Author: பதாகை

மறக்கப்பட்ட கனவுகள் – ஸ்டெஃபான் ஸ்வைக் சிறுகதையை முன்வைத்து

பீட்டர் பொங்கல்

The Villa lay close to the sea,” என்ற ஒற்றை வரியுடன் துவங்குகிறது, Stefan Zweigன் “Forgotten Dreams” என்ற சிறுகதை.

1881ஆம் ஆண்டு பிறந்த Stefan Zweig இந்தக் கதையை 1900ஆம் ஆண்டு எழுதியதாக விக்கிப்பீடியா சொல்கிறது. தகவல் பிழை எதுவும் இல்லையென்றால், அவர் இதைத் தன் பத்தொன்பதாம் வயதில் எழுதியிருக்க வேண்டும். வியன்னாவில் பிறந்த ஸ்டெஃபான் ஸ்வைக், தனது நாற்பது மற்றும் ஐம்பதுகளில் மிகப் பிரபலமான எழுத்தாளராக இருந்தவர், உலக மொழிகள் பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்டவர். ஹிட்லரின் இன ஒழிப்பு நடவடிக்கைகளால் புலம் பெயர்ந்த இவர், பல தேசங்களைக் கடந்து இறுதியில், இங்கிலாந்து சிங்கப்பூரில் பெருந்தோல்வியைச் சந்தித்தப்போது, “என் ஐரோப்பா இனி மீண்டும் திரும்பப் போவதில்லை,” என்று தன் அறுபத்து ஒன்றாம் வயதில், பிரேசிலில் தற்கொலை செய்து கொண்டவர்.

இவரது படைப்பாற்றல் உச்சத்தில் இருந்த காலகட்டமும் ஐரோப்பாவால் இரு உலகப் போர்கள் நிகழ்ந்த காலகட்டமும் ஒன்றுபடுகின்றன- இக்காலகட்டத்தில் எல்லைகளற்ற ஐரோப்பா, போர் எதிர்ப்பு (பசிஃபிஸம்) முதலான நாட்டங்கள் அவரது எழுத்தைப் போலவே அவரையும் ஒரு கற்பனைநவிற்சியாளராக (ரொமாண்டிக்) சித்தரிக்கின்றன என்றாலும் அவரது நிதர்சனம் எவருக்கும் குறைந்தததல்ல. நாஜியிசத்தின் பிரத்யேக அச்சுறுத்தலை அவர் வெகு சீக்கிரமே உணர்ந்திருந்தாலும், ஹிட்லரின் ஜெர்மனியை விமரிசிக்கச் சொன்னபோது, “நான் எந்த தேசத்தையும் கண்டனம் செய்ய மாட்டேன்” என்றார். யூதராக இருந்தபோதிலும், பாலஸ்தீனில் குடியேறிய யூதர்களின் நடவடிக்கைகள் குறித்து கவலைப்பட்டார் – அது ஒரு ஆபத்தான தேசிய இயக்கமாக மாறிக் கொண்டிருக்கிறது, என்று எச்சரித்தார்- “நான் அனைத்து வகை தேசீயங்களையும் வெறுக்கிறேன்”. அறிவு சார்ந்து இயங்குபவன் எந்தத் தரப்புக்கும் ஆதரவாக இருக்க முடியாது- “அறிவின் பாற்பட்டு இயங்குவதென்பது மிகவும் நியாயமாக இருப்பதாகும், அது எதிராளியைப் புரிந்து கொள்ளக் கோருகின்றது, எனவே உன் தரப்பின் அறவலிமை குறித்த நம்பிக்கையை நலிவுறச் செய்கிறது”

இவரது சிந்தனை, எழுத்து, நடை, கற்பனை குறித்து பல விமரிசனங்கள் இருந்தாலும் உலகின் சிறந்த கதைகள் என்ற ஒரு தொகுப்பில்கூட இடம் பெற்றுள்ள இவரது முதல் கதை, “மறக்கப்பட்ட கனவுகள்”, வாசிக்கப்பட வேண்டிய ஒன்று. காதல் கதைதான் என்றாலும், அதன் தலைப்பும் கதையோட்டத்தின் மையமும் ஒரு வகையில் அவரது வாழ்க்கை. மற்றும் அதன் துயரங்களின் முன்தரிசனமாய் அமைந்திருக்கின்றன. தன் காலம் குறித்த விவரணைகளை ஒரு சுயசரிதையாய், பிறருக்கு எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்ற ஆவேச வேகத்தில் பதிவு செய்தவர் ஸ்வைக்- “தம் காலங்களைத் தீர்மானிக்கும் மகத்தான இயக்கங்களின் துவக்கங்களை இனம் கண்டுகொள்ளும் ஆற்றல் அதன் சமகாலத்தவர்களுக்கு மறுக்கப்படுகின்றது என்பது வரலாற்றின் நிராகரிக்க முடியாத நியதியாய் நிலவுகின்றது,” என்பதே அவரது சுயசரிதையின் எச்சரிக்கை. அவர் எழுதிய முதல் சிறுகதையே அவரது காலத்தின் முடிவை கவித்துவ முரண்தன்மையுடன் சுட்டுகிறது என்பதை ஒரு மிகப்பெரிய கற்பனைத் தாவலில் நாம் கண்டு கொள்ள முடியும். உண்மையில், இந்தக் கதையை எழுதும்போது, 1900ல், அவரது காலம் எதிர்கொள்ளப்போகும் அழிவுகள் குறித்து கவலைப்பட யாருக்கும் எந்தக் காரணங்களும் இருந்திருக்கவில்லை.

ஸ்டெஃபான் ஸ்வைக்கின் கதைமொழி மிக நிதானமாக ஒவ்வொரு காட்சியாக, உவமைகளைக் கொண்டு சித்தரிப்பதாய் இருக்கிறது. முதல் பத்தி இப்படி துவங்குகிறது, அதன் இறுதி வரிகள் கவனிக்கத்தக்கவை, “மறக்கப்பட்ட கனவுகள்” தலைப்புடன் பொருத்திப் பார்த்தால் முக்கியத்துவம் கொண்ட ஒன்று. இங்கேயே கதையின் முடிவை ஊகித்து விடலாம். ஆனால் முதல் வாசிப்பில் அதற்கான அவசியம் இல்லை என்பதால் நாம் அந்த வாக்கியத்தை இயல்பாகக் கடந்து சென்று விடுகிறோம்.

“The quiet avenues, lined with pine trees, breathed out the rich strength of salty sea air, and a slight breeze constantly played around the orange trees, now and then removing a colourful bloom from flowering shrubs as if with careful fingers. The sunlit distance, where attractive houses built on hillsides gleamed like white pearls, a lighthouse miles away rose steeply and straight as a candle—the whole scene shone, its contours sharp and clearly outlined, and was set in the deep azure of the sky like a bright mosaic. The waves of the sea, marked by only the few white specks that were the distant sails of isolated ships, lapped against the tiered terrace on which the villa stood; the ground then rose on and on to the green of a broad, shady garden and merged with the rest of the park, a scene drowsy and still, as if under some fairy-tale enchantment.”

இந்தக் கடற்கரையில் ஒரு வீடு இருக்கிறது- அது உறங்கிக் கொண்டிருக்கிறது- sleeping house– அதன் மீது காலை வெயில் ஒரு கனமான சுமையாய் இறங்குகிறது- on which the morning heat lay heavily. அதன் கீழ் கடலின் அலைகள் வானவில் வண்ணங்களில் மின்னுகின்றன, வைரங்கள் போல் பிரகாசமாய். அந்தரங்க உரையாடலில் இருப்பது போல் நெருக்கமாய் நின்று கொண்டிருக்கும் பைன் மரங்களில் விழும் வெயில், விரித்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு ஜப்பானிய குடையின் மீதும் விழுகிறது. அதன் கீழுள்ள கூடை நாற்காலியில் ஒரு பெண் சாய்ந்து அமர்ந்திருக்கிறாள். மோதிரங்கள் இல்லாத விரல்கள் (பின் வரும் கதைக்கு இது ஒரு முக்கியமான குறிப்பு) மறதியில் இருப்பதுபோல் போல் துவண்டிருக்கின்றன, அவை மென்மையான, இனிய அசைவுகளில் ஒரு நாயின் பட்டுச் சருமத்தைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. அவளது கரிய கண்களில் ஒரு சிறு நகைப்பின் சாயல் இருக்கிறது, அவை ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கின்றன. இருள்திரை போர்த்து அழகு கூட்டப்பட்டது போல் ஒளிரும் விழிகள் என்று எழுதுகிறார் ஸ்வைக். அவளது அழகு எளிய, இயல்பான அழகல்ல, கவனமான, நுட்பமான சல்லாபத்தைக் கொண்டு வளர்க்கப்பட்ட ஒன்று – புறப்பார்வையில் ஒழுங்கற்றது போல் தோற்றம் அளிக்கும் மணம் நிறைந்த அவளது சுருள் கேசம், ஒரு கலைஞனின் கவனத்துடன் கட்டமைக்கப்பட்டது. புத்தகத்தை வாசிக்கும்போதே அவளது வெண்ணிற பற்களை வெளிப்படுத்தும் மென்னகை, கண்ணாடியின் முன் பல ஆண்டுகள் பழகிப் பெற்ற ஒன்று. அவள் புனைந்த வேடங்கள் கவனமற்ற போதிலும் அகற்ற முடியாத வகையில் அவளது இயல்பாய் ஆகி விட்டதை ஸ்வைக் அவளது புறத்தோற்றத்தை விவரிக்கும்போதே உணர்த்தி விடுகிறார்.

