Author: பதாகை

ஆதவனின் ‘கறுப்பு அம்பா கதை’ குறித்து வெ. சுரேஷ்

வெ. சுரேஷ்

90களின் மத்தியில் பாலகுமாரன்  ஒரு நேர்காணலில் சொன்னார், பணியிடமும் பணியும் குடும்ப வாழ்க்கையில் ஏற்படுத்தும் விளைவுகளை முதன்முதலாக தமிழின் புனைகதை பரப்புக்குள் கொண்டு வந்த எழுத்தாளன் தான்தான் என்று. மெர்க்குரிப்பூக்கள், இரும்புக் குதிரைகள், தாயுமானவன், முதலிய   படைப்புகளை வைத்து  அவர் அப்படிப் பேசியிருக்கக்கூடும். ஆனால், தமிழின் தீவிர இலக்கிய பரப்பினில் பாலகுமாரனுக்கு முன்பே அவை பதிவாகியுள்ளன. முக்கியமாக, பணிச்சூழல் நம் மீது செலுத்தும் தாக்கத்தை அதிகம் தன் சிறுகதைகளில் பதிவு செய்தவர் ஆதவன்.

வாழ்க்கை வேறு, அந்த வாழ்க்கையை வாழ்வதற்கு தேவையான பொருள் மட்டுமே ஈட்டும் பணி, அது சார்ந்த சூழிடம் வேறு என்ற நிலை இந்தியாவில் 20ம் நூற்றாண்டிலேயே பரவலாக காணப்படத் துவங்கிவிட்டது. பணிச்சூழல் ஒரு’ குடும்பத்தில் கணவன், மனைவி, குழந்தைகள் என்று ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது குறித்து ஆதவனின் பல சிறுகதைகள் பேசினாலும், மிகச் சிறப்பான ஒன்றாக நான் கருதுவது, அவரது ‘கருப்பு அம்பா கதை’.

பகலெல்லாம் தன்  பிழைப்புக்காக, ஒரு நிறுவனத்திடம் தன் உழைப்பை விற்று, ஏறத்தாழ அடிமைப் பணி செய்து, தன் சுயமிழந்து, பல்வேறு அநியாயங்களை கண்டும் காணாமலும் வாழ்க்கை நடத்தும் கோடிக்கணக்கான நடுத்தர வர்க்க பிரதிநிதியான சங்கரனுக்கு இரவில் எப்போதும் ஒரு முக்கியமான வேலை, தன்  மகள் மாலுவுக்கு கதை சொல்லித் தூங்க வைப்பது. அந்தக் கதைகள் எப்போதும் அவர்களது வீட்டைச் சுற்றியுள்ள மாடுகள், மாலுவின் மழலை பாஷையில், ‘அம்பா’ பற்றியதுதான். அதுவும், கறுப்பு அம்பாதான், அதாவது, எருமை மாடுகள்தான் விசேஷம்.

கதை நடக்கும் நாளிலும் அதே மாதிரி ஒரு கறுப்பு அம்பா கதைதான் சொல்கிறான் சங்கரன். அன்றைக்கு கருப்பு அம்பாவுக்கு ஜலதோஷம். ஏனென்றால், சங்கரனுக்கு ஜலதோஷம். அதற்காக, டாக்டரிடம் போகிறது கருப்பு அம்பா. அங்கே ஏகப்பட்ட கூட்டம். டாக்டரின் வீட்டில் காத்திருக்கும் மிருகங்களின் விவரணையில்தான் கதை விரிகிறது., ஸலாம் போட்டே தும்பிக்கை இழந்த யானை, கிளைக்கு கிளை தாவி, கை சுளுக்கிக் கொண்ட குரங்கு, கத்திக் கத்தி தொண்டையைப் புண்ணாக்கிக் கொண்ட கழுதை, எவ்வளவு சுமை என்றாலும் வாயைத் திறக்காமல் சுமந்து கழுத்தில் புண் வந்த வண்டி மாடு,, எதையும் செய்யாமலேயே சுற்றிச் சுற்றி வந்ததனால் கால் வலி கண்டு வரிசையில் எப்படியோ எல்லோரையும் விட முன்னால் சென்று அமர்ந்திருக்கும் நரி, என்று பல விலங்குகள் வரிசையில் காத்திருக்கின்றன, அவர்களுடன் கறுப்பு அம்பாவும் சேர்ந்து கொள்கிறது. வரிசை மிகவும் மெதுவாக நகர்கிறது. புதிதாக வந்த மிருகங்களெல்லாம் எப்படியோ, கம்பவுண்டரைத் தாஜா செய்து உள்ளே போய்விட, கறுப்பு அம்பா அதே இடத்தில் உட்கார்ந்திருக்கிறது. காலெல்லாம் ஒரே வலி. அந்த சமயத்தில் உள்ளே வரும் குள்ள நரி ஒன்று கம்பவுண்டருக்கு காட்பரீஸ்  சாக்லேட்  கொடுத்து வரிசையில் முன்னே செல்லவும் கறுப்பு அம்பாவுக்கு கோபம் வந்து விடுகிறது. ஒரே முட்டு,  நரியை. நரி அலற, சங்கரனுக்கு சுய நினைவு வருகிறது. குழந்தையின் புரிதல் திறனை தாண்டிப் போய்விட்டதோ கதை என்று மாலுவைப் பார்க்கிறான். அவள் அயர்ந்து தூங்கிவிட்டிருக்கிறாள். கறுப்பு அம்பா க்யுவில் சேர்ந்தபோதே தூங்கியிருக்க வேண்டும்.

சங்கரனுக்கு சந்தேகம் இந்தக் கதையை தான் யாருக்கு சொன்னோம் என்பதில். விலங்குகளின் வரிசையெல்லாமே, அவனது அன்றாட வாழ்வில் தினமும் சந்திக்கும் மனிதர்கள்தாமா? பொறுமையாக தன் முறை வரட்டும் என்று உட்கார்ந்திருப்பது கறுப்பு அம்பாவா அல்லது தானேதானா? சுய இரக்கத்தோடு படுத்திருக்கிறான் சங்கரன். இங்கே இந்த கதை முடிந்திருந்தால், அவ்வளவு சிறப்பாக இருந்திருக்காது. அப்போது கையில் பால் டம்ளருடன் வரும் சங்கரனின் மனைவி விஜி, குழந்தைக்கு பகலில் தான் சொல்லும் வெள்ளை அம்பா கதை கூறுவதில்தான் இந்தக் கதை  முழுமை அடைகிறது.

