Author: பதாகை

வாழ்க்கை நம்மை என்னவெல்லாம் செய்கிறது- மிகைல் ஷிஷ்கின்

(Mikhail Shishkin, and what life does to us என்ற தலைப்பில் Cynthia Haven எழுதியுள்ள கட்டுரையின் மொழிபெயர்ப்பு)

ஏறத்தாழ எப்போதும் நான் பல்வேறு காலக்கெடுக்களில் சிக்கிக் கொண்டிருக்கிறேன். அப்போது ஒரு பத்திரிக்கையைச் சுருட்டி என்மேல் ஒரு போடு போட்டால்தான் என் கவனத்தை நீங்கள் கவர முடியும். எனவே, டீப் வெலம் பதிப்பித்த காலிகிராபி லெஸ்சன்தொகுக்கப்பட்ட கதைகள்என்ற மிகைல் ஷிஷ்கினின் அற்புதமான தொகுப்பைக் கொண்டு என் நண்பர் ஸ்காட் எஸ்பாஸிடோ ஒரு மாதிரியான உவமேய, சைபர்ஸ்பேஸ் வகையில் அதைச் செய்திருக்கிறார் என்று நான் நன்றி சொல்ல வேண்டும்.

த டேக்கிங் ஆப் இஸ்மய்ல்என்ற நூலுக்காக 2000ஆம் ஆண்டு புக்கர் பரிசும், “மெய்டன்ஹேர்” (ஒப்பன் லெட்டர், 2012) என்ற நூலுக்காக 2005 நேஷனல் பெஸ்ட்செல்லர் பரிசும் 2006 நேஷனல் பிக்புக்பரிசும் வென்ற ஷிஷ்கினை மேற்கத்திய உலகில் முதல்முறை படிக்கும் கடைசி ஆள் நானாகத்தான் இருக்கிறேன் போலிருக்கிறது, தெரியும். அப்படி பார்த்தால், இப்போதும் எனக்கு ஷிஷ்கின் பற்றி தெரியாது, அவரது நாவல்களை நான் படித்ததில்லை. இந்தப் புதிய தொகுப்பில் உள்ள சிறுகதைகள், நினைவுக்குறிப்புகள், ஆய்வுகளில் சிறிதளவுதான் படிக்க முடிந்தது. இன்னும் சில காலக்கெடுக்களை நான் கடந்து செல்லும்வரை, தள்ளி வைக்கப்பட்ட என் சந்தோஷங்கள் பலவற்றில் இதுவும் ஒன்றாக இருக்கப் போகிறது
(more…)

கால்பகுதி + இரண்டு வெட்டு

– ஆதவன் கிருஷ்ணா – 

துயரார்ந்த சாலையின்
கசப்பில் சிக்கிக் கொண்ட மதுவிடுதி
ஒன்று தன் கேவலைத்
தொடங்கிற்று

இந்த மனித வாழ்க்கை
சுலபமானது
என்றுளறியது இரண்டு வெட்டுகளுக்கு மேற்பட்டு

பொருத்தமற்ற காலம் வந்த சமயம்
தவறான சந்தர்ப்பத்தில்
இயைந்து வரா சூழலின் சரிவுகளில்
நம் சந்திப்பு ஏன்
நிகழ்ந்திருக்க வேண்டும்
என்ற புலம்பல்
சத்தமானது
கால்பகுதி + இரண்டு வெட்டு
கடந்த போது

மங்கலான முகம்
கசந்த சரக்கு
மந்தமாக்கி
சொஸ்தப்படுத்தும்
சீரான நினைவலையைக்
கட்டுடைத்து
சொற்களின் மரண ஒலிக்குள்
சிக்காமல் செய்யும்
என்றதன்
ஒவ்வொரு சொட்டு மதுவிலும்
தோய்ந்து கிடக்கிறது
அம்மதுச்சாலையின்
தீராவலி

000

ஒளிப்பட உதவி- Amsterdam Art Gallery

போலிமொழியாக்கம் – பிரிஜெட் ராத்

பிரிஜெட் ராத் (Brigitte Rath)

(போலி மொழியாக்க புதினங்கள் குறித்து Brigitte Rath எழுதிய கட்டுரை, Mona Baker தளத்திலிருந்து, தமிழாக்கம்.)