இப்போது ஒரு பணியாள் வருகிறான், ஒரு விசிட்டிங் கார்டைத் தருகிறான். அவள் வெளியே காத்திருப்பவனை உள்ளே அனுமதிக்கச் சொல்கிறாள். சிறிது சிரமப்பட்டுத்தான் வந்திருப்பது யாரென்பதை நினைவுக்கு கொண்டு வருகிறாள்- பின் அவள் கண்கள் ஜொலிக்கின்றன, இப்போது கிட்டத்தட்ட மறந்தே போய்விட்ட, வெகுகாலத்துக்கு முந்தைய இளமை நாட்களை அவள் நினைத்துப் பார்க்கிறாள். உருவங்களும் கனவுகளும் மீண்டும் பிரத்யேக வடிவம் பெறுகின்றன, மெய் போல் தெளிவாய்த் தோற்றம் கொள்கின்றன.

அவளைச் சந்திக்க வந்திருப்பவன் பேசும் முதல் வார்த்தைகளே அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள இடைவெளியை உணர்த்துகின்றன – பல ஆண்டுகளுக்குப் பின் முதல் முறை சந்திக்கிறோம், என்கிறான் அவன், இனியும் பல ஆண்டுகளுக்கு இதுதான் இறுதிச் சந்திப்பாக இருக்கப் போகிறது. பதிலுக்கு அவளும், ஒரு காலத்தில் சிறிது முக்கியத்துவம் கொண்டவனாக நீ இருந்திருந்தாலும் இப்போது உன் பெயரைக் கொண்டு உன்னை என்னால் உடனே நினைவுபடுத்திக் கொள்ள முடியவில்லை, என்கிறாள். இருவரும் சிரித்துக் கொள்கிறார்கள். சொல்லியும் சொல்லாமலும் உணரப்பட்ட இளமையின் முதல் காதல், அதன் மென்போதை ஒரு கனவு போல் அவர்கள் உள்ளத்தில் எழுகிறது. விழித்ததும் இது குறித்து முரண்நகையுடன் நினைத்துப் பார்க்கலாம், ஆனால் உண்மையில் கனவு தொடர வேண்டும், கனவில் வாழ வேண்டும் என்பதுதான் உன் ஆசையாக இருக்கும், என்று இளமைக் காதல் குறித்து எழுதுகிறார் ஸ்வைக். தயங்கித் தயங்கி மேற்கொள்ளப்படும் இளம் காதலெனும் அழகிய கனவு, விழைந்தாலும் கேளத்துணியாதது, ஆசை வளர்த்தாலும் அளிக்கவொண்ணாதது.

இருவரும் பழைய விஷயங்களைப் பேசிக் கொள்கிறார்கள், சிரித்துக் கொண்டே, சந்தோஷமாக. எல்லாம் பேசி முடித்ததும் இறந்த காதலின் சோகம் அவர்கள் மீது ஒரு கனமான சுமையாய்க் கவிகிறது. “நான் அமெரிக்காவில் இருக்கும்போது உன் திருமணம் பற்றி கேள்விப்பட்டேன்,” என்கிறான் அவன். பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததன் நினைவுகளைக் கலைத்துக் கொண்டு, “அப்போது நீ என்னைப் பற்றி என்ன நினைத்தாய்?” என்று அவள் கேட்கிறாள். “நான் நாளை அமேரிக்கா கிளம்புகிறேன்,” என்று பதில் சொல்கிறான் அவன். “என் காதலின் சுவாலை எப்போதோ நட்பின் அவியும் தணல்களாய் அடங்கி விட்டிருந்தது. உன் மேல் கோபம் வரவில்லை, என்னால் உன்னைப் புரிந்து கொள்ள முடியவில்லை, உனக்காகப் பரிதாபப்பட்டேன்,” என்கிறான். என் மேல் இரக்கப்பட என்ன இருக்கிறது, என்று அவள் கோபமாய்க் கேட்கிறாள். “உன் பணக்கார கணவனை நினைத்துப் பார்த்தேன். நீயோ லட்சியவாதி, சாதாரண வாழ்க்கையின் அற்பங்களை வெறுக்கும் விடுதலை விரும்பி, உன்னால் எப்படி ஒரு சாதாரண பைனான்சியரின் மனைவியாக இருக்க முடியும் என்று வருத்தப்பட்டேன்”, என்கிறான்.

“அப்படியானால் அவனை ஏன் நான் திருமணம் செய்து கொண்டிருக்கப் போகிறேன்?” என்று அவள் கேட்கிறாள். “எனக்குத் தெரியாத குணங்கள் அவனுக்கு இருந்திருக்கலாம். ஆனால் நீ அவனை அவனது அந்தஸ்துக்காகவும் சொத்துக்காகவும் திருமணம் செய்து கொண்டிருக்கக்கூடும் என்பதை என்னால் நினைத்தே பார்க்க முடியவில்லை,” என்கிறான்.

அப்போது, “It was as if she had failed to hear those last words, for she was looking through her fingers, which glowed deep rose like a murex shell, staring far into the distance, all the way to the veils of mist on the horizon where the sky dipped its pale-blue garment into the dark magnificence of the waves,” என்று எழுதுகிறார் ஸ்வைக். அவளது விரல்கள் சிப்பி ஓடு போல் சிவந்திருந்தன, பனிப்படலம் திரை போர்த்திருக்கிறது, வானம் தன் வெளிர் நீல ஆடையை அலைகளின் மகோன்னத இருளில் நனைத்துக் கொண்டிருந்தது. உணர்வுகளின் பொருளை மட்டுமல்ல, பாத்திரங்கள் அறியாததை, அவர்கள் வாழ்வின் அடிப்படை அர்த்தங்களை இயற்கை விவரணைகளைக் கொண்டு ஸ்வைக் சித்தரிக்கிறார்.

“ஆனால் அதுதான் நடந்தது,” என்று சொல்கிறாள் அவள். அதன் பின் ஒரு நீண்ட உரையில், தனக்குத் தன்னையே புரியவில்லை என்கிறாள். அற்புதங்களை நம்பும் இளம் பெண்களின் இதயங்களை வளர்ந்தபின் எந்தப் பெண் அறியக்கூடும், என்று கேட்கிறாள்- யதார்த்தத்தின் முதல் மூச்சில் உதிரும் சிறு வெண் மலர்கள் போல் மென்மையானவை அவர்களின் கனவுகள். பிற பெண்களைப் போல் ஏக்கங்களை ஆனந்தமாய் மாற்றும் ஆண்கள் குறித்து அவள் கனவு காணவில்லை, அவளது கனவுகள் பொன்னும் பட்டாடையும் விழைந்தன. அவள் செல்வச் செழிப்பை, அதன் மகத்துவத்தை நேசித்தாள். “நான் என் சாதாரண ஆடைகளில் என்னை வெறுத்தேன், ஒரு சாமியாரைப் போல் எளிமையாகவும் அடக்கமாகவும் இருந்தேன், வசீகரமற்ற என் தோற்றம் குறித்து வெட்கப்பட்டு பல நாட்கள் நான் வீட்டிலேயே இருந்திருக்கிறேன். என் குறுகிய, அழகற்ற அறையில் மறைந்து இருந்தபோது நான் மிகவும் விரும்பிய கனவில் நான் கடலோரம் தனியாய் இருக்க விரும்பினேன். என் வீடு மகத்தானதாகவும் கலைத்தன்மை கொண்டதாகவும் இருக்கும். சாதாரண உழைக்கும் உலகின் கரங்கள் தொடாத, அமைதி கொழிக்கும், நிழல் வேய்ந்த பசிய தோட்டப் பாதைகளில் நடக்க விரும்பினேன் – இந்த இடம் போன்ற ஒன்றுதான். என் கணவர் என் கனவுகளை மெய்யாக்கினார், அதைச் செய்ய முடியும் என்பதால் அவரைத் திருமணம் செய்து கொண்டேன்”

அலைகள் மட்டுமே ஆர்ப்பரிக்கும் சிறிது நேர மௌனத்துக்குப்பின், “ஆனால் காதலைப் பற்றி என்ன சொல்கிறாய்?” என்று அவன் கேட்கிறான். “அந்த லட்சியங்களை எல்லாம் இன்னும் வைத்திருக்கிறாயா?” என்று அவள் சிரித்துக் கொண்டே கேட்கிறாள். அத்தனை தொலைவில் உள்ள உலகம் போனபின்னும் அவற்றில் சிலவும்கூட சாகவில்லையா, வாடவில்லையா? வலுக்கட்டாயமாக உன்னிலிருந்து பிய்த்து எடுக்கப்பட்டு மண்ணில் வீசப்படவில்லையா, அவற்றை ஆயிரம் வாகனங்களின் சக்கரங்கள் நசுக்கவில்லையா?