அவளின் கதையில், வெள்ளை அம்பாவுக்கு நாள் பூராவும் இடுப்பொடிய வேலைகள், அதற்குமேல் அதிலேயே புகார்கள், குற்றம் குறைகள். ஆனால் கறுப்பு அம்பாவுக்கு இதொன்றும் தெரியாது. நாளெல்லாம், ஜாலியாக வெளியில் போகும், வரும். வீட்டிலே இருக்கும்போதெல்லாம் ஹாயாக எப்போதும் படுத்துக் கொண்டிருக்கும்.

Alvin Toffler தனது Third Wave எனும் நூலில், தொழிற்புரட்சிக்குப்பின் தோன்றிய நகர வாழ்க்கை, காலையிலிருந்து மாலைவரை, ஆண்களை தொழிற்கூடம்/ அலுவலகம், படிக்கும் வயது வந்த சிறுவர் சிறுமிகளை பள்ளிக்கூடம், பெண்களை வீடு/ தொழிற்கூடம்/ அலுவலகம் என்று பிரித்து அனுப்பியதன் விளைவுகளைக் குறிப்பிடுகிறார். அது மட்டுமல்லாமல், இன்றைய உலகின் மிக இயல்பான ஒரு நிகழ்வு அது என்று அவர்களை நம்பச்செய்து, அதை மீற முடியாத நடைமுறை யதார்த்தமாக்கி, அதற்கான உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் நெறிகளையும் உருவாக்கித் தந்து, அதை என்றுமிருந்த நிலைபெற்ற ஒன்றாக நம்பவைப்பதில் வெற்றிகொண்டது என்கிறார் அவர். அதையும் அதைச் சார்ந்த இன்னும் சில விஷயங்களையும் அவர் Indust-reality என்ற சொல்லினால் குறிக்கிறார். அந்த Indust-reality என்ற சொல்லுக்கு இலக்கணம் போல அமைந்த ஒன்றுதான், கறுப்பு அம்பா கதை, அந்தப் பெரிய நிறுவனங்களுக்கு முன் சிறுத்துப் போய் நியாய அநியாயங்களை எதிர்க்கவோ, அடையாளம் காட்டவோ துணிவின்றி,தன உரிமைகளையும் கூட அதட்டிக் கேட்டாக தெரியாமல், தன் குடும்பம் எனும் சிறு  வளைக்குள்ளேயே ஒடுங்கி, புலம்பும் ஒரு ஆணின் மன அவசங்களைக் காட்டுகிறது. , அதே சமயம், மற்றொரு   கோணமாக, அவன் எந்த அளவுக்கு அதே வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் தன் சக ஜீவனான மனைவியின் உலகைப்பற்றி அறியாமலேயே இருக்கிறான் என்பதையும் அனாயாசமாகக் காட்டுகிறது.

எளிய குரூரங்கள் – தி. வேல்முருகனின் ‘முத்துப்பிள்ளை’

மாயக்கூத்தன்

ஒரு வெள்ளிக்கிழமையன்று பள்ளி விடும் சமயம் வாரக்கடைசியை எப்படிக் கழிக்கலாம் என்று ஒரு சிறுவன் யோசிப்பதில் தொடங்கும் இந்தக் கதை, வெவ்வேறு மனிதர்களைக் கடந்து சென்று நாம் சாதாரணமாக எண்ண முடியாத ஒரு முடிவை அடைகிறது.

தி வேல்முருகனுடைய கதைகளில் இருக்கும் ஒரிஜினாலிட்டி அவற்றை மற்ற எல்லோரிடமிருதும் வேறுபட்டு நிற்க வைக்கிறது. இந்த மனிதர்களை வேல்முருகன் அன்றி வேறொருவர் நமக்கு அறிமுகப்படுத்த முடியாது. அதுவும், ஒரே கதையில் வரும் வெவ்வேறு மனிதர்கள், ஒன்றுபடும் விதமும் வேறுபடும் விதமும் சிந்திப்பவர்களுக்கு பல திறப்புகளைத் தரக்கூடும். அவர் அப்படி நினைத்து, தன் கதாபாத்திரங்களை உருவாக்கியிருக்கிறார் என்று நீங்கள் சொல்லக்கூடும். எனக்கு அப்படித் தோன்றவில்லை. என் எண்ணம் தவறென்றாலும் பிரச்சனையில்லை. அது அவருடைய கதைகள் தரும் உற்சாகத்தையும், அளிக்கும் தாக்கத்தையும் எந்த விதத்திலும் குறைத்துவிடுவதில்லை.

இங்கே ஆயாவும் பவுனும். இரண்டு பேருக்கும் ஒரு தலைமுறைக்கான இடைவெளி இருந்தாலும் பவுனின் இன்றைய நிலையும், ஆயாவின் முந்தைய நிலையும் ஒன்று- ஆயாவை குழந்தைகளையும் விட்டுவிட்டு அவள் கணவன் போனபின் அவள் குடும்பத்தைக் கரை சேர்க்கிறாள், பவுனு பொறுப்பில்லாத கணவனுடன் இருந்தாலும், குழந்தை இல்லாத குறைக்காக வருந்துகிறாள். இருவரும் வெவ்வேறு விதமாக தங்கள் நிலையைக் கடக்கிறார்கள். பவுனை நம்முடைய காலத்து மனுஷி என்று வைத்துக் கொண்டால், நமக்குள்ளிருந்து எழும் குரலை நம்பி மேலேறி வருவதை விட, இன்றைக்கு நம்முடைய சொந்த வாழ்க்கைக்கு மற்றவர்களின் அங்கீகாரம் நமக்கு அவசியமாகிவிட்டதோ என்று தோன்றுகிறது. ’உன் வயதில் நானும் பிள்ளைகளை வைத்துக் கொண்டு மேலே வரவில்லையா’ என்று கேட்கும் ஆயாவுக்கு எனக்குப் பிள்ளைகள் இல்லை என்று பவுன் சொல்கிறாள். மனிதர்களுக்கு அவர்களைச் சார்ந்து யாரும் இல்லை எனும்போது, வரும் வேகத்தை என்னவென்று சொல்வது? இல்லை, ஒருவனோ ஒருத்தியோ தனக்காகவே மட்டுமே தன்னுடைய வாழ்க்கையை முன்னெடுத்துக் கொண்டு செல்வது அத்தனை கடினமானதா?

என்னைப் போல தேவையில்லாததை எல்லாம் எழுதிவிடும் கெட்ட பழக்கம் வேல்முருகனிடம் இல்லை. கதைக்கு என்ன தேவையோ அவற்றை மட்டுமே எழுதும் ராணுவ ஒழுங்கு அவரிடம் இருக்கிறது. ஒவ்வொரு வரியும் கதையை முன்னே எடுத்துக் கொண்டு போவதை இந்தக் கதையில் காணலாம்.