1721ஆம் ஆண்டில் மான்டெஸ்க்யூ தன் “பாரசீக கடிதங்களை” அனாமதேயமாகப் பதிப்பித்தார். அதன் முன்னுரையில், இரு பாரசீகர்கள் தன்னுடன் தங்கியிருந்ததாகவும் அவர்கள் பாரசீகத்துக்கு எழுதிய கடிதங்களையும் அங்கிருந்து பெற்ற கடிதங்களையும் தான் பிரெஞ்சுக்கு மொழிபெயர்த்திருப்பதாக்வும் கூறினார். கடிதங்களின் தேதிகள், மாதங்களுக்குரிய பாரசீகப் பெயர்கள் தாங்கியிருக்கின்றன, பாரசீக பழக்கவழக்கங்கள் குறித்து மொழிபெயர்ப்பாளர் அடிக்குறிப்பில் சில விளக்கங்கள் அளிக்கிறார். இதற்குமுன் பாரசீக மொழியில் நம்பிக்கைக்குந்த ஒரு பிரதி இருந்ததாகக் கற்பனை செய்யத் தூண்டுகிறது “பாரசீக கடிதங்கள்”, என்ற பிரதி. நம்மை இந்த கடிதங்களின் முதல் வாசகர்களையும் கற்பனை செய்து கொள்ளச் சொல்கிறது- அவர்களுக்கு அடிக்குறிப்பில் உள்ள கூடுதல் விளக்கங்கள் தேவைப்படாது, ஏனெனில் அவர்கள் பிரெஞ்சு வாசகர்களைப் பொறுத்தவரை தங்களுக்குச் சிறிதும் அறிமுகமில்லாத ஒரு கலாசாரத்தைச் சேர்ந்தவர்கள். அன்னியம் என்பதை விளங்கிக் கொள்ள முடியாதது என்று குறிப்பிடும்போதே மான்டெஸ்க்யூவின் பிரதி அதை வாசிக்கத்தக்கதாகவும் செய்கிறது; வேற்று மொழியில் எழுதப்பட்ட, வாசிக்கப்பட முடியாத அந்தரங்கத்தன்மை கொண்ட கடிதங்களை வாசிக்கும் வாசக விருப்பத்தோடும், வாசகர்களுக்குப் பழக்கப்பட்ட உலகம் குறித்த அன்னிய பார்வையோடும் அது விளையாடிப் பார்க்கிறது. (more…)

சீர்: கவிதையும் ஓசையும் – பீட்டர் க்ளைன்

பீட்டர் க்ளைன்

(கவிதையின் ஓசை நயம் குறித்து Ploughshares என்ற தளத்தில் Peter Kline எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்).

என்னைப்போல் இன்னொரு கவிஞன் இல்லை என்று நினைக்கிறேன். புதுக்கவிதையின் காலத்தில் இலக்கணச் சுத்தமாய் கவி புனைந்து கொண்டிருக்கிறேன் (உரைநடையின் காலத்தில் கவிதை எழுதுவதில் உள்ள பொருத்தமின்மை பற்றிச் சொல்லவே வேண்டாம்). ஆனால் தற்போது முன்னிலைப்படுத்தப்படும் இலக்கண இயக்கங்கள் பெரும்பாலானவற்றுடன் எனக்கு எந்த உறவும் இருப்பதாகத் தெரியவில்லை. பேசுபொருள், பொதுப்பார்வை போன்ற விஷயங்களுக்கு அப்பால் உள்ள ஒரு பிளவு என்னைத் தனிமைப்படுத்துகிறது. இவற்றுக்கும் பங்குண்டு என்றாலும் வடிவம் குறித்த அடிப்படைச் சிந்தனையில் ஒரு பேதம் இருக்கிறது. தமக்கென்று ஒரு இடம் உருவாக்கிக்கொண்ட, மரபார்ந்த இலக்கண வடிவைப் பயிலும் கவிஞர்களை இளம் எழுத்தாளர்கள், முக்கியமற்ற, இயந்திரத்தன்மை பொருந்திய செய்நேர்த்தி கொண்ட கவிதைகள் எழுதும் பிற்போக்குவாதிகள் என்பதுபோல் பார்க்கின்றனர். இப்படிப்பட்ட விமரிசனங்களில் நியாயமில்லை என்று நினைக்கிறேன்- நவீன இலக்கணக் கோட்பாடுகள் பலவும் சரி போலிருக்கின்றன (தொழில்நுட்பத்தையும் உன் மரபையும் கற்றுக்கொள், கவனமாக எழுது)- ஆனால் காலத்தைக் கடந்து நிற்கும் கவிதைகள் பல உருவாக இன்னும் இவை காரணமாகவில்லை. (more…)

அமேஸான் காடுகளிலிருந்து- 7: கள்ளமில்லா மனது

மித்யா 

“அறை முழுவதும் மெல்லிய பச்சை ஒளி பரவியது. நான் கண்ணை மூடிக்கொண்டு பத்மாசனத்தில் உட்கார்ந்திருந்தேன். பச்சை ஒளி பரவியவுடன் அங்கு நிசப்தம் நிலவியது. ஓயாமல் அழுது கொண்டிருந்த ராணியின் குரல் சட்டென்று யாரோ குரல்வளையை நெருக்கியது போல் நின்றது. கதறிக் கொண்டிருந்த இளவரசியின் குரலும் அடங்கியது. எல்லோரும் திகைத்து நின்றிருப்பதை உணர்ந்தேன். வெளியில் இலைகளின் சலசலப்பும் பறவைகளின் ஓசையும் தவிர வேறேதும் இல்லை. என்ன நடக்கப் போகிறது என்று எல்லோரும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

“நீ யார்?” என்ற கேள்வி என்னை வந்து தாக்கியது. இது காதில் கேட்கக்கூடிய சப்தம் இல்லை. அது மொழியும் அல்ல. என் உள்ளுணர்வுடன் வேறொரு ஆத்மா உரையாடிக் கொண்டிருந்தது. இது என்னை தவிர வேறு யாருக்கும் கேட்கவில்லை, ஆனால் இந்த ஆத்மா பேசும்போது பச்சை ஒளி மங்கியும் பிறகு அதிகமாக மிளிர்வதாகவும் இருந்தது.

“நான் யார் என்பது இங்கு முக்கியமில்லை. நீ யார்? எதற்காக இங்கே வந்தாய்? எங்கிருந்து வந்தாய்?” (more…)