிமை ஈறாய் வைத்து, ஆண்களின் போர்களைக் கணக்கிட்டுப் பார்த்தால், அதில் பெண்களின் ஆற்றல் பெரும்பங்கு வகிப்பது, வியப்பாய் எஞ்சுகிறது. சாரதா, சுலோ, சுகந்தி என நீளும் கதைப் பெண்கள் ஆங்காங்கே தன் உணர்வுகளின் நீட்சியிலேயே வந்து – தன் வலையிலேயே சிக்கிய – சிலந்தி போல என சிக்கித் தவிப்பதும், பேரொலி எழுப்பி அழவேண்டிய தருணங்கள், உலகம் உமிழுமென உணர்ந்தும் தொடரும் ஒழுக்கமீறல்கள், தொடர்ந்து ஆற்றல் கொண்டு எழும் தீராத பழியுணர்வுடனான நடமாடுதல்கள் (அவ்வாறான ஆண்களின் கற்பனைகளில்) ஆகியவற்றிலெல்லாம் எளிய கடந்து செல்லுதலை செய்வதும் பயத்தையும், கருணையையும் ஒன்றாய் அள்ளித் தெளிக்கிறது.

நாவலில் வரும் நாயகனின் பால்யம், பெரும்பாலான பால்ய கதைகள் போலவே தென்பட்டாலும், ஒரு வழக்குமீறிய, பின்வாழ்வின் பதற்றங்களுக்கான விதைகளை ஏந்திய நிலமாகவே உருவாக்கப்பட்டுள்ளதென அவதானிக்கிறேன். வளர்வதும் சிதைவதும் பற்றியவையே அனைத்து இலக்கியமும். நாயகனின் பால்யத்தில் வரும் வின்செண்ட், வெகு சிறப்பாக உருவாக்கப்பட்ட துணைப் பாத்திரம். கருணாகரனின் மீதான பழி, க்ரோதத்தை காட்டிக் கொண்டிருக்கும் நண்பனின் கதைக்கு கைத்தாங்கலாய் ஆறுதல் கொடுத்து விட்டு, அதிலிருக்கும் வன்மத்தின் மயக்கத்திற்கு ஆளாகி புதர்மறைவில் தனிக்காமம் கொள்ளும் மிருகத்தை அச்சிறிய பாத்திரமே உணர்த்தி வென்றிருக்கிறது.

தன்மையில் சொல்லப்பட்டிருக்கும் கதை, அது கதையாடும் விதத்திலும், பிங்க், பழுப்பு, சாம்பல் என வெவ்வேறு நிறங்களைக் கையாண்டிருக்கும் அழகிலும், அதிக நிலக்காட்சிகள் இல்லாதிருப்பினும், குழப்பமான வடிவங்களை கொண்டிருக்கும் அக புற நிலக்காட்சிகளை வடிவம் கொண்டதிலும், மன இருளின் அத்தனை ரகசியங்களையும் வெளிச்சமிடும் ஆகிருதிகளிலும், செவ்வியல் படைப்பாக ஆகியிருக்கும் தனிமையின் நிழல் நாவல் சினிமாவாக எடுக்க உகந்த உன்னதம் என்பது என் துணிபு.

எளிமையான கோபம் நடிக்கப்பட்டு, மெல்ல ஆழமாக வேர்கொண்டு பூதாகரமாய் வளர்ந்து விடுகிறது. அதை, செயலாக்கிட பழியுணர்வு கொண்டு, அதற்கும் தன் சுயநிலை மீதான பற்றுக்கும் இடையிலான தவிப்பு மனிதனை அலைகளின் தொகையாக்கி பார்க்கிறது. தன்னைத் தானே வென்று கொள்ள முனைவெடுத்து, ஒழுக்கமீறல்களின் மூலம் தன்னை உலகம் தனிமையால் சபிக்க வேண்டுமென அருகில் உள்ளவர்களையெல்லாம் தன் அலைகளுக்குள் இழுத்து போட இச்சை கொள்கிறது மனித மனது. ‘நிழலின் தனிமை’ இருளைச் சொல்லும் பொழுதே, தனிமையின் நிழல் தரும் ஆற்றுப்பாட்டையும் சொல்லி செல்கிறது.

தமிழின் இன்றைய இலக்கிய சூழ்நிலையில் தான் வட்டார வழக்குகளின் ஆழத்திலிருந்து எழும் புனைவுகளோ, சங்க தமிழின் சொல்லாட்சிகளுடன் எழும் புனைவுகளோ, காப்பியங்களின் மீளுருவாக்கங்களோ தமிழிலக்கியத்திற்குத் தேவையாகிறது. அவ்வகை புனைவுகள் தமிழுக்கு சீரிய கால இடைவெளிகளில் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், நிழலின் தனிமை இவற்றையும் கடந்து ஒரு – தன்மை கதையாடல் முறையில் சொல்லப்படும், வஞ்சம் பற்றிய திகில் நிரம்பிய, வழக்கமான ஆண்பெண் உறவுகளைப் பேசும் – எளிமையான நாவலாக எஞ்சிவிட்டது போல தோற்றம் தருகையிலேயே, அத்தனை வகைமையையும் மிஞ்சியும் நிற்கும் படைப்பாகிறது.

நிழலின் தனிமை – தேவிபாரதி – காலச்சுவடு.