அவன் எதுவும் சொல்வதில்லை. அவளது கரங்களை முத்தமிட்டு விடை பெற்றுக் கொள்கிறான். தன்னுள் ஆழக் கிடந்த ரகசியத்தை வெளிப்படுத்தியது குறித்தும் பல ஆண்டுகள் அவளுக்கு ஒரு அந்நியன் போலிருந்த ஒரு ஆணிடம் தன் ஆன்மாவைத் திறந்தது குறித்தும் அவள் வெட்கப்படவில்லை. சிரித்துக் கொண்டே அவன் போவதைப் பார்க்கிறாள், காதல் பற்றி அவன் பேசியதை நினைத்துக் கொள்கிறாள்.

“அவளுக்கும் நிகழ் காலத்துக்கும் இடையில் மௌனமாய், வெளியே கேட்காத வகையில் அடி வைத்து கடந்த காலம் எழுகிறது. திடீரென்று அவள் அவன் தன் வாழ்வுக்கு ஒரு திசை அளித்திருக்க முடியும் என்பதை நினைத்துப் பார்க்கிறாள். அந்த வினோத எண்ணத்துக்கு அவள் மனம் ஒளிரும் வண்ணங்கள் பூசுகிறது. மெல்ல, மெல்ல, அவளறியாமல், கனவு காணும் அவள் இதழ்களின் முறுவல் மறைந்து போகிறது”

இப்படி முடிகிறது கதை.

சிங்கப்பூர் வீழ்ந்தது என்ற செய்திக்குப்பின், இங்கிலாந்து தோற்பது உறுதியானபின், தன் ஐரோப்பா இனி திரும்பப் போவதில்லை, தேசீயங்கள் அதை மீட்கவியலாதபடி பிளவுபடுத்தி விட்டன என்று மனமுடைந்து, “என் தேசத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் பூரண சுதந்திரம், எங்கும் என்னை அதிதியென உணர்தல்” என்ற தன் சர்வதேச லட்சியம் பொய்த்துப் போனதை தாள முடியாமல் தன் இளம் மனைவியுடன்  உயிரை மாய்த்துக் கொண்டவர் ஸ்வைக். பல வண்ணங்களில் ஒளிர்ந்து மறைந்தாலும், துரோகங்களால் தோற்கடிக்கப்பட்டு, மறக்கப்பட்டு பலகாலமான பின்னும் அவை ஒரு வாதையாய் உயிர்த்தெழக்கூடும் என்பதுதான் கனவுகளின் வலிமை. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஸ்வைக்கின் சமகாலத்தவர்கள் தேசீய உணர்வுகளால் எழும் யுத்தங்களைத் தவிர்க்க ஒருங்கிணைந்த ஐரோப்பாவை உருவாக்கினர். இதுவரை ஐரோப்பிய தேசங்கள் தமக்குள் போரிட்டுக் கொள்வதை வெற்றிகரமாய்த் தவிர்த்து வந்திருக்கின்றன. ஐரோப்பா ஒரு கனவென்றால் தேசீயமும் ஒரு கனவு. பல காரணங்களால் ஐரோப்பிய கனவு மெலிந்து, தேசீய கனவுகள் வலுவடைவதை இன்று நாம் காண்கிறோம். தான் வாழும் காலத்தில் புகழ் பெற்றிருந்தாலும் ‘உண்மையை எதிர்கொள்ளும் துணிச்சலற்றவர்” என்றும் ‘அற்ப எழுத்தாளர்’ என்றும்கூட விமரிசிக்கப்பட்டு, தனது மறைவுக்குப்பின் மறக்கப்பட்டிருந்த ஸ்வைக் இன்று மீண்டும் பேசப்படுகிறார், அவரது நூல்கள் மீண்டும் வாசிக்கப்படுகின்றன. கலை மட்டுமல்ல, காலமும் ஒரு எழுத்தாளனின் இடத்தையும் அவனது படைப்புகளின் முக்கியத்துவத்தையும் தீர்மானிக்கக் காரணம் ஆகிறது. மேற்குலகில் ஸ்வைக்கின் காலம் திரும்புவதன் அறிகுறிகள் தென்படுகின்றன. அதன் மக்களுக்கு ஸ்வைக் ஒரு எச்சரிக்கையாய் இருக்கக்கூடும்.

ஒளிப்பட உதவி – விக்கிபீடியா

ஆப்த வாக்கியம் – பெர்டோல்ட் ப்ரெஷ்ட்

பெர்டோல்ட் ப்ரெஷ்ட் (அபிநந்தன்)


இருண்ட காலங்களில்
பாடுதலும் இருக்குமா?
ஆம், பாடுதலும் இருக்கும்,
இருண்ட காலங்களைப் பற்றி.

(This is an unauthorised translation of the poem, ‘Motto’ to Svendborg Poems, originally written in German by Bertolt Brecht, and translated into English by John Willett. This Tamil translation is intended for educational, non-commercial display at this particular webpage only)

ஒளிப்பட உதவி – விக்கிப்பீடியா

மீள்கை

கலைச்செல்வி

“போர் மேகங்கள் சூழ்ந்துடுச்சு..” சிரித்தான். அதெல்லாம் பொதுமக்களுக்கு. உண்மையில் போர் ஆரம்பித்து பத்து நாட்களுக்கு மேலாகி விட்டது. அதைதான் கிண்டலடிக்கிறான் இந்த நிலையிலும்.

”அப்றம்.. நீங்க அடிச்சா நாங்க திருப்பி அடிக்க மாட்டோமா..? கோபமாக திருப்பிக் கேட்டான். சாகக்கிடக்கிறவனுக்கு நக்கல் ஒரு கேடு.. இவனை.. ஒரேயடியாக முடிக்கக் கூடாது. அணுஅணுவாக இரத்தம் சிந்தி சித்ரவதையோடு சாகணும்.

”உண்மையா சொல்லு.. என்ன பாத்தா உனக்கு அடிக்கணும்.. கொல்லணும்னு தோணுதா..” எங்கோ அடிப்பட்டு தெறித்து விழுந்திருக்கலாம். அதுவும் எல்லையை தாண்டி. பிழைத்தே எழுந்தாலும் இனி ஒருபோதும் அவன் தன் தாய் நாட்டை பார்க்க அனுமதிக்கப்பட மாட்டான்.

இவனும் வழி மாறியிருந்தான். அதிர்ஷ்டவசமாக தாய் நாட்டுக்குள்தான் வழி தடுமாறியிருக்கிறான். தகவல் தெரிவித்தால் மீட்டுக் கொள்வார்கள். இங்கு சிக்னல் இல்லை. சிக்னல் கிடைக்க சற்று துாரம் செல்ல வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் இவனுக்கும் பேசும் சுவாரஸ்யம் எழுந்தது. நல்லவேளை மொழி பிரச்சனை இல்லை.

”நாம எதிரெதிர் நாட்டுக்காரங்க.. நாங்க உங்களை அடிச்சு கொல்லதானே வேணும்..”

எங்கோ துப்பாக்கி ஒசைக் கேட்டது.

”அய்யோ.. கடவுளே.. என் அசைன்மெண்ட் இன்னும் முடியில.. உங்கிட்ட பேசிக்கிட்டுருக்க சொல்லி யாரும் எனக்கு அசைன்மெண்ட் தர்ல..” கடுப்பாக சொன்னான். முழு ராணுவ உடுப்பிலிருந்தான்.

”நீ சொல்றது சரிதான்.. ஆனா என் நெலமைய பாரு.. கை பிஞ்சு போய் கிடக்கு.. கால் என்னாச்சுன்னே தெரியில.. தாகம் நெஞ்ச அடைக்குது.. இந்த நிலயில ஒரு விலங்கு கிடந்தாலும் எடுத்து முதலுதவி செய்வோமில்ல.. மனுசனுக்கு காருண்யம் முக்கியமில்லையா..?”

”தப்பா புரிஞ்சுக்கிட்டே.. காருண்யம்னாலும் அதுக்கு இடம்.. பொருள்.. ஏவலெல்லாம் இருக்கு..”

