Author: பதாகை

தண்டட்டி

ஸ்ரீதர் நாராயணன் 

thandatti
சிட்டிகை திருநீறு
சிறு நெட்டி முறிப்பு
விரிந்த புன்னகை
வெள்ளையான வாழ்த்துரை

‘தொலைதூரம் போவறவஹ
காத்து கருப்பு அண்டாம
சாக்கிரதையா போயிட்டு வரனும்’

கையைத் தட்டிவிட்டுக் கொண்டு
முந்தானையுடன் விபூதிப்பையையும்
இடுப்பில் செருகிக் கொண்ட
தயிர் விற்கும் அம்மாளின்
காது தண்டட்டி ஆடுகிறது

நெகிழ்ச்சியை வெளிக்கிடாமல்
நாசூக்காக நாணுகிறேன்.
வளர்ச்சியின் அடையாளமென
விடுபட்டு விலகி ஓடுகிறேன்.

காப்பிக்கடையில்
சில்லறை பாக்கி கொடுக்கும்
கொரியன் அம்மாளின்,
நீளக்காதுகளில் கனத்த தோடுகள்.
கண்பற்றி நிற்கின்றன
நெடிய கணங்களுக்கு.

சுமை

மு வெங்கடேஷ்

“எங்கடி போயிருந்த, நாலு நாளா ஆளையேக் காணும்?” என்று புகையிலைத் துண்டை விண்டு வாயில் போட்டபடியேக் கேட்டாள் பேச்சியம்மாள்.

ஒரு இணுக்கை பிட்டு வாயில் அதக்கிய பொண்ணுத்தாயி, ” டவுணுக்குத்தேன். பெரியாசுபத்திரில ரெண்டு நா கெடக்க வேண்டிதாப் போச்சு. எல்லாம் நா வாங்கி வந்த வரம்”

“பெரியாசுபத்திரிக்கா? அடிப்பாவி. இப்படி சொல்லாமக் கொள்ளாம போயிட்டு வந்திருக்கியே. என்னத்தேன் ஆச்சு” எனப் பதறினாள் பேச்சியம்மாள்.

“என்னத்த ஆச்சு. நாளு தள்ளிப் போச்சுன்னு போயிட்டு வந்தேன்” விரக்தியோடு சொல்லிக் கொண்டிருந்தவள் சட்டென சுதாரித்துக் கொண்டு “யார்டையும் சொல்லிராதடி, மாரியப்பனுக்குக் கூட சொல்லல” எனக் கெஞ்சலோடு பேச்சியின் கைகளைப் பிடித்துக்கொண்டாள்.

“அடிப்பாவி” பேச்சியால் அதற்கு மேல் பேச முடியவில்லை.

“கெரகம்…. இந்தாள்ட்ட சொன்னாலும் கேக்க மாட்டிக்கிறாரு. காலம் போன காலத்துல இது வேற. மாரியப்பந்தேன் கெடந்து செரமபட்டுக்கிட்டு சின்னதுக ரெண்டையும் பாத்துக்கிட்டிருக்கான் . இதுல நாலாவதுன்னு ஒண்ணு நம்மாள முடியுமா?” சொல்லி முடிக்குமுன்னர் பொன்னுத்தாயின் கண்கள் தளும்பின.

“ஏய்… ஆனது ஆயிப்போச்சி. நீ ஏங்கெடந்து கண்ண கசக்குற? இனியாவது அந்தாளக் கொஞ்சம் அடங்கி நடக்கச் சொல்லு. உம்பையன நெனச்சா பாவமாத்தான் இருக்கு”

“என்னத்தப் பாத்து நடக்கிறது. ஒத்தப் பைசா சம்பாத்தியமில்ல. ஆனா அப்பப்ப காச மட்டும் பிடுங்கிட்டுப் போயி…’ சொல்லும்போதே பொன்னுத்தாயின் குரல் விம்ம, “ இதெல்லாம் அவனுக்குத் தெரிஞ்சா…”

“விடு விடு. ஒன்னும் ஆகாது. ஆண்டவன் இருக்கான்” என்று சொல்லிவிட்டுத் தண்ணீர் குடத்தைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கிளம்பினாள் பேச்சியம்மாள்.