அவன் (அந்தச் சிறுவன்) தன்னுடைய வாரக்கடைசி இப்படிப் போகும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆயாவுக்கும் பவுனுக்கும் நடக்கும் சந்திப்பும் அதன் தொடர்ச்சியும், மாமா வளர்க்கும் ஆட்டுக்கு விழும் அடியும் கூட அவை நிகழும் நொடிக்கு முன்பு வரை எதிர்பாராதவை. தன் பாட்டியுடன் அவள் வீட்டுக்கு வார இறுதியில் செல்லும் சிறுவன் அங்கு தன் மாமாவுடன் ஊர் சுற்றுகிறான். அவர் ஆடு வளர்க்கிறார், அது இவன் கொடுக்கும் புல்லைத் தின்றதும் முட்ட வருகிறது- தான் வளர்க்கும் ஆட்டுக்கு அவர் சண்டை பழக்கிக் கொண்டிருக்கிறார். அடுத்த நாள் ஆடுகளுக்கு இடையில் நடக்கும் சண்டையில் வெளிப்படும் வன்மம் இயற்கையாகவே அவற்றுக்கு உரியதா அல்லது அதுவும் மனிதர்களால் பழக்கப்பட்டதா என்றே சந்தேகம் வருகிறது. மனிதனையும் மிருகத்தையும் எது பிரிக்கின்றது என்று யோசித்தால் மனிதனின் காரணமற்ற, ஆனால் திட்டமிட்ட வன்முறையும், தன்னிச்சையாய் அவனுள் சுரக்கும் கருணையும்தான் என்று தோன்றுகிறது. வேல்முருகனுடைய எழுத்து இந்த திருப்பங்களை சிந்தனையின் உளைச்சல் இல்லாமல் மிக இயல்பாகவும் எளிதாகவும் கொண்டு சேர்க்கின்றது.

பொதுவாகவே வேல்முருகன் எழுதும் கதைகளில் பலவற்றின் முடிவு ஒரு எளிதான செண்டிமெண்டாலிடியை நோக்கிச் செல்வதைப் பார்க்க முடியும். அது இந்தக் கதையிலும் இருக்கிறது. ஆனால் அதற்கு வேல்முருகனைக் குற்றம் சொல்ல முடியுமா என்று சந்தேகமாக இருக்கிறது. அவர் காணும் மனிதர்கள் இயல்பாகவே மிக எளிதில் நெகிழ்ந்து விடுபவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் கோபமும் குரூரமும்கூட கனிவு நிறைந்த ஒரு கணத்தை நோக்கிக் காத்திருப்பவை.

முத்துப்பிள்ளை, தி. வேல்முருகன்

பச்சை வண்ண சீப்பி

ஸ்ரீதர் நாராயணன்

புள்ளிகள் மேவிய வளைய வடிவான
பச்சை வண்ண சீப்பி ஒன்றை
பார்த்தபடியே இருக்கிறார்.
முகம் என்னவோ உணர்ச்சி மிகுதியில்
விண்டுவிடுவது போல் தளும்பி நிற்கிறது

ஒரு குழந்தையின் மோகன சிரிப்பையோ
ஒரு பிரிவின் துயரையோ
உலர்ந்த சருகுகள் முறியும் ஓசையையோ
முனை மழுங்கிய சீப்பி கொண்டு
ஒருவரின் குரல்வளையை நெறிக்கும் முயற்சியையோ
அவர் எண்ணிக் கொண்டிருக்கலாம்.

விழியகற்றி என்னைப்
நோக்கி திரும்பும்போது
அந்த சீப்பிப் பற்றிய எந்த தடயமுமற்ற
முற்றிலும் வேறொரு சங்கதி பற்றி
பேச்செடுக்க தயாராகிறேன்.

பொம்மை

                          பானுமதி ந

‘ரோஜாவைப் போல் இருந்தான். நீலமும், பச்சையும் கலந்த கண்கள். உன்னைப் போல் முகமெல்லாம் மூக்கு. எவ்வளவு மென்மையான காதுகள்! அவன்- ‘ம்—மா’ என்று கூப்பிட்டான். அவன் எங்கே, பிரின்ஸ்? எனக்கு அவன் வேண்டும்’

இவள் இப்பொழுதெல்லாம் கனவுகளை உண்மையென நம்புகிறாள். இருள் பிரியவில்லை இன்னமும். பனிக்காற்று அதிகம் வீசுகிறது. உறைந்த நதிகளின் கரைகளில் இருந்த நாணல்கள் என்னவாயின? கூம்பி நிற்பதாக மனதில் எழும் அந்தப் பைன் மரக் கிளைகளில் விளையாடிய அணில்கள் எந்தக் கூட்டுக்குள் சென்றன? என் மூன்று வயது மகள்  உறங்கும் கல்லறையில் அவள்  எழுந்து வருவாள் எனக் காத்திருக்கிறதோ?  லில்லி மலர்களும் அவளுடனே தூங்கச் சென்று விட்டன போலும்.வெறுமையான வெண்பனிதான் இடறிக் கொண்டிருக்கிறது.

ஜான் எதைச் சொன்னாலும் கேட்காமல் பனியில் விளையாடுவான். உருட்டி உருட்டி பொம்மைகள்- ஆறு வயதில் அவனுக்கு எவ்வளவு கற்பனை! அதிகமும் குல்லாய் போட்ட ஏசு. என்னடா இது என்றால் ‘எனக்கு குல்லா, சாமிக்கும்- அவருக்கும் குளிரும்,” என்பான். முடிவில் எங்களை விட்டுப் போய்விட்டான்.

பனியில் கானலின் வெம்மையில் நாங்கள். தலையால் கவ்விக் கொண்டு வாலால் பிணைத்துக் கொண்டு எங்களை விழுங்கும் தனிமை. எலும்புகள் நொறுங்கும் வாதை. ’எஸ்தர், சற்றுத் தூங்கு’

நான் கண் விழிக்கையில் அவள் மண்டியிட்டு ஜெபித்துக் கொண்டிருந்தாள். ஒரு சோகம் கவ்வியது என்னை. தன்னிலை மறந்த அவளும் விட்டுப் போய் விடுவாளோ? நான் தலையைக் குலுக்கி சிலுவையிட்டுக் கொண்டேன்.