”ஒருத்தருக்கொருத்தர் காட்டற அன்பில.. கருணையில இடம்.. பொருளுக்கெல்லாம் ஏது இடம்..?” மனதில் உறுதி இருந்தாலும் அவன் குரல் முனகலாகதான் ஒலித்தது.  ”ஆட்டை கசாப்பு பண்றோம்.. அதே ஆடு வண்டில அடிப்பட்டு போச்சுன்னா வைத்தியமும் பாக்றோமில்ல.. அதுமாதிரி..” என்றான் தொடர்ந்து.

”அது ஆடு..” இழுத்தான்.

”ஆடுதான்.. கசாப்பு ஆட்டை கூட கருணையோட ஒரே போடா போட்டு தள்ளிடுறோம்.. இப்டி குத்துயிரும் கொல உயிருமா தவிக்க வுடுறதில்ல..”

அது உண்மைதான் என்று தோன்றினாலும் ஒப்புக் கொள்ள மனமில்லை இவனுக்கு. படுத்துக் கிடந்த அவனை கண்ணெடுக்காமல் பார்த்தான். தன் வயதுதான் இருக்கும் அவனுக்கும். அணிந்திருந்த இராணுவ உடுப்பு கிழிந்து தொடை வரை ஏறியிருந்தது. வலது கால் சிதைந்து ரத்தம் தரையை நனைத்திருந்தது. சதை துணுக்குகள் பரவலாக கொத்து கறி போல சிதறிக் கிடந்தன. இவன் விடுமுறைக்கு ஊருக்கு போகும்போதெல்லாம் வீட்டில் விதவிதமான உணவிருக்கும். கறிக்கோலாவுக்காக கொத்தி  வைத்த கறியை நீரில் அலசி வடித்து, அதோடு மசாலா சாமான்களை சேர்ப்பாள் மனைவி. எலும்பில்லாத சதையை நுணுக்கமாக சிதைத்திருப்பதால் வெந்த கறி உருண்டை மெத்தென்று வாயில் கரையும். இரண்டரை வயது பேத்திக்கு உருண்டையை நசுக்கி ஊட்டி விடுவாள் அம்மா. ஓய்வு பெறுவதற்கு இன்னும் மூன்று வருடங்களிருக்கிறது. அம்மாவும் மனைவியும் அதை நோக்கி நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தனர். அப்பாவும் ராணுவத்தில் பணியாற்றியவர்தான்.

அனிச்சையாக மண்டியிட்டு அமர்ந்தான். ”என்ன வேணும்..?” என்றான் கடுமையாக.

”தண்ணீ.. தண்ணீ..”

வேண்டாவெறுப்பாக பாட்டிலை திருகி திறந்தான் இவன்.

அவனது பார்வை ஆவலாக நீர் பாட்டிலின் மீது குவிந்தது. தலையை துாக்க முயன்று,  முடியாமல் தத்தளித்தான்.

”தலைய நிமிர்த்து..” துாக்க முடியாமல் சிரமப்படுவது தெரிந்தும் சொன்னான்.. ”துாக்கி பாரு.. எல்லாம் முடியும்..” கடுமையை குறைக்கவில்லை.

முடியவில்லை என்பது போல தலையை அசைத்தபோதுதான் அதை கவனித்தான் அவன் புடனியில் கல் குத்தி இரத்தம் கசிந்திருந்தது. சற்று நகர்த்தி போட்டால் தானாக தலையை துாக்கி விட முடியும் என்று தோன்றியது. தோளை பிடித்துக் கொண்டு நகர்த்த முடியாது. அங்கிருந்தே கை கழன்றிருந்தது. நல்ல கட்டுமஸ்தான கை. இராணுவ உடல். நிறைய பயிற்சியளித்திருக்கலாம்.. இரவு பகல் தெரியாமல் பண்ணையில் பிறந்து வளர்ந்து நாற்பத்தைந்தே நாளில் கொழுகொழுவென்றாகி விடும் பிராய்லர் கோழிகள் போல. சதையும் எலும்பும் பஞ்சு பஞ்சாக.. கடித்து உண்ண தோதாக.

”தண்ணீ வேணும்..” என்றான்.. மிக சிரமப்பட்டான். கையிருந்தால் கட்டை விரலை வாய்க்கருகே வளைத்து ஜாடை காட்டியிருக்கலாம். இருந்தவாக்கில் எப்படியோ தலையை துாக்கி விட்டான். மடியை தேடுவது போல அவன் தலை தடுமாறியது. கையை அகல விரித்து எதிரியின் தலையை தாங்கிக் கொண்டான் இவன். வாயில் சிறிது சிறிதாக நீரை புகட்டினான். விழுங்க நிறைய சிரமப்பட்டாலும் உடலின் தேவை நாவை நீட்டி சுவைக்க வைத்தது.  கண்களை மூடிக் கொண்டான். நீரை உண்ட களிப்பில் முகம் அமைதியடைந்திருந்தது. பொருளாதார வசதியற்றவன் போன்ற முகத்தோற்றம் அவனுக்கு. வயதான பெற்றோர்களும்.. இரண்டு பிள்ளைகளை பெற்ற மனைவியும் இவனுக்கு இருக்கலாம். தம்பி.. தங்கைகள் என்ற பெருத்த குடும்பத்தில் மாட்டிக் கொண்டு திருமணமாகாதவனாவும் இருக்கலாம். ஏதோ ஒண்ணு.. நமக்கென்ன..? கொன்னு போட வேண்டியவனை மடியில எடுத்து கொஞ்சவா முடியும்..?

உலகின் எங்கோ ஒரு மூலையில் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் இவனை சந்தித்திருந்தால் மனம் இத்தனை கருணையற்று போயிருக்குமா..? இவன் எதிரியாக இல்லாவிட்டால் இவன் மீது இரக்கம் ஏற்பட்டிருக்குமோ..? எப்படி இவன் எதிரி.? இன்றுதான் இவனை பார்க்கிறேன்.. ஆனால் எதிரி. என் பெண்டாட்டியுடன் இவன் படுத்திருக்கவில்லை.. சொத்துக்காக கொலை செய்ய ஆட்களை ஏவவில்லை.. இவன் மனைவியின் மீது எனக்கு எந்த ஆசையுமில்லை.. இவன் என் தங்கையையோ.. நான் இவன் தங்கையையோ மானபங்கபடுத்தவில்லை. பிறகெப்படி எதிரி..? பிறக்கும்போதே சாதியோடு பிறக்கும் இந்திய குழந்தையைப் போல பார்க்கும் முதல் பார்வைக்கே எதிரியாக இருந்தான். கருணையை  தீர்மானிக்கும் சக்தி சாதிக்குண்டு.. இனத்துக்குண்டு.. மதத்துக்குண்டு.. அந்த வகையில் இவன் எதிரி.

”நீ போயீடு.. அரைநாளோ.. ஒருநாளோ நான் அப்டியே செத்துருவேன்..” என்றான் தண்ணீர் குடித்த தெம்பில்.

அது கூட சரிதான். நெடுநேரம் தன்னிடமிருந்து தகவல் வரவில்லை என்றால் தேடி கண்டுபிடித்து ரெஸ்க்யூவுக்கு ஆளனுப்புவார்கள். இவனிடம் குலாவிக் கொண்டிருக்க இதுவா நேரம்..? அதுவும் கண்டவுடன் கொல்ல வேண்டிய எதிரி.. அல்ல.. தேடி தேடி கருவருக்கப்பட வேண்டிய எதிரி.

”எனக்கு போக தெரியும்.. நீ எனக்கு கட்டளை போடாத..” கோபமாக பேசி விட்டு சரசரவென இறங்கினான். கரடுமுரடாக வழித்தடம். வயிற்றை இறுக்கியது பசி. நேற்று மதியம் உண்டதுதான் கடைசியாக எடுத்துக் கொண்ட உணவு. அதுவும் அவசரஅவசரமாக உண்ணுமளவுதான் நேரமிருந்தது. கிடைத்த இடத்தில் அமர்ந்து ரொட்டி பாக்கெட்டை அவசரமாக பிரித்து உள்ளிறக்கினான். சுற்றிலும் மனித சதை துண்டுகள் சிதறிக் கிடந்தன. மனித விழி ஒன்று தொலைவில் முழித்துக் கிடந்தது. இப்போதும் வயிறு நிறைய பசி. பாறைக்கல் ஒன்றில் அமர்ந்து மற்றொரு கல்லில் கால்களை நீட்டிக் கொண்டான். மடியிலிருந்த உணவு மளமளவென்று வயிற்றுக்குள் நிறைந்தது. ரெஸ்க்யூ வரும் வரை இங்கேயே இருந்து கொள்ளலாம். தகவல் அனுப்பியாகி விட்டது.