மூத்தவன் மாரியப்பன் அதற்கடுத்து பன்னிரெண்டு வருடங்கள் கழித்து தனலட்சுமியும், காசிநாதனும் என இரட்டையர்கள். முத்துக்கருப்பனுக்கு வேலையென எதுவும் கிடையாது. குடித்துவிட்டுத் திரியும் ஊதாரி. பலமுறை சொல்லிப் பார்த்தும் கேட்கவில்லை. மாரியப்பன்தான் ஒற்றை ஆளாக குடும்ப பாரத்தைத் தூக்கிச் சுமப்பவன். தன் படிப்பையும் பாதியில் நிறுத்திவிட்டு தம்பி தங்கையை எப்படியாவது நல்ல படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்று பொட்டிக் கடை வைத்திருந்தான். தனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் அப்பாவிடம் ஒரு வார்த்தைகூட பேசியதில்லை. அப்பாவென்று சொன்னதுகூட கிடையாது. “அந்த ஆள்” தான். முத்துக்கருப்பனுக்கு தினமும் குடித்தாக வேண்டும். வாரத்துக்கு நான்கு நாட்கள் டவுணுக்குப் போய் ஆட்டம் என்றால் மீதி நாட்கள் செல்லத்துரை தோப்பில் போய் கும்மாளம். தினமும் பொன்னுத்தாயுடன் வம்பு வரத்துதான். சமயத்தில் அடிதடி வேறு. அவரைக் கண்டாலே மாரியப்பனுக்கு ஆகாது. அவருக்கும் தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளை சாடைமாடையாக அவரை குற்றம் சொல்வது பற்றிக் கொண்டு வரும்.

தண்ணீர் பிடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பொன்னுத்தாயி, மகனுக்கு வீட்டிற்குள்ளும் கணவனுக்குத் திண்ணையிலும் சோறு வைத்துவிட்டு காத்திருந்தாள். ”அவன போலீஸ் கூப்டு போயிருக்காங்க” என்று முத்துக்கருப்பன் சொல்ல, “போலீசா எதுக்கு? என்னன்னு தெரியலயே” மனசு படபடத்தது. புலம்பிக் கொண்டிருந்தாள் மாரியப்பன் திரும்பி வரும் வரை.

“என்னப்பா ஆச்சு?எதுக்கு கூப்டாக?” மகன் வரவும் கேட்டாள்.

“அது ஒன்னும் இல்லம்மா நேத்து தெருல சின்ன சண்ட. அது விசயமா”

“ஒனக்கு ஒன்னுமில்லேலா?”

“ஒன்னுமில்லம்மா”

“எதுக்குப்பா தேவ இல்லாம ஊர்ப் பிரச்சன நமக்கு?”

“எம்மா நா போவல. எதும்னா ஒன்ட்ட சொல்ல மாட்டனா? இது வரைக்கும் ஏதாது மறச்சிருக்கனா? சரி அத விடு நீ மொத சோறப் போடு, சாப்ட்டு கடைக்குப் போனும்”

“ஒம்மேல எனக்கு நம்பிக்கை இருக்குய்யா. நீ எந்த தப்பும் பண்ண மாட்ட, எதயும் என்ட மறைக்க மாட்டேன்னு தெரியும் இருந்தாலும் கொஞ்சம் சூதானமா இருந்துக்கோய்யா”

“சரிம்மா நா பாத்துக்குறேன். நீ பயப்படாத”

வெயிலுக்கு மறைப்பாக அஞ்சால் மருந்து பேனரை கடை முன் இறக்கி விட்டுவிட்டு, உட்கார்ந்திருந்தபோது, வட்டிப்பணம் கேட்டு பால்பாண்டி வந்தான்.

“அண்ணே குடுத்த இடத்துல இருந்து இன்னும் வரல. இன்னும் ரெண்டு நாள் டயம் குடுங்க. தந்துறேன்” என்றான். “ஏல என்னிய என்ன இளிச்சவாயன்னு நெனச்சியா? நாலு மாச தவணை தப்பிருச்சு. சாயந்திரம் வர்றேன். வட்டிப்பணமாச்சும் எடுத்து வை. ஏதோ கவுரவமா கடை வச்சிருக்கேன்னு சின்னப்பையன நம்பி பணம் கொடுத்தா இஷ்டத்துக்கு இழுத்து அடிக்கிறியே. அப்புறம் அசிங்கமாயிரும் பாத்துக்கோ” என்று மிரட்டி விட்டுச் சென்றான்.