மிகச் சூடான சுவையான மசித்த உருளை பான் கேக் காலை உணவிற்கு. எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது- இயல்பு நிலை வந்துவிட்டதென்று. எஸ்தர் ஆலிவ் பச்சை வண்ணத்தில் காஷ்மீர கதகதப்பு ஆடைகள் அணிந்து ஒரு பூங்கொத்தினைப் போல் இருந்தாள். என்னைப் பார்த்து சிரித்தாலும் அவள் கண்களும், உதடுகளும் எதையோ சொல்லத் தவித்தன. மீண்டும் குழந்தையைப் பற்றி சொல்லப் போகிறாள் எனத் தெரிந்தாலும் தவிர்க்க முடியாதல்லவா?

‘அவன் பால் வாசனையோடு சிரிக்கிறான் பிரின்ஸ். உன்னைப் பார்த்தால் உடனே என்னைப் பார்த்துக் கொள்கிறான். நான் ‘டாடிடா’ என்றால்தான் அரை மனதோடு உன்னிடம் வருகிறான்.ஒரு சிட்டுக் குருவியைப் போல் வாயைக் குவித்து ம்-மா என்கிறான்.’

“எஸ்தர், போதும் இந்த விளையாட்டு. உண்மையை உணர்ந்து கொள்.’ என் குரலின் கடுமையும் அதன் ஆயாசமும் அவளைக் காயப்படுத்தியிருக்க வேண்டும்.

‘பிரின்ஸ், நமக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு இருக்கிறது’

‘எஸ்தர், அது உயிரோடு இருக்கப் போவதில்லையே’

‘என்னால்தானே, எல்லாமும். அதை நான்தானே சரி செய்ய வேண்டும்’

நான் சிரிக்கப் பார்த்தேன். வெறும் ஒலி தான் எழுந்தது.

‘நீ கடவுளின் வேலையைப் பார். நான் என் வேலையைப் பார்க்கிறேன்’ என்று எழ முயன்றேன்.

அவள் ஓடி வந்து என் மடியில் உட்கார்ந்து விட்டாள். ‘என்ன, இன்று ரொமான்ஸ் இப்பொழுதே!’ அவள் இதழ்களைக் கவ்விக் கொண்டேன். மிக நளினமாக விடுவித்துக் கொண்டாள்.

‘நாம் இன்று ஒரு புதிய மருத்துவரை பார்க்கப் போகிறோம் ஒரு மணிக்கு. அவர் செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்பவராம். நெட்டில் எல்லா விவரமும் பார்த்தேன்’

நான் நிஜமாகவே சிரித்தேன்.’ தெருவிற்கு இரண்டு இருக்கிறது இப்பொழுது’

‘இது வேறு, பிரின்ஸ்’

‘தத்து எடுக்கப் போகிறோமா? இல்லை, வாடகைத் தாய், தந்தை என ஏதாவது?’

‘இது மிகவும் புதியது. நம் குழந்தைக்கு மூன்று பெற்றோர்கள்’

‘என்னது? உன் கற்பனைகள் எல்லை தாண்டிப் போகின்றன, எஸ்தர், நான் உன்னையும் இழக்க விரும்பவில்லை. நீ இப்படியே இருந்தால் உன் மனம் பாதிக்கப்படும். விடு இந்தப் பேச்சை’

‘ப்ரின்ஸ், எனக்கு சரியாகச் சொல்லத் தெரியவில்லை. நாம் டாக்டர். லீயைப் பார்ப்போம். நமக்கு சரிவராதெனில் விட்டுவிடலாம். ப்ராமிஸ், இதுவும் இல்லையென்றால் நான் குழந்தையைப் பற்றி பேசவே மாட்டேன்’

சாலைகளில் பனியை அகற்றி பாதை அமைத்துக் கொண்டிருந்தார்கள். மீண்டும் பனி பொழியும், ஆனாலும் பாதை சீராக்கப்படத்தான் வேண்டும்.

டாக்டர். லீயின் க்ளினிக் அமைதியாக இருந்தது. அவரது வயதே அவரது அனுபவம் என்று சொல்லத்தக்க தோற்றம். புரியாத ஓவியங்களைப் பார்ப்பது போல் இருந்தது அவர் அறையில் மாட்டப்பட்டிருந்த ஜெனோம் சார்ட்டுகள்.

சிறு புன்னகையுடன் ஒரு கைகுலுக்கல். இரண்டு மணி நேரம் எங்களின் பழைய மருத்துவ அறிக்கைகளைப் பார்வையிட்டார்.

‘இரு குழந்தைகளை இழந்த உங்களுக்கு என் அனுதாபங்கள். இம்முறை நாம் செய்யப் போவது உங்களுக்கு ஒரு வரமென அமையலாம். ஆமாம், ஏன் மூவர் மூலம் செயற்கைக் கரு உருவாக்கக் கூடாது?’

‘மிஸ்டர். லீ?’

‘1990 முதல் இது ஒவ்வொரு வகையாக நடந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவிலே எம்ஆர்டி வரையறைக்கு முன்னால் 17 குழந்தைகள் இம்முறையில் பிறந்துள்ளனர். அதில் இன்றைக்கு 13 குழந்தைகள் பற்றி இரகசியமான விவரங்கள் சேகரிக்கப்பட்டு ஆராயப்படுகின்றன. ஆனால், இம்முறை இன்னமும் சட்ட அங்கீகாரம் பெறவில்லை.  இம்முறையில் கரு தரிப்பது தாய்க்கு ஆபத்தில்லை’

‘மிஸ்டர். லீ,எங்களுக்குத் தலைகால் புரியவில்லை. நான், எஸ்தர்  இருவர் தானே, மூன்று என்றால்?’

‘எஸ்தரின் ஊண் குருத்துகள் (mitochondria) பழுதாகி உள்ளன. இது அவருக்கு எந்த உடல் குறைபாட்டையும் ஏற்படுத்தாது. அவரது 37 ஜீன்களில் ஏற்படும் தன் பெருக்கமானது அவரது குழந்தைகளுக்கு கடத்தப்படுவதால், புதிய உயிர்கள் செல் சக்தியைப் பெற இயலாது சிறு வயதிலே இறந்து விடுகின்றனர்.’

‘ஆம், எங்கள் மருத்துவரும் அதைச் சொன்னார்’

‘இதைச் சரி செய்வதற்குத்தான் மூன்றாவது நபர்’

எஸ்தர் முதல் முறையாக, ‘எப்படி?’ என்றாள்.

‘உங்கள் கரு முட்டையின் மையம் ஸ்பிண்டில் நுட்பம் மூலம் அணுகப்படும். அதன் திசுக்கள், ஊண் குருத்துகள் மட்டும் நீக்கப்பட்டு உங்கள் கரு மையம் கொடையாளரின் மையக் கருவிற்குள் செலுத்தப்படும். உங்களுடைய மரபணு மாறாது. கொடையாளரின் நலமான ஊண் குருத்துக்கள் இப்பொழுது உங்கள் கரு முட்டையில். பிரின்ஸின் விந்தினை இணைத்து கருமுளையை உங்கள் கர்பைப்பையில் வைத்துவிடுவோம். கரு வழக்கம் போல் வளரும். உங்கள் வாரிசு, உங்கள் குறைபாடில்லாமல்.’