எங்கோ தொலைவில் ஓநாய் ஒன்றின் ஊளை சத்தம் கேட்டது. போர் சூழலுக்குள் மாட்டிக் கொண்டு விட்ட வேதனையாக இருக்குமோ..? அல்லது அதற்கான உணவு கிடைத்ததற்கான சங்கேதமாக இருக்குமோ.. ஒருவேளை அந்த எதிரியே உணவாகி இருப்பானோ.. அறிந்துக் கொள்ளும் ஆவல் எழுந்தது. வந்த வழியே மேலேறி மெல்ல நடந்தான். சிந்தையை துாண்டும் ஏகாந்தமான தனிமை.

எல்லைகளை யார் வகுத்தது..? மனிதனால் நிர்ணயிக்கப்பட்ட கோடுகள் தொடர் நிலப்பரப்பை தனிதனியாக பிரித்து விடுகிறது. பிரிக்கப்பட்ட நிலங்கள்  ஒவ்வொன்றுக்கும் தனி ராஜாக்கள்.. மந்திரிகள்.. அவர்கள் ஆள்வதற்கு மக்கள்.. அதற்கான கலாச்சாரம்.. என எல்லாமே தனிதனியாகி விடுகிறது. கிடைத்த அதிகாரத்தை பாதுகாக்க அல்லது தக்க வைத்துக் கொள்ள ராணுவம்.. அதற்கான செலவை மக்களின் உழைப்பிலிருந்து தனதாக்கி கொள்ளும் அரசதிகாரம்.. யாரை யார் பாதுகாப்பது..? எதிலிருந்து யாருக்கு பாதுகாப்பு..? மனிதனிடமிருந்து மனிதனுக்கு பாதுகாப்பு. போரில் மனித வலிகள் கணக்கில் கொள்ளப்படவே மாட்டாது. மக்கள் தேசபக்தியில் நெகிழ்ந்து உருக, அந்த உணர்வு நிலைக்குள் அதிகார மமதையை ஒளித்துக் கொண்டு அலையும் தனி மனித ஆசை.

எல்லா மனிதர்களுக்குள்ளும் மற்றெல்லா ஜீவன்களையும் அடக்கியாள ஆசையுண்டு. சிலருக்கு அது அதீதமாக இருக்கலாம். அதீத ஆசை ஏதேதோ பெயரிட்டுக் கொண்டு உள்ளிருக்கும் கனாவை சாதித்துக் கொள்ள துாண்டிக் கொண்டேயிருக்கிறது. அதை  மதம் எனலாம்.. கடவுள் எனலாம்.. நாடு எனலாம்.. தேசபக்தி என்றும் சொல்லலாம்.. சாதி என்று கூட சொல்லலாம். ஆனால் அத்தனைக்கும் பின்னிருப்பது அதிகாரத்தின் மீதான ஆவேசப்பற்று.. அடக்கியாளும் வெறி.

எண்ணவோட்டம் நடையை மந்தப்படுத்தினாலும் அவன் விழுந்து கிடக்குமிடத்தை அடைய வழி ஒரு பிரச்சனையில்லை.

ஆடாமல் அசையாமல் அப்படியே கிடந்தவனின் மீது இருள் மெல்ல கவிய தொடங்கியிருந்தது. தண்ணீர் பாட்டில் கீழே கவிழ்ந்து கிடந்தது. குடிக்க எத்தனித்திருக்கலாம். அவன் கண்கள் எங்கோ நிலைக்குத்தியிருந்தது. இறந்திருப்பான் போல.

சத்தம் வந்த பக்கம் விழிகளை உருட்டி பார்த்தான் அவன். இன்னும் சாகவில்லை. ஆனால் மரணத்தின் விளிம்பிலிருந்தான். உணர்வுகள் துளியும் மங்காத நிலையில் எத்தனை சித்ரவதை இது. எதன் பொருட்டு இவையெல்லாம்..? இவனுக்கு இனிமேல் வாழ்வில் என்ன கிடைத்து விடும்.. அல்லது எது கிடைத்தால் மகிழ்வான்.?. இழந்த கையையோ காலையோ ஒட்ட வைக்க முடியாது. உடலில் ஆங்காங்கே பெருங்காயங்கள் உள்ளன. இங்கிருந்து துாக்கி செல்வதே அத்தனை சிரமம். இதில் மருத்துவ உதவி எங்ஙனம் சாத்தியம்..? எல்லாவற்றிற்கும் மேலாக இவன் எதிரி. அப்படியே பிழைத்தாலும் வேறொரு நாட்டில் கால நேரம் அறியாமல் ஆயுள் முழுவதும் அடைப்பட்டே சாக வேண்டும்.. அதிகபட்சமாக சொந்த நாட்டில் காணாமற்போனவர் பட்டியலில் சேர்க்கப்படுவான்.. அல்லது விருது பட்டியலில் சேர்க்கப்பட்டு எப்படியும் கொஞ்ச நாளில் மறக்கப்படுவான்.

அதிகார மையம் நிச்சயம் இந்த தியாகத்தை உணர போவதில்லை. உணர்ந்தாலும் அது பெரிய விஷயமுமல்ல. அவர்களுக்கு தேவை மூளை மழுங்கிய கூட்டம். அள்ள அள்ள குறையாத அக்கூட்டத்திலிருந்து இவனை விடவும் மோசமான காவுகளை கொடுத்த பிறகே அதிகாரம் சாத்தியப்பட்டிருக்கும். ஆசை பேராசையாக மாறி சுழன்று சுழன்று தனக்கு சாதகமான எதன் மீதோ மையங்கொண்டு ஆட்களை ஒன்றிணைத்து பெருங்குழுவாக்கி விடுகிறது.. மீண்டும் மீண்டும் வீழ்த்துகிறது. எழ எழ தாக்குகிறது. நாற்காலிகள் பிரித்து கொள்ளப்பட்டு மகிழ்ச்சி ஆரவாரத்தில் திளைத்து போகிறது.  ஆனாலும் அதிகார பிடியை நழுவ விடுவதேயில்லை மீண்டும் மீண்டும் புதுபுது உத்திகளால் உணர்வுகளை சிலிர்த்தெழுப்பி மனித பெருந்திரளை திரட்டிக் கொண்டு அதன் வழியே நாற்காலிகளை ஸ்திரப்படுத்திக் கொள்கிறது..

”வலிக்குதா..?” என்றான் கீழே குனிந்து.

”தெரியில.. ஒடம்பெல்லாம் மரத்துப் போச்சு.. மனசு மட்டும் தெளிவா.. தெளிவா..” முனகினான். முழு உணர்வோடிருக்கிறான். பாவம் இருட்டி விட்டால் நாயோ நரியோ இழுத்துக் கொண்டு போய் குதறி விடும். மீட்பு குழுவினரிடமிருந்து சமிக்ஞைகள் வர தொடங்கி விட்டன. மிஞ்சி போனால் கால் மணி நேரத்தில் கிளம்பி விடலாம்.

”ஏன்.. ஏன் திரும்பி வந்தே..?” என்றான்.

”கொஞ்ச நேரத்தில கௌம்பிடுவேன்.. அதான்..”

”சரி..”

சமிக்ஞை ஒலி இவனின் மீட்புக்கு இன்னும் பத்து நிமிடங்கள் என்றது.

உபயோகப்படுத்திய துப்பாக்கியை துடைத்து உள்ளே வைத்தான். தன்னை விட விரைவாக அவன் மீட்கப்பட்டு விட்டான் என்றமட்டிலும் நிம்மதியாக இருந்தது இவனுக்கு. பாறைக்கல்லின் மீதமர்ந்து மீட்சிக்காக காத்திருக்க தொடங்கினான்.