கல்லாப் பெட்டியைத் திறந்து பார்த்தான். முழு பத்து ரூபாய் நோட்டும், சில்லறை நாலு ரூபாய் ஐம்பது காசும் கிடந்தது. இவன் சம்பந்தமே வேண்டாமென மொத்தத்தையும் திருப்பிவிடலாம் என்றால், முப்பதாயிரம் உடனடியாகக் கொடுக்க வேண்டும். என்ன செய்வது? இருந்த மொத்த பணத்தையும் வழித்து துடைத்து நேற்றுத்தான் தம்பிக்கும் தங்கைக்கும் ஃபீஸ் கட்டி ஆயிற்று. ஒன்றும் புரியவில்லை, தலை சுற்றியது. யார்யாரிடமோ கேட்டுப் பார்த்தான். ஐந்து ரூபாய் கூடத் தேறவில்லை. கடைசியாக டவுணில் இருக்கும் நண்பன் பழனிக்குப் போன் செய்தான்.

“தெரியும்டே. ஏதாச்சும் தேவைன்னாத்தான் இந்தப் பழனிய உனக்கு நெனப்பு வரும். சொல்லு” என்றான் பழனி.

“அப்டில்லாம் இல்லடா. ஒரு சின்ன உதவிதான்” என இழுத்தான் மாரியப்பன்.

” மேட்டர் என்னச் சொல்லு”

” அவசரமா ஒரு முப்பதாயிரம் பணம் வேணும்”

“போதுமா? நீங்க என்ன அம்பானிக்குப் போட்டியா எதும் தொழில் பண்ணப் போறீகளா?”

“லேய் விளையாடாத, அவசரம் அதான்”

“சரி வந்துத் தொல, தங்கச்சி கல்யாணத்துக்கு வச்சிருக்கதுடா. ஒரு மாசத்துல திருப்பித் தந்துரு”

“ஒரு வாரத்துல தந்துர்றேன்”

வெயில் இறங்கும் நேரம், கொஞ்சம் சுருக்கவே கடையை அடைத்து விட்டு, இருந்த பதினான்கு ரூபாய் ஐம்பது காசை எடுத்துக் கொண்டு டவுண் பஸ் ஏறினான். பால்பாண்டி தொல்லையை முதலில் தீர்த்து விடனும். மானம் போகிறது. பழனிக்குப் பணத்தைக் கொடுக்க இன்னொரு வழி கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் அதற்கு இன்னொரு வாரமாவது நேரம் இருக்கிறது. நேராக பழனி கடைக்குச் சென்றான். பூட்டி இருந்தது. அருகிலிருக்கும் டெலிபோன் பூத்திலிருந்து பழனிக்கு மீண்டும் போன் செய்தான்.

“மன்னிச்சிக்கோ மாப்ள. தங்கச்சியக் கூப்பிட மதுர போ வேண்டியதாப் போயிட்டு, நீ ஒண்ணு பன்னு, நம்ம சின்னதுரை அண்ணன்ட கடச்சாவி இருக்கு, வாங்கி அங்க படுத்துக்கோ. நா காலைல வெரசா வந்துருறேன்” என்றான்.

“சரி மாப்ள. பணம்?”

“அதான் சொன்னேன்ல காலைல வந்துருவேன்னு. வந்ததும் தாரேன்”

“கண்டிப்பா கெடச்சிரும்லா?”

“கண்டிப்பா”

ஒரு ரூபாய்க்கான நேரம் முடிந்திருந்தது. போனை வைத்துவிட்டுத் திரும்பிப் பார்த்தான். எதிரிலிருக்கும் மதுக்கடையில் தெரிந்த முகமாக இருக்கிறதே எனப் பார்த்தால், முத்துக்கருப்பனேதான். “இந்த ஆள்” எதுக்கு இங்க இருக்காரு என்று யோசித்தவாறே வெளியில் வந்தான். அவருக்கு பக்கத்திலே தொற்றிக் கொண்டாற் போலொரு பெண்மணி. அலட்டலும் அலப்பறையுமாக அவள் பேசிக்கொண்டே போவதைப் பார்த்ததும் மாரியப்பன் திடுக்கிட்டான். இதென்ன கூத்து என்றபடியே அவர்களைப் பின் தொடர்ந்தான். நேராகச் சென்ற அவர்கள் வலது பக்கம் திரும்பி பின் இடது பக்கம் உள்ள தெருவில் திரும்பினார்கள். அங்குமிங்கும் திரும்பிப் பார்த்துவிட்டு அந்த ஆள் ஒரு வீட்டிற்குள் நுழைய, அவருடைய அல்லாடலை கிண்டலடித்தபடியே கூடவே அந்தப் பெண்மணியும் சென்றாள்.