‘இம்முறையில் பிறக்கும் குழந்தைகள் இயல்பாக இருக்குமா? அதாவது மனிதனாக?’ என்றேன் நான்.

‘சில்லி கொஸ்டின். மனிதக் கரு, மனித விந்து. பின்னர் பிறப்பது என்னவாக இருக்கும்?’

‘இதற்கு பதிலாக நாம் ஏன் வேற்று கருமுட்டையைப் பயன்படுத்திப் பார்க்கக்கூடாது?’

‘செய்யலாம். உங்கள் மனைவியின் அழகோடும், ஆற்றலோடும் உங்களுக்கு வாரிசு வேண்டாமா?’

‘எங்களுக்கு சிறிது கால அவகாசம் வேண்டும்’

‘நாளைக்குச் சொல்லுங்கள்’ என்றார் லீ சிரிக்காமல்.

என்னால் தீர்மானிக்க முடியவில்லை. ஆபத்தில்லையென்றால் இந்த செயல்பாட்டிற்கு ஏன் சட்ட அனுமதி இல்லை? யூகேயில் அனுமதிக்கப்பட்டதாக  லீ சொன்னாரே. இதை ஒத்துக் கொண்டு அவளையோ, குழந்தையையோ அல்லது இருவரையுமோ இழந்து விட்டால்? நான் அவளுக்குச் சொல்ல காரணங்கள் தேடிக்கொண்டிருந்தேன். அவள் அமைதியாக குழந்தைக்கான காலுறை செய்து கொண்டிருந்தாலும் அவளும் சிந்தனையில் இருப்பது தெளிவாகத் தெரிந்தது.

‘பிரின்ஸ், உனக்கு கேத்ரினை நினைவு இருக்கிறதா?’ என்றாள்

‘உன் கஸின் தானே, அவளுக்கு என்ன இப்போ?’

‘அவள் வாடகைத் தாய் ஒருத்தி மூலம் குழந்தை பெற ஏற்பாடு செய்து கொண்டாள். ஆனால், பார் அந்த பெண்ணிற்கு எதிர்பாராத விதமாக ஒரு விபத்து ஏற்பட்டு இவளின் கனவும் அழிந்தது.’

‘ஏதோ ஒருத்தருக்கு நடந்ததை வைத்து இப்படிப் பேசுவது என் புத்திசாலி மனைவிக்குப் பொருந்தவில்லை’

‘பொய்ப் புகழ்ச்சி. நான் சொல்வது ரிஸ்க் என்பது எதிலும் இருக்கிறது’

‘ஆனால், அதைத் தவிர்க்கவும், இல்லையெனில் அதன் விசையைக் குறைக்கவும் நாம் முடிந்ததை செய்கிறோம் அல்லவா?’

‘இன்று காலை உணவு எப்படி இருந்தது?’ என்றாள் சம்பந்தமில்லாமல்.

குழந்தை, ட்ரீட்மென்ட் இதை விட்டுவிட்டு இவள் ஏதோ பேசுவது மகிழ்ச்சியாக இருந்தது. ’டேஸ்டி, வெரி டேஸ்டி’

‘மதியம் வெளியில் சாப்பிட்ட லன்ச்?’

‘அது சுமார்தான்.’

‘நல்ல உணவகம். மேஜைகள் சிறப்பாக செட் செய்யப்பட்டிருந்தன. விலையும் அதிகம், மெனுவும் அதிகம். ஆனாலும் நம் பான் கேக்கிற்கு ஈடில்லை’ என்றாள் சிரித்துக் கொண்டே.

இவள் எங்கே வருகிறாள் என்று புரியாமல் பார்த்தேன்.

‘பணம் கொடுத்து பொருள் வாங்குகிறோம், ஆனால் அதை நம் பக்குவத்தில் செய்கிறோம். நமக்கே நமக்கென. அதில் அன்பு கலந்து விடுகிறது. பணம் கொடுத்து வெளியில் உண்பது நம் பக்குவத்தில் இருப்பதில்லை’

‘இது பொதுவான வாதம்’

‘பிரின்ஸ், என் உடல் நலமாக இருக்கிறது. என் கர்ப்பைப்பை நம் உயிர் தாங்கும் ஒரு அனுபவம், அது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. கருமுளையின் ஒவ்வொரு வளர்ச்சியும் என்னுள் திறக்கும் கதவுகள் தேவன் கோயிலின் வாசல்கள். நான் உன்னை நினைத்துக் கொண்டே அதனுடன் பேசுவேன். என் பாடல்களை இரகசியமாக சொல்லித் தருவேன். கடவுள் நம் பங்கில் கொடுக்க நினைப்பதை வாங்க கைகளை ஏந்துவோம்’

‘உணர்ச்சிகரமாக இருக்கிறது. எதற்கும் நாம் நம் பாதிரியாரைக் கேட்போம். இதில் மதத்திற்கு எதிரான, இயற்கைக்கு மாறான செயல் இருக்கிறது’ என்றேன்.

‘கடவுள் மனிதனுக்கு இன்பங்களை மறுப்பதில்லை. ஆனால், கடவுளைக் காட்டுவதாகச் சொல்லும் சில மனிதர்கள் மறுக்கக்கூடும்’ என்றாள் அமைதியாக.

எனக்கு அதிர்ச்சிதான். எந்த ஞாயிறும் தேவாலயம் தவறாதவள், இரு வேளை ஜெபிப்பவள், பிரசங்கக் கூட்டங்களில் கண்களில் ததும்பும் நீருடன் இருப்பவள், இவள் தேவ மைந்தனுடன் வசித்திருக்கிறாள். நான் அறியா எஸ்தர்.

நாங்கள் டாக்டர் லீயைப் பார்த்தோம்.

ரோஜாவைப் போல் இருந்தான் எங்கள் மகன்.