 

ஒரு பனித்துளியின் பாடல்

ஜிஃப்ரி ஹாஸன்

ஒரு புல்லின் நுனியில்
பனித்துளிகள் இசைக்கும்
பாடலை நீங்கள் கேட்டிருக்கமாட்டீர்கள்
நான் நுண்மையின் உலகில்
கற்பனைச் சிறகுகள் சூடி
பறந்து கொண்டே
பாடலைச் செவியுறுகிறேன்
பொழுதுகள் குளிர்ச்சியேறி
பனித்துளிகளை விசிறுகின்றன
அந்தக் கணமே
உடல் ஒரு நீர்க்குமிழி
எனக் காண்கிறேன்
ஆன்மா குளிர்ச்சியடைந்து
பனித்துளிகளின் பாடலாகி
கடவுளின் கரங்களைச் சேர்கிறது
அது கடவுளின் புறத்திலிருந்து
கருணையைப் பெறுகிறது

அது கடவுளின் புறத்திலிருந்து
அர்த்தங்களைப் பெறுகிறது

பனித்துளிகளின் பாடலை
மனிதனின் புறத்திலிருந்து பெறுகிறார் கடவுள்

கடவுளைச் சென்றடையும்
பாதைகளை யாரோ இழுத்து மூடிக்கொண்டிருக்கின்றனர்

நான் ஒரு சூஃபியின் ஞானம் கொண்டு
பனித்துளியின் பாடலாகி கடவுளை நெருங்குவேன்
நான் கடவுளின் புறத்திலிருந்து
ஞானத்தை அடைகிறேன்
என் புறத்திலிருந்து கடவுள்
பாடல்களைச் செவியுறுகிறார்
ஒரு தவம் போல் நீளும் என் யாகத்தை
ஆசீர்வதிக்கும் கடவுளின்
கருணையிலிருந்துதான்
விரியும் என் உலகு
எளிய மனிதர்களால்
ஒருபோதும் தரிசிக்க முடியாத கனவுகளால்
சோடிக்கப்பட்ட எனதுலகு!
-ஜிஃப்ரி ஹாஸன்

கொலை

-உத்தமன்ராஜா கணேசன்- 

அந்த அதிகாலைப் பேருந்தினில் தனது இருக்கைக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கும் நபரிடம் ரகு, என்னங்க தம்பி, தினமும் உங்கள இந்த நேரத்தில பார்க்க முடியுது, எங்க போறிங்க, என்ன பண்ணிட்டு இருக்கீங்க, எனக் கேட்டதுதான் தாமதம்-தன் கையிலிருந்த கத்தியை எடுத்து ரகுவினுடைய வயிற்றில் இறக்குகின்றான்.

பக்கத்திலிருந்தவன், அதிர்ச்சியில் அவன் சத்தம் போடுவானோ என ரகுவின் வாயைத் தனது கையினால் மூடுகின்றான். காலை நேரப் பேருந்து என்பதினால் பயணம் செய்த அனைவருமே அரைத் தூக்கத்தில் இருந்ததினால் யாருக்கும் எதுவும் தெரியவில்லை, நடத்துனர் உட்பட. அடுத்த பேருந்து நிறுத்தத்தில் ரகுவைத் கைத்தாங்கலாக, தன்னுடன் வந்தவன் போல கீழே இறக்கிவிட்டு அவனுடன் சேர்ந்து இவனும் இறங்குகின்றான்.

நடந்தது என்ன , எதற்காக என ரகு யோசித்தபடியே மயங்கிக் கீழே சரிகின்ற நிலையிலிருக்க, சுதாரித்துக் கொண்ட இவன் தன்னுடைய அலைபேசியை எடுத்து மருத்துவருக்கு பேசி உடனடியாக முதலுதவி செய்யச் சொல்கிறான். தனக்கு நன்கு தெரிந்தவன் சொல்வதால் ரகுவை அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கிறார் மருத்துவர்.

பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்தபோது கலந்து கொள்ளாத போட்டிக்காக பரிசு பெற்றது இன்பம் தந்த போதிலும் எதுவுமே செய்யாமல் வாங்கியதில் அதிலென்ன பெருமை என்பது இப்போது கத்தியால் குத்தியவனுக்கு புத்தியில் உரைக்கின்றது.

கத்தியால் குத்தியவன் இன்னொரு பேருந்தில் ஏறி அமர்ந்து சற்றே கண்மூடி பால்ய நினைவுக்குள் செல்கையில் கோலிக்குண்டு விளையாடி அனைவரது கோலிகளையும் வெற்றி கொண்டிருக்கின்றான் கூட்டத்தில் ஒரு சிறுவன். அம்மையப்பனின் அறிவுரைப்படி உட்கார்ந்து விளையாடும் விளையாட்டு.

கண்விழித்து மனதிற்குள், ஏன் அவனை இப்படிச் செய்தோம், அவன் என்ன கேட்டுவிட்டான், என தனக்குள் பிறந்த கேள்விக்கான விடையை நினைத்துப் பார்க்கின்றான். சிறிது கண்முடித் தூங்குகிறான்.

கத்தியெடுத்துச் சொருகிய இவன் இங்கு கனவினில் சிறுவர் விளையாடும் சுரண்டல் பரிசுச் சீட்டு விற்றுக் கொண்டிருந்தான்- பரிசு விழும் எண்கள் அனைத்தையும் எடுத்து விட்டிருந்தான், யாருக்குமே அதிக மதிப்பிலான பரிசு விழாதபடி.

பம்பரம் குத்தி விளையாடிக் கொண்டிருந்தவன் பின்பு கத்தியெடுத்துக் குத்தியது ஏன்?

சட்டென தூக்கத்திலிருந்து விழிப்பு வந்து அடுத்த நிறுத்தத்தில் இறங்குகிறான். அலைபேசியில் மருத்துவரை அழைத்து, அவர் இப்ப என்ன நிலைமையில் இருக்கிறார் என தான் குத்திவிட்டு வந்தவனைப் பற்றி குசலம் விசாரிக்கின்றான். கவலைப்படும்படியாக ஏதும் இல்லை என மருத்துவர் விளக்கமளிக்கிறார். அவர் இன்னும் சிறிது நேரத்தில் கண்விழித்து விடுவார். எப்படி அவருக்கு இது நடந்தது என மருத்துவர் கேட்கையில், ஒரு சின்னப் பிரச்சனையால் நடந்தது, எனச் சுருக்கமாக கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்து, போய்க் கொண்டிருக்கிற திசைக்கு எதிர்த்திசையில் சென்று பேருந்து ஏறி மருத்துவமனை செல்கிறான்.

இவன் வந்த சிறிது நேரத்தில் ரகு கண் விழிக்கிறார், எழுந்த அடுத்த வினாடியே பக்கத்தில் தன்னைக் கத்தியால் குத்தியவன் இருப்பதைக் கவனித்து உடனடியாக அவனை அடிக்க அவன் மேல் பாய நினைத்து குத்துப்பட்டிருந்ததால் முடியாமல் மெல்லிய குரலில் கேட்கிறார், ஏன்யா உங்கிட்ட அப்பிடி என்ன கேட்டுட்டேன்னு இந்தமாதிரி செஞ்சிட்ட, நான் அப்பிடி என்னய்யா துரோகம் பண்ணுனேன் உனக்கு.

தப்பாயிருச்சு , ரொம்ப தப்பாயிடுச்சு , மன்னிச்சுருங்க.

யோவ் போயா கத்தில குத்திட்டு மன்னிப்புக் கேட்கிறியா, இருடா உன்னை என்ன பண்றேன்னு என்கிறார் சிறிது உரத்த குரலில்.

ஒத்திகை பாக்கறதுக்கு மனசுக்குள்ள ஒப்பனை பண்ணிட்டிருந்த நேரத்தில நீங்க இடையூறு பண்ணதால இடைஞ்சலா இருக்கிகன்னு நினைச்சு அப்பிடி பண்ணிட்டேன்.

யாருப்பா நீ, அப்படி என்னதான் பிரச்சனை உனக்கு?

என்னோட வாழ்க்கையில ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது அதை இதில எழுதியிருக்கேன் , மொத்தமும் இருக்கு, படிச்சுப் பாத்திங்கன்னா புரியும். படிச்சுட்டு சொல்லுங்கன்னு சொல்லிட்டு அவரோட அலைபேசியை வாங்கி இவனோட எண்ணிற்கு அழைத்து இவருடைய எண்ணை அலைபேசியில பதிவு பண்றான்.

யாருடா இவன் சரியான சைக்கோவா இருப்பானோ , எங்க போறிங்கனு கேட்டா கத்தில குத்தறான், எதுக்குடானு கேட்டா பயோடேட்டான்னு பேப்பர குடுக்கறான்

இரண்டு, மூணு நாளா இவனைப் பத்தியே யோசிச்சு மண்டை காய்ஞ்சு போச்சு, அப்படி என்னத்த கிறுக்கி வச்சுறுக்கான் இந்தக் கிறுக்கன், என்னனு பாப்போமா?

‘ஓட்டம் ஆரம்பம்’

தலைப்பே ஓட்டமா, விளங்கும்டா

ஒரு நாள் காலையில் அதிர்ச்சி அடைகிறான் தமன், ஆனந்தை எழுப்பி விசயத்தைக் கூறுகிறான். மச்சி மொபைல் போனைக் காணும்டா. டேய் தூக்கத்தில உளறாத, இங்கதான் எங்கயாச்சும் இருக்கும் போய்ப் பாருடா, என்னோட மொபைல எவன்டா எடுத்து வச்சுருக்கீங்க, என்னது உன்னோட மொபைல காணுமா, டேய் என்னோட மொபைல்கூட இங்க இல்லடா வருகிறது ஒரு குரல் வேலனிடமிருந்து. அனைவருக்கும் பேரதிர்ச்சி.

என்னங்கடா இது காலங்காத்தால.

எல்லா ரூம்லயும் போய்ப் பாருங்கடா, தூங்குற எல்லாரையும் எழுப்பிக் கேளுங்கடா, நான் இங்க தேடுறேன்.