மாரியப்பனுக்குக் கோபமும் கழிவிரக்கமுமாகப் பொங்கியது. தகப்பனை எந்த நிலையில் பார்க்கக் கூடாதோ அப்படிப் பார்த்தான். கண்களில் கண்ணீர் வழிந்தது, அம்மாவை நினைத்து. கோபத்தில் அருகிலிருக்கும் பலகையில் ஓங்கிக் குத்த, சத்தம் கேட்டு முத்துக்கருப்பன் பதட்டத்துடன் வெளியில் எட்டிப் பார்த்தார். திண்ணையின் குறை வெளிச்சத்தில், அவரை நன்றாக நிறுத்திப் பார்த்துவிட்டு மாரியப்பன் விறுவிறுவென நடந்தான்.

மறுபடியும் அதே போன் பூத் எதிர்ப்பட்டதும், கையில் இருந்த கடைசி ரூபாய் காய்னைப் போட்டு போன் அடித்தான்.

“அலோ யார் பேசுறது?”

“நாந்தாம்மா மாரி” குரல் தழுதழுத்தது.

“எங்கயா போன? பால்பாண்டி வந்தான். கொள்ளநாளா கடன் தவணை கட்டலன்னு ஒரே கூப்பாடு. சின்னவ என்னமோ வார்த்தய விட, ஏகத்துக்கு சண்டயா போயிட்டுப்பா. ஊரையே கூட்டிட்டு, ஒரே.அசிங்கமாப் போச்சு. என்னயா ஆச்சு? “

“அவனுக்குப் பணம் தரணும். ரெடி பண்ணிட்டேன்” மாரியப்பனுக்கு தொண்டை அடைத்தது.

“இருக்குல்லா? நீ எந்த தப்பும் பண்ணிருக்க மாட்டன்னு தெரியும்.ஒம்மேல எனக்கு நம்பிக்கை இருக்கு இருந்தாலும் சீக்கிரம் வந்துரு.சரி இப்போ எங்க இருக்க?”

“டவுண்ல”

“இந்தாள வேறக் காணும். எங்க போயித் தொலஞ்சாருன்னேத் தெரியல”

“இங்க தான் இருக்காரு”

“அங்கயா? ஒங்கூடையா?”

ற்று மௌனத்திற்குப் பின் “எங்கூட இல்ல. இன்னொருத்தி கூட” என்று சொல்லிவிட்டுக் குமுறி அழுதான். ஒரு ரூபாய்க்கான நேரம் முடிந்தது.

இரவு முழுவதும் தூக்கம் வராமல் அம்மாவையே நினைத்துக் கொண்டிருந்தான் மாரியப்பன். அவள் முகத்தை எப்படிப் பார்ப்பது, இப்படி போனில் போட்டு உடைத்திருக்கக்கூடாதோ? கேட்டு அவள் எப்படியெல்லாம் வேதனைப்பட்டாளோ என்று ஒன்றும் தெரியவில்லை. யோசித்துக் கொண்டிருக்கும்போதே கண் அசந்தது. மறுநாள் காலை ஆறு மணிக்கே வந்த பழனி, அவன் கேட்ட முப்பதாயிரம் பணத்தைக் கொடுத்தான். உடனேக் கிளம்பினால் வெள்ளென ஊர் போய் சேர்ந்து விடலாம். அம்மாவை நினைத்தால்தான் மனம் ஆறவேயில்லை. அவளை உடனே பார்க்க வேண்டும் என்று தோன்றியது. பஸ்ஸில் இருந்து இறங்கியதும் வீட்டை நோக்கி ஓட்டமான நடைதான்.

மாரியப்பனின் தலை தெரிந்ததும், தம்பி காசி கத்தினான்.

“எப்பா இந்தக் கொலைகாரப் பாவி வாராம் பாரு”. தலையை விரித்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்த தனமும் கூடவே கத்தினாள். ‘இப்படி கொன்னுப்போட்டியேண்ணே’.

“ஏல, நீ எல்லாம் நல்லாருப்பியா? கடன வாங்கிக் கூத்தடிச்சதுக்கு, ஆத்தாள காவு வாங்கிட்டியேடா,” என்றார் அந்த ஆள்.