 

 

 

 

சுஜாதா செல்வராஜின் ‘காலங்களைக் கடந்து வருபவன்’: மொழியின் ஆழத்துள் மிதக்கும் கவிதைகள்

ஜிஃப்ரி ஹாஸன்

suja-cover

சுஜாதா செல்வராஜின்காலங்களைக் கடந்து வருபவன்’: மொழியின் ஆழத்துள் மிதக்கும் கவிதைகள்

ஜிஃப்ரி ஹாஸன்

 

புது எழுத்து” பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் சுஜாதா செல்வராஜின் “காலங்களைக் கடந்து வருபவன்” நவீன தமிழ் பெண் கவிதைவெளியில் ஒரு குறிப்பிடத்தக்க வரவு. இக் கவிதைப் பிரதியில் பெண்- ஆண் எனும் இரண்டு தளங்களில் நகர்ந்து செல்லும் சொற்கள் கவிதையை உருவாக்கிச் செல்கின்றன. பெண்ணின் உலகத்தை ஆணின் கரங்கள் எப்படித் தீர்மானிக்கின்றன என்ற நுட்பத்தை சுஜாதா வெளிப்படுத்தும் தருணந்தான் அவரது கவிதைகளின் நிகழ் நேரம்.

தமிழின் நவீன பெண் கவிதைவெளிக்குள்ளிருக்கும் மௌனமும், அழகியலும், தீவிரமும் அப்படியே கிஞ்சித்தும் பிசகாமல் சுஜாதாவின் கவிதைகளுக்குள்ளும் இருக்கின்றன. பெண் குறித்த அவரது கவிதை மனத்தின் பல்வேறு பிரதிபலிப்புகளையும் இந்தத் தொகுதிக் கவிதைகள் பாசாங்குகளற்று வெளிப்படுத்துகின்றன.

இவரது கவிதைகள் பெண்ணைத் தன்னிலைக் கதாபாத்திரமாகவும் ஆணைப் புறநிலைக் கதாபாத்திரமாகவும் கொண்டு பெண்ணின் வாழ்வை அதன் முழு அர்த்தத்தோடும் வாசகனோடு பகிர்ந்துகொள்ள முற்படுகின்றன.

பெண் தனது சராசரி வாழ்வை எப்படி வாழ விரும்புகிறாள் என்ற அவளது சுயவிருப்பத்துக்கும் அவள் எப்படி வாழ வேண்டும் என்ற ஆணின் அதிகார விருப்பத்துக்கும் இடையிலான போராட்டத் தருணங்களே சுஜாதாவின் கவிதைப் புனைவுக்கான அடித்தளமாக ஆகியுள்ளன.

ஆனால் அவரது இந்தப் போராட்டம் வெற்றி தோல்விகளை எதிர்பார்த்த ஒன்றாக இருப்பதில்லை.

““நம் இருவருக்குமிடையில்
நிமிர்ந்து நிற்கும் அந்தச் சுவர்
அத்தனை உறுதியானதொன்றும் இல்லைதான்
ஆயினும் நாம் அதைக் கடக்கவோ
உடைக்கவோ முயன்றதில்லை”

என அவர் எழுதுகிறார். இங்கு எதிர்க் கதாபாத்திரமாக ஆண் இருக்கிற போதிலும் இருவருக்குமிடையில் சமரசத்துக்கான சாத்தியங்களே அதிகம் இருப்பதை அவர் கண்டுகொள்கிறார்.

பெண்ணின் இருப்பு, அவளது வாழ்வு, கனவுகள், வேட்கை என விரியும் சுஜாதாவின் கவிதைகள் சிக்கலற்ற எளிமையான குறியீடுகளையே கொண்டுள்ளன. படிமங்கள் மிக மிக குறைவு. சாதாரண பெண்களின் அனுபவங்களை வெளிப்படுத்துவதற்கு மொழியின் கூடுதல் புதிர்த்தன்மை தேவையற்றது என்பதை புரிந்து கொண்டு அதனை இயன்றளவு சுஜாதா தவிர்ந்து கொண்டிருக்கிறார். மிகைக் கற்பனைகளும் அவரது கவிதைக்குள் இருப்பதில்லை. இந்த வகையில், இவரது கவிதைகள் யதார்த்தவாதத்துக்கும், இயல்புவாதத்துக்கும் மிக நெருக்கமாகவுள்ளன.

பெண்ணின் சுதந்திரம் பற்றிப் பேசும்போது கூண்டு, வானம், பறவை போன்ற மிக எளிமையான குறியீடுகளையே பாவிக்கிறார். “வானம் மறுதலிக்கும் சிறகுகள்” எனும் அவரது கவிதையில்,

“என்றுமே நீ அறியப்போவதில்லை
வனம் அளக்கும் பறவையின் சிறகிற்கும்
கூண்டு தாண்டும் பறவையின் சிறகிற்கும்
வானம் வேறு என்பதை

இதுபோன்ற எளிமையான குறியீடுகளைத்தான் அவர் தனது கவிதைகளில் கையாள்கிறார்.

பெண் பற்றிய அறிவிப்புகளை தமது கவிதைகளில் வெளியிடுவது நவீன தமிழ் பெண் கவிதைகளின் பொதுப்போக்காகவே இருக்கிறது. ஆயினும் அந்தப் பொதுப் போக்கிலிருந்து ஒரு நுண்ணிய வித்தியாசத்தை நிகழ்த்திக் காட்டுகிறார் சுஜாதா. பெண் பற்றிய சுஜாதாவின் அறிவிப்பு அவரது “மருதானிக் காடுகளின் உன்மத்தம்” எனும் கவிதையில் நிகழ்கிறது.

“நாங்கள் துடுப்புகளற்ற படகு செலுத்தும்
கலை அறிந்தவர்கள்

என்கிறார். இன்னொரு வரியில்,

”ஆதிக்கனவுகளை திருத்தி எழுதிக் கொண்ட
முனை மழுங்கிய பேனைகள்

என்கிறார்.

”மேலும் உங்கள் செங்கோல்
ஆட்சியின் கீழ் வராத குடிகள் நாங்கள்

என்கிறார்.

இந்த அறிவிப்பு தமிழ்க் கவிதைவெளியின் பொதுப்போக்கிலிருந்து எப்படி வேறுபடுகிறதென்றால், தமிழ் பெண்கவிகள் தன்னிலை ஒருமையில்தான் பெண்களை அறிமுகப்படுத்துவதோ அல்லது அவர்களின் அனுபவங்களைப் பேசுவதோ வழக்கம். ஆனால் சுஜாதா தன்னிலைப் பன்மையில் பெண்களை அறிமுகம் செய்வது அவருக்கான தனித்துவத்தை அர்த்தப்படுத்துகிறது.

சமூகத்தில் பெண்ணுக்குள்ள பிரச்சினைகளாக சுஜாதா அடையாளங் கண்டிருப்பவை எவையும்  கற்பிதமாகத் தெரியவில்லை. இல்லாத பிரச்சினைகளை உருவாக்கி அவற்றைப் புனைவுகளில் பூதாகரப்படுத்தி தனக்கான பிம்பங்களையும் ஒளிவட்டங்களையும் சூடிக்கொள்ள அவர் பிரயாசைப்படுவதாகவுமில்லை என்றே நான் கருதுகிறேன்.