தேடல் தொடர்கிறது. இதற்கு முன்னால் துவைத்துப் போட்டு காணாமல் போன துணிகள், தொலைந்து விட்டதாய் நினைத்த கேரம் போர்டு காயின்கள், செஸ் போர்டு உள்ளிட்ட அனைத்தும் கிடைத்துள்ளது, இன்றளவும் தேடியது காணக் கிடைக்கவில்லை.

தேடல் தொடர்ந்து நடைபெற்றும் காலை 10 மணி வரையிலும் தேடி முடியவில்லை, அனைவரும் ஒன்று கூடி ஆலோசிக்கிறார்கள் , இதற்கு முன்பும் இப்படியான மூன்றுக்கும் மேற்பட்ட சம்பவங்கள் இங்கு நடந்துள்ளதாக அறிகிறார்கள்.

எவன்டா நைட் ரூம திறந்து வச்சது, மொத்த குரலும் நான் இல்ல என்கிறார்கள், சரி விடுங்கடா இப்ப அது முக்கியம் இல்ல, எப்படிடா இத்தனை பேர்ல எல்லாருமே அசந்து தூங்கிட்டோம், யாரும் ஒரு ஆள் கூட கொஞ்சமும் எழுந்திரிக்கல.

அவனவன் வாய்க்கு வந்த வார்த்தைகளைக் கூறித் திட்டி விட்டு அடுத்த கட்டமாக முயற்சியில் இறங்கலாயினர், சந்தேகப்பட்ட நபர்களை பொதுவாக 4 பேர் மத்தியில் வைத்து ஜாடை சொல்லித் திட்டியும் பார்த்தனர், யாவரும் வாய் திறக்கவில்லை அன்றைய நாளில்.

அடுத்த கட்டமாக சில நண்பர்களின் ஆலோசனைப்படி காவல் நிலையம் செய்வதாக முடிவெடுத்தனர். அதுதான் சரியெனப்பட்டது அனைவருக்கும். நேராக அந்தப் பகுதிக்குட்பட்ட காவல் நிலையத்திற்குச் சென்று நடந்த விபரங்களைக் கூறினர். நிலையத்தின் காவல் அதிகாரி ஒருவர் இதைக் கேள்விப்பட்டு கடுங்கோபத்துடன்-

ஏன்டா 4 பேர்ல 3 பேர் மொபைல் ஒரே நைட்ல எடுத்துட்டு போற வரைக்கும் என்னடா பண்ணிட்டு இருந்தீங்க.

அடுத்ததாக வாயிலிருந்து உமிழ்நீரைக் காரித் துப்பி விட்டு, புகாரையும் கசக்கி குப்பைத் தொட்டியில் போட்டு விட்டுச் சென்று விட்டார். இந்த சம்பவம் நடந்து முடியும் முன்னரே தமன் அங்கிருந்து வெளியேறி விட்டான், அந்த அதிகாரியின் நடத்தை காரணமாக. மொபைல் போன்கள் காணாமல் போனது வருத்தத்தை ஏற்படுத்தி இருப்பினும், அதிகாரியின் இந்த செயல் மேலும் மனம் நோகும்படி செய்து விட்டது.

மொபைல் வாங்கிய நிறுவனத்தைத் தொடர்பு கொண்டபோது , காவல் நிலையத்தில் அளித்த புகார் இருந்தால் மட்டுமே அடுத்த கட்டமாக எங்களால் நடவடிக்கை எடுக்க இயலும் எனக்கூறி விட்டனர். மேலும் இரண்டிற்கும் மேற்பட்ட வேறு பிற மொபைல் நிறுவங்களும் சொல்லி வைத்தார் போல அதே பதிலைக் கூறினர். அதன் பிறகு மற்றுமொரு முயற்சியாக சிம் விற்பனை செய்யும் ஒரு நிறுவன நண்பரை தொடர்பு கொண்டு பேசியபோதும் அச்சு அடித்தது போல அதையே கூறினார்.

மொபைல்களை எடுத்துச் சென்றவன் மற்றுமொரு மாய வித்தையையும் செய்துவிட்டான். தமன் தான் சொந்த ஊருக்குச் செல்வதற்காக சில பொருள்கள் வாங்கி பேக்கில் வைத்திருந்தான், பேக்கினை அப்படியே தூக்கிச் சென்று விட்டான். அவனுடைய பொருள்களின் மதிப்பு பதினைந்து ஆயிரம் ரூபாய், மொத்தமாக தொலைந்த மதிப்பு சுமார் இருபத்தைந்து ஆயிரங்கள்.

உள்ளே இருந்த சில பொருள்களின் நினைவுகள் கண்முன்னே வந்து செல்கின்றன.

ஒரு முக்கியமான சாராம்சம் என்னவென்றால் பேக்கில் இருப்பது லேப்டாப் என நினைத்து எடுத்து விட்டுப் போயிருக்கிறான், ஆனால் இருந்ததென்னவோ துணிமணிகள் மற்றும் புத்தகங்கள்.

புத்தகங்கள் என்றால் கடையிலே போய் சாதாரணமாக வாங்கி வருகின்ற புத்தகங்கள் அல்ல. புத்தக வெளியீடு அன்று நேராகச் சென்று, புத்தகம் எழுதியவரின் கையினாலேயே வாங்கிவிட்டு அவருடைய கையொப்பமும் வாங்கி, புகைப்படமும் எடுத்துக்கொண்டு வந்தவை.

எடுத்தவனுக்கு அதெல்லாம் எங்கே தெரியப் போகிறது. புத்தகமும் தொலைந்து, எடுத்த புகைப்படங்களின் ஆல்பமும் தொலைந்திட வந்தது பாருங்கள் ஒரு உச்சகட்ட கோபம், கையிலிருந்த மற்றுமொரு மொபைல் போன் நொறுங்கியது. எடுத்தவன் யாரேன்று தெரிந்தால் என்னவெல்லாம் நொறுக்கப்படுமோ.

கொண்டு போனவன் புத்தகங்களுடன் துணிகளையும் தூக்கிச் சென்று விட்டான். பணமாக எதுவும் இல்லையென்ற போதினும் பணத்துக்கு நிகரான, மன்னிக்கவும், பணத்துக்கும் மேலான புத்தகங்கள் போனது. மறுபடியும் பணம் கொடுத்து வாங்க முடிகின்ற பொருள்களாக அவை இல்லை என்பது தான் பேரிழப்பு.

ஆற்றின் நிறைய தண்ணீர் ஓடினாலும்கூட நாய் நக்கித்தான் குடிக்கும் என்பதைப் போல மதிப்பு தெரியாதவன் கையில் போன புத்தகம் இரண்டோ அல்லது ஐந்தோ ரூபாய்க்கு விற்கப்படுமாயின் அதைவிட ஒரு மிகப்பெரிய இழிவை புத்தகம் வாங்கியவன் புத்தகம் எழுதியவருக்குத் தர முடியாது.

முதன்முறையாகப் பாடலொன்று பாடி அதற்கென வாங்கிய பரிசை பிரேம் போட்டு வைத்திருந்தான , இன்று தொலைந்த காரணத்தால் இனி நீ எங்குமே பாடல் கேட்க கூடாது என்பதைப் போல அது இருந்தது.

எளிதில் நெருங்க முடியாத பிரபலங்கள் சிலருடன் புகைப்படம் எடுத்து ஆல்பம் சிலவற்றைத் தயாரித்து வைத்திருந்தான், புகைப்படம் எடுத்தால் ஆயுள் குறையுமெனக் கூறும் ஒரு கூற்றும் இங்கு நிஜமாயிற்று.

வெள்ளியிலான சங்கிலி ஒன்றை முதன்முறையாக வாங்கியிருந்தான், ஆடையும் ஆபரணமும் சேர்ந்தே போயிற்று.

நூலிழையில் அரும்பாடு பட்டு உருவாகி வந்த துணிகள் இங்கு வந்தா என்னால் தொலைய வேண்டும் , நெசவுக்கு இழுக்கு.

எனக்கெனத் தனியாக ஏதேனும் சொத்துக்கள் நான் வாங்கி வைத்திருக்கவில்லை, நான் வைத்திருந்த பெரும்பான்மையானவை என்னை விட்டு சென்று விட்டன.

ஆள் பாதி ஆடை பாதியாகத் திரிய இதென்னடா ஆதிவாசி காலமா , கருமம் கலிகாலம். ஆற்றில் துணியில்லாமல் நின்றால் கூட தண்ணீருக்குள் போய் விட்டால் மானம் காக்கப்படும், ரோட்டில் அதே நிலையில் நின்றால்? கவித்துவமின்றித் துக்கப்படக்கூட முடியவில்லை.