“பொறுப்பானவன்னு பாத்தா இப்படி ஊதாரித்தனமா கடன வாங்கிப்புட்டானே…. அவ ரோசமுள்ளவா. அவமானம் தாங்க முடியாம தூக்குல தொங்கிட்டா,” என்று ஊரே ஒப்பாரி வைத்தது.

துக்க வீட்டின் அத்தனை அபத்தங்களுடன் சண்டை நடந்தேறியது. காசி கல்லை எடுத்துக் கொண்டு பாய்ந்தான். தனம் சுவற்றில் முட்டிக் கொண்டு ஒப்பாரி வைத்து அழுதாள். முத்துக்கருப்பன் ஆட்டம்தான் மிகவும் அதிகமாக இருந்தது. கண்டபடி ஏசிக்கொண்டே செருப்பை எடுத்துக் கொண்டு பாய்ந்து வந்தார். முந்தாநாள் மாரியப்பன் அவரை வெறுப்போடு பார்த்த பார்வை அவரால் மறக்க முடியவில்லை.

துக்கம் கேட்க வந்த கூட்டத்தில் பால்பாண்டியும் இருந்தான். பொறுக்க முடியாமல் அவனுடைய கணக்கை அங்கேயே பைசல் செய்தான் மாரியப்பன். அம்மாவின் முகத்தைப் பார்த்து பொங்கி அழக்கூட ஒரு நேரம் வாய்க்காமல் மாரியப்பன் மரத்துப் போய் நின்றிருந்தான்.

இரவு மசானக்காட்டில் உட்கார்ந்திருந்தவனைப் பார்த்த வெட்டியான், “விடுப்பா. சொல்லு தாங்க முடியாம போயிட்டா புண்ணியவதி. அதுக்கும் ஒரு கொடுப்பினை வேணுமே” என்றான்.

ஒன்றும் பேசாமல் அம்மாவையேப் பார்த்துக் கொண்டிருந்தான் மாரியப்பன்.

யானை இல்லா மன்றம்

சிகந்தர்வாசி

என்னை மறந்துவிட்டிருந்த கணவரை தினமும்
– குளிப்பாட்டி
– சோறூட்டி
– தேநீர் கொடுத்து
– நடைப்பழகவைத்து
– தூங்கவைத்த
எனக்கு அவர் மறைவு சற்று நிம்மதியை
கொடுத்திருக்கவேண்டும்

கிரேக்க அவல நாடகங்கள் – மேரி லெஃப்கோவிச்

220px-Sophocles_pushkin

கிரேக்க நாடகங்கள் ஏன் முக்கியமாய் இருக்கின்றன?

பல காரணங்கள்.

கிரேக்க நாடகங்கள் சுவாரசியமாக இருக்கலாம்; அவை நம்மை வேறொரு, வித்தியாசமான உலகுக்குக் கொண்டு செல்லலாம். அவை, அவ்வப்போது, நம்மை நன்றாகச் சிரிக்கவும் வைக்கலாம். ஆனால் முக்கியமான காரணம், பார்வையாளர்களை அவை வாழ்க்கைக்குத் தயார் செய்கின்றன- நாம் விரும்பும் வாழ்க்கைக்கல்ல, உள்ளபடியே உள்ள வாழ்க்கைக்கு. நாம் நினைத்துப் பார்க்கவும் விரும்பாத பிரச்சினைகளை இந்த நாடகங்கள் பேசுகின்றன: நோய்மை, மரணம், குரூரம், மரணத்துக்கும் பேரழிவுக்கும் இட்டுச் செல்லக்கூடிய, தவிர்க்க முடியாத, மோசமான பிழைகளை தன்னம்பிக்கையுடன் இழைக்கும் மானுட இயல்பு. நம்மை அச்சுறுத்தக்கூடிய எந்த ஒரு சாத்தியமும் தவற விடப்படுவதில்லை: திடீர் மரணம், தற்கொலை, மரணப்பிணி, துரோகம், நேசத்துக்குரிய ஒருவர் அல்லது பலரின் இழப்பு.

ஆனால் அவல நாடகங்கள் மானுட துயரின் காரணங்களை விவரிப்பதோடு நின்றுவிடுவதில்லை. மானுடத்தின் மிகப்பெரிய குறைகளுடன், அதன் குறிப்பிடத்தக்க வலிமைகளையும் நாம் காண அவல நாடகங்கள் அனுமதிக்கின்றன: புரிந்துணர்வு, கருணை, உடலின் துன்பம் மற்றும் வறுமையை எதிர்த்து நிற்கும் இயல்பு. துயரிலும் தோல்வியிலும், நண்பர்கள் மட்டுமல்ல, அந்நியர்களும் ஆறுதலும் இரக்கமும் காட்ட வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதை இந்த நாடகங்கள் எடுத்துரைக்கின்றன.

பண்டைக்கால ஏதனியர்கள் தம் வாழ்வின் நிதர்சன உண்மைகளைப் புரிந்து கொள்ள இந்த நாடகங்கள் உதவின, அவை, இன்று நமக்கும் உதவக்கூடும். துயரையும் வருத்தத்தையும் வெளிப்படுத்த இவை நமக்கான சொற்களை அளிக்கக்கூடும், மானுட அனுபவத்தை நாம் புரிந்து கொள்ள உதவும் சொற்கள் இவை. நாடகத்தின் பின்னுள்ள தொன்மத்தின் கருப்பொருளை அறிந்து கொள்வதால் மட்டும் இதைத் தெரிந்து கொண்டுவிட முடியாது.

ஆம், ஈடிபஸ் தன் தந்தையைக் கொன்று தாயை மணந்தான். ஆனால் சோபோக்ளஸின் ‘அரசன் ஈடிபஸ்‘ தாய்களின் பால் மக்கள் கொள்ளும் காமம் பற்றிய ஃபிராய்டின் கதையல்ல. சோபோக்ளஸின் நாடகத்தில் ஈடிபஸ் தான் என்ன செய்கிறோம் என்பதை அறியாதிருக்கிறான். டெல்ஃபியில் குறி கேட்கும் அவன் தன் விதியை அறிய வந்தபின் தன்னாலான அனைத்தையும் செய்து தனக்கு விதிக்கப்பட்ட முடிவைத் தவிர்க்க முயற்சி செய்கிறான். தான் தவிர்க்க நினைத்த குற்றங்களைத் தன்னையறியாமலே செய்து விட்டதை அவன் உணர்வதன் வியப்பையும் அதிர்ச்சியையும் நாடகம் விவரிக்கிறது. அப்பல்லோவால் தீர்மானிக்கப்பட்டுவிட்ட தெய்வச்சித்தம்தான் அவனுக்கு விதிக்கப்பட்ட கதி என்றாலும் அவன் தன் குற்றங்களுக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறான். அவன் தன்னைக் குருடாக்கிக் கொள்கிறான் – “தான் இழைத்த, தனக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களை” அவனால் கண் கொண்டு காணத் தாள முடிவதில்லை. அவனது துயர்நிலையில் தீபஸின் முதியவர்களாலான கோரஸ் அவனைத் தேற்ற முயல்கிறது- கடந்த காலத்தில் அவன் அவர்களையும் அவர்களது நகரையும் காத்திருக்கிறான் என்பதால். ஆனால் அவர்களோ, நாடகத்தில் உள்ள வேறெந்த பாத்திரமோ, ஈடிபஸ்சுக்கு மீட்சிக்கான சாத்தியத்தை அளிப்பதில்லை, எதிர்காலத்தில் அவன் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று எந்த நம்பிக்கையையும் அளிப்பதில்லை.

கோரஸ் போலவே, பார்வையாளர்களாய் உள்ள நாமும் சாட்சிகள்- கண்டு நிற்கும் நாம் இரக்கப்பட முடியும், ஆனால் நிகழ்வுகளின் பயங்கர போக்கை மாற்றும் ஆற்றல் இல்லாதவர்கள். கோரஸ் போல், நாடகத்தின் நிகழ்வுகளைக் கொண்டு நாம் எவ்வளவு குறைவாய் அறிந்திருக்கிறோம் என்பதையும் நம் கட்டுக்குள் எவ்வளவு குறைவான விஷயங்கள் இருக்கின்றன என்பதையும் கற்றுக்கொள்ளவே இயலும். எனினும், மானுட அறிவு மற்றும் சக்தியின் எல்லைகளைக் கண்டுகொள்வதில் ஒரு இன்பம் கிட்டலாம், அந்த இன்பம் உரைக்கப்படும் சொற்களில் பிறப்பதுதான் என்றாலும்.

மிகவும் மாறுபட்ட நம் மொழியிலும், பண்டைக்கால கிரேக்க மூலமொழியின் கவித்துவத்தையும் ஆற்றலையும் நாம் ஓரளவு உணர்த்துவது சாத்தியமாகவே இருக்கிறது. இதோ, ஏஸ்ஷிலஸின் ‘அகாமெம்னோன்‘ நாடகத்தின் கோரஸ், ட்ரோஜன் போர் பற்றி பேசிக் கொள்கிறார்கள் (‘கிரேக்க நாடகங்கள்‘ என்ற நூலில் சாரா ருடன் செய்த மொழியாக்கத்தையொட்டி)

ஜ்யூஸ் நம்மை அழைத்துச் செல்கிறான்,
விழிப்புணர்வுக்கான பாதையில்;
துன்பங்களே நம் படிப்பினைகள்
என்று ஆணையிட்டான் ஜ்யூஸ்.
இதயத்துக்கு இல்லை உறக்கம், மாறாய்
காயங்களை நினைவுறுத்தும் வலி
துளித்துளியாய் இறங்கிக் கொண்டிருக்கிறது.
விருப்பமில்லா உள்ளங்களும்
எச்சரிக்கையுணர்வை அடைகின்றன.

காயங்களை நினைவுகூர்கின்ற வலி பற்றிய வரிகளை மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் கொலையானது பற்றி ஒரு கூட்டத்தில் பேசும்போது ராபர்ட் கென்னடி மேற்கோள் காட்டினார்.

தன் வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் வலியையும் இழப்பையும் உணர்கிறான், அதிலும் குறிப்பாக மிக மோசமான அநீதியின் முன். ஆனால் ஏஸ்ஷிலஸ் அளவுக்குச் சிறப்பாய் வேறு யாரும் அதை விவரித்ததாய்த் தெரியவில்லை. அவர் வலிக்கு நினைவாற்றலை அளிக்கிறார். அதற்கு ஒரு பௌதீக இருப்பையும் அளிக்கிறார்- அதன் வாதை துளித்துளியாய், நமக்கு அவ்வாறு உணரவும் அறியவும் விருப்பம் இல்லாதபோதும், புரிதலை மெல்ல மெல்ல கற்பித்துக் கொண்டிருக்கிறது.

நன்றி – Why Are Greek Plays Important? They Prepare You For Life, Mary Lefkowitz, Signature 

ஒளிப்பட உதவி – Wikipedia

யாரோ கலைத்துப் போட்ட அமைதி

ஜிஃப்ரி ஹாசன்

மெண்ணுணர்வுகளோடு
ஒரு பூவையும், சில பறவைகளையும்,
கொஞ்சம் நட்சத்திரங்களையும்
இரசித்தபடி
ஒரு மெளனத் தவத்துள்
புதையுண்டு போகிறான்
“என்னை விட்டு விடு
மௌனத் தவத்துள் நான் இன்னும் சில யுகங்கள்
கனவுகள் காண வேண்டும்”
எனப் புலம்புகிறான்
எதையோ வெற்றிகொள்ளும்
உக்கிர வேட்கையோடும்
தீயின் கனலோடும்
இதோ ஒரு சந்நியாசி இருக்கிறான்
வாழ்க்கை பரிசளிக்கும் தண்டனைகளை
பூக்களை இரசிப்பது போல் இரசிக்கும்படி
கடவுள் அவனுக்கு கட்டளை இட்டார்
எந்த ஆரவாரங்களுக்கும்
அவன் தவம் கலைதல் கூடாதென்று
கடவுள் அவனை ஏவினார்
எனினும்
கறைபடிந்த காலத்தில்
அடையாளமற்ற சில அருவருப்பான
குரல்கள் அவன் அமைதியைக் குலைத்தன
எந்த அர்த்தமுமற்ற பொய்யான சொற்களால்
பகடிகளால் நிறைந்த அர்த்தமற்ற
ஆரவாரங்களால்
அவன் தவம் சிதைந்திற்று
வாழ்க்கை, நேசிப்பிலிருந்து
உன்னதங்களிலிருந்து
தவத்திலிருந்து
புனிதங்களிலிருந்து
மனிதனைத் தள்ளிவைக்கும் தண்டனைகளால் நிறைந்தது
என இறுதியில் அதே கடவுளிடம் முறையிட்டபடி
மீண்டும் வாழ்வின் சாளரங்களை
எதையோ வெற்றி கொள்வதற்கான
உக்கிரத்தோடு திறக்கத் தொடங்கினான்.