ஒரு ஆண் வீட்டில் தனிமையை உணரும்போது அவன் வெளியில் சென்று தனது தனிமையையும் வெறுமையையும் போக்கிக் கொள்ள முடியும். இதே நிலை ஒரு பெண்ணுக்கு ஏற்படும்போது அவளால் வெளியில் சுதந்திரமாக உலவிவிட்டு வருவதற்கான சூழல் இன்று இல்லை என்பது பெண்களின் சுதந்திரத்தோடு சம்பந்தப்பட்ட பிரச்சினைதான். இது உண்மையில் உள்ள பிரச்சினைதான். இது கற்பிதமல்ல.

“ஆளற்ற வீட்டின் முன்
எத்தனை நேரம்தான் வெறித்திருப்பாய்

என்ற வரிகள் இந்த அவலச் சூழலைப் பற்றித்தான் சொல்கிறது.

இப்படியான ஒரு சூழலில் பெண்ணின் வாழ்வு தோல்வியுற்றிருப்பதாக கருதுகிறார் சுஜாதா.

“கண்மூடிக்கிடப்பதங்கே தோற்ற வாழ்வென்று
ஈக்கள் ஆர்ப்பரித்து அறிவிக்கும்

என்று தோல்வியை அறிவிக்கும் அவர், திடீரென்று இன்னுமொரு கவிதையில்

“வெற்றி முரசு வனமெங்கும் தெறித்து எதிரொலிக்க
கள்வெறி கொள்கிறேன்

என வெற்றியைக் கொண்டாடுகிறார். இவ்வாறு முரண்பட்ட உணர்வுகளை ஒரே நேரத்திலும் ஒரே வாழ்விலும் அனுபவிக்கும் பெண்கள்தான் சுஜாதாவின் கதாபாத்திரங்களாக வருகின்றனர்.

நமது சமூக அடுக்கமைவு பாரபட்சமானதாக, ஆண்கள் தமது சொந்த விருப்புக்கேற்ற விதத்தில் வடிவமைத்துக் கொண்டதான ஒரு தோற்றப்பாட்டையே கொண்டிருக்கிறது.  பெண்ணுக்கும்- ஆணுக்கும் என பகிரப்பட்டிருக்கும் பணிகள் எந்தவொரு தர்க்க ஒழுங்குகளையோ, அடிப்படைகளையோ கொண்டிருப்பதில்லை என்ற பார்வையை நமது பெண் கவிகள் தொடர்ந்தும் வலியுறுத்திக்  கொண்டே வருகின்றனர்.

சுஜாதாவின் “இருப்பின் ஒரு பிரதி” எனும் கவிதைக்குள் இந்தக் குரல் மேலும் ஆழமாக ஒலிக்கிறது-

“பெண்ணின் புகைப்படங்கள் தொங்கும்
பூஜையறைகளுக்குப் பின்னால்தான்
ஜன்னல்கள் ஏதுமற்ற
வழுக்கும் சமயலறைகளும்
தூமைத் துணிகள் சொருகப்பட்ட
புழக்கடை வெளிகளும் பரந்து கிடக்கின்றன
” 

இங்கு “சமையலறை“ என்பது ஆதியிலிருந்தே பெண்ணுக்கென உருவாக்கப்பட்ட ஒரு இடமல்ல. ஆதி நிலையிலிருந்த சமூகம் குடும்பமாக மாறி ஒரு மனையை நிர்மாணித்துக் கொண்டதன் பின்னர்தான் அதற்குள் பெண்ணுக்கென பிரத்தியேகமாக சமையலறையையும் உருவாக்கிக் கொண்டான். அன்றிலிருந்து அநேக பெண்களுக்கு “சமையலறை” மீட்சியற்ற ஒரு பணி அறையாகவே மாற்றப்பட்டு விட்டது. இதனால் நமது பெண்கவிகள் “சமையலறை“ மீதான தமது அதிருப்தியை தொடர்ந்தும் தமது கவிதைகளில் பதிவு செய்தே வருகின்றனர்.

ஆனால் தூமைத் துணிகள் சொருகப்பட்ட புழக்கடைவெளிகள் பெண்ணின் இயல்பான தன்மைக்காக பெண்ணே ஏற்படுத்திக் கொண்ட ஒரு அறையாக இருக்கிறது. இதற்கெதிராக பெண்கவிகள் கலகம் செய்யத் தேவை இல்லை என்பது என் அபிப்ராயம்.

பெண்ணின் இருப்பு குறித்த அர்த்தங்களைத் தேடியலைபவையாகவும் சுஜாதாவின் கவிதைகள் வடிவங்கொள்கின்றன. பெண்ணின் இருப்புக்கான சுதந்திரத்தின் எல்லைகள் எப்படி ஆண்களால் ஈவிரக்கமற்றுக் குறுக்கப்பட்டிருக்கின்றன என்பதை சுஜாதா வெளிப்படுத்தும் வரிகளில் பெண் அனுதாபத்துக்குரியவளாகவும், ஆண் அதிகாரத்துக்குரியவனாகவும் வாசக மனதில் பதிவாகின்றனர்.

”புயல் தின்ற முதிர்ந்த நெற்கதிரென
உன் வயலெங்கும் உதிரும் எனது இருப்பு

“ஆசுவாசம்” எனும் கவிதையில்,

“இருள் அப்பிப் பிசுபிசுக்கும் என் இருப்பெங்கும்
அலறி ஓடும் ஓர் அம்மணம்

என்ற வரிகளில் மட்டுமல்ல

“என் திசை எங்கும்
நீ வனம் பரப்பி வைத்திருக்கிறாய்
உன் பாதை தோறும்
நான் முள் பொறுக்கி்க்கொண்டிருக்கிறேன்

என்று நெகிழ்கிறார்.

அதேநேரம் “கொத்தித் துளைக்கத் தொடங்கும் நட்சத்திர வானம்” என்ற அவரது கவிதையிலும்

“சிறகுதிர்ந்த பட்டாம் பூச்சியென
பதறித் தவித்தலைகிறது எனதிந்த இருப்பு

எனத் துயருறுகிறார்.

மேலோட்டமான வாசிப்பில் இத்தகைய அனுபவமற்ற ஒரு ஆண் வாசகனோ அல்லது வாசகியோ இந்தத் துயரம் செயற்கையாய் உருவாக்கப்பட்டிருப்பதாக உணர்வதற்கு சாத்தியமுள்ளது.

பெண் பற்றிய புரிதலில் நமது பாரம்பரிய தமிழ்மொழிச் சமூகங்களிலிருந்து நவீன தமிழ் மொழிச் சமூகங்கள் பெரிதளவுக்கு முன்னேற்றங்களைக் காண்பிக்கவில்லை. இத்தகையதொரு அபத்தமான சமூக சூழலில் பெண்ணின் இருப்பு சுஜாதா விபரிப்பது போன்ற கையறுநிலைக்குள்ளும், தகிப்புக்குள்ளும் இருப்பது இயல்பானதே. இந்தவரிகள் கவிஞர் வாழும் சமூகத்துக்கு நெருக்கமானதாக இருக்கின்றன. எனவே பெண்ணின் இருப்பு பற்றிய சுஜாதாவின் இந்த வரிகள் மேலைத்தேய நாடுகளில் மொழிபெயர்க்கப்பட்டு அங்குள்ள சமூக சூழலில் ஒரு அர்த்தத்தை வழங்குவதில் தோல்வியடையக் கூடும். இதனால் இக்கவிதை நிலையான அர்த்தத்தைக் கொண்டதாகவன்றி ஒரு நிலைமாறும் அர்த்தப்பிரதியாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டியதாகிறது.

ஆண்களால் உருவாக்கப்பட்டிருக்கும் “கலாசாரம்“ பெண்ணின் இருப்பு மீதும், அவளின் சுதந்திரத்தின் மீதும் எத்தகைய அதிகாரத்தைக் கொண்டுள்ளது என்பதை ஓரளவு அடக்கி வாசிக்கும் பாணியில் வெளிப்படுத்துகிறார் சுஜாதா.  தமிழ்ச் சமூகத்தில் காணப்படும் பெண் மீதான கலாசார இறுக்கங்களை துயரத்துடன் பகிர்ந்து கொள்கிறார்.

அவரது “அவ்வளவே” என்ற கவிதைக்குள் இந்தக் குரலை நீங்கள் கேட்கமுடியும்.

”நெஞ்சுக்கூட்டில் முட்டி அழும் இதயத்தின் குரல்
தலைமயிர் சிதைக்கப்பட்ட
பெண்ணின் கூக்குரலாய் ஒலிக்கிறது

என்று அவர் எழுதும் போது கலாசாரத்தின் இறுக்கப்பிடியிலிருந்து பெண்ணின் மீட்சிக்காக வாசக மனம் அவாவுறுகிறது.

எனினும் பிரதி முழுவதையும் நுணுக்கமாகப் பரிசீலனை செய்யும்போது தமிழ் கலாசாரத்தின் மீது மிகவும் அவதானமான ஒரு வரையறுக்கப்பட்ட விமர்சனத்தையே கவிஞை சுஜாதா செல்வராஜால் முன்வைக்க முடிந்திருக்கிறது. இந்த சுயதணிக்கை அவரது கவிதைகளுக்கு மேலும் ஒரு நடைமுறைசார் அர்த்தத்தை வழங்கிவிடுகிறது.

ஒரு வாசகனுக்கு அற்புதமான கற்பனைகளி்ன் தரிசனமும் சுஜாதாவின் கவிதைகளுக்குள் கிடைக்கிறது.

நினைவைக் கலைத்துக் கலைத்து
அடுக்கிப் பாரக்கிறேன்

தவறாமல் என் வாசல் வரும்
இளமாலை வெயிலுக்கு என்
மௌனங்களை நுரைக்க ஊற்றித் தருகின்றேன்

போன்ற வரிகளில் அதீத கற்பனையின் தரிசனத்தை வாசகன் கண்டுகொள்கிறான்.

பொய்க் குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப்படுபவர்களின் மனவுணர்வுகள் பற்றி நமது தமிழ்க் கவிகள் அவ்வளவாக கவனத்திற்கொண்டதாகத் தெரியவில்லை. சமூகத்தின் கண்களுக்கு அவர்கள் உண்மையான குற்றவாளிகளாகவே தெரிகின்றனர். ஒரு இடத்தில் ஒரு பொருள் திருடப்பட்டிருந்தால் அங்கு யாராவது ஒருவர் பொது மக்களால் சந்தேகிக்கப்படுகிறார். ஏற்கனவே சும்மா குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு நிரபராதியின் மீது எப்போதும் சமூகத்தின் சந்தேகக் கண்கள் மொய்த்தபடிதான் இருக்கும்.

அப்படிப்பட்ட விளிம்புகள் மீதும் சுஜாதாவின் கவிதை மனம் கவனங்கொள்கிறது. “சுதந்திரத்தின் முடிச்சு” என்ற கவிதையில்,

காணாமல் போகும் “ஒன்று“
அதன் வாசனையை அடையாளத்தை
இரக்கமின்றி அவன் மீதே விட்டுச்செல்கிறது

தெளிந்த தனது கைகளை மீண்டும் மீண்டும்
அவன் கழுவியபடியே இருக்கிறான்

என்று சுஜாதா எழுதும்போது சந்தேகிக்கப்பட்ட ஒரு நிரபராதியின் மனத்தின் வலி தன் உடலெங்கும் பரவுவதை வாசகன் தீவிரமாக உணர்கிறான்.

இந்தக் கவிதைக்குள் வருபவன் ஒரு ஆணாக இருப்பினும் அவன் ஒரு விளிம்பாக இருக்கிறான் அல்லது அவ்வாறு சமூகத்தால் உணர வைக்கப்பட்டவனாக இருக்கிறான்.

ஆயினும் சுஜாதா சித்தரிக்கும் பெண்ணின் எதிர்நிலைக் கதாபாத்திரமான ஆண் காலங்களைக் கடந்து வருபவனாக இருக்கிறான். மிக மிகத் தொன்மையான காலத்திலிருந்து இன்று வரை பெண் மீதான அவனது செயற்பாடுகளில் காலம் எந்தப்பெரிய உடைப்புகளையும் நிகழ்த்தி விடவில்லை என்ற உண்மையின் பல்வேறு பிரதிபலிப்புகளே சுஜாதாவுக்குள் ஒரு எதிர்ப்பாக வடிவங்கொண்டு, மொழியின் அழகியலோடு வெளிப்பட்டுள்ளன.

சுருங்கக்கூறின் சுஜாதா செல்வராஜின் கவிதைகளின் அகம் ஒரு ஆணிண் வன்மத்தோடும் புறம் ஒரு பெண்ணின் மென்மையோடும் இருக்கின்றன. எனினும் எனது இந்த சுருங்கிய பார்வைக்கும் அப்பாலுள்ளது அவரது கவிதை.