அன்றைய தினம் முதல் மீனை போல பெரும்பான்மையான நேரம் தண்ணீரிலேயே வாழ்ந்தான், ஆந்தையைப் போல இரவு முழுவதும் விழித்திருந்தான், ஆமையைப் போல மிக மெதுவாகத்தான் அடியெடுத்து வைத்தான்- ஆனால் மன ஓட்டமானது சில நேரங்களில் முதலையைப் போல ஆக்ரோஷமாக இருந்தது.

அன்று வலியன் குருவி சற்று தாமதமாக கூவியிருக்கும், இல்லையெனில் ஒருவருக்குக் கூடவா அந்நியன் ஒருவன் வந்து மூன்றாவது மாடியிலிருக்கும் பொருட்களை எடுத்து விட்டு இறங்கி சென்றது தெரியாமலிருக்கும். உலகத்தை நேசித்தாலும் ஒருவரையும் நம்பக் கூடாதென்பது சரியாத்தான் இருக்குது. உறங்கும் போதும் எப்படி ஒரு கண்ணை மட்டும் திறந்து வச்சுக்க முடியும்

அன்றைய தினம் தண்ணீருக்குத் தாகம் எடுக்கவில்லை, உணவிற்குப் பசி எடுக்கவில்லை. இயற்கை சுவாசம் மட்டுமே உயிர் தந்தது.

வெறுப்படைந்து போய் ஒரு விளையாட்டு மைதானத்தின் சுவர் அருகில் உள்ள மரத்தின் கீழே போடப்பட்ட பெஞ்சில் அமர்ந்தான் தமன். புத்தருக்குப் போதி மரத்தடியில் கிடைத்த ஞானம் போல ஏதோ ஒரு மரத்தடியில் அமர்ந்த போதுதான் புகார் அளிக்க வேண்டுமென எண்ணம் தோன்றியது.

ஏனெனில் நாளைய வருங்காலத்தில் மொபைல் போனை வைத்து என்ன மாதிரியான தவறுகள் வேண்டுமானாலும் நடக்கலாம், போன் காணாமல் போன நிகழ்வை புகாராக பதிவு செய்யாவிடில் அது என்றென்றைக்கும் ஆபத்தாக முடியக்கூடிய வாய்ப்புண்டு. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு வேலைக்காக காத்திருப்பது எந்தளவு முக்கியமோ, அதே அளவுக்கு நிகராக புகார் அளிக்க வேண்டியதும் நமது கடமை என மனதில் பதிந்து விட்டது. பித்தம் தெளியாத சித்தப்பிரமை பிடித்தவன் போல அலைந்து திரிந்து கொண்டிருந்தான்.

அழுதும் பலனில்லை, அடக்க முற்பட்டான், ஆத்திரமாக மாறியது.

இணையத்தினுள் சென்று தேடினான், சில உயரதிகாரிகளின் தொடர்பு எண்கல மற்றும் ஈமெயில் போன்ற தகவல்கள் கிடைத்தது. பகுதி காவல் நிலையத்திலேயே ‘மிகச்சரியான கவனிப்பு’ கிடைத்ததால், மேலதிகாரியிடம் செல்வதற்கும் யோசிக்க வேண்டியதாயிற்று.

இறுதியாக கமிஷனர் ஆபிஸின் அதிகாரப்பூர்வ இணையதளம் தென்பட்டது. வேறு வழியின்றி காணாமல் போனதை உறுதி செய்ய, மேலும் எதிர்காலத்தில் காணாமல் போனது பற்றிப் புகார் அளிக்காமல் இருந்தால் பிரச்சனைகள் வரக்கூடுமெனத் தோன்றிய மனக்கட்டாயத்தின் காரணமாக புகாரை இணையத்தின் வாயிலாக அளித்தான்.

என்னடா இது சோதனை, ஒரு தாய்த்திருநாட்டில் குடியுரிமை உள்ள ஒரு குடிமகன் தன்னுடைய பொருள்கள் தொலைந்ததைப் பற்றி புகார் அளிக்க அருகதை இல்லையா, இத்தனைக்கும் ஒரு படித்தவனாக இருந்து கொண்டு, நெஞ்சம் பொறுக்குதில்லையே. தன்னிலை மறந்தது.

அடுத்ததாக தன்னுடைய எண்ணம் எப்படியேனும் புகார் கொடுத்தே தீர வேண்டுமென இருந்தது. நாள் முழுவதும் முடியும் தருவாயில் புகாரை அளித்துவிட்டான். இருந்தும் இறந்தவராக இருந்தனர் உடனிருந்தோர் சிலர். அது சரி அழுதாலும் பிள்ளை அவள்தான் பெற வேண்டும் என்பதைப் போல இருந்தது. தனக்கென வந்தால்தான் வலி அடுத்தவனுக்கு நேர்ந்தால் அது செய்தி என்பது பலர் சொல்லிக் கேள்விப்பட்டது இன்று செய்தியானது வலியாகியது. கோமா நிலைக்கு தள்ளப்பட்டதாக உடல் உணர்த்தியது, இருப்பினும் ஏதோ ஒரு குருட்டுத்தனமான நம்பிக்கை உண்டானது.

பொருளைத் தொலைத்த ஒரு நபர் மட்டும் கடமையே கண் கண்ட தெய்வமென வேலைக்கும் சென்று விட்டார்.

முழுமையான திருப்தி என்பது இன்னும் கிடைத்தபாடில்லை, தனிப்பிரிவில் அளித்த புகாரின் மூலம் ஒரு மாத காலத்திற்கு பின்பு சம்பந்தப்பட்ட துறையின் வாயிலாகவே புகார் வாங்குவதற்கு நடவடிக்கை எடுத்தனர் நல்ல சில காவல் துறை உள்ளங்கள்.

நாங்கள் அனைவரும் கட்டுமானத்துறையில் பணிபுரிந்து வருபவர்கள். எங்களது கிளை அலுவலகத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருவரையும் முதல்முறை புகார் அளிக்கச் சென்றபோது உடன் அழைத்து சென்றிருந்தோம். ஒரு கிளை அலுவகத்தில் நடப்பது தலைமை அலுவலகத்துக்குத் தெரியபடுத்துவது என்பது அனைத்து பிற அலுவலகங்களின் வேலைதான் என்பது அனைவரும் அறிந்ததே, இவர்களும் தெரியப்படுத்தியதாக தெரியவில்லை, மேலிருப்பவர்களும் என்னக்கென்ன இதைப்பற்றி என்பதை போல நடந்து கொண்ட விதம்தான் மிக அருமை.

தெரிந்தும் தெரியாததை போல அதிகாரி ஒருவர் காட்டிக் கொண்டார்.

ராத்திரி முழிச்சிக்கிட்டே இருக்க இது என்ன அவதாரமா, சாமிக்கே தாலாட்டு பாடி தூங்க வச்சுட்டு இருக்கானுங்க ஊருக்குள்ள.

ராமர்க்கு அனுமன் போல கூடவே இருந்து பாதுகாவலனாக இருக்க வேண்டுமென நாங்கள் உங்களைக் கேட்கவில்லை, எங்களுக்கு அது தேவையுமில்லை, உங்களோடத பத்திரமா பாதுகாத்து வச்சுருங்கடா, என்பதே எங்களுடைய கருத்து. அத விட்டுட்டு நாங்க உங்களோட போருக்கு வரல, காணாம போனதுக்கு நஷ்ட ஈடும் கேட்கல, அதைப் புரிஞ்சிக்கோங்கடா நொன்னைங்களா என மனதில் நினைத்து விட்டு.

எந்தத் தகரச் செட்டிற்குள் ஒளிந்து கிடக்கிறதோ அல்லது எடுத்தவன் கண்முன்னே தான் அலைகிறானோ என்ற ஐயம் இப்பொழுதும் இருந்து கொண்டேதான் இருக்கின்றது.

ரைட்டு, கன்பார்ம் ஆயிடுச்சு இவன் சைக்கோவே தான், சொல்லி முடிப்பதற்குள் புதிய எண்ணிலிருந்து அலைபேசிக்கு ஒரு அழைப்பு. யாருங்க அது இந்நேரத்தில,
சார் நான்தான் கத்தியால குத்தினனே.

மறுபடியும் நீயா , என்னதான்யா வேணும் உனக்கு

சார் படிச்சிட்டிங்களா

யோவ் ஆரம்பத்தில இருந்தே நீ பண்ற எதுவுமே புரியல.

தெளிவா சொல்றேன் சார், என்னோட மொபைலும் பேக்கும் திருடு போயிருச்சுபோலீஸ்ல புகார் குடுத்திருந்தேன். ஆனாலும் 6 மாசமாகியும் எந்த பலனும் இல்லை. இப்ப எடுத்தவன் யாருன்னு தெரிஞ்சு போச்சு, அவனப் போட்டுத் தள்ளலாம்னு பிளான் பண்றப்பதான் நீங்க இடையில வந்து கேள்வி கேட்க, இவ்வளவு விளக்கம் தர வேண்டியதாப் போச்